எழுத்து

நினைவின் நிழல் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

நில்லுங்கள்
தவறான வழிகாட்டுதலின்படி இங்கே வந்துள்ளீர்கள்
பொறுத்திருங்கள்
வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
சற்று பொறுத்திருங்கள்
ஓய்வெடுங்கள்
இந்த இடத்தினை அடைவதற்கு எவ்வளவு தடைகளை எதிர்கொண்டீர்கள்
கவனியுங்கள்
எதிர்ப்படுபவர்களில் யாரேனும் கடவுளாக இருக்கலாம்
இறக்கி வையுங்கள்
சுமைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்காதீர்கள்
விழித்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கைக் கனவு உண்மையென நம்பிவிடாதீர்கள்
உணர்ந்து கொள்ளுங்கள்
இந்த உலகம் மனத்திரையில் விரியும் சித்திரம்தான் என
ஏமாந்துவிடாதீர்கள்
உடலெடுத்ததன் நோக்கமே சுகம் அனுபவிக்கத்தான் என்றெண்ணி
ஓடாதீர்கள்
உங்களைப் பின்தொடர்ந்து வருவது கடவுள்தான்
கலங்காதீர்கள்
பாவக் கணக்கைத் தீர்க்க பலமுறை பிறந்துதான் ஆகவேண்டும்
விலக்கி வையுங்கள்
வெற்றி மகுடத்தைக் கைப்பற்ற தவறான வழிகாட்டும் மனிதர்களை
ஓய்வெடுங்கள்
வாழ்க்கையில்பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் மரணம் இளைப்பாறுதல் தரும்
துறந்துவிடுங்கள்
பெண்ணாசையால் கடவுளைத் தேடும் பாதையிலிருந்து விலகிவிடுவீர்கள்
நம்பிக்கை வையுங்கள்
பிதாவானவர் ஒருபோதும் மனுஷகுமாரனைக் கைவிடமாட்டார்
புரிந்துகொள்ளுங்கள்
நரக இருள் கவிந்த பூமியை சுவர்க்கமாக்குவது
உங்கள் கைகளில்தான் உள்ளது.

2

நாளைய பொழுதை எதிர்கொள்ள தயக்கமாக உள்ளது
ஒவ்வொரு விடியலும் வேதனையைத் தருகிறது
மனதின் லகான் இப்போது என் கையில் இல்லை
பெண் போதையிலிருந்து என்னால் மீள முடியவில்லை
அழகான பெண்களின் உள்ளிலிருந்து
ஆண்டவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்
நான்கு பேருக்கு மத்தியில்
கேலிப் பொருளாகிவிடுவேனோ என பயமாக உள்ளது
வருமானத்திற்கு வழி ஏதுமில்லை
குடும்ப பாரம் மலையென கனக்கிறது.
பிறப்புக்கு மனிதனின் விருப்பம் கேட்கப்படுவதில்லை
சாவை அவன் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை
வாழ்க்கை மனிதனை நூல்கொண்டு ஆடும் பொம்மையாகத்தான்
ஆக்கி வைத்திருக்கிறது
வேதாளம் போடும் விடுகதைக்கு அவனுக்கு விடை தெரியவில்லை
இல்லறம் துறந்து துறவறம் பூணலாம் இருந்தும்
மயக்கும் கன்னிகள் அவனைக் கனவில் துரத்தத்தான் செய்வார்கள்
உலகைவிட்டு வெளியேற வழி தெரியவில்லை
தீர்ப்பு எழுதியவனுக்கே தண்டனைக் காலம்
எப்போது முடியுமென்று தெரியும்
என் பாவக்கணக்கைத் தீர்க்க
குருடனாய் ஒருநாளும்
செவிடனாய் ஒருநாளும்
முடவனாய் ஒருநாளும் காலத்தைக் கழிக்கிறேன்
கைவிடப்பட்ட எனக்கு வேறு கதியில்லை
இறைவனைக் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை.

3

இந்த மாலையில் என் மன பாரத்தை
இறக்கி வைக்க தகுந்த இடம் தேடுகிறேன்
துரத்தி வரும் மரணத்தை மறந்து
மக்கள் கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்
தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்
இந்த மண்ணில்தான் காலணிகளைக் கூட
அணியாமல் உச்சிவெயிலில் புத்தர்
நடந்து சென்றிருப்பார் அல்லவா
இதோ இந்த புத்தவிஹாரம்தானே
இயேசுவை கிறிஸ்து ஆக்கியது
காந்தி அகிம்சையை ஆயுதமாகப்
பயன்படுத்தியதால்தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது
குருட்ஷேத்திர பூமிதானே திராவிடம் அழிவதற்கு வித்திட்டது
சமாதானத்தைப் போதித்தவருக்கு இந்த
சமூகம்தானே சிலுவையை பரிசளித்தது
சத்தியத்தை உயிராக மதித்தவருக்கு கடைசியில்
துப்பாக்கித் தோட்டாக்கள் தான் பரிசாகக் கிடைத்தது
எல்லையற்ற வானவெளியில் சிறுதூசுதானே இந்தப் பூமிப்பந்து
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும்
ஆயுளை ஒரு நொடியாவது நீட்டிக்க முடியுமா?
கடவுளின் படைப்புகள் பூரணமடையாததற்கு
என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்த்தோமா?
நீர்க்குமிழிகள் திரும்பவும் கடலில்தானே கலக்க வேண்டும்
பரிசுத்தமான ஆத்மாவைக் கண்கள் காட்டிக் கொடுப்பதில்லையா
சடங்குகள் மூலம் கடவுளைத் திருப்திப்படுத்திவிட முடியுமா?
கடவுளின் கைப்பாவைதான் நிழல்
அதனால்தானோ எட்டப்பன் வேலை செய்கிறது
இயேசு யூதாசுக்கு நன்றிக் கடன்பட்டவர்
அவனால்தான் இயேசுவால் மரணத்தை வெல்ல முடிந்தது.

4

எல்லைமீறும் போதெல்லாம் மனதின்
உள்ளிருந்து மணியோசை கேட்கிறது
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம்
அளிக்கவேண்டும் எனத் தெரியவில்லை
வாழ்க்கையில் சிகரத்தை அடைய
வேண்டுமென்றால் யாரையும் துணை சேர்க்கக் கூடாது
நம்முடைய காரியங்களை விரைந்து முடித்துவிட வேண்டும்
எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம்
விதியின் கைகளில் மனிதன் மைதானத்துப் பந்தாய் உதைபடுகிறான்
இந்தக் கனவுச்சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் எண்ணம்
யாருக்கும் இல்லை
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாமல்
வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறான்
மனிதனுக்கு சுதந்திரம் தேவையில்லை
மஞ்சத்தில் கன்னியரோடு வீழ்ந்து கிடந்தாலே அவனுக்கு போதும்
அமிர்தத்துக்கும், மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஈக்களைப்
போன்றவன்தான் மனிதன்
செய்த தவறுக்கு குற்றவுணர்ச்சி கொள்பவர்களை இதுவரை நான்
சந்தித்ததே இல்லை
கடவுள் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பார் என நம்புகிறான்
மனிதன் கர்வப்படும்போதெல்லாம் மாரன் தனக்குத்தானே
சிரித்துக் கொள்கிறான்
சுகபோகத்துடன் வாழ்பவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது
தவித்துத்தான் போவார்கள்
மரணம் உன் கோப்புகளைப் படிக்காது
நீ பிச்சைக்காரனா, பேரரசனா என அதற்குத் தெரியாது
பேரழகிகளாக உன் கண்ணுக்குத் தெரிபவர்களெல்லாம்
மரண தேவதைகளாகத்தான் பூமியில் அலைகிறார்கள்.

5

கடிகார முட்கள் நத்தை போல் நகர்ந்து கொண்டிருக்கின்றன
விட்டத்தில் மின்விசிறி சுற்றிக் கொண்டிருக்கிறது
முள் படுக்கையில் படுத்திருப்பதைப் போன்ற உணர்வு
என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்
மனம் கடந்தகாலக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தது
யாராவது தன்னை மடியில் வைத்து
தாலாட்டமாட்டார்களா என மனம் ஏங்குகிறது
உறக்கமில்லாத இந்த இரவு நரகத்தைவிடக் கொடியதாகப்படுகிறது
சபிக்கப்பட்டவனாக நான் இருப்பதினாலேயே
இப்போது பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வு என்பது கடவுள் எனக்குத் தந்த கொடூரத்தண்டனையாகப்படுகிறது
மரணம் ஒன்றே எனக்குத் தரும் பரிசாக அமையும்
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையிலாவது எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கட்டும்
கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்
எனக்கு இப்போது தேவை உறக்கம் மட்டுமே
துயிலலைகளில் மனிதர்கள் மூழ்கி இருக்கும்போது
நான் மட்டும் மிதந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க்கைப் பயணத்தில் இறங்குமிடத்தை நிர்ணயம் செய்வது
என் கையில் இல்லை
என்னைத் தவிர எல்லோரும் பேட்டரி மூலம் இயங்கும்
இய்ந்திரமாகத்தான் தெரிகிறார்கள்
என் அகந்தையைக் கொல்வதற்காகவே
இறைவன் என்னை இங்கே அனுப்பியிருக்கக்கூடும்
சரணடைந்துவிட்டேன்
இனி என் பெயரைச் சொல்லிக்கொண்டு
இங்கு இறைவன் வாழ்ந்து கொள்ளட்டும்.

தனிமை, குளிர் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

தனிமை


நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்து
தனிமையை ஒரு இரவாக வரைந்தேன்
இரவிற்கு
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது
தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது
இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாறலாம்.

குளிர்


இது மூன்றாம் ஜாமம்
நான் தற்செயலாக எழுந்திருக்கவில்லை
அப்படி எழுந்திருப்பவனுமல்ல
என்னை யாரோ
எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் நினைக்கலாம்
என்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் யூகிக்க முடியாது
நான் நன்றாக தூக்கத்திலிருந்ததை
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி முடிவிற்கு வரலாம்
மழை நாட்கள் என்பதால்
ஒரு குளிர் என்னை
எழுப்பி இருக்கலாம்
அல்லது நுளம்புகள் சில
எழுப்பி இருக்கலாம்
நுளம்பு எழுப்புவதற்கு வாய்ப்பில்லை
வலையை கட்டிலில் மனைவி
சென்ற வாரந்தான்
ஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்
அப்படியெனில்
குளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்
குளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது
அதனை குளிர்ச் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்
குளிர் என்னிடம் இருக்கிறது
மன்னிக்கவும், பெட்டி உங்களிடம் இருக்கிறதா.

Two Poems by Karikalan – Translated into English by Nakul Vāc

That lizard dishing out omens
in the northeast corner of Selli Amman Temple
won’t know.

That Brahmin who kindled the fire
and recited the Vedas
won’t know either.

Ditto
the friends and relatives who gathered around
to bless and wish us well.

None of them know of
our Love.

Preempting idle gossip in our town,
you left me, your lifeless body
a mere shell

whose hymen your husband must have torn
to end his wedding night
in consummate peace.

Did memories of me get washed away with soap-water?
I did wonder despairingly.

Pretty much the same turn of events
at my end as well.

Meeting unexpectedly, our lips
that once used to kiss
now introduce us to our kids as
Aunt and Uncle.

Shorn of intimacy-
my wife and your husband,
might be a bit problematic for them-
this Brother Sister relation of ours?

2

 

Self

Aroused by the caresses on ample bosoms
dark eyes bristle and drowse with pleasure
spread out on the black stone wall the body loosens
yanking its feet the statue follows.
The last ritualistic midnight tolls
awaken, tighten and petrify
in that moment when
the statuesque presence bestows on the house
an antique feel
yearning for the scent of stone
I turn into a bat and
hang upside down
from the rafters of the temple’s interior.

oOo

தமிழில் – கரிகாலன்

 

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“இலை நுனியில் விழக் காத்திருக்கும் மழையின் கடைசி துளி
குறி முனையில் தொக்கி நிற்கும் மூத்திரத்தின் கடைசி சொட்டு ”

கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்புள்ளி அவருக்கு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மேலே உள்ள வரிகளைதான் படித்துக் கொண்டிருப்பார். சிறு வயதில், நாளின் முதல் சிறுநீரின் அடர் மஞ்சள் நிறத்தை, கார நெடியை கவனித்ததுண்டு. வளர்ந்த பின்புதான் காப்பியின் எஞ்சியிருக்கும் மணமும் அதைக் குடித்த பின்னரான சிறுநீர் கழித்தலில் எழும், என்பதைக் கண்டு கொண்டேன். இன்று கழிவறையில் ப்ளஷ்ஷை அழுத்திவிட்டு, அந்த மணத்தை நுகர்ந்து கொண்டே வெளியே வரும்போதுதான் இந்த வரிகள் மனதில் தோன்றின. நாள் முழுதும் அதை விரிவாக்க முனைந்து, மிகையாக எழுந்த வரிகளை நீக்கி, மாலை ஆறரை மணி அளவில் பெரியவர் முற்றுப்புள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவருடைய சிறுகதைகளைப் படிக்க நேர்ந்து அவற்றை என் கதைகளாக இணைய இலக்கிய இதழொன்றுக்கு என் புனைப்பெயரில் அனுப்பி, அவை
பிரசுரமாகி, அதன்பின் செய்த குற்றத்திற்கு பெரியவரிடம் மன்னிப்பு கேட்டது போக, உண்மையை இணைய இதழின் எடிட்டருக்கு எழுதி அனுப்பி, அதையே அவர் ஒரு கதையாக எண்ணிப் பதிப்பித்த கூத்து நடந்த பிறகுதான் முற்றுப்புள்ளியிடம் நட்பு ஏற்பட்டது. வாழ்க்கை புனைவைவிட மிக விசித்திரமானதுதான் (இது போன்ற சொற்றொடர்களை நிஜ வாழ்வில் பொருத்துவதற்கான வாய்ப்புக்களை நான் எப்போதும் எதிர்நோக்கியே இருப்பேன், நான் மேலே சொல்லிய நிகழ்வுகளையேகூட பின்நவீனத்துவ கதையாக எண்ணிப் பார்ப்பதுண்டு என்பதை நான் வாசகர்களுக்கு சொல்லத் தேவையில்லை).

‘முற்றுப்புள்ளி’ என்ற அவருடைய புனைப்பெயர்தான் அவருடைய நூலை வாங்கச் செய்தது, இன்றுவரை அவருடைய உண்மைப் பெயர் – நிஜ, உண்மைப் பெயர் என்ற சொற்றொடருக்கான அர்த்தம், இங்கு அதை உபயோகிப்பதற்கான பொருத்தம் எல்லாம் சரியாக புரியவில்லை என்றாலும், பொது வழக்காக இருப்பதால் அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன் – என்னவென்று எனக்குத் தெரியாது, அவரும் இதுவரை என்னுடைய பெயரைக் கேட்டதில்லை, புனைப்பெயராகவே என்னை அறிகிறார். ‘இரு நிழல்களின்’ நட்பு என்று இந்த இடத்தில் குறிப்பிட்டால் கதைக்கு இலக்கிய தொனி கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும், மௌனியின் வரிகளை மாற்றி – நகல் செய்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் – யார் நிழல், யார் நிஜம் என்ற தத்துவ விசாரத்திலும் ஓரிரு பத்திகளுக்கு ஈடுபடலாம் என்று தோன்றுகிறது (நான் குறிப்பிடும் வரிகளை மௌனிதான் எழுதினார் இல்லையா, அல்லது நகுலனா? இருவருமே அப்படி எழுதி இருக்கும் சாத்தியம் உண்டு).

பார்வையை என்னை நோக்கி திருப்பியவர், ‘என்னப்பா இது அனுப்பி இருக்க’ என்றார்.

‘கவிதை சார்’

‘என்னது….’

‘அதாவது எதிர்-கவிதை சார், இதை அ-கவிதைன்னு கூட எடுத்துக்கலாம் இல்லையா’

‘எதிரு.. ஆ.. என்ன சொல்ல வர’

‘அதாவது சார், கவிதையின் அழகியல், லிமிடேஷன்ஸ், வரையறை எல்லாத்தையும்  கலைச்சுப் போட்டு..’ என்றவனை இடைமறித்து, ‘கவிதைக்கு என்ன வரையறை நீ வெச்சிருக்க மொதல்ல, இதுவரைக்கு கவிதை பத்தி, இல்ல கவிதை என்ன எழுதி இருக்க, ஏதோ கதன்னு தான எழுதிட்டிருந்த’

‘மொதல்ல நாம சந்திச்சப்போ ரெண்டு மூணு கவிதை ஒங்ககிட்ட காட்டிருக்கேனே சார்,’ என்று நான் சொல்ல, சில நொடிகளுக்குப் பின் ‘ஏதோ எழுதினத காட்டின..ம்ம், சரி இப்ப என்ன திருப்பி…’

‘நீங்க வேற நா எப்பவுமே செங்கல்பட்டு கதை மட்டுமே எழுதறேன்னு சொன்னீங்க, வேற முயற்சி செய்யலாமேன்னு’

‘நான் வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே கதை, இலக்கியம் ஆகாதுங்கற அர்த்தத்துல சொன்னேன்பா, அதுக்கு இப்படியா’

‘இது மொதல் ரெண்டு வர தான் சார், இன்னும் ஏழெட்டு வரி வரும், ரெயின் எங்க போய் சேர்றது, யூரின் எங்க போய் சேர்றது ரெண்டையும் ஜாயின் பண்ற மாதிரி.’

‘அப்போ இதை கண்டின்யு பண்ணத்தான் போறியா’

‘ஆமா ஸார், இப்போ இதை பாத்தா ஹைக்கூ மாதிரி இருக்குலியா, அதுன்னு நெனச்சுக்கப் போறாங்க’

‘ஹைக்கூவா…’

‘காபி குடிச்சுட்டு யூரின் பாஸ் பண்ணும்போது வர வாசனை, இப்படி நுணுக்கமான விஷயங்க. முன்னாடி நாம ஒரு நாள் பேசும் போது தி.ஜா ஏதோ அவர் கதைங்க பத்தின பேட்டியிலோ, நேர் உரையாடலிலோ வீட்ல கிச்சன், டிராயிங் ரூம் இருக்கற மாதிரி பாத்ரூமும் இருக்கே, அதைப் பத்தியும் எழுதணுமேன்னு சொன்னதா நீங்க கூட சொன்னீங்களே’

‘பாத்ரூம் பத்தி எழுதலாம்பா, ஆனா ப்ராடு வாஸ்த்து ஆளுகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, டிராயிங் ரூம பாத்ரூமா மாத்தறது மாதிரி ஆகக் கூடாதுல்ல’

‘இந்த மாதிரி எழுத்துக்களை பிரசுரிப்பாங்களான்னு தெரியல சார், எழுதி முடிச்சிட்டு அனுப்பறதான்னு முடிவு செய்யல, மோஸ்ட்லி அனுப்ப மாட்டேன்னு நினைக்கறேன்’

‘நல்லதுதான்’

பெரியவருடன் தொடர்பு ஏற்பட்டதும், சனி, ஞாயிறன்று அவர் வீட்டிற்குச் சென்று இலக்கிய உரையாடல்களில் ஈடுபடும் பழக்கமும் உண்டானது. அதாவது பெரியவர் என் எழுத்துக்களை கிழித்தெடுப்பார், நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தான் எழுதி, எங்கும் பிரசுரத்துக்கு அனுப்பாத அவர் கதைகளைப் படித்து (எழுபத்திரெண்டில் எழுத ஆரம்பித்த சிறுகதையின் இருபத்தி நான்காம் வரைவைக்கூட படித்திருக்கிறேன்) நாலைந்து நற்சொல் என் தரப்பாக வரும், குற்றம் செய்தவன் நான்தான் இல்லையா. மேலும் பெரியவரை ஒரு விதத்தில் என் ‘ஆல்டர் -ஈகோவாக’ பார்க்க ஆரம்பித்திருந்தேன். யுவனின் கதைகளில் வரும் இஸ்மாயில்கூட இப்படித்தான் ஈவிரக்கமில்லாமல் கதைசொல்லியின் கதைகளை கட்டுடைக்கிறார், இல்லையா, எனக்கு நிஜத்தில் நடக்கிறது அவ்வளவு தான்.

‘இலக்கிய இதழ்களே இப்படின்னா லிட்டரேச்சர் பத்திலாம் நெறைய பேருக்கு தெரியாது அவங்க கிட்டலாம் என்ன பேச, அதான் நான் எழுதறத பத்திலாம் யார்க்கிட்டயும் சொல்றது இல்ல’

‘அதான் நல்லது, கண்டிப்பா இது எழுதியே ஆகணும்னா கண்டின்யு பண்ணு பாப்போம் எங்க போய் நிக்குதுன்னு’

பெரியவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஹாலுக்கு வந்த, அவர் மனைவியைப் பார்த்து, உதடுகளை வலிந்து, எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்பை எப்போதும் போல் உதிர்த்து விட்டு, ( சிரிப்பை எல்லாம் எப்படி உதிர்க்க என்று எனக்கு தோன்றினாலும், இந்த நேரத்தில் வேறு எந்த உவமை, உருவகம் எதுவும் தோன்றவில்லை என்பதால் வேறு வழியின்றி அதையே எழுதி விடுகிறேன், கதையை திருத்தம் செய்யும்போது நல்லதாக ஏதேனும் தோன்றினால் மாற்றி எழுதக்கூடும். ஆனால் அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை, என்ன இருந்தாலும் இது எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்புதானே, அது மலர்வதைவிட உதிர்வதுதான் பொருத்தமாக இருக்கும், இல்லையா) வெளியே வந்தேன். முற்றுப்புள்ளியின் மனைவிக்கு கணவர் மீதும், அவர் எழுத்தின் மீதும் மிகப் பெரிய பற்று, என்னை தன் கணவனின் (முதல்) சீடனாக ( இறுதிச்’ சீடனும் நானாகத்தான் இருப்பேன், ஆனால் அந்தக் கட்டத்தை அவரது மனைவி இன்னும் அடையவில்லை) அவர் எண்ணுவதால் என் மீதும் கொஞ்சம் கரிசனம் உண்டு.ஆனால் நான் அவர் கணவரின் கதைகளை திருடிய கதை அவருக்குத் தெரிந்தால், என் கதை பெரியவரின் புனைப்பெயராகிவிடும் என்பதில் எனக்குச்’ சந்தேகமில்லை.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்து அறையில் விளக்கை அணைத்துவிட்டு மற்றனைவரும் (மற்றனைவரும் என்பதில் மற்ற அனைவரும் என்பதற்கில்லாத ஒரு கவிநயமிருக்கிறதில்லையா) தூங்க மடிக்கணினியை திறந்து (எதிர்)கவிதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். பத்தேமுக்காலாகி விட்டது. ஹெட்போனை அலைபேசியில் பொருத்தி, அதில் நிறுவியிருந்த ‘ஆல் இந்தியா ரேடியோவின்’ செயலியை இயக்கி ‘ஏ.ஐ.ஆர். தமிழ்’ நிலையத்தை தேர்வு செய்தேன்.(போன ஞாயிறன்று நேயர் விருப்ப நிகழ்ச்சியில் ‘ஐனாவரம் அபர்ணா நகரிலிருந்து இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்கள்’ என்று நாலைந்து பெயர்களை சொல்லி பாடலொன்றை ஒலிபரப்பினார்கள். சிறுவயதிலிருந்தே இந்த இடங்களும், அங்கிருந்து பாடல்களைக் கோரும் நேயர்களும் நிஜமானவர்கள்தானா என்ற சந்தேகம் எனக்குண்டு). யாரோ ஒருவர் கர்நாடக இசைப் பாடலொன்றைப் பாடிக் கொண்டிருந்தார் (நிலைய வித்வான்?). நான் கர்நாடக இசை கற்றுக் கொண்டதைப் பற்றி முன்பே தனிக் கதையாக எழுதிவிட்டதால், அதைப் பற்றி சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை (அந்தக் கதையில்கூட ஒரு விஷயமும் இல்லை என்பது முற்றுப்புள்ளியின் கருத்து. இந்தக் கதை பிரசுரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முந்தைய கதைக்கான லிங்க்கை இந்த இடத்தில் தருமாறு இதழின் ஆசிரியரிடம் கேட்கவேண்டும்). என்னையும், கர்நாடக இசையையும் சேர்த்துச் சொல்வது என்பது ‘ஆக்ஸ்சிமோறான்’ என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதும் என்று நினைக்கிறேன். (ஆங்கில வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிப்பதை பெரிய குற்றமாக – அவை கதையின் போக்கில் வேறு வழியின்றி உபயோகப்படுத்தப்பட்டிருந்தால் – பெரியவர் பார்ப்பதில்லை. பல பத்தாண்டுகளாக தன்னை புதுப்பித்துக் கொண்டே எழுதி வருகிறார் அவர். ஆனால் பிற மொழிச் சொற்களின் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். அவர் சொல்லித்தான் உச்சரிப்புகளுக்கான ‘ஃபோர்வோ’ இணையதளம் குறித்து தெரிய வந்தது, அதிலிருந்து தான் ‘ஆக்ஸ்சிமோறான்’ என்பதற்கான உச்சரிப்பையும் பெற்றேன். இங்கு, நாலு பேர் ஒரே சொல்லை நாலு விதமாக உச்சரிப்பது போதாதென்று ஒரே சொல் நாலு பேர் காதில் நாலு விதமாக ஒலிப்பது நுண்புல ஆய்வுக்குரியது).

பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியை பாடுபவரின் குடும்பமே கூட கேட்டுக்கொண்டிருப்பது கடினம்தான், வித்வானேகூட தூங்கி இருக்கலாம் அல்லது இருளான அறையில் காதருகில் ரேடியோவை வைத்துக் கொண்டோ அல்லது என்னைப் போல் அலைபேசியிலோ கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடலின் புரியாத வரிகளும், பாடுபவரின் குரலும், பக்க வாத்தியக் கலைஞர்களின் கருவிகளின் ஒலியும் (அவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோகூட இந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான் இல்லையா) ஒலித்துக் கொண்டிருக்க, மடிக்கணியின் திரையில் தெரிந்த என் கவிதையின் வரிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். (எழுதுபவரே அவ்வப்போது நேரடியாக வாசகரிடம் பேசுவது, எழுதிக் கொண்டிருப்பதை பற்றி பேசுவது/ ஸெல்ப் ரிப்லெக்ஸ்சிவ் பிக்ஷன் – என்றெல்லாம் இந்தக் கதையை சொல்லலாமா என்று தெரியாவிட்டாலும் எனக்கு அந்த சொற்றொடர் புரிந்த அளவில் அதை இங்கே உபயோகப்படுத்தி இருக்கிறேன் – போல் இந்தக் கதை இருந்தாலும் நெகிழ்ச்சியாக (யாரும் கேட்காத பாட்டைப் பாடும் வித்வான், யாரும் வாசிக்கப் போகாத கவிதையின் வரிகளை எழுதிக் கொண்டிருப்பவன் இருவரும் இணையும் இருளின் ஒரு கணம்) – நவீனத்துவ புனைவு போல் முடிவது – நான் குறிப்பிட்டுள்ள இரு தனியுற்ற மனங்கள் இணையும் இருளின் ஒரு கணம் வாசகருக்கு நெகிழ்ச்சியை தரும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி குறிப்பிடுகிறேன் – எனக்கேகூட வியப்பாகத்தான் இருக்கிறது. (இந்த முடிவுக்கு மட்டும் தனியாக ஒரு பின்குறிப்பு தேவைப்படுகிறது. முடிவை தலைப்போடும் இணைக்கும் என்பதால் அதை தவிர்க்க முடியாது. மனதைத் தொடும் வாக்கியங்கள் அவை. மிகத் தேர்ந்த ஸ்டைலிஸ்ட்டான வில்லியம் காஸ் என்பவர் தன் தொகுப்பொன்றின் முன்னுரையில் எழுதியது. அதன் அழகு கெடாத வகையில் அதை ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்)

oOo

முடிவின் பின்குறிப்பு (தலைப்புக்கும் ஒளிர்வூட்டுவது):

Unlike this preface, then, which pretends to the presence of your eye, these stories emerged from my blank insides to die in another darkness. I willed their existence, but I don’t know why. Except that in some dim way I wanted, myself, to have a soul, a special speech, a style. I wanted to feel responsible where I could bear to be responsible, and to make a sheet of steel from a flimsy page—something that would not soon weary itself out of shape as everything else I had known (I thought) always had,” என்று வில்லியம் காஸ் எழுதுவதை வாசிக்கும் எவருமே எழுத்தின் துயரனுபவத்துக்கு ஒரு கணமேனும் வருந்தாமல் இருக்க முடியாது. இதைத் தொடர்ந்து, “Because I wrote these stories without imagining there would be readers to sustain them, they exist now as if readerless (strange species indeed, like the flat, pigmentless fish of deep seas, or the blind, transparent shrimp of coastal caves), although a reader now and then lets light fall on them from that other, less real world of common life and pleasant ordinary things,” என்று அவரே எழுதும்போது நமக்கெல்லாம் நிழல்களின் நிழல்களின் நிழல்களாய் இருக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பிற பின்குறிப்புகள்:

பின்குறிப்பு 1:

கதையில் அடைப்புக்குறிகளுக்குள் எழுதப்பட்டுள்ளதை அடிக்குறிப்புக்களாகதான் முதலில் நான் எழுத எண்ணி இருந்தேன். நான் பெரிதும் வியக்கும் இலக்கிய ஆளுமைகள் பலர் (குறிப்பாக டேவிட் பாஸ்டர் வாலஸ்) இந்த உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்கள். எனக்கு அடிக்குறிப்புகள் நிறைந்த கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், வாசிப்பை கலைத்துப் போடும் இத்தகைய உத்திகள் மலிந்து விட்டனவோ என்ற சந்தேகம் எழ அதைக் கைவிட்டேன். மேலும் அடைப்புக்குறிகள் மீதும் எனக்கு கொஞ்சம் மோகம் உண்டு. நீண்ட வாக்கியங்கள், ‘-‘ போட்டு எழுதுவது மீதும். பின்குறிப்புக்கள் குறித்த என் அபிப்ராயத்தையும் கதை முடியும்முன் வாசகன் தெரிந்து கொண்டு விடுவான்.

பின்குறிப்பு 2:

எழுத்தாளர்களின் பெயர் உதிர்த்தல், கதையில் உள்ள இலக்கிய உத்திகள் (அவற்றை நான் புரிந்து கொண்ட அளவில்) பற்றிய விவரிப்பு எல்லாம் தேவையற்ற சுயமுன்னிருத்தலாக, ‘உயிரற்ற’ வார்த்தை ஜாலங்களாக (கதையின் உயிர் அல்லது ஆன்மா, இலக்கிய படைப்பில் கிடைக்க வேண்டிய ‘தரிசனம்’, ‘திறப்பு’, ‘ஆன்மீக சாரம்’ போன்ற கருத்தாக்கங்கள் எனக்கு சரியாக பிடிபடுவதில்லை. கருத்தாக்கம் என்ற சொல்லை நான் இங்கு உபயோகிப்பதுகூட பொருத்தமான ஒன்றா என்பதும் தெரியவில்லை. இந்தக் கதையில் எந்த ‘அறமும்’ இல்லை (நான் நினைக்கிற அறமும் நீங்கள் நினைக்கும் அறமும் ஒன்றெனில், இல்லாவிட்டால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது இல்லையா) என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்), காலாவதியாகிவிட்ட உத்திகளாக வாசகருக்கு (அதாவது இந்தக் கதை பிரசுரிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டால்) தோன்றலாம். அது நியாயமே, மேலும் கதை பொதுவெளிக்கு வந்தபின் ஆசிரியனுக்கு அதன் மேல் எந்த உரிமையும் இல்லை அல்லவா. என்னளவில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் (எழுத்தாளன் தன் எழுத்து பற்றி பேசக் கூடாது, வாசகன் அதலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறானோ அதுதான் அவனுக்கான கதை -அவரவர் கைமணல்- என்பதெல்லாம் சரிதான் என்றாலும்கூட இந்த ஒரு முறை மட்டும் தன்னிலை விளக்கமொன்று தரலாம் என்று நினைக்கிறேன்).

என்னுடைய முந்தைய இரண்டு கதைகளுக்கு இந்தக் கதையில் இணைப்பு கொடுத்திருப்பதால் இதை ‘ஹைப்பர்-டெக்ஸ்ட்’ கதையென்று சொல்ல மாட்டேன், அவற்றை மீண்டும் வாசகர்கள் முன் வைக்க கிடைத்த வாய்ப்பை உபயோகித்துக் கொண்டேன் அவ்வளவே.

இந்தக் கதையில் எனக்கு தோன்றிய (எதிர்)கவிதை வரிகள், அவை குறித்து பெரியவருடன் நான் உரையாடியது, அந்தப் பேச்சு தொடர்பான என் எண்ணங்கள் அனைத்தையும் அவை நிகழ்ந்தபடியே எந்த கூடுதலோ, குறையோ இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்த விதத்தில் இது எந்த மிகையும் இல்லாத நேரடியான யதார்த்தக் கதைதான், படிக்கும்போது வாசகனுக்கு வேறு மாதிரி தோன்றக்கூடும் அவ்வளவே (இங்கு, புனைவு வாழ்க்கையை விட விசித்திரமானது என்று மாற்றிச் சொல்லலாமா என்று தோன்றுகிறது)

பின்குறிப்பு 3:

கதை எழுதியதைப் பற்றி விளக்க ஆரம்பித்தபின், கதை குறித்த (சுய) விமரிசனத்தையும் பின்குறிப்பாக சேர்த்து விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். பிரசுரம் ஆகுமா ஆகாதா என்றே சொல்ல முடியாத கதைக்கு இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழ அந்த எண்ணத்தை விலக்கினேன். பிரசுரம் ஆகாவிட்டாலும்கூட ஒன்றும் பிரச்சனையில்லை. இதை முற்றுப்புள்ளியிடம் தந்தால் ‘ஆகச் சிறந்த’ விமரிசனத்தை அவர் தருவார். ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனம்’ என்று அதை இன்னொரு (யதார்த்த) கதையாகக்கூட எழுதி விடலாம். மற்றொரு பாத்திரத்தை சேர்த்தால் கதையை ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனக் கூட்டமாக்கி’ விடலாம்.

பின்குறிப்பு 4:

இரு சொற்றொடர்களை நடுவில் ‘அல்லது’ வைத்து இணைத்து கதையின் தலைப்பாக வருமாறு வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதாவது ‘மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்’, ‘கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள்’ போன்ற தலைப்புக்கள். ‘X அல்லது Y’ என்று வைத்துக் கொண்டால் வாசகன் இரண்டில் தனக்கேற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாணி கதைகளுக்கான இப்படி தலைப்பு வைப்பது வழக்கமாகவும் (தமிழில்) உள்ளது. ஆனால் ‘X மற்றும் ‘Y’ஆக என்ன வார்த்தைகளைப் போடுவது என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. ‘ஒரு பின் மாலை நேர இலக்கிய உரையாடல் அல்லது விழித்திருப்பவனின் இரவு நேர இலக்கிய விசாரம்’ என்று ஒரு எண்ணம். யதார்த்தக் கதை என்பதால் முதல் பகுதி பொருத்தமாக இருக்கும் (என் முந்தைய கதையொன்றின் தலைப்பைதான் இப்படி மாற்றி இருக்கிறேன்), இரண்டாவது பகுதி இலக்கியத் தன்மையுடன் கவித்துவமாக உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் இதுவும் எனக்கு முழு உவப்பாக இல்லை என்பதால் இதழ் ஆசிரியரிடமே விட்டு விடுகிறேன். பிரசுரமாகும்போது/ பிரசுரமானால் வாசகன் படிக்கும் தலைப்பு அவர் வைத்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். (கதையின் தலைப்பு மட்டுமல்ல, பாத்திரங்களுக்கான பெயரை வைப்பதிலும்கூட எனக்கு குழப்பமே ஏற்படுகிறது, எனவே ‘நான்’, ‘இவன்’ ‘அவள்’ என்றுதான் பெரும்பாலும் எழுதி வந்திருக்கிறேன். கதைக்கான கருவையும், நிகழ்வுகளையும், அவற்றை விவரிக்கும் வார்த்தைகளை, வாக்கியங்களைத் தொகுப்பதே கடினமாக இருக்கும் போது பெயர்களுக்கு நேரம் செலவிடுவது எனக்கு விரயமாகவே தோன்றுகிறது. மேலும் நாளை என்னை யாரேனும் நேர்காணல் காணும் அல்லது என் புனைவுலகை உருவாக்கும் முறை பற்றி நானே விவரிக்கும் சூழலோ உருவானால், பாத்திரங்களை ‘அவன்’, ‘நான்’ என்று அழைப்பது வாசகன் தன்னை எளிதாக, உடனடியாக அவர்களுடன் உணர்வுரீதியாக பொருத்திக் கொள்ள உதவக்கூடும், ‘அவன்’ என்பது நவீன மனிதனின் பிரதிநிதி, அவனுடைய தனிமையின் குறியீடு என்ற ரீதியில் நான் ஏதேனும் சொன்னால் அது எடுபடவும் கூடும்)

பின்குறிப்பு 5:

கதையில், நிறைய இடங்களில் ‘இல்லையா’, ‘அல்லவா’, ‘தோன்றுகிறது’ போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருகின்றன, இதை தவிர்த்து அதே அர்த்தத்தில் பிற வார்த்தைகளையும் உபயோகித்திருக்கலாம். ‘அங்கிள்’ என்று அழைக்கப்படும் வயதாகிவிட்டாலும், எழுத்துப் பயணத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் பாலகன்தான் என்பதால், காலப்போக்கில் என் எழுத்தில் முதிர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

பொதுவாக கலைச்சொற்களை அவற்றின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு பொருத்தமாக உபயோகிக்க வேண்டும் என்றுதான் முயல்கிறேன், ஆனால் என் புரிதலின் எல்லைகளை விரிவாக்குவது போராட்டமாகவே உள்ளது.

பின்குறிப்பு 6:

இதுவே கதையின் இறுதி வரைவாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘வாசகன்’ என்றே எல்லா இடத்திலும் குறிப்பிட்டிருப்பதையும் இப்போதுதான் கவனிக்கிறேன் என்பதால் இனி மாற்ற நேரமில்லை. ‘ரீடர்’ என்று ஆங்கிலத்தில் பொதுவாக உள்ள சொல்லின் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அவமதிக்கும், விலக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை எனக்கு. இருப்பினும் என்னையறியாமல் இப்படி நிகழ்ந்ததற்கு மன்னிப்பும் கோருகிறேன். (உண்மையில் எனக்கு பெண் வாசகியர் மீது ஒரு தனி பரிவுண்டு, அவர்களே என் கதையின் மீதான சிறந்த விமரிசனம் நிகழ்த்துவதாக நண்பர் ஒருவர் கூறுகிறார்).

பின்குறிப்பு 7:

இந்த வரைவை முற்றுப்புள்ளிக்கு அனுப்பப் போவதில்லை, ‘லெட் ஸ்லீபிங் டாக்ஸ் லை’ (சொற்றொடர்களை என் வாழ்க்கையில் பொருத்தும் வாய்ப்புக்களை எதிர்நோக்கி இருப்பது பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா). என் புனைப்பெயரில் அனுப்புவதற்கு பதில், முற்றுப்புள்ளி என்ற பெயரில் அனுப்பலாம். அவர் கதைகளைத் திருடி குற்றம் செய்தவன் நான்தான், ‘ஆதி குற்றம்’ (சொற்றொடர்களை பொருத்துவதற்கு இது ‘ஆகச்சிறந்த’ கதையாக உள்ளது). ஆனால் தண்டனையை நான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமா என்ன, குற்றத்தையும் தண்டனையையும் ஒற்றைப்படையாக ஏன் அணுக வேண்டும், நாம் இப்போது வாழ்வது ‘போஸ்ட்-ட்ரூத்’ உலகில். (‘போஸ்ட்-ட்ரூத்’ என்ற சொல் பெரும்பாலான கட்டுரைகளில் – அது எந்த துறையை பற்றியதாக இருந்தாலும் – இடம் பெற்று வரும் சூழலில் அவ்வார்த்தையை புனைவொன்றில், அதுவும் அதன் முடிவில் முத்தாய்ப்பாக உபயோகித்திருப்பது உற்சாகமளிக்கிறது).