பீட்டர் பொங்கல்

மார்ச் 1979லிருந்து – டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்

– டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – 

சொல் கொண்டு வருபவர்களில் களைத்து,
சொற்கள், ஆனால் மொழியில்லை,
பனி படர்ந்த தீவுக்குச் சென்றேன்.
சொல்லில்லாதது காடு.
எழுதப்படாத பக்கங்கள் எல்லா திசைகளிலும் விரிகின்றன.
பனியில் ஒரு செஞ்சிறுமானின் குளம்புத் தடத்தைக் காண்கிறேன்.
மொழி, ஆனால் சொற்களில்லை.

 

(This is an unauthorised translation of the poem, From March ’79, originally written in Swedish by Tomas Transtomer, and translated into English by John F. Deane. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – Wikipedia

பொய்கள் – யெவ்கெனி யெவ்டுஷென்கோ

யெவ்கெனி யெவ்டுஷென்கோ

 

குழந்தைகளிடம் பொய் சொல்வது தவறு.

பொய்களை உண்மை என்று சாதிப்பது தவறு.

கடவுள் சுவர்க்கத்தில் இருக்கிறார், உலகில் எல்லாம் நலம்,
என்று அவர்களிடம் சொல்வது தவறு.
அவர்களுக்கு நீங்கள் சொல்வதன் பொருள் புரியும்.
குழந்தைகளும் மனிதர்கள்.
எண்ணற்ற இடர்கள் இருப்பதைச் சொல்லுங்கள்,
வரப்போவதை அவர்கள் பார்க்கட்டும், அது மட்டுமல்ல,
இன்றுள்ளவற்றை தெளிவாய்க் காணட்டும்.
எதிர்கொள்ள வேண்டிய தடைகள் இருப்பதைச் சொல்லுங்கள்,
துயரம் நிகழ்கிறது, கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.
மகிழ்ச்சிக்குத் தர வேண்டிய விலை அறியாதவன்
மகிழ்ச்சியாய் இருக்க மாட்டான்.
மனமறிந்து பிழை எதையும் மன்னிக்க வேண்டாம்,
அது மீண்டும் நிகழும், வளரும்,
அதன்பின் நம் கண்களின் பாவைகள்
நம்முள் மன்னிக்க மாட்டா, நாம் மன்னித்ததை.

(This is an unauthorised translation of the poem, Lies, originally written in Russian by Yevgeny Yevtushenko and translated into English by Robin Milner-Gulland and Peter Levi. The Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – The Guardian

ஊடல் – டபிள்யூ. எஸ். மெர்வின்

டபிள்யூ. எஸ். மெர்வின் 

நீ இல்லாமை என்னைத் துளைத்துச் சென்றிருக்கிறது,
நூலொன்று ஊசியைத் துளைத்துச் செல்வது போல்.
நான் எது செய்தாலும் அதன் வண்ணம் கோர்த்திருக்கிறது.

oOo

(This is an unauthorised translation of the poem, ‘Separation,’ originally written in English by W.S. Merwin. The Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

இறந்தவர்களுக்கான புதிய பெயர்கள்

Matthew Jakubowski

(This story is translated with the kind permission of Matthew Jakubowski for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

 

matt-j

ஜெப் காலமாகிய பின் இந்த ஏழு ஆண்டுகளாக சில மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் பெயர் சூட்டுவதும் பின் அதை மாற்றி வேறு பெயர் சூட்டுவதுமாய் இருக்கிறாள் கரேன். அமைதியான இடம், காலி கலவி மாளிகை, பதுக்கல்காரனின் களிப்பு, குப்பை ஆட்டுக் கொட்டடி, ஆனந்த நிலவறை. இருபத்து- மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாய் இருந்தது குறித்த அவளது நினைவுகளின் இறுகும் ஆடியில் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவனைத் திருப்தி செய்வதற்கான விளையாட்டாய் துவங்கியது.

காலையில் தனியாய் முட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும், இரவில் தாமதமாய் கதவைத் திறந்து உள்ளே வரும்போதும், அவளது நினைவுகளின் இல்லத்துக்குரிய ஒரு புதுப்பெயர் தோன்றும். அந்தப் புதுப்பெயரை அவள் மீண்டும் மீண்டும் மெல்லத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது, கண்கள் விரிந்து அவளது முகத் தோற்றம் ஒரு நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தது போல் உயிர்த்தெழும்.

புதுப்பெயர் சிறிது காலம் அவளைக் காக்கும். முன்னளவு கண்ணீர் இல்லை, ஈரமற்ற தேம்பல். ஆதன் ஆற்றல் குறைவதன் துவக்கத்தை அவள் பெரும்பாலும் இரவில்தான் உணர்வாள், வெளியே பலமான காற்றோ குளிரோ இல்லாதபோதும் தரையும் சுவர்களும் அசையத் துவங்கும்; அவனை அவள் மறக்கவில்லை என்பதை அவன் அறிந்தாக வேண்டும் என்று பாவனை செய்து கொள்வதற்கேனும் ஒரு புதுப்பெயர் தேவைப்படுகிறது என்பதை அவள் அறிந்து கொள்வாள்.

அவள் அவனை அவ்வளவு நேசித்தாளா? காதல் நிகழ்காலத்தில் உள்ளதல்ல. அது கடந்த காலமும் எதிர் காலமும் உயிர்நாட்டதைப் பற்றுதலின் இறுக்கம், உன்னில் ஒரு பகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பது, நீ மங்கி மறைவதைக் கண்டதும் உன்னை உயிர்ப்பிக்க அவர்களைப் பாடச் செய்வது. உண்மையைச் சொல்வதானால், அவனது இல்லாமையை நேசிப்பது இதமாக இருந்ததால் அவள் பாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு நேசித்தாளா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். இப்போதும் அவன் அறியப்பட்டவன்தான், ஆறுதலளிக்கும் இல்லாமையின் இருப்பு.

வெறுமை தன் வடிவம் இழந்தபோது, மேலும் மேலும் அவனைப் போல் இல்லாது போனபோது, தனது நினைவுகளையும் சந்தேகங்களையும் எந்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு தன் துயரம் அதைச் சரி செய்யவும், அதன் மீது மோதிக் கொள்ளவும் இடம் கொடுத்தாள்.

அவன் துன்பப்படுகிறானா? இப்போது அவன் போய் விட்ட நிலையில் அவளது துயரம் குறித்து அவனுக்கு அக்கறை இருக்குமா?

“நீ தேறி வருவதை நீயே கெடுத்துக் கொள்கிறாய், அது உனக்கும் தெரியும்,” என்று அவளது நெருங்கிய தோழி லியாண்ட்ரா அழுதுவிடுவது போல் கூறினாள், கரேன் வீட்டுக்கு எவ்வளவு முறை புதுப்பெயர் தந்திருப்பாளோ அவ்வளவு முறை விசுவாசமாய் அவள் மீண்டும் மீண்டும் பாடும் பல்லவி. “நீ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய் என்பது அபத்தமாக இருக்கிறது. உனக்கு பணமும் நேரமும் இருக்கிறது என்பதால் மட்டும் நீ அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமில்லை. அப்புறம், எதுவும் சொல்லாதே…”

“… ஹனி, நான் உன் மீதும் அன்பு வைத்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.” வழக்கமாய் வரும் பதில்தான், அதில் அன்பைவிட குரூரம்தான் இருந்தது, பிறரைப் போலவே லியாண்ட்ராவும் தனது கலையை மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தால் நம்பிக்கையின்மை வெளிப்படையாகவே தெரிந்தது.

அவளது நண்பர்களும் பலரை இழந்திருக்கிறார்கள். புற்றுநோயைவிட கொடூரமான விஷயங்களுக்காக. அவளுக்குத் தெரியும்.

அவர்கள் அறிய மாட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டைப் பற்றி என்ன ஏது எப்படி என்று எதுவும் அவள் சொன்னதில்லை, அதன் சுவர்களுக்குள் துக்கத்தை ஒரு நிகழ்த்துகலையாகவும் போர்க்கலையாகவும் பயிலும் அவளது வழக்கங்கள் பற்றியும் அவள் சொன்னதில்லை.

அது இப்போதும் எவ்வாறு திரள்கிறது, அந்த உணர்வுதான், அவனது இல்லாமையை இவ்வுலகினுள் அது சுவாசிக்கும்போதே அவளும் அவனது உயிரை அதனுள் சுவாசிக்கிறாள், இவ்வாறு பிணைந்திருத்தலில் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வதன் அமானுட சஞ்சாரமும் சஞ்சரித்தலும். சாதாரணமாய் வாழ்தலைத் தனக்குரியதாய் ஆக்கிக்கொள்ள அவளால் இயலும், அது சோபையிழக்கும் என்றாலும்; அதன் பின் ஒரு நாள் அவள் பிணையற்ற பறவையாவாள். இந்தச் சிலேடை அவளை எப்போதும் சிரிக்க வைத்ததில்லை.

வெறுமைக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட உலகுகளுக்கு இடையில் வீடு பெருமூச்செறிவதைக் கேட்டபடி படுக்கையின் தனிமையில் அவளது உடல் போர்வைகளுக்கு இடையில் மண்ணின் கீழ் ஆழத்தில் கிடப்பது போல் இருந்தாள், அதன் உயிருள்ள சருமம் எங்கும் இறந்தவர்களைச் செவித்தபடி. தொல்காலத்தில் இருந்தவர்கள் சொன்னது போல், புதிய உடலொன்று தரிக்கக்கூடிய உடலின் உறக்கத்தில்.

அவன் போய்ச் சேர வேண்டும் என்று சில சமயம் நீ எவ்வளவு விரும்பினாய் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, நீ பைத்தியமாய் பாசம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள். அவள் அறிவதற்கு வெகு காலம் முன்னரே இழப்பின் முழு உருவத்தையும் அறிந்து விட்ட அவர்கள்- உண்மையில் நோய்மையே தீது, என்று அறிந்திருந்திருந்தார்கள். துன்பப்படுதலே உண்மையில் அஞ்சுதற்குரிய முடிவின்மை. முகமற்ற வலி குரூர, குறுகிய வாழ்வில் நித்தியங்களை வளர்த்தெடுக்கிறது.

தம்பதியர் “பாசத்துடன்” “போராடும்” இரட்டைப் போராளிகள் ஆகின்றனர். என்ன ஒரு கதை! ஆனால் இது ஒரு நாயகக் கதையா இல்லை பேய்க் கதையா? சுண்டிவிடப்பட்ட நாணயத்தின் இரு முகங்கள் என்பதை கரேன் அறிந்திருந்தாள். அது எங்காவது விழுந்தாக வேண்டும். விளைவுகளை கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. அவள் அதைச் செய்யவில்லை. அதன் ஒவ்வொரு சுழற்சியையும் அவள் கவனித்திருந்தாள், நாணயம் நிலைக்கு வந்ததும், மரணத்தின் முகத்தை உற்று நோக்கினாள்.

அவள் பிரச்சினை என்ன என்பதைப் பிறரிடம் சொல்ல முயற்சி செய்வது வெளிப்படையாய் பேசுவது என்று சொல்கிறார்களே, அதற்கும், சாதாரண விஷயத்துக்கான புகழ்ச்சிக்கும்தான் கொண்டு செல்லும். முட்டாள்தனமான வாக்குவாதத்தில் வெற்றி பெறவோ, மீட்கப்பட வேண்டுமென்றோ அவள் விரும்பவில்லை. இன்னும் விரிவான, நிரந்தர அந்தரங்க வட்டத்தைப் பிறர் மதித்தால் போதும், என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் மரணத்தைச் சில சமயம் மன்னிக்க முடியாது என்பதைத்தான் அவள் லியாண்ட்ராவிடமும் பிறரிடமும் சொல்ல அஞ்சியிருக்கலாம். நிச்சயம் இது போல் நடந்து விடுகின்றது. ஆனால் அவற்றை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எண்ணற்ற புதுப்பெயர்களே நமக்குப் போதுமானவையாய் இருக்கலாம், மரணத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளின்மீது உணர்ச்சிகளற்ற ஒரு புரிதலை அவை நிலைநாட்டக்கூடும். போதாமை மிகுந்த ஜீவன்களில் நாம் தொடர்ந்து பெயர் சூட்டி உயிர் நிறைக்கும்போது இந்தச் சக்திகள் எதிர்வினையாற்றாமல் போகலாம், இவ்வுலகுக்குப் பொருந்தாத தம் இருப்பு விரிசலடைவதை அவையும் உணரத் துவங்கலாம். திறந்த, துடிக்கும் இதயத்தைப் பொசுக்கும் வெண்-சூட்டுத் தீக்கோல் போன்ற காதலால் நாம் நம்முடன் இறுக்கி அணைத்துக் கொண்டவர்களைப் போல் தாமும் மரணிக்கக்கூடியவைதான் என்பதை அவை கணப்போது உணரலாம். அப்படியும் இருக்கலாம். உயிர்க் குருதிக்குள் துளைக்கும் உலோகத்தின் வெப்பம், புதிய பெயர்களை அழைக்கும் ஓலம். அப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும், அவளது உயிரும் பிரியும் வரை.

 

நன்றி : (b)OINK

oOo

About the author: 

Matthew Jakubowski is an American fiction writer and literary critic. A former editor for the translation journal Asymptote, his writing appears regularly in publications worldwide, such as The Paris Review Daily, The National, 3:AM Magazine, The Brooklyn Rail and Kirkus Reviews. He lives in Philadelphia, Pennsylvania, and maintains a litblog called truce. (Blog URL: http://mattjakubowski.com )

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர்

(Unauthorised translation made for non-commercial use at this particular website only. The Author and Publishers have been contacted, and this post will be removed if permission to translate and display are denied.)

(ஆங்கிலத்தில், Eleanor Parker)

போஸ்ட்-ட்ரூத்‘ என்பது நம் காலத்துக்குரிய சொல் – குறைந்தபட்சம், ஆக்ஸ்போர்டு அகராதிகளின் பார்வையில்; அவை ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல்லை 2016ஆம் ஆண்டின் சிறப்புச் சொல்லாய் அறிவித்திருந்தன. ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.

ஒரு புதிய சொல் தோன்றும்போது அது எதை விவரிக்கிறதோ அதுவும் புதியதாய் தோன்றிய ஒன்று என்ற எண்ணம் வலுப்பெறுகிறது: விவரிப்பதற்கான புதுச்சொல் தோன்றும்வரை அது இருக்கவில்லை என்ற எண்ணம். இந்த விஷயத்தில் நிலைமை அப்படியல்ல, ‘மெய்ம்மை-பிந்தைய’ என்ற சொல் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டாலும்கூட; வரலாற்றாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரியும், தகவல் குறிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியுடன் உணர்ச்சிகளும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பொதுக் கருத்தைக் கட்டமைக்காத காலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. இப்போது என்ன வேறுபாடு என்றால், புனைச்சுருட்டுகளும் பொய்ச்செய்திகளும் எவ்வளவு வேகமாக புழங்குகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்: உண்மையல்லாத, அல்லது, திரிக்கப்பட்ட கதைகளை பரப்புவதில் மிகப்பெரும் செய்தி நிறுவனங்களும் பொது மக்களும் பங்கேற்க சமூக ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. உண்மை குறித்த அக்கறை கொண்டவர்களுக்கு இது ஒரு வலுவான சவாலாய் இருக்கிறது.

ஆனால் பொய்க் கதைகள் தங்கு தடையின்றி பரவுகின்றன என்பது குறித்த கவலையும்கூட புதிதல்ல. 14ஆம் நூற்றாண்டின் இறுதில், ஜியஃப்ரி சாஸர் இது குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஃபேம்’ என்ற கவிதையில் கூர்மையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை ஒரு கனவு- தரிசனத்தை விவரிக்கிறது. இந்தக் கனவில் சாஸர், ஓயாமல் பேசிச் சிரிக்க வைக்கும் கழுகொன்றால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டு, சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில் நிற்கும் ஒரு கோட்டையை அடைகிறார். இதுதான் புகழ் வீடு. பேச்சிலும் எழுத்திலும் உதிக்கும் அத்தனை வார்த்தைகளும் இங்கு வந்து சேர்கின்றன.

கடலின் ஆர்ப்பரிப்பு போல் பல லட்சக்கணக்கான பேச்சுக்கள் அனைத்தின் ஓசைகளும் கோட்டையைச் சுற்றி ஆர்ப்பரிக்கின்றன. அவற்றின் விதியை நிர்ணயிக்கும் சக்திதான் புகழ்: அவளுக்குப் பல செவிகள், கண்கள், நாவுகள். அவள் தன் அரண்மனைக்கு வரும் சொற்கள் மற்றும் கதைகளின் விதியைத் தீர்மானித்து வீற்றிருக்கிறாள். கனவில் சாஸர், அவள் ஆணைகள் இடுவதைக் காண்கிறார்- அவை நியாயமற்றவையாகவும் வெளிப்பார்வைக்கு தன்னிச்சையாகவும் தோன்றுகின்றன. சில உண்மைக் கதைகள் மறக்கப்பட வேண்டும் என்றும் சில பொய்க் கதைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவள் தீர்மானிக்கிறாள்; நல்லவர்கள் சிலர் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்றும், வேறு சிலர் மறதியின் இருளுக்குத் தக்கவர்கள் என்றும் சபிக்கப்படுகிறார்கள். அதே சமயம், தகுதியற்றவர்களுக்கு இறவாப் புகழும் அருளப்படுகிறது.

இதன் பின் சாஸர், இதைவிட சஞ்சலப்படுத்தும் ஒரு காட்சியை விவரிக்கிறார். புகழ் வீட்டைக் காட்டிலும் இது அதிக குழப்பமாகவும் நிலையில்லாமலும் இருக்கிறது: சுள்ளிகளால் ஆன இந்த வீடு, அசாத்திய வேகத்தில் சுழன்றபடி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டில், ‘டைடிங்ஸ்‘ நிறைந்திருக்கின்றன; இது பயனுள்ள ஒரு மத்தியகால ஆங்கிலச் சொல், சேதி அல்லது தகவல் என்ற எளிய பொருள் கொண்டது, ஆனால் அதே வேளை வம்பு, வதந்தி போன்றவற்றின் எதிர்மறைச் சாயல்களும் அதிகம் கொண்டது. மனதில் நினைக்கக்கூடிய அத்தனை விஷயங்களைப் பற்றிய சேதிகளும் இந்த வீட்டில் சுற்றி வருகின்றன, அவை புழக்கத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அடுத்தடுத்து பேசிப் பெருகுகின்றன, விரைவில் பொய்யும் மெய்யும் இணைந்த பிரிக்க முடியாத கலவையாகி, நெருப்பைப் போல் பரவுகின்றன, ‘தவறித் தெறித்த பொறியால்/ நகரே தீக்கிரையாகும் போல்

குறிப்பாய்ச் சொல்லத்தக்க வகையில் கண்முன் நிற்கும் ஒரு தருணத்தை சாஸர் விவரிக்கிறார். வீட்டின் சன்னலின் வழியே வெளியேற ஒரு உண்மைக் கதையுடன் பொய்க்கதை ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே, “முதலில் என்னைப் போக விடு!” என்று கத்துகின்றன. இறுதியில், சகோதர உறவு பூண்டு உலகைச் சுற்றி வர இரண்டும் ஒப்புக் கொள்கின்றன. இனி இவர்களின் உறவுப் பிணைப்பு மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் யாராலும் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தச் சேதிகள் இதற்குப்பின் பயணிகளாலும், மாலுமிகளாலும், யாத்திரீகர்களாலும் எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன; உண்மைத் தகவல்களைவிட சுவாரசியமான கதைக்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்று மத்தியகால சமூகத்தில் முத்திரை குத்தப்பட்ட குழுக்கள் இவை.

சாஸரின் ஓசை மிகுந்த, கிறுகிறுக்க வைக்கும் புரளி வீடு, டிவிட்டர் பயனர்கள் எவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். எதைச் சாஸர் புரிந்து கொண்டு, இந்தக் கவிதையில் கூர்மையான வகையில் உயிர்ப்புடன் சித்தரிக்கிறார் என்றால், ஒரு கதை பரவுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உண்மைக்கு மிக அபூர்வமாகவே மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதைத்தான். இந்த எண்ணத்தில் சாஸர் நீண்ட கால ஆர்வம் கொண்டிருந்தார், கான்டர்பரி டேல்ஸின் பின்னணியும் இதுவே: அந்தக் கவிதையில் யாத்திரிகர்கள் ஒருவருக்கொருவர் கதைகள் சொல்லிக் கொள்கையில், கதை கேட்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு சிக்கலானது என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அவரவர் கதைகளை புகழும்போதும் வன்மையாகக் கண்டிக்கும்போதும் யாத்திரிகர்கள் தத்தம் நலன்கள் மற்றும் அக்கறைகளால்தான் உந்தப்படுகிறார்கள், கதைக்குரிய உள்ளார்ந்த மதிப்பால் அல்ல. கதையொன்று சொல்லப்பட்டபின், அது கேட்பவர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கதை சொன்னவன் கட்டுப்படுத்த முடியாது.

புகழ் வீடு என்ற கதை, சாஸரால் முடிக்கப்படவில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ உலகு குறித்து கவலைப்படுபவர்களுக்கு அது விடைகள் எதுவும் அளிப்பதில்லை. சாஸர் விவரிக்கும் சித்திரத்தின் எதிர்வினையாய் நாம், நம் காலத்துக்குரிய ‘சேதிகளை’ பகிர்ந்து கொள்வதில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு சாஸர் அதிகம் இடம் கொடுப்பதில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ என்பது புதிய சொல்லாக இருக்கலாம், ஆனால் அது மிகப் பழைய பிரச்சினையை விவரிக்கிறது.

நன்றி – Chaucer’s Post-Truth World, Eleanor Parker, History Today 

ஒளிப்பட உதவி – A Clerk of Oxford