Author: பதாகை

பெண்டுல மனசு

கோபி சரபோஜி

 

தவிர்த்திருக்கக் கூடிய
சாத்தியங்கள் இருந்தும்
தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட
சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

ஆண்டுகளைத் தின்று
செரித்துப் புதைந்த பாதத்தின்
ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை
மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

குழுமைக்குள் விட்டு வந்தவைகளில்
மக்கி உளுத்தது போக
உள்ளங்கைகளில் உறைந்தவைகள்
காலத்திற்கு ஒவ்வாதவைகளாகின.

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.

புலப்பட்டு பயணித்த புள்ளிக்கும்
கானலாகி எழும் புள்ளிக்கும் இடையே
முட்களின் முனங்களோடு நகரும்
பெண்டுலமாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனசு!

oOo

ஒளிப்பட உதவி – Life needs Art

இரு திருமணங்கள்

 அஜய் ஆர்

‘சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்’ சசிகலாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது (‘கல்யாணம் முடிந்தவுடன்’) . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே இருப்பது, பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள் அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது எரிச்சலாக இருக்கின்றது. ஆனால் சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள். சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது. அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள் இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன. மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் ‘சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா’ . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது. அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது.

சசியின் தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது, ‘..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்’, என்று சொல்ல, அத்தை ‘என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..’ என்று சொல்கிறார். அன்றாட இ யல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல ‘என்னடி இது’ என்று எழுதி இருக்கக்கூடியதை ‘என்னடீது’ என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் – என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது – நுண்சித்திரமும் தெரிகிறது. சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து ‘கூப்பிடறதே நன்னாயில்லையே’ என்கிறாள். அவ்வளவுதான். அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும் பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள். இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம் ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா? இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள், பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால், புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்- என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம்.

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, ‘போட்டோ’ கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். (“சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை” – இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?.

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க, மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், “…தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்” என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும்?. ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா? அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது. புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை உருவாகி விடுவதை உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக் கூட எதிர்கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம். ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று உருவாகும் சங்கட நிலையை, எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடைய நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் – நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப் போல் – ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக் குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.

oOo

ஒளிப்பட உதவி – திண்ணை

 

பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம்

  சிகந்தர்வாசி

 

கோரமங்களாவில் ஆட்டோ பிடித்தேன். ‘இகோ ஸ்பேஸ்’ என்றேன்.

ஆட்டோ கிளம்பிய முதல் ஆட்டோ டிரைவர் கன்னடத்தில் பேசிக்கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன். முக்கால்வாசி நேரம் இருவரும் டிராபிக் பற்றி புலம்பிக்கொண்டு வந்தோம்.

எப்பொழுதும் போல் அகரா பஸ் ஸ்டாண்ட் தாண்டியவுடன் டிராபிக் அதிகமாக இருந்தது. சர்ஜாபூர் ஜங்ஷன் வந்தவுடன் சற்று மூச்சு விட முடிந்தது. ஆட்டோ சற்று வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.

‘இகோ ஸ்பேஸ்’ஸுக்கு முன்னால் உள்ள பாலம் ஏறும் நேரம் இடது பக்கத்திலிருந்து யாரோ ஒருவன் முகத்தில் பீதியுடன் ‘நிறுத்து நிறுத்து’ என்று ஆட்டோவை நோக்கி ஓடி வரப் பார்த்தான். ஆட்டோ அவனைக் கடந்த பின்புதான் டிரைவர் அவனை கவனித்தான். “டேய்” என்று அவனைப் பார்த்து கத்தினான். அதற்குள் ஆட்டோ ப்ளைஓவர் மேல் ஏறி விட்டிருந்தது. எல்லா பக்கமும் விரைந்து வரும் வாகனங்கள். டிரைவர் இடது பக்கம் சென்று நிறுத்தப் பார்த்தான், ஆனால் அவனால் முடியவில்லை. நாங்கள் ப்ளைஓவர் உச்சிக்கு வந்தபொழுது எல்லா வண்டிகளும் டிராபிக் ஜாமில் சிக்கியிருந்தன.

டிரைவர் தன் மொபைல் எடுத்து ஏதோ நம்பருக்கு டயல் செய்தான். “யாரு அவனு?’ என்று நான் கேட்டேன். “என் மச்சான் சார்” என்றான் தமிழில். பதட்டம். “அவனுக்கு என்ன?” என்று கேட்டேன். “தெர்ல சார். எங்க வூடு இங்க தான். என்ன பிரச்னையோ?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலை அமுக்கினான். மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை போலும். “இதுங்களுக்கு வாங்கி குடுத்து என்ன லாபம் சார்? எங்கயாவது வச்சிட்டு போயிடும். நமக்கு எதனா எமெர்ஜென்சி இருந்தா இவளுக்கு போன் பண்ணுவோம் ஆனா அது எங்கயாவது சுத்திகினிக்கும்”

வண்டிகள் நகருவதாக இல்லை. டிரைவர் என்னிடம், “ஒரு நிமிஷம் சார்” என்று கூறிவிட்டு, ஆட்டோவை விட்டு இறங்கி, இடது பக்கமாக ப்ளைஓவர் ரோட்டிற்குச் சென்று கீழே பின்னால் திரும்பி பார்த்தான். எம்பி எம்பி பல முறை பார்த்தான். மறுபடியும் மொபைலை அமுக்கினான். பதில் எதுவும் இல்லை. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.  கீழே இறங்க ஒரு இரண்டடி எடுத்து வைத்தான். அப்பொழுது வண்டிகள் நகர ஆரம்பித்தன. ஓடி வந்து ஆட்டோவை கிளப்பினான்.

“உங்க மச்சான் கண்ல படலையா?”.

“இல்ல சார். அவனும் போன எடுக்க மாட்றான். என் பொஞ்சாதியும் போன் எடுக்க மாட்றா. என்ன ஆயிடுச்சோ?”

மறுபடியும் ஆட்டோ நின்றது. மறுபடியும் அவன் போன் செய்தான். “உன்ன கீள எறக்கிவிட்டு நான் யு டர்ன் பண்ணிக்கினு போறன் சார்”.

“வீடு கிட்ட தானா?”

“ஆமாம் சார்.”

ஒரு வழியாக கீழே இறங்கிவிட்டோம். நான் ஆட்டோ விட்டு இறங்கினேன். நான் இறங்கும் போழுதே அவன் மறுபடியும் மொபைலில் மச்சானையோ மனைவியையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காமலே பைக்குள் வைத்தான்.

டிராபிக் வார்டன் வண்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தான். எங்களை சாலையைக் கடக்கச் சொன்னான். நான் கடக்கும்பொழுது ஆடோ டிரைவர், ‘ஹலோ. இன்னாசி?” என்று கேட்பது காதில் விழுந்தது. அவனுக்கு என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை.

சாலையை கடந்த பின் திரும்பி பார்த்தேன். ஆட்டோவை ஒரு பஸ் மறைத்திருந்தது. தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது.

oOo

ஒளிப்பட உதவி- Onigiri and Arancini

 

 

சிசு

ஹரன் பிரசன்னா

baby

ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு முறத்தில் வைத்து கையில் தரப்பட்ட குழந்தையா  இது என்று வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள் உமா. ட்ரைனில் சுழற்றி அடிக்கும் காற்றில் கையைக்  காலை  உதறிக்கொண்டு அவள் மார்போடு ஒட்டிக்கொண்டது அந்தப் பதினைந்து நாள் குழந்தை. பக்கத்தில் சந்துரு எதையோ யோசித்தபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். திடீர் திடீரென குழந்தையைப்  பார்ப்பதும் உமாவைப்  பார்ப்பதும் என அவன் நிலையில்லாமல் இருந்தான்.

லேசாக நரைக்கத் தொடங்கியிருந்த தனது கூந்தலை ஒதுக்கி காதுக்குப் பின்னே சொருகிக் கொண்டாள் அவள். நடுவகிடெடுத்து மேல் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். தான் இப்போது பெண்ணா அல்லது பொம்பளையா என்று அவளுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. 35 வயதில் நரைக்குமா என்பதைவிட ‘நரை வந்துட்டு ஒரு பூச்சி பொட்டு வல்லையே’ என்ற கேள்வியை எந்நேரமும் சித்ரா அத்தை கேட்டுவிடக்கூடும் என்பதே அவளது கலக்கமாக இருந்தது. இனி அவள் கேட்கமுடியாது. இது என் குழந்தைதான். என் குழந்தையேதான்.

மெலிந்து கருத்து எதிலும் கவனமின்றித் தவிக்கும் தன் கணவனைப் பார்த்தாள். அவனுக்கு மீசை எப்போதோ நரைத்துவிட்டது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் நரை ஆங்கங்கே எட்டிப் பார்த்தது. முதல் நரை கண்ணில்பட்டபோது அவளுக்குள் மெல்ல ஒரு பயம் எழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையாட்டி. அவனவனுக்கு 50 வயசுல புள்ள பொறக்குது. உங்க மாமா கடைசில புள்ள பெத்தப்ப 52 வயசு. நம்ம சரவணனை பெத்தேன்’ என்றாள் சித்ரா அத்தை.

சித்ரா அத்தையிடமிருந்து தப்பிப்பதற்காகவாவது ஒரு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் பிறக்கவில்லை. இரண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. முதல் நாள் முதல் நேற்று வரை சந்துரு அதே வேகத்தோடும் அதே ஆசையோடுதான் இருக்கிறான். ஒருவேளை அவனுக்குள்ளும் எல்லாம் விட்டுப் போயிருக்குமோ? தெரியவில்லை. ஆனால் இருக்காது. தன் கணவனின் வேகம் தனக்குத் தெரியாதா என்று நினைத்துக்கொண்டாள். உண்மையில் அவளுக்கு என்னவோ விட்டுத்தான் போயிருந்தது.

சொல்லி வைத்ததுபோல் எந்தக் குறையும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லை என்ற குறை மிகப்பெரியதாக மாறி அவளைச் சுழற்றி அடித்தது. வெளியில் எல்லோரும் போல் சிரித்து எல்லோரும் போல் உடுத்திக் கொண்டாலும் உள்ளே எப்போதும் ஒரு கரும்பாறையைச் சுமந்துகொண்டே நடப்பது போல் இருந்தது. ஏனோ ஒரு கருகூட தங்கவே இல்லை. ஒவ்வொரு மாதமும் சரியாக உட்கார்ந்தாள். தள்ளிப் போனதுகூட இல்லை. யாரும் இவளை மலடி என்றோ வேறுவிதமாகவோ பெரிதாகக் குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பார்வையிலேயே அடுத்து அவர்கள் கேட்க வரும் கேள்வியை இவளால் படிக்கமுடிந்தது. முதலில் அழுகை, பின்பு கோபம், பின்பு சலிப்பு, பின்பு அவளே முந்திக்கொண்டு சொல்லிவிடுவாள். ‘டாக்டர்ட்ட காமிச்சிட்டுத்தான் இருக்கோம்.’ மிக சமத்காரமாக சித்ரா அத்தை ‘நா கேக்கலியே இப்போ’ என்று சொல்லிவிட்டு, ‘அதெல்லாம் வரும், ரெண்டு பேர் வீட்டுலயும் புள்ளைக்கா குறைச்சல்’ என்பாள்.

சந்துரு எதிர்க்காற்றின் சுகத்தில் உறங்கத் தொடங்கியிருந்தான். நான்கு நாள்களாகவே அவனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பதை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவளுக்குள்ளும் பெரிய பதற்றம் இருந்தது. 35 வயதில் ஓடியாடி ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா? ஆனால் அதை மீறிய நம்பிக்கை இருந்தது. வெறி இருந்தது. கல்யாணம் ஆகி பத்து வருடங்களில் ஒரு குழந்தையில்லை என்பது அத்தனை பெரிய விஷயமா? கையில் ஒரு ரோஜாக்கூட்டத்தின் பஞ்சுப்பொதியென வெளிர்சிகப்பு நிறத்தில் சிசு ஒட்டிக்கிடக்கும்போதுதான் தெரிகிறது, அது நிஜமாகவே ஒரு பெரிய விஷயம்தான் என.

குழந்தையை உடலோடு இறுக்கிக்கொண்டாள். சந்துரு அவள் தோள்மேல் சாய்ந்து விழுந்தான். ஏனோ அவளுக்கு நிறைவாக இருந்தது. காரணமில்லாமல் கண்ணீர் வந்தது. குழந்தை இல்லை என்று இனி அழவேகூடாது என முடிவெடுத்தது நினைவுக்கு வந்தது. குழந்தையை மெல்லத் தூக்கி முகர்ந்து பார்த்தாள். ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. மீண்டும் முகர்ந்தாள். உடலெங்கும் பால் வாசனை. மீண்டும் மீண்டும் முகர்ந்தாள். முத்தமிட்டாள். அவள் உள்ளம் வெறிகொண்டது. சந்துரு இவளைக்கிடத்தி உடலெங்கும் நுகரும்போது ‘இது என்ன லூஸாட்டம்’ என்றபோது அவன் சொன்னான், ‘ஒரு வெறின்னு வெச்சிக்கோ. ஒனக்குப் புரியாது’ என்று. இதுவும் அதே போல்தானா? அல்லது வேறு ஒரு விதமா? ஆனால் நிச்சயம் இது ஒரு வெறிதான். எல்லாமே தன்னுடையது என்னும் வெறி. உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவி கால் நுனி பலமிழந்து தலைசுற்றுவது போல் இருந்தது. ஒரு கையில் சந்துருவைப் பிடித்துக்கொண்டாள். அந்த வெறியுடன் முதல்முறை அவன் இவள் கையைப் பிடித்தபோது இருந்த அதே வேகம் அவளுக்குள் இப்போது இருப்பதை உணர்ந்துகொண்டாள்.

திடீரென கேட்ட மொபைல் சத்தத்தில் குழந்தை தூக்கம் கலைந்து சிணுங்கி அழுதது. சந்துரு பதறி போனை எடுத்தான். உமா சந்துருவை முறைத்துக்கொண்டே குழந்தையை கையில் ஊஞ்சல் போல வைத்துத் தாலாட்டினாள். சந்துரு போனில் என்னவோ பேசினான். அவன் முகம் கொஞ்சம் கலவரமடைந்தது போல் இருந்தது. போனை வைத்தவுடன் அவள் அவனிடம் ‘யாராம்?’ என்றாள்.

‘சித்ரா அத்தைதான். அம்மா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம். பின்மண்டைல அடியாம். ஒரு மணி நேரமா நம்ம கூப்பிடுறாளாம், லைனே கிடைக்கலியாம். சீரியஸா ஒண்ணும் இல்லையாம்’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்தான்.

அவள் குழந்தையை அவளுக்குள் மறைத்தவாறே ‘உங்க அம்மா விழறது மொதவாட்டியா’ என்றாள்.

குழந்தையின் நட்சத்திரத்தையும் ராசியையும் சொல்லி குழந்தையைப் பெற்றவள் ஒரு முறத்தில் வைத்து தன்னிடம் ஒப்படைத்தபோது உமா சொன்னாள், ‘கடைசியா தாய்ப்பால் தந்துட்டு கொடுங்க. அதோட சரி. உங்களுக்கும் அதுக்கும் ஒரு உறவுமில்ல’ என்றாள். சந்துரு ‘சும்மா கெட’ என்றான். உமா பதிலுக்கு ‘நீங்க சும்மா கெடங்க’ என்றாள். அவள் சொன்னதை உடன்வந்த உமாவின் அக்கா கணவன் ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்குச் சொன்னான். அந்தப் பெண் கண்ணீருடன் ‘புரியுது’ என்று சொன்னதாக உமா ஊகித்தாள்.

அவளுக்கு 55 வயது ஆகியிருந்தது. உடல் பருத்து நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் கஷ்டப்பட்டாள். அவள் மகளுக்கு 23 வயது. எதிர்பாராமல் இந்த 55 வயதில் ஒரு குழந்தை. அந்தக் குடும்பத்தால் இதை எதிர்கொள்ளமுடியவில்லை. அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த உமாவின் ஒன்றுவிட்ட அக்கா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அந்தப் பெண்ணின் குடும்பம் தனக்குத் தெரிந்ததுதான் என்றும் குழந்தையை யாருக்காவது தத்து கொடுக்கப்போகிறார்கள் என்று கேள்விப்படுவதாகவும் உமாவுக்குச் சரியென்றால் தன் கணவனைப் பேசச்சொல்வதாகவும் சொன்னாள்.

முதலில் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா என்று சந்துரு பல வருடங்களுக்கு முன்பு கேட்டபோது உமா அழுதுகொண்டே ‘எனக்கு வக்கில்லன்றீங்களா இல்ல உங்களுக்கு வக்கில்லயா’ என்று கேட்டதை பல நாள் சந்துரு மறக்கவே இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குப் பின் தத்து என்ற பேச்சை அவன் எடுத்ததே இல்லை. திடீரென்று உமா அவனைக் கூப்பிட்டு ‘ஒரு குழந்தை இப்ப ரெடியா இருக்காம். குஜராத்லேர்ந்து மாலினி அக்கா கூப்பிட்டா. அகமதாபாத்துக்கு உடனே போகணும்’ என்றபோது, அவளுக்குள் இருப்பது கோபமா உறுதியா குழப்பமா அல்லது அவசரமா என்பதை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

வீட்டின் ஓர் அறையில் நடக்கமுடியாமல் கட்டிலில் கிடக்கும் அம்மாவிடம் சென்று ‘கொழந்த தத்து எடுக்கலாம்னு அவ சொல்றா’ என்று சொல்லவும், இடுப்பு ஒடிந்து நடக்கமுடியாமல் தன் பெரிய வயிற்றை கட்டிலின் மீது கிடத்தி ஒரு ஓரமாகச் சாய்ந்து படுத்திருந்த அம்மா, கண்கள் சொருகி என்ன நடக்கிறதென்றே உணர்வில்லாமல் இருந்த அம்மா, மூத்திர நாத்தத்தில் சோர்ந்து கிடந்த அம்மா, அவன் எதிர்பாராத வேகத்தில், உயர்ந்த குரலில் ‘எவ குழந்தைய எவ வளக்கது? என்ன சாதி என்ன எழவுன்னு தெரியாததெல்லாம் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது, சொல்லிப்புட்டேன்’ என்று சொல்லிவிட்டாள்.

அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த உமா அதற்கெல்லாம் அசரவே இல்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. உமா ஒரு பயந்த சுபாவம் உள்ளவள் என்று மட்டுமே சந்துரு நினைத்திருந்தான். உள்ளூர சின்னதாக ஒரு வீம்பு உண்டு என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இத்தனை தைரியம் அவளுக்குள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. தத்து குழந்தை வேண்டாம் என்றபோதும் அதே உறுதி, இப்போது வேண்டும் என்னும்போதும் அதே உறுதி. இவளைப் புரிந்துகொள்ளவே இல்லையோ என்றும் நினைத்தான். அம்மாவின் அறையை விட்டு வெளியே வந்தவனிடம் மிக நிதானமாக கொஞ்சம் குரலை உயர்த்தி அவன் அம்மாவுக்கும் கேட்கும் வண்ணம் சொன்னாள், ‘உடனே கிளம்பணும்’ என்று. உள்ளே அம்மா விசும்பும் குரல் கேட்டது. சந்துரு ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உமாவுடன் கிளம்பிப் போனான். போகும் வழியில் ரயிலில் அவனிடம் ‘அதென்ன எழவுன்றது? உங்கம்மாவுக்கு இருக்கு ஒரு நாள்’ என்று சொன்னாள். சந்துரு ‘விடு’ என்றான்.

‘கோர்ட்ல எழுதி வாங்கணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இன்னைக்கு நல்ல நாளு, குழந்தையை வாங்கிக்கோங்க’ என்றான் கூட வந்த உமாவின் அக்கா கணவன். பெற்றவள் குழந்தையை கடைசியாக ஒரு தடவை முத்தமிட்டுவிட்டு உமாவிடம் தந்தாள். உமா கைகள் நடுங்க கண்ணீர் கலங்க குழந்தையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் ‘இனிமே என்னையும் என் குழந்தையை மறந்துடுங்க’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வெளியேறினாள். பின்னால் அழும் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெள்ளமென தன்னைச் சூழும் முன்பு அதைக் கடந்துவிடவேண்டும் என்று எண்ணி குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடுபவள் போல விரைந்து நடந்தாள்.

காற்றில் அசையும் பொருள்களின் ஒலியைக் கேட்டு ட்ரைனில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு வந்தது குழந்தை. எல்லா வகையிலும் சட்ட ரீதியாகவும்கூட இனி இது தன் குழந்தை என்ற நினைப்பே அவளை மலரச் செய்தது. குழந்தை அவள் மேல் ஒண்ணுக்கிருந்தபோது வாயை மூடிச் சிரித்தாள். சுற்றிலும் யாருமே இல்லாததுபோல் தனது உலகத்தில் தன் குழந்தையுடன் தான் மட்டுமே இருப்பதாக அவள் நடந்துகொண்டாள். இனி சித்ரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். மாமியாரின் முகத்தை தைரியமாக ஏறெடுத்துப் பார்க்கலாம். குழந்தையைப் பாக்கதே பெரிய பாடா இருக்கு என்று உறவினர்களிடம் அலுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட சந்துரு இழுத்துப்பிடித்து இறுக்கும்போது இந்த வாட்டியாவது குழந்தை பிறக்குமா என்ற எண்ணம் இல்லாமல் அவனுக்கு ஈடுகொடுக்கலாம்.

‘அம்மாவுக்கு எப்படி இருக்கோ?’ என்றான் சந்துரு. உடனே உமா ‘சித்ரா அத்தை குழந்தை வந்த நேரம்னு ஆரம்பிக்காம இருக்கணும். இதுல குழந்தையோட நட்சத்திரமும் ராசியும் உங்கம்மாவோட நட்சத்திரமும் ராசியும் ஒண்ணு. சித்ரா அத்தை என்ன என்ன பேசப்போறாளோ’ என்றாள். ‘அவ வாய் மட்டும்தான், உள்ள ஒண்ணும் இல்ல. நீ அவ பேசறதையெல்லாம் காரியமாக்காத’ என்றான். அவள் கொஞ்சம் யோசித்து, ‘ஒங்களுக்குமே அப்படி தோணுதோ’ என்றாள். அது காதில் விழாதது போல, குனிந்து குழந்தையைப் பார்த்துச் சிரித்து, குழந்தையைச் சுற்றியிருந்த துணியை நன்றாக முழுக்க மூடிவிட்டான். ‘பொம்பளை குழந்தை. இப்படி கிடைக்கிறதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எழுதி வெச்சி காத்துக்கிட்டு இருக்கிறவங்களுக்கே கிடைக்கலை. அந்தம்மா பணம்கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், நல்லா வளர்த்தா போதும்னு சொல்லிட்டாங்களாம், உங்கக்கா வீட்டுக்காரன் சொன்னான்’  என்றான். உமாவுக்கு கண்ணீர் துளிர்த்தது. யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘பேரு என்ன வெக்கலாம்? எங்க வீட்டுல அம்மா பேரை வைக்கதுதான் வழக்கம்’ என்றான். உமா பதிலே பேசாமல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ட்ரைனை விட்டு இறங்கி ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் படியேறும்போது சந்துருவுக்கு ஏனோ பயமாக இருந்தது. உமா எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாசலில் நின்று சத்தமாக ‘சித்ரா அத்தை, ஆரத்தி கரைச்சு வெக்க சொன்னேனே, கொண்டு வாங்க’ என்றாள். சித்ரா அத்தை வேகமாக ஆரத்தியுடன் வந்து எதுவும் சொல்லாமல் ஆரத்தி எடுத்துவிட்டு, சந்துருவிடம் மெல்ல ‘அம்மாவுக்கு நல்ல அடி, ஆஸ்பத்திரி வேணாங்கா, இந்த தடவை பொழைக்கறது கஷ்டம்தான்’ என்றாள். சந்துரு வேகமாக உள்ளே ஓடினான். வலது காலை எடுத்து வைத்து நிதானமாக உள்ளே சென்ற உமா, மாமியாரின் அறை வாசலில் ஓரமாக நின்றுகொண்டாள்.

சந்துரு அவன் அம்மா படுத்துக்கிடந்த கட்டிலில் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ‘என்னம்மா எப்படி இருக்க? ஹாஸ்பிடல்ல வெச்சு பாத்தா சரியாயிடும்’ என்றான். அவள் கண்கள் எதையோ தேடி வாசலில் நின்ற உமாவிடமும் உமா கையில் இருந்த குழந்தை மீதும் நிலைத்தன. சந்துரு ‘பொம்பள குழந்தைம்மா’ என்றான். அவள் கண்களில் நீர் வழிந்தது. ‘உள்ளே வரச் சொல்லு’ என்றாள். ‘இல்லம்மா, ஒனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும்… வேற வழி தெரியலைம்மா… இப்படி கிடைக்கிறதே அதிர்ஷ்டம்’ என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

அவள் சொன்னாள், ‘அது எப்ப நம்ம வீட்டுக்குள்ள வந்துடுச்சோ, அது நம்ம வீட்டுக் குழந்தை. என்னவோ தோணிச்சு அப்ப சொன்னேன். இப்ப இப்படி தோணுது இப்படி சொல்றேன். இப்ப சொல்றதை எடுத்துக்கோ. உள்ள சாமி ரூம்ல அட்சதை இருக்கு, எடுத்துட்டு வா’ என்றாள்.

வெளியில் நின்றிருந்த உமா சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சந்துருவின் அம்மா குரலை உயர்த்தி ‘எல்லாம் போதும். வேணுங்கிறது அழுதாச்சு. இதுதான் கடைசி. அழுது முடி’ என்றவள், ‘ஏய் சித்ரா, அந்த அட்சதையைக் கொண்டு வா’ என்றாள். அட்சதை கொண்டு வந்த சித்ராவிடம் ‘என் ராசியாம்லா. எனக்கு சாவே இல்லைல்லா’ என்றாள். அதற்கு அவள், ‘குழந்தை அப்படியே உங்க ஜாடைல இருக்கு’ என்றாள்.

oOo

ஒளிப்பட உதவி – Pinterest

சொல் விழுந்த வனம்

நித்ய சைதன்யா

 

கரிய சொல் ஒன்றிலிருந்து
கிளைத்துப் பரவும் வனத்தில்
இளைப்பாறும் பறவைகளுக்கு
உண்ணத்தருகிறாய்
கனவின் ருசிதிகட்டும் கனிகளை

ஆசுவாசம் மிகுந்து
உனதன்பில் சிக்குண்டு
பறத்தலை மறந்த அச்சிறிய
உயிர்களில் நானும் ஒருவன்

அலகிலா உனது லீலைகள்
இடையறா உற்சவ தினங்களாக
நிகழ்ந்தேறி
உன்மத்தம் கொண்டலைகிறேன்

உனதன்பில் ஒளிர்ந்த
ஒற்றைச்சொல்லை கையிலேந்தி
உந்தும் கணத்தில்
உடன் வருகின்றன
உனை விழைந்த ஓராயிரம் சிறகுகள்

oOo

ஒளிப்பட உதவி – Jacob Scriftman