நரோபா

லட்சிய இலக்கிய வாசகன்

 

நரோபா

“அண்ணே.. கண்டுபிடிச்சுட்டேண்ணே.. கண்டே பிடிச்சுட்டேன்..” என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிடாரம்கொண்டான்.

கையில் புத்தகத்துடன் சுவற்றில் சாய்ந்து படித்தபடியே கண்ணயர்ந்திருந்த எழுத்தாளர் பழுவேட்டையன் கிடாரத்தின் குரலைகேட்டு திடுக்கிட்டு விழித்தார். கண்ணாடியை மூக்குக்கு மேலே நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு அவனைப் பார்த்தார்.

கிடாரம் அவர் கையில் பிடித்திருந்த புத்தகத்தின் அட்டையைத். திருப்பி உற்று நோக்கினான்.

“என்னடா கிடாரம்” என்றபோது அவர் குரலில் மத்தியான உறக்கம் கலைந்ததன் சலிப்பு அப்பட்டமாக புலப்பட்டது. அந்த அறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரேயொரு மேசை மின்விசிறி நடுக்குவாதம் வந்தது போல் தலையை ஆட்டியது. அதிலிருந்து காற்றை காட்டிலும் இரைச்சல் அதிகமாக வெளிவந்து கொண்டிருந்தது.

“அண்ணே .கெளம்பு.. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”

“யாரடா?’

“அதாண்ணே இம்புட்டு வருஷமா நாம தேடுற லட்சிய இலக்கிய வாசகன”

“டேய்…கடுப்பக் கெளப்பாத”

“நீகூட போன வாரம் விமர்சன கூட்டத்துல கோவமா சொன்னியேண்ணே.. ஒங்கள மாதிரி கூமுட்டைகளுக்கு எங்கத வெளங்காதுடா.. லட்சிய இலக்கிய வாசகன நம்பி எழுதிருக்கேன்னு.. கோவத்துல நாக்காலிய ஒதஞ்சுட்டு வெளிய வந்தியே.. மறந்துட்டியா?”

“நல்லா நினவிருக்கு.. அதுக்கு என்ன இப்ப?”

“அண்ணே அம்மாறிய சத்தியமா சொல்றேண்ணே .. அவன் இருக்கான்.. லட்சிய இலக்கிய வாசகன் இருக்கான்.. அதுவும் நம்மூருலயே…. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”

“என்னடா சொல்ற? ..நெசமாத்தான் சொல்றியா..”, என்று எழுந்து கைலியை இறுக்கிச் செறுகினார் எழுத்தாளர் பழுவேட்டையன்.

“அன்னிக்கு நீ பேசுனத கேட்டு ரொம்ப விசனப்பட்டேன்.. ஒருவாரம் விடாம தேடி அலஞ்சேன்.. எப்புடியோ கண்டுபிடிச்சுட்டேன்.. வா போவோம்” என்று இழுத்து சென்றான் கிடாரம்.

கிடாரம் சைக்கிளை டவுனுக்குள் விட்டான். இடுகலான சந்துகளில் சைக்கிள் வேகவேகமாக ஒழுகிச் சென்றது. இருபுறமும் காரைச்சுவர்கள் நெடிதுயர்ந்து நின்றன. சுவர்களை ஒட்டி சாக்கடைகள் சலசலத்தன. காவாயின் முள்ளுச்செடிகள் ஓரம் பன்றிகள் புழங்கின. பழுவேட்டையன் கேரியரில் அமர்ந்து பீடி வலித்து கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் லயித்திருந்தார். லட்சிய இலக்கிய வாசகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம், திருக்குறள் துவங்கி பாரதி வரை மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன என்கிறார் ஆய்வாளர் அர.சு. ராமையா. திருமந்திரமேகூட அவனை நோக்கி எழுதப்பட்ட படைப்புதான் என்றொரு பேச்சும் உண்டு. மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றும், பரகாய பிரவேச சித்தி அடைந்தவர் என்பதால் உடல் மாற்றிகொண்டு உயிர் நீடிப்பவர் என்றும் அவரைப்பற்றி இலக்கிய வட்டாரத்தில் தொன்மங்கள் பல உண்டு. இளமையில் மரித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் அவரை ஒருமுறையேனும் கண்டுவிட வேண்டும் எனத் துடித்து, அது சித்திக்காமல் விரக்தியில் மரித்தவர்கள்தான் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார் முனைவர் சேரன் செங்குட்டுவன். பாரதியும், புதுமைப்பித்தனும் அவரை மிக அணுக்கமாக நெருங்கி கடைசி நொடியில் சந்திக்க தவறியவர்கள் என்பதற்கான சில வாய்மொழி சான்றுகள் உள்ளன . கடைசியாக அவரைச் சந்தித்த தமிழ் எழுத்தாளர் யாரென்றே தெரியவில்லை. அசோகமித்திரன், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, மௌனி, நகுலன் என பல பெயர்கள் இலக்கியவாதிகள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகின்றன. இலக்கிய உலகம் அழுது அரற்றி தேடிச் சலித்த ஒருவர் தன் ஊரில், அதுவும் கிடாரமே எளிதாக கண்டுபிடிக்கும் நிலையில் இருக்க முடியுமா என்றொரு குழப்பம் பழுவேட்டையனை வாட்டியது.

முட்டுச் சந்தில் நுழைந்து கடைக்கோடியில் உள்ள ஒரு பாழடைந்த செட்டிநாட்டு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான் கிடாரம். சுவர் விரிசலில் வேம்பும் அரசும் முளைத்து வளர்ந்திருந்தன. முகப்பில் இருந்த சரஸ்வதி சிலையின் கரங்கள் துண்டுபட்டிருந்தன. அவள் கையில் வீணையிருந்த இடத்தில் பாதி வளைந்த இரும்புக்கம்பி நீண்டிருந்தது. பழுப்பும் செம்மண்ணும் சேர்ந்த புதுநிறத்தில் நின்ற அக்கட்டிடத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறியே தென்படவில்லை. உளுத்துப் போயிருந்த வாசல் கம்பிக்கதவை திறந்து இருவரும் உள்ளே சென்றார்கள். எலிப் புழுக்கைகளும் பல்லி முட்டைகளும் திண்ணையில் விரவிக்கிடந்தன. நிலைப்படி புடைப்பிலிருந்து கரையான்கள் அவதி அவதியென வெளியேறிக் கொண்டிருந்தன.

“என்னடா இது ..ஏதோ துப்பறியும் கதையாட்டமிருக்கு.. இங்க ஆளே இருக்க முடியாதுடா”

பதிலேதும் கூறாமல் கிடாரம் மரக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வளவு வீட்டு மாடியறையில் விளக்கெரிந்தது. மரப்படிகளில் ஏறி அந்த அறையை நோக்கி இருவரும் சென்றார்கள்.

அறை வாயிலில் ‘இடியாப்பம்’ ‘கடிகாரம்’ ‘பங்கனபள்ளி’ போன்ற சிற்றிதழ்களின் புதிய பிரதிகள் பிரிக்கப்படாமல் கிடந்தன.

“இதெல்லாம் இன்னமும் வருதாடா?” என்றார் பழுவேட்டையன் ஆச்சரியமாக.

கிடாரம் அவரை அமைதியாகச் சொல்லி சைகை செய்துவிட்டு கதவைத் தட்டினான். பழுவேட்டையனுக்குள் ஏதோ ஒன்று மினுங்கி மறைந்தது. இம்மாதிரியான பதட்டமான சூழல்களை அவர் வழக்கமாக ஒரு மேரி ரொட்டியை மென்று தின்று எதிர்கொள்வார். அன்று அவசரத்தில் அப்படியே கிளம்பி வந்துவிட்டதால், பதற்றத்தில் பற்றிக்கொண்டு எரியும் வடவத்தீயை எச்சில் கூட்டி முழுங்கி அணைக்க முயன்றார்.

ஐந்து நிமிடங்கள் ஆகியும் உள்ளே சிறு சலனம்கூட எழவில்லை. மீண்டும் கதவை வலுவாகத் தட்டியபோது அது சற்றே நகர்ந்தது. மெதுவாக கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்கள். கதவை முழுவதுமாக திறக்க முடியவில்லை. ஓராள் விட்டத்திற்கே வழிவிட்டது. இருபுறமும் கூரையை முட்டும் அளவுக்கு நான்கு வரிசைகளாக சிற்றிதழ்கள், நடு இதழ்கள், சிறப்பிதழ்கள் அடுக்குகள் இருந்தன. என்னென்ன இதழ்கள் என வேகமாக ஓட்டிப் பார்த்தார். அறையிலிருந்த இரண்டு ஜன்னல்களையும் புத்தக அடுக்குகள் மறைத்திருந்ததால் நண்பகலிலேயே இருண்டிருந்தது. கொஞ்சம் வெளிச்சம் கண்ணுக்குப் பழகியபிறகு நோக்கினால் அந்த வரிசையில் எழுத்து, கசட தபற, சுபமங்களா, சரஸ்வதி போன்றவை இருந்ததுகூட ஏதும் ஆச்சரியமில்லை, ஆனால் இந்தியன் ஒப்பினியன், சுதேசமித்திரன், பாரிஸ் ரிவ்யு  எல்லாம்கூட இருந்தன. அப்போதுதான் பழுவேட்டையன் எதேச்சையாக தரையை நோக்கினர். பட்டுகோட்டை பிராபகர், ராஜேஷ்குமார், முத்துலெட்சுமி ராகவன், இந்திரா சவுந்தரராஜன், ரமணிச்சந்திரன் எனப் பலருடைய பாக்கெட் நாவல்களே தரைக்கு தளமாக திகழ்ந்தன. கிடாரம் கால் இடறியபோது காலுக்கு கீழே பல அடுக்குகள் உள்ளன என்பது பிடிபட்டது. ஒருவேளை இந்த அடுக்குகள் கீழ் தளத்திலிருந்தே துவங்குகிறதோ என்றொரு ஐயம் ஏற்பட்டது. புத்தகங்கள் மீது கால்வைக்க இருவருமே கூசினார்கள். கிடாரம் யோசிக்காமல் சட்டென முழந்தாளிட்டான். “கலைவாணியில்லியா” என்றான். சுவிசேஷ ஜெபக்கூட்டத்தில் நடப்பது போல் மண்டியிட்டு நடக்க துவங்கினான்.

அந்தக் கூடத்தின் முடிவில் வலப்பக்கம் ஓர் அறை திரும்பியது. அங்கே தலைக்கு மேலே அந்தரத்தில் தொங்கும் எல்ஈடி விளக்குக்கு நேர் கீழே  சுமார் ஐந்தடிக்கு பிரமிட் போல் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மேலே, பத்மாசனத்தில் அமர்ந்து இவர்கள் வந்ததைக்கூட கவனிக்காமல் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். சோடாபுட்டி கண்ணாடி அணிந்த வழுக்கை தலையர், வயது ஐம்பதுகளில் இருக்கலாம், பென்சில் மீசை, மயிரடர்ந்த வெற்று மார்பு, சாம்பல் கட்டங்கள் போட்ட கைலி என அவருடைய அடையாளங்கள் நன்றாக பரிச்சயமாயிருந்தது. அப்போது பழுவேட்டையனுக்கு பிடி கிட்டியது, தோள் தினவும் தொந்தியும் அவரை வைக்கம் முகமது பஷீர் இல்லை என நிறுவியது.

அத்தனை நேரம் வாசித்துக் கொண்டிருந்தவர், சட்டென புத்தகத்தை மூடி வீசி எறிந்தார். அடுக்களை மேடையில் சென்று புதைந்து கொண்டது. அவரருகே சுமார் நான்கடி நீளமும் மூன்றடி விட்டமும் உள்ள தடித்த கணக்கு நோட்டு போல இருந்த ஒரு புத்தகத்தை பிரயாசைப்பட்டு திறந்து, அதில் என்னவோ எழுதிவிட்டு மூடிவைத்தார். அதன் பின் அவர்களை நேருக்கு நேராக நோக்கினார்.

“வாங்க பழுவேட்டையன்.. வாங்க கிடாரம் கொண்டான் “ என வரவேற்றார். தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு உரிய திடமான இயந்திர குரல். முகத்தில் விஜிபி காவல்காரன் போல் அத்தனை இறுக்கம்.

“உக்காருங்க” என அவர் காட்டிய நாற்காலி முழுக்க புத்தக அடுக்குகளால் உருவாகியிருந்தது.

“தைரியமா உக்காரலாம்.. காலுக்கு முன்னலாம் கம்பராமாயணம், தால்ஸ்தாய் பயன்படுத்துவேன். இப்போ ஜெயமோகன், பா.வெங்கடேசன் எல்லாம் பயன்படுத்துறேன்.. நல்லா வலுவா இருக்கும்.. குஷன் வந்து சேதன் பகத், ஷோபா டே மாதிரி இலகுவான புக்ஸ் .. நல்லா மெத்துன்னு இருக்கும்” என்றார்.

சுவர்களை ஆங்கில அயல்மொழி நூல்களின் வண்ண வண்ண அட்டைகள் வியாபித்திருந்தன. எல்லாம் அவரறியாத பெயர்கள். சுயசரிதைகள், மானுடவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள்! இத்தனை பெயர்கள் இத்தனை புத்தகங்கள் அவரை நிலையிழக்கச் செய்தன. சாப்பாட்டு மேசை சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர், எனிட் ப்ளைடன் புத்தகங்களால் உருவாகி இருந்தது. சமையல் மேடை முழுக்க பயண நூல்களால் அமைக்கப் பெற்றிருந்தது. ஒருகால் கூரையைத் தவிர அனைத்து இடத்திலும் புத்தகங்களால் நிரம்பியிருக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் அண்ணாந்து நோக்கினார். மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ரெக்கைகள் மீது இரண்டடுக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தரத்தில் வலைகட்டி அதிலும் புத்தகங்களை நிறைத்திருந்தார். புத்தகங்களால் ஆன கூரை.

“அண்ணே ..கக்கூஸ ஒரு தடவ பாத்துரனும்ணே.. எனக்கென்னமோ நம்ம புக்குல்லாம் அங்கதான் இருக்குமொனு கிலியா இருக்கு” என்று காதில் கிசுகிசுத்தான் கிடாரம்.

“எதாவது சாப்புடுறீங்களா..நா இப்பத்தான் ஜூலியன் பர்ன்ஸ் சாப்புட்டு முடிச்சேன்.. மத்தியானத்துக்கு மிலன் குந்திரா வதக்கல்.. ராத்திரிக்கு திஜா தான் ஒத்துக்குது”

பழுவேட்டையனால் இதை உள்வாங்கவே முடியவில்லை. திகைத்து சொல்லறுந்து அமர்ந்திருந்தார். ‘இலக்கியத்தில் வாழ்வது’ என்றால் என்ன என்பதை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்து கொண்டார். கண்களில் கசிந்த நீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனையாண்டு கால வாழ்வில் உருப்படியாக நாம் ஒரு முன்னூறு நானூறு புத்தகங்கள் வாசித்திருப்போமா? அவமானமாக இருந்தது. நெடுநேரம் மௌனம் களைந்து பேச துணிந்தார்.

“இதெல்லாம் உண்மையா இருக்கும்னு என்னால நம்பவே முடியல. அப்ப ஒங்களப் பத்தி நிலவுர கதையெல்லாம் நிசம்தானா?”

அக்கேள்வியை அமைதியாக கடந்தார்.

“அந்தக் கணக்கு நோட்டு என்ன?”

“அது ஆவணப் புத்தகம். புத்தகத்தோட பேரும் அதப்பத்தி ஒரு வார்த்தையில அபிப்ராயமும் எழுதி ஆவணப்படுத்தனும்.”

“ஒரு வார்த்தையா?”

“ஆமா. அதுக்குமேல வேற என்ன எழுதணும்? ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல ஒரேயொரு கச்சிதமான சொல் போதும்.”

“அபாரம்.. அற்புதம்.. இதெல்லாம் திரும்பத் திரும்ப வருமா”

“இல்ல. ஒரு சொல் கூட திரும்ப எழுத முடியாது. அந்த புத்தகம் அத ஏத்துக்காது… அது மாதிரி நாம நம்பாத போலியான, பொய்யான சொற்களையும் எழுத முடியாது”

“ஆச்சரியமா இருக்கே.. பாக்கலாமா?”

“இல்ல.. அனுமதி கிடையாது”

கிடாரம் இந்த பெரிய புத்தகத்தை எப்படி லவட்டலாம் என்று திட்டம் போடத் துவங்கினான்.

சற்று நேரம் நீடித்த மவுனத்தை களைந்து அவரே பேசினார்.

“நீங்க ‘சுவரொட்டி’ இதழ்ல  எழுதுன ‘பீளை’ கதை படிச்சேன்.”

“நல்லாயிருந்துதா?”

“இதே மாதிரி நா படிக்கிற நூத்தி முப்பத்தி மூணாவது கதை.”

“அப்ப நல்லாயில்லையா?”

“சில பேருக்கு பிடிக்கலாம்”

பழுவேட்டையன் சோர்ந்தார். அவருடைய சொற்கள் எல்லாம் கூர்மையாக கிழித்து சென்றன.

கிடாரம் ஆர்வமிகுதியால் அவரிடம், “என்னோட கவிதைய வாசிச்சதுண்டா?”

“கவிதையா?”

அவன் முகம் சிறுத்தது. பழுவேட்டையன் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

“சாருக்கு சம்சாரம் இல்லிங்களா?”

“அதெல்லாம் அப்பத்திக்கு அப்ப”

“புரியலியே”

“சோஃபி, நடாஷா, அபிதா, யமுனான்னு வாழ்ந்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்’

“அதான பாத்தேன்.. இருந்தா இம்புட்டு பொஸ்தவம் சேத்துர முடியுமா என்ன?” என்றான் கிடாரம்.

என்ன மனுஷன்யா என்று மனதிற்குள் நினைத்துகொண்டார். ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து கண்ணீர் உகுக்க வேண்டும் எனும் உந்துதலை கவுரவம் கருதி தவிர்த்தார்.

“உங்கள கடசியா பாத்த தமிழ் எழுத்தாளர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“வேண்டாம். அப்புறம் இதனால ஒரு பதிப்பகக் குழு சண்ட வரும்”

கிடாரம் கீழே கையூன்றி அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கம்ப இராமாயண உரைத்தொகுப்பு இருந்தது. உடனே அவரிடம் “கம்பன பத்தி என்ன நினைக்குறீங்க?”

“நல்ல மனுஷன். எளிமையா பழகுவாரு.”

இதைச் சொல்ல லட்சிய இலக்கிய வாசகன் எதற்கு என்று சுணங்கினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை கிடாரம்.

“அதில்ல..கவிச்சக்கரவர்த்தியில்லியா..அவரோட ஆகிருதிய பத்தி”

“நெடுநெடுன்னு கருப்பா மொட்டத்தலையா இருப்பார்,  இந்த படத்த பாருங்க, கவிஞன் மாரியா இருக்கான், கோவில் பூசாரியாட்டம் இருக்கான், என்னே நம் கற்பனை வறட்சி.”

“கம்பன பாத்திருக்கீங்களா?” என்று பழுவேட்டையன் ஆச்சரியமாக வினவினார்.

“வள்ளுவர் கூட வேற மாதிரி ..சரி அத விடுங்க.. அப்புறம் தேவையில்லாம சாதிச் சண்ட  மதச் சண்டையெல்லாம் வரும்” என்று மீண்டும் இறுகிய மௌனத்திற்கு திரும்பினார்.

“நீங்க எதுவும் எழுதினதில்லையா”

“இல்ல நா வாசகன் மட்டும்தான்.”

“எழுதிப் பாக்கனும்னு தோணினதே இல்லியா?”

“எத எழுதினாலும், அது எந்த புக்குலேந்துன்னு மூணாவது வார்த்தையில தெரிஞ்சு போய்டுது..எரிச்சலா இருக்கும்.. அதனால எழுதுறதில்ல”

“விமர்சனம்.. வாசகர் கடிதம் கூட எழுதுறதில்லியா?”

“தேவையில்லன்னு நினைக்குறேன்”

“இல்ல ஒரு ஊக்கமா இருக்குமேன்னு”

“அது என் வேலையில்லியே”

“இருந்தாலும் இம்புட்டு கறாரா இருக்கக்கூடாதுண்ணே” என்றான் கிடாரம். பழுவேட்டையனுக்கும் அவருடைய பதில்கள் ‘கொஞ்சம் கூட பிடி கொடுத்து பேசாமல் இருக்கிறாரே’ என அயர்ச்சியாகத்தான் இருந்தது.

“இல்ல எதுக்காக இம்புட்டு புத்தகங்களையும் படிக்கணும்..ஒரு நோக்கம் வேணாமா?”

“எனக்காகப் படிக்கிறேன். வாசிக்கிறேன், ஆகவே வசிக்கிறேன். Reading is not a means to achieve an end, its an end in itself. அதாவது எதையும் அடையணும்னு இல்ல, வாசிப்பே அடைவதுதான்.”

“இருந்தாலும் வெளிவாழ்க்கைன்னு ஒன்னு இருக்கே.. அதுக்கு வாசிப்பு உதவனும்ல.. வாசிச்சத போட்டு பாக்கணும்ல..நாலு சனங்கள புரிஞ்சிக்கலாம்”

“எனக்கு அப்படியொண்ணு கிடையாது. முன்னுக்குப் பின் முரணான சமூகம்தான இது. திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் இவ்ளோ வருஷமா படிச்சுட்டுதான வர்றோம். அதனால எல்லாம் மாறிட்டோமோ என்ன? நான் என்ன இந்த வெளையாட்டுக்கு வெளியேவே நிறுத்திக்குறேன்”

“எல்லா புக்கும் படிச்சுருவீங்களா.. இங்க இருக்குறத எல்லாமே படிச்சுட்டீங்களா?”

“ஆமா. லட்சிய இலக்கிய வாசகனை நம்பி எழுதப்படும் எல்லாத்தையும்”

“இப்ப தமிழ்ல எழுதுற எல்லாரையும் படிச்சுருவீங்களா? இணைய இதழ், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கே?”

முதுகுக்குப் பின்னிருந்த டேபை எடுத்து உயர்த்தி காண்பித்தார்.

“இதுக்கெல்லாம் காசு எங்கேந்து வரும்?”

“லட்சிய இலக்கிய வாசகனுக்கு இவையெல்லாம் இலவசமாக எப்படியோ வந்து சேரும்”

“அதான பாத்தேன்” என கிடாரம் நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யாரு?”

“தெரிஞ்சி என்னப்பண்ண போறீங்க?”

“இல்ல எங்களுக்கும் பிடிக்குமான்னு ..தெரியாத பேருன்னா தேடிப் போய் வாசிக்கலாம்..”

“சாண்டில்யன்”

“சாண்டில்யனா? யவன ராணி, கடல் புறா சாண்டில்யனா?”

“ஆமா”

“என்ன சார் இது.. நா கூட நீங்க தால்ஸ்தாய் பாஸ்டர்நாக் மாதிரி ஏதாவது சொல்வீங்கன்னு நெனைச்சேன்”

“நா சிறந்த எழுத்தாளர சொல்லல .. எனக்கு பிடிச்ச எழுத்தாளர சொன்னேன்..”

“அப்ப சிறந்த எழுத்தாளர சொல்லுங்க”

“நா லட்சிய இலக்கிய வாசகன்தான், அத லட்சிய இலக்கிய விமர்சகன்தான் சொல்லணும்”

“அவரு எங்க இருக்கார்?”

“தேவைன்னா நீங்கதான் தேடிக் கண்டுப்பிடிக்கனும்”

பேசிப்பேசி மூச்சிரைத்தது பழுவேட்டையனுக்கு. இப்படியும் விட்டேந்தியாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?

நோண்டிக்கொண்டிருந்த கைபேசியை கீழே வைத்துவிட்டு கிடாரம் அவரிடம், “இந்த கொன்றை வேந்தன் பூங்காவனத்த தீட்டி எழுதி அமக்களப்படுதே. அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. இன்னிக்கு படிச்சு முடிக்க இன்னும் பதினேழு புத்தகங்கள் இருக்கு.”

“ஏன் சார் எல்லாத்துக்கும் கோவப்படுறீங்க.. இவன் அவன திட்றதும்.. அவன் இவன திட்றதும்.. எல்லோரும் சேந்து நியாயம் கேக்குறது.. பஞ்சாயத்து பண்றதுன்னு .. இதெலாம் ஒரு ஜாலி சார்.. இலக்கியம் வளர இதெல்லாம் தேவ சார்’ என்றான் கிடாரம்.

“நான் லட்சிய இலக்கிய வாசகன், எனக்குன்னு இங்க ஒரு கடமை இருக்கு, அதிலிருந்து விலக முடியாது”

இதற்கு மேலும் அங்கிருப்பதில் எந்த பயனும் இல்லை எனும் முடிவுக்கு பழுவேட்டையன் வந்தார்.

“சரி புரியுது ..கெளம்புறோம்..அதுக்கு முன்னாடி என்னோட எழுத்தப்பத்தின அபிப்ராயத்த சொன்னிங்கன்னா சவுரியமா இருக்கும்”

“ஒருவேள கிடாரம் வயசில செத்து போயிருந்தா நல்ல எழுத்தாளர்னு சொல்லிருக்க ஒரு வாய்ப்புண்டு.. இப்ப இனியும் முப்பது வருஷம் காத்திருக்கணும்.. எப்பிடியும் மூணு நாள் நியாபகம் வெச்சுப்பாங்கன்னு நினைக்குறேன்””

பழுவேட்டையனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. அத்தனை நேரமும் நகராமல் அமர்ந்திருக்கும் அந்த பிரமிட் புத்தகப் பீடத்தை தகர்த்துச் சாய்க்க வேண்டும் என்று வந்த வெறியை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக்கொண்டார்.

“சரி வரோம்” என்று வேகவேகமாக எழுந்தார்.

கிடாரம் அமர்ந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை லவட்டி சட்டையில் மறைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக எழுந்தான்.

“கிடாரம் அந்த புஸ்தகங்களை வெச்சுடுங்க” என்று கட்டளையிட்டார்.

“இது ரமணி சந்திரன் புக்குதான் சார்..சும்மா பழக்க தோஷத்துல” என்று வழிந்துக்கொண்டே கீழே வைத்தான்.

பழுவேட்டையரை ஆங்காரம் பிடித்து ஆட்டியது. இன்றிரவு சரக்கடித்துவிட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என வஞ்சினம் உரைத்தார். வெளியே செல்வதற்கு முன் திரும்பி, “சார் ஒரேயொரு கேள்வி.. எழுத்தாளன் பெரியவனா வாசகன் பெரியவனா?” என்று கேட்டபோது இயல்புக்கு மீறிய கடுமை அவர் குரலில் வெளிப்பட்டது.

பீடத்திலிருந்து சட்டென கீழே குதித்து இறங்கி நின்று கைகொட்டி சிரித்தார், சிரிப்பின் எடைதாளாமல் கீழே புத்தகங்களின் மீது உருண்டு புரண்டு அடக்க முடியாமல் சிரித்தார்.

பழுவேட்டையன் முழு வெறியில் கிடாரத்தை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். சைக்கிளை எடுத்து சாலையில் செல்லும் வரைக்கூட அந்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. இருவரும் மவுனத்தில் ஆழ்ந்திருந்தனர். மகரநோம்பு பொட்டலில் சைக்கிளை அழுத்திக் கொண்டிருந்தபோது பழுவேட்டையன் சன்னமாக  “நமக்கு இந்த சூனாபானா கூமுட்ட வாசகர்களே போதும்டா கிடாரம்..என்ன நாஞ் சொல்லுறது” என்றார்.

இன்று

நரோபா

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது
சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள்
தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள்
புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது
எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு குடமுழுக்கு
விராட் கோலி சதமடித்தார்
ஒன்றுவிட்ட பெரியப்பா இறைவனடி சேர்ந்தார்
குட்டிப் பயலுக்கு வயிற்றுப்போக்கு
ஒரு கதையையும் எழுதினேன்
அதுபாட்டுக்கும் எதன் மேலும் விழாமல்
நடந்து சென்று அடுப்பு சாம்பலில் சுருண்டு படுத்து கொண்டது.

​புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா

நரோபா

ஜீவா படைப்புலகம் வெளியிட்டுள்ள விஷால் ராஜாவின் முதல் சிறுகதை தொகுப்பு ‘எனும்போது உனக்கு நன்றி’ ஒன்பது கதைகளை கொண்டது. தொன்னூறுகளில் பிறந்து தமிழில் புனைவுகள் எழுதும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது உவகையும் சற்றே பொறாமையும் அளிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பின்பான தலைமுறை எத்தகைய சிடுக்குகளை புனைவுகளில் கையாள்கிறது? தொழில்நுட்பம் புனைவில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவாக இருக்கும்?  கிருஷ்ணமூர்த்தி, லூசிபர் ஜெ வயலட், விஷால் ராஜா, நாகபிரகாஷ், பாரதி என ஒரு வரிசை உருவாகி வருகிறது. விஷால் ராஜாவின் சிறுகதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லி அல்லது மையப்பாத்திரம் உள்ளொடுங்கியவனாக, அதிகமும் பிறருடன் உரையாடாமல் தனக்குள் உரக்கச் சிந்திக்கும்/ விவாதிக்கும் தன்மையுடையவனாக இருக்கிறான். வேகத்தைக் கண்டு மிரட்சியடைகிறான். கதைமாந்தர்கள் பொருளின்மையால் மீள மீள சூழப்படுகிறார்கள். அச்சமும் தயக்கமும் கூச்சமும் நுண்ணுணர்வும் கொண்டவர்களால் நிரம்பியது அவருடைய கதையுலகம். பெரும் பிரியத்தை உள்ளத்தில் ரகசியமாக சுமந்தலைகிறார்கள். அவ்வகையில் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்து, நவீன தமிழிலக்கிய மையப் பாத்திரங்கள் உள்ளொடுங்கியவர்களின் குரலாகவே இருந்திருக்கிறது. சமூகத்தில் ஓங்கி ஒலிக்காத குரல்களே இலக்கியத்தில் ஆளுகையுடன் திகழ்கின்றன. அவர்கள் அலைக்கழிபவர்கள், கையறு நிலையில் முடிவெடுக்கத் திணறுபவர்கள், பொதுப் போக்கில் ஒழுக முடியாதவர்கள், பல வகைகளில் தாஸ்தாவெஸ்கி நாயகர்களை ஒத்தவர்கள்.

தொகுப்பின் முதல் கதை ‘கசப்பேறிய கோப்பைகள்’. நாகராஜ் எனும் கடைநிலை ஊழியன் மற்றும் கல்யாணி எனும் திருநங்கையை பாத்திரங்களாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’யை நினைவுறுத்தியது. ஏறத்தாழ அதே பேசுபொருள்தான்- காரணமற்ற வெறுப்பு, கசப்பு நம்முள் எப்படியோ தங்கி விடுகிறது. அன்பைப் போல் வெறுப்பும் தொற்றி பரவக்கூடியது. ஒரு கசப்பின் சுழற்சியை சொல்லிச் செல்கிறது கதை. நாகராஜிற்கு இருக்கும் திடத்தன்மை கல்யாணிக்கு இல்லை என வாசிக்கும்போது தோன்றியது. கல்யாணி அனுதாப உணர்விலிருந்து வார்க்கப்பட்டிருக்கிறாரோ எனும் ஐயம் எழுந்தது. கல்யாணி எனும் பாத்திரத்தின் வலுவின்மையின் காரணமாக இக்கதை எனக்கு நிறைவளிக்கவில்லை.

தொகுப்பில் உள்ள ‘நீர்க்கோடுகள்’ இதே போன்ற நிறைவின்மையை அளித்தது. அறக்குழப்பங்களும், ஊசலாட்டங்களும் கொண்ட ஆசிரியர் ஹென்றியின் பாத்திரம் வலுவாக உருவாகி இருந்தாலும்கூட, ‘மகள் வயதை ஒத்தவர் மீதான ஈர்ப்பு’ எனும் பழக்கப்பட்ட கதைக்களம் என்பதால் ஆர்வம் குன்றியது. ‘ஞாபகங்களின் கல்லறை’ லயம் கூடிய கவிதைக்கு அருகிலான நடையில் எழுத பட்டிருக்கிறது. ஆனால் கதையாகாத உதிரி துண்டுகளாகவே எஞ்சி நிற்கிறது.

கதாபாத்திரங்களின் பிரதேசம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியானபோதே வாசித்த நினைவிருக்கிறது. கற்பனையின் வலுவை நம்பி எழுதப்பட்ட கதை. எடுத்துக்கொண்ட கருவிற்கு நியாயம் செய்திருக்கிறது. வெவ்வேறு கதைகூறல் முறைகளை முயன்றிருக்கிறார் என்ற வகையில் சுவராசியமான வாசிப்பை அளிக்கிறது. ‘எனும் போது உனக்கு நன்றி’ வெவ்வேறு காதல் கதைகளின் ஊடுபாவு. ஒரு திரைக்கதைக்கான எல்லா வடிவ சாத்தியங்களும் கொண்டது. கதையே ஒரு காமிரா கோணத்தில் திரையில் காண்பிப்பது போல் வெட்டி வெட்டிச் சொல்லப்படுகிறது. நவீன கதைசொல்லிகள் பலரும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். தவறென்றோ இழிவேன்றோ அல்ல, எனினும் காட்சி ஊடகம் புனைவெழுத்தில் செலுத்தும் தாக்கம் என இதைக் கூறலாம். இக்கதை ஒரு மொட்டை மாடி குடியரட்டையில் கதைமாந்தர்களின் வெவ்வேறு வகையான காதலின் நினைவுகளைச் சொல்கிறது. ஆச்சரியமாக அவர்களின் காதல் கதைகளில் வன்முறை எட்டிப் பார்க்கவில்லை.

உடல்’ இத்தொகுதியில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி நவீன தமிழிலக்கியம் மரணத்தை பற்றியும், அதன் அப்பட்டமான அர்த்தமின்மை பற்றியும் மீள மீள பேசுகிறது. வேறெவரையும் காட்டிலும் எழுத்தாளன் மரணத்தைப் பற்றி அதிகமும் எண்ணுகிறான், அஞ்சுகிறான். ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ மரணத்தின் வன்மத்தை நேரடியாக சித்தரிக்கிறது. ‘உடல்’ பரகாய பிரவேசம் போல் ஒன்று நிகழ்ந்து கதைசொல்லி அவன் விரும்பும், அவனை நேசிக்காத பெண்ணுடைய காதலனின் உடலுள் எழுந்துவிடுகிறான். நடைமுறை சாத்தியமற்ற தளத்தில் வைத்து ஒரு மெய்யியல் கேள்வியை விசாரணை செய்கிறார் விஷால். எது நான்? உடலா உயிரா? கதை அங்கிருந்து இந்தச் சலுகையை அனுபவிக்கலாமா எனும் அறக் கேள்விக்கு செல்கிறது. இக்கேள்விகளுக்கு எந்த தீர்மானமான விடையையும் அளிக்காமல், அல்லது எதிர்கொள்ள இயலாமல் தப்பித்துச் செல்கிறான் கதைசொல்லி. எளிய தீர்வுகளை நோக்கிச் செல்லாததே இக்கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. விஷால் ராஜாவின் கதைகளில் ஒரு பொதுப்போக்காக இதைக் குறிப்பிடலாம். எனினும் இக்கேள்விகள் எரியும் தீவிரத்துடன், தத்தளிப்புடன் கதையில் பதிவாகிறது.

தொகுப்பின் இறுதி கதையான ‘விலகி செல்லும் தூரம்’ கொஞ்சம் அலைவுற்றாலும்கூட ஒரு நல்ல கதை. ஜேக்கப்பின் கதையாக துவங்கி ஹர்ஷத்தின் கதையாக சடாரென மாறிவிடுகிறது. நவீன வாழ்வின் சிதைவுகளிலிருந்து மீட்க நமக்கோர் மீட்பர் வரமாட்டாரா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம். நெரிசலான சாலையில், குழப்பமான மனதுடன் நிற்கும் ஒருவனிடம், ‘உன்னை எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்கிறேன் வா’ என ஜேக்கப் அவருடைய ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார். இக்கதையின் மீட்பர் பெரிய மாயங்களை நிகழ்த்திக் காட்டவில்லை, ஆனால் நன்கறிந்த பாதைகளில் விளைவுகளின் மீதான அச்சத்தால் இருக்கும் துணிவின்மையை, வினாக்களை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து அவற்றை எதிர்கொள்ள உந்திச் செலுத்துகிறார். ஜேக்கப்பும் கூட முகம் வெளிறி தனிமையில் உழலும் சலிப்படைந்த ஒரு மீட்பர்.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என தயங்காமல் ‘குளிர்’, ‘மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி’ ஆகிய கதைகளைச் சொல்வேன். குளிர்ந்து தோல் மரத்து போகும் அதிகாலையில் கதைசொல்லி தன்னைச் சுற்றி நிகழ்பவனவற்றை கதையாக்குகிறான். குளிர் என்பது இக்கதையில் indifferent coldness எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தின் குரூரத்தை முதன்முறையாக உணர்ந்து அதிர்வதே கதை. வேண்டுமென்றே தெறிக்கும் வன்மம் அல்ல அந்தக் குரூரம், உண்மையில் அது ஒருவிதமான விட்டேத்தி மனோபாவம். ஆங்கிலேயர்கள் காலத்து தாது வருட பஞ்சங்களின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பற்றிக் கூறும்போது,. பிரித்தானிய அரசு கொன்றொழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்ததல்லை, ஆனால் முடியரசின் குளிர்ந்த விட்டேதிதி மனோபாவத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் இரண்டாம் உலகப் போரில் மரித்தவர்களை காட்டிலும் அதிகம் என்றொரு செய்தி உண்டு. ஆயுதமேந்த வேண்டும் என்றில்லை, கண்டுகொள்ளாமல் இருந்தாலே குத்திக் கொன்றுவிடலாம். ஈழ படுகொலை சார்ந்த ஒரு குற்ற உணர்வை எனக்கு இக்கதை சட்டென எழுப்பியது. முடிந்தவரை குளிரைப் பொறுத்துப் பார்த்த கதைசொல்லி, இறுதியில் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்க பையிலிருக்கும் சால்வையைத் துழாவுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சூழலே குளிர்ந்திருக்கும்போது, நாம் என்னதான் செய்துவிட முடியும்? குறைந்த பட்சம் குளிரில் நாம் விறைத்து மரத்து போகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதையே கதைசொல்லியும் தேர்கிறான். ஏதுமற்றவனின் படைக்கலம் என சால்வை அவனை சூழ்கிறது. இக்கதை துல்லியமான சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்புகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள். ‘எனும் போது உனக்கு நன்றி’ விஷ்வா, அதே கதையில் வரும் மோகன் என இப்பாத்திரங்களில் ஒரு தொடர்ச்சி திகழ்கிறது. ஹென்றியும் கூட அவருடைய மாணவி மீரா அவளாக வேறொருவனை காதலிப்பதைப் பற்றி சொன்னவுடன் ஆசுவாசம் அடைகிறார்.

காதல் விஷாலின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக வந்திருக்கிறது. போர்ன் வெகு சகஜமாக புழங்கும் ஒரு தலைமுறையிலிருந்து எழுத வந்ததாலும், நவீன தொழில்நுட்பம் உணர்வு ரீதியான பிளவை நிகழ்த்துவதாக இருப்பதாலும் காமத்தை எழுதுதல் பின்னுக்குச் சென்று மீண்டும் காதலை எழுதுதலை இத்தலைமுறை கைக்கொள்ளும் என தோன்றுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்து மனிதர்கள் அன்னியமாதல், கேளிக்கைகளுக்கு அடியில் உள்ள வெறுமை, அதன் உள்ளுறையும் வன்முறை, பரபரப்பான துய்தல் வழியாக மகிழ்ச்சியை அடைய முனைவது என நவீன வாழ்வின் எல்லா சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’. செய்தி மொழி, உரையாடல், மனவோட்ட விவரணை என மொழி பல்வேறு வகையில் கற்பனையின் பாய்ச்சலுக்கு ஈடாக பிசிறின்றி வெளிப்படுகிறது. மென்பொருள் துறை பணிச் சூழலை பின்புலமாக கொண்ட இக்கதை பணிச்சூழல் சார்ந்து அன்றாட வாழ்வின் வெறுமை, அழுத்தம், அன்பிற்கான ஏக்கம் என பலவற்றை தொட்டு செல்கிறது. ஒரு தொழில்நுட்ப பூங்காவின் ஊழியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப் படையாக மாற்றப்படுகிறார்கள். துண்டு நிகழ்வுகளாக ஊழியர்களைப் பற்றிய கதையும், நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. அழுத்தங்கள் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் சென்று முடிகிறது. இக்கதையில் வரும் எதிர்பாத்திரம் ‘மிஸ்டர் நோ ஐடி’ என்று அழைக்கப்படுகிறார். உலமயமாக்கலுக்குப் பின்பான வாழ்வில் அடையாள சிக்கல் வலுவாக காலூன்றி இருக்கிறது.

விலகி செல்லும் தூர‘மும், ‘மகிழ்ச்சிக்கான ரத்தப் புரட்சி‘யும் அதன் எதிரெதிர் அக நிலைகள் காரணமாக ஒன்றையொன்று நிரப்பி கொள்கின்றன. அப்படி என்ன பொருளின்மையைக் கண்டுவிட்டாய், என நம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கிறது. விஷாலின் கதைகள் பொதுவாக இவ்விரு புள்ளிகளுக்கிடையிலான ஊசலாட்டம் என கூறலாம். ‘விலகி செல்லும் தூரம்’ ஏறத்தாழ ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யின் அதே மனநிலையை பிரதிபலிக்கிறது ஆனால் பிந்தைய கதை சென்று சேரும் வெறுமையை அடையவில்லை. இந்த அழுத்தங்கள், அலைக்கழிவுகள் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல எனும் நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது. இத்தொகுதியின் மனவோட்டத்திற்கு ஒரு சமரச புள்ளியென ஜேக்கப் மற்றும் ஜானின் கதாபாத்திரங்களை கூறலாம். ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யில் வரும் நோ ஐடி ஒரு மீட்பரைப் போலத்தான் தோன்றுகிறான், சிக்கல்களுக்கான காரணங்களை வெளியில் அடையாளப்படுத்துகிறான், வெறுப்பை விதைக்கிறான், அதனால் மொத்தத்தையும் அழிவில் அமிழ்த்துகிறான். ஜேக்கப் சின்ன சின்ன நேசங்களை வெளிப்படுத்துகிறான், அவனிடம் பெரிய திட்டங்கள் கனவுகள் ஏதுமில்லை, சிக்கல்களின் ஊதிப் பெருக்கபட்ட பிம்பங்களை உடைக்கிறான். தால்ஸ்தாயின் ‘Where Love is God is’ கதையை மனம் நினைவு கூர்ந்தது.

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

அதுக்கு என்ன இப்ப? – நரோபா

நரோபா

உச்சி வெயிலிலே, மலையுச்சியிலே, தனித்த பன்றிப் பாறையின் கொம்பிலே சாய்ந்து, வானத்தை வெறித்தபடி பீடி இழுத்து கொண்டிருந்தான் பழுவேட்டையன்.

மூச்சிரைக்க நிற்காமல் ஓடிவந்தான் கிடாரம் கொண்டான்.

பழுவேட்டையன் மெல்லத் திரும்பி, துச்சப் பார்வையை வீசினான். ‘என்ன?’ என அவன் கண்கள் வினவின.

“அண்ணே… காரமடையான் தாயோளி… பச்ச புள்ளையப் போடற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி கத எழுதிப்புட்டாண்ணே”

பார்வை மீண்டும் வானத்தை வெறித்தது. நிதானமாக புகையை உமிழ்ந்தான்.

“அதுக்கு என்ன இப்ப?”

கிடாரம் வேகவேகமாக மூச்சிழுத்து விட்டான். வியர்வை கொட்டியது.

“அண்ணே… செல்லூர்க்காரன் மத்தவன் பொண்டாட்டியோட படுக்குறத நம்ம அண்ணி பேர வெச்சு கத எழுதி இருக்காண்ணே”

நெருப்பெரியும் பீடி முனையை திருப்பி கண்ணுக்கருகே வைத்து உற்று நோக்கினான் பழுவேட்டையன். “ஹ்ம்… அதுக்கு என்ன இப்ப?” என்றான் பீடியை திரும்பி வாயில் வைத்தபடி.

கிடாரம் முகம் சிவந்து பழுத்தது. பையில் வைத்திருந்த மானிடர் புட்டியை திறந்து, பிளாஸ்டிக் கோப்பையில் ஊற்றினான், அதில் தண்ணி பாக்கெட்டில் இருந்து நீர் பாய்ச்சி, ஒரு மிடறு குடித்தான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவன் குரல் தளர்ந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நா தழுதழுக்க, “அண்ணே… போவட்டும் விடு… இந்த புதுப்பட்டிகாரன் நம்ம நெடுங்குடி முத்து ஆக்கிப் போட்ட வெண்டக்கா மண்டி நல்லாயில்லன்னு ஸ்டேடஸ் போட்ருக்காண்ணே”

பழுவேட்டையன் சட்டென நிமிர்ந்தான். பாறையிலிருந்து கீழே குதித்தான். பீடியை தரையில் வீசி வெறும் காலால் தேய்த்தான். குனிந்து தேம்பிக் கொண்டிருந்த கிடாரத்தின் சொக்காயை பிடித்து தூக்கினான். “த்தா… ஏண்டா இத முதல்லேயே சொல்லல…” என விறுவிறுவென மலையிறங்கிச் சென்றான்.

ஆகச்சிறந்த கதைசொல்லியும் அவனுடைய முதன்மை ரசிகனும் – நரோபா

நரோபா

பேரண்டத்திலே பால் வீதியிலே
சூரிய குடும்பத்தினுள்ளே பூமி எனும் கோளிலே
நிலப்பரப்புகளிலே அதில் ஒன்றான ஆசிய கண்டத்திலே
இமயம் வகுத்த இந்திய துணைக் கண்டத்திலே
சிந்து நிலத்துக்கப்பால் விரியும் இந்தியாவிலே
விந்திய மலைக் கோடுக்கு தெற்கிலே
தமிழ் நிலத்திலே அங்கு ஊடுருவும் காவிரிக்கும் அப்பாலே
சிவகங்கைச் சீமையிலே
சீர்மிகு செட்டிநாட்டிலே
காரைக்குடி வட்டத்திலே
வட்டத்திற்குள் அடங்கும் ஒன்பதாம் வார்டிலே
ஒன்பதாம் வார்டின் பதிமூணாம் தெருவிலே
எட்டாம் நம்பர் மனையிலே
உள்ள லயன் வீடுகளில் நாலாவது வீட்டிலே
1.3.234.914 ஐ.பி விலாசத்திலே
ப வரிசை புனைப் பெயர் கொண்டவர்களிலே
ஆகச் சிறந்த கதைசொல்லி பழுவேட்டையன்தான்-
ஐயமிருந்தால்
அதே 1.3.234.914 ஐ.பி யை பயன்படுத்தும்
அதே வீட்டிலே வசிக்கும்
அன்னாரின் முதன்மை ரசிகன்
குட்டி பழுவேட்டையனை கேட்டுப் பாருங்கள்