அஜய். ஆர்

ரிச்மல் க்ராம்ப்ட்டனின் ‘ஜஸ்ட் வில்லியம் கதைகள்’ – அஜய். ஆர்

– ஆர். அஜய்-

வில்லியமின் (William) வீட்டினர் விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விருந்தினர் அனைவரும் மாறுவேடம் அணிந்து வர வேண்டும். தாங்கள் என்ன உடை அணியப் போகிறோம் என்பது குறித்த உரையாடலின்போது வீட்டின் கடைக்குட்டியான பதினொரு வயது வில்லியம், தனக்கு சிங்கத்தின் தோல் கிடைத்தால் அதை அணிந்து கொண்டு விருந்தினர்கள் இரவு வேளை தோட்டத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது சிங்கம் போல் உறுமியபடி அவர்கள் மீது பாய்ந்து மகிழ்விப்பேன் என்கிறான். வீட்டினர் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

உண்மையில் வில்லியமிற்கு வருபவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணமொன்றும் இல்லை, அவனைப் பொறுத்தவரை எதிர்பாராத கணங்களில் சிங்கம் போல் அவ்வப்போது தோன்றி உறுமுவது உற்சாகமான செயல், விருந்தினர்களும் அந்தச் சில கண கிலியை விரும்புவார்கள் என்றே நம்புகிறான், அதைச் சொல்லவும் செய்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரியவர்கள் அவன் சொல்வதைக் கேட்காமல் அவர்களாக அவனுக்கு ஒரு உடை தேர்வு செய்து விடுகிறார்கள்.

1921 ஆண்டில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வெளிவந்த, பதினொரு வயது வில்லியமை கதைநாயகனாகக் கொண்ட ‘ஜஸ்ட் வில்லியம்’ (Just William Series) சிறார்ப் புத்தகங்களின் (தொடர்ந்து பல தசாப்தங்கள் இந்த நூல்கள் வெளிவந்தாலும், வில்லியமின் வயது ஏறுவதில்லை, மார்க்கண்டேயனாக பதினொரு வயதிலேயே இருக்கிறான் சாராம்சமாக இந்தச் சம்பவத்தை புரிந்து கொள்ளலாம். குழந்தையின் கண்களின் வழியே உலகை பார்க்கும், புரிந்து கொள்ளும் வில்லியம், அதற்கு நேர்மாறாக இருக்கும் -தாங்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்த- பெரியவர்களின் உலகம், இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும்போது ஏற்படும் அனர்த்தங்கள்தான் இந்த புத்தகங்களின் கருப்பொருள்.

பத்து, பதினொரு வயதில் ஒரு சிறுவனுடைய கனவுகள் என்னவாக இருக்கக்கூடும்? ராபின் ஹூட் போல் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குத் தருவது, புதைக்கப்பட்டுள்ள புதையலைத் தேடி கண்டுபிடிப்பது, வட்ட தொப்பி அணிந்து, தொடைகளில் துப்பாக்கி பொருத்திக் கொண்டு, குதிரை மேல் அமர்ந்து காற்றைக் கிழித்தபடி கௌபாய் போல் அமெரிக்க பாலைவனத்தில் பறந்து செல்வது, போலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத குற்றத்தை, தொழில்முறை அல்லாத துப்பறிவாளனாக- கொலையாளி விட்டுச் சென்ற, போலிஸார் கண்களில் படாத சிகரெட் துண்டு, அவனுடைய ஷூ அச்சு இவற்றைக் கொண்டு- கண்டு பிடிப்பது, பேய் நடமாடுவதாகச் சொல்லப்படும் மாளிகையில் நடக்கும் கடத்தலை வெளிக்கொணர்வது என அந்த வயதில் செய்ய நினைக்கும் சாகசங்கள் பலவும்தான்.

வில்லியமும் இத்தகைய பகற்கனவுகளில் ஈடுபடுகிறான். ஆனால் ஹார்டி பாய்ஸ் (Hardy Boys) போலவோ ‘பேமஸ் பைவ்’ (Famous Five) போலவோ இல்லாமல் இவை பெரும்பாலும் அ-சாகசங்களாகவே (misadventures) முடிகின்றன. கொலைகாரன் என்று வில்லியம் சந்தேகப்படும் நபர் ஒரு அப்பாவியாக இருக்கிறார், அல்லது அவன் யாரை நம்புகிறானோ அவர் திருடனாக இருக்கிறார். இத்தகைய சிறார் பாத்திரங்கள் குறும்பு செய்தாலும், பெரியவர்கள் சொல்லை அவ்வப்போது மீறினாலும் அவர்கள் உதாரண நாயகர்களாகவே, பிற குழந்தைகள் பின்பற்ற வேண்டியவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். வில்லியம் குறித்து அப்படிச் சொல்வது சிறிது கடினம். படிப்பு பிடிக்காது, ஆசிரியர்களுடன் பரஸ்பர விரோதம் -பிரெஞ்ச் ஆசிரியரிடம் தான் எப்படியும் பிரான்ஸ் போகப்போவதில்லை எனவே ஏன் படிக்க வேண்டும், ஏன் அனைவரும் ஆங்கிலம் படிக்கக் கூடாது, எந்த முயற்சியும் இல்லாமலேயே என்னால் அதை பேச முடியும்போது மற்றவர்களும் அப்படியே பேசக்கூடுமே என்று கேள்வி கேட்கிறான்-, வகுப்பறையில் அமர்ந்திருப்பதைவிட, கிராமத்தில் இருக்கும் சிறு காடுகளில் (woods) அலைந்து திரிவது, அங்கு தென்படும் தண்ணீர்ப் பாம்பை வீட்டிற்கு எடுத்து வருவது, ஓடையில் மீன் பிடிப்பது, பறவைகளைப் போலவே கூடு கட்ட முயற்சிப்பது என அவனுடைய பாதை வேறு. அவன் குடும்பத்தில் இத்தகைய அபிலாஷைகள் என்ன எதிர்வினையை உருவாக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.

மர்மம், குற்றம் என்ற வட்டத்திற்குள் க்ராம்ப்டன் வில்லியமை அடைத்து விடுவதில்லை, உண்மையில் அவை மிக குறைவாகவே இந்தக் கதைகளில் வருகின்றன. அன்றாடத்தில் இருந்துதான் வில்லியமின்பெரும்பாலான சாகசங்களுக்கான யோசனைகள் தோன்றுகின்றன, தினசரி வாழ்வே அவன் புரியும் அனர்த்தங்களுக்கான விளைநிலமாக உள்ளது. ‘குழந்தைகளுக்கான, அவர்கள் மட்டுமே இருக்கும் உலகமாக’ மட்டுமே இல்லாமல் – உதாரணமாக பேமஸ் பைவில் பெற்றோர் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு வருவார்கள், பின் சிறார்கள் கையில் செல்லும் கதையில், அதன் பின் வரும் பெரியவர்கள் பாத்திரங்கள் குற்றவாளிகள் மட்டுமே, அவர்களைப்பிடிப்பது மட்டுமே நம் சிறார் துப்பறிவாளர்களின் வேலை- பெரியவர்களின் உலகத்தினுள்ளும் ஒரு நோட்டம் விடுகிறான் வாசகன்.

தினமும் அவன் செய்யும் சாகசங்கள் என்ன, அவற்றால் சந்திக்கும் பிரச்சனைகளும் என்ன?. காலையில் அபஸ்வரமாக பாடினால் வீட்டில் உள்ளவர்கள் அவனுடைய இசையார்வத்தை புரிந்து கொள்ளாமல் திட்டுகிறார்கள், எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் மோகத்தில் வீட்டிலுள்ள மின்னணு உபகரணகளை நோண்டி முயன்று மின்சாரம் தாக்கி அலறினால், வீட்டின் வென்னீரூற்றை (geyser) வெடிக்கச் செய்து வீடெங்கும் நீரைப் பாய்ச்சினால் வீட்டினர் அதையும் புரிந்து கொள்ளாமல்- வில்லியம் பார்வையில் ஈவிரக்கமின்றி- வைகிறார்கள். வீட்டின் கடைக்குட்டி என்பதால், பதினெட்டு வயதான கிராமத்துப் பேரழகி அக்கா எதெல் (Ethel), இருபது வயதான, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘தன் வாழ்நாள் காதலை’ சந்திக்கும் அண்ணன் ராபர்ட் (Robert) இவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. அக்காவின் சால்வையை, மதிப்புமிக்க சீப்பை தம்பி உபயோகித்தால் என்ன, சீப்பில் தெரியாத்தனமாக கோந்து ஒட்டியிருந்தால் வில்லியம் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும், பெரியவர்களுக்கு இது புரிவதே இல்லை. ராபர்ட்டும், ஏதெலும் பங்குபெறும் நாடக நிகழ்ச்சிகளில், ஏற்பாடு செய்யும் விருந்துகளில், நல்லெண்ணத்துடன் -அவர்கள் இவன் எதுவும் செய்ய வேண்டாம் என்று முற்றிறுதியாக கூறியும், கடும் தண்டனைகள் குறித்து அச்சுறுத்தியும்கூட- தன் பங்களிப்பை ஆற்றி எல்லாவற்றையும் கலைத்து விடுகிறான். விருந்தினர்களில் ஒருவரை குற்றவாளி என்று நினைத்து ஷெட்டில் அடைத்து விடுவது, ராபர்ட்டின் ‘அப்போதைய உயிர்க் காதலியை’ வெறுப்படையச் செய்து, தன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று – அடுத்த உயிர்க் காதல் எதிர்படும்வரை- ராபர்ட்டை புலம்பச் செய்வது என வில்லியமின் லீலைகள் பல.

வில்லியமிற்கு ஆண்- பெண் உறவு பிடிபடுவதில்லை, ராபர்ட் தொடர்ச்சியாக ‘காதலில்’ விழுவதை முட்டாள்தனம் என்கிறான், எதெல் மீது வாலிபர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அவளுடைய உண்மை சொரூபம் தனக்கு மட்டும்தான் தெரியும் என்று முணுமுணுக்கிறான். இருப்பினும் திருமணம் நடந்தால் அவர்கள் வீட்டை விட்டுச் சென்று விடுவார்கள் என்று ஜோடிப் (அ)பொருத்தத்திலும்- பெயர் குழப்பத்தில் ராபர்ட்டை விட வயது மூத்த வேறொரு பெண்ணிற்கு அவன் சார்பாக திருமண செய்யக் கோரி கடிதம் எழுதி தானே தருகிறான், இன்னொரு முறை ராபர்ட் இரு வாரங்களுக்கு முன் உயிராக நேசித்த பெண்ணிற்கு கடிதம் தருகிறான், அண்ணன் இப்போது வேறு மலரிடம் தாவி விட்டதை அறியாமல். இதில் எப்படி வில்லியமை குறை கூற? திட சித்தமில்லாத ராபர்ட்தான் இத்தகைய குழப்பங்களிற்கு காரணம் இல்லையா, வில்லியம் சொல்வது போல் ராபர்ட் இன்று, இப்போது, இந்தக் கணம் யாரைக் காதலிக்கிறான் என்பதைச் சரியாக தெரிந்து வைத்திருப்பது கடினம்தான் – ஈடுபடுகிறான்.

அவன் உடன்பிறந்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல, அவனை அனாதை என்று சொல்லி எங்கேயேனும் விட்டு விடலாமா என எரிச்சலின் உச்சத்தில் பேசிக் கொள்கிறார்கள். அன்றாட செயல்களில் ஏதேனும் தடங்கல் என்றால் வீட்டில் வில்லியம் எங்கே என்றுதான் தேடுகிறார்கள், பெரும்பாலான நேரங்களில் அது சரியும்கூட. அது மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான பெரியவர்களும் (சிறார்கள் அல்ல) அவனையும் அவனுடைய ‘அவுட்லா’ குழுவையும் கண்டு அஞ்சி சற்று விலகி இருக்கவே விரும்புகிறார்கள். கிராமத்தின் கிருத்துவ மத போதகர் (vicar) நடத்தும் ஞாயிற்றுக் கிழமை சர்ச் வகுப்பிற்கு வில்லியமின் வருகையைப் பற்றி நினைத்தால் வகுப்பையே நிறுத்திவிடலாம் என்று நினைக்குமளவிற்கு நொந்திருக்கிறார் அவர். சாந்த சொரூபிகளையும் ரத்த வெறி பிடித்தவர்களாக மாற்றுவது வில்லியமால் சாத்தியமே.

புடம் போட்ட தங்கமாக, அனைவரும் விரும்புகிறவனாக, எப்போதும் வெற்றியை மட்டுமே ருசிப்பவனாக இல்லாததாலும், மிக முக்கியமாக, அவனால் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் அப்பாவித்தனமான நல்லெண்ணத்தின் விளைவாக மட்டும் (பெரும்பாலும்) ஏற்படுகின்றன, -பாதிக்கப்படுபவர்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க- என்பதாலும் வில்லியம் மற்ற சிறார் நாயகர்களைவிட நிஜமானவனாக தெரிகிறான். உதாரணமாக, கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் தேவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லும் வில்லியம் பாதிரியார் உண்மையே பேசுவது குறித்து ஆற்றும் சொற்பொழிவால் கவரப்பட்டு இனி உண்மையை மட்டும் பேசப்போவதாக சபதமெடுக்கிறான். கிறிஸ்துமஸ் அன்று தன்னுடைய பரிசுகளைக் குறித்து

“Did you like the book and instruments that Uncle and I gave you?” said Aunt Emma brightly.
“No,” said William gloomily and truthfully. “I’m not int’rested in Church History an’ I’ve got something like those at school. Not that I’d want ’em,” he added hastily, “if I hadn’t em.”
“William!” screamed Mrs. Brown in horror.
“How can you be so ungrateful!”
“I’m not ungrateful,” explained William wearily. “I’m only being truthful…

இந்த நிகழ்வை எப்படி அணுக? நாகரீகம் என்ற ஒற்றை அளவுகோலின்படி வில்லியமின் இந்தச் செய்கை கண்டிக்கத்தக்கதுதான். அதே நேரம் பெரியவர்கள் (இதில் பாதிரி) சொல்வதில் உள்ள யதார்த்தத்தை, அதன் எல்லைகளை புரிந்து கொள்ள முடியாமல் அதை அச்சு அசல் அப்படியே பின்பற்றி, அதனால் உருவாகும் விளைவுகளைக் கண்டு தன்னை அந்தப் பெரியவர்களின் உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆயாசம் ‘wearily’ல் வெளிப்படுகிறது. எந்த பதினொரு வயது சிறுவன்தான் ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் தேவாலையங்களின் வரலாறு என்ற நூல் பரிசாக கிடைத்தால் அதை உண்மையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வான். அவனுடைய பார்வையில் இந்தப் பரிசுகளின் பெறுமதி என்னவாக இருக்கும், வில்லியம் இப்படிப் பேசுவதை வைத்து மட்டும் அவனை ஒரு துஷ்டன் என கூற முடியுமா என்ன? மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்பவனாக, தலைமைப் பண்பு குறும்பு செய்வதற்கு மட்டும்தான் மட்டும் தான் என்றாலும் – உடையவனாக, எந்தச் சிக்கலில் இருந்தும் எப்படியேனும் இறுதி கட்டத்திலாவது தப்பித்து விடலாம் என்ற நன்னம்பிக்கை கொண்டவாகவும் (optimist)- அப்படி பல சமயம் நடப்பதில்லை என்றாலும்- வில்லியம் இருக்கிறான். Lovable (little) rascal என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அவன்.

ஜிஞ்சர், ஹென்றி, டக்லஸ் என மூன்று கூட்டாளிகள் வில்லியமிற்கு, தங்களை ‘அவுட்லாஸ்’ (Outlaws) என்று -சரியாகவே-அழைத்துக் கொள்கிறார்கள். வில்லியமின் வயதில் தோன்றக்கூடிய பெண்கள் குறித்த அலட்சியம் அவனிடமும் இருப்பது போல் தோன்றினாலும் அது அத்தனை உறுதியானது அல்ல. பெண்களின் ஆராதனைப் பார்வையை உள்ளூர விரும்புகிறான், அவன் படிக்கும் கதைகளில் உள்ள சாகசக்காரர்கள், அவர்கள் மேல் மையல் கொள்ளும் பெண்கள் என்ற வழமையை அவன் நிஜத்திலும் எதிர்பார்க்கிறான் என்று கருதலாம். ராபர்ட் மற்றும் ஏதலைக் கிண்டல் செய்தாலும் அவனும் சிறார் காதலில் (crush) அவ்வப்போது விழுகிறான், அவர்கள் பெரும்பாலும் பெரியவர்களாக இருப்பதால் அவற்றின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை. அவன் முகம் கொடுத்து கனிவாகப் பேசும் அவன் வயதையொத்த ஒரே சிறுமி ஜோன் (Joan). ராபர்ட்டின் அப்போதைய உயிர்க்காதலியொருத்தியிடம் மனதைப் பறிகொடுக்கும் வில்லியம், நிதர்சனத்தை உணர்ந்து தான் பெரியவனாகி திருமணம் செய்தால் ஜோனைதான் செய்வேன் என்று சூளுரைப்பதோடு “..I like you better than any insect, Joan’ என்றும் பெருந்தன்மையோடு கூறுகிறான்.

எனிட் ப்ளைடனின் நாவல்களில் இயற்கை வர்ணனைகள், சிறார் எழுத்துக்களில் எதிர்பார்ப்பதைவிட விரிவாகவே இருக்கும், எனினும் அது விதிவிலக்கே. சிறார் எழுத்துக்களில் சம்பவங்களுக்கே பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தொடர்ந்து அதே பாத்திரங்களைப் பற்றியே நாவல்கள் வெளிவந்தாலும் புறச் சூழல் துல்லியமாக இராது. ஆனால் தான் வெளிவந்த காலகட்டத்தை, சமூகப் போக்கை பிரதிபலிக்கும் க்ராம்ப்ட்டனின் எழுத்து துல்லியமான புற உலகை, பின்புலத்தை உருவாக்குகிறது. அது குறித்து சில கேள்விகளும் எழுகின்றன. வில்லியமின் குடும்பம் நடுத்தர வர்க்கம் என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் சமையல் செய்வதற்கு, பரிமாறுவதற்கு ஆட்கள் உள்ளனர், தோட்டக்காரர் உள்ளார், செடிகளுக்கென்று தனி தோட்ட வீடு உள்ளது. இது உண்மையில் சாத்தியமில்லாததா, அல்லது அன்றைய இங்கிலாந்தில் இயல்பான ஒன்றா என தெரியவில்லை. மிக எளிய நிலையில் இருந்து உழைப்பினால் பெரும் பணக்காரரான பாட்ஸ் (Botts) என்ற பாத்திரம் வரும் கதைகள் அனைத்திலும் அவருடைய மனைவி, கிராமத்தின் உயர்குடியுடன் தொடர்பு கொள்ள முயல்வதையும், அவர்களோ பாட்ஸ் குடும்பத்தை சற்று ஏளனமாக -அவர்கள் தரும் நன்கொடைகளுக்காக மட்டும் பொறுத்துக் கொள்ளும்- பார்ப்பதும் சுட்டப்படுகிறது. உயர்குடி பிறப்புக்கள் (nobility), நற்குடிமக்கள் (gentry), சமூக படிநிலையில் தங்களுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் முன்னேறுவதை -‘புதுப் பணக்காரன்’ என்ற ஏளன அடையாளத்தை இங்கு நாமும் சந்திக்கிறோம்- எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

போல்ஷவிக் (Bolshevik) பற்றி இந்தக் கதைகளில் காணக் கிடைக்கும் அச்சமும் குறிப்பிடத்தக்கது, ‘Reds’ என்று அழைப்படும் அவர்கள், கொலையாளிகளாக, சமூக அமைதியை சீர் குலைப்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவை ரஷ்ய புரட்சிக்குப் பின்னான, அது குறித்து அன்றைய இங்கிலாந்தில் இருந்த அச்சத்தின் பிரதிபலிப்பா, அல்லது க்ராம்ப்ட்டனும் அதையே முன்னிருத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதே போல் ‘heathens’, ‘savidges’ என்று மற்ற நாட்டினர் குறிப்பிடப்படுவதும் அந்த காலத்திய சமூகத்தின் பார்வையா அல்லது க்ராம்ப்ட்டனும் அப்படித்தான் மற்றவர்களை பார்த்தாரா என்றும் சந்தேகமெழுப்பலாம் (எனிட் ப்ளைடன் கதைகளில் நிறவெறி உள்ளது என்ற விமர்சனத்தையும் இங்கு நினைவு கூறலாம்).

எப்படி இருப்பினும் இத்தகைய சித்தரிப்புக்களை தங்களுக்கே தங்களுக்கான நீர்க்குமிழ் உலகங்களில் நடைபெறும் பெரும்பாலான சிறார் கதைகளில் பார்ப்பது அரிது. இவை அந்தக் காலத்திய இங்கிலாந்தின் சரியான சித்தரிப்பா என்பதை அப்போது வாழ்ந்தவர்கள், அந்தச் சூழலை நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உறுதிப்படுத்த முடியும், ஆனால் நூல்களின் புனைவுலகு என்று எல்லையைப் பொறுத்தவரை க்ராம்ப்ட்டன் உருவாக்கும் விரிவான சித்திரம், கதைகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும் கிராமத்தின் மெதுவான வாழ்க்கை, கேக், பிஸ்கட்டுடன் மதிய நேர தேநீர், காலை, மாலையில் தினமும் அதே நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது, வேலை முடித்து வரும் தந்தை கதகதப்பான அடுப்பின் முன் அமர்ந்து ஆசுவாசமாக மாலை நேர பேப்பரை வாசிப்பது, இளைஞர்கள் நடத்தும் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், நற்செயல்களுக்காக பணம் திரட்ட பெரியவர்கள் நடத்தும் சந்தைகள் (fete) போன்றவை காலத்தில் உறைந்தவையாக, இன்றைக்கு பொருத்திப் பார்க்க முடியாததாக இருக்கக்கூடும். இருப்பினும் அந்த உறைந்த தன்மையே கடந்து போன காலத்தின் சாட்சியாகவும் உள்ளது.

முப்பதிற்கும் மேல் கதை தொகுதிகள் வெளிவந்துள்ள நிலையில், அதே பத்து பன்னிரெண்டு கருக்கள் (trope)- துப்பறியும் முயற்சி, திருமணம் செய்விக்க நினைப்பது, நாடகம் போடுவது, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தனக்கான செல்வத்தைத் தேடி கடலோட வீட்டை விட்டு வெளியேறி சில மணி நேரங்களில் பல அவஸ்தையான அனுபவங்களுக்குப் பின் திரும்புவது- திரும்பத் திரும்ப வருவது சற்றே அலுப்பூட்டச் செய்யக் கூடியதுதான். ஆனால் அதையும் மீறி வாசகனை வில்லியமை தொடர்ச் செய்வது க்ராம்ப்ட்டனின் நகைச்சுவை ததும்பும் உரைநடை. (‘Crumbs’, ‘Shucks’, ‘Golly’ போன்ற இன்று அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத சொற்களும் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்).

வில்லியமின் நல்லெண்ணக் குறும்புகள் உருவாக்கும் சங்கடங்களில் உள்ள கோமாளித் (slapstick) தன்மை மட்டுமின்று நுட்பமான வார்த்தை விளையாட்டும் க்ராம்ப்ட்டன் எழுத்தில் உள்ளது. வில்லியம் பள்ளியில் படித்த- ஷேக்ஸ்பியர் குறித்த ஒரே ஒரு கட்டுரை வெளிவந்ததால் அவர் குறித்த ஆய்வாளராக தன்னை எண்ணும்- முன்னாள் மாணவர் ஒருவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தை பள்ளியில் நடத்த முன்வருகிறார். வில்லியமின் வகுப்பிற்கு வரும் அவர் பெகன் (Bacon) தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியதாக தான் நம்புவதாக ஆரம்பிக்கிறார். ‘Dick of the Bloody Hand’ என்ற அவன் நண்பர்கள் மட்டும் படித்துள்ள கையெழுத்து பிரதியாக உள்ள நாவலை அவன் எழுதி இருப்பதால் வில்லியமிற்கு தானும் எழுத்தாளன் என்ற எண்ணமுண்டு, எனவே முன்னாள் மாணவருடன் உரையாடத் துவங்குகிறான்.

“..How could the other man Ham…”
“I said Bacon”
“Well, it’s nearly the same”
….
“Well, why’s he got his name printed on all the books then?…”And if this other man Eggs..”
“I said Bacon”

Bacon, Ham, Eggs என்ற வார்த்தை விளையாட்டுடன்,- அவற்றிற்கிடையே உள்ள தொடர்புடன் – இந்த உரையாடல் முடிவதில்லை. முன்னாள் மாணவர் ஹம்லேட் (Hamlet) குறித்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

“I want first to tell you the story of the play of which you are all going to act a scene… There was a man called Hamlet…”
“You just said he was called Bacon”
….
“This was a different man….. This man was called Hamlet and his uncle had killed his father because he wanted to marry his mother”
“What…I’ve never heard of anyone wanting to marry their mother”
“It was Hamlet’s mother he wanted to marry”
“Oh that man that you think wrote the plays”
“No that was Bacon”
“You said it was Ham a minute ago. Whenever I say it’s Bacon you say it’s Ham, and whenever I say it’s Ham you say it’s Bacon..”

“There’s a beautiful girl in the play called Ophelia, and Hamlet wanted to marry her”
“You just said he wanted to marry his mother”
“I did not. I wish you’d listen. Then he went mad and this girl fell into the river, It was supposed to be an accident but probably -”
“He pushed her in” supplied William
“Who pushed her?” demanded Mr.Welbecker irritably.
“I thought you were going to say that the man Bacon pushed her in”
“Hamlet, you mean”
“I tell you what,…. let’s say Eggs for both of them. Then we shan’t get so muddled. Eggs means whichever of them it was”
“Rubbish,”

என்று முன்னாள் மாணவர் கதறுவது நியாயம்தான். ஆனால் வில்லியமின் சந்தேகங்களில்- அவற்றை உருவாக்கும் வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்புகளை பார்க்கும்போது – நியாயம் உள்ளது என்று கூற முடியும் அல்லவா? இத்துடன் வில்லியம்/ க்ராம்ப்ட்டன் நிறுத்துவதில்லை. இந்த உரையாடல் குறித்த சுருக்கத்தை

“Please, sir, he told us that he thinks that the plays of Shakespeare were really written by a man called Ham and that Shakespeare poisoned this man called Ham and stole the plays and then pretended he’d written them. And then a man called Bacon pushed a woman into a pond because he wanted to marry his mother. And there’s a man called Eggs, but I’ve forgotten what he did except that -“

என்று தலைமையாசிரியரிடம் சொல்ல

Mr.Welbecker’s complexion had assumed a greenish hue.
“That will do, Brown,” said the headmaster very quietly.

இருவரும் வேறென்ன செய்திருக்க முடியும்?

இன்று க்ராம்ப்ட்டனின் எழுத்துக்கள் முன்பைப் போல் பரவலாக வாசிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அவற்றின் இப்போதைய மதிப்பு என்ன? வில்லியமின் சேட்டைகளில் ஒன்றைப் பார்ப்போம். அவனும் அவனுடைய நண்பர்களும் ‘கை போக்ஸ்’ (Guy Fawkes) தினத்தன்று பட்டாசு வெடிக்க பெற்றோர்களால் தடை செய்யப்படுகிறார்கள். எனினும் அவர்களுக்குத் தெரியாமல், நால்வரும் பட்டாசுகளை சேகரித்து வெடிக்கத் தயாராகும்போது, அனைவரின் தந்தைகளும் இதை அறிந்து அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து, கடும் கோபத்துடன் பட்டாசுகளை பறிமுதல் செய்கிறார்கள். அடுத்து பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான் பாக்கி, சோகத்துடனும் பயத்துடனும் அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?

பட்டாசுகளை ஆராயும் தந்தைமார்கள் தங்கள் காலத்திய பட்டாசுகளுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறார்கள் -பிறகென்ன, எல்லா தலைமுறையையும் போல் தங்கள் காலத்தியதுபோல் இல்லை என்று குறை சொல்லவும் தவறவில்லை-, பின் தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நான்கு பேரும் வெடித்துச் செய்த அமர்க்களங்களை நினைவு கூர ஆரம்பிக்கிறார்கள், இறுதியில் மகன்கள் அருகில் இருப்பதை மறந்து விட்டு தாங்களே வெடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். க்ராம்ப்ட்டன் நேரடி காட்சியாக இதை வர்ணிக்கிறார் அவ்வளவே. வாசகன் என்ன காண்கிறான்? நான்கு பெரியவர்கள் ஒரு அரை மணிநேரத்திற்காகவேனும் திரும்பவும் தங்கள் பால்யத்திற்கு சென்றுவிடுவதை. ஆம், வில்லியம் ஒரு தனி குழந்தை மட்டுமல்ல, அவன் குழந்தைமையின் பிரதிநிதி. அவன் தந்தையும் ஒரு காலத்தில் வில்லியமாக இருந்தவர்தான், வில்லியமின் மகனும் (ஒரு வேளை அவன் வளர்ந்து ஜோனை திருமணம் செய்து கொண்டால்) வில்லியம்தான், எல்லா குழந்தைகளும் ஒரு கட்டத்தில் வில்லியமாக மாறிய பின்னரே பெரியவர்களாகிறார்கள்.

எனவேதான், இந்தத் தொகுப்பில் இறுதி நூல் வெளி வந்து பதினைந்து வருடத்திற்கு மேல், எண்பதுகளின் இறுதியில், உலக வரைபடத்தில் மட்டுமே இங்கிலாந்தைப் பார்த்திருந்த சிறுவனொருவன் செங்கல்பட்டு நூலகத்தில் இருந்து எத்தேச்சையாக எடுத்த இந்த நூல்களின் மூலம் தன் பகற்கனவுகளை நிரப்பிக் கொள்ள முடிந்தது. புத்தாயிரத்தின் இரண்டாம் தசாப்தம் முடியப்போகிற இந்த காலகட்டத்தில்கூட உலகின் வேறேதோ மூலையில் இன்று வில்லியமை அறிமுகம் செய்து கொள்ளும் சிறுவன் அவனுடைய அ-சாகசங்களில் உவப்புடன் பங்கேற்பான்.

பின்குறிப்பு:

1. 39 தனி நூல்கள் கொண்ட இந்த தொடரில் ‘Just William’s Luck’ மட்டுமே நாவல், மற்ற அனைத்தும் சிறுகதை தொகுப்புக்களே. இவற்றை வரிசைக்கிரமமாக படிக்க வேண்டிய தேவையில்லை.

2. ரிச்மல் க்ராம்ப்ட்டன் பெரியவர்களுக்கான பல நாவல்களும், சிறுகதைகளும்கூட எழுதி இருக்கிறார், அவற்றையே தன்னுடைய உயரிய படைப்புக்களாகப் பார்த்தார்.

எண்ணங்கள் செய்கைகள் – காலத்துகள்

காலத்துகள்

‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்று பாடும் டீச்சருடன் நானும் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தேன். டீச்சர் லயத்தோடு தாளம் போட்டுக் கொண்டிருக்க, நான் தோசையை திருப்பிப் போடுவது போல் உள்ளங்கையையும் பின்னங்கையையும் மாற்றி மாற்றி தொடையில் தட்டிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேர க்ளாஸ், ஆரம்பித்து எவ்வளவு நேரமாயிற்றோ, என்னிடம் வாட்ச்சோ, அறையில் கடிகாரமோ இல்லை, பெரும் பாரத்தை சுமந்தபடி ஊர்ந்து செல்லும் கணங்கள். டீச்சர் சொல்லும்வரை ‘ஸ ரி க ம,’ தான்.

‘கொஞ்சம் வாயத் தொறந்து பாடு, அப்போதான் உச்சரிப்பு ஸ்பஷ்டமா வரும்,’ என்றார் டீச்சர். டீச்சர் குடியிருக்கும் வீட்டின் நான்கு போர்ஷன்களில், முதலாவது மு. முத்து அல்லது முசுட்டு முத்து என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் டாக்டர் முத்துகிருஷ்ணனின் ஒற்றையறை க்ளினிக். செங்கல்பட்டுக்கு குடி வந்த புதிதில் ஓரிரு முறை மு. முத்துவிடம் சென்றிருக்கிறோம். நோயாளி கிளம்பினால் போதும் என்று சலிப்பும் முகச்சுளிப்புமாக வைத்தியம் பார்ப்பார் என்றாலும் தினமும் மாலை கூட்டம் இருந்தபடிதான் இருக்கும். நான் மெல்லிய குரலில் பாட முயற்சிப்பது நோயாளிகளின் உடல் நலம் பற்றிய கவலையால் மட்டும் அல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கக்கூடும்.

டீச்சர் மிகவும் அமைதியானவர், பொறுமை மிக அதிகம், ஒரே விஷயத்தை சலிப்பில்லாமல் சொல்லித் தருவார், கற்கும் நான்தான் வெறுப்படைவேன். நோட்டை மூடிவைத்து, ‘நாளான்னிக்கு பாக்கலாம்,’ என்றவர், அவசரமாகக் கிளம்பியவனை நிறுத்தி ‘வீட்ல ப்ராக்டிஸ் பண்றியோ’ என்று கேட்டார்.

மூன்று வாரங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன், என் சங்கீத ஞானத்தில் எந்த சிறிய முன்னேற்றமும் இதுவரை இல்லை, ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதை உணர்ந்ததைப் போன்று டீச்சரின் முகபாவம்.

‘இல்ல டீச்சர், ஹோம் வர்க்லாம் இருக்கு டைம் கெடக்க மாட்டேங்குது’

‘நேரங் கெடக்கும்போது பண்ணு, சாங்காலம் முடியலனா காத்தால. அப்பத்தான் ….’ என்று கர்நாடக இசை தொடர்பான, எனக்கு புரியவே புரியாத சில பிரத்யேக வார்த்தைகளுடன் அவர் பேச ஆரம்பிக்க எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘சரி டீச்சர்’ என்றேன்.

வெளியே மு. முத்து அறைக்கு முன் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் பார்வையைத் தவிர்த்து வழக்கம் போல் விரைவாக கடந்து செல்ல முயன்ற என் முழங்கையை தொட்டு நிறுத்தினார் ஒருவர். அறிமுகமில்லாதவர்தான், நிம்மதி.

‘தம்பி நீதான் பாடிந்தியாப்பா இவ்ளோ நேரம்’ என்றார். தலையாட்டினேன்.

‘எவ்ளோ நாளா கத்துக்கற’

‘இப்போதான்’ என்று சொல்லி விட்டு அவர் வேறேதும் கேட்பதற்கு முன் வெளியேறினேன்.

மூன்று வார நாட்கள் மாலையில், சனி அன்று மட்டும் காலை என நான்கு நாட்கள் வகுப்பு. தெரிந்தவர்கள், கூடப் படிப்பவர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்று ஓட்டமும் நடையுமாக ஆறரை மணிக்கு க்ளாசுக்கு வருவேன், ஒரு மணி நேரம் கழித்து திரும்பும்போது இருட்டில் செல்வது கொஞ்சம் வசதி. ஆனாலும்கூட ஒரு நாள் எதிரே ஸ்ரீதர் வந்துவிட்டான். எவ்வளவோ ஜாக்கிரதையாக அவனைத் தாண்டிச் செல்லப் பார்த்தபோதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் என்னை கவனித்து விட்டான்.

‘என்னடா இங்க’

‘டாக்டர்ட்ட வந்தேண்டா, இப்போதான் பாத்துட்டு கெளம்பறேன்’

‘ஒடம்பு சரில்லையா, க்ளாஸ்ல நல்லாத்தான இருந்த’

‘திடீர்னுதான், சாங்காலம் வீட்டுக்கு வந்தப்பறம் ஒரு மாறி இருந்துச்சு அதான்’

‘கொரல் கட்டிருக்கான்ன, ஒரு மாதிரி இருக்கு. தொண்டவலி வந்தா அப்பறம் சளிதாண்டா’

‘ஆமாம்டா வரேன், வெளில நிக்க வேணாம்’

காலையில் குளித்து முடித்து ஸ்லோகங்களை ராகத்தோடு சொல்வதைத் தவிர என் பாட்டி பாடியதோ இசை குறித்து வேறெந்த ஆர்வமும் காட்டியதோ இல்லை. புதனன்று, சென்னை தொலைகாட்சி முதல் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர கர்நாடக இசை நிகழ்ச்சியை, ஒலியை முற்றிலும் மட்டுப்படுத்தி, பாடுபவர் வாயசைப்பதையும், முகத்தை அஷ்டகோணலாக்குவதையும், தொடையை ஆக்ரோஷமாக தட்டுவதையும், கைகளை வீசுவதையும் கொஞ்ச நேரம் பார்த்து ரசிப்பதைத் தவிர எனக்கு சுத்தமாக கர்நாடக இசையில் ஆர்வம் கிடையாது. படிப்பை தவிர வேறேதாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம். எனக்கு எண்ணற்ற திறமைகள் இருப்பதாகவும் பெரும் நம்பிக்கை.

‘இன்னும் ரெண்டு வர்ஷத்ல டென்த் போய்டுவான், அப்பறம் டைம் எங்க கெடக்க போகுது, ஏதோ இப்போதைக்கு ரெண்டு வர்ஷம் கத்துக்கட்டும்’ என்று ஆரம்பித்தார்

‘ஐயே என்னால முடியாது தாத்தி, ஆள விடு’

‘நீ இந்தி கத்துக்கலையா அது மாறி பழகிடும்’

‘நார்த்துக்குலாம் வேலைக்கு போனா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்’ என்பதற்காகவே நான் ஹிந்தி கற்றுக்கொள்ள சேர்க்கப்பட்டாலும், திரையிசை பாடல்கள் மீதுள்ள ஆர்வம்தான் ஹிந்தி கற்றுக்கொள்வதின் மீதான விருப்பாக மாறியது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. டீச்சரிடம் கற்றுக்கொள்வதைவிட, ஹிந்தி திரையிசை பாடல்கள் வழியாகவே அதிகம் கற்று எளிதில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் அனைத்து தேர்வுகளையும் பாஸ் செய்திருந்தேன். பாடல் காட்சிகளில் எந்தக் கூச்சமும் கட்டுப்பாடுமின்றி குதித்துத் திரியும் ஷம்மி கப்பூர் என் விருப்ப நாயகர்களில் ஒருவரானார். பனியில் ‘யாஹூ’ என்று கத்தும் அவரைப் போலவே நானும் ‘யாஹூ’ என்று என் வீட்டின் பின்னால் இருந்த காலி மனையில் வியர்த்து தள்ளிக்கொண்டு ஊளையிட்டேன். வீட்டிலிருந்த கேசட்களிலிருந்து ஹேமந்த் குமாரின் குரலும் ,ஆர்.டி.பர்மனின் இசையும் என்னை வசீகரித்தன. ‘ஒத்தனும் இப்போலாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க’ என்று ஆர்.டி குறித்த அப்பாவின் ஆதங்கத்தை நானும் உணர்ந்தேன். வானொலியில் வரும் ஹிந்தி திரையிசை பாடல் நிகழ்ச்சி எதையும் தவற விடுவதில்லை. ‘ஹை மேரே ஹம்சபர்’, ‘பாப்பா கெஹ்தே ஹெய்ன்’ போன்ற அப்போதைய மிகப் புகழ் பெற்ற புதிய பாடல்களை வகுப்பில் நண்பர்களுக்கு பாடிக் காட்டியதோடு மொழிபெயர்க்கவும் செய்தேன். குரல் வளம், இசையோடு ஒத்து பாடுவது போன்றவற்றை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

நிஜத்தில் இசை சம்பந்தமான குறைந்தபட்ச திறமையோ, அப்படியே இருந்திருந்தாலும் மிகவும் நெருங்கியவர்களைத் தவிர பிறர் முன் அதை வெளிப்படுத்தும் தைரியமோ இல்லாவிட்டாலும் கிடாரையோ, மவுத் ஆர்கனையோ, பியானோவையோ பலர் வியந்து ரசிக்கும்படி வாசிக்க மன உலகில் எந்த தடையும் இருந்ததில்லை. அங்குகூட கச்சேரி, ராகம், தாளத்தை எல்லாம் அனுமதிக்க என்னால் இயவில்லை. ஆண்கள் கர்நாடக சங்கீதம் பாடுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை, அதைக் கற்றுக்கொள்ள ஆர்வமில்லை, ஏன் ஒட்டுமொத்தமாக இசை, பாடல் இவற்றின் மேல் எந்த விருப்பமுமில்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்கக் பார்த்தேன்.

‘பொய்லாம் சொல்லாதே, ஹிந்தி பாட்டெல்லாம் எப்பவும் முணுமுணுக்கறல, இதுவும் பாட்டுதான், இதையும் கத்துப்பே, குரல் நல்லாத்தானே இருக்கு. பொம்மனாட்டி மட்டும்தான் பாடணும்னு யார்டா சொன்னா.’ அவர் முடிவு செய்திருந்தபடி, பெரியமணிக்காரத் தெருவிலேயே என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்த டீச்சரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளச் சேர்த்து விட்டார். டீச்சர் தொழில் முறையாக சொல்லித் தருபவர் அல்ல. அவருடைய ஒரே மகன் அந்த வருடம் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தான், கணவர் வீடு வர எட்டு மணிக்கு மேலாகி விடும். நேரத்தைக் கடத்த எனக்கு சொல்லித் தருவது என அவர் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் அவருக்கு இந்நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நான் வீட்டுக்குப் போகும்போது வாசலில் வெள்ளை அம்பாஸிடர் கார் நின்றிருந்தது. ‘உள்ளதான் போனாங்க’ என்று சந்தைச் சுட்டியபடி ராட்சஸி சொன்னார். தலையாட்டி விட்டு சந்தினுள் நுழைந்து, முன்பைப் போல் சந்தின் இருட்டை விழுந்தடித்துக் கொண்டு கடக்காமல், பயத்தை அடிக்கியபடி, சாதாரணமாக நடந்து சென்று என் போர்ஷனை அடைந்தேன்.

‘என்னைப் பார்த்ததும், ‘தோ வந்துட்டானே. வாடா நாங்க யாருன்னு தெரியுதா’ என்று கேட்டார் வீட்டுக்கு வந்திருந்தவர்களில் வயதான பெண். மூக்கில் இரு பக்கமும் மூக்குத்திகள், தடிமனான தோடுகள்.

‘எப்பவோ பாத்தது எப்படி தெரியும்மா. இவதான் வரவே மாட்டேங்கறாளே’ என்றுகூட இருந்தவர் சொல்ல, ‘என்னடி எங்கள பத்திலாம் சொல்றதில்லையா, நான் ஒங்கம்மாவோட அத்த’ என்று சொன்னார் அவர்.

அத்தையின் தோளுடன் ஒட்டி அமர்ந்து, அவர் கைகளை பற்றிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில் பூரிப்பு. காஞ்சீபுரம் சென்றிருவர் தன் நேசத்திற்குரிய அண்ணன் மகளைப் பார்க்க, மகள் மற்றும் பேத்தியோடு செங்கல்பட்டிற்கு வந்திருக்கிறார். பேத்திக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கக்கூடும். தலையாட்டி விட்டு உள்ளே சென்றேன்.

‘என்னடீது பொம்மனாட்டி கணக்கா வெக்கப்படறான்’

உள்ளறையில் அப்பா இல்லை, பாட்டி மட்டும் வார இதழொன்றில் இருந்து கோலப் புள்ளிகளை தன் கோல நோட்டில் பிரதி எடுத்துக் கொண்டிருந்தாள். ‘நீ வெளில வரல தாத்தி’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் இல்லை. என் அப்பா வழி பாட்டியைத் தவிர எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருவது அரிதினும் அரிது. அம்மா அழைக்க வெளியே வந்தேன்.

‘ஏன்டா ஒளிஞ்சிண்டு இருக்க, ஒங்க அம்மா எப்படி பேசுவா தெரியுமா’ படிப்பு சம்பந்தமான வழக்கமான கேள்விகளை எப்போதும் போல் புதியவர்களை கண்டால் உண்டாகும் அசௌகரிய உணர்வோடும் ஒட்ட வைத்துக் கொண்ட காரணமில்லாத அசட்டு புன்சிரிப்போடும் எதிர்கொண்டேன். ‘நீயும் பாட்டு கத்துகறியாமே, என் டாட்டரும் கத்துகறா’ என்றார் என் அம்மாவின் அத்தை மகள்.

‘இப்போத்தான் ரெண்டு மூணு வாரமா போறான், இவ எத்தன நாளா கத்துகறா’ என்று சொன்னார் அம்மா.

‘இவளும் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கா, என்னடி படிச்சிருக்க’ என்று கேட்க அவர் மகள் அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். சரளி வரிசை, கமகம் போன்ற கேள்விப்பட்டது போலவும் படாததும் போலவும் இருந்த வார்த்தைகள்.

‘நீ எதுவரைக்கும் வந்திருக்க, பாடிக் காட்டேன். இங்க ஒக்காரு, அவளும் சேந்து பாடட்டும்’

‘என்னடீது ஒன்னையே பாத்துண்டு நிக்கறான். ரிஷ்யசிருங்கர் மாதிரி வளத்துருக்க போ, எதுவும் பேசவே மாட்டேங்கறானே’

அம்மாவின் வற்புறுத்தல்களுக்குப் பின் சப்பளமிட்டு அமர்ந்து எனக்குத் தெரிந்ததை பாட ஆரம்பித்தேன். அத்தையின் பேத்தி எந்த ஆர்வமும் இல்லாமல் என் பாட்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.

‘நல்லாத்தான் பாடறான், இதெல்லாம் ஒனக்கு தெரியுமாடி’

‘தெரியும் பாட்டி,’ புத்தகத்தை நீட்டினாள்.

‘சரி கெளம்பறோம்டீ, அவர கேட்டதா சொல்லு’ என்று கூறிவிட்டு, ‘மாமியார் எங்க உள்ளயா,’ என்று மெல்லிய குரலில் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்து ‘வரேன் மாமி’ என்றார். ‘ஏன் கெளம்பிட்டீங்க சாப்ட்டு போலாமே’. பாட்டியின் உபசரிப்பை நாசூக்காக மறுத்து விட்டு கிளம்பினார்கள்.

‘இவ்ளோ இருட்டா இருக்கு வாடா ரிஷ்யசிருங்கா தொணைக்கு. யாராச்சும் திருட வந்தாக்கூட தெரியாது போலிருக்கே, கடசில வேற இருக்க’

‘இங்க யாரு திருடவரப் போறாங்கத்த. மத்த ரெண்டு போர்ஷன்லையும் ஆளுங்க எப்படியும் இருப்பாங்க பழகிடுச்சு.’

காரினுள் அமர்ந்தவர் நீட்டிய கைகளைப் பிடித்தபடி அம்மா. இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. ராட்சஸியின் பார்வை இங்குதான். பர்ஸிலிருந்து எடுத்ததை வாங்க மறுத்த அம்மாவின் உள்ளங்கையைப் பிரித்து திணித்தார் அத்தை.

இரவுணவின்போது அம்மா சாப்பிட்டதைவிட பேசியதுதான் அதிகம். அத்தை வீட்டில் தங்கி எஸ்.ஐ.டியில் படித்தது, கல்லூரியின் நீச்சல் குளத்தில் இருந்த க்ளோரின் சிலிண்டர்கள் வெடித்து அதை சுவாசித்தபின் தனக்கு வர ஆரம்பித்த ஆஸ்த்மா, அத்தை மற்றும் அவர் பெண்ணுடன் புராண படம் பார்க்க தாமதமாக சென்று அவசரமாக ஏதோவொரு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்ய முயலும் நாயகன் குளத்தில் விழ நாயகியின் பேச்சைக் கேட்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நீச்சலடித்தபடி பாடும் முதல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க அத்தை அப்போதே இவர்களை அழைத்துக் கொண்டு திட்டியபடியே வீட்டுக்குத் திரும்பியது என முன்பே கேட்டிருந்த நினைவுகள். இப்போது அவற்றினுள் இரு முகங்களை பொருத்திப் பார்க்க முடிந்தது. அப்பாவும் பாட்டியும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சந்துருவிடம் மறுநாள் இதை பற்றி பள்ளியில் சொன்னதற்கு ‘வெக்கமில்லாம அந்தப் பொண்ணு முன்னாடி பாடிருக்க பாரு, எப்டிடா பாடுன’ என்றான்.

‘ஏதோ ரொம்ப கெஞ்சிக் கேட்டாங்கன்னு பாடினேன்’

‘சும்மா, இம்ப்ரஸ் பண்ணப் பாத்துருப்ப. ஒனக்கு ஒரு எழவும் தெரியலங்கறது அந்தப் பொண்ணுக்கு புரிஞ்சிருக்கும்’

அடுத்த வார இறுதியில் க்ளாஸ் முடித்து கிளம்பும்போது ‘இரு இரு, ஒண்ணு சொல்லணும். நாங்க அண்ணா நகர்க்கு அடுத்த மாசம் குடி போறோம். நோக்கு அவ்ளோ தூரம் வர்து கஷ்டம் இல்லையா, நடந்து வேற வரணும், சைக்கிள் இல்லல’ என்றார் டீச்சர். என்னுள் பரவிய விடுதலை உணர்வு டீச்சருக்கும் ஏற்பட்டிருக்கும்.

‘ஆமா டீச்சர், தூரம் அதிகம். அண்ணா நகர்ல எங்க போறீங்க’

‘செவன்த் க்ராஸ். வீடு மாத்தறத பாட்டிட்ட சொல்லுன்ன’

டீச்சர் காலி செய்வதைப் பற்றி சொன்னதற்கு பாட்டி ‘அதெங்கருக்கு, போய் வரலாமில்லையோ’ என்று கேட்டார்.

‘ரொம்ப தூரம் தாத்தி, எப்படி நடந்து போறது. ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கு அண்ணா நகர், அதுவும் இது செவன்த் க்ராஸ் உள்ள போணும்’

‘சைக்கிள் வாங்கிட்டா போலாமில்லையா’

‘அப்போ போலாம்’. இப்போதைக்கு கண்டிப்பாக வாங்க முடியாது.

‘ஒன் இம்ச தாங்க முடியாமையே வீட்ட மாத்திருப்பாங்கடா’ என்பது சந்துருவின் அபிப்ராயம்.

ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடை தட்ட வேண்டியதாகிவிட்டது. வீட்டிற்கு இன்னும் அருகில், இரண்டு நிமிடங்கள்கூட ஆகாத தொலைவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாட்டி. திண்மையான கருப்பு பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி, கழுத்தில் கருப்பு மணி, ஒற்றை மூக்குத்தி, டீச்சர் வயது அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடிய பெண். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை பாடினார் என்று நான் படித்திருந்த செய்திக் கட்டுரையில் இருந்த, அந்த புகழ் பெற்ற பாடகியின் புகைப்படத்தை நினைவூட்டும் முகம். அம்மாவுடன் வேலை செய்பவர் மூலமாக இவர் குறித்து தெரிந்து கொண்டு, முதலில் சென்று பார்த்து பேசி முடித்து இப்போது என்னை சேர்க்க வந்திருக்கிறார். முதல் பார்வைக்கு கடினமானவராக தோன்றினாலும் பேச்சு மென்மையாகவே இருந்தது. நாலைந்து பூனைகள் வீட்டினுள் சுவாதீனமாக சுற்றிக்கொண்டிருந்தன. இங்கும் சனி தவிர வாரம் மூன்று நாட்கள், அதே நேரம்.

‘நாளெக்கு வந்துடு நல்ல நாள்’

‘டீச்சர்னு சொல்லாண்டாம், மாமினே கூப்டு’. என்று முதல் க்ளாஸிலேயே டீச்சர் சொல்லி விட்டார். இங்கும் நாம் மட்டும்தான் கற்றுக் கொண்டிருந்தேன். வீட்டில் மாமியும் அவர் கணவரும், கொழுத்த பூனைகளும் மட்டும்தான். நான் உள்ளே நுழையும்போது பெரும்பாலும் இரண்டு மூன்று பூனைகளை மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருப்பார் மாமி. அதன்பின் இரண்டு கிண்ணங்களில் பாலோ, தயிர் சாதமோ தந்துவிட்டு பாடத்தை ஆரம்பிப்பார்.
வீடெங்கும் எப்போதும் ஈர வாசத்தை நுகர முடியும் பல்ப் உமிழும் மங்கலான மஞ்சள் ஒளியுடன், தரையின் அரக்கு நிறமும், இரு உள் தூண்களின் அடர் பச்சை வண்ணமும், சுவர்களின் சாயம் போன க்ரீம் நிற வண்ணமும் கலைந்து சிதறி ஹாலே பல வண்ணக் கலவையாக மினுங்கிக் கொண்டிருக்கும். பார்வை அந்தப் நிறப்பிரிகை மேலும், மனம் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களுக்கான இராணுவ வீர்களின் நேயர் விருப்பத்தை எதிர்நோக்கியபடியும் இருக்க, நான் கர்நாடக இசையுடன், தோல்வியைத் தவிர வேறு எந்த முடிவும் இருக்க முடியாத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். வானொலியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் வரும் அலைவரிசையையும், நேரங்களையும் மாமி என்னிடம் சொன்னதை நான் மனதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. புதிய நோட், அதில் மாமி எழுதித் தருவது என்று மீண்டும் ஆரம்பித்தாலும் என் சங்கீத ஞானம் கொஞ்சம் கூட விருத்தியடையவில்லை. மாறாக மாமி வீட்டுப் பூனைகளுடன் நல்லுறவு ஏற்பட்டது.

சமையல் முடியாததால் பாடம் ஆரம்பிக்க தாமதமாகும் வேளைகளில் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அலமேலுவின் நினைவு வரும். என் வீட்டிற்கு தினமும் இரண்டு மூன்று முறையாவது, வெள்ளை ரோமம் மண்டிய, பருத்த உடல் கொண்ட அலமேலு வந்து செல்லும். தெருவில் அதை எப்படி அழைத்தாலும், என்னளவில் அவளை அலமேலு என்றே கூப்பிட்டு வந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் சிறு ஒலியை எழுப்பி விட்டு படுத்துக் கொள்ளும் அலமேலு, நாங்களாக கிண்ணத்தில் எதாவது வைத்தால் மட்டும் அதை சாப்பிடும். எங்கள் வீட்டில் சில காலம் வளர்த்து வந்த நாய் ‘ஐவனுடனும்’ நல்லுறவை பேணியது அலமேலு. போர்ஷன் வாசலில் இரண்டும் அருகருகில் படுத்தபடி தத்தம் உலகங்களில் ஆழ்ந்திருக்கும். விடுமுறை நாட்களின் மதிய பொழுதுகளை எலிலுமிச்சை மரத்தடியில் உட்கார்ந்தபடி கழிக்கும் எனக்கு, தூக்கத்தினூடே அரைக்கண்ணை அவ்வப்போது திறந்து பார்க்கும் அலமேலுதான் துணை. ஒருநாளேனும் அலமேலுவை இங்கு அழைத்து வர வேண்டுமென்றும் எண்ணினாலும் அதைச் செய்யவில்லை. தன் பூனைகள் சிறிது நேரம் வெளியே சென்று தெருவுக்குப் போய்விட்டு வருவதைக்கூட விரும்பாதவர் மாமி.

மாமி வீட்டுப் பூனைகள், பாடம் நடக்கும்போது வீட்டினுள் திரிந்தபடியோ அல்லது எங்கள் அருகில் படுத்துக் கொண்டோ இருக்கும். சில நேரங்களில் மெல்லிய குரலில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்போது, புன்சிரிப்புடன் தடவிக் கொடுத்தபடியே மாமி தொடர்வார். என்னைவிட அவை சங்கீதத்தை குறித்து அதிகம் அறிந்து கொண்டிருந்தால் வியப்படைந்திருக்க மாட்டேன். பாடத்தின் நடுவே மாமி சில பாடல்களை பாடுவது உண்டு, சில சமயம் முணுமுணுப்பாய், சில சமயம் சன்னமான ஆனால் தெளிவாக புரியும் வகையில். லயித்து பாடிக்கொண்டே தூணிலோ, சுவற்றிலோ சாய்ந்து விடுவார். குறிப்பாக கண்ணன் குறித்த பாடல்களை பாடும்போது அவர் முகம் மிக நெகிழ்வாக இருக்கும், பூனையை மடியில் வைத்துக் கொண்டு அதை வருடியபடி பாடிக் கொண்டிருப்பார்.

க்ளாஸ் முடிந்து வெளியே வந்ததும் பரக்க பரக்க நடக்கத் துவங்கினேன். ஐம்பதடி நடந்து திரும்பினால் என் தெரு, அதன் பின் சமாளித்து விடலாம். என் பின்புற காலி மனை வழியாக மாமி வீட்டு கொல்லையை இன்னும் விரைவாக நொடிகளில் அடைந்து விடலாம். பாட்டுக் கற்றுக் கொள்ளச் செல்வதை யாரும் பார்க்காமல் இருக்க இருட்டில் செடி புதர்களின் நடுவே சென்று சுவரேறி குதிக்கக்கூட தயாராக இருந்தேன். ஆனால் மாமி வீட்டை அடுத்திருந்த பழைய திருமண மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் பார்த்து கையசைத்து கூப்பிட்டு விட்டார். மனையில் கிரிக்கெட் விளையாடும்போது மண்டபத்தினுள் சென்று விழும் பந்தைப் பொறுக்கச் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம். மாமி வீட்டு கொல்லையில்கூட பந்து விழுந்து விடும். எந்த பயமும் இல்லாமல் எடுத்து வருவோம், பின் பக்க கதவு திறந்து பார்த்ததில்லை. பெரியவர் அருகே சென்றேன்.

‘என்னடா இங்க, கொஞ்ச நாளா இங்க பாக்கறேன் கூப்டலாம்னு பாத்தா அதுக்குள்ள குடுகுடுன்னு ஓடிட்ற’ வெள்ளை கதர் சட்டை, வேட்டிதான் எப்போதும் பெரியவர் அணிவார். மூக்குக் கண்ணாடிக்கு பின் சேதமடைந்த வலது கண்.

‘இல்ல பாட்டு கத்துக்கறேன் மாமிட்ட, இப்போ ஸ்கூல் வர்க் வேற இருக்கு போய் பண்ணனும்’

‘அதுக்கு ஏன்டா திருடன் மாறி வர போற, அப்டி என்ன அவசரம்’ என்று சொல்லியபடி அவர் கண்ணாடியை கழற்ற பார்வையை அவர் முகத்திலிருந்து விலக்கினேன். ‘பசங்க பாத்தா அசிங்கமா இருக்கும், செமத்தியா கிண்டல் பண்ணி ஓட்டுவாங்க’ தெருவில் வந்துகொண்டிருப்பவர்களை பார்த்தபடி சொன்னேன். பெரியவர் பார்ப்பது பிரச்சனை இல்லை, மாமி வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடு தள்ளிதான் கஞ்சாவின் வீடு. அவனைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நான் ஒளிந்து மறைந்து சென்று வந்துகொண்டிருந்தேன்.

‘ஏண்டா கிண்டல் பண்றாங்க, பண்ணா பண்ணிட்டு போட்டும். நானும்தான் கத்துக்க ஆசப்ட்டேன் முடில’ சொல்லிவிட்டு ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். சாதாரணமாக அமர்ந்திருப்பதால் முட்டி மேல் அவர் தாளம் போடுவதில் உள்ள லயம் எனக்கு எப்போதும் வாய்க்காது.

‘நீங்க அப்பறம் ஏன் கத்துக்கல என்னாச்சு’

‘ம், இதுவரக்கும் நீ என்ன கத்துண்ட்ருக்க. என்ன பாட்டு முழுசா தெரியும்’. பெரியவர் தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இந்த மண்டபத்தில் வசிக்கிறார். சொத்தில் பங்காக பெரியவருக்கு இதை அவர் குடும்பத்தினர் தந்து ஏமாற்றி விட்டனர் என்றும் இல்லை அவராக கேட்டு வாங்கியதுதான் என்றும் தெருவில் பேச்சு உண்டு.

‘முழு பாட்டா, இன்னும் அதே ‘ஸ நி த’தான் அதையே தாண்ட மாட்டேன்னு நெனக்கறேன். பசங்க கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க’ என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கஞ்சா வந்து விட்டான். பீடா சாப்பிட வேண்டும் என்று பல காலமாக பயலுக்கு ஆசை. இந்த கோடை விடுமுறையின்போது செட்டித் தெரு ‘சேட்’ கடையில் ஜர்தா பீடா வாங்கி குதப்பிக் கொண்டிருந்தவனை அவன் தந்தை பார்த்து விட்டு அடித்து புரட்டியபடி வீட்டிற்கு அழைத்து வந்தது முதல் ராஜாராமன் கஞ்சாவாகிவிட்டான்.

‘என்னடா நிக்கற இந்த நேரத்துல, என்ன புக்’ என அவன் கை நீட்ட ‘நாடார் கடல பாத்தேன், பேசிட்டே வந்தோம்’ என்றார் பெரியவர்.

‘ரப் நோட்டா, கடேல வாங்கினேன், அப்டியே இப்டி வந்துட்டேன், கெளம்பறேன்’

மாமா உள்ளறையில் இருந்து வெளியே வந்து, எங்கள் பக்கம் திரும்பாமல் புழக்கடைக்குச் சென்றார். ஒல்லியான தேகம், கை வைத்த பனியன், வேஷ்டி. நான் க்ளாஸ்சிறகு வருவதற்கு முன்பே அலுவகத்தில் இருந்து திரும்பி வந்து விடுபவர் எப்போதும் உள்ளறையில்தான் அமர்ந்திருப்பார். தண்ணீர் குடிக்க நான் சமையலறைக்குச் செல்லும்போதெல்லாம் விளக்கு போடப்படாத ஹாலின் வெளிச்சம் மட்டுமே ஊடுருவி இருக்கும் அறையில் ஈஸி சேரில் சுவற்றில் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருப்பதை கவனிப்பேன். வீட்டில் பேப்பர் வாங்குவது இல்லை, தொலைக்காட்சி கிடையாது. ரேடியோ எப்போதும் ஹாலில் தான் இருக்கும்.

எங்களருகில் அமர்ந்திருந்த பூனைகளில் ஒன்று சோம்பல் முறித்து எழுந்தது. ‘உள் ரூம்க்கு போது மாமி’ என்றேன் நான், ‘குருவாயூரப்பா’ என்றபடி எழ முயன்றவர், ‘கண்ணா நீ போய் கூட்டிண்டு வாடா, அவர் வந்துரப் போறார்’ என்று சொல்லி முடிக்கும்போது மாமா திரும்பிக் கொண்டிருந்தார். எழுந்து சென்றேன். அறையின் மூலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த பூனையில் அருகில் சென்று காலை ஓங்கினார் மாமா.

‘மாமி இங்கதானுருக்கு உள்ரூம்ல,’ திரும்பியவரை காலில் பூனை வந்து உரசி ஒலியெழுப்பும் வரை பார்த்தபடியே நின்றிருந்தேன். பூனையை தூக்கிக் கொண்டு நிமிரும் போதும் மாமாவின் பார்வை என்னிடமே இருந்தது.

‘உள்ள ரூம்ல லைட் போடல மாமி ‘ என்றேன் வந்தவுடன்.

‘தோ வரேன், மறந்துர்றார். குருவாயூரப்பா ‘ முனகியபடி எழுந்து ‘நாம என்ன பண்றது’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்தார். எதுவும் சொல்லாமல் பூனையை வருடியபடியிருந்தவரிடம் ‘நீங்க ஸ்டேஜ்ல பாடிருக்கீங்களா மாமி’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் எங்க கண்ணா, ஏதோ சின்ன வயஸ்ல கத்துண்டதே பெரிய விஷயம்,’ என்றவரிடம் ‘நீங்க சொல்லிக் குடுப்பீங்கன்னு இங்க யாருக்குமே தெரில. நாங்கள்லாம் ஒங்க வீட்டுப் பின்னாடிதான் கிரிக்கெட் ஆடுவோம்’ என்றேன்.

‘முன்னாடிலாம் அவர்க்கும் புடிக்கும், அதுவும் சில பாட்னா கேட்டுண்டே இருப்பார்.’ என்று சொல்லிவிட்டு மெதுவாக பாட ஆரம்பித்தார். க்ளாஸ் முடியும்வரை அவர் பாடிக்கொண்டிருக்க நான் பூனைகளைக் கொஞ்சியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கத்தைவிட பெரிய கிண்ணத்தில் பால் சாதத்தை தனியாக ஒரு பூனைக்கு வைத்து விட்டு, அதனருகே வந்த மற்ற பூனைகளை இன்னொரு வழக்கமான பாத்திரத்தில் இருந்து உண்ணச் செய்தார்.

‘என்ன மாமி அதுக்கு மட்டும் ஸ்பெஷல்’

‘உண்டாயிருக்காடா’

வயிறு சற்று பெரிதாகத்தான் தெரிந்தது. அதன் பின் அதற்கு விசேஷ கவனிப்பு, அதற்கேற்ப வயிறும் பெரிதாகிக் கொண்டிருந்தது.

‘மாமி, அந்த ரூம் பக்கமே போகுது. குட்டி போட எடம் தேடுதுன்னு நெனக்கறேன்’

‘குருவாயூரப்பா, குட்டி போட்டா மத்த பூனைங்க கிட்டலேந்து கண்கொத்தி பாம்பா காப்பத்தணும். இதுல அந்த ரூம்னா.. நீ கெளம்பு, வெள்ளிக்கெழமே பாக்கலாம். வீட்ல பிராக்டிஸ் பண்றியோ’

‘பாக்கறேன் மாமி, ஹோம் வர்க்லாம் இருக்கு. வரேன் மாமி’

கிளம்பி வெளியே வந்தால் எதிரே கஞ்சா வருகிறான்.

‘என்னடா மாமி வீட்லேந்து வர, புக்க காட்டு’ என்று பிடுங்கி பார்த்து ‘நீதானா அது எங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க மாமி பாட்டு சொல்லித் தராங்க போலன்னு. அதான் அன்னிக்கும் இங்க பேசிட்டிருந்தியா’

அடுத்த நாள் வகுப்பறையில் ‘சாஆஅ, ற்ற்றீரீஈ, காஆஆ’ ‘குடுமி வெச்சுப்பியா இல்ல இல்ல பாகவதறு ஸ்டைல்லா. டோப்பா தான் பெஸ்ட்டு’

‘எப்போ ஸ்டேஜ்ல பாடப்போற, இதுக்கெல்லாம் அரங்கேற்றம் உண்டா. நா துந்தணா ஒண்ணு இருக்குமே அத வாசிக்கறேன், இவன் பீப்பி, நீ பாடு’

‘நா பாடினாலே தாங்காது, இதுல நாம எல்லாரும் ஸ்டேஜ்ல இருந்தா இடிஞ்சே விழுந்துறும்’

வெள்ளியன்று சென்றபோது பூனை குட்டி ஈன்று விட்டிருந்தது.

‘உள்ள போய் பாரு. ரொம்ப கிட்டக்க போகாத, கடிச்சு விட்றும்’ என்ற மாமி, அறை மூலையில் இன்னும் கண் சரியாக திறக்காமல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொண்டு பால் குடிக்கப் பாயும் ஏழு குட்டிகள். ரோமமில்லாத உடல்களின் தோல் சொரசொரவென இருப்பது போல் பார்ப்பதற்கு தெரிந்தது. எங்கள் வீட்டில் உள்ள முயல்கள் போடும் குட்டிகள் முற்றிலும் ரோஸ் நிறத்தில் மிருதுவான சருமத்துடன் இருக்கும், முதற் பார்வைக்கு அணில் குட்டிகளோ அல்லது எலிகளோ என்றுதான் தோன்றும். குட்டிகளைத் தொட நெருங்கி, தாய் பூனையின் பார்வையில் இருந்த நட்பின்மையை கண்டு சற்று விலகி நின்றேன்.

‘தோல தொடலாம்னா மொறச்சு பாக்குது மாமி’ என்றேன்

‘கடசில இந்த ரூம்லதான் குட்டி போட்டுடுச்சு. ஹால்லதான் படுக்க வேண்டிருக்கு’

‘மாமா எங்கருக்கா இப்போ.’

‘சாங்காலமானா கோவிலுக்குப் போய் ஒக்கந்துக்கறார்’

மற்ற பூனைகள் உள்ளறையை நெருங்குகின்றனவா என்பதில்தான் அவருடைய கவனம் அன்று இருந்தது. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, ஹாலில் அமர்ந்தபடி இருவரும் குட்டிகளுக்கு காவலிருந்தோம். ‘துணி எடுத்துண்டு வரேன்’ என்று தூணைப் பிடித்தபடி மெதுவாக எழுந்தார். உள்ளறைக்குச் சென்று மீண்டும் குட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த மாமா பெட்டியில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு கிளம்பினார். குட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை. வெளியே மாமி அவரிடம் ஏதோ கேட்கும் ஒலி மட்டும், மாமாவிடமிருந்து பதில் வந்தாற்போல் தெரியவில்லை. உள்ளே வந்த மாமியின் கையில் மூன்று நான்கு துண்டுகளாக கிழிக்கப்பட்ட பழைய புடவை.

‘சாப்டாம அங்க போய் ஒக்காந்துக்கறார் வரத்துக்கு ஒன்போது பத்தாயிடுது. குட்டிகள தொரத்தி விடுங்கறார், எப்டி அனுப்பற்து சொல்லு’ என்றார்.

‘நா வேணா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குட்டி எடுத்தக்றேன், என் பிரெண்ட்ஸ்டயும் சொல்றேன்’

அடுத்த சில நாட்களில் நன்றாக கண் திறந்த குட்டிகள் மெல்ல நடந்து வெளியே உலவ ஆரம்பித்தன. மாமா மீண்டும் உள்ளறையின் இருளில்.இ ன்னும் சந்தேகப் பார்வை நீங்கவில்லை என்றாலும் மாமியையும் என்னையும் குட்டிகளை தூக்க தாய் பூனை அனுமதித்தது. தண்ணீர் குடிக்க வெளியே வந்தவரிடம் ‘தோ பாருங்கோ, எப்படி தவழற்து’ என்று மாமி சொன்னதை அவர் கண்டு கொள்ளவில்லை. வெள்ளி மாலை மாமியின் வீட்டினுள் நுழையும்போது உள்ளறையில் சத்தம், இருவர் குரலும் உயர்ந்திருந்தது. சில கணங்கள் தயங்கி நின்று பின் ஹாலில் குட்டிகளுடன் விளையாட ஆரம்பித்தேன். வெளியே வந்த மாமி என்னைக் கண்டதும், உள்ளே பார்வையை செலுத்தி விட்டு ‘எப்போ வந்தே’ என்றார்

‘இப்போத்தான் மாமி, சும்மா வெளயாடிட்டிருந்தேன்’

மீண்டும் உள்ளே பார்த்துக் கொண்டே ‘பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, வரேன்’ என்றார்.

‘வேணா மண்டே வரேன் மாமி’

‘வேணாம் கண்ணா தாளிச்சுட்டு மட்டும் வந்துர்றேன், நீ குட்டிகள பாத்துட்டிரு’

வந்தமர்ந்தவர் சுவற்றில் சாய்ந்து இமைகள் மூடியபடி பாட ஆரம்பித்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அருகில் சுற்றிக் கொண்டிருந்த குட்டிகளில் ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளறை பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மெலிதாக கத்த ஆரம்பித்த குட்டியொன்றை மற்றவை தொடர்ந்தன. சீரற்று வெளிவந்த அவற்றின் பலவீனமான குரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் சிதறியும், மாமியின் பாட்டோடு இணைந்து பிரிந்தன. கண்ணைத் திறந்த மாமி பாட்டுப் புத்தகத்தை குட்டிகளின் மீது வீசினார். ‘வத வதனனு பன்னி மாறி பெத்து போடறா, எழவ கொட்றதுகள்’

ஐரீன்

காலத்துகள்

தொடர்ந்து ஐந்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்த  ஸ்டெப்பி கிராப் அன்று பிரெஞ்சு ஓபன் பைனலில்  தோல்வி அடைந்திருந்தார். சென்றாண்டைப் போலவே இந்த வருடமும் நான்கு க்ராண்ட் ஸ்லாம்களையும் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.

‘போன வர்ஷம் அவ ஜெயிச்சதெல்லாம் ப்ளூக்குனுதான் அப்போலேந்து சொல்லிட்டேருக்கேன், ஒலிம்பிக்ஸ் வேற’, அப்பா என்னிடம். க்றிஸ் எவர்ட் ரசிகர்.

கருப்பு வெள்ளையில் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்ற, வாயில் நுழையாத மிக நீளமான பெயர் கொண்ட ஸ்பெயின் நாட்டுப் பெண் அழுது கொண்டிருந்தார். ஸ்டெப்பி அழுவதையும், அவர் பார்வையாளர் பகுதியில் ஏறிக் குதித்து அங்கிருக்கும் அவரது தந்தையைக் கட்டிக்கொள்வதையும் பார்த்ததுதான் அதிகம்.  இன்று டிவி காமிரா அவர் பக்கம் செல்லும்போதெல்லாம் எங்கோ நிலைகுத்தி இருந்த பார்வை. மூன்றாவது செட்டில் வெற்றியின் விளிம்பைத் தொட்ட பின்னான தோல்வி.

எல்லாம் முடிந்து டி.வியை அணைக்கும் நேரத்தில் வீட்டு உரிமையாளர் தண்டபாணி எங்கள் போர்ஷனுக்கு வந்தார். காலை நேரங்களில் கோமணம் மட்டும் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் உள்ள சாக்கடை கால்வாயை நோண்டியபின் மூன்று கீழ் போர்ஷன்கள் வழியாக சிறு நடை, பின் தன் மாடி போர்ஷனுக்குச் சென்று விடுவார். அவருடன் வந்தவர் சிறிய கை கொண்ட, முட்டிக்கு கீழே கொஞ்சம் நீளும், கவுன் அணிந்திருந்தார்.

பெரிய, சின்ன மணியக்காரத் தெரு இரண்டிலும்  இரவு ஆடை, சுடிதார் அணியும் இருவது முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பத்து  பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். தேன் நிறம், விரித்து விடப்பட்ட தலைமுடி, துருத்திக் கொண்டிருக்கும் கன்ன எலும்புகள். கை நரம்புகள் தெரிந்தன. மிசஸ். கோம்ஸ், பள்ளி ஆசிரியை.

‘இவனும் ஒங்க ஸ்கூல்தான்’

‘என்ன க்ளாஸ்?’

‘எய்த்து’

‘ஐ டேக் பார் கே.ஜி’

ரெண்டு தெரு தள்ளிதான் பள்ளி என்பதால் இங்கு குடிவந்திருக்கிறார். இரு பிள்ளைகள்- ராபர்ட், ஐரீன். இருவரும் நல்ல சிவப்பு நிறம்.’நல்ல காலம்டா அவங்க ஹை ஸ்கூலுக்கு எடுக்கல’

‘எப்டியும் மாட்ன நீ, ஸ்கூல்ல சும்மா எதாவது பண்றத பாத்தாக்கூட, வீட்ல சொல்லப் போறாங்க பாரு’.

‘ஆங்க்லோ இண்டியன்தான?’

‘ஆமா’

‘க்ராஸ்ஸு’

‘டேடேய்..’

‘சும்மா சொன்னேன்டா’

‘எங்க வீட்ல தவ்ற மத்த மூணு போர்ஷன்லையும் நான்-வெஜ் உண்ட’

அவர்கள் குடி வந்த இரு நாட்களில் தண்டபாணிக்கும் அவர் மகனுக்கும் வழக்கமான  சண்டை. மாடியில் இருந்து வரும் இரு தரப்பு  வசவுகள், மாமியாரும் மருமகளும் பக்கபலம். மகனுக்கு  நிலையான வேலை கிடையாது. எப்போதும் சிவந்த கண்கள், கலைந்த தலைமுடி. ஓரிரு தடவை தந்தையை அடிக்கச் சென்றதும் உண்டு. பீஸ்ட். இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை. மூன்று போர்ஷன்களில் வரும் வாடகையை

வைத்துதான் குடும்பம் நடக்கிறது.

‘குடி இருக்றவங்க புள்ளிங்க இங்குலீசு மீடியம் படிக்குது, ஏன் புள்ளக்கு என்ன கொறச்சல்?’

‘எளக்காரம்’

‘காச கொடுக்க மாட்டேங்கறான் கம்நேட்டி’

‘வெளில நிக்காத உள்ள வா,’ அம்மா.

‘இங்க ஷிப்ட் பண்ணப்ப எம்பேரன தமிழ் மீடியம்லதான் போட்ருக்கேன், எதுக்கு இங்கிலீஷ்னு கேட்டான்,’ அப்பா.

‘அப்பா குடுக்க மாட்டேங்கறார்னா, ஒழுங்கா வேலைக்காவது போணும்,’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார்

‘எல்லார்க்கும் வேல செய்ற பொண்டாட்டி கடப்பாங்களா’

ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் மூவரின் உச்சரிப்பிற்கு விரைவில் பிடிபட்டு விட்டது. ‘அன்க்கீகீள்’ என்று ராபர்ட் என் தந்தையை அழைப்பதும், கழிவறைக்குச் செல்லும்போது சிறிய பாட்டிலில்  பினாயிலை அவன் எடுத்துச் செல்வதும் சில நாட்களில் புதுமை இழந்தது.

தாம்பரத்தில் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த ஐரீன் காலையில் சீக்கிரமாக கிளம்பி விடுவாள். ராபர்ட் செங்கல்பட்டு கல்லூரியில் இறுதியாண்டு. கல்லூரிக்கு எப்போதும் தடி ஜீன்ஸும் அடர்த்தியான நிறத்தில் காலர் வைத்தடி-ஷர்ட்டும் தான். பள்ளியில் இருந்து நான் திரும்பும் போது ராபர்ட் மட்டும் எதையாவது படித்துக் கொண்டோ, மேற்கத்திய பாடல்களை கேட்டுக் கொண்டோ இரண்டு அறை மட்டுமே கொண்ட அவர்கள் போர்ஷன் வாசலில் அமர்ந்திருப்பான்.

ஆரம்பத்தில் பார்க்கும்போது தலையசைத்தல்கள், ஓரிரு வார்த்தை பரிமாற்றங்கள்  மட்டும். அடுத்த மூன்று வாரங்களில் ஸ்டெப்பி விம்பிள்டன் வென்றதை இருவரும் கொண்டாடினோம்.

‘ராபர்ட் ஆர் பாப்’

‘பாப்ப்பா?’

‘பெட் நேம்’

‘செட் ஆகலையே ராபர்ட்டுக்கு’

‘பாப்பி. ஐ லைக் பாப்’

‘லேடிஸ் நேம் இல்ல?’

‘போத்’

‘இந்த பேர்ல இந்தி படம் வந்த்ருக்கு’

‘தெரியும், நைஸ் சாங்க்ஸ், மாம் லைக்ஸ் தி மூவி எ லாட்’

வீடு திரும்பியபின் அவனுடன் கொஞ்ச நேரம்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்து அவனுடன் சேர்ந்து  தலையாட்டி வைப்பேன். தமிழ், ஹிந்தி திரைப்படப் பாடல்களிடம்  அத்தகைய விலக்கம் இல்லை அவனுக்கு, எங்கள் வீட்டில் உள்ள கேசட்டுக்களை வாங்கி கேட்பான். டப்பா ஸ்கூலுக்கோ, ஸ்ரீனிவாசா  க்ரவுண்ட்டுக்கோ கிரிகெட் ஆடப் போகும்போதும் என்னுடன் வந்து சும்மாவேனும் அமர்ந்திருப்பான்.

அவனையோ, ஐரீனையோ  தேடி யாரும் வருவதில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை  வார நாளொன்றின் மாலையில் ஒருவர் வந்து செல்வார். பெல்டின் மீது பிதுங்கும் பெரிய தொப்பை, நல்ல நிறம், கைகளில் அடர்த்தியாக சுருட்டை சுருட்டையாக  கருப்பு முடிகள்.

‘ஆர் அங்க்கீள் டேவிட்’

ஞாயிறு காலை நூலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்திருந்தேன்.’லெட்ஸ் கோ இன் தி ஆப்டர்நூன்’  என்றான் ராபர்ட்.’அவங் கூட போகாத’ என்றாள் ஐரீன்.

‘தனியா போனா போர் மேன், வெயிட் பார் மீ’

அவனுடனேயே ஒரு மணி வாக்கில் கிளம்பினேன்.

‘பாப் டோன்ட் கெட் ஹிம் இன் ட்ரபுள்’ .

‘வி வில் ஹேவ் பன் டோன்ட் வர்றி’

ஏதோ நூலை படித்துக்  கொண்டு அவன் அமர்ந்திருக்க, நான் புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தேன். கண்காணிப்பாளர் மதிய உணவிற்கு சென்று விட்டார், மீதமிருந்த இரண்டு பேரும் புத்தகங்களை வைத்து விட்டு கிளம்பினார்கள். ராபர்ட்  அறையில் மூலையில் இருந்த அடுக்கிற்கு சென்று இடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பேன்ட்டினுள் செருகிக் கொண்டான். நான் பார்ப்பதை கவனித்து அருகில் வந்து  கண்ணடித்தான். அவன் வயிறு பிதுங்கி இருப்பது போல் தோன்றியது.

‘புக்ஸ் எடுத்துடியா, ஷால் ஐ வெயிட் அவுட்சைட்?’.

‘இல்ல தோ கெளம்பலாம்’ மூன்று கார்டுகளில் ரெண்டிற்கு மட்டும்தான் புத்தகம் எடுத்தேன்.

என்ட்ரி  போட்டுக் கொண்டிருக்கும்போது, ராபர்ட் வெளியே சென்று நின்று கொண்டான். சிறிது தூரம் நடந்த பின் புத்தகத்தை எடுத்து என்னிடம்காட்டி சிரித்தவனிடம், ‘கரெக்ட்டா எப்படி எடுத்த?’

‘வில் கீப் இட் தேர் மேன், தென் சம் டேஸ் லேட்டர் வந்து எடுத்துப்பேன்’

மாதத்தில் ஒரு முறை என்னுடன் நூலகத்திற்கு வருவான். அன்று மட்டும் நான் ஒன்றோ இரண்டோதான் புத்தகங்கள் எடுப்பேன்.

‘கரெக்ட்டா வேணும்னுதானே லஞ்ச் டைம்ல வர’

‘ஆஹ், மை ஷெர்லாக்’

நானும் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு, ‘நோ நோ நீலாம் இத பண்ணக் கூடாது’

‘ஜாலிக்குதான பாப்’

‘தென் ஐ வில் கோ அலோன்’

அந்த ஞாயிறும் ராபர்ட்டும் நானும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு முதியவர் முடிச்சை அவிழ்த்துப் பார்த்து மீண்டும் கட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார்.

‘ஹே, ஆஸ்க் தட் ஓல்ட் மேன் டு ஸ்டாப்’

ஓடிச் சென்று அவரை நிறுத்தினேன்.

‘என்ன தம்பி என்ன வேணும்?’ வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.

இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்டி, ‘கீழ் போட்டீங்க’ என்றான் ராபர்ட்.

முடிச்சை அவிழ்த்து  மீண்டும் பார்த்து ‘நீங்களே எடுத்துக்காம குடுத்தீங்களே’

செட்டித் தெருவை தாண்டி இருந்தோம்.

‘ஏன் சிரிக்கற’

‘ஒண்ணு..ல  ராபர்ட்’

‘யூ  இம்ப்’. அவனும் சிரிக்க ஆரம்பித்தான்.

மண்டையைப் பிளக்கும் மதிய வெயிலில் ஆளரவமற்ற தெருவில் நடந்து கொண்டிருந்தோம்.

இரு வீட்டிலும் அங்கமுத்து திரையரங்கில் மாலைக் காட்சி பார்க்க முடிவு. டிக்கெட் வாங்க நாங்களிருவரும் முன்னதாக வெளிவந்து இரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் நல்ல கூட்டம், பிரபலமான பாடல்கள். நுழைவாயில் படிக்கட்டில் நின்றபடி, ‘ஸ்டே ஹியர்  கீப் எ பேர்ட்ஸ் ஐ வியு பார் தெம், நா டிக்கெட் வாங்கறேன்,’ என்றதில் ‘பேர்ட்ஸ் ஐ வியுவின்’ அர்த்தம் பிடிபட   சில கணங்கள் ஆனது. ஐரீன் அருகே அமர்ந்துதான் படம் பார்த்தேன். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தற்கொலைச் சம்பவங்கள். இரண்டு தடவையும் அவளின்  ‘ஊ’, ‘காட்’.  திரும்பி வரும்போது படத்தின் இசை பற்றி ராபர்ட் பரவசமாக பேசிக் கொண்டிருந்தான். குறிப்பாக நாயகன்-நாயகி நடனமாடும் வரிகள் இல்லாத  இசைக் கோர்வை குறித்து ‘ப்ளட்டி குட்’. ஐரீன் எதுவும் பேசாமல் வந்தாள்.

‘ஹீரோ இஸ் அ லூசர்’

‘பாப், ஹீரோயின் ரெண்டும் கூடத்தான்’

‘ஐரீன் நீ என்ன சொல்ற?’

‘ஷட் அப் பாப்’

‘ஏன் கோவப்பட்ற’

‘வில்லன்ட்ட சண்ட போட்டு செத்தாக்கூட பரவால்ல பாப். வேஸ்ட் இந்தாள், சண்டையே போடத் தெரியாது’ என்று என்னுடைய ஆதர்ச நட்சத்திர நடிகர் அந்தச் சூழலை எப்படி அதிரடியாக  சமாளித்திருப்பார் என்று விவரித்தேன்.

‘கரெக்ட்டா சொல்றான் பார்’

‘இன்சென்சிடிவ் பிக்ஸ் போத் ஆப் யு’

வீடு வந்து சேரும் முன் அவளுடன் இயல்பாக பேசத் துவங்கி இருந்தேன்.

மேட்டுத் தெரு ஐஸ் பால் கடைக்கு சென்று சொம்பில்  குளிர்ந்த பால் வாங்கி வருவது, சின்ன மணியக்கார தையல் கடை என அவளுடன் விடுமுறை நாட்களில் அலைந்தேன். ‘ஒ யூ ஹவ் ப்ரோக்கன் மை ஹார்ட்,’ என்று ஊளையிடுவான் ராபர்ட்.

வீட்டில் பெரியவர்கள்தான் என் பள்ளிக்கு முன்பாக இருக்கும் காப்பி அரைக்கும் கடைக்கு செல்வார்கள்.  இந்த முறை தனியாக சென்று வருவதாக கெஞ்சி அனுமதி பெற்று கொண்டு ஐரீனிடம், அவள் வருகிறாளா என்று கேட்க, அவள் தயார்.

பில்டர் காபி மீது அவளுக்கு பிரியம்.  கடையின் இரண்டாம் படிக்கட்டில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள். கடைக்காரரிடம் அரைக்க வேண்டிய விதம், அளவுகளை  சொன்னேன்.

‘எப்பமே நான்தான் வருவேன் இங்க’

‘நைஸ், க்ரேட் ஸ்மெல், இங்கேயே ஒக்காந்திருக்கலாம் போலிருக்கு’

‘யா’

‘அதுதான் மிஸ் எடுக்கற கிளாஸ்’

‘யுவர்ஸ்’

‘அது மேல, தர்ட் வரைக்கும்தான் இங்க, ஹை ஸ்கூல்லாம் பர்ஸ்ட், செகண்ட் ப்ளோர் ‘

சைக்கிளில் வந்து கொண்டிருந்த கஞ்சாவைப் பார்த்ததும் கடைப்பக்கம் திரும்பினேன். சைக்கிள் பெல் ஓசை.

‘ஹி இஸ் காலிங் யு’

அவனருகில் சென்றேன்.

‘என்னடா’

‘சும்மா வெளில ஒரு ரவுண்ட்’

‘இவங்க தான் மிஸ் பொண்ணா?’

‘ம்ம், சைக்கிள் ப்ரேக்கு சரி இல்லையா? லூசா இருக்கு’

‘இல்லடா’

‘கூப்டறாங்கடா’

‘நீ கெளம்பு’

‘யுவர் பிரெண்ட்?’

ஸ்டாண்ட் போட்டான்.

‘மை கிளாஸ்மேட் கஞ்சா’

‘கஞ்சா?’

‘மை நேம் இஸ் ரகுராமன்’

‘பின்ன ஏன் அப்டி கூப்டற?’

‘சொல்லட்டுமாடா’

‘சும்மா ஜோக்கடிக்கறான்’

‘பட் தேர் மஸ்ட் பி சம் ரீசன் நோ’

‘யா’

‘நாளக்கு இஸ்கூல் வருவேல்ல’

‘ஏன் அவன டீஸ் பண்ற, போய்ட்டான் பாரு’

‘பிரெண்ட்தான’

‘வை இஸ் தட் பாய் ஸ்டேரிங் அட் மீ’

‘தெர்ல, சும்மா நிக்கறான்னு நெனக்கறேன்’

‘டேய் என்னடா இங்கேயே நிக்கற, கெளம்பு போ’

இரண்டடி தள்ளிச் சென்று நின்று தெரு முனையை பார்த்தான்.

‘ஐரீன் கார்னர்ல பாரு’

லுங்கி கட்டிக் கொண்டு இரண்டு இளைஞர்கள், இவர்கள் பக்கம் பார்த்தபடி. ஒருவன் எங்கள்பால்காரம்மாவின் கடைசி மகன். போன வருடம், லுங்கி அவிழ்ந்து மேலே முழுக்கை சட்டையுடன் கையில் பெரிய கம்புடன் அடுத்த தெருவுக்கு ஓட முயற்சித்துக் கொண்டிருந்தவனை

பால்காரம்மாவும் மற்றவர்களும் அடக்கிக் கொண்டிருந்தார்கள். சற்று அமைதியான பின்பும் அவர்கள் கொடுத்த லுங்கியை அணியாமல்

தூக்கி வீசிக் கொண்டிருந்தான். குச்சி குச்சியான கால்கள்.

அந்தச் சிறுவனை அருகே வருமாறு ஐரீன் சைகை காட்டினார்.

‘வாடா ஒண்ணும் பண்ண மாட்டாங்க’

‘ஏன் நிக்கற’

‘இல்லக்கா அவங்கதான்’

‘சொல்ரா’

‘அக்கா பேரு என்ன, வயசு என்னனு கேக்கச் சொன்னாங்க’, நாலணா நாணயத்தை எடுத்துக் காட்டினான்.

‘என்ட்ட நேரா கேக்கச் சொல்லு போ’

‘அதெல்லாம் வேணாம், அக்கா பதில் சொல்லலன்னு மட்டும் போய் சொல்லு’

‘  நீ போய் அப்படியே சொல்லு’

‘ப்ரச்சன ஆயிடும்’

‘நத்திங் வில் ஹேபென்’

திரும்பிச் சென்றவன் அவர்கள் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு ஓடினான்.

‘திக் ப்ரவ்ன், லுக்ஸ் யம்மி’. பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட காபிப் பொடியை வாங்கிய போது உள்ளங்கையில் உஷ்ணம். வீடு செல்லும்வரை இருக்கும்.

‘இது என்ன?’

‘சிக்கரி’ மற்றொரு சிறிய உறையில்.

‘வாட்ஸ் இட், ஊஸ்’

‘இதையும் மிக்ஸ் பண்ணுவாங்க’. வீட்டிற்குச் சென்றவுடன் முழுதாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரு முனையில் வேறெங்கேயோ பார்த்தபடி   பால்காரம்மா பேரனும் அவன் நண்பர்களும்.

‘சைட்ல பாக்காத, லுக் ஸ்ட்ரைட்’

பத்தடி நடப்பதற்குள் சீட்டி ஓசை, உற்சாகச் சிரிப்பு.

‘வேணாம் அவங்க பொறுக்கிங்க’

நான் அங்கேயே நின்று விட்டேன். ஐரீன்   ஏதோ கேட்கிறாள். பதில் இல்லை. மீண்டும்  கை நீட்டி ஏதோ கேட்க, ஏதோ வாயசைக்கிறார்கள்.

அருகே சென்றேன்.

‘சின்னப் பையன்கிட்ட கேக்க சொன்னீங்கள்ல, ஆஸ்க் நவ்’

‘என்னடா சொல்லுது இது?’

‘அது இதுலாம் பேசாத’

‘நீ என்ன சொல்றேன்னு புர்ல’

‘ஓட்றானுங்க பாரு’

‘புல்லீஸ்’

டிசம்பர் மாத மத்தியில் நாடார் கடையில் சிவப்பு கலர் பேப்பர் வாங்கி வெட்டப்பட்டு அவர்கள் போர்ஷன் முன்பும், இயேசு படத்திற்கும் தோரணம். கிறிஸ்த்மஸ் ஸ்டார். நானும் வீட்டில் உள்ள சாய்பாபா படத்தின் சட்டகத்தின்மீது கலர் பேப்பர் ஒட்ட  முயற்சித்து கோந்து சரியாக பதியாமல் அரை மணி நேரத்திற்குள் பாதி ஒட்டியபடி ஊசலாட ஆரம்பித்தது.

‘என் கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் அவங்க வீட்டுக்கு சான்டா, கரோல்ஸ் பாட்றவங்க வருவாங்கன்னு சொல்வாங்க’

‘இங்க சான்டா வருவாரா’

‘ஹன்ட்ரட்ஸ் ஆப் சான்டா’

‘ரீல் வுடாத’

‘ட்ரூ’

‘இந்தளவுக்கு பீலா விடக்கூடாது, ஐரீன் சான்டா வருவாரா’

‘நெக்ஸ்ட் இயர் பாக்கலாம்’

‘பழைய வீட்ல’

‘நோ. சான்டா ஹேட்ஸ் அஸ்’

‘பாப். சும்மா சொல்றான்’

கிறிஸ்த்மஸ்சுக்கு முந்தைய நாள் முன்னிரவு அவர்கள் வீட்டில் பாடல்களுக்கு  ஆட்டம். டேவிட் வந்திருந்தார். அந்த வயதிலும் மிசஸ். கோம்ஸ் டேவிட்டுடன் மெல்லிசை பாடலொன்றுக்கு அசைந்தபடி நன்றாகவே ஆடினார். ராபர்ட்டும் ஐரீனும்  துள்ளலான இசைக்கு. ‘பை தி ரிவர்ஸ்’ என தொடங்கும் பாடலைத் தவிர மற்றனைத்தும் மனதில் தங்காதவை. என்னையும் ஆடச் சொன்னார்கள். சில நிமிடங்கள் உடம்பையும் தலையும் உலுக்கியபின் சென்றமரும்போது சம்பிரதாய கைதட்டல்கள்.

‘அனதர் மைகேல் ஜாக்சன் இன் தி மேக்கிங்’.

மாலை ஐரீனுடன் வெளியே சென்றுவிட்டு  சந்திற்குள் நுழையும்போது பக்கத்து வீட்டு ராட்சஸி கூப்பிட்டார்.

‘ராத்ரி பெரியவர் ஒலாத்தறாரு வீட்டு வாசல்ல, கல்லுப்பு போட்டு வைங்க’

‘ஹவுஸ் ஓனரா’

‘இல்ல, ஸ்னேக்க சொல்றாங்க. நைட் அந்த பேர சொல்லமாட்டங்க’

‘ஹி இஸ் ஏ ஸ்னேக் டூ’

‘ஏன்?’

‘நத்திங்’

‘உப்பு போட்டா வரமாட்டாரு’

‘நாங்க எந்த பாம்பும் பாக்கலையே, என்ன பாம்பு?’

‘பெரியவர் எல்லார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்”

ராட்சஸிக்கு மாந்த்ரீகம் தெரியும் என்ற தெருப்  பேச்சை நம்பச் செய்யும் உருவம். எங்கள் இரு வீட்டிற்கும் பொதுக் கிணறு. ராட்சஸி வீட்டு மா, தென்னை மரங்களுக்கு நிறைய தண்ணீர் செலவாகி  விடுகிறது என்று தண்டபாணி கோடைக் காலங்களில் கிணற்றை தூர் வாரும்போது முணுமுணுப்பார். ராட்சஸியிடம் நேரடியாகச் சொன்னதில்லை.

‘அவங்களுக்கு மேஜிக் தெரியும் ‘

‘விச்?’

‘அப்டித்தான் சொல்றாங்க’

உப்பை வாசலில் போடாவிட்டாலும் எந்த பாம்பும் தென்படவில்லை.

‘எப்டி அவங்கள்ட்ட தைரியமா பேசறீங்க’

‘நீதான் பயமுறுத்தற, எனக்கு எந்த டிப்ரன்ஸ்சும் தெரில’

‘குமாஸ்தாக்கு பர்ஸ்ட் வைப் இருந்தாங்களாம், அதப் பத்திலாம்…’ ராட்சஸி கணவர் வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.

‘ஹு நோஸ், அவங்ளுக்கு எப்டி தெரியும்’

‘…’

‘ஷி இஸ் வெரி லோன்லி அவ்ளோதான்’

மிசஸ். கோம்ஸின் போர்ஷனுக்கு முன் சிறிய கொட்டகை.  தண்டபாணி முன்பு மாடு வளர்த்த இடம். வீட்டை விரிவாக்கி கட்டியபின் கொட்டகையை இடிக்க மனமில்லை. இப்போது குடியிருப்பவர் உபயோகத்திற்கு மாவாட்டும் கல்லும் அம்மிக் கல்லும், அவருடைய வேறு பழைய பொருட்களும். அரைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கோவணத்துடன் கொட்டகையில் இருந்து தண்டபாணி வெளியே வந்து போர்ஷன் வாசலில் நின்று, நெஞ்சை நீவியபடி உள்ளே ஏதோ சொல்லி விட்டுச் சென்றார். வழுக்கை, தொங்கும் மார்பகங்களில் சில வெள்ளை முடிகள், தொந்தி, கருத்த பிருஷ்டங்களில் தேமல்.

‘நாடார் கடக்கு போறேன் எதாவது வாங்கணுமா’

ஐரீன் தோளைக் குலுக்கினாள்.

‘ஹி இஸ் டுயிங் இட் ஆன் பர்பஸ்’

‘மா’

‘இங்க பூச்சி ஜாஸ்தி, போர்த் படிக்கும்போது என்ன நட்டுவாக்கிளி கொட்டிடுச்சு’

‘அப்டின்னா’

‘ஸ்கார்பியன் டைப்’

‘இங்க பாக்க என்ன இருக்கு?’

‘முன்னலாம் அவர் காத்தால மட்டும்தான் இங்கெல்லாம் வருவாரு’

‘ஸீ’

‘நீ கெளம்பு கடேக்கு’

‘டோன்ட் டெல் பாப் மாம்’

டப்பா ஸ்கூலில் விளையாடி விட்டு  வீட்டிற்குத் திரும்பும் போது மிசஸ். கோம்ஸ் போர்ஷனுக்கு முன்பு சண்டை.

‘ஓனர் எங்க வேண்ணாலும் போவான், வீட்டுக்குள்ள வரலல்ல’ தண்டபாணிகூட பீஸ்ட். ராபர்ட் தோளில் வைத்து அழுத்தியபடி ஐரீன்.

‘அதுக்கு இப்டியா வரணும்’

‘ஏம்மா இங்க எதாவது குப்ப அடச்சு கெடக்கான்னு பாக்க வராரு, வேறப்படி வர முடியும்?’

‘நாங்க வீட்ல இருக்கும்போதுதான் மெனி டைம்ஸ் வராரு ‘

‘வேணும்னேவா இங்க வராங்க, நீ இல்லாதப்பதான் வர்னுமா, பெர்சா நீட்டி கேள்வி கேக்கற?’

‘கொஞ்சம் மரியாதையா பேசுங்க’

‘தபார்ம்மா இப்டிதான் பேச வரும், இங்க்லீசுலாம் தெர்யாது’

‘வேணும்னே வந்து வீட்டு முன்னாடி நிக்கறீங்க’

‘நிய்யூ இந்த வவுசுல கவுனு போட்டுட்டு நிக்கற, எவன் எவனோ வூட்டுக்கு வரான் நான் கேக்கறேனா’

‘ராபர்ட், நோ…’ தோளில் கை வைத்து அவனை இழுத்தாள் ஐரீன்.

‘ஒங்கள சொன்னா கோவம் வர்தில்ல’

‘ஹி இஸ் அவர் அங்கிள்’

‘நீதான சொல்ற’

இந்த முறை ராபர்ட் தண்டபாணியை நெருங்கி நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டான்.

‘அடிங்கோத்தா எங்கப்பன.. ‘

தெருவாசிகள் பலர் கூடி விட்டார்கள்.

‘நைனாவ அட்சிட்டான்  ‘

‘அவரு ஊடு என்னமோ பண்றாரு’

‘இஸ்கூல் வாத்தியாரம்மா இப்டி பண்ணுதே’

‘ஓனரையே அடிப்பாங்களாமா’

‘நானே பாத்திருக்கேன் இந்தாளு  இங்க அப்பப்ப வர்த அத கேக்க மாட்டேங்கறீங்க,’ ராட்சஸி.

‘மாய்மாலம் பண்ணி வீட்ல ஒட்டிக்கிட்டவ பேசறா’ தள்ளிச் சென்று தண்டபாணி முணுமுணுத்ததோடு சரி, யாரும் நேரடியாக ராட்சஸியிடம் பேசவில்லை.

அப்பா பேசிப் பார்த்தார்.

‘அவங்களுக்கும் நமக்கு சரிப்பட்டு வராது, காலி பண்ண சொல்லிடுங்க ஸார்’

‘ஏதோ கோவத்துல ரெண்டு சைட்லயும் பேசிட்டீங்க’

‘இல்லங்க ஸார் இதுங்களுக்கெல்லாம் வூட கொட்த்தருக்க கூடாது ஸாரு, ரெண்டுங்கெட்டான்’

மீண்டும்  ராபர்ட்டை அடக்கினார்கள்.

‘தோ இதுதான் சொல்றேன், காலி பண்ண சொல்லுங்க’

‘லச்சரஸ் பகர்’ என்று ராபர்ட் கத்திக் கொண்டிருந்தான்.

‘இங்கிலீசு பேசுனா மட்டும் போதுமா?’

‘அவ்ங்க அவங்க ஆளுங்களோட கூத்தடிக்கட்டும்’

அந்த மாத முடிவிலேயே காலி செய்து குடி புக வேறு வீடு டேவிட் ஏற்பாட்டில் கிடைத்து விட்டது. கிளம்ப இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும்போது

அவர்கள் போர்ஷனுக்கு சென்றேன்.  இரண்டு  சூட்கேஸ்களில் துணிகளை திணித்துக் கொண்டிருந்தார்கள் மிசஸ். கோம்சும் ஐரீன்வும்.

‘என்னடா?’

‘ஹெல்ப் பண்ணட்டுமா?’

‘வேணாம், தேங்க்ஸ்’

சூட்கேஸை மூட அதன் மேல் பகுதியில் வலுவான அடி.

‘பார்பேரியன்ஸ்’

‘மா’

‘இட்ஸ் தி ட்ருத்’

‘நீ கெளம்புடா’

‘இட் வாஸ் அ மிஸ்டேக் டு கம் ஹியர் ‘

‘போயிட்டு அப்பறம் வா’

‘திஸ் இஸ் நாட் அவர் பிளேஸ்’

‘வாட் இஸ், மாம்?’

அமிழ்தல்

காலத்துகள்

இருப்பதிலேயே தனக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு பேண்ட்டின் ப்ளீட்டை நீவி விட்டான். தலை வாரிக்கொள்ளும்போது ‘பங்க்’ கட் தனக்கு சரி வராதது குறித்த விசனமும், நேர்க்கோடு, பக்கவகிடில் எது தனக்கு எடுப்பாக உள்ளது என்ற வழக்கமான சந்தேகமும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து சந்துருவுக்காகக் காத்திருந்தான். இன்று தசரா சந்தையில் அவள் எதிர்பட நிறைய வாய்ப்புள்ளது என்ற எண்ணமே உற்சாகம் தந்தது. ‘என்னடா மூணு நாளா தினோம் தினோம் வேற வேற டிரஸ்ஸு’ என்றபடி சந்துரு சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தினான். இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கும் பேங்க் ஆபிசரின் மூன்று பெண்கள் கிளம்பத் தயாராகி அடுத்தடுத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், ‘பார் சார்ட் மாதிரி நிக்கறாங்கடா,” என்றான். சேலை அணிந்திருந்த மூத்த பெண் ஜாக்கெட்டின் கைப்பிடிப்பையும் கொசுவத்தையும் நீவியபடி இருந்தாள், முகத்தில் வெட்கப் பூரிப்பு, கண்கள் தெருவைச் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

தெரு முனையை அடையும்போது இறுதி வீட்டின் வாசலில் ‘தலைவர்’ வந்து நின்றார். செங்கல்பட்டிற்கு குடிவந்த இந்த பத்து வருடங்களாக அவரைப் பார்த்து வருபவனுக்கு அந்த மிகப் புகழ்பெற்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி மற்றும் வேட்டி சட்டை எப்போதும் அணிந்திருக்கும் ஆசாமியை முதன்முதலில் பார்த்தபோது ஏற்பட்ட வியப்பு இப்போது இல்லாது போனாலும் அவரைக் காணும் முதல் கணம் ஏற்படும் துணுக்குறுதல் மட்டும் நீங்கவே இல்லை. தலைவர் காலமாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இந்த ஆசாமி தலைவராக செங்கல்பட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வீட்டின் கதவில் நிஜத் தலைவர் கையில் பேனாவுடன் சிந்தித்தபடி இருக்கும் பிரபலமான வண்ணப் புகைப்படம் இருந்தது. அதில் மிக வசீகரமாகத் தோற்றமளிப்பார். இந்த ஆசாமி உடைகளை மாற்றியெல்லாம்கூட தலைவரின் வசீகரத்தைப் பெறா முடியாவிட்டாலும், அவர் நடப்பது, சைக்கிளில் செல்வது எல்லாம் மிதப்பது போலவே இருக்கும். இத்தனை நாசூக்குடன் எந்த வேலைக்குச் செல்ல முடியும்? அவரின் உடைக்கு விழுந்தடித்து ஓடுவதெல்லாம் சாத்தியமும் இல்லை. வீட்டில் இருந்தபடி புறா வளர்த்தல், விற்றல் தவிர என்ன வருமானம் உள்ளது, எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பதெல்லாம் புதிர்தான்.

அவரைத் தாண்டிச் சென்றபின், ‘என்னடா இன்னும் இந்த ஆள் இப்படியே ட்ரெஸ் பண்ணிக்கறார், நைட்டாவது டிரெஸ்ஸ மாத்துவாரோ என்னமோ’ என்று இவன் சிரித்தபடிச் சொல்ல, ‘அப்பகூட கெடயாதுடா, முக்கியமா அப்பத்தான்’ என்று சொல்லி நிறுத்தினான் சந்துரு. இவன் சந்துருவைப் பார்க்க, ‘அவர் மட்டும்ல, அவர் வைப்பும் ரொம்ப பெரிய பேன்டா’ என்று சொல்லி கண்ணடித்தான். ‘அதுக்கு?’ என்று கேட்டவனைப் பார்த்து சந்துரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவுடன் இவனுக்கு விளங்கியது.

‘சும்மா ஒளராதடா’

‘சத்தியமாடா’

‘ஆமா நீ பாத்த’

‘இல்லடா முரளிண்ணண் சொன்னார்டா’

‘அவர் மட்டும் பாத்தாறாக்கும்’

பேசியபடி சின்ன மேட்டின் மீதேறி ராமர் கோவில் குளத்தினருகே வந்தார்கள். மறுமுனையில் இருந்த மேட்டுத் தெருவில் தசரா சந்தை களைகட்டத் தொடங்கி இருந்தது அங்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தற்காலிக ட்யூப் லைட்களின் வெளிச்சத்தில் தெரிந்தது. பொதுவாக மாலை நேரங்களில் அமானுஷ்ய உணர்வைத் தரும் குளமருகே இருந்த பெரிய ஆலமரமும் கூட அவ்வெளிச்சத்தில் அச்சுறுத்துவதாக இல்லை. மரமருகே அருகில் இருந்த மாவு அரைப்பு கிடங்கு மூடப்பட்டிருக்க அதன் திண்ணையில் சேட் அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்துரு
‘இவனப் பாத்தா சேட் மாதிரியே இல்லையேடா’ என்று சொல்ல, ‘டேய் சேட்னா சேட் மட்டும்தானாடா, முஸ்லிம் கூட வெச்சுப்பாங்க’ என்றான் இவன்.

‘என்னடா சொல்ற, நெஜமாவா’

‘ஆமாண்டா இவன் முஸ்லிம்டா பெரிய பணக்கார குடும்பம் போல, சின்ன வயசுல அப்பா, அம்மா செத்துட்டாங்க, அப்பறம் சொந்தக்காரங்க இவன வெரட்டிட்டாங்க’

‘யார்ரா சொன்னா?’

‘தெருல அப்படித்தான் பேசிக்கறாங்க’

சேட்டையும் கிட்டத்தட்ட தலைவரைப் போல் இவன் இங்கு குடி வந்ததிலிருந்தே பார்க்கிறான். உடலமைப்பிலோ, முகத்திலோ இத்தனை வருடங்களில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்று தோன்றியது. அதே கனிவான, முதிரா இளமை கொண்ட – எப்போது பார்த்தாலும் இருபதுகளைத் தாண்டாதது போல் தோற்றமளிக்கும் – முகம்,இவனை ஏமாற்றுவது ஒன்றும் கடினமல்ல என்று நினைக்கத் தோன்றும். சேட் பேசியோ, யாசகம் கேட்டோ இவன் பார்த்ததில்லை, ஆனாலும் எப்படியோ உணவு கிடைத்து விடுகிறது. மிக மெதுவாக இலையிலிருந்து கவளம் கவளமாக எடுத்து சேட் உண்வதை இவன் பார்த்திருக்கிறான். தொய்ந்து போன சட்டை லுங்கிதான் ஆடை,எப்போதும் மொட்டைத் தலைதான். யார் ஆடைகளை அளிக்கிறார்கள், முடி வெட்டுகிறார்கள் என்பதும் தெரியாது. அழுகையோ, சிரிப்போ, தனக்குத் தானே பேசிக்கொள்வதோ எதுவும் இல்லாமல் மிதமான நடையில் தெருக்களில் வலம் வருபவன், எங்கு வேண்டுமானாலும் உறங்கி விடுவான்.

மேட்டுத் தெருவை அடைந்தவுடன் ‘இந்த சைட்ல கம்மியாத்தான் கடங்க இருக்கும்டா’, என்று சொன்னவனை, ‘பரவால்ல, மொதல்ல இப்படி ஆரம்பிக்கலாம் வா, எல்லாம் தெரியும்’, என்று இடது புறம் திருப்பினான் சந்துரு. இவன் வீட்டிலிருந்து ஏழெட்டு நிமிடத்திற்குள் வரக்கூடிய மேட்டுத் தெருவின் இந்தப் பகுதிக்கு இவன் பெரும்பாலும் வருவதில்லை.. சிறிது தூரம் நடந்தவுடன் அம்பாஸிடர் கார் நிறுத்தப்பட்டிருக்க, அருகே நந்தியாவட்டை மலர்கள் பூத்திருந்த இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த வீட்டைக் கடக்கும்போது எப்போதும் போல் அசௌகர்ய உணர்வு. வகுப்பறை சூழலில் அவனுள் இருக்கும் தன்மதிப்பு இத்தகைய நேரங்களில் அனிச்சையாக ஆட்டம் கண்டு விடுகிறது. சில மாதங்களுக்கு முன் பொதுக் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் நிரப்பி தோளில் சுமந்து வந்துகொண்டிருந்தபோது அவள் எதிரே வந்தது நினைவுக்கு வந்தது.

‘போறும்டா அந்தப் பக்கம் போலாம்’, என்று திரும்ப, ‘அப்பறம் என்னத்துக்கு மூணு நாளா வர’ என்றான் சந்துரு. பிளாஸ்டிக் வளையத்தை வீசி அதனுள் சிக்கும் பொருட்களை பெறக்கூடிய கடையின் அருகே நின்றார்கள். வளையங்களை வீசுபவர்களில் பெரும்பாலானோருக்கு மூன்றில் ஒன்றுகூட சிக்கவில்லை. இவர்களைவிட ரெண்டு மூன்று வயது சிறிய பெண்கள் வந்து நின்று அவ்விளையாட்டில் பங்கேற்க தேவையான ஐந்து ரூபாயை செலவு செய்வதின் தேவை குறித்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். ‘எதுக்குடா வீண் செலவு’ என்று சந்துரு சொன்னதைக் கேட்காமல், ஐந்து ரூபாய் செலுத்தி மூன்று வளையங்களை பெற்றுக்கொண்டான். க்ளிப் ஒன்றும், சீப்பு ஒன்றும் சிக்க, அந்தப் பெண்கள் இவன் அவற்றைப் பெற்றுக்கொள்வதை கவனிப்பதைக் கண்டு மீண்டும் உற்சாகமாக உணர்ந்தான். ‘எல்லாம் கர்ல்ஸ் ஐட்டம்ல, நீ வெச்சு என்ன பண்ணப் போற?’ என்று கேட்ட சந்துரு, இவன் பார்வையையின் திசையை கவனித்து, ‘டேய் த்ரோகம் பண்ணாதடா’ என்று சிரித்தபடி சொன்னான்.

பெண்களுக்கான கடைகளில் விசேஷ கவனம் செலுத்தியபடி வந்து கொண்டிருந்தவன் சற்று தள்ளி இருந்த மாயஜால அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தவர்களை பார்த்து சந்துருவை இழுத்துக்கொண்டு அங்கே விரைந்தான். அரங்குக்கு வெளியே இருந்த நாக, கடல் கன்னிகளின் ஓவியங்கள் இப்போதெல்லாம் வியப்பையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை. இரண்டு ருபாய் கட்டணம் செலுத்தி நுழைந்து உள்ளே அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட, அது வேறு யாரோ. தடிமனான துணியால் நெய்யப்பட்ட கூடாரம் கதகதப்பாக இருக்க, துணியின் மணமும், மணலின் மணமும் கலந்த ஈரம் தோய்ந்த வாடை அடித்தது. ட்யூப்லைட்டை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சீட்டுக்கட்டை வைத்தும் காகித மலர்களைக் கொண்டும் சில வழக்கமான தந்திரங்களை மாயாஜால நிபுணர் நிகழ்த்திக் காட்டியப் பின் சிறுவனொருவனை மேடைக்கு அழைத்து தண்ணீர் குடிக்கச் செய்து, பின் அவன் கால்களுக்கிடையில் டம்ளரை வைக்க அது நிரம்பியதைக் கண்டு அரங்கில் ஆரவாரம்.இவர்களின் வயதே இருக்கக்கூடிய உதவியாள பெண்ணை தற்காலிக மேடையின் ஒரு செயற்கை தூணின் மீது கட்டி வைத்து திரையை மூடி சில நொடிகள் கழித்து திறக்க அவள் இப்போது வேறொரு தூணில் கட்டப்பட்டிருந்தாள். இதே போல் நான்கு முறை நடக்க, இப்போது மீண்டும் ஆரம்பித்த தூணில் கட்டப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் திரை விலக்கப்படும்போது அப்பெண்ணின் முகம் எந்த அயர்ச்சியும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

இவன் தவறாக அடையாளம் கண்டிருந்த பெண் மெல்லிய கழுத்துச் சங்கிலியை கவ்வியபடி கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் உதட்டிற்கு மேல் ஈர மினுமினுப்பையும், கன்னத்தில் உருவாகியிருந்த ஒற்றைக்கோட்டு வியர்வை பாதையையும் பார்த்தவன் நாவால் உதட்டை வருடினான். கண்களை மூடினால் அவள் மணத்தை நுகர முடியும் என்று நினைத்தவனுக்கு, சில நிமிடங்கள் கால் மேல் கால் போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. பின் தன்னை மீட்டு கவனத்தை மீண்டும் நிகழ்ச்சியில் செலுத்தினான்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வர, வெளியே அடுத்த ஷோவிற்கு மனைவி, குழந்தையுடன் காத்திருந்த நாடார், ‘என்ன மேன், ஷோ எப்டி’ என்றார். ‘பரவால்ல நாடார்,பாக்கலாம்’. ‘சனிக் கெழம மத்தியானம் மட்டும்தாண்டா மனுஷன் கொஞ்சம் ப்ரீயா இருக்கார்’ என்றான் சந்துரு. ஞாயிறு முதற்கொண்டு தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்து இரவு பத்து மணிக்கு முன்பாக மூடாதவரை, சனிக்கிழமை மாலை மட்டும் செங்கல்பட்டின் ஏதேனும் திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க முடியும். சனி அன்று ஐந்தரை மணி அளவில் அவர் தனியாளாக சைக்கிளில் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதில் இருந்து, திருமணமாகி மனைவியுடன் டி.வி.எஸ் பிப்டியில் செல்ல ஆரம்பித்து, பின் இப்போது மகனுடன் ‘ட்ரிபிள்ஸ்’ அடித்தபடி செல்வதை இவன் பார்த்து வருகிறான். இன்று ஒரு மாற்றாக தசரா.

‘நாடார் வீட்ல டிவி இருக்குமாடா, வெச்சிருந்தாலும் வேஸ்ட்ல ‘

அதிகரித்தபடி இருந்த கூட்டத்தினூடே நடந்து கொண்டிருந்தவர்கள் ராமையா டிபன் கடையிலிருந்து வந்த எண்ணை வாடையினால் ஈர்க்கபப்ட்டு அங்கே சென்றார்கள்.முட்டிக்கு மேல் மடித்து கட்டப்பட்ட லுங்கி, வியர்வையில் உடலுடன் ஒட்டியிருந்த வெள்ளை பனியனுக்கு ஈடுகொடுக்கும் வெள்ளை மீசை தலைமுடியுடன் ராமையா அலுமினிய பாத்திரத்தில் இருந்த மாவில் கையை விட்டு எடுத்து எண்ணைச் சட்டியில் போட்டு பொரித்துக் கொண்டிருந்தார். மலம் கழித்தபின் கோவில் குளத்தில் கால் கழுவி விட்டு அவர் நேராக கடைக்குச் செல்வதை பார்த்த நினைவுகளை அகற்ற முயன்றான். ஆளுக்கு சில வடைகள் வாங்கி வெளியே பெஞ்ச்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சாம்பல் நிற பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஒருவர் கடைக்கு வருவதை பார்த்தவன், ‘டேய் இவர நான் பாத்ருக்கேண்டா ‘ என்று ஆச்சரிய குரலெழுப்பினான்.

தலைமுடி அங்கங்கே கொத்து கொத்தாக தலையெங்கும் சின்னஞ் சிறு கொம்புகள் முளைத்தது போல் விறைத்திருந்தது. சட்டையும், பேண்ட்டும் கசங்கி அழுக்கு படிந்திருந்தன. வெண் புள்ளிகள் போல் முகத்தில் தாடியின் ஆரம்பம். உள்ளே சென்று கடைக்காரரிடம் ஏதோ கேட்டவர் பின்பு அவரிடம் கெஞ்சுவது தெரிந்தது.

‘இவர நான் நெறய மொற சின்ன மணியக்கார தெருல பாத்ருக்கேன். இதே கலர் பாண்ட் சட்டதான் போட்ருப்பார், ஆனா பக்கா க்ளீனா இருக்கும்டா. நான் சைக்கிள்ள அவர க்ராஸ் பண்ணும்போதே டக்குனு தெரியும். தலைமுடி அழுத்தி படிஞ்சு வாரி இருக்கும். ‘

ராமையா என்ன நினைத்தாரோ, அவர் கேட்டதற்கு ஒப்புக்கொண்டு பொட்டலம் கட்ட ஆரம்பித்தார். சட்டைப் பையில் இருந்த பணத்தை எண்ணாமல் அப்படியே கொடுத்து பொட்டலத்தை வாங்கியவர் நாலைந்து அடி தள்ளிச் சென்று சாக்கடையருகே இருந்த காலி இடத்தில் வடைகளை அள்ளி வைத்தார். அங்கு நின்றிருந்த நாய்கள் அவருடன் வந்தவை என புரிந்தது.

‘என்னமா சாப்டுது பாரு’.

அந்த ஆசாமி செய்வதைப் பார்த்தபடி கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, சிலர் அங்கே நிற்க ஆரம்பித்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமையா எழுந்து வந்து, ‘ஸார், நீங்க பாட்டுக்கு கொடுத்துட்டு போய்டுவீங்க, அப்பறம் இதுங்க இங்கயே சுத்திகிட்டு இருக்கும், கொஞ்சம் அசந்தா புடிங்கிட்டு பூடும், எனக்குதான் ப்ரச்சன. தள்ளிப் போய் எதுவானாலும் குடுங்க, இதுக்கு தான் காச கொறக்க கேட்டீங்களா, ஒங்களுக்கு கேக்கரீங்கன்னுல நெனச்சேன்’ என்றார். அம்மனிதர் எதுவும் பேசாமல் பொட்டலத்துடன் நகர நாய்கள் அவர் பின்னே சென்றன. அவர் பின்னால் போகப் போனவனை பிடித்த சந்துரு ‘எங்கடா போற’, என்றான்.

‘இல்ல அவர் எங்க போறார்னு’ என்று ஆரம்பித்தவனை இடைமறித்து ‘ஒனக்கு அவர தெரியாதுல்ல’ என்றான் சந்துரு.

‘இல்லடா ரோட்ல போம்போது பாத்திருக்கேன் அவ்ளோதான்’

‘அப்பறம் என்ன’

‘அப்டி இல்லடா அவர பாக்கறப்ப காலேஜ் ப்ரொபசர் லுக் இருக்கும். எப்பவுமே புல் ஹேண்ட் சட்டதான், அத கரெக்டா எல்போ வரிக்கும் மடிச்சு விட்றுப்பார். இப்போ பாரு ஒரு சைட்ல சட்ட நீட்டிக்கிட்டு, தலைமுடி கலஞ்சு பாக்கவே பிசாசு புடிச்சவன் மாதிரி இருக்கார்’

‘இந்த மாதிரிலாம் திடீர்னு ஆச்சுனா பேமிலில எதாவது பெரிய ப்ரச்சனையா இருக்கும், நீ ரொம்ப திங்க் பண்ணாத, இவர் பின்னாடி போனா மிஸ் பண்ணிடுவ.’ என்று சொல்லியபடி சந்துரு இவனை இழுத்துச் சென்றான்.

தலைவரின் மனைவி வளையல் செட்டொன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க தலைவர் ‘என்னய்யா அஞ்சு ரூபா சொல்ற, மூணு ரூபா தரேன்’ என்று அதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கடையில் நின்றிருந்தவர்கள் அவரை தாங்கள் கவனிப்பது தெரியாமல் இருக்க முயன்று கொண்டிருந்தார்கள். பேரம் பேசும்போது இருக்கும் எச்சரிக்கை உணர்வு, கறார்த்தன்மை எதுவும் கடைக்கரரிடமும் இல்லை, அவர் முகத்தில் வியர்வையை மீறிய மலர்ச்சி தெரிந்தது. தலைவர் கேட்ட விலைக்கு கொடுத்தும் விட்டார்.

அவர் மனைவியுடன் செல்வதை பார்த்தவாறே ‘பாத்தியாடா, ட்ரெஸ்தான் தலைவர் மாதிரி, பிசினாறிப் பய’ என்று ஆரம்பித்த சந்துரு, ‘நாலஞ்சு மாசம் முன்ன சித்தப்பா புறா வாங்க இவர் ஊட்டுக்குப் போனாரு, பத்து ரூபா கொறஞ்சு போச்சு, கோவில் பக்கத்துல தான் வீடு, புறாவ தாங்க, வீட்ல வுட்டுட்டு எடுத்துட்டு வரேன்னு சொன்னாரு,ஆளு கேக்கலையே, என்னடா நம்ம தெருலேந்து அஞ்சு நிமிஷம்கூட ஆகாது திரும்பி வர, சித்தப்பாவ வேற அங்கிங்க பாத்திருக்காரு அவரு, தெரிஞ்ச மொகம்தான்,அப்படியும் தரலையே’ என்று பொருமி முடித்தான்.

‘அதனாலத்தான் சாயங்காலம் அப்படி சொன்னியாடா’

‘டேய் அது வேறடா, சத்தியமா உண்மைடா அது, நீ வேணா நைட் வந்து செக் பண்ணு, வளையல்லாம் வாங்கி தந்துருக்கார், நைட் ஷோ கண்டிப்பா உண்டு இன்னிக்கி’

‘ஏண்டா, அதை ஏண்டா நான் போய் பாக்கணும், வேணா நீ போ’

‘முரளியண்ணன் சொன்னது கரெக்டான்னு செக் பண்ணலாம்ல ‘

‘எதுவும் இன்ட்ரஸ்ட் இல்லாம தான் சாங்கலத்துலேந்து அலஞ்சுட்டிருக்கியாக்கும்”

அவர் அந்தக் கூட்டத்திலும் நாசூக்குடன் நடந்து செல்வதையும், அவரைப் பார்ப்பவர்களுக்கு தன்னிச்சையாக ஒரு கணமேனும் குழப்பமும், அவர்களை மீறிய பவ்யமும் ஏற்படுவதையும், பின் ஓரக்கண்ணால் பார்த்தபடி அவரைக் கடந்து செல்வதையும் கவனித்தார்கள்.. அவர் மக்களைப் பார்த்து கும்பிடு போடாததுதான் பாக்கி, மற்றபடி அரசனொருவன் நகர்வலம் செல்லும் பாவனைதான் அவர் நடையில் தெரிந்தது. ‘இதுக்குத்தான் இந்த மாதிரி ட்ரெஸ் போடறார்டா’ என்றான் சந்துரு. ‘அப்போ அவரு வைப் மேட்டர்’ என்று இவன் கேட்க ‘ஒருவேளை அவர் பொண்டாட்டி சொல்லித்தான் இப்படி பண்றாரோ’ என சந்துரு சொன்னான். அவர் மனைவியும் கணவனின் கைகளைப் பற்றியபடி ஏதோ பேசியபடியே செல்வதைப் பார்த்தால் அவரும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பது தெரிந்தது. ‘இன்னிக்கு நாலஞ்சு நைட் ஷோ இருக்கும்டா’ என்றான் இவன். ‘ஐயோ செத்தார்டா’ என சந்துரு சொல்ல மீண்டும் சிரிப்பு.

இரண்டாம் முறை சுற்றி வரும்போது ராமையா கடையின் முன் இரண்டு நாய்கள். ‘நீ சொன்ன ஆள உட்ருச்சு’ என்றான் சந்துரு. நாடார் பேசிச் சிரித்தபடி குடும்பத்துடன் முன்னே சென்று கொண்டிருந்தார். வழியில் அரசமரத்தின் கீழ் வெண் களிமண்ணில் செய்யப்பட்ட அம்மனின் தலை மற்றும் வேறு சில கடவுள் ஓவியங்களைக் கொண்ட, பூசாரி யாரும் இல்லாத, தகரக் கூரை மட்டுமே உடைய வழிபாட்டு இடம். பக்தர்கள் தங்கள் குறைகளை நேரடியாக அம்மனிடம் சொல்லிக் கொள்ளலாம். கடை விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மன் தலை அருகே வயதான பெண் உட்கார்ந்து கொண்டிருக்க, அவர் வாய் அசைந்து கொண்டிருப்பதும், தன் கைகளை அம்மனின் முகத்தின் முன் நீட்டியபடி அசைத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மரத்தைக் கடக்கும்போது அவர் முகத்தில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கவனித்தான். வீட்டிற்குத் திரும்பலாம் என்று இவன் சொல்ல, மீண்டும் அவள் வீட்டிற்கு சற்று முன் நின்றிருந்த ராட்டினத்திற்கு அருகே அழைத்துச் சென்ற சந்துரு, ‘இன்னும் கொஞ்சம் தள்ளி இத நிறுத்திருக்கலாம்’ என்றான். கேட் மூடி இருந்த வீட்டில் இருந்து பார்வையை அகற்றி ராட்டினத்தை சுற்றி இருந்தவர்களை கவனித்தான்.

சிறுவனொருவன் ராட்டினம் சுழற்றுபவரிடம், ‘ண்ணா, எட்டணாதான் இருக்குண்ணா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவரிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறான் போலிருந்தது. எரிச்சலான தொனியில் ‘எட்ணாக்கு பாதி சூத்தைதான் வெக்க முடியும்’ என்று மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லி விட்டார். சுற்றி நின்றவர்கள் சிரிக்க, யார் பார்வையையும் சந்திக்காமல் அங்கிருந்து விரைந்து சென்ற அந்தப் பையனைக் கூப்பிட்டு காசு கொடுக்கலாமா என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கூட்டத்தினுள் மறைந்துவிட்டான்.

திடீரென மூக்கையடைக்கும் துர்நாற்றம். அருகில் சேட். சந்துருவுடன் கொஞ்சம் விலகி நின்றான். சேட் ராட்டினம் சுற்றுவதையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த அதன் உரிமையாளர் ‘என்னப்பா ஒனக்கும் இந்த வயசுல ஏறணுமா’ என்றார். சேட் எதுவும் சொல்லாமல் நிற்க, அவனைக் கூர்ந்து பார்த்தபடி சுழற்றிக் கொண்டிருந்தார்.அந்தச் சுற்று முடிந்து ராட்டினம் நிற்க, குழந்தைகள் இறங்கினார்கள். சேட்டின் மேலுடம்பு மட்டும் தன்னிச்சையாக செயல்படுவதைப் போல, கால் நகராமல், கொஞ்சமே கொஞ்சம் முன்சென்று மீண்டும் நிமிர்வதை பார்த்தான்.

‘சேட் வாங்கி கட்டிக்கப் போறான்டா’ என்றான் சந்துரு. புதிதாக குழந்தைகள் ஏற ஆரம்பிக்க, சுழற்றுபவர் ‘நீயும் ஏறிக்க’ என்றார் சேட்டிடம். ஒன்றும் சொல்லாமல் இருந்த சேட்டிடம் மீண்டும் அதையே சொல்லியபின் அவன் பெரும் எடையை சுமப்பவன் போல் தயங்கித் தயங்கி ராட்டினத்தின் அருகில் சென்றான். ஏறாமல் நின்றுகொண்டிருண்டவனின் தோளைப் பற்றி முன்னெத்தி அவர் ஏற்றிவிட, அவன் அந்த சிறிய இடத்திற்குள் தன்னை பொருத்திக் கொண்டான். ராட்டினம் சுழன்று மேலே செல்லும்போது சேட்டின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி கீழே வரும்போது இல்லை.

சற்று நேரம் முன்பு அவமானப்பட்டுச் சென்ற சிறுவன் திரும்பி வந்து கொண்டிருந்தான், முகம் மலர்ந்திருந்தது. ராட்டினத்தின் பக்கம் திரும்பக்கூடச் செய்யாமல் கடந்து சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் அவள் வீடும் இருந்தது. நுரை குமிழிகளை உமிழும் வஸ்துவினுள் ஊதி குமிழிகளை உற்பத்தி செய்து, பின் அவற்றை அவன் விரலால் தொட அவை உடைந்து சிதறிக் கொண்டிருந்தன. நுரைக்குமிழிகள் உருவாதல், உடனேயே சிதைதல், மீண்டும் உருவாதல் என அதே சுழற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. உடல் எடை அனைத்தையும் இழந்தது போல் மிகவும் தளர்ச்சியாக உணர்ந்தான். வெறுமையாக இருந்தது.

‘இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா, இவ்ளோ நேரம் இருந்துட்டு கடசில வேஸ்ட் பண்ணி ஓடாத’, என்று சந்துரு கேட்டதற்கு பதில் சொல்லாமல் நடந்தவன், குளத்தைத்தாண்டும்போது க்ளிப்பையும், சீப்பையும் அதனுள் தூக்கி எறிந்து, நீரில் வட்ட சிற்றலைகள் தோன்றி அமிழ்வதை பார்த்தபடி நின்றிருந்தான்.

‘இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் -2: ஆயிரத்து இரண்டாம் இரவின் கதை’

– ஆர். அஜய்-

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் கேட்டபின் மனம் மாறி ஷெரியார் (Shahryar)  ஷஹேரேசாதவுடன் (Scheherazade) இனிமையான இல்வாழ்க்கை நடத்தினார் என்று ‘அரேபிய இரவுகள்‘ முடிகின்றன (இந்த ஆயிரத்தொரு இரவு காலகட்டத்தில் கதை சொல்லல்/ கேட்டல் இவற்றினூடே மூன்று குழந்தைகள் ஷஹேரேசாத/ ஷெரியார் தம்பதியருக்கு பிறந்தன என்பதையும் நினைவில் கொள்வோம்). அதன்பின் அவர்களுடைய இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும்?  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி நீங்கியபின், தினமும் அரசனை மகிழ்விக்கும் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இனி இல்லாத நிலையில் ஷஹேரேசாத அடுத்த இரவை எப்படி கழித்திருப்பார்? உறக்கமில்லாமல் கதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் நிம்மதியான இரவுத் தூக்கத்தை எதிர்நோக்கி காத்திருந்திருப்பாரா அல்லது ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதற்கு ஏற்ப மேலும் கதைகளை உருவாக்கி இருப்பாரா? எட்கர் ஆலன் போ, ஆயிரத்தி இரண்டாவது இரவிலும் ஷஹேரேசாத இன்னொரு கதையை சொல்வதாக ‘The Thousand-And-Second Tale of Scheherazade‘ ல் புனைகிறார்.

போவின் புகழ் பெற்ற ஆக்கங்களைப் படித்து அவருடையது மிக இருண்மையான உலகம் என (சரியான) புரிதலில் இருப்பவர்களுக்கு இந்தக் கதையில் உள்ள மெல்லிய நகைச்சுவை புதிதாக இருக்கக்கூடும். அந்தப்புரத்தில் உள்ள அனைத்து கன்னிகளையும் கொன்று விடுவதாக தன் தாடியின் மீது ஷெரியார் உறுதி எடுக்கிறார். அவரை தைரியமாக மணம் முடிக்கும் ஷஹேரேசாத கணவனை உறக்கத்தில் இருந்து எழுப்பும்போது அவன் அவளைக் கடிந்து கொள்வதில்லை என்பதற்கு பாசம் காரணமல்ல, ‘… who bore her none the worse will because he intended to wring her neck on the morrow, …‘  என்பதுதான். தன் கணவன் குறட்டை விடுவதைப் பற்றிய மனத்தாங்கலும் ஷஹேரேசாதவுக்கு உள்ளது. எல்லாம் சுபமாக முடிந்த பின்பு, ஆயிரத்தி இரண்டாம் இரவில். குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பல முறை கிள்ளி எழுப்பி ஷஹேரேசாத சிந்த்பாத்தின் ஏழாவது பயணத்தை பற்றிய கதை சொல்ல ஆரம்பிக்கிறார். குறட்டை ஒலியின் நாராசத்தை கேட்காமல் இருக்கவே இன்னொரு கதையை ஆரம்பித்தார் என்றும் கருதவும் இடம் உள்ளது.

வழக்கம் போல் பயணப் பித்தால் பீடிக்கப்படும் சிந்த்பாத் இன்னொரு பிரயாணத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரும் பாம்புகளையோ, பறவைகளையோ சந்திப்பதில்லை, பயமுறுத்தும் ஜின்களோ, மயக்கும் அழகிகளோ, சாகஸ நிகழ்வுகளோ இல்லை. மனித- மிருக அம்சங்கள் கொண்ட ஜீவராசி ஒன்றைச் சந்திப்பவன், அதனால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அங்கு அவன் காண்பவற்றை விவரிப்பதுமே மீதிக் கதை. முதற்பார்வையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத நிகழ்வுகள்தான், ஆனால் தன் (போவின்) காலத்திய கண்டுபிடிப்புகளை சிந்த்பாத் காண்பதாக சுட்டிச் செல்வதின் மூலம் தன் தனித்துவத்தை பதிவு செய்கிறார். சார்ல்ஸ் பாபெஜ்ஜின் கணக்கீடு கருவி, ஆரம்ப கால புகைப்படக் கருவி, ரெயில் வண்டி என சிந்த்பாத் பார்ப்பவற்றின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறார். ‘Another directed the sun to paint his portrait, and the sun did’ …’In place of corn, he had black stones for his usual good; and yet, in spite of so hard a diet, he was so strong and swift that he would drag a load more weighty than the grandest temple in this city, at a rate surpassing that of the flight of most birds‘  போன்றவை எவற்றைக் குறிக்கின்றன என வாசகன் யூகிக்க முடியும்.

இவற்றை ஷெரியார் எவ்வாறு எதிர்கொள்கிறார்? மனித- மிருக ஜீவராசி பற்றி கேள்விப்படும்போது மிகவும் மகிழ்விப்பதாக இருப்பதாக சொல்பவர் அதன் பின் ‘Hum’, ‘Hoo’, ‘Humph’, ‘Pooh’, ‘Stuff’ போன்ற பொத்தாம் பொதுவான ஒற்றை வார்த்தை எதிர்வினைகள் ஆற்றுவதன் மூலமும் அவை பின்னர்  ‘Nonsense’,  ‘Twattle’, ‘Ridiculous’, ‘Absurd’,  ‘Preposterous’ ஆக மாறுவதன் மூலமுமே அவர் மனநிலையை போ நமக்கு உணர்த்துகிறார். எனவே இறுதியில் ஷஹேரேசாதவைக் கொல்ல அவர் உத்தரவிடுவது பெரிய வியப்பில்லை. முதலில் வருத்தமடையும் ஷஹேரேசாத, பின் தன் அறிவிலி கணவனின் குழந்தைத்தனமான துர்நடத்தை பல கற்பனை செய்ய முடியாத சாகசங்களைப் பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாமல் தடுத்து விடுவது அவனுக்குதான் நஷ்டம் என்று தன்னை தேற்றிக் கொண்டு மரணத்தை தழுவுவதில் அவல நகைச்சுவை உள்ளது.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதன் உதாரணம் ஷஹேரேசாத என்று எளிதில் சொல்லி விடலாம். அதே நேரம் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. பல விசித்திர, அசாதாரண கதைகளை ஆயிரத்தொரு இரவுகள் சந்தோஷமாக கேட்டு வந்த ஷெரியார் ஏன் உண்மையை எதிர்கொள்ளும்போது அது தலைவலி ஏற்படுத்துவதாக சொல்லி, அதற்காக மனைவியை தண்டிக்க வேண்டும்? போவிற்குதான் இவை நிகழ்கால உண்மைகள், ஷெரியாரைப் பொறுத்தவை அவை பொய்கள் (அல்லது எதிர்கால உண்மைகள்) என்பது சரியே, ஆனாலும் இந்த (நிகழ்/ எதிர்கால) உண்மைகள்/ பொய்கள் ஷஹேரேசாதவின் புனைவுகளைவிட எந்தளவுக்கு மாறுபட்டவை, நம்ப முடியாதவை? ‘Truth is stranger than fiction‘ என்று கதையின் ஆரம்பத்தில் போ குறிப்பிடுவதை கதையின் இறுதியோடு ஒப்பிட்டு பார்ப்பது போ இந்தக் கதையில் என்ன முயல்கிறார் என்பதை புரிய உதவக்கூடும். அதிலுள்ள நகைமுரணும்,  கதையின் மெல்லிய நகைச்சுவை அம்சமும் இதை கவனிக்கப்பட வேண்டிய கதையாக்குகின்றன.

oOo

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1 – ஆர். அஜய்