அஜய். ஆர்

பற்றுகை

காலத்துகள்

அந்த வருட சுதந்திர தின  விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில்  பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ்  தேர்வு செய்து கொண்டிருந்தார்.  எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம் ஆடும் உமா, நாடகத்தில் நடிப்பவர்கள் என எப்போதும் போல் சிலர் இந்த வருடமும் பெயர் கொடுக்க, விருப்பமில்லாத  வேறு சிலர் வழக்கம் போல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரியான நேரங்களில் பங்கு பெறுபவர்களின் இறுதி பட்டியல் தயாராகும்வரை  மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பதட்டத்தோடு தன் மீது கவனம் விழாதவாறு அமர்ந்திருந்தவன் வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்க, இம்முறையும் பிழைத்து விட்டோம் என்று தன் மன இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போது  ”இன்ட்ரவெல்ல ஸ்டாப்  ரூமுக்கு வாடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராவ்.

ஆசிரியர் அறைக்குள்  நுழைந்தவனிடம் ‘கண்ணன் ஒங்க தாத்தா பத்தி சொன்னான்டா’ என்று ஆரம்பித்தார். இவன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ‘ஆர்மில இருந்தார்ல?’ என்று கேட்டார். ‘எஸ் ஸார்’, என்றவனிடம், ‘ப்ரீடம் ஸ்ட்ரகுள்லகூட பார்டிசிபேட் பண்ணிருக்கார்ல’, என்று மீண்டும் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். ‘என்னடா, கண்ணன் அப்படித்தானே சொன்னான்’, என்றார் ராவ்.  .’இல்ல ஸார்…’ என்று முனகியவனிடம்  ‘என்னடா இல்ல ஸார், அப்போ  அவர் ப்ரீடம் பைட்டர் இல்லையா, கண்ணன் சும்மா சொன்னான்னா?’என்று கருணாகரன் ஸார் கேட்க, ‘அப்டி இல்ல ஸார்’ என்று இழுத்தான். ‘இந்த வருஷம் இன்டிபென்டென்ஸ் டே பங்க்ஷல யாராவது ப்ரீடம் பைட்டர சீப் கெஸ்ட்டா போடலாம்னு ஐடியா இருக்கு’ என்ற ராவிடம்,  ‘தாத்தா பேசுவாரான்னு தெரியாது ஸார்,’ என்று முனகினான். ‘என்னடா அலட்ற?’ என்று கருணாகரன் ஸார் அடிப்பதுபோல் போலியாக கையோங்கியபடி வந்தார்.  ‘ஸார், அப்டிலாம் இல்ல ஸார்…” என்று அவன் மீண்டும் முனகவும், ‘சரி போடா’, என்று சலித்த குரலில்  ராவ் சொன்னார்.

சென்ற மாதம் நடந்த  சாதாரண நிகழ்வுதான்.  தேசிய அளவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த அந்த பதினைந்து பதினாறு வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் சேர்க்கப்படாதது குறித்தும், அடுத்த வரவிருந்த பாகிஸ்தானுடனான தொடரிலாவது சேர்க்கப்படுவானா என்பது குறித்தும் மாலை வீட்டிற்கு வெளியே சந்துருவுடனும் கண்ணனுடனும் பேசிக்கொண்டிருந்தான். இரானி ட்ரோபியில் அவன் அடித்திருந்த சதத்தை முன்வைத்து  இவனும் சந்துருவும் அவன் சேர்க்கப்பட வேண்டுமென்ற கட்சியில் இருந்தார்கள். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை அந்தச் சிறுவனால் எதிர்கொள்ள முடியாதென்பது கண்ணனின் வாதம். ‘அவன் இண்டர்வ்யு வந்துதே, சண்டே  அமர்நாத் கிரிக்கெட் டிவி ப்ரோக்ராம் பாத்திருக்கியா, வெஸ்ட் இண்டீஸ் பௌலர்ஸ பேஸ் பண்ண ரெடின்னு தைரியமா சொன்னான், பௌனஸ்னால பால் ஈஸியா பாட்க்கு வரும்னான்’.

‘பாக்கலாம்டா, பர்ஸ்ட் செலக்ட் ஆகட்டும்,  அவன பத்தி எழுதிருக்கறத படிச்சுட்டு எங்கப்பா ஒன்னோட மூணு நாலு வயசுதான் பெரியவன், எவ்வளவு அச்சீவ் பண்றான் பாருங்கறார்’, என்றான் கண்ணன். அவனுடைய தந்தை மூவருடைய க்ளாஸ் டீச்சராகவும் இருப்பதால், அவன் முன்  அவர் குறித்த விமர்சனங்கள் குறித்து  ஜாக்கிரதையாக, அவருடைய பட்டப் பெயரை கூட உச்சரிப்பதை தவிர்த்துதான், இருப்பார்கள். எனவே பொத்தாம்பொதுவாக கண்ணனுக்கு ஆசுவாசம் அளிக்குமாறு பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்த இவன்  தாத்தா,  ‘கோந்தே உள்ள போய் பேசு, பனியாருக்கு பாரு, இல்லன்னா மப்ளர் கட்டிக்கோ,’ என்று  சொல்லியபடி  இவன் தோளைத் தொட்டு அணைக்கவும், அவன்  விலகி உள்ளூர நெளிந்தான். இவனுடைய அசௌகர்யத்தை கவனித்த கண்ணன், ‘என்னடா கோந்தேங்கராறு, நைட் சாப்பாடு தாத்தாதான் வூட்டி உடுவராடா ‘ என்று கிண்டலாகக்  கேட்கவும், ‘இவங்க பாட்டி இவன கூப்டறது உனக்கு தெரியாதுல்ல, அது இத விட சூப்பராருக்கும், என்னடா சொல்லட்டுமாடா,’ என்று ராகத்துடன் ‘கிக்.. கி… கி ..’ என்று  அப்பெயரைச் சொல்ல ஆரம்பித்த  சந்துருவை, ‘சும்மாருங்கடா, உள்ள போலாம்’ என்று இடைமறித்து  அழைத்துச் சென்றான்.

‘இந்த தாத்தாதான ஆர்மில இருந்தார்னு சொன்ன?’ என்று கண்ணன்  இவனிடம் கேட்டான். முழங்கை வரை நீளும் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, இன்னும் ஆக்கிரமிக்க மிகக் குறைவான இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்த வழுக்கை, மழிக்கப்பட்ட மீசை, அகன்ற நெற்றியில் விபூதிப் பட்டை, முகத்தை நிறைத்திருக்கும் மென்மை எல்லாமே இவனுக்கேகூட அவ்வப்போது அந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ஆமாண்டா தோ வரேன் இரு,’ என்றவன், உள்ளறைக்குச் சென்று தாத்தா ஊரில் தன் வீட்டில் வைத்திருக்காமல் இவர்கள் வீட்டில் ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்த பதக்கங்களை எடுத்து வந்தான். அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், ‘என்னடா இந்த மெடல் வித்தியாசமா இருக்கு,’ என்று சிவப்பு வெள்ளை நீல நிறக் கலவையில்  சிலுவை வடிவில் நெய்யப்பட்ட  துணி பதிக்கப்பட்டிருந்த பதக்கத்தைப் பற்றி கேட்க, இவன்  அவசரமாக, ‘தாத்தா ஆர்மில சேர்றதுக்கு முன்னாடி ப்ரீடம் ஸ்ட்ரகிள்ல பார்டிசிபேட் பண்ணிருக்கார்டா’ என்று பொய் சொல்லி விட்டான்.

இவன்  தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு  இளம் வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்  சிப்பாயாக சேர்ந்ததும்,  உலகப் போரின்போது  அவர் மத்திய கிழக்கின் போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டதும், பின் சுதந்திர இந்திய ராணுவத்தில் பணியாற்றி கேப்டனாக ஓய்வு பெற்றதும் அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் பற்றிய சிறு குறிப்புடன் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்திய பூந்தளிர் இதழில் பார்த்ததிலிருந்து அது குறித்த ஒரு சிறிய ஏக்கம் மட்டும் உருவாகி இருந்தது.  அதனால்தான் இவன் அப்படியொரு பொய் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் கண்ணன் தொடர்ந்து கேட்ட கேள்விகளை சமாளிப்பது பெரும் பாடாகி விட்டது. அவன்தான் தன் தந்தையிடம்  உளறி வைத்திருக்க வேண்டும்.

தப்பித்த  உணர்வோடு வெளியே வந்து  தண்ணீர் குடிக்கும்போது இடைவேளை முடிவிற்கான  மணி அடித்தது.  இந்த வகுப்பு  அடிக்க அஞ்சாத  மார்கரெட் மிஸ்ஸுடையது என்பதால் வேகமாக நடக்க ஆரம்பித்தவன்,  வழியில் பெண் ஆசிரியர்களின் அறையில் இருந்து திருத்தப்பட்ட ரெகார்ட் நோட்டுக்களுடன் வந்து கொண்டிருந்த உமாவை  எப்போதும் போல்  கள்ளப் பார்வை பார்த்தவன் அவள் பார்த்ததும் தலையை திருப்பி கடந்து செல்ல முயன்றான்.

‘ஒங்க தாத்தா ப்ரீடம் பைட்டரா?’ இவனுடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை மற்றவர்கள் மூலமாக பெற்று பார்வையிடும், ஆனால்  இதுவரை நேரில் ஒரு வார்த்தைகூட இவனிடம் பேசியிராத உமா இப்போது இவனிடம் வலிய வந்து பேசுகிறாள். மையமாக தலையை ஆட்டி வைத்தான்.

 ‘அவர் பங்க்ஷனுக்கு வருவாரா’

‘தெரியல, சாருக்கு இப்போ வேற ஐடியா இருக்குன்னு நெனக்கறேன்’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஏதாவது பேசலாம் என்று திரும்பியவன் கண்ணில் பள்ளி மேடையின் முன் இருந்த கொடிக்கம்பம் கண்ணில்பட, எதுவும் சொல்லாமல்  மௌனமாக நடந்த வகுப்பை  நெருங்கவும் சற்று பின்தங்கினான். உமா வகுப்பறைக்குள் போனபின் கொஞ்சம் பிந்திச் சென்று, “ஸார் பாக்கச் சொல்லிருந்தார்”, என்று சொல்லியதை  சற்று சந்தேகத்தோடுதான் மிஸ் ஏற்றுக்கொண்டார். தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான்.  ‘என்ன தம்பி  பின்னாடியே  வர’, ‘ப்ராடு ஒண்ணாத்தான் வந்த்ருப்பான், ஓட்டுவோம்னு தனியா வந்தமாறி வரான்,’ போன்ற சீண்டல்களை  எப்போதும் போல்  உள்ளூர  ரசிக்க முடியவில்லை.

ராவ் இவன்  தெருவுக்கு அடுத்த தெருவில் வசிப்பதையும் அவருக்கு இவன்  வீடு தெரியுமென்பதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தப்பி விட்டதாக எண்ணியது  தவறு. அடுத்த நாளான சனிக்கிழமை காலை பத்து மணி அளவில், ‘கோந்தே, உன் க்ளாஸ்  ஸார் வந்திருக்கார்டா,’ என தாத்தாவின் குரல் கேட்டவுடனேயே எந்த ஸார் என்று அவர் சொல்லாமலேயே புரிந்தது. தயங்கியபடி வெளியே வந்து எதுவும் சொல்லாமல் நின்றான். அதற்குள் உள்ளே வந்தமர்ந்திருந்த ராவ் ‘உங்களத்தான் பாக்க வந்தேன் ஸார்,’ என்று  தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ‘இவன் எதாவது சொன்னானா’ என்று இவனைச் சுட்டி கேட்டார். தாத்தா எதுவும் புரியாமல் இவனைப் பார்க்க, ‘ பிரச்சனைலாம் ஒண்ணுல ஸார், நெக்ஸ்ட்  சாடர்டே ஈவனிங் இண்டிபென்டென்ஸ் டே ப்ரோக்ராம்ஸ் வச்சிருக்கோம், அதுக்கு உங்கள மாதிரி  ஒருத்தர் சீப் கெஸ்ட்டா இருக்கணும்னு ஆசைப்படறோம்,  இவன் பிரெண்ட் கண்ணன்தான் உங்களைப் பத்தி சொன்னான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘என்ன கோந்தே’ என்று இவனிடம் கேட்டவருக்கு, ‘அதான், ஆர்மில இருந்திருக்கீங்க, நம்ம ப்ரீடம் ஸ்ட்ரக்குள்ல வேற கலந்துட்ட்ரிக்கீங்க, இதபத்திலாம் கண்ணன்ட்ட சொல்லிருக்கான்’ என்று ராவே பதிலளித்தார். இவன் இருவரிடமிருந்தும்  இருந்து பார்வையை விலக்கி தலையை குனிந்து கொண்டான்.

‘இவன்ட்ட சொல்லி வுடுங்க ஸார், இன்னிக்குள்ள சொன்னீங்கன்னா நாங்க ப்ளான் பண்ண வசதியா இருக்கும்’ என்று ராவ் கிளம்பியதும் இவனும் வெளியே ஓடி மதிய உணவிற்குதான் வந்தான். வீட்டுப்பாடம் செய்வதாக மாலை வரை யாருடனும் பேசாமல் ஓட்டினான். மாலை நடைக்கு இவனும் வருகிறானா என்று கேட்ட தாத்தா, வீட்டுப்பாடம் இன்னும் பாக்கி உள்ளது என்று கூறியவனிடம், ‘ஸார்ட்ட நான் வரேன்னு சொல்லிட்றையா கோந்தே’ சென்று சொல்லிச் சென்றார். இரவுணவின்போது ‘என்னடா  தாத்தா பத்தி ஸ்கூல்ல பெரிசா சொல்லி வெச்சுருக்க’ என்ற அம்மாவிடம்,  ‘தாத்தாதானே அவனுக்கு ரொம்ப  இஷ்டம்,’ என்றார் தாத்தி. ‘தாத்தா ஆர்மில இருந்தத பத்திதாம்மா பேசிட்டிருந்தேன், கண்ணன் அவங்கப்பாட்ட ஏதோ  சொல்லிட்டான் போலிருக்கு,’ என்று சொல்லிவிட்டு தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவர்   இவனையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். ‘இட்ஸ் ஆக்ட்சுயலி எ குட் ஐடியா, பசங்களுக்கு ஆர்மி பத்தி தெரியணும். நீ பிரிட்டிஷ்  ஆர்மி எக்ஸ்பீரியென்ஸ் பத்திகூட சொல்லலாம்லபா’ என்று தாத்தாவிடம் அப்பா சொல்ல, இருவரும் பார்வையை விலக்கிக் கொண்டார்கள்.

ஊருக்குச் செல்லும்போது கோவிலுக்கு அழைத்துச் சென்று இவன் அடம் பிடித்ததால் கோவில் யானைக்கு ஒரு சீப்பு பழம் வாங்கிக் கொடுத்த, கணபதி ஹோட்டலில் இட்லியும் வடையும் வாங்கிக் கொடுத்த, இவனுக்குப் மிகவும்  பிடித்தமான ‘ஆக்‌ஷன்’  நடிகர் மூன்று வேடங்களில் -அதிலும் காவல்துறை அதிகாரியாக மிக ஆக்ரோஷமாக- நடித்து வெளிவந்த  அதிரடி   திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இவனுடைய பிடிவாதத்தால் அந்த வயதிலும் அவ்வளவு கூட்டத்தில் சென்று சிக்கி, போலீஸ்காரரின் தடியடியையும் தாண்டி , ‘ டிக்கெட் கெடச்சாச்சு கோந்தே’ என்று சிரித்தபடி வெளியில் வந்த தாத்தா இவன் சொல்லிய பொய்யை வெளிப்படுத்தாதது இவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றாலும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டில் யாரும் இல்லாத மாலை வேளையொன்றில் ‘என்ன பேசப் போற தாத்தா,’ என்று கேட்டவனிடம் ‘பாத்துக்கலாம் கோந்தே ‘என்றவர் பின்,  ‘கோந்தே… உங்க ஸார் நல்லா பீடா போடுவாரா’ என்று கேட்டார். ‘ஆமா தாத்தா, வெத்தல பாக் பான் பராக்க்னு அவர பசங்க கூப்டுவாங்க,’ என்று இவன் சொல்லவும் சிரித்தவர், மற்ற ஆசிரியர்களுக்கு இவர்கள் வைத்திருந்த பட்டப் பெயர்கள் குறித்து கேட்டுக்கொண்டார்.

விழா நாள் வரை இடைப்பட்ட பத்து பதினைந்து நாட்களை தாத்தா ஸ்கூலுக்கு வருவது பற்றி எதுவும் பேசாமலே ஒருவாறு கழித்தான்.   இப்போதெல்லாம் மாலை நடைக்கு இவனும் வருகிறானா என தாத்தா கேட்பதில்லை. இவனுக்கு  ‘புக் கிரிக்கெட்டில்’, ‘முதுகு பங்க்சரில்’ ஆர்வம் குறைந்தது. வகுப்பில் உமாவைக் கள்ளத்தனமாக பார்க்கத் தோன்றவில்லை.  தமிழ் ஐயாவிடம் தொடர்ந்து நாலைந்து நாட்கள் அடி வாங்காமல் இருந்தவனை ‘என்னடா திருந்திட்டியா’என்று சந்துரு கிண்டல் செய்தான்.

பதின்மூன்றாம் தேதி காலை உணவை முழுதும் சாப்பிடாமலேயே எழுந்தவனைப் பார்த்து ‘என்னமோ இவன் சீப் கெஸ்ட்டா போற மாதிரி டென்ஷனா இருக்கான்,’ என்று சொன்னார் அம்மா.  இந்த மாதிரியான விழா நாட்களில் ஒன்றிரண்டு வகுப்புக்கள் நடக்காது என்பதால்  மதியத்திலிருந்து வகுப்பில் பரவசமான சூழல்.  ‘டேய் கொஞ்சதான் சந்தோஷமா இரேன், என்னமோ நீ ஸ்டேஜ்ல பேசப்போற மாதரி இருக்க, என்னாச்சு ஒனக்கு’ என்று கேட்டான் சந்துரு.  மதியம் இரண்டாவது  பீரியட்  நடந்து கொண்டிருக்கும்போது, மாணவர்களை அமர வைப்பதற்கான அழைப்பு வர, எங்கும் ஒரே கூச்சல்.  மாணவர்கள் மேடையரங்கின் முன்னே இருந்த மைதானத்தில் குழுமி அமர  வைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தடியில் வெளியேறி விடலாம் என்றால் கேட் பூட்டப்பட்டிருந்தது. தாத்தா வந்திருப்பாரா என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தவனை  ராவ் தேடுகிறார் என்று இவன் வகுப்பு மாணவனொருவன் சொல்ல, மேடையின் பின்புறத்திற்கு சென்றான் . ‘தாத்தாவா பாத்துக்காம என்னடா அங்க ஒக்காந்திருக்க’ என்றார் ராவ்.

மேடையின்  பின்புறம்தான் தலைமையாசிரியர் அறை. தாத்தா வந்தவுடன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு ப்ரதருடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த வகுப்பறைகளில் வழக்கம் போல் நேருவும், பாரதியும் காணக் கிடைத்தார்கள். சாதாரண பள்ளிச் சீருடையில் மிக அழகாக தெரியும் உமா,  மலையாள பாணி சிவப்பு வெள்ளை  உடை மற்றும் கொண்டையுடன்  -பல மாநில உடைகளை அணிந்த பெண்கள் நடனத்தின் அங்கமாக-  பார்ப்பதற்குச் சகிக்காமல் வெளியே  நின்றிருந்தாள்.  இவனைக் கண்டதும், ‘தாத்தா வந்துட்டாரா?’ என்று அருகில் வந்து கேட்டாள்.

‘வெள்ளாவி ரூம்ல,’ என்றதும் எழுந்த சிரிப்பை மறைத்தபடி  அறையினுள்ளே எட்டி  பார்த்தவள், ‘ஒன்ன மாதிரியே இருக்கார்’. என்றாள்

‘இல்ல நான்ல அவர மாதரி இருக்கேன்’ என்ற இவன் சொன்னதற்கு ‘அப்போ உனக்கும்  அவ்ளோ வயசாயிடுச்சுங்கறியா’ என்று  மீண்டும் சிரித்தபடி பதிலளித்தவள்,  ‘பங்க்ஷன் முடிஞ்சதும்  தாத்தாட்ட  பேசப்போறேன்’  என்று கேட்டு இவனுடைய சந்தோஷத்தை வடியச் செய்தாள். உரையாடலை நீட்டிக்கும்  மனநிலை போனது.  அவள் மீண்டும் உள்ளே செல்வதை ஆற்றாமையுடன் பார்த்தவன்  தலைமையாசிரியர் அறை அருகே கொஞ்ச நேரம் நின்றிருந்தான்.  தாத்தாவும் வெள்ளாவியும்  சிரித்தபடி  பேசிக்கொண்டிருப்பதை அதற்கு மேல்  பார்க்க முடியாது  திரும்பி வந்து  நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.

 விழா நிகழ்வுகளின்போது அவை குறித்து பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் வழக்கமான  விமர்சனங்களில் இவனுடைய பங்களிப்பு வழக்கத்தை விட குறைவாக இருந்தது.  நிகழ்ச்சிகள் முடிந்து,  பரிசுகள் வழங்கியபின் தன்னுடைய அனுபவங்கள் என்பதாக இல்லாமல் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ற  வழமையான, ஆனால்  சுருக்கமான உரையை நிகழ்த்தினார் தாத்தா.

எல்லாம் முடிந்து  அனைவரும் கலைய ஆரம்பிக்க, இவன் காருக்காக தாத்தாவுடன் காத்திருந்தான். ‘ஒங்கள மாதரி ஒர்த்தர் வந்தது பசங்களுக்கு ப்ளெஸ்ஸிங் மாதிரி’ என்று உபசாரமாய் ராவ் சொன்னது அசூயையாக இருந்தது. வேறெங்கோ பார்வையை திருப்பியவன்  தாத்தா எதுவும் பதில்  சொல்லாததால் அவரை நோக்கினான். அவர் கொடிக்கம்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இவன் வகுப்பு மாணவர்கள்  சிலர் அவருடன்  பேசும் ஆவலில் அருகில் வந்தார்கள்.  உமா இல்லை, உடை மாற்றிக் கொண்டிருப்பாளாக இருக்கும், அதுவும் நல்லதுதான் என்று நினைத்தான்.  வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, பொதுப்படையான சில பேச்சுக்கள். சுதந்திர போராட்டம் பற்றிய கேள்விகளை லாகவமாக தவிர்த்த  தாத்தா பசங்களின் மத்தியில் சற்றே உற்சாகமாகிவிட்டது போலிருந்தது. ‘தாத்தா, உங்க சொந்த ஊர் எது?’ என்று யாரோ கேட்க, ‘பழுவூர்’ என்றவரிடம்  ‘ஒங்க வீட்ல நீங்க சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கறதுக்கு ஒண்ணும் சொல்லலையா’ என்று இன்னொரு கேள்வி. சில நொடிகள் எதுவும் பேசாமல்  இருந்த தாத்தா ஏதோ சொல்ல ஆரம்பிக்க கார் தயாராக இருப்பதாக ராவ் வந்து சொன்னதும் தப்பித்தால் போதும் என்று தாத்தாவுடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பின்பும் படபடப்பு அடங்கவில்லை. விழா பற்றி தாத்திக்கு தாத்தா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். பின்  தன் வழக்கமான  மாலை நேர நடைக்கு தாத்தா கிளம்பினார். அன்றைய நிகழ்வுகளை  மனதினுள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவன் உள்ளே சென்று  தாத்தியிடம், ‘தாத்தாவும் பழுவூர், ஓன் ஊர்தானா தாத்தி’ என்று கேட்க, ‘ஆமா, அடுத்த தெருதான் ‘ என்று மட்டும்  சொல்லிவிட்டு நிறுத்தி விட்டார்.  வேலை முடிந்து முதலில் வந்த அம்மாவிற்கும்  பின் அப்பாவிற்கும்  மீண்டும் விழா பற்றி  விவரிக்கச் செய்து, ‘அத வுட்டுட்டியே’ என  இவன் பேச்சுவாக்கில் தவற விடும் விஷயங்களை  நினைவூட்டியபடி தாத்தியும்  இவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து  போர்ஷனின் பின்புற சுவற்றின்  மீது அமர்ந்து  காலிமனையை பார்த்தபடி அமர்ந்திருந்தான். இருள் சூழ ஆரம்பிப்பதை கவனித்தபடி இருந்தவன் வெளியே செல்ல எழுந்தான். வீட்டின் இறுதியில் உள்ள அவர்களின் போர்ஷனில் இருந்து வெளியே வர  இருள் நிறைந்த சந்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதை இப்போது பொருட்படுத்தாமல் ஓடிக் கடந்து தெருவிற்கு வந்தான்.

முதலில் நாடார் கடைக்குச் சென்று, ‘தாத்தா வந்தாரா நாடார்?’ என்று  கேட்க, ‘பழம் வாங்கிட்டு  இப்பதான் மேன் கெளம்பினாரு, என்ன மேன் தாத்தாவோட இப்பெல்லாம் வர்ரதுல்ல, ரொம்ப பிஸியோ?’ என்று சொன்ன நாடாரிடம், ‘அதெல்லாம்ல, வரேன் நாடார்,’ என்று கிளம்பினான். தாத்தா கோவில் வழியாக சுற்றுப் பாதையில் சென்றிருக்கக்கூடும் என்று யூகித்து  ராமர் கோவில் மேட்டின் மீது ஏறி வலதுபுறம் திரும்பி கோவில் குளத்தெரு முனையில் நின்று கவனித்தான். விளக்குகள் இல்லாத, மரங்கள் அடர்ந்திருந்த இடம். இவன் நின்றிருந்த தெருமுனையில் இருந்த வெளிச்சத்தில் குளக்கரை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மங்கலாகத் தெரிந்தார்கள். சற்றே கூன் போட்டிருந்த, கையில் சிறு பை வைத்திருந்தது போலிருந்த உருவத்தை கண்டு கொண்டவன், இருளினுள் நுழைந்து அதன் அருகே சென்றான்.

சிதிலமடைந்திருந்த அந்த வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சேட்டின் அருகில் வழக்கம் போல் வாழைப்பழங்களை  வைத்துக் கொண்டிருந்தவர்  யாரோ அருகில் வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தார்.  எதுவும் சொல்லவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.  இருளுக்கு இவன் கண்கள் பழக, தாத்தாவை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேர அமைதிக்குப் பின் ‘தாங்க்ஸ், ஸாரி தாத்தா,’ என்று இவன் சொல்லவும் தோளில் கைவைத்து அழுத்தினார்.  ஒரு பக்கம் சலனமில்லாத குளம், மறு புறம் நீண்ட விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆலமரம் என  வழக்கமாக மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் இடத்தை இயல்பாக கடந்தான். சின்ன மேடு ஏறி இறங்கி தெருவுக்குள் நுழைந்தார்கள். விளக்குகளின் ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டும் குறுகியும் ஒன்றியும் பிரிந்தும் பின்தொடர்வதைப் பார்த்துக் கொண்டே நடந்தவன் தாத்தாவின் கையை தன்னிச்சையாக  பற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

முகிழ்தல்

– காலத்துகள்-

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை சுந்தரி அக்காவிடம் கொடுக்கும்போது அவனுக்குச்  சற்று கூச்சமாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல சைக்கிளை எடுத்தான். கோகுலபுரத்திற்கு குடி வந்து ஒரு வருடமாகியும் அந்த இடம் அவனுக்கு அன்னியமாகவே இருந்தது. அந்த ஏரியாவில் இருந்த வீடுகளும் மனிதர்களும்  இன்னும் அவன்  மனதில் பதியவில்லை.   புதிய இடத்தில் உண்டாகும் அசௌகர்ய உணர்வுடன் எப்போதும் போல் சற்று வேகமாகவே  மிதித்தான்.

கோகுலபுரத்தைத் தாண்டி -அவன் பத்தாண்டுகளுக்கு மேலாக, செங்கல்பட்டுக்கு வந்ததிலிருந்து வசித்திருந்த-, மணியக்காரத்  தெருவிற்குள் நுழைந்தவுடன் சைக்கிளின் வேகம் குறைந்தது.  ஒரு முறைகூட பேசியதில்லை என்றாலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்ததால் பழகியவை போல் உணரச்செய்யும் முகங்கள், வீடுகள், பரிச்சயமான கடைகள். மதிய நேரமென்பதால் கூட்டம் இல்லாத கடையில் நாடார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். படித்தபின் எடைக்கு போடப்பட்ட  ஏதேனும் காமிக் புத்தகமாக இருக்கும். இவனும் நாடார் கடையில் அப்படி பல புத்தங்கங்கள் படித்தவன்தான் (பழைய கல்கி பத்திரிக்கைகளில் இருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட்டு, அட்டை பிய்ந்து போயிருந்த சிவகாமியின் சபதத்தின் அனைத்து பாகங்களையும் ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் அங்கு வாங்கி இருக்கிறான்).

கோகுலபுரத்திற்கு குடி வந்த புதிதில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால், மணியக்காரத் தெருவுக்குத்தான் வருவான், ஆனால் நடைமுறைக்கு அது சரி வராது என்பது விரைவில் தெரிய அங்கிருந்த நாடார் கடைக்கே செல்ல ஆரம்பித்தான். ஆனால் இவனுக்கு நாடார் என்றால்  மணியக்காரர் தெருவில் கடை வைத்திருப்பவர்தான் என்றாகி விட்டது, கோகுலபுர நாடாரிடம்   ‘இத தாங்க, அது இருக்கா’ என்று பொதுவாகத்தான்  கேட்பான்.

இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட ‘சைக்கிள் ராஜ்’  கடையும்  அதற்கடுத்து மீராவின் வீடும் தூரத்தில் தெரிந்தன. காற்றடிக்கும் சாக்கில் அங்கு வண்டியை நிறுத்தலாமா என்று யோசித்தவன், மனதினுள் சிரித்தவாறே அந்த எண்ணத்தையும், மீராவின் வீட்டையும் கடந்து சென்றான். விடுமுறை நாளொன்றின் விடிகாலையில் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்க, வீட்டின் வெளியே இன்னும் தூக்கம் மிச்சமிருக்கிற கண்களுடன் வாடிய மலர்ச்சரத்தை  தலையிலிருந்து எடுத்தவாறு மீராவின் அம்மா கோலம் போடுவதைப் பார்த்தபடி இருந்ததும், அன்று அவள் அணிந்திருந்த மேலாடையின் கைப்பக்கம் சிறியதாக இருந்ததால், வெளிச்சம் படாத கையின் பகுதி அவளின் மாநிறத்திற்கு நேர்மாறாக வெண்மையாக இருந்ததும் நினைவிற்கு வர சைக்கிளுக்கு அழுத்தம் கொடுத்தான்.

உமாவின் வீடு மணியக்காரர் தெருவிற்கு மறுபுறம் இரண்டொரு தெருக்கள் தள்ளி இருந்ததாக கேள்வி. அந்த வீட்டையும் தாண்டி அவன் சென்றிருந்தாலும் அவளை அங்கு பார்த்ததில்லை. சுஜாதா வீடு எங்கு என்று இதுவரை அவன் யோசித்ததில்லை, யாரிடமாவது சந்தேகம் எழாதவாறு  கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே செட்டித் தெருவினுள் நுழைந்தான். மதிய நேர புழுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகளின்கீழ் கடைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். சில கடைகளில் அப்போதும் கூட்டமிருந்தது. அரிசிக் கடையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த மூட்டைகளில் இருந்து தூசும், முடை நாற்றமும் முகத்தில் அறைந்தன. ஓடியே பார்த்திராத மணிக்கூண்டை கடந்தான். அந்த இடத்தில்  முன்பிருந்த  குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டி வாடகைக்கு பிடித்து  அதில்  வைக்கோல் மணத்துடன்   பயணம் செய்திருக்கிறான்.

பரீட்சை இன்னும் முடியாததால் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே பெரிய கூட்டம் நின்றிருந்தது. தன் வகுப்பு பசங்களுடன் சேர்ந்து, முழு கவனமும் இல்லாமல் வழக்கமான அரட்டையில் கலந்து கொண்டான். சைக்கிளில் வந்த பெண்கள் பள்ளியை நெருங்கியதும் பெடல் மிதிப்பதை நிறுத்தி,   வண்டியின் வேகத்தைக் குறைய விட்டு சட்டென இறங்கி, லாகவமாக காலை எடுத்துக் கொள்வதில்  உள்ள நளினத்தை எப்போதும் போல் ஓரக்கண்ணால் ரசித்தான்.   பரீட்சை எழுதியவர்கள்  வெளியேறியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட,  வண்டி நிறுத்தும் இடத்தில்  எப்போதும் போல் நெருக்கடி. அதையொட்டி  இருந்த வகுப்புக்களில் மாணவர்கள் உள்ளே சென்று அமர  ஆரம்பித்திருந்தனர். அவன் படித்த ஒன்பதாம் வகுப்பறையை தாண்டும்போது  ஜன்னல் வழியே  வகுப்பினுள் சில நொடிகள்  பார்த்துக் கொண்டிருந்தவன், கூட்டத்தால் முன்னே உந்தப்பட்டான்.

பள்ளியாண்டு இறுதியில் மதிய நேரத்தில் வெளியே வர அனுமதி தருவதில்லை என்பதால் பிரதான வாயிலினுள் நுழைந்தவுடன் பள்ளி வெறிச்சோடி இருப்பது போல் முதற் கணம் தோன்றினாலும், அனைத்து வகுப்புகளிலிருந்தும் பேச்சொலி ஒன்றிணைந்து ஆண், பெண், மெல்லிய, கனத்த  குரல்  போன்ற தனித்தன்மைகளை இழந்து அடர்த்தியான ஒற்றை ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது பள்ளி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதி செய்தது. வகுப்பு அடைந்தவுடன் அவ்வொலி இழைகளாக பிரிந்ததைப் போல அக்குரல்களில் சிலவற்றை அடையாளம் காண முடிந்தது. சுஜாதா  வந்து விட்டாள், ஓரக்கண்ணால் மீராவும் வந்திருப்பதை கவனித்தான். புத்தகப்பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றவன், பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்தை நோக்கியபடி நின்றான்.  யாருமில்லாத வெட்டவெளியாக இருந்த மைதானம்  வெளிச்சம் நிறைந்திருந்தது. மைதானத்தின் ஓரத்தில்    சைக்கிளை நிறுத்திவிட்டுச் ஒளியை ஊடுருவி வருவது போல் பெண்கள் சிலர் நடந்து வருவதைக் கண்கள் கூச இடுக்கிக் கொண்டு பார்த்தான். முதல் வகுப்புக்கான மணி அடிக்க இவன் வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சில மாணவிகளையும் அவர்கள் சூடிக்கொண்டிருந்த மல்லியின் மணத்தையும் கடந்தான்.

பாடத்தில் எந்த கவனமும் இல்லை.  மின்விசிறி இல்லாத வகுப்பறையில் மதிய நேர புழுக்கத்தில் வியர்வை மணத்தையும், அதனுள் கலந்துள்ள மலர்களின் மணத்தையும் உணர்ந்தான். உடல் மணத்தில் மூச்சடைக்க மூழ்க வேண்டுமென்று தோன்றிய கையோடு பெண்களின் மணத்தை தனியாக உணரமுடிவது தன் கற்பனையோ என்ற சந்தேகமும் எழுந்தது. பெண்களின் மணத்தினூடே காலையில் முதல் முறையாக  முகர்ந்தற்கு நகர்ந்து அங்கிருந்து  தான் இன்னும் மாற்றிக்கொள்ளாத உள்ளாடைக்குச் சென்றான். அதை அருகில் உள்ளவர்கள்  உணர்வார்களோ என்று ஒரு கணம் யோசித்து அந்த அபத்த எண்ணத்தை  விலக்கினான். உடலும் மனமும் மீண்டும் தன்னை மீறிச் செல்வதை உணர்ந்தவனுக்கு  வகுப்பில் அம்மூவர் மட்டும் –மீரா, சுஜாதா, உமா- ஆடையில்லாமல் இருப்பதாக ஒரு நினைப்பெழுந்ததும் இன்று ஏன் என்றுமில்லாத அளவிற்கு  தறிகெட்டு அலைகிறோம் என்று  பயமேற்பட்டது. தவறு செய்கிறாய் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே மனக்கண்ணை மூடாமல் அதில் விழும் பிம்பங்களை துளித்துளியாக நினைவுக் கிடங்கில் சேகரித்தபடி இருந்தான். மூவரும் மாநிறம், அதிக பருமன் இல்லாத, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல்வாகு. நிர்வாணமான உடலில் தலையில் மட்டும் ஏன் ரெட்டை ஜடையும் ரிப்பன்களும்? அவற்றையும் அவிழ்க்க நினைத்தவனுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. எங்கோ  வகுப்பறையில் மாணவர்கள் கூட்டாக  ஒப்பிப்பதன் ஒலி அவனை  கலைக்க தலையை அழுத்திக்கொண்டான்.  ‘என்னடா கடி தாங்கலையா’ என்ற சுந்தரின் கேள்விக்கு தலையசைத்து வைத்தான்.

அடுத்து வந்த தமிழ் ஐயா பாடத்தை  இயந்திரம் போல் ஒப்பிக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் கொடுக்கப்படும் மொழிப்பாடங்கள், அதன்பின் மாணவர்களாலும் (வெளிப்படையாக), நிர்வாகத்தாலும் (சூசமாக), இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இவன் பள்ளியில் இயல்பான ஒன்று.  மொழிபாட  ஆசிரியர்களும் அதை உணர்ந்திருந்ததால் அவர்களும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மற்ற வகுப்புக்களை ஒப்பிடும்போது சற்றே இறுக்கம் குறைந்தவை அவை. தமிழர்களின் வீரம் பற்றி ஐயா சொல்லிக்கொண்டிருக்க, காளையை எல்லாம் என்னால் அடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  வேறேதேனும்  இக்கட்டில் இருந்து வேண்டுமானால் காப்பாற்றலாம். சைக்கிளில் இருந்து  சுஜாதா தடுமாறி தெருவில் கீழே விழ , மிக  வேகமாக பேருந்தொன்று அருகில் வந்துகொண்டிருக்க இவன்  சைக்கிளை மிதிக்கும் மிதியில் அது அந்தரத்தில் பறந்து அவளருகில் சென்று  அவளை கைதூக்கி காப்பாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தசரா சந்தையின்போது  உமாவை இரண்டு மூன்று மாணவர்கள் கிண்டல் செய்ய அவர்களை அடித்து விரட்டுகிறான். இவன்  பரிட்சையில் முதல் மதிப்பெண் பெற, மீரா கண்களில் ஆர்வம் மின்ன இவனைப் பார்க்கிறாள். மூவரில் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பத்துடன்  அவர்களுக்கு  என்ன வயது என்ற சந்தேகமும், ஓரிரு மாதங்கள் கூட அவர்கள் பெரியவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றின.

உண்மையில் இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இவன் மீது கொஞ்சமேனும் ஆர்வமிருக்கிறது என்பதற்கு ஏதேனும் சிறு குறிப்பையேனும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது, பாடப் புத்தகம் எடுத்து வர மறந்த ஒரு நாளில், தன் புத்தகத்தை மீரா அளித்தது ஞாபகம் வந்தது ( ‘அன்று நாலைந்து மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வராத நிலையில் தனக்கு அவள் இரவல் தந்ததில் ஏதேனும் சூட்சுமம் இருக்குமோ?’). தன் கற்பனைகளின் அபத்தம் குறித்து யோசித்தபடி பின் பெஞ்சின் மீது சாய, ‘தூங்காத நாயே’ என்ற குரல்  தலையை தட்டியது.

வீரத்தை விதைத்துவிட்டு தமிழ் ஐயா செல்ல, ஆங்கில ஆசிரியர் வந்தார்.   தமிழுக்காவது தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க,  மேல்நிலை வகுப்புக்களுக்கு ஆங்கிலத்திற்கென்று தனி ஆசிரியர் கூட இல்லாத நிலையில்  இயற்பியல் எடுப்பவரே அதையும்  -‘Kennelனா   அது ஒரு விதமான கரடிக் குகை’ என்ற அளவில்- கற்றுக் கொடுத்தார்.

ஏதோ வகுப்பிலிருந்து  பி.டி.க்காக சென்று கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்தவர்களில் மாணவிகள் டையை மட்டும் கழற்றி இருக்க, மாணவர்கள் சட்டையையும் கழற்றி இருந்தார்கள். சில வருடங்கள் முன் இத்தகைய ஒரு வகுப்பில் சட்டையின்றி பெண்கள் அருகில் நிற்க சில மாணவர்கள் தயங்கியதையும், விளையாட்டு ஆசிரியர் அதை கிண்டல் செய்ய, அதைப் பார்த்து பெண்கள் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. தயங்கிய கும்பலில் தான் இருக்கவில்லை என்றாலும், உள்ளுக்குள் இவனுக்கும் உதறல் தான். குறிப்பிடத்தக்க வகையில்  உறுதியான உடற்கட்டோ அதே நேரம்  மிகு  பருமனோ   இல்லாத உடல் இவனுடையது. அதுவே கூட அவனுக்கு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருந்தது,  குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை பார்க்கும் போது.  கொஞ்சமே கொஞ்சம்  கனிவு கொள்ள ஆரம்பித்திருந்த சூரியன் அகன்று விரிந்திருந்த ஜன்னல்களின் வழியே வகுப்பறைக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பொன்னிற வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தவன், பாடப்புத்தகத்தை புரட்டி, அவன் தேடிய பாடத்தை எடுத்தான்.

“Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date: “

என்று தொடங்கும் ஷேக்ஸ்பியரின் சானட். இது கற்பிக்கப்பட்டபோது (ஆசிரியரால்  ஒப்பிக்கப்பட்ட என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்) மற்ற பாடங்களைப் போல இதையும் கடந்து சென்றவனுக்கு இப்போது இந்த வரிகள் -இப்போது  மார்ச் மாதம் தான் என்றாலும்- அணுக்கமாகத் தோன்றின.   ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின்  முகம் முன் மாலை நேர ஒளியில் இன்னும் பொலிவு பெற்றிருந்தது போல் தோன்றியது. அவள்  கழுத்தோர வியர்வைத் துளிகள் இவன்  கற்பனைதான் என்று தெரிந்தாலும்  அவற்றை நாவால் வருடத் தோன்றியது.   பள்ளிக்கு வரும் போது துலக்கப்பட்டது போலிருந்த அவர்களிருவரின்  முகங்கள் சற்று  களை இழந்திருந்தாலும் முகத்திலிருந்த அந்தச் சோர்வும்கூட அழகாகத்தான் இருந்தது. மீராவின் கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்ததை அப்போததான் கவனித்தான். ஜன்னலருகில் அமர்ந்திருந்தால் அவர்களும் ஜொலித்திருப்பார்கள் தான். ஆசிரியர் கைகடிகாரத்தை  அவ்வப்போது  கவனிக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த வகுப்பில் உடல்கள் அசையும் ஒலிகளும்  பரபரப்பும் எழுந்தன. ‘மீதி நாளைக்கு’ என்று சொல்லி ஆசிரியர் புத்தகத்தை மூடி வாசலை பார்த்தபடி நின்றிருக்க, புத்தகப் பைகளை ஒழுங்குப் படுத்தியவாறு, மெல்லிய குரலில் பேசும் சிறு சப்தங்கள் வகுப்பை நிறைத்தன.

சாவியைத் தரும்போது  ‘என்னடா ஒடம்புக்கு முடியலையா’ என்ற சுந்தரி அக்காவின் கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லக்கா, வெயில் ஜாஸ்தி’ என்று சொல்லி தன் போர்ஷனுக்குச் சென்றான். இனி  ஏழெட்டு மணி அளவில்  பெற்றோர் திரும்பும்வரை தனிமைதான். ‘எதாவது சாப்டறியாடா, மூஞ்சியே சரியில்லையே,’ என்று அக்கா வந்து கேட்க, ‘வேணாம்க்கா, ப்ரெட் ஸ்லைஸ் சாப்டுப்பேன்’, என்றவனுக்கு அவர்  சென்றவுடன், காலை முதல் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டிருக்கிறோம்  என்ற குற்றவுணர்வு மீண்டும் ஏற்பட்டது.  அந்த சஞ்சலத்துடனேயே ஒரு வழியாக   வீட்டுப் பாடங்களை முடிக்கும்போது  மணி ஆறு தாண்டி இருந்தது.

கண்களை ஓரிரு நிமிடங்கள்  மூடித் திறக்க ட்யூப்லைட்டின் ஒளி இன்னும் பிரகாசமாக கண்களை நிறைக்க மனமும் சற்று அமைதியாவது  போல் இருந்தது.  திரும்ப ஓரிரு நிமிடங்கள்  கண்களை மூடித் திறந்தான். சிறிது  நேர ஆசுவாசத்துக்குப் பின் மனம் மீண்டும் காலையிலிருந்தே பயணித்துக்கொண்டிருந்த பாதையில் நடைபோட  ஆரம்பிக்க,  இவன்   வெளியே  படிக்கட்டின் அருகே சென்றான். நாட்கள் நீளத்  தொடங்கியிருந்த,  இன்னும் சிறிது வெளிச்சம் மிச்சமிருக்கும் முன்னந்தி நேரம். பின்புற வீட்டில் புழக்கடை கதவு சாத்தப்பட்டிருக்க, அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்ப் அந்த இடத்திற்கு சற்றும் போதாத  மெல்லிய ஒளியை பரப்பிக்கொண்டிருந்தது. மல்லி, அரளிச் செடிகள் மற்றும் தென்னை வாழை மரங்களின் நிழல்கள் நீண்டிருந்தன. அவற்றையே பார்த்தபடி இவன் நின்றிருக்க, அவை  நெளிந்து பெண்ணுருக்கள்  கொண்டன.  பாடப் புத்தகமொன்றுடன் வந்த உமாவிடமிருந்து   சுஜாதா அதை பறித்து எறிய, மீரா  ஏதோ சொல்லிச் சிரித்தாள்.  இவன் காலையில் பார்த்தவளும் இப்போது அம்மூவருடன் சேர்ந்து கொண்டாள் (“இவளுக்கு எப்படி இவளுங்கள தெரியும்”). மல்லிச் செடியருகே அவர்களை அவள் அழைத்துச் செல்ல, அனைவரும் அதிலிருந்து பறித்த  பூக்கள் தாமாகவே   சரமாக, அவற்றை   தலையில் சூடிக் கொண்டார்கள். தான் சூடிய சரத்தை தோளின் முன்னே உமா போட்டுக்கொண்டாள். மெல்லிய காற்று வீசியதில்  பவழ மல்லியின் வாசனை எங்கும் பரவ , அதனூடே அவர்களின்  மணங்களையும் சேர்த்தே நுகர்ந்தான். மலர்களின், வியர்வையின், நகப்பூச்சின், மருதாணியின்,  கண் மையின், அணிந்திருக்கும் ஆடைகளின் மணமாக அவர்கள் தன்னை சூழ்த்து நிற்பதை உணர்ந்தவன்  அதன்  அழைப்பை ஏற்று சுவற்றைத் தாண்டி அந்த வீட்டினுள் குதித்தான்.

oOo

கரைதல்

ஸ்டீபன் கிங்கின் ‘ஜாய்லேண்ட்’

ஆர். அஜய்

joyland
1973ஆம் வருடம் ‘ஜாய்லேண்ட்’ நாவலின் கதைசொல்லி டெவினுடனான உறவை முறித்துக் கொள்கிறாள் அவர் காதலி. இருபத்தியோராவது வயதில் ஏற்பட்ட அந்த முதற்காதலின் முறிவின் காயம் வடுவாகி அவ்வப்போது அது தரும் வலியால், 2012 ஆண்டும் -அம்முதற் காதலுக்கு பின்னான பல உறவுகளுக்குப் பின் – தன்னுடைய அறுபத்தியோராம் வயதிலும் டெவின் துன்புறுகிறார். அவள் ஏன் தன்னைப் பிரிந்து சென்றாள் என்ற கேள்விக்கான விடையை இந்த வயதிலும் தேடிக்கொண்டிருக்கிறார். தழுவுதல், முத்தமிடுதல் இவற்றுக்கு அடுத்த கட்டமான ‘அதற்கு’ (‘It‘ என்று தான் டெவின் அதை குறிப்பிடுகிறார்) செல்ல காதலி வெண்டி வெட்கி தயங்க, கனவான்போல் தான் அவளை வற்புறுத்தாததுகூட காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்.

வாழ்வில் இன்பங்களை மட்டுமே அடைவது அனைவரின் ஆசையாக இருந்தாலும், துன்பங்களை அவரவர் அதிர்ஷ்டம் அல்லது ஆற்றல் சார்ந்து அடைவது தவிர்க்க இயலாததாக உள்ளது. கற்றுக்கொள்வதும், கல்லாமல் இருப்பதும் அவரவர் கைமணல் எனினும், காலப்போக்கில் அவற்றை அசை போடும் மனநிலைக்கு வந்து விடுகிறோம். அந்த அனுபவங்கள் மீதான நம்முடைய மீள் விசாரணை நம் வாழ்வை தொகுத்துக் கொள்ள உதவுகின்றன. டெவின் அப்படி அசை போடுபவர்களின் பிரதிநிதி என்றால், அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் வாழ்வு முடிந்து போகிறவர்களும் – இருபதுகளின் ஆரம்பித்தில் இருக்கும் நான்கைந்து பெண்கள் அனுபவங்களின் சேகரிப்பு நிகழ அவகாசம் இல்லாமல், நாவலின் எதிர்மறை பாத்திரத்தால் கொல்லப்படுகிறார்கள் – ‘ஜாய்லேண்ட்’ நாவலில் உண்டு.

டெவினையும் கொல்லப்பட்ட பெண்களையும் கொலையாளியையும் இணைக்கும் புள்ளி, அதனூடே இணைந்து வரும் அமானுஷ்யம் இந்நாவலை குற்றப்புனைவு/ வழக்கமான ஸ்டீபன் கிங்கின் திகில் புனைவு என்று வரையறை செய்ய உதவினாலும், வாழ்வின் மீது இன்னும் கால் பதிக்காத இளைஞனின் மனம் முதன் முதலாக தரை தட்டுவதைப் பற்றியும், அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பற்றியுமான நாவலாகவே உண்மையில் இதைப் பார்க்க முடிகிறது. அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்.

கோடை விடுமுறைக்கால பணியாக, ‘ஜாய்லேண்ட்’ எனும் கேளிக்கை வளாகத்தில் (theme park) வேலைக்கு சேர்வதில் இருந்து நாவலை ஆரம்பித்து அங்கு நடந்த ஒரு கொலை, கொல்லப்பட்டப் பெண் ஆவியாக அலைவதாகச் சொல்லப்படுவது போன்றவற்றை டெவின்/ கிங் தொட்டுச் சென்றாலும் அவற்றில் அதிக நேரம் செலவிடுவதில்லை. நாவலின் பெரும்பகுதி டெவினின் உணர்வுநிலை ஊசலாட்டங்களையும் அவன் அங்கு ஏற்படுத்திக்கொள்ளும் புதிய உறவுகளையும், அப்பாத்திரங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கிங் அதில் பெருமளவு வெற்றி பெறுகிறார்.

எழுத்தில் ஆர்வமுள்ள டெவின் சற்று மென்மையானவர், கனவுகள் நிறைந்தவர் என புரிந்து கொள்கிறோம். அதே நேரம் இளமை தரும் அதீத நம்பிக்கையில், தன் கண் முன்னே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களை கவனித்தும் அவ்வாறு நடக்காது என தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் சிறுவனாகவும் இருக்கிறார். காதலி வெண்டி சில காலமாக முன்பிருந்த அளவிற்கு நெருக்கமாக இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாலும் அந்த உண்மையை எதிர்கொள்ள மறுத்து, சிறிது சஞ்சலத்துடன்தான் வேலைக்குச் சேர்கிறார். தான் பக்கம் பக்கமாக எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு வெண்டி ஓரிரு வரிகளில் பதில் அளிப்பதும் அவரை நம்பிக்கை இழக்கச் செய்வதில்லை. டாம்(Tom) மற்றும் எரினுடன் (Erin) அவருக்கு நெருங்கிய நட்பேற்படுகிறது.

டெவினுக்கு அந்தக் கோடை ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், தங்கள் இணையை ஒருவரில் மற்றொருவர் கண்டு கொள்ளும் டாமுக்கும் எரினுக்கும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடமே. தன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து ஒரு கட்டத்தில் வெண்டி வெளிப்படையாக உறவை முறித்தவுடன் முற்றிலும் இருள் சூழ்ந்து விட, அதே நேரம் டாமும் எரினும் தங்கள் உறவில் ஒளியேற்றிக் கொள்வதைக் கண்டு ஒரு சிறு துளி பொறாமை கொண்டதையும் டெவின் நேர்மையாக பதிவு செய்கிறார். இவர்களுடனான நட்புடன், குழந்தைகளை மகிழ்விக்க ஜாய்லேண்ட்டின் அடையாளச் சின்னமான (mascot) நாய் வேடமணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் பணியிலும் இயல்பாக பொருத்திக் கொள்கிறார் டெவின்.

‘ஜாய்லேண்ட்’ திறந்திருக்கும் கோடை காலத்தில் மட்டும் ‘ஜிப்சியாக’ வேடமிட்டு, ஆருடம் சொல்லும் ஃபார்டுனா (Fortuna), டெவின் இருவரைச் சந்திக்கப்போவதாகவும் அதில் ஒருவர் அவன் வாழ்வில் முக்கியத்துவம் கொண்டவராக இருப்பார் என்று சொல்வதும், டாம் கொல்லப்பட்ட லிண்டாவை (Linda) பார்த்ததாக டாம் சொல்வதும் இது மர்ம/திகில் நாவல்தான் என்று அவ்வப்போது நினைவூட்டினாலும், டெவினின் உளக் காய்ச்சலைத்தான் சுற்றி வருகிறது. காதல் முறிவில் அவர் மருகுகிறார் என்று கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்து விடுகிறது, அவரிடம் அது குறித்து பரிவாகவே நடந்து கொள்கிறார்கள். அவரின் பணி நேர்த்தி (அதுமட்டுமல்ல குழந்தை ஒன்றை அவர் காப்பாற்றுகிறார்), மற்றும் இயல்பான இனிய சுபாவமும் காரணமாக இருக்கலாம்.

கோடை முடிந்தவுடன், கல்லூரிக்கு திரும்பும் முன் எரின் டெவினை முத்தமிட்டு ‘ஏன் டாம் இங்கு இருந்தான்’ என்று கேட்பதின் பொருள் தெரிந்தாலும், என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது குறித்த சாத்தியங்களை வாசகன் யோசிக்கலாம். டெவின் மட்டும் கல்லூரிக்குத் திரும்பாமல் தொடர்ந்து ஜாய்லேண்ட்டில் வேலை செய்ய முடிவு செய்வது, அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால் மட்டும்தானா அல்லது திரும்பிச் சென்று -மற்றொருவனுடன் உறவில் இருக்கும் – வெண்டியை எதிர்கொள்ள வேண்டியதை தவிர்க்க எண்ணியதாலா என்பது குறித்தும்யோசிக்க இடமிருக்கிறது.

உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மைக், அவன் தாய் ஆன்னியையும் சந்தித்து அவர்களுடனும் -சின்ன தடங்கல்களுக்குப் பின் – நட்பு ஏற்படுகிறது. ஆன்னியின்பால் ஈர்ப்பட்டு (அவரும் டெவினின்பால்), இருவரும் உடல் உறவும் கொள்கிறார்கள். புது உறவின் திளைப்பிலும் கூட டெவினுக்கு இதற்கும், வெண்டியுடனான உறவுக்குமுள்ள வித்தியாசமும் அதை எப்போதும் ஈடு செய்ய முடியாது என்று புரிந்து கொள்வதும் வாசகனுக்கு சிலவற்றை உணர்த்துகின்றன.

முதற் காதலின் தோல்வி, அதை கடந்து செல்லும் முயற்சிகள் என ஒற்றை விஷயத்தின் நினைவோடை குறிப்புக்கள் (nostalgia) மட்டுமே அல்ல இந்த நாவல். ஆம், இதில் கடந்த காலம் பற்றிய ஏக்கம் உண்டு, ஆனால் அது அக்காலத்தில் நாம் கண்ட -காதலும் அடங்கிய – கனவுகள் பற்றிய ஏக்கம். அந்தக் கோடையைப் பற்றி விவரிக்கும்போதே டெவின்/ கிங் அதற்குப் பின் என்ன நடந்தது என காலத்தில் முன் பின் சென்று சின்ன செய்திகளை சொல்லும் உத்தி இளமைக் கனவுகளின் இலட்சியங்களின் நிச்சயமற்ற தன்மையை உணர்த்துகின்றன.

டெவின் தான் எண்ணி இருந்தது போல பெரிய எழுத்தாளராகவில்லை, பத்திரிக்கைகளில் வேலை செய்கிறார். மணம் முடிக்கும் டாம்/எரினின் மண வாழ்கை இருபது வருடமே – டாம் மறையும் வரை – நீடிக்கிறது. இந்தச் செய்திகள் வாசகனுக்குத் தெரிவதால், 1973ல் கனவுகளை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்களை காணும்போது அவனுக்கு அவற்றின் வியர்த்தம் குறித்த துயரமே ஏற்படுகிறது, அத்துடன்தான் கண்டிருக்கக் கூடிய கனவுகள் என்னவாகின என்றும் சுயபரிசோதனை செய்யத் தூண்டுகிறது. லிண்டாவை காணும் டாம் அதை குறித்து பேச மறுக்கிறான், அதை தன் மனதிலிருந்தே அகற்ற எண்ணுகிறான். இன்று, இந்தக் கணத்தில், யதார்த்தத்தில் வாழும் விழைவும் வாழ்வின் மீது நேசமும் அதைப் பெரும் புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் இளைஞன் ஒருவன் தன்னுடைய நாற்பதுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

மர்மங்கள் அவிழ்க்கப்படும் நாவலின் இறுதிப் பகுதி அதன் பலவீனமான அம்சமாக உள்ளது. ஜாய்லேண்ட்டில் டெவின் தன்னை பொருத்திக் கொள்வது இயல்பாக இருந்தாலும், லிண்டாவின் ஆவியைப் பார்க்க அவன் கொள்ளும் மிதமிஞ்சிய (டாம் கண்ணிற்கு மட்டும் அவள் தென்படுவது அவனுக்கு கொஞ்சம் பொறாமையூட்டுகிறது) ஆவலுக்கான தர்க்கம் நாவலில் வெளிப்படையாக மட்டுமல்ல குறிப்பாகவும் எங்கும் சுட்டப்படவில்லை.டெவின் பரபரப்பை விரும்பும் ஆசாமியும் அல்ல எனும் பட்சத்தில் அவன் ஏன் லிண்டாவை பார்க்கக் விழைய வேண்டும், ஏன் அந்தக் கொலை பற்றி ஆராய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையை வாசகன் அவனுக்கேற்றார் போல் வலிந்து யூகிக்க வேண்டியுள்ளது. அதே போல் டெவினுக்கு உதவ எரின் பழைய செய்தித்தாள்களை சேகரிப்பதும், -நாவலின் ஆரம்பத்தில் டெவின் தங்கும் வீட்டின் உரிமையாளர் லிண்டாவைத் தவிர இன்னும் சில பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக யூகிக்கப்படுவதாக கூறுவதும், தன் ஆராய்ச்சிக்குப் பின் அதே முடிவுக்கு வரும் எரின் இதை காவல்துறை கண்டு கொள்ள தவற விட்டுவிட்டது என்று சொல்வதும் முரணாக உள்ளது -அவற்றிலிருந்து சட்டென குற்றவாளியை அவன் அடையாளம் கண்டு கொள்வதும் நாவல் முடிவிற்கு வந்துவிட அவசரப்படுவதை தான் காட்டுகிறது, பாத்திரங்களின் மனநிலை, கேளிக்கை விடுதியின் சூழல் இவற்றை விவரிப்பதில் உள்ள நேர்த்தியும், ஆழமும் இறுதிப் பகுதியில் காணப்படவில்லை. மைக்கிற்கு இருக்கும் அமானுஷ்ய ஆற்றல் இந்த ழனார் எழுத்துக்களின் அத்தியாவசிய ஒன்று என்ற அளவில் பொருத்தமான ஒன்றே, அது எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதும் அதற்கான நியாயமும் நாவலில் உள்ளது, இருப்பினும் குற்றவாளியுடனான இறுதிச் சந்திப்பு சடுதியில் ஆரம்பித்து முடிவதாக இருப்பதை தவிர்க்கவில்லை.

மர்ம /திகில் புனைவென்பதைவிட கனவுகள் கலைவதால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள் பற்றிய புனைவாக ஜாய்லேண்ட் வெற்றி பெறுகிறது. லிண்டாவின் ஆவி பழிவாங்கத் துடிக்கவோ அதற்காக யாரையும் துணைக்கு அழைக்கவோ இல்லை. தான் கொலை செய்யப்பட்டபின் – ஜாய்லேண்ட்டின் ஒரு முக்கிய கேளிக்கை அம்சமான – திகில் அறையில் (horror house) இருந்து எப்படி வெளியேறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. லிண்டாவின் ஆன்மா வழக்கான பழிவாங்கும் பாவையாக இல்லாமல், திக்குத் தெரியாமல் திணறுவதில் எல்லையற்று விரிந்திருப்பதாக கற்பனை செய்திருந்த வாழ்வு திடீரென்று முடிவு பெற்றதை எதிர்கொள்ள முடியாத அதிர்ச்சியும், அதில் இருந்து மீள முடியாத இயலாமையின் சோகமும் தான் உள்ளது.

ரிச்சர்ட் போர்டின் (Richard Ford) ‘பஸ்கம்ப் ட்ரிலஜி’ (Bascombe Trilogy) (நான்காவதாக சமீபத்தில் ஒரு நாவல் வெளிவந்த பின்னும்) என்றழைக்கப்படும் நாவல்களின் முக்கியப் பாத்திரமான பஸ்கம்பின் மகன், சிறுவனாக இருக்கும் போதே காலமாகிறான். அவன் குறித்த நினைவுகளில் மூழ்கும் பஸ்கம்ப் அவனுக்கு வயது ஏறப்போவதில்லை என்பதாக எண்ணிக்கொள்கிறார், அவர் மனதில் அவன் குழந்தைமையை இழக்காத பாலகனாகவே இருப்பான். பஸ்கம்பின் மனவோட்டத்தினூடாகவே பயணம் செய்யும் நாவல்களின், ஒருவர் ஆறவே ஆறப்போகாத இயலாத துயரை எப்படி எதிர்கொள்கிறார், அதில் எப்படி துளியேனும் ஆசுவாசத்தை கண்டடைய முயல்கிறார் என்பதை விவரிக்கும் நெகிழ்வான தருணம் இது. பஸ்கம்ப் தன் அமைதிக்காக உருவாக்கிக்கொள்ளும் கற்பிதத்தை (ஒரு விதத்தில் அது உண்மையும்கூட என்று வாதிடலாம்) இந்நாவலிற்கும் பொருத்திப் பார்க்கலாம். லிண்டாவும் இனி எப்போதும் இருபதுகளில் இருக்கும் யுவதிதான், மூப்பென்பதே அவளுக்கு இல்லை. அந்த விதத்தில் அவள் நித்தியத்துவம் பெற்றுவிட்டாள். ஆனால் இப்படிப்பட்ட நித்தியமான இளமையை யார் விரும்புவார்?

இறப்பிற்கு பின்னான விஷயங்களை அவரவர் நம்பிக்கைக்கேற்ப யூகிக்கத் தான் முடியும் என்றாலும், நாவலின் உலகினுள் ஆன்மா, அமானுஷ்யம் உணமையனவையாக உள்ளன என்பதால் லிண்டா செல்லுமிடத்தில் அவள் தன் வாழ்கையை திரும்பிப் பார்ப்பாளா, கடந்த கால (அங்கு காலமென்ற ஒன்று இருந்தால்) அனுபவங்களை அசை போடுவாளா என்ற கேள்வி எழாமல் இல்லை. இன்னொரு புறம் மூப்படையும் டெவின் போன்றவர்கள் பல கசப்புக்களையும், இனியவைகளையும் அனுபவித்திருந்தாலும், கடந்து வந்த பாதையில் திரும்பிப் பார்க்க அவர்களுக்கு நிறைய உள்ளது என்பது -இறப்பதைவிட – நேர்மறையான அம்சம் என்று கொள்ளலாம். ஆனால் அவர்களும் ஒரு விதத்தில் லிண்டாவைப் போல் வாழ்வெனும் கேளிக்கை விடுதியில் அவரவருக்கான பிரத்யேக திகில் அறையில் சிக்கிக் கொண்டு திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

oOo

ஒளிப்பட உதவி – விக்கிபீடியா

கரைதல்

-காலத்துகள்-

பொதுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால்   மதியம்தான் இவனுக்கு   பள்ளி.   அடுத்த வருடம் இதே நேரம் இவனும்  பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு எழுதிக்கொண்டிருப்பான்.  எட்டு  மணி அளவில்  அம்மாவும்  அப்பாவும் வேலைக்கு கிளம்ப, தினசரி படித்து முடித்து,  விவித் பாரதியின் காலை நேர தமிழ் ஒலிபரப்பு  சேவை  பத்து மணி அளவில் நிறைவுறும்போது தெரு அடங்கி விட்டது. இனி இரவில்தான்  மீண்டும் தேன்கிண்ணம் கேட்க முடியும்.

இயற்பியல் பாடத்தை புரட்டிப் பார்க்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவன் வெளியே போய்   படிக்கலாம் என்று மாடிப் படிக்கட்டில் அமர்ந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்ணில் பின்புறமிருந்த வீட்டின் கிணற்றடியில் இவன் வயதையொத்த பெண் அமர்ந்தபடி   குளித்துக் கொண்டிருந்தது  பட்டது.  சட்டெனப் படிக்கட்டினுள் தலையை குனிந்து, பின் மீண்டும் எட்டிப் பார்த்தவனுக்கு அவர்கள் வீட்டு குளியலறையை உபயோகிக்க முடியாதபடி வெளிய குளிக்க ஏன் நேர்ந்தது   என்பதுதான் முதலில் தோன்றியது.  அவள் செயல்களில் எந்த அவசரமோ  யாரேனும் தன்னை கவனிக்கக்கூடும் என்ற பதற்றமோ இருந்தது போல் தெரியவில்லை.   அவ்வீட்டின் புழக்கடையில்  நடப்பட்டிருந்த  பவழ மல்லி, செவ்வரளிச்  செடிகள்,  வாழை , தென்னை மரங்கள் இயல்பான நிழல் படர்ந்த மறைவை  ஏற்படுத்தி  இருந்ததும், இந்த நேரத்தில் பொதுவாக  யாரும் வெளியே வருவதில்லை என்பதும்    அவளுக்கு  வெளியே குளிக்க தைரியம் அளித்திருக்க   வேண்டும். இவனேகூட இந்த இடத்தில் அமராமல்  சில  படிக்கட்டுக்கள் மேலோ கீழோ அமர்ந்திருந்தால்  அவளைப் பார்த்திருந்திருக்க  முடியாது.  தினமும் காலை ஏழு, ஏழரை மணி அளவில் அந்த வீட்டிலிருந்து ஒருவர் பல் துலக்கியபடி கர்ண கொடூரமான குரலில் வாய்  கொப்பளிக்கும்   சப்தங்கள்  எழுப்புவதையும்  அந்த தினசரி சடங்கை  எதிர்பார்த்திருந்து இவன் வீட்டில் கிண்டலடிப்பதும் மட்டுமே  இங்கு  குடி வந்த ஒரு வருடத்தில் பின் வீட்டை பற்றி அறிந்திருந்த அவனுக்கு  அங்கு  ஒரு பெண் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது.

இவன் பார்வையில் படும் போது குளித்து முடித்திருந்தவள்  மார் வரைச் சுற்றியிருந்த பாவாடையை கீழிறக்கியபடி எழுந்தாள்.  இறுதியாக  ஒரு கையால் தலையில் நீரை ஊற்றி , மற்றொரு கையால் முகத்தில் வழியும் நீரை நளினமாக  துடைத்துக்கொள்ள, நீர் அவள்  உடலில் வழுக்கிச் சென்றது. மரங்களில் இலைகளின் நடுவே ஊடுருவிய ஒளியில் அவளுடலில் நீர்த் துளிகள்  துல்லியமாக தெரிந்தன  ஒல்லியான உடல், முதிரா மார்பகங்கள், இன்னும் வடிவம் கொள்ளாத இடை  சராசரி நீளத்திலான கேசம் முதுகிலும், கன்னங்களிலும் ஒட்டியிருந்தது. (  பெரியவனாக ஆனபின்   இந்த சம்பவத்தை  அவன்  நினைவு கூரும்போதெல்லாம்  மரங்கள் சூழ்ந்த அமைதியான அந்த  இடமும், அவளின் உடலசைவுகளும்  அவளை   வனயட்சியுடன் தொடர்புபடுத்தச் செய்தன. இயல்பான சம்பவமொன்றை பால்ய கால பூதக்கண்ணாடியின்  மூலம் பார்ப்பதால் உருவாகும்  மிகையுணர்ச்சி அது என்று அவன் உணர்ந்தாலும் ,  அப்படி     உருவகிப்பதே  அன்று மட்டுமே பார்த்த, முகம் மறந்துப் போன அந்தப் பெண்ணின்  நினைவுக்கு  தான்   செய்யும் நியாயமாக  இருக்கும் என்றும் நினைத்தான).

அவள் உடலை துவட்டிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தவன்  வேறு யாரேனும் பார்க்கிறார்களா  என்று அருகிலிருந்த வீடுகளை பார்த்தான்.  யாரும் இருப்பது போல் தெரியவில்லை.   கூடப் படிக்கும்   பெண்களின்  காதோர,  கணுக்கால்  மென்  முடிகள், ஜடையை முன்னால்   தழைய விட்டு நீவியபடி பேசுவது ,  தோழியுடன் பேசத் திரும்பும் போதான கழுத்துச் சொடுக்கல்,   சைக்கிளில்  பயணிக்கும்போதும், இறங்கும்போதும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு  மேலேறும் அவர்களுடைய  சீருடை  ஸ்கர்ட்,  அவனை  இன்னும் சிறுவன் என்றே நினைத்து தங்களின்  ஆடை விலகல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனை விட   மூத்தப் பெண்கள்   எனச் சில வருடங்களாகவே அவனுள் பெண்ணுடல், அதன் அசைவுகள்  குறித்த குறுகுறுப்பும், அலைக்கழிப்பும் ஏற்பட்டிருந்தாலும் ஆடையின்றி ஒரு பெண்ணை இப்போது தான்  பார்க்கிறான். உள்ளே சென்று விடலாமா என்று யோசித்தவனுக்கு  இனி தன்னால் படிக்க முடியாது என்பது மட்டும் தெரிந்தது.

வீட்டு வாசலில் சைக்கிள் நிறுத்தப்பட்டு கேட் திறக்கப்படும் ஓசை கேட்டது.  “என்னடா படிக்கற” என்று கேட்டபடி சுந்தர் வர  “பிசிக்ஸ்டா” என்றபடி எழுந்து  சுந்தரை  உள்ளே அழைத்தான். ” படிக்கட்டிலேயே  கொஞ்ச நேரம் ஒக்காரலாமேடா ” என்ற சுந்தரிடம், “இல்லடா வெயில் அதிகமாறது, உள்ளயே போலாம்” என்றான். சுந்தர் வந்தது ஒரு விதத்தில் எரிச்சலாக இருந்தாலும், இக்கட்டிலிருந்து மீட்ட  உணர்வையும் தந்தது. உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.

“இன்னிக்கும் கம்ப்யூட்டர் ஸார் வர மாட்டார்டா, எங்களுக்கு  ஒரு பீரியட் ப்ரீ ” என்றான் சுந்தர்.

 “ஏன்டா நான் என் கம்ப்யூட்டர்லேந்து பேங்க்ல இருக்கற இன்போர்மேஷலாம்  பாக்க  முடியுமாடா?” எத்தனாவது முறை இதை அவன் கேட்கிறான் என்பது அவனுக்கும் சரி  சுந்தருக்கும் தெரியாது. மருத்துவம் படிக்க வேண்டுமென்றெல்லாம் பெரிய ஆசை இல்லாதிருந்தாலும், பெரும்பாலானோரைப் போல உயிரியல் க்ரூப்பையே இவன்  தேர்ந்தெடுத்திருந்தான். கம்ப்யூட்டர் பற்றியும் கூட பெரிய ஆர்வமில்லாவிட்டாலும், அது குறித்த அதீத கற்பனைகள் அவனுக்கு இருந்ததால் அந்த  க்ரூப்பை தேர்வு செய்திருந்த சுந்தரிடம் அது குறித்து கேட்டுக் கொண்டிருப்பான்.

“எல்லாம் முடியும்” என்று சுந்தரும் வழக்கம் போல் சலிக்காமல் பதில் சொன்னான்.

“அப்போ ஈஸியா பேங்க் பணத்த லவுட்டலாம்ல”

“அதாண்டா கம்ப்யூட்டர், ஆனா ஒழுங்கா கத்துக்கணும்”

“உங்க சிலபஸ் வேற ரொம்ப கம்மியா இருக்குடா , நூறு பக்கம் கூட இல்ல, பேசாம இந்த க்ரூப்ப எடுத்துருக்கலாம்”

“எல்லாம் ஏழெட்டு  ப்ரோக்ராம்தான்”

“என்னடா பேரு வெச்சிருக்காங்க  பேசிக், இன்னொன்னு என்ன  கோபால்னு நம்ம ஊர் பேரு மாதிரி”

“அத்த வுட்றா, இத்த கேளு  சூப்பர் மேட்டர், நம்ம மணி இருக்கான்ல அவன் சுஜாதாவ பாக்கறான்”.

“என்னடா சொல்ற”.

“ஆமாண்டா நேத்து கம்ப்யூட்டர் ஸார் வரலல, இவன் கம்ப்யூட்டர் ரூம்ல ஏதோ சீரிஸா எழுதிட்டிருந்தான், என்னடான்னு பாத்தா அவ பேரையும், இவன் பேரையும் வெச்சு ‘ப்ளேம்ஸ்’  ஆடிட்டிருக்கான்”

தன் பெயர் மற்றும்  பிடித்தமான பெண்ணின் பெயரை எழுதி   இரண்டிலும் உள்ள ஒரே அட்சரத்தை நீக்கிக் கொண்டே வந்து இறுதியில் மிஞ்சியிருப்பதை வைத்து அப்பெண்ணுடன் தனக்கு  எந்த வகையான உறவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளும்  – ஏழாவது, எட்டாவது படிக்கும் போது பிரபலமாக இருந்த – விளையாட்டை   இப்போதும் மணி ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சரியம் தான்.  (மீரா  மற்றும்  உமாவுடன்) சுஜாதா மேலும் இவனுக்கும்  – தான் அவர்களை பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெண்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதவன்  என்ற பிம்பத்தை இவன்  காப்பாற்றி வந்திருக்கிறான்  – ஈர்ப்பு உண்டு  என்பதால் மணி மீது கொஞ்சம் எரிச்சலும் ஏற்பட்டது. சுஜாதாவுடன் ப்ளேம்ஸ் விளையாட்டில் தனக்கு  என்ன உறவு வந்தது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை, சுந்தர் சென்றவுடன் அதை ஆடிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

“அவ பயாலஜி க்ரூப் ஆச்சேடா”

” மத்த பீரியட்லாம்  க்ளாஸ்ல ஒண்ணாதானேடா இருக்கோம்,  அவ ஒண்ணும்  இவனல்லாம்  எதுவும் கண்டுக்க மாட்டா’ என்று சுந்தர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும்  ஒருவேளை சுந்தரும் அவளை பார்க்கிறானோ என்றும் தோன்றியது. சுந்தரென்றால் பரவாயில்லை விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்துகொண்டான். உமா  மற்றும் மீரா  இருக்கிறார்களே.

“அவன்  ரேவதிய பாக்கறான்னு நெனச்சேன் ” என்றான் சுந்தர்.

ரேவதி குறித்து அவனுக்கு அபிப்ராயம்  எதுவும் இல்லையென்றாலும் ‘பெண்’ குறித்து அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் அவளின்   உருவம்  முதல் முறையாக அவனை கிளர்த்தினாலும்,   அசௌகர்யமாகவும்  இருந்தது.  ‘பெண்கள்’ தவிர  வேறெதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்  என்று நினைத்தவன்  “ஒங்க வீட்ல கேபிள் போடறது என்னடா ஆச்சு” என்று சுந்தரிடம்  கேட்டான்.

” அடுத்த மாசத்துலேந்து கேபிள் போடறங்கடா,  மாசம் அம்பது ரூபா, சாங்காலம் ஆறரைலேந்து சன் டி.வி, ராஜ் டிவி  உண்டு, அப்பறம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். “

“பரவாயில்ல அடுத்த  வருஷம் ஒனக்கு  பப்ளிக் எக்ஸாம்னாலும் போட்டுட்டாங்க”

“தினமும்  காத்தால ரெண்டு  தமிழ்  படங்க போடறாங்களாம், புதுப் படங்க கூட போடுவாங்களாம் அதனாலத்தான்னு  நெனக்கறேன். எப்படியோ  வீட்ல அப்பாம்மா  இருந்தாங்கன்னா நான் பாக்க சான்ஸ் கெடையாது, யாரும் இல்லேனா ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கலாம் “

“இங்க கொஞ்சம் ட்யூன் பண்ணா அடுத்த  போர்ஷன்  கேபிள் ரொம்ப பொறி பொறியா தெரியுது, அதுக்கு பாக்காமையே  இருக்கலாம் கண் வலியாவது இல்லாம இருக்கும்”. அடுத்த போர்ஷன் என்றதுமே இன்று முதல் முறையாக பார்த்த  பின்  வீட்டுப் பெண் மீண்டும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த  கால்களை மடித்து உட்கார்ந்தவன், “கருத்தம்மா பாட்டு கேக்கலாம்டா ” என்றான்.

 பாடல்களைக் கேட்டுக்கொண்டே, ஆட ஆரம்பித்த  ஐந்து ஆறு  வருடங்களில் கவாஸ்கரின் இடத்தை  நிரப்பிய   சச்சின்   சமீபத்திய தொடரில் நிகழ்த்திய  சாகசங்கள், அடுத்த வருட பாடங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் போன்றவற்றை பேசித் தீர்த்து  பள்ளிக்கு தயாராக சுந்தர் கிளம்பிச் சென்றவுடன் மீண்டும் படிக்கட்டு அருகே சென்று  பின் வீட்டின் கிணற்றடியை பார்த்தான். யாருமில்லை. அவள்  குளித்ததற்கு தடயங்களாக  கிணற்றடியின் ஈரமும், சோப்பின் நுரை கலந்த   கழிவு நீரும் இருந்தன. அங்கேயே  பார்த்துக்கொண்டிருந்தால் அவள் உருவம்  மீண்டும் அங்கு தோன்றக் கூடும்  என்ற   எண்ணம் ஏற்பட்டது.  இத்தகைய நேரங்களில்  இடுப்புக்குக் கீழ் உருவாகும் இறுக்கம்  இப்போதும் ஏற்பட உடல் எடை கொண்டது போல் தோன்றியது. மெல்ல நடந்து வீட்டிற்குள்  சென்றான். இம்மாதிரியான மனநிலையில்  என்ன, எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பள்ளியில்   நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான் என்றாலும்  அவர்கள் அந்த செயலுக்கு சூட்டிய  பெயரை உச்சரிப்பதுகூட அவனுக்கு தவறொன்றை செய்கிறோம் என்ற   கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. வீட்டில் அங்குமிங்கும் நடப்பது , மனதில் உள்ளதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொன்றைக் குறித்து யோசிப்பது என   வழக்கமாக அவனுக்கு உதவும்  உத்திகள் இன்று உதவவில்லை.    கட்டிலில் சென்று அமர்ந்தவன்  தன்னிச்சையாக குப்புறப்படுத்து  தன் உடலின் மீது கட்டுப்பாட்டை  இழந்தான்.

கிணற்றடியில் பார்த்தவள்,  பள்ளி சீருடையில் சுஜாதா, மீரா , உமா , அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்கா  – அக்கா  எப்படி, ஏன் என்று குற்றவுணர்ச்சி கொள்ளக் கூட  அவகாசம் இல்லாமல்   –    என பலர் மனதில் உருக்கொண்டு கரைந்தார்கள்.   சில நிமிடங்கள் கழிந்தபின்  வாயிலிருந்து எச்சில் தலையணையை நனைத்திருக்க  தொடைகளின் இடுக்கில் கொழ கொழவென  ஒட்டிக்கொண்டிருந்தது. சற்றே மூச்சிரைக்க, உடலில் இன்னும் சிறு அதிர்வு  இருந்தது.  அனிச்சையாக  மூடியிருந்த கண்களை திறக்க முதலில் எதுவும் விழிகளில்  தங்கவில்லை.  கையை உள்ளே நுழைத்து பிசுபிசுப்பை தொட்டு முகர  இதுவரை அறிந்திராத மணம்.  திரும்பிப்  படுக்க முயன்றபோது  கால்கள்  தொளதொளவென வலுவிழந்து இருக்க  உடனடியாக எழ முடியாது என்று புரிந்தது.

அச்செயல்    அவன்   கற்பனை செய்திருந்தது  போல  அவனை  அருவருப்பானவனாக  உணரவைக்கவில்லை. மாறாக  இடுப்பின் இறுக்கம்  தளர்ந்திருக்க  மனதில்    முற்றிலும் புதிய பரவசமும், பூரண நிறைவும் பரவியிருந்தது.    விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு  ஆபத்தான எல்லையொன்றை  வெற்றிகரமாக கடந்து     பெரிய மனிதனானது போன்ற உணர்வு.    இப்போது   நடந்தது அவனுக்கே மட்டும் உரியதான அந்தரங்கமான அனுபவமாகவும் அதே நேரம்  இதை குறித்து  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும்  தோன்றியது. மதியம் பள்ளியில்   சுந்தரிடம் இதை பற்றி  சொல்லலாமா, அவன் என்ன நினைப்பான்  என்று யோசித்துக்கொண்டிருந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்து முகம் கழுவி  பள்ளிக்குச் செல்ல தயாராக சீருடையை அணியும் போது உள்ளாடையில்  கெட்டி தட்டி படிந்திருந்த கறையை  பார்த்தவனுக்கு  அதுவரை இருந்த உற்சாகமனைத்தும் வடிந்து  வீட்டிற்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.