நரோபா

வேரும் கனியும் – 2 : லோசாவை முன்வைத்து – நரோபா

நரோபா

படைப்புத்திறன் அளிக்கும் அழுத்தம், அதை விட்டு வெளிவர உள்ள வழிமுறைகள், எழுத்தாளனின் பொறுப்பு இவை எப்போதும் பேசச் சுவையானவை. மரியோ வர்கோஸ் லோசா எழுதிய ‘Letter to a Young Novelist’ எனும் நூலை வாசித்து கொண்டிருக்கிறேன். இளம் எழுத்தாளருக்கு லோசா எழுதும் கடிதங்களே இத்தொகுப்பு. ‘நாவல்’ எனும் வடிவம், அதன் சவால்கள் மற்றும் கூறுகளை லோசாவின் கடிதங்கள் விவாதிக்கின்றன. அத்துடன் பொதுவாக எழுத்தைப் பற்றியும் படைப்பாற்றல் பற்றியும் பேசுகின்றன. எழுத்து, எழுத்தாளன் பற்றி பேசும் லோசாவின் புத்தகத்தில் உள்ள முதல் கடிதத்தை மட்டும் கொஞ்சம் விரிவாக எழுதலாம். பிற கடிதங்கள் நாவல் எழுதும் முறைமை பற்றி விவாதிக்கின்றன.

எழுத்தின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்விக்கு லோசா, எழுத்து அளிக்கக்கூடிய இன்பமே அதன் பயன்மதிப்பு என்கிறார். எழுத்தே தனக்கு வாய்த்த ஆகச்சிறந்த நிகழ்வு என எழுத்தாளன் தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறான். எழுத்தையே தனது வாழ்க்கை முறையாக ஏற்கிறான். பிற அங்கீகாரங்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒருவன் எழுத்தாளன் ஆவதற்கு விதியோ கடவுளின் அருளோ அல்லது மரபணு அமைப்போ காரணம் என அவன் நம்புவதில்லை, எனினும் சார்த்தர் முன்வைப்பது போல் அது முழு சுய தேர்வு மட்டுமே என்பதிலும் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் லோசா. சுய தேர்வு முக்கியம்தான், ஆனால் அடிப்படையில் எழுத்தாளன் ஆவதற்கான சில அகச்சாய்வுகள் பால்ய பருவத்திலோ வளரிளம் பருவத்திலோ தென்படும் என்கிறார் அவர். விதவிதமான மனிதர்களை, சூழல்களை, நிகழ்வுகளை, வெவ்வேறு உலகங்களை அவர்கள் கற்பனை செய்வார்கள். இப்படியான கனவுள்ளவர்கள் பெரும்பான்மையினர் நிகழ் வாழ்வை துறந்து கற்பனையுலகில் வாழ்ந்து கதை படைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இங்குதான் சார்த்தர் முன் வைப்பது போல், சுய தேர்வு செயல்படுகிறது. கனவுள்ளம் கொண்டவர்களில் வெகுச் சிலரே தங்களை எழுத்தாளர்களாக ஆக்கி கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் லோசா.

ஏன் ஒருவன் கதை புனைய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ‘எழுத்து என்பதே வாழ்வுக்கு எதிரான கலகச் செயல்பாடு’ எனும் கருத்தை முன்வைக்கிறார். நிகழ் வாழ்க்கையின் போதாமைகளுக்கு எதிராக நிகர் வாழ்வை படைக்கிறான் எழுத்தாளன். பல எழுத்தாளருக்கு இது கலகம் என்றொரு பிரக்ஞைகூட இருக்காது. அப்படிச் சொன்னால் அந்த எழுத்தாளரேகூட மறுக்கலாம். இதைப் படிக்கும்போது எனக்கு சட்டென அசோகமித்திரன் நினைவுக்கு வந்தார். அவரிடம் போய் ‘நீங்கள் ஒரு கலகக்காரர்’ எனக் கூறினால், அதை அவர் ஏற்க மாட்டார்.

மேலும் லோசா, எழுத்து அதை பயின்றவனுக்கு சுகமும் நிறைவும் அளிப்பதில்லை என்கிறார். நிகழ் வாழ்வின் மீதான தீவிர அதிருப்தியின் விளைவாக புனைவுகள் விளைவதால் புனைவுகளும்கூட அசவுகரியங்களுக்கும் அதிருப்திகளுக்கும் காரணமாய் இருக்கின்றன. இந்நிலை எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்பதில்லை, நவீனத்துவத்தின் வழியாக நாமடைந்த சிந்தனை போக்குதான் இது எனும் பார்வையை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ‘அழகு’ குறித்து நிலவிய கருத்தியல் உருவாகக் காரணமாக இருந்த ஐரோப்பிய பெண்கள் சுய தேர்வாக நாடாபுழுக்களை (tapeworm) உண்டு உடல் மெலிந்து பலியானார்கள், எழுத்தாளனும் அப்படித்தான் என்கிறார் லோசா. எழுத்தை தனது ஊடகமாக தேர்ந்தவர்கள் படைப்பாற்றல் எனும் எஜமானனின் ஏவலாட்கள் மட்டுமே என்கிறார். உடலுக்கு உள்ளிருந்து எல்லாவற்றையும் உண்டு கொழுக்கும் நாடாப்புழுக்களை போல் எழுத்தாள அகத்தின் உள்ளிருக்கும் படைப்பாற்றல் அவனது அனுபவங்கள் எல்லாவற்றையும் உண்டு செரித்து அவனை அழித்து வளர்கிறது என்று எழுதுகிறார் அவர். பிரம்மராஜன் , மிரோஸ்லோவ் ஹோலுப் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு மேற்கோள் சுட்டுகிறார் “Poetry is so important, but I don’t know what for”. படைப்பூக்கம் தன்னை மீறிய ஒன்று என்பது ஏறத்தாழ அனைத்து எழுத்தாளர்களும் ஒப்புகொள்வதாகவே இருக்கிறது.

சதத் ஹசன் மண்டோ, ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்றொரு சிறிய கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் எப்படி தான் குடிக்கு அடிமையோ அதே போல் எழுத்துக்கும் தானொரு அடிமை என்கிறார். ‘எழுதாதபோது நிர்வாணமாக இருப்பது போல், குளிக்காமல் இருப்பது போல், குடிக்காமல் இருப்பது போல் இருக்கிறது’ என்கிறார் அவர்- “பெரிய கல்வித் தகுதி இல்லாத நான் இக்கதைகளை எப்படி எழுதி இருக்க முடியும்? இந்த கதைகளின் ஆபாசங்களுக்கு சிறை செல்ல வேண்டியிருக்கும். இக்கதைகள் தங்களை தாங்களே எழுதி கொள்கின்றன… நான் எழுதும் கதைகள் என் மனதிலோ சிந்தையிலோ இருப்பதில்லை. அவை எப்போதும் எனது பாக்கெட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும்…. அந்த வகையில் நான் என்னை எந்த அளவுக்கு எழுத்தாளன் என நம்புகிறேனோ அதேயளவு பிக்பாக்கெட்காரன் என்றும் கருதுகிறேன். சொந்த ஜெப்பியிலேயே களவாடி அதன் உள்ளடக்கப் பொருட்களை உங்களுக்கு அளிப்பவன்… என்னைப்போல் ஒரு முட்டாளை நீங்கள் பார்த்ததுண்டா?

லோசா படைப்பாற்றலை நோய்மையுடன் இணை வைப்பதன் வழியாக இரண்டு கருத்துக்களை முன்னிறுத்துகிறார். எழுத்துக்குத் தன்னை முழுமையாக அளிப்பது மற்றும் எழுத்தின் வெம்மையில் உருகி அழிவது. சென்ற கட்டுரையில் பேசியதுதான், எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது கீழை நாடுகளின் ஆன்மீக மரபுடனும் எழுத்தாற்றலுக்கு பலியாவது நவீன தனிமனித வாதத்துடன் பொருந்துவதாகவும் தோன்றுகிறது. எழுத்தை எஜமானனாக ஏற்க வேண்டும் என்பது சரி, ஆனால் அதன் வெம்மையில் உருகி அழிய வேண்டும் என்பது எழுத்தாள பிம்பத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நவீன கால ‘கற்பனாவாத’ பிம்பம் என்றே எனக்குப் படுகிறது.

சரி, எழுத்தாளனின் பொறுப்புதான் என்ன? “படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும்போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிக் காட்டப்பட்டால் அதை படைப்பூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது,” என்று எழுதியிருந்தேன்.

லோசா படைப்பை ஒரு வசதிக்காக இரண்டாய் வகுத்துக் கொள்கிறார்- ‘கருப்பொருள்’ (theme) ‘வெளிப்பாடு ’(presentation- style). பல்வேறு எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை எழுதி இருக்கிறார்கள். ஒரே கருப்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அதில் பிழை ஏதுமில்லை, ஏனெனில் அதுவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையால் அளிக்கப்பட்டது. ஆனால் அது வெளிப்படும் முறைக்கு எழுத்தாளனே முழுப் பொறுப்பு என்கிறார். புனைவு என்பதே அடிப்படையில் ‘பொய்’ தான் எனும்போது எழுத்தாளனின் நம்பகத்தன்மை என்பது தனக்கு உதித்த கருப்பொருளுக்கு அவன் நியாயம் செய்தானா என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்ற முடிவை அடைகிறார் லோசா. எழுத்தாளன் எங்கோ அடைந்த அனுபவத்தின் சாரத்தை கதைக்குள் ஒளித்து வைக்கிறான் என்பதை மனதில் கொண்டு லோசா எழுத்தாளனின் படைப்பூக்கச் செயல்பாட்டுக்கு சுவாரசியமான பதத்தைச் சூட்டுகிறார்- “backward stripping”.

ஆம், புனைவு என்பது ஆழ்ந்த உண்மையை மூடியிருக்கும் பொய். வரலாற்றின் மறுபக்கம். எவையெல்லாம் நிகழவில்லையோ அவற்றின் வலைப்பின்னல்.

oOo

ஒளிப்பட உதவி – Doyletics

வேரும் கனியும் – 1

அந்த 9 பேர்

நரோபா

காக்கி கால்சட்டையும் மூக்கு நீண்ட தோல் பூட்சும் அவனை காவலன் எனக் காட்டின. உடற்கட்டும் மயிர்வெட்டும் முறுக்கிய மீசையும் அதை உறுதியாக்கியது.  “எழுத்தாளர் பழுவேட்டையன் இருக்காரா?” பணிவாக அந்த பி ப்ளாக் இரண்டாம் மாடியில் எச் 3 குடியிருப்பின் வாசலில் நின்று கேட்டான்.

“அப்படி யாரும் இல்லியே?” என்றாள் மூச்சிரைக்க கதவை திறந்த குண்டு அம்மாள் நரைத்த கூந்தலை அள்ளி முடிந்தபடி.

கைவைத்த பனியனும் ஏற்றிக் கட்டிய லுங்கியுமாக உள்ளறையிலிருந்து வெளியே வந்து கால் மிதியில் காலை அழுத்தித் தேய்த்து கொண்டிருந்தார் அவர். முன்வழுக்கை சற்றே நீண்டு புறங்கழுத்து வரை இறங்கிக் கொண்டிருந்தது. தலையிலிருந்து உதிர்ந்த மயிர் உடலில் விழுந்த இடங்களிலெல்லாம் முளைத்திருந்தன.

காவலன் அவருக்கு வணக்கம் வைத்தான்.

‘இவுரு பேரு சுப்பிரமணியன்ல?”  என்றாள் மிரண்டு போய்.

“சுப்பிரமணியங்கல்லாம் நல்லா எழுதுவாங்களாம்.. சார் கூட காதல் சொட்டச் சொட்ட அருமையான கவிதைங்க எல்லாம் எழுதுவார்மா..” அதிர்ச்சியா ஆச்சரியமா என இனம் காணமுடியாத உணர்ச்சியில் அவளுடைய முகம் உறைந்து போயிருந்தது. நேராக அவரைப் பார்த்து பேசினான்

“சார் நா ஒங்க வாசகர் சார்” என குழைந்தான்.

அவர் முகத்தில் பென்சில் தொலைத்த சிறுவனின் பதட்டம் தென்பட்டது.

“உண்மையிலேயே சார்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன “எருமை தோல் பொதிந்த உன் இதயத்தை என் சிறுநெருஞ்சி மன்மத பானங்கள் துளைக்காதா?’ அபாரமான கவிதை வரி சார்…”

இப்போது படபடப்பு அதிகமாகி அக்குள்களில் பெருகிய வியர்வை பனியனை நனைத்தது.

“சார் நான்தான் சார் தேன் மலர்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன எல்லாத்துக்குமே “அபாரம்”னு கமென்ட் போடுவேனே..”

மூச்சு சற்றே சீரானது. பெரிய மஞ்சள் பூவை காதில் செருகிக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண் குழந்தையின் படம் ஞாபகம் வந்தது. தேன் மலரின் முகப்பு படம். இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை. திடுதிடுப்பென வாசகன் என சொல்லிக்கொண்டு ஒருவன் வந்து நிற்க முடியும் என்பதை கற்பனைகூட செய்தவரில்லை. அவரது வலைப்பூவை வாசிக்க அவரை தவிர்த்து எப்போதும் ஒன்பது பார்வையாளர்கள் மட்டுமே வருவார்கள். அந்த ஒன்பது பேருமே பின்னூட்டமும் இடுவார்கள். “அபாரம்” , “பிரமாதம்”, “நாசம்”, “உச்சம்”, “மனதைத் தைக்கிறது”, “அருமை”, “great”, “bull’s eye”, “புரட்சி வணக்கம் தோழர்”. அவர் அவர்களை அப்படித்தான் நினைவில் வைத்திருந்தார். ஒவ்வொரு பின்னூட்டமும் எத்தனை மணிக்கு வரும் என கச்சிதமாக அறிந்துமிருந்தார். 11:27 க்கு “நாசம்”, 20:47க்கு “புரட்சி வணக்கம் தோழர்”. ஒருமுறை நள்ளிரவில் வரவேண்டிய “bull’s eye” மறுநாள் மதியம் வரை வரவில்லையே என நாள் முழுவதும் குடைச்சலாக இருந்தது. யாருக்காக எழுதுகிறோம்? எழுதி என்ன பயன்? விரக்தியின் விளிம்பில் எழுதுவதை நிறுத்தி விடலாமா என ஆழ்ந்துச் சிந்தித்து கொண்டிருக்கையில் “bull’s eye” வந்து சேர்ந்ததும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பேரருளாளனின் பெருங்கருணை!

“சார் ஒரு சின்ன வாசக சந்திப்பு .. அதான் ஒங்கள கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்”, என்றான் அந்த ஆறடி உயரத்தவன்.

கால்கள் இரண்டும் தன்னிச்சையாக அதிர்ந்தன. நா வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு வார்த்தையே வரவில்லை.

“ஒரு அரமன்னேரம்தான்.. நீங்க வரத்தான் வேணும்.. உத்தரவு வந்திருக்கு”, என்று மடித்து வைக்கப்பட்ட தாளை சட்டையின் உள் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினான். வேர்வையில் ஊறி உப்பு ஏறிய தாளை வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்பதை புரிந்துகொண்டார்.

குண்டு அம்மாளின் குழப்பமான பார்வையை பொருட்படுத்தாமல் சட்டை மாட்டிக்கொண்டு வேறு மார்க்கமில்லை எனப் புறப்பட்டார்.

குடியிருப்புக்கு வெளியே சாலையின் திருப்பத்தில் அமரர் ஊர்தி போல ஒரு கருப்புநிற வேன் ஓரமாக நின்றிருந்தது. வண்டிக்கு அருகே வேட்டி கட்டிய ஒருவன் குந்தி அமர்ந்து ஒன்றுக்கு பெய்து கொண்டிருந்தான். இவர்கள் வந்ததும் அவசரமாக எழுந்தவன், வயிற்றில் நீட்டிக் கொண்டிருந்த வாக்கி டாக்கியின் ஆன்டெனாவை மறைத்துவிட்டு எழுந்தான். அவனை தினமும் தெருமுக்கில் உள்ள பேக்கரியில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அங்கு தான் சோகமே உருவாக எதையோ நினைத்தபடி டீ குடித்துக் கொண்டிருப்பான்.

“சார் வாங்க.. நா தா சார் ‘அந்திச்சூரியன்’.. ஒங்க தீவிர வாசகர் சார்.. ஓங்கட்ட இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கெடச்சுருக்கு”, என்று சிரித்து கைகுலுக்கினான்.

இதென்னடா சோதனை! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கிறாயே ஆண்டவா!

“ நான் குடிக்கும் காப்பிக்கு உன் பெயர் தானே சர்க்கரை”- எவ்ளோ ‘பிரமாதமான’ வரி சார்..”

இப்போது அவருக்கு இரண்டு குழப்பங்கள். இந்த வரியை நான்தான் எழுதினேனா? பாராட்டுக்களை வாசித்துக் கடந்துவிடலாம். நேரில் இப்படி முகத்திற்கு முன் பூரிப்புடன் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்வது? நாணச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.

வண்டியில் மூவரும் ஏறினார்கள். வண்டியின் உட்புறம் ‘அதி ரகசிய உளவுத்துறை – இந்திய அரசாங்கம்’ என சிவப்பு எழுத்துக்களில் எழுதி இருந்தது. அந்திச்சூரியன்  பணிவாக எழுந்து “மன்னிக்கணும் சார்..” என்றபடி ஒரு கருப்பு துணியை இரண்டாக மடித்து அவர் கண்ணை இறுகக் கட்டினான். தேன் மலர் அருகமர அந்திச் சூரியன் சாரதியாக வண்டி கிளம்பியது. .சற்று நேரத்துக்கெல்லாம் யார் கண்ணிலும் படாமல் இப்படியாக அண்ணா சாலை சிக்னலை கடந்து அந்தக் கருப்பு வண்டி ரகசியமாக சென்று கொண்டிருந்தது.

வண்டியில் ஏறியது முதல் எதற்காக நம்மை அழைத்துச் செல்கிறார்கள் என யோசித்து யோசித்து பார்த்தார். வரிகள் எல்லாம் கட்டிவிட்டோமே? இருந்த ஐநூறு ஆயிரத்தை கூட வங்கியில் போட்டாகி விட்டதே? வீட்டு நாய் என தெரியாமல் கல்லெறிந்ததற்காக எல்லாம் இத்தனை ரகசியமாக கூட்டிச் செல்ல மாட்டார்கள். சிறுவயதில் கைப்பழக்கத்தின் போது மாமாவிடம் மாட்டிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. இத்தனை ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை எல்லாம் ஓட்டிப் பார்த்தபோது அவர் மீது அவரே காரி உமிழ்ந்துகொள்ள வேண்டும் என தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டார். இத்தனை கீழ்மையான ஆளாக இருந்திருக்கிறோம் என எண்ணியபோது நமக்கு இங்கு என்ன நடந்தாலும் அது சரிதான் என ஒரு முடிவுக்கு வந்தார்.

 

வ்வளவு நேரம் கடந்தது என தெரியவில்லை. அவர் கண் கட்டை திறக்கையில் ஒரு பாலைவனம் போலிருந்த இடத்தின் மத்தியில் நின்றார். அவர்கள் இருவரும் ஓரிடத்தில் மணலை விலக்கினர். அங்கே ஒரு பாதாள சாக்கடை அடைப்பான் போல மூனாள்  விட்டத்தில் வட்டக் கதவு ஒன்றிருந்தது. அந்தி சூரியன் அதன் அருகே சென்று “அண்டா கா குசும்..அபு கா குசும்..திறந்துடு சீசே” என கூறியதும். அது திறந்து கொண்டது.

அந்த பாதாள வழி நல்ல வெளிச்சத்துடன் மிதமாக குளிர்ந்திருந்தது. அதன் முடிவில் ஒரு மேசையில் அதுவரை கணினியில் ஏதோ ஒன்று செய்த கொண்டிருந்த புடவை அணிந்திருந்த பெண் ஒருத்தி சட்டென எழுந்து நின்றாள். “ஆஹா ..பழுவேட்டையர்” என உலகி அழகி பட்டம் வென்றவள் போல் கன்னத்தில் கைவைத்து உற்சாகமாக கூவினாள். மாருதி வரைந்த ஓவியங்களில் இருப்பது போலெல்லாம் ஒரு பெண் உண்மையில் இருக்க முடியும் என அவர் அன்றுவரை நம்பவில்லை. ஒரு நல்ல குழாய் சொக்காய் அணிந்து வந்திருக்கலாம், பாழாய் போன இந்த சாரத்தை கட்டிக்கொண்டு வந்தோமே என வருந்தினார்.

‘சார் நா ஒங்க தீவிர ரசிகை சார்..” என்று மேசையிலிருந்த நோட்டு புத்தகத்தை எடுத்துக் காட்டினாள். அந்த 90 பக்க நோட்டு முழுவதும் பழுவேட்டையரின் கவிதைகளால் நிரம்பி இருந்தது.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என உருகினாலும், மிகுந்த பிரயாசையுடன் கண்ணீரை கட்டுப்படுத்திகொண்டார். அத்தனை நேரம் அவருக்கிருந்த அச்சம், பதட்டம், கவலை எல்லாம் தணிந்தது. இப்படியாக தனக்கொரு வாசகி இருக்கிறார் எனும் அதிர்ச்சியைக் காட்டிலும் இனி வேறு என்ன பெரிய அதிர்ச்சி இருக்க போகிறது! எதையும் தாங்கும் ஆற்றல் அவருக்கு அக்கணம் முதல் வந்துவிட்டது.

“நீங்க ‘விண்மினி’ தான?” என்றார் அவர். இருண்ட வானத்தில் ஒற்றை நட்சத்திரத்தைப் பார்க்கும் பொற்குழல் பெண்தான் விண்மினியின் முகப்புப்படம். .

“சார் எப்புடி சார்! என்றாள் விழி விரிய.

“ஒங்க கமெண்டுல எப்போதுமே ஒரு வாஞ்சை, ஒரு ஆத்மார்த்தமான உணர்ச்சி இருக்கும்” என்றார் நிதானமாக. ஆம் அந்த சிவப்பு பூ புடவைக்காரிதான் “மனதைத் தைக்கிறது” பின்னூட்டத்திற்கு உரியவள்.

“உன் கண்மணிகள் பற்றி எரியும் மின்மினிகளா? இல்லை சூப்பர்நோவா விண் மணிகளா?” இந்த வரிக்காகத்தான் சார் எம்பேரே விண்மினின்னு வெச்சேன்.” என்றாள்.

தேன் மலரும் , அந்திச்சூரியனும் அங்கேயே விடைபெற்றுக்கொள்ள, விண்மினி அவரை மற்றோர் கதவுக்கு அப்பால் அழைத்து சென்றாள். கூடுதல் துணை நிலை நுண் மதியாளர், அதி ரகசிய உளவுத்துறை, இந்திய அரசாங்கம் என பொறிக்கப்பட்டிருந்த கதவுத் துவாரத்தில் கண்ணை நெருக்கமாக காட்டியதும் கதவு திறந்து கொண்டது. உயரம் குறைந்த மேற்கூரை. ஜன்னலற்ற வெளிர் நீல அறை. விளக்கு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் அறை முழுவதும் வெளிச்சம் பரவி இருந்தது. அங்கே சாம்பல் நிற சஃபாரி அணிந்து சட்டமில்லா கண்ணாடி அணிந்த ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த  ‘அவசரம்’ என எழுதப்பட்ட ஒரு கோப்பை மூடிவைத்துவிட்டு இன்முகத்துடன் வரவேற்றார்.

“வாங்க பழுவேட்டையன்.. உக்காருங்க” என்று எதிரில் இடப்பட்டிருந்த நாற்காலியை காட்டினார். அதில் ‘திரு. பழுவேட்டையன்’ என எழுதி ஒட்டியிருந்தது. விண்மினி அறையை விட்டு விலகிச் சென்றாள். படு பாவி கொஞ்சநேரம் அவள் கூடவே இருந்து தொலைக்க கூடாதோ? அவளின் அழகிய பின்புறம் அலுங்கிக் குலுங்கி செல்வதை காண்கையில் வீட்டுக்கு சென்றதும் இதைப்பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என மனதில் உறுதி பூண்டார்.

‘சிரமத்துக்கு மன்னிக்கணும்.. பயணமெல்லாம் சொகமா இருந்துதா?. போன வாரம் திங்கக்கிழம ஒரு மழ கவிதை எழுதி இருந்தீங்களே.. ரொம்ப அருமையா இருந்துது.. குறிப்பா வரிய சட்டுன்னு நெனவுக்கு கொண்டுவர முடியல.. ஆனா மழைய கடவுளின் மூத்திரத்தோட ஒப்பிட்டு எழுதி இருந்தீங்க.. அருமையான சிந்தன.. ஒரு வாரம் கழிச்சி கூட அத நியாபகம் வெச்சுருக்கேன் பாருங்களேன்’

ஓஹோ. அப்படியென்றால். இவன்தான் அந்த காலப்புழுவாக இருக்க முடியும். எட்டாகப் பின்னிய நாகங்களின் முகப்புப் படம் மனதில் பளிச்சிட்டது. பெருமிதம் கலந்த புன்னகையை அவருக்கு பதிலாக அளித்தார். அந்த பாவனை அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் தான் மூர்க்கமான பிரியத்தைச் சொரியும் வாசக ரசிகர்களை எப்படி எதிர்கொள்வதென ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்என்பதை எண்ணி மேலும் பெருமிதம் கொண்டார். வரிகளாக இன்றிச் சிந்தனைகளாக உட்புகுந்து ஆட்கொண்ட பெருமிதம். ‘இதில் சிந்திக்க என்னவிருக்கிறது?’ என மனதின் விளிம்பில் தலை தூக்கிய கேள்வியை ‘அவரவருக்கு ஆயிரம் வழிகள்’ என பல்வேறு சால்ஜாப்புக்களை சொல்லி அழுத்தி வைக்க முனைந்தார்.

“வாங்க போலாம்” என எழுந்து அவரை அழைத்துச் சென்றார் காலப்புழு. அவர் நாற்காலிக்கு கீழே எதையோ அழுத்தியதும். ஒரு பிலம் அங்கே உருவானது. இரண்டாள் விட்டமிருக்கும். உடல் சில்லிட்டது. மங்கிய வெளிச்சத்தில் கொஞ்ச தூரம் ஊர்ந்தபிறகு. முதன்மை நுண் மதியாளர், ஐக்கிய இந்திய அரசாங்கம் என செதுக்கபட்டிருந்த அறுகோண கதவு ஒன்று தென்பட்டது. அதன் மையத்தில் தெரிந்த கண்ணில் காலப்புழு சபாரி மேற்சட்டையை தூக்கி தனது உந்தி சுழியை வைத்து அழுத்தினார். அறுகோண கதவின் ஆறு மடைகளும் உள்ளிழுத்து கொண்டன. அடுத்தொரு கதவிருந்தால் அதை எப்படி திறப்பார்களோ என அவர் எண்ணியபோது உடல் விதிர்த்தடங்கியது.

ரத்தச் சிவப்பு சுவர்கள் கொண்ட நீள் வட்ட அறை. இவரை உள்ளே சேர்த்ததும் காலப்புழு வணங்கி திரும்பி சென்றார். தனது மடிகணினியை மூடிவைத்துவிட்டு சூட்டணிந்த அந்த இளைஞர் மென்னகையுடன் வரவேற்றார்.

“மிஸ்டர். பழுவேட்டையன்.. வெல்கம்.. கிரேட் டு ஹேவ் யு ஹியர்.. உக்காருங்க’ என்று அவன் காட்டிய இடத்தில் நாற்காலி ஏதுமில்லை. ஒருகணம் எழுத்தாளனை அவமதிக்கிறானோ என ஆத்திரம் வந்தது. நான் ஒரு மகத்தான எழுத்தாளன் எனும் மிடுக்கு அவர் உடல்மொழியில் புலப்பட்டது. கூடவே என்னை நீ அவமதிப்பது சரியல்ல எனும் தொனியும். “ப்ளீஸ்.. சும்மா உக்காருங்க..” என அவன் அந்தரத்தில் அமர்ந்து காட்டினான். அவன் கால் வளைத்து அமருவது போல் குனிந்தவுடன் அங்கே ஒரு நாற்காலி தோன்றியது. அவனுக்கு கச்சிதமாக பொருந்தும் நாற்காலி. அவரும் அதே போல் கால் வளைத்து காற்றில் அமர சென்றவுடன் ஒரு நாற்காலி முளைத்தது. அவருக்கென்றே உருவாக்கப்பட்ட நாற்காலி போல். நீட்டிக் கொண்டிருக்கும் வெளிமூலம் கூட கச்சிதமாக பொருந்தி, அவருடைய ஒவ்வொரு நெளிவு சுளிவுகளுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டது. சரியாக அமர்ந்தவுடன் ஒரு இயந்திரப்பெண் குரலில் “அடையாளம் உறுதி செய்யப்பட்டது” என நாற்காலி சப்தித்தது. அந்த அறையில் குளிரடங்கி மிதமான வெப்பம் நிலவியது. அத்தனை வாசகர்களையும் ஒன்றாகச் சந்தித்திருக்கலாமே, ஏன் இப்படி ஒவ்வொரு அறையாக கூட்டிச் செல்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தார். இப்போது இவன் என்ன சொல்லப் போகிறானோ என எண்ணியபோது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க ஒரு யுனிக் ரைட்டர்..உங்க கிரேட்னஸ் ஒங்களுக்கு தெரியுமான்னு தெரில.. நீங்க தமிழோட வில்லியம் சிம்போர்கான்னு சொல்லலாம்… ஒங்ககிட்ட யாரும் சொன்னாங்களான்னு தெரில ஆனா நா சொல்றேன்.. ஏன்னா எனக்கு உலக இலக்கிய பரிச்சயம் நெறையா உண்டு.. சொற் பயன்பாடு கொடுக்கக்கூடிய எளிமைல எல்லாரும் ஏமாந்துடுவாங்க.. அதோட நுண்ணரசியல், சமூக விமர்சனம் மற்றும் ஆன்மீக தத்தளிப்பையும் ஆன்மீக சமநிலையையும்  யாரும் கவனிச்சாங்களான்னு தெரில… இப்ப உங்க காதல் கவிதைகள எடுத்திங்கன்னா.. ஒரு பக்கம் ஒரு ஆண் பெண்ணுக்கு ஏங்குவதா தோணும், மறுபக்கம் பரமாத்மாவைச் சேர துடிக்கும் ஜீவாத்மாவின் பிரிவாற்றாமைய குறியீடுகளாக, படிமங்களா சொல்லும்…. கவிதைகள்ல அபூர்வமான ஜென் தன்மையும் கலையமைதியும் ஒருவித சூஃபி மெய்ஞானமும் இருக்கு.. ஒரு கவிதல கூட இரும்பு.. கரும்பு.. அரும்புன்னு முடியுற மாறி அடுத்தடுத்த வரிகள் வரும்.. அதன் இசைத்தன்மை என்ன சொக்க வெச்சுருக்கு.. மத்தவங்கள பத்தி தெரியாது..ஆனா ஒவ்வொரு மொற கிரேட்ன்னு நான் கமண்ட் எழுதும்போதும் அத மனசாரதான் எழுதுறேன்”

அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவருக்கு பீதி அதிகமானது. முதலில் ஒரு பேரைச் சொன்னானே அதை திரும்பச் சொல்லச் சொல்லி கேட்கலாமா? கண்ணதாசன் பதிப்பகத்தில் போட்டிருந்த நூறு ஜென் கதைகள் நூலை வாசிக்க முனைந்ததும், அதில் கதையே இல்லை என இரண்டு பக்கங்களோடு நிறுத்திக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. இவனெல்லாம் வாசகனா? யார் இவனை இப்படியெல்லாம் வாசிக்கச் சொன்னார்கள்? இவர்கள் நடந்து கொள்வது ஒன்றும் சரியில்லை. எப்போது வீட்டுக்கு விடுவார்கள்? இவனோடு இந்த பயணம் முடிந்துவிட்டால் பரவாயில்லை எனச் சிந்தனைகள் தாறுமாறாக ஓடிகொண்டிருந்தன.

இத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு, நூறாண்டுகள் பேசப்படபோகும் படைப்பாளிகளுக்கு உரித்தான தோரணையில் “நன்றி திரு சீக்கிங் வேண்டரர்’ அவர்களே. இன்னமும்கூட நீங்கள் ஆழ்ந்து வாசித்தால் வேறு பல தளங்கள் வருங்காலத்தில் உங்களுக்கு பிடிகிட்டக்கூடும். நீங்கள் நிச்சயம் நல்ல வாசகராக வளர முடியும். உங்கள் வாசிப்பு சரியான திசையில்தான் செல்கிறது.” என்றார்.

“போலாமா” என அவன் எழுந்தான். தொலைந்தோம். மேற்கூரையில் ‘அதி ரகசிய உளவமைச்சகம், ஐக்கிய இந்திய அரசாங்கம் என ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மண்டையால் முட்டினான். அவன் தலைக்கு மேலே ஒராள் விட்டத்தில் ஒரு துளை விழுந்தது. “நீங்க மட்டும்தான்.. போங்க” என அவரை அதற்குள் திணித்தான். சாரம் காற்றில் ஆட எக்கி உள்ளே சென்றதும் அந்த துளை மூடிக்கொண்டது. பளீர் வெண்மை. கண் கூசும் வெண்மை. ஒன்றுமே புலப்படவில்லை. கண் கொஞ்சம் பழகியதும் சுற்றும் முற்றும் நோக்கினார். அலையலையாக விரிந்த தாமரை இதழின் மையத்தில் அவரிருந்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவருமே இல்லை. ஒருவேளை மோர்கன் ஃப்ரீமேன் வெள்ளை கோட்டு அணிந்து கொண்டு வருவாரோ என ஒரு ஐயம்கூட எழுந்தது. அசரீரி போல் ஒரு கம்பீர குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

“என்னடா மணியா, ரெண்டு மூணு நாளா ஏதோ ஆதார் கார்ட், ரேஷன் கார்டு, பேங்குல கூட்டம், பணமில்ல, காள மாடு,  சித்தி, பெரியம்மானுல்லாம்  எழுதிட்டு இருந்தீயே……. அதான் சும்மா சாரிக்கலாம்னு கூப்டேன்..”

மல்லாக்க கிடத்தி இளவட்டக் கல்லை தூக்கி வைத்தது போல் நெஞ்சிலும் வயிற்றிலும் பயங்கர கனம். புடரி வலித்து தலை சுற்றியது. மிகுந்த பிரயாசைப்பட்டு பேசினார்.

“அது ஏதோ கடுப்புல எளுதி போட்டேனுங்க” என்றார் குத்துமதிப்பாக ஏதோ ஒரு பக்கத்தை நோக்கி.

‘தெரியுது.. ரொம்ப போரடிக்குதோ? வேற ஒண்ணுமில்லையே? ஆங்..அப்புறம் நானும் உன் வாசகந்தாம்பா’

‘வேற ஒண்ணுமே இல்லிங்க்னா’ எச்சி கூட்டி விழுங்கி,  ‘தெரிஞ்சுகிட்டேங்க ..அந்த அகம் பிரம்மாஸ்மி.. சூரியன் படம் போட்டவரு நீங்கதானுங்க’

வெடி சிரிப்பு எல்லா பக்கத்திலும் இருந்து கேட்டது  “உச்சம்டா”.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நெடுநாள் உறக்கம் விட்டு எழுவது போல் அசதியாக அறையில் அமர்ந்திருந்தார். வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தார். அன்று நடந்ததை திரும்ப நினைவுகூர முற்பட்டார். விரல் விட்டு ஒவ்வொருவராக எண்ணத் துவங்கினார். அப்போதுதான் அது அவருக்கு உறைத்தது. இவர்களுக்கு மேல்  இருக்கும் அந்த மூவர் யாராக இருக்கக்கூடும் என யோசிக்கும்போதே அடி வயிற்றைக் கலக்கியது.

அவர் கழிப்பறையை விட்டு வெளியே வரும்போது குண்டு அம்மாள் நரைமுடியை அள்ளி முடிந்துகொண்டு யாரிடமோ வாயிலில் பேசி கொண்டிருந்தாள். மூக்கு நீண்ட கருப்பு பூட்ஸ் மட்டும் அவருக்கு அங்கிருந்து தெரிந்தது.

 

(சமர்ப்பணம்- இக்கதை நானறிந்த சுப்பிரமணிய எழுத்தாளர்களில் எனக்கு மிகப்பிடித்த நாஞ்சில் நாடனுக்கு).

அரசின்மைவாதி – நரோபா

நரோபா

தம்பி நீங்க?
நா கல்டர் ஆவணும்
மூணாவது வரிசை டோக்கன் நம்பர் 39
அடுத்தாப்ல நீங்க?
நான் டாக்டர் சார்
ரெண்டாவது வரிசை டோக்கன் நம்பர் 78
நீ சொல்லுப்பா?
நான் நானாகவே இருக்க வேண்டும்
மொத வரிசை 334 ஆவது டோக்கன்
நீ என்னப்பா?
நீங்க யாரு சார் எனக்கு டோக்கன் கொடுக்க?
தம்பி வா உக்காந்து சத்த நேரம் டோக்கன் போடு டீ குடிச்சிட்டு வாரேன்

வேரும் கனியும்

நரோபா

எலிசபெத் கில்பர்ட்டின் இந்த டெட் உரையை அண்மையில் கேட்க நேர்ந்தது. எலிசபெத் நவீன அறிவியல் யுகம் துவங்கிய இந்த ஐநூறு ஆண்டுகளிள் படைப்பூக்கத்தின் பளு தாங்கவியலாமல் மரித்துப் போன படைப்பாளிகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

கருங்கல்லை சுமந்து செல்ல முயலும் தும்பியை போல் எழுத்தாளன் எப்போதும் தன்னை மீறிய கனவுகளைச் சுமந்து சிறகடிக்கிறான். அவனைப் பறக்க செய்யும் படைப்பூக்கமே அவனை மெல்ல அழிக்கவும் செய்கிறது. ‘படைப்பூக்க தடை’ அவனை முடக்குகிறது. நாவலோ கதையோ எங்கோ முட்டிகொள்ளும்போது அவன் பதட்டம் அடைகிறான். மேலும் அவனுடைய முந்தைய படைப்புகளின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து செல்கிறான். இவை எல்லாம் அவனை அழுத்துகின்றன. இயலாமை வாட்டுகிறது.

எலிசபெத், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து தானடைந்த முறையை பகிர்கிறார். பண்டைய ரோமானிய, கிரேக்க வழக்கத்தில் படைப்பூக்கம் வெளியிலிருந்து வந்ததாக நிலவிய நம்பிக்கையை சுட்டி காட்டுகிறார். சாக்ரடிஸ் அதை ‘டிமான்’ என்றழைத்தார். ஒரு டிமான் தனக்குச் சிந்தனைகளை வந்து சொல்லிச் செல்கிறது என அவர் பதிவு செய்கிறார். ரோமானியர்கள் படைப்பூக்கத்தை தனித்த ஆளுமையாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள், அவர்கள் அதை ‘ஜீனியஸ்’ என்றழைத்தார்கள். படைப்பாளிக்கு துணை வரும் ஒரு விசித்திர உயிரினம். படைப்பாளி வழியாக ‘ஜீனியஸ்’ வெளிப்படுகிறது.

ஒரு படைப்பு உருவாக்கத்தில் இப்போது இருவரின் பங்களிப்பு இருக்கிறது. எலிசபெத் எழுதி கொண்டிருக்கும்போது எங்கேனும் தடை ஏற்பட்டால் கைகொள்ளும் யுத்தியை பற்றி சொல்கிறார். ‘கடவுளோ, இல்லை ஜீனியசோ, இல்லை பெயரற்ற எதுவோ, இந்த படைப்பை நாமிருவரும் சேர்ந்தே உருவாக்குகிறோம், என்னளவில் நான் சரியாகவே செய்கிறேன், நீ உன் பங்களிப்பை சரியாக ஆற்றினால் மட்டுமே அது சிறந்ததாக இருக்கும்’ என வாய் விட்டுக் கூறுவாராம். இந்த யுத்தி அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது என்கிறார்.

நவீன அறிவியலின் வளர்ச்சியை ஒட்டி நவீன இலக்கியத்தின் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடியும். நவீன இலக்கியம் படைப்பாளியின் நுண்ணகங்காரத்தை சார்ந்து இயங்குவதாக நம்பப்படுகிறது. படைப்பு எழுத்தாளன் வழியாக வெளிப்படுகிறதா? அல்லது படைப்பாளி அதை முழுவதுமாக உருவாக்குகிறானா? எனும் விவாதம் வெகுகாலமாக இங்கே நிகழ்ந்து வருகிறது. ரோலான்ட் பார்தஸ் ‘எழுத்தாளனின் மரணம்’ எனக் கூறும்போது படைப்பையும் படைப்பாளியையும் குழப்பிக்கொள்ள கூடாது என்கிறார். படைப்பின் வழியாக படைப்பாளியின் அகத்தையும், உள்நோக்கங்களையும் கண்டடைவது வியர்த்தம், அவை எவ்வழியிலும் வாசிப்புக்கு அவசியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இந்திய பின்புலத்தில் நம் மரபிலக்கியங்களை பற்றி சிந்திக்கையில் நம்மிடம் ‘ஜீனியஸ்’ போன்ற கருத்தாக்கங்கள் இல்லையென்றாலும், படைப்பு இறைவனின் ‘அருள்’ என்ற நம்பிக்கை வலுவாக இருந்திருக்கிறது. காளிதாசனைப் பற்றிய கதை ஓர் உதாரணம். அன்னை அவனுடைய நாக்கில் எழுதுகிறாள். அவன் பெரும் படைப்பாளியாக ஆகிறான். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் தானும் அப்படி ஆக நினைத்து அலைந்து திரிந்த அனுபவத்தை சொல்கிறார். ஒரு சிற்றூரின் திண்ணையில் அப்படி கனவும் காண்கிறார். வள்ளுவரின், கம்பரின் தனிப்பட்ட ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் என நமக்கேதும் பெரிதாக கிடைக்கவில்லை. படைப்புக்களை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள். சங்கப் புலவர்கள் தொடங்கி தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எழுதிய கவிராயர்கள் வரை, எழுதியவர்களின் அடையாளம் பூடகமாகவே இருக்கிறது. செயின்ட். பீட்டர் பசிலிக்காவின் ஓவியங்களை தீட்டியவர் மைக்கேல் என்ஜெலோ என நாம் அறிவோம். சித்தன்னவாசல் ஓவியங்களை தீட்டியவர் எவர் என நாம் அறிந்ததில்லை. குடுமியான் மலையின் பிரமிக்கத்தக்க தலைகோலி சிற்பத்தை வடித்த கலைஞன் எவனென்று தெரியவில்லை. காரணப் பெயர்களும், புனைப் பெயர்களும் நம் மரபிலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. வள்ளுவனோ, கம்பனோ எவனென தெரியாததால் வாசிப்பில் நமக்கு என்ன குறைந்தது என கேட்டு பார்க்கிறேன். ஒன்றுமில்லை. தமிழின் நவீன இலக்கிய அலையின் துவக்க முகங்களான பாரதியையும், புதுமைப்பித்தனையும் எண்ணிக் கொள்கிறேன். பாரதியின் கவிதைகள் அளவுக்கே அவனுடைய ‘பித்தன்’ எனும் பிம்பம் நம்மை ஆக்கிரமிக்கிறது. பஷீர் என்றவுடன் படைப்பை மீறி அவருடைய சூஃபி பிம்பமும் இனைந்து கொள்கிறது.

இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இரு வேறு விவாதங்கள் நினைவில் எழுகின்றன. ஒருமுறை ஜெயமோகனோடு திருவண்ணாமலையில் மலைவலம் வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் கேட்டேன், “ஆன்மீகவாதியும் எழுத்தாளனும் எங்கோ ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகிறார்கள். தங்களுக்குள் ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள், ஆன்மீகவாதியும் படைப்பாளியும் வெவ்வேறு வழிகளில் அதை நிறைக்க முயல்கிறார்கள் என தோன்றுகிறது. ந. பிச்சமூர்த்தி அவருடைய நேர்காணலில் இவ்வாறான ஒரு நிலையை பற்றி சொல்கிறார். சொல்லற்று போகும் ஒரு நிலையே தனக்கு உகந்தது என்கிறார். சொற்களில் இருந்து சொல்லற்ற ஒரு நிலைக்கு தாவி விட வேண்டும் என அவர் நினைப்பது சாத்தியமா என தெரியவில்லை. ஆன்மீகவாதி நிறைவை நோக்கி உண்மையிலேயே செல்கிறான், எழுத்தாளன் நிறைவின்மையை மூலதனமாக்கிக் படைக்கிறான், அதைக் கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறான் என நினைக்கிறேன்“, என்றேன்.

ஜெயமோகன் சீறினார். “இது உங்களுக்குச் சொந்தமாக தோன்றியது போல் இருக்கலாம், ஆனால் இது ஒரு நவீனத்துவ சிந்தனை. இந்தச் சிந்தனையின் ஊற்று இருத்தலியலில் இருக்கிறது. இங்கே மரம் இருக்கிறது, அது பூக்கிறது, அது இத்தனை கன அடி சூனியத்தை நிறைக்கிறது என்றா சொல்வீர்கள்? படைப்பு தன்னியல்பாக நிகழ முடியும்,” என்றார்.

ஆட்டிசத்தை பின்புலமாக வைத்து நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு நாவல் பாதியில் முட்டிக்கொண்டது. பெரும் மனவாதையாக இருந்த அச்சமயத்தில் கவிஞர் ரமேஷ் சுப்பிரமணியத்தை ஒரு மாலைப் பொழுதில் பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்தேன். ரமேஷ் ஓவியரும்கூட, பவுத்தத்தில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவரிடம் எனது சிக்கலை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இரண்டு விஷயங்களை கூறினார். “எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்க முடியும். ஒன்று நன்றி அறிவித்தல், இந்த இயற்கையும் வாழ்வும் எனக்கு எத்தனையோ அனுபவங்களை அளித்திருக்கின்றன, என்னை செழுமை செய்திருக்கின்றன, அதற்கு ஓர் எளிய நன்றியாக, ஒரு நிகர் வாழ்க்கையை, ‘போலச் செய்தலை’ திரும்பி அளிக்கிறேன், இதை நம் மரபில் சமர்ப்பணம், அர்ப்பணிப்பு என கூறுவார்கள். இரண்டாவது காரணம், ‘லீலை’, வாழ்க்கையே ஒரு விளையாட்டு, அதில் நாம் படைப்பவையும் ஒரு விளையாட்டு, இந்த விளையாட்டு இல்லை என்றால் வேறொன்றை கைகொள்ளலாம், இதில் துன்புற என்ன இருக்கிறது?”

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களை சொல்லும் பகுதியில் வரும் இரண்டு துதிகள் இந்திய மனநிலையை இயக்குவதாக புரிந்து கொண்டேன்- “ யோகமும், ஞானமும், சாங்கியமும், கல்வியும் சிற்பக்கலை உட்பட அனைத்து கலைகளும், வேதங்களும், சாத்திரங்களும், விஞ்ஞானமும், என அனைத்தும் அந்த ஜனார்த்தனனிலிருந்து உதித்ததே”. மற்றொரு புகழ்பெற்ற துதி- “உடல், வாக்கு, மனம், புலன், புத்தி, இயல்பால் உந்தப்பட்டோ அல்லது சுயத்தின் பொருட்டோ நான் ஆற்றும் அனைத்தும் பிறர் பொருட்டே, அவை அனைத்தும் நாராயணனுக்கே அர்ப்பணம்”

இந்த நம்பிக்கை படைப்பை உருவாக்க, அதன் அழுத்தங்களில் இருந்து படைப்பாளி தன்னை விடுவித்துக் கொள்ள உதவும், உதவியும் இருக்கிறது. ரோமானியர்களின் ஜீனியசைப் போல, கிரேக்கர்களின் டிமானை போல, நம்மை நம்மிலிருந்து விலக்கிக்கொள்ள வந்த ஒரு மிகப் பொருத்தமான வழிமுறைதான் இது போன்ற நம்பிக்கைகள் என தோன்றுகிறது. நவீன படைப்பாளியாக அதிகம் வாசிக்கவும், எழுதவும், படைப்பாற்றலால் வதைபடாமல் இருக்கவும், அங்கீகாரத்துக்கு அப்பால் இயங்கவும், நெடுநாள் வாழவும் நாம் இதை தேர்வதில் என்ன சிக்கல்? அந்த செம்பரான் கல் உண்மையில் தும்பியின் சுமையே இல்லையே?

மீண்டும் அதே கேள்விக்கு வரலாம், படைப்பாளி படைக்கிறானா? அல்லது படைப்பு அவன் வழி நிகழ்கிறதா? இரண்டு நிலைக்கும் இடையிலான ஒரு புள்ளியில் படைப்பு நிகழ்கிறது என எனக்கு தோன்றுகிறது. படைப்பாற்றல் அவன் வழி வரும்போது, அவன் ஏற்கனவே அமைத்திருக்கும் பாதைகளில், அந்த வண்டல்களுடன் சேர்ந்தே வரும் என நம்புகிறேன்.

படைப்பாற்றலை தனக்கு வெளியிலிருந்து வருவதாக உருவகிப்பதிலும், தன்னை ஒரு கருவியாக பாவிப்பதிலும் மேற்சொன்ன வசதிகள் உண்டு. ஆனால் படைப்பாளியின் பொறுப்பு என ஒன்றிருக்கிறதே?. தன் வழியாக வரும் அனைத்தையும் அவன் தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றின் மீது சுமத்த முடியுமா? கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவின்போது எழுத்தாளர் ஹெச். எஸ். ஷிவப்ரகாஷ் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய பசவண்ணா நாடகத்திற்கு வந்த எதிர்ப்பைப் பற்றி கூறினார். மடாதிபதியின் முன் மண்டியிட வைக்க முயன்றார்கள் என்றார். அப்போது ‘எழுத்துச் சுதந்திரம்’ பற்றி எவரோ ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். தீர்க்கமாக “கட்டற்ற எழுத்துச் சுதந்திரத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களின் எதிர்ப்பை நான் புரிந்து கொள்கிறேன், என் எழுத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன், எழுத்தாளன் தனது எழுத்துக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்” என்றார்.

படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும் போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிகாட்டபட்டால் அதை படைபூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது. கட்டற்று எழுத்தாளனுள் வெளிப்படும் ஆற்றலை அவன் மட்டுறுத்தலாமா? அப்படிச் செய்தால் அது போலித்தனமாகாதா? எழுத்தாளனிடமிருந்து வெளிப்படும் அனைத்துமே உண்மையில் கட்டற்ற படைப்பாற்றலின் வெளிப்பாடா? அல்லது அவனது முன்முடிவுகளும், ஊகங்களும், கனவுகளும், கீழ்மைகளும் கலந்தவையா?

எழுத்தாளனாக ஒன்றேயோன்றைச் சுட்ட முடியும், எழுதும்போது வெளிவருபவை அவனை மீறிய ஒன்றாகவே இருக்கிறது. எழுத்தாளனின் ஆற்றல் என்பதும் அதிலிருந்தே பிறக்கிறது. மதிப்பீடுகள் மூலம் மட்டுறுத்தலை கட்டுப்படுத்த முயல்வதென்பது எழுத்தைக் கொல்வதற்கு நிகர். படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் பணிவும், படைப்பிற்கு பொறுப்பேற்கும் நிமிர்வும் கலந்திருக்கும் விசித்திர கலவையில்தான் தனக்கு உண்மையாக இருக்கும் படைப்பாளி எழுகிறான்.

கண்ணுறு கலை – நரோபாவின் ‘திருமிகு பரிசுத்தம்’

பீட்டர் பொங்கல்

சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில் கையாண்ட ட்ரெவர் குறித்து இனி ஆர். அஜய் எதுவும் எழுதினால்தான் உண்டு. மற்றபடி அவர் பெயர் தமிழில் பேசப்படும் வாய்ப்புகள் குறைவு.

பாரிஸ் ரிவ்யூ தள நேர்முகம் ஒன்றில் அவரிடம்  சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுதான் சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல்தான் அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில்  நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

oOo

466 சொற்களே கொண்ட நரோபாவின் ‘திருமிகு. பரிசுத்தம்‘  குறுங்கதையாய் வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன். குறுகிய வடிவம் கொண்டது என்பதால் சிறுகதை செய்யும் வேலையை குறுங்கதை இன்னும் வேகமாய்ச் செய்ய வேண்டும், அதன் சொற்கள் இன்னும் கனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு குறுங்கதை கண்ணுறும் காட்சி கணப்பொழுது என்பதால் அது விவரிக்கும் காலம் யுகங்களாய் இருக்க முடியாது என்றில்லை.

திருமிகு. பரிசுத்தம் கதை மிக எளிய, இலகுவான மொழியில் சொல்லப்படுகிறது. நரோபாவின் ஆரம்ப கால கதைகளைப் படித்தவர்களுக்கு இங்கு அவர் கடந்து வந்திருக்கும் தொலைவு ஆச்சரியப்படுத்துவது. பெருமூச்சுகளோடு சொல்லி வந்த கதைகளை அவர் இப்போது  ஒரு புன்னகையுடன் சொல்கிறார். மிகச் சாதாரணமான தொனியில், “ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது,” என்று, காவியங்கள் மற்றும் காலமின்மைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் கதை துவங்குகிறது. அடுத்த வரியிலேயே, ‘எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்,‘ என்று கதைக்குரியவரின் பிரச்சனை சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்து,

“பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.”

என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார் நரோபா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரோபா இந்த இடத்துக்கு வர இரண்டு பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அதன் பின்,

“திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.”

என்ற அறிமுகத்தில் திருமிகு பரிசுத்தம் யார் என்பதும் இந்தக் கதையின் மிகைகளும் நிறுவப்பட்டு விடுகின்றன.

அதற்கு அடுத்த இரு பத்திகளில் கதைக்குரியவர் இங்கும் ஒரு மிதியடியாய் இருப்பதைக் காட்டியபின் கதை திருமிகு. பரிசுத்தத்தின் அறைக்குள் நுழைகிறது. அங்கு நாம் அவரது வெல்லும் விசையை நன்றாகவே அறிந்து கொள்கிறோம். ‘கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி…‘ முதலான கனவான்களோடு திருமிகு பரிசுத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போதாதென்று, ‘பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே‘ மாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அபத்த உரையாடல் நிகழ்கிறது. சமூகம் ஒரு டார்வினிய சோதனைக்கூடம், அதில் வெல்லும் விசை கோபத்தால் அருளப்படுவது என்பதுபோல் திருமிகு பரிசுத்தம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்கிறது, ஆனாலும் பயனில்லை.

““பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது”,

என்று தொடரும் உரையாடலின் முடிவு கதைக்குரியவர் எதற்கும் கோபப்படாதவர் என்று உணரும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும், ஒரு தேர்ந்த சிறுகதைக்குரிய திருப்பம் நிகழ்கிறது.

‘அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே…’

பறந்து செல்கிறார். ஒரு காலத்தில் அவர் இந்திரனாக இருந்திருக்கக்கூடும்.

கதையின் முடிவு, இவ்வுலகம் சபிக்கப்பட்ட ஒன்றாகவும், இங்கு வெற்றி பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இதன் நோய்மையால் பீடிக்கப்பட்டவர்கள் குழப்பத்தில் தவிக்கும் புண்ணியாத்மாக்களாவும் இருப்பதாய் நினைக்க வைக்கும் வகையில் கதையைப் புரட்டிப் போடுகிறது. திருமிகு பரிசுத்தம் யார் என்ற கேள்வி எழாமலே நாம் அதற்கான விடையை உணர்கிறோம்.

திருமிகு பரிசுத்தம், நரோபா