Author: பதாகை

பாறைச் சாவி – அரிஷ்டநேமி

வீதியினில் நிறைந்து நிற்கும்
மழைநீரை தெத்தி செல்லும்
குழந்தையாக மண்ணை
காலால்இரைத்துச்செல்கிறேன்.
காலங்களில் தொலைந்த கல்சாவிகளில் ஒன்று
கண் எதிரே.
‘என்னை நீ அறிவாயா,
நானே பாறைச் சாவி’ என்கிறது
வியப்பில் புருவங்கள் உறைகின்றன.
‘பதினென்வயதிற்குமுன்
உள் தொலைந்த சாவி நான்’ என்கிறது
‘பிறகு எங்கனம் வெளியே வந்தாய்’
என்கிறேன்.
தேடல் உடையவர்களுக்கே
தேடிவருவேன் நித்தமும் நான்’ என்கிறது.
‘எனில் எப்படி இத்தனை
சாவிகள் என்கிறேன்’.
‘ஒவ்வொரு தொலைதலும்
ஒரு புது பிரதியினை எடுத்துச் செல்லும்’ என்கிறது.
கைகளால் எடுத்து  தொலைதூரம் வீச எத்தனிக்கிறேன்.
தொலைகிறது மற்றும் ஒரு சாவி.

இருத்தலியத்தின் கடைசி மூச்சு – மித்யா

மித்யா

பிலிப் லீ மார்டே என்பவர் எழுதி இயக்கிய ‘Still Waiting for Godot?’ என்ற பிரெஞ்சு நாடகம் இப்பொழுது ஐரோப்பிய நாடக உலகை உலுக்கியுள்ளது. இந்த நாடகம் பல சர்ச்சைகளை எழுப்பி ஐரோப்பிய நாடக உலகத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. ஒருசாரார் இந்த நாடகத்தை ரொம்பவும் சுமாரான நாடகம் என்று விமர்சித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இதை நாடகம் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

“This is the most pretentious drama that I have seen in my whole life and believe me, I have seen a lot of dramas in my life. In fact I would say that calling monstrosity a drama is giving more dignity than it deserves. I totally reject this concept and refuse to call this work as drama. Every art needs artifice but artifice alone cannot be art”1
என்று ழீன் பால் பாஸ்டர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை பலர் ஆமோதித்து தங்கள் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது என்று எழுதியுள்ளனர். இதற்கு நேர்மாறாக இன்னொரு கட்சி இருக்கிறது. அவர்கள் இதை மிக முக்கியமான ஒரு நாடகமாகக் கருதுகிறார்கள். சோர்ந்து போயிருக்கும் நாடக உலகத்துக்கு புத்துயிர் கொடுத்த நாடகமாக இதைக் கொண்டாடுகிறார்கள்.

ஐரோப்பிய கலைச்சூழலை இரண்டாகப் பிரிக்கும் இந்த நாடகத்தின் ‘கதை’ இதுதான்- திரை விலகியவுடன் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் காட்சி நமக்கு தெரிகிறது. அவள் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நமக்கு தெரியாதபடி அந்த பெண்ணுக்குப் பின்னால் ஒரு பச்சைத் திரை இருக்கிறது. அந்தப் பெண் ரோடினின் புகழ்பெற்ற சிற்பம் போல் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறாள். அவள் தன் இடது பக்கம் திரும்பி யார் வரவையோ எதிர்ப்பார்ப்பவள் போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அசையாமல் அதே போஸில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரம் கழித்து மெதுவாக எழுந்து பார்வையாளர்கள் பக்கம் திரும்பி அவர்களை நோக்கி கை நீட்டி ஏதோ பேச ஆரம்பிக்கும்போது திரை விழுகிறது.

முதல் முறை இந்த நாடகம் நடத்தப்பட்டபோது பலர் பொறுமையாக கால் மணி நேரம் காத்திருந்தபிறகு சப்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அரை மணி நேரம் கழித்து பலர் வெளியேறினார்கள். நாடகம் முடியும்பொழுது நான்கு பேர்தான் அந்த பிரம்மாண்டமான அரங்கில் இருந்தார்கள். அடுத்த நாள் பிரான்ஸின் முக்கியமான பத்திரிகைகள் இந்த நாடகத்தின் விமர்சனத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தன. “பரிட்சார்த்த முயற்சிகள் பிரான்சின் ரத்தத்தில் ஊறியவை. உலகத்தில் உள்ள எந்த தேசத்தை விடவும் பிரான்ஸ் நாட்டில்தான் சோதனை முயற்சிகளுக்கு மரியாதை அதிகம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம் சோதனை முயற்சிகள் இப்பொழுது நகைப்புக்குரியதாக இருக்கின்றன. இந்த நாடகத்தை வேறு நகரங்களுக்கு நாம் கொண்டு சென்றால் அவர்கள் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பது நிச்சயம். இது போன்ற முயற்சிகள் இங்கு தேவையா?”

என்று ‘லே மோன்டே’ என்ற பத்திரிக்கையின் நிருபர் விமர்சித்திருந்தார். “பிரான்ஸ் நாட்டுக்கு தீரா களங்கம் இந்த நாடகம்” என்ற தொனியில் பல பத்திரிகைகள் எழுதின. இரண்டு நாட்களிலேயே இந்த நாடகத்தை அரங்கை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தபொழுது எடுமொன்டு-டீ-மாரியாக் எழுதிய விமர்சனம் இந்த நாடகத்தின் தலையெழுத்தை மாற்றியது.

பிரான்ஸ் நாட்டின் மிக சிறந்த ‘கல்சுரல் கிரிடிக்’ என்று அறியப்படும் எடுமொன்டு-டீ-மாரியாக் ஒரு தத்துவ பேராசிரியர். அவர் இந்த நாடகத்தை தத்துவ நோக்கில் அணுகினார்.

“This is existentialism’s last stand, the last breath, the last gasp before it is forever buried. The drama deals with extraordinary precision about the ordinariness of life combining spirituality, absurdity and existentialism in a very original manner. The composite philosophy advocated by the author makes us question our own worth in this universe. As the drama unfolds, nothing unfolds on the stage but slowly we start watching our own selves. Time does not pass in this drama leading us to question the very concept of time and the mind with a scientific temper maps time to the equations of Einstein which proved that time was not a constant flowing object but rather which morphed itself based on the speed at which the subject travelled. Constantly questioning the concept of time and making us question ourselves, the drama raises multiple existentialist questions within ourselves. This drama breaks all our known notion of drama and transcends the genre gloriously. At last France has something to celebrate”,

என்றார் அவர்.

இது பிரசுரமானவுடன் நாடகத்தின் புகழ் வெகுவாக உயர்ந்தது. நாடகத்திற்கு டிக்கெட் கிடைப்பது கடினமானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முதன்மையான பெண்ணியவாதியான ‘சொப்ஹி-டி-மெல்லோ’ எழுதிய விமர்சனம் நாடகத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவர் எழுதியதில் ஒரு பகுதி:

“பெண் என்பவள் எப்பொழுதும் எதற்காகவோ காத்துக் கொண்டிருக்கிறாள். இந்த நாடகத்தின் பெண்ணும் அப்படியே. யார் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்? நியாயத்தின் வரவை. பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தும் ஒரு காலத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.கடைசியில் அவள் எழுந்து உங்களைப் பார்த்து கையை நீட்டுவது உங்களை குற்றம் சாட்டத்தான். நீங்கள் இன்னும் பெண்களுக்கு விடுதலை அளிக்கவில்லை. இன்னும் அவளை அடிமையாகவே பார்க்கிறீர்கள். அவள் பின்னால் ஒரு திரை இருந்ததைப் பார்த்தீர்களா? அங்கு ஓர் இயற்கைக் காட்சியை ஏன் வைக்கவில்லை இயக்குனர்? ஏனென்றால் எல்லா இடங்களிலும் பெண்கள் இப்படிதான் நடத்தப்படுகிறார்கள். அதைச் சுட்டிக்காட்டதான் அவர் பின்னால் ஒரு திரையை வைத்திருக்கிறார். இந்த நாடகம் ஆண்களுக்கு ஒரு சவுக்கடி”

இப்பொழுதெல்லாம் நாடகத்திற்கு டிக்கெட் ஒரு மாதம் முன்பே வாங்க வேண்டும். அரங்கம் நிரம்பி வழிகிறது. இன்னும் அங்கு இரண்டு கட்சிகளுக்கு இடையே சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாரிஸ் சென்றால் தவறாமல் இந்த நாடகத்தைப் பாருங்கள், நீங்கள் எந்த கட்சி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பைனரி காவியம் – சோழகக்கொண்டல்

இருத்தல் இல்லாதிருத்தல் 
அல்லது
இல்லாதிருத்தல் மட்டுமே 
எஞ்சியிருத்தல் எனும்
இரட்டை நிகழ்தகவுகளை தாங்கிய 
ஒற்றை நாணயத்தால் 
அளக்கப்படும் புடவி
இயல்பில் உறையும் சுழியும் 
இயல்பு திரியும் ஒன்றும் 
அடுத்தடுத்து நிகழும் 
எந்திர மொழியில்தான் 
எழுதப்பட்டிருக்கிறது 
படைப்பின் மந்திர கவியும் 
புல்லிவட்டம்
அல்லிவடம்
பூவொரு முழுவட்டம் 
பூமறைக்கும் இல்லை நீள்வட்டம் 
இலைதாங்கி வளையும்கிளை அரைவட்டம் 
அறுபட்ட கிளை முகத்தில் ஆண்டுவட்டம்
கிளைகசியும் நீர்த்துளி கோளவட்டம்
நீருக்குள் அணுவும்
அணுவுக்குள் கருவும் 
கருவுக்குள் துகளும்
துகள் நகரும் களமும்
எல்லாம் வட்டம்
வட்டச்சுழிகள் கூடி
வலுவுள்ள கழியுமாகி
வானுக்குள் தலைநுழைத்து நின்றபடி
தன்னையே எண்ணிக்கொள்கையில்
மரம் ஒன்று
நிறைந்து முற்றிய கனி – ஒன்று
நீரின்மேல் விழுகையில் – சுழி
சன்னதம் கொண்டு எழும் நீர்க்கரம் – ஒன்று 
அது சரிந்து கலைகையில்
எஞ்சுகிறது மீண்டும் – சுழி
வெப்பத்தை அடைகாக்கும் 
விரிசதைக்குடுவை – சுழி 
விருப்பும் விசையும்கொண்டு 
விதைநீர் பாய்ச்சும் குறி – ஒன்று 
இன்மையெனும் சுழியிலிருந்து 
இருப்பெனும் பிறப்பு 
நிகழ்கையில் 
எண்ணிகையாவது கூடுகிறது 
ஒன்று.

வண்ணக்கழுத்து 11: கூடல்

மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்தின் காயங்கள் மெல்ல ஆறின. பிப்ரவரி மாத மத்தி வரை அவனால் கூரைக்கு மேல் பத்து கஜம் தூரம் கூடப் பறக்க முடியவில்லை. அவன் பறக்கும் நேரம் கூட மிகக் குறைந்துவிட்டது. எத்தனை முறை திரும்பத் திரும்ப கூரையிலிருந்து அவனை விரட்டினாலும், என்னால் அவனை கால் மணிநேரத்திற்கு மேல் வானில் பறக்க வைக்க முடியவில்லை. முதலில் அவனுடைய நுரையீரல்தான் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்தேன். சோதித்துப் பார்த்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது தெளிவானது. பிறகு, அவனுடைய இருதயத்தில் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்தேன். ஒருவேளை நடந்த விபத்தில் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இரண்டாவது சோதனையில் அந்த அனுமானமும் தவறு என்பது தெளிவானது.

ஆக, வண்ணக்கழுத்தின் நடத்தையில் கடுமையாக எரிச்சலடைந்து, நடந்த எல்லாவற்றையும் விவரித்து கோண்டுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அவரோ சில ஆங்கிலேயர்களோடு வேட்டைச் சுற்றுலா போயிருந்திருக்கிறார். அவரிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதால், நானே என் புறாவை மிக கவனமாக ஆராய முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் அவனை எங்கள் மாடியின் மீது ஏற்றுவிட்டு பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவன் மீண்டும் பறப்பான் என்ற நம்பிக்கையை முழுவதுமாக நான் இழந்துவிட்டேன்.

பிப்ரவரி மாத கடைசியில், அடர்ந்த காட்டின் உட்பகுதியிலிருக்கும் கோண்டிடமிருந்து எனக்கு சுருக்கமாய் ஒரு குறிப்பு வந்தது. ”உன் புறா பயந்து போய்க் கிடக்கிறது. அவனுடைய பயத்தைக் குணப்படுத்து. அவனைப் பறக்கவை.” என்று எழுதியிருந்தது. ஆனால் அவர், எப்படி என்பதைச் சொல்லவில்லை. அவனை இன்னும் உயரமாகப் பறக்கவைக்க என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனைக் கூரையிலிருந்து விரட்டுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் ஒரு மூலையிலிருந்து விரட்டினால், அவன் பறந்து போய் இன்னொரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேகத்தின் நிழலோ, வானத்தில் பறக்கும் பறவைக் கூட்டத்தின் நிழலோ அவன் மீது விழுந்தால் அவன் பதற்றத்தில் நடுங்கினான். தன் மீது விழும் எந்த ஒரு நிழலையும், தன் மீது பாயந்து வரும் ராஜாளி என்றே அவன் நினைத்துக் கொண்டான். அவன் எவ்வளவு மோசமாக நிலை குலைந்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை அவனுடைய பயத்திலிருந்து மீட்பது எப்படி என்பது என்னை இன்னும் திணறச் செய்தது. நாங்கள் இமாலயத்தில் இருந்திருந்தால், அவனை முன்பொருமுறை குணப்படுத்திய லாமாவிடம் கொண்டு போயிருப்பேன். ஆனால், இந்த நகரத்தில் லாமா இல்லை. நான் காத்திருக்க வேண்டியதாயிற்று.

மார்ச் மாதம் வசந்த காலத்தை அழைத்து வந்தது. வழக்கத்துக்கும் அதிகமான ரோமங்கள் உதிர்ந்து மீண்டும் முளைத்திருந்த வண்ணக்கழுத்து, ஒரு பெரிய அடர்ந்த கருநீலப்பச்சைக் கல்லின் மையத்தைப் போல இருந்தான். விவரிக்க முடியாத அளவிற்கு அவன் அழகாயிருந்தான். எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள், அவன் ஜகோரேவின் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வசந்த காலம் தொடங்கியிருக்க, அவள் மிகவும் பிரகாசமாக இருந்தாள். அவளுடைய கருவண்ண மாணிக்கக்கல் மாதிரியான நிறம் சூரிய ஒளியில், நட்சத்திரங்கள் ஒளிரும் வெப்பமண்டல இரவு போல இருந்தது. இவளும் வண்ணக்கழுத்தும் கூடுவது இவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதில்லை என்பதை நான் அறிந்திருந்தாலும், அது அவனுடைய பயத்தைப் போக்கக் கூடும் என்று நினைத்தேன். மேலும், ஜகோரே இறந்த பின்னர் அவளிடம் வளர்ந்திருக்கும் கடுகடுப்பிலிருந்து அவளை விடுபட வைக்கும் என்றும் நினைத்தேன்.

அவர்கள் இரண்டு பேரின் நட்பை மேலும் வளர்க்க, இரண்டு பேரையும் ஒரே கூண்டில் போட்டு, இருநூறு மைல்களுக்கு அப்பால் ஒரு காட்டின் முனையில் வாழும் என் நண்பன் ரட்ஜாவிடம் கொண்டு சென்றேன். அவனுடைய கிராமத்தின் பெயர் காட்சிலா. அந்தக் கிராமம் ஒரு நதிக்கரையில் இருந்தது. நதிக்கு அந்தப்புறம் அடர்ந்த காடுகளும் அனைத்து வகை மிருகங்களும் கொண்ட உயர்ந்த குன்றுகள் இருந்தன. ரட்ஜா அந்த ஊரின் பூசாரி. அவனுடைய முன்னோர்கள் பத்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். அவன் அந்த ஊரின் பூசாரி என்பதால், அவனும் அவனுடைய பெற்றோரும் ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தார்கள். கான்கிரீட்டால் கட்டப்பட்ட அந்தக் கிராமத்தின் கோவில், இவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. உயரமான சுவர்களால் சூழப்பட்ட அந்தக் கோவிலின் முற்றத்தில், ஒவ்வொரு இரவும், வேதங்களை வாசித்து அவற்றை அங்கு கூடியிருக்கும் குடியானவர்களுக்கு விளக்கும் கடமையை ரட்ஜா செய்து வந்தான். உள்ளே அவன் சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், வெளியே தூரத்திலிருக்கும் குறுகிய நதியின் பக்கத்திலிருந்து புலியின் உறுமலோ யானையின் பிளிறலோ கேட்கும். அது அழகிய, ஆனால் அச்சுறுத்தும் இடம். காட்சிலா கிராமத்தில் ஆபத்தான விஷயம் எதுவும் நடக்கவில்லை தான். ஆனால், நமக்கு வேண்டாத வேட்டை விலங்கினங்களை எதிர்கொள்ள அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை.

நான் வந்த ரயில், இரவில் காட்சிலாவை அடைந்தது. ரட்ஜாவும் அவர்கள் வீட்டு வேலையாட்கள் இருவரும் என்னை அழைத்துப் போக ரயில் நிலையம் வந்திருந்தார்கள். ஒருவர் என்னுடைய பொதியை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டார். மற்றொருவர் இரண்டு புறாக்களும் இருந்த கூண்டை வாங்கிக் கொண்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு அரிக்கேன் விளக்கை ஏந்திக் கொள்ள வேண்டிருந்தது. எனக்காக ஒரு விளக்கை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வேலையாள் முன்னால் போக, இன்னொருவர் பின்னால் வர நாங்கள் ஒற்றை வரிசையில் ஒரு மணிநேரம் நடந்தோம். எனக்கு சந்தேகங்கள் எழுந்தன. “நாம் ஏன் இப்படிச் சுற்றிப் போகிறோம்?” என்றேன்.

“வசந்த காலத்தில் வடக்கே போகும் மிருகங்கள் இந்த வழியைக் கடக்கும். காட்டுக்குள் குறுக்கு வழியில் எல்லாம் போக முடியாது” என்றான் ரட்ஜா.

”சுத்த அபத்தம். எத்தனையோ தடவை நான் போயிருக்கிறேன். எத்தனை மணிக்குத்தான் வீடு போய்ச் சேர்வோம்?” என்றேன் நான்.

“இன்னும் அரை மணியில்…”

பிறகு, எங்கள் காலடியில் பூமி பிளந்து எரிமலையாய் ஏப்பம் விட்டது போல ஒரு பயங்கர சத்தம். “ஹோய், ஹோ ஹோ ஹோ ஹோய்!” என்று கூக்குரல்.

பயத்தில் புறாக்கள் கூண்டுக்குள் தங்கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன. சும்மா இருந்த கையால் ரட்ஜாவின் தோளைப் பற்றிக் கொண்டேன். ஆனால், அவனோ என் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சத்தம் போட்டு சிரித்தான். எஜமானைப் போலவே வேலையாட்கள், அவர்களும் சிரித்தார்கள்.

அவர்களுடைய களிப்பு அடங்கியவுடன், ”எத்தனையோ முறை போயிருக்கிறாயா? அப்படியா? பிறகு ஏன் விளக்கொளியைக் கண்டு பயப்படும் குரங்குகளின் அலறலுக்கு பயப்படுகிறாய்?” என்றான் ரட்ஜா.

”குரங்கா?” என்றேன்.

“ஆமாம். நிறைய குரங்குகள் இந்த சமயத்தில் வடக்கு நோக்கிப் போகும். நம் தலைக்கு மேலிருந்த மொத்த கூட்டமும் நம்மைக் கண்டு பயந்துவிட்டது. அவ்வளவு தான். இனிமேல் குரங்குச் சத்தத்தைப் புலியின் உறுமல் என்று நினைத்துக் கொள்ளாதே.”

அதிர்ஷ்டவசமாக, என் மரியாதைக்கு மேற்கொண்டு பங்கம் வருவதற்கு முன் விரைவாக நாங்கள் வீட்டை அடைந்துவிட்டோம்.

அடுத்த நாள் காலை, ரட்ஜா தன் கடமையை நிறைவேற்ற அவர்களுடைய கோவிலுக்குச் சென்றான். நான் கூரைக்குச் சென்று என்னுடைய பறவைகளை திறந்துவிட்டேன். முதலில் அவை குழம்பிப்போயின. ஆனால், கையில் நெய்க் கடலைகளோடு என்னை அருகில் பார்த்த பின்னர், அவை எந்தத் தயக்கமும் இல்லாமல் காலை உணவை எடுத்துக் கொண்டன. கிட்டத்தட்ட அந்த நாள் முழுக்க நாங்கள் கூரையில் செலவிட்டோம். புதிய இடத்தின் சூழல் அவற்றை பதற்றம் கொள்ளச் செய்யும் என்பதால் அவர்களை தனியே விட்டுவிட்டுப் போக நான் விரும்பவில்லை.

தொடர்ந்த ஒருவாரத்தில், இரண்டு புறாக்களும் காட்சிலாவிக்கு தங்களை பழக்கிக் கொண்டுவிட்டன. மேலும், ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாகவும் ஆகிவிட்டன. நான் புத்திசாலித்தனமாகத்தான் இவ்விரண்டையும் மற்ற புறாக்களிடமிருந்து விலக்கிக் கொண்டுவந்திருக்கிறேன் என்பதில் இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. நாங்கள் அங்கு வந்த எட்டாவது நாள் வண்ணக்கழுத்து, தன் பெடையைத் தொடர்ந்து பறந்து செல்வதைக் கண்டு நானும் ரட்ஜாவும் ஆச்சரியப்பட்டோம். அவள் தாழ்வாகப் பறந்து போனாள். வண்ணக்கழுத்து பின் தொடர்ந்தான். அவன் அவளை நெருங்குவதைக் கண்டு, அவள் உயர்ந்து திரும்பிப் பறந்தாள். அவனும் அப்படியே செய்து, அவளைப் பின் தொடர்ந்தான். அவள் மீண்டும் உயர்ந்தாள். இந்த முறை அவன் பின் வாங்கினான். அவளுக்கு கீழே காற்றில் வட்டமிடத் துவங்கினான். ஆனாலும், அவன் தன் தன்னம்பிக்கையை மீண்டும் அடைவதை நான் உணர்ந்தேன். கடைசியில் புறாக்களுக்கே எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணக்கழுத்து பறப்பதில் தனக்கிருக்கும் பயத்திலிருந்தும் திகிலிலிருந்தும் தன்னை குணப்படுத்திக் கொள்கிறான். மீண்டும் அவன் காற்றை தனதாக உணர்ந்தான்.

அடுத்த நாள் காலை அவர்கள் இருவரும் உயரப் பறந்து ஒருவரோடு ஒருவர் விளையாடினார்கள். வண்ணக்கழுத்து மீண்டும் அவளோடு போகாமல், அவசர அவசரமாய் கீழே வந்து அவளுக்குக் கீழ் வட்டமடித்தான். எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால், கூர்மையான ரட்ஜா எனக்கு விளக்கினான். “காற்றாடியைப் போல பெரிய மேகம் ஒன்று சூரியனை மறைத்திருக்கிறது. அதன் நிழல் விழ, வண்ணக்கழுத்து அதை தனது எதிரி என்று நினைத்துக் கொண்டுவிட்டான். மேகம் விலகும் வரை காத்திரு, பின்னர் பார்” என்றான்.

ரட்ஜா சொன்னது சரிதான். சில நொடிகளில் சூரியன் வெளிவந்து, அதன் பிரகாசத்தில் வண்ணக்கழுத்தின் இறக்கைகள் ஒளிர்ந்தன. அவன் கீழே இறங்குவதை நிறுத்திவிட்டு, காற்றில் வட்டமடிக்கத் துவங்கினான். அவனுக்குத் துணையாக இருக்க கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனுடைய துணையோ, நூறு அடிக்கு மேலே நின்று அவனுக்காக காத்திருந்தாள். இப்போது வண்ணக்கழுத்து, கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கழுகு போலே வேகமாக இறக்கையை அடித்து மேலே உயர்ந்தான். அவன் திசையைத் திருப்பி மேலே மேலே பறக்க சூரிய ஒளி அவனைச் சுற்றில் வண்ணக்குளத்தை உண்டாக்கியது. சீக்கிரமே பின் தொடர்வதை விட்டுவிட்டு, தன் பெடையை வழி நடத்தினான். அவர்கள் வானத்தில் ஏறினார்கள். அவனுடைய பயம் முழுக்க விலகிவிட்டிருந்தது. அவனுடைய சுறுசுறுப்பாலும் சக்தியாலும் அவள் ஈர்க்கப்பட்டாள்.

அடுத்த நாள் காலை இருவரும் சீக்கிரமே கிளம்பினார்கள். அவர்கள் நீண்ட தூரமும் அதிக நேரமும் பறந்தார்கள். மலையுச்சிகளைத் தாண்டி அதற்கப்பால் கீழே சென்றது போல, அவர்கள் கொஞ்ச நேரம் மலைகளுக்குப் பின்னால் காணாமல் போனார்கள். குறைந்தது ஒரு மணிநேரமாவது அங்கே இருந்திருப்பார்கள்.

கடைசியில் பதினோரு மணி சுமாருக்கு, ஒவ்வொருவர் அலகிலும் ஒரு பெரிய வைக்கோலோடு அவர்கள் வீடு திரும்பினார்கள். முட்டையிடுவதற்காக அவர்கள் கூடு கட்டப் போகிறார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய்விடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், ரட்ஜா நாங்கள் மேலும் ஒரு வாரமாவது இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

கடைசி வாரத்தின் ஒவ்வொரு நாளும் நதிக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆபத்தான காட்டில் நாங்கள் சில மணிநேரம் செலவிட்டோம். இரண்டு புறாக்களையும் எடுத்துக் கொண்டு போய், ரட்ஜாவின் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவிலிருக்கும் அடர்ந்த காட்டில் விடுவதற்காகத் தான் இந்தக் காட்டுப் பயணம். வண்ணக்கழுத்து எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய திசையறிவை சோதித்துக் கொண்டு, உயர உயரப் பறந்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தன் துணை மீதான அன்பும், புதிய இடமும் வானிலையும் அவனை பயமென்னும் நோயிலிருந்து குணப்படுத்தி விட்டன.

நம்முடைய எல்லா துன்பங்களுமே பயத்தினாலும், கவலையினாலும் வெறுப்பினாலுமே வருகின்றன என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.. எவனொருவனை இந்த மூன்றில் ஒன்று பற்றிக் கொண்டாலும் மீதி இரண்டும் தானாகச் சேர்ந்துவிடும். எந்தவொரு விலங்கும் தன்னுடைய இரையை முதலில் அச்சுறுத்தாமல் கொல்ல முடியாது. எந்தவொரு விலங்கும் தன்னுடைய எதிரி குறித்த பீதி பீடிக்கப்படாமல் அழிவதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், எதிரியின் இறுதி தாக்குதலுக்கு முன்பே ஒரு விலங்கின் பயம் அதைக் கொன்றுவிடுகிறது.

(தொடரும்…)

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி

(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)

தோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்சியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.

சிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்?/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்!”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா?”

இதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”

எதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).

உயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”

காதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.

இறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்திகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.

நோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும்? அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.

அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள்  அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக  உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று  ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

MAP

Collected and Last Poems

By Wislawa Szymborska

Translated by Clare Cavanagh and Stanislaw Baranczak

447 pp. Houghton Mifflin Harcourt. $32.

நன்றி – நியூ யார்க் டைம்ஸ்