Author: பதாகை

சோஷியல் ரியலிஸ புலனாய்வு – காலத்துகள்

காலத்துகள் 

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு சொல்றா ஸார்’ என்று கான்ஸ்டபிள் வய்யின்  குரல் கேட்க வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘கத்தாதையா, தெருல இருக்கறவங்க நான் தான் காரணம்னு நினைக்கப் போறாங்க’

‘திடீர்னு இப்படி சொல்றா ஸார், என்ன பண்றதுன்னே புரியலை’

‘உன் நிலைமை எவ்வளவோ பரவயில்லையா’

‘என்ன ஸார் சொல்றீங்க’

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணிட்டு , இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா. என் ரெண்டு பசங்களும் அவன் கூட தான் ஒட்டுதலா இருக்காங்க, என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறாங்க.’

‘ஏன் ஸார்’

‘நான் மொடாக் குடிகாரனாம், வேலை வேலைன்னு குடும்பத்தை கவனிக்காம இருந்துட்டேனாம், தனியா வாழத் தான் லாயக்காம்’

‘நீங்க டீடோலர் ஆச்சே ஸார். தவிர நம்ம எழுத்தாளர் நாலஞ்சு மாசத்துக்கு ஒரு முறை தான் ஒரு கேஸை கொடுக்கறார், மத்த நேரத்துல நீங்க ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவீங்களே ஸோ வேலை பளுவும் கிடையாது. என்ன ஸார் நடக்குது,   நம்ம  லைப் ஏன்   இப்படி தலைகீழா மாறிப் போச்சு’

‘புது கேஸ்யா’

‘புரியலை ஸார்’

‘இந்த தடவை ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளின் பாணில இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு எழுத்தாளரோட ஐடியா. ஸ்காண்டிநேவியன்/நார்டிக் நுவார் புனைவுகளில் வரும் போலீஸ்காரன்   எல்லாம் இப்படித்தான் குடிகாரனா, உலகத்தின் மொத்த சுமையையும் சுமப்பவனா, குடும்பத்திலிருந்து பிரிந்தவனா, யாருமற்றவனா, ஆனா அதே நேரம் அறவுணர்ச்சி உள்ளவனா இருப்பாங்க, அதான் நம்மையும் இப்படி மாத்திட்டார்’

‘இப்ப என்ன ஸார் பண்றது’

‘இந்த மாற்றத்தை நாம ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை. புனைவுலகில் வாழ்கிறோம் என்பதால் நம்மை பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க முடியாது. நாமும் மனுஷங்க தான், நமக்கும் உணர்ச்சிகள்  இருக்கு, இதை நான் இப்படியே விடப் போறதில்லை’

‘என்ன செய்யப் போறீங்க’

‘அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப் போறேன்’

‘ஸார், இந்த வரியை இப்ப நிறைய பேர் யூஸ் பண்றாங்க தான், ஆனா  இந்த இடத்துல பொருத்தமா இருக்குமா…’

‘ஏன் இருக்காது. அதிகாரத் திமிருல, காலனியாதிக்க மனநிலைல, எழுத்தாளரும் பாத்திரங்களும் கலந்தாலோசித்து தான் எந்த முடிவையும் எடுக்கணும் என்ற   பெடரலிஸ தத்துவத்தை மதிக்காம எழுத்தாளர் என்ன வேணும்னாலும் செய்வார், அதை நாம பொறுத்துக்கணுமா. ‘

 

‘பெடரலிஸம், காலனியாதிக்கம் எல்லாம் இங்க எங்க வந்ததுனு   உங்களை நான் கேட்க மாட்டேன், என் டிவோர்ஸ் பிரச்சனை தீர்ந்தா சரி, ஆனா அவர் கிட்ட நாம எப்படி பேச முடியும்… நாம அவரோட எண்ணங்களின் வெளிப்பாடு தானே, அவரை  எப்படி மீற முடியும்?’

 

‘எதற்காக அவரிடம் பேச வேண்டும். இது  நம் உணர்வு, நம் உரிமை, நாமே பறித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்பார்டகஸ்  போல்  புரட்சி செய்து , உலகமெங்கும் உள்ள   இரக்கமற்ற எழுத்தாளர்களின் அரக்கத்தனமான தளைகளில் சிக்கியிருக்கும் புனைவுலக மாந்தர்களை  விடுவித்து, நம் ‘பாத்திர’ இனத்திற்கே விடியலைத் தருகிறேன் பார், போர் போர் …’

‘போர்லாம் வீட்டுல முடங்கி, விடியல் வந்து இரண்டு வாரம் ஆயிடுச்சு ஸார்’

‘என்னையா முனகற’

‘ஒண்ணுமில்லை ஸார். நீங்க இப்ப பேசின தமிழ் வேற மாதிரி இருந்தது’

‘ஸ்பார்டகஸ் பத்தி குறிப்பிட்டேன்ல, அதான் மொழி கொஞ்சம் மாறிடுச்சு’

‘ஓகே ஸார் , விடியல் வந்ததால இன்னிக்கு  கேஸ் கிடையாது இல்லையா, கிளம்பறேன். நீங்க என்னதான் சொன்னாலும், வைப்  வீட்ல தான் இருக்கான்னு கன்பர்ம் பண்ணினாத் தான் நிம்மதியா இருக்கும்’

‘நோ, இன்னிக்கும்  வேலையிருக்கு’

‘எழுத்தாளர் வேற கேஸ் தரப்போறாரா ஸார்’

‘இல்லை, இந்த முறை நாமே புலனாய்வு செய்யறோம்’

‘அதெப்படி முடியும் ஸார்’

‘அந்தாளு உருவாக்குகிற கேஸை விட நாம பெட்டரா பண்ணலாம். ‘

‘என்ன செய்யப் போறீங்க’

‘பூட்டின ரூம்ல கொலை, பணக்காரங்க வீட்ல பஞ்சமாபாதகம்னு நிஜத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மேட்டிமைத் தன்மை கொண்ட  கேஸ்களை விசாரிச்சது போதும். யதார்த்தத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்வோம். ரத்தமும் சதையுமா சோஷியல் ரியலிஸ க்ரைம்’

‘ஸார் ..’

‘இரு இரு, இங்க இன்னொரு வார்த்தை யூஸ் செஞ்சா இன்னும் பொருத்தமா இருக்கும், பூர்வஜாவோ, பூர்வஷாவோ, மிடில் க்ளாஸை குறிக்கிற பிரெஞ்சு வர்ட்.. ‘

‘எனக்கு நிரவ் ஷா, அமித் ஷா தான் ஸார் தெரியும்’

‘பாண்டில இருந்துட்டு நமக்கு அது தெரியலைனா அசிங்கம்யா’

‘..’

‘ஞாபகம் வந்துடுச்சு, … பூர்ஷ்வா. இந்த வார்த்தையை இங்க எப்படி பொருத்தலாம்னா…’

‘இப்ப அது முக்கியமில்லை ஸார். நம்ம கிட்ட கேஸ் வந்தா தானே இன்வெஸ்டிகேட் பண்ண முடியும், அதை நீங்கள் யோசிக்கலைன்னு நினைக்கறேன்’

‘அதெல்லாம் தேவையில்லை, இப்ப சும்மா ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வருவோம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சா போதும், ஏதாவது க்ரைம் கண்ணுல படும். கெளம்பலாம் வா’

‘இது லாக்டவுன் டைம், இப்ப இது தேவையா, கொஞ்சம் நிதானமா யோசிக்கலாமே’

‘யோவ், நான் சொல்றபடி செய், அது போதும் ‘

‘இப்ப மட்டும் அதிகாரத்தை நோக்கி  உண்மையை பேசக் கூடாதா…’

‘என்னய்யா முணுமுணுக்கற ‘

‘ஒண்ணுமில்லை ஸார் ‘

 

oOo

ஜவஹர் நகர், பொன் நகரைக் கடந்து அந்தோனியார் கோவில் தெருவினுள் நுழைந்தார்கள்.

‘நில்லுயா’

‘..’

‘நீ ஒண்ணுத்தையும் கழட்ட வேண்டாம்’ ஆங்காரத்துடன் ஒலித்த பெண் குரல். சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அதே குரல்

‘படிடீ’ என்று இறைஞ்சலாக கேட்டது.

‘கேஸ் கிடைச்சாச்சு யா’

‘ஸார் …’

‘இந்த வீட்ல குழந்தைகளை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்காண்டிநேவியா நாடுகளில் இது க்ரைம்’ என்றபடி குரல் வந்த வீட்டின் கேட்டை திறந்து சென்ற எக்ஸ், காலிங் பெல்லை அழுத்தினார்.

சிறிதாக திறக்கப்பட்ட கதவினூடே மாஸ்க் அணிந்த முகம்.

‘என்ன வேணும்’

‘நாங்க டிடெக்டிவ்ஸ்’

கதவு நன்றாக திறக்கப்பட உள்ளே சென்றார்கள். ஹாலில் பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய சிறுமி.

‘நீங்க தானே இப்ப சத்தம் போட்டுக் கொண்டிருந்தது’

‘ஏன் கேக்கறீங்க?’

‘குழந்தைகளை இப்படி துன்புறுத்துவது தப்பு. அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல அவங்களை ஈடு படுத்துங்க, அதை விட்டுட்டு படி படின்னு கொடுமைப் படுத்தாதீங்க.’

‘உங்களுக்கு இவளைப் பத்தி என்ன தெரியும்’

‘எல்லா குழந்தைகளுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும், அவங்களை அதுல ஈடுபடுத்தணும்’

‘இவ கிட்ட என்ன இன்ட்ரஸ்ட்னு கேட்டுப் பாருங்க’

‘உனக்கு என்னம்மா பிடிக்கும்’ என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கேட்டார் எக்ஸ்.

‘மாஸ்டர் பிடிக்கும்’

‘ரொம்ப நல்ல விஷயம்தானேங்க, வாத்தியாரை பிடிக்கும்னு சொல்ற பசங்க ரொம்ப கம்மியாச்சே, இதுக்குப் போய்…’

‘ஸார், மாஸ்டர்னு அந்தப் பொண்ணு சொன்னது டீச்சரை இல்ல, அந்தப் பெயர்ல …’

‘அப்படியா சொல்ற’

‘ஆமாம் ஸார்’

‘…’

‘சினிமா கூட ஒரு ஆர்ட் தானே, அதுல ஈடுபாடு இருப்பது தப்பில்லையே’

‘…’

‘வெகுஜன சினிமாவை ஒட்டு மொத்தமா ஒதுக்க வேண்டியதில்லையே, மிடில் ஆப் த ரோட் சினிமா கூட இருக்கு’

‘..’

‘ஸார், அந்தம்மா பார்வையே சரியில்லை, நாம கெளம்பறது நல்லது’

‘சரிங்க, பெத்தவங்க உங்களுக்கு அக்கறை இல்லாமையா இருக்கும், பாத்துக்குங்க’

‘வந்துட்டானுங்க கோமாளிங்க’

oOo

காவேரி நகரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஸார், தடுப்பூசி, டெஸ்ட் எடுக்க வந்த கூட்டம் நின்னுட்டிருக்கு, திரும்பிடலாம்’

‘ஏன்யா பயப்படற, நாம ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஐடியா தான்யா, நமக்கு எந்த பிரச்சனையும் வராது’

‘அப்படியில்லை ஸார். புனைவுலக மனிதர்கள் என்றாலும் நிஜ உலகுக்கு வந்துட்டா அவங்க படற கஷ்டத்தை நானும் பட வேண்டியிருக்கலாம். நம்ம புராண அவதாரங்கள் கூட மனித உருவில் எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டிருக்காங்களே’

‘அத விடு, அங்க பாரு இன்னொரு கேஸ், சூழியல் குற்றம்’ என்று எதிரே சுட்டினார் எக்ஸ்.

அவர்களுக்கு முன்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் அதை நிறுத்தி, மாஸ்கை கழற்றி தெருவில் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பின் மாஸ்கை கூர்ந்து கவனித்தவன், அதை முகர்ந்து பார்த்தான். அதையும் கீழே போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனின் அருகே சென்ற எக்ஸ்

‘இப்படி செய்யறது தப்பில்லையா ஸார், சுற்றுச் சூழலை இப்படி கெடுக்கறீங்களே. இதைப் பத்தியெல்லாம் எவ்வளவோ எழுதறாங்க, சொல்றாங்க  அப்படியும் நீங்க இப்படியிருந்தா எப்படி’ என்றார்.

‘எனக்கும் என்விரான்மென்ட் பத்திலாம் தெரியும்’

‘என்ன தெரியும்’

‘பூவுலகின் நண்பர்கள் பெயரை கேள்விப் பட்டிருக்கேன், ஒற்றை வைக்கோல் புரட்சி புக்கை நாலு தடவை படிக்க முயற்சி செஞ்சிருக்கேன்  , க்ளைமேட் சேஞ்ச் பத்தி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணறேன், , நம்மாழ்வார் போட்டோவை வாட்ஸாப் ஸ்டேட்டஸா வைக்கறேன், இது போதாதா. நான் ஒண்ணு கேக்கறேன், ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கே அது உனக்கு தெரியுமா’

‘இதெல்லாம் சரி, நீங்க சொல்றதுக்கு நேர் மாறா செய்யறீங்களே. இப்படி பொது இடத்துல துப்பலாமா, மாஸ்க்கை வேற அப்படியே தூக்கி போட்டுட்டுப் போறீங்க’

‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எல்லாம் எனக்கும் தெரியும். அதுக்காக சளி முட்டிக்கிட்டு வந்தா, சேர்த்து வெச்சு வீட்ல போய் துப்பணுமா.   மாஸ்க்ல வேற சளி கொஞ்சம் சிந்திடுச்சு,  அப்படியும் அதை போட்டுக்கிட்டு, குமட்டிக்கிட்டே போகணுமா. மொதல்ல இதெல்லாம் கேக்கறதுக்கு நீங்க யாருன்னு சொல்லுங்க’

‘டிடெக்டிவ்ஸ்’

‘ஸார், இந்தாளு சளி, கிளின்னு கிலியேத்தறான், கெளம்பிடலாம்  வாங்க’ என்று வய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டிடெக்டிவ்ஸாம், லூசுங்க’ என்று முணுமுணுத்தபடி சளி ஆசாமி வண்டியை இயக்கி கிளம்பினான்.

oOo

மெயின் ரோட்டை அடைந்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை கடந்து, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நெருகினார்கள். வெளியே நின்று கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் இவர்களை நோக்கி வந்தார்கள்.

‘லாக்டவுன் பீரியட்ல என்ன வெளில சுத்திட்டிருக்கீங்க’

‘நாங்களும் டிடெக்டிவ்ஸ் தான்’

‘எந்த பீட்’

‘நிஜவுலகும் புனைவுலகும் இணையும் ட்வைலைட் ஸோன் பீட்’

‘என்னய்யா ஒளர்ற’  என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, கூட இருந்தவர்

‘ட்வைலைட்னு ரத்தக் காட்டேரி படம் பார்த்திருக்கேன் ஸார், இவனுங்க மந்திர தந்திரம் பண்றவங்களா இருக்கலாம்’ என்று கூறினார்.

‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க ப்ரைவேட்  டிடெக்டிவ்ஸ்’ என்றார் வய்.

‘பொண்டாட்டி யார் கூட போறா, புருஷன் எவ கூட இருக்கான்னு பாலோ பண்ணி போட்டோ எடுக்கறவங்க தானே’

‘நோ நோ’

‘ஸார், சில பேர் அப்படிப்பட்ட  போட்டோக்களை வெச்சு ப்ளாக்மெயில் கூட செய்வாங்க’

‘என்னய்யா, நீங்களும் அப்படிப்பட்ட கேஸ் தானா’

‘நோ, நாங்க வேற மாதிரி கேஸை தேடி வந்தோம்’

‘எனக்கு சந்தேகமா இருக்கு ஸார், பட்டப்பகல்ல உலாத்தறாங்க, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்’

‘நாங்க சொல்றது உண்மை ஸார்’

‘ஐடி ப்ரூப் காட்டுங்க’

‘…’

‘என்ன?’

‘..’

‘இவங்க கிட்ட எந்த டாகுமென்ட்ஸ் இல்லை போல, ஆண்ட்டி-நேஷனல்ஸ்னு சந்தேகமா இருக்கு .. என்கவுன்ட்டர் பண்ணிடலாமா  ஸார்?’

எக்ஸும், வய்யும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

Ooo

மீண்டும் பொன் நகரை அடைந்த பின் தான்  ஓடுவதை நிறுத்தினார்கள். தடுமாறாமல் நிற்பதற்காக அருகேயிருந்த  போது ஸ்வச் பாரத் குப்பைத் தொட்டியை பிடித்துக் கொண்ட எக்ஸ், மாஸ்கை கழட்டி மூச்சு வாங்கிக் கொண்டே

‘என்னய்யா இது , நாமே தனியா புலனாய்வு பண்ணி, ரியலிஸ குற்றப் புனைவை உருவாக்கலாம்னா இப்படியாயிடுச்சே.’ என்றார் எக்ஸ்

‘..’

குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தார் வய்.

‘வாசகாஸ் ஏமாற்றம் அடைவாங்களே, அதை நினைச்சாத் தான் ரொம்ப வருத்தமா இருக்கு’

‘அப்படியெல்லாம் ஆகாது ஸார்’ என்றார் வய்.

‘என்னையா சொல்ற ‘

‘இது குற்றப் புனைவு தான்னு வாசகர்களுக்கு புரியும் ஸார்’

‘எப்படி’

‘..’

‘சொல்லுயா’

‘எழுத்தாளரோட குற்றப் புனைவுகள் சிலாகிக்கும் படியா இருக்காது தான், அதுக்காக நாமளே தனியா புலனாய்வு பண்ணப் போறோம்னு கிளம்பியதே பெரிய க்ரைம் தான்னு ரீடர்ஸுக்கு தெரியும். ஸோ, இது குற்றப் புனைவு தான்’

 

 

முந்தைய புலனாய்வுகள்:

 

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

பேய் விளையாட்டு- காலத்துகள் சிறுகதை

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

முகம் – லெ ரா வைரவன்

வைரவன் லெ ரா

ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம், அழகேசன் கடையில் வெளியே கயிரில் தூக்கில் தொங்கியப்படி திணறும் தினசரிகளை கடக்காமல் காலை எட்டறை நகர்ந்து சென்றதில்லை. வாய் சவடால்கள் நிறைக்கும் அரசியல் வசைகள், நடிகையின் தொப்புளை வருடும் வயதான விரல்கள் எல்லாமுமே நிறைந்த குப்பை மேடு. அன்றைக்கும் நாள் அப்படியே கடந்திருக்க வேண்டும்.

கடுக்கரை நுழைய வேண்டுமானால் குறத்தியறை மலைக்குன்றை கடக்க வேண்டும். வாழைத் தோப்பும், சாலையோரம் கூடவே பக்கவாட்டில் ஓடையாறு ஒன்றும் உண்டு. பகலில் யாரோ குளித்தவாறே, பேசியப் படியும், சிரித்தப் படியும் இருப்பாராம். கடுக்கரையை ஒழுகினசேரி கலைவாணர் தெரு இளவட்டம் ராஜுவின் கதைகளை கேட்டே அதன் முடுக்குகளையும், ஓடு வேய்ந்த சுத்துக் கட்டு வீடுகளையும் கண்டுவிட்டனர். அப்படித்தான் தட்டு வீட்டு அய்யப்பன் அவனின் அத்தை மகள் சடங்குக்கு செல்லும் போது ஒவ்வொரு முடுக்கிலும் எந்த இசக்கி இருக்கிறாள் என அம்மையிடம் சரியாய் சொன்னானாம்.

விஜி பவனம், தட்டு வீட்டில் மேலே விஜயாவின் குடும்பம் இருக்க, மொத்தம் இரண்டு மாடி வீட்டில் கீழே தரைத் தளத்தில் இரண்டு வீடு உண்டு. முதல் மாடியில் அவளின் அக்கா, அத்தானுடன் சண்டைப் பிடித்து பிள்ளைகளுடன் தனியாய் இருக்கிறாள். கீழே ஒரு வீட்டில் பத்மினி மிஸ் டியூஷன் எடுத்தாள். நானும் அங்கேதான் படித்தேன். நெடுனாள் பூட்டிக் கிடந்த பக்கத்து வீட்டில் ராஜு குடியேறினான். நான் ஒன்பது படிக்கும் போது, அவன் எட்டாவது படித்தான். என் வயது தான், அவன் அப்பா மனம் குழம்பி கோம்பையாய் ஆகிவிட்டார். அதே வருடம் அம்மா அவளை விட பத்து வயது இளையவன் உடன் எங்கோ செல்ல, அந்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டான். தெரியுமா! ராஜுவை தவிர்த்து அவளுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகள். ஓடி போகும் போது இரண்டையும் கூட கூட்டிப் போனாள். ராஜு அப்பா வீட்டில் இருக்க நேர்ந்தது. வீட்டை விட முடுக்குகளும், குன்றில் இருக்கும் சாஸ்தாவும் தான் எல்லாமுமே. பேச பேசக் கதைகள் அங்கிருந்து தான் வரும்.

பின்னர் ஒரு வருடம் கழித்து, அம்மா திரும்பி வந்தாள். சொந்த ஊரை விட்டு, ராஜுவையும் உடன் அழைத்து விஜி பவனத்தில் இடப்பாகம் இருக்கும் வீட்டில் குடியேறினார்கள். விட்ட படிப்பை தொடர, மீண்டும் எட்டில் ஆரம்பித்தான். நிஜத்தில் கூட இருக்கும் அவரையே நாங்கள் அவர்கள் அப்பா என நம்பினோம். அந்த சனிக் கிழமை கிரிக்கெட் ஆட மணி வராமல் அவன் சித்தி வீடு திருநந்திக்கரைக்கு செல்ல, பதினோன்றில் ஒருவர் குறைய கார்த்தி ராஜுவை அழைத்து வந்தான். சுமாரான ஒரு ஆட்டம் தான், ஆனால் அவனின் நளியும், இயல்பும் பிடித்துப் போக, விடுமாடன் கோவில் திண்டில் அவனும் ராத்திரி இருப்பான். ரெட்டைத் தண்டவாளம் வேப்பமூட்டில் அவனுக்கும் சிகரெட்டில் இரண்டு இழுப்பு உண்டு. அன்றைக்கு ரெண்டு ருபாய் கூடக் கிடைக்கவே இந்த கதையெல்லாம் சொன்னான். அம்மா பாவம் தான், இரண்டாவது கட்டியவனை அவனுக்கு பிடிப்பதில்லை. தம்பிகள் அவனை அப்பா என்றே அழைத்தனர். பின்புலம் தெரிய, கலைவாணர் தெருவில் பசங்க அனைவரின் வீட்டிலும் ராஜு மேல் தனிப் பிரியமுண்டு. சாப்பாடு, ஒரே வீட்டில் உறக்கம்,ஒருப் படி மேலேறி தீபாவளிக்கு பழனி அண்ணன் அவனுக்கு எடுத்த அதே நிறத்தில் சட்டை, பேண்ட் வாங்கி கொடுத்தான்.

காட்டுபுதூர் மலையில் தேன் எடுத்த கதை, காளிகேசம் அருவியில் மலைபாம்பு தலையில் விழுந்த கதை, சாஸ்தா கோயில் ஊட்டுப் படைப்பு எல்லாமும் சேர்த்து ராஜு பெயரே மாறி, அவனை கடுக்கரை என்றே அழைக்க ஆரம்பித்தோம். சரி, சனிக் கிழமை பள்ளி நடத்தலாம் வாய்ப்புண்டு. ஆனால் எல்லா சனியும் இருக்குமா? சந்தேகம் வரவே காதல் கதையையும் சொன்னான். கௌரி, சினேகா மாதிரி இருப்பாளாம். அவன் குறத்தியறை அரசு மேல்நிலை பள்ளியில் படித்தான். அவள் எட்டு வரை அவனோடு படித்திருக்கிறாள், ஒன்பது முதல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி யில் படிக்கிறாளாம். ஆக, சனிக்கிழமை அவளைப் பார்க்க போகிறான், கள்ளப்பயல். கௌரி, பள்ளியில் பார்க்காத கண் உண்டா. மதியம் உணவு முடித்து பெண்பிள்ளைகள் , கலையரங்கத்தில் இருப்பார்கள். பசங்க அப்பக்கமாய் போவது சத்தியமாய் அவளையும் பார்க்கத்தான். கடுக்கரையின் கதையில் பொய்யுமுண்டு. ஆனால் கௌரி அத்தனையும் நிஜம். சினேகா தான், அதே சிரிப்பு. கடுக்கரையும் அழகுதான், இமைவொட்டும் மெல்லிய புருவம். கூர் மூக்கு, அழகாய் இருப்பான்.

ஒரு வருடம் கழிந்ததே தெரியவில்லை. இடையிடையே அவன் வீட்டில் சண்டை நடக்கும். அவன் கண்டுகொள்வதில்லை. தம்பிமார்கள் இவனிடம் பெரிதாய் பேசுவதில்லை. அப்பா என்று இவன் அவனை அழைத்ததே இல்லை. எங்களிடம் அவனை ஒருநாள் அடிப்பேன் என்று சத்தியமே செய்தான். கடுக்கரை அடிக்கடி கோம்பையாய் மாறிய அப்பாவை பார்ப்பதுண்டு. அம்மா தான் காரணம் என்பான். இந்த பழக்கத்தில் தான் அப்பா இப்படி ஆகிவிட்டார் என்பான். சிலசமயம் அப்பாக்கு எதுவுமில்லை. ஊர் உண்மையை அறிந்தால் என்ன பேச்சு பேசும் எனப் பயந்தே அப்பா நடிக்கிறார் என்பான். பின் அவர் கடுக்கரையை விட்டு மீனாட்சிபுரத்தில் நகைக் கடைகளில் இரவு காவலாளி வேலைப் பார்த்தார். கடுக்கரை பைசா தேவைப்படும் போது அப்பாவை பார்ப்பான். அவனைப் பார்த்தால் நடிப்பை மறந்து விடுவாராம்.

அதுவும் ஒரு சனிக்கிழமை, கௌரியை பார்க்க கடுக்கரை செல்லவில்லை. காரணம் கிரிக்கெட் என்றே நினைத்தோம். உண்மையில் அன்றைக்கு வீட்டில் பயங்கர சண்டை. அம்மாவை இரண்டாவது கட்டியவன் அடித்து விட்டான். சண்டையோ பெரிதாக, ஆவணி மாதம் என்பதால் பெருமாள் மண்டபத்தில் பொருட்காட்சி நடக்கும், அங்கு தம்பிகளை பைசா கொடுத்து அனுப்பிவைத்தான். வீட்டில் அம்மாவும், அவனும் மாத்திரமே. வெளியே செல்லவும் இவனுக்கு தோணவில்லை. எங்களுடன் கிரிக்கெட் ஆட வந்துவிட்டான். ஆடிமாத மிச்ச காற்று பயங்கரமாக வீசியது. நான் பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றேன். கடுக்கரை கீப்பிங் செய்தான். தூரத்தில் பகவதி வேகமாய் ஓடி வந்தான். என்னிடம் அவசர அவசரமாய் ஏதோ கூறினான். கடுக்கரையின் அம்மா தூக்கில் தொங்கி விட்டாள் என்பது மாத்திரமே புரிந்தது.

எல்லோரும் சென்றோம். கடுக்கரை இரண்டாவது கட்டியவனை அடித்தான். அவனோ பித்து பிடித்தவன் போல உளறினான். தெருவில் புரண்டு அழுதான். தம்பிமார்களை யாரோ அழைத்து வர, ஊர்ப் பெரியவர் மாறாசா மாமா, போலீஸ் கேஸ் வேண்டாம் என்றார். நடந்தவை பல, எதுவுமே சொல்லிவைத்தார் போலவே நடந்தது. தூக்கில் தொங்கியது மதியம் இரண்டு மணி, நாலு மணிக்கு பாடை தூக்கியாச்சு. கடுக்கரை கூடவே பசங்க இருந்தோம். சொந்தமென சொல்லி வந்த நான்கு பேரும் அன்று இரவே மூவரையும் அழைத்து கூடவே சென்று விட்டனர். அதன் பிறகு கடுக்கரை எப்போதாவது தெருவிற்கு வருவான். அன்றைக்கு ஏதோ வீட்டில் உறங்குவான்.

ஒன்பதை முடிக்கவில்லை, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். கடுக்கரை ஷேர் ஆட்டோவில் கண்டக்டர் வேலை பார்த்தான், அது ராமன்புதூர் ரூட். மூன்று வருடம் கழித்து நான் பழவிளை பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். செல்லும் வழியில் அடிக்கடி சந்திப்போம். பசங்க வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் கடுக்கரையும் ராத்திரி சரக்கடிக்க வருவான். வளர வளர சிகரெட் பீருக்கு முன்னேறி விட்டது. கௌரி பேசுவது இல்லையாம் வருத்தப்படுவான். அப்பா அம்மா இறந்ததும் நிஜத்தில் மனம் பிசகி ஒருமாதிரி ஆகிவிட்டராம். இப்போது அவனும், அப்பாவும் சேர்ந்து இருக்கிறார்கள். தம்பிகள் ஊரில் இருக்கிறார்கள். முன்னர் போல பேச்சில் நளி அடிப்பதும் இல்லை, புரிவது போல அவன் பேசுவதுமில்லை. பின்னர் அவனைப் பார்க்கவேயில்லை.

காலை எட்டறை மணி, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் அழகேசன் கடை பேப்பரை நான் படித்திருக்க கூடாது. ‘அடையாளம் தெரியாத வாலிபர் நாகர்கோவில் பூங்காவில் விஷம் அருந்தி தற்கொலை’ கூடவே இருந்த புகைப்படம் எங்கள் கடுக்கரையின், ராஜுவின் முகம். வெறும் முகமல்ல நியாபகங்கள்.

இரோஸ், தனடோஸ் உளவியல் சிந்தனையில் ‘ஆட்டம்’ – முனைவர் ம. இராமச்சந்திரன்

“உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன” – எம். கோபாலகிருஷ்ணன்.

மனித உறவுகளின் மர்மங்களில் சற்று வெளிச்சம் பாய்ச்ச எத்தனிக்கும் முயற்சியில் தோன்றியவை இலக்கியங்கள். நீண்ட மனித உறவு நிலையில் மனமும் காமமும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. மனம் சார்ந்த ஆய்வு உளவியலுக்கு வித்திட்டது. உளவியல் தனது நீண்ட ஆய்வில் காமத்தின் அடியாழத்தைத் தொட்டுவிட முயன்றது. மனித உறவுகளின் அனைத்துச் செயல்பாடுகளும் பாலுணர்வு நடத்தையால் தீர்மானிக்கப்படுவதைச் சிக்மண்ட் பிராய்ட் தனது ஈரோஸ் மற்றும் தனடோஸ் கொள்கையால் விளக்கியுள்ளார். இக்கொள்கையின் வாயிலாக சு. வேணுகோபாலின் ‘ஆட்டம்’ நாவல் இங்கே உளப்பகுப்பாய்வு நோக்கில் வாசிக்கப்படுகிறது செய்யப்பட்டுகிறது.

“பாலுணர்வு நடத்தை என்பது உயிரியல் சார்ந்த, உள்ளத்துள் ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாகும்.”

ஈரோஸ் (பிறப்பு) – இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வியல் ஊக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. அதாவது பாலுணர்வு நடத்தை என்பது மனிதன் இயற்கையில் தொடர்ந்து வாழ்வதற்கான, இருத்தலுக்கான ஊக்கச் சக்தியாக விளங்குகிறது. மேலும் வாழ்வதற்கான ஆற்றலையும் இன்பத்தையும் தந்து மனிதச் சமூகம் உருவாவதற்கும் அதைக் கட்டமைப்பதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது என்று சிக்மண்ட் பிராய்ட் கூறுகிறார்.

தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு, சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. பாலுணர்வு நடத்தை மனிதனின் தன்முனைப்பு செயல்பாட்டை உடைத்தெறிந்து விடும் என்று கூறிவந்த நிலையில் அவ்வாறு இல்லாமல் மனித மனதின் இறப்புச் சிந்தனையிலிருந்து (தனடோஸ்) அவனைப் பாதுகாப்பது இரோஸ் என்று சிக்மண்ட் பிராய்ட் கூறினார். ஆக தனடோஸ் என்ற இறப்பை நோக்கிய பயணத்திலிருந்து மனிதனை விடுபட செய்யும் எதிர்வினையே இரோஸ் என்ற காதலும் காமமும்.

இரோஸ் என்பது ஆன்ம சக்தியைத் தொடக்கத்தில் தந்தாலும் பிறகு படிப்படியாகக் கீழ்நோக்கி இழுத்துச் சென்று விடுகிறது என்று பிளாட்டோ கூறுகிறார். இவரின் கருத்திற்கு எதிர்நிலையாக பிராய்ட், இரோஸ் என்பது உடற் சக்தியைத் தருகிறது, மேலும் படிப்படியாக உயர்ந்து வாழ்தலுக்குத் தேவையான ஊக்கத்தைத் தருகிறது என்று கூறுகிறார்.

ஆட்டம் நாவலின் முதன்மை கதாபாத்திரம் வடிவேல். சிறந்த கபடி வீரன். வீரபாண்டி ஊரில் ஒவ்வொரு ஆண்டும் கோமாரியம்மன் திருவிழாவில் முக்கிய நிகழ்வாகக் கபடிப் போட்டி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு இளைஞனையும் வீரனாக மாற்றுவது அவன் சார்ந்த பின்புலத்தில் இயங்கும் பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. கபடி விளையாட்டைக் காண வரும் பெண்களின் பார்வையே ஒரு வீரனைச் சிறந்தவனாக மாற்றுகிறது. அவளின் வருகையும் அவள் நோக்கும் அவனுக்கு வாழ்வதற்கான மிகப் பெரும் ஆற்றலைத் தருகின்றன. அனைவர் மத்தியிலும் அவனை ஏற்பதற்கான எத்தனிப்புகள் அவனது மனதால் திட்டமிடப்பட்டு விளையாட்டில் நுண்மையாக அவனையும் மீறி வெளிப்பட்டு நிற்கின்றன. அவனது மனம் அவளை மயக்குவதிலும் அவளை வியப்படையச் செய்வதிலும் மையம் கொண்டு பெரும் ஆற்றலை அவனுள் உருவாக்கி அவனை மற்றவர்களிடமிருந்து சிறந்தவனாக மாற்றுகிறது. இவ்வாறு வடிவேல் தனது ஆட்டத்தில் வெளிப்படுத்தி நிற்கும் அனைத்து வித்தைகளும் கனகாவைத் தன்னகத்தே ஈர்க்கச் செய்யும் தந்திரங்கள் என்றாலும் மற்றவர்கள் பார்வையில் மட்டுமல்ல அவனது மனதிலும் அது அவனது திறமையாகப் படுவதும் சிந்திக்கத்தக்கது.

பிறகு கனகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டு பல இன்னல்களையும் இழப்புகளையும் பெறுகிறான். அவளோடு வாழ்ந்து காதலின் அனைத்துத் தேவைகளும் தீர்ந்த போதும் அவள் தேவையில்லாத ஊக்கியாக மாறிய நிலையிலும் அவள் மேல் அவனது அளவு கடந்த அன்பு மேலோங்கி மீதி வாழ்க்கையை அவளோடு வாழ்ந்துவிட எண்ணும் நிலையில் அவள் தனது வாழ்க்கையை மற்றவனோடு வாழ்ந்துவிட எண்ணி செயல்பட்ட நிலையிலும் அவனது மனம் இறப்பின் உச்சத்திற்குச் சென்று விடுவதில்லை. “உயிரைப் மாய்த்துக்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை,” என்றும் மீண்டும் அவளோடு வாழ்ந்து விடலாம் என்றும் அவனது மனம் எண்ணுகிறது. இத்தகைய எண்ணங்களுக்குக் காரணம் அவளுக்காகக் கபடி விளையாட்டில் தான் காட்டிய திறமை, இதனை மதித்து மற்றவர்கள் கொண்டாடிய, கொண்டாடி வருகின்ற விதம், அவளோடு ஊரை விட்டு ஓடி வந்து வாழ்ந்த காதல் வாழ்க்கை என்று அனைத்திலும் அவள் அவனுக்கு ஊக்கச் சக்தியாவே இருந்து வந்துள்ளதைப் பல நேரங்களில் எண்ணி ஏங்குவான்.

மகளோடு ஊர் வந்த பிறகும் மறுமணம் செய்துகொள்ள அவனது தாய் ஏற்பாடு செய்யும்போது தனலட்சுமி தன்னை மறுத்துவிட்டதைக் கேள்விப்பட்டுத் தனது உடலையும் மனதையும் இளமையாக்க அவன் மேற்கொள்ளும் பயிற்சிகளும் அதனை வெளிப்படுத்த அவன் கலந்து கொள்ளும் கபடியும் அவனையே வியப்பில் ஆழ்த்தி மறு சிந்தனை செய்யத் தூண்டினாலும் காமம் அவனை ஆடுகளத்தில் போராடவே தூண்டியது. இந்த வயதில் இளைஞர்களோடு சரிசமமாகக் கபடி விளையாடுவது முழுக்க முழுக்க தனலட்சுமியைக் கவர்ந்து அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மனதின் ஊக்கநிலையே, அவன் அந்த விளையாட்டில் தோற்றுப் போனாலும் அவனது மனத்துக் காம இச்சை அவனை விடுவதாக இல்லை. அடுத்த வீரபாண்டி திருவிழாவில் தனலட்சுமியைத் தனது கபடி ஆட்டத்தால் கவர்ந்து விட வேண்டும் என்ற அவனது வைராக்கியம் அவனது வாழ்தலின் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் பெண் சார்ந்த இருப்பே தீர்மானிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தனது மகளது, ‘அம்மா எப்ப வருவாங்க?’ என்ற கேள்விக்கு வடிவேல், ‘விரைவில் வந்து விடுவாங்க,’ என்று இயல்பாகப் பதில் சொல்கிறான். அவனது மனநிலை கோபங்கள் அற்று, விரோதங்கள் அற்று, வன்மங்கள் அற்று, வேறொருவனுடன் சென்று விட்ட கனகாவைத் தேடிக் கண்டு பிடித்துக் கூட்டிவர எண்ணுகின்ற மனதின் ஆக்கநிலையை அவனது காமம் வெளிப்படுத்தி நிற்கிறது. இங்கே அவனது ஈகோ இறந்து விடுகிறது. தொடர்ந்து வாழ்தலும் கனகாவின் மேல் அவனது ஈர்ப்பும் வாழ்வியல் ஊக்கியாக வெளிப்படுகின்றன.

வடிவேலுவின் தாய் கடின உழைப்பாளியாக இதில் காட்டப்படுகிறாள். கணவன் இறந்த பிறகு தனது வாழ்க்கை முறையைக் கடினமாக மாற்றிக் கொண்டு விடுகிறாள். மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விடுகிறது. எப்போதும் வேலை வேலை என்று தன்னை வருத்திக் கொள்கிறாள். தனது உடல் வெம்மையையும் காம இச்சையையும் மடை மாற்றும் கருவியாக அவள் உழைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். உழைப்பின் மூலம் தனது காமத்தைக் கொன்றுவிட அயராது உழைக்கிறாள். உழைப்பின் வெகுமதி தனது குடும்பத்தை எடுத்துச் செல்வதைக் காணும்போது இதுவே சிறந்த வழி என்று வாழ்தலின் ஊக்கத்தை இதில் பெற்றுக் கொள்கிறாள். யாரோடும் மனவருத்தமில்லை, வெறுப்பில்லை, உழைப்பால் கடந்து செல்கிறது அவளது வாழ்க்கை. இங்கே காமமும் காதலும் வாழ்தலுக்கான ஆக்க ஊக்கிகளாக வினையாற்றுகின்றன.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விளையாட்டு வீரனையும் ஏதோவொரு மூலையில் கண்டு களிக்கும் இரண்டு கண்களே தீர்மானிக்கின்றன. வெற்றியில் மகிழ்ச்சியும் தோல்வியில் அவமானமும் அந்தக் கண்களின் வழியே கண்டடைகிறான் அவன். அவனது ஒவ்வொரு அடுத்தக் கட்ட செயல்பாடுகளும் அந்தக் கண்களில் இருந்தே தொடங்குகின்றன. அவனது மனம் அவளது ஏற்பிற்காக அவனை வீரனாக, கோழையாக, கொடூரனாக மாற்றிப் போடுகிறது. வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் வெற்றி கிடைப்பதில்லை. காலமும் பருவமும் அதனைக் காமத்தோடு சாத்தியப்படுத்துகிறது. மற்ற நேரங்களில் இயல்பான வாழ்தலின் பெரும் உந்துதல் சக்தி காமமும் காதலுமே.

ஊக்கச் சக்தியாகக் காதலும் காமமும் இருப்பதைப் போல அழிவு சக்தியாகவும் செயல்படுவதைப் பிராய்ட் தனது தனடோஸ் கோட்பாட்டின் மூலம் எடுத்துக் கூறுகிறார். வடிவேலின் கபடி விளையாட்டில் ஈர்க்கப்பட்ட கனகா அவனோடு காதல் திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அவளது காமம் அவளது எல்லைக்குள் அடங்க மறுத்து விடுகிறது. விளையாட்டில் அவளைக் கவர்ந்தவன் வாழ்தலில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஏமாற்றவுணர்வு கனகாவை நிம்மதியிழக்கச் செய்கிறது. அவளது மனதின் தேவைகள் மற்றொரு ஆடவனால் நிறைவேற்றப்படும்போது வடிவேல் காணாமல் போகிறான். ஆனால் அவளின் உள்மனம் பெரும் போராட்டக் களமாக மாறுகின்றது. அவளது இந்தச் செயல்பாட்டைச் சமூகம் ஏற்க மறுக்கும் நிலையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள துணியும் மனநிலை அழிவுத்தன்மை கொண்டது.

இதேபோல வடிவேலின் சக விளையாட்டு வீரன் காளையன் வாழ்க்கையில் நடைபெற்ற காமச் செயல்பாடுகள் இதனுடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டும். அவனது சித்திக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்ட காமச் செயல்பாடுகளை மறைக்க முடியாமல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அவளின் அன்பையும் அதீத காமத்தையும் மறுக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் உடன்படுகிறான். கபடி விளையாட்டுக்கென்றே பிறந்தவன் என்று அனைவரும் பாராட்டும் வீரனாக வலம் வந்தவன். “கபடியில் மகா கில்லாடி. எத்தனையோ பேருக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டியவன். விழுந்த காமச் சுழலிலிருந்து அவனால் மீண்டு வரவே முடியவில்லை.” அவனின் உடற்கட்டும் வேகமும் அவளைத் தூங்க விடாமல் செய்துவிட்டது. அவளின் பார்வைக்கு எதிர் பார்வை தர மறுக்கும் வீரனாக அவனிருந்தாலும் அவனது பருவமும் அவளின் தேவையை ஏற்றுக்கொண்டது. ஆனால் இது ஏற்புடைய செயலல்ல. அவனது சித்தி அவனுக்கு ஒவ்வொரு நாளும் நல்விருந்து தருகிறாள். உணவின் சுவையிலும் ஊட்டத்திலும் அவளோடு காம விளையாட்டு அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. அவனுள் குற்றவுணர்வை மெல்ல ஏற்படுத்தி விடுகிறது. சிறு காலத்தில் அவனது கட்டுடல் களைத்து விடுகிறது. “காளையன் மடித்துக் கட்டியிருக்கும் வேட்டிக்குள் தொடைகள் கனத்திருக்கின்றன. நேராக வடிவேல் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து மூச்சுவிட்டான். எப்படியும் நூற்றியிருபது கிலோ இருக்கலாம். கிட்டத்தட்ட இருவரின் எடை” இவ்வாறு நடக்க முடியாத உடல் பருத்தவனாக மாறிவிடுகிறான். அவனைக் காணும்போது காமம் அவனது இருப்பை அழித்துச் சிரிப்பதையும் அவள் இன்றும் தன்னிலை மாறாமல் இருப்பதையும் எண்ணும் போது இங்கே தனடோஸ் செயல்படுவதை உணரலாம்.

சமூகச் செயல்பாடுகளில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன்னை இணைத்துக் கொண்டு பங்காற்றும்போது அவர்களின் எண்ணங்கள் வினையாற்றும் வெளிப்பாடுகள் வியப்பானதாகத, தனித்துவமானதாக, மாறும்போது உளப் பகுப்பாய்வு தன்னிலை பெறுகிறது. உள்ளத்தின் அசைவியக்கத்தை உற்று நோக்கும் நிலையில் ‘ஆட்டம்’ நாவலின் வாழ்வியலும் மனிதர்களும் இக்கோட்பாட்டின் வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்தி வருவதை வடிவேல், கனகா, காளையன் போன்றோரின் வாழ்க்கையால் உணரமுடிகிறது.

மேளம் இசைக்கிறது காற்று பரவுகிறது

கவியரசு

“தென்கிழக்கு திசையிலிருந்து
கொள்ளை கொள்ளும் காற்று வரும்”
சோதிடர் அறிவித்த நாளிலிருந்து
வானத்தில் திசையைக் கிழித்து
வீட்டை நகர்த்துகிறாள்
தூணில் மோதி நாணும் முகம்
முற்றிலும் புதிதாக எழுகிறது
அழிந்தழிந்து பரவுகிறது ஒளி
ஓடுவதும் தாவுவதுமாக
யார் பேச்சிலும் நிற்காத உடலை
பாவாடையால் இறுக்கிக் கட்டுகிறாள்
திறந்து திறந்து பூட்டுகிறாள்
தனக்கு மட்டுமே தெரிந்த உண்டியலை
சிதறியோடும் காசுகளில் எல்லாம்
பூரிப்பு பூரிப்பு பூரிப்பு

*

இவளது ஊரை அறிவதற்காக
வேறொரு ஊரில்
அலைந்து கொண்டிருக்கிறான்
நேர்கோட்டிலும்
குறுக்குத் தெருக்களிலுமென
நீள்கிறது தேடல்
கிரகங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டதால்
வாசலில் உறங்கும் வாழ்வு
விண்மீன்களால் மட்டுமே
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது
நிராகரித்ததும்
நிராகரிப்பதும்
இரண்டு கன்னங்களையும்
கடித்துக் கொண்டிருக்கின்றன
கூந்தல் உதிரும் கொடிய காலம்
மொட்டை மாடியில் மன்றாடுகிறான்
“குற்ற உணர்ச்சியைக்
கொல்லும் வாளை
எவளிடமாவது
கொடுத்தனுப்புங்கள் ”

*

வந்து வந்து செல்லும் காற்றல்ல
ஆழ்கிணற்றில்
நடனமிடும் பெருங்காற்று
என்றுணர்ந்த பொற்கணத்தில்
தேநீரை வீசுகிறாள்
அமர்ந்திருந்த கூட்டம் மிதக்கிறது
தாவிப் பிடித்து முதலில் விழுங்குபவன்
லட்சணங்களின்
பெருஞ்சுவையில் பொலிவடைகிறான்
தனியாகப் பேசுவதற்காக
அழைத்துச் செல்லும் போதே
அனுமதி கேளாமல் தொடங்கிவிடுகிறது
முடிவற்ற சுழல் நடனம்

*

பிடித்திருக்கிறது
பிடித்திருக்கிறது
அவளுக்குள் ஒரு தெரியாத திசை
அவனுக்குள் ஒரு தெரியாத திசை
உள்ளும் புறமுமாய்
பயணம் தொடங்கும்போது
மேளம் இசைக்கிறது
காற்று பரவுகிறது.

சிலை – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

அவர்கள் எங்கள் நாட்டின் மன்னனைக் கொன்றுவிட்டு எங்கள் நாட்டின் எல்லையாகிய பன்றிக்கால் ஓடையில் இருந்த பெரிய பனைமரப் பாலத்தை பெரும் படையுடனே மன்னன் முன்வரத் தாண்டி ஒரு நொடி நின்று அந்த பெண் சிலையைப் பார்த்தார்கள். அது நான் செய்த சிலை. எங்கள் நாட்டின் கலையுச்சம் என்று எங்கள் மன்னனால், நாட்டின் அடையாளமாக, நாட்டின் நுழைவாயிலாக, இருந்த பன்றிக்கால் ஓடைப்பாலத்தின் ஓரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது.

“நாம் இந்தச் சிலையை நம் அரண்மனையின் முன்னிருக்கும் ஆயிரம் சிலைகளில் ஒன்றாக வைப்போம். அதுவே இந்த எளிய நாட்டு பெருமைகளுக்கு நாம் அளிக்கும் கீழ்மை,” என்றவாறு சிரித்தார் அந்நாட்டு அமைச்சர்.

“இல்லை இதை வெட்டி வீழ்த்துவோம், பொழி ஓடுகிறது, பன்றிக்கால் ஓடையில் சென்று இந்த சிலை கடல் சேரட்டும்,” என்று தன் வாளை உருவி வெட்டி வீழ்த்தினான் மன்னன். உண்மையான மனிதவுடல் வெட்டப்படுவதைப் போல் நெளிவுகளுடன் அந்தச் சிலை குழைந்து நீரில் வீழ்ந்தது.

நாங்கள் காலங்காலமாக சிலை செய்பவர்கள். எங்கள் கைகளில் இருக்கும் உளி எங்கள் மூதாதை ஓருவனின் உடைக்கப்பட்ட பெருவிரல் என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை உளியைத் தொடும்பொழுதும் எங்கள் கைகள் நடுங்கும். ஆனால் உளி கல்லைத் தொடும் தருணம் நடுக்கம் இறங்கி கற்களுக்குள் சென்றுவிடும். பின் நிகழ்வது வில்லுப்பாட்டில் கதையின் இடையே வரும் பாடலின் ஓய்வுத்துளியில் கேட்கும் குடமடி ஓசையை மட்டும் எடுத்துத் தொடுத்த ஓர் மாலை. நாங்கள் மருந்துவாழ் மலையின் அருகிலிருந்த சிற்றூரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தோம். உயர்ந்திருந்த மருந்துவாழ் மலையினை ஒட்டி அதனால் மறைக்கப்பட்டிருந்த ஒரு கருங்கல் குன்றின் வடக்கு பக்கமாக எங்கள் ஊர் இருந்தது. நாங்கள் அந்த சிறு குன்றை அய்த்துமலை என்று அழைப்போம்.

அனுமன் சஞ்சீவி மலையை கையில் ஏந்தி தென்னிலங்கைச் செல்லும் பொழுது அதில் முதலில் விழுந்தது இந்த அய்த்துமலை. அதை எடுக்க அனுமன் குனிந்தபொழுது மருந்துவாழ் மலை கீழே விழுந்தது. அனுமன் விழுந்துவிட்ட மருந்துவாழ்மலையை பார்த்துவிட்டு அய்த்துமலையை மறந்துவிட்டார். அய்த்துமலையின் கல் மருந்துவாழ்மலையின் கல்லிலிருந்து வேறுபட்டது. உண்மையில் ஒரு இலையின் திண்ணம் அளவே வருமாறு எளிதாக அதை தீட்ட முடியும். நாங்கள் அரிதாக அந்த மலையின் கல்லெடுத்து சிலை செய்வோம். பன்றிக்கால் ஓடையில் வெட்டி வீழ்த்தப்பட்ட சிலை அய்த்து மலைக்கல்லில் செய்தது. அய்த்துமலையின் ஒரு ஓரத்தில் உதிரிக் கற்களின் கூட்டம் இரண்டு இருந்தன. அவற்றில் ஒன்றின் நிறம் சற்றே பழுப்பாகவும் இன்னொன்றின் நிறம் நல்ல ஆழமான கறுப்பாகவுமிருக்கும். நாங்கள் அந்த பழுப்பு நிற கற்களை தெற்கே சொத்தவிளை கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மணலினால் அமைக்கப்பட்ட குன்றின் மேல் பரப்பி அடுக்கப்பட்ட விறகுகளின் மீது போட்டு, விறகுகளுக்கு தீயிடுவோம். அந்த தீக்குழியிலிருந்து எழும் தீயின் நாக்கு கருமை நிறமுடையதாக இருக்கும். அதில் நாங்கள் அந்த கருமை நிற உதிரிக்கற்களை ஒரு இரும்பு கம்பியால் பிடித்து காணிப்போம். பின் அந்த கறுப்பு உதிரிக் கருங்கல்லை ஆறவிட்டு அதன் மேல் கைகளால் வழித்தால் எண்ணைப் பசை கொண்ட கறுப்பு மை கிடைக்கும். அதை நாங்கள் செய்யும் பொருட்களின் மீது தடவுவோம். அந்த மையின் தன்மையால் அது தடவப்படும் பொருட்கள் அனைத்தும் கொடும் வெயிலடிக்கும் பாலையில் மிகக் குளிர்ச்சியாகவும் பெருமழை பெய்யும் அடர் காடுகளில் வெம்மையாகவும் இருக்கும்.

பிடிக்கப்பட்டுவிட்ட எங்கள் நாட்டினை ஆட்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்த மன்னன் ஈத்தாமொழியில் கூடி துறைவாரியாக அமைச்சர்கள் பணித்தான். உண்மையில் அப்படி துறையெதுவுமில்லை. எங்கள் நாட்டின் ஒவ்வொரு சிற்றூரிலும் விளையும் அல்லது உண்டாக்கப்படும் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு விலையமைத்தல் மட்டுமே இநதத் துறைகளின் பணி. இவற்றில் பணிபுரிந்தவர்களின் வேகம் அச்சமூட்டுவது. சற்றொப்ப இரண்டு திங்களில் இவர்கள் தங்கள் பணியினை முடித்து மீண்டும் ஈத்தாமொழிக்கு வந்த மன்னனின் கூடுகையில் ஒப்பித்தார்கள். அடுக்கடுக்காக ஓலைச்சுவடிகள். மன்னனின் தனிப்பணியாள் அதை வாசித்தான். அந்தப் பொருட்களின் பட்டியலில் உச்ச விலை என்று “கல்லிலைக்கட்டில்” என்ற பொருள் இருந்தது. அதன் விலைக்கும் அதற்கு அடுத்ததாக வந்த பொருளின் விலைக்கும் இடையில் இருந்த வேறுபாடு மன்னனுக்கு திகைப்பை அளித்தது. அவன் மீண்டும் மீண்டும் கல்லிலைக்கட்டிலின் விலையை தனிப்பணியாளிடம் கேட்டான். அந்தப் பட்டியலில் உள்ளூர் காசு அளவைக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டான். இல்லையென்றும் நம் நாட்டின் காசு கணக்கில்தான் இந்த விலை வருகிறதென்றும் சொன்னான்.

“அப்படியானால் இது என்ன பொருள், எங்கே செய்யப்படுகிறது, ஏன் இத்தனை விலை, நான் உடனடியாக அதைப் பார்க்க வேண்டு,ம்” என்று கேட்டான் மன்னன்.

அப்படித்தான் அந்த அழகிய வெள்ளிக்கிழமை காலைப் பொழுதில் எங்கள் ஊருக்குள் தன் தேரில் வந்து இறங்கினான் மன்னன். நாங்கள் எப்பொழுதும் போல் எங்கள் வெள்ளிக்கிழமை காலை பூசையில் இருந்தோம். எங்கள் ஊரின் தெருக்களில் யாருமில்லை. அரிதாக எங்களில் ஒரு பிரிவினர் வேட்டைக்கு செல்லும் பொழுது கூட்டிச் செல்லும் நாய்கள் மட்டும் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தன. ஊரினுள் வந்த மன்னன் அமைச்சர்களைப் பார்த்துக் கேட்டான்.

“இங்கே மாளிகைகள் எப்படி, இந்த சிற்றூரில் எப்படி இத்தனைச் செல்வம்?”

உண்மையில் அத்தனை செல்வம் கொழிக்கும் ஒரு சிறிய சிற்றூரை அந்த மலையின் அடிவாரத்தில் அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

“இத்தனை செல்வம் எப்படிக் கொள்ளை போகாமல் இருக்கிறது?” என்று அடுத்த கேள்வி கேட்டான் மன்னன்.

அவனுடன் வந்தவர்களுக்கு அதற்கான பதில் எதுவும் தெரியவில்லை. மன்னன் சினத்துடன் அவன் அருகிருந்தவர்களை நோக்கிவிட்டுச் சற்றென வெறிகொண்டவன் போல் தேரிலிருந்து குதித்து அருகிலிருந்த மாளிகையின் கொண்டியைத் தென்னி இழுத்து உள்நுழைந்தான். ஆளரவமற்ற அந்த மாளிகையுன் பூசையறையிலிருந்து எழும் ஓசை கேட்டு மூடியிருந்த பூசை அறையின் கதவைத் திறந்தான்.

அதுதான் நான் அவனை நேருக்கு நேராக சந்தித்த முதல் சந்திப்பு. என் கண்கள் வெட்டி உள்வாங்கின. சில பொழுதுகளின் பிறகே அவன் மன்னன் என என் உணர்கொம்புகள் அறிந்தன. பின் உடல் துடிக்க நான் கைகளால் அவனைத் தொழுதேன். மன்னன் வாளெடுத்து அவனைத் தொழுது கொண்டிருந்த என் கைகளை தட்டி விட்டான். பின் என் கண்களை நோக்கி “ஏது உங்களுக்கு இவ்வளவு செல்வம், எங்கே கல்லிலைக்கட்டில்?” என்றான்.

உடல் மரத்து நின்ற என்னை தன் வாளினால் தட்டி, “சொல், எங்கே கல்லிலைக்கட்டில், நான் அதைப் பார்க்க வேண்டும்?” என்றான்.

பின் அருகிருந்தவர்களை நோக்கி, “அவனோடு சென்று கல்லிலைக்கட்டிலைத் தூக்கி வாருங்கள்,” என்றான்.

வேண்டாம் நான் ஒருவனே அதைத் தூக்கி வரமுடியுமென்று சொல்லிவிட்டு மன்னனின் பதிலுக்கு காத்திராமல் தரையில் கால்கள் பாவும் எந்த உணர்ச்சியுமற்று, நான் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்து என் படுக்கையறைக்கு சென்றேன். படுக்கையறையிலிருந்து நான் என் ஒற்றைக் கையால் அதை தூக்கி வருவதைப் பார்த்து அதிர்ந்து குரல் சற்றே அதிகாரம் கொள்ள, “கல் எப்படி இத்தனை மென்மையாக இருக்கமுடியும்? எங்கிருந்து கல் எடுக்கிறீர்கள், எப்படி இத்தனை ஆழமான கருமை கொள்கிறது கல்?” என்றான்.

நான் பதிலெதுவும் சொல்லாமல் அவன் முன் கல்லிலைக்கட்டிலை வைத்தேன்.

தன் வாளை உடையில் மாட்டிவிட்டு கல்லிலைக்கட்டிலை தொட்டவன் திடுக்கிட்டு தன் கைகளை தீயில் பட்டதைப் போன்று உதறியெடுத்துக் கொண்டான்.

“இந்த சித்திரை மாதம் எங்கனம் இத்தனைக் குளிர்ச்சி இந்தக் கல்லில்?”. மீண்டும் ஒருமுறை தன் கைகளால் கல்லிலைக்கட்டிலைத் தொட்டான். பின் பெருஞ்சினம் கொண்டு, “இந்த மாய வித்தைகள் என்னிடம் வேண்டாம், என்னிடம் மாயவித்தை காட்ட முயன்ற இரண்டு வித்தைக்காரர்கள் குடும்பத்தை ஒரே வாள் வீச்சில் கொன்றவன் நான்,” என்றான்.

பின் வேகமாக வெளியேறி அய்த்து மலையின் முன்னால் சென்று நின்றான். அதன் அடிவாரத்தில் கூடாரமிட்டு தங்கியிருந்த பாலைவன மக்களைப் பார்த்து திகைத்தான். அவர்கள் அங்கே எங்கள் உற்பத்திப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அவன் அருகிருந்தவர் ஒருவர் அவனுக்கு சொன்னார். அவன் கற்பனை செய்தும் பார்த்திராத நாடுகளுக்கு எல்லாம் இந்தப் படுக்கை செல்கிறது என்றதை அறிந்து அவன் வன்மம் பெருகிப் பெருகிச் சென்றது.

“இதிலிருந்து கல்லெடுக்கும் உரிமம் இனி உங்களுக்கில்லை. இது இனி மன்னன் சொத்து, நீங்கள் இந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடுகிறேன்,” என்றவாறு சென்று தேரில் ஏறினான். தேரில் ஏறியவன் நின்று என்னைப் பார்த்து, “அந்த பண்ணிக்காலோடை பாலத்திலிருந்த பெண் சிலையைச் செய்தது யார்?” என்றான்.

நான் தலையைக் கவிழ்ந்தேன். என்னேரமும் என் தலை வெட்டப்படலாம் எனத் தெரியும். என் மனைவி மாளிகையுள் மயங்கிச் சரிந்தாள். அவள் கன்னம் தரையில் மோதிய ஒலி என் செவிகளில் கேட்டது.

தன் வாளெடுத்து என்னை நெருங்கிய மன்னன் சொன்னான்.

“நான் வெட்டி வீழ்த்திய சிலையினும் மேலான ஒரு சிலை எனக்கு வேண்டும். நாளை காலை நான் வந்து வாங்கிச் செல்கிறேன்,” என்று தேரில் ஏறி மறைந்தான்.

எங்கள் ஊர் மக்கள் அனைவரும் செயலற்று நின்றிருந்தனர். பின் என் அருகில் எல்லாரும் கூடினர். பெண்கள் மாளிகையினுள் சென்று என் மனைவியை எழுப்பி தேற்றினர்.

ஆண்கள் என்னிடம் ஆறுதல் கூறினர். உன்னால் செய்துவிட முடியும் என்று தெரியும் என்று சொன்னார்கள். நான் அய்த்துமலையை என் கைகளால் வணங்கி என் மாளிகையினுள் சென்றேன். உண்மையில் உளியைக் கையில் எடுத்தவுடனே எனக்கு புரிந்துவிட்டது என்னால் பன்றிக்காலோடை சிலையை மீறிய ஒன்றை படைத்துவிட முடியாதென்று. நான் சோர்ந்து சென்று முட்டுகூட்டி அமர்ந்தேன். என் மனைவி அருகில் வந்து அமர்ந்தாள். நான் அவளை நோக்கி கூறினேன், “அந்தச் சிலை என் கலைத்திசு. அதை மீறிய ஒன்றை என்னால் படைக்கமுடியாது. அதை மன்னன் அறிவான். அவன் வாளால் நான் கொல்லப்படுவது உறுதி”.

என் மனைவி சிரித்தாள். பதிலெதுவும் சொல்லாமல் எழுந்து அடுக்களைக்குள் சென்று மீண்டும் திரும்பியவள் என் முன்னால் தட்டில் உளுந்தஞ்சோறையும் கருப்பட்டியும் வைத்தாள். நான் அவளைப் பார்த்தேன். கருப்பட்டி எதற்கென்றேன்.

“உளுந்தஞ்சோற்றுடன் இந்த வீட்டிலிருக்கும் எல்லா உணவுப் பொருட்களையும் இணைத்து உங்களுக்கு விளம்பியுள்ளேன். ஆனால் இன்னும் இணைக்க வேண்டிய அதிச்சுவைக் கொண்ட உணவுப் பொருட்கள் ஏராளம் இருக்கின்றன. எந்த ஒரு மனிதனும் தன் உச்சப் படைப்பு என்று எதையும் நிகழ்த்தி விட முடியாது. சொல்லாததும் காட்டாததும் எஞ்சும். அருகிலிருக்கும் குமரி முனையின் கடலின் திரைகளின் உச்ச அழகு எப்பொழுது நிகழ்ந்தது?” என்றாள்.

அவளை நான் அறிவேன். அவள் என் குருவின் மகள். நான் அவளை முதன் முதலாக பார்த்தது ஒரு சிலையை செய்து எடுத்துக்கொண்டு என் குருவைப் பார்க்க சென்றபொழுதுதான். அந்தச் சிலையைப் பார்த்தவள் தன் அப்பா அருகிலிருக்கிறார் என்பதனால் வெளிப்படுத்தும் வழக்கமான உடல் மொழியை மறந்து காலுடைந்த ஒரு கோழியின் நொண்டித் துள்ளல் போன்ற நடை நடந்து சிலையை தொட்டுப் பார்த்தாள். பின் சன்னமானக் குரலில் என்னை நோக்கி, “படைப்பு போதாமையிலிருந்து எழுகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறது, அனக்கமற்றதில் அனக்கத்தை உண்டாக்குகிறது, பின் நிறைகிறது , தழும்புகிறது, செயலற்றிருக்கிறது, இந்தச் சிலை உங்கள் தாயாரால் உண்டானது,” என்றபடி சென்றாள்.

அவளின் சொற்கள் உண்டாக்கிய மயக்கத்தில் நான் பித்துகொண்டு இரவில் என் மாளிகைக்குள் ஒவ்வொரு அறையிலும் அவளைத் தேடினேன். இரவில் உறக்கம் கலைந்து எழுந்து மீண்டும் அவளை மாளிகை முழுவதும் தேடிவிட்டு அலைக் கழிக்கும் ஆற்றலோடு சென்று அய்த்துமலையின் முன்னால் நின்றேன். அவ்வாறு நான் செய்த சிலைதான் பன்றிக்காலோடை சிலை. அதை நான் அவளிடம் கொண்டு சென்று காட்டியபொழுது சிலையைப் பார்த்தவள் வியர்த்திருந்த தன் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

நான் உளுந்தஞ்சோற்றையும் கருப்பட்டியையும் உண்டேன். கைகளைக் கழுவிவிட்டு திரும்பி வந்தபொழுது மனைவி அடுக்களை வாசல் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.

“நீங்கள் படைத்த அந்த உச்ச சிலையின் பின்பு அச்சிலையின் போதாமைகளை உங்கள் ஆழ் உள்ளம் உணர்வதை நான் அறிவேன். அந்த போதாமைகள் என்னவென்றும் நான் அறிவேன். நீங்கள் செய்யும் இந்தப் புதிய சிலையில் அந்த இடைவெளியை நிரப்புங்கள். என் உடலை உங்களுக்கு தருகிறேன்” என்று சட்டென கைகளிள் இருந்த கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டாள். நான் தாவிச்சென்று அவளை என் கைகளில் தாங்கிக் கொண்டேன். குருதி என் கைகளின் வழியாக வழிந்தது. அவள் எண்ணைப் பிசுக்கில் மாட்டிய பாம்பைப் போன்று குருதியில் நெளிந்தவாறு என் கைககளில் கிடந்து அசைவுகளற்று உயிர்விட்டாள். என் கைகள் நடுங்கின.

கண்களில் நீர்பெருக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குருதியில் நனைந்திருந்த அவள் உடல் ஒளியில் மினுங்க என் உள்ளம் ஏதோவொன்றை அறிந்தது.

நான் உளியினைக் கையிலெடுத்தேன். விளக்கை அணைத்தேன். மெல்லிய நிலவொளியில் அவள் உடலின் மேல் அய்த்துமலைக் கற்களால் சிலை செய்யத் தொடங்கினேன். கருமையுதிரிக் கற்களைக் கொண்டு செய்த மையைப் பூசினேன். அவள் உடல் முழுவதும் மறைந்துவிட்ட பிறகு அவள் கண்களை கடைசியாக மூடியபொழுது அவள் இமை அசைந்ததைப் போன்ற பிரமை ஏற்பட்டு நான் மயங்கி கீழே விழுந்தேன்.

அதிகாலை மன்னன் வந்த பொழுது நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தேன். அவன் நேரடியாக என் மாளிகையினுள் வந்து தன் கைகளால் என்னை எழுப்பினான்.

நான் கண்களை கைகளால் நவைந்து அவனை நோக்கினேன். அருகில் திரைச்சீலையிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிலையின் திரையை விலக்கப் போனான். நான் அறிவேன் அது எனக்கான தீர்ப்பு என. அடுத்த நொடி என் உயிரின் முடிவு எடுக்கப்படுமென. என் வாய் என்னை அறியாமல் சொன்னது,. “இதை நீங்கள் உங்கள் மனையில் தான் சென்று திரை விலக்க வேண்டும்”.

மன்னன் சினத்தோடு என்னைப் பார்த்தான். சிலையைத் தேரில் ஏற்றச் சொன்னான். என்னை ஒரு படைவீரனின் குதிரையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள்.

ஈத்தாமொழி தாண்டி பன்றிக்காலோடை வந்து சேர்ந்தவுடன் படை நின்றது. நான் குதிரையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன். நேராக ஓடையினுள் விழுந்தேன். படை என் கண்களை விட்டு மறைந்தது.

அந்தச் சிலை மன்னனின் தனி ஓய்வறையினுள் வைக்கப்பட்டது. அதை வைத்துவிட்டு வீரர்கள் வெளியேறினார்கள். மன்னன் கட்டிலில் சென்று படுத்தான். சற்று நேரத்தில் அவனுக்கு பசித்தது. எழுந்து உணவறைக்கு செல்ல போனான். சிலையை மூடியிருந்த திரைச்சீலை அவன் கண்களில் பட்டது. சற்று தயங்கியவன் அதை நெருங்கி திரைச்சீலையை விலக்கினான். சிலையை பார்த்த கணம் அவன் மூளையின் நரம்புகள் குழம்பின. பார்வை மங்கியது. சிலையின் முலைகளிலிருந்து பால் சுரக்கத் தொடங்கியது. தரையெங்கும் பரவியது. மன்னன் அரை மயக்கத்தில் வீழ்ந்தான். பால் சுரந்து சுரந்து அவன் அறையை நிரப்பியது. மன்னன் பசி மயக்கத்தில் அதை அள்ளி அள்ளிக் குடித்தான். குடித்த ஒரு துளியைக்கூட அவன் உடல் உணரவில்லை. ஆனால் அவன் வாய்க்குள்ளும் உடலுக்குள்ளும் அது நிறைந்தது. அவன் பசி எள்ளளவும் குறையவில்லை. வயிறு பெருத்து ஒரு கோமாளியைப் போல் ஆனான். பசி, நொடி கூட குறையாத பசி.

பால் அவன் கண் முன்னே பெருகி சென்று கொண்டிருந்தது.அவன் பசியினால் கண்கள் மயங்க மீண்டும் குடிக்க முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு கனவாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.ஆனால் பசியை அவன் தசைகளுக்குள்ளும் உணர்ந்தான். உடல் ஒருவித குளிர்ச்சியை அடைந்து கண்கள் மங்கி தீராத பசியினால் மயங்கிச் சரிந்தான்.

அதிகாலை எழுந்த மன்னன் அமைதியாய் சிரித்தபடியே நின்றிருந்த சிலையைப் பார்த்தான். நேற்றிரவு நடந்தது கனவென்று தன்னைத் தானே நம்ப வைக்க முயன்றவன் கட்டிலிருந்து இறங்கவும் கால்களில் பிசுபிசுப்பாக ஏதோவொன்று ஒட்ட கீழே பார்த்தவன் தரையெங்கும் பால் ஓடிய தடத்தைப் பார்த்ததும் உடல் சில்லிட உதறியபடி கட்டிலின் மீது ஏறிக்கொண்டான். அச்சம் குடிகொண்டது. எழுந்து வெளியே ஓடிவிட எண்ணினான். தன் ஆற்றல் முழுவதையும் திரட்டிக்கொண்டு உள்ளங்காலை தன்வாளால் கீறி தரையிலிருக்கும் பால் உண்டாக்கும் அச்சத்தை தன் மனதினால் தாண்ட குருதி சொட்டும் காலால் நடந்து கதவை அடைந்தான். கதவைத் திறந்து விட்டவன் திரும்பி சிலையைப் பார்த்தான். அதன் அம்மணத்தை கவனித்து திடுக்கிட்டான். மெல்லிய காமம் உண்டாகியது. அவன் சிலையை நெருங்கினான்.

அவன் பின் தோளில் மூச்சுக்காற்று பட்டது. உடல் உதறி திரும்பி பார்த்தான். அவன் வாழ்வில் ஒரு பொழுதும் கண்டிராத பேரழகி நின்று கொண்டிருந்தாள். தூயக் கருமை. அத்தனை பளபளப்பான மின்னும் கருமையை அவன் அறிந்ததில்லை. அவன் அவள் சருமத்தைத் தொட்டுப் பார்த்தான். அவள் உடல் விநோத அசைவொன்றை வெளிப்படுத்தியது.

அவன் கைகளால் அவளை அணைத்தான். அந்தப் பேரழகியைப் புணர்ந்தான். பின் அந்த அறை முழுவதும் பேரழகிகள் பெருகிக் கொண்டேயிருந்தனர். வேறு வேறு நிறங்கள். வேறு வேறு வடிவங்கள். அவன் உடல் தளரும் பொழுதெல்லாம் முன்னிலும் ஓர் பேரழகி தோன்றிக் கொண்டேயிருந்தாள். அவன் உள்ளம் தளர்ந்து தளர்ந்து மீண்டும் எழுந்தது. உடல் தளர்ந்து கொண்டேயிருந்தது. எப்பொழுது மயங்கினான் என்பதை அவன் அறியவில்லை.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவன் எழுந்து சென்று கதவைத் திறந்தான். அமைச்சர் நின்று கொண்டிருந்தார். “நாம் வெகு நாட்களாக தோற்கடிக்க முடியாத, நம் நாட்டிற்குள்ளேயே தனித்த மலையொன்றை ஆட்சி செய்யும் சிற்றரசன் ஒருவனின் படை தோற்கடிக்கப்பட்டு அந்த மலை பிடிக்கப்பட்டுவிட்டது,” என்றார்.

அந்த சிற்றரசன் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்டான். மன்னன் புன்னகையுடன் கதவை மூடினான். ஏனோ சிலையைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. திரைச்சீலையை விலக்கினான். சிலையின் காலிலிருந்து மண் எழுந்து பெருகியது. பல நிறமுடைய மண். செம்மண், கருமண், கடல் மண், சேறு என விதவிதமான மண். புதைகுழியில் மூழ்கினான் மன்னன். தப்பித்து ஒடி பாலையில் சென்று வீழ்ந்தான். பாலையின் புயல் காற்றைப் போன்று மண் சுழன்றது. அவன் நாசியை மண் நிறைத்து. மூச்சுத் திணறியது. மண் மெல்ல மெல்ல அவனை மூடியது.

மன்னன் அதன் பின் தன் அறைக்குள் செல்லவில்லை. தன் படைவீரர்களிடம் சிலையைத் தூக்க ஆணையிட்டான். அவர்கள் சிலையை தேரில் ஏற்றினார்கள். மன்னன் தானே தன் தேரை ஓட்டிக்கொண்டு பன்றிக்காலோடை பனை மரப்பாலத்தை வந்தடைந்தான். நான் அவனால் வெட்டி ஓடையில் வீசப்பட்ட சிலையின் அருகில் இருந்தேன். மன்னன் சொன்னது போல் இந்தச்சிலை கடல் சேரவில்லை. அவனால் ஒருபொழுதும் நீரின் மேற்பரப்பை வைத்து பொழி ஓடுவதை கணிக்க இயலாது. தேரிலிருந்து ஓடி வந்து என் கால்களில் விழுந்தான். “என்னால் இந்தச் சிலையை தாங்க முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்.இது என் உணர்வுகளை பெருக்குகிறது.என் இயல்பான உணர்வுகள் இதைப் பார்த்தால் நுரைபோல பெருகுகிகின்றன. என் சமநிலை குலைகிறது. கண்ணாடி மாளிகைக்குள் சிக்கிவிட்ட உணர்வு.”

நான் அவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்தான் மன்னன். சிலையின் திரையை மீண்டும் விலக்கினான். பின் அவன் அழுகையை நிறுத்துமுன் மாலை ஆகிவிட்டிருந்தது. ஒப்பாரி, ஆவேசம், தழும்பல், கரைதல், சிணுங்கல் என விதவிதமாக அழுது கொண்டிருந்தான்.அழுகையை நிறுத்திய நேரம் என் கால்களில் கிடந்தான். அவன் மணிமுடி தலையிலிருந்து கீழே விழுந்தது. அவன் தலைமுடி காற்றில் பறந்து பினனங்கழுத்து நரம்புகள் தெரிந்தன. என் கைகளில் உளி இருந்தது. என் கைகள் நடுங்கின.

அவன் பின்னங்கழுத்தை என் உளி சந்தித்தது. பின் என் கைகளின் நடுக்கம் அவன் உடலினுள் இறங்கி மறைந்தது.

நான் கீழே கிடந்த மணிமுடியை கால்களால் எட்டி தள்ளினேன். அது பன்றிக்காலோடையின் ஆழத்தில் சென்று விழுந்தது. இப்பொழுது பொழி ஓடிக்கொண்டிருந்தது.