பீட்டர் பொங்கல்

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 2

திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்லுதல்

ஜுஸ்ஸாவாலாவின் கண்கள் உற்றுநோக்கிக் காண்கின்றன என்பது மட்டுமல்ல, அதனினும் ஓர் இந்தியனிடம் காண்பதற்கரிய இயல்பு, பிற மனிதனின் திறமையை ஒப்புக் கொள்ளும் மனவிரிவு, அவரிடம் உண்டு. “சுதீரை நினைவுகூர்தல்,” என்ற கட்டுரையில் எஜகீலைக் காட்டிலும் குறைவாகவே அறியப்பட்ட, இன்று ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஒரு நண்பரைக் குறித்து எழுதுகிறார் அவர். சுதிர் சொனால்கர் ஜுஸ்ஸாவாலாவின் சமவயதினர், ஜுஸ்ஸாவாலா போலவே அவரும் தனித்தியங்கும் பத்திரிகையாளராய் நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவர் தன் ஐம்பதுகளின் ஆரம்பப் பருவத்தில் 1995ஆம் ஆண்டு காலமானார், மதுபானம் அவரை அழித்தது. சொனால்கர் குறித்து தாளவொண்ணா நுண்ணுணர்வுடன் எழுதுகிறார் ஜுஸ்ஸாவாலா. அவரது கட்டுரையில் இரட்டைச் சித்திரம் உருவாகிறது- ஆம், சொனால்கரின் உருவம் ஒன்று, ஆனால் அதனுடன் ஜுஸ்ஸாவாலா தீட்டும் சித்திரமும் தோன்றுகிறது, கண்ணாடியின்மீது நடந்து செல்லும் பூனையின் அமைதியுடன் அவரது வாக்கியங்கள் நம்மைக் கவர்ந்து செல்கின்றன. (more…)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 1

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

பம்பாய் பல்கலைக்கழக மாணவனாய் புகுபதிவு செய்துகொள்ள நான் 1966ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் அலகாபாத்திலிருந்து பம்பாய் வந்தபோது எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. என் பெற்றோர்கள் முலுந்த் பகுதியில் எனக்கு இடம் பார்த்திருந்தார்கள், ஆசிரமம் போன்ற அதை ஒரு பெண் கவனித்துக் கொண்டிருந்தார், அவரை நாங்கள் மாஜி என்று அழைத்தோம். அவரது பெயர் பிரிஜ்மோகினி சரின். என் பெற்றோர் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுக்கு மாஜி ஒரு குருவாய் இருந்தார். மெலிந்த, கீச்சுக் குரல் கொண்ட, நாற்பதுகளின் மத்திய பருவத்தில் இருந்த அவர் டெர்ரிகாட்டில் தைக்கப்பட்ட வெளிர் வண்ண மேக்சி அணிந்திருப்பார், ஆசிரமத்தை இரும்புக் கரம் கொண்டு நிர்வகித்தார். அவர் அருகில் வரும்போது, பக்கத்தில் இருக்கும் தூணுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ளத் தோன்றும். அவருக்கு மணமாகியிருந்தது. அவரது கணவர், பப்பாஜி, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆசிரமத்தில் அவருக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது.

அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்த மற்றவர்களில் பணக்கார மார்வாரி விதவைகள் இருவரும் அடக்கம், சர்ச்கேட்டில் ரிட்ஸ் ஹோட்டலுக்குப் பின்புறம் இருந்த ஆர்ட் டிகோ கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர்கள் இவர்கள் பொழுதெல்லாம் சமையலறையில் இருந்தனர், பாத்திரம் தேய்த்துக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் என்று எளிதாக அவர்களை நினைத்துவிட முடியும். ஆசிரமத்துக்கு விருந்தினர்கள் அவ்வப்போது வந்து சிறிது காலம் தங்கிவிட்டுப் போவார்கள், மாஜி ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டும்போது, விதவைகளைச் சுட்டிக் காட்டி, வைரங்களை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்தைத் தேடிச் செல்ல வந்திருக்கின்றனர் என்று அவர்களிடம் பாராட்டிச் சொல்வார். முடிந்த அளவுக்கு நான் ஆசிரமத்தைவிட்டு வெளியே இருந்தேன்; எனக்கு அப்போது பத்தொன்பது வயது. (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 3

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுவதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்)

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இப்படி முடிந்திருந்தது:-

Fin de siècle இயக்கத்தின்போதும் அதன் பிற்பாடும் புனைபடுதல் எண்ணற்ற வகைகளில் வெளிப்பாடு கண்டது. இவற்றுள் அழகியல் பார்வையை முதலில் சொல்ல வேண்டும், இனிமேற்கொண்டு கலையின் பணி வாழ்வை போலி செய்வது மட்டுமல்ல என்று இந்த இயக்கத்தினர் பிரகடனம் செய்தனர்- இனி வாழ்வே கலையின் போலியாகிறது.

இதன்பின், மனித ஒழுக்கத்தை மேம்படுத்தும் இலக்கியப் படைப்புகள் என்று சமய நூல்கள் ,,மறுவரையறை செய்யப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கிற்று- மாத்யூ ஆர்னால்டு, 1873ஆம் ஆண்டு, தன் Literature and Dogma என்ற நூலில் இந்தப் பார்வைக்கு மிகச் சிறப்பான வடிவம் அளித்தார்.

சமயங்களைப் புனைவாய் வடிவமைப்பது எந்த அளவுக்கு வெற்றி பெற்றதென்றால், இருபதாம் நூற்றாண்டு பிறக்கும்போது, தெய்வ நம்பிக்கை கொண்ட கிருத்துவர்களான டோல்கீன், சி.எஸ். லூயிஸ் போன்றவர்கள், அனைத்து புனைவும் சமயசார்பு கொண்டவையே என்று மறுவரையறை செய்ய வேண்டியதாயிற்று. எழுத்தாளர்கள், ஆண்டவனைப் பின்பற்றும் உப-படைப்பாளிகள். (more…)

தீவிர இலக்கியம் ஓர் ஆன்மிக அனுபவம் -கேன் ஷூவே

(Can Xue எழுதிய “The Fair-haired Princess” and Serious Literature என்ற கட்டுரையை Karen Gernant, Chen Zeping ஆகிய இருவரும் Words Without Borders என்ற தளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் இது)

அப்பாவின் புத்தக அலமாரிகளில் பெருமளவு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புத்தகங்கள் நிறைந்திருக்கும். அடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கவாட்டு அட்டைகளில் பொறிக்கப்பட்டிருந்த சில தலைப்புகள் நினைவிருக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்த சில தலைப்புகளை மறந்து விட்டேன். தினமும் அப்பாவின் புத்தக அலமாரியைச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். அப்போது ஒருநாள் திடீரென்று லைப்ரரியிலிருந்து சில ஃபேரி டேல்களை அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார் (அவர் அப்போது நூலக வேலைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்- “உழைப்பு வழி மறுகல்வி” என்று இது அழைக்கப்பட்டது). என் அக்கா படிப்பதற்காக அவர் இந்தப் புத்தகங்களை எடுத்து வந்தார். அவள் அப்போது ப்ரைமரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள், நிறைய சொற்களை அறிந்திருந்தாள். அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான், “பொற்சிகை இளவரசி” (ராபுன்ஸல்). அப்பா புத்தகத்தின் பெயரை ஒரு முறைதான் சொன்னார், ஆனால் எனக்கு அது மறக்க முடியாததாகிவிட்டது. புத்தகத்தின் அட்டையை ஒரு இளவரசியின் படம் அலங்கரித்தது, அவளது பொன்னிற தலைமுடி, கணுக்கால்வரை நீண்டிருந்தது. நான் அந்தப் படத்தை விரிந்த கண்களுடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு அழகிய மஞ்சள் வண்ண முடி யாருக்கு இருக்க முடியும்? அந்தப் பொன்னிற முடியின் ஒரு கற்றையாவது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! (more…)

வீடு திரும்பும் வழிகள் – அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, ஒரு மதிப்பீடு

(அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ராவின் Ways of Going Home என்ற நாவல் குறித்து கார்டியன் நாளிதழில் மினா ஹாலந்த் எழுதிய மதிப்பீடு)

பினோஷே ஆட்சி குறித்து இசபெல் ஆலண்டே எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து உலக அளவில் புகழ்பெற்ற சிலேவிய எழுத்து ஒப்பீட்டளவில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. ஒரு தேசமாகப் பார்க்கும்போது சிலேவியர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதை இது பிரதிபலிக்கிறதா? லத்தின் அமெரிக்கர்கள் இப்படிதான் எழுதுவார்கள் என்ற நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தகால வன்முறையின் பின்விளைவாய் சிலேவியர்கள் அமைதியான வார்ப்பாகவே இருக்கின்றனர். 1990ல் அவர் பதவி விலகிய பின்னரும், அந்த முன்னாள் சர்வாதிகாரி பற்றி பல்லாண்டுகளாய் தனி உரையாடல்களில் மட்டுமே பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதே போல், சிலே வரலாற்றின் இந்த காலகட்டம் குறித்த நாவல்களும் அதிக அளவில் வெளிவரவில்லை. சிலேவின் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரும்வரை இந்த நிலைதான் இருந்திருக்கிறது. அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர். (more…)