Author: பதாகை

மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

மித்யா

image

கொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. (more…)

தாழ்வான கோவில்

காஸ்மிக் தூசி –

Low Temple-image-1

கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்

ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்

தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக

தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்

அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி

சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு

எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி

வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)

உய்வித்தல்

-அதிகாரநந்தி-

உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்

பாவம்! அது தான்
உய்தபாடில்லை.

ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்

வண்ணக்கழுத்து பகுதி 9: போர்ப் பயிற்சி

நாங்கள் ஊர் திரும்பிய பிறகு, ஐரோப்பாவில் எங்கோ வரப்போகும் யுத்தத்தைப் பற்றிய வதந்தி காற்றெங்கும் நிரம்பியிருந்தது. இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், வண்ணக்கழுத்துக்கு போர்ப் பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். ஒருவேளை பிரிட்டிஷ் போர்த் துறை சார்பில் தூது செல்ல அவன் அழைக்கப்பட்டால் இப்பயிற்சி அவசியமானதாக இருக்கும். வடகிழக்கு இமாலயத்தின் தட்பவெட்பநிலைக்கு அவன் பழக்கப்பட்டுவிட்டதால், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அவன் ராணுவத்தின் இன்றியமையாத தூதுவனாக இருக்கமுடியும். இன்றும் கூட, கம்பியில்லாத் தந்தி, வானொலி போன்றவை இருந்தாலும் கூட எந்தவொரு படைக்கும் தூதுப் புறாக்கள் இல்லாமல் முடியாது. இந்தக் கதை தானாக விரியும் போது இந்த விஷயங்களெல்லாம் உங்களுக்குப் புரியவரும்.

போருக்கான தூதுப் புறாக்களைப் பயிற்றுவிக்க நானாகவே வகுத்துக்கொண்ட ஒரு திட்டத்தைப் பின்பற்றினேன். அதற்கு கோண்டின் ஒப்புதலும் இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், அந்த வயசாளியும் எங்களுடனேயே நகரத்திற்கு வந்தார். இரண்டு மூன்று நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். பிறகு, கிளம்ப முடிவு செய்தார். “இந்த நகரைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. எந்த நகரத்தையும் நான் விரும்பியதில்லை என்றாலும் இந்த நகரம், ட்ராம் வண்டிகளாலும் மோட்டார் வண்டிகளாலும் என்னை பயமுறுத்துகிறது. சீக்கிரமே இந்த நகரின் தெருப்புழுதியை என் காலிலிருந்து உதறித் தள்ளாவிட்டால், நான் கோழையாகிப் போய் விடுவேன்.. காட்டுப் புலியும் என்னை பயமுறுத்தியதில்லை, ஆனால் ஒருமோட்டார் வண்டி பற்றி அப்படிச் சொல்ல முடியாது. நவீன நகரங்களில் சாலையைக் கடப்பதில் ஒரு நிமிடம் பணயம் வைக்கப்படும் உயிர்களின் எண்ணிக்கை, மிகப்பயங்கரமான காடுகளில் ஒரு நாள் முழுக்க இருக்கும் ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காட்டிலும் அதிகம். போய் வருகிறேன். எங்கே மரங்கள் அமைதியை ஆடையாய் உடுத்தியிருக்கின்றவனோ, எங்கே காற்று மாசும் வாடைகளும் அற்று இருக்கிறதோ, வெட்டி எடுக்கப்பட்ட ரத்தினம் போன்ற வானம் எங்கு  கம்பங்களாலும் தந்திக் கம்பிகளாலும் குறுக்கும் நெடுக்கும் வெட்டப்படாமல் முழுமையாக இருக்கிறதோ, அங்கே போகிறேன். தொழிற்சாலையின் சங்குகளுக்கு பதில் பறவைகளின் சத்தங்களைக் கேட்கலாம், திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பதிலாக அப்பாவி புலிகளையும் கருஞ்சிறுத்தைகளையும் நேருக்கு நேர் பார்க்கலாம். போய் வருகிறேன்!” என்று கிளம்புவதற்கு முன் சொன்னார். (more…)

கண்ணாடிச் சாளரம்

சோழகக்கொண்டல் 

கம்பிகள் இன்னும் சூழாத
கண்ணாடிச் சாளரம் ஒன்று
எனது வீட்டின் சுவற்றில்
இருக்கிறது

மழைக்கு வேர்க்கும் வெளிப்புறமும்
மழைநின்றும் குளிரும்
உட்புறமும் கொண்டு
உள்ளீடற்ற வெளியால் பிரிந்த
இரட்டைக் கண்ணாடிகளால் ஆன
மாபெரும் சாளரம் அது

ஒன்றையொன்று கவிழ்ந்து
அடைகாக்கும் வானவில்களும்
ஒன்றையொன்று துரத்தி
அலைக்கழியும் மேகங்களும் கொண்ட
வானங்கள் அதில்
வரையப்படுகின்றன

பருவங்கள்தோறும் நிறம் மாறும்
கண்ணாடிகள் வழி
கண்காணிக்கின்றன
ஓராயிரம் கண்களோடு
ஒளிரும் இரவுகளும் சூரியன்களும்

காலங்கள் மாறும்தோறும்
உரித்து ஒட்டப்படுகின்றன
புதுப்புது ஓவியங்கள்

இன்னும் திரையிடாமல்
திறந்தே வைத்திருக்கிறேன்
அந்த சாளரத்தை

ஒளியும் இருளும்
உள்நுழைய இருக்கும்
ஒற்றைவழி அதுதானே
என் வீட்டிற்கு.

ஒளிப்பட உதவி – Wyn-Lyn Tan