அனோஜன்

புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும் சொல் ஒரு உதாரணம். ஈழ எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களைக் காட்டிலும் உக்கிரமான வாழ்வனுபவங்கள் அதிகம். அதன் அமைதியின்மை துரதிர்ஷ்டவசமானதே. ஹெமிங்க்வே, போர் ஆபத்தானதுதான், ஆனால் படைப்பூக்கத்திற்கு மிகவும் சாதகமானது, என்கிறார். தலைமுறைகளாக நீண்ட போர், கிளர்ச்சிகள் தமிழக எழுத்தாளர்கள் அடைய முடியாத அனுபவங்களை அவர்களுக்கு அளித்திருக்கும். அடக்குமுறை, அகதி வாழ்வு, துரத்தும் மரண பயம், வன்கொடுமைகள், நிச்சயமின்மை, உற்றார் உறவினர்களின் இழப்பு என அகம் கூசி கூர்கொள்ளும் கதைகளையும் நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும் வளர்ந்திருப்பார்கள். இந்நிகழ்வுகள் அவர்களின் தேர்வல்ல, அவர்கள் மீது வரலாறு திணித்து அனுப்பியது. மானுட அகத்தின் இருண்ட மூலைகளை கண்டிருப்பார்கள், அதில் அரிதாக தென்படும் ஒளிக்கிரணங்களுக்காக காத்திருப்பார்கள். மனிதர்களை நசிவடையச் செய்யும் இவை படைப்பு மனத்திற்கு தூண்டுதலாகவும் அமையலாம். இத்தகைய இறுக்கமான சூழலை, போரின் துவக்கங்களை வரலாறாக அறிந்த  தொண்ணூறுகளில் பிறந்தவர், எப்படி எதிர் கொள்கிறார்? இந்தக் கிளர்ச்சியுடன் இயைந்து, பிரிந்து என எப்படி பயணிக்கிறார்? அவர்களின் அடையாள சிக்கல் எத்தகையது? போன்ற கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ பத்து கதைகளை உள்ளடக்கியது. இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியை அனோஜன் அடைந்திருக்கிறார் என்பது கவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இது அவருடைய இரண்டாம் தொகுப்பு என்பதும்கூட காரணமாக இருக்கலாம். அனோஜனின் மொழியும் அவரின் மிகப்பெரிய பலம். தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது.  இறுக்கமான, செறிவான மொழியில் பழகித் தேர்ந்த லாகவத்துடன் பிசிறுகள் ஏதுமின்றி இலக்கை நோக்கிப் பாயும் தோட்டாவைப் போல் சீறிச் செல்கின்றன இவருடைய கதைகள். இந்த தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும். இது அவருடைய மிக முக்கியமான பலம், எனினும் இதுவேகூட நாளடைவில் பலவீனமாக ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய களங்களில், புதிய சிக்கல்களை எழுதும் கதைகள் வரும்போது வேறு வகையான கதைசொல்லல் அவசியமாகலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை காமம், காமப் பிறழ்வுகள் ஒரு சரடாக துளைத்து செல்கின்றன என கூறலாம். காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மச்சுழல் என்று ஒரு வட்டத்தை அண்மைய கால எழுத்தாளர்கள் பலரிடமும் கவனிக்கிறேன். விதிவிலக்காக ‘பலி’, ‘400 ரியால்’ மற்றும் ‘மனநிழல்’ ஆகிய கதைகள் அரசியல் மற்றும் சமூக மதிப்பீடுகளின் தளத்தில் காமத்தின் சாயை இன்றி நிகழ்கின்றன. பிறழ் காமத்தை, அதன் உறவுச் சுரண்டலை பேசும் கதைகள் என ‘பச்சை நரம்பு’, ‘கிடாய்’, ‘இச்சை’, ‘வெளிதல்’ மற்றும் ‘உறுப்பு’ ஆகிய கதைகளை வகைப்படுத்தலாம். ‘வாசனை’ மற்றும் ‘இணைகோடு’ காமத்தைப் பின்புலமாக கொண்டு உறவுகளின் நுட்பத்தை சொல்கின்றன.

பொதுவாக ஈழப் புனைகதைகள் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு, இனப் படுகொலை ஆவணம், புலம் பெயர் வாழ்வின் அவலம் எனச் சில பாதைகளில் பயணிக்கும். அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் கதிரொளி குடிக்கும் கார்மேகமாக போர் அனோஜனின் கதைப்பரப்பின் மீது கவியும்போது அது மேலும் பிரம்மாண்டமாகிறது. ஒட்டுமொத்த கதைப்பரப்பின் நிறத்தையும் மாற்றுகிறது. போர் ஒரு பின்னணி இசை போல கதைகளில் தொடர்ந்து ஒலிக்கிறது. அனோஜன் போரைத் தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதுகிறார். பெரும்பாலான கதைகளில் மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் எங்கும் அது நாடகீயமாக சொல்லப்படவில்லை. இது அனோஜனின் தனித்துவம் என்றே எண்ணுகிறேன். ‘உறுப்பு’ கதையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் கடமை செய்யும்  ரணசிங்கே, ‘இணைகோடு’ கதையில் ராணுவ முகாம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கடந்து செல்கிறான் செழியன், ‘வெளிதல்’ கதையில் வரும் பாலியல் தொழிலாளி புகையிரத நிலையத்தில் வடக்கே கடமையாற்றிவிட்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்கள் வாடிக்கையாளர்களாக கிடைப்பார்கள் என கணக்கு செய்கிறார். ‘வாசனை’ கதையில் சுட்டுக் கொல்லப்படும் தந்தை, சட்டவிரோதமாக வளைகுடா நாட்டில் சிக்கி ஊர் திரும்ப வழிவகையின்றி தவிக்கும் ‘400 ரியாலின்’ கதைசொல்லி, போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நண்பனின் சடலத்தை காணாமல் தவிர்க்கும் ‘மனநிழல்’, எனப் போர் ஆரவாரமின்றி அன்றாட நிகழ்வைப் போல் கடந்து செல்கிறது.

தந்தை, காதலன், கணவன் என தானறிந்த ஆண்களைப் பற்றிய கதை ‘வாசனை’. பெண் பிள்ளை அறியும் முதல் ஆண் தந்தை. தந்தையின் ‘ஆண் தன்மையான கருணை நிரம்பி வழியும்’ வாசனையை அவள் தேடிச் சலிக்கிறாள். அப்பா தன் காதலியை அம்மாவிற்கு தெரியாமல் சந்தித்து இருப்பாரா எனும் கேள்வி அவள் ஜெயந்தனை சந்திக்கச் செல்வதோடு பிணைகிறது. அப்பாவின் காதலியை அவர் சந்தித்த கதையை அம்மா அறிகிறாள். ஆனால் ஜெயந்தனைச் சந்தித்த கதையை ஹரி ஒருபோதும் அறியப் போவதில்லை. ஜெயந்தன் வீட்டில் யாருமில்லை என அழைத்துவிட்டு கதவை திறந்தபோது, மனைவியை உள்ளே கண்டபோதுதான் சிறுமை செய்யப்பட்ட உணர்வை அடைகிறாள். தன் தந்தையின் சிவப்பு புடவை அணிந்த காதலி திருமணத்திற்குப் பின் இயல்பாக பேசியிருக்கிறாள். கதை இறுதியில் கதைசொல்லியும் தன்னை சிவப்பு புடவை அணிந்த பெண்ணாக உணர்ந்து அகத்தடையை மீறி செல்கிறாள். உறவு நிலைகளை நுட்பமாக சித்தரிக்கிறார் அனோஜன். இந்த கதையின் உணர்வு நிலையின் நேரெதிர் வடிவம் என ‘கிடாய்’ கதையை சொல்லலாம். அப்பாவின் வாசனையை அறிந்து, வெறுத்து, பழிதீர்க்கிறாள். தீரா வஞ்சத்தால் தன்னை மாய்த்துக் கொண்ட அன்னைக்காக தந்தை மீது வஞ்சம் வளர்த்து கொள்கிறாள் தேவி. படிப்படியாக தந்தை எனும் இடத்திலிருந்து அவனை இறக்கி மிருகமாக்கி அந்தக் கிடாயை பலியிட்டு அமைதி கொள்கிறாள். பலியாட்டை ஈர்க்க தேவி கொடுக்கும் கீரைக்கட்டுதான் விமலரூபன். காமாட்சி- தேவி – தேவியின் அம்மா மற்றும் ராசையா உறவு மிகவும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது (ஓரிடத்தில் மட்டும் ராசையாவின் பெயர் பரமேஸ்வரன் எனப் பிழையாக வருகிறது. ). வாசனையில் உன்னதப்படுத்தப்பட்ட தந்தை அன்பு இங்கே தலைகீழாகிறது. கென் லியுவின் ஒரு கதையை அண்மையில் வாசித்தேன். ‘சிமுலகிரம்’ (simulcrum) எனும் கருவியைக் கொண்டு கற்பனையாக தனக்குத் தோதான பெண்களின் பிம்பங்களை முப்பரிமாணங்களில் உருவாக்கி நிர்வாணமாக உறவாடும் தந்தையை மகள் கண்டுவிடுகிறாள். இறுதிவரை அவள் அதை மன்னிக்கவே இல்லை. கதை இறுதியில் மரித்துப் போன அவள் அன்னை மகளுக்காக ஒரு கடிதம் எழுதிவிட்டுச் செல்கிறாள். அதில் தந்தை உண்மையில் உன் மீது பிரியம் கொண்டிருக்கிறார். அவரை மன்னித்துவிடு என்று கோருவார். அன்னையின் வஞ்சம்தான் தேவியில் உருக் கொள்கிறது. ஒருவேளை அந்த அன்னை உயிரோடு இருந்தால் சகித்து மன்னித்து வாழ்ந்திருப்பாளா என்று கேட்டுக்கொண்டேன்.

இவ்விரு கதைகளும் ஒரு திரியின் இரு  முனைகள். அன்பின்மை, அல்லது அன்பிற்கான ஏக்கம் எப்படி திரிந்து போகிறது என்று வாசித்துக் கொள்ளலாம். இதே வரிசையில் ‘பச்சை நரம்பு’ கதையையும் வைக்கலாம். நான்கு வயதில் காய்ச்சலில் மரித்த தனது அன்னையின் ஒற்றை நினைவாக கழுத்திலிருந்து மாருக்கு இறங்கும் பச்சை நரம்பைத்தான் செல்வமக்கா, தீபா என இருவரிடமும் கதைசொல்லி தேடுகிறான். அம்மாவை மனைவிகளில், காதலிகளில் தேடுவதும், தந்தையை கணவன்களில், காதலர்களில் தேடுவதும் உளவியல் மனக்கூறாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளன. இக்கதைகள் வழியாக இவை கண்டடையப்படுகின்றனவா அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றைக் கொண்டு அதன் மீது கதைகள் கட்டி எழுப்பப்பட்டனவா? இருவகையில் எது நிகழ்ந்தாலும் அது இழிவு அல்ல. ஆனால் ‘ஆச்சரிய அம்சத்தில்’ வேறுபாடு உண்டு.

அனோஜன் புதுயுக கதைசொல்லிக்கான பிரத்தியேக சிக்கல்களை தொட்டுக் காட்டியிருக்கும் கதைகள் என ‘400 ரியால்’ மற்றும் ‘மன நிழல்’ கதைகளைச் சொல்வேன். இக்காலகட்டத்தில் வீழ்ச்சி அடையும் மதிப்பீடுகளின் ஆவணமாக இவை நிற்கின்றன. எக்காலத்திலும் இவ்வகை மனிதர்கள் வாழவே செய்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் இலக்கிய ரீதியாக அப்பட்டமாக பதிவாவது என்ற முறையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. ‘400 ரியால்’ நம் அற மதிப்பீடுகளைக் கவிழ்க்கிறது, மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது. 400 ரியாலுக்காக அவன் ஏங்குவதும், கையறு நிலையில் தவிப்பதும் கதையில் பதட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் எதிர்பாராமல் அவனுக்கு கிடைக்கும் உதவிக்கு அவன் ஆற்றும் எதிர்வினை மனிதர்களின் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் காட்டுகிறது. ‘மன நிழல்’ நெருங்கிய சகாவின் சவ அடக்கத்திற்கு, அம்மாவின் கட்டளையை சாக்காக சொல்லிக்கொண்டாலும், அவன் உள்ளுரையும் அச்சத்தின் காரணமாக, செல்வதை தவிர்க்கிறான். நெருங்கிய நண்பர்களைக்கூட அச்சத்திற்கும் அதிகாரத்திற்கும் பயந்து கைவிட்ட தருணங்கள் மனதில் நிழலாடின. இக்கதைகள் பொறுப்பேற்கத் துணிவின்றி, தப்பித்தலையே தன்னறமாக கொண்ட சந்தர்ப்பவாத வாழ்வைச் சுட்டுவதாக உணர்கிறேன்.

உறவு, உறவின் சுரண்டலைப் பேசும் கதைகள் என ‘இச்சை’ மற்றும் ‘உறுப்பு’ கதைகளைச் சொல்லலாம். ‘இச்சை’ கதையில் ஏழு வயது சிறுவன் அண்டை வீட்டுப் பெண்ணால் தனது இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறான். தனது சிறு வயது நினைவுகளை நண்பனிடம் பகிரும்போது வரும் உரையாடல் முக்கியமானது

“யார் அந்தப் பெட்ட? உன்னை நல்லா துஷ்பிரயோகம் செய்திருக்கிறாள்’ என்றான்.

“துஷ்பிரயோகமா?.ஹ்ம்ம்… நான் அதை அப்படி நினைக்கவில்லை”’ என்றேன்.

”அப்ப இது என்னவாம்? இதுவே ஒரு பெண்பிள்ளைக்கு ஆண் ஒருவர் செய்திருந்தா என்ன நிலைமை?”

பாரபட்சமாக அணுகப்படும் ஆண்களின் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களப் பதிவு செய்யும் களமாகவும் தனது கதைகளைப் பயன்படுத்துகிறார். கிடாய்’ விமலரூபன், ‘பச்சை நரம்பு’ கதைசொல்லி, ‘உறுப்பு’ கதை நாயகன் என இவை நீள்கின்றன. ‘உறுப்பு’ இத்துயரத்தின் மிக தீர்க்கமாக பதிவாகிறது. தோளில் துவக்குடன் நிற்கும் சிங்கள சிப்பாய் தமிழ் மாணவனுடன் வல்லுறவு கொள்கிறான். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து ஏதும் செய்ய முடியாத இறுகிய மவுனத்தைக் குடும்பம் கடைபிடிக்கிறது. மனரீதியான தொந்திரவுக்கு உள்ளாகிறான். கல்லூரியிலும் ‘பகிடிவதை’ (raggingகிற்கு என்ன அழகான தமிழ்ச் சொல்) அவனை துன்புறுத்துகிறது. அவனது ஆண்மை குறித்தான ஐயங்கள் எழுகின்றன. ஒரு சிறிய முத்தம் வழியாக அதை மீட்கமுடியும் எனப் புரிந்து கொள்கிறான். இங்கும் அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ‘இச்சை’ பாலியல் சுரண்டலின் நுட்பமான மறு பக்கத்தைச் சொல்கிறது. அஜந்தா அவன் மீது மெய்யாகவே பிரியத்துடன் இருக்கிறாள். பதின்ம வயதில் சிறு பிறழ்வாக அவளுடைய இச்சை வெளிப்படுகிறது. ஆபத்தற்ற (அப்படி சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை! எல்லா பாலியல் சுரண்டல்களுமே ஆபத்தானவை. மனதை பாதிக்கக்கூடும். இக்கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என வேண்டுமானால் சொல்லலாம். இது தற்செயல், மற்றும் மனபோக்கு சார்ந்தது) பாலியல் விளையாட்டுக்களை விளையாடிக் கொள்கிறாள். இயல்பாக அதிலிருந்து வளர்ந்து வெளியேறிச் சென்று விடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும்போது பழைய நினைவுகளின் உரசல் ஏதுமில்லாமல் இயல்பான வாஞ்சையுடன் அவளால் பழக முடிகிறது. இறுதியில் அஜந்தாவின் குழந்தையின் கண்கள் அவனுக்கு நினைவுக்கு வருவது மிக முக்கியமான தருணம். இந்த பாலியல் சுரண்டல் சுழலில் இருந்து அவன் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் தருணம். ‘உறுப்பு’, ‘இச்சை’ கதைகள் ஏறத்தாழ ஒரே கேள்வியை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டுள்ளன என்று எண்ணுகிறேன்.

இத்தொகுப்பின் சிறந்த கதை என ‘பலி’ கதையையே சொல்வேன். பாதிக்கப்பட்டவன், பாதிப்புக்கு உள்ளாக்குபவன் எனும் இருமையிலிருந்து கிழித்து வெளியேறி மனிதர்களாக காணும் தருணத்திலேயே கலைஞன் எழுகிறான். குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலின் இறுதி பகுதியில் தன் காதலிக்கு இருளின் சிறிய விளக்கு வெளிச்சத்தில் கடிதம் எழுதும் சிங்கள ராணுவ வீரன் மீது குண்டு வீசாமல் செல்வான். பரிசாக மரணத்தைப் பெறுவான். அது ஓர் உன்னத தருணம். ‘பலி’ அத்தகைய குற்ற உணர்விற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது. படிப்படியாக மனிதன் தன்னை முழுவதுமாக இழக்கும் முறையை பதிவாக்குகிறது. இக்கதை ஆழ்ந்த மனச் சோர்வு அளித்தது. இக்கதை புலி எதிர்ப்பு, புலி விமர்சனமாக சுருக்கி கொள்ளாமல், தான் வாழும் சமூகத்தின் மீதான சுய விமர்சனமாக, போரின் வரைமுறையின்மையை பேசும் கதையாக மதிப்பிடப் பட வேண்டும். ‘400 ரியால்’ ‘ மனநிழல்’ கதைகளோடு இதையும் அந்த வரிசையில் வைக்கலாம். ‘இணைகோடுகள்’ இத்தொகுப்பில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. சிங்கள சிப்பாயை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ்ப் பெண். ராணுவத்தை விட்டு நீங்கியதற்காக சிறையில் இருக்கும் சிங்கள சிப்பாய் என்பது மிக நல்ல களம். ஆனால் கதை அவளுடைய இணை வாழ்வை கதைசொல்லி ஊகிப்பதோடு முடிந்து விடுகிறது.

இத்தொகுப்பின் பலவீனமான கதை என ‘வெளிதல்’ கதையை சொல்வேன். பாலியல் தொழிலாளி உலகை வழமையான முறையில் சித்தரித்து இருக்கிறார். அன்பின்மை, அன்பிற்கான ஏக்கம் வெளிப்படும் மற்றுமொரு கதை. ‘பச்சை நரம்பும்’ கூட பெரிதாக எனக்கு உவக்கவில்லை.

பாலியல் சித்தரிப்புகளை எழுதும்போது அவை எதற்காக எழுதப்படுகின்றன என்றொரு கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டும். வாசகரின் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டவா? காட்சிகளைப் பதிய வைக்கவா? அல்லது திசை திருப்பவா? அல்லது அங்கிருந்து கதையை மானுட அகத்தின் மீதான விசாரணையாக கொண்டு செல்லவா?. அனோஜன் கதைகளில் மானுட அக விசாரணை நோக்கிய தாவல் நிச்சயம் நிகழ்கிறது. காமம் – அகங்காரம் – செயலூக்கம் – வன்மம் எனும் சுழல் பல எழுத்தாளர்களின் இயங்கு தளமாக திகழ்கிறது. அனோஜன் காம – அகங்கார – வன்மை சுழலில் வன்மத்துடன் நின்றுவிடாமல் அன்பை நோக்கி நகர்கிறார் என்பது ஆசுவாசம் அளிக்கிறது. இந்தச் சுழலில் வெகு அரிதாகவே புதிய மற்றும் அசலான கண்டடைதல்கள் நிகழ முடியும். அகம் குவித்து எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் இதில் ஏதோ ஒரு நுண்மையை துலங்கச் செய்து இருக்கிறார்கள். இப்படியான கதைகளில் உள்ள ஆபத்து என்பது வாசகர் ‘ஆம். ஆமோதிக்கிறேன். பிறகு அல்லது வேறு?’ எனக் கேட்டு விடுவான்.(ஒரு வகையில் இந்த கேள்வியை எல்லா கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் தான்) இத்தளங்களில் கதைகளுக்கான வெளி குறைவு என்பதால் வரும் சவால் இது. பாலியல் சித்தரிப்புகள் சில தருணங்களில் கதையை மீறி அல்லது கதையின் மையக் கேள்வியை மீறி வாசகர் மனதில் நின்றுவிடுகிறது.  அது பேசுபொருளை பின்னுக்குத் தள்ளி, கிளர்ச்சிக்குள் மனதைப் புதைத்து விடும். ‘இச்சை’, ‘பச்சை நரம்பு’ போன்ற கதைகளில் இச்சிக்கல் வெளிப்படுகிறது.

அனோஜன் பெண்களின் அகத்தை நுண்மையாகச் சித்தரிக்கிறார். பெண் பாத்திரத்தைக் கொண்டு ‘தன்மையில்’ வெற்றிகரமாக கதை எழுதிவிட அவரால் முடிகிறது. இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே பால்ய, இளம்பருவ காலத்து கதைகள்தான். அது இக்கதைகளுக்கு ஒரு இளமையை அளிக்கிறது. தன் அனுபவங்களிலிருந்து இக்கதைகளை உருவாக்குகிறார் எனும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது. அனோஜனுக்கு இருக்கும் சவாலென்பது தனக்கு வசதியான, வாகான தளங்களிலிருந்து புதிய தளங்களில் கதை சொல்வதில் உள்ளது. ஒரு தொகுப்பில் சரி பாதிக்கு மேல் நல்ல கதைகள் இடம்பெறுவதே பெரும் சவால்தான். அதை எளிதாக அனோஜன் கடக்கிறார். அவரிடம் உள்ள மொழி, அனுபவங்கள், சிந்தனைகள் அவரை தமிழின் முக்கிய எழுத்தாளராக வருங்காலங்களில் அடையாளம் காட்டும் என்றே நம்புகிறேன். அதற்கான எல்லா சாத்தியங்களையும் ‘பச்சை நரம்பு’  தன்னுள் புதைத்து கொண்டுள்ளது.

 

 

அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி..

அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது.

எனது பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இந்தக் காலப்பகுதியில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்க வாய்ப்பு கிடைத்தது. ஓரளவுக்குச் சிங்களம் பேசவும் பழகிக்கொண்டேன். தற்பொழுது ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் கற்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆதர்ச/ தாக்கம் செலுத்திய தமிழ்/ உலக எழுத்தாளர்கள்?

அனோஜன்: முகமாலையில் போர் ஆரம்பித்தவுடன் வடக்கும் தெற்கும் துண்டிக்கப்பட்டது. பின் தொடர்ச்சியான மின்வெட்டு ஊரடங்குச் சட்டத்தால் யாழ்ப்பாணம் இருளிலும் மௌனத்திலும் வீழ்ந்திருந்தது. வெறுமை பீடித்திருந்த அக்காலத்தில் கிடைத்த நேரத்தில் வாசிப்பை இன்னும் கூட்டினேன். ஊரடங்குச் சட்டம் பகலில் நீக்கப்பட்டபின் எதேச்சையாக நூலகத்தில் ஜெயமோகனின் புத்தகங்களைக் கண்டு வாசித்தேன். எனக்குள்ளிருந்த நிறைய அகப்பிரச்சினைகளை, inferiority complex போன்ற சிக்கல்களுக்கான விடைகளை அவர் எழுத்திலிருந்து கண்டுபிடித்து என்னை மீட்டேன். மிகப்பரவசம் தந்த இனிய நாட்கள் அவை. சுற்றிலும் வன்முறையும் படுகொலைகளும் நிகழ்ந்தபோதும் என் அக உலகம் கற்பனையால் பல எல்லைகளைத் தகர்த்துக்கொண்டிருந்தது. ஜெயமோகன் அதற்கு முக்கிய காரணம். பல எழுத்தாளர்களை அந்த நேரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாலும் ஜெயமோகன் எனக்குரிய அந்தரங்கத்திற்கு நெருக்கமான எழுத்தாளராக இருந்தார். எழுத்தாளர் என்பதைத் தாண்டியும் அவர் மேல் பற்றிருக்க அதுவுமொரு காரணம்.

ஆதர்சம் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டிருக்கலாம், எனக்கு ஆதர்சம் என்றால் ஜெயமோகன், அ. முத்துலிங்கம், சு. வேணுகோபால், ஷோபாசக்தி, எம். கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை உடனடியாகச் சொல்வேன். இவர்கள் என் மேல் நிறைய தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.

முதல் சிறுகதை எப்போது வெளியானது? சிறுகதையை வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தது ஏன்?

அனோஜன்: ஆரம்பத்தில் எழுதிப்பார்த்த சில கதைகளை இணைய இதழ்கள் பிரசுரித்து இருந்தாலும் என்னுடைய முதல் சிறுகதையாகக் கொள்வது ‘இதம்’ என்கிற கதையைத்தான். ‘ஆக்காட்டி’ என்கிற சிற்றிதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ‘இதம்’ சிறுகதையை அவ்விதழ் 2015 இல் பிரசுரமாக்கியது. தவிர நிறைய எழுத களம் அமைத்துத் தந்ததும் அவ்விதழ்தான்.

இதுதான் சிறுகதை வடிவம் என்று பொதுமைப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன், ஒவ்வொரு காலகட்டத்திலும் உடைத்தும் வார்த்தும் நகர்ந்தவாறே இருக்கின்றது. ஆனால், அதற்குள் இருக்கும் கூர்மை எனக்கு மிகப்பிடித்தது. அதனாலே நான் அதிகம் விரும்பும் வெளிப்பாட்டு வடிவமாகச் சிறுகதை இருக்கிறது.

தற்கால ஈழ இலக்கியத்தின் போக்கு என்ன? சவால் எவை?

அனோஜன்: அதிகம் போர் என்பதுதான் முன்னிறுத்தப்படுகிறது. பெரும்பாலான படைப்புகள் சூடான அரசியல் கருத்துகளோடு மட்டும் நின்று விடுகின்றன. இலக்கியம் அதற்குரிய இடம் அல்ல என்பதை இன்னும் பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை. அதைச் சுற்றி எழும் விவாதங்கள் அரசியலை முதன்மைப்படுத்திப் பேசி பரபரப்பை உண்டு செய்து ஓய்கின்றது. அரிதாகவே இலக்கியம் சார்ந்து பேசப்படுகிறது.

கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.

இங்கு போர் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதைத்தாண்டி நிறையவே வித்தியாசப்பட்ட பரிமாண வாழ்க்கை இங்கேயுண்டு. இலங்கையை ஓரளவுக்கு அதிக பயணங்கள் ஊடாக சுற்றிப்பார்த்தவன் என்ற முறையில் நான் காணும் கோணம் வேறொன்றாகவே இருக்கின்றது.

எண்பதுகளின் போரின் கதைகளை ஓரளவுக்கு ஷோபாசக்தி எழுதிவிட்டார், அதன் பின்னைய கதைகளை சயந்தன், குணா கவியழகன் போன்றோர் எழுதியுள்ளார்கள். எனினும் ஒருசேரப் பார்க்கும்போது 2009-க்குப்பின் ஏற்பட்ட மாற்றமும் அது தந்த சூழலில் எழுந்த மற்றுமொரு வாழ்க்கையையும் யாரும் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை.

தமிழர்களின் வாழ்க்கை தனியே வடக்கிலும் கிழக்கிலுமோ, மலையகத்திலுமோ இல்லை. சிதறுண்டு வாழும் தமிழர்களின் வாழ்க்கை இலங்கையின் பல பாகங்கள் வரை பரவியிருக்கிறது. அவர்களுடன் பேசிப்பார்க்க அவர்களின் தேடலும் மனநிலையும் முற்றிலும் வேறோர் தளத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ள இயலுகிறது. இங்கேயிருக்கும் அரசியல் கொந்தளிப்புகள் அற்ற, நாம் அறியாத மற்றோர் உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் படைப்புகளில் இன்னும் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். அவர்களை அணுகிச் செல்லும் எழுத்தாளர்கள் இல்லை என்பது சவாலானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்.

சீரான விமர்சனச் சூழல் இங்கில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. எழுதப்படும் அழகியல் விமர்சனங்களை அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகும் மனநிலை பெரும்பாலும் இன்னும் விட்டுப் போகவில்லை. சில எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுக்குக் கிடைக்கும் கறாரான அழகியல் விமர்சன மதிப்பீட்டை, விமர்சனம் எழுதியவரை புலி எதிர்ப்பு / புலி ஆதரவு என்ற சட்டகத்தில் வைத்து எதிர்வினை ஆற்றி தம் மீதான நிராகரிப்புக்குச் செயற்கையான அனுதாபம் கோருவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது. சமீப காலமாக இந்தப் போக்கு அதிகமாகியுள்ளதாகவும் தோன்றுகின்றது. முக்கியமாக ‘புலி எதிர்ப்பு’ எனும் சாயத்தை விமர்சகர்களிடமும், படைப்பாளிகளிடமும் பூசி தம்மைத் தற்காத்துக் கொள்ளும் போலி மனோபாவம் ஒருபக்கம் வலுப் பெறுகிறதோ என்று அச்சம் கொள்கிறேன். படைப்பில் இருக்கும் அரசியலும் விவாதிக்கப்பட வேண்டியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கு படைப்பிலக்கியத்திற்கு உகந்ததல்ல. அழகியல் என்பது இலக்கியத்தின் முதல் இடம் என்பதே என் புரிதலாக இருக்கிறது.

இலங்கை தமிழ் சூழலில் தோற்றம் பெற்ற மிக முக்கிய படைப்பாளிகளின் படைப்புலகம் சார்ந்த விரிவான கட்டுரைகள் இன்னும் இங்கிருந்து எழுதப்படவில்லை. வெறுமே ஒற்றை வரி ஆதரிப்பும் நிராகரிப்புமே அதிகமாகவுள்ளது. எதிர்காலத்தில் விரிவாகப் பல முன்னோடிகளின் படைப்புலகம் சார்ந்து கட்டுரைகள் எழுதி புத்தகமாக்கும் எண்ணமுண்டு.

காமத்தை எழுதுவதன் சவால் / தேவை என்ன? கிளர்ச்சியுடன் நின்றுவிடாமல் காமம் அக விசாரணையாக, மனித இயல்புகளின் மீதான விசாரணையாக திகழ வேண்டும் என்று நம்புகிறேன்.

அனோஜன்: ஏன் காமத்தை எழுதவேண்டும் என்று கேட்டால், நமது வாழ்க்கையை எழுத காமத்தை எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். நீங்கள் குறிப்பிடும் கருத்துகளுடன் நூறுவீதம் உடன்படுவேன். காமத்தை எழுதுதல் என்பது காமத்துக்கு பின்பே இருக்கும் வாழ்க்கையை எழுதுதல் என்பதுதான். சித்தரிப்புகளில் வெறுமே அதிர்ச்சியூட்டும் விவரணைகளுடன் நின்று விடுதல் ஒருபோதும் காமத்தை எழுதுதல் என்பதாகாது. அதன் தருணங்களுக்கு பின்பேயுள்ள உணர்வுகளைத் தொட்டு எடுக்க வேண்டும், இங்கே வாசகர் வாசிப்புக்கு வேலை கொடுக்கும்போது கொஞ்சம் பிசகினாலே வெறும் சித்தரிப்புகளாக எஞ்சிவிடும். அந்த இடங்களே சவாலானவை.

போர் உங்கள் கதைகளில் அதிகம் விவரிக்கப்படாமல் பின்னணியில் சித்தரிப்பதற்கு ஏதும் காரணங்கள் உண்டா?

அனோஜன்: போருக்குள் பால்யத்தில் இருந்திருந்தாலும் எங்களுக்குள் குதூகலமான வாழ்க்கையும் ஒருபக்கம் இருந்தது. இறப்புகள் மத்தியிலும் கிரிக்கெட்டும், கால்பந்தும் எல்லோரையும் போல நண்பர்களுடன் இணைந்து விளையாடியும் இருக்கிறோம். வெற்றுச் சன்னங்களை விதம்விதமாக போட்டி போட்டு சேர்த்திருக்கிறோம். காதல், காமம், பிரிவு, உறவுச் சிக்கல் எல்லாம் சராசரி வாழ்க்கையில் இருக்கும் இயல்புடன் நம்மிடமும் இருந்தன. போர் மேலதிகமான ஒன்றுதான். புறநிலையான ஒன்றாகவே போரின் வெளிப்படை அழிவுகளை பார்க்கிறேன். போரின் உக்கிரம் பிரம்மாண்டமானதாக இருப்பினும் அகவயச் சிதைவே எனக்கு இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது. போர் தந்த அகவய உணர்வை என்னைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் தேடுவதிலே எனக்கு அதிக நாட்டம். உள்மனதைத் தேட எனக்குக் கிடைக்கும் திறப்புகள் அவ்வாறே எழுத வைக்கின்றன.

நாவல் எழுதும் உத்தேசம் உண்டா? களம் என்ன?

அனோஜன்: உண்டு. ஆரம்பித்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகமயமாதல், பொருளாதாரச் சூழல் விதைத்திருக்கும் வாழ்க்கை புறவயமான இயங்குதலை இலகுவாக்கி இருந்தாலும் அகப்பிரச்சினைகள் இன்னும் அதே இறுக்கத்துடன்தான் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அந்நியமாதல். சமூக வலைத்தளங்கள் கூட்டாக இருப்பது போன்ற மாயையைத் தந்தாலும் இன்னும் இன்னும் தங்களுக்குள் அந்நியமாகிக் கொண்டே இருக்கிறார்கள். உறவுச்சிக்கல் அந்நியமாதலில் அதிகம் சிக்கி அடிவாங்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஒரு உறவுச்சிக்கல் சார்ந்த நாவலுக்கான கருவே உதித்தது. பார்க்கலாம் எவ்வாறு வரும் என்று. எழுத எழுதவே என்ன எழுதுகிறேன் என்று எனக்கே தெளிவாகும்.

நவீன தொழில்நுட்பம் படைப்பூக்கத்தை சிதைக்கிறது, சமூக ஊடகங்கள் கவனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே. .அதைப் பற்றி?

அனோஜன்: இவற்றைப் பொதுமைப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். அவர்கள் அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறையிலே தங்கியுள்ளது. சமூக வலைத்தளம் நம்மைப் புனையும் இடம். நிஜ வாழ்க்கையில் கிடைக்காத வாழ்க்கையை அதில் செய்து பார்க்கலாம்/ காட்டிக் கொள்ளலாம். அதனூடாக ஒரு அகச் சமநிலையை உருவாக்கி நமக்குள் திருப்தியடையலாம். அங்கேயே மூழ்கி வெற்று வம்புகளுக்குள் சுழன்றவாறிருந்தால் கவனச்சிதைவை ஏற்படுத்தும்தான். அதன் எல்லையைத் தெரிந்து வைத்திருந்தால் நம் இடத்தைத் தொலையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பத்தை படைப்பூக்கத்தை அதிகரிக்க அதிகம் பயன்படுத்தலாம். இன்றுள்ள தொடர்பாடல்களை துரித கதியில் சாத்தியப்படுத்தித் தந்தது தொழில்நுட்பம்தான். மின்மடலில் உடனுக்குடன் விரிவாகப் பேசிக்கொள்ள முடிகிறது. நண்பர்களுடன் வாட்ஸப் குழுவை ஏற்படுத்தி இலக்கியம் பேச முடிகிறது. இதெல்லாம் முன்னைய தலைமுறைக்கு சாத்தியம் இல்லாதவொன்று. அவர்கள் நண்பர்களைத் திரட்டவும் பேச இடமும் தேடி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார்கள். கடிதங்கள் எழுதி நாட்கணக்காக பதிலுக்கு காத்திருந்திருக்கிறார்கள். நமக்கு தொழில்நுட்பம் அதை மிக எளிமைப்படுத்தியுள்ளது. கிண்டிலில் இன்று பல புத்தகங்களை உடனே வாங்கி வாசிக்க இயலுகிறது. சில காலங்கள் முதல் தமிழ்நாட்டில் இருந்து புத்தகங்கள் தருவிக்க அதிகளவான நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று பெரும் உடைவை தொழில்நுட்பம் செய்து தந்திருக்கின்றது.

காட்சி ஊடகங்கள் இன்றைய புனைவெழுத்தின் மீது என்னவிதமான தாக்கம் செலுத்துகின்றன?

அனோஜன்: கலைகள் தொடர் நெருப்பு போல ஒன்றிலிருந்து ஒன்று பற்றி எரிந்து செல்லும். காட்சி ஊடகங்களில் முதன்மையாக இருக்கும் திரைப்படங்கள் புனைவெழுத்தை அதிகம் பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. காட்சி மொழி அகத்துடன் மேம்போக்காகவே உரையாடும் என்பதே என் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருக்கும் சிக்கல் என்பது நமது சொந்த அவதானிப்புகளை அழிக்கலாம். புனைவில் சம்பவங்களை கோர்க்கும்போது ஆசிரியனின் கோணம் அங்கேயிருக்கும், காட்சியூடகம் தரும் தாக்கம் அக்கோணத்தை அழித்துவிடலாம். இதனால் நுட்பமான தழுவல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனை அனைவருக்கும் உரிய ஒன்றாகப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் சிலரிடம் இந்தச் சிக்கலை அவதானிக்க முடிகிறது.

அதே நேரம் காட்சி ஊடகங்கள் காட்டும் காட்சிகள் பல்வேறு கற்பனைகளைத் திறந்தும் விடுகின்றன. அதிலிருந்து பற்றி மேலேறிச் செல்வதே புனைவு எழுத்தாளரின் தனித்துவம்.

எழுதுவது சார்ந்து ஏதும் தனிப்பட்ட வழக்கங்கள் உண்டா? (இடம்)

அனோஜன்: இல்லை. எச்சூழலிலும் எழுதவேண்டும் என்பதையே விரும்புகிறேன். அதனால் அவ்வாறானவொன்றுக்குள் சிக்க விரும்பவில்லை. அதில் கவனமாகவே இருக்கிறேன்.

கதைகளை திருத்துவது உண்டா?

அனோஜன்: நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட சிலரிடம் அனுப்பி பிரசுரத்துக்கு முதல் அபிப்பிராயம் கேட்பதும் உண்டு. உடன்படக்கூடிய இடங்களைத் திருத்துவதுண்டு.

ஒரே அமர்வில் கதை எழுதி முடித்து விடுவீர்களா?

அனோஜன்: பொதுவாக இரண்டு அமர்வில் எழுதி முடிப்பதுண்டு. சில நேரங்களில் அதிகம் எடுத்துக் கொள்வதும் உண்டு. மூன்றாம் அமர்வில் பெரும்பாலானவற்றை திருந்தி செப்பனிட்டு விடுவேன்.

‘எதற்காக எழுதுகிறேன்’? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அனோஜன்: ‘கவிஞர் இசை’ ஒரு கட்டுரையில் இவ்வாறு சொல்வார், “எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல் இருக்கிறது. அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்குச் சொல்ல முனைகிறான்.” இசையின் இந்த வரிகள் எனக்கு மிக நெருக்கமானவை. எனக்குள் சொல்ல ஒன்றுள்ளது. என் கோணத்தில் நான் கண்ட ஒன்றை, அதை எழுதிப்பார்க்கும்போது அதுவே எனக்கு ஒரு விடையைத் தருகிறது. அது கொஞ்சம் புதிராகவும் இருப்பதோடு என் அகங்காரத்தையும் உசுப்பிவிடுகிறது. அதனாலே மேலும் எழுதத் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டு தமிழ் இலக்கிய சூழல், ஈழத் தமிழ் இலக்கிய சூழல் சமகால ஒப்பீடு?

அனோஜன்: ஈழ இலக்கியம் முற்போக்கு, லட்சியவாதம், தேசியவாதம் என்பதற்கூடாக வளர்ந்தது. கலைகளைப் பிரச்சாரத்துக்கு உபயோகித்தமையே அதிகம். இப்போதுதான் அதில் மாற்றம் காண முனைகிறது. படைப்புலகம் சார்ந்து, இலக்கியத்தின் அடிப்படையான நுண்மையான நுண்ணுணர்வுகள் மீதான விவாதங்கள் எல்லாம் இங்கு எழும்பவில்லை. இப்போது அதற்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டு இலக்கிய சூழல் நல்ல இடத்திலே உள்ளது என்பதே என் கணிப்பு. இலக்கியம் என்ற போர்வையில் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்படும் வெகுஜன எழுத்துகள் கடும் அயர்ச்சியைத் தருகின்றன. புதிதாக வாசிப்பவர்கள் முதலில் அங்கு சென்று வீழ்ந்தாலும் கணிசமானவர்கள் போகப்போக விலகி தீவிரமான இலக்கிய பக்கம் வருகிறார்கள்.

‘சதைகள்’ ‘பச்சை நரம்பு’ தொகுதிக்கு என்ன விதமான வரவேற்பு/ விமர்சனங்கள் கிட்டின?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பு இலங்கையிலே அச்சாகி வெளியாகியது. விநியோகம் சிக்கலாகவே இருந்தது. இலங்கையிலுள்ள சில மூத்த எழுத்தாளர்கள் தனிப்பட்ட சந்திப்பில் நிறை குறைகளை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்கள். ‘ஆக்காட்டி’ இதழ் மட்டும் அச்சில் ஒரு விமர்சனக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. ‘நோயல் நடேசன்’ தன் வலைத்தளத்தில் ‘சதைகள்’ தொகுப்பை குறிப்பிடத்தக்க தொகுப்பாகச் சுட்டி எழுதியிருந்தார். பெரிய வரவேற்பு இருக்கவில்லதான். ஒரு அறிமுக எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு இருந்தது. ‘அசங்கா’, ‘ஜீட்’ என்கிற கதைகளை அதிகளவானோர் பாராட்டி இருந்தார்கள். அதே நேரம் பெண்களின் மீதான உவமைகள், வர்ணனைகள் அவர்களை பண்டப் பொருட்களாக சித்தரிக்கின்றன என்று பெண்ணிய தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்திருந்தது.

‘பச்சை நரம்பு’ இப்போதுதான் வெளியாகியுள்ளது. விநியோகத்தில் தடங்கல் இல்லை. அதனால் என்னை ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் புத்தகத்தை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. விமர்சனங்கள் இனிமேல்தான் வெளிவரத் தொடங்கும் என்று நினைக்கிறேன். ‘போகன் சங்கர்’ பாராட்டி இருந்தார், மேலும் சகவயது சமகால எழுத்தாளர்கள் சமூக வலைத்தளத்தில் நிறைகுறைகளைச் சுட்டி எழுதியிருந்தது மகிழ்வளிக்கின்றது.

‘சதைகள்’ தொகுதியில் இருந்து ‘பச்சை நரம்பு’க்கு என்னவிதமான பரிணாமம் நேர்ந்திருக்கிறது?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பிலுள்ள கதைகளைத் திரும்பிப் பார்க்க முதிராத வயதில் சில கதைகளை எழுதியது போல் தோன்றவும் செய்கிறது. எனக்கான புனைவு மொழியை என் முன்னோடிகளில் இருந்தே பெற்றேன். ‘சதைகள்’ தொகுப்பில் அவர்களின் தாக்கம் நேரடியாக அதிகமாக இருந்ததாக தோன்றுகின்றது. தவிர, எனக்கான தனித்துவ பார்வையிலும் முன்னோடிகளின் தாக்கம் இருந்ததை உணர்ந்திருக்கிறேன். ‘பச்சை நரம்பில்’ முன்னோடிகளிடம் இருந்து மேவி எனக்கான தனித்துவ மொழியையும், என் தனித்துவ பார்வையையும் கண்டடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.