Author: பதாகை

வண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா

உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட தென்னை ஓலை கீழே சரிந்து கிடந்தது , உதிரி பூக்கள் வீட்டு முன்ஓடையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது , ஒருகால் செருப்பு ஒன்றும் அதில் புதைந்திருந்தது, முன்மங்களாவில் இருந்து அடுக்காளை வரை கதவு திறந்து கிடந்தது, துஷ்டி விசாரிக்க வந்த பெண்கள் ஒரு கையால் வாயை மெதுவாக பொத்தியும் திறந்தும் குசுகுசுவென கதை அடித்து கொண்டிருந்தனர், காந்தி வெளியே நின்று “யம்மோவ் வெளுப்பு துணி இருந்தா போடுங்க” என்று கத்தினாள் , தாத்தா சம்சாரம் மாடவிளக்கு அருகே சுருண்டு படுத்திருந்தாள், மருமகள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் சென்று ஆங்காங்கே சுருட்டி கிடந்த துணிகளை பொருக்கி வந்தனர், மெட்ராஸ் காரி வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் பிரட்டிக்கொண்டிருந்தாள்.

மூத்தவள் பெரிய வேஷ்டியை வாசல் முன் விரித்து மொத்தமாய் துணியை போட்டதும் காந்தி உச்சஸ்தாயில் கத்தினாள், “இங்கேருக்கா ஒழுங்கா எண்ணி போடு, இல்லே துணிய காணும் மணிய காணும்னு எங்க மேல பழிய போட்ருவீங்க, ஒவ்வொன்னா போட்டுக்க”, இவள் கூறியதை கேட்டு மூத்தவள் துணிகளை போட இளையவள் சின்ன காகிதத்தில் துணிகளின் எண்ணிக்கையையும் வகையையும் குறித்து கொண்டாள், பெகளம் முடிந்ததும் மெட்ராஸ் காரி மெதுவாய் எழுந்து வந்தாள், காந்தியை நோக்கி “சரிம்மா உள்ள வந்து டீ குடிச்சிட்டு போமா” என்றாள், மூத்தவளும் இளையவளும் திருதிருவென விழித்தனர், பின்னே ஒரு வண்ணாத்தி வெள்ளாளன் வீட்டுக்குள் செல்லலாமா, “ஏன் கா உன் வீட்டு தீட்டு எனக்கும் புடிக்கத்துக்கா” என்று கோபப்பட்டவள் , “துணி ரெண்டு நாள் கழிச்சு கிடைக்கும் ” என்றபடி நடையைக்கட்டினாள், பாவம் மெட்ராஸ் காரி ஊருக்கு ஒரு கட்டுப்பாடு, சம்பிரதாயம் உண்டு என்று அறியாதவள், இதுவும் ஊருக்கேற்றபடி மாறிக்கொள்ளும்.

காந்தி முப்பது, முப்பத்தைந்து வயதை ஒட்டிய பெண்,கருமையான ஒடிசலான தேகம், ஒட்டிய வயிறு, எப்போதும் வெளிறிய பாவாடையும் சட்டையும் அணிவாள், கூந்தலை பின்னி சட்டை நிறத்துக்கு ஏற்றபடி ரிப்பன் கட்டிக்கொள்வாள், இவளுக்கு இரண்டு அக்கா மூத்தவள் ரெத்தினம், இளையவள் முத்து, இந்திரா நகர் இறக்கத்தில் வண்ணான்குடியில் இவர்கள் குடியிருந்தனர், வீட்டுமுன் அடையாளமாய் பெரிய கரியநிற மண்பானை புகை கக்கிய படி இருக்கும்.

மூட்டை மூட்டையாய் துணிகளை கட்டி பழையாறு வண்ணான்துறைக்கு பொழுது விடியும் முன்னே சிறு கூட்டம் செல்லும், ஆற்றங்கரை ஓரம் பெரிது பெரிதாய் கருங்கற்கள் நிரப்பி துவைப்பதற்கு வசமாய் எழுப்பிருந்தனர், கரையிறங்கி நுழையும் பாதையில் தென்னந்தோப்பு இருந்தது வெவ்வேறு, நிறங்களில் துணிகள் நீளமான கயிறுகளில் தென்னையில் கட்டப்பட்டு காற்றின் வேகத்தில் அசைந்தாடும், துணி அலச, குத்தி துவைக்க, அடித்து வெளுக்க என தனி ஆள் உண்டு, தூக்குவாளியில் கஞ்சியும் துவையலும் கட்டிக்கொண்டு அத்தனையும் துவைத்து காயப்போட்டு, காய்ந்ததை எடுத்து மடிக்கும் போது கருக்கள் நேரமாயிடும், இடையிடையே பாட்டு கச்சேரியும் உண்டு.

ரெத்தினத்திற்கும் மற்ற பெண்களை போல ஜோராக கல்யாணம் நடந்தது, மாப்பிள்ளை பாண்டிக்காரன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒருநாள் வீட்டு வாசல் முன் வள்ளியூர்காரி வந்து ஒப்பாரி வைத்தாள், சேதி அப்போதுதான் இவளுக்கு உரைத்தது, வந்தது முதல் சம்சாரம், ஆங்காரம் எடுத்த ரெத்தினம் அவனை வாரியலை எடுத்து அடித்தே விரட்டினாளாம், இந்த சம்பவம் நடந்தபின் மூன்று பெண்கள் தனியாய் வசித்தாலும் எள்ளளவு கூட ஆண்கள் நுழைய முடியாது, ரெத்தினத்தின் வைராக்யம் தான் என்னவோ தங்கச்சிகள் கூட கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.

இப்போதைக்கு வெளுப்புக்கு ஆட்கள் குறைவு, ஒன்றிரண்டு குடும்பங்களே இன்றும் இதை தொடர்ந்து செய்துவருகின்றனர், வண்ணாக்குடியில் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், அக்கா தங்கச்சிமாரின் பாட்டா வழி உறவுமுறை இசக்கிமுத்துவும் நாகராஜனும் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர், வண்ணான்குடியில் பள்ளி சென்ற முதல் தலைமுறை இருவரும் , இதுவும் காமராஜர் காலத்தில் வீட்டுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு இழுத்து வந்து படிக்க வைத்ததால் நடந்தது, படிப்பில் கெட்டிக்காரனாக இல்லாமல் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் அரசுவேலையும் கிடைத்தது, அக்கம்பக்கம் வசித்த பலர் இதை பார்த்து பொசுங்க ஆரம்பித்தனர், டீக்கடையிலும் சலூனிலும் இவர்கள் காதுப்படவே பொரும ஆரம்பித்து விட்டனர், அதிலும் இசக்கிமுத்து சைக்கிள் ஓட்டி போகும் போது தாங்க முடியாத சூடு சிலர் பின்னால் ஏறி மூலக்கடுப்பு வந்தவர்களும் உண்டு.

வண்ணான்குடியில் ஆட்கள் வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர், இன்று ஊர்காரர்களுக்கு துணி வெளுக்க காந்தி குடும்பம் மட்டுமே, வாரத்திற்கு இரண்டு மூன்று நாளைக்கு ஆற்றங்கரை செல்லுமளவுக்கே தொழில் இருந்தது ,மற்ற நாள் இவர்கள் தேவையில்லை, துவைப்பு இயந்திரமும் வந்தாச்சு , ஒருவேளை துஷ்டி விழுந்தால் இவர்கள் இல்லாமல் காரியம் நடக்குமோ, வீட்டில் இழவு விழுந்தால் நாவிதனை தேடுவதுதான் பெரிய வேலை, பாடை கட்டணும், கதம்பம் அடுக்கி கடைசியில் ஆத்துமண்ணை எழுப்பி குழி போட அவனை விட்டால் ஆள் இல்லை, இப்போதெல்லாம் ஊர்குடிமகன் என்று நாலைந்து ஊருக்கு ஒரு நாவிதன், அவனும் வேறு தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டான், ஆனால் துஷ்டி வீட்டில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானம் அல்லவோ,,எரியூட்டி வந்த அடுத்த நாள் காடாற்று, இறந்து எரியூட்டிய நாள் வரைக்கும் குவிந்த அழுக்கு துணிகளை வீட்டில் துவைக்க கூடாது, வண்ணான் மட்டுமே வெளுக்க வேண்டும். காந்தி வீட்டில் அடுப்பெரிவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

நெடுநாளாய் ஊர்க்கூட்டம் கூடவேண்டும் என்று இசக்கிமுத்துக்கு ஒரு எண்ணம் உண்டு, ஊரை சுற்றி எல்லா தெருக்களிலும் கோயில் உண்டு, ஆனால் இங்கே ஒரு சாமியும் இல்லை, இவர்கள் தெய்வம் மாடனும் ஆத்தங்கரைக்கு செல்லும் பாதையில் தான் கோயில் கொண்டுள்ளார், கோயில் என்று கூறமுடியாது பழுத்த ஆலமூடின் முன் எழுப்பப்பட்ட மண் பீடம் மட்டுமே, வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வழிபடுவதை தவிர, ஆண்டுக்கு ஒருமுறை வரி பிரித்து சித்திரை கடைசி வெள்ளி சேவல் பலிகொண்டு ஊர்க்கொடை நடத்துவது வழக்கம், இசக்கிமுத்துக்கு தோன்றியது மாடனை இங்கே மண் பிடித்து எழுப்பி வழிபடுவது அல்ல, வெள்ளாளத்தெரு, ஆசாரிமார் தெரு, சாலியர் தெரு, செட்டித்தெரு, சன்னதி தெரு, ரதவீதியில் வழிபடுவது போல பிள்ளையார் கோயில், கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மொத்த ஊருக்கும் அன்னதானம் போடவேண்டும் . இந்த எண்ணத்தை இவர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும், வீட்டுக்கு வரி பிரிக்க வேண்டும், எம்.எல்.ஏ, கவுன்சிலர் இவர்களிடம் பெரிய நன்கொடையும் , கடைத்தெரு வியாபாரிகளிடமும் கிடைக்கும் நன்கொடையை வசூலித்து கொள்ள வேண்டும், இது சாத்தியமா என்பது அவனுக்கு தெரியாது, ஆனால் இதை எப்படியாவது தன் தலைமுறையில் செய்து காட்டவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு இருந்தது.

இதைப்பற்றி நாகராஜனிடமும் பேச்சுக்கொடுத்தான், நாகராஜன் அப்பிராணி, தாசில்தார் அலுவலகத்தில் கணக்கர் வேலை, வேலைக்கேற்ற மரியாதையை எதிர்பார்த்தான், அவனுக்கு அடுத்தபடி உதவியாளர் வேலை பார்க்கும் முத்துசாமிக்கு கிடைக்கும் கால்வாசி மரியாதை கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம், ஏன் நாகராஜனின் பெயர் கூட முதுகுக்கு பின்னால் வெளுப்புக்காரன்தான், உள்ளூர பொருமி என்ன லாபம், எதிர்த்து கேட்க திராணி இல்லை, எத்தனை நாள் இதை எண்ணி வருந்திருப்பான், தூக்கமின்றி தவித்திருப்பான். இசக்கிமுத்துவின் யோசனை சரி என்றே பட நாகராஜனும் ஒத்துக்கொண்டான். இசக்கிமுத்துவும் சாதாரண ஆள் இல்லை, புலியை பூனையாக்குவான், எலியை யானையாக்குவான், இதனாலே ஆட்சியர் அலுவலகத்தில் ஊரில் என்ன வேலை நடக்க வேண்டுமென்றாலும் பெரிய தலைகள் இவன் வீட்டிற்கு நேரில் வந்து பேசி போவதுண்டு, காலம் மாறித்தானே ஆக வேண்டும், நம் பிள்ளைகளும் தலை குட்டப்பட்டே வாழ வேண்டுமா, பல சிந்தனைகள், இறுதியாக இசக்கிமுத்துக்கு காரியம் முதல்வகையில் கைகூடியது, வண்ணான்குடிக்கு புது பெயரும் முடிவு பண்ண வேண்டும்

இசக்கிமுத்துக்கு தெரியும் வண்ணான்குடியில் நாகராஜனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம், ஆள் அப்பிராணி எனவே இல்லை என்று சொல்லாது கேட்போருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவன், இவன் சொன்னாலே காரியம் நடக்கும், ஊர்கூட்டம் நாகராஜன் வீட்டிலே நடக்க விருப்பப்பட்டான், நாகராஜனும் சரி என்று சொல்ல கூட்டம் கூடும் நாள் முடிவு செய்யப்பட்டது. ஊர்மக்கள் நாகராஜன் வீட்டு முற்றத்தில் கூடினர், இசக்கிமுத்து இவனிடம் கூறிய எல்லாவற்றையும் கூட்டத்தில் எடுத்துரைத்தான், ஆதரவும் ஒரு சேர எதிர்ப்பும் உண்டானது, காந்திக்கு கோயில் கட்டுவது கூட பெரிதாய் தோன்றவில்லை ஆனால் தெரு பெயரை மாற்றினால் எங்கே தன் தொழில் கெடுமோ என்ற அச்சம் மனதில் உருவானது.

கூட்டத்தில் எல்லோரும் அமைதியாய் நிற்க, காந்தி குரல் எழுப்பினாள் “அண்ணே, எல்லாம் சரி கோயிலு கட்டுவோம், சேந்து சாமி கும்பிடுவோம்,தெருக்கு எதுக்கு புது பேரு, எங்க மூணு பேருக்கு இருக்க ஒரே பொழப்பு துணி வெளுக்கதுதான், வண்ணான்குடி பேர மாத்தினா வெளுக்க வாரவன் எங்க போவான், இப்போவே ஆடிக்கும் அமாவாசைக்கும் தான் வேல, இதுல எதாவது இடஞ்சல் வந்தா, நாங்க நாண்டுக்கிட்டுதான் நிக்கணும்”, “இங்க பாரு பொம்பளைகளா, இது ஊரு ஒண்ணா எடுத்துருக்க முடிவு, இதுனால உங்களுக்கு ஒன்னும் இடஞ்சலு வராது, வருமானம் வரத்தான் செய்யும்,, வேல நடக்கும், ஆனா இனி எவனும் நம்மல வண்ணான்குடி, வண்ணான் லா கூப்பிட கூடாது” என்றதும், கூடியிருந்த மக்களுக்கு எதுவானாலும் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பது போல் நமக்கும் ஒரு கோயில் என்பதே பிரமிப்பை கொடுத்தது, அக்கா தங்கச்சிமாருக்கு மாத்திரம் மனம் சங்கடத்துடன் குழம்பி இருந்தது. ஊரே விளக்கை அணைத்து நிம்மதியாய் உறங்க, ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது

ஒருவழியாக அனைவரும் ஒருசேர கோயில் கட்டுவது என முடிவு செய்தனர், தெரு தொடக்கத்திலே கோயில் கட்ட இடம் தேர்வு செய்தனர், இசக்கிமுத்து முனிசிபாலிட்டியில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டான், எம்.எல்.ஏ வை அழைத்து அடிக்கல் நாட்டினர், வடலிவிளை தங்கப்பன் மேஸ்திரி கோயில் எழுப்ப, மைலாடி கணபதி ஸ்தபதி சிலை வடிக்க என எல்லாம் முடிவாயிச்சு, முதல் பெரும்தொகையை நாகராஜன் கொடுக்க இசக்கிமுத்து அறகுழு பொறுப்பை எடுத்து வேலையை முழுவீச்சில் செய்தான், எல்லாவற்றிக்கும் கணக்கு எழுதினான், கோயிலும் எழும்பியது.

சாமிக்கு பெயர் தேர்வு செய்வதுதான் பாக்கி இருக்கும் வேலை, ஊரே கூடி வடிவீஸ்வரம் ராமய்யரை பார்த்து பெயர் தேர்வு செய்ய கோரினர், பலபெயர்கள் விவாதித்து இறுதியாக சித்தி விநாயகர் என முடிவு செய்யப்பட்டது, ராமய்யர் தலைமையில் எம்.எல்.ஏ முன்னிலையில் அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடந்தது, இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது, இசக்கிமுத்துக்கும் நாகராஜனுக்கும் விழா முடிவில் எம்.எல்.ஏ சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

ஒரு வாரம் கழிந்து, இசக்கிமுத்து தெரிந்த பெயிண்டரை அழைத்து தெருமுகப்பில் ‘சித்தி விநாயகர் கோயில் தெரு’ என பெரிதாய் எழுத சொன்னான், அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் இதை ஆச்சர்யமாகவே கண்டனர், எது எப்படியோ இனி இது வண்ணான்குடி கிடையாது சித்திவிநாயகர் கோயில் தெரு என்பதில் நாகராஜனும் இசக்கிமுத்துவும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

வருடாபிஷேகமும், பன்னிரண்டு வருஷத்திற்கு முறைக்கொரு நடத்தும் கும்பாபிஷேகமும் இருமுறை செழிப்பாய் நடந்து முடிந்தது. சித்தி விநாயகர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி ஆனார். திருநீறில் நனைத்த கயிறை இக்கோயிலில் பூஜித்து கையில் கட்டிக்கொண்டால் வியாதி குணமாகுமாம், கோயிலை சுற்றியிருந்த ஓலை குடிசையும், ஓட்டு வீடும் காணாமல் போயாச்சு, மாடிவீடுதான் எங்கும், அலங்கார கற்கள் விதித்த வீதி, சாக்கடைகள் எல்லாம் சிமெண்டால் மேல் வாக்கில் மூடி கிடந்தது, தண்ணீர் தொட்டி புதிதாய் போன ஆண்டுதான் திறக்கப்பட்டது.

அந்திநேரம், பள்ளி விட்ட குழந்தைகள் தெருவில் சுதந்திரமாய் விளையாடிக்கொண்டிருந்தனர், பூணூல் சட்டைக்கு வெளியே தெரிய வெளுத்த குண்டு பையன் கண்களை பொத்திக்கொண்டு எண்களை எண்ண ஆரம்பிக்க, சிலுவை கழுத்தில் தொங்க சுருள் முடி பையனும், கருத்த சட்டை போடாத பையனும் ஒழிய இடம் தேடி தட்டழிந்தனர். இதனிடையே குழந்தைகள் இடையே சிரிப்பு சத்தம், ஒழுங்காய் வாராத நரைத்த தலையும், பாவாடை சட்டையும் அணிந்த ஒடுங்கிய ஒருத்தி தலையில் துணி மூட்டையை சுமந்து கொண்டு தெருவில் இருந்த ஒரே இருண்ட குடிசையில் நுழைந்தாள், குழந்தைகள் அவள் பின்னாலே ஓடி நளி அடித்து கொண்டிருந்தனர், குடிசையில் இருந்த கிழவி ஒருத்தி வெளியே வந்து குழந்தைகளை விரட்டினாள் ,”எட்டி காந்தி ஏண்டி இவ்ளோ நேரம், சீக்கிரம் வாளியை எடுத்துட்டு போய் டீ வாங்கிட்டு வா” என்று மூட்டையை சுமந்து வந்தவளை பார்த்து கூறினாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்த வயதான, தடித்த, முடி எல்லாம் வெண்பஞ்சாய் நிறைத்த ஒருவர் மனதுக்குள் நினைத்து கொண்டார் “இந்த சனியன்கள இங்கிருந்து விரட்டணும்” , மெதுவாய் நகர்ந்து கோயில் வெளியே இருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே “உம்மால தான் நல்லாருக்கேன் ஆண்டவா” என்று வேண்டிக்கொண்டார், இக்கோயிலை பார்க்கும் போதெல்லாம் வடக்கூரில் வாங்கிப்போட்ட தென்னத்தோப்பும் நியாபகம் வருவதுண்டு, கோயில் முன் வேண்டி நிற்கும் போதே, பின்னால் இருந்து மற்றொரு வயதானவர் “ஏலேய், இசக்கி முத்து வா போவோம்” என்றார். “இந்தா வந்துட்டே நாகராஜா” என்றபடி அவர் வர, இருவரும் அங்கிருந்து நடந்து முக்குதெரு ஆறுமுகம் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அன்பில் – கமலதேவி சிறுகதை

தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டதும் கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தி,சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார்.சற்று மூச்சுவாங்கியது. அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது.

இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா என்று தோன்றியது.இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழே வந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்த வயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரிசெய்து திரும்பினார்.

வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம்  நம்பர்ஒன் டோல்கேட் என்று அவர்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும். இதோ வந்துட்டோம்மா என்று மனசுக்குள் நினைக்காமலா இருப்பார்கள் என்று நினைத்தபடி மேற்குபக்கம் திரும்பி தெருவைப்பார்த்தார்.

காலை ஔியில் வீட்டுகேட்டிற்கு நேராக விரிந்த பாதையின் முடிவில் சங்கரன் நாய்கள் சூழ நின்றிருப்பது தெரிந்தது. அதைக்கண்டதும் சுந்தரவள்ளியம்மா  சங்கரனிடம் இன்று சொல்லிவிடவேண்டும் என்று தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்.

சருகுகளை அள்ளி மூலையில் குவித்தபடி சங்கரன் கேட்திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவர் வெளியே நாய்களுக்கு ரொட்டிகள் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நாய்களின் பவ்பவ்வ் என்ற குழைந்து தாழ்ந்த குரலால் தெரிந்தது. அவர் உள்ளேவந்து செருப்பை சுழற்றிக்கொண்டிருக்கையில் , “நில்லுங்கய்யா,”என்ற சுந்தரவள்ளியம்மா விளக்குமாரை கீழே போட்டுவிட்டு சங்கரன் அருகில் வந்தார்.

சங்கரன், “ஈரமா இருக்குல்ல மெதுவா வாங்கம்மா.சமயபுரத்துக்கு நடக்கற பொம்பளையாளுக என்னா வேகங்கறீங்க.. நம்மளால போட்டி போட முடியாதும்மா.காலையில இருந்து கும்பல் கும்பலா எத்தனை ஆட்கள்,”என்றார்.இந்தமனிதனிடம் எப்படி வீட்டைக்காலி பண்ண சொல்வது என்று சுந்தரவள்ளியம்மாவிற்கு மனதிற்குள் ஓடியது.

“ஆமாங்க.இனிமே அம்மாவுக்கு பூபோடுவாங்க. இப்படித்தான் வருவாங்க.உங்களுக்கு புதுசுல்ல…அப்பறம் கொஞ்சநாளாவே சொல்லனுன்னு இருந்தேன்….”என்றபடி சேலைமுந்தானையால் முகத்தைத் துடைத்தார்.

“என்னம்மா…”

“வீட்டக்காலி பண்ணமுடியுங்களா?”

“ஏம்மா தீடீர்ன்னு இப்படி சொல்றீங்களே…”என்று கண்களை விரித்துப் பார்த்தார்.

அவரின் கண்களைப்பார்க்காமல் அவருக்குப் பின்னாலிருந்த புங்கைக்கன்றைப்பார்த்தபடி“இல்ல…மூணுமாசம் அவகாசம் எடுத்துக்கங்க..”என்றார்.

“நீங்களும் ரிடையர்டு கப்பில்ஸ் தானே..திருச்சிக்கு வெளிய அமைதியா இந்த வீட்டப்பிடிக்க நாங்க பட்ட சிரமம் உங்களுக்கே தெரியுங்களே!”

அவரிடம் என்ன சொல்வது அவர் என்று தயங்கிக்கொண்டிக்கையில் சுந்தரவள்ளியம்மாவின் துணைவர் மேலிருந்து இறங்கி படிகளில் நின்றபடி, “குட் மார்னிங் சார்,”என்றார்.

“எனக்கு குட்மார்னிங் இல்லையே சார்,”

பத்மநாபன்,“வீடு காலிபண்றதுபத்தி பேசறீங்களா?”என்று உடனே நேரடியாகக் கேட்டார்.

“ஆமா…என்ன திடீர்ன்னு….”

“சார்..உங்கக்கிட்ட மறைக்க ஒன்னுமில்ல.நீங்க இப்படி வெளிய போகவரப்ப…வீட்டுக்கு முன்னாடி நாய்களுக்கு தீனி வைக்கறதால நாய்க இங்கயே சுத்தி வருது.நெறய பேர் கம்ப்லெய்ண்ட் பண்றாங்க.சின்ன பிள்ளங்க பயப்படுதுக,”

“இதுவரைக்கும் ஒருநாயும் ஒன்னும் பண்ணலயேங்க..”

“சார்…உங்களுக்கே தெரியும்.நாய் எப்ப என்ன பண்ணுன்னு.எதாவதுன்னா நீங்கதான் ஹவுஸ்ஓனர்.. பதில் சொல்லனுன்னு மூணாவதுவீட்டு எஸ்.ஐ வேகமா சொல்றார்..”

மூவரும் எதுவும் பேசாமல் கொஞ்சம் நேரம் நின்றார்கள்.பத்மநாபன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தபடி,“நாய்க சத்தம் நிம்மதியா இருக்க விடுதில்ல சார்…”என்றபடி மோட்டாரை தட்டிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட சென்றார்.

சுந்தரவள்ளியம்மா மெதுவாக படிகளில் ஏறத்தொடங்கினார்.

பத்மநாபன் ஒவ்வொரு செடியாக மரமாக தொட்டபடி தண்ணீர் விடத்தொடங்கினார். சங்கரன் உள்ளே சென்றதும்,தனம்மா வெளியே வந்து, “ வீடுகாலிபண்ண சொன்னீங்களாமே,”என்றார்.

“எங்களுக்கும் சங்கடம் தான். அவர இந்த நாய்களுக்கு தீனி போடற பழக்கத்த விட சொல்லுங்க.அதான் பிரச்சனையே..”

“இதுக்காக வீடு மாறிக்கிட்டே இருக்கோம்…சொன்னா கேட்டாதானே..இந்த முடியாத ஒடம்ப வச்சிகிட்டு வீடு மாத்தறது ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க..சொன்னா கேட்காத ஜென்மம்..”என்று படிகளில் அமர்ந்தார்.

அடுத்து இரண்டு நாட்களில் வீட்டின் முன்பு நாய்களின் சத்தம் கேட்கவில்லை. மீண்டும் அந்தமுடக்கில் அவர் நாய்கள் சூழ நின்றுகொண்டிருந்தார். அன்று அவர் மனைவி வீட்டிலிருந்த பிரட்,பிஸ்கெட் பைகளை எடுத்து வெளியில் வீசி கதவை மூடினார்.

அன்று இரவில் நாய்களின் சத்தம் குழைவான குரலைக் கேட்டு எழுந்த சுந்தரவள்ளியம்மா கழிவறைக்கு சென்றபின் வெளியில் எட்டிப்பார்த்தார். சங்கரன் தெருவிளக்கின் அடியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நாய்களுக்கு ரொட்டிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்நாய் அனேக இடங்களில் கடிவாங்கிய அடையாளம் தெரிந்தது.அது ஒருகாலைத்தூக்கி அவரின் தொடைமேல் வைத்து அழைத்தது.அவர் திரும்பி அதற்கு ரொட்டியை நீட்டினார்.அவர் சிரித்தபடி அதன் தலையில் தட்டினார். ஒருவாலறுந்த சிறுவன் முன்பின் தெரியாமல் சற்றுதூரம் ஓடியும் ,அருகில் வந்தும் காலை முகர்ந்தும் அழிச்சியாட்டியம் செய்து கொண்டிருந்தான்.அவர் அதன் கழுத்தைப்பிடித்து தூக்கிப்பார்த்து சிரித்தார்.அது உடலை வளைத்து நான்குகால்களையும் வாலையும் உள்ளிழுத்துக்கொள்வது, சட்டென்று மகளின் ஸ்கேனில் பார்த்த குழந்தையை போலத் தெரியவும் சுந்தரவள்ளியம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. ஜன்னலை சாத்திவிட்டு சுவரில் சாய்ந்து நின்றார்.

காலையில் எழுந்ததும் பத்மநாபனிடம், “ஏங்க..இது பாவமில்லயா? அவரு என்ன தப்புப் பண்ணிட்டார்ன்னு வீட்டக்காலி பண்ணனும்.நல்ல மனுஷங்க..”என்றார்.

“பாவமும் இல்ல…மண்ணாங்கட்டியுமில்ல. அந்த எஸ்.ஐ எப்படி மிரட்றாப்ல பேசறார் தெரியுமா?”

“நாம என்னத்துக்கு அவருக்கு பயப்படனும்..அவருக்கு நாய்ன்னா ஆகாதோ …என்னவோ..”என்று எழுந்து கீழே வந்தார்.

கோலமிட்டப்பின் மோட்டார் சாவியைத்தேடு கையில் சுற்றுசுவரின் சிறுபொந்தில் ஒரு ரொட்டிப்பை தட்டுப்பட்டது. சுந்தரவள்ளியம்மா திரும்பி மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று உள்ளே தள்ளி வைத்தார். நிமிரும் போது மீட்டர் பெட்டி மேல் ஒரு ரொட்டிப்பை கண்ணில்பட்டது. அதன் அருகில் செல்லும் போது பத்மநாபன் மாடியிலிருந்து இறங்கும் ஓசைக்கேட்கவும் திரும்பி, தண்ணீர் குழாயின் அருகில் சென்றார்.

இதென்ன கூத்து என்று அவருக்கு எரிச்சலாக வந்தது.உள்ளுக்குள் ஒரு பயம்.இன்னும் எங்கெங்கு ரொட்டிப்பைகள் கிடக்குமோ என்று.

அதை இவரிடம் சொல்லி விடலாம் என்று தோன்றும் கணம் ஒரு மெல்லிய பூ இறகு ஒன்று சுந்தரவள்ளியம்மாவின் மனதை மறைத்தது. அடுத்துவந்த நாட்களில் இரவில் நாய்களின் குறைப்புகள் அதிகமாக கேட்டு தூக்கத்தை கெடுத்தது. சிலஆட்கள் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுப்போனார்கள்.

சங்கரன் வீட்டிற்குள் சத்தம் கேட்டுக்கொண்டிப்பதை மேல்மாடியில் இருக்கும் இவர்கள் கேட்டபடியிருந்தார்கள்.

மஞ்சு,“வாடகைக்கு விடறப்பவே யோசிச்சிருக்கனும் மாமா..”என்றாள்.

“வயசானவங்க என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு விட்டாச்சு,”

“நான் சொல்லியிருந்த என்ஞ்ஜினியர வேணுன்னா இங்க குடிவைக்கலாம் மாமா..நமக்கும் நல்லது.தோட்டத்து மரங்கள வெட்டிட்டு சீக்கிரம் ஆகவேண்டியத பாத்தா நல்லதுன்னு அவரும் சொல்றார்.வீட்டக்கட்டி வாடகைக்கு விட்டா..வீடுகட்ற வேலையும் முடியும் .வருமானமும் வந்தமாதிரி இருக்கும்,”

“அதுக்குள்ள என்னம்மா? இந்தவீடுகட்டி ஐஞ்சுவருஷம்தான் ஆவுது.மரங்க செடிங்க இருந்தா நல்லதுதானம்மா.அந்த சின்னஎடத்தையும் அடைக்கணுமா ?”

கீழே தனம்மாவின் குரல் வேகமாகக் கேட்டது.

“தினமும் ஓயாம எதாச்சும் சலசலன்னு… அவங்க நெனக்கறபடி இருக்கனுன்னா அவங்க வீட்ல இருக்கனுங்கத்த, இதெல்லாம் தேவையா..சீக்கிரம் வெரட்டனும். நாசூக்கா அவங்களே காலிபண்றது நல்லது”

“அந்தம்மாவுக்கு சுத்தமா நாய்கள கண்டா ஆகாது..இவரு இப்படி.என்ன மஞ்சு பண்றது..சிலபேருக்கு சொன்னாதான் புரியுது”என்றபடி சுந்தரவள்ளியம்மா பெருமூச்சுவிட்டார்.

பத்மநாபன்,“இங்கபாரு சுந்தரம்..தனம்மாக்கிட்ட கண்டிப்பா சொல்லிடு.இவரு சரிப்பட்டு வரமாட்டார்.நமக்கு தொல்ல..இதென்ன மனுசன்.அந்த மாமரத்து கொப்புக்கு நடுவுல பிரட் பாக்கெட் இருக்கு.ஒரே எறும்பு வேற…அதுகளுக்கும் ஒருபிரட்டை வச்சிட்டு போறார்,”என்றார்.

சுந்தரவள்ளியம்மா பேசவில்லை.

நாளைக்கு காலி பண்றோம் என்று சங்கரன் சொல்லும் நேரம் இருவருக்கும் அவர் முகத்தைப்பார்க்க சங்கடமாக இருந்தது.

அன்றும் பின்னிரவில் நாய்களின் குரல் சுந்தரவள்ளியம்மாவை எழுப்பியது.படுக்கையிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்தார்.அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வீடுகட்டி வந்த நாட்கள் நினைவில் எழுந்தன.மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகி அனுப்பி “அப்பாடா,” என்று நிம்மதியாய் அன்பிலில் அமர்ந்த நாட்கள் அவை. இவர்கள் இருவரும் மீண்டும் பேசிக்கொள்ளத் தொடங்கிய நாட்கள். பத்மநாபன் பேருந்திலிருந்து இறங்கி வந்து வாசலில் அமரும் அந்திப்பொழுதில் நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அன்றுகாலையில் வேலையிலிருந்து வந்தவர் வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கோலமிடும் சுந்தரவள்ளியிடம் பேசத்தொடங்கினார்.

“இத்தன வருஷமா இந்தப்பேச்ச மறந்திருதீங்களே..”

“மறக்கல சுந்தரம்.என்னமோ ஒரு அலைச்சல் மனசில. நாங்கூட வேல டென்சன்னு நெனச்சிருந்தேன். இப்பவும் அதே வேல தான்.ஆனா பாரு…பாரமா தெரியல. மனசு பாரத்தை எல்லாத்தையும் ஏத்தி ,வேலமேல வைச்சு இப்ப எறக்கியாச்சு,”என்று சிரித்தார்.

சுந்தரவள்ளி தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோழிகளை கூண்டுகளில் இருந்து திறந்துவிடவும் ,பத்மநாபன் வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டு தீனிகளை எடுத்து கலன்களில் இட்டார்.

சுந்தரவள்ளி சிரித்தபடி, “போதும் வாங்க..நாமளும் டீ குடிக்கலாம்.,”என்றார்.

“அந்த ப்ரவுன் கோழியும் அதோட குலவான்களும் நல்லா இருக்குல்ல..”

சுந்தரவள்ளி,“ம்..இதெல்லாம் பாப்பீங்களா! எங்கம்மா குடுத்துவிட்ட கோழி சேவன்னு தானே கண்டுக்காம இருந்தீங்க,”என்று புருவதை சுளித்தார்.

“ஆமா…யாருபுள்ள நீ. நீயும் ஒந்நெனப்பும்.அந்தம்மா செத்து பத்து வருசமாவுது. நம்ம கல்யாணத்து சமயத்துல கொடுத்த ரெண்டுஉருப்படிதானே? இப்ப ஐம்பது நூறா நிக்கிதுங்க…இதுகள பாக்கையில சந்தோசமா இருக்கும்.பஞ்சுருண்டையாட்டம்.. இக்குணூண்டு கண்.. துள்ளியூண்டு காலு..யாருக்குதான் பிடிக்காது..எதையும் சொல்லிக்கறதில்ல”

வாழ்வில் இப்படி சாவகாசமாக நிமிர்ந்து சாய்ந்தமர்வதற்குள், பாப்பாவின் பிள்ளைப்பேறு, மருமகளின் பிள்ளைப்பேறு என்று மீண்டும் திருச்சிக்கும், பெங்களூருக்கும் ஓடிக் களைத்த நாட்களில் அவரும் ஓய்வுபெற்று வீட்டில் அமர்ந்தார்.

தன்ராஜ்,“சும்மா இங்க இருக்கறதுக்கு திருச்சியில் வீட்டக் கட்டி அங்க இருங்க. நான் வெளிநாடு போயி நாலுகாசு பாத்துட்டு வர்றேன். இந்த சனியன்கள தலமுழுகுங்க. நாத்தம் தாங்கலன்னு எத்தனமட்டம் சொன்னாலும் கேக்கறதில்ல. கோழிப்பண்ண உங்கக்கிட்ட தோத்துப்போவும். யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரமுடியுதா..”என்றான். அவன் கால்களுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு குடுகுடு வென்று ஓடி தாயுடன் சேர்ந்துகொண்டது.

“இந்தவீட்டுக்கென்னடா…இதுங்கபாட்டுக்கு வெளியிலதானே திரியுதுங்க..முட்டைய முழுங்கையில நாத்தம் தெரியலயா? ஏன் உங்கூட வாரவுங்க திங்கமாட்டாங்களா?”

“நான் பேசறதுதான் பேச்சுன்னு பேசக்கூடாது. காலத்துக்கு தக்கன மாறலன்னா என்ன மனுஷங்க..”

“நீ மாறிக்க..நாங்கமாறி என்ன பண்ணப்போறாம். மனகலக்கந்தான் மிச்சமாவும்.ஒரு ஈ எறும்பு ஆகாத பொழப்பு..”

“சும்மா வெறும்பேச்சு வேணாம்.ரெண்டுபேரும் சுயநலமாக இருக்காதீங்க…”

“….!” பத்மநாபன் கண்களால் சுந்தரவள்ளியை பேசவேண்டாமென்றார்.

பத்துநாளைக்குள் அன்பிலில் அனைத்தையும் முடித்து திருச்சிக்கு மாற சொல்லி தன்ராஜ் ஆணையிட்டுவிட்டு சென்றான். என்ன தான் அவசரம்..மனுசர் என்ன ஒன்னுமில்லாத கல்லா என்று மனசுதாங்காமல் முதலில் கோழிகளை விற்க ஆட்களுக்கு சொல்லிவிட்டார்கள்.

வண்டியிலேற்றி கொண்டு சென்றபின் உதிர்ந்து கிடந்த வெள்ளை, அழுக்குவெள்ளை, பழுப்பு, கருப்பு ,காப்பி வண்ண சிறுஇறகுகள் மேலும் குறு இறகுகளை குமித்துவிட்டு அமர்ந்த சுந்தர வள்ளியிடம் பணத்தைக்கொடுத்த பத்மநாபன், “என்னைக்கிருந்தாலும் காசுக்குக் கொடுக்கறதுதானே..விடு,”என்றார்.

ஆமாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் நெடுநாட்கள் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்ததை நினைத்தபடி சுந்தரவள்ளியம்மா எழுந்து ஜன்னல் பக்கம் சென்றார்.

சங்கரன் சிமெண்ட் பாலக்கட்டையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் நாய்கள் அமைதியாகப் படுத்திருந்தன.ஒன்று எழுந்து நடந்தது.பெண்நாய் அவரின் கால் செருப்பில் முகம் வைத்துப்படுத்திருந்தது. குனிந்து அதைப் பார்த்தபடியிருந்தார். சுந்தரவள்ளியம்மா திரும்பி கண்களை துடைத்தபடி படுக்கையில் படுத்து மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சங்கரன் வீட்டைகாலி செய்து சென்று இரண்டு தினங்களாக நாய்கள் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன. கேட்டிற்கு அருகில் அச்சத்தோடு வருவதும் போவதுமாக பரிதவித்தன. இரவிலும் நாய்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

நாட்கள் மசமசப்பாக கடந்துசென்றன. நாய்களின் கூட்டம் குறைந்தது அல்லது வெவவேறு பொழுதுகளில் வந்துசென்றன.

வீட்டின் முன் வந்து குறைத்த இரண்டுமூன்று நாய்களை பத்மநாபன் விரட்டினார். சுந்தரவள்ளியம்மாள் தெருவைப் பார்ப்பதும்,ஜன்னல் அருகே நிற்பதுமாக பத்துநாட்கள் கடந்தன.

அன்று காலையில் கோலமிடுகையில் மிக அருகில் வந்த அந்த தளர்ந்த நாயை கண்டு சுந்தரவள்ளியம்மா நெஞ்சில் கைவைத்து எழுந்தார். பின்னால் ஒருசிறுவன்.ஒட்டிய வயிறு.மின்னும் கண்களுடன் வாலையாட்டிக்கொண்டிருந்தான்.

“வீட்ல குடிவச்சதுக்கு பாவி…படுபாவி என்னய இந்த இம்சைக்கு கொண்டுவந்து விட்டுட்டானே,”என்றபடி சுந்தரவள்ளியம்மா கதவை பிடித்துக்கொண்டு நின்றார். அவரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்த பத்மநாபன்,“என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்..சுந்தரம் .அன்பிலுக்கு போனதும் முதல்ல கோழி சேவலும் வாங்கனும்.அதுங்க காவலுக்கு இங்கருந்து ஒருநாய்க்குட்டிய தூக்கிட்டு போகனும்”என்றார்.

அந்த அம்மா அதை நெஞ்சோடு சேர்த்தபடி தலையாட்டினார். அவர் அந்தம்மாவின் தோள்களில் கைவைத்து, கண்களைத் தூக்கிக்காட்டி நாய்கள் பக்கம் சுந்தரவள்ளியம்மாவை திருப்பினார்.

என்னுடையது – காஸ்மிக் தூசி கவிதை

எதையாவது ஒன்றை
எழுதும்போதும்
எதையாவது ஒன்றை
கடன் வாங்க
வேண்டி இருக்கிறது
எவருக்கோ உரியதை
அவர் அனுமதி இன்றி
எடுத்துக்கொள்ள
வேண்டி வருகிறது

ஒரு எண்ணம்
ஒரு படிமம்
ஒரு சிந்தனை
ஒரு சொல்
ஒரு எழுத்து
மற்றும்
இவற்றைத்தாண்டியும்
இவற்றில் அடங்காததுமான
ஏதோ ஒன்று
அல்லது
ஒன்றுக்கும் மேற்பட்டது.

யாரோ ஒருவரின்
உடலில் இருந்துகொண்டு
எவரோ ஒருவரின்
இருக்கையில்
அமர்ந்து கொண்டு
பாதங்களிலில் படிந்துவிட்ட
துல்லியமாக
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத
காலத்தின் தூசை
துடைக்க முயன்றபடி

எதைப்பற்றியோ
எவரோ ஒருவர்
எப்பவோ
கற்பிதம் செய்தது போல
இதோ,
எழுதி முடித்து விட்டேன்.

இதில்
என்னுடையது
என்பது
எது?

கவியரசு கவிதைகள் – காற்றை நோக்கி செல்லும் பூ , ​​உயரத்தின் உச்சியில்

காற்றை நோக்கி செல்லும் பூ

ஒவ்வொரு இதழிலும்
பொய்யை வரைவதற்காக
வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது
அந்தப் பூவுக்கு
கோபம் வருவதே இல்லை

வரைந்த பொய்களை
பிற பூக்களுக்குக்கிடையே
நடித்துக் காட்டும்போது
அது அழுவதும் இல்லை

ஒருமுறை
பொய்யை எழுதும் போது
“நீ எழுதுவது பொய்தானே “
என்று குதித்த பூ
அதற்குப்பிறகு
வண்ணங்களற்ற வெள்ளைப் பாடலை
முனுமுனுக்க ஆரம்பித்தது

மற்றுமொரு நாளில்
பூவுக்காக
நறுமணங்கள் வாங்கி வந்த காற்று
பொய்களின் பருவங்களைக் கடந்து விட்டோம்
இனி வசந்தம் மட்டும்தான்
என மீண்டும் பேச ஆரம்பித்தது

காற்றை இரண்டாகப் பிரித்து
கட்டிக்கொண்ட பூ
“ரெண்டு பேருக்கும் செல்லமாம் ”
என்று சிரித்த போது
காற்று
பூவின் வேர்களில்
துகள்களாக உடைந்தது.

இந்த முறை
காற்று வெறுமனே வந்து
பூவை ஏந்திக் கொண்டு பறக்கிறது
ஒவ்வொரு கைகளாக
பூ நகர்ந்து
காற்று பிறக்குமிடத்துச் ​செல்கிறது.

​​உயரத்தின் உச்சியில்

உயரத்தின் உச்சியில்
வெறுமனே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது
பெயர் தெரியாத ஆடு

மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கும்
கூரான கொடிக்கம்பத்தில்
எனக்கான இடத்தைத்
தேர்வு செய்கிறவன்
கொடியை ஏற்றுமாறு அழைக்கிறான்

என் பெயரை
எதிரொலிக்காத மலைகளை
வெட்டித்தள்ள வேண்டும்.
இல்லாத காற்றை
எப்படிக் கொல்வது ?

வருகின்ற வழியெல்லாம்
என் குருதித் தடங்கள் காய்ந்து விடாமல்
அடைகாக்க வேண்டுமென்றேன்

தேன்துளிகளை நோக்கி
​​விரைந்து செல்கின்றன
தடங்களை அழித்தபடி
நகரும் எறும்புகள்

கரையான் புற்றுகளை உதைத்தவன்
உள்ளிருந்த காகிதக்கூழின்
நறுமணத்துக்குத் தீவைத்துப்
பரவ விடுகிறான்

பயந்து
நான்
பின்னோக்கி இறங்குகிறேன்.
கடலுக்குள் மூழ்குகின்றன
ஏறிய மலைகள்.

கோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்

இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” 

எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?

இலக்கியம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு பதிலாய் இருக்கும், ”கோவேறு கழுதைகள்” வாசித்து முடித்த, கோடைக்காற்று வீசும் இக் கென்யப் பின்னிரவில், நெகிழ்ந்து உணர்வு வசப்பட்டுக் கிடக்கும் இம்மனநிலையை எப்படி விவரிப்பது?. 4500 கிலோமீட்டர்களுக்கு அப்பால், கடல்தாண்டி இருக்கும், ஓர் ஆப்பிரிக்க நாட்டில், எழுதி இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், வாசித்து முடித்த ஒரு படைப்பு மனதை இந்த அளவிற்குப் பாதித்து, வசியம் செய்து, பரவசப்படுத்தி, வளர்ந்த கிராமத்தின் பதின்ம நினைவுகளையெல்லாம் தொட்டெடுத்து மீட்டி, மனம் நிறைத்து, பின்னிரவில் தூக்கம் மறக்க வைத்து, மங்கிய நிலவொளியில், கிளைகள் அசையும் மரங்களினூடே இப்படி நடக்க வைக்கிறதென்றால்…”இலக்கியம்” எனும் பேராற்றல் முன் வணங்கி நிற்கத்தான் முடிகிறது.

ஆரோக்கிய நிகேதனம்” படித்து முடித்த இரவிலும், “பிஞ்சர்” பார்த்த இரவிலும், “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படித்து முடித்த இரவிலும் இப்படித்தான், பண்ணையின் பசுங்குடில்களுக்கு நடுவே சூரிய சக்தி விளக்குகளின் வெளிச்சத்தில் இலக்கில்லாமல் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தேன். ஆரோக்கியத்தின் வாழ்வு இலக்கியத்தில் பதியப்பட்டு, சாகாவரம் பெற்றுவிட்டது. அவர் வாழ்வு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வியல், எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்டு விட்டது. இலக்கியம் இதற்குத்தானே?. ராச்சோறு எடுக்கும் ஆரோக்கியத்தின் “சாமி, உங்க வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி” என்ற வீட்டுவாசல் குரல், என் கிராமத்து நண்பன் ஆறுமுகம் வீட்டுவாசலில் எண்பதுகளில் கேட்ட அக்கம்மாவின் “அக்கம்மா வந்திருக்கேன்சோறு போடுங்க தாயி…” குரலை துல்லியமாக காதுகளில் ஒலிக்கவைத்தது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அக்கம்மாவின் அக்குரல் இந்த நள்ளிரவில் மனதில் மேலெழுந்து வந்து கண்களில் நீர் துளிர்க்க வைக்கிறது.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்கம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பம். தெப்பக் குளத்தின் தெற்குப்புறம் கடைசியில் இருந்த காலனியில் பின்பக்கமாயிருந்தது அவர்கள் வீடு. மண்வீட்டின் முன் கருவேல மரத்தில் கழுதை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ராச்சோறு எடுப்பதற்கு அக்கம்மாவோ, அவர் கணவனோ, சிலநாட்கள் அவர் பெண் பூரணமோ முன்னிரவில் வீடு வீடாகச் செல்வார்கள். பூரணத்திற்கு என்னைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னிரவு நேரத்தில், தெப்பக்குள சுற்றுச்சுவற்றில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சில நாட்களில், துவைத்த துணிகளை வீடுகளில் கொடுப்பதற்காக, பெரிய மூட்டையை தலைமேல் தூக்கிக் கொண்டு அக்கம்மாவுடன் செல்லும் பூரணத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் சாயங்காலம் சென்னம்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வரும்போது, தெப்பத்தின் கிழக்கு மூலையில் ஆலமரத்தடியில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தில், சைக்கிளை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பக்கத்தில் கூட்டத்தினருகே சென்று எட்டிப்பார்த்தேன். பஞ்சாயத்து போர்டு பிரெஸிடண்டோடு இன்னும் மூன்று நான்கு பெரியவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். இடுப்பில் துண்டோடு பூரணத்தின் அப்பா கைகூப்பி முதுகு வளைத்து நின்றிருந்தார். பக்கத்தில் அக்கம்மாவும், பூரணமும் தலைகுனிந்து கண்ணீரோடு நின்றிருந்தார்கள். பெரியப்பாவும், மாமாவும் தனியே மடக்கு சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காலனிப் பையன் ஒருவன் சட்டையில்லாமல் கிழிந்து போன பனியனோடும், இடுப்பில் துண்டோடும் எல்லோர் காலிலும் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. “இருபது ரூபா ஜாஸ்திங்க சாமி, தயவு பண்ணணும்” அந்தப் பையன் மறுபடியும் ஒரு பெரியவரின் காலில் விழுந்து கும்பிட்டான். ”நீ பண்ண தப்புக்கு இருபது ரூபா கம்மிடா” என்றார் ஒருவர். என்னைப் பார்த்துவிட்ட சீனி மாமா, முறைத்து வீட்டிற்குப் போகச்சொல்லி சைகை காட்டினார். நான் நகர்ந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வரும்வரைக்கும், பூரணத்தின் கண்ணீர் நிரம்பிய அந்தக் கண்கள்தான் மனதில் நின்றிருந்தது.    

பத்து/பனிரெண்டு வயதில் நான் பார்த்து, ஆழ் மனத்திற்குச் சென்று மறைந்து போன அக்குடும்பத்தை, இந்த நாற்பத்தாறு வயதில், “கோவேறு கழுதைகள்” ரத்தமும், சதையுமாய் கண்முன் கொண்டுவந்தது. அக்கம்மாவும், ஆரோக்கியமும் வேறுவேறல்ல. படிக்கும்போது அக்கம்மாவும் இப்படித்தானே வாழ்ந்திருப்பார் என்று யோசித்து யோசித்து மனம், நெடுகிலும் நெகிழ்ந்துகொண்டேயிருந்தது. இப்போது பூரணம் எங்கிருக்கிறாரோ, என்ன செய்துகொண்டிருக்கிறாரோபெருமூச்சுடன் அவருக்காக பிரார்த்தித்துக்கொண்டேன்.

உருட்டுக் கட்டையாட்டம் இருக்கிற இந்த உடம்பாலதான் ஊருல எல்லார்கிட்டயும் எனக்குச் சண்டை வருது. கீழ்ச் சாதின்னு கூடப் பார்க்காமக் கடிக்க வரானுங்க. மீசை நரைச்ச கெயவன்கூட எங்கிட்டக் கேலி பேசுறான். கோவமா வருது. என் அடி வவுத்தையே பாக்குறாங்க. நா இனிமே துணி எடுக்கப் போகல”  மேரியின் அழுகைக் குரல் மனதை என்னவோ செய்கிறது. எது நடந்துவிடக் கூடாது என்று மேரி பயந்துகொண்டிருந்தாளோ, அச்சம்பவம் நடந்த அத்தருணம்சடையனிடம் மாட்டிய மேரியின் கெஞ்சும் குரல்மனதை அறுப்பது

வாண்டாம் சாமி…”

தப்பு சாமி…”

நல்லதில்ல சாமி…”

மானம் மருவாத பூடும் சாமி…”

தெருவுல தல்காட்ட முடியாது சாமி…”

குடும்பம் அயிஞ்சுபூடும் சாமி…”

வண்ணாத்தி சாமி…”

வாக்கப்படப் போறவ சாமி…”

சாதிக் குத்தமாயிடும் சாமி…”

உசுரப் போக்கிப்பேன் சாமி…”

உங்களுக்குக் காலுக்குக் கும்பிடுறேனய்யா…”

உங்களுக்கு மவளாப் பொறக்கறனய்யா…” 

மேலே வாசிப்பைத் தொடரமுடியாமல் கலங்கடித்த இடம் அது.

மேல்நாரியப்பனூர் அந்தோணியார் கோவிலுக்குப் போவதிலிருந்து துவங்கும் நாவல், அம்மக்களின் வாழ்வை அச்சு அசலாய் அத்தனை இயல்பாய் அக்கிராமத்தின் எல்லாப் பின்னணியோடும் கண்முன் விரிக்கிறது. கிராமத்தின் எழவு வீட்டின் காரியங்கள், அறுவடைக் காலம், களம் தூற்றும் நிகழ்வுகள், ஊர்ச் சோறு எடுப்பது சம்பந்தமாக ஆரோக்கியத்திற்கும் சகாயத்திற்கும் நடக்கும் சண்டைகள், தெரசா, திரவியராஜ் குடும்பம், திரவியம்மேரியின் கல்யாணம், திரவியராஜின் மரணம், பெரியானின் வாழ்க்கை, தைப் பொங்கலில் கிராமத்தின் முகம், மேரிக்கும் ராணிக்கும் இடையிலான நட்பு, குடுகுடுப்பைக்காரனின் இரவு வாக்கு, மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடு, மாடு, பன்றித் தலைகளுக்கு நடக்கும் பஞ்சாயத்து, ஊர்ச்சோறு எடுக்கும்போது ஆரோக்கியத்தின் அனுபவங்கள், கிராமத்தில் தேர்தலின் முகம், அந்த மழை, வளரும் பெரியானின் பேத்தி, கிராமத்தில் நடக்கும் பிரசவம், ஆரோக்கியம் நீக்கும் பால்கட்டு

நாவல் படித்து முடித்தபோது, என் கிராமத்தில் மறுபடி வாழ்ந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது.

இந்து தமிழ் திசையில் வெளியான, அரவிந்தன் எடுத்த இமையத்தின் பேட்டியை, “கோவேறு கழுதைகள்” படித்துமுடித்த அந்த இரவில்தான் வாசித்தேன். ஒரு நள்ளிரவில் தான் கேட்ட ஆரோக்கியத்தின் அழுகுரல்தான், “கோவேறு கழுதைகள்” நாவலை உருவாக்கியது என்று சொல்லியிருந்தார். அந்த நள்ளிரவின் அடர்ந்த இருட்டில் சாதாரணமாய் கரைந்து போயிருந்திருக்கக் கூடிய ஓர் ஒட்டுமொத்த வாழ்வின் அழுகுரலை அழுத்தமாய் பதிவு செய்ததற்காக இமையத்தை கட்டிக்கொள்கிறேன். பேட்டியில் செடல் எனும் தெருக்கூத்தாடும் அழகான பெண் குறித்து சொல்லும்போது

ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமிஎன்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது”  

என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே என் மனதை நிரப்பப் போதுமானதாய் இருந்தது. செடல், எங்கள் கிராமத்தின் ”வெள்ளையம்மா”வாக இருக்கலாம். மனம் இப்போதே பரபரக்கிறது. வரும் நாட்கள் செடலுடன்தான்.