பீட்டர் பொங்கல்

இரான் – ஒரே நாவலின் பதினாறு மொழிபெயர்ப்புகள் ஏன், எப்படி? – சயீத் கமாலி டேஹ்கான்

இரானிய புத்தகக்கடை அலமாரிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஜே. டி. சாலிங்கரால் பார்க்க முடியுமென்றால், அவரது கல்லறை அமைதி குலைந்து விடும். 1947ல் அவர் எழுதிய ஒரு குறுநாவல், தி இன்வர்டட் பாரஸ்ட், அமெரிக்காவில் அதை மறுபதிப்பு செய்ய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அனுமதி மறுத்து விட்டார். ஆனால் அது பெரும்பாலான இரானிய புத்தகக்கடைகளில் வெறும் தொண்ணூறாயிரம் ரியால்களுக்கு, அதாவது 2.20 பவுண்டுகளுக்கு, பார்ஸி மொழியில் கிடைக்கிறது. ஏப்புக்ஸ் தளத்தில் இந்தப் புத்தகத்தைத் தேடும் ஆங்கில மொழி வாசிக்கும் சாலிங்கர் வெறியர்கள், அது முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட காஸ்மோபாலிடன் இதழின் பழைய பிரதியை ஐநூறு டாலர்கள் விலை கொடுத்து மட்டுமே வாங்க முடியும்.

இன்வர்டட் பாரஸ்ட் பார்ஸி மொழியில் பதிப்பிக்கப்பட்டிருப்பது இரானின் ஒழுங்குபடுத்தப்படாத, சிக்கலான, ஆனால் வசீகரிக்கும் மொழிபெயர்ப்புச் சூழலின் ஒரு உதாரணம் மட்டுமே. காப்புரிமைச் சட்டத்தை நெறிப்படுத்தும் பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய மறுத்து வருவது நீண்ட காலமாகவே அதன் மொழிபெயர்ப்புத் துறையின் வளர்ச்சிக்கு எதிரானதாக இருந்து வருகிறது. இரானின் தேசிய சட்டம் தம் தாயகத்தில் பதிப்பிக்கும் இரானிய எழுத்தாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் இரானுக்கு வெளியே தம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இரான் எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. பாலா ஹாகின்ஸ் இவ்வாண்டு எழுதியுள்ள, இன்டு தி வாட்டர், என்ற நாவலின் பார்ஸி மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கான காப்புரிமையை இரானிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பெற்றுள்ளார் என்ற தகவலை டெஹ்ரான் டைம்ஸ் அளிக்கிறது. ஆனால் அந்த நாவலுடன் போட்டியிடும் வேறு மொழிபெயர்ப்புகளை குறைந்தபட்சம் ஐந்து பேர் அதற்குள் துவங்கிவிட்டனர்.

இரான் இலக்கியத்தை நேசிக்கிறது. எனவே மர்செல் ப்ரூஸ்ட் முதல் ஹருகி முரகாமி வரை பல்வகைப்பட்ட பிற தேச நூல்கள் விற்கப்படுகின்றன என்று டெஹ்ரானின் புத்தகக்கடைகள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். கஸ்டவ் ஃப்ளாபேரின் செண்டிமெண்டல் எஜுகேஷன் போன்ற நூல்கள் இங்கிலாந்தின் புத்தகக்கடைகளில்கூட மிக அபூர்வமாகவே காணக் கிடைக்கின்றன. ஆனால் அவை இரானில் ஏராளமாக விற்பனையாகின்றன- பரவலாக வாசிக்கப்படுகின்றன. இதைச் சொல்லும்போது, தீவிரமான தணிக்கை முறை அங்கு நடைமுறைப் படுத்தப்படுவதையும் கூறியாக வேண்டும்: கலாசாரம் மற்றும் இசுலாமிய நெறிமுறை அமைச்சகம் அனைத்து புத்தகங்களையும் பதிப்பிக்கும் முன் தணிக்கைக்கு உட்படுத்துகின்றது. தற்போதுள்ள மிதவாதிகளின் ஆட்சியில் சுதந்திரம் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது என்றாலும் பெரும்பாலான புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.

மேற்கில் மிக அபூர்வமாகவே காணப்படும் பிராபல்யம் இரானிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓரளவு கிட்டுகிறது; ஆசிரியர்களின் பெயர்களுடன் புத்தக முன்னட்டைகளில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களும் இடம் பெருகின்றன. சில மொழிபெயர்ப்பாளர்கள் புகழ் பெற்ற கலாசார ஆளுமைகளாகவும் உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் மொழியாக்கப் பணியை பேரன்பு காரணமாகவே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பெறுவது மிகக் குறைவான சன்மானம், மொழியாக்க அனுமதி பெறவோ பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அந்நிய மொழி புனைவுகளுக்கு உள்ள கணிசமான வரவேற்பும் முறையான அனுமதி பெறுவதில் உள்ள தடைகளும் ஒரே புத்தகத்தின் பல்வேறு மொழியாக்கங்கள் வெளியாக மிகப்பெரும் காரணங்களாக உள்ளன. காப்புரிமை குறித்த வெற்றிடத்தை ஒரு சில மொழிபெயர்ப்பாளர்கள் தாம் வளம் பெற பயன்படுத்திக் கொள்கின்றனர்- குறிப்பாக, விற்பனை சாதனை படைத்த நூல்களை மொழிபெயர்ப்பவர்கள். உதாரணமாக, காலேத் ஹொசேனியின் ‘அண்ட் தி மவுண்டென்ஸ் எக்கோட்’ என்ற நாவல் பாரசீக மொழியில் குறைந்தபட்சம் பதினாறு வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துருக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் எழுத்தை மொழியாக்கம் செய்துள்ள அர்சலன் பாசிஹி, இத்தகைய போக்கு, “பாரசீக இலக்கியத்தின் வீழ்ச்சிக்கு” காரணமாகலாம் என்று எச்சரித்துள்ளார்- ஏனெனில், இது மொழியாக்கங்களின் தரத்தை மலினப்படுத்துகிறது.

இரானிய அதிபர் ஹாசன் ரூஹானிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அதே சமயம், பெர்ன் கன்வென்ஷனில் இரான் இணைய வேண்டும் என்று கோரி ஒரு கடிதம் எழுதியுள்ளனர். தெஹ்ரானில் வாழும் எழுத்தாளர் ஹோசென் சானபூர் அவர்களில் ஒருவர். “புரட்சிக்கு முன்னரே எம் மகத்தான இலக்கியவாதிகளில் சிலர் காப்புரிமை சட்டத்துக்கு இரான் அங்கீகாரம் அளிப்பதை எதிர்த்தனர்,” என்கிறார் அவர். “முன்னரே இணையாத காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அண்மைய ஆண்டுகளில்தான் உணரத் துவங்கியிருக்கிறோம்”.

சில பதிப்பாளர்கள் காப்புரிமைச் சட்டத்தை தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொள்ளத் துவங்கினர் என்கிறார் சானபூர். “காப்புரிமையை மதிக்கத் துவங்கும் பதிப்பாளர்களின் எண்ணிக்கை அலை அலையாக அதிகரிக்கும் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் அவர்களின் எண்ணிக்கை கூடவில்லை… ஐந்து அல்லது ஆறு பதிப்பகத்தினர் இதைத் துவங்கினர், அதன்பின் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது”.

அனுமதியின்றி பதிப்பிப்பதை அவர், திருட்டு போன்ற ஒன்று என்று மிகக் கடுமையாக விமரிசிக்கிறார். எனினும் அவர் மொழிபெயர்ப்பாளர்களைக் குற்றம் சொல்வதில்லை. “போதுமான சட்டங்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை,” என்கிறார் அவர்.

மாசித் மிர்மோஸி நாற்பதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் மொழி புத்தகங்களை பார்ஸி மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். பதிப்பிக்கும்முன் காப்புரிமை பெறும் நடைமுறையை அவர் பின்பற்றத் துவங்கியுள்ளார். சுவிஸ் எழுத்தாளரான பாஸ்கல் மெர்சியரின் ‘நைட் ட்ரெயின் டு லிஸ்பன்’ உட்பட அவரது அண்மையை புத்தகங்கள் அனைத்தும் முன் அனுமதி பெற்ற பின்னரே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

“காப்புரிமையை மதிப்பவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,” என்கிறார் அவர். “ஆனால் காப்புரிமைப் பிரச்சனை ஈரானின் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையை ஒரு நோய்மை போல் பீடித்துள்ளது. இது வாசகர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகிறது”

எழுத்தாளர்களும்தான். பால் ஆஸ்டர் போன்ற சிலர் இரானிய மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து ஒரு அடையாள சன்மானம் பெறத் துவங்கியுள்ளனர் என்றால் மரியா வர்காஸ் லோசா போன்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜே. எம். கோட்ஸீ 2008ஆம் ஆண்டு, இரானிய செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கும் நோக்கத்தில் என்னிடம் ஒரு அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் அவர், காப்புரிமை பாதுகாப்பு என்பது பணம் சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். “அனுமதி இன்றி தம் புத்தகங்கள் பறித்துக் கொள்ளப்பட்டு, அமெச்சூர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமக்குத் தெரியாமல் விற்பனையாவதில் எழுத்தாளர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது என்றால் அது நியாயமான ஒன்றுதான்,” என்று அவர் எழுதினார்.

மிர்மோஸி போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் சிரமப்பட்டு காப்புரிமை பெற்றாலும்கூட, வேறொரு பதிப்பாளர் காப்புரிமை பெறாமல் தேர்ச்சியற்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக் கொண்டு மொழியாக்கம் செய்து வெளியிட முடியும். இதற்கான முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால் பலரைப் போல் மிர்மோஸியும் இரானியர்களின் இச்சிறு தனித்தன்மையை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார். “இது ஒரு கொடுங்கனவல்ல,” என்கிறார் அவர், “எங்கள் வாழ்வின் நிதர்சன உண்மை”.

(This is an unauthorised translation of the article, “Why Iran has 16 different translations of one Khaled Hosseini novel,” by Saeed Kamali Dehghan, originally published at The Guardian. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

இலக்கியம் இனியும் என்ன செய்ய முடியும்? – கியோர்கி கொஸ்போதினோவ்

(This speech is translated with the kind permission of Georgi Gospodinov and the Jan Michalski Foundation for Writing and Literature for non-commercial publication specifically at Padhaakai.com. No other use may be made of this material without prior permission of the author and the publisher)

ஆம், நான் மனவெழுச்சி மிக்க நிலையில் இருக்கிறேன். அதற்கு முன் நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பரிசை நிறுவிய துணிச்சலுக்காக வெரா மிசால்ஸ்கிக்கு நன்றிகள், உலகில் நானிருக்கும் பகுதியில் வெளிவந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மரியாதைக்குரிய தேர்வுக் குழுவினருக்கு நன்றிகள். இந்தப் புத்தகம் வாசிக்கப்பட காரணமாக இருந்த என் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றிகள் – பிரெஞ்சு மொழியாக்கம் செய்த மேரி வ்ரினா-நிகொலோவுக்கு நன்றிகள் (அவர் இங்கு இருக்கிறார்), ஜெர்மன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் சிட்ஸ்மானுக்கும் ஆங்கில மொழியாக்கம் செய்த ஏஞ்சலா ரோடலுக்கும் நன்றிகள். என் பதிப்பாளர்களுக்கும் நன்றிகள்- இன்டர்வால்ஸ், ட்ரோஷ் வெர்லக், ஓப்பன் லெட்டர் புக்ஸ். என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த இறுதிப் பட்டியலில் ஜூலியன் பார்ன்ஸ், ஜெவாட் க்ரஹாசன், ஆதிஷ் தசீர், நவீத் கெர்மானி ஆகியவர்களுடன் நானும் இடம் பெற்றிருப்பது என்னை பெருமைப்படுத்துவதாக உணர்கிறேன். இங்கு கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றிகள். என் மனைவி, பில்யானாவுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும், என் மகள் ரயாவுக்கும் நன்றிகள். இந்த நாவலை நான் முடிக்கும்போது அவளுக்கு ஐந்து வயது ஆகியிருந்தது. கதை ஓடாதபோது, அவள் பூனை அல்லது டினோசர் கதை சொல்லி எனக்கு உதவ எப்போதும் தயாராகவே இருந்தாள். ஒரு நாள் மாலை, ஏன் என் புத்தகங்களின் பெயர்கள் எப்போதும் சோகமாக இருக்கின்றன என்றே கேள்வியை ரயா கேட்டாள்- அடுத்த நாவலின் பெயர் உற்சாகமானதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் – “ஆனந்தத்தின் இயற்பியல்,” அல்லது அது போல் ஏதாவது. இதுவரை அந்த வாக்குறுதியை நான் நிறைவு செய்யவில்லை.

இந்தப் புத்தகம், இதுவே உங்கள் முன் நான் பேசும் பெருமையை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இந்தப் புத்தகத்தின் பெயர் “துக்கத்தின் இயற்பியல்”. இதன் பெயரை மாற்றும்படி ஒரு பதிப்பாசிரியர் நட்பார்ந்த முறையில் அறிவுரை அளித்தார். இப்படி ஒரு பெயர் கொண்ட நாவலை யாரும் படிக்க விரும்ப மாட்டார்கள் என்பதுதான் காரணம். துக்கம் விற்பனையாகாது. எப்போதாவது சோகம் மிகுந்த மெர்சிடஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? நான் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. “Тъга”- இப்படித்தான் துக்கத்துக்கான சொல் என் தாய் மொழியில் ஒலிக்கிறது. இந்தச் சொல் சிறியது. ஆனால் இது விவரிக்கும் நிலை நீண்டது, அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்கப்பட முடியாதது. (இப்போது நீங்கள் மெல்ல ‘Тъ-га” என்று சொல்ல முயற்சி செய்தால் உங்கள் குரல்வளையில் எலும்பு அசைவதை உணர முடியும். உங்கள் தொண்டைக்குள் எதுவோ செல்கிறது, முழுங்குவது போன்ற ஒரு முயற்சி, அடக்கிக் கொள்வது போன்ற ஒரு முயற்சி இது).

இந்த நாவலை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஒரு காட்சி வைத்திருந்தேன். அது என் குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒன்று. 1970களில் ஒரு சிறுவன், முடிவற்ற மதியப் பொழுதுகளில் அந்தி போல் இருண்ட நிலவறையில் தங்கியிருக்கிறான்- அவன் இருளை விட்டுத் திரும்பி நிற்கிறான், அவனது முகம் சன்னலை நோக்கியிருக்கிறது. அந்த அறையின் சன்னல், நடைபாதை உயரத்தில் இருக்கிறது. அவனைக் கடந்து செல்லும் கால்களையும் பூனைகளையும் அந்தச் சிறுவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும், தனிமையில், இனம்புரியாத ஒரு கைவிடப்பட்ட உணர்வோடு. அப்போது மினோடர் தோன்றியது- தொன்மங்களில் நாமறிந்த ராட்சதன் ஆவதற்கு முன் தரைக்கடியில் உள்ள சிடுக்குகள் நிறைந்த பாதையில், எருது முகம் பூட்டப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தை. 1970களின் சிறுவனும் குழந்தை-மினோடரும் ஒரே, பொதுத் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள். கைவிடப்படவர்களின் துயரம். நமக்குள் பூட்டப்பட்டிருக்கும் மினோடர் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத விரும்பினேன், நாம் வாழும் நூற்றாண்டைப் பற்றி அதன் மதியங்கள் அந்திப்பொழுதுகள் அனைத்தினும் கண்ட வகையில், பிறர் கதைகளுள் நுழையக்கூடிய இயல்பு கொண்ட, பிரம்மாண்டமான புரிந்துணர்வு கொண்ட ஒரு சிறுவனின் அச்சங்களைக் கொண்டு.

துக்கத்தில் உலக சாம்பியனாய் விளங்கும் தேசத்திலிருந்து வருகிறேன். உலகின் மிகச் சோகமான இடம் – வெவ்வேறு தேசங்களில் நிலவும் மகிழ்ச்சியுணர்வை ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கும் ஆய்வின் அடிப்படையில் தி எகானமிஸ்ட் இதழ் இவ்வாறுதான் பல்கேரியாவை அழைத்தது. இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, இத்தனை சோகமும் எங்கே வடிந்து செல்கிறது என்று நினைத்துப் பார்த்தேன்- அது ஐரோப்பாவெங்கும் வெள்ளமாய் பாய்கிறது, ஒரு வகையில் உலகமெங்கும் கூடத்தான். நீண்ட காலமாய் தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கும் துக்கம், மறைக்கப்பட்டிருக்கும் துக்கம் வெடிக்கத் தயாராய் இருக்கும் ஆபத்தான விஷயம் என்பதை ஒரு எழுத்தாளனாக, நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் இது விடுவிக்கப்பட்டாக வேண்டும், கதைக்கப்பட வேண்டும், புனைவுகளைக் கொண்டு அடக்கப்பட வேண்டும். வேண்டுமானால், அதை நாம் கொண்டாடி வழியனுப்பலாம் என்று வைத்துக் கொள்வோம். இது இலக்கியத்தின் திறன்களில் ஒன்று.

இன்றுள்ள நம் உலகம் போன்ற ஒரு இடத்தில் இப்போதும் இலக்கியத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

அதனால் எளிய விஷயங்கள் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றுவது போன்றவை. நீங்கள் கதை சொல்கிறீர்கள், அந்த வகையில் முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள். இதை நாம் ஷெஹராஜேட் மூலம் நன்றாக அறிகிறோம்- உயிருக்கு பதில் கதைகள் (எளிய ஒப்பந்தம்). பலியாக வேண்டியவள் கதை சொல்கையில் அவள் வேறொரு, பாதுகாப்பான மண்டலத்தில் இருக்கிறாள். கதை முடியாதவரை அவள் வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு. இதுதான் இலக்கியத்தின் சிறப்பு உத்திரவாதம். இதுதான் கதை சொல்லும் மெலியவர்களின் ஆற்றல். குழந்தையாக இருந்தபோதே எனக்கு இதை உள்ளுணர்வு உணர்த்தியிருக்க வேண்டும். ஏனென்றால் தன்னிலை முன்னிலையில் சொல்லப்பட்ட புத்தகங்களையே நான் வாசிக்கத் தேர்ந்தெடுத்தேன். அவனோ அவளோ, கதை சொல்லிக் கொண்டிருக்கும்வரை சாகப்போவதில்லை என்ற எளிய விதியை நான் அறிந்திருந்தேன். கதை சொல்கிறேன், எனவே இருக்கிறேன். Narro, ergo sum.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? தோற்பவர்களின் பக்கம் நிற்க முடியும். நம் காலம் போல், அப்படி இருப்பது குறிப்பாக அவசியப்படும் காலங்கள் இருக்கின்றன- வலிமையற்றவர்கள், காயப்பட்டவர்கள், பிரச்சினையில் இருப்பவர்கள், ஹோமோ ஆங்க்சியஸ், இவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நல்ல இலக்கியத்தின் அடிப்படை இயல்பாக இதைக் காண்கிறேன். வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோற்றுப் போனவர்கள் கதை சொல்கிறார்கள். அவை கூடுதல் சுவாரசியம் கொண்டவை, உண்மைக்கு இன்னும் நெருக்கமானவை.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? நம் ரசனையை மேம்படுத்தலாம். இதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல. ரசனையுள்ள மக்கள் அற்ப பிரசாரத்துக்கு அவ்வளவு சீக்கிரம் வசியப்பட மாட்டார்கள். அரசியல் கிட்ஷை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இந்த இடத்தில் போலிஷ் கவிஞரான ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்டின் “ரசனையின் ஆற்றல்’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் சிலவற்றை நினைவுறுத்துகிறேன்:

அதற்கொன்றும் அவ்வளவு ஒழுக்கம் தேவைப்படவில்லை
நம் மறுப்புக்கும் மாற்று கருத்துக்கும் எதிர்ப்புக்கும்
தேவைப்பட்ட துணிவு ஒரு துளி இருந்ததுதான்
ஆனால் அடிப்படையில் அது ரசனை சார்ந்த விஷயம்
ஆம், ரசனை…

செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், அரசியல் அறிக்கைகள், சந்தைகள் அல்லது வங்கிகளை மட்டும் கொண்டு உலகை விளக்க முடியாது என்பதை மெல்ல மெல்ல நாம் அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் பொருளாதாரத்தாலும் அரசியலாலும் ஆனவர்கள் அல்ல. நாம் துக்கத்தாலும் தயக்கத்தாலும், அவற்றைப் போன்ற மெல்லிய, விளக்க முடியாத, சில சமயம் தர்க்கத்துக்குப் பொருந்தாத விஷயங்களாலும் ஆனவர்கள். இங்குதான் இலக்கியம்- இப்படிச் சொல்லலாமென்றால்- அதன் நிபுணத்துவத்தின் இடம் வருகிறது. அரசியல்வாதிகள் இன்னும் அதிக அளவில் செகாவையும் போர்ஹெசையும் வாசித்தால் நம் பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

பரிவுணர்வை எழுப்பும் கதைசொல்லல் நமக்குத் தேவைப்படுகிறது. தனி வாழ்விலும் அரசியலிலும் இன்று பரிவுணர்வு முக்கியமாக இருக்கிறது. அதுதான் கடவுள் துகள் என்று சொல்லலாம். மானுட உலகின் பசை, ஹிக்ஸ் போஸான் (அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் நாம் இருப்பதால்). ‘துக்கத்தின் இயற்பியல்’ இலக்கணப் பிழை கொண்ட ஒரு சொற்றொடருடன் துவங்குகிறது, ஆனால் அதன் பொருள் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பரிவுணர்வை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன்: நாம் உள்ளேன், அல்லது நான் உள்ளோம்.

நீஸ் நகரில் கூட்டத்தில் புகுந்து ஓடிய ட்ரக்கை இலக்கியமும் பரிவுணர்வும் நிறுத்த முடியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த ட்ரக்கினுள் ஏறிய மனிதனை பல ஆண்டுகளுக்கு முன் அவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அவன் வாழ்வுக்கு அவை வேறொரு பொருள் தந்திருக்கலாம், இது சாதாரண விஷயமல்ல, இதுதான் எல்லாம்.

உலகம் எங்கும் வெறுப்பும் பாதுகாப்பின்மையும் திரண்டெழுந்து ஆபத்தான அளவில் மையம் கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் அதை ஒரு பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கலாம். இது புதிதாய் தோன்றியுள்ள விரைவு ஊடகத்தால் எளிதில் பெரிதாகி வலுவடைகிறது. நம் கருத்துகளும் சொற்களும் கடும் தீவிரத்தன்மை கொள்கின்றன. நம்முள் மறைந்திருக்கும் இந்த உள்ளார்ந்த ஜிகாத்திசம் இன்று மிகவும் ஆபத்தான நிலைகளில் ஒன்றாகும். இன்று, பூகோள பரப்புகளை வெற்றி கொள்ள மட்டுமல்ல, மானுட பரப்புகளை வெற்றி கொள்ளவும் போர்கள் தொடர்கின்றன. மானுட இயல்புக்கு என்று மீறப்படக்கூடாத சில எல்லைகள் இருக்கின்றன. ஏனெனில், வரலாற்று நோக்கில், கோட்பாடுகளுக்கும் தேசங்களுக்கும் முன் மானுடம் இருந்தது. இன்றுள்ள புலம் பெயர்ந்தோர், துக்கங்களின் மகத்தான புலம் பெயர்தலின் ஒரு பகுதியினர். துக்கத்தின் புலம் பெயர்தலைக் குறித்து நாம் சிந்தித்து அதன் கதையாடல்களை விவரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு முறை என் மகள் தன் அறையில் ஆசிரியை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன் மிருக பொம்மைகளிடம், “பிள்ளைகளா, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதன்பின் அவற்றின் பின்னால் போய் நின்றுக் கொண்டு, “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்” என்று பதிலளித்தாள். அவள் இதை அறிந்து சொல்லியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். “நேற்றை விட நன்றாய் இருக்கிறோம்” என்றுதான் நாம் வழக்கமாய்ச் சொல்வோம். “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்,” என்று சொல்வது அதைவிட அதிக விழிப்புணர்வு கொண்ட ஒரு நிலையை உணர்த்துகிறது. நம் கடந்த காலத்தைவிட நம் எதிர்காலம் உறுத்தலாய் இருக்கக்கூடிய ஒரு புள்ளியில் நாம் உறைந்திருக்கிறோம். நம் நிகழ்காலத்தில் உள்ளதைவிட நம் கடந்தகாலத்தில் அதிக எதிர்காலம் இருந்தது.

நிதி நிலை, அரசியல், எண்ணை வளங்கள் வற்றிப் போதல் என்பது போன்ற புலப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அப்பால் கண்ணுக்குத் தெரியாத, அவற்றைவிட அச்சுறுத்தும் வேறொரு பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். அர்த்த சேகரங்களின் முற்றிழப்பு என்று அதை அழைக்கப் போகிறேன். கடும் எதிர்காலப் பற்றாக்குறை. எனவேதான் அர்த்தங்களை உருவாக்கும் கருவிகள் என்ற வகையில் இலக்கியத்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்று ஆற்றல் வளங்கள் போல். அல்லது யாரோ ஒருவருக்காவது ஆறுதல் அளிக்கக்கூடிய வளம். அல்லது ஒரு சிறு சூட்கேஸ், ஒவ்வொரு சமயத்துக்கும் தக்க கதைகள் கொண்ட அவசர உதவிப் பெட்டி. இது சாதாரண விஷயமல்ல. உலகின் கால அட்டவணை, “எதிர்காலம் ரத்து செய்யப்பட்டது,” என்று அறிவிக்கும் கணத்தை நம்மால் தள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

இலக்கியத்தைப் புகழும் இந்தச் சிற்றுரையின் முடிவில், இப்போதோ பின்னரோ, எல்லாமே இலக்கியத்துக்கு உரிய விஷயமாக மாறிவிடுகிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் துக்கங்களும் பிரச்சினைகளும்கூடத்தான். போர்ஹெஸ் மிகவும் நேசித்த மேற்கோள், மல்லார்மே எழுதியது, “உலகில் உள்ள எல்லாம் ஒரு புத்தகம் ஆகவே இருக்கின்றன”, என்று சொல்வது போல்தான்.

நன்றி நண்பர்களே, இவ்வுலகின் வாக்கியங்களில் ஒன்றில் சில நிமிடங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அவ்வுணர்வுக்கு நன்றிகள்.

© 2016 Fondation Jan Michalski

நன்றி – Fondation Jan Michalski 

h/t Specimen

(This is an unauthorised translation of the speech, “What can Literature still do ?” by Georgi Gospodinov”, originally published at Fondation Jan Michalski. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்

அவனை அவர்கள் தனியாய் விட்டுச் சென்ற இரவு -யுவான் ரூல்ஃபோ

“நீங்கள் ஏன் இவ்வளவு நிதானமாகப் போகிறீர்கள்?” என்று பெலிசியானோ ருவலஸ் முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களைக் கேட்டான். “இப்படிப் போய்க் கொண்டிருந்தால் கடைசியில் நமக்கு தூக்கம் வந்து விடும். நீங்கள் அங்கே சீக்கிரம் போய்ச் சேர வேண்டாமா?”

“நாளைக் காலையில் பொழுது விடியும்போது நாம் அங்கே போய்ச் சேர்ந்திருப்போம்,” என்று பதில் சொன்னார்கள்.

அவன் அவர்கள் கடைசியாய்ப் பேசிக் கேட்டது அதுதான். அவர்களது கடைசி வார்த்தைகள். ஆனால் அவற்றை அப்புறம் அவன் நினைத்துப் பார்ப்பான், மறு நாள்.

இரவின் மங்கலான ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில், தரையை உற்றுப் பார்த்தபடி அவர்கள் மூன்று பேரும் அங்கே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“இருட்டாக இருப்பதுதான் நல்லது. இப்படி இருந்தால் அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.” இதையும் சொன்னார்கள், சிறிது நேரம் முன்னால், அல்லது அதற்கு முந்தைய நாள் இரவு. அவனுக்கு நினைவில் இல்லை. தூக்கக் கலக்கம், சரியாய் யோசிக்க முடியவில்லை.

இப்போது, மேலே ஏறிச் செல்கையில், அது மீண்டும் இறங்கி வருவது தெரிந்தது. அது அவனை நெருங்கி வருவதை அவன் உணர்ந்தான். அவன் உடலின் மிகவும் களைத்த உறுப்பைத் தேடி அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது போலிருந்தது. துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்த அவனது முதுகில், அவன் மேல் அது இறங்கும் வரை. தரை சமதளமாக இருக்கும்போது அவன் வேகமாய் நடந்தான். சரிவு ஆரம்பிக்கும்போது, அவன் நிதானித்தான்; அவனது தலை மெல்ல துவளத் துவங்கியது. அவன் நடை தயங்கத் தயங்க அவன் எடுத்து வைக்கும் அடிகள் சிறிதாகின. மற்றவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள். தூக்கத்தில் அவன் தலை துவண்டு விழுகையில், அவர்கள் வெகு தூரம் முன்னே சென்றிருந்தார்கள்..

அவன் பின்தங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் சாலை நீண்டு சென்றது, ஏறத்தாழ அவன் கண்னளவுக்கு உயர்ந்து சென்றது. அப்புறம் துப்பாக்கிகளின் சுமை. அப்புறம் அவன் மீது, அவனது முதுகு வளைந்திருக்கும் இடத்தில் ஊறிக் கொண்டிருக்கும் தூக்கம்.

காலடி ஓசைகள் அடங்குவதை அவன் கவனித்தான்; எப்போதிருந்து, யாருக்குத் தெரியும் அவன் எத்தனை இரவுகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறான் அந்த வெற்றுக் காலடிகளின் ஒலிகளை: “லா மக்தலேனாவிலிருந்து இங்கு, முதல் நாள் இரவு; பின்னர் இங்கிருந்து அங்கே, இரண்டாம் நாள்; அதன்பின் இது மூன்றாம் நாள்.” அதிக நாட்கள் ஆகாது என்று அவன் நினைத்துக் கொண்டான், பகல் பொழுதில் மட்டும் நாங்கள் தூங்கியிருந்தால். ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமில்லை: “தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்மைப் பிடித்து விடுவார்கள்,” என்று சொன்னார்கள். அப்புறம் அது மிகவும் மோசமாய்ப் போய் விடும்”

“யாருக்கு மோசமாக இருக்கும்?”

இப்போது தூக்கம் அவனைப் பேசச் செய்தது. “நான் அவர்களைக் காத்திருக்கச் சொன்னேன். இன்று நாம் ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கட்டும். நாளை நாம் ஒற்றை வரிசையில் செல்வோம், நமக்கு இன்னும் அதிக ஆர்வம் இருக்கும், அதிக பலம் இருக்கும். நாம் ஓட வேண்டியதாகக்கூட இருக்கலாம். என்ன வேண்டுமானால் நடக்கலாம்”

அவன் கண்களை மூடிக் கொண்டு நின்றான். “இது மிக அதிகம்,” என்றான். “அவசரப்பட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? ஒரு நாள். இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோம், இந்த ஒரு நாளில் என்ன ஆகப் போகிறது”. அவன் உடனே கத்தினான், “எங்கே இருக்கிறீர்கள்?”

அதன்பின் கிட்டத்தட்ட ரகசியமாய்: “அப்படியானால் போய்க் கொண்டிருங்கள். போய்க் கொண்டிருங்கள்!”

அவன் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டான். அங்கு நிலம் சில்லிட்டிருந்தது, அவனது வியர்வை குளிர்ந்த நீராய் மாறியது. அவர்கள் அவனிடம் சொல்லியிருந்த சியர்ரா இதுவாகத்தான் இருக்க வேண்டும். கீழே கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது இங்கே இந்தக் குளிர் உன் ஆடைகளுக்குள் புகுந்து கொள்கிறது: “என் சட்டையை உயர்த்தி தம் சில்லிட்ட விரல்களால் என் தோலைத் தடவுவது போல்”

பாசி படிந்திருந்த தரையில் அவன் சரிந்தான். இரவை அளவிடுவது போல் தன் கைகளை விரித்து, மரங்களாலான சுவற்றை எதிர்கொண்டான். டர்பண்டைன் மணம் கமழ்ந்திருக்கும் காற்றைச் சுவாசித்தான். அதன் பின் அவன் உறக்கத்தினுள் மெல்ல மெல்ல அமிழ்ந்தான், அங்கே அந்தக் கள்ளிகளுக்கிடையே, தன் உடல் கெட்டிப்பதை உணர்ந்தபடி.

அதிகாலைக் குளிர் அவனை எழுப்பியது. பனித்துளிகளின் ஈரம்.

அவன் தன் கண்களைத் திறந்தான். இருண்ட கிளைகளுக்கு மேலே, உயரத்தில், தெளிந்த வானில் கண்ணாடியென ஒளி ஊடுருவும் நட்சத்திரங்களைப் பார்த்தான்.

“இருட்டிக் கொண்டிருக்கிறது,” என்று நினைத்துக் கொண்டான். அதன்பின் அவன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

உரத்த குரல்களையும் சாலையின் உலர்ந்த மண்ணில் ஒலித்த குளம்பொலிகளையும் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். தொடுவானின் விளிம்பில் மஞ்சள் ஒளித் தீற்றல்.

சுமைதாங்கிக் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்தார்கள். “குட் மார்னிங்,” என்று அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை.

தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவன் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே பொழுதாகி விட்டது. காவல் வீரர்களைத் தவிர்க்க அவன் இரவில் சியர்ராவைக் கடந்திருக்க வேண்டும். இந்தக் கணவாய் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று. அப்படித்தான் அவர்கள் அவனிடம் சொல்லியிருந்தார்கள்.

கொத்தாய்க் கட்டப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்து தன் தோளில் தொங்கவிட்டுக் கொண்டான். சாலையின் விளிம்பைத் தாண்டி, சூரியன் உயர்ந்து கொண்டிருந்த, சிகரத்தை நோக்கி நடந்தான். அவன் மேலேறினான், கீழிறங்கினான், மேடுகள் நிறைந்திருந்த மலைகளைக் கடந்து நடந்தான்.

“அவனை நாங்கள் அங்கே உயரத்தில் பார்த்தோம். அவன் இப்படி இப்படி இருக்கிறான், நிறைய ஆயுதங்கள் வைத்திருக்கிறான்,” என்று கழுதை மேய்ப்பவர்கள் சொல்வது அவன் காதில் ஒலிப்பது போலிருந்தது.

அவன் துப்பாக்கிகளை கீழே எறிந்தான். அதன்பின் கார்ட்ரிட்ஜ் பெல்ட்களையும் அகற்றினான். அச்சமயத்தில் அவன் எடை குறைந்தது போலுணர்ந்தான். கழுதை மேய்ப்பவர்களுக்கு முன் அடிவாரம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பது போல் ஓடத் துவங்கினான்.

“மேலே போக வேண்டும், உயரத்தில் இருந்த சமதளப் பிரதேசத்தைச் சுற்றி வந்து கீழே இறங்கிப் போக வேண்டும்”. அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ, அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவர்களுடன், அதே சமயத்தில் அல்ல.

அவன் பள்ளத்தாக்கில் சரிந்தோடிய பிளவின் விளிம்பை அடைந்தான். தொலைவில் பழுப்பாய் அகன்று விரிந்திருந்த சமவெளியைப் பார்க்க முடிந்தது.

“அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் மீது எந்த அச்சமும் கவிந்திருக்காது”, என்று நினைத்துக் கொண்டான்.

அவன் மலைச்சரிவினுள் இறங்கினான், உருண்டு புரண்டு எழுந்து ஓடி மீண்டும் உருண்டுச் சென்றான்.

“தெய்வச் சித்தம்,” என்று சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் உருண்டு இறங்கினான்.

இன்னமும் அவன் காதில் கழுதை மேய்ப்பவர்கள் அவனிடம் “குட் மார்னிங்!” என்று சொன்னது ஒலித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அவனது கண்கள் அவனை ஏமாற்றுவது போலிருந்தது. காவல் காத்துக் கொண்டிருப்பவர்களில் முதலில் இருப்பவனிடம் போய், “அவனை இன்ன இன்ன இடத்தில் பார்த்தோம். அவன் சீக்கிரம் இங்கு வந்து விடுவான்,” என்று அவர்கள் சொல்வார்கள்.

திடீரென்று அவன் அசையாமல் நின்றான்.

கிறித்துவே!” என்றான். “விவா கிறிஸ்டோ ரே!” என்று அலறியிருப்பான், ஆனால் தன்னை அடக்கிக் கொண்டான். உறையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து உள்ளே பதுக்கிக் கொண்டான், தன் சட்டைக்குள், அது தன் உடலுக்கு நெருக்கமாய் இருப்பதை உணர்வதற்காக. அது அவனுக்கு துணிச்சல் அளித்தது. மெல்ல அடியெடுத்து வைத்து, அவன் அக்வா ஜார்காவின் பண்ணை நிலங்களை நெருங்கினான். அங்கு பெரிதாய் கனன்று கொண்டிருந்த நெருப்புகளைச் சுற்றி குளிர் காய்ந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பரபரப்பை கவனித்தான்.

விலங்குகளைப் பூட்டி வைத்திருந்த கிடையின் வேலிகள் வரை அவன் சென்றான், அவர்களை இப்போது அவனால் இன்னும் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது. அவர்கள் முகங்களை அடையாளம் காண முடிந்தது. அது அவர்கள்தான், அவனது மாமா டானிஸ்சும் மாமா லிப்ராடோவும். ராணுவ வீரர்கள் நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில், அவர்கள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள்- கிடையின் மத்தியில் ஒரு சீமைக்கருவேலி மரத்தில் தொங்க விடப்பட்டு. கணப்புக்கு ஏற்றப்பட்ட நெருப்பிலிருந்து எழும் புகை குறித்த உணர்வை இழந்து விட்டது போலிருந்தார்கள், கண்ணாடி போல் வெறித்திருந்த அவர்கள் விழிகளில் புகை மூட்டமிட்டது, முகங்களில் சாம்பல் பூசியது.

அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. வேலியோரமாய் அவன் மெல்ல ஊர்ந்து சென்றான், ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தான். அவன் உடலின் இறுக்கத்தை மெல்லத் தளர்த்திக் கொண்டான், தன் வயிற்றில் ஒரு புழு நெளிவதை உணர்ந்தாலும்.

அவனுக்கு மேல், உயரத்தில் யாரோ பேசக் கேட்டான்:

“இவர்களைக் கீழே இறக்காமல் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இன்னொருவன் வருவதற்காகக் காத்திருக்கிறோம். மூன்று பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள், எனவே மூன்று பேர் இருந்தாக வேண்டும். தப்பித்தவன் ஒரு சிறுவன்தான் என்று சொல்கிறார்கள்; சிறுவனோ இல்லையோ, என் லெப்டினென்ட் பர்ராவைவும் அவரோடிருந்தவர்களையும் மறைந்திருந்து தாக்கி அழித்தவன் அவன்தான். இந்த வழியில்தான் அவன் வந்தாக வேண்டும், அவனைவிட வயதானவர்கள், அனுபவம் அதிகம் இருந்தவர்கள் மற்ற இருவரும் இந்த வழியில்தான் வந்திருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அவன் வராவிட்டால் இந்த வழியாக வரும் முதல் ஆளைக் கொன்றுவிட வேண்டியதுதான் என்று என் மேஜர் சொல்கிறார். அவரது ஆணையை அப்படி நிறைவேற்றிவிட வேண்டியதுதான்”.

“ஆனால் நாம் ஏன் அவனைத் தேடிக் கொண்டு போகக்கூடாது? அதைச் செய்தால் நம் சலிப்பாவது தீரும்”

“அதற்கெல்லாம் அவசியமில்லை. அவன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். கடோர்சில் இருக்கும் கிறிஸ்டரோக்களுடன் சேர அவர்கள் எல்லாரும் கொமாஞ்சாவில் உள்ள சியர்ராவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போகவிடுவதும் நல்லதாகத்தான் இருக்கும். அவர்களுடைய கூட்டாளிகள் லாஸ் ஆல்டோஸ் உடன் போரிடப் போகிறார்கள்”

“அதுதான் சரியாக இருக்கும். இறுதியில் நம்மையும் அந்தத் திசையில் செல்லச் சொல்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்”

பெலிசியானோ ருவலஸ் தன் வயிற்றில் புரண்டு கொண்டிருந்த கொந்தளிப்பு அடங்கச் சிறிது நேரம் காத்திருந்தான். அதன்பின் ஒரு வாய் காற்றை முழுங்கினான், தண்ணீருக்குள் ஆழச் செல்லப் போகிறவன் போல. அதன்பின், தரையோடு தரையில் ஊர்வது போன்ற அளவு பதுங்கி, கைகளால் தன் உடலை உந்தித் தள்ளி நடக்க ஆரம்பித்தான்.

ஓடைப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்ததும் அவன் அதனுள் இறங்கி நிமிர்ந்து நின்று ஓட ஆரம்பித்தான், அதன் புதர்களிடையே ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு. ஓடைப் பள்ளம் சமவெளியில் தன்னைக் கரைத்துக் கொள்வதை உணரும் வரை அவன் திரும்பிப் பார்க்கவில்லை, நிற்கவுமில்லை.

அதன் பின் நின்றான். அவனுக்கு மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.

(This is an unauthorised translation of the short story, “The Night they Left him Alone”, originally written in Spanish by Juan Rolfo, and translated into English by George D. Schade. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

ஒளி மிக இனியது – எரிக் மரோனி

Eric Maroney

(This story is translated by Thackli with the kind permission of Eric Maroney for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

-எனது ஆன்மா இரவில் உம்மோடு இருக்க விரும்புகிறது. என் மூச்சுக் காற்றும் என்னுள் உன்னைத் தேடுகிறது.
-ஏசாயா 26:8-9

“எதுவுமில்லை; ஒரு சப்தமுமில்லை, ஒன்றுமே இல்லை…

“தானாகத் துவங்கிற்று, அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கென்றால் என் இதயமே வெடித்து விடும்போல் இருக்கிறது. மேகமூட்டமாய் இருந்த அந்த நாளில், அப்போது சூரியன் வெளியே வந்தது. என் முன் இருந்தது ஒரு சிறு நறவ மலர். நான் சொல்வதை நீ நம்பித்தான் ஆக வேண்டும், அந்த மலர் ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை. சாலையோரம் கிடந்த சேற்றுக்கருகில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சிறு ஊதாச் செடி…

“ஆனால் அப்படி மறுபடியும் நடக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நான் கைகளை ஊன்றி, மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அதை கவனித்தேன். அதன் இதழ்களும் அதில் சிறிது சிறிதாய் இருக்குமே, அதை என்ன சொல்வாய்? அதுவெல்லாம் என்னவென்று எனக்குத் தெரியாது, அவை அங்கே இருந்தன, ஆனால் இருக்கவில்லை. சூரியன் ஒளியூட்டக்கூடிய எல்லாவற்றையும்விட பிரகாசமாய் அவைத் தெரிந்தன. மிகப் புதிதாய்த் தோன்றியவை போல் அவற்றை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுவி விடப்பட்ட உலகத்தைப் பார்ப்பது போல். நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்பது தெரியும். நான் ஒரு சாதாரண யூதன், உன்னைப் போல் படித்தவன் அல்ல…

“நான் அந்த மலரைப் பார்த்தப்போது அது மாறியது போலிருந்தது- ஆனால் உண்மையில், எதுவும் மாறவில்லை!”

ரயில் குலுங்கியது, அவர் தன் இருக்கையிலிருந்து கீழே விழுந்தார். நிமிர்ந்து உட்கார்ந்திருந்தபோது இருந்ததைவிட அவர் தரையில் கிடக்கும்போது இன்னும் எளியவராய்த் தெரிந்தார். கூர்மையாய் எழுதப்பட்ட ‘S’ என்ற எழுத்தைப் போன்ற வடிவம் கொண்ட கோணல் முதுகுடன் புடைத்திருந்தார். அவர் எழுந்து அமர உதவி செய்துவிட்டு, நீண்ட ஒரு பெருமூச்செறிந்தேன்..

“இந்த உள்ளூர் ரயில்கள்தான் என்னைக் கொல்லப் போகின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றி உனக்கு நினைவு இருக்காது, உனக்கு அவ்வளவு வயதாகவில்லை. இப்போது நாம் ஒரு ஸ்டேஷன் விட்டு இன்னொன்றுக்கு நத்தைகள் போல் ஊர்ந்து கொண்டிருக்கிறோம், நாம்தான் கோயிம்களையும் அவர்களது கோழிக்குஞ்சுகளையும் ஏற்றிக் கொள்ள வேண்டுமே. அந்தக் காலத்தில் நீ எக்ஸ்பிரஸ் ரயிலில் போகிறாய் என்றால் அதில் வருகிறவர்களுக்கு என்று ஒரு அந்தஸ்து இருக்கும். சரி, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆமாம், அந்தப் பூ. மன்னித்துக் கொள், உனக்கு முழுக் கதையும் புரிய வேண்டுமானால் முதலில் நடந்ததை எல்லாம் நான் கொஞ்சம் சொல்ல வேண்டும்…

“ஒரு நாள், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு மிக மோசமான ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. என் மனைவியை வேறொருத்தனுடன் பார்த்து விட்டேன். அதைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை, நீ எவ்வளவு தெய்வநம்பிக்கை உள்ளவன் என்பது தெரிகிறது. ஆனால் என் மனைவியை கையும் களவுமாகப் பிடித்து விட்டேன். அதுவும் அவள் ஒன்றும் அப்போது வெறுமே படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை, அவனது சாமான் அவளுக்குள் இருந்தது, உனக்கு அப்படி எதுவும் எப்போதும் நடக்காமல் இருக்கட்டும்! இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கப்புறம்தான் எனக்கு மூச்சு விடுவதே சிரமமாய்ப் போய் விட்டது. என் உதடுகளுக்கு இடையிலிருந்து காற்று போவது மாதிரியான ஓசைதான் வரும்: ஸ்ஃபீ, என்று துருப்பிடித்த டீ கெட்டிலில் வரும் சப்தம் மாதிரி.

“நான் ஒன்றுமில்லாதவனாய் இருக்கவில்லை. என் பாக்கெட்டில் பணம் இருந்தது. அப்போதெல்லாம் இப்படியில்லை, இன்று நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கும் யூதர்களும்கூட பணம் கிடைக்கிறது என்று சர்ச்சுக்குப் போவதைப் பார்க்க முடிகிறது.

“ஆனால் நான் அப்படி இல்லை, அந்த சமயத்தில் நான் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆட்களை எல்லாம் எனக்கு நேரடியாகத் தெரியும்…

“ஒருத்தர் விடாமல் அவர்கள் எல்லாருமே நான் பூரண குணமடைவேன் என்று உறுதி அளித்தார்கள். “இதைக் குடி. இந்த மாத்திரையைச் சாப்பிடு. இந்த ஸ்பாவுக்குப் போ’. ஆகா, அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது, பெரிய ஆட்கள். நான் வெந்நீர்க் குளியல் எடுத்தேன், மனோவசியத்துக்கு உட்பட்டேன். என்ன செய்தாலும் என் மூச்சு வசப்படுவதாயில்லை. என் காற்று போய் விட்டது…

“அதன்பின் சில நாட்களில் என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் போனது. அத்தனை நவீன மருத்துவமனைகளிலும் காந்தங்களிலும் என் பணம் எல்லாவற்றையும் செலவழித்து விட்டிருந்தேன்.

“ஆக, அப்படியே கிடந்தேன், என் அழுக்கில், என் தலைக்கு மேல் மரணம் வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு. அப்போது பார்த்து யார் வர வேண்டும்? எடுபிடி வேலை செய்பவன் ஒருவன், அவன் தோல் பச்சை வெங்காயம் போலிருக்கிறது, அவனது பற்கள் அழுக்காய், கருப்பு கூழாங்கற்கள் போலிருக்கின்றன. அவன் தன் தலையில் ஒரு யார்முல்கே அணிந்திருக்கிறான், அதுவும் அழுக்காக இருக்கிறது, கரித்துண்டைக் கரைத்து ஊற்றியது போல் அதில் கறைகள்…”

“”உனக்கு என்ன வேண்டும்?” என்று அவனைக் கேட்டேன்.

“”உன் பெட்பானை மாற்ற வேண்டும்,” என்று பதில் சொல்கிறான். பதிலுக்கு நான் சொல்கிறேன், “செய்து முடி. இறந்து கொண்டிருப்பவனை ஏன் வெறித்துப் பார்க்கிறாய்?”

“அப்போது அவன் சொல்கிறான், “நீ மூச்சு விடப் பழகவேயில்லை”

“நான் அவனிடம் சொல்கிறேன், “என்ன உளறுகிறாய்? போய் விடு, பாவப்பட்ட யூதனைச் சாக விடு”. ஆனால் இவன், இவன் ஒரு காரியமாய்த்தான் வந்திருக்கிறான்…

“”இவரைப் போய்ப் பார்,” என்று என்னிடம் சொல்கிறான். சிக்கு படிந்த ஒரு அட்டையைக் கொடுக்கிறான். மணல் பள்ளங்களுக்கு அப்பால் ஒரு மண்பாதையில் அவன் தந்த முகவரியில் உள்ள இடம் இருக்கிறது. என்ன செய்தேன் தெரியுமா? நீ சிரித்தாலும் சிரிப்பாய், உனக்கு தெய்வ பக்தி இருக்கிறது, நீ படித்திருக்கிறாய். ஆனால் ஒருவன் சாகக்கிடக்கும்போது, வாழ்வதற்காக என்னவும் செய்வான், என்ன ஆனாலும் சரி…

“எனவே நான் குறுகிய அந்தச் சாலைக்குச் சென்றேன், இருமிக் கொண்டு, இழுத்துக் கொண்டு. குடித்தனக்காரனின் கடைசி காசைக் கணக்கு பார்க்கும் வீட்டுக்காரன் போல் என் ஒவ்வொரு மூச்சையும் கணக்கு பார்த்தபடி மரணம் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அங்கே நான் யாரைப் பார்த்தேன்? நினைத்த மாதிரிதான் இருந்தது: கூன் விழுந்த, குள்ளமான ஒருவர், நரைத்த தாடியுடன், தாயத்துகளும் பிரார்த்தனை விண்ணப்பங்களும் எழுதிக் கொண்டிருந்தார். அந்த மாதிரி ஆட்கள் எப்படி என்பது எனக்கு நன்றாகவே தெரியும்…

‘ஆனால் என்னைப் பார்த்ததும் அவர் தன் எழுதுகோலைக் கீழே போட்டுவிட்டார். சுருக்கம் விழுந்திருந்த அவரது வெண்ணிற முகம் சிவந்தது, வேக வைத்த பீட்ரூட் போல். மிகவும் சிரமப்பட்டு அவர் எழுந்து நின்றார். நிலை கொள்ளாத தன் கைவிரலை என்னை நோக்கி நீட்டி, நடுங்கும் குரலில் சொன்னார், “மூச்சுதான் உயிர்! உன் மூச்சு உன்னை விட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறது”, என்று. “எனக்குத் தெரியாத எதையாவது சொல்,” என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அந்தக் கிழவர் ஒரு சிறகை எடுப்பது போல் என்னைத் தூக்கிக் கொண்டார். அவர் பலசாலியாக இருந்தார்…”

“அப்புறம் நான் கண் விழித்தபின், நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிகச் சிறந்த பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தார்…”

பருமனாய் இருந்த அவர் வேகமாக எழுந்து நின்றார், மேலே இருந்த ரேக்கிலிருந்து தன் துணிப்பையை எடுத்துக் கொண்டு, வாசலை நோக்கி ஓடினார்.

“இரு!”, என்றேன் அவர் கோட்டின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே. நான் முதலில் கேட்பதற்குத் தயாராகவே இல்லாத ஒரு கதையை இப்போது அவர் முடித்து வைத்தாக வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்துவது அவரைக் கோபப்படுத்துகிறது என்பது எனக்குப் புரிந்தது. “அவர் உனக்கு என்ன சொல்லித் தந்தார்?”

“மூச்சு விடுவது எப்படி என்று! ஒவ்வொரு மூச்சாக விட வேண்டும். ஒவ்வொரு மூச்சுக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். மிக எளிய வைத்தியம்…

“அன்று இரவு, நான் ஒரு கல்லைப் போல் தூங்கினேன். அடுத்த நாள், சவரம் செய்து கொண்டேன், முடி வெட்டிக் கொண்டேன், புதிய சூட் ஒன்று வாங்கினேன், பீச்சுக்கு நடந்தேன். அப்போதுதான் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன். “தண்ணீரைப் பார், அந்த வெளிச்சத்தைப் பார்,” என்று சொல்லிக் கொண்டேன், குறிப்பாக யாருக்கும் சொல்லப்பட்டதல்ல அது. நான் சொன்ன சொற்கள், நிச்சயம் நான் அந்த வார்த்தைகளைச் சொன்னேன், அவை நீரையும் ஒளியையும் கைப்பற்றத் தவறின, எல்லாம் வழுக்கிச் சென்றன…”

அத்துடன் அந்தக் குள்ளமான ஆள், அவர் போய் விட்டார். அவர் பிளாட்பாரத்தில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்- ஒருவரையொருவர் நெருக்கியடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டிருமிருந்த கூட்டத்தில் ராணுவ வீரர்கள், விவசாயிகள், வியாபாரிகளுக்கு இடையே, அந்த மக்கள் திரளின் நடுவே வெளியேற அவர் போராடுவதைப் பார்த்தேன், அப்புறம் அவர் மறைந்து விட்டார். அதன்பின் அவர் நினைவாய் ஒரு உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது- ரயில் பெட்டியில் அவரது சுவாசத்தின் மிக மெல்லிய வாசம்.

நன்றி : Lowestoft Chronicle 

கோயிம் (Goyim) – யூதர் அல்லாதவர்கள் என்று பொருட்படும் ஒரு ஏளனச் சொல்.

ஸ்பா (Spa) : மருத்துவ குணம் கொண்ட உப்புகள் அடங்கிய வெந்நீர் குளியல்களுக்கான தங்குமிடங்கள்

யார்முல்கே (Yarmulke) – மரபார்ந்த யூதர்கள் அணியும் குல்லா, பிற யூதர்கள் பிரார்த்தனையின்போது அணிந்து கொள்வது.

மறக்கப்பட்ட கனவுகள் – ஸ்டெஃபான் ஸ்வைக் சிறுகதையை முன்வைத்து

பீட்டர் பொங்கல்

The Villa lay close to the sea,” என்ற ஒற்றை வரியுடன் துவங்குகிறது, Stefan Zweigன் “Forgotten Dreams” என்ற சிறுகதை.

1881ஆம் ஆண்டு பிறந்த Stefan Zweig இந்தக் கதையை 1900ஆம் ஆண்டு எழுதியதாக விக்கிப்பீடியா சொல்கிறது. தகவல் பிழை எதுவும் இல்லையென்றால், அவர் இதைத் தன் பத்தொன்பதாம் வயதில் எழுதியிருக்க வேண்டும். வியன்னாவில் பிறந்த ஸ்டெஃபான் ஸ்வைக், தனது நாற்பது மற்றும் ஐம்பதுகளில் மிகப் பிரபலமான எழுத்தாளராக இருந்தவர், உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டவர். ஹிட்லரின் இன ஒழிப்பு நடவடிக்கைகளால் புலம் பெயர்ந்த இவர், பல தேசங்களைக் கடந்து இறுதியில், இங்கிலாந்து சிங்கப்பூரில் பெருந்தோல்வியைச் சந்தித்தப்போது, “என் ஐரோப்பா இனி மீண்டும் திரும்பப் போவதில்லை,” என்று தன் அறுபத்து ஒன்றாம் வயதில், பிரேசிலில் தற்கொலை செய்து கொண்டவர்.

இவரது படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த காலகட்டமும் ஐரோப்பாவால் இரு உலகப் போர்கள் நிகழ்ந்த காலகட்டமும் ஒன்றுபடுகின்றன- இக்காலகட்டத்தில் எல்லைகளற்ற ஐரோப்பா, போர் எதிர்ப்பு (பசிஃபிஸம்) முதலான நாட்டங்கள் அவரது எழுத்தைப் போலவே அவரையும் ஒரு கற்பனைநவிற்சியாளராக (ரொமாண்டிக்) சித்தரிக்கின்றன என்றாலும் அவரது நிதர்சனம் எவருக்கும் குறைந்தததல்ல. நாஜியிசத்தின் பிரத்யேக அச்சுறுத்தலை அவர் வெகு சீக்கிரமே உணர்ந்திருந்தாலும், ஹிட்லரின் ஜெர்மனியை விமரிசிக்கச் சொன்னபோது, “நான் எந்த தேசத்தையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்றார். யூதராக இருந்தபோதிலும், பாலஸ்தீனில் குடியேறிய யூதர்களின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்பட்டார் – அது ஒரு ஆபத்தான தேசிய இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, என்று எச்சரித்தார்- “நான் அனைத்து வகை தேசீயங்களையும் வெறுக்கிறேன்”. அறிவு சார்ந்து இயங்குபவன் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக இருக்க முடியாது- “அறிவின் பாற்பட்டு இயங்குவதென்பது மிகவும் நியாயமாக இருப்பதாகும், அது எதிராளியைப் புரிந்து கொள்ளக் கோருகின்றது, எனவே உன் தரப்பின் அறவலிமை குறித்த நம்பிக்கையை நலிவுறச் செய்கிறது”

இவரது சிந்தனை, எழுத்து, நடை, கற்பனை குறித்து பல விமரிசனங்கள் இருந்தாலும் உலகின் சிறந்த கதைகள் என்ற ஒரு தொகுப்பில்கூட இடம் பெற்றுள்ள இவரது முதல் கதை, “மறக்கப்பட்ட கனவுகள்”, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. காதல் கதைதான் என்றாலும், அதன் தலைப்பும் கதையோட்டத்தின் மையமும் ஒரு வகையில் அவரது வாழ்க்கை. மற்றும் அதன் துயரங்களின் முன்தரிசனமாய் அமைந்திருக்கின்றன. தன் காலம் குறித்த விவரணைகளை ஒரு சுயசரிதையாய், பிறருக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்ற ஆவேச வேகத்தில் பதிவு செய்தவர் ஸ்வைக்- “தம் காலங்களைத் தீர்மானிக்கும் மகத்தான இயக்கங்களின் துவக்கங்களை இனம் கண்டுகொள்ளும் ஆற்றல் அதன் சமகாலத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்றது என்பது வரலாற்றின் நிராகரிக்க முடியாத நியதியாய் நிலவுகின்றது,” என்பதே அவரது சுயசரிதையின் எச்சரிக்கை. அவர் எழுதிய முதல் சிறுகதையே அவரது காலத்தின் முடிவை கவித்துவ முரண்தன்மையுடன் சுட்டுகிறது என்பதை ஒரு மிகப்பெரிய கற்பனைத் தாவலில் நாம் கண்டு கொள்ள முடியும். உண்மையில், இந்தக் கதையை எழுதும்போது, 1900ல், அவரது காலம் எதிர்கொள்ளப்போகும் அழிவுகள் குறித்து கவலைப்பட யாருக்கும் எந்தக் காரணங்களும் இருந்திருக்கவில்லை.

ஸ்டெஃபான் ஸ்வைக்கின் கதைமொழி மிக நிதானமாக ஒவ்வொரு காட்சியாக, உவமைகளைக் கொண்டு சித்தரிப்பதாய் இருக்கிறது. முதல் பத்தி இப்படி துவங்குகிறது, அதன் இறுதி வரிகள் கவனிக்கத்தக்கவை, “மறக்கப்பட்ட கனவுகள்” தலைப்புடன் பொருத்திப் பார்த்தால் முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இங்கேயே கதையின் முடிவை ஊகித்து விடலாம். ஆனால் முதல் வாசிப்பில் அதற்கான அவசியம் இல்லை என்பதால் நாம் அந்த வாக்கியத்தை இயல்பாகக் கடந்து சென்று விடுகிறோம்.

“The quiet avenues, lined with pine trees, breathed out the rich strength of salty sea air, and a slight breeze constantly played around the orange trees, now and then removing a colourful bloom from flowering shrubs as if with careful fingers. The sunlit distance, where attractive houses built on hillsides gleamed like white pearls, a lighthouse miles away rose steeply and straight as a candle—the whole scene shone, its contours sharp and clearly outlined, and was set in the deep azure of the sky like a bright mosaic. The waves of the sea, marked by only the few white specks that were the distant sails of isolated ships, lapped against the tiered terrace on which the villa stood; the ground then rose on and on to the green of a broad, shady garden and merged with the rest of the park, a scene drowsy and still, as if under some fairy-tale enchantment.”

இந்தக் கடற்கரையில் ஒரு வீடு இருக்கிறது- அது உறங்கிக் கொண்டிருக்கிறது- sleeping house– அதன் மீது காலை வெயில் ஒரு கனமான சுமையாய் இறங்குகிறது- on which the morning heat lay heavily. அதன் கீழ் கடலின் அலைகள் வானவில் வண்ணங்களில் மின்னுகின்றன, வைரங்கள் போல் பிரகாசமாய். அந்தரங்க உரையாடலில் இருப்பது போல் நெருக்கமாய் நின்று கொண்டிருக்கும் பைன் மரங்களில் விழும் வெயில், விரித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜப்பானிய குடையின் மீதும் விழுகிறது. அதன் கீழுள்ள கூடை நாற்காலியில் ஒரு பெண் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள். மோதிரங்கள் இல்லாத விரல்கள் (பின் வரும் கதைக்கு இது ஒரு முக்கியமான குறிப்பு) மறதியில் இருப்பதுபோல் போல் துவண்டிருக்கின்றன, அவை மென்மையான, இனிய அசைவுகளில் ஒரு நாயின் பட்டுச் சருமத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அவளது கரிய கண்களில் ஒரு சிறு நகைப்பின் சாயல் இருக்கிறது, அவை ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றன. இருள்திரை போர்த்து அழகு கூட்டப்பட்டது போல் ஒளிரும் விழிகள் என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது அழகு எளிய, இயல்பான அழகல்ல, கவனமான, நுட்பமான சல்லாபத்தைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒன்று – புறப்பார்வையில் ஒழுங்கற்றது போல் தோற்றம் அளிக்கும் மணம் நிறைந்த அவளது சுருள் கேசம், ஒரு கலைஞனின் கவனத்துடன் கட்டமைக்கப்பட்டது. புத்தகத்தை வாசிக்கும்போதே அவளது வெண்ணிற பற்களை வெளிப்படுத்தும் மென்னகை, கண்ணாடியின் முன் பல ஆண்டுகள் பழகிப் பெற்ற ஒன்று. அவள் புனைந்த வேடங்கள் கவனமற்ற போதிலும் அகற்ற முடியாத வகையில் அவளது இயல்பாய் ஆகி விட்டதை ஸ்வைக் அவளது புறத்தோற்றத்தை விவரிக்கும்போதே உணர்த்தி விடுகிறார்.

இப்போது ஒரு பணியாள் வருகிறான், ஒரு விசிட்டிங் கார்டைத் தருகிறான். அவள் வெளியே காத்திருப்பவனை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறாள். சிறிது சிரமப்பட்டுத்தான் வந்திருப்பது யாரென்பதை நினைவுக்கு கொண்டு வருகிறாள்- பின் அவள் கண்கள் ஜொலிக்கின்றன, இப்போது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட, வெகுகாலத்துக்கு முந்தைய இளமை நாட்களை அவள் நினைத்துப் பார்க்கிறாள். உருவங்களும் கனவுகளும் மீண்டும் பிரத்யேக வடிவம் பெறுகின்றன, மெய் போல் தெளிவாய்த் தோற்றம் கொள்கின்றன.

அவளைச் சந்திக்க வந்திருப்பவன் பேசும் முதல் வார்த்தைகளே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை உணர்த்துகின்றன – பல ஆண்டுகளுக்குப் பின் முதல் முறை சந்திக்கிறோம், என்கிறான் அவன், இனியும் பல ஆண்டுகளுக்கு இதுதான் இறுதிச் சந்திப்பாக இருக்கப் போகிறது. பதிலுக்கு அவளும், ஒரு காலத்தில் சிறிது முக்கியத்துவம் கொண்டவனாக நீ இருந்திருந்தாலும் இப்போது உன் பெயரைக் கொண்டு உன்னை என்னால் உடனே நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை, என்கிறாள். இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள். சொல்லியும் சொல்லாமலும் உணரப்பட்ட இளமையின் முதல் காதல், அதன் மென்போதை ஒரு கனவு போல் அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. விழித்ததும் இது குறித்து முரண்நகையுடன் நினைத்துப் பார்க்கலாம், ஆனால் உண்மையில் கனவு தொடர வேண்டும், கனவில் வாழ வேண்டும் என்பதுதான் உன் ஆசையாக இருக்கும், என்று இளமைக் காதல் குறித்து எழுதுகிறார் ஸ்வைக். தயங்கித் தயங்கி மேற்கொள்ளப்படும் இளம் காதலெனும் அழகிய கனவு, விழைந்தாலும் கேளத்துணியாதது, ஆசை வளர்த்தாலும் அளிக்கவொண்ணாதது.

இருவரும் பழைய விஷயங்களைப் பேசிக் கொள்கிறார்கள், சிரித்துக் கொண்டே, சந்தோஷமாக. எல்லாம் பேசி முடித்ததும் இறந்த காதலின் சோகம் அவர்கள் மீது ஒரு கனமான சுமையாய்க் கவிகிறது. “நான் அமெரிக்காவில் இருக்கும்போது உன் திருமணம் பற்றி கேள்விப்பட்டேன்,” என்கிறான் அவன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததன் நினைவுகளைக் கலைத்துக் கொண்டு, “அப்போது நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?” என்று அவள் கேட்கிறாள். “நான் நாளை அமேரிக்கா கிளம்புகிறேன்,” என்று பதில் சொல்கிறான் அவன். “என் காதலின் சுவாலை எப்போதோ நட்பின் அவியும் தணல்களாய் அடங்கி விட்டிருந்தது. உன் மேல் கோபம் வரவில்லை, என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை, உனக்காகப் பரிதாபப்பட்டேன்,” என்கிறான். என் மேல் இரக்கப்பட என்ன இருக்கிறது, என்று அவள் கோபமாய்க் கேட்கிறாள். “உன் பணக்கார கணவனை நினைத்துப் பார்த்தேன். நீயோ லட்சியவாதி, சாதாரண வாழ்க்கையின் அற்பங்களை வெறுக்கும் விடுதலை விரும்பி, உன்னால் எப்படி ஒரு சாதாரண பைனான்சியரின் மனைவியாக இருக்க முடியும் என்று வருத்தப்பட்டேன்”, என்கிறான்.

“அப்படியானால் அவனை ஏன் நான் திருமணம் செய்து கொண்டிருக்கப் போகிறேன்?” என்று அவள் கேட்கிறாள். “எனக்குத் தெரியாத குணங்கள் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் நீ அவனை அவனது அந்தஸ்துக்காகவும் சொத்துக்காகவும் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும் என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை,” என்கிறான்.

அப்போது, “It was as if she had failed to hear those last words, for she was looking through her fingers, which glowed deep rose like a murex shell, staring far into the distance, all the way to the veils of mist on the horizon where the sky dipped its pale-blue garment into the dark magnificence of the waves,” என்று எழுதுகிறார் ஸ்வைக். அவளது விரல்கள் சிப்பி ஓடு போல் சிவந்திருந்தன, பனிப்படலம் திரை போர்த்திருக்கிறது, வானம் தன் வெளிர் நீல ஆடையை அலைகளின் மகோன்னத இருளில் நனைத்துக் கொண்டிருந்தது. உணர்வுகளின் பொருளை மட்டுமல்ல, பாத்திரங்கள் அறியாததை, அவர்கள் வாழ்வின் அடிப்படை அர்த்தங்களை இயற்கை விவரணைகளைக் கொண்டு ஸ்வைக் சித்தரிக்கிறார்.

“ஆனால் அதுதான் நடந்தது,” என்று சொல்கிறாள் அவள். அதன் பின் ஒரு நீண்ட உரையில், தனக்குத் தன்னையே புரியவில்லை என்கிறாள். அற்புதங்களை நம்பும் இளம் பெண்களின் இதயங்களை வளர்ந்தபின் எந்தப் பெண் அறியக்கூடும், என்று கேட்கிறாள்- யதார்த்தத்தின் முதல் மூச்சில் உதிரும் சிறு வெண் மலர்கள் போல் மென்மையானவை அவர்களின் கனவுகள். பிற பெண்களைப் போல் ஏக்கங்களை ஆனந்தமாய் மாற்றும் ஆண்கள் குறித்து அவள் கனவு காணவில்லை, அவளது கனவுகள் பொன்னும் பட்டாடையும் விழைந்தன. அவள் செல்வச் செழிப்பை, அதன் மகத்துவத்தை நேசித்தாள். “நான் என் சாதாரண ஆடைகளில் என்னை வெறுத்தேன், ஒரு சாமியாரைப் போல் எளிமையாகவும் அடக்கமாகவும் இருந்தேன், வசீகரமற்ற என் தோற்றம் குறித்து வெட்கப்பட்டு பல நாட்கள் நான் வீட்டிலேயே இருந்திருக்கிறேன். என் குறுகிய, அழகற்ற அறையில் மறைந்து இருந்தபோது நான் மிகவும் விரும்பிய கனவில் நான் கடலோரம் தனியாய் இருக்க விரும்பினேன். என் வீடு மகத்தானதாகவும் கலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். சாதாரண உழைக்கும் உலகின் கரங்கள் தொடாத, அமைதி கொழிக்கும், நிழல் வேய்ந்த பசிய தோட்டப் பாதைகளில் நடக்க விரும்பினேன் – இந்த இடம் போன்ற ஒன்றுதான். என் கணவர் என் கனவுகளை மெய்யாக்கினார், அதைச் செய்ய முடியும் என்பதால் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்”

அலைகள் மட்டுமே ஆர்ப்பரிக்கும் சிறிது நேர மௌனத்துக்குப்பின், “ஆனால் காதலைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்கிறான். “அந்த லட்சியங்களை எல்லாம் இன்னும் வைத்திருக்கிறாயா?” என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்கிறாள். அத்தனை தொலைவில் உள்ள உலகம் போனபின்னும் அவற்றில் சிலவும்கூட சாகவில்லையா, வாடவில்லையா? வலுக்கட்டாயமாக உன்னிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மண்ணில் வீசப்படவில்லையா, அவற்றை ஆயிரம் வாகனங்களின் சக்கரங்கள் நசுக்கவில்லையா?

அவன் எதுவும் சொல்வதில்லை. அவளது கரங்களை முத்தமிட்டு விடை பெற்றுக் கொள்கிறான். தன்னுள் ஆழக் கிடந்த ரகசியத்தை வெளிப்படுத்தியது குறித்தும் பல ஆண்டுகள் அவளுக்கு ஒரு அந்நியன் போலிருந்த ஒரு ஆணிடம் தன் ஆன்மாவைத் திறந்தது குறித்தும் அவள் வெட்கப்படவில்லை. சிரித்துக் கொண்டே அவன் போவதைப் பார்க்கிறாள், காதல் பற்றி அவன் பேசியதை நினைத்துக் கொள்கிறாள்.

“அவளுக்கும் நிகழ் காலத்துக்கும் இடையில் மௌனமாய், வெளியே கேட்காத வகையில் அடி வைத்து கடந்த காலம் எழுகிறது. திடீரென்று அவள் அவன் தன் வாழ்வுக்கு ஒரு திசை அளித்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பார்க்கிறாள். அந்த வினோத எண்ணத்துக்கு அவள் மனம் ஒளிரும் வண்ணங்கள் பூசுகிறது. மெல்ல, மெல்ல, அவளறியாமல், கனவு காணும் அவள் இதழ்களின் முறுவல் மறைந்து போகிறது”

இப்படி முடிகிறது கதை.

சிங்கப்பூர் வீழ்ந்தது என்ற செய்திக்குப்பின், இங்கிலாந்து தோற்பது உறுதியானபின், தன் ஐரோப்பா இனி திரும்பப் போவதில்லை, தேசீயங்கள் அதை மீட்கவியலாதபடி பிளவுபடுத்தி விட்டன என்று மனமுடைந்து, “என் தேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பூரண சுதந்திரம், எங்கும் என்னை அதிதியென உணர்தல்” என்ற தன் சர்வதேச லட்சியம் பொய்த்துப் போனதை தாள முடியாமல் தன் இளம் மனைவியுடன்  உயிரை மாய்த்துக் கொண்டவர் ஸ்வைக். பல வண்ணங்களில் ஒளிர்ந்து மறைந்தாலும், துரோகங்களால் தோற்கடிக்கப்பட்டு, மறக்கப்பட்டு பலகாலமான பின்னும் அவை ஒரு வாதையாய் உயிர்த்தெழக்கூடும் என்பதுதான் கனவுகளின் வலிமை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்வைக்கின் சமகாலத்தவர்கள் தேசீய உணர்வுகளால் எழும் யுத்தங்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்த ஐரோப்பாவை உருவாக்கினர். இதுவரை ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் போரிட்டுக் கொள்வதை வெற்றிகரமாய்த் தவிர்த்து வந்திருக்கின்றன. ஐரோப்பா ஒரு கனவென்றால் தேசீயமும் ஒரு கனவு. பல காரணங்களால் ஐரோப்பிய கனவு மெலிந்து, தேசீய கனவுகள் வலுவடைவதை இன்று நாம் காண்கிறோம். தான் வாழும் காலத்தில் புகழ் பெற்றிருந்தாலும் ‘உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவர்” என்றும் ‘அற்ப எழுத்தாளர்’ என்றும்கூட விமரிசிக்கப்பட்டு, தனது மறைவுக்குப்பின் மறக்கப்பட்டிருந்த ஸ்வைக் இன்று மீண்டும் பேசப்படுகிறார், அவரது நூல்கள் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. கலை மட்டுமல்ல, காலமும் ஒரு எழுத்தாளனின் இடத்தையும் அவனது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கக் காரணம் ஆகிறது. மேற்குலகில் ஸ்வைக்கின் காலம் திரும்புவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் மக்களுக்கு ஸ்வைக் ஒரு எச்சரிக்கையாய் இருக்கக்கூடும்.

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா