Author: பதாகை

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

 அஜய் ஆர்

 

 

 

உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள

Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:

வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.

ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்

“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”

வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்

“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “

என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.

ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.

அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.

மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.

ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.

பின்குறிப்பு:

பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan) நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒளிப்பட உதவி – Owl Moon Tree of Life

தொடுவானம்

ந. பானுமதி

அந்த அழகிய வெளிநாட்டு கார் அமுதாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுனர் அம்மாவிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் செல்வது தெரிந்தது. கார் மீண்டும் கிளம்பவில்லையென்பதால், காத்திருப்பதாகச் சொல்லியிருப்பார் போலும்.

அம்மா, மணியை அழைத்து நல்ல டீயாக வாங்கிவரச் சொல்வது கேட்டது.

தனக்கு கேட்கவேண்டும் என்றே அம்மா கத்திப் பேசுவது புரிந்தது. ”நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்”

அமுதா தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இடமும் வலமும் மாறித் தெரிவது தானா, தன் நிழலா? இதுவும் காட்சிப் பிழையோ? பிரதிபலித்து எல்லாவற்றையும் நிஜம்போல் காட்டும் இதிலெது உண்மை? கண்ணாடியை உடைக்கும் ஆவேசம் அவளுள் எழுந்தது. ஒருகால், இந்தக் கண்ணாடியைப் பார்ப்பது இதுவே கடைசி முறையோ?

உடைந்து சிதறும் கண்ணாடி காட்டும் சிதறிய அமுதாக்கள் ஒன்றிலிருந்து பலவாய் உருக்கொண்டு அவளையே காட்டிச் சிரிக்கும் என்பதைத் தவிர வேறென்ன பலன்? அழக்கூட தெரியாமல் போய் விட்டதே!

கேமராவின் முன்னே அழுதழுது இன்று நிஜக் கண்ணீர் வரமாட்டேன் என்கிறது. அப்படியும் தான் என்ன கதாநாயகி நடிகையா? ஒரிரு காட்சியில் ஓரிரு வசனம் பேசும் துணை நடிகை! அமுதா சிரித்துக் கொண்டாள் .என் மீது அவர் பார்வை எப்படி விழுந்தது? எதனால் இந்த சிக்கல்? அம்மா இதைக் கேட்ட தினத்திலிருந்து தரையில் கால் பாவாமல் நடக்கிறாள். பொருளே ஆதாரமாக வாழும் நிலை அம்மாவிற்கு.பதினைந்திலிருந்து பத்து வயதுக்குட்பட்ட தம்பியும், தங்கைகளும் அம்மாவின் கடுகடுப்பினால் வாய் விட்டு சிரிப்பது கூடக் கிடையாது. ஆனால் வீட்டில் இப்பொழுது அடிக்கடி சந்தோஷக் கூச்சல் கேட்கிறது. தங்களுக்குள் செல்லமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

நேற்று இரவு அம்மா தன்னை நேரே பாராது சொன்னது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “இனியாவது ஓர் இடம் நிரந்தரம் என இருக்கக் கசக்கிறதா? எம்மாம் ஷூட்டிங்க்கு, அப்பாலே எம்மாம் பேரு! எல்லாத்தையும் விட்டுப்புட்டு போவியா அவன் உன்னைய வரச் சொல்லரச்சே. இன்னாமோ மனப் பீடமாம், மாட்டாளாம்.நாயி நக்கித் தான் குடிக்கும்”

அம்மா சண்டையிடுகிறாள், எச்சரிக்கிறாள், தான் கன்னியில்லை என்று குத்திக் காட்டுகிறாள். அம்மா சொல்லாத ஒன்றும் இதில் இருக்கிறது. அது எதிர்காலம் பற்றிய இவளின் பயம். இவர் விருப்பத்தின் படி தான் நடந்து கொள்ளாவிடில் இவள் நடிப்புத் தொழில் இல்லாமலே போய்விடும். அது இல்லையென்றால் பின்னர் எதுவும் இல்லை. ஐந்து உயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் மரம் நட்டவர் அவர்தானோ என்னவோ? ஆமாம், அவரை நான் எத்தனை உயரத்தில் வைத்திருக்கிறேன், அவரால் தவறே செய்ய இயலாது, கண்ணியக் குறைவாக நடக்க முடியாது என்று?.இப்பொழுது எனக்கு உறுத்துவது எது நிஜமா, நிழலா?

நிஜம் எனில் எது? இன்று வந்து காத்து நிற்கும் காரா? நிழல் திரையில் பார்த்த அவரது ஒளி பிம்பமா? நிழல் காட்டிய நிஜம் என்கே? நிழலாடும் நிஜம் அல்லது நிஜமாடும் நிழல்! எதிலிருந்து எது? உடைத்துக் காட்டும் கண்ணாடி சிதறல்கள்.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.

தொலை தூரத்தில் தொடுவானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!

அம்மா அவளை அழைப்பது கேட்டது.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.
தொலை தூரத்தில் தொடு வானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!
அம்மா அவளை அழைப்பது கேட்டது.

சபிக்கப்பட்டவனின் விம்பம் – மஜீஸ்

புகைப்படத்தில் பார்த்த 
உனது விம்பம் 
நேரில் காணும் போது அது 
உன்னை போலவே அல்ல
ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடித்த 
பரவசத்தில் நீ ஊர் நோக்கி பயணிக்கிறாய்
அது
ஒரு கோடை நாளின் வெளிச்சத்தில் 
மிகைத்த ஒப்பனையோடும் கட்டாயப்படுத்தப்பட்ட புன்னகையோடும் 
கருவி வழி வந்த போலி விம்பமது
பெருந் துயரம் துரத்தும் அயர்ச்சியில்
கொடூரங்களை நினைவுகளாக்கி
மலையொத்த சாபங்களோடு
அலைந்து திரிபவனின் 
நிஜ விம்பங்களை
அறிந்திருக்க உனக்கு எந்த 
வாய்ப்புக்களுமில்லைதான்.

சிதிலங்கள்

வே. நி. சூரியா

இருள் கொஞ்சும் நேரம். எப்போதும் போல கடல் அலைகள். எப்போதும் போலத்தான் அந்த நேரமும். அங்கு தான் அழகிய முகம், விரித்து விடப்பட்ட கூந்தல் , கடல் அலையை கருணையோடு பார்த்து கொண்டிருக்கும் மாதவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் காலடித் தடம் மண்ணில் பதிவதும் அதை கடல் அலைகள் அழிப்பதுமாக ஒரு விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

அநேகமாக அங்கு அவளைத் தவிர அந்நேரம் யாருமில்லை. ஏன் அங்கு மற்ற கடற்கரைகளை போல கூட்டமில்லை என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. ஏன் அந்த கடற்கரையை மற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்பதன் பதில் அந்த மற்றவர்களுக்கு ஆளுக்கொரு விதமாக தெரிந்திருந்தது. அந்த நகரம். அப்படி சொல்லலாமா என்பது கூட தெரியவில்லை.

ஒரு ஆள் அரவமற்ற கடற்கரை, ஆட்கள் அதிகம் வசிக்காத பகுதிகள், ஒரு பாழடைந்த நூலகம் மேலும் தீயில் கருகிய பல அரசாங்க கட்டிடங்கள் , இன்னும் தரையில் சிதறிக் கிடக்கும் ராணுவ உடைகள், பல செயலிழந்த வெடி குண்டுகள் என ஒரு இடம் . அங்கு தான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு நிசப்தம் அங்கு. அந்த இடத்தை விட்டால் சக மனிதர்களிடம் இருந்து தப்ப வேறு எந்த இடமும் இல்லை. மாதவிக்கு ஒரு சிதிலமடைந்த வீடு அங்கு தான் சொந்தமாக இருந்தது. தற்காலிக சொந்தமாக இருந்தது. அந்த நகரமே எரிந்து போன கோலத்தில் இருந்ததால் அவளுக்கு சமைக்க எரிபொருள் பஞ்சமும் இல்லை.தன்னை போகப்பொருளாக எண்ணும் மனித மிருகங்கள் யாருமில்லாததால் அந்த ஆள் அரவமற்ற நகரில் எப்போதோ பெய்த மழையில் நிரம்பி எப்போதுமே மனித குப்பைகள் மிதந்து வரும் நவீன குளங்களை போல அல்லாத ஒரு நீர் தேக்கம் இருந்தது குளிப்பதற்கு. அதுவும் அவள் ஆடைகள் அற்று நிர்வாணமாக குளிக்கும் அளவிற்கு நிரம்பி வழியும் தனிமையுடன்.

அடிக்கடி அவளுக்கே தோன்றும் இது எனக்கு மட்டும் படைக்கப்பட்ட நகரமா என்று. கடைசியில் இந்த தனிமையை எண்ணி இதை இழந்து விடக்கூடாது என இது எனக்கான நகரம்.இங்கு வேறு யாரும் இருக்க முடியாது.இது எனக்கான நகரம் என அவளுக்கு அவளே சொல்லிக் கொள்வாள். இப்படி ஒரு ஆள் அரவமற்ற அழகான தனிமையுடைய நகரை ஏன் இந்த மனிதர்கள் கைவிட்டார்கள் எனவும் அடிக்கடி யோசித்து கொள்வாள்.

இப்படிப்பட்ட ஒரு நகரத்தின் ஆள் அரவமற்ற கடற்கரையில் நடந்து கொண்டிருந்த மாதவிக்கு என்னவென்றே தெரியாத பல சிந்தனைகள் மின்னி மின்னி மறைந்தன. தனிமையில் இருக்கும் போது மனிதன் உண்மையாக இருக்கிறான் என மனோதத்துவ அறிஞர்கள் சும்மாவா சொன்னார்கள். அந்த தனிமையில் பல வருடங்களாக ஊறிப்போனதில் அவள் முழு உண்மையாக மாற்றப்பட்டிருந்தாள்.

அவள் ஒரு கடற்பறவையை காண நேர்ந்தது.அது போல அவள் பறவைகளை கண்டு வெகுகாலமாகியிருக்கும்.ஏன், விலங்குகளைக் கூட கண்டதில்லை அவள் இந்த நகரத்தில். எப்போதோ எல்லை மறந்து நிசப்தத்தை சுவாசிக்க வரும் சில பறவைகள் அவளை வெகுவாக ஆச்சரியப்படுத்தும். எந்த மனிதர்களும் கனவில் கூட வாழ நினைக்காத ஒரு பிரதேசத்தை இப்படி சில நேரம் இந்த மாதிரியான பறவைகள் பார்த்துவிட்டு செல்வதை கண்டால் ஆச்சரியப்படாமல் யார் தான் இருப்பார்கள்.

அந்த பறவை அவள் நடந்து செல்லும் வழியில் வெகுதொலைவில் பாதி சிதிலமடைந்து கிடக்கும் ஒரு ராணுவ விமானத்தின் இறக்கையின் ஒய்யாரமாக அமர்ந்து தன் உடலை தன் அலகாலே கொத்திக் கொண்டிருந்தது.இந்த ஒரு நிகழ்வை கண்டு திகைத்தவளாய் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இதற்கிடையே கடல் அலைகள் சீற்றம் , உப்பு வாசனையேற்றும் ஒரு பயங்கர குளிர்க்காற்று.

அந்த பயங்கர காற்றை விட அதிபயங்கரமான யோசனைகள். அந்த பறவை தற்கொலைக்கு முயல்கிறதா ? ஏன் ? என் ? கண் முன்னால் தற்கொலைக்கு முயல வேண்டும் ? இந்த இருளில் அது ஏன் தனியே இங்கே வந்தது ? என ஒன்றன்பின் ஒன்றாக யோசனைகள். இப்படி யோசித்து கொண்டிருக்கும்போதே திடீரென அந்த பறவை எங்கோ அவசரமாக புறப்படும் மனிதனை போல சிறகுகளை விரித்தசைத்து பறந்து போனது.அப்படி பறந்து போன பின்பும் அவள் அந்த ராணுவ விமானத்தின் இறக்கைக்கு மேல் அந்த பறவை அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எல்லாம் திடீர் என நடந்து கொண்டதை போல அவளும் திடீரென அந்த கடற்கரையை விட்டு சிதிலமடைந்த கட்டிடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

அவள் வெறும் இடத்தையோ, நேரத்தையோ கடப்பது போல அவள் அங்கிருந்து நடப்பதை பார்த்தால் தெரியாது ஏனெனில் முகத்தில் சதா ஏன் ஏன் என் என எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் யோசனைகளை தாண்டி தாண்டி பள்ளத்தில் விழாமல் தப்பி சென்றுகொண்டிருந்தாள். தற்கொலை, சுதந்திரம் என இதற்கு முன் அவளுக்கு தோன்றிருக்காத விஷயங்களை கடந்து கொண்டிருந்தாள் . தற்கொலை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகள் காகிதத்திலோ, புத்தகத்திலோ உயிர் பெறுவதில்லை.ஆனால் இந்த வார்த்தைகளுக்கு மனித மனமே உயிர் கொடுத்து செயல்படவிடுகிறது என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம். ஒருவேளை அந்த வார்த்தைகள் என் மனதை ஆதாரமாக கொண்டு என் உடல் வழியே செயல்பட்டு விடுமோ என்ற பயமாக கூட இருக்கலாம்.

இப்படி ஒரு மனநிலை நிலவிய நகர சூழலில் அடிமேல் அடிவைத்து நிழலை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி தள்ளி இலக்கை அடைந்தாள். ஒரு பெரிய கட்டிடம், அதில் பாதி தரையில் கிடந்தது.ஒரு ராணுவ தானியங்கி குண்டு எறியும் கருவியின் பெரிய குழாய் அந்த பாதி கட்டிடத்தின் மேல் கூரையாக கிடந்தது.அது தான் மாதவியின் வீடு. கதவும் கிடையாது. அந்த வீட்டினுள் சில புத்தகங்கள், ஒரு படுக்கை, ஒரு பாலீதீன் குப்பி அதில் பாதியளவு தண்ணீர் , சிறிது குடிக்கப்பட்ட பிராந்தி குப்பி , சில உடைகள் , ஒரு இருபது நாளுக்கு உண்ணும்படியான அகதிகளுக்கான பெரிய உணவு பொட்டலம் , மேலும் சில எழுதப்படாத டையரிகளும், இரண்டு கறுப்பு நிற பேனாக்களும் அங்கு இருந்தது. இவை அனைத்தும் ஏற்கனவே அங்கேயே இருந்ததால் இந்த கட்டிடம் அவள் வசிக்கும் இடம் ஆனது.

உள்ளே போன மாதவியின் கண்ணில் பட்டது அந்த புகைப்படம். அது மட்டுமே அவளுடைய பூர்வீக சொத்து.அதை கண்டவள் கடந்த காலத்தை நினைக்க கடமைப்பட்டவளாய் நினைவுகளில் பின்னோக்கி போனாள். அங்கே தன் தந்தை, தாய், காதலன் , பரபரப்பான நகரம் என நினைவுகளை சுவாசித்து கொண்டிருக்கும்போது அந்த படுக்கையின் மேலே சுவாசித்த களைப்பில் தூங்கியும் போனாள்.அங்கே ஒரு கனவு. நனவில் இருந்து இருந்து சலித்து போனவர்கள் தனிமையில் நினைவுகளை சுவாசித்தால் கனவு வரத்தானே செய்யும்.

அங்கே மாதவி ஒருவனை பார்த்தாள். அது சகா தேவன் என உணர கொஞ்சம் காலம் பிடித்தது. “அதே வசீகர உதடுகள்” என பேசிக்கொண்டே கட்டியணைத்தான் மாதவியை பின்னிருந்து. ஒன்றும் பேச முடியவில்லை மாதவியால். “என்னுடன் வரும் திட்டமில்லையா உனக்கு ?” என்றான் சகா தேவன் பிடியை விடாமல்.சகா தேவனின் அனல் மூச்சு மாதவியின் கழுத்தில் அனல் காற்றாக பட்டு தெறித்துக்கொண்டிருந்தது.

“இந்த இடம் அப்படி ஒரு அமைதி. ஏன் இப்படி வந்து வந்து போகிறீர்கள்.இங்கேயே இருந்துவிடக் கூடாதா ?” என மாதவி கேட்டாள். “இங்கே என்ன இருக்கிறது. அமைதி மட்டும் போதுமா வாழ ?” என கேலியுடன் கேட்டான் சகா தேவன். “இல்லை, இங்கு இருக்க எனக்கு மிகவும் பிடித்துள்ளது .இந்த இடத்தை விட்டு என்னால் வர முடியாது. ஆட்கள் இல்லாத கடற்கரை, சுத்தமான குளம், பரிபூரண அமைதி.என்னால் முடியாது.” என சொல்லிவிட்டு தூரத்தில் தெரியும் ஒரு வெளிச்சத்தை கண்டாள். “அப்படியெனில் நம் திருமணம் ?” என சகா தேவன் கேட்டான். “உங்கள் ஊரில் தான் திருமணம், சம்பிரதாயம், சடங்குகள் எல்லாம்.இங்கே வந்தால் சடங்கும் கிடையாது, சம்பிரதாயமும் கிடையாது ஏன் கடவுளே கிடையாது” என சிரித்துக்கொண்டே சொன்னாள். “எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் கடவுள் இல்லை என சொன்னதை ஒப்புக்கொள்ள முடியாது” என்றான் சற்று கோபத்துடன்.

“கடவுள் இல்லை என்றதும் கோபம் வருகிறதோ ?” என்றாள் மாதவி.”இல்லாம எப்படி. இந்த உலகத்தை படைச்சவர் கடவுள் ” என பேசி முடிக்கும் முன்னரே மாதவி ” அப்படியெனில் இந்த விஷம், வியாதி, போர், தற்கொலை என எல்லாவற்றையும் படைத்தவரும் உங்க கடவுள் தான? என கேட்டவள் அத்துடன் நிற்காமல் “எவ்வளவு நேரம் இப்படி அணைத்துக்கொண்டு நிற்பீர்கள்.கூச்சமாக இருக்கிறது.கையை எடுங்கள் ” என்ற வேண்டுகோளுடன் நாக்கை அசைப்பதை நிறுத்தினாள்.

“ஏன் உன்னை கட்டிப்பிடிப்பது தவறா ? நீ தான் என் காதலியாயிற்றே !” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சகா தேவன்.

“ம்கும், நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ” என்றாள் மாதவி. ” வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் மரணம் உண்டு தானே ” என பதில் சொன்னான். “வாழவே இல்லை. அதற்குள் உங்களை கொன்றுவிட்டாரே கடவுள் !” என அழ ஆரம்பித்தாள். கண்ணீர் கனவின் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபோது சகா தேவனை காணவில்லை.இருப்பது இல்லாமல் போகும் போது இல்லாமல் இருப்பது நிரம்பி வழிந்து காட்டாறு போல திசை மாறி ஊரை அழித்து கொண்டு ஊரை வளப்படுத்த சிறைக்குள் அடைபடுவது போல அந்த கண்ணீருக்கு பின் ஒரு ஒருமையான வெறுமை. ஒரே வெறுமை. மகா அமைதி. எங்கும் இருள்.

சாவின் நனவை கனவில் கண்ட துக்கம் பொறுக்காமல் மூளையின் நரம்புகள் துயரத்தால் நெறுக்கப்பட்டு மூச்சு தன்னுடைய அகத்தை பிதுக்கி கொண்டு தன் இருப்பை சோதித்து கொள்வது போல உதடுகள் மனதின் மீட்டலில் தன்னாலே “என்ன ஒரு மோசமான கனவு” என சொல்லிக்கொண்டே தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்தால் அந்த நகரத்தை காணவில்லை.கடற்கரையும் இல்லை.சிதிலமடைந்த கட்டிடங்களும் இல்லை.சுத்தமான குளமும் இல்லை.. மாதவியின் கையில் ஹிட்லர் எழுதிய எனது போராட்டம் புத்தகம் இருந்தது. தொலைபேசி ஒலித்தது.அதை கையில் எடுத்து யார் என பார்த்தால் “சகா தேவன்” என இருந்தது.எழுந்து போய் சன்னல் வழியே பார்த்தாள். ஒரு ராணுவ பயிற்சி முகாம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

நம்புங்கள்

– ஸ்ரீதர் நாராயணன்

dad_daughter

வருங்காலத்தின் அத்தனை அநிச்சயங்களையும்
அச்சுறுத்தும்வகையில் உருவகப்படுத்தி
அவளுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்கவும்,

அடுத்து வரும் வகுப்புகளில்
கவனமாக
dஐ d போலவும் Yயை y போலவும்
மாற்றாமல் எழுத வேண்டும் எனவும்,

கண்டிப்பான சுடுசொற்களை வீசி
அவளுக்கான முன்னேற்றத்தை
வழிப்படுத்தத்தான் எண்ணியிருக்கிறேன்.

இப்படி,
கிளிப்பிள்ளைப் போல
அவள் சொல்லும் சொற்களின்
வேடிக்கையை கேட்டு
திரும்பத் திரும்பத் சொல்லி
கெக்கெலித்து பூரிப்பதற்காக இல்லை.

 

Picture courtesy: Ashok’s blog