Author: பதாகை

காத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை

‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப் போல் கைகளை அகல விரித்துக் கிடந்தது. ராட்சதப் பறவையொன்றை உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பதைப் போல் தலைக்கு மேலிருக்கும் பெரிய மின்விசிறி அசைந்து கொண்டிருந்தது. அந்தி சாய்வதற்குள் இன்றைய வெம்மைக் கணக்கை முடித்துவிடும் வீரியத்துடன் சுட்டெரிக்கும் வெயில், மாலை ஐந்தரை மணி. படிக்கட்டில் இறங்கும்போது ஒவ்வொரு படிக்கும் சத்தம் கூடிக்கொண்டே போனது. பேரமைதியில் இருந்து பேரிரைச்சலுக்குள் புகுவது போன்ற உணர்வு. டிக்கெட் காட்டி வெளியேறுமிடத்திற்கு அருகில் கூட்டம் குறைவான ஓரிடமாகப் பார்த்து ஒதுங்கினாள்.

‘வந்துவிட்டேன், காத்திருக்கிறேன்’ ரகுவிற்கு மெசேஜ் அனுப்பினாள். ஆன்லைன் என்று காட்டியது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை. ஒருவேளை நெருங்கிக் கொண்டிருக்கலாம். போனை அணைத்துக் கைப்பைக்குள் போட்டாள். அவன் எந்நேரமும் அழைக்கலாம் அல்லது மெசேஜ் அனுப்பலாம், கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் கைப்பையைத் திறந்தாள். அவ்வப்போது பாதாளச் சுரங்கமாய் மாய்மாலம் காட்டும் அந்தச் சிறிய கைப்பைக்குள் கிடக்கும் பல பொருட்கள் அவள் கைகளில் தட்டுப்பட்டு போன் மட்டும் கண்ணாமூச்சி விளையாடியது. இப்போதுதானே உள்ளே வைத்தேன், எங்கு போயிருக்கும்? யாரோ லேசாக இடதுபுறத் தோளில் இடித்துவிட்டுப் போனார்கள். அனிச்சையாகத் திரும்பினாள். உரசிச் சென்றவன் நான்கு அடி முன் சென்று நின்று அவளைப் பார்த்தான். அவள் பார்க்கும்போது தலை குனிந்தவாறே தன் மொபைலைப் பார்த்தான். எங்கோ பயணப்படக் காத்திருப்பவன் போல் முதுகில் பெரிய பை. அவன் அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இடித்தது அவன்தானா என்பதே இப்போது அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

திடுமென ஒரு பெருங்கூட்டம் கூடியது. அடுத்த எம்ஆர்டி வந்திருக்க வேண்டும். பார்வைக்கெட்டிய தூரம் என்பது கைக்கெட்டும் தூரமென்றாகிவிட்ட நெரிசல். இதற்கிடையில் கைக்குள் அகப்பட்டுவிட்டது போன். எடுத்துப் பார்த்தாள், ரகு ஜூராங் ஈஸ்ட் வந்துவிட்டதை மிகவும் மகிழ்ச்சியோடு அறிவித்திருந்தான். இன்னும் 12 நிமிடங்கள் என்று ஸ்மைலி வேறு. ஏற்கனவே 20 நிமிடம் லேட். இன்னும் 20 நிமிடமாகலாம். கூகிள் மேப் காட்டும் நொடித்துளிகளே இவனுக்கு வேதவாக்கு! சட்டென்று ஓர் எரிச்சல் மேலெழும்பியது. தோள் உரசும்படி வெகு அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தாள். அத்தனை அருகில் ஓர் அந்நியக் குரல் கேட்பதே திடுக்கென்றிருந்தது.

‘மேடம், தமிழா?’

இந்த ஊரில் பெரும்பாலும் அந்நியர்களின் முதல் வாசகம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ‘ஆமா’ என்றபடியே யாரென்று பார்த்தாள். அவன் ஒருவிதத் தயக்கத்துடன் நெளிந்துகொண்டே ‘ரேட் எவ்வளவு?’ என்றான். எதன் ரேட் கேட்கிறான், அவன் கேட்பது என்னவென்று அவளுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. எதைக் கேட்கிறான் என்றபடி யோசிக்கத் தொடங்கி, அந்தச் சிந்தனைப் பயணத்தின் பாதையிலேயே குபுக்கென்று வியர்க்கத் தொடங்கியிருந்தது. மின்னலோ, இடியோ, வாடைக்காற்றோ எந்த முகாந்திரமும் இன்றி அடைமழை பொழிந்தாற்போல் வியர்வை பெருகியிருந்தது. ஒருவாறு அவன் கேட்டதன் பொருள் விளங்கிக் கொள்வதற்குள் முகம் முழுதும் நனைந்துவிட்டது. வெள்ளை குர்தா முதுகோடு ஒட்டிக் கொண்டது. பெருகி வழியும் வியர்வையைத் துடைக்க முயலும்போதுதான் உடல் நடுக்கத்தை உணர்ந்தாள். கேட்கப்பட்டது கேள்வி என்றும் அதன் பதிலுக்கான காத்திருப்பும் உறைத்தது. என்ன பதில் சொல்வது? கோபமும் எரிச்சலுமாக வசைகளை வாய்க்குள் அரைத்துக்கொண்டே, அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் திரும்பி நின்றுகொண்டாள்.

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உடலை நெளித்துக் கால்களைச் சற்றே தூக்கி வெறுமனே காற்றில் அசைத்து இரு கால்களையும் மாற்றி மாற்றி நடப்பது போன்ற அசைவை ஓரிடத்தில் நின்றபடியே செய்து கொண்டிருந்தான். கல்லூரியில் படிக்கும்போது தன்னிடம் வந்து காதலைச் சொன்ன வகுப்புத்தோழனின் நினைவு வந்தது. அவன் கையில் கடிதம் இருந்தது, இவன் வெறுங்கையைப் பிசைந்துகொண்டு.

எப்படி என்னைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றியது அவனுக்கு. தன்னையே ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்துக் கொள்ள நினைத்தாள். உடையைச் சரிசெய்யத் தொடங்கின அவளது கைகள். வெள்ளை நிற முழங்காலுக்குக் கீழ் வரை நீளும் குர்தா, வெளிர் நீல நிற ஜீன்ஸ், கழுத்தைச் சுற்றி ஒரு சால்வை. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவசரமாக கண்ணாடி பார்த்தபோது தென்பட்ட தன்னுருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்தாள். அழகாக, நாகரிகமாக இருப்பதாகத்தான் அப்போதும் நினைத்தாள், இப்போதும் நினைக்கிறாள். முன்நெற்றியில் துருத்தியபடி இருந்த நரைமுடியை அழுத்திச் சீவியதும் நினைவுக்கு வந்தது. எந்தவொரு வேண்டத்தகாத நிகழ்வுக்கும், தான் ஏதேனும் ஒரு வகையில் காரணமோ என்ற குற்றவுணர்வை முதலில் கீறி இரத்தம் வடியச் செய்யும் அவளது மனம் இப்போதும் குடையத் தொடங்கியது. லிப்ஸ்டிக் அடர்நிறமோ! இல்லையே, இன்றைய அவசரத்தில் லிப்ஸ்டிக் போடாமல் வெளியேறி, லிப்டில் ஏறியதும் தடவியது நிறமற்ற லிப்க்ளாஸ் மட்டும்தானே. வெள்ளைக் குர்தா என்பதால் ப்ரா மற்றும் ஸ்லிப்கூட அதே நிறத்தில்தான் அணிந்திருந்தாள். அதையும் மீறி ஏதாவது? யாரும் பார்க்காதபடி இயல்பாக உடையைச் சரி செய்து கொள்ளும் பாவனையில் எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள்.

அவன் அருகில் இருந்த டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் போய் நின்று வேடிக்கை பார்ப்பதைப் போல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சுற்றில் அவளும் இருக்கிறாள் என்பதுபோன்ற பாவனை இருந்தாலும் அவளைச் சுற்றியே அந்தச் சுற்று என்பது அவளுக்குப் புரியாமலில்லை. பதிலை எதிர்பார்க்கிறானாம். அவனைச் சுட்டெரிப்பதுபோல் பார்ப்பதாக எண்ணி முடிந்த மட்டும் கோபத்தை உச்சியிலேற்றி முறைத்தாள். அது அவனைச் சுட்டதைப் போலொன்றும் தெரியவில்லை. பதிலுக்குக் காத்திருக்கும் பதட்டம் மட்டும்தான் தெரிகிறது.

அவனிடம் இருந்து பார்வையை எடுத்து எங்கே விடுவது என்ற குழப்பம். அவனைப் போலவே சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். கூட்டம் இரைச்சலுடன் நின்றிருந்தது. கூட்டம் என்றாலும் அது மொத்தமாக ஒரு கூட்டம் இல்லை. பல குழுக்களாகப் பிரிந்து நின்றனர். ஆனால் குழுக்களுக்குள்ளும் இடைவெளி மிகவும் குறைவு. இவற்றையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஸ்கேன் செய்தாற்போல் பார்த்துவிட்டுத் தலை குனிந்தாள். இதுபோன்ற இடத்தில் நிற்பதே தான் செய்யும் தவறு என்று உறுத்தத் தொடங்கியது. அத்தனை கோபமும் ரகுவின் பக்கம் திரும்பியது. இந்த இடத்திற்கா வரச் சொல்ல வேண்டும் அவன்? கூகிள் பரிந்துரைத்த இடம் என்று அவன் சொன்னது நினைவுக்கு வர, கூகிள் இங்கு நடப்பன யாவும் அறியுமா என்ன?

வியர்வையும் நடுக்கமும் குறைந்தபாடில்லை. அவளைக் கடந்து யார் சென்றாலும் தன்னை உரசிச் செல்வதுபோலவே இருந்தது. இதெல்லாம் சினிமாவில் பார்த்ததுதான். ‘அந்த’ மாதிரி ஆளாக இருந்தால் ரேட் பேசிக் கிளம்பிவிடுவார்கள். நல்ல குடும்பத்துப் பெண்கள் என்றால் ‘அக்கா தங்கையோடு பிறக்கவில்லை?’ என்றோ, மிகவும் மோசமான வசை வார்த்தைகளையோ கொட்டுவார்கள். தான் இதில் எதையும் செய்யாமல் விட்டதை நினைத்து அவளுக்கு வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது. இப்போதுகூடப் போய் அவனிடம் நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிடலாம்தான். ஆனால் வார்த்தைகளுக்குச் சற்றும் பொருந்தாத தன் உடல் நடுக்கம் அனைத்தையும் அபத்தமாக்கிவிடக் கூடும். சினத்தைத் தன் ஆளுகைக்குள்ளே வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் வியர்வையை அடைக்க வேண்டும். இல்லையென்றால் குளித்தாற்போல் அவள் உடை முழுதும் நனைந்துவிடும். அதுவே மேலும் சிலரைத் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடும்.

எம்ஆர்டியைவிட்டு வெளியேறி சைனீஸ் கார்டன் உள்ளே சென்று ஓரிடத்தில் நின்றுகொள்ளலாம். ரகு வந்ததும் எப்படியும் உள்ளே போவதாகத்தானே திட்டம். போனில் பேசிக்கொண்டே நடந்தால் யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. ரகுவுக்கு அழைத்தாள். அவன் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

வேறு வழியின்றி யாரையும் பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி நடக்கத் தொடங்கினாள். இயல்பான நடையாகத் தெரிந்தாலும் நொடியும் தவறவிடக்கூடாத, அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாள். தலை கவிழ்ந்தபடியே சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அருகே யாராவது வருவதுபோல் தோன்றினாலே உடல் விறைப்பாய் நிமிர்ந்து இறுகுவதும் மனம் படபடவென்று அடித்துக் கொள்வதுமாகப் பெரும் அவஸ்தையாக இருந்தது. மனதுக்கு முரண்பட்டு உடலை நிமிர்த்தி நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.

திரும்பிப் பார்த்தபோது அங்கிருந்த ஒரு சிறுபெட்டிக்கடையை ஒட்டி அவன் நின்றிருப்பது தெரிந்தது. இப்போது அழுக்கேறிய ஷூக்களை வைத்தே அவனை அடையாளம் காண முடிந்தது. அவனை நோக்கி ஒரு பெண் வந்து நின்றாள், இருவரும் பேசத் தொடங்கினர்.

ஏனோ அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கிற குறுகுறுப்பும் ஆவலும் எழுந்ததது. தலையைச் சிறிது பக்கவாட்டில் திருப்பி அவளைப் பார்த்தாள். அவள் வெளிர் மஞ்சள் நிற டிசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தபடி தலையை ஆட்டிப் பேசுவது தெரிந்தது. பேச்சுக்குத் தக்கபடி விரித்துக் கிடந்த, இடுப்பு வரை நீண்ட கூந்தல் அசைவதைப் பார்க்க அழகாக இருந்தது. தலைவிரிகோலம் என்று அம்மா வசைபாடும் கோலத்திற்குச் சற்று முந்தையது. பள்ளிக் காலத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த பாரதியின் பாஞ்சாலி சபதம் நினைவுக்கு வந்தது.

‘மேவி இரண்டுங்கலந்து குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன்யான், இது
செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்’

மனதிற்குள் தமிழாசிரியர் மீனாவின் கம்பீரக் குரலில் பாடல் ஒலித்தது. கூடவே விஜய் டிவி மகாபாரதத்தில் வரும் அம்பையும் திரெளபதியும் தியாவின் நினைவில் வந்தார்கள். திரெளபதியைவிட அம்பைக்கு அக்னி உமிழும் கண்களும், செந்நிற ஆடையும் விரிசடையும் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். இவ்வளவு நீளக் கூந்தலை விரித்துப் போட்டால் சிரமமாக இருக்காதா? கண்ணுக்குத் தெரியாத சிறிய க்ளிப் இரண்டு பக்கமும் போட்டிருப்பாளாயிருக்கும். அந்தப் பெண்ணின் முகம் தெரியவில்லை. நிச்சயம் இந்தியராகத்தான் இருக்க வேண்டும். நீளக் கூந்தல் மட்டுமல்ல, தமிழா என்று தன்னிடம் கேட்டதை வைத்து தமிழ்ப்பெண், குறைந்தது இந்தியப் பெண்ணைத்தான் அவன் எதிர்பார்த்திருப்பான் என்பது நிச்சயம். என்ன காரணமாக இருக்கும்? மொழி தெரிந்தால் கூடுதல் சுவாரசியமோ, அல்லது ரேட் குறைவாக இருக்குமா?

சைனீஸ் கார்டன் போகும் வழியில் நடந்துகொண்டிருந்தாள். இங்கும் கூட்டம்தான் என்றாலும் ஓரளவுக்கு இடைவெளி இருந்தது. பேச்சொலியில் கவனம் செலுத்த நினைத்துக் காது கொடுத்த அவளுக்கு அத்தனை பேச்சுக்குரலும் கலந்து ஒற்றைப் பேரிரைச்சலாகத்தான் ஒலித்தது. ஒரு குரலையும் ஒரு வார்த்தையையும் தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியவில்லை. அருகில் நடப்பவர்கள் பேசுவதுகூடக் கூட்டத்துடன் கலந்து ஒன்றாகி, அதன் பின்னரே தன் காதுக்கு வந்து சேரும் அதிசயம்.

நடைபாதைக்கு இடதுபுறம் இருந்த புல்வெளியைக் கண்டதும் மனவேகத்திற்குக் கால்கள் ஈடுகொடுக்கவில்லை என்பது புரிந்தது. வேகத்தைக் கூட்டலாமா? ஏன்? என்ன நடந்துவிடப் போகிறது? யாரும் கையைப் பிடித்து இழுத்துவிடுவார்களா என்ன! நிதானமாகச் சுற்றிலும் பார்க்கும்போது எங்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதாகத் தெரியவில்லை. யாரும் யார் கையையும் பிடித்திழுக்கவில்லை, உண்மையில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டோ கட்டிப் பிடித்துக்கொண்டோகூட யாரும் இல்லை. தன் தலை நிமிர்ந்திருப்பதை அறிந்த அவளுக்குச் சிறிதாகப் புன்னகையும் வந்தது. ரகு வரும்வரை அங்கேயே நிற்கலாம் என்று முடிவெடுத்தாள்.

புல்வெளியில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் பெய்த மழை ஈரத்தின் மிச்சம் புல்வெளியில் இன்னமும் ஒட்டியிருப்பதைத் தனது செருப்புகளையும் மீறி கால்களில் உணர்ந்தாள். இந்த ஈரத்திலுமா கிரிக்கெட்! மொட்டைமாடியில் தம்பியும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் விளையாடியது நினைவுக்கு வந்தது. அந்தச் சிறிய இடத்தில் நான்கு பேர் விளையாடுவார்கள். 20 மீட்டர் நிலப்பரப்பும் 30க்கும் மேற்பட்டவர்களுமாக நிகழும் ஒரு பிரம்மாண்டத்தைச் சுருக்கி அவரவர் வசதிக்கேற்றபடி விதிமுறைகளை வளைத்துக்கொள்வார்கள். எல்லைகளும் விதிகளும் விளையாட்டை நிர்ணயிப்பதில்லை, விளையாட்டு என்னும் செயல் தரும் உணர்வுதான் அங்கு முக்கியமாகிறது. ‘டொக்!’ சத்தத்தைத் தொடர்ந்து பந்து மேலேறி அவளை நோக்கி வருகிறது. பந்தைப் பார்த்துக்கொண்டே அதன் வேகத்திற்கு இணையாக ஒருவன் ஓடி வருகிறான். பந்திருக்கும் பக்கம் லேசாகச் சரிந்து ஒற்றைக் கையால் பிடித்து அதே வேகத்தில் திரும்பி விளையாடுபவர்களை நோக்கி எறிகிறான். பந்து அவன் கையில் இருந்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அனைவரும் கூச்சலாய்க் கத்தத் தொடங்கியிருந்தனர். அந்தக் கூச்சல் இப்போது மேலும் கூடி இருந்தது. முகம் மலர அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அந்தப் புன்னகை அந்த விளையாட்டோடு போய்ச் சேர்ந்திருக்கும் என்று சொல்லியவாறே, எம்ஆர்டியில் இருந்து அவள் வந்த பாதையை நோக்கித் திரும்பி நின்றுகொள்கிறாள். வியர்வை சுரப்பது நின்றிருக்கிறது. உடலில் ஒட்டியிருக்கும் வியர்வை காற்றில் பட்டுச் சில்லென்ற உணர்வைத் தருகிறது.

அதே கூட்டம்தான். எம்ஆர்டி ஸ்டேஷனுக்குள் நின்றபோது இருந்த மூச்சடைப்பும் பதட்டமும் குறைந்து இப்போது நிதானமாகப் பார்க்க முடிகிறது. எம்ஆர்டி விட்டு வெளியே வரும் இடத்தில் உள்ள ஓரிரு படிகளில் சிலர் உட்கார்ந்திருக்கின்றனர். அநேகமாக ஆண் பெண் ஜோடிகள், சில ஆண்களும் பெண்களுமான குழுக்கள். கையோடு உணவு கொண்டு வந்திருக்கின்றனர் சிலர். பெரும்பாலும் மாலைக்கேற்றவாறு ஏதேனும் பானங்கள் அல்லது சிற்றுண்டிகள். ஒருவர் முகமும் தியாவுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. கூர்ந்து கேட்டபோது சில வார்த்தைகள்கூடக் காதில் விழுகின்றன பல மொழிகளில் கலவையாக. அவற்றைப் பிரித்துப் பொருள் கொள்வதைவிட அவர்களின் உடல்மொழி அவளை ஈர்க்கிறது. ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

ஏனோ ஆண்களைவிடப் பெண்களைக் கவனிப்பது அவளுக்குக் கூடுதல் சுவாரசியமாக இருக்கிறது. இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஒரு குழு. ஒரு பெண் தரையில் உட்கார்ந்தபடித் தன் கால்களை நீட்டிப் பின்னிக்கொண்டு ஆட்டியவாறு அருகில் இருக்கும் இன்னொரு பெண் கொடுக்கும் கேன் டிரிங்கை வாங்கி வாயில் சரிக்கிறாள். அது வழிந்து அவளது உடையிலும் சிதறுகிறது. அதைத் துடைக்கவோ உடையில் வழிந்ததற்குப் பதட்டப்படவோ இல்லை. ஒருவர் போனில் எதையோ காட்ட, நால்வரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். அருகில் இருப்பவள் இப்போது அவளது மடியில் சாய்ந்து படுக்கிறாள். அவளது குட்டைப் பாவாடை மேலேறி இருந்ததால் சரியாக அவளது தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறாள்.

அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஜோடி. தரையில் செய்தித்தாளை வைத்து ஆண் தட்டுகிறான். கட்டெறும்புகளாக இருக்கும். பெண் தன் காலணிகளைக் கழற்றி கால்களில் ஏறிவிட்ட எறும்புகளைத் தட்டிவிடுகிறாள். புல்வெளியில் பிளாஸ்டிக் பைகளை விரித்து அதன்மேல் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள், சிலர் போன் பேசிக்கொண்டு, யாரும் தனியாக இல்லை, சும்மாவும் இல்லை. தனியாக நின்றிருப்பது அங்கிருக்கும் மரங்கள் மட்டும்தான். தியா நிற்கும் இடத்தில் இருந்து பார்க்க சிதறினாற்போல் மனிதர்கள் கூட்டம், அவர்களுக்குப் பின்னால் கைகளைப் பிளந்தாற்போல் கிளைகளை விரித்திருப்பதில் ஒரு நேர்த்தியுடன் சரியான இடைவெளியில் சில மரங்கள், அதற்கும் பின்னால் கூடாரம் போன்றிருக்கும் எம்ஆர்டி ஸ்டேஷன் என உயரத்திற்குத் தகுந்தாற்போல் புகைப்படம் எடுக்க அடுக்கடுக்காய் நிற்க வைத்ததுபோல் தெரிகிறது.

போனை எடுத்துப் பார்க்கிறாள், ரகுவிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை. மறுபடியும் போன் செய்து பார்க்கலாமா என்று யோசிக்கும்போது ஒரு பெண் அவளுக்கு அருகில் வந்து நிற்கிறாள். போனில் ஏதோ மெசேஜ் அனுப்புகிறாள். அந்தப் பெண் போனைக் கைப்பைக்குள் போட்டதும் காத்திருந்தவனைப் போல் ஒருவன் அவளிடம் ஓடி வருகிறான். தயக்கத்துடன் ஏதோ ரகசியக் குரலில் பேசுகிறான். இருவரும் கிளம்புகிறார்கள். எல்லாம் ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்தன. அவர்களின் முகம் பார்க்கும் அவகாசம்கூட இருக்கவில்லை தியாவுக்கு.

திடீரென்று தனக்கான ரேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எதை வைத்து முடிவு செய்யப்படும்? 35 வயது, ஐந்து வயது குழந்தைக்குத் தாய். இதெல்லாம் பார்த்துதான் ரேட் பேசுவார்களோ! தக்காளி கிலோ இரண்டு வெள்ளியில் இருந்து நான்கு வெள்ளிக்குள் என்பதுபோல் பொதுவான ஒரு ரேட் தெரிந்தால்தானே கூடுதல் குறைவு பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு. யார் ரேட் முடிவு செய்வார்கள்? தன்னைத் தொலைவில் இருந்து பார்க்கும் யாருக்கும் தானும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகத்தானே தெரிவாள்? எத்தனை பேர் தனக்கான ரேட்டை மனதிற்குள் மதிப்பிட்டிருப்பார்கள்? சிந்தனை எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, போனை உள்ளே வைக்க கைப்பையைத் திறக்கிறாள். பக்கச் சிறு அறையில் இருந்த லிப்ஸ்டிக் கண்ணில் படுகிறது. அந்த அடர்நிற லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் பூசிவிட்டுக் கைப்பையை மூடுகிறாள். அக்கம்பக்கம் பார்த்தபடிக் காத்திருக்கத் தொடங்குகிறாள். போன் அடிக்கிறது. ரகுவாகத்தான் இருக்கும். வரட்டும், இந்தப் பக்கம்தானே வந்தாக வேண்டும். அதுவரைக்கும் காத்திருக்கலாமே.

கா சிவா நேர்முகம் – நரோபா

1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.

2. இலக்கிய பரிச்சயம் எப்படி?

சென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.

 

3. இலக்கிய ஆதர்சங்கள்

ஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.

என் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.

தேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.

4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

எழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.

5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

என் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.

மாய அழைப்பு – கமலதேவி சிறுகதை

கொல்லி மலையை மறைத்து நிற்கிறது தொடர் மழை. எட்டி எட்டிப் பார்த்து சங்கரிக்கு சலிக்கிறது. கொஞ்ச நேரம் மேற்கே பார்த்துவிட்டு அறைக்குள் வந்தாள். அதற்குள் மும்முறை அழைத்திருந்தது அலைபேசி. நேற்று அழைத்த எண்ணா என்று  பார்த்தாள். இல்லை.

“இந்த நம்பர்லந்து கால் வந்துச்சு… நீங்க யாரு?”

அந்தப்பக்கம் சில குரல்களின் சலசலப்பு… பேருந்தா?

“எனக்குதான் அங்கருந்து போனு வந்துட்டேயிருக்கு… யாரு நீ… எங்கருந்து பேசுற,” என்ற அதே பெண் குரல் எரிச்சலடைய வைத்தது.

சங்கரி சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். நம்பரைத் தடை செய்த ஐந்துநிமிடத்தில் மீண்டும் மூன்று அழைப்புகள். இவை எதேச்சையான அழைப்புகளில்லை என்பது மண்டையில் உறைத்தது. சென்ற வாரத்தில் வேறொரு எண்ணிலிருந்து வெவ்வேறு தினங்களில் மூன்று அழைப்புகள்.

“சின்னப்பிள்ளைங்க கண்டபடி நம்பர போட்டுருச்சுங்க,” என்று அந்த எண்ணில் பேசிய பெண் குரல் நினைவில் வந்தது. இந்தக் குரல்தானா அது? கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் தொடுதிரையில் வழுக்கிவிழும் அம்மா எதையாச்சும் செய்து வைத்திருக்கிறார்களா என்று தேடினாள்.

‘அபிதா’ நாவலை எடுத்தபடி மெத்தையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தாள். மீண்டும் இரு தடை செய்யப்பட்ட அழைப்புகள். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கிறாள். லா.ச.ரா தன்மொழியால் மனதைப் படுத்தி எடுத்த புத்தகம்.

கண்களை மூடி அமர்ந்தாள். மூன்று நாட்களாக ஓய்ந்தபாடில்லை. நான்கு வார்த்தைகள் வேகமாகப் பேசினால்  குறைந்துவிடக்கூடும்.

ஆனால் உள்ளிருக்கும் பேய் செய்யவிடாது. பொறுத்துக் கொள் என்ற ஆணையை மனதிற்குள் ஆழ ஊன்றிய பொக்கைவாய் தாத்தா மனதிற்குள் புன்னகைத்தார். சிவனே என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள். இருளுக்குள் சிகப்பு நிறம் பறந்து மறைந்தது.

இந்த அழைப்புகள் மட்டுமா காரணம்! எப்பொழுதாவது இப்படி புத்தி முறுகிக் கொள்ளும். அவிழ்க்கவே முடியாது. அதாகவே பிரிந்து மலர வேண்டும். பாடல்களை மாற்றி மாற்றி தேடினாள். வேலைக்கு ஆகவில்லை. உச்சியில் நின்று கனக்கிறது.

நல்ல மழை. கைகளில் இருந்த புத்தகத்தை வைத்தபின் வராண்டாவிற்கு வந்தாள். மழையால் தன்னை முழுதும் மூடி கொண்டிருந்தது கொல்லிமலை. சிறு பிசிராகக்கூட கண்களுக்குத் தெரியவில்லை.

சென்ற வாரத்தில் வந்த அமேசான் பெட்டி, நான்கு நாட்களுக்கு முன்பு வந்த அஞ்சலக உறை இரண்டும் நினைவிற்கு வந்தன. அதில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்தபின் பெட்டிகளை குப்பையில் போட்டோமா என்ற எண்ணம் தோன்றியது.

மீளவந்து புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் அழைப்பு. புத்தகத்தை வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கினாள். வீட்டில் மழைக்கால கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்படி அனைவரும் கூடினால் ஓயாது சிரிப்பும், பொருமல்களும், விசாரணைகளும், சொல்லித் தேய்ந்த அறிவுரைகளும், சூடான தின்பண்டமுமாக நீளும்.

அய்யா கிழக்குபுறமாக திரும்பி மேசையில் கை வைத்து தன் தம்பி பேசுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சங்கரி எட்டு வயதில் முற்றத்து மழையில் நிற்கிறாள். அம்மா ,”உள்ள வா சங்கு… ஸ்கேல் எடுத்தேன்னு வச்சிக்க…” என்று அதட்டுகிறாள்.

அய்யா, “ விடு..அதாவே வரட்டும்,” என்கிறார்.

இரவு காய்ச்சலில் போர்வைக்குள்ளிருக்கும் அவளின் கைகளைப் பற்றியபடி அவளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். மேசை விளக்கின் மெல்லிய ஔி கட்டிலுக்குள் மஞ்சளாய் பரவியிருக்கிறது.

“பாப்பாவுக்கு என்னாச்சு… கோவம் வந்தா அம்மாக்கிட்ட கோவிச்சுக்க வேண்டியதுதானே… அம்மாதானே இன்னிக்கி தப்பு செஞ்சாங்க.” என்றபடி போர்வையுடன் அணைத்துக்கொள்கிறார்.

“அய்யா. முள்ளு குத்துது,” என்றதும் அவளை மேலும் கட்டிப்பிடித்து சிரிக்கிறார்.

“என்னால நெஜமாலுமே சோறுதிங்க முடியலங்கய்யா… வாந்தி வருது. ”

“அம்மாட்ட சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்… ”

“அம்மாக்குதான் எல்லாம் தெரியுமே…”

அய்யா அம்மாவிடம் திரும்புகிறார். அம்மா இவளின் கொழுசுகாலில் கைவைக்கிறாள். சங்கரி காய்ச்சலில் காய்ந்த உதடுகளில் புன்னகை எழ, “ இப்ப எனக்கு கால் வலிக்குதுன்னு உங்களுக்கு தெரியுதுதானேம்மா,” என்கிறாள். அம்மா குனிந்து கொண்டே தலையாட்டுகிறாள். அய்யா அம்மாவின் தோளில் கைவைத்து புன்னகைக்கிறார்.

பதினைந்து வயதில் அவ்வாவின் ஒரு சொல்லிற்காக சங்கரி அதகளம் செய்து ஓய்ந்தாள். அடுத்தநாள் காலையில் அய்யா, ”எப்பவாச்சும் கோவம் வரவங்களுக்கு கோவம் மதம் பிடிக்கிற மாதிரி… கட்டுப்படுத்தனும். இல்லேன்னா அடிக்கடி கோபப்படனும்,” என்று சிரித்தார்.

“இனிமே கோபப்பட மாட்டேங்கய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியலங்கய்யா,”

“சரி… சரி. சத்திய சோதனை படிக்கிறியா…” என்றார். அய்யா மாதிரி செக் வைக்கமுடியாது.

இரு கால்களையும் தூக்கி நாற்காலி மேல் குத்துக்காலிட்டிருக்கும் அவ்வா, வாழைக்காயை எடுத்துவிட்டு மாவைத் தேடி எடுத்தது. அலைபேசியைப் பார்த்தாள். தலையை ஒரு தரம் உலுக்கிக் கொண்டாள். இது பேனைப் பெருமாளாக்கி, பெருமாளுக்கு லட்சுமியை கட்டி வைக்கும், என்ற எண்ணம் வந்ததும் சட்டென சமையலறைக்குள் நுழைந்தாள்.

“இங்க பாரு தம்பி… நாலு தடவ முன்னாடி நிக்கிற மனுசருகிட்ட அதிகாரமா பேசினா இந்த வயசுல அது ஒருமாதிரி முறுக்காத்தான் இருக்கும். ஆனா நாளாவட்டத்துல பேச்சோட தன்மையே மாறிப் போயிரும். தணிஞ்சு பேசிப் பழகு…”

சின்னய்யாவிடம் தலையாட்டிவிட்டு சமையலறை பக்கம் திரும்பி தம்பி புன்னகைத்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் மழையைப் பார்த்து முகம் மறைத்தான்.

கடலை எண்ணெயில் இட்டவுடன் வாழைக்காய் மாவுடன் எழுந்து மிதந்து உப்பியது. எடுத்ததும் துள்ளல் அடங்கியது. மீண்டும் அலைபேசி.

“மழன்னு பேஞ்சறக்கூடாது… நம்மள கிச்சன்ல தள்ளிட்டு அதுங்க பாட்டுக்கு ஊர்கதய அளக்குற வேல…”

சித்தி பேச்சோடு சேர்த்து வாழைக்காயை சீவினாள். ஆமா என்ன பண்ணலாம் என்பதைப் போல அம்மா சிரித்தாள். கழுவுத்தொட்டியை பார்த்தபடி நின்ற சங்கரியை உற்றுப் பார்த்து சித்தியிடம் ஜாடை காட்டினாள்.

“மூஞ்சபாருங்க எப்படி இருக்குன்னு…..”

“இந்தகுடும்பத்துக்குன்னு செஞ்சுவச்ச மூஞ்சி…அதபாத்துதான் நம்ம ரெண்டுபேரும் ஏமாந்து போயிட்டாம்…”என்றபடி அம்மா எண்ணெய்கரண்டியை சங்கரி கையில் கொடுத்தாள்.சித்தி புன்னகைத்தாள்.

“ந்தா பாப்பா… துரியோதனன் நம்ம நெனக்கறாப்ல இல்ல… குந்தி ஒன்னும் உங்கள மாதிரி பாவப்பட்ட அம்மா இல்ல. இந்த நெனப்பெல்லாம் கொதிக்கிற எண்ணெய்க்கிட்ட வச்சுக்காத… கவனமெல்லாம் அடுப்பு மேல இருக்கட்டும்,” என்றபடி சித்தி இரண்டு தட்டுகளை எடுத்தாள்.

“சிரிச்சு தொலை… ரெண்டு நாளா பேசாம சிரிக்காம உசுர வாங்குது சனியன்… அழுதாச்சும் தொலைக்குதா பாருங்க… ஜென்ம புத்திய எதக் கொண்டு அடிச்சாலும் மாறுமா…”

“விடுங்க… இந்த மாதிரி கோவப்படாத பிள்ளய பாக்கமுடியுமா?” என்றபடி சித்தி சங்கரியின் முதுகில் தட்டினாள்.

“நீங்க வேற. கோவப்பட்டாக்கூட சமாளிக்கலாம். இது ஊமப்பிடாரி அம்சம். மொசக்குட்டிப் பிடிக்கிற நாயோட மூஞ்சப் பாத்தா தெரியாது…”

“அட விடுங்கன்னா…” என்ற சித்தி நடையில் அமர்ந்தாள்.

மீண்டும் ஒரு அழைப்பு. இது ஒரு பொழப்புன்னு விடாம செய்யறதுக்கும் பொறுமை வேணும். எதுக்காக?

இரவு முழுவதும் மழை பெய்தது. எழுந்து நிற்கும் மலையை, இந்த நிலத்தை கரைத்துவிட எத்தனிப்பதைப் போல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய மழை வாய்த்தது. வயலாகச் சேர்த்த நிலத்தையெல்லாம் மீண்டும் தனக்கே சொந்தமாக்கிக்கொண்டு திமிறி ஓலத்துடன் நகர்ந்த ஆற்றை இன்னும் மறக்க முடிவில்லை. எத்தனை மழையும் வழிந்து ஓடத்தானே வேணும். இன்னும் கரைத்தழிக்க முடியவில்லை என புரியாததாலா மழை பெய்துகொண்டே இருக்கிறது?

மனம் புதுப்புது ஊடுவழிகளில் தேடிச் சளைத்தது. தலையணை பக்கத்தில் புத்தகம் தேமே என்று படுத்திருந்தது. அதன் மீது கைவைத்து எப்போதென்று தெரியாத கணத்தில் உறக்கத்தில் விழுந்தவளை பறவைகளின் கெச்சட்டங்கள் எழுப்பின.

அத்தனை பறவை குரலிலும் குயிலின் அழைப்பு மீறி ஒலித்தது. அவற்றிற்கு மழை முடித்து எழுந்த மெல்லொளி தந்த உற்சாகம். பக்கத்திலிருந்த பாழடைந்த வீட்டின் அடர்ந்த மரங்களின் இலைகள் பளபளத்தன. அலைபேசியைத் தட்டினாள். அதே அழைப்பு இருபத்தாறு முறை.

மெல்ல துலங்கிக் கொண்டிருந்தது காலை. மெல்லிய நீராவிப் படலத்தை விலகிக் கொண்டிருந்தது கொல்லி மலை. வாசல் படியை கழுவும்போதே மனதில் ஒருதுணுக்குறல். யாரோ பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

கோலத்தின் பாதியில் சட்டென்று நிமிர்ந்தாள். அவன், அத்தை வீட்டின் வாசலில் நின்று கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதிர்ந்து பார்வையை தழைத்தபடி திரும்பினான்.

தேநீர் அருந்தும்போது மீண்டும் அழைப்பு. வீட்டு சனீஸ்வரன்களை யாரிடமும் வம்புக்கு நிற்காதீர்கள், எந்தப் பிள்ளையிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்றால் கேட்பதில்லை.

கண்ணனுக்கும் இவன்களுக்குள்ளும் எதாவது நடந்திருக்குமா?ஆனால் பெண்குரல்தானே கேட்டது. எட்டு மணிக்கு மேல் இரும்பு கேட் பக்கத்தில் தெருவைப் பார்த்து நின்றாள்.

எதிர்வீட்டு கதிர்அண்ணன் வண்டியைக் கிளப்பி நின்று, “ஒனக்கு மட்டும் தெருவுல தேர் ஓடுதோ,”என்றபின் முகத்தை உற்றுப் பார்த்து, “ஒடம்புக்கு முடியலயா…” என்றார். இல்லை என்று தலையாட்டினாள்.

“நல்லா சோறத் தின்னுட்டு படுத்து எந்திரி… எதுன்னாலும் ஓடிப் போயிரும்,” என்றபின் வண்டியை முடுக்கினார்.

தெருவின் கடைசி வீட்டை அடுத்த நெல்வயல்களின் பசுமை காலை வெயிலில் அலையடித்தது. இடையில் டேங்க்கில் கூட நீர் பிடிக்க ஆட்களில்லை. அந்த சந்திலிருந்து கண்ணன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

கல்பாவிய செம்மண் பாதையில், கருப்பு இடைக்கயிறுடன் உச்சிச் சிண்டு அசைய குஞ்சுமணியை ஆட்டியபடி வருகிறான். இவள் முட்டி தொடும் பாவாடையுடன் ஓடிச்சென்று அவனைத் தூக்கி, எடை தாளாமல் உடல் சரிய வயிற்றில் வைத்துக் கொள்கிறாள்.

பாதையோரத்தில் பலகையைப் போட்டு செல்வராணிச் சித்தி கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். அவளின் இரு கால்களில் படுத்துக்கொண்டு கண்ணன் துள்ளுகிறான். சுடுநீரில் குளிக்க வைத்தபின் தம்பிக்கு ‘திடுக்கு தண்ணி’ ஊத்து, என்று ஈயச் செம்பில் பச்சைத் தண்ணீரை மொண்டு சங்கரியின் கைகளில் கொடுக்கிறாள்.

“தம்பி பாவம் அழுவுவான்.”

“தம்பி பயந்தறக்கூடாதுன்னுதானே… ஊத்து பிள்ளே…”

தண்ணீரை அவன் தொடையிடுக்கில் சரியாக குஞ்சிப்பூ மீது ஊற்றியதும் வீறிடுகிறான்.

“தம்பி பாவம்… தம்பி பாவம்…” என்றபடி பாவாடையைச் சுருட்டி தரையில் அமர்ந்து துண்டை மடியில் விரிக்கிறாள். கண்களில் அவன் உருவம் மங்கித் தெரிய அருகில் வந்திருந்தான். மீசையும் தாடியுமாக வளர்ந்த ஆண். கண்களைச் சிமிட்டியபடி, “ டேய் நில்றா,” என்று அழைக்க எத்தனித்த வாய், “தம்பி கொஞ்சம் நில்லு,” என்றுதான் அழைத்தது. மழை முடித்த வெயில் சுள்ளென்று எரிந்தது.

“என்ன?” என்று கண்களை இடுக்கிப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.

“என்னக்கா….”

பொற்கிளியம்மா , “ என்ன உரிமையா நிக்க சொல்றவ ,” என்று பொக்கை வாய் நிறைய சிரித்தாள். அவளுக்கு எப்படியும் பசங்களுக்குள்ளான புகைச்சல் தெரிந்திருக்கும்.

அவள் இயல்புக்கு மீறிய குரலில், “பொறந்தவனதானே உரிமையா நில்லுடான்னு சொல்லமுடியும். கூடவே பெறந்தாதானா…” என்றவள் குரல் தடுமாற நிறுத்திக் கொண்டாள். கண்ணன் நெற்றியை சுருக்கியபடி நின்றான்.

“எந் தங்கப்பிள்ளைகளா ஒரு தெருவுல பெறந்திட்டம்… உனக்கு இவனும் பொறந்தவன்தான். நீ பேசு…பேசு,” என்றபடி கைத்தடியை மடியில் சாய்த்தபடி குட்டித்திண்ணையில் அமர்ந்தாள். கண்ணன் குனிந்துகொண்டான்.

“இதென்ன புதுப் பழக்கம்… யாருக்கிட்ட பொல்லாப்போ அவங்கிட்ட வச்சுக்க வேண்டியதுதானே…”

“அதுசரி …” என்று கிழவி அதாகவே சொல்லிக் கொண்டது.

நிமிர்ந்த அவன் கண்கள் சிவந்திருந்தன. அது சினமேறிய கண்கள்.

“தெறக்கமுடியாத பூட்டுக்கு கதவ எட்டிஉதச்சானாம்…”

“யாரு கெழவி …”என்றான்.

“யாரோ ஒருத்தன்… நீ எங்க போற…”

“வயக்காடெல்லாம் மழத்தண்ணி… மோட்டை எடுத்துவிட்டு வடியவிடனும்…”

“ பசி தாங்கல….” என்றபடி எழுந்து நடந்தாள்.

சங்கரி கண்ணனைப் பார்த்தாள். அவள் பார்வையை விலக்கி நடந்தான். மண்வெட்டியுடன் வந்த வெங்கடேசுடன் பேசிக்கொண்டே முக்கால் பேண்ட்டின் பாக்கெட்டில் அலைபேசியை வைத்தபடி திரும்பிப் பார்த்துவிட்டு சென்றான்.

கணுக்காலில் பட்டின் மென்மையுடன் நித்யமல்லி உரசியது. சட்டென்று கால்களை நகர்த்திக் கொண்டாள். அவிழக் காத்திருந்த மொட்டுகள் வானத்தை நோக்கி நீண்டிருந்தன. குனிந்து அதன் இலைகளை, மலர்களை, தளிர்களை, தடவினாள். அய்யா வேட்டியை சற்றுச் சுருட்டியபடி வாசல்படியில் அமர்ந்திருந்தார். கண்களும் புன்னகையும் அவளை அருகில் அழைத்தன.

கா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை

எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையை கண்டுகொள்ளும்வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம்.

 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இருமை’ சிவாவின் படைப்புலகின் ஆதார இயல்பை சுட்டிக்காட்டுவது. நாவல் தன்மை கொண்ட, தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. உற்சாகமாக சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் வேலனிடம் அவன் மணக்க விரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் என கதைசொல்லி சங்கரன் போட்டுடைக்கிறான். “அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதை சொன்னதற்கு அவனின் கந்தர்வ புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம்.” என எழுதுகிறார். இந்த பலூனில் ஊசிக்குத்தும் சின்னத்தனம் பல கதைகளில் வெளிப்படுகிறது. வேலன் குடும்பத்திற்காக உழைத்த லட்சிய இளைஞன். சங்கரனுக்கு எப்போதும் அவன் மீது லேசான எரிச்சலும் பொறாமையும் உண்டு. இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு செல்லும் சங்கரன் வேலன் தன் குடும்பத்தை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு ஒரு சேரிப்பகுதியில் வாழ்வதாக கேள்விப்பட்டு சந்திக்க செல்கிறான். வாழ்வின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு வந்த கதையை வேலன் சொல்கிறான். வெற்று கவுரவத்தால் வேலனின் வாழ்வை தன் குடும்பத்தினர் அழித்து விட்டதாக புகார் சொல்கிறான். “எதிரிகளை பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டணும். உடனிருக்கிறவங்கள பழி வாங்கனும்னா அழிச்சுதான் காட்டணும்.” என சொல்கிறான். தன்னை அழித்துக் கொள்வதன் வழியாக குடும்பத்தை பழித்தீர்ப்பதாக எண்ணிக் கொள்கிறான். “ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடணுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்பக்கமும் அதே தூரம் போகணும்ல,” என்றொரு வரி கதையின் மையத்தை சுட்டுகிறது. ஒருவகையில் சிவாவின் கதைகளின் மையமென இந்த வரியையே சொல்ல முடியும். உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையிலான ஊசல். ‘அவரவர் இடம்’ சாலியும், ‘விரிசல்’ சங்கரனும், ‘நிறைவு’ கலாவும் ‘சுமத்தல்’ லக்ஷ்மி டீச்சரும் ஒருமுனை என்றால் ‘இழத்தல்’, ‘நண்பனாக’ ‘பந்தயம்’ போன்ற கதைகள் மறுமுனை.

சிவாவின் மொழி நேரடியானது. காட்சிப்பூர்வமானது. கம்மாய்கள், மழுவய்யனார் கோவில், வயல்காடுகள், கோவில் திருவிழாக்கள், புளிய மரங்கள் என யாவும் காட்சி அனுபவங்கள் அளிக்கின்றன. காட்சிகள் அரிதாகவே கவித்துவமாகவோ அல்லது படிமங்களாகவோ விரிகின்றன. ‘இருமை’ கதையில் தனது இரு துருவங்களுக்கு இடையிலான அலைச்சலை பற்றி வேலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘பசும் பொன்னிற வேப்பம் காய்களை உண்ணும் காக்கைகள் தோலுக்குள் இருக்கும் சதைப் பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை நழுவ விடுவதை’ வேலன் கவனிப்பது ஒரு நல்ல குறியீடு.‌ அவசியமானதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை தவிர்த்துவிடலாம். எதற்கு உனக்கு இந்த ஊசலாட்டம் என கேட்பது போலிருந்தது. ‘பரிசு’ கதையில் ‘காலை வெயில் போலத்தான் இப்போதும் படர்ந்துள்ளது. ஆனால் காலையில் தோன்றும் மகிழ்வு இப்போது இல்லை. ஒளி நீடிக்கும் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் மகிழ்வு அது. மறையப் போகிறதே என்பதுதான் மனதில் சுமையாக ஏறி மென்சோகத்தை மாலையில் உண்டாக்குகிறது.’ இந்த வரிகளும் ஒருவகையில் சிவாவின் ஆதார கவலையை சுட்டுவதாக கொள்ள முடியும். ஒளி மறையப் போகிறதே எனும் பதட்டம். அல்லது எப்படியும் மறைந்துவிடும் எனும் அவநம்பிக்கை.

 

தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான விரிசல் இதே பார்வையின் நீட்சியை கொண்டிருக்கிறது. பழுதற்ற பரப்பின் மீது சிறு விரிசல் தென்பட்டால் கூட மனம் அந்த விரிசலை நோக்கியே குவியும். அதை பூதாகரமாக்கும். எங்கும் எதிலும் நாம் விரிசலையே தேடுகிறோம், அதையே கண்டுகொள்கிறோம். சங்கர் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறான். ஒரு விடுமுறை நாளில் உணவகத்திற்கு அவசர ஆர்டர் வருகிறது. தயங்கினாலும் ஒப்புக்கொண்டு அவனும் அவனுடைய உதவியாளன் சுப்புவுமாக சமைத்து கொண்டு போய் கொடுக்கிறார்கள். முன்பணமாக கொஞ்சம் பெற்றுக்கொண்டு மீதியை உங்களுக்கு உணவு திருப்தியாக இருந்தால் கொடுங்கள் என சொல்லிவிடுகிறான். சங்கர் சமைக்கும் முறை விவரிக்கப்படுகிறது. ‘உள்ளே செல்லும்போதிருக்கும் சங்கர் அல்ல, சமைப்பவன். சமைக்கும்போது வேறொரு தனியுலகில் இருப்பவன்.’ கவனம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் சமைக்கிறான். மறுநாள் மீதி பணத்தையும் பாத்திரங்களையும் பெற செல்பவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது. தி. ஜானகிராமன் – நாஞ்சில்நாடன் கதையுலகை சேர்ந்த கதை. தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. அகங்காரச் சிறுமையும் அதை மீறி எழும் அகவிரிவையும் பேசுகிறது. ‘ஆனா என் நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்துச்சு மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால அறமும் தோக்குற காலம் வந்திடிச்சு போல,’ என சங்கர் சொல்வது தான் நன்மையின் மீதான அவநம்பிக்கையாக வெவ்வேறு கதைகளில் பரிணாமம் கொள்கிறது.

‘அவரவருக்கான இடம்’ இந்த நன்மையின் மீதான வெறுப்பை சொல்லும் மற்றுமொரு நல்ல கதை. சாலி தன் போக்கில் சரியாக நடந்துகொள்கிறாள். அப்படி சரியாக நடக்கும் பெண் பிறருக்கு பெரும் தொந்திரவாக ஆகிறாள். காரணமற்று வெறுக்கப்படுகிறாள். அவள் வீழ்வதற்காக ஊர் மொத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. நிமிர்வின் மீதான பொது வெறுப்பை எப்படி புரிந்து கொள்வது? எனது நண்பன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தான். மொத்த அலுவலகத்திலும் பணம் வாங்காத ஒரே ஆள் அவன்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு குடைச்சல். அவர்களுள் ஒருவன் இல்லை, தனித்தவன் என்பதே சிக்கல். இப்படிப்பட்டவர்கள் அளிக்கும் மன தொந்திரவு என்பது நம்மை பற்றிய சுய மதிப்பீட்டை குலைப்பது. நேர்மையின்மைக்கும் தீமைக்கும் சந்தர்ப்பத்தை குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக அதே சூழலில் ஒருவர் வாழ்ந்து காட்டுவது சமநிலையை சீர்குலைப்பது. நமது கீழ்மையை நமக்கு உணர்த்துபவர்கள் பெரும் பாதுகாப்பின்மையை அளிக்கிறார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில், ஒன்று அவர்கள் சமூக போக்குடன் இயைந்து சராசரிகளுள் ஒருவராக ஆக வேண்டும். அப்போது அனைவரும் ஆசுவாசம் கொள்வார்கள். அல்லது அவர்களை மண்ணிற்கு மனமிரங்கி வந்த கடவுளாக்கிவிட வேண்டும். அப்போது அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் மனித யத்தனங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ செயலாக, லீலையாக ஆகிவிடும். இக்கதையில் சாலி கடவுளாக்கப்படுகிறாள். இந்த இரண்டு எதிர்வினைகளுக்கு அப்பால் மனிதர்களை அவரவர் இடத்தில் வைத்து நோக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே சிக்கல். கதை இறுதியை ஒரு பெரும் தாவல் வழியாக வந்தடைகிறார். நாட்டார் தெய்வங்கள் உருவாகும் வரலாறு புரிந்தவர்களால் கதையின் தாவலை புரிந்துகொள்ள முடியும்.

சாலி பதின்ம வயதில் கோபமும் ஆங்காரமும் கொண்ட சாமானிய பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் ஒருமுறை அவளுடைய சின்னாத்தா வசைபாடியதை பரணிலிருக்கும் சிறிய திறப்பின் வழியாக பார்த்தபோது வார்த்தைகள் கேட்காத ஊமைப்படம் போல இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. அப்போது மின்னல் வெட்டென வெறுப்பை விலக்கி நோக்கும்போது எல்லாமே வேடிக்கையாக தெரிவதை கண்டடைகிறாள். வேலன் காக்கைகள் வேப்பம்பழத்தை உண்ணுவதை காணும்போது ஏற்படாமல் போன மின்னல் சாலிக்கு ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான வேறுபாடும் கூட. ‘நிறைவு’ கதையிலும் காரணமற்று பொழியப்படும் அன்பு உண்டாக்கும் எரிச்சலும் பொறாமையும் ஒரு முக்கிய சரடாக வருகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கலா எனக்கு தனிப்பட்ட முறையில் வானவன் மாதேவியை நினைவுபடுத்தினார். ஒவ்வொருவரின் மனத்திலும் இனிமையாக மட்டுமே தங்கிவிட வேண்டும் என எத்தனிக்கும் ஆன்மாக்கள். கல்பற்றாவின் சுமித்ராவை போல். ஆனால் சாலியை போல் தான் கலாவிற்கும் அவளுடைய மேன்மை மரணத்திற்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறது.

‘கண்ணாடியின் மிளிர்வு’ தொகுப்பின் முதல் கதை. சலிப்பற்ற நன்நம்பிக்கையாளர்களின் மீதான நல்லதொரு பகடிக்கதையாக வாசிக்க முடியும். அத்தை மகளின் கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக கதைசொல்லி தன் அம்மாவுடன் துக்கம் விசாரிக்க செல்கிறான். அவனுடைய கதை, அத்தை மகளை அவனுக்கு திருமணம் செய்விக்க இருந்த திட்டம் நிறைவேறாத கதை என பலவும் சொல்லப்படுகிறது. மலர்கொடி அத்தை எல்லாவற்றிலும் நேர்மறைத்தன்மையை பார்க்கும் கண் உடையவர். உற்சாகம் குன்றாத, சோர்வடையாத ஆளுமை. குறையிலும் நிறை காணும் நன்நம்பிக்கையாளர். சிறிய வீடாக இருந்தால் பராமரிப்பது எளிது என்பவர். மூத்த மகன் காதல் திருமணம் செய்துகொண்டபோது பெண் தேடும் வேலை மிச்சம் என்றவர். மருமகனின் மரணத்தை எப்படி நேர்மறையாக சொல்வார் எனும் குறுகுறுப்புடன் செல்கிறான் கதைசொல்லி. அவன் எதிர்பார்ப்பு அம்முறையும் ஈடேறியது.

‘நண்பனாக’ நட்பின் மேல்பூச்சுக்கு அடியில் இருக்கும் பொறாமையை சொல்லும் கதை. கதைசொல்லியும் அவனது நண்பன் கண்ணனும் பெண் கேட்டு செல்கிறார்கள். கண்ணன் பொன்னழகை விரும்புகிறான். அவள் இவனை நேசிக்கிறாளா இல்லையா என தெரியாததால் நேராக பொன்னழகின் அம்மாவிடமே பெண் கேட்டுச்செல்லலாம் என தீர்மானிக்கிறார்கள். பொன்னழகை கண்ணன் திருமணம் செய்துகொள்ள முக்கிய காரணம் அவனுடைய நடையற்று போன அம்மாவை அவள் நன்கு கவனித்துக் கொள்வாள் என்பதுதான். ஏனெனில் வளர்ச்சி குன்றிய அக்காவை பொன்னழகு பராமரிப்பதை கவனித்திருக்கிறான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்றை கதைசொல்லி கவனித்திருக்கிறான். “புன்னகையுடனே உள் நுழைந்தவள் உள்ளே அமர்ந்திருந்த அவள் சகோதரியை பார்த்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட அலுப்பா வெறுப்பா அல்லது சலிப்பாக என பகுத்தறியவியலா ஓர் உணர்வுடனான அம்முகம்.” கண்ணன் கதைசொல்லியிடம் அவன் முன்னர் செய்வித்த பள்ளி நண்பனின் திருமணத்தை நினைவுகூர்ந்து விசாரிக்கிறான். அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இறுக்கமாக நடப்பவன் அந்த நண்பனின் அம்மா கண்ணீருடன் தன் மகன் வாழ்வு சிக்கலானதற்கு அவன்தான் காரணம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. வீட்டை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நண்பனாகயிருப்பவன் எப்போதும் நண்பனின் நலத்தை மட்டுமே நாடுபவனாகவே இருக்கு வேண்டியதில்லை. சில நேரங்களில் சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் பெரிய பிழையில்லை என்று என் மனதிற்கு சொல்லியபடி இன்று எண்ணியபடியே எல்லாம் நடந்ததால் நிம்மதியுடன் நடந்தேன்.” ஒரு தளத்தில் இது பொறாமையை சொல்லும் கதையாகவும் மற்றொரு தளத்தில் இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்கு குற்றவாளியாக்கப்பட்டவன் எனும் முறையில் பொறுப்பிலிருந்து விடுபட்ட நிம்மதியின் கதையாகவும் தென்படுகிறது.

‘இழந்தது’ இதுவும் இரண்டு நண்பர்களின் கதைதான். நண்பனின் துரோகம் வழியாக நட்பை இழக்கும் கதை. சம்பத் பிரபா என இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். மூன்றாவது நண்பனான தேவாவை அவர்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிலில் சேர்த்துக் கொள்ளாத நண்பனுடனான கணக்கை உரிய சமயத்தில் தீர்க்கிறான். ‘நிம்மதி’ கதையில் கணவரும் மனைவியுமாக மனைவியை காதலித்தவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இறுதி திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட கதை.

சிவாவின் பல கதைகளில் கதை இறுதியில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. அவ்வகையில் செவ்வியல் சிறுகதை வடிவத்தையே பெரும்பாலான கதைகளிலும் கைக்கொள்ள முயல்கிறார். கணவர் தன் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்தவர். காதலித்தவர்களுக்கு தங்கள் இணை திருமணமாகி சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறார்களா என எப்போதும் ஒரு அச்சமும் குழப்பமும் இருக்கும். அதை நீக்கினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதை மனைவியை காதலித்த (ஆனால் அவர் பதிலுக்கு காதலிக்காக என்று நம்பப்படும்) ராமகிருஷ்ணனுக்கு உணர்த்தவே கணவன் சட்டென அந்த முடிவை எடுக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு நிம்மதி ஏற்படுத்த சென்று மனைவியின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம். இம்மூன்று கதைகளிலும் சிவா மானுட உறவுகளின் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அடையாளம் காட்டுகிறார். இவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகின் நீட்சி என்றொரு எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அவருடைய ‘தோழிகள்’ இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு இடையே ஊடாடும் அன்பும் வன்மமும் பதிவான கதை.

தொகுப்பில் மூன்று கதைகள் சற்றே அமானுடத்தன்மை கொண்டவை என சொல்லலாம். ‘கள்ளம் களைதல்’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதைசொல்லி அல்லது கதை நாயகனின் பெயர் சங்கராகவே உள்ளது.‌ சங்கர்களில் தொடர்ச்சியும் தனித்துவமும் உள்ளன. எங்கள் பகுதிகளில் ஏழூர் செவ்வா என்பது ஒரு முக்கியமான திருவிழா. அதன் பின்புலத்தில் ஊர் வழக்கங்களை அறியாத ஆனால் ஊரைச் சேர்ந்த சங்கருக்கு நண்பன் குமார் விளக்குவது தான் கதைவடிவம். சிவாவால் இவ்வாறு ஒன்றை சீரிய முறையில் விளக்க முடிகிறது. உதாரணமாக ‘இழந்தது’ கதை வாசித்து ஒருவர் சீட்டு கம்பெனியில் எப்படி ஏமாற்றலாம் என தெரிந்து கொள்ள முடியும். கதையில் ஊர் புள்ளிகளுக்கு காழாஞ்சி கொடுப்பதற்கு முன் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. கந்தன் தன்னுடைய மனைவியின் கையை பாலன் பிடித்து இழுத்ததாக பிராது கொடுக்கிறான். இதற்கு பின்பான பாத்திர சித்தரிப்புகள், விவரணைகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இரு தரப்பிற்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என உணரச்செய்யும் சாதுர்யம் வெளிப்படும். சங்கருக்கு ஊர் வழக்கங்களை விளக்கிச்சொல்லும் குமார் வழியாக கதையின் பிற சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. “கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது.‌ ஒரு வருசத்துக்கு அப்புறம் வந்து அவன் கையப்பிடிச்சான் இவன் அங்க தடவுனான்னு சொல்றது” என சொல்கிறான்‌. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி பாலனின் குற்றத்தை உறுதி செய்தபோது குமார் மீண்டும் கிசுகிசுப்பான குரலில் “அதானே பார்த்தேன் விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னு” என்கிறான். மேல்தளத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கும்போதே அடியில் வேறொன்று ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சிவா. பாலனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையிலான உறவு பேசப்படுகிறது. அவர் மீது “நல்லதை மட்டுமே போதிப்பதினால் வந்த வெறுப்பு” இது சிவாவின் பாத்திர வார்ப்புகளில் ஒரு தொடர்ச்சி. அபாரமான அமானுட தருணத்தில் கதை நிறைவுறுகிறது. ஒரு சுவாரசியமான ஆவணத்தன்மையுடன் பயனிக்கும் கதை அதன் இறுதி வெளிப்பாட்டின் காரணமாக வேறொரு மெய்யியல் தளத்தை அடைகிறது.

‘பந்தயம்’ கதையும் அமானுட முடிவு கொண்ட கதைதான். கருக்கிருட்டில் அவனுடைய அக்கா வராததால் புளியம்பழம் பொறுக்க தனியாக செல்கிறான் சிறுவன் ராமன். சிறு சுழல் காற்று வீசியதும் அவனுக்கு கடந்த மாதம் அவனுடன் பந்தயம் போட்டு கண்மாய்க்குள்ளிருந்து தாமரை கொட்டையை எடுக்க சென்று கொடியில் சிக்கி செத்துப்போன சுந்தரத்தின் நினைவு வருகிறது. அது அவனுடைய ஆவி என்று அஞ்சுகிறான். சுந்தரத்தின் மரணத்திற்கு அவன்தான் காரணம் எனும் குற்ற உணர்வு அவனுக்கு. ஏதோ ஒன்று தன்னை தொடர்வதாக அஞ்சி வேகவேகமாக பிள்ளையார் கோவில் திண்ணையை நோக்கி, அங்கே சிலர் உறங்குவார்கள் என்பதால் ஓடுகிறான். ஒன்றுக்கு கழிக்கச் செல்லும் காவக்காரரின் ஓசைகளோடு அவனை தொடர்ந்த சுழலின் ஓசையையும் கேட்கிறான். அவர் கீழே விழும் ஓசையும் பிறகு அவரை தூக்கி செல்வதையும் உடலை தூக்கி செல்வதையும் ஓசைகளாக உணர்கிறான். விடிந்தபின் கதைசொல்லி ஆசுவாசமடைந்து எழுந்து செல்கிறான். ஏன்? தனக்கு நிகழ வேண்டியது காவக்காரருக்கு நிகழ்ந்து விட்டது என்பதாலா? தான் எஞ்சியிருப்பதாலா? திறந்த முடிவு கொண்ட கதை. ஒரு பேய்க் கதையாகவோ மனப்பிராந்தியை சொல்லும் கதையாகவோ வாசிக்க முடியும்.

சில கதைகளில் புலப்படும் அதீத திறந்த தன்மை ஒரு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. ‘விளையாட்டாய்’ கதைசொல்லி சிறுவயதில் விளையாட்டாய் உறவினனும் பால்ய நண்பனுமான சீனியை கிணற்றில் தள்ளிவிட்டதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வழியில் மகனை பாம்பு கடிப்பதும் இணை வைக்கப்படுகிறது. இந்த இணைவைப்பு ஒரு அகவயமான தொடர்புறுத்தல் மட்டுமே. எனினும் இந்த தொடர்பில் மெல்லிய மிஸ்டிக்தன்மை உள்ளது. சாமி பாம்பு வடிவத்தில் வரும் என நேற்று யாராவது சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன் எனும் ஒரு வரி அளிக்கும் சித்திரம். இக்கதைகளில் நாட்டார்கூறுகள் வலுவாக தென்படுகின்றன.

 

தொகுப்பின் சற்றே பலவீனமான கதைகள் என ‘சுமத்தல்’ ‘பரிசு’ ஆகிய கதைகளை சொல்லலாம். இரண்டுமே பள்ளிகால நினைவேக்க கதைகள். ‘சுமத்தல்’ கதையில் நினைவுகூரலாக மட்டும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொண்டு வரலாறு பாடம் எடுத்த லட்சுமி டீச்சர் வாழ்க்கையும் வரலாற்று ஆளுமையான ராணி லட்சுமி பாயும் இணை வைக்கப்படுகிறார்கள். வெளிப்புற மிடுக்குக்கு உள்ளே மருகும் சாமானிய பெண் இருப்பதை கண்டு கொள்கிறான் கதைசொல்லி. ஆனால் அதை வெளிப்படுத்தாததற்கு டீச்சர் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காமல் இருந்தாலும் என் இருநிலையிலும் கூடும் சுமையை சொல்கிறது. ‘பரிசு’ இறுதி முடிச்சு கொண்டு காலம்காலமாக பெண்களின் உள்ள கிடக்கை சொல்ல முயல்கிறது.

வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன.

பெரும்பாலான கதைகள் ‘பதாகை’ இணைய இதழில் வெளியானவை. ‘பதாகை’ வழியாக மற்றுமொரு எழுத்தாளர் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. சிவாவின் கதைகளின் நிலப்பரப்பு நான் வாழும் செட்டிநாடு – அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. செவலாங்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது சென்னையில் அரசு பணியில் உள்ளார். 45 வயதில் இலக்கிய உலகிற்குள் எழுத்தாளராக அறிமுகமாகிறார். எழுத்தாளர் கா. சிவாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதாகை சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் எழுதிவரும் திறமையான புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பதிப்பிக்கும் வாசகசாலைக்கும் வாழ்த்துக்கள்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடி

29.9.20

லூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்

Poem

In the early evening, as now, as man is bending
over his writing table.
Slowly he lifts his head; a woman
appears, carrying roses.
Her face floats to the surface of the mirror,
marked with the green spokes of rose stems.

It is a form
of suffering: then always the transparent page
raised to the window until its veins emerge
as words finally filled with ink.

And I am meant to understand
what binds them together
or to the gray house held firmly in place by dusk

because I must enter their lives:
it is spring, the pear tree
filming with weak, white blossoms.

Louise Glück, 1943


கவிதை

இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்
தன் எழுத்துமேஜை மீது குனிந்திருக்கும் ஆடவனொருவன்.
அவன் மெதுவாகத் தலையுயர்த்துகிறான்; ரோஜாக்களுடன் ஏதிர்வருகிறாள் பெண்ணொருத்தி.
ரோஜாத் தண்டுகளின் பசும் ஆரங்கள்
முத்திரையிடும் அவள் முகம் ஆடியில் மிதந்தெழுகிறது.

இதுவும்கூட ஒருவிதத்
துயரம்தான்: பின் எப்போதும், அதன் நாளங்கள்
மை நிரம்பிய வார்த்தைகளாக உயிர்த்தெழும் வரையில்
ஜன்னலெதிரே உயர்த்தப்படும் ஒளிபுகும் வெற்றுக் காகிதம்.

ஒருவருக்கொருவருடனும்
அந்தி அதைப் பெயரவிடாமல் பற்றியிருத்தும் சாம்பல் வீட்டுடனும்
இருக்கும் பிணைப்பை
நான்தான் அர்த்தப்படுத்த வேண்டும் போல

அவர்கள் வாழ்வுகளில் நான் புகவேண்டும் என்பதால்;
இதோ வசந்தகாலம், பேரிக்காய் மரத்தின் மீதோ
வலுவற்ற வெண்மலர்ப் படலம்.

மொழியாக்கம்: நகுல்வசன்


லூயி க்ளூக்கின் ‘கவிதை’ -நகுல்வசன் மொழியாக்கம் பற்றி சில குறிப்புகள்

நோபல் விருது அறிவிப்புக்கு முன் லூயி க்ளூக் பெயர் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும்கூட அவருக்கு விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளித்தது. சென்ற நூற்றாண்டின் பின்பாதிப் பகுதியும் இந்த நூற்றாண்டின் முதற்பகுதியும் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு உரியவை, அவர்கள் கிளாசிகல் ருஷ்ய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கு இணையாக வைத்துப் பேசப்படப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் மற்றுமொரு சான்று இது. அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ பலம் காரணமாக இந்த விருது வழங்கப்படவில்லை, அதன் பராக்கிரமம் குன்றி வரும் காலம் இது.

நகுல்வசன் மொழிபெயர்ப்பு க்ளூக் கவிதைக்கு ஒரு அறிமுகமாய் அமைகிறது. மேற்கத்திய இலக்கியத்தை அதன் வம்சாவழி பற்றிய புரிதல் இல்லாமல் முழுமையாய் உள்வாங்கிக் கொள்ள இயலாது. ஆனால், அது ஆய்வுத்துறைக்கு உரியது. அவர்கள் வழியே நமக்கு வந்து சேர வேண்டியது. அது இல்லாத நிலையில் நாம் நம்மளவில் சரியாகவோ தவறாகவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மொழியாக்க நோக்கு அது குறித்து கவலை கொள்ளத் தூண்டும் நிமித்தமாக அமைகிறது.

கவிதையின் தலைப்பே ‘கவிதை’ என்பதால் இது கவிதையைப் பற்றிய கவிதை என்ற எண்ணத்துடன் வாசிக்கத் துவங்கலாம்.

“இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்/ தன் எழுத்து மேஜை மீது குனிந்திருக்கிறான் ஆடவனொருவன்,” என்று துவங்குகிறது கவிதை. போலொரு தெரியும், போன்றதொரு தெரியும், அது என்ன போலதொரு? (ஹைப்ரிட் எழுத்தாளரான நகுல் வசனின் ஹைப்ரிட் சொல்லாக்கம் இது, அவருக்கேயுரியது இருந்துவிட்டுப் போகட்டும்.) ‘இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்’ என்பதில் வரும் அந்த ‘இப்போது’ புதிர்த்தன்மை கொண்டதே. ஆனால் க்ளூக் சொல்ல வருவது புரிகிறது. இளமாலைப் பொழுதை கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறார், அது நிகழ்தன்மை கொண்டது. கவிதையை நாம் வாசிக்கும் இக்கணம், இளமாலைப் பொழுது. இப்பொழுது ஆடவனொருவன் தன் எழுத்து மேஜை முன் குனிந்து அமர்ந்திருக்கிறான். அவன் மெல்ல முகம் தூக்கிப் பார்க்கிறான். ஒரு பெண் வருகிறாள், அவள் கைகளில் ரோஜாக்கள். “ரோஜாத் தண்டுகளின் பசும் ஆரைகள் முத்திரையிட / ஆடியில் மிதந்தெழுகிறது அவள் முகம்.” “marked with the green spokes of rose stems,” என்று க்ளூக் எழுதுகிறார். ஸ்போக்ஸ் என்றதும் நமக்கு உடனே சைக்கிள் சக்கரத்தின் கம்பிகள் நினைவுக்கு வருகின்றன. இது ஏதோ ரோஜா தண்டுகளாலான வட்ட முத்திரை போலிருக்கிறது, அவள் முகத்தின் மீது தன் குறி இட்டிருக்கிறது- “Her face floats to the surface of the mirror.” கண்ணாடி எங்கிருந்து வந்தது? நினைவின் உருவகம் அது என்று நினைக்கிறேன். தன் எழுத்து மேஜை மீது குனிந்திருப்பவன் முகம் தூக்கிப் பார்க்கிறான்- அவன் முன் ஒரு பெண் ‘தோன்றுகிறாள்’, appears. இது நினைவில் தோன்றும் மாய உரு என்பதால்- ‘ஆடியில் மிதந்தெழுகிறது அவள் முகம்’. அதில் ரோஜாத் தண்டுகளின் முத்திரை. எப்போதும் போல் இப்போதும் அவள் ரோஜாக்கள் கொண்டு வருகிறாள். அவளும் ரோஜாவும் ஒன்றென அவன் நினைவில் ஆகிவிட்டவள்.

“It is a form/ of suffering,” என்பதை, “இது ஒரு வகை துயர வடிவம்,” என்றும் வாசிக்கலாம். அவன் நிமிர்ந்து பார்ப்பதும், அவள் ரோஜாக்களுடன் தோன்றுவதும். இது புகைப்படம் என்றால் இருள் அறையில் அதன் உருவம் வளரும். ஆனால் இது மனப்படம், ஒளியில் அதன் உருவம் முழுமை பெறுகிறது. எப்போதும் ஒளி ஊடுருவும் காகிதம் ஜன்னலுக்கு எதிரே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது, மெல்ல மெல்ல அதில் சொற்கள் தோன்றுகின்றன, அவை அந்தக் காகிதத்தின் நாளங்களை வெளிப்படுத்துகின்றன. காகிதத்தின் உயிரோட்டம், அதன் நாளங்களின் வரைபடம், சொற்களால் புலப்படுத்தப்படுகிறது. ஒளி வரைந்து முடிக்கும் வரை காகிதம் ஜன்னலின் முன் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. அந்தப் பெண், கவிஞனின் muse, அவன் எழுத்தைத் தூண்டும் தேவதை, என்று நினைக்கிறேன். அவள் நினைவில் அவன் எழுதுகிறான், இந்தப் பத்தி படிமச் சித்தரிப்பைக் கொண்டு, கவிதை உருவம் பெறுவதை விவரிக்கிறது.

ஆங்கிலத்தினுடன் ஒப்பிடாமல்கூட இதைச் சொல்லலாம்-

“இதுவும்கூட ஒருவிதத்
துயரம்தான்:”

என்று சொல்லி விட்டு,

“பின் எப்போதும்,
அதன் நாளங்கள்
மை நிறைந்த வார்த்தைகளாய்
உயிர்த்தெழும் வரை
ஜன்னலெதிரே உயர்த்தப்படும்,
ஒளிபுகும் வெற்றுக் காகிதம்,”

என்பது நல்ல தமிழாக்கமாய்த்தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த துயரத்தை நாம் இன்னமும் சற்று நுட்பமாக வாசிக்கவும் கவிதை இடம் தருகிறது. அந்த பெண் எழுத்தைக் தூண்டும் தேவதையாக படிமாக்கப்படுகிறாள். அந்தப் உன்னதப் படுத்தலில் மட்டுமே அவளுக்கு அவன் மனதில் ஒர் உயிர்ப்புள்ள அடையாளம் அளிக்கப்படுகிறது. அந்த உன்னதத்திற்கும் அப்பால் அவளுக்கு எப்போதுமே ஒளி ஊடுறுவதற்காக காத்திருக்கும் வெற்றுத் தாளின் அடையாளம்தான். கவிதையைப் பிரசவிப்பதால் தேவதையாக மாறிவிடும் அவள் மற்ற சமயங்களில் பிறரால் நிரப்பப்படும் ஒரு கொள்கலனாக மட்டுமே இருக்கிறாள் என்பதே இதில் தோய்ந்திருக்கும் சோகம். கவிதை தனது பிறப்பையும் அதை தற்போது நமக்காக கூறிக் கொண்டிருக்கும் அவ்விருவரின் மகள் அல்லது மகளின் பிறப்பையும் பேசுவதாகவும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கவிதையின் பணி என்ன? அர்த்தப்படுத்துதல், பொருளாதல். இந்தக் கவிதையில் அதன் பணி என்ன? அவர்கள் இருவரையும் எது பிணைக்கிறது என்பதை அர்த்தப்படுத்த வேண்டும், அல்லது, அந்திப் பொழுது உறுதியாய்ப் பற்றி இருத்தும் சாம்பல் வீட்டுடன் அவர்களைப் பிணைத்திருப்பது எது என்பதை அர்த்தப்படுத்த வேண்டும். நேற்று, இன்று, அங்கு, இங்கு, என்றில்லை. இது எப்போதும் நிகழில். கவிதையின் துவக்கத்தில் சொன்னது போல், ‘இப்போதைப் போலதொரு இளமாலைப் பொழுதில்,” இதெல்லாம் நடக்கிறது. ஆனால் இப்போது என்ன அந்திப் பொழுதா? இதை வேறு திசையிலிருந்து அணுக வேண்டும்.

அந்திப் பொழுது சாம்பல் நிற வீட்டை அதன் இடத்தில் உறுதியாய் இருத்தி வைத்திருக்கிறது, அதனுடன் அவர்களுக்கும் ஒரு பிணைப்புண்டு, அது என்ன என்பதே கவிதையின் விசாரணை. சாம்பல் நிறம்- ஒளியும் அல்ல, இருளும் அல்ல, அவற்றுக்கு இடைப்பட்டது. அந்த வீட்டை அதன் இடத்தில் உறுதியாய் இருத்தி வைத்திருப்பது அந்திப் பொழுது, அது ஒளியும் அல்ல, இருளும் அல்ல. இந்த ‘இடை’ வெளி, உருமாற்ற கணம், இதுவே கவிதைக்கு உரியது. கவிதைக்கு மட்டுமல்ல, கவிஞனுக்கும், கவிதா தேவிக்கும் உரியது. கவிதையை நாம் வாசிக்கும் இக்கணம், இதுவும் ஒரு அந்திப் பொழுது, பொருளுக்கும் பொருளின்மைக்கும் இடைப்பட்ட கணம் இது என்பதால்.

இந்தப் புரிதலின் தேவை என்ன? இக்கணத்தில், இவர்கள் இருக்கும் இடத்தில், கவிதை பிறக்கப் போகிறது- “அவர்கள் வாழ்வுகளில் நான் புகவேண்டும் என்பதால்:” கொலோன் குறி இவர்கள் வாழ்வு இன்னது என்று சொல்கிறது: “இதோ வசந்த காலம், பேரிக்காய் மரத்தின் மீதோ/ வலுவற்ற வெண்மலர்ப் படலம்.” ஆங்கிலத்தில், ‘filming with weak, white blossoms,’ என்று அழகாக வருகிறது. வலுவற்ற, வெண்ணிற, அன்றலர்ந்த அரும்புகள் திரை போர்த்திருக்கிறது. வசந்தம் வந்து விட்டது. கவிதை அல்லது குழந்தையின் பிறப்பு என்பது மகிழ்வளிக்கும் விஷயமே. ஆனால் இது மட்டுமே ஒரு மணவாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்குப் போதுமானதா என்பதை இறுதி வரியின் “வலுவற்ற” என்ற உரிச்சொல் அடியறுக்கிறது. இக்கவிதையின் புரிதல் வலுவற்று நிழலாடும் நம் மனவாழ்வுக்கும் பொருந்தும், எனினும் இக்கணம் இனிய கணம்.

(குறிப்பு: டகுல் பாச்)