பானுமதி ந

ஐம்பெருந்தீ- ந பானுமதி

பானுமதி ந 

இவள் பிச்சியைப்போல் அலறிச் சிரித்தாள். அடுத்த அறையிலிருந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு தந்த வலியில் இவளும் சிரித்தாள். இந்த இடங்களிலெல்லாம் அவள்களின் சிரிப்புதான்; வெறியாய், அழுகையாய், வலியின் உச்சமாய், உல்லாசமாய், உண்மையாய், பிச்சியாய் சிரிப்பதெல்லாம் அவர்கள் தான்.

நான்கு திசைகளிலும் தீ எரிந்து கொண்டிருந்தது; தலைக்கு மேலும் ஓர் அக்னி. ஊசிமுனையில், இந்த ஐந்து பெரும் வெப்ப வீச்சின் நடுவே அன்னை காமாட்சி தவம் செய்யும் கோலம். துவராடை அணிந்த திரு மேனி, எங்கும் ஆபரணம் பூணாத தவக் கடுமை. அந்தப் பொன் உடலில், தீயின் ஜ்வாலைகளின் நிழல் நின்று ஆடிய மாயத்தில் வார்க்கப்பட்ட சிலை. அம்மையை இப்படிச் செய்த அந்த சிற்பியை யார் அறிவார்? எப்போதும் போலவே அன்றும் சுகுணா கண்களில் நீர் திரள அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பொறுமையிழந்து ராதா ‘வாக்கா, போலாம், பசிக்குது’ என்று கையைப் பற்றி இழுத்தாள். என்றுமே இல்லாத அதிசயமாக அப்பா தன் பெண்கள் மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். தானும் சேர்ந்து சாப்பிட்டார். இவர்களின் அம்மா உயிரோடிருக்கையில் தன் மாமியார் வீட்டில் சாப்பிட்ட நிலாச் சாப்பாடு- ‘கேளு, சுகு, ஒரே ஒரு வெள்ளி போசி. அதுல நெய்யா மினுக்குது, முந்திரியும், திராட்சையும் முழிச்சுப் பாக்குது; கை கையா சக்கரப் பொங்கலு. என்னா ருசி,என்னா ருசி.’ அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; இறுக்கமற்ற அப்பா, சற்று உரக்கச் சிரித்தால், கைகளில் வளையல் சப்தமிட்டால், முகத்தில் பூச்சு அதிகமிருந்தால், கத்துபவர்; அவர் இருந்தால் வீடே மயான அமைதியாகிவிடும். படிப்பிலோ, சித்திரம் வரைவதிலோ, பேச்சுப் போட்டியிலோ, விளையாட்டுகளிலோ, எதில், அவர்கள் எந்தப் பரிசு வாங்கியிருந்தாலும், பாராட்ட மாட்டார், அந்தச் சான்றிதழ்களைக் கண்களால் கூட பார்க்க மாட்டார். அத்தகைய அப்பா, எப்படி இன்று இப்படி?

மறு நாள் காலை எழுந்திருக்கும் போதே பார்த்தாள் சுகுணா அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதை. இந்த வேளையில் எங்கு போயிருக்கப் போகிறார் என்ற எண்ணம் வந்தாலும் ஏதோ ஒன்று நெருடியது. தங்கைகளை எழுப்பி பள்ளிக்குத் தயார்படுத்தி, சமைத்து, இவளும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்தாள். மனம் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது. அவர் மறு நாளும் வரவில்லை என்றதும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார்கள். அவரது அலுவலகம் சென்று கேட்ட போது அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து கி மீ நடந்தே வருவது கூட அறியாமல் நடக்கத் தொடங்கினாள். இந்த இருப்புப் பாதை, இணையாகச் செல்பவை, எங்கேதான் போகும்? இரும்புப் பாம்பின் மேல் பட்டுத் தெறித்து கண்களைக் கூச வைக்கும் சூரியன் குருடாக்கப் பார்த்தான். இலையுதிர்த்து நின்ற மரங்கள், உனக்கு இனி நிழலில்லை என்றன. சருகுகள் கிடந்த நிலத்தில் பச்சைத் தளிர்களைப் பிய்த்துப் போட்டது யார்? இவளுக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி இறுதியாண்டில் இவள்; அடுத்த தங்கைக்கு 16 வயது; கடைசிப் பெண்ணிற்கு 9 வயது. அம்மா மூன்றாவது பெண்ணைப் பெற்ற ஓராண்டில் இறந்து விட்டார். அப்பா எங்கு போயிருப்பார்? ஏன் விருப்ப ஓய்வைப் பற்றிச் சொல்லவில்லை? அப்படியே வேலையை விட்டாலும் வீட்டை விட்டு ஏன் போக வேண்டும்? ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? மூவரும் பெண் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு தகப்பனா? இல்லை அவர் அப்படிப்பட்டவரில்லை-ஏதோ தோன்றி எங்கோ போயிருக்கிறார்-வந்துவிடுவார் சீக்கிரம்.

இவளைக் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்தில் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. யாருக்கு என்று குறிப்பிடாத கடிதம்-அன்போ, ஆசிகளோ சொல்லப்படாத ஒன்று. “நான் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்தப் பணத்தில் பாதியை சுகுணாவின் கணக்கில் போட்டுள்ளேன். அவளுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அம்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை. மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் இரண்டாம் மனையாக வர யாரும் சம்மதிக்கவில்லை. என் இச்சைகள் என்னை வரம்பு மீற வைத்துவிடும் என பயப்படுகிறேன்-என் பெண்களையே நான்….ஐயோ… நான் போய்விடுகிறேன், நீலாவோடு.”

இவள் புரைக்கேறச் சிரித்தாள். அவள் சிணுங்கிச் சிரிப்பது போலிருந்தது.

காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெறச் சென்றபோது சரவணன் பரிவுடன் பார்த்தான்; உதவுவதாகச் சொன்னான். உயிரான உறவு என்று நினைத்த அப்பனே ஓடிப் போய் விட்டான், இவன் நண்பனுமில்லை, உறவுமில்லை. என்ன உதவி கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதிலும் சிறு வயதிலிருந்தே போலீஸ் என்றாலே பயம்.அம்மா இறந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அவள் பக்கத்து உறவுடன் இவர்களுக்குப் பழக்கம் விட்டுப் போயிற்று. அத்தை மட்டும்தான் தந்தை வழியில். “உங்கப்பன் எப்பவுமே சொய நலம் புடிச்சவன். உங்க மாமன் ரிடயர் ஆகியாச்சு. வட்டியில கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குனு கடக்கோம். நீ கெட்டிக்காரி, சுகு. வெவரமா பொழச்சுக்க.” அத்தையை விட, அப்பனை விட தான் எப்படி கெட்டிக்காரியென இவளுக்குப் புரியவில்லை.

மூவரின் படிப்பும் குடும்பச் செலவுகளும் இவளை பயமுறுத்தின. வாடகை அதிகம் எனத் தோன்றி இடத்தை மாற்றினாள்; ஏதேதோ சொல்லி அட்வான்ஸை வீட்டுக்காரர் தர மறுத்தார். சரவணனிடம் போகலாமா என்று நினைத்தவள் தயங்கி விட்டுவிட்டாள்.

புது வீடு, கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம்; காற்று, வெளிச்சம் போன்றவை தவறியும் வராத இடம். ஆறு வீடுகளுக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை. எதிலும் தண்ணீர்க் குழாய் கிடையாது. கைபம்ப்பில் அடித்து எடுத்துச் செல்ல வேண்டும். சின்னவள் கௌரி கூடப் பரவாயில்லை, ராதாவைத்தான் சமாளிக்கவே முடியவில்லை. இளமையின் தலை வாசலில் நிற்பவள், அவள் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டாள், பறக்கத் துடித்தாள்.

‘நீ மட்டும் புதுப் புடவை கட்டிப்பியா? எங்களுக்கு யூனிஃபார்ம் தான் வாங்கித் தருவியா?’ என்று ஆங்காரப்பட்டாள்.

“காலேஜுக்கு நல்ல புடவ இல்லடி; உங்களுக்கும் புதுசுதான வாங்கிருக்கேன்.”

‘அப்பா பணத்த உனக்கு மட்டும்னு நெனைக்காத.’

அவளைத் திட்டுவதற்கு எழுந்த நாவை அடக்கிக்கொண்டாள்-நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு அழுகையும், பூசலும்?
இந்தத் தீ எப்போது பொசுக்குமோ, யாரறிவார்?

‘நா பௌடர் டப்பா வாங்கினப்போ கத்தினியே, இப்பக் கொழச்சுக் கொழச்சுப் பூசிக்கற.’ என்றாள் ராதா.

“இன்டர்வ்யூவுக்குப் போறேண்டி, நல்ல வேல இது, கடச்சா நம்ம ப்ராப்ளமெல்லாம் தீந்துடும்.”

நிரந்தரப் பணியில்லை அது. ஆனாலும், ஆறு மாதங்கள் அவளுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. அங்கே சங்கர் அறிமுகமானான். அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முக்கிய இயந்திரப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு தொழிற்கூடம் அவனுடையது.
இன்வாய்ஸ், டெபிட் நோட், பேமென்ட் சம்பந்தமாக அவளைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். தன் கடந்த காலத்தை அறியாத, தன்னைப்போலவே அதிகம் பேசாத, சுமாரான தோற்றமுள்ள அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அவளை விரும்புவதாகச் சொன்ன போது வானத்தில் பறந்தாள்; பதில் சொல்லவில்லை. அடுத்த முறை சந்திக்கையில் தன் கதையைச் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால், அவன் தன் அக்காவுடன் வீடு தேடி வருவானென சுகுணா எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராதா, கௌரி, அவள் என மூவரும் வீட்டிலிருந்த ஞாயிறு மதியம்; அவர்களைப் பார்த்த போதே ராதா முகம் சுளித்தாள்.

‘வீட்ல சுகு பெரியவ; எங்கள விட்டு ஓடிப் போன அப்பா மாரி இவள விட்டுட முடியாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? எங்களயும் சேத்து நீங்க பாத்துக்கணும், வேறென்ன பண்றது?’ சங்கரின் அக்கா அரண்டு போய் விட்டாள். இந்த அதிரடியை அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும், சிரித்துக்கொண்டே விடை பெற்றுச் சென்று விட்டார்கள். மறு மாதத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை இவளால் அடக்க முடியவில்லை; அது கண்ணீராகிக் கரைந்தது.
தான் ஏன் சங்கரைக் கல்யாணம் செய்து கொண்டு இவர்களைத் தவிக்க விட்டு விட்டுப் போக்க்கூடாது என்று குரூரமாக நினைத்தாள். அந்த எண்ணத்தின் சூடு அவளாலேயே பொறுக்க முடியவில்லை

இவள் தினமும் பார்க்கும் ஒரு குட்டையில் ஆகாயத்தாமரையாக மண்டியிருக்கும்; பாசியும் கரும்பச்சையெனத் திரண்டிருக்கும். இதென்ன பாழானகுளம் குட்டையாகிவிட்டதா? இதில் மீன்களாவது இருக்குமா? இப்போது இவள் வேலை பார்க்கும் சிறு அலுவலகம் செல்ல இந்தக் குட்டையை ஒட்டித்தான் செல்ல வேண்டும். அதில் அடுமனை, சுடுமனையில் பதார்த்தங்கள் செய்து சுற்று வட்டாரத்தில் கொடுத்து வந்தார்கள். சில்லறை வியாபாரிகள் அங்கே கொள்முதல் செய்ய வருவார்கள். தனியாட்களுக்கு நேர் விற்பனையில்லை. பூமியில் பதித்த அடுப்பில் அங்கே அள்ளி அள்ளிக் கரியைக் கொட்டுவார்கள். கணகணவென்று கனலும், தகிக்கும், ஆனால் தீ அணையக்கூடாது. நெருப்பில் வாட்டும் பண்டம்; தீயில் வேகும் பாண்டம். அலுவலகம் கூட அந்தக் குட்டையைப் போல இருப்பதாக நினைத்தாள் இவள். உயிர்ப்பே இல்லாத இடம்; சின்னஞ்சிறு செய்திகளை ஊதிப் பெரிதாக்கி ஆபாசமாகப் பேசி மகிழும் மனிதர்களுடன் இவள் வேலை செய்தாள். எல்லாவற்றிலும் வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள் இவளைப் பயமுறுத்தின; கூடிய விரைவில் இந்த வேலையை விட்டு விட வேண்டும். கண்களை மிதித்து, கண்களைத் தவிர்த்து, ஊரும் கண்களை உதறி, தன் கண்களால் எரித்து, ஒரு தீயைச் சூடிக் கொண்டாள். கண்களை மீறி கைகள் வர முயன்றன; தவிர்த்துக் கொண்டே தவித்தாள்.

‘ஒரு முப்பதாயிரம் வேணும். நா படிச்சிண்டே ப்யூட்டி பார்லர் வக்கப் போறேன்.’ என்று புது பிரச்சனையைக் கொண்டு வந்தாள் ராதா. எத்தனை சொல்லியும் கேட்காதப் பிடிவாதம்; அழுகை, சாப்பிடாமல் வீம்பு, இத்தனைப் பணத்திற்கு எங்கே போவாளிவள்? ஆனாலும், ஒரு நப்பாசை-ஒருக்கால், ராதா செட்டில் ஆகிவிட்டால் இவள் சங்கரை எப்படியாவது தேடிப் போவாள். அந்த எண்ணமே உற்சாகமாக இருந்தது. அந்தக் கம்பெனி முதலாளியிடம் கேட்டாள். ஒரு சூட்டின் தழும்பு ஆறும் முன்னே மற்றொன்று கோலை நீட்டுகிறது. பணத்தை தந்த முதலாளி பின்னர் உடலைக் கேட்டான்; உடல் அடகில் வைக்கப்பட்டது. புழுவெனத் துடிக்க வேண்டியிருந்தது, செவிடென நடிக்கப் பழகிக் கொண்டாள்.

ராதாவின் பார்லரில் ஓரினப் பாலியல் சேர்க்கை கட்டாயப் படுத்தி நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவளே சம்பளத் தகராறினால் கிளப்பிவிட, அவளைச் சேர்ந்தவர்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். ராதாவை போலீஸ் அரெஸ்ட் செய்தது.

முன்னர் அப்பாவிற்காக, இப்போது தங்கைக்காக மீண்டும் காவல் நிலையம். முன்னரே சூட்டில் வெந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நெருப்பு குளிர்ச்சியாக இல்லையே! இப்போது சரவணன் பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் ஏதோ தேடுவது இவளுக்குப் புரிந்தாலும், இனி என்ன செய்வது? தனிமையில் வெறி பிடித்துச் சிரித்துக் கரைந்து அழுதாள். நெருப்பில் வேகு முன், உயிரோடு எரிப்பது என்பது இதுதானோ, என்னவோ?

அந்தக் கடையும் கைமாறவே வேலை போய்விட்டது. ராதா வீட்டிற்குள்ளே முடங்கிப் போனாள். படிப்பும் பாதியில் நின்றது. அப்போதுதான் மின்னலெனத் தோன்றியது இவளுக்கு. முப்பதாயிரம் சம்பாதிக்கும் திறன் இவளிடம் இருக்கிறது. முயன்றால் இன்னமும் கூட சம்பாதிக்கலாம். இரவு நேர பேக் ஆஃபீஸ் வேலை என்று சொன்னாள். முதலில் 30% கமிஷனுக்கு ஒத்துக்கொண்டாள். அவன் பிறரிடம் 10% தான் வாங்குகிறான் எனத் தெரிய வந்த போது தன் அத்தனைத் தோல்விகளுக்கும் மொத்தமாக அவனைச் செருப்பால் அடித்தாள், ஆங்காரக் குரலெடுத்துக் கத்தினாள்.

“பொணந் தின்னிக் கழுகே, ஆரைடா ஏமாத்ற? வலியாப் போச்சுது பொழப்பு, சொரணயத்தும் நிக்குது. நாத்தமா வரானுங்க, இம்சிக்கிறானுங்க, காக்க கொத்தற மாரி கொல்றானுங்க. செத்துச் செத்து பொழக்கறேன் நானு. எம் உடம்பு நோக நீ கொள்ள அடிப்பியா? கொட்றா எம் பணத்த, புழுத்த நாயீ என்னைய இன்னான்னு எட போட்ட; காளிடா நானு, வைசூரிடா” கத்திக்கொண்டே அடித்தாள் அவனை. அப்பனையும், ராதாவையும், அந்தக் கம்பெனிக்காரனையும் நினைத்துக் கொண்டு அடித்துத் துவைத்தாள்.

‘தே… நாயே, உன்னயப் பொரட்டி அடிப்பேன்டி; கைமா பண்ணிடுவேன் கைமா; யார்ட்ட ஆட்ற? ஒரு ஆளு உனக்கு இனி வர மாட்டான் பாருடி, சிறுக்கி. எத்தினி பேருக்கு நா கொடுக்கணும் தெர்தா வுனக்கு? மேனி மினுக்கிகினு நீ பூடுவ. எங்கொத்தா தாலி நா அறுக்கணும்டி. என்னயவா அடிச்ச, பாத்துகினே இரு உன்னயப் பலி போட்டு உங்கிட்டயே மொத்த பணம் அட்ச்சுடுவேன். வும் மவுரறத்து வீசலேன்னா நா என்ன ஆம்பள? ஓங்கி அவளைச் சுவற்றில் அடித்து விட்டு அவன் போய்விட்டான். தலை புடைத்து வீங்கி வலித்தது. கௌரி மட்டும் அழுதது. இரயில் நிலையத்தில் எஃகுத் தூணில் மோதிக்கொண்டதாகச் சொன்னாள். இரு நாட்கள் கழித்து தொழிலுக்கு வந்தாள்

சும்மாதான் சொல்கிறான் என்று நினைத்தாள்; நாளைக்கு வந்தால் நைச்சியம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டாள்.

ஒரு வாரமாகத் தொழிலில்லை. அவனையும் காண முடியவில்லை. வாரம் மாதமாயிற்று. சரவணனிடம் சொல்லி காட்டிக் கொடுத்துவிடலாம் என்று கிறுக்குத்தனமாகத் திட்டமிட்டாள். மூவரும் விஷம் சாப்பிடலாமென நினைத்தாள். தங்கைகளை விட்டுவிட்டு தான் எங்காவது போய்விட்டாலென்ன என நினைத்தாள். ஓடிப்போன அப்பாவைப் பழித்த தான் மட்டும் இப்போ ஓடலாமா, அப்படியுமே எங்கே போக முடியும்? சங்கரோடு ஓடிப் போயிருக்க வேண்டும். இப்பவும் சிரித்தாள். சரவணனை நினைக்காமல் சங்கரை ஏன் விரும்பினாள் இவள்? அவன் நம்பிக்கையாகத்தானே தெரிந்தான். மனம் அவளைச் சுழற்றி அடித்தது; “இந்தச் சேற்றிலேயே உழல உனக்கு உள்ளூரக் க்ரூர ஆசை; குடும்பத்துக்காக உழைக்கறவன்னு ஊரு உன்னைக் கொண்டாடனும்; அப்பன் விட்டதைச் செஞ்சவன்னு உன் அத்த சொல்லணும்; உன் நிலை தெரிஞ்சா சங்கர் விட்டுப்போய்டுவான்னு கணக்குப் போட்டிருக்க நீ; ஆனா, சரவணன் சமாளிச்சிருப்பானோன்னு உதறின அவன. உனக்கு சில வைப்பாங்கன்னு மிதப்பு.”

இவள் பார்த்திருந்த காமாட்சி கோயிலில் ஒரு ஹோமம் செய்தார்கள் ஐந்து குண்டங்களில் தீ வளர்ந்தது; நெய்யும்,மலருமாகச் சொரிந்தார்கள்; விறகுச் சுள்ளிகள், விராட்டிகள் படபடவென்று வெடித்தன. புடவை, பூ மாலை, மங்கலப் பொருட்களை அக்னியில் வார்த்து பூரணாஹூதி நடந்தது. தீ குண்டத்திலிருந்து குதித்து எழுந்தது. காற்றில் நடனமாடியது. செந்தளிர் நாக்குகளால் உண்டு சிரித்தது. கங்கின் உஷ்ணம் அரங்கில் நிரவிப் பரவியது. இவளே அத்தனைத் தீயாகவும், அது உண்ணும் பொருளாகவுமான மாயமென்ன?

அன்றும் இவள் மனம் தளராமல் தொழிலுக்குக் கிளம்பினாள். அவனை அங்கே பார்த்ததும் பேச விரைந்தாள். ஒரு பெண்ணை முகத்தை மறைத்து அழைத்து வந்த அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் பக்கத்து அறையில் நுழைந்தான். முகம் தெரியாமல் ஆடை மட்டும் தெரிந்தது- அந்தக் கத்திரிப்பூ பாட்டமும், பிங்க் நிற டாப்ஸ்ஸும் இவள் அறிந்த வாசம்.

அதிர அதிரச் சிரித்தாள். எதிர் வரிசையில் பெரும் மர வரிசை மறைவில் நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து சரவணன் இறங்குவதைப் பார்த்தாள். பிச்சியைப் போல் இவள் சிரிக்க அவளும், அவள்களும் சிரித்தார்கள்.

பாமரம்

பானுமதி ந 

என் வீட்டருகே ஒரு மாமரம்
கீழ்க் கிளைகளில் கொத்துக் காய்கள்
மேலே வாசம் வீசி குறும் பூக்கள்
பட்டுச் சிறகுடன் அமரும் கிளிகள்
பதினாலாம் நாள் இரவில்
செய்தி என்னவென்றேன் மரத்திடம்
சிறகுகள் சுமப்பது பல்லுயிரின் சாரம்
இடம் வலமென அசைவது மகிழ்ச்சி
வல இடமென அசைவது துயரம்
பறக்கும் துடுப்புகள் பாரமென ஆகும்
பறத்தலும் அமைதலும் காலத்தின் கடன்
நிலைத்தல் எதிலென அலைவதும் கடன்
இயல்பென அதைப் பற்றுதல் எது
இயலாமையின் வெஞ்சிரிப்பு தானது

நேர்ச்சை – பானுமதி சிறுகதை

சிவன் கோயிலை ஒட்டி அதன் வடக்கே அந்தக் குளம் இருந்தது. நாற்புறமும் படிக்கட்டுகள் சீராக அமைக்கப் பட்டிருந்தன. நடுவில் நீராழி மண்டபம் காணப்பட்டது. மெல்லிய அலைகள், காற்றுக்குத் தன்னை ஒப்புவித்த இரகசியங்களைச் சொல்லின. குளத்தின் கீழ் படிக்கட்டில் கூட சப்பணமிட்டு அமரலாம் போலிருந்தது. பெரிய குளம். நீர் பளிங்கு போல் தெளிவாகத் தெரிந்ததில் வானம் ஒரு கடலென அதில் இறங்கி வந்ததைப் போலத் தோன்றியது. வட மேற்கில் குளத்தை ஒட்டிய பெரும் திண்ணை போன்ற அமைப்பில் அரச மரத்தின் கீழ் காலத்தின் சாட்சியாக பிள்ளையார் ப்ரும்மாண்டமாக அமர்ந்திருந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்தவற்றைத்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் அருகில் முணுக்முணுக்கென்று ஒரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. சுடரின் திசையைத் திருப்பி அதை அலைக்கழியாமல் செய்துவிட்டு ஒரு பெண் அவர் முன்னே கைகளைக் கூப்பி நின்றாள்-என்ன வேண்டுதலோ, முகம் நெகிழ்ந்து இறைஞ்சிக் கொண்டிருந்தது.

குளத்து நீரில் அந்த முகம் எழும்பி வந்தது; இவளைப் போலவே உடைந்து அழக் கூடுமென அச்சம் தந்த முகம். அரிய நாச்சி அம்மனின் கரு விழிகள் உறுத்துப் பார்த்திருக்க நான் நிலை கொள்ளாமல் தவித்த அந்த நாள். அம்மன் சின்னாளப் பட்டில் செம்மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்; நெற்றியில் படியும் கருங்குழற் கற்றையை சிறிதே காட்டி முடியை முற்றும் மறைத்திருந்த அந்தக் கிரீடம். அம்மன் அடியாளும் முடியற்றுத் தானிருந்தாள். அந்தத் தலையை மறைத்தது அவளது சேலை முந்தானை. அம்மனின் முகவாய்க்குழிவும், அவளின் கொங்கைகளிடையே வளைந்து இறங்கிய ஆரமும், இடை மேகலையும், வலது கரத்தில் ஏந்திய சூலமும், இடது கை சுட்டிய திருப்பாதமும்… என் கண்கள் அம்மனின் கணுக்காலையே பார்த்தன. வலக்காலை இடது தொடையில் வைத்து அமர்ந்திருந்த அந்தக் கோலத்தில் நான் நட்சத்திரக் குறி கொண்ட அந்தக் கணுக்காலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் காவி நிறத்தில் சேலையும், வெள்ளை நிறத்தில் இரவிக்கையும் அணிந்திருந்தாள். பின் கொசுவம் வைத்து கிராமத்துப் பெண்களைப் போல் சேலை கட்டியிருந்தாள். முண்டனம் செய்த தலை, அதில் சேலைத் தலைப்பையே முண்டாசு போல சுற்றியிருந்தாள். கடைசல் பிடித்த தேகம், சராசரியை விட அதிக உயரம், கைகள் கால் முட்டியைத் தொட்டன. நகைகள் எதுவும் அணியவில்லை, கழுத்தில் மட்டும் ஸ்படிக மணி மாலை இருந்தது அவளது வலது கணுக்காலிலும் அதே நட்சத்திரக் குறி.

வில்வம், கொன்றை, நந்தியாவட்டை, நாகலிங்க மரங்கள் கோயில் வளாகத்தில் காணப்பட்டன. இப்போது நான் உட்கார்ந்திருக்கும் குளத்திற்குத் தெற்கேதான் இந்த அம்மன் கோயில். நான் அரிய நாச்சி அம்மனை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். சியாமா இன்னமும் அங்கேதான் இருக்கிறாள். சியாமாவின் பிடிவாதம் தெரிந்த ஒன்றுதான் எனக்கு.

நாகஸ்வர ஒலி சிவன் கோயிலிலிருந்து வந்தது. பளபளவென்ற செப்புக் குடங்களில் குளத்தில் நீர் சேந்த வருகிறார்கள். நீர் நிரப்பும் சமயத்தில் ருத்ரம் சொல்லப்பட்டது; நிரம்பிய குடங்கள் கோயிலை நோக்கிச் செல்கையில் அப்பர் பாடலான ‘யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது’ என்ற பாடலை ஓதுவார் பாடுகையில் விதிர்த்துப் போனேன். சுவடே தெரியாமல் தான் நான் அதைச் செய்தேன்; கண்ணீர் ததும்பும் அவள் முகம் என்னிடத்தில் அதைத் தான் கேட்டது. அந்த நேரம் நான் அம்மனை நினைக்கவில்லை, இவர்களின் மரபை, தொன்மத்தை எதையும்…அந்தப் பசுங்குடில், மண் மெழுகிய தரை, மண் விளக்கு, மண் சட்டிகள், மண் கூஜாக்கள், மண்ணாலே திண்டமைத்துச் சமைத்த படுக்கை என்னை வேறொரு உலகிற்குக் கூட்டிப் போயிற்று.

நான் ஒரு தனி ஆய்வாளன். ஊர்களைச் சுற்றுவதில் தான் என் இருப்பையே உணர்வேன். ஒவ்வொரு இடமாகப் போய் அவர்களிடம் இருக்கும் வாழ்வியல் முறைகள், அவர்கள் கொண்டாடும் தெய்வங்கள் மற்றும் பண்டிகைகள், அவர்களிடம் சொல்வதற்கு மீதமுள்ள கதைகள் எனக்குப் பிடித்தமானவை. நீங்கள் கூட படித்திருக்கலாம்- ‘சஞ்சாரி’ என்ற பெயரில் நான் எழுதும் கட்டுரைகளை. என்னது-படித்ததில்லையா? நிஜங்கள் பிடிக்காது போலிருக்கிறது உங்களுக்கு. நான் சுவடிகள் படிப்பேன். அப்படித்தான் கிராமமும் இல்லாது நகரமுமில்லாது இருக்கும் இந்த ஊருக்கு ராகவன் சொல்ல வந்தேன். அவன் என் அண்ணன். நான் பிறப்பதற்கு முன் எங்கள் குடும்பம் இங்கே வசித்ததாம். அங்கே வந்த போதே ஏதோ பரபரப்பாக உணர்ந்தேன். என் உள் மனம் ஓடு ஓடு என்றது. இல்லை, என்னால் முடியவில்லை. நான் இருபது நாட்கள் தங்கினேன். சியாமா பிறந்த அன்று இரவில் அவளைக் கடத்தி ராகவனிடம் கொடுத்து ஜபல்பூருக்கு அனுப்பி வைத்தவன் நான்.

திரும்பவும் மேளச்சத்தம் கேட்டது. ‘சக்கனி ராஜ’ பாடலை ஆரம்பித்தார் அவர். ஆம், நல்ல பாதை இருக்க சந்து பொந்துகளில் அலையும் மனதை மாற்று இராமா என்று இறைஞ்சுகிறார் தியாகையர் இதில். ஆம், அவள் அப்படித்தான் கேட்டாள். அந்த மண் அறையின் பின் பாகத்தில் இரு பிரிவாகப் பிரிந்த நந்தவனம் பூக்களால் செழித்து வாசனையால் அழைத்தது. வளர்பிறையின் பதினான்காம் நாள் நிலவு வானில் பூரித்திருந்தாள். வெள்ளிக் கிரணங்கள் செடி, கொடி, பூக்களின் மேல் இருள் ஒளியென தவழும் காற்றில் மாயம் காட்டின. அர்த்தஜாம பூஜைக்காக அடித்த கோயில் மணி ரீங்கரித்துக் கொண்டு சுனாதமாகக் கேட்டது. நீண்ட பளபளப்பான வாலுள்ள பறைவைகள் இரண்டு கிளையிலிருந்து எழுந்து தாவிப் பறந்து சிறு நடனமிட்டு கூட்டுக்குத் திரும்பின. கொடி சம்பங்கி எங்கோ மறைந்திருக்கிறது தன் வாசத்தை மட்டும் என் நாசிக்கு அனுப்பி விட்டு. நான் இரவுப் பறவை. மூக்குத்திகள் மினுக்கும் வானம், இன்று நிலவின் ஒளியில் சற்று மங்கல்தான். ஒலிகள் அடங்கிய இந்தச் சூழல் மனிதர்களிடம் நிறையப் பேசுகிறது. அந்த மண் குடிலைத் தவிர ஆலய வளாகத்தில் மின் விளக்குகள் இருந்தன. அந்த நந்தவனத்தை ஒட்டி அமைந்திருந்த பெரிய அறையில் பிரிவு வாரியாக அடுக்கப்பட்டிருந்த ஏடுகளைப் படித்துக் கொண்டிருந்தவன் நிலாவில் நனைய சற்று வெளியில் வந்தேன். அதன் முகப்பில் அவளை எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோயிலின் வாழும் அம்மனென நேர்ந்து விடப் பட்டவள் அவள். அம்மனின் தினப்படி அலங்காரம் அவள் பொறுப்பு. மாலைகட்டுவது, சந்தனம் அரைப்பது, காலை, மதியம், மாலை, இரவு என்று நாலு வேளை பூஜையின் போதும் சங்கு ஊத வேண்டும்; அம்மனுக்கான நிவேதனங்களை அவள் தான் செய்ய வேண்டும். ஆடிக் கொடை, ஆவணி ஞாயிறு,, புரட்டாசி அஷ்டமி, மார்கழி ஆதிரை, தைப் பூசம் ஆகிய நாட்களில் பரிவட்டம் அவளுக்குத்தான் முதலில் கட்டுவார்கள்.

அந்தக் கோயிலில் அம்மனுக்கு சிலை செய்தவன் எப்படி அப்படி ஒரு நட்சத்திரக் குறியை கணுக்காலில் அமைத்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவளின் முப்பாட்டனாருக்குப் பாட்டனார் கோயில் கட்டி அதில் அரிய நாச்சியை உக்கிர முதல் தெய்வமென வழிபட ஆசைப்பட்டாராம். அவருக்குக் குழந்தைகளில்லை. ‘கருணையும், சாந்தமுமாக உன்னை நினைத்திருந்தேன்; உன் அழகில் ஒரு குறையில்லை;ஆனால், ஏன் பல முறை செதுக்கியும் அந்தக் குறி உன் பாதத்தில்?மூளியான சிலை என்று கோயிலையே கை விட இருந்தேன். ஒரு நாடோடி வந்தார்-“அம்மா வந்திருக்காடா, பரதேசிப் பயலே;கட்றா கோயில.” மறு பேச்சு உண்டா அதுக்கு?’ கோயில் சின்னதாக, நந்தவனம் பெரிதாக முதலில் இருந்திருக்கிறது. இப்போது பிரகாரத்தைப் பெரிதாக்கியிருக்கிறார்கள்; ஆனால் மரங்களை அழிக்கவில்லை.

ஒரு குழந்தைக்காக ஏங்கி ஏங்கி அவர் அம்மனையே சுற்றியிருக்கிறார். அவர் மனைவியோ அவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள். அவள் கண்ட கனவைச் சொல்லும் முதல் ஏடு இன்னமும் இங்கிருக்கிறது. “ஆயிரங் கண்ணுடையாள்;கையில் அமுதக் குடமுடையாள்; தாயாக வரம் தந்தேன்; குறியோடு குதலை வரும்;அதை மகிழ்வோடு எனக்குத் தா;பின்னும் பேறுண்டு;பெண் மகவு என் ஆணை” என்றாள்” என்று அந்த அம்மா புன்னகையும், வருத்தமுமாக அழுதிருக்கிறார். முதல் பெண் வலது கணுக்காலின் மேலே நட்சத்திரக் குறியோடு பிறக்க முதல் வருட நிறைவில் அவள் கோயிலுக்கு நேர்ந்து விடப் பட்டிருக்கிறாள். அவளுக்குப் பிறகு பிறந்த இரு ஆண்குழந்தைகளுக்கு அக்குறிகளில்லை. சொல்லி வைத்தது போல் ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் முதல் பெண் குழந்தை அப்படித்தான் பிறந்திருக்கிறது. கணக்குப் படிப்பும், ஜோதிடமும், திருமுறைகளும், எழுதுவதும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒரு கட்டளையென இதைச் செயல்படுத்த வேண்டி ஏடுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.

வாசலில் நின்றிருந்த வாழும் அம்மனை நான் வணங்கினேன். கண்களில் நீர் கோர்த்து முத்துச் சரம் போல் கன்னங்களில் ரச மணியாக உருண்டது.

“உன்னிடம் ஒரு உதவி வேண்டும்; அதை இரகசியமாகச் செய்ய வேண்டும். ஒரு அரை மணிக்கு முன்னால் பெண் பிறந்திருக்கிறாள், காலில் அந்தக் குறியோடு; பிள்ளை இன்னும் அழவில்லை; தாய் மயக்கத்தில் இருக்கிறாள். இந்தக் குழந்தையை எங்காவது எடுத்துக்கொண்டு போய்விடு. இந்த மண் சூழ்ந்த வாழ்க்கை என்னோடு போகட்டும். நான் அம்மனின் அடியாள் தான். ஆனால், என் வாழ்க்கையில் அவளுக்குத் தானே முக்கிய இடம். என் இளமை, என் கனவு, என் குடும்பம் என்று எதுவுமே இல்லையே; என் தனிமைகள் இவர்கள் அறியாத ஒன்று. திரும்பத் திரும்ப செய்யும் இதில் ஒரு யந்திரத்தனம் வந்து விட்டது. என்னால் முடிந்தது இவளை உன்னிடத்தில் கொடுப்பதுதான்.”

நான் திகைத்தேன்; இது என்ன விபரீதம்? இவர்களின் குல தர்மப்படி இந்தக் குழந்தை கோயில் சொத்தல்லவா? பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நான் எங்கு போவேன்? நான் அவளுக்குப் பதில் சொல்ல வாயெடுத்தேன். அவள் குழந்தையை என் காலடியில் வைத்தாள். பதறினேன்.

“பயப்படாதே. உன் தகப்பனை எனக்குத் தெரியும். அவர் எனக்குத் தோழனாக இருந்தவர்; அதனாலேயே அவமானப்பட்டு துரத்தப்பட்டவர். உடலை வைத்து கன்னிமையைக் கணிக்கும் இந்த உலகில் நான் இன்னமும் கன்னிதான்; அவர் குரு எனக்கு. போ, எடுத்துக் கொண்டு போ. உன் காரில் எல்லாம் வைத்திருக்கிறேன். உன் அப்பாவின் நல்லொழுக்கத்தின் மீது ஆணை.”

காரில் சிறு பிரம்புத் தொட்டிலில் படுக்கை போட்டு முன்பக்க சீட்டின் அடியில் வைத்திருந்தாள். இரு ஃப்ளாஸ்க்-வென்னீரும், பசும் பாலும்; அதில் சிறு குறிப்பு; குட்டிஃபீடிங் பாட்டில், இங்க் ஃபில்லர், முக்கோண முக்கோணங்களாய் தைத்து அடுக்கப்பட்ட நாப்கின்கள். ஆறு சிறு துண்டங்கள்-நுனியில் முடிச்சிட்டு குழந்தைக்கு அணிவிக்க. மற்றொரு கூடையில் எனக்கான பழங்கள், தண்ணீர். நான் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் பெட்டி, என் குறிப்புகள் உள்ள புத்தகங்கள், என் இதர சாமான்கள் டிக்கியில் ஏறின.

நான் கிராதிக் கம்பிகளுக்கிடையே தூங்கா விளக்கில் அரிய நாச்சியைத் திரும்பிப் பார்த்தேன்; அம்மன் உறுத்துப் பார்ப்பதைப் போல், சூலத்தை ஏந்தி அருகில் வருவது போல், என் உடல் சிலிர்த்தது. இதுவும் அவள் செயல்தான் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

ராகவன், சியாமாவை ஏற்றுக் கொண்டது பெரிதில்லை; அமுதா அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். ஒரு வாரத்திற்குப் பிறகு அவள் காரில் பதுக்கி வைத்திருந்த கடிதத்தை நிதானமாகப் படித்தேன்.

“ஆசிகள். இந்த விண்மீன் குறி எனக்குப் புரியாத ஒன்றுதான். அதில் ஏதோ செய்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும். இந்த வாழ்வு இதன் மூலம் விதிக்கப்பட்டதைத் தவிர நான் ஒரு செய்தியும் அறியவில்லை. ஆனாலும், இந்த விந்தையை முற்றாகத் தள்ள முடியவில்லை. ஏன் தலைமுறை விட்டு தலைமுறை இப்படிப் பெண் பிறக்க வேண்டும்? ஏன் ஆண் குழந்தைகள் இக்குறியில்லாமல் பிறக்கின்றன? என் முப்பாட்டனாரின் பாட்டானார் மனைவி அம்மனிடம் தன் முதல் பெண்ணை நேர்ந்து விடுவதாக வேண்டிக் கொண்டிருக்கலாம்; அதை அம்மனின் கட்டளையெனச் சொல்வதை வசதியாக உணர்ந்திருக்கலாம். அவள் அம்மன் பெயரைச் சொல்லி இதைச் செய்ததால் அப்படியே தொடரட்டும் என்று அம்மனும் விளையாடிக் கொண்டிருக்கலாம். எதுவாகத்தான் இருக்கட்டுமே.

உனக்கு சில கேள்விகள் இருக்கலாம். அன்று பிறந்த குழந்தைகள் இரண்டு. ஆனால், அந்த இன்னொரு பெண் குழந்தைக்கு நட்சத்திரக் குறியில்லை. உன்னிடம் கொடுத்த குழந்தைக்குத்தான் இருந்தது. யாரும் அருகிலில்லை; இரு குழந்தைகள் பிறந்தது அவர்களின் அம்மாவிற்கே தெரியாது. எனக்கு இது எவ்வளவு வசதி! நீ நன்றாக வளர்த்து அவளை எல்லோரையும் போல் வாழவிடுவாய் என எனக்குத் தெரியும்; நீ என் குருவின் மகன்.

நான் இன்னும் தீவிரமாக அம்மனிடம் பக்தி செய்வேன். என் விழைவுகள் வேறாக இருந்தாலும், நான் அம்மனின் அடியாள் தான். அப்படித்தான் இருக்கவும் முடியும். இனி நட்சத்திரக் குறியோடு பிறப்பவர்களை என்ன செய்வாய் என நீ கேட்கலாம்; அது காலத்தின் கையிலுள்ள பதில். ஆசிகள்.”

அரிய நாச்சி கோயிலிலிருந்து சியாமா குழப்பங்களுடன் வந்தாள்.’ சித்தப்பா, இந்த ஸ்டார் மார்க்’ என்றாள். “நீ பயோ டெக் படிக்கிறாய் கண்டுபிடி” என்றவாறே காரை இயக்கினேன்.

கலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்

கலைந்த கீதம்

சிறு வட்டம் பின்
பெருவட்டம் எனச்
சுற்றியது தனித்து
கடந்த கூட்டுப் பறவைகள்
வியந்து பார்த்து விரைந்து போயின
வான் மேக வீணைக் குடங்கள்
தொட்டு தந்தி மீட்டிப் பார்த்த புள்
கலைந்த கீதம் எதையோ கேட்டது.

காலம்

இலை வகிட்டில் தத்தித்தத்தி ஒரு நடனம்
அகல் விளக்கை சுற்றும் சிறு காற்று
மணல் மேட்டில் நெளியும் ஒரு நாகம்
சிதை காட்டில் எரியும் இந்த சடலம்.

பிசகு

செம்பழுப்பும், மஞ்சளும் கலந்த புள்ளி
நீலமும் பச்சையும் உலவும் ஒளித் தினவு
பால் வெண்ணீறீன் சாயத்தில் தோய்த்த அழகு
பறவை என்றால் இதைத்தான் நினைக்கிறாய்
கருஞ் சிறகுகள் கவனத்திலுமா பிசகும்?

விழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை

லிபரலைசேஷன், குளோபலைசேஷன், பிரை வடை சேஷன் என்ற சேஷன் கள் ஆதிக்கம் புரிந்து கொண்டிருந்த 92 இல் நம் கதாநாயகன் பாலசங்கரனுக்கு 24 வயது. அன்று எழுந்திருக்கும் போதே மனது பரபரவென்று இருந்தது பாலசங்கரனுக்கு. பின்புற வேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்த மலர்ந்தும் மலராத பொழுது. அபூர்வமான செண்பக மலரின் வாசம் எங்கிருந்தோ வீசிக் கொண்டிருந்தது. தரையில் வெள்ளை வேட்டியை விரித்து பவழ மல்லி மலரை வழக்கம் போல பங்கஜம் மாமி சேகரித்துக் கொண்டிருந்தார். இளங்காலையின் அமைதியில் அவர் பாடிக் கொண்டிருக்கும் ‘கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா’ என்ற பாடல், தென்றலின் வருடல் போல செவிகளில் எட்டி உட்புகுந்தது. மொட்டை மாடியில் நின்று பார்த்த பாலசங்கரனுக்கு நீலத் தண்டிலிருந்து இள மஞ்சள் பூவெனக் கிளம்பும் சூரியன் சொல்ல முடியாத சந்தோஷத்தை அளித்தான். இன்னமும் பிடிவாதமாக வானில் தென்பட்ட நிலா அவனை புன்னகைக்க வைத்தது. எதிர் வரிசையில் நின்ற சிறு மரக் கூட்டங்களிலிருந்து பறவைகள் உற்சாகமாகத் தங்கள் சிறகுகளை விரித்துப் பறந்து நான்கு புறத்திலும் பார்த்தன. அடக்கமாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டே ஜிவ்வென்று பறந்து செல்லமணி நாடார் கடையின் முன் சிதறியிருந்த தானியங்களைக் கொரித்தன. காக்கைகள் அரிசி மணிகளைக் கொத்தினால், குருவிகள் பயிறு வகைகளைக் கை பார்த்தன. தென்னை மரத்திலிருந்து வெகு வேகமாக இறங்கி வந்த அணில் குஞ்சு பாதியாய்க்கிடந்த கொய்யாவை முன்னங் கால்களால் பற்றி பற்களைப் பதித்து ருசி பார்த்தது. அதன் ஒய்யார வாலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கறவை மாடுகள், கன்றுகளின் வாசமாவது வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே மடி கனக்க, மணி ஒலிக்க நடந்து கொண்டிருந்தன. கோயில் யானை குளிக்கப் போகிறது போலிருக்கிறது. அதன் நடையின் விரைவும், உலகையே வென்றவனைப் போல் அதன் மீதிருந்த பாகனும் ‘உலகம் இன்பமயம்’ என்று சொல்லின.

“காலங்காத்தால மேக்கையும் கெழக்கையும் பாத்துண்டு நின்னா எப்படி வேலயாகும்? ஒரு கீத்துக் காய்கூட இல்ல; போய் வாங்கிண்டு வாங்கோ சீக்ரமா, அப்றம் ஆஃபீசுக்கு நேரமாச்சுன்னு பறப்பேள்; என்னது, இப்ப வந்திருக்காதா? தட்டி கழிச்சுடுங்கோ எல்லாத்தையும்; என்னது, காஃபி குடிச்சுட்டுப் போறேளா, டிக்காஷன் இன்னும் இறங்கல, லொட்டு லொட்டுன்னு தட்டித்தட்டி கைதான் சுட்றது; காய் வெளைஞ்சான் சந்தேலேந்து மணி மணியா இப்ப வந்திருக்கும்; போய்டு வாங்கோ. நல்ல ஸ்டராங்க் காஃபி போட்டுத் தரேன் நீங்க வந்தோன்ன.”

இப்போதைக்கு காஃபி கிடைக்காது என்றான பிறகு அவனுக்கும் வேற வழியில்லை. நடேசய்யர் கடையில் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் காஃபி கிடைக்கும் என்று சுப்புணி சொல்லியிருந்தாலும் பால சங்கரனுக்கு வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கமில்லை. அவன் வயிறு அப்படிப்பட்டது, தாகத்திற்குத் தண்ணீர் கூட வெளியில் குடிக்க முடியாது அவனால். வீட்டில் அவன் மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். அவன் மாமனார், மாமியார், அவனுடைய சின்ன மாமனார், சின்ன மாமியார். அவனுக்கு அவர்கள் தான் சீதனம். சும்மா, சொல்லக்கூடாது, அத்தனைக் கிழத்திற்கும் பயங்கர சொத்தும் அதிலிருந்து வருமானமும் வருகிறது. இவனது மனைவி அவர்கள் குடும்பங்களின் ஒரே வாரிசு. பெண் பார்க்கப் போகும் போதே அவன் மாமனார் சொல்லிவிட்டார்-‘என் தம்பிக்குக் கொழந்தேளில்லை. எனக்கும் லல்லி ஒரே பொண்ணு; அதுவும் காலம் தப்பிப் பொறந்தவ. இப்ப எம் பொண்டாட்டிக்கு கொஞ்சமாத்தான் வேல செய்ய முடியும்; எங்க தம்பி ஆம்படையா எல்லாரையும் பாத்துப்போ, எல்லாமும் செய்வோ; கூடி வாழ்ந்தா கோடி நன்ம, என்ன சொல்றேள்? எல்லாரும் உங்களோட தான் வந்திருக்கணும்; எங்களால இனி குடும்பத்தையெல்லாம் தனியா நடத்த முடியாது. சொத்து சுகமெல்லாம் உங்களுக்குத்தான், மாப்ள..’

அவன் அப்பா ‘பொண்ணத் தானடா பாத்துருக்கோம். நிச்சயமா பண்ணிட்டோம்? இது நடமுற இல்லடா; வேணாம்னு சொல்லிடு.’ என்றார். அவன் சொல்லவில்லை, அவள் அழகு அப்படி, அவளுடன் வரும் பணம் அப்படி. குடும்பக் கவலைகள் அற்று அக்கடாவென்று இருக்கலாம் என நினைத்தான்.

நடைபாதைக் கடைகள் திறந்தாகிவிட்டன. பச்சைப்சேலென்று கீரையும், மினுமினுவென்று வயலட் கத்திரியும், பிஞ்சு வெண்டையும், முற்றாத அவரையும், கொத்தவரங்காயும், நீள் புடலையும், கைகளை விட நீளமான முருங்கையும், தளதளத் தக்காளியும், பச்சைத் தாள்களுடன் முள்ளங்கியும், அசுர வளர்ச்சியில்லாத பச்சை மிளகாயும், பசும் குறு மிளகுக் கொத்தும், வாடாத கொத்தமல்லியும் கூவிக் கூவி அழைத்தன. மஞ்சள், சந்தனம், குங்குமம், கோல மாவு, தாமரை, ரோஜா, மல்லி, கதம்பம் என்று ஒவ்வொன்றின் முன்பும் சில பேர் நின்றிருந்தனர். கோயிலில் ஓதுவார் இந்தத் திருக்காட்சியைக் காணாமல் போகலாமா நீ என்ற சம்பந்தர் பதிகத்தை மனமுருகிப் பாடிக்கொண்டிருப்பது அந்தக் கம்பீரக் கோயிலின் ஞான விளக்காகப் பிரகாசித்தது. இசையும், இறையும், தமிழும் என்னவொரு ஒத்திசைவு என்று மனம் அந்தப் பதிகத்தைத் தானும் வாங்கிப் பாடியது.

‘மட்டிட்ட புன்னையம் கானல் மட மயிலைக்

கட்டிடட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’

காய்களை வாங்கிக் கொண்டான்- இதில் எந்தக் கிழம் (!) கயாவில் எந்தக் காயை விட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்வது அவனுக்கு லத்தீனை விடக் கடினம். அவன் சாப்பாட்டில் வெண்டை, முருங்கை,(சில நாட்களில் மட்டும்) கேரட் நிச்சயம் உண்டு; என்ன ஒன்று, அவை மட்டும்தான் உண்டு. வாங்கிக் கொண்டு திரும்பும் போது தள்ளு வண்டியில் அதைப் பார்த்தான். இளம் பெண்கள் அணியும் மெல்லிய ரோஸ் வண்ண தாவணி நிறம், அதைப் போலவே ஒளிபுகும் எழில், தலைப் பகுதியில் சீரான சிறு வெண் முழி சிலவற்றில், ஒட்டிப் பிறந்த பெண்கள் போல ஒரே அளவில், குவியலில், அவைகளின் உடன் பிறந்த செவ்வொளியில் சாய்வாகக் கதிர் பட்டு மின்னும் அழகோ சொல்லி மாளாது. ‘என்னையும் வாங்கேன்’ என்று அவை கெஞ்சின, கொஞ்சின; வாங்கி விட்டான் துணிந்து. அவளை எப்படியாவது சமாதானம் செய்து இன்று அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் செய்யச் சொல்ல வேண்டும். நினைக்கையிலேயே நாவில் நீர் ஊறியது. சுப்புணி செய்யும் கேலி நினைவில் வந்து ரோஷம் வந்தது. ‘அப்பா, சங்கரா, உனக்கு ஜன்மத்ல இல்லாத பலதுல வெங்காய சாம்பாரும் ஒண்ணு. மொறு மொறுன்னு ரவா தோசைல பொடிப் பொடியா ஆனியன் தூவி ராயர் மெஸ்ஸுல கொடுப்பா பாரு, அதெல்லாம் நள பாகம்ன்னா; பாவம்டா நீ, வெளில சாப்ட மாட்டேங்க்ற.’

உண்மைதான் என்று நினைத்தான் அவன். திரும்புகையில் வெயில் சற்று ஏறிவிட்டது. குரல்களென ஒலித்தவை கூட்டுக் கத்தலெனக் கேட்டது. குளித்து வந்த யானை அது அத்தனை விரைவில் முடிந்ததை எண்ணி தளர் நடையில் வந்தது. உலா முடிந்த ஏக்கத்தில் மாடுகள், வயிறு நிறையாத சோர்வில் கன்றுகள், அணில் பிள்ளையைக் காணோம், உரத்த குரலில் பங்கஜம் மாமியின் கணவர் குளிப்பதற்கு வென்னீர் கேட்டு கத்திக் கொண்டிருந்தார். செல்லமுத்து நாடார் கடையில் விளக்குமாறைப் பார்த்தவுடன் அத்தனைப் பட்சிகளும் பறந்து போயிருந்தன. அவனை சோர்வு அப்பிக் கொண்டது.

“இப்ப யாராவது வெங்காயம் வாங்குவாளா? மாளய பக்ஷம் இல்லையா? அப்புறம் சுந்தர காண்ட பாராயணம், நவராத்திரில நம்மாத்ல உண்டே? கலசம் வேற வைச்சுன்னா தேவி பூஜை? காசக் கரியாக்கறேள்.”

‘நீ முதல்ல காஃபி கொடு, அப்றமா எனக்கு அர்ச்சன செய்யலாம்; வெங்காய சாம்பார் சாப்ட என் வீட்ல எனக்கு உரிமையில்ல, நீங்க சாப்பிடாட்டி என்ன, எனக்கு மட்டுமாவது பண்ணேன்.”

அவள் பதிலே சொல்லவில்லை. அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் வெங்காயக்கூடை காலியாக இருப்பதைப் பார்த்தான். கோபம் தலைக்கேறியது. ஒரு மாதத்திற்குத் தேவையில்லையென்பதால் அது மொத்தமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போய்விட்டது என்று அவள் சொன்ன போது அவனுக்கு அவமானமாகக் கூட இருந்தது. அவன் அன்று மதியம் தான் சுப்புணியிடம் கேட்டு அரைத்துவிட்ட சாம்பார், வெங்காய வத்தக்கொழம்பு, வெங்காய கொத்ஸு, வெங்காய பக்கோடா போன்றவற்றின் சமையல் குறிப்புகளை சிரத்தையாக எழுதி வந்திருந்தான். அவள் அருகில் சென்றான்- “நா ஒரு நா செத்துப் போவேன். அப்போ, சாஸ்திரிகளுக்கு வெங்காய தானம் மட்டும் பண்ணிடு; இல்லேன்னா, பேயா உன்னப் புடிச்சுடுவேன்.” அவன் கோபம் அவ்வளவுதான் .காதுகளைப் பொத்திக்கொண்டு ‘ராம, ராம, சாயறக்ஷல பேசற பேச்சைப் பார்.’ என்றாள்.

இதுகளெல்லாம் என்ன ஜென்மம் என்று ஆற்றாமையாக வந்தது அவனுக்கு. பசிக்கு மட்டுமே சாப்பிடும் ஜந்துக்கள், ருசி தெரியுமா இதுகளுக்கு. தன் இள வயதில் இறந்து போன அம்மா நினைவில், அவனுக்கு கண்களில் தன்னிரக்கத்தால் நீர் வந்தது. ஏழு வயதில் ஒன்றும் சாப்பிடாமல் அடம் பிடித்ததும், அம்மா அவன் கேட்டான் என்பதற்காகவே கையளவு உளுந்தை அம்மியில் அரைத்து வடை தட்டித் தந்ததும் இரவு முழுதும் அவனை அரற்ற வைத்தன.

அவனுக்கு ஐம்பது வயது (சரி, 52)ஆகிவிட்டது இப்போது. இரட்டையராகப் பிறந்த பெண் குழந்தைகள்; அவர்கள் தாத்தா, பாட்டிகளின் வளர்ப்பு, வார்ப்பு. அவன் வைப்புத் தொகை இழந்த வேட்பாளன். பதினெட்டு வயதில் மாமனார் அன்ட் கோ அவர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்- ‘மாலையும் கழுத்துமா அவாளப் பாக்க வேண்டாமோ?’ என்ற டயலாக் வேறு. இந்த வாழ்வில் எல்லாம் அவனுக்குக் கிடைத்திருப்பதாக ஊரும், உறவும் சொல்லும் போதெல்லாம் அவன் உள்ளூரக் குமைவான். கேவலம் ஒரு வெங்காய சாம்பார் அவனுக்குக் கிடைக்கவில்லை, வயிற்றுக் கோளாறைச் சரி செய்யவும் முடியவில்லை, அதனால் துணிந்து வெளியிலும் சாப்பிட முடியவில்லை; என்னத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனத் தனியே நொந்து கொள்வான்.

அன்று வேலை பார்க்கும் இடத்தில் சிறு வாக்குவாதம். அவன் மூடே மாறிவிட்டது. ஏற்றாற் போல் ஸ்கூட்டரும் எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. அவனது மெக்கானிக் ‘நாளைக்குத்தான்’ என்று சொல்லிவிட்டார். பேருந்தில் வழிந்த கூட்டத்தைப் பார்த்த அவனுக்கு அதில் ஏறும் துணிச்சல் வரவில்லை. நடந்து போகத் தீர்மானித்தான். தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?வீடு, அலுவலகம்,கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகள், மனம் சரியாக இல்லாத நாள் பார்த்து மக்கர் செய்யும் ஸ்கூட்டர், பன்னிரண்டு வருஷப் பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்த மெக்கானிக்,அனுசரணை யா, கேலி யா எனப் புரியாத விதத்தில் பேசும் சுப்புணி. என்ன வாழ்க்கை உன் வாழ்க்கை என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.

எப்போதாவது அவனுக்கு வரும் கோபம் போல வானம் திடீரென்று இருண்டது. சட சடவென்று பெரும் துளிகள் மேனியை அறைந்தன. மனிதர்கள் ஓடி கடை வாயில்களிலும், வீட்டுச் சார்புகளிலும் நின்று கொண்டனர். அவன் ஓடிச் சென்று நின்ற இடத்தில் ஒருவர் மேடையில் அமர்ந்து உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். நாற்காலிகள் காலியாக இருக்கவே அவன் சென்று அமர்ந்து கொண்டான்.

“வாசன இருக்கே, அது தான் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம். நல்ல வாசன இருக்கே அது புண்யம் தரும், ஆனா, பொறப்லேந்து விடுதலயில்ல;கெட்ட வாசன, அதுவும் பொறப்லேந்து வெட்டி விட்றாது, ஈனமா நடக்க வச்சுடும். இன்னிக்கு மாரியே அன்னைக்கும் பேய் மழ. ஊழி முதல்வன் உருவம் போல மெய் கருத்து வானத்தையும், பூமியையும் மஹா சரடால அவன் நெய்யறான். இப்பத்த மாரி அப்ப வசதி கடையாது பாருங்கோ, ஊரே இருளோன்னு கிடக்கு. தக்ஷ நாகம் மாரி மின்னல் நெளிஞ்சு ஆட்றது. பீமனும், துரியோதனனும் கதையால அடிச்சுக்கற மாரி இடியான இடி. காளி ஊழிக்கூத்து ஆட்றா. அப்பப் பாருங்கோ, மச்சுல படுத்துண்டு இதையே பயமா, ஆர்வமா பாத்துண்டு ஒரு பொண்ணு. ரத்னாவளி, ரத்னாவளின்னு பேரு. அசட்டுத்தனமா அவர் ஏதும் பண்ணாதிருக்கணுமேன்னு அவ நெனைச்ச அடுத்த நொடி தடார்ன்னு ஒரு சத்தம். மாடி வரண்டாவுல ஒத்தன் குதிச்சுட்டான்; தக்ஷ மின்னல்ல தன் ஆத்துக்காரர்ன்னு அவளுக்குத் தெரிஞ்சுடுத்து. அது மட்டுமல்ல, அவர் இந்தக் கொட்ற மழல யமுனா ஆத்து வெள்ளத்ல நீந்தி தோட்ட மரத்ல தொங்கற ஏதோ ஒன்னப் புடிச்சுண்டு இப்படிக் குதிச்சிருக்கார்ன்னு தெரியறது.

மரத்ல ஏது கயிறுன்னு யோசிக்கறப்பவே ஜகஜ்ஜோதியா மின்னல் .ஒரு தடிமனான பாம்பு தொங்கிண்டிருந்தத பாத்தா ரத்னாவளி. ‘எங்கிட்ட இருக்ற மோகத்ல நூத்ல ஒரு பங்கு ராமர் கிட்ட இருந்தாத் தேறுவேளேன்னு அழுதா. சொன்னா,

“காம எஷ க்ரோத எஷ ரஜோகுண சமுத்பவ:

மஹாக்ஷணோ மஹா பாப்மா வித்யேனமிக வைரினம்.”

“ராம் போலா, கரும்புகை தீயைச் சூழும்; தூசியோ கண்ணாடிய மூடும். வாசனை மனுஷ மனசக் கெடுக்கும்”

அதுதான் அவருக்கான மந்த்ர உபதேசம். அவ கால்ல அப்படியே விழுந்தார். அப்றம் சன்யாசியாகி ‘ராம் சரித மானஸ்’ என்ற மஹா நூல எழுதின துளசிதாசரானார்.’

பால சங்கரனுக்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது. அரங்கில் ஆட்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு விளக்காய் காவலாளி அணைத்துவர இவனுக்கு ஒவ்வொரு தீபமாய் ஒளி விட்டது. அருகில் வந்த அவர் ‘கிளம்பும் நேரம், சார்’ என்றார். வெளியில் வானம் கொட்டி முடித்து வைரங்கள் சிதறிக் கிடக்க பெரும் நெசவெனக் காட்சிப்பட்டது. இருளும், ஒளியுமாக கோயில் கோபுரம் உயர்ந்து நின்றிருந்தது.’ஓம்’ என்பது ‘ஆம்’ எனக் கேட்டது.அதே நேரம் தெருவோரக் கடைகளில் மழைக்கு இதமாக எண்ணெயில் பொரித்த மசால் வடை யும் பக்கோடாவும் அவன் நாசியை துளைத்தது.