அஜய். ஆர்

போர்ஹெஸ்ஸின் நிலைக்கண்ணாடி

காலத்துகள்

போர்ஹெஸ் போல் நிலைக் கண்ணாடிகள் சாட்சியிருக்க என் வயது அதிகரிக்கவில்லை. பதின் பருவத்தில் ஆரம்பித்து, முப்பதுகளின் மத்தி வரை கண்ணாடி முன் எல்லோரையும் போல் நேரம் செலவழித்ததுண்டு, அவ்வளவே. செங்கல்பட்டில் வாழ்ந்த இருபது வருடங்களும் வீட்டிற்கே பொதுவாக இருந்த ஒரு கண்ணாடிதான். பின் கிழக்கு தாம்பரத்திற்கு வந்த போது என் அறைக்கு என்று தனியாக புதிய கண்ணாடி வாங்கி அதையே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்த பின்னும் உபயோகித்து வருகிறேன். ஆக, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களில் இரு கண்ணாடிகள்.

சவரம் செய்தபின், தலையிலும் முகத்திலும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கும் வெண்மை குறித்து யோசிக்க ஆரம்பித்தவன், முப்பதுகளிலேயே  ஏன் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்து, பின் நாற்பதுக்கு பதில், முப்பத்தியந்திலேயே ‘ஒப்பனைகள் கலைந்து’, ‘அன்பின் பதட்டம்’ என் மேல் இறங்கி விட்டதோ என்று பயணித்து, போர்ஹெஸின் கண்ணாடிகள் குறித்து விசாரத்தில் இறங்கினேன்.    ஏன் இத்தகைய இலக்கிய/ இருத்தலியல்/ வாழ்வியல் விசாரத்தில் இறங்கினேன், என்று மற்றொரு விசாரத்தில் அடுத்து இறங்க முற்பட …..

‘ரீஸன்ட்டா போர்ஹெஸ் வாசிச்சியா’. முற்றுப்புள்ளியின்  அறைக்குள் நுழைந்த என்னிடம் அவர் கேட்டார். இரண்டு நாட்களாக இதற்கு மேல் தொடர முடியாமல், பெரியவர் முற்றுப்புள்ளியிடம் இது குறித்து பேசலாம் என்று எப்போதும் போல் முடிவு செய்து, அவருக்கு நான் எழுதியவரை அனுப்பி, சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தேன்.

‘எப்படி ஸார்..’

‘பர்ஸ்ட் வர்ட்டே அவர் பேர். ஸோ அவரை திருப்பி படிச்சிட்டிருக்கேன்னு கெஸ் பண்ண முடியாதான்ன, இதுக்கு ஷெர்லாக் வரணுமா’ என்றவர் தொடர்ந்து

‘உனக்கு இந்த பெடிஷ் ரொம்ப அதிகமா இருக்கு’ என்று கூறினார்.

‘எத ஸார் சொல்றீங்க’

‘யார படிச்சாலும், அவங்க பெயரை உன் ரைட்டிங்ல இன்க்லூட் பண்ண வேண்டியது. பொருந்துதா இல்லையானு யோசிக்கறதே கிடையாது’

‘இங்க பிட் ஆகுதே ஸார். போர்ஹெஸ் மெட்டா-பிக்க்ஷன் நிறைய எழுதினார், இந்த கதையும் அதே மாதிரி ..’

‘ஸோ, இந்த ரெண்டு பாராக்ராப்பை நீ பிக்க்ஷன்னு நம்பற’

‘ஆரம்பம் தான ஸார்.’

‘ஒண்ணுமே இல்லையேயா. ஷேவ் பண்றான், வழக்கம் போல செங்கல்பட்டு புராணம், நரைச்ச முடி, தேவதச்சன் கவிதையை வேற உள்ள கொண்டு வந்திருக்க. வாட் ஆர் யூ ட்ரையிங்?’

‘மிர்ரர்ஸ் வெச்சு கதை ஸார். டைட்டில், கண்ணாடிக்குள் இருப்பவன். மிர்ரர்லேந்து வேற முகம் கதைசொல்லியை எட்டிப் பார்க்குது, பேசுது,  அப்பறம் இந்த கதைசொல்லி, கண்ணாடிக்குள்ள  போயிடறான்,  அந்த முகம் வெளிய வருது. கதைசொல்லிக்கு கண்ணாடிக்குள் கிடைக்கும் அனுபவங்கள், இப்படி கதையை கொண்டு போகலாம்னு நினைக்கறேன் ஸார். பட் சரியா வருமான்னு தெரியல’

‘..’

‘ஸார்’

தலையசைத்தார்.

‘..’

‘நீ ஒரு டிபிகல், ‘பேசும் போது நல்லா பேசு, எழுதும் போது கோட்டை விட்டுடு’ கேஸ்யா. உன் ஐடியா ஓரளவுக்கு ஒகே, பட் உன்னால அதை எழுத்துல கொண்டு வர முடியும்னு எனக்கு தோணலை’

‘ஏன் ஸார்’

‘கண்ணாடிக்குள்ள போயிட்டான்னா, அதை வெச்சு பிலாசபி, மெட்டா-பிஸிக்ஸ் எல்லாம் கதைல வரலாம். ஸ்டோரிக்கு டெப்த், இன்டன்ஸிடி கிடைக்கும், அதே நேரம் மூளையையும், மனசையும் ஸ்டிமுலேட் பண்ணவும் முடியும். பட், போர்ஹெஸ் ஏற்கனவே எழுதியதை மாதிரியே இருக்கவும் கூடாது, உன்னுடைய தனித்துவம் தெரியணும். கேன் யூ டூ இட்’?

‘..’

மீண்டுமொருமுறை நான் எழுதியிருந்ததை படித்த முற்றுப்புள்ளி, ‘பர்ஸ்ட் டைம்மே தோணிச்சு, அதான் இப்ப திருப்பி படிச்சேன். இதே கதையை வேறெங்கேயோ நீயே எழுதியிருக்கல’ என்று கேட்டார்.

கிழத்திற்கு அசாத்திய ஞாபக சக்தி. ஆறேழே வருடங்களுக்கு முன் நான் எழுத ஆரம்பித்த போது செய்த குறுங்கதை முயற்சி தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புனைவு.  நல்ல கரு, அதை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். பெரியவர் அந்தச் சிறிய புனைவை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று எண்ணியது தவறு.

‘ஆமா ஸார். நண்பர் தன் சைட்ல வெளியிட்டார்’

‘இப்ப எதுக்கு பழைய குப்பையை கிளர்ற’

கிழத்துக்கு நக்கல் அதிகம்.

‘எழுத ஆரம்பிச்ச டைம்ல வந்த ஐடியா ஸார், அப்ப ப்ளாஷ்  பிக்க்ஷன் மாதிரி தான் எழுத முடிஞ்சுது. வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது, அதான் இப்ப அதை இன்னும்  நல்லா ..’

‘ஸோ, எழுத ஆரம்பிச்சதிலேந்து இப்ப நீ இம்ப்ரூவ் ஆயிட்டேன்னு நினைக்கற’

‘..’

‘ஒகே, தப்பித் தவறி இது பப்ளிஷ் ஆகுதுன்னு வெச்சுப்போம், உன் ப்ரெண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாரா’

‘இல்ல ஸார். அவர் எப்பவுமே என்னை ஊக்கப் படுத்துவார், ப்ளஸ் இந்த முறை மாற்றி எழுதப் போறேனே. தலைப்பையும் மாத்திட்டேன்’

மீண்டும் கிழத்தின் தலையசைப்பு.

‘ஆனா லிட்ரரி எதிக்ஸ் பிரச்சனை வருமோன்னு ..’

‘நிறுத்துயா…அந்தக் கதையை இங்க கொண்டு வந்துடாத.. இம்சையா உன்னோட, நாய் எலும்புத்துண்ட கடிச்சிட்டே இருக்கற மாதிரி, ஒரே கதைய திருப்பி திருப்பி…’

‘..’

‘அந்த ப்ரெண்ட்ட சொல்லணும். அன்னிக்கு இந்த குறுங்கதைய வெளியிடாம இருந்திருந்தா நீ நாவல், தொகுப்புனு போயிருக்க மாட்ட..’

பெரியவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்ததாக நான்  காட்டிக் கொள்ளவில்லை. விமர்சனங்களை, அவை தனி மனித தாக்குதலாக இருந்தாலும், கோபப்படாமல் எதிர்கொள்வதே இலக்கியவாதியின் பண்பு என்பது என் எண்ணம். தவிர கிழத்திடம் எனக்கு இந்த புனைவின் பொருட்டு ஒரு காரியம் ஆகவேண்டும்.

‘வேற எப்படி ஸார் இதை கொண்டுட்டுப் போகலாம், அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்’

‘உனக்கு சிறுகதைலாம் வராத விஷயம், இனிமே உனக்கு அந்த சூட்சமம் புரிய வாய்ப்பில்லை. பேசாம எப்பவும் போல கதை எழுதிய கதை பாணில குறுங்கதையா மாத்திடலாம். அது தான் உனக்கு சரி வரும்’

‘அதை எப்படி ..’

‘ஒரு பாராக்ராப் இருந்தா கூட இந்தக் கதையை முடிச்சுடலாம்’

‘..’

‘ஏதாவது சஜெஸ்ஷென்ஸ் தர முடியுமா ஸார்’

‘…’

எத்தனை நேரம் முற்றுப்புள்ளி அமைதியாக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியாது. ‘சில நிமிடங்கள் அமைதி’ என்று புனைவுகளில் வருவது எனக்கு நம்ப இயலாத ஒன்றாக உள்ளது, இருவர் மட்டுமே உள்ள இடத்தில், சில, பல நிமிடங்கள் பேசாமல் இருப்பார்களா என்ன? ‘சில நொடிகள் மௌனம்’ என்று சொல்வது மிகவும் குறைவான காலகட்டமாக தோன்றுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக, முற்றுப்புள்ளி சிந்தித்திருப்பார் என்று மட்டும் என்னால் கூற முடியும். தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து

‘ஓகே, இப்படி பினிஷ் பண்ணிடலாம்’ என்று கூறினார்.

சும்மா சும்மா நீ அப்பப்ப காத்து வாக்குல கேட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணாத, அப்பறம் போர்ஹெஸ்ஸோட புலியை ஏவி விட்டுடுவேன். ஒரு வேளை அது சிறுத்தையோ?- சரி ஏதோ ஒரு மிருகம், அதை விடு. உன்ன பத்தியே நினைச்சுக்கிட்டு இவ்வளவு புலம்பறியே, உன் மூஞ்சியையே இத்தன வருஷம் பாத்திட்டிருக்கற என் நிலைமையை பத்தி ஒரு செகண்ட்டாவது யோசிச்சிருக்கியா? செல்பிஷ் ஃபெல்லோ உன்னைப் பாத்துப் பாத்தே என் ரசம் எல்லாம் தீர்ந்து போய், கிழடு தட்டிடுச்சு  என்று பழிப்பு காட்டிவிட்டு நிலைக் கண்ணாடி முகத்தை திருப்பிக் கொண்டது.

குறிப்பு:

முற்றுப்புள்ளிக்கும் எனக்கும் இடையேயுள்ள உள்ள நட்பைக் குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ – செமிகோலன்

செமிகோலன் 

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ தொகுப்பிலுள்ள ‘மண் புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்’ கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போதும், வாசித்து முடித்த பின்பும், மனதில் ‘Nature vs nurture’ விவாதம் குறித்த சிந்தனைகள் இருந்தன. கதைசொல்லி தன் மகனுடன் விளையாடச் செல்லும் இடத்தில் சந்திக்கும் சிறுவனைப் பற்றிய இந்தக் கதை, முடிந்த பின்பும் வாசகனை அதன் நீட்சியை, அதன் சாத்தியக் கூறுகளை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. மகனுடனான கதைசொல்லியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இறைஞ்சி சேர்ந்து கொள்ளும் சிறுவன் ஒழுங்காகவே விளையாடுகிறான். சராசரியானவன் போல் வாசகனுக்கு தோற்றமளிக்கும் அவன், விளையாட்டு முடிந்தவுடன் , நாயொன்றை வதைக்கிறான், பின் அந்துபூச்சியோன்றின் காலை பிய்த்து எறிகிறான். அந்த வயதில் நிறைய சிறுவர்கள் ஈடுபடும் எந்த காரணமற்ற -வயதாக வயதாக நின்றுவிடும் – வன்முறை என்று இதை பார்க்க முடியாது. சிறுவனுக்கு மாறிக் கொண்டேயிருக்கும் மனநிலை. பூச்சியை பிய்தெறிந்த பின் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பவன், கிளம்ப எத்தனிக்கும் கதை சொல்லியுடன் அவர் வீட்டிற்கு வந்து விளையாடுவதாக கூறுகிறான். பின் அவர்கள் விளையாட உபயோகித்த பந்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். சிறுவனின் தாத்தா, தன் மருமகன் -அவனுடைய தந்தை- குறித்து, நிரம்ப வன்முறை மனநிலை கொண்டவன் என்று கூறுவதை சிறுவனின் செயலுடன், -அவனுடைய இயல்பான மனநிலையே அது தான்/nature -பொருத்திக் பார்க்கலாம். சிறுவனை எந்த நல்ல குணமும் இல்லாத மோசமானவனாகவே தாத்தா சித்தரிப்பது, இறுதியில் அவனுடைய தாய் அவனை அடிப்பது, வளர்ப்புடன்/nurture பொருத்தலாம். சிறுவன் கதைசொல்லியை இறைஞ்சும் கண்களோடு பார்ப்பதோடு கதை முடிந்தாலும், கதை சொல்லி அதன் பின் அவனை எப்போதும் சந்திக்காமல் இருக்கக் கூடும், அதன் பின்னான அவன் முழு வாழ்க்கையையும் வாசகன் எண்ணிப் பார்க்கிறான்.

கதை முடிந்த பின்னான கதையை குறித்து யோசிக்கத் தூண்டும் மற்றொரு புனைவு ‘கணக்கு’. கணக்கு ட்யூஷனுக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் கல்லூரி படிக்கும் விஜி. ட்யுஷன் ஆசிரியர் ஆர்கே, மிகவும் புகழ் பெற்றவர், சிறப்பாக சொல்லிப் கொடுப்பவர் என்றாலும், அவருக்கு இரு மனைவிகள் என்பது விஜிக்கு ஒவ்வாமையாக உள்ளது, அதை ஆர்கே உணர்கிறார் என்று சுட்டப்படுகிறது. முதல் முறையாக ட்யூஷனுக்கு செல்லும் அன்று அவருக்கும், விஜிக்கு நடக்கும் உரையாடலுடன் கதை முடிகிறது. ஆர்கே உளவியல் ரீதியாக விஜியை சீண்டுகிறாரோ என்று எண்ண வைக்கும் இந்த உரையாடல், தொடர்ந்தும் அவ்வாறே அவர் நடந்து கொள்வாரா, அதை விஜி எப்படி எதிர் கொள்வாள் போன்ற கேள்விகளை எழுப்புகிறது.

அலர்’, கதைசொல்லியின் தெருவில் வசிக்கும் தம்பதி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தேற்பட்டு மனைவி இறந்து விட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பிக்கிறது . வண்டியை ஓட்டிய கணவரின் அஜாக்கிரதையால் தான் இது நேர்ந்தது என்று தெருவில் பேச்சு, அத்துடன் அந்தக் கணவன் எப்போதுமே மனைவியிடன் கடுமையாகத் தான் நடந்து கொண்டான் என்பது போன்ற பழங்காலக் கதைகள் தூசி தட்டப் படுகின்றன. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கும் கதைசொல்லி, மரணம் நடந்த வீட்டிற்கு செல்ல நினைக்கிறான். இதுவரை வாசகன் நேரடியாக சந்திக்காத அந்தக் கணவன், மொத்தத் தெருவின் தீர்ப்பால் , எத்தகையை குற்றவுணர்ச்சியில் மூழ்கியிருப்பான், எப்படி மறுகிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது. அது கதையின் தலைப்பிற்கு பொருத்தமாக, பொது மனநிலையை சுட்டுவதாக இருந்தாலும், அதுவரையிருந்த கதையின் போக்கை, அதன் மையம் என்று வாசகன் எண்ணியிருந்ததை விட்டு விலகி, சிறிது நீர்க்கச் செய்கிறதோ என தோன்றுகிறது.

பெரு வணிக காய்கறி/கனி கூடங்களில், அதிகபட்சம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டு பொருட்கள் வாங்கி வரும் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் வழக்கொழிந்து விட்ட, தினசரி வீட்டிற்கு வரும் சிறு காய்கறி/பழ/பூ வியாபாரிகளையும், அவர்களுடனான, வீட்டிலுள்ளவர்களின் உறவு – வியாபாரத்தோடு குடும்பம் பற்றிய பேச்சு, அதிக உரிமை எடுத்துக் கொண்டு பொருட்களை திணிப்பது ஏற்படுத்தும் எரிச்சல் -, அதனூடே வீட்டிலிருக்கும் பெண்ணின் ஒரு பகல் பொழுதை துல்லியமாக சித்தரிக்கிறது ‘புரியாதவர்கள்’ கதை. இறுதி வரி, அதுவரை இருந்த சமநிலையை சிறிது குலைக்கிறதோ என்ற கேள்வி எழுதிகிறது.

ஒரு புனைவு அல்லது கவிதை எங்கு முடிகிறது, எப்படி முடிய வேண்டும் அதன் பின்னரும் அதை இழுத்துச் செல்ல வேண்டுமா என்று வாசகனுக்கு இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான். எழுத்தாளர் அவர் எண்ணிய கதையை – நாம் நினைப்பதை அல்ல – தான் எழுதியிருக்கிறார் என்றாலும் இத்தகைய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை – நாம் விரும்பும், நம்மை ஈர்க்கும் படைப்புக்களிலும் – என்று தோன்றுகிறது.

தொழிலின் நசிவு, அதனூடே ஒரு வாழ்க்கை முறையின் முடிவு, சுயத்தின் அழிவு போன்ற இழைகள் ‘குதிரை மரம்’ நெடுங்கதை/குறுநாவலில் இருந்தாலும், இயலாமையின் துயரத்தை வாசகன் உணர முடிகிறது. மகனை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருக்கும் பிரபுவிடம், அவன் மனைவி வத்சலா கோபமாக பேசிச் செல்ல,. வத்சலாவின் உறவினருடன் வேலைக்கு செல்ல நேர்கிறது. அங்கு ஒரு சூழலில், பிரபுவிற்கு தெரிந்தவர் முன், உறவினர் கடுமையாக பேசி விடுகிறார். அவமானப்படுதல் என்பது எப்போதுமே குறுகச் செய்வது தான் என்றாலும், தெரிந்தவர் முன், தெரிந்தவர்களால் முன் சிறிய இழிவுகள் கூட அதீத அளவிற்கு ஒருவனை சிறுமைப்படுத்தக் கூடியது. இந்தச் சூழலில், தன்னை விட்டு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் காலத்தை பிடிக்க முயற்சிக்கும் பிரபு, மீண்டும் தன் தொழிலை, வாழ்க்கை முறையை, சுயத்தை மீட்டெடுப்பானா ஒரு புறமிருந்தாலும், தோல்வியடைந்தாலும் கூட அவனை இந்த முயற்சி மட்டுமே சிறிதளவேனும் ஆற்றுப்படுத்தும், தன்னிருப்பை அவனுக்கே நியாயப்படுத்தும்.

எஞ்சும் இருள்’ கதையில், ஒரு சாதாரண பால்ய நிகழ்வு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதால் கதைசொல்லிக்கு ஏற்படும் சலிப்பு, ‘தற்கொலை முகம்’ கதையில், டாக்டரின் வாழ்க்கை வெளிப்படும் விதம் இவற்றை இந்தத் தொகுப்பின் கதைகளின் ஒரு பொது இழையாக கொள்ளலாம். வெவ்வேறு களங்களில் நிகழ்ந்தாலும், வேறுபட்ட பேசுபொருளை கொண்டிருந்தாலும், ஒன்றுமில்லாதது போல் முதலில் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் வேறு உருக்கொள்ளும் கணங்களின், இயல்பாக இருக்கும் மனநிலையில் விழும் கீறல்களின் நெசவு இந்தத் தொகுப்பு.

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

‘வேதாளத்தின் மோதிரம் – காலத்துகள் சிறுகதை தொகுப்பு’ வெளியீட்டு அறிவிப்பு

காலத்துகளின் சிறுகதைகள் சில, 12, ‘வேதாளத்தின் மோதிரம்’ என்று தொகுப்பாய் இன்று மாலை வெளிவர இருக்கின்றன. பதாகை நூல்கள் அனைத்தும் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டவை. இதுவும் அப்படியே.

காலத்துகளின் மொழிநடை தனித்தன்மை கொண்டது. அவரது வாக்கிய அமைப்பு உற்று நோக்கத்தக்கது, சிறுகதைகள் பரிசோதனைத்தன்மை கொண்டவை. அவர் எழுதியுள்ள பல சிறுகதைகளுள் முழுமையடைந்த சில மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை கதைகளையும் அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு கதைகள் விருப்பமானவையாக இருக்கும். எந்த ஒரு கதையும் இதில் உள்ள மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் குறைபட்டதில்லை, இன்று தமிழில் எழுதப்படும் சிறுகதைகளுடன் ஒப்பு நோக்குகையிலும் இதைச் சொல்லலாம்.

“நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை தமிழின் மிக சிறந்த வயதடைதல் வகை நாவல் எனச் சொல்வேன்‌. அறுபது எழுபதுகளில் பள்ளியும் கல்லூரியும் படித்த முதல் தலைமுறை கிராமத்து பட்டதாரிகளின் கதை. உலகமயமாக்கலை பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட தலைமுறையின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கதை என இத்தொகுதியை சொல்லலாம். நாஞ்சில் நாடனுடன் ஒப்பிடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று, கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற நாவல் தன்மை கொண்ட வாழ்க்கைச் சித்திர கதைகள் என ‘கிளி ஜோசியம்’, ‘யாருமற்ற மனை’, ‘மரிசா’, மற்றும் ‘வேதாளத்தின் மோதிரம்’ போன்ற கதைகளை சொல்லலாம். கதை வழியாக இந்த மனிதர்களை எந்த அளவிற்கு அறிகிறோமோ அதேயளவு கதைசொல்லியைப் பற்றியும் அறிகிறோம்.”

பதாகை – யாவரும் வெளியீடாக இன்று வெளிவரும் ‘வேதாளத்தின் மோதிரம்’ சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அளித்துள்ள முன்னுரை, அகழ்