Author: பதாகை

விளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது -2015’

ரவிசங்கர்

விளக்கு என்னும் அமைப்பு, ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த பணியாற்றியவர் ஒருவரைத் தேர்வு செய்து ஒரு விருது அளிக்கிறது. இந்த விருது புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான விருதை, தமிழில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவரும், தமிழிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்ப்பதில் பெயர் பெற்றவராகத் திகழ்பவருமான திரு.கல்யாணராமனுக்கு இந்த அமைப்பு வழங்கியது. அதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாராட்டு நிகழ்ச்சி,  சென்னை அருங்காட்சியகத்துக்கு எதிர் சாரியில் உள்ள இக்ஸா மையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழின் மூத்த எழுத்தாளர்களான திரு. இந்திரா பார்த்தசாரதியும், திரு. அசோகமித்திரனும் வந்திருந்து சிறப்பித்தனர்.

கல்யாணராமன், தமிழிலக்கிய உலகில் நுழைய காரணமாக இருந்த கணையாழி பத்திரிகையை அன்று இயக்கிய அசோகமித்திரனும், அப்பத்திரிகையின் பதிப்புக் குழுவில் அன்று பங்கெடுத்து வந்த இந்திரா பார்த்தசாரதியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு அபூர்வ நிகழ்வுதான். இவர்களைத் தவிர சிறப்பு வரவேற்பைப் பெற்றவராக, கிரியா பதிப்பகத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் எஸ்.ராமகிருஷ்ணனும் அரங்கில் இருந்தார்.

உரையாற்ற அழைக்கப்பட்ட ஐந்து நபர்கள் பேசியன பற்றி ஒரு சிறு விவரணை கீழே.

முதலாவதாக நிகழ்ச்சியில் பேசிய பெருமாள் முருகன் நல்ல தயாரிப்புடன் வந்து பேசினார். சிறிது நீளமான உரை. மொழிபெயர்ப்பு பற்றித் தொல்காப்பியரிடமிருந்தே செய்திகளை நாம் பெற முடியும், அப்போதிருந்தே தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய விழிப்புணர்வும் அதன் இயல்புகள் பற்றிய கருத்து வெளிப்பாடும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டினார். அன்றைய கவனம் பெருமளவும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படும் இலக்கியம் பற்றி என்பது நமக்குத் தெரியும் என்றாலும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய  நச்சினார்க்கினியார், இளம்பூரணர் போன்றார் காலத்திருந்தே மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கட்டமைப்பதில் நம் கவனம் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டி இந்தத் துவக்க கால கவனம் எப்படி உருமாறியது என்பதையும் பற்றிப் பேசினார்.

சமகாலத்தில் மொழிபெயர்ப்பு என்பதில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போகும் இலக்கியம் பற்றியும், அதைச் செய்பவர்களைப் பற்றியும் தகவல் தேடினால் கிட்டுவது மிகக் கடினமாக இருக்கிறது என்றார். ஒரு சில பெயர்களைச் சொன்னார். ஆர். சண்முகசுந்தரம் நூறு புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கிறோம்.  பட்டம் வாங்கவென, இதைப் பற்றி ஒருவர் ஆய்வு நடத்தி எழுதிய கட்டுரை/ புத்தகம் ஒன்றுதான் இன்னமும் இருக்கிற ஒரே ஆதார நூல் என்பது வருந்தத்தக்கது என்று பேசியவர், பிறகு கல்யாணராமனுடைய மொழிபெயர்ப்பின் அருமை பற்றி நிறையப் பேசினார். தன் கதைகளுக்கு கல்யாணராமன் கொடுத்த சிறப்புக் கவனத்தைப் பற்றி விளக்கினார்.

வட்டார வழக்குகள் நிறைந்த தன் படைப்புகளைச் சுயவிருப்பப்படி மொழி பெயர்க்காமல், தன்னை நேரில் வந்து பார்த்துப் பல மணி நேரம் உரையாடி, தொலைபேசியில் தொடர்ந்து பேசி அவ்வப்போது எழும் ஐயங்களை விளக்கிக் கொண்டு, மின்னஞ்சலில் மேற்படியான தகவல்களைச் சேகரித்து ஒவ்வொரு கதைக்கும் பல மாதங்கள் செலவழித்து மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்த்தபோது கிட்டிய முதல் பிரதிகளைத் தன்னிடம் கொடுத்து சோதித்துக் கொண்டு மேலும் மேலும் தம் பிரதியைச் செம்மைப்படுத்திக் கொள்வதை ஒரு வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார். தம் கதைகளுக்குக் கிட்டிய சிறப்பான மொழிபெயர்ப்பாளர் இவர் என்பதில் தனக்கு ஐயம் இல்லை என்றும் சொன்னார்.

கல்யாணராமன் செய்யும் எதையும் இப்படிப் பல முறை சோதித்துச் செய்பவர் என்பது அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்த சொல்வனம் குழுவுக்கும், அந்த நேர்காணலை நடத்தி எழுதிக் கொடுத்த ஸ்ரீதர் நாராயணனுக்கும் தெரியும்.

அடுத்து பேசிய தேவிபாரதியும் கிட்டத்தட்ட முழுதுமே தன் நூலைக் கல்யாணராமன் எப்படி மிகக் கவனமாகவும், நிறைய உழைப்போடும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது பற்றியே பேசினார். அந்த மொழிபெயர்ப்பின் விளைபொருளாகத் தன் சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘ஃபேர்வெல், மஹாத்மா’ உலகரங்கில் கவனம் பெற்று விட்டது, இது சாத்தியமானது கல்யாணராமனின் மொழிபெயர்ப்புத் திறனால்தான் என்றும் தெரிவித்தார்.

இ.பா கொஞ்சம்தான் பேசப்போகிறேன் என்று ஆரம்பித்தார், ஆனால் பேசத் துவங்கியதும் தான் நினைத்திருந்த கருத்துகளின் தொகுப்பில் கிட்டிய உந்துதலாலோ அல்லது பேச்சுடைய ஓட்டம் கொடுத்த உற்சாகத்தாலோ கொஞ்சத்துக்கு மேலாகப் பேசினார். (ஒலிபெருக்கியிலிருந்து புறம் நகர்ந்து பேசியதாலும், அறையில் தெருவுடைய போக்குவரத்தின் சத்தம் ஊடுருவியதிலும் இவர் பேசியதில் மூன்றிலொரு பங்கு எனக்கு எட்டவில்லை).

மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்பதே தனக்குப் பிடித்த சொல் என்றவர் அனேகமாக மொழியாக்கம்தான் சாத்தியம் என்பதைச் சொன்னார். அட, நான் பேச இருந்த விஷயத்தைப் பேசி விட்டாரே, இனி எதைப் பேசுவது என்று திகைத்தேன்.

மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் ஒரே பிரதியோடு நிற்பதில்லை. அந்தந்த காலத்தில் செவ்விலக்கியங்கள், சிறந்த படைப்புகளை மொழி பெயர்ப்பவர்கள் தமக்கு உகந்த மொழியில், நடையில் அவற்றை மாற்றுகிறார்கள். ஸெர்வாண்டெஸின் ‘டான் கிஹோட்டே’ க்குப் பல மொழிபெயர்ப்புகள் உண்டு என்று மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் பெயர்களைச் சொன்னார்.  இரு மொழிகளிலும் மிக்க தேர்ச்சி தேவை என்றும், யார் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், மூல ஆசிரியரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள அந்த மொழிக் குழுவின் இயல்புகள், படைப்பின் காலம் ஆகியன குறித்து நல்ல அறிவு தேவை என்றார்.

இ.பா. சேம் ஸைட் கோல் ஒன்றையும் போட்டார்- சம்ஸ்கிருதம் ஏதோ ஒரு சில சமூகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்து இல்லை. அது ஒரு காலத்தில் அகில இந்திய இணைப்பு மொழி, அதிலிருந்து தமிழ் கடன் வாங்கிய அளவு, கடன் கொடுத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை என்றார் அவர். சீவக சிந்தாமணி தமிழிலிருந்துதான் சம்ஸ்கிருதத்துக்குப் போயிருக்க வேண்டும் என்ற ஓர் ஆய்வாளரின் கருத்து தனக்கு உடன்பாடுள்ள கருத்து என்றார். அது போலப் பல நூல்கள், உதா: பெரிய புராணம், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதை அறியாமல், இடைக்காலத்தில் (18-19 நூற்றாண்டுகளைச் சொல்கிறார்) இயங்கிய சில தமிழறிஞர்கள் கூட,  சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த நூலாக அதைக் கருதியதைச் சொல்லி, நம் ஆய்வு முறைகள் இன்னமும் நன்கு செம்மைப்படவில்லை என்பதாகச் சொல்லி வருந்தினார்.

அ.மி பேசவில்லை. தனி உரையாடலில்கூட அவருக்குக் குரல் அதிகம் எழவில்லை. மிக்க தளர்ச்சி. ஆனாலும் படிகள் ஏறி இறங்கி, அங்கு வந்து அமர்ந்திருந்து பரிசை வழங்கினார் என்பது வியப்புக்குரியது. அது அவருடைய மன உறுதியைக் காட்டியது என்பதோடு, கல்யாணராமனின் இலக்கிய நடவடிக்கைகள் மீது அவருக்கிருக்கும் மதிப்பையும் காட்டியது.

கன்னடரும், பெங்களூர்வாசியுமான  ஸ்ரீநாத் பேரூர் (பெயரைச் சரியாகச் சொன்னேனா என்பது தெரியவில்லை) சுருக்கமாக, ஆனால் நன்கு உரையாற்றினார். இவர் இங்கிலிஷில் பேசினார். குறிப்பாக கல்யாணராமன் தன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதர்சம் என்று சொன்னார். புலிக்கலைஞன் என்ற அமி கதையின் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, செகாவ் போன்ற பற்பல ரஷ்ய எழுத்தாளர்களை சென்ற நூற்றாண்டில் உலகம் படிக்க முடிந்ததற்குக் காரணமே மொழிபெயர்ப்பாளர்கள்தாம் என்றார் அவர். சென்ற நூற்றாண்டின் சிறந்த ரஷ்ய எழுத்தாளர் யாரென ஆங்கிலேயர்களைக் கேட்டால் அது கான்ஸ்டன்ஸ் கார்னெட் என்றுதான் சொல்வார்கள், என்றார். காரணம், அவர்கள் ருஷ்ய எழுத்தாளர்களை படித்திருப்பது கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழியாக்கத்தில்தான். அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு இந்தப் பெயர் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.  (அவர் யாரெனவும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்ப்பதில் நடக்கும் பனிப்போர் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்). அதே போல், தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டால் தான் கல்யாணராமன் பெயரைத்தான் சொல்ல முடியும் என்றார்- அசோகமித்திரன், பெருமாள் முருகன், தேவிபாரதி, சல்மா, என். டி. ராஜ்குமார் என்று பல தமிழ் எழுத்தாளர்களும் பிற மொழியினருக்கு கல்யாணராமன் மொழியாக்கத்தில்தான் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

நான் பேச நினைத்ததில் பகுதிகளை இ.பா, பெ.மு, ஸ்ரீநாத் ஏற்கனவே பேசி இருந்தனர். அதனால் சுருக்கிக் கொண்டேன்.

சொன்னவை: கல்யாணராமனின் துவக்க காலப் புனைவுகள் அவர் சொன்னது போல தற்சாய்வு கொண்டிருந்ததால் போதாதவையாக இல்லை. அவை சிறப்புகள் கொண்டவையாகவே இருந்தன. அவர் புனைவை எழுதாமல் நிறுத்தியது நமக்கு நஷ்டம்.

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், முழி பெயர்ப்பு என்ற மூவகையில் மூன்றாவது, தமிழில் நிறையக் கிடைக்கிற விஷயம். புனைவு மட்டுமல்ல, அரசியல் நூல்கள் கூடத் தவறான வகைகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. மூல நூல்களோடு ஒப்பிட்டால்தான் அவை எத்தனை தூரம் தவறானவை என்பது தெரியும். தமிழ் மட்டுமே படிக்கிறவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியாதது வருந்தத்தக்க நிலை. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இங்கிலிஷில் இருந்து தமிழிற்குக் கொணரப்பட்டதே இப்படி என்றால், தமிழிலிருந்து இங்கிலிஷுக்குப் போனது எப்படி இருக்கும்?  மிக்க சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவற்றை மாற்றிப் படைத்தவர்களே அதிகம். ஏ.கே. ராமானுஜம் போன்றாரின் மொழிபெயர்ப்புகள்கூட இப்படிச் சுதந்திரம் எடுத்து மாற்றிக் கொடுக்கப்பட்டவை. அவர் மொழிபெயர்த்த சங்கம் பாடல்களில் எனக்குச் சங்க காலத்துப் பண்பாடு கிட்டவில்லை. அது அவருடைய கவியாக்கமாகத்தான் தென்பட்டது.

ஆனால், பொதுவாக இந்திய சமூகங்களின் குணங்களை இந்திய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மாற்றப்பட்ட இலக்கியம் கொடுக்குமளவு நேரடியாக இங்கிலிஷில் எழுதப்படும் இந்திய நூல்கள் கொடுப்பதில்லை.

அந்த வகையில் கல்யாணராமன் செய்து வரும் மொழியாக்கம் ஒரு அரும்பணியே. இது அ.மிக்கு கல்யாணராமனின் கொடை என்று கூட நாம் சொல்லலாம். அ.மியே இங்கிலிஷில் எழுதக் கூடியவர் என்றபோதும், கல்யாணராமனின் உழைப்பும், அளிப்பும் அ.மியின் எழுத்தை ஒளிரச் செய்கின்றன.

இவை இன்று முன்னெப்போதையும் விட கூடுதலாக அவசியமான முயற்சி என்பது ஏன்  என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லாமல் பல லக்ஷம் இந்தியர்களும், தமிழர்களும் இன்று உலக நாடுகளில் பலவற்றிலும் பரவிச் சென்று வாழ்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் இந்தியத்தைக் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு இந்தியப் பண்பாட்டைக் கடத்திக் கொடுப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அரும் பணி புரிகிறது.

இந்திய மொழிகளிடையே மொழிமாற்றம் என்பது இந்தியரிடையே ஒருங்கிணைப்பைச் சாதிக்கும் அரிய பணியைச் செய்கிறது. இது ஆங்கிலம் மட்டுமே பேசி, அதையே படிக்கும் மக்களுக்கு அத்தனை பயனுள்ளதாக இராது, ஆனால் இந்திய மொழிகளில் படிக்கும் பலருக்கும் மிகப் பயனுள்ள ஒரு வழிமுறை.

உலகமயமாதல் என்பது அடையாளங்களை அழிக்கிறது என்றே பேசப்படுகிறது. என் அனுபவத்தில் அது ஏராளமான அடையாளங்களுக்கு உயிர்ப்பூட்டி மறுபடி செயல் வேகம் கொள்ளவும் தூண்டுகிறது. மொழிபெயர்ப்புக்கு உலகமயமாதலால் ஒரு தூண்டுதல் கிட்டி இருக்கிறது.

கடைசியாக, காலனியத்தின் எச்சமான ஒரு மொழி மூலம் காலனியத்தை நம்மிடமிருந்து அகற்ற நாம் பயன்படுத்த முடியும், இந்தியாவை ஒருங்கிணைக்க, பல மொழிக் குழுக்களிடையே உறவைப் புதுப்பிக்க, இதைப் பயன்படுத்த முடியும் என்பது ஒரு நகை முரண்தான். நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கும் வகையில் நம்மிடையே இன்றும் நிலவும் காலனிய எச்சங்களை நாம் அகற்றுவதுதான் நாம் ஒன்றிணைய உதவும் என்று முடித்தேன்.

கடைசியாக ஜி.குப்புசாமி பேசினார். தான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் எல்லாம் ஒரு கோப்பில் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டியவர், அவற்றைப் பேசுவதானால் பல மணி நேரங்கள் ஆகும் என்றார். அவை இனி ஒரு புத்தகமாகத்தான் வர வேண்டியிருக்கும், ஆனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பத்து நிமிடங்களில் முடிகிற மட்டும் தன் கருத்துகளைச் சொல்லப் போவதாகச் சொன்னார்.

இதற்குள் கூட்டம் கலைந்திருந்தது. பாதி பேர்தான் எஞ்சினர். அ.மி, இ.பா எல்லாம் நான் பேசும் முன்னரே சென்றிருந்தனர். திரு.குப்புசாமி, நபகோவ் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அது தனக்கு முக்கியமான கருத்துகளைக் கொடுத்தது என்று சில முறை திரும்பத் திரும்பச் சொன்னார்.  கல்யாணராமனின் சில மொழிபெயர்ப்புகளிலிருந்து பகுதிகளை மேற்கோள் காட்டி அவற்றின் சொல்தேர்வு, மூல எழுத்தாளரின் நோக்கமறிந்து பொருளைக் கைப்பற்றும் தன்மை என்பனவற்றைச் சிலாகித்தார். எல்லாரும் சொன்னது போல, மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளி, அவருக்கான உரிய இடத்தைக் கொடுக்க நம் சமூகம் தவறுகிறது என்பதையும் சொன்னார்.  பிராந்திய வழக்குகளை நன்கு சோதித்து அறிந்து கல்யாணராமன் மொழிபெயர்ப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு அணுகல் என்றார். அதே போல  இன்றைய தமிழிலக்கியத்தில் சிறந்த புனைவெழுத்தாளர் யாரெனப் பட்டியலிட்டால் அதில் கல்யாணராமன் பெயர் நிச்சயம் இருக்கும் என்றார். எந்த அளவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மறுஆக்கம் செய்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்று முடித்தார்.

ஏற்புரை வழங்கிய  கல்யாணராமன் சுருக்கமாகத்தான் பேசினார்.  படைப்பாளியின் அளவுக்கு மொழிபெயர்ப்பாளரும் முக்கியமான பணி ஆற்றுகிறார், அவர்களுக்கு பெயர் அங்கீகாரம்கூடக் கிட்டுவதில்லை. நம் நாட்டைப் போன்ற பல மொழிகள் உள்ள கூட்டமைப்பிற்கு மொழி மாற்றங்கள் மிக அவசியம். இதன் வழிதான் மொழியினங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்ளவும்தான் பிற மொழி இனங்களுக்குத் தக்க இடத்தை நாம் ஒவ்வொருவரும் கொடுக்கவும், அதன் மூலம் நமக்கான மதிப்பைப் பிறரிடம் இருந்து பெறுதலும் சாத்தியமாகும் என்றார்.

துவக்கத்தில் ’வெளி’ ரங்கராஜனும், இறுதியில் பொன். வாசுதேவனும் சிறு உரையாற்றி விளக்கு அமைப்பின் பணி குறித்து விளக்கினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம் இறுதி வரை பலரை அமர வைத்திருந்தது என்பது இந்தத் தலைப்பு குறித்து தமிழில் ஒரு அளவுக்கு கவனம் கூடி வருகிறது என்பதைக் காட்டுகிறதா என்று யோசித்தேன்.

– ரவிசங்கர்  / 26 ஃபிப்ரவரி 2017/ சென்னை

oOo

ஒளிப்பட உதவி – செந்தில்நாதன் (திரு ஸ்ரீநாத் பேரூர் மற்றும் திரு ஜி. குப்புசாமி இருவரும் உரையாற்றியது பற்றி செந்தில்நாதன் அளித்த குறிப்புகள் அடிப்படையில் கட்டுரை  திருத்தப்பட்டிருக்கிறது. செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றிகள்)

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர்

(Unauthorised translation made for non-commercial use at this particular website only. The Author and Publishers have been contacted, and this post will be removed if permission to translate and display are denied.)

(ஆங்கிலத்தில், Eleanor Parker)

போஸ்ட்-ட்ரூத்‘ என்பது நம் காலத்துக்குரிய சொல் – குறைந்தபட்சம், ஆக்ஸ்போர்டு அகராதிகளின் பார்வையில்; அவை ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல்லை 2016ஆம் ஆண்டின் சிறப்புச் சொல்லாய் அறிவித்திருந்தன. ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.

ஒரு புதிய சொல் தோன்றும்போது அது எதை விவரிக்கிறதோ அதுவும் புதியதாய் தோன்றிய ஒன்று என்ற எண்ணம் வலுப்பெறுகிறது: விவரிப்பதற்கான புதுச்சொல் தோன்றும்வரை அது இருக்கவில்லை என்ற எண்ணம். இந்த விஷயத்தில் நிலைமை அப்படியல்ல, ‘மெய்ம்மை-பிந்தைய’ என்ற சொல் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டாலும்கூட; வரலாற்றாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரியும், தகவல் குறிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியுடன் உணர்ச்சிகளும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பொதுக் கருத்தைக் கட்டமைக்காத காலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. இப்போது என்ன வேறுபாடு என்றால், புனைச்சுருட்டுகளும் பொய்ச்செய்திகளும் எவ்வளவு வேகமாக புழங்குகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்: உண்மையல்லாத, அல்லது, திரிக்கப்பட்ட கதைகளை பரப்புவதில் மிகப்பெரும் செய்தி நிறுவனங்களும் பொது மக்களும் பங்கேற்க சமூக ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. உண்மை குறித்த அக்கறை கொண்டவர்களுக்கு இது ஒரு வலுவான சவாலாய் இருக்கிறது.

ஆனால் பொய்க் கதைகள் தங்கு தடையின்றி பரவுகின்றன என்பது குறித்த கவலையும்கூட புதிதல்ல. 14ஆம் நூற்றாண்டின் இறுதில், ஜியஃப்ரி சாஸர் இது குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஃபேம்’ என்ற கவிதையில் கூர்மையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை ஒரு கனவு- தரிசனத்தை விவரிக்கிறது. இந்தக் கனவில் சாஸர், ஓயாமல் பேசிச் சிரிக்க வைக்கும் கழுகொன்றால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டு, சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில் நிற்கும் ஒரு கோட்டையை அடைகிறார். இதுதான் புகழ் வீடு. பேச்சிலும் எழுத்திலும் உதிக்கும் அத்தனை வார்த்தைகளும் இங்கு வந்து சேர்கின்றன.

கடலின் ஆர்ப்பரிப்பு போல் பல லட்சக்கணக்கான பேச்சுக்கள் அனைத்தின் ஓசைகளும் கோட்டையைச் சுற்றி ஆர்ப்பரிக்கின்றன. அவற்றின் விதியை நிர்ணயிக்கும் சக்திதான் புகழ்: அவளுக்குப் பல செவிகள், கண்கள், நாவுகள். அவள் தன் அரண்மனைக்கு வரும் சொற்கள் மற்றும் கதைகளின் விதியைத் தீர்மானித்து வீற்றிருக்கிறாள். கனவில் சாஸர், அவள் ஆணைகள் இடுவதைக் காண்கிறார்- அவை நியாயமற்றவையாகவும் வெளிப்பார்வைக்கு தன்னிச்சையாகவும் தோன்றுகின்றன. சில உண்மைக் கதைகள் மறக்கப்பட வேண்டும் என்றும் சில பொய்க் கதைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவள் தீர்மானிக்கிறாள்; நல்லவர்கள் சிலர் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்றும், வேறு சிலர் மறதியின் இருளுக்குத் தக்கவர்கள் என்றும் சபிக்கப்படுகிறார்கள். அதே சமயம், தகுதியற்றவர்களுக்கு இறவாப் புகழும் அருளப்படுகிறது.

இதன் பின் சாஸர், இதைவிட சஞ்சலப்படுத்தும் ஒரு காட்சியை விவரிக்கிறார். புகழ் வீட்டைக் காட்டிலும் இது அதிக குழப்பமாகவும் நிலையில்லாமலும் இருக்கிறது: சுள்ளிகளால் ஆன இந்த வீடு, அசாத்திய வேகத்தில் சுழன்றபடி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டில், ‘டைடிங்ஸ்‘ நிறைந்திருக்கின்றன; இது பயனுள்ள ஒரு மத்தியகால ஆங்கிலச் சொல், சேதி அல்லது தகவல் என்ற எளிய பொருள் கொண்டது, ஆனால் அதே வேளை வம்பு, வதந்தி போன்றவற்றின் எதிர்மறைச் சாயல்களும் அதிகம் கொண்டது. மனதில் நினைக்கக்கூடிய அத்தனை விஷயங்களைப் பற்றிய சேதிகளும் இந்த வீட்டில் சுற்றி வருகின்றன, அவை புழக்கத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அடுத்தடுத்து பேசிப் பெருகுகின்றன, விரைவில் பொய்யும் மெய்யும் இணைந்த பிரிக்க முடியாத கலவையாகி, நெருப்பைப் போல் பரவுகின்றன, ‘தவறித் தெறித்த பொறியால்/ நகரே தீக்கிரையாகும் போல்

குறிப்பாய்ச் சொல்லத்தக்க வகையில் கண்முன் நிற்கும் ஒரு தருணத்தை சாஸர் விவரிக்கிறார். வீட்டின் சன்னலின் வழியே வெளியேற ஒரு உண்மைக் கதையுடன் பொய்க்கதை ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே, “முதலில் என்னைப் போக விடு!” என்று கத்துகின்றன. இறுதியில், சகோதர உறவு பூண்டு உலகைச் சுற்றி வர இரண்டும் ஒப்புக் கொள்கின்றன. இனி இவர்களின் உறவுப் பிணைப்பு மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் யாராலும் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தச் சேதிகள் இதற்குப்பின் பயணிகளாலும், மாலுமிகளாலும், யாத்திரீகர்களாலும் எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன; உண்மைத் தகவல்களைவிட சுவாரசியமான கதைக்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்று மத்தியகால சமூகத்தில் முத்திரை குத்தப்பட்ட குழுக்கள் இவை.

சாஸரின் ஓசை மிகுந்த, கிறுகிறுக்க வைக்கும் புரளி வீடு, டிவிட்டர் பயனர்கள் எவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். எதைச் சாஸர் புரிந்து கொண்டு, இந்தக் கவிதையில் கூர்மையான வகையில் உயிர்ப்புடன் சித்தரிக்கிறார் என்றால், ஒரு கதை பரவுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உண்மைக்கு மிக அபூர்வமாகவே மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதைத்தான். இந்த எண்ணத்தில் சாஸர் நீண்ட கால ஆர்வம் கொண்டிருந்தார், கான்டர்பரி டேல்ஸின் பின்னணியும் இதுவே: அந்தக் கவிதையில் யாத்திரிகர்கள் ஒருவருக்கொருவர் கதைகள் சொல்லிக் கொள்கையில், கதை கேட்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு சிக்கலானது என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அவரவர் கதைகளை புகழும்போதும் வன்மையாகக் கண்டிக்கும்போதும் யாத்திரிகர்கள் தத்தம் நலன்கள் மற்றும் அக்கறைகளால்தான் உந்தப்படுகிறார்கள், கதைக்குரிய உள்ளார்ந்த மதிப்பால் அல்ல. கதையொன்று சொல்லப்பட்டபின், அது கேட்பவர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கதை சொன்னவன் கட்டுப்படுத்த முடியாது.

புகழ் வீடு என்ற கதை, சாஸரால் முடிக்கப்படவில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ உலகு குறித்து கவலைப்படுபவர்களுக்கு அது விடைகள் எதுவும் அளிப்பதில்லை. சாஸர் விவரிக்கும் சித்திரத்தின் எதிர்வினையாய் நாம், நம் காலத்துக்குரிய ‘சேதிகளை’ பகிர்ந்து கொள்வதில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு சாஸர் அதிகம் இடம் கொடுப்பதில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ என்பது புதிய சொல்லாக இருக்கலாம், ஆனால் அது மிகப் பழைய பிரச்சினையை விவரிக்கிறது.

நன்றி – Chaucer’s Post-Truth World, Eleanor Parker, History Today 

ஒளிப்பட உதவி – A Clerk of Oxford

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

வேரும் கனியும் – 2 : லோசாவை முன்வைத்து – நரோபா

நரோபா

படைப்புத்திறன் அளிக்கும் அழுத்தம், அதை விட்டு வெளிவர உள்ள வழிமுறைகள், எழுத்தாளனின் பொறுப்பு இவை எப்போதும் பேசச் சுவையானவை. மரியோ வர்கோஸ் லோசா எழுதிய ‘Letter to a Young Novelist’ எனும் நூலை வாசித்து கொண்டிருக்கிறேன். இளம் எழுத்தாளருக்கு லோசா எழுதும் கடிதங்களே இத்தொகுப்பு. ‘நாவல்’ எனும் வடிவம், அதன் சவால்கள் மற்றும் கூறுகளை லோசாவின் கடிதங்கள் விவாதிக்கின்றன. அத்துடன் பொதுவாக எழுத்தைப் பற்றியும் படைப்பாற்றல் பற்றியும் பேசுகின்றன. எழுத்து, எழுத்தாளன் பற்றி பேசும் லோசாவின் புத்தகத்தில் உள்ள முதல் கடிதத்தை மட்டும் கொஞ்சம் விரிவாக எழுதலாம். பிற கடிதங்கள் நாவல் எழுதும் முறைமை பற்றி விவாதிக்கின்றன.

எழுத்தின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்விக்கு லோசா, எழுத்து அளிக்கக்கூடிய இன்பமே அதன் பயன்மதிப்பு என்கிறார். எழுத்தே தனக்கு வாய்த்த ஆகச்சிறந்த நிகழ்வு என எழுத்தாளன் தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறான். எழுத்தையே தனது வாழ்க்கை முறையாக ஏற்கிறான். பிற அங்கீகாரங்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒருவன் எழுத்தாளன் ஆவதற்கு விதியோ கடவுளின் அருளோ அல்லது மரபணு அமைப்போ காரணம் என அவன் நம்புவதில்லை, எனினும் சார்த்தர் முன்வைப்பது போல் அது முழு சுய தேர்வு மட்டுமே என்பதிலும் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் லோசா. சுய தேர்வு முக்கியம்தான், ஆனால் அடிப்படையில் எழுத்தாளன் ஆவதற்கான சில அகச்சாய்வுகள் பால்ய பருவத்திலோ வளரிளம் பருவத்திலோ தென்படும் என்கிறார் அவர். விதவிதமான மனிதர்களை, சூழல்களை, நிகழ்வுகளை, வெவ்வேறு உலகங்களை அவர்கள் கற்பனை செய்வார்கள். இப்படியான கனவுள்ளவர்கள் பெரும்பான்மையினர் நிகழ் வாழ்வை துறந்து கற்பனையுலகில் வாழ்ந்து கதை படைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இங்குதான் சார்த்தர் முன் வைப்பது போல், சுய தேர்வு செயல்படுகிறது. கனவுள்ளம் கொண்டவர்களில் வெகுச் சிலரே தங்களை எழுத்தாளர்களாக ஆக்கி கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் லோசா.

ஏன் ஒருவன் கதை புனைய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ‘எழுத்து என்பதே வாழ்வுக்கு எதிரான கலகச் செயல்பாடு’ எனும் கருத்தை முன்வைக்கிறார். நிகழ் வாழ்க்கையின் போதாமைகளுக்கு எதிராக நிகர் வாழ்வை படைக்கிறான் எழுத்தாளன். பல எழுத்தாளருக்கு இது கலகம் என்றொரு பிரக்ஞைகூட இருக்காது. அப்படிச் சொன்னால் அந்த எழுத்தாளரேகூட மறுக்கலாம். இதைப் படிக்கும்போது எனக்கு சட்டென அசோகமித்திரன் நினைவுக்கு வந்தார். அவரிடம் போய் ‘நீங்கள் ஒரு கலகக்காரர்’ எனக் கூறினால், அதை அவர் ஏற்க மாட்டார்.

மேலும் லோசா, எழுத்து அதை பயின்றவனுக்கு சுகமும் நிறைவும் அளிப்பதில்லை என்கிறார். நிகழ் வாழ்வின் மீதான தீவிர அதிருப்தியின் விளைவாக புனைவுகள் விளைவதால் புனைவுகளும்கூட அசவுகரியங்களுக்கும் அதிருப்திகளுக்கும் காரணமாய் இருக்கின்றன. இந்நிலை எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்பதில்லை, நவீனத்துவத்தின் வழியாக நாமடைந்த சிந்தனை போக்குதான் இது எனும் பார்வையை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ‘அழகு’ குறித்து நிலவிய கருத்தியல் உருவாகக் காரணமாக இருந்த ஐரோப்பிய பெண்கள் சுய தேர்வாக நாடாபுழுக்களை (tapeworm) உண்டு உடல் மெலிந்து பலியானார்கள், எழுத்தாளனும் அப்படித்தான் என்கிறார் லோசா. எழுத்தை தனது ஊடகமாக தேர்ந்தவர்கள் படைப்பாற்றல் எனும் எஜமானனின் ஏவலாட்கள் மட்டுமே என்கிறார். உடலுக்கு உள்ளிருந்து எல்லாவற்றையும் உண்டு கொழுக்கும் நாடாப்புழுக்களை போல் எழுத்தாள அகத்தின் உள்ளிருக்கும் படைப்பாற்றல் அவனது அனுபவங்கள் எல்லாவற்றையும் உண்டு செரித்து அவனை அழித்து வளர்கிறது என்று எழுதுகிறார் அவர். பிரம்மராஜன் , மிரோஸ்லோவ் ஹோலுப் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு மேற்கோள் சுட்டுகிறார் “Poetry is so important, but I don’t know what for”. படைப்பூக்கம் தன்னை மீறிய ஒன்று என்பது ஏறத்தாழ அனைத்து எழுத்தாளர்களும் ஒப்புகொள்வதாகவே இருக்கிறது.

சதத் ஹசன் மண்டோ, ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்றொரு சிறிய கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் எப்படி தான் குடிக்கு அடிமையோ அதே போல் எழுத்துக்கும் தானொரு அடிமை என்கிறார். ‘எழுதாதபோது நிர்வாணமாக இருப்பது போல், குளிக்காமல் இருப்பது போல், குடிக்காமல் இருப்பது போல் இருக்கிறது’ என்கிறார் அவர்- “பெரிய கல்வித் தகுதி இல்லாத நான் இக்கதைகளை எப்படி எழுதி இருக்க முடியும்? இந்த கதைகளின் ஆபாசங்களுக்கு சிறை செல்ல வேண்டியிருக்கும். இக்கதைகள் தங்களை தாங்களே எழுதி கொள்கின்றன… நான் எழுதும் கதைகள் என் மனதிலோ சிந்தையிலோ இருப்பதில்லை. அவை எப்போதும் எனது பாக்கெட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும்…. அந்த வகையில் நான் என்னை எந்த அளவுக்கு எழுத்தாளன் என நம்புகிறேனோ அதேயளவு பிக்பாக்கெட்காரன் என்றும் கருதுகிறேன். சொந்த ஜெப்பியிலேயே களவாடி அதன் உள்ளடக்கப் பொருட்களை உங்களுக்கு அளிப்பவன்… என்னைப்போல் ஒரு முட்டாளை நீங்கள் பார்த்ததுண்டா?

லோசா படைப்பாற்றலை நோய்மையுடன் இணை வைப்பதன் வழியாக இரண்டு கருத்துக்களை முன்னிறுத்துகிறார். எழுத்துக்குத் தன்னை முழுமையாக அளிப்பது மற்றும் எழுத்தின் வெம்மையில் உருகி அழிவது. சென்ற கட்டுரையில் பேசியதுதான், எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது கீழை நாடுகளின் ஆன்மீக மரபுடனும் எழுத்தாற்றலுக்கு பலியாவது நவீன தனிமனித வாதத்துடன் பொருந்துவதாகவும் தோன்றுகிறது. எழுத்தை எஜமானனாக ஏற்க வேண்டும் என்பது சரி, ஆனால் அதன் வெம்மையில் உருகி அழிய வேண்டும் என்பது எழுத்தாள பிம்பத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நவீன கால ‘கற்பனாவாத’ பிம்பம் என்றே எனக்குப் படுகிறது.

சரி, எழுத்தாளனின் பொறுப்புதான் என்ன? “படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும்போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிக் காட்டப்பட்டால் அதை படைப்பூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது,” என்று எழுதியிருந்தேன்.

லோசா படைப்பை ஒரு வசதிக்காக இரண்டாய் வகுத்துக் கொள்கிறார்- ‘கருப்பொருள்’ (theme) ‘வெளிப்பாடு ’(presentation- style). பல்வேறு எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை எழுதி இருக்கிறார்கள். ஒரே கருப்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அதில் பிழை ஏதுமில்லை, ஏனெனில் அதுவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையால் அளிக்கப்பட்டது. ஆனால் அது வெளிப்படும் முறைக்கு எழுத்தாளனே முழுப் பொறுப்பு என்கிறார். புனைவு என்பதே அடிப்படையில் ‘பொய்’ தான் எனும்போது எழுத்தாளனின் நம்பகத்தன்மை என்பது தனக்கு உதித்த கருப்பொருளுக்கு அவன் நியாயம் செய்தானா என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்ற முடிவை அடைகிறார் லோசா. எழுத்தாளன் எங்கோ அடைந்த அனுபவத்தின் சாரத்தை கதைக்குள் ஒளித்து வைக்கிறான் என்பதை மனதில் கொண்டு லோசா எழுத்தாளனின் படைப்பூக்கச் செயல்பாட்டுக்கு சுவாரசியமான பதத்தைச் சூட்டுகிறார்- “backward stripping”.

ஆம், புனைவு என்பது ஆழ்ந்த உண்மையை மூடியிருக்கும் பொய். வரலாற்றின் மறுபக்கம். எவையெல்லாம் நிகழவில்லையோ அவற்றின் வலைப்பின்னல்.

oOo

ஒளிப்பட உதவி – Doyletics

வேரும் கனியும் – 1

செரவி

தி. வேல்முருகன்

20161227_115952

கந்தனுக்கு இப்ப இருக்கிற ஒரே பிரச்சினை 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும். சஞ்சீவிராயர் கோயில் பக்கத்தில் இருந்த ஐமாலியா மளிகையை பார்த்ததும் யோசிக்காமல் நேரே அங்கு நடந்து நிறைய பொருட்கள் வாங்குவது போல் தோரணை காட்டி சீனி, உடைச்ச உளுந்து என்று கொஞ்சம் பலசரக்கு வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

“234 ரூபாய் வருது 2000 ரூபாய் தர்ரிங்க”

“சில்லறை இல்ல”

“அரே அல்லா, யாவரமே சுத்தமா இல்ல பேங்க்ல காசு எடுத்ததும் நேரா இங்கதான் வராங்க. நீங்க எங்கயாவது பக்கத்துல மாத்த முடியுமா பாருங்க சார்”

எங்க மாத்திறது? கொஞ்சம் தள்ளி இருந்த மியான் பாய் கடைதான் தெரிந்தது கந்தனுக்கு.. அந்தக் கடைகூட கைமாறி வேற பேருல இப்ப இருக்கு. அதுக்கு எந்த பேரு மாறுனாலும் அந்த கடை பேரு ஊர்க்காரங்களுக்கு மியான் கடைதான். அதுலகூட இப்ப ஒன்னும் யாவாரம் தெரியல.

முன்பு எல்லாம் இந்த நாள்ல ரொட்டி கோழிக்கறியோடு கொக்கு, நொல்லமடையான் கறியெல்லாம் கிடைக்கும். மதிய நேரத்தில் சாப்பிட இடம் கிடைக்காது. வரிவரியா நெய் ரொட்டிய கம்பியால எடுத்து உருவி இரண்டு கையால ஒரு தட்டு உச்சில ஒரு தட்டு. பொலபொலவென உதிர்ந்து இலகுவா பல்லுக்கும் நாவுக்கும் பதமா தெரியற மாதிரி வைப்பாங்க. எங்கிருந்தொ கொக்கு நொள்ளமடையான் எல்லாம் உயிரோட பிடிச்சு சைக்கிள் ஹாண்டில் பாருல மாட்டி எடுத்து வருவாங்க. அந்த கடையில விக்க.

கொஞ்சம் தள்ளி ஆட்டா கடை. அங்கேயும் இதே மாதிரி கறி எல்லாம் கிடைக்கும் பக்கத்திலதான் ஆண்கள் மேநிலை பள்ளி. அங்கு படிச்ச ஞாபகமும் சாயந்திரம் ஆனா ஆட்டா கடை கொத்துப் பரோட்டா கொத்துற டன் டன் சத்தம் கேட்குற மாதிரியும் கொக்கு கறி தேங்காய் சால்னாவோட அது ஒரு ருசி நாக்குக்கு தெரிந்து ஞாபகம் முட்டியது கந்தனுக்கு.

எல்லாம் போச்சு இப்படி மழையே பெய்யாம போனா அவ்வளவுதான்.

கந்தனுக்கு கொக்கு நினைப்பு வந்ததும் முதல் நாள் பார்த்த பறவை பிடிப்பவனின் வெற்றுடம்பும் தளந்து சுருங்கி வரிவரியா தெரிந்த ஒட்டிய வயிரோட கையில தூக்கிக் காட்டிய காட்டுவாத்தும் சேர்ந்து ஞாபகம் வந்துடுச்சி. யாரும் வாங்குல. அந்த பெரியவர் கேட்டுட்டு இருந்தாரு. கந்தனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.

அவன் அப்பத்தான் ஒரு மீன வாங்கி வெட்டி சுத்தம் பண்ணி வெளியே வரும்போது வழியில ஒக்காந்து இருந்த ஆயா, யப்பாடி இந்த இலந்தபழம் வாங்கிக்கப்பா மணலு மாதிரி இருக்கும்பா, ன்னு கேட்டதும், எவ்வளவு ஆயா,ன்னு கந்தன் கேட்டதுக்கு, பத்து ரூபாய்ப்பா” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் தோலெல்லாம் சுருங்கிப் போன கையால நிறப்படி கூம்பாகவும் கையாலேயும் அதே அளவு அள்ளிப் போடுது. பழம் எல்லாம் பிரஷ்ஷா நத்தை நத்தையாட்டும் இருக்கு. வாணாம்முன்னு சொல்ல முடியாத வாங்கிட்டு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்ததும், நல்ல புள்ளப்பா நீ! ஏன் கிட்ட ஏது இவ்வளவு காசு, உள்ள செத்த மீன்காரிவோட்ட இருக்கும் கேளேன்?

சில்லரையா மீன் செதிலு ஒட்டியிருந்த நோட்ட வாங்கி ஆயாகிட்ட கொடுத்து, என்ன ஊரு ஆயா, என்றார் கந்தன்.

“நான் அரிகிஷ்ட்டிதாம்பா, தோட்டத்துல தரையில கொட்டி வீணாப் போவுதா, அதான் இப்படி அள்ளிக் குடுத்துட்டு அப்படியே ரயிலடி போயி ரவிக்கடையில ஒரு டீய போடச் சொல்லி குடிச்சுட்டு வூட்டுக்கு போவேன், சாப்பாடு ஒன்னும் செல்ல மாட்டேங்குது. டீ தான் புடிக்கும். ஒரு வா தொண்டையை நனைச்சா போதும் பையன் சவுதியில இருக்கான், வரவரைக்கும் உயிர வச்சுக்கனும் பாரு”

“வேற யாரும் இல்லியா ஆயா?”

“இருக்கா, மருமவ இருக்கா அத ஒன்னும் கேட்காத, நீ போ”

அப்பத்தான் திரும்பி வரும்போது அந்த பெரியவர் அந்த காட்டு வாத்த வச்சிகிட்டு மரைக்கார்கிட்ட, வாங்கிகிக்க சாமி,ன்னு கேட்டுக்கிட்டு இருந்தார்.

“செத்துப்போச்சு கனி, உயிரா இருந்தா வாங்கலாம்,” அப்படின்னு சொல்லி போயிட்டாரு மரைக்கார்.

வாங்கக்கூடிய யாரையும் காணும். பெரியவர் முகத்தைப் பார்க்க முடியல. அவரும் மட்டும் தானா, இங்க  முருகன் மெடிக்கல் கீழே பெரியாஸ்பத்திரி பக்கத்தில பழம் விக்கறவங்க, அதச் சுத்தி நடந்து போறவங்க யாராவது வாங்க மாட்டாங்களான்னு அவங்க பார்க்கிறது… ஏன் இந்த ஜமாலியா கடையில நிக்கரவங்க வாங்கரவங்க யார் முகத்திலையும் ஒரு வெறுமைதான தெரியுது.

ச்சே அந்த காட்டு வாத்த நாமாவது வாங்கி இருக்கலாம், என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.

என்னங்கனி யோசனை ரொம்ப நாழியா நிக்கராகள, அவுகளுக்கு பைசாவா குடுத்து அனுப்பு என்றார் பில் போட்டுக்கிட்டு இருந்த பாய்.

கல்லாவில் இருந்தவர், சரி நானா, என்று எண்ணிக் கொடுத்தார்.

“இனிமே 2000 ரூபாய மொதல்லிய சொல்லிடுங்க, இங்கே பாரு வாப்பா பைசாவெல்லாம் நீங்க கொண்டு போவுது”

“இல்லை பாய் இனிமேல் வரமாட்டேன்,” என்ற கந்தன் பேங்க் வாசல்ல நிறுத்தி இருந்த டூ விலர எடுத்துட்டு நேரா கீரைக்காரத்தெரு, பஸ்டாண்ட், பெரிய மதுவு வழியா வண்டிய வெரட்டி தெருவுக்கு திரும்ப இருந்தார். அப்போது, ரோட்டு முனையில் இருந்த ஆலமரத்தடியிலேருந்து, சாமியோவ், நேத்துகூட பார்த்திய செரவி, செரவி வாங்கிக்க சாமி வூட்டுல ஆச்சிக்கு புடிக்கும், என்று பெரியவரும் அவர் மனைவியும் ஒரு சேர சொன்னதும் கந்தனுக்கு மீறமுடியல. வண்டிய நிறுத்துனார். எவ்வளவு காசு என்று கேட்டு கொடுத்து விட்டு உறிக்கச் சொன்னார்.

“பெரியவர இது செரவி கிடையாது காட்டு வாத்து, ஆனா நாங்க செரவின்னுதான் சொல்லுவோம் சாமி”

“சரி சரி உறிச்சுக் கொடுங்க”

ரெக்க, காலு கழுத்த அறிஞ்சுட்டு பனியனைக் கழட்டற மாதிரி முடியோட தோல உருவிட்டு வயித்துல சின்னதா ஒரு கீறல், அப்படியே குடலு சரியிது. ஈரல கிள்ளிப்புட்டு மனைவி கையில கொடுக்குறாரு பெரியவரு. அவுங்க அதுல ஒட்டியிருந்த ஒன்னு ரெண்டு முடிய எடுத்துட்டு சவுக்கத்தால் பையில போட்டுச்சு. எல்லாம் நிமிசத்துல மூணையும் உறிச்சுட்டாங்க

ஒரே ஈரல் நிறமாகவும் ரத்த நெறமாகவும் தெரிஞ்சதும், ஆகா பிரசு, கறி நல்லா இருக்கும் என்று மகிழ்ந்து போய் வீட்டுக்கு வந்து மனைவிகிட்ட காட்டி, வள்ளி, வள்ளி என்னன்னு பாரு,ன்னு சொல்றார் கந்தன். எட்டிப் பார்த்தவள், அய்யோ இது என்ன கருமாந்திரம் ஒரே கவுளு, என்ன கொண்டு ஆவாது,ன்னு சொல்லி விட்டாள். கந்தனுக்கு குருவிய தானே புடிச்ச மாதிரி இருந்த சந்தோஷம் போன இடம் தெரியல. கறிய எடுத்து மோந்து பார்க்காரு, கவுளுதான் அடிக்குது.

“வள்ளி வள்ளி நாம வாங்கற மீன் கருவாட விடவாபெரிய கவுளு…”

“அப்ப நீ சுத்தம் பண்ணி குடு செய்யறேன், ஆனால் நான் திங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டாள் வள்ளி.

வாங்கியாந்துட்டமே என்னடா செய்யறதுன்னு சட்டைய கழட்டிட்டு துண்ட கட்டிகிட்டு இறங்கிட்டாரு கந்தன்.

நல்லா ஓடியும் நீந்தியும் மேய்ஞ்ச குருவிவோ இல்லியா கறிய பாரு எப்படி இருவி ரத்தமாட்டம் கிடக்கு பாரு, என்றார் மனைவி வள்ளிய பார்த்து

சரி சரி நாக்க ரொம்ப நீட்டாம நல்லா சின்னதா சன்னமா வெட்டிடுங்க, வேவாமா போயிட போவுது, என்று திட்ட ஆரம்பித்ததும், ஏய் உனக்கு குருவி அவளவு எலுப்பமா போச்சா, புடிக்கறத நான் பாத்துருக்கேன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்ப எனக்கு 20 வயசு இருக்கும், அப்படின்னு கந்தன் சொல்ல ஆரம்பித்ததும்-

“ஆமாம் ஆமாம் நீ ஆடுன ஆட்டத்ததான் சொன்னாங்களா?”

“இதான் ஓங்கிட்ட புடிக்காது”

“சரி சரி சொல்லு”

“ஒரு நாளு சாயந்திரம் ஒரு 3 மணி இருக்கும் ஆத்து ஓரமா தெற்கு வாய்க்கால் மேல வயலுக்கு போறேன். இப்ப அந்த இடம் வாய்க்கால் எல்லாம் இறால் குட்டவலா போயிடுச்சு. அப்ப திடீர்னு வாய்க்கால் மேல நின்ன ஒருத்தரு கைய காட்ராறு, வராத வராதன்னு. நான் பயந்து போயி என்னமோ தெரியலன்னு கமுக்கமா வாய்க்கா வரப்புல்ல உக்காந்து அவரையே பார்க்குறேன். அவரு வடக்க மானத்தை பாக்கறாரு, நானும் பார்க்கிறேன். இரண்டு கொக்கு பறந்து வரது தெரிஞ்சுது. இவர பாக்கறேன், கையில இருந்த கயிற ஒரு கையால இழுக்குறாரு. அப்ப பார்த்தா வயல்ல இருந்த ஒரு கொக்கும் நொள்ளமடையானும் ரெக்கைய தூக்கி அடிக்குது, பறக்காம.இதை மேல பறந்த இரண்டு கொக்கும் பார்த்துச்சா, அப்படியே இறக்கைய அடிக்காம காத்துல மிதந்து ஒரு வட்டம் போட்டு கால நீட்டிக்கிட்டு வந்து அந்த கீழே இருந்த கொக்கு பக்கத்தில ஒக்காந்துச்சு”

“அய்யோ அப்புறம்?”

“க்ராச்ன்னு சத்தம் கொடுத்து பறக்க நினைச்சுது பாரு, அவரு இன்னோரு கையிலிருந்த கவுற இழுத்துட்டாரு, அப்படியே இரண்டு பக்கமும் மறைச்சு வச்சிருந்த வல கொக்கு மேல உழுந்து மூடிப்போச்சு”

“அய்யோயோ “

“அப்புறம் பார்த்தா அந்த குருவி புடிக்கரவரு ஓடிப் போயி ரெண்டு கொக்கையும் பிடிச்சு அது இறக்கைய பிச்சி கட்டி போடறாரு. பாவமா இருந்துச்சு, அப்படியே பார்த்துட்டு போயிட்டேன்”

“அப்புறம் ஏன் இத வாங்கிட்டு வந்த?”

“அதெல்லாம் கேக்காத. தோ முடிஞ்சுடிச்சு. நீ ஆக்கிடு நான் குளிச்சிட்டு வந்துடறன்”

வந்ததும் வள்ளி, நீ மேசைய நாசம் பண்ணாத, என்று சொல்லி, ஒரு வாழையிலை கிள்ளிட்டு வந்து, கீழ உக்காரு, என்றாள். தரையில ஒக்காந்ததும் சாமி படையல் மாதிரி வறுத்த கறி, சோறு, ரசம், கீரை எல்லாம் வச்சி சுட்ட கருவாடு சுருட்டும் சாராயம் மட்டும் தான் இல்ல, நீங்க சாப்புடுங்கன்னுட்டு போய் விட்டாள்..

உடையாரப்பான்னு குலதெய்வத்தை நினைச்சுட்டு ஒரு கறிய எடுத்து வாயில வைக்கிறாரு கந்தன், குப்புன்னு அவரு மொகத்துல வந்து அடிக்குது ரத்த கவுளு. அப்படியே ஒரு மாதிரி ஆயிடுச்சு கைல அடிக்குதா கறில அடிக்குதான்னு அவருக்கு தெரியல. மேற்கொண்டு ஒரு வாய் சாப்பிட முடியல.

இலையில இருந்த சோத்த கீரையில பெசைஞ்சு சாப்பிட்டுட்டு, இலைய சுருட்டி நாய்கிட்ட வச்சிட்டார். வள்ளி கேட்டதுக்கு, தெகட்டுது போதும் பசங்க வந்தா திங்கட்டுமுன்னாரு. ஆனால் அவருக்கு தொண்டையில மாட்டுன முள்ளுமாரி அருவிகிட்டே இருந்துச்சு என்னடா இப்படி ஆயி போச்சேன்னு. பசங்க வந்து ஒன்னும் சொல்லாம நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க

மறுநாள், இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்புடும் என்று நினைத்த கந்தன், பெரிய மதுவு ஓரம் தனது டூ விலர நிறுத்திட்டு போன வருட மழையில் பிளவுபட்டு இன்னும் சரி செய்யாத அபட்மண்டை பார்த்துக் கொண்டு சிதறி கிடந்த கருங்கல்லில் இடித்துக் கொள்ளாமல் மெதுவாக இறங்கி திரும்புறாரு.

‘சாமி செரவி வாங்கிக்க ஆச்சிக்கு புடிக்கும்னு’ சத்தம். முகத்தை திருப்பிக்கிட்டு விருட்டுன்னு மீன் கடை உள்ள போயிட்டாரு கந்தன்.