எழுத்து

ஆரண்ய கன்னி – கன்யா சிறுகதை

கன்யா

நர்மதையின் அருகே அமைந்துள்ள அழகான காடு. செடியும் கொடியும் மரங்களும் சிறு சிற்றோடைகளும் சூழலை ரமிக்கச் செய்கின்றன. மலர்களிலும் கனிகளிலும்தான் எத்தனை வகைகளைப் பார்க்க முடிகிறது இங்கே! மாதவி, தான் எப்போதும் அந்தந்தக் கணங்களில் வாழ்வதை தானே இரசித்தாள். மரப்பட்டைகளைக் கொண்டும் கீற்றுக்களைக் கொண்டும் மூங்கில் கழிகளைக் கொண்டும் அங்கே பர்ணசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், யாரையும் காணவில்லை. ஒருக்கால் அஷ்டவகனின் யாகத்திற்குச் சென்றிருக்கலாம். அவள் இங்கு வந்து ஐந்து நாட்கள் ஆகின்றன.

நான்கு மான்கள்- ம்ருணாளினி, ம்ருகனயனீ, ஹிரண்மயி, அக்ஷ வித்யா! எத்தனை அன்புடன் மாதவியைச் சுற்றி வருகின்றன! நான்கு வேதங்களின் குறியீடா?அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று பெண்களுக்குச் சொல்லப்படும் குணங்களா?அவளையும் இணைத்துக் கொண்டு ஐந்தழல் தவமா?அவளையே அறியும் ஆவலா? இன்று அதிகாலையிலேயே ம்ருணாளினி வந்து விட்டாள். நேற்றே இதற்கான அச்சாரமும் போட்டுவிட்டாள்.

மாதவி பேசத் தொடங்கினாள்-

‘ம்ருணா, நானும் காட்டின் உயிர்தான். உன்னைப் போல் கவரிமான் இனம்தான்.வெள்ளி எழுந்தாகிவிட்டது. அடர்ந்த மரங்களின் உள்ளே தாய்ப் பறவைகள் எழுந்து குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டே பாதுகாப்பாக இருக்கும் விதத்தினைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புலரியின் முதல் கிரணங்களில் அவை இரை தேடி கிளம்பத் தயாராகும். முந்தும் பறவைக்குத்தான் அதிக உணவு கிடைக்கும். ம்ருணா, அந்தக் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தாய் அதை கவனிக்காது. ஆனால், அப்பொழுதுதான் பிறந்த குழந்தைகளை விட்டு தனியே வந்த தாய் நான்.’

ம்ருணாளினி ஏறிட்டுப் பார்த்தது.

‘ஓ, ம்ருகனயனீ, நீயும் வந்துவிட்டாயா? ஹிரண்மயி, அக்ஷ வித்யாவும் வந்திருக்கிறார்களா? புதுப்புற்கள் உங்களுக்காகவே பனித்துளிகளுடன் காத்திருக்கின்றன. நந்தினி பால் ததும்ப வந்து நிற்கிறாள் பார். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னிடம்? என் அமுதூற்றை என்ன செய்தேன் என்றா? பாருங்கள், நந்தினி கன்றுடன் வரவில்லை. நினைத்து முலை வழியே நின்று பால் சுரக்கிறாள், நானும் என் மைந்தர் நால்வருக்கும் அப்படியே செய்தேன். பசும் புல் கூட வேண்டாம், என் கதைதான் வேண்டுமா உங்களுக்கு? சரி காலையிலேயே கதையா? பாதிதான் இப்பொழுது சொல்வேன்,சம்மதமா?’ என்று அவள் ஆரம்பித்தாள்.

‘என் பெயர் மாதவி. ஒவ்வொரு வனமாகப் பார்த்து வருகிறேன். எல்லா உயிர்களும் என்னை நேசிக்கின்றன. நான் எல்லோருடனும் நட்பு கொள்கிறேன்.’

‘மரங்களின் இலைகளின் ஊடாக ஆதவன் பூமியில் போடும் வட்டங்களும், காற்றில் இலைகள் அசைய அவை மாறும் உரு எழிலும், தெளிந்த நீல வானும் காலவர் வந்த அன்றைய தினத்தில் இல்லை. பொழியாத கரு மேகங்கள், இறுக்கமான காற்று, இனம் தெரியாத மனக் கலவரம் இப்படிப்பட்ட ஓர் நாளில் பிரதிஷ்டானத்தின் மன்னராகிய யயாதியிடம் அவர் வந்தார். முகத்தில் நல்ல களை. திருமணமாகாதவர். தன் ஆசானாகிய விஸ்வாமித்திரருக்குக் கொடுப்பதற்கான குரு தட்சிணையை மன்னரிடம் யாசகம் பெற்றுச் செல்வதற்கு வந்திருந்தார். அவருக்கு எண்ணூறு பால் வெள்ளைக் குதிரைகள் வேண்டும்-அவைகளும் ஒரு காது மட்டும் கறுப்பாக இருக்க வேண்டும். யயாதியிடம் அந்த மாதிரி ஒரு குதிரைகூட இல்லை; பொருள் தந்து வாங்கிக்கொள்ளச் சொல்ல கருவூலத்தில் நிரை இல்லை. மன்னருக்கும், மைந்தர்களுக்கும் கவலை; ஏழை அந்தணனுக்கு உதவ ஒன்றுமில்லை. அப்பொழுது நான் சொன்னேன், ’தந்தையே, உங்கள் கௌரவத்தை நான் காக்கிறேன்,’ மாதவி சற்று நிறுத்தினாள்.

‘ம்ருணாளினி, உன் அழகான கண்களை வியப்பில் விரிக்கிறாய், என்ன ஒரு வசீகரம்! ஆம், நான் இளவரசிதான். ஆனால், செயல்களின் எந்த விளைவும் என்னை அணுகாது. தழையும், புற்களும் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றன? உங்களுக்கு அவை உணவு, எங்களுக்கு கண் கொள்ளும் விருந்து,’என்று சற்று நிறுத்திவிட்டு, ‘சரி,சரி, அக்ஷ வித்யாவைப் பார், தலையைச் சாய்த்து மேலே சொல் என்கிறாள். “தந்தையே, காலவர் என்னை அழைத்துச் செல்லட்டும்; என்னை மணம் புரியும் அரசரிடம் தனக்கான 800 குதிரைகளைப் பெற்றுக் கொள்ளட்டும்” என்றேன். என் தந்தை மகிழ்ந்தார். இவளுக்கு ஆண் மக்களைப் பெற்றெடுக்கும் வரம் ஒரு முனிவர் தந்துள்ளார். காலவரே, நீங்கள் இவளை அழைத்துச் சென்று அரச குலத்தில் மணம் செய்வித்து அதன் மூலம் உங்கள் குரு தட்சிணையைப் பெறுங்கள், என்றார் அரசராகிய என் தந்தை.’

‘மீதியை இன்று மதியம் சொல்கிறேன்,’ என்று மாதவி நகர்ந்ததும் மான்களுக்கு வருத்தம்தான்.

“ஒரு இளவரசி ஏன் காட்டில் இருக்கிறாள்? மனிதர்களைப் போல் நரிகள்கூட இல்லை.அந்தக் காலவன் தன் வேலை முடிந்ததும் இவளைக் கைவிட்டிருப்பான். ஆமாம், அதென்ன விந்தையான குரு தட்சிணை; எண்ணூறு வெள்ளைக் குதிரைகள், அவைகளின் ஒரு காது மட்டும் கறுப்பு. காட்டில் தவம் செய்யும் ரிஷிக்கு அவ்வளவு குதிரைகள் எதற்கு?அவர் இந்தக் காட்டிற்கு வருகையில் நம்முடைய கொம்பாலே முட்டித் தள்ள வேண்டும்,” அவைகள் பேசிக்கொண்டே புல் மேய்ந்தன.

‘எல்லா உயிர்களுக்கும் பிறரது வாழ்க்கை ஒரு சுவாரஸ்யம் போலும். இந்த மான்கள் என்னைப் புரிந்து கொள்ளுமா? அது கான் உயிரிகளின் சட்டத்தைக் கொண்டா, மனித நியதிகளைக் கொண்டா? அதிலும்கூட இப்பொழுது நடைமுறையில் உள்ள வழக்கங்களா, இல்லை தொன்ம மரபுகளா?’

மாதவி சிரித்துக் கொண்டாள். பிறர் புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாலே நம் செயலுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம் என்றுதானே பொருள். ஆனாலும், உயிர் சுமக்கும் பெண்ணிடம் உலகம் அதிக அளவில் உண்மையை எதிர்பார்க்கிறதோ? எந்த உண்மை அது, நிஜமான மெய்யா, நிழலான மெய்யா? நிகழ்வுகளிலிருந்து பிரிந்து அதில் ஒன்றாமல் ஈடுபடுவது உண்மையின் வேஷம் போட்ட பொய் அல்லவா?அல்லது அதுதான் வாழும் கலையா? மனிதன் பிற உயிர்களைப் போல் நான்கு கால்களால் தவழாமல் நேரே நிற்கத் தெரிந்ததும் கனல் என்றும், கன்னி என்றும், கற்பு என்றும், வம்சம் என்றும், குலப் பெருமை என்றும் சிக்கிக் கொண்டு விட்டானோ? விலங்குகள் புணர்வதற்கென்று பருவங்கள் வைத்திருக்கின்றன, சில நியதிகளும்கூட.

அந்த ஆண் தூக்கணங்குருவி பார்த்துப் பார்த்து எத்தனை அழகாக கூடு கட்டியது தன் துணைக்காக. அதை அந்தப் பெண் குருவி ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாறுதல்களைச் செய்யச் சொன்னது- முக்கியமாக உள் தொட்டில் போன்ற அமைப்புடன் முட்டையிடவும், குஞ்சு பொரிக்கவும் அது சொன்ன மாறுதல்கள். தன் இனப் பெருக்கத்தில் அவைகள் கவனமாக இருக்கின்றன. அவைகளும்தான் காதல் கொள்கின்றன, சேர்ந்து இன்பமாக இருக்கின்றன. ஆனால், சில மனிதர்கள் காமத்தில் மட்டுமே ஆடி, அதுவும், பருவங்கள் பாராது, அழகுணர்ச்சியை இழந்தல்லவா வாழ்கிறார்கள்? பக்க விளைவாகக் குழந்தைகள்! விந்தையான உலகம் இது’.

மான்கள் வந்து அவள் சிந்தனையைக் கலைத்தன. ’என் கதையைத் தொடர வேண்டும் அதுதானே? அயோத்தி அரசர் ஹர்யஸ்வாவிற்கு ஒரு ஆண் மகனை  அதாவது வசுமானசாவைப் பெற்றுக் கொடுத்தேன். அவர் இருநூறு குதிரைகள் கொடுத்தார். பின்னர் காசி மன்னர் தேவதாசவிற்கு என் மூலம் ப்ரதார்த்தனா பிறந்தான். மேலும் ஒரு இருநூறு குதிரைகள். அப்புறம் போஜனகிரியின் அரசனான உஷினராவிற்கு சிபி பிறந்தான். மீதி இருநூறு குதிரைகளுக்காக விஸ்வாமித்திரருக்கு அஷ்டவகனைப் பெற்றுக் கொடுத்தேன்.’

“ஹர்யஸ்வாவிற்குச் சரி. மற்ற மூவருமெப்படி இதை ஒப்புக் கொண்டார்கள்?” என்றாள் ம்ருகனயனீ.

‘சென்ற பிறப்பில் நீ மனிதனாக இருந்திருக்க வேண்டும்; வாசனை போகவில்லை’ என்று சிரித்தாள் மாதவி.

‘ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன் நான் கன்னியென ஆகும் திறம் பெற்றவள்; அதை வரமென்றுகூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதனால் நான் கற்புக்கரசி என கொண்டாடப்படவும் கூடும்.’

“நீ அதிகமாக பயமுறுத்துகிறாய். உங்கள் மனித சட்டங்கள் அப்படித்தானே இருக்கின்றன,” என்றாள் ஹிரண்மயி.

‘கோபத்தைப் பார். சாஸ்திரங்களின்படிதான் நால்வருடன் எனக்குக் கல்யாணம். அப்படியில்லையென்றால் பிறக்கும் மகனுக்கு அரசாளும் உரிமை கிடையாது. என் கருவறை வாயில் ஒரே ஒரு கூடலுக்குத்தான் திறக்கும். ஒரு விந்துவிற்கு மேல் அனுமதிக்காது. காதலுக்கும், காமத்திற்கும் இடம் கொடுக்காத இதை தாந்த்ரீகத்தில் ’யோனிக் காப்பு’ என்றும், ’கரு இருள் பூஜை’ என்றும் சொல்வார்கள். என் மகன்கள் பிறந்த மறு நொடி நான் அவர்களை விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுள் ஊறும் அமுது அவர்களை என் நினைப்பாலேயே வளர்த்து விடும் நான்காவது மகன் பிறந்த பிறகு காலவர் என்னை வாழ்த்தி வணங்கி கன்னியெனவே என் தந்தை யயாதியிடம் ஒப்படைத்தார்’.

“அதெல்லாம் தான் முடிந்துவிட்டதே, பின் ஏன் காட்டுக்கு வந்தாய்?’என்றாள் அக்ஷ வித்யா.

‘யயாதி மன்னர் எனக்கு சுயம்வர ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். பல அரசர்களுக்கு  என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தது. முத்தான நான்கு புதல்வர்களை நான் பெற்று அளித்தாகிவிட்டது. ஒவ்வொரு மகனுக்கும் நினைப்பாலே பாலூட்டி வளர்த்தாகிவிட்டது. இனி ஒரு மண வாழ்க்கை எனக்கெதற்கு? வசுமானசா செல்வம் மிக்கவனாகவும், பெருமை படைத்தவனாகவும் இருக்கிறான்; இரண்டாம் மகன் ப்ரதார்த்தனா வீரம் மிக்கவன்; சிபி உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறான். அஷ்டவகா அஸ்வமேத யாகம் செய்து அரசாள்கிறான். எனக்கு கடமைகள், பந்த பாசங்கள் கிடையாது. நல்ல உலகிற்கான தவமும், நல்ல நட்பும் மட்டுமே தேவை. இரண்டும் காட்டில் எனக்கு கிடைக்கும் என்றவுடன் என் தந்தை என்னை என் விருப்பப்படி அனுப்பி வைத்தார். காடு காடுகளாகச் சென்று கொண்டிருக்கிறேன்,’ என்றாள் மாதவி.

“என் கேள்வி இது, மாதவி. நீ கன்னிகையென ஆகாவிடில் உன்னை தேவதாசாவோ, உஷினராவோ கல்யாணம் செய்திருப்பார்களா? அவர்களின் இந்த மனப்பாங்கினை நீ வெறுக்கவில்லையா?” என்றாள் ஹிரண்மயி.

‘ஒரு போதும் இல்லை. எல்லாம் ஒரு நிலத்தில் விளைந்த தானியமாக இருந்தாலும் தேர்ந்த நெல்மணி விதைகளை வைத்துத்தான் அடுத்த பட்டம் நடக்கும். மனைவி ஆன கன்னியினால்தான் அரச வழி நல் வாரிசென வளரும்,’ மாதவியின் பதில் புரியவே அவர்களுக்குச் சற்று நேரமாயிற்று.

“அப்படியென்றால் உன் தந்தை சொல்படி திருமணமாவது செய்து கொண்டிருக்கலாம் அல்லவா?” என்றாள் அக்ஷ வித்யா.

‘எனக்கு கலவியில் நாட்டமில்லை. கற்பிற்கு மனிதர்கள் சொல்லும் சமன்பாட்டில் நம்பிக்கையில்லை. நான் சக்தியின் குறியீடு.என் கருப்பையில் குடி கொண்டுள்ள கன்னித்தெய்வம் நான். திங்கள்தோறும் நான் அடையும் விலக்கின் குருதி மிகத் தூய்மையானது. பெண்ணெனப் பிறந்ததால் அன்னை என ஆனேன். அது என் பெருமை. அந்தந்தக் கருச் சுமந்த போதில் நான் அதைத் தவிர எதையும் நினைக்கவில்லை, ஒப்பீடு செய்யவில்லை.

‘பிறந்த குலத்திற்கு நேர இருந்த சங்கடத்தைப் போக்கினேன், மகன் அற்ற அரசர்களுக்கு நல்ல குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தேன். குருதட்சிணை தர இயலாமல் தவித்த ஒரு அந்தணனுக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். மகளாக,பட்டத்து இளவர்களின் தாயாக, ஒரு  கடன்பட்ட யாசகனின் உறவற்ற தோழியாக, விச்வாமித்திரரின் வாரிசினைச் சுமந்த பாக்யசாலியாக… இனி என்ன வேண்டும் எனக்கு? நான் நிர்க்குணா, நிர்மலா, நிசம்சயா, நிர்னாசா. நான் சரஸ்வதி எனும் ஆறு. பிறர் கண்களுக்குப் புலப்படாத தத்துவம் இலங்கும் தூய நதி. கலையாத தருணங்களைக் காலம் கலைக்காது குழந்தைகளே, நான் காட்டின் கன்னி அல்லவா?’

 

 

 

துளிகள் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.

உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.

பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.

வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.

நகர்வுகள் – ஆகி கவிதை

ஆகி

காமப்பெருங்குன்றின் முகட்டில்
வசிக்கின்றவன்
முகர்கின்றான்
கேட்கின்றான்
மல்லாந்து கிடக்கின்றான்
உரையாடுகின்றான்

வியர்க்கின்றான்
இறங்கி நிற்கின்றான்
கண்ணிமைக்கின்றான்
அவன் காதற்பள்ளத்தாக்கினுள்
எப்போதைக்குமாக
இறங்கிக்கொண்டிருக்கின்றான்
அக்காதற்பள்ளத்தாக்கினடியில்
வசிக்கின்றவள்

குப்புறக் கிடக்கின்றாள்
உரையாடுகின்றாள்
மூச்சிழுக்கின்றாள்
மெல்ல முயங்குகின்றாள்
மூச்சிரைக்கின்றாள்
வியர்க்கின்றாள்
கண்ணிமைக்கின்றாள்
எழுந்து நிற்கின்றாள்
அவள் அக்காமப்பெருங்குன்றின் முகட்டுக்கு
எப்போதைக்குமாக
ஏறிக்கொண்டிருக்கின்றாள்

குளிரூட்டிய அறை- மதுரா கவிதை

மதுரா

கங்காருக்குட்டியென
உடன் பயணிக்கும்
மடிக்கணினியிலிருந்து
கண்ணெடுக்காமலேயே
எப்போதாவது நலம் விசாரிக்கும் மகன்

காதுகருவியை கர்ணனின்
கவசகுண்டலமாக்கி
கண்களால் அனுசரணையாய்
அபிநயக்கும் மருமகள்

கருவான நாள்முதல்
கனவுக்கோட்டையைக் கைப்பற்ற
எல்லாம் கற்றுக்கொள்ள
பம்பரமாய்ச் சுழலும் பேரன்

அவசரத்தேவை ஐம்பது நூறுக்காக
தன் வீட்டுக்கதையை
விலாவரியாக விஸ்தரிக்கும்
பொன்னம்மாவின் வார்த்தைகள்
இவர்களை விட
இதமாயிருக்கிறது இப்போதெல்லாம்

 

பிரைமரி காம்ப்ளக்ஸ் – சுரேஷ் பிரதீப் சிறுகதை

சுரேஷ் பிரதீப்

பிரைமரி காம்ப்ளக்ஸ் என்பதுதான் அர்த்தத்தோடு நான் அறிந்த முதல் ஆங்கில வார்த்தை. தொண்டையில் சதை வளரச் செய்யும் அந்த வியாதி எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருந்தது.

உடம்புக்கு முடியவில்லை என சொல்வதற்கு முன்னே கிருஷ்ணமூர்த்தி டாக்டர் கையில் ஊசியை எடுத்துவிடுவார். அவரெதிரே நெளிந்தபடி ஸ்டூலில் உட்கார்ந்திருக்கும் என்னுடைய நொய்மையான தோள்களை பிடித்தபடி எனக்கிருக்கும் கோளாறுகளை அம்மா சொல்லும். அம்மா பேச்சை நிறுத்தும் வரை அவரெதிரே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய கண்ணாடிப் புட்டியில் இருந்தும் மருந்தை ஏற்றுவார். ஈரப் பஞ்சால் ஊசி குத்தப் போகும் என் நோஞ்சான் கையை அவர் தேய்க்கும்போதே எனக்கு வலிக்கத் தொடங்கிவிடும். அதுவரை என்னை போட்டுக் கொடுத்து பெரிய ஊசியாக குத்த வைத்த அம்மாவின் இடுப்பை ஒரு கையால் வளைத்துக் கொள்வேன். அம்மாவும் முதுகைத் தடவிக் கொடுக்கும். அதன்பின் நடப்பது வேறு வகையான கொடுமை.

உடல்நிலை மோசமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மாத்திரைக்கும் ஊசிக்கும் சுகக்கேடு சரியாகாதபோதுதான் கொரடாச்சேரிக்கு செல்லும் வாய்ப்பே கிடைக்கும். ஆனால் சேனம் கட்டப்பட்ட குதிரையென மருத்துவமனைத் தவிர எதுவுமே கண்ணில் பட்டுவிடாமல் அம்மா இழுத்துக் கொண்டு செல்லும். ஒருமுறை பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வரும் அம்மாவின் தலையைத் திருப்பி, “அம்மா எனக்கு ஜொரம் சரியாயிட்டும்மா. புரோட்டா வாங்கித் தர்றியா” என்றேன். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பாதகத்தி சிரித்துக் கொண்டே, “ஆஸ்பத்திரி நெருங்க நெருங்க அப்டிதாம்புள்ள இருக்கும்” என்றாள். என்னுடைய புரோட்டா கனவு தகர்ந்து போனது.

அன்றும் வழக்கம் போலவே ஒன்றும் வாங்கித் தராமல் அரைபோதையில் வரும் என்னை தரதரவென அம்மா இழுத்துச் சென்றது. வீட்டிற்கு வந்ததும் பயண அனுபவத்தை ஐந்து நிமிடங்கள் கூட அசைபோட விடாமல் கொஞ்சமாக உப்பு போட்டு வடித்த சுடுகஞ்சியை கொடுக்கும் அம்மா. பூண்டு ஊறுகாய்தான் அம்மாவிடம் எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச கருணை.

ஆனால் அப்பாவுடன் கிருஷ்ணமூர்த்தி டாக்டரை பார்க்கச் செல்வது ஊசி போடும் ஒரு சம்பவத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவ்வளவு மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது. என்ன ஒன்று, ஊசி போட்ட இடத்தை பற்களை கடித்துக் கொண்டு அப்பா தேய்த்துவிடுவது சில நேரங்களில் தோல் கரைந்து உள்ளிருந்து ஒன்றிரண்டு எலும்புகள் எட்டிப்பார்த்து விடுமோ என்ற பயத்தை அளிக்கும். வேண்டியவரை முகத்தை சோர்வுடன் வைத்துக் கொண்டால் அப்பா தின்பதற்கு ஏதேனும் வாங்கித் தருவார்.

அடிக்கடி சளி பிடிக்கிறது என்று என்னை தஞ்சாவூர் அழைத்துச் செல்லப் போவதாக அம்மா சொன்னது பேரானந்தத்தை கொடுத்தது. அதுவரை நான் தஞ்சாவூர் சென்றதில்லை. ஆனால் பெரிய ஊர், ராஜேந்திரன் என்ற பெரிய டாக்டர் என்றெல்லாம் என்னை கலந்து கொள்ளாமலே அவர்கள் பேசிக் கொண்டிருந்தது இயல்பாகவே பெரிய ஊசி என்ற எண்ணத்திற்கு என்னை இட்டுச்சென்றது. ராஜேந்திரன் எப்படி இருப்பார் என கற்பனை செய்யத் தொடங்கினேன். ராஜாத்தி அக்காவின் அப்பா பெயரும் ராஜேந்திரன் தான். ஏணி முறம் கூடை எல்லாம் செய்து கொடுப்பார். கூரிய நுனிகள் கொண்ட பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அப்பாவிடம் மிகுந்த பணிவுடன் பேசுவார். கிட்டத்தட்ட அதே பணிவுடன் என்னிடமும் பேச முற்படுவது சிரிப்பை வரவழைக்கும். அவரிடம் எப்படி ராஜாத்தி அக்கா சில்லுகோட்டிலும் கிட்டிபுள்ளிலும் எப்போதும் தோற்கடிக்கிறாள் என முறையிட முடியும் என பேசாமல் இருந்து விடுவேன். மேலும் அழாமல் அதைச் சொல்லவும் முடியாது. அழுதது தெரிந்தாலே அப்பா அடிப்பார்.

எப்படி யோசித்தும் ராஜேந்திரன் டாக்டருக்கு கூரிய மீசை உடைய முகமே மனதில் எழுந்தது. ஆனால் நான் கண்டது கருந்தாடியும் நுனிகள் தாழ்ந்த மீசையும் உடைய ஒரு சிகப்புச் சட்டை போட்ட வெள்ளை மனிதரை. அவர் அறையும் அவரைப் போலவே பளிச்சென்று இருந்தது. அந்த அறை அரக்கு நிற புடவை கட்டிய அம்மாவை மேலும் அழகியெனக் காண்பித்தது. அப்பா அவ்வறையின் அமைதியில் தன்னை பொருத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு சிறிய புத்தகம் அளவிற்கு இருந்த என்னுடைய மருந்துச்சீட்டு கோப்பினை ஒரு பத்து நிமிடங்கள் நோட்டமிட்டார். வேற்றுகிரகவாசியைப் போலவோ அதீத கருணையுடனோ என்னைப் பார்க்காத ராஜேந்திரன் டாக்டரை எனக்கு மிகப்பிடித்து விட்டது. மேலும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஊசியில் மருந்தேற்றும் அநாகரிகம் எல்லாம் ராஜேந்திரன் டாக்டரிடம் இல்லை. வெறுங்கையோடு என்னருகே வந்து தொண்டை முழையை அழுத்தினார். லேசாக வலித்தாலும் இதமாக இருந்தது.

“எச்சி முழுங்கும் போது வலிக்குதாடா” என்றார்.

“ம்ஹூம்” என தலையசைத்தேன்.

“என்னடா பொம்பள புள்ள மாதிரி அபிநயம் காட்ற படவா” என கன்னத்தைக் கிள்ளினார். மறுமுறை கிள்ளமாட்டாரா என்றிருந்தது.

இருக்கைக்கு சென்றபின் “ஒன்னும் பயப்பட்ற மாதிரி இல்ல சார். பிரைமரி காம்ப்ளக்ஸ்தான். கொஞ்சம் வீக்கா இருக்கான். தெனம் அவிச்ச முட்ட கொடுங்க. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. சும்மா செக்கப் பண்ணதான். முட்ட குடுக்கிறத மட்டும் நிறுத்திடாதிங்க. உங்க திருப்திக்காக டேப்ளட் எழுதுறம்மா” என்று அம்மாவை பார்த்து சிரித்தபடியே எழுதினார்.

ஊசியே போடாமல் அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷம் வரும்போது எனக்கு எலும்புச் சட்டகம் வேலை செய்யாது. அம்மாவின், அப்பாவின் கைகளில் மாறி மாறி துவண்டேன்.

“இங்கேரு இப்பிடியே எளஞ்சிகிட்டே வந்தீன்னா ஸ்டேஷன்லயே உட்டுட்டு ட்ரெயின் ஏறிடுவோம்”, என அம்மா மிரட்டிய பிறகு எலும்புகள் வேலை செய்யத் தொடங்கின. ஆப்பிள் மாதுளை அன்னாசி என பழங்களின் படமாக போட்டிருந்த ஒரு டானிக் பாட்டில் வாங்கினார் அப்பா. சப்பி சாப்பிடும் ஒரு இனிப்பு மிட்டாய். கவர்ச்சியான அட்டையில் வைக்கப்பட்ட சில அழகான பெரிய மாத்திரைகள். இவ்வளவு தான் ராஜேந்திரன் டாக்டர் எழுதியிருந்தார். அந்த டானிக்கை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு மூடி குடிப்பேன். குடித்த பிறகும் அளவு குறைந்திருக்காது. அதனால் மீண்டும் ஒரு மூடி குடிப்பேன். காலை சாப்பிட்ட பின் மற்றொரு மூடி. வியாழக்கிழமைகளில் மட்டும்தான் பள்ளியில் அவித்த முட்டை கொடுப்பார்கள். அதிலும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு கடைசி கொஞ்சம் சோற்றுடன் அதனை பிசைந்து தின்னும் ஒரு வழிமுறையை என் தோழர்கள் கண்டறிந்ததும் அதை பயன்படுத்துவதும் எனக்கு உமட்டலை தான் கொடுத்தது. ஆனால் மாலையில் பசியுடன் வரும்போது ஒவ்வொரு நாளும் அவித்த முட்டை காத்திருந்தது.

அதற்கு முன் ஒரு மனிதனின் நினைவு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை. சனிக்கிழமைகளில் மட்டுமே அண்ணன் வெளியே எடுக்கும் சீட்டுக்கட்டு மரத்தினால் ஆன கிரிக்கெட் பேட், கொழுந்து வாழை இலை இதெல்லாம் நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் ஒரு மனிதனை நினைத்து சந்தோஷப்படுவது அதுவே முதன்முறை. என் வகுப்பில் படித்த அன்பரசனையும் பிரதீப்பையும் நினைத்து நிறையவே பயந்திருக்கிறேன். அன்பரசன் கருப்பாக உருண்டையாக இருப்பான். நல்ல கவர்ச்சியான பெரிய உதடுகள் அவனுக்கு. எப்போதும் என்னை ஏளனத்துடன் “டேய் பென்சிலு” என வம்பிழுப்பான். ஒற்றைப்படை ரேங்க் வாங்குவதால் வாத்தியார்களின் சப்போர்ட் கிடைக்கும். அதனால் அன்பரசனை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் பிரதீப் அப்படி கிடையாது. நல்ல பாம்பைப் போல அவன் உடல் ஈரமாகவே இருக்கும். காலில் பெரிய பெரிய புண்கள் சில நாட்களில் பார்க்கக் கிடைக்கும். அவன் தமிழ்நாட்டில் பிறந்தவன் அல்ல. ஏதேனும் கன்னடக் கெட்டவார்த்தை சொல்லி திட்டுவான். நீண்ட குச்சி போல இருப்பான். இவர்கள் தனித்தனியே இருந்தபோது நான் அவ்வளவாக பயப்படவில்லை. ஒன்று சேர்ந்து கொண்டு என்னை நிறையவே அழவைத்தார்கள். காலையின் என் முதல் பிரார்த்தனை அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதாகவே இருக்கும் பெரும்பாலும்.

ஆனால் இப்படியொரு மனிதனை நான் விரும்பியதில்லை. ராஜேந்திரன் டாக்டரிடம் செல்லப் போகிறோம் என்று சொன்ன அப்பாவை சட்டென்று ஓடிப்போய் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மறுமுறை அவருக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் இதுவரை அப்படி யாருக்கும் எதுவும் நான் கொடுத்ததில்லை என்று நினைவுக்கு வந்தது. சரி பரவாயில்லை என எண்ணிக் கொண்டேன்.

குறுக்கு கம்பியை கடித்தபடியே பேருந்து பயணம். ராஜேந்திரன் டாக்டர் சென்றமுறை வந்தபோது இருந்ததைப் போலவே இருந்தார். ஏதோ உள்ளறையில் போய் வேறு சட்டை போட்டுக் கொண்டு எதிரே அமர்ந்திருப்பவர் போல இருந்தார். என்னை வாசலில் பார்த்ததுமே “வாடா பயலே” என நாற்காலியில் அமர்ந்தபடியே கழுத்தை மட்டுமே உயர்த்திச் சொன்னார்.

கையைப் பிடித்தவர் “என்னாடா அம்மா தெனம் முட்ட கொடுத்திச்சா” என்றார். நான் அண்ணாந்து பார்த்து புருவங்களை உயர்த்தி மூடியபடியே வாயை நீட்டி “ம்” என நீளமாக ஆமோதித்தேன்.

“பய தேறிட்டான் போலருக்கே” என என் இடது கை மணிக்கட்டை நெறித்தபடி சொன்னார். வலித்தாலும் சிரித்தேன். ஆனால் நான் தேறிவிடவில்லை அப்போது. கரும்பளிங்கு மாதிரி இருக்கும் அன்பரசு போலவோ உரித்த பளபளப்பான வேப்பங்குச்சி மாதிரி இருக்கும் பிரதீப் போலவோ நான் மாறியிருக்கவில்லை.

ராஜேந்திரன் டாக்டர் இருக்கையில் அமர்ந்த பின்னும் என்னைப் பார்த்து சிரித்தார்.

“உங்க பையன் கம்ளீட்டா கியூர் ஆயாச்சு சார். இந்த டேப்லட் மட்டும் ஒரு ஒன் வீக் கண்டினியூ பண்ணுங்க அது போதும்” என்றபடியே ஏதோ எழுதத் தொடங்கினார்.

“ஒரு வாரங்கழிச்சு வரணுமா சார்” என்றார் அப்பா.

கண்ணாடி வழியாக கண்களை மட்டும் உயர்த்தி “உங்களுக்கு மூணு தரம் ஆஸ்பத்திரிக்கு போனாதான் திருப்தி வரும்னா தாராளமா வாங்க” என்றார் டாக்டர்.

அம்மா கூட கொஞ்ச நேரம் பற்களை வெளிக்காட்டி மூடிக்கொண்டது. நானும் சிரித்தபிறகே சட்டென்று அந்த உண்மை உரைத்தது. ராஜேந்திரன் டாக்டரை இனிமேல் பார்க்க வரமுடியாது. அந்த பிரைமரி காம்ப்ளக்ஸ் இவ்வளவு சீக்கிரம் ஏன் நீங்குகிறது என்றிருந்தது எனக்கு. மேலும் எட்டு வயதில் அந்தச் சொல்லை உச்சரிப்பது எனக்கொரு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது.

நாங்கள் வெளியேறினோம். அடுத்த பெற்றோர் மகனுடன் உள் நுழைந்தனர்.

ராஜேந்திரன் டாக்டர் “வாடா பையா” என்று சிரிப்பது கேட்டது. அவர் சிரிப்பைக் கேட்டபிறகு பிரைமரி காம்ப்ளக்ஸ் சரியானது நல்லதுதான் என்று தோன்றியது. அம்மாவும் அப்பாவும் வருமுன்னே விடுவிடுவென இறங்கி சாலையோரம் போய் நின்றேன், வரவிருந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி.