எழுத்து

இரு மராத்திமொழி கவிதைகள் – தி. இரா. மீனா தமிழாக்கத்தில்

மராத்திமொழி கவிதைகள்
மூலம் : கிஷோர் கதம் – சௌமித்ரா
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி. இரா. மீனா

1.

வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கப் போகின்றன
நீ திரும்பிப் பார்க்கும்போது
உன்னால் ஒரு வெறுமையான வாழ்க்கையையாவது பார்க்கமுடியும்,
ஆனால் வரப்போகும் நாட்களை நினைத்துப் பார்க்கும்போது
நீ ஒரு பார்வையற்றவன் என்பதை உணர்கிறாய்.
பாதங்கள் சாலையில் தயங்கிப் போகின்றன .
எனவே சாலைகளின் திசைகள் நம்முடையவை
இப்போது உன் காலடிக்கான இடத்தை நீ பார்க்கக் கூடமுடியாது
இப்போது சுவாசிக்குமளவே காற்றை நினைக்கமுடியும்
காலையில் உன் கண்கள் திறக்குமேயானால்
நீ தூங்கினாய் என்று நினைத்துக்கொள்
நிழல் உன்மீது விழுந்தால்
கடைசியாக அந்த மரத்தைப் பார்த்துக்கொள்.
தலைக்கு மேல்பறக்கும்
பறவையிடம் திரும்பிவருவதற்கான உறுதிமொழியையை எதிர்பார்க்காதே.
இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் போது
என் கண்கள் பனிக்கின்றன.

நேற்று நடந்த அல்லது அதற்கு முன்தினம் நடந்த
அல்லது சில வருடங்களுக்கு முன் நடந்த துயரங்களுக்காக அல்ல என் கண்ணீர்
வரப்போகும் நாட்களுடன் வரவிருக்கும் துன்பங்களுக்கானவை அவை .

உண்மைதான் !
வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு
கொடுமையானவையாக இருக்க வேண்டும்….

2.

ஓ, கடவுளே !
நீ எங்கேயாவது இருக்கிறாயா?
நீ உண்மையாகவே இருக்கிறாயா?
தனிமையான தவிர்க்கமுடியாத
இந்த நீண்ட நீண்ட சாலை எனக்கு வேண்டாம்
உன் இருப்புடனும் இருப்பின்மையுடனுமான
பரபரப்பு எனக்கு வேண்டும்.

நீ விரும்பினால் வந்து விட்டுப் போகலாம்
ஆமாம்,நீ எங்கேயிருக்கிறாய்?
எனக்கு உன்மீது நம்பிக்கை வரவேண்டும்.

நீ இருக்கிறாயா அல்லது இல்லையா
என்று தெரியாமல்
நீ இருப்பதாகவே நினைத்து நான் வாழ்கிறேன்.
நமக்குள்ளே நடக்காமலே இருக்கின்ற
எல்லாமும் எனக்கு நினைவிலிருக்கிறது.

உன் இருப்பு இருப்பின்மை எனும் நாடகத்தில்
என் இருப்பு உன்னுடையதாகிறது,
ஆனால் நான் மனிதன்
என்னை அப்படியே இருக்கவிடு,
நீயும் என்முன் மனிதனாய் வா.

நான் தனியாக இருக்கிறேன்.
நீ எங்கிருந்தாலும் வா

உண்மையில் நீ எங்கேயாவது இருந்தாக வேண்டும்.
இருக்கிறாய் அல்லவா?

oOo

நன்றி : Marathi Poetry 1975—2000 Sahitya Akademi 2013

 

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.

வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது..

தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால் சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்.. உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.

சித்ராவின் கோபத்துக்கு பின்னிருக்கும் நியாயம் காடாக அடர்ந்து பரந்திருந்தது. அதன் பெரிய உடலுக்கு.. அதன் பழக்கவழக்கங்களுக்கு.. அதன் சுதந்திரப் போக்குக்கு.. அதன் தனிமை விருப்பத்துக்கு.. ஏற்ற தாரளமான பரப்பு. உயிரியல் பூங்காவின் மொத்த பரப்பும் சித்ராவுக்கே போதாது. மலையடுக்குகள் பனித்திரைக்குள் வரையப்பட்ட கோட்டோவியங்களாய் தெரிந்தன. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. நான் நிற்கும் இந்த இடம் கூட அவை போன்றதொரு சிகரமாகதான் இருக்க வேண்டும். அங்கு பொசிய பொசிய அண்டிக் கிடக்கும் பசுமை இங்கேயும் இருந்திருக்கும். பின்புறமாக திரும்பிக் குடிலைப் பார்த்தேன். ஐந்து நட்சத்திர விடுதி போல அத்தனை பெரியது.. அத்தனை நவீனமானது.. இத்தனை நவீனங்களையும் இங்கு சேர்க்க எத்தனை இயற்கை செலவாகியிருக்கும்..? நான் பணியில் சேர்ந்த போதுதான் சித்ராவும் வந்து சேர்ந்திருந்தாள். பார்த்தபார்வைக்கே அவளை பிடித்திருந்தது. ஒருவேளை பிறந்த ஊரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய என்னுடைய சூழல் சித்ராவின் சூழலை ஒத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம்.

காட்டைப் போல சித்ராவின் மூர்க்கமும் சமாளிக்க இயலாத பெருவெளிதான்.. பார்வையாளர்கள் சிலரை ரத்தக்காயப்படுத்தியிருக்கிறாள். இவள் மரணத்துக்கு சிபாரிசு செய்த கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருந்தேன்.. செய்தாக வேண்டிய நெருக்கடி. நான் திரும்பவதற்குள் சித்ரா இல்லாமல் போகலாம். குடிலுக்குள் வர மறுத்து திறந்தவெளியில் தலையை திருப்பிக் கொண்டு பிடிவாதமாக நின்றிருந்த அந்த கம்பீரமான தோற்றம்தான் இறுதியானதாக இருக்கலாம். இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. மரண தண்டனைக்கு நாள் குறித்தாகி விட்டது. தேவைப்பட்டால் ஆட்களை வரவழைத்துக் கொள்வதாக சொல்லி விட்டு அவசரமாக கிளம்பி விட்டேன்.

அதேசமயம் இங்கு வர வேண்டிய தேவையும் இருந்தது. இல்லையெனில் அத்தனை சுலபமாக அனுமதி கிடைத்து விடாது. நாளை காலையிலிருந்து வேலை துவங்க வேண்டும். வேலை என்ன வேலை.. புலியை கண்டுப்பிடிக்கும் வேலைதான். இந்த காட்டில் புலியின் தடம் தென்படுகிறதாம்.. நாட்டில் மனிதத்தடம் தென்படுகிறாம் என்று புலிகளெல்லாம் இப்படி ரூம் போட்டு யோசிக்குமோ..? அது கிடக்கட்டும்.. செயற்கைக் கோள் காமிராவைக் கூட ஏமாற்ற முடியுமா..? ஏமாற்றியிருக்கிறது ஒரு ஒற்றைப் புலி.. அப்படிதான் சொல்கிறார்கள்.. புலியின் தடத்தை கண்டதாக சொன்னவர்கள். அவர்கள் சுரங்கக்கூலிகள். வெறும் கூலிகள் மட்டுமல்ல.. இங்கிருந்து விரட்டப்பட்ட பழங்குடிகள் என்பதால் நிச்சயம் நம்பிதான் ஆக வேண்டும். நம்பியதால்தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.

”சார்.. சாப்பாடு எடுத்து வச்சிறவா…?” பின்னால் திரும்பினேன். குடிலின் பணியாள். உயர்த்தி பொருத்திய தொப்பி.. நேர்த்தியான உடைகள்.. கையுறை.. ஷு அணிந்த கால்கள் என சுத்தபத்தமான மனிதராக தெரிந்தார்.

”பத்து நிமிஷம் கழிச்சு வர்றேனே..” என்றேன்.

சித்ராவுக்கு பிறந்த மூன்று குட்டிகளில் சீத்தாவும் பன்னீரும் துறுதுறுப்பானவை. மாயா பிறந்த ஒரு மாதத்தில் இறந்துப் போனாள். வளர வளர பன்னீரை விட சீத்தாவிடம் துறுதுறுப்பும் துடிப்பும் அதிகம் தெரிந்தது.என் மடியிலும் தொடையிலும் நிமிண்டி விளையாடும்போது அவற்றின் உடல்பலத்தை என்னால் உணர முடிந்தது. சீத்தாவும் பன்னீரும் உணவுரீதியாக தாயை அண்டவிடாமல் பழக்கப்படுத்தப்பட்டது கூட இந்த மரண தண்டனையின் தொடக்கமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டேன். டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த சிகரெட்டை அங்கிருந்த ஒருவர் சிநேகமாக நீட்ட.. தயக்கமாக வாங்கிக் கொண்டேன். அறிமுகத்தொனியில் சிரித்தார். மேற்கொண்டு நகரவியலாத என் மௌனம் அவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேலும் அவரை சங்கடப்படுத்தாமல் என்னை விடுவித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். தனிமைதான்.. படுக்கையறை உட்பட எல்லா இடங்களுமே தனிமைதான். விரும்பி அமைத்துக் கொண்டேனா.. அல்லது அதுவாக அமைந்து விட்டதா.. ஏதோ ஒன்று.. தனிமையும் மௌனமும் எனக்கு பிடித்துப் போனது.. மலையடுக்குகளில் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். சித்ராவால் என்னை உணர முடிவது போல. அவள் உணர்வதை என்னாலும் உணர முடியும். அவளுக்கு என் அன்பு தெரியும்… சித்ரா.. என்ற அழைப்புக்கு ஸ்ஸ்ஸ்.. என ஒலிக் கொடுப்பாள். என் அதட்டல் தெரியும்.. என் கடிந்துக் கொள்ளல் தெரியும்.. அடைப்பட்டிருக்கும் கம்பியில் முட்டி என் கவனத்தை கலைக்கும் அவள் கோபம் எனக்கும் புரியும். மெல்ல மெல்ல தணிந்து தெளியும்போது நான் செல்லக் கோபத்தில் நகர்ந்துக் கொள்ள மூச்சுக்காற்றின் சீறலை எச்சிலாக தெறித்து என்னை சமாதானப்படுத்துவாள். எனக்குதான் தெரியவில்லை.. இனி சித்ரா இல்லாத நாட்களை எப்படி கடத்துவது என.

”என்ன சார்.. மனுஷன்ட்ட பேசற மாதிரி புலிக்கிட்ட பேசுறீங்க.. அதுக்கென்ன தமிழா தெரியப் போவுது..?” என்றார் உயிரியல் பூங்கா ஊழியர்.

”ஏன் தெரியாது.. நல்லா தெரியும்..” என்றேன்.

இன்டர்காம் ஒலியில் கலைந்து எழுந்தேன். ”லிக்கர் எதும் வேணுமா சார்..”

”ம்ம்..” யோசித்தேன்.. “இல்ல.. வேணாம்..“

நிச்சயம் உறக்கம் வரப் போவதில்லை. எழுந்து வெளியே வந்தேன். செயற்கை குளிரூட்டியை விட இயற்கை அதிகமாக குளிர்ந்து கிடந்தது. கம்பளியை போர்த்திக் கொண்டேன். இந்த இடத்தில் முன்பு யானைகள் கூட்டமாக வலசை வந்திருக்கலாம். காட்டுப்பன்றிகளும்.. கரடிகளும் மான்களும்.. அவற்றோடு இணக்கமாக பழங்குடிகளும் வாழ்ந்திருக்கலாம். ஏன்.. சித்ராவும் அவள் குடும்பமும் கூட இங்கு உலவியிருக்கலாம். காட்டின் வேட்கை தணியாத நேரங்களில் அறைக்குள் நுழைய பிடிவாதம் காட்டுவாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் மூர்க்கத்தை விட குழப்பமே மிகுந்து தெரியும். ஏதிலி வாழ்க்கை ஏற்படுத்தியக் குழப்பம். அந்தக் குழப்பத்தில்தான் இரண்டு மனித உயிரை காவு வாங்கியிருந்தாள். அதற்காக விதிக்கப்பட்டதுதான் இந்த மரண தண்டனை.

காட்டையும் விலங்குகளையும் தவிர்த்து மனிதர்கள் உறங்கத்தில் கிறங்கியிருந்தனர். லான், சிறு விளக்கு ஒளியில் வெகு சுத்தமாக தெரிந்தது. தடித்த கண்ணாடி சன்னல்களின் வேலைப்பாடுகள் வெளிப்புறக்காட்சியை முற்றிலும் மறைத்திருந்தன. கதவை திறக்க முயல, காவலாளி விழித்துக் கொண்ட பிறகு திடுக்கிட்டுப் போனார். அவரிடம் சமாதானமாக சிரித்தேன்.

”சார்.. நைட்ல வெளிய போறது பாதுகாப்பில்லைங்க..” என்றார் நன்றாக விழித்துக் கொண்டு.

”இத்தன தடுப்ப மீறி என்ன நொழஞ்சுடும்..? ஸ்வெட்டரை வேன்ல வச்சிட்டு வந்துட்டேன்.. எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றபடி நடந்தேன்.

வேனிலிருந்து கீழே இறங்கியபோது தான் காவலாளி எனக்கு காவலாக நிற்பதை கவனித்தேன்.

”ஸ்வெட்டருங்க..” என்றார் ஞாபகம் படுத்தும்தொனியில்.

அதை சட்டை செய்யாதவனாக ”அய்யோ.. சாரி.. நீங்க நிக்கறத கவனிக்கல..” என்றேன்.

என் எண்ணத்தை புரிந்தவர் போல ”சில பேரு இப்டிதான் ராத்திரி நேரத்து காட்டை பாக்க விரும்புவாங்க.. வியூ பாயிண்ட்க்கு போலாமா சார்..” என்றார்.

உடனே சம்மதித்தேன். அருகிலிருந்த கூம்ப வடிவ சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார். உட்புறமாக அமைக்கப்பட்ட சுழலும் படிகளின் வழியே மேலேறினோம். உயரம் கூட கூட அகலம் குறுகிக் கொண்டே வந்து வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானத்திற்குள் எங்களை சேர்த்தது. இரண்டு ஆள் நிற்பதற்கேற்ப அகலத்தில் கட்டுமானம் வெளிப்பகுதியில் விரிந்து, சற்றே நெருக்கமான இரும்புக் கம்பிக்குள் அடைப்பட்டிருந்தது.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றக்குமான கண்ணாடிக் கதவு. காலடியில் சிறுஒளியை எழுப்பிய மின் விளக்கு என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடில்.

மலைக்காற்று கடும் குளிராக தோன்றியது. பகலில் தெரிந்த காட்சிகள் இரவில் புதிது போலிருந்தன. வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காணுமிடங்கெங்கும் பரவியிருந்த இருள் கண்களுக்கு பழகத் தொடங்க, வனம் புலப்படத் தொடங்கியது. நகரத்து இருளைப் போல வனத்தின் இருள் அமைதியானதல்ல. அது குகையின் அந்தகாரத்தை போல ஆழமானது. மனிதனின் ஆசையை போல முடிவற்றது. சித்ராக்களை கீழிறக்கும் ஆசை.. சட்.. சித்ராவை மறக்க வேண்டும். சீவிடுகளின் ஒலி மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.. காற்றின் வீச்சுக்கும் நீரோடையின் சலசலப்புக்கும் பக்கவாத்தியம் போல அது ஒலித்தது சீவிடுகளின் ஒலி.. அது மௌனத்தின் ஒலி. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பான வனத்தின் இருள்.. விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் ஒளி.. அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி பரவ.. கண்களை நிறைந்துக் கொண்டே வந்த ஒரு தருணத்தில்.. ஒரு சரிவில்.. ஒளி வெள்ளமென வீச.. திடுக்கிட்டுப் போனோன்.

”அந்த பக்கம் பூரா மைன்ஸ்தான் சார்..” என்றார் காவலாளி என் பார்வையை உணர்ந்து.

அந்த ஒளியில் காடு நகர்ந்து விட, அதன் வழியே செயற்கை வழித்தடங்கள் புலப்பட.. இருளை ஒளி வென்று விட்டது. இந்த ஒளியின் சுவடுகள் தனிமையின் சுகத்தை கலைத்துப் போட்டு விடும். அங்கிருந்த விலங்குகள்.. தாவரங்கள்.. பூச்சிகளின் வாழ்வை குலைத்துப் போட்டு விடும். கனிமவளம் மனிதவளத்தை மேம்படுத்தியதில் வெளிச்சத்தில் இருளை தொலைத்த அவலம்.

சித்ராவை மயக்க ஊசி செலுத்தி வலியில்லாமல் சுட்டுக் கொல்வார்களாம். எதிர்க்கவோ.. பேசவோ எங்களுக்கே உரிமையில்லாத போது காட்டின் குரலை ஓயாமல் கர்ஜித்துக் காட்டும் சித்ராவுக்கு வாழும் தகுதியற்றுப் போவதொன்றும் ஆச்சர்யமல்ல.. அவள் தலைப்புச் செய்தியான நாளுக்கு பிறகு கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதே காரணம்தான் முன்பு பழங்குடிகளுக்கும் சொல்லப்பட்டதாக ஞாபகம். பழங்குடிகளால் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று. பிறகு புலிகளும் பூங்காக்களுக்கு இறக்கி விடப்பட்டன. கேட்பதற்கு ஆட்கள் இருக்கும்போது சொல்வதற்கு காரணங்கள் நிறையவே இருந்தன. புலிகள் அடிக்கடி சமவெளிக்கு வந்து விடுகின்றன என்றார்கள். மொட்டைத்தலையிலிருந்து வழிந்தோடுதல் இயல்புதானே.. சரி.. ஏதோ ஒன்று.. புலி-மனித மோதலால் புலிகள் கொல்லப்பட்டு விடுகின்றன என்றார்கள். பழங்குடிகள் இறக்கிவிடப்பட்ட பிறகு தனித்திருந்த புலிகளுக்கு காட்டின் நடப்பைச் சொல்ல ஆங்கிலம் தெரியாமல் போனது சுரங்க அதிபர்களுக்கு வசதிதான்.

அறைக்கு வந்ததோ உறங்கியதோ அனிச்சையாக நடந்திருக்கலாம். துாங்கியது எப்போதென்றே தெரியவில்லை.. விழிப்பு வரும்போதுதான் துாங்கியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். திரைசீலைக்கப்பால் வெளிப்புறக்காட்சிகள் பளிச்சென்றிருந்தன. தேநீரை ஏந்திக் கொண்டு வந்தவரிடம் கட்டஞ்சாயா கிடைக்குமா என்றேன். உடனே கொண்டு வந்தார். சுடுநீர் குடிப்பது போல ஃப்ளாஸ்க்கிலிருந்து இரண்டு முறை ஊற்றிக் குடித்தேன். மனம் சற்றே நிதானப்பட, அறையை காலி செய்து சாவியை ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

இளங்காலை பயணம் உள்ளப்படியே உவகையை ஏற்படுத்த, வாயைக் குவித்து ஒலியுண்டாக்கினேன். கூடவே ஒலித்தது பறவையின் குரலொன்று. வண்டியின் வேகத்தை நிதானப்படுத்தினேன். அடர்வற்ற காடு மனித சஞ்சாரத்தை வெளிப்படுத்தியது. இடையே குறுக்கிட்ட சுரங்கத்திற்கான பாதை இயந்திரங்களை ஏற்றிச் செல்ல தோதாக அகலமாகவும் அதிகாரிகளை அழைத்துச் செல்ல வசதியாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் இடுப்பளவு கான்கிரீட் தடுப்பு. அதுவுமே அகலம் கூடியதாக இருந்தது.

முன்பெல்லாம் வனத்துறைக்கு செல்வாக்கு அதிகம்.. பழங்குடி மக்களிடம் அவர்களுக்கு அதிகாரமும் அதிகமாகதான் இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறானோ இல்லையோ மயிலையும் மானையும் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வனத்துறை ஆட்களுக்கு பஞ்சமிருக்காது.. வனத்துறை நண்பரொருவர் மயில் கறியை பிரியமாக உண்பதை பார்த்திருக்கிறேன். நமக்கென்ன..? வனத்துறையினர் பாடு.. அறநிலையத்துறையினர் பாடு.. என்று நினைத்துக் கொள்வேன். இப்போது வனத்துறை ப்ளுகிராஸ் போல ஆகி விட்டது. சினிமாவில் எந்த விலங்குகளையும் வதைக்கவில்லை என்ற கிளியரன்ஸ் சான்றிதழுக்கு நிறைய தொகை வாங்குவதாக கேள்வி. மேல் வரும்படி குறைந்து விட்டதால் இப்படியெல்லாம் இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள் போல.

வனம் ஏறி இறங்கி அடர்வுக்குள் செல்ல பாதை ஒழுங்கற்று.. நேர்த்தியற்று நெளிந்துக் கிடந்தது. தொடப்படாத காடுகள் தாவரங்களால் வழிந்துக் கிடந்தன. கனிம வேலை தொடங்கும் வரை அதற்கு அனுமதியுண்டு. ஆங்காங்கே ரெட் அலர்ட் போடப்பட்டிருந்த பாதையில் திரும்பினேன். இவை முன்னாள் பதிகளாக இருக்கலாம். நகரில் வாழ்ந்துக் கெட்ட வீடுகள் கான்கிரீட் பாழ்களாக கிடப்பது போல பதிகளின் குடியிருப்புகள் வீடாக உருவம் தாங்கி நிற்கவில்லை என்றாலும் மறைந்து போன வாழ்விடத்தின் வாசம் முற்றிலுமாக அகலவில்லை.

”ஏன் சார்.. சாவுதான் தீர்வா..? கூண்டுக்குள்ளயே அடச்சு போட்டுடுலாம்ல..” கையெழுத்து இடும் முன் ஈனஸ்வரத்தில் கேட்டேன். எனக்கு தெரியும்.. அவர்களின் பயம் சித்ராவின் மீதல்ல.. சித்ராவுக்குள் பொதிந்திருந்த காட்டின் மீதான பயம்.. சித்ராவை நீடிக்க விட்டாலோ.. குட்டிகளுடன் நெருங்கி பழக அனுமதித்தாலோ உள்ளிருக்கும் காட்டை வெளியே எடுத்து விடலாம் என்ற பயம். அதிலும் சீத்தாவுக்கு தாயைப் போன்று மூர்க்கமும் பிடிவாதமும் அதிகம். இத்தனை பெரிய வனத்தில் ஒற்றைப் புலிக் கூட இருக்கக் கூடாது என்ற முடிவின் பின்னிருப்பதும் பயம்தான். பூண்டோடு அழிக்க சொல்லும் வன்மம். புலியை பூனையாக்க வேண்டும். கோவில் யானை போல பூங்காப் புலி.

கானகம் அடர்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தது. பாதை அருகிக் கொண்டே வந்தது. அவர்கள் குறிப்பிட்ட பகுதி இதுதான் என உறுதி செய்துக் கொண்டேன். தோதான இடம் பார்த்து வண்டியை நிறுத்தி இன்ஜினை அணைத்தேன். பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டேன். இன்னும் சிதையாத காடு. மலைச்சரிவுக்கும் பள்ளத்தாக்குக்குமிடையே நீரோடை ஒன்று வளைந்து நெளிந்து ஓடியது. உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. சரிகையை அவிழ்த்து விட்டது போல் காட்டாறு நுரைத்துக் கொண்டோடியது. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவியிருந்தன. ஏற ஏற மலையின் உயரம் குறைந்துக் கொண்டே வருவதை போல மேகங்களும் கரைந்து உருமாறிக் கொண்டே இருந்தன. பாதையின் ஓரமாக பெரிய மரமொன்று வேரோடு விழுந்து கிடந்தது. நீர்வீழ்ச்சி நுரைத்து வழிந்தது. மரங்களில் ஆங்காங்கே பைகளை கட்டித் தொங்க விட்டது போல தேன்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

கீழே இறங்குவது என்பது முட்டாள்தனமான துணிச்சல் என்பது எனக்கும் தெரியும். ஒற்றைப்புலி மிகுந்த ஆக்ரோஷம் கொண்டிருக்கலாம். தனக்கான உணவு உறுதியான பின்.. நட்பைத் தேடிக் களைத்திருக்கும். பகை கூட அகப்படாத தனிமை குழப்பத்தை உண்டுப் பண்ணியிருக்கும். அதுவே மூர்க்கத்தை முட்டிக் கிளப்பி விடும். புகைப்படத்தில் காட்டப்பட்ட அதன் தடத்திலிருந்த ஆவேசம் அதைதான் சொன்னது. நவீனங்களின் துணையோடு அதை பிடித்து விடுவது சுலபம்தான். பிறகு.. பிறகென்ன பிறகு.. உயிரியில் பூங்காவில் புலியின் நீள அகலங்களில் மற்றுமொரு பூனை உலாவித் திரியும். ஒற்றைப்புலியின் உடனடித் தேவை துணை.. துணை மட்டுமே. உணவோ.. இணையோ.. அடுத்தக் கட்டம்தான். இனத்தோடு இனம் துணையாகும்போதுதான் தன்னுள்ளிருந்து தான் மீள இயலும்.

வாகனத்தின் பின்கதவை திறந்தேன். பாதிக்குமேல் தெளிந்திருந்த மயக்கத்தின் ஊடே என்னை விழித்துப் பார்த்தது அது. விரிந்த அதன் கண்களின் ஒளி ஒரு கணம் சித்ராவை ஞாபகப்படுத்த சிலிர்த்து அடங்கினேன். அதன் வலது பாதத்தில் லேசாக தட்டினேன். தட்டினால் எழுந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தில் முடிந்தவரை விசும்பி எழுந்தது. என் மேலுடலை முன் தள்ளி கைகளை காற்றில் அசைத்தேன். புரிந்துக் கொண்டது. திறந்திருந்த கதவின் வழியே வெளியே பாய்ந்தது.

அதன் கால்களை பஞ்சுப்பொதிகள் போல வனம் தாங்கிக் கொள்ள இடுப்பை அசைத்து அசைத்து நகர்ந்து நகர்ந்து.. என்னை விட்டு விலகி விலகி..

“சீத்தா..“ கதவை மூடிக் கொண்டு வெடித்து அழுதேன்.

அன்றாடங்களின் ஆன்ம தரிசனம் – வண்ணதாசனின் ‘ஞாபகம்’ சிறுகதையை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஏதேனும் ஒரு ஞாபகம், இயந்திரகதியாகிப் போன அன்றாடங்களுக்கிடையில் மறைந்திருக்கும் பசுமையைத் துலக்கி நம் கண்கள் முன் கொண்டுவந்து பரவசப்படுத்தத்தான் செய்கிறது. பழகிப்போன தினசரி அனுபவங்களிலிருந்து நம்மை விலக்கி, சாதாரணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பரவசத்தைக் கண்டுகொள்ளும் வேறு கண்களை நமக்களித்துச் செல்கிறது.

அவ்வாறான ஞாபகங்கள், தானாக தோன்றாதபோதும், வலிந்து நானே அத்தருணங்களை உருவாக்கிக் கொண்டு அது தரும் பரவசங்களை அனுபவிப்பதுண்டு. பாலகுமாரனின் “தாயுமானவன்”-ல் பரமுவின் பகல் பொழுதுகள்; சமீபத்தில் ஜெயமோகனின் ‘இல்லக் கணவன்’ கட்டுரையில் வரும் பகல் பொழுது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும்போது, ஒவ்வொரு விடுமுறை முடிந்து மதுரையிலிருந்து விடுதி திரும்ப விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் இறங்கும்போதெல்லாம், அவ்வைகறையில் பேருந்து நிலையத்தின் சூழல் பரவசம் தரும். இதற்காகவே விடுமுறை இல்லாத கல்லூரி நாட்களிலும், விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி சைக்கிளில் பின்கேட்டில் வெளியில் வந்து பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், அர்ச்சனா தியேட்டர் வழியாக காந்திபுரம் வந்துவிடுவது. பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் டீ குடித்துக்கொண்டே, வந்து சேரும் தொலைதூரப் பேருந்துகளிலிருந்து வந்திறங்கும் பயணிகளையும், பேருந்து வரிசைகளையும், விளக்கொளியில் கடைகளையும், அச்சூழலையும் பார்த்துக்கொண்டிருப்பது ஓர் இனிய அனுபவம்; பகலில் பார்ப்பதற்கும், வைகறையில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! ஒருமுறை நண்பர் பாலா, சென்னை வந்த ஜெயமோகனை அழைத்துச் செல்ல விடிகாலை நாலு மணிக்கு எக்மோர் ஸ்டேஷன் வந்தபோது கண்ட, வைகறையின் எக்மோர் ஸ்டேஷன் அழகை பின்னர் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இதேபோல் நள்ளிரவில் கேஜியில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் விடுதி திரும்பும்போது, மரக்கடை மேம்பாலத்தில் சோடியம் விளக்கொளியில் ஆளரவமற்ற, வெற்றுத் தார்ச்சாலையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, லாலி ரோட்டில் வந்து தர்சனா பேக்கரியில் டீ சாப்பிட்டு வந்த நாட்கள் அநேகம். பகல் பொழுதுகளின் பரபரப்புகள், விரைவுகள், ஒலிகளில்லாத தார்ச்சாலைகளின் அமைதிதான் எத்தனை வசீகரிக்கிறது.

வேலை செய்யும் நிறுவனங்களிலும், பண்ணை வேலை என்பதால், ஞாயிறும் வேலை இருக்கும். கூடிய மட்டில் ஞாயிறு வேலை செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வார நாளில் விடுமுறை எடுத்துக்கொள்வது. ஞாயிறு வேலை செய்யுமிடம் வேறு முகம் காட்டும். அது அற்புதமான முகம். அதேபோல்தான் வாரநாட்களில் ஒரு விடுமுறை தினம் வீட்டில்.

***

வண்ணதாசனின் “ஞாபகம்” சிறுகதை பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ, எங்கேயோ படித்தது; சரியாய் ஞாபகமில்லை; ஆனால் அந்தக் கதையும், வண்ணதாசனும் மனதில் பதிந்து போனார்கள். வண்ணதாசனுக்கு 2016-ல் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது “ஞாபகம்” பல வருடங்களுக்குப் பின் நினைவடுக்கிலிருந்து மேலெழுந்து வந்தது. சாகித்ய அகாடமி விருதும் தொடர, மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. விஷ்ணுபுரம் விருது கிடைத்ததிலிருந்தே, வண்ணதாசனின் மொத்த சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தேன். நண்பர் சக்தி இம்முறை இந்தியாவிலிருந்து வரும்போது, முழுத் தொகுப்பு கிடைக்கவில்லையென்றும், கிடைத்த இரண்டு சிறு தொகுப்புகள் கொண்டுவந்த்தாகவும் சொன்னார். அதிலொன்று “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. ஆம், “ஞாபகம்” அதிலிருந்த சிறுகதைகள் பதினொன்றுக்குள் ஒன்று.

அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு செல்லும்போது டிபன்பாக்ஸை எடுக்க மறந்து, அதை எடுத்துச் செல்ல மறுபடி பஸ் பிடித்து அலுவலகம் வருகிறாள். அந்த முன்னிரவு நேரம் காட்டும் அலுவலகம், ஆட்களில்லாத, பரபரப்பில்லாத, இரைச்சல்களில்லாத, வெறும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய அந்த அறை அவள் மனதை நெகிழ்த்துகிறது. வேலை நேரம் தாண்டி, வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்தில் தனது அறையில் வேலை செய்துகொண்டிருக்கும் கிளார்க்கைப் பார்த்து அவளுக்குப் பாவமாய் இருக்கிறது (“இவளுக்கு அந்த விரல்களின்மீது இரக்கமாக இருந்தது”). ”அவர் அப்படித்தாம்மா; வழக்கம்போல ஓவர் டைம் பாக்குறார். நேரங்காலம் தெரியாம வீட்ட மறந்து இங்கேயே உட்கார்ந்துருவார்,” சொல்லிவிட்டு வாட்ச்மேன் சிரிக்கிறான். அவளுக்கு சிரிப்பு வரவில்லை; ’தனக்கு டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல், அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்’ என்றுமட்டும் உடனடியாகத் தோன்றுகிறது.

***

ஒருமுறை வார இதழ் ஒன்றில் வெளியான டைரக்டர் மகேந்திரன் பேட்டியில், “உங்கள் சினிமாக்களின்/ படைப்புகளின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு, “அன்புதான்… அன்பைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை…” என்று பதில் சொல்லியிருந்தார். வண்ணதாசன் கதைகளும், மனதின் அப்பாகத்தை தூண்டி நெகிழ்த்திவிட்டுத்தான் செல்கின்றன. அன்றாடங்களைக்கூட நின்று நிதானித்து இதுவரை கவனிக்காத ஒன்றை கவனிக்கச் செய்து மனதின் உட்பயணத்திற்கு உதவி செய்கின்றன. எல்லோரையும், எல்லாவற்றையும் அன்பெனும் போர்வையால் போர்த்துகின்றன.

2007-ம் வருடம், நான் புனே அருகில் “சம்பாலி” எனும் மலர்ப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மார்ச் மாதத்தின் அமைதியான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மலர்ப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலையாட்கள் பணிக்கு வருவார்கள். அலுவலர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ட்யூட்டி. உச்சி நண்பகல் 12 மணி தாண்டியிருந்தது. அலுவலகத்தின் இரண்டு மாடிகள் முழுதும் மிகுந்த அமைதியாயிருந்தது. கீழ்த்தளத்தின் இடதுகோடியில் இருந்த கேண்டீனில் மட்டும் மதிய உணவு சமைக்கும் இரு பெண்களின் சிறு பேச்சுக் குரல்கள். முதல் மாடியின் வெளிக்கதவு தாண்டி, நான் திறந்தவெளி பால்கனிக்கு வந்தேன். முன்கோடையின் சுட்டெரிக்கும் வெயில். பண்ணையின் வேலிக்கு அப்பால் பக்கத்து கிராம பெரியவர் மாடு மேயவிட்டிருந்தார். அலுவலகத்திலிருந்து ஸ்டோருக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் இருந்த நெட்டிலிங்க மரங்கள் இலைகள் அசையாமல் உயர்ந்து நின்றிருந்தன. ஸ்டோருக்கருகிலிருந்த ஜெனரேட்டர் ரூமிலிருந்து ஜெனரேட்டர் ஓடும் சத்தம் தாளம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்சாரியில் தூரத்தில் குன்றின்மேல் பச்சைப் போர்வைக்கு நடுவில் வினோபா கிராமத்தின் வீடுகள் சிறியதாய் தெரிந்தன. அப்போதுதான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ ஆரம்பித்தது. கண்களில் நீர் நிரம்பி காட்சிகள் மசமசப்பாயின. சுற்றிலும் எல்லாமே, ஏதோ ஊமைப்படத்தின் காட்சிகள் போல துல்லிய அமைதியில் நிகழ்ந்தன. பின்னால், கேண்டீனில் வேலை செய்யும் மீனாள் கெய்க்வாட்டின் “சார், லன்ச் ரெடியாயிருச்சு” என்ற குரல்தான் தரையிறக்கியது. உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது.

“எங்கெங்கு காணிணும் சக்தியடா…” என்ற வரி மட்டும் உள்ளுக்குள் அன்று முழுதும் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

ஆதி கதை – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

உங்கள் ஊர், படிப்பு மற்றும் பணி பற்றி?

தூயன்: நான் பிறந்தது அம்மாவின் ஊரான கோயம்புத்துாரில். பிறகு சிறுவயதிலேயே அப்பா வேலை காரணமாக தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்துவிட்டதால் இங்கேயே நிரந்தரமாகிவிட்டோம். அக்கா திருமணமாகி கோவையில் பணிபுரிகிறார். சென்னையில் ஆய்வுக்கூட பட்டயப் படிப்பும் இளங்கலை நுண்ணுயிரியியலும் முடித்துவிட்டு தற்போது புதுகை அரசு ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறேன்..

இலக்கிய அறிமுகம் எப்போது எப்படி நேர்ந்தது?

தூயன்: என்னுடைய அப்பா ஒரு நல்ல வாசகா். அவா் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகமானது. சிறுவயதிலேயே என்னையும் சகோதரியையும் நிறைய வாசிக்கப் பழக்கிவிட்டார். பிறகு நுாலக வாசிப்பு அமைந்ததும் எனக்கான புத்தகங்களைத் தேடிப் படிக்கத் துவங்கினேன். சென்னையிலிருக்கும்போது நண்பன் பரசுராம் என்னைத் தீவிர இலக்கியத்திற்குக் கொண்டுவந்தான்.

பாதித்த, பிடித்த தமிழ் மற்றும் வேற்று மொழி எழுத்தாளர்கள் யார் யார்?

தூயன்: பொதுவாக பிடித்த எழுத்தாளா் என்பது படைப்பாளியின் தேடலைப் பொருத்து நகா்ந்துகொண்டே செல்லும் என்பது எனது கருத்து. ஆனாலும் தனிப்பட்ட வகையில் சிலா் இருக்கவே செய்கிறார்கள். அது என்னுள் இருக்கும் வாசகனுக்கானவா்கள். ஒவ்வொருவரையுமே தங்களுடைய படைப்புலகில் உச்சத்தைத் தொடுபவா்களாகத்தான் நான் பார்க்கிறேன். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், சோ. தா்மன், எஸ்.ரா போன்றவா்களைக் குறிப்பிடலாம். தமிழில் அதிகமாக என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவா்கள் பிரேம் ரமேஷ், ஜெயமோகன், பா. வெங்கடேசன்… வேற்று மொழியில் தற்போது என்னை அதிகம் கவா்ந்திருப்பவா்கள் மிலன் குந்தேராவும் மரியோ வா்கஸ் லோசாவும். குந்தேராவின் கதைசொல்லும் பாணி என்னை வியக்க வைக்கிறது. அதே சமயம் லோசாவின் படைப்பில் நிகழும் அரசியல் எனக்கானப் பார்வையை அளிக்கிறது. இது போல நிறைய உள்ளது. தஸ்தயேவ்ஸகியின் ‘இடியட்’, சரமாகோவின் ‘பிலைன்ட்னஸ்’, நிகோஸ் கசஸ்ன்சாகிஸ், ‘நேம் ஆப் தி ரோஸ்’

முதல் சிறுகதை எப்போது பிரசுரமானது?

தூயன்: தினமணி கதிரில் 2012 என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எழுதிப் பார்த்தவைகள். தீவிர இலக்கிய வாசிப்புக்குப் பிறகு எழுதியவை கணையாழியில் பிரசுரமாகின. அதன் பின் உயிர் எழுத்து, மணல்வீடு.

சிறுகதையை எதனால் உங்கள் வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தீர்கள்? கவிதை எழுதியது உண்டா?

தூயன்: சிறுகதைக்கென்று இதுதான் வடிவம் என ஒன்றை வகைப்படுத்த முடியாதென்றே நம்புகிறேன். பல்வேறு மொழிகளில் எழுதப்படும் சிறுகதைகள் எல்லாமுமே முந்தைய வடிவங்களை உடைத்து புதியதொரு வடிவத்தை உருவாக்குகின்றன. இறுதியில் எல்லா வகைகளும் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நுண்ணிய சீண்டலில்தான் முடிகிறது. இப்படிச் சொல்லலாம். “வாசகனும் படைப்பாளியும் ஒருவரையொருவா் நிரப்பிக் கொள்வதே“ சிறுகதை. இந்த நிரப்புதலில் ஏற்படும் இழப்பையும் தரிசனத்தையும் அடைவதில்தான் படைப்பாளிக்கு ஆா்வமும் சிரத்தையும் ஏற்படுகிறது.

கதை எழுத திட்டமிடுவது உண்டா? உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களை கொண்டதாக உள்ளன.

தூயன்: ஆம், உண்டு. ஏற்கனவே எழுதிய சாயல் எதிலும் இருக்கக்கூடாது என்றும் எழுதப்பட்டதில் என்னுடைய பார்வை எதுவாக இருக்கிறதென்றும் திட்டமிடுவேன். கதைகளோ களங்களோ ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன என்று சொல்வதை முற்றிலும் மறுக்கிறேன். ஒரு கதையை படைப்பாளியினுடையப் பார்வையும் சிந்தனையும்தான் புதியதாகக் காட்டப் போகிறது. ஒரு சம்பவத்தை அப்படியே பதிவு செய்வது அல்ல சிறுகதை. மாறாக அச்சம்பவத்துடன் படைப்பாளியின் அகம் கொள்ளும் குறுக்கீடுதான் அதை கதையாக மாற்றுகிறது. இது பயிற்சியால் வருவதல்ல. ஒவ்வொருவரின் பார்வையின் நீட்சி, ஐடியாலஜி அது. படைப்பாளி தன்னுடைய சிந்தனையையோ அல்லது அனுபவத்தையோ சம்பவத்துடன் குறுக்கீடு செய்கிறான். கிட்டத்தட்ட நிகழ்தகவு போல என்று சொல்லலாம். அப்படி பார்த்தால் இன்னும் கதைகள் எழுதப்பட இருக்கின்றனதானே? அதாவது கலையில் அடங்கும் அத்துனையும் அப்படி புதிதாக உருவாகிக் கொண்டுதானிருக்கும்.

தொகுப்புக்கு முந்தைய கதைகளில் இருந்து தொகுப்புக்கு உரிய கதைகளை அடைவதில் மொழியிலும் வெளிப்பாட்டிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் நேர்ந்திருப்பதாக எண்ணுகிறீர்கள்?

தூயன்: நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கவிதைகள் நிறைய வாசிப்பேன். எனக்கான மொழி கவிதைகளிலிருந்து கண்டடைந்ததுதான். கதைசொல்லும் பாணி என ஒவ்வொன்றும் நம்முடைய வாசிப்பின் வழியிலும் எடுத்துக் கொள்ளும் கருவின் மூலமாகவும் அம்மாற்றம் ஏற்படுவதாகச் சொல்லலாம்.

முதல் தொகுப்பிற்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனங்கள் கிடைத்தன?

தூயன்: தொகுப்பு வெளியாகி ஒரு வருடத்திற்குள் இலக்கியக் கூட்டத்திலும் தனிப்பட்ட வகையிலும் நிறைய விமா்சனங்கள் கிடைத்திருக்கின்றன. தமிழில் அறிமுக படைப்பாளி இப்படி வாசிக்கப்படுவதே மகிழ்ச்சிதான். பாவண்ணன் தீராநதியில் விமா்சனம் எழுதியிருந்தார். மேலும் கோணங்கி, பா.வெ, தேவிபாரதி, போன்றவா்கள் வாசித்துவிட்டு பேசியது மிக்க நம்பிக்கையை அளிக்கிறது.

ஆனால் விமா்சனம் என நான் நினைப்பது வேறு. பொதுவாக தமிழில் விமா்சன மரபு வெ.சா, சு.ரா, பிரமிள், போன்றவா்கள் ஏற்படுத்திய வீச்சில் இப்போது இல்லைதான். காரணம் இன்று கறாரான விமா்சனத்தை எழுத வருபவா்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நெருங்கிய நண்பனொருவனின் கவிதை தொகுப்பை முன்வைத்து விமா்சனம் எழுதினால்கூட அவருக்கு அது சங்கடத்தைத் தருவதாகத்தான் உணா்கிறார். இதனால் பெரும்பாலான தீவிர வாசிப்பாளா்கள்கூட விமா்சனத்தைக் கூற தயங்குகிறார்கள். உண்மையில் ஒரு கறாரான விமா்சனம்தான் அப்படைப்பாளிக்குத் தேவை. தனிப்பட்ட வகையில் ரியாஸ், கிருஷ்ணமூர்த்தி, மதி, ராஜன், போன்றவா்களிடமிருந்து கறாரான விமா்சனத்தைப் பெற்றிருக்கிறேன். இதொரு மரபாக உருவாக வேண்டும் என்பதுதான் என் கருத்து.

நாவல் எழுதும் எண்ணம் உண்டா? களம் என்ன?அடுத்த திட்டமென்ன?

தூயன்: ஒரு வருடமாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். வெவ்வேறு களங்களில் பயணிப்பதால் அதற்கான தேவை அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு படைப்பை உடனடியாக முடித்து வெளியிட வேண்டுமென்கிற அவசரத்தை நான் வைத்துக் கொள்வதில்லை. முழு திருப்தி தரும் வரை அதனோடுதான் இருப்பேன். எழுதுவதே ஒரு தீராத மயக்கம்தான் இல்லையா?

புதுக்கோட்டையின் இலக்கியச் சூழல் உங்களுடைய படைப்புலகின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பைப் பற்றி குறிப்பாக, என்னவிதமான முன்னெடுப்புகளை செய்கிறீர்கள்.

தூயன்: சிற்பம் ஓவியம், தொன்மங்கள் என் படைப்பை அதிகமாகவே பாதிக்கக்கூடியவைகள்தான். அந்த வகையில் புதுக்கோட்டை தற்போதைக்கு சற்று அதிகமாக அதை எடுததுக்கொள்வதாக நினைக்கிறேன். நான் மேலே சொன்ன கறாரான விமா்சனம் வேண்டுமென்பதற்காகத்தான் சித்தன்னவாசல் விமா்சன அமைப்பை நண்பா்கள் சோ்ந்து தொடங்கினோம். முதலில் ஜீவ கரிகாலனின் சிறுகதைத் தொகுப்பு, சபரியின் வால் மற்றும் மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் என துவங்கி மெதுவாகப் பயணிக்கிறது. தொடா்ந்து புதிய படைப்புகளை வாசித்தும் அதுகுறித்தும் பேசிக்கொண்டுமிருக்கிறோம்.

மரபிலக்கிய பயிற்சி உண்டா? பயணங்கள், சினிமா பரிச்சயம் உண்டா?

தூயன்: மரபிலக்கியம் முழுமையாக நான் வாசித்தவனல்ல. ஆனால் என் அப்பா அதை முழுமையாக வாசித்திருப்பதால் அவருடனான உரையாடல்களில் அவ்வழியில் திரும்புவதுண்டு. பயணம் எனக்கு மிக விருப்பமானது. யாருக்கும் சொல்லாமல் (ஒவ்வொருவரிடமும் வேறுவேறாக) எங்காவது கிளம்பிச் சென்று படுத்துறங்கி வருவது என்னுடையப் பழக்கம். எனக்கான அடையாளத்தை தொலைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கிறது. கா்நாடகம் முழுவதும் பயணித்திருக்கிறேன். சிலசமயம் கோயமுத்துாரிலிருந்து கிளம்பி பாலாக்காடு , கோழிக்கோடு, காசா்கோட் என மங்களுா் சென்று பின் மீண்டும் ஹாசன் வரை தொட்டு திரும்புவதுண்டு. அதாவது ஒரு சுழற்சி போல இதைத் திட்டமிடுவேன். வெவ்வேறு நிலங்கள் என் கற்பனையுலகிற்கு புதியத் தளத்தை அமைத்துக்கொடுக்கின்றன.

பொதுவாக நான் டிவி அதிகம் பார்ப்பவனல்ல. ஆனால் உலக சினிமாக்கள் விரும்பிப் பார்ப்பேன். உலகத்தின் மிகச் சிறந்து ஐநுாறு படங்களின் கலெக்சன் என்னிடம் உள்ளது. அதிலிருந்து சிலவற்றை பார்த்துக்கொண்டிருப்பேன். நோலன், இனாரிட்டோ மிகவும் பிடித்தமானவா்கள். தற்போது ‘breaking bad’, ‘narcos’, ‘house of cards’, போன்ற சீரியஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ‘breaking bad’ ஒரு பெரும் நாவலை வாசித்த அனுபவத்தைத் தருகிறது.

காமம் உங்கள் பெரும்பாலான கதைகளில் மறைபொருளாகவும் பேசுபொருளாகவும் வருகிறது. காமத்தை எழுதுவதின் சவால் அல்லது சிக்கல் என்ன?

தூயன்: மனிதனின் பிரக்ஞைக்கு அதன் அகவுலகை அறிவதுவரை எந்த சிக்கலுமில்லை. ஒருதடவை அது தன் ஆழ்பிரக்ஞையை தொடும்போதுதான் அங்கு அகம் சலனமடைகிறது. அதாவது அகத்தை, புறமானது மோதிக்கொண்டேயிருக்கும்போது சமன்குழைவு நிகழ்கிறது. மனிதனின் இருப்பு குறித்த கேள்வியை அவனுடைய அகச்சலனத்திலிருந்துதான் முதலில் தொடங்க வேண்டும் (பௌதிக இருப்பு என்பது இங்கு கேள்விக்கே இல்லை.) இச்சலனத்திலிருந்துதான் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம், என தத்துவங்கள் உருவாகுகின்றன. இச்சலனம்தான் பிரபஞ்சத்தை வடிவமைக்கிறது. இந்தச் சமன்குழைவில்தான் தா்க்கம் பிறக்கிறது. தா்க்கம், உள்முரண்கள் இவற்றைத்தாம் நாம் அகச்சிக்கல் என்கிறோம். நான் எழுதுவது காமத்தை அல்ல, மனிதனின் அகம் சார்ந்த முரண்களை மட்டுமே. காமம் அகமுரண்களில் ஒரு கூறு, அவ்வளவுதான்.

இணையமும் சமூக ஊடகமும் படைப்பாற்றலை பாதிப்பதாக எண்ணுகிறீர்களா?

தூயன்: இன்றைய வாசிப்புலகில் இணையம் இரு வகையான பணியைச் செய்கிறது. இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதோ கைவிடுவதோ நடக்காதாவொன்று. நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் உரையாடல்களும் இணையம் வந்தபின்புதான் சாத்தியமாகியிருக்கிறது. கிண்டில், இ-ரீடா் மூலம் நிறைய ஆங்கில நுால்கள் கிடைக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுக்குள் கிண்டிலில் மட்டுமே படைப்புகள் வெளியிடப்படலாம். ஏன், இன்றைக்கு ஜெயமோகன் இணைய தளத்தில்தானே கட்டுரைகளும் விவாதங்களும் வாசிப்பதற்கு குவிந்திருக்கிறது. அதே வேளையில் இணையமும் சமூக ஊடகமும் அளவுக்கதிகமாக படைப்பாற்றலை செயழிலக்கச் செய்துவிடக்கூடியது என்பதில் மாற்று கருத்து இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் படைப்பாளியின் பிரக்ஞை உலகம் ஒன்று இருக்கிறது, அதை அவன்தான் நிர்வகிக்கிறான்.

சமகால தமிழ் இலக்கியச் சூழலை பற்றி…

தூயன்: பொதுவாக நம் முந்தைய காலகட்டத்தை கவனித்தால் தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் என ஒவ்வொரு இசங்களால் பிணைக்கப்பட்டிருந்ததன. அந்தந்தக் காலத்தில் அவை அதற்குரிய செயல்பாடுகளையும் விமா்சனங்களையும் உண்டாக்கிவந்தன. ஆனால் இப்போதுள்ள காலகட்டம் ஒருவித கேளிக்கை மனோபாவம் கொண்டது. எல்லாவற்றையும் பகடி செய்யக்கூடியது. இரண்டாயிரத்திலிருந்தே இந்த மனநிலை இங்கு மட்டுமல்ல எல்லா மொழி நாடுகளிலும் எல்லா கலைகள் மீதும் கவிந்திருக்கின்றன. இந்தக் கலவையான இசம் ஒரு வகையில் இலக்கியத்தில் மறைமுகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது.

ஆனால் முன்பைவிட இப்போது நிறையவே வாசிப்பதும் விமா்சிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. நிறைய படைப்புகள் வரத் துவங்கியுள்ளன. ஒருவகையில் இணையத்தின் வருகை இதை மாற்றியிருக்கிறது எனச் சொல்லலாம். சமகால படைப்புகள் குறித்து நிறைய உரையாடல்கள் நடக்கின்றன. ஆனால் நான் முன்பே சொன்னது போல கறாரான விமா்சனம் இன்னும் வீச்சாக எழவில்லை.