Author: பதாகை

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – உடன்பிறந்த அடையாளங்கள்- மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.

புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.

முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்

ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.

இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.

பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.

கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweetcandy என்றாலும், liftelevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.

ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?

மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.

அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.

இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.

இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.

oOO

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்

இறந்தவர்களுக்கான புதிய பெயர்கள்

Matthew Jakubowski

(This story is translated with the kind permission of Matthew Jakubowski for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

 

matt-j

ஜெப் காலமாகிய பின் இந்த ஏழு ஆண்டுகளாக சில மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் பெயர் சூட்டுவதும் பின் அதை மாற்றி வேறு பெயர் சூட்டுவதுமாய் இருக்கிறாள் கரேன். அமைதியான இடம், காலி கலவி மாளிகை, பதுக்கல்காரனின் களிப்பு, குப்பை ஆட்டுக் கொட்டடி, ஆனந்த நிலவறை. இருபத்து- மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாய் இருந்தது குறித்த அவளது நினைவுகளின் இறுகும் ஆடியில் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவனைத் திருப்தி செய்வதற்கான விளையாட்டாய் துவங்கியது.

காலையில் தனியாய் முட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும், இரவில் தாமதமாய் கதவைத் திறந்து உள்ளே வரும்போதும், அவளது நினைவுகளின் இல்லத்துக்குரிய ஒரு புதுப்பெயர் தோன்றும். அந்தப் புதுப்பெயரை அவள் மீண்டும் மீண்டும் மெல்லத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது, கண்கள் விரிந்து அவளது முகத் தோற்றம் ஒரு நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தது போல் உயிர்த்தெழும்.

புதுப்பெயர் சிறிது காலம் அவளைக் காக்கும். முன்னளவு கண்ணீர் இல்லை, ஈரமற்ற தேம்பல். ஆதன் ஆற்றல் குறைவதன் துவக்கத்தை அவள் பெரும்பாலும் இரவில்தான் உணர்வாள், வெளியே பலமான காற்றோ குளிரோ இல்லாதபோதும் தரையும் சுவர்களும் அசையத் துவங்கும்; அவனை அவள் மறக்கவில்லை என்பதை அவன் அறிந்தாக வேண்டும் என்று பாவனை செய்து கொள்வதற்கேனும் ஒரு புதுப்பெயர் தேவைப்படுகிறது என்பதை அவள் அறிந்து கொள்வாள்.

அவள் அவனை அவ்வளவு நேசித்தாளா? காதல் நிகழ்காலத்தில் உள்ளதல்ல. அது கடந்த காலமும் எதிர் காலமும் உயிர்நாட்டதைப் பற்றுதலின் இறுக்கம், உன்னில் ஒரு பகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பது, நீ மங்கி மறைவதைக் கண்டதும் உன்னை உயிர்ப்பிக்க அவர்களைப் பாடச் செய்வது. உண்மையைச் சொல்வதானால், அவனது இல்லாமையை நேசிப்பது இதமாக இருந்ததால் அவள் பாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு நேசித்தாளா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். இப்போதும் அவன் அறியப்பட்டவன்தான், ஆறுதலளிக்கும் இல்லாமையின் இருப்பு.

வெறுமை தன் வடிவம் இழந்தபோது, மேலும் மேலும் அவனைப் போல் இல்லாது போனபோது, தனது நினைவுகளையும் சந்தேகங்களையும் எந்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு தன் துயரம் அதைச் சரி செய்யவும், அதன் மீது மோதிக் கொள்ளவும் இடம் கொடுத்தாள்.

அவன் துன்பப்படுகிறானா? இப்போது அவன் போய் விட்ட நிலையில் அவளது துயரம் குறித்து அவனுக்கு அக்கறை இருக்குமா?

“நீ தேறி வருவதை நீயே கெடுத்துக் கொள்கிறாய், அது உனக்கும் தெரியும்,” என்று அவளது நெருங்கிய தோழி லியாண்ட்ரா அழுதுவிடுவது போல் கூறினாள், கரேன் வீட்டுக்கு எவ்வளவு முறை புதுப்பெயர் தந்திருப்பாளோ அவ்வளவு முறை விசுவாசமாய் அவள் மீண்டும் மீண்டும் பாடும் பல்லவி. “நீ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய் என்பது அபத்தமாக இருக்கிறது. உனக்கு பணமும் நேரமும் இருக்கிறது என்பதால் மட்டும் நீ அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமில்லை. அப்புறம், எதுவும் சொல்லாதே…”

“… ஹனி, நான் உன் மீதும் அன்பு வைத்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.” வழக்கமாய் வரும் பதில்தான், அதில் அன்பைவிட குரூரம்தான் இருந்தது, பிறரைப் போலவே லியாண்ட்ராவும் தனது கலையை மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தால் நம்பிக்கையின்மை வெளிப்படையாகவே தெரிந்தது.

அவளது நண்பர்களும் பலரை இழந்திருக்கிறார்கள். புற்றுநோயைவிட கொடூரமான விஷயங்களுக்காக. அவளுக்குத் தெரியும்.

அவர்கள் அறிய மாட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டைப் பற்றி என்ன ஏது எப்படி என்று எதுவும் அவள் சொன்னதில்லை, அதன் சுவர்களுக்குள் துக்கத்தை ஒரு நிகழ்த்துகலையாகவும் போர்க்கலையாகவும் பயிலும் அவளது வழக்கங்கள் பற்றியும் அவள் சொன்னதில்லை.

அது இப்போதும் எவ்வாறு திரள்கிறது, அந்த உணர்வுதான், அவனது இல்லாமையை இவ்வுலகினுள் அது சுவாசிக்கும்போதே அவளும் அவனது உயிரை அதனுள் சுவாசிக்கிறாள், இவ்வாறு பிணைந்திருத்தலில் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வதன் அமானுட சஞ்சாரமும் சஞ்சரித்தலும். சாதாரணமாய் வாழ்தலைத் தனக்குரியதாய் ஆக்கிக்கொள்ள அவளால் இயலும், அது சோபையிழக்கும் என்றாலும்; அதன் பின் ஒரு நாள் அவள் பிணையற்ற பறவையாவாள். இந்தச் சிலேடை அவளை எப்போதும் சிரிக்க வைத்ததில்லை.

வெறுமைக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட உலகுகளுக்கு இடையில் வீடு பெருமூச்செறிவதைக் கேட்டபடி படுக்கையின் தனிமையில் அவளது உடல் போர்வைகளுக்கு இடையில் மண்ணின் கீழ் ஆழத்தில் கிடப்பது போல் இருந்தாள், அதன் உயிருள்ள சருமம் எங்கும் இறந்தவர்களைச் செவித்தபடி. தொல்காலத்தில் இருந்தவர்கள் சொன்னது போல், புதிய உடலொன்று தரிக்கக்கூடிய உடலின் உறக்கத்தில்.

அவன் போய்ச் சேர வேண்டும் என்று சில சமயம் நீ எவ்வளவு விரும்பினாய் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, நீ பைத்தியமாய் பாசம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள். அவள் அறிவதற்கு வெகு காலம் முன்னரே இழப்பின் முழு உருவத்தையும் அறிந்து விட்ட அவர்கள்- உண்மையில் நோய்மையே தீது, என்று அறிந்திருந்திருந்தார்கள். துன்பப்படுதலே உண்மையில் அஞ்சுதற்குரிய முடிவின்மை. முகமற்ற வலி குரூர, குறுகிய வாழ்வில் நித்தியங்களை வளர்த்தெடுக்கிறது.

தம்பதியர் “பாசத்துடன்” “போராடும்” இரட்டைப் போராளிகள் ஆகின்றனர். என்ன ஒரு கதை! ஆனால் இது ஒரு நாயகக் கதையா இல்லை பேய்க் கதையா? சுண்டிவிடப்பட்ட நாணயத்தின் இரு முகங்கள் என்பதை கரேன் அறிந்திருந்தாள். அது எங்காவது விழுந்தாக வேண்டும். விளைவுகளை கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. அவள் அதைச் செய்யவில்லை. அதன் ஒவ்வொரு சுழற்சியையும் அவள் கவனித்திருந்தாள், நாணயம் நிலைக்கு வந்ததும், மரணத்தின் முகத்தை உற்று நோக்கினாள்.

அவள் பிரச்சினை என்ன என்பதைப் பிறரிடம் சொல்ல முயற்சி செய்வது வெளிப்படையாய் பேசுவது என்று சொல்கிறார்களே, அதற்கும், சாதாரண விஷயத்துக்கான புகழ்ச்சிக்கும்தான் கொண்டு செல்லும். முட்டாள்தனமான வாக்குவாதத்தில் வெற்றி பெறவோ, மீட்கப்பட வேண்டுமென்றோ அவள் விரும்பவில்லை. இன்னும் விரிவான, நிரந்தர அந்தரங்க வட்டத்தைப் பிறர் மதித்தால் போதும், என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் மரணத்தைச் சில சமயம் மன்னிக்க முடியாது என்பதைத்தான் அவள் லியாண்ட்ராவிடமும் பிறரிடமும் சொல்ல அஞ்சியிருக்கலாம். நிச்சயம் இது போல் நடந்து விடுகின்றது. ஆனால் அவற்றை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எண்ணற்ற புதுப்பெயர்களே நமக்குப் போதுமானவையாய் இருக்கலாம், மரணத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளின்மீது உணர்ச்சிகளற்ற ஒரு புரிதலை அவை நிலைநாட்டக்கூடும். போதாமை மிகுந்த ஜீவன்களில் நாம் தொடர்ந்து பெயர் சூட்டி உயிர் நிறைக்கும்போது இந்தச் சக்திகள் எதிர்வினையாற்றாமல் போகலாம், இவ்வுலகுக்குப் பொருந்தாத தம் இருப்பு விரிசலடைவதை அவையும் உணரத் துவங்கலாம். திறந்த, துடிக்கும் இதயத்தைப் பொசுக்கும் வெண்-சூட்டுத் தீக்கோல் போன்ற காதலால் நாம் நம்முடன் இறுக்கி அணைத்துக் கொண்டவர்களைப் போல் தாமும் மரணிக்கக்கூடியவைதான் என்பதை அவை கணப்போது உணரலாம். அப்படியும் இருக்கலாம். உயிர்க் குருதிக்குள் துளைக்கும் உலோகத்தின் வெப்பம், புதிய பெயர்களை அழைக்கும் ஓலம். அப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும், அவளது உயிரும் பிரியும் வரை.

 

நன்றி : (b)OINK

oOo

About the author: 

Matthew Jakubowski is an American fiction writer and literary critic. A former editor for the translation journal Asymptote, his writing appears regularly in publications worldwide, such as The Paris Review Daily, The National, 3:AM Magazine, The Brooklyn Rail and Kirkus Reviews. He lives in Philadelphia, Pennsylvania, and maintains a litblog called truce. (Blog URL: http://mattjakubowski.com )

மெய்ம்மை கடப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர் (மொழியாக்கம் – பீட்டர் பொங்கல்) தொடர்பாய் சில குறிப்புகள்:

wicker-house

Post truth= ‘மெய்ம்மை- பிந்தைய’ என்பது அத்தனை பொருத்தம் இல்லாத மொழிபெயர்ப்பு.

சில குறிப்புகள் கீழே:

போஸ்ட் மாடர்ன் = நவீனக் கடப்பு நிலை. நவீன காலத்தைக் கடந்த நிலை. இதன் முன்னோடி, உடனோடியாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம்= அமைப்பியல் (வாதக்) கடப்பு நிலை. (வாதம் என்ற சொல் அபரிமிதமாகப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வாமை உண்டாகி இருக்கிறதால் அதைத் தவிர்க்கலாம்.)

அமைப்புகளால் தனிமனிதர் செலுத்தப்படுகிறார், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படை. தனிமனிதச் செயலதிகாரம் என்பது கிருஸ்தவ இறையியலில் ஒரு பகுதி. சமூக உறுப்பு என்ற நிலைக்குத் தனிமனிதச் செயலூக்கம்/ திறன்/ அதிகாரம்/ விருப்பம் ஆகியன அடிபணிய வேண்டும் என்ற சர்ச்சிய நிர்ப்பந்தத்தைத்தான் மேற்கண்ட அமைப்பியல் வாதமெனும் ‘செகுலர்’ கருத்தாக்கம் திரும்பச் சொல்கிறது.

சர்ச், என்பதன் வேர்ச்சொல், ‘வலிமையானது, ஆற்றல் வாய்ந்தது,’ எனப் பொருள்படும் keue என்ற பதம். ஆற்றலுக்கும் வலிமைக்கும் அடிபணிவதை அற/ ஒழுக்கக் கட்டாயமாக முன்வைக்காமல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்களே (மனிதரே) உருவாக்கிய அமைப்புகள் பூதாகாரமாக, செடுக்காக, மிக நுண்ணிய தளங்களிலும், பரிமாணங்களிலும் கூட ஊடுருவி மனித வாழ்வை ஆள்கின்றன, இனி மனிதருக்கு மீதம் இருப்பதெல்லாம் அடிபணிவது, எதிர்ப்பது, உடனோடியபடி தம் தேவைகளை நிறைவேற்றும் சகஜபாவம் கொள்வது போன்ற ஒரு சிலதான் என்கிறது அமைப்பியல்வாதம். கெல்லி எறிவது, மறு உருவாக்கம் செய்வது, மேலாதிக்கம் செய்து நாமே (தனிமனித ஊக்கமே) செலுத்துவது போன்றன எல்லாம் கனவுகள், நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு அகங்கார நாச வாதம், அல்லது தொடர் நசிவையே முன்வைக்கும் வாதம் அமைப்பியல் வாதம். இதன் ஒரு சமகால எதிர்ப்பு மரபு இருப்பியல் வாதத்திலிருந்து வந்தது. இருப்பியல் வாதமும் அமைப்பியல் வாதமும் பின்னிப் பிணைந்த நாகங்கள்.

இதன் சில வடிவுகள் இந்திய தத்துவ மரபில் உண்டு. ஆனால் நிலைத்த ஆதிக்க, ஒற்றைப் பெரும் நிறுவனம் இல்லாத, பல்வகை மரபுகளுக்குரிய பாரதத்தில் இவை சர்ச்சிய அமைப்பு வாதமாக உருவெடுக்கவில்லை. மெய்நாட்டம் என்பது தனிமனித விடுதலையை இயற்கையின் பேராட்சியிலிருந்து விடுவிப்பதைப் பற்றிய விசாரங்களாக மட்டும் இருந்தது. தவிர இந்திய மரபுகள் தனி மனிதச் செய்கைகளின் விளைவான உறவுப் பின்னல்களுக்கும் விடை தேட முனைகின்றன. அவற்றைத் துறப்பது, எதிர்ப்பது, அழிப்பது போன்றவற்றோடு அவற்றில் முங்கியிருந்தபடி உலர்ந்த மனிதராவது எப்படி என்பதையும் இந்திய சிந்தனை மரபுகள் யோசித்திருக்கின்றன.

கோஷங்கள் போல அடிக்கடி முழங்கப்படும் யோக, ஞான, பக்தி, கர்ம இத்தியாதி மார்க்கங்கள் இந்த வகை யோசனைகளின் விளைவுகள்தான். எந்த நிலையில் என்ன மனப்பாங்குடன் என்ன அவசரத்துடன் இருந்தாலும் தனிமனிதனுக்கு விடுதலை கிட்டும் என்பதுதான் இந்திய மரபின் நல்ல செய்தி. அறம்/ ஒழுக்கம்/ நன்னயம்/ நற்சிந்தனை/ கருணை/ பேரன்பு என்ற சில தனிமனிதருக்குச் சாத்தியமான, ஆனால் அவர்தம் அதிகாரத்துக்கு மேற்பட்ட, காலம் காலமாகப் பெருகி ஓடும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட அவசிய இருப்பாக உள்ள, சில பொது மறைகளையாவது கவனித்து நடந்தால்தான் அது சாத்தியம் என்றும் உணர்த்துகின்றன.

இப்படி ஒரு சொல்லுக்கு,- அமைப்பியல் என்பதற்கு- நெடிய அர்த்தங்களின் ஆற்றுப்படல் உண்டு. அதைக் கவனிக்க தத்துவத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. வரலாறு, சமூக அமைப்பு, இறைமை நிறுவனங்கள், அரசமைப்பு போன்றனவற்றின் உடனிணைந்த இயக்கப் போக்குகள் பற்றியும் ஒரு சுதாரிப்பு தேவை. அதை எல்லாம் கடந்து விட அந்த அமைப்புகளை, அவற்றின் தர்க்க நியாயங்களை, நியாயப்படுத்தல்களை கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்குவதில் துவங்கி, அலட்சியம் செய்வதில் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்கும் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பதில் நீண்டு, வரலாறு என்பதையும் கடந்த கால சாதனைகள்/ சாதிப்புகள் எல்லாவற்றையும் வேரோடு (அ) கருவறுத்துக் கிடத்துவதன் மூலமும் நம்மால் விடுவிப்பைப் பெற முடியும் என்று பல தத்துவாளரும், இலக்கிய விமர்சகர்களும், வரலாற்றாளரும் நம்பினர். சாஸரின் எழுத்திலும் சர்ச்சுக்கு எதிரான இத்தகைய விமரிசனம் உண்டு, எங்கும் அதிகார அமைப்புகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது இவ்வாறே எதிர்கொள்ளப்படுகின்றன.

தூல உலகின் அதிகாரம் வெறும் பொய்மைகளின் அடுக்கு, சீட்டுக்கட்டு மாளிகை, அதன் அடித்தளத்தையே தகர்க்க வெறும் கெக்கலிப்பே போதும் என்று கூட இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் சிலர் நினைத்தனர். அமைப்புகளின் நிர்வாகிகள் சிறிது காலம் அலங்க மலங்க விழித்து செயலற்று நின்றனர் என்பது உண்மை. ஆனால் வீழ்ந்தது என்னவோ இந்த நிர்வாகிகளும், அவர்களின் ஆணையகங்களும் இல்லை. மாறாக கருத்து வெற்றிடம் ஏற்பட்டு, முன்னேற்றம் என்ற சொல்லே கறை/ குறைப்பட்டுப் போனபின், பக்கவாட்டில் காத்திருந்த மிருக பலம் கொண்ட பழங்கதையாடல் எளிதே ஆணையகங்களைப் பிடித்து விட்டது.

இந்த முறை அந்த பழமை வாதம் முன்பு இருந்த அளவு நெறி/ ஒழுக்கம்/ அறம் ஆகிய கதையாடல்களைக் கூட அவசியமாகக் கருதவில்லை. ஆனால் அலட்சியபாவம் கொண்ட ஒவ்வொருவரிடமும் உள்ளுறைந்த நீண்ட காலக் குழு அடையாள மனோபாவத்தை தூண்டி, அதன் அழிப்பு எத்தகைய இழப்பு என்று சுட்டிக் காட்டி, அவர்களில் கணிசமானவரை ‘முன்னேற்றம்’ என்ற பொய்க்கனவிலிருந்து விடுவித்து, தம் இருப்பைக் காப்பது என்ற புது வேலை/ கடமையில் பிணைக்கப் பணித்து அதில் வெற்றி பெற்று விட்டது. அல்லது ஒவ்வொரு நாடாக வெற்றி பெற்று வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் எதிர்ப்பு இயக்கமாக ‘கட்டுடைப்பைச்’ செய்தவர்களும் இதே அடையாளத்தைத்தான் கிளர்த்தியிருந்தனர். இவர்களே உண்மையை அதிகாரத்தின் கருவி என்று கட்டுடைத்து அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருந்தனர்.

ஆக, கடப்பு என்ற சொல் பொருளற்ற சொல்லாக்கம் இல்லை. பிந்தைய என்ற சொல்லை விட கடப்பு என்பது கூடுதலான செறிவு கொண்டது. பிந்தைய என்பதில் எனக்குத் தெரிந்து பொருளேதும் பெற முடியாது. இது வெறும் காலம் தாண்டி புதிதாக வந்த நிலை மட்டுமல்ல.

போஸ்ட்- ட்ரூத் என்பதை- உண்மையைக் கடந்த நிலை என்று கருதிப் பேசுவது நல்லது. தற்போது புழக்கத்தில் உள்ள ‘ட்ரூத்தர்’ என்ற சொல் அவநம்பிக்கையாளர்களைக் குறிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்களால் எந்த உண்மையும் நிறுவப்படுவதில்லை, அதிகாரப்பூர்வ உண்மைகள் சதிவலைப்பின்னல்களாய் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். பின் அதே அதிகார துஷ்பிரயோகம், தீவினைகள், அநீதி ஆகியன வேறு வடிவில் தொடர்கின்றன.

2. மெய்ம்மை என்பதோடு ட்ரூத் என்பதைப் போட்டுக் குழப்பலாமா என்பது என் இன்னொரு கேள்வி. மெய்ம்மை என்பதை நாம் தமிழ் மரபில் எப்படிப் பார்க்கிறோம் என்று யோசித்தல் நல்லது. உண்மை அனேகமாக புறத் தகவல்களின் நம்பகத் தன்மையையும், நம் சாதிப்புகளின் நம்பகத்தன்மையையும் சுட்டும். மெய்ம்மை என்பது நம் கொள்கையோடு, நம் ஒழுக்கத்தோடும், நம் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் சுட்டும். இவற்றில் உண்மை கருத்தளவில் நிற்பது அல்லது/ சிந்தனை அளவில் நிற்பது என்றும், மெய்ம்மை நடத்தையை (மார்க்கம்?) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்?) நம்புவது என்றும் வைக்கலாம்.

இதில் எனக்கொன்றும் பிரமாதத் தெளிவு இல்லை. ஆனால் இரண்டு சொற்களும் ஒன்றே அல்ல என்று நம்புகிறேன்.

3. இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது. “‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.” இதில் எங்கோ குறை இருக்கிறது. போஸ்ட் ட்ரூத் காலத்தில் புறத்திலிருந்து கிட்டும் வாதங்கள் அகத்தகவல்களை மீறுகின்றன என்று பொருள் கிட்டுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைச் சோதித்தால் அதில் கிட்டும் வாக்கியம் இது: ‘Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief‘. இங்கு ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பதை அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது அத்தனை பொருத்தமானதல்ல. ஒப்ஜெக்ட் என்பது அகத்துக்கு அப்பாற்பட்ட புறநிலைப் பொருள். ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பன புறத்திலிருந்து நேரடியாகப் பெறக்கூடிய தகவல்கள், அதே நேரம் அவை வெறும் தகவல்கள் இல்லை, நிறுவப்படக் கூடிய, மாறாத நிலைப்பாடு கொண்ட தகவல்கள். உண்மை என்பதைச் சற்று மேல்நிலைச் சொல்லாகக் கொண்டால், நான் வருணித்த அளவோடு நிறுத்துவது பொருந்தும். அகராதி என்ன சொல்கிறது? புறநிலை கொடுக்கும் நம்பகமான தகவல்களை விட அகத்துறை நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுண்டல்களாக விடுக்கப்படும் எழுச்சித் தூண்டல்களே மிக்க தாக்கம் கொண்டு விடுகின்றன என்று சொல்கிறது.

பீட்டர் பொங்கலின் தமிழாக்கம் இதற்கு மாறாக, எதிராகச் சொல்கிறது.

உண்மையில் போஸ்ட் -ட்ரூத் அதாவது உண்மை கடந்த நிலை என்பது உண்மை உதாசீனப்படுத்தப்படுவது, அதுவே நம்பகத்தன்மை இழப்பது, உண்மையை நிலை நாட்ட வழக்கமாக இருக்கும் நிறுவனங்கள், அதிகார மையங்கள், ஆளுமைகள் போன்றாரெல்லாம் தம் செல்வாக்கிழந்து வீழ்ந்து போயிருக்க, பொய்யர்களும், சூதாடிகளும், கயவர்களும், நாடகமாடுவோரும் பரப்பும் எல்லாத் தூண்டல்களும் மிக்க உயிர்ப்பு பெற்று உலவும் நிலை. இந்தத் தூண்டல்கள் பற்பல தளங்களிலும், பல காலங்களிலும், கிட்டத் தட்ட எந்நேரமும் சாதாரணர்களைச் சென்று சேர்கையில் புறத்தகவலின் உண்மை நிறுவல் என்ற முயற்சி தன் செயலின் செடுக்காலேயே தோற்கடிக்கப்படுகிறது. யாரெல்லாம் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய அதன் அடித்தளங்களையே சாய்ப்போம் என்று சாகசம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் இன்று நிலைகுலைந்து நிற்கின்றனர். முழுப் பொய் என்பது பாலைவனச் சூரியனைப் போல இரக்கமற்ற எரிப்பைக் கொணர்வது.

4. ஜியாஃப்ரி சாஸர் இல்லை. ஜெஃப்ரி சாஸர் என்ற உச்சரிப்புதான் சரி.

தவிர துவக்கத்தில் சரியாக ஹௌஸ் ஆஃப் ஃபேம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் பத்தியில் ‘புகழ் வீடு’ என்ற கதை என்று உள்ளது. தவிர இந்தக் கவிதையில் மூன்று வீடுகள் பேசப்படுவதாக விக்கி சொல்கிறது. இவற்றில் மூன்றாவதை ஏன் புரளி வீடு என்று பீட்டர் பொங்கல் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. அது பெரும் சப்தம் நிறைந்த வீடாக மட்டும்தான் வருணிக்கப்படுகிறது. அதில் ஓசை திடுமென நிற்கக் காரணம் மிக்க கனம்பொருந்திய மனிதர் ஒருவர் அங்கு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை இந்தக் கட்டுரை விட்டுவிட்டது. விக்கியில் ஓரிடத்தில் சில உரையாளர்கள் இந்த நபர் எலியாஹ் என்று கருதுவதாகத் தெரிகிறது. எலியாஹு பற்றித் தெரிய இங்கே பார்க்கலாம். (ஹீப்ரூ உச்சரிப்பு எலியாஹ்/ எலியாஹு என்று வருகிறது. இங்கிலிஷில் இலைஜா என்று பயன்படுத்துகிறார்கள்.)

அந்த ஓசையான வீடு சுள்ளிகளால் ஆனது என்பது ஏற்கத் தக்க விவரணை. ஆனால் அது விக்கர் என்ற தாவரத்தால் ஆனது. விக்கர் என்பதை நாணல், பிரம்புக் கொடி என்று பல தமிழகராதிகள் குறிக்கின்றன. குறிப்பாகத் தமிழ் லெக்ஸிகன் அப்படிக் குறிக்கிறது.

இந்த எலியாஹ் போன்ற நபர் வந்ததும் ஆரவாரம் அடங்குவது என்பதில் நாம் சிறிது கவனம் செலுத்தலாம். அதை எப்படி அறிந்து கொள்வது?

இன்னுமோர் விசித்திரம்.

விக்கியை மேற்கோள் காட்டுகிறேன்- ‘Chaucer remarks that “if the house had stood upon the Oise, I believe truly that it might easily have been heard it as far as Rome.” நாம் ஓசை என்கிறோம், சாஸர் பயன்படுத்தும் சொல் oise.  அது ஃப்ரெஞ்சு, டச்சு உச்சரிப்புகளும், இங்கிலிஷ் உச்சரிப்பும் கொண்ட சொல். இங்கிலிஷில் வாஸ் என்பதாக ஒலிக்கிறது.

oOo

ஒளிப்பட உதவி – House of Fame Intro, GWU Chaucer Class S2015, Youtube

பெண் – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

மணி பத்தாகி பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தது. அதற்குள் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தது. கணவனிடம் சொல்லிக் கொள்ள கூட அவகாசமின்றி காரிலிருந்து இறங்கி கொண்டாள். முதல் தளத்திலிருந்து அவளது இருக்கை. அவசரமாக படிகளில் தாவி ஏறினாள். பச்சை மையில் கையெழுத்து போடும் தகுதி பெற்றவள். ஒரே மகன். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்தான்.

”மேடம்.. சிஇ உங்களை வர சொல்றார்..” என்றார் அலுவலக உதவியாளர் அவளுக்காக காத்திருந்தவர் போல.

”கடவுளே.. அதுக்குள்ள வந்துட்டாரா.. இருங்க பேக்க வச்சிட்டு வந்துடுறேன்..”

”பேக்க நான் வச்சிடுறன்.. சார் உங்களை ரெண்டு தடவை கூப்டுட்டாரு..”

அதுவும் உண்மைதான். பேச்சின் நுனியிலேயே கோபத்தை வைத்திருப்பார். முகாம் அலுவலர் என்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் அலுவலகப் பணியிலிருப்பார். அதுவும் இத்தனை சீக்கிரம் வருவதில்லை. ஏதேனும் அவசர வேலையாக இருக்கும்.

“வீரபாண்டியன் சார் வந்துட்டாரா..?” பேக்கை அவனிடம் நீட்டினாள்.

”வந்துட்டாரு மேடம்.. அவரும் சிஇ ரூம்லதான் இருக்காரு..” பதட்டமான நடந்தாள். இவளும் வீரபாண்டியனும் இரண்டாம் மட்ட அதிகாரிகள். கதவை தள்ளிக் கொண்டு நுழைந்தாள். தலைமைப் பொறியாளர் அலைபேசியில் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தார். தலைமை அலுவலகம் அது. துறை செயலரிமிருந்து போன் வந்திருக்க வேண்டும்.

”வணக்கம் சார்..” தயக்கமாக கூறினாள். கண்கள் அவளை கவனித்தாலும் யோசனை அதிலில்லாதது போல வெற்றுப் பார்வை பார்த்தார். மீண்டும் “வணக்கம் சார்..“ என்றாள். படபடப்பாக இருந்தது. வீரபாண்டியன் இவளை பார்த்து வணக்கம் சொல்வது போல நெஞ்சு வரை வலது கையை உயர்த்தினான். தனது பக்கத்து இருக்கையை சைகையால் காட்ட, அவள் தலைமை பொறியாளரின் உத்தரவுக்காக காத்திருந்தாள். அலைபேசியை வைத்து விட்டு, விட்டதிலிருந்து தொடர்ந்தார். அவளை அப்போதுதான் கவனித்தது போல நாற்காலியை காட்டினார். கைப்பையிலிருந்து எடுத்து வைத்திருந்த குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அவள்.

”அனொவ்ன்ஸ்மெண்ட்ல அறிவிச்ச வொர்க் பத்தின டீடெயில்ஸ் டிவிஷன்வைஸா ரெடி பண்ணனும்..” என்றார்.

”சரிங்க சார்..” என்றான் வீரபாண்டியன். அவளுக்கு விஷயம் பிடிப்பட்டது. சட்டசபை கூட போவதால் இந்த கெடுபிடி.

”எக்ஸ்பெட்டட் கொஸ்டின்ஸ் சர்க்கிள்ல கேட்டு வாங்கி.. ரிப்ளைய ரெடி பண்ணனும்..” சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்ப சாத்தியமுள்ள கேள்விகளுக்கு பதில் தயார் செய்ய வேண்டும். சட்டமன்றம் தொடங்கிய பிறகு கவனஈர்ப்பு.. கட்மோஷன்.. ஸ்டார்ட்.. அன்ஸ்டார்ட் என பல்வேறு ரூபத்தில் மூச்சு விட அவகாசமின்றி கேள்விகள் வந்து விழும். இவைகளெல்லாம் வீரபாண்டியனுக்கான பணிகள். அவனுக்கு கீழே மூன்று உதவிப்பொறியாளர்கள். அதில் இரண்டு காலியிடம். அவளுக்கும் அப்படிதான்.

”மேடம்.. இம்மீடியட்டா ப்ராகரஸ் ரிப்போர்ட் வேணும்.. போத் ஃபிஸிக்கல் அண்ட் ஃபைனான்சியல்.. பிபிடி தயார் பண்ணீடுங்க..” என்றார் இவளிடம் திரும்பி. மூன்று வட்டங்களும் ஒன்பது கோட்டங்களும் உள்ளடக்கியது தலைமை அலுவலகம். பணிகளின் விபரமும் அதன் தற்போதைய நிலையையும் புத்தகமாகவும் பவர்பாயிண்ட்டாகவும் தயார் செய்ய வேண்டும்.

”சரிங்க சார்..”

”டிலே பண்ணீடாதீங்க மேடம்..” என்றார் சற்றே கண்டிப்புடன்.

”ஒகே சார்..”

கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.  “கவர்மெண்ட் ஆபிசுன்னா வேலையே கெடையாதுன்னு வெளில பேசுவாங்க.. இங்க வந்து பாக்க சொல்லுணும் அவங்களெல்லாம்..” என்றாள் கீதா.

”ஆமா மேடம்.. சிஇ சொல்ற டீடெயில்ஸ கேட்டு வாங்கறதுக்குள்ள ஒரு வழியாயிடும்..” என்றான்.

”இன்னைக்குள்ள வொர்க் ஸ்டேஜ் வாங்கினாதான் நாளைக்கு பிபிடி ரெடி பண்ண முடியும்..” என்றாள்.

”சார்.. இந்த தபாலை கொடுக்க சொன்னாரு சிஇ..“ வீரபாண்டியனின் கையில் திணித்தார் அலுவலக உதவியாளர். சென்ற முறை கேட்கப்பட்ட சட்டமன்ற கேள்விகளின் தற்போதைய நிலை வேண்டி அனுப்பப்பட்ட அவசர நிகரி தபால். “சரி.. வர்றேன்.. மேடம்..” தபாலோடு தனது இருக்கைக்கு விரைந்தான். குளிரூட்டி பொருத்தப்பட்ட அடுத்தடுத்த கேபின்கள். கண்ணாடி தடுப்பு.. முதல் தடுப்பு அவனுடையது. அதற்கடுத்த கேபினிலிருந்தது கீதாவின் இருக்கை. மேசை மேலிருந்த தோள்பையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு அமர்ந்தாள். டிராவை திறந்து சிறு நோட்டை எடுத்து ஸ்ரீராமஜெயம் போல எதையோ இரண்டு நிமிடம் எழுதினாள். செல்போன் ஒலித்தது. கணவரின் பெயர் ஒளிர “ஒங்க ஆபிசே பரபரப்பா இருந்துச்சு.. எதும் அவசரமா..?” என்றான் அக்கறையாக. “அசெம்ளி கூட போவுதுல்ல.. அதான்..“ என்றவள்  ”சரி.. மணிகண்டன் ஸ்கூலுக்கு மூணறைக்கு போவுணும்.. மறந்துடாதீங்க..” என்றாள்.

”மேடம்.. இதுல நாலு கொஸ்டின் நீங்க டீல் பண்ற சப்ஜெக்ட்..” என்றான் அங்கிருந்தே வீரபாண்டியன்.

”ஒரு ஜெராக்ஸ் எடுத்து குடுங்க சார்..” என்றாள் இவளும் இங்கிருந்தபடியே.

கொஸ்டினை சமாளிப்பது கொஞ்சம் சுலபம். “பரிசீலனையில் உள்ளது.. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க ஆவண செய்யப்படும்.. இது எங்கள் துறை சார்ந்ததல்ல..“ என்ற மூன்று பதில்களுக்குள் முன்னுாறு கேள்விகள் என்றாலும் அடங்கி விடும். உதவி பொறியாளரை அழைத்தாள்.

”மேம்..”

”இன்னைக்குள்ள பிராகிரஸ் ரிப்போர்ட் முடிச்சாவணும். நீங்க மளமளன்னு எல்லா இஇக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுங்க.. சி.இ உடனே தர சொன்னாருன்னு சொல்லுங்க..”

”முடிஞ்சளவு வாங்கீடுறேன் மேடம்..”

”நீங்க எங்கிட்ட சொல்றமாதிரி நான் சிஇட்ட சொல்ல முடியுமா சார்.. நீங்க ஃபோன் ரூம்க்கு போங்க.. நா வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றாள்.

வீரபாண்டியன் அவள் கேபினுக்குள் நுழைந்தான்.

”மேடம்.. இந்த கொஸ்டினை பாருங்களேன்…” என்றான். சட்டசபை தொடங்கினாலே வரும் தலைவலி இது. சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எதாவது எசகுபிசகான கேள்விகளை முதலமைச்சர் தனிப்பிரிவு.. துறை செயலர்.. உட்பட உயர்நிலை அலுவலங்களுக்கு அனுப்பி விட்டு இங்கும் ஒரு பிரதி அனுப்பி விடுவார். ”யாரு சார்.. அந்த ராஜ மன்னாருதானே..” என்றாள்.

”ஆமா மேடம்..” என்றான் அலுப்பாக. பெரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்து விட முடியாது. இமயத்திலிருந்து வங்காள விரிகுடா வரையிலான நீர்த்தடங்களை இணைத்து அதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீர் வழங்கும் திட்டம் என்ற தலைப்பில் நுணுக்கி நுணுக்கி வெகு அபத்தமான யோசனைகளோடு பத்து பக்கத்துக்கு எழுதியிருந்தார். இடையிடையே சிவப்பு மையில் படங்கள் வேறு வரைந்திருந்தார்.

”இதுக்கெல்லாம் என்னன்னு சார் பதிலெழுதறது.. பேசாம ஒருநாள் ஆபிசுக்கு வர சொல்லி கவுன்சிலிங் பண்ணி அனுப்பலாம்..” சிரித்தாள்.

”கரெக்ட்தான்.. நாமளும் ஒருநாள் இதுக்காக ஒதுக்கி சிரிச்சிக்கலாம்..” என்றான் சின்ன சிரிப்படன்.

”காபி சாப்றீங்களா சார்..” என்றாள். வீட்டிலிருந்தே ப்ளாஸ்கில் எடுத்து வந்து விடுவாள். காபி போட்டு இவளுக்கும் கணவருக்கும் ஆளுக்கொரு ப்ளாஸ்கில் ஊற்றி வைப்பது அம்மாவின் வேலை. ”தாரளமா..” என்றான்.

மதியம் வரை கால்வாசி தகவல்களை கூட பெற முடியவில்லை. தினசரி பார்வையிட வேண்டிய தபால்கள் வேறு குவிந்திருந்தன. அதற்குள் தலைமைப் பொறியாளரிடமிருந்து அழைப்பு. ”மேடம்.. என்னாச்சு..?” என்றார்.

”பண்ணீடுறேன் சார்..” என்றாள்.

”எப்ப முடியும்னு சொல்லுங்க..” என்றார் கூடுதல் வேகமாக.

”சார்.. முடிச்சிடுறேன் சார்..”

”இஇட்ட நீங்களே நேரடியா பேசுங்க.. ஏஇ பேசறதுக்கும் எஸ்டிஓ பேசறதுக்கும் வித்யாசமில்லையா..?” என்றார்.

செயற்பொறியாளர்கள் விபரங்களை உடன் அளித்து விடுவதாகதான் சொன்னார்கள். ஆனாலும் நான்கு மணியாகியும் வேலை சுணக்கமாகவே இருந்தது. வீரபாண்டியனுக்கும் அதே நிலைதான். ”ஒரு கேள்விக்கு பதில் தர்றதுக்கே இவ்ளோ நேரமா சார்..? அத்தனையும் வாங்கி கம்பைல் பண்ணி நாங்க எப்போ செகரட்ரிக்கு அனுப்பறது..” தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அருகில் போய் ”எந்த டிவிஷன் சார்..” என்றாள். சொன்னான்.

”வைக்காதீங்க.. நான் பேசறேன்..” என்றபடியே ரீசிவரை வாங்கிக் கொண்டாள்.

“சார்.. எல்லா டிவிஷனும் ஃபிகர் குடுத்துட்டாங்க.. உங்கள்ட்டேர்ந்து வந்தவொடனே கம்பைல் பண்ணி செகரட்டரிக்கு அனுப்பணும்.. அங்கேர்ந்து ஃபோன் வந்துட்டே இருக்கு சார்..”

”எல்லாமே ஒடனே.. ஒடனேன்னா எப்டீங்க மேடம்..?” என்றார் அந்த செயற்பொறியாளர்.

”உங்க கஷ்டம் புரியுது சார்.. நாங்க என்ன செய்ட்டும்.. ப்ரீதிங் டைம் கூட குடுக்காம அவசரப்படறாங்களே சார்..” செயற்பொறியாளர் பதவி இவள் பதவியை விட ஒரு படி மேலானது. அவளின் பணிவில் மனம் இளகியவற்போல ”உங்க ஆபிஸ் மெயில் ஐடி குடுங்க மேடம்.. அனுப்ப சொல்றேன்..“ என்றார்.

”சார்.. பிபிடிக்கு ஃபோட்டோஸ் வேணும் சார்..” என்றாள் மின்னஞ்சல் முகவரியை சொல்லி விட்டு.

”தெரியும்மா.. சொன்னீங்களே..” அலைபேசியை துண்டித்துக் கொண்டார்.

”பாருங்க சார்.. டெய்லி பத்து மெயில் கரஸ்பாண்ட் பண்றோம்.. மெயில் ஐடி வேணுமாம்..” என்றாள் வீரபாண்டியனிடம் கோபமாக..

”அப்றம் அவங்க கெத்தை காட்றது எப்டீ..?” சிரித்து விட்டு தொடர்ந்தான். ”எல்லா டிவிஷன்லேர்ந்தும் பர்டிகுலர்ஸ் வந்துடுச்சா மேடம்..”

“அட.. நீங்க வேற சார்.. இன்னும் வர்ல..”

”மேடம்.. சிஇ கூப்டுறாங்க..” என்றார் அலுவலக உதவியாளர் குறுக்கிட்டு.

தலைமைப் பொறியாளர் கடுப்பாக வைத்திருந்தார் முகத்தை. ”மேடம்.. ஒம்பதே ஒம்பது டிவிஷன்.. அதை கேட்டு வாங்க இவ்ளோ நேரமாங்க..? மத்த ரீஜின்லேர்ந்தெல்லாம் வந்துருச்சாம்.. நம்பதான் இன்னும் அனுப்பலயாம்.. செகரடேரியட்லேர்ந்து அர்ஜ் பண்றாங்க.. சீக்ரம்..” பேசிக் கொண்டே வந்தவர் குரலை உயர்த்தி கத்த தொடங்கினார். ”எல்லாம் அவசர நேரத்திலதான் செய்வீங்களா..?  அசெம்ளி கூட்டம் கூட போவுதுன்னு தெரியும்ல்ல.. இதெல்லாம் தயாரா வச்சிக்க வேணாமா..? அவசர கோலத்தில அள்ளுப்புளிக்கணக்க கொடுத்துடுவீங்க.. அங்க மினிஸ்டர் முன்னாடி பதில் சொல்றது நாந்தானே..? போய் விறுவிறுன்னு வேலைய பாருங்க மேடம்..”

எரிச்சலாக வந்தது அவளுக்கு. செயற்பொறியாளர்களின் அலைபேசியை தவிர்த்து அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கத்தினாள். ”தோ.. வாங்கீ்ட்டே இருக்கோம் மேடம்..” என்றார்கள்.

”எவ்ளோ நேரம் இதயே சொல்லுவீங்க.. ஒரு டிவிஷன் ஒர்க்கை கூட கம்பைல் பண்ணி தர முடியலேன்னா என்ன சார் அர்த்தம்.. நீங்க எப்போ அனுப்பி.. நாங்க எப்போ செகரடேரியட்டுக்கு அனுப்பறது..?” என்றாள் கோபமாக.

கணவரிடமிருந்து அழைப்பு. ”சொல்லுங்க..” என்றாள்..

”மணிகண்டனோட மிஸ் ரொம்ப பிரைஸ் பண்ணினாங்க.. எல்லாம் அவங்கம்மா கோச்சிங்ன்னு சொன்னேன்.. அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு.. நைசா நீ வேலைக்கு போறீயான்னு விசாரிச்சாங்க.. எங்கம்மா எஸ்டீஓவா இருக்காங்கன்னு ஒன் பையன் பெருமையா சொன்னான்..” என்றான்.

”இங்க ஆபிஸ்ல ஒரே புடுங்கு.. எல்லாம் ஓரே நாள்ல எல்லாத்தையும் முடிச்சுக் குடுன்னு உசிர வாங்றாங்க..” என்றாள்.

”சரி.. பொறுமை.. பொறுமை.. கௌம்பும்போது மிஸ்ட்கால் குடு.. உன்னை பிக்கப் பண்ணீக்கிறேன்.. வீட்ல ஃப்ரஷ்அப் பண்ணீட்டு வெளில சாப்டுக்கலாம்..”

”நேரமாயிடும்னு நெனக்கிறேன்..”

”அப்டீன்னா உங்கம்மாவையும் மணியையும் கூட்டீட்டு வந்துடுறன்.. சாப்டுட்டே வீட்டுக்கு போலாம்..” என்றான். அவனும் அதிகாரி என்பதால் மனைவியை புரிந்துக் கொள்ள முடிந்தது.

”சரிங்க.. வைக்றன்..” என்றாள். வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது. ”கடவுளே.. ஆறாயிடுச்சா.. நேரம் போறதே தெரில..”

மெயிலில் புகைப்படங்கள் வந்துக் கொண்டேயிருந்தன. ”எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி டிவிஷன்வைஸ் ஃபோல்டர் போட்டு ஏத்தி வச்சுடுங்க மேடம்.. பிபிடி பண்றதுக்கு கம்ஃபர்டபளா இருக்கும்…” என்றாள் தனது உதவியாளரிடம். அதற்குள் தலைமைப் பொறியாளர் கனிணி அறைக்கே வந்து விட்டார்.

”எவ்ளோ நேரம் எடுத்துக்குவீங்க..?” அனைவரும் எழுந்துக் கொண்டனர்.

”இதோ ஆச்சு சார்.. முடிச்சுட்டோம்..” பதற்றமாக பேசினாள்.

”இன்னும் எத்தனை பெட்டிஷன் பெண்டிங்..?” என்றார் வீரப்பாண்டியனிடம்.

”டோட்டலா இருவத்தொண்ணு சார்.. பதினாறு குளோஸ் பண்ணீட்டேன்.. இன்னும் அஞ்சு இருக்கு சார்..”

சிஎம் செல் பெட்டிஷன் பைலை பார்வையிட்டவர் ”ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த பேப்பர்.. .ஃபைல்ல கட்டி வச்சிட்டு இப்ப வேலை செய்றீங்க.. அப்டிதானே..? உதவிப் பொறியாளரை கத்தி விட்டு ”இதெல்லாம் மானிட்டர் பண்ணாம நீங்க என்ன சார் பண்றீங்க..? என்றார் கோபமாக வீரபாண்டியனிடம்.

பிறகு இவளிடம் திரும்பி ”நீங்கம்மா..?” என்றார்.

”இதோ முடிச்சிட்டேன் சார்..” என்றாள் பவ்யமாக.

”காலைலேர்ந்து ஒரே பதில்தானே சொல்றீங்க.. புக்லெட் போட்டாச்சா..?“

”இன்னும் இல்ல சார்.. இப்பதான் எல்லா ப்ராகிரசும் வந்துச்சு.. இதோ போட்டுடுறன் சார்..” என்றாள்.

நிமிர்ந்து பார்த்து விட்டு கோபமாக நகர்ந்தார். மணி ஏழரையை தாண்டியிருந்தது.

”கடவுளே.. இவருக்கென்னா..? சொல்லீட்டு போயிடுவாரு.. அவசரம்னு கேட்டாலே ஆடி அசஞ்சு குடுக்குறாங்க.. இதுல டெய்லி வேற ரிப்போர்ட் கேக்குணுமா.. ச்சே.. வெறுத்துப் போச்சு.. பொம்பளன்னு கூட அந்தாளுக்கு அறிவில்ல.. இவரு பாட்டுக்கு பேசிட்டு போறாரு.. மினிஸ்டர்.. செகரட்டரின்னு அலைஞ்சு வருமானம் வர்ற பக்கமா போஸ்டிங் வாங்கீட்டு வந்து உக்கார தெரியுதுல்ல.. கேள்விக் கேட்டா வலிக்குதாம்மா..? இவரு பொண்டாட்டீ பொம்பளபுள்ளயெல்லாம் இத்தனை நேரத்துக்கு வெளிய இருந்தா தாக்கிக்குவாராம்மா… ஆம்பளபொம்பள வித்யாசம் கூட தெரியாம ஒரேடீயா எகிற்றாரு.. சே..” என்றாள் படபடப்பாக நாளை மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு.

***

‘இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் -2: ஆயிரத்து இரண்டாம் இரவின் கதை’

– ஆர். அஜய்-

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் கேட்டபின் மனம் மாறி ஷெரியார் (Shahryar)  ஷஹேரேசாதவுடன் (Scheherazade) இனிமையான இல்வாழ்க்கை நடத்தினார் என்று ‘அரேபிய இரவுகள்‘ முடிகின்றன (இந்த ஆயிரத்தொரு இரவு காலகட்டத்தில் கதை சொல்லல்/ கேட்டல் இவற்றினூடே மூன்று குழந்தைகள் ஷஹேரேசாத/ ஷெரியார் தம்பதியருக்கு பிறந்தன என்பதையும் நினைவில் கொள்வோம்). அதன்பின் அவர்களுடைய இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும்?  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி நீங்கியபின், தினமும் அரசனை மகிழ்விக்கும் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இனி இல்லாத நிலையில் ஷஹேரேசாத அடுத்த இரவை எப்படி கழித்திருப்பார்? உறக்கமில்லாமல் கதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் நிம்மதியான இரவுத் தூக்கத்தை எதிர்நோக்கி காத்திருந்திருப்பாரா அல்லது ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதற்கு ஏற்ப மேலும் கதைகளை உருவாக்கி இருப்பாரா? எட்கர் ஆலன் போ, ஆயிரத்தி இரண்டாவது இரவிலும் ஷஹேரேசாத இன்னொரு கதையை சொல்வதாக ‘The Thousand-And-Second Tale of Scheherazade‘ ல் புனைகிறார்.

போவின் புகழ் பெற்ற ஆக்கங்களைப் படித்து அவருடையது மிக இருண்மையான உலகம் என (சரியான) புரிதலில் இருப்பவர்களுக்கு இந்தக் கதையில் உள்ள மெல்லிய நகைச்சுவை புதிதாக இருக்கக்கூடும். அந்தப்புரத்தில் உள்ள அனைத்து கன்னிகளையும் கொன்று விடுவதாக தன் தாடியின் மீது ஷெரியார் உறுதி எடுக்கிறார். அவரை தைரியமாக மணம் முடிக்கும் ஷஹேரேசாத கணவனை உறக்கத்தில் இருந்து எழுப்பும்போது அவன் அவளைக் கடிந்து கொள்வதில்லை என்பதற்கு பாசம் காரணமல்ல, ‘… who bore her none the worse will because he intended to wring her neck on the morrow, …‘  என்பதுதான். தன் கணவன் குறட்டை விடுவதைப் பற்றிய மனத்தாங்கலும் ஷஹேரேசாதவுக்கு உள்ளது. எல்லாம் சுபமாக முடிந்த பின்பு, ஆயிரத்தி இரண்டாம் இரவில். குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பல முறை கிள்ளி எழுப்பி ஷஹேரேசாத சிந்த்பாத்தின் ஏழாவது பயணத்தை பற்றிய கதை சொல்ல ஆரம்பிக்கிறார். குறட்டை ஒலியின் நாராசத்தை கேட்காமல் இருக்கவே இன்னொரு கதையை ஆரம்பித்தார் என்றும் கருதவும் இடம் உள்ளது.

வழக்கம் போல் பயணப் பித்தால் பீடிக்கப்படும் சிந்த்பாத் இன்னொரு பிரயாணத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரும் பாம்புகளையோ, பறவைகளையோ சந்திப்பதில்லை, பயமுறுத்தும் ஜின்களோ, மயக்கும் அழகிகளோ, சாகஸ நிகழ்வுகளோ இல்லை. மனித- மிருக அம்சங்கள் கொண்ட ஜீவராசி ஒன்றைச் சந்திப்பவன், அதனால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அங்கு அவன் காண்பவற்றை விவரிப்பதுமே மீதிக் கதை. முதற்பார்வையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத நிகழ்வுகள்தான், ஆனால் தன் (போவின்) காலத்திய கண்டுபிடிப்புகளை சிந்த்பாத் காண்பதாக சுட்டிச் செல்வதின் மூலம் தன் தனித்துவத்தை பதிவு செய்கிறார். சார்ல்ஸ் பாபெஜ்ஜின் கணக்கீடு கருவி, ஆரம்ப கால புகைப்படக் கருவி, ரெயில் வண்டி என சிந்த்பாத் பார்ப்பவற்றின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறார். ‘Another directed the sun to paint his portrait, and the sun did’ …’In place of corn, he had black stones for his usual good; and yet, in spite of so hard a diet, he was so strong and swift that he would drag a load more weighty than the grandest temple in this city, at a rate surpassing that of the flight of most birds‘  போன்றவை எவற்றைக் குறிக்கின்றன என வாசகன் யூகிக்க முடியும்.

இவற்றை ஷெரியார் எவ்வாறு எதிர்கொள்கிறார்? மனித- மிருக ஜீவராசி பற்றி கேள்விப்படும்போது மிகவும் மகிழ்விப்பதாக இருப்பதாக சொல்பவர் அதன் பின் ‘Hum’, ‘Hoo’, ‘Humph’, ‘Pooh’, ‘Stuff’ போன்ற பொத்தாம் பொதுவான ஒற்றை வார்த்தை எதிர்வினைகள் ஆற்றுவதன் மூலமும் அவை பின்னர்  ‘Nonsense’,  ‘Twattle’, ‘Ridiculous’, ‘Absurd’,  ‘Preposterous’ ஆக மாறுவதன் மூலமுமே அவர் மனநிலையை போ நமக்கு உணர்த்துகிறார். எனவே இறுதியில் ஷஹேரேசாதவைக் கொல்ல அவர் உத்தரவிடுவது பெரிய வியப்பில்லை. முதலில் வருத்தமடையும் ஷஹேரேசாத, பின் தன் அறிவிலி கணவனின் குழந்தைத்தனமான துர்நடத்தை பல கற்பனை செய்ய முடியாத சாகசங்களைப் பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாமல் தடுத்து விடுவது அவனுக்குதான் நஷ்டம் என்று தன்னை தேற்றிக் கொண்டு மரணத்தை தழுவுவதில் அவல நகைச்சுவை உள்ளது.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதன் உதாரணம் ஷஹேரேசாத என்று எளிதில் சொல்லி விடலாம். அதே நேரம் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. பல விசித்திர, அசாதாரண கதைகளை ஆயிரத்தொரு இரவுகள் சந்தோஷமாக கேட்டு வந்த ஷெரியார் ஏன் உண்மையை எதிர்கொள்ளும்போது அது தலைவலி ஏற்படுத்துவதாக சொல்லி, அதற்காக மனைவியை தண்டிக்க வேண்டும்? போவிற்குதான் இவை நிகழ்கால உண்மைகள், ஷெரியாரைப் பொறுத்தவை அவை பொய்கள் (அல்லது எதிர்கால உண்மைகள்) என்பது சரியே, ஆனாலும் இந்த (நிகழ்/ எதிர்கால) உண்மைகள்/ பொய்கள் ஷஹேரேசாதவின் புனைவுகளைவிட எந்தளவுக்கு மாறுபட்டவை, நம்ப முடியாதவை? ‘Truth is stranger than fiction‘ என்று கதையின் ஆரம்பத்தில் போ குறிப்பிடுவதை கதையின் இறுதியோடு ஒப்பிட்டு பார்ப்பது போ இந்தக் கதையில் என்ன முயல்கிறார் என்பதை புரிய உதவக்கூடும். அதிலுள்ள நகைமுரணும்,  கதையின் மெல்லிய நகைச்சுவை அம்சமும் இதை கவனிக்கப்பட வேண்டிய கதையாக்குகின்றன.

oOo

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1 – ஆர். அஜய்