வகை வகையென மதுக்குப்பிகள்
வகைக்கொன்றான நிறங்களில்
இன்னும் திறவாத இக்குப்பிகளுள்
எத்தனை சாத்தியங்கள்
இறுக பூட்டிய போத்தலில் உறங்கும்
துளித்துளியாய் சர்ப்பச்சாறு
சுவைத்துத் தீண்டிய நாக்குகள் உமிழும்
எண்ணற்ற விஷத்தின் வீர்ய ரகசியங்கள்
எழுத்து
ஈரம் நிரந்தரம் – வண்ணதாசன் முன்னுரை
தேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி
(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)
oOo
ஈரம் நிரந்தரம்
(நன்றி அகரம் பதிப்பகம்)
தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.
இன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.
சரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.
பிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.
எல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இரவுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.
இப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய விலை.
என் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று? சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன?
நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.
வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?
நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.
நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது.
நான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.
அப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா?’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.
ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.
ஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.
ஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.
யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.
இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
எஸ்.கல்யாணசுந்தரம்
15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.
(நடுகை, 1996, முன்னுரை)
வண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு
தூரிகையின் மயிர்க்கால்களை
அடையாளப்படுத்தியபடி
சுழன்றோடும் வண்ணத்தீற்றல்கள்.
கோடுகள் தேய்ந்து மறைய மறைய
உதயமாகிறது வரையப்பெறாத ஓவியம்.

வண்ணதாசனை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். சென்னையில் போஸ்டல் காலனியில் அவர் குடியிருந்தபோது, ஒரு புத்தகத்தை தரவேண்டி அவர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது மின்சாரத்தடையோ என்னவோ. அவர் வீட்டு வாசலில்தான் நின்றிருந்தார். அந்தியிருள் சூழ்ந்த, மரங்களடர்ந்த வாசல்புறமும், அதை நிறைத்துக் கொண்டாற்போல் அவர் நின்றிருந்த தோரணையும் நினைவில் இருக்கிறது. ‘என்ன படிக்கிறீங்க’ என்பது போல் அவர் கேட்க, சிறிய உரையாடல்தான் நிகழ்ந்தது.
ஆனால் அவருடைய படைப்புலகில் அவருடன் நிகழ்ந்த உரையாடல்கள் அதிகம். கூரிய அவதானிப்புகளுடனான, பாசாங்கற்ற, ஆத்மார்த்தமான குரலுடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார். ”கிளை அசைவதை, கிளையில் சாய்ந்த என் உடல் அமிழ்ந்து அமிழ்ந்து அசைவதில் உணர்ந்தேன். காற்றை இப்படியும் அறியலாம் போல‘ என்பதற்கேற்ப நம் புற உலகை அதன் நுண்ணிய கூறுகளுடன் உணர, அவர் எழுத்தில் அமிழ்ந்து அசைகிற வாய்ப்பை நமக்கு தருகிறார். வெற்றுக்கூச்சலற்ற, படாடோபமற்ற ஆழ்ந்த சொற்தீற்றல்களில் அவற்றின் தொனிப்பொருள்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன,
தருணங்களின் அழகியல்:
வண்ணதாசன் உணர்வு நிலையில் ஓர் ஓவியர். அதனால் அவருடைய படைப்புகளில் நிகழும் தருணங்களை சித்திரமாக நிறுத்த முடிகிறது. ஆனால் அவர் ஓவியர் மட்டுமல்லாது அருமையான ஒரு கதைசொல்லி. நம் கண்முன்னே நிகழும் எளிய, தொடர்பற்ற தருணங்களை, சித்திரங்களை இணைத்து மகத்தானதொரு கதையை உருவாக்கிவிட முடிகிறது. அதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர். “இந்த வரியை விட, அழகாக இருக்கிறது எழுதாத வரியின் நிழல்,” என்று அளவாக எடுத்துரைக்கும் சொற்களால், வாசகனை பிறிதொரு சொற்களற்ற பெருவெளிக்கு இட்டுச்சென்று விடுகிறார்.
அதற்கும் மேல் அவர் நேசத்தை நாடும் மனிதர். அவருடைய சமூக வலைத்தள எழுத்துகளில் எப்போதும், இருகரம் நீட்டி உள்ளிழுக்கும் கவசங்களற்ற இயல்பான கனிவு தெரிகிறது. எந்த வடிவத்தில் எழுதினாலும், காந்த முள்ளெனச் சுற்றி சுற்றி சராசரித்தனத்திலிருந்து மீண்டுயர தத்தளிக்கும் ஒரு மனதை சுட்டிக் காட்டுகிறது. அடர்ந்து பெருகும் இருள்வெளியை துழாவிச் செல்கிறபோதும் ஒரு கீற்று ஒளியை விட்டுச் செல்கிறது. .
தாமிரபரணியின் பாசிபடர்ந்த படிக்கட்டுகளில் காயத்தைக் கழுவப் போனால் வெட்டியவரின் முகத்தில் இருந்த அனாதரவு நிலைமைதான் தெரிகிறது அவருக்கு.
“குறுவாள்களும் கழுவிக்கொள்ளும்படியாக
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நியமற்ற நதி”
என்கிறார்.
கொடுவாளை மறைத்து வைத்திருப்போரிடமும் கவசங்கள் கரைந்து போய் இயல்பான அன்பு வெளிப்படும் என்று கை நீட்டிக் காத்திருக்கும் மனது வண்ணதாசனுக்கு வாய்த்திருக்கிறது. “நீங்கள் என்னைத் தவிர்க்கும்போது, என்னிடம் இருக்கும்படி, நான் விடாமல் பாதுகாக்கும் குறைந்தபட்ச உண்மைகளையும் தவிர்க்கிறீர்கள் என்பதுதான் என் கவலை” என்று விசனப்படுகிறார்.
கிருகிரு மிட்டாய்க்காரனைப் போலவே தோற்றத்தில் இருக்கும் கோமுவின் அப்பா, வருமானமற்ற நாட்களில் சாப்பாட்டிற்காக, கோமு வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு, அவளைத் தேடி வருகிறார். போகும்போது சொல்லிக்கொண்டு போவதும் கிடையாது. ஆனாலும் கோமுவிற்கு தேரோட்டம் பார்க்கும் சாக்கிலாவது அப்பா வரமாட்டாரா என்றிருக்கிறது. தேரைப் பார்க்கக்கூட கூட்டிப் போக வேண்டாம். வந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும். இந்த சில வரிகளில் நமக்கு கோமுவின் வாழ்வுச்சூழல் முற்றிலும் விவரிக்கப்பட்டுவிடுகிறது. வீட்டு எஜமானியான, சீக்கில் கிடக்கும் பெரிய ஆச்சிகூட ‘நீயும் சின்னப் பொண்ணுதான, போ. போய் தேர்ப் பார்த்துட்டு வா’ என்றாலும், கோமு கிளம்புவதில்லை. தொழுவில் நிற்கும் கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிப்போட, அது அவள் புறங்கையை நக்கிக் கொடுப்பது போல, கோமுவும் ஆச்சியின் இளைத்த கால்களை அமுக்கிக் கொண்டு அங்கேயே இருக்கிறாள்.
முன்பு தொலைக்காட்சியில் வெளிவந்த சிறுகதைத் தொடர் ஒன்றில் ஆண்டன் செகாவின் கதையொன்றின் தழுவலைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய தாத்தாவால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, வீட்டு வேலைக்கென கொண்டு விடப்படுகிறான் சிறுவன் ஒருவன். ஊரே பண்டிகை கொண்டாடும்போது அவன் மட்டும் தனித்து உணர்கிறான். எப்படியும் தாத்தா வந்து தன்னை மீண்டும் அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போய்விடுவார் என நம்பிக்கையில், தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் விலாசமாக ‘நதிக்கு அருகில் இருக்கிறது, எங்கள் கிராமம்’ என எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டு, உவகையுடன் நடந்து செல்வான். அங்கே தேரோட்டம் தொடங்குகிறது. கோமுவிற்கோ தேர் நிலையில் வந்து நின்றுவிடுகிறது.
கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதையிலோ, ‘ஒண்ணு போலப் போயீரலாம். ஒண்ணு போல வர முடியுமா’ என்றுக் கேட்கும் ஐஸ் விற்கிற முருகனின் அப்பா மூச்சுமுட்டக் குடித்திருக்கிறார். அத்தனை குடித்தனங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பத்தின் மொத்த தற்கொலையை அவரவர் எதிர்கொள்ளும் விதம். ஆங்காங்கே செருகி வைத்திருப்பது போன்ற இழவு வீட்டு வர்ணனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நம்மை அந்த சூழலில் இழுத்துக் கொண்டு போகிறது.
எழுத்தாளன் யத்தனிப்பதும், வாசகனைச் சென்று சேரும் சித்திரமும் இயைந்து போகும்போது அதன் அழகியல் துலக்கம் பெறுகிறது.
கலையின் முழுமை:
ஒரு வகைமையை பிடித்திருக்கிறது என வரித்துக் கொண்டுவிட்டால், மற்றவையெல்லம் பிடிக்காமல் போய்விடுகிறது. ரேஸ் குதிரைகளென அபிமானங்களை விகசித்துப் போற்றுவதற்கு இலக்கிய வாசிப்பு எதற்கு? ஒரு கலையின் முழுமை அதை அங்கீகரிக்கும் நிலைகளைக் காட்டிலும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் மதிப்பில் அல்லவா இருக்கிறது.
வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு செறிந்த பூஞ்சோலை போலிருக்கின்றன. கதையின் மையம் ஒரு பூச்செடி என்றால் அதைச் சுற்றிலும் பல பூச்செடிகளை அவர் நட்டுக் கொண்டே போகிறார். சுற்றிவளைத்து போவதால் மையப்புலன் அமுங்கி விடுகிறது என்கிறார்கள். அவ்வளவு துரிதமாக எங்குதான் போவார்களோ. ஒரு கரண்டி இனிப்பு பாயசமும், அதற்கு நிகராக ஒரு கரண்டி துவர்ப்பு பச்சடியும், ஒரு வரிசை வெஞ்சனமும் வைத்து பிறகு சாதத்தை விளம்புவதுதானே விருந்து.
பள்ளிக்கூடத்தில் மேஜிக் நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கோரும் முழுக்கைச் சட்டையணிந்தவரை பெயர் சொல்லிக் கூட அறிமுகப்படுத்துவதில்லை. அவருடைய உதவியாளரை ‘மிஸ்டர். கதிரேசன்’ என விளிப்பதன் மூலமே அவரைப் பற்றி சொல்லியாகி விடுகிறது. காமராஜருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சங்கரநாராயணனிடம் காட்டி, அவர் வேலை செய்யும் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கேட்டு, சன்மானம் பெறுவது பற்றியெல்லாம் பேசுகிறார். சங்கரநாராயணனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்கிறபோது ‘இந்தக் காலனி சிறுவர்களைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நிகழ்ச்சி நடத்திக் காட்டுகிறேன்’ என்கிறார். அதுவும் நிகழாது என்கிறபோது, கிடைக்கும் சாப்பாட்டையும் துறந்து கிளம்பிப் போகிறார். உன்னதமான கலையின் முழுமை அடைவது, அதை நிகழ்த்தக் கிடைக்கும் வாய்ப்புகள்தோறும் நிகழ்த்தும் விழைவு கொள்வது.
பெயர் குறிப்பிடாத முழுக்கை சட்டைக்காரர் நமக்கு அந்நியமானவரில்லை. அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் வரும் காதரின் நீட்சி எனலாம். சத்யஜித் ரே-யின் சிறந்த சிறுகதையான ‘படோல் பாபு‘வில் வரும் நாடகக் கலைஞனும் அவர்தான். ‘டாயர் ஃபைட்’ காதர், படோல் பாபு, முழுக்கை சட்டையணிந்தவர் எல்லோரும் தங்கள் கலையை நிகழ்த்தும் தருணத்தை தவற விடுவதேயில்லை. அதில் அவர்களுக்கு அந்தரங்கமானதொரு பெருமை இருந்து கொண்டேயிருக்கிறது. சந்திரசேகர ராவ் மற்றும் சங்கரநாராயணன் போன்றோர் தங்களுடைய லௌகீக அளவுகோல்களுடன் அவர்களை அங்கீகரிக்கவியலாத போதாமையைப் பற்றி அவர்களுக்கு கவலையிருப்பதில்லை. நிரம்பியும் நிரம்பாமலும் ஆனால் நிரம்பியபடிக்கு நிகழ்கிறது எல்லாம் வண்ணதாசனின் படைப்புலகில்
“ஆனாலும் காற்று
அப்பால் செல்லும்
மூடிய கதவுகளுக்கு
அப்பாலும்”
தொடரும் கண்ணிகள்:
வண்ணதாசன் நீண்ட நாவலோ புதினமோ எழுதியதில்லை. ‘சின்னு முதல் சின்னு வரை’, ஒரு நெடுங்கதை. ஆனால் அவர் படைப்புலகம் தொடர்ச்சியான கண்ணிகளால் கட்டப்பட்டு இருக்கிறது. கவிதையுலகில் இருந்து கதைகளுக்கும், மீண்டும் கதைகளில் இருந்து கவிதைகளுக்கும் மாறி மாறி நம்மை இட்டுச் செல்கிறார். ஒரு கவிதையில், சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கு மத்தியில், தனிமையில், அரங்கில் தொடங்கும் ஒளிக்காக காத்திருக்கும் அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பார். அக்கவிதையிலிருந்து வெளியே வந்தால், தனுஷ்கோடி அழகர் ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ எப்படியிருக்கிறது என்று கேட்டுக் கொண்டு வந்துவிடுகிறான். அந்த அரங்கில் அவர் காத்திருந்தது இந்தக் கதையின் விரிவுக்காக எனத் தோன்றும். அடுத்து அழகரின் பார்வையில் புத்தகக் கடைக்காரர், சலூன் கடைகள், ஜூஸ் கடைக்காரர் என விவரிப்பு தொடர்கிறது. இப்போது அழகர் கதைசொல்லிக்கு நெருக்கமானவனாகி விட்டான். இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், அந்த வீட்டைப் பற்றிய Rhetorical கேள்விகளை எடுத்துக் கொடுக்கவே தனுஷ்கோடி அழகர் கதைக்குள் வந்திருக்கிறான் எனப் புரியும்.
சரசுவின் உலகம் அதன் அத்தனை தனித்துவங்களோடும், அவளுடைய கணவனின் உலகோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அவனுடைய உத்தியோகக் கவலைகள், லௌகீக பிரச்னைகள், அவனுடைய உறக்க போதாமை என அனைத்திலும், அவள் ஆதுரத்துடன் கைகொடுக்க காத்திருக்கிறாள். ஒரு புதிய போர்வையால் தன் அன்புலகிற்குள் அவனை பிணைத்துவிடக் காத்திருக்கிறாள். அவன் அகாலத்தில் அழைத்து வரும் விருந்தாடிக்கு உபசரணை செய்யும்போது, சிறிய இடறல். அவன் திரும்பிப் பார்க்கிற பார்வையோ, அடித்தால்கூட அவ்வளவு வலித்திருக்காது. தானே தலையை வாரிக் கொள்கிறேன் என கலைத்துக் கொள்ளும் சிறுவனும், அவனைப் பிடித்து இழுத்து தலையை சரிசெய்ய முயலும் அம்மாவும் போலொரு இணை. சரசுவின் நுண்ணியல்புகளை, அவள் கணவன் உணர்ந்தேத்தான் அப்படியொரு பாராமுகமாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறது. அவளுடைய அன்புக்கான மறுமொழியை அவனுக்கு சொல்லத் தெரிந்தது அப்படித்தான். ஒதுக்கியபடி ஓடுகிறவன், தனது வாக்குமூலமாக பிறிதொரு இடத்தில் ‘பலிச்சோறு‘ எனக் கவிதையாக எழுதி வைக்கிறான்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிற உன் உந்திச்சுழி.
அப்பழுக்கற்று இருப்பதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
எளிய காட்சிகளின் அற்புதத்தை எடுத்துரைக்கும் கவிதைகளிடையே ‘நீலத்தடாகம்‘ இரு வேறு தீவிர முனைகளிடையே எட்டிப் பாய்கிறது. ‘ஒட்டுதல்‘ கதையில் வரும் மஹேஸ்வரி, தன் நெற்றியில் பொட்டு வைக்கும் செஞ்சுலட்சுமியின் மீது சாய்ந்து கொள்ளும் ஆறுதலை நினைவுப்படுத்துகிறது. உலகின் எல்லா கசப்புகளையும் செஞ்சுலட்சுமியின் கணவரின் சிரிப்புப் போல இலகுப்படுத்திவிட்டால் நல்லதுதானே. உறிஞ்சப்படும் கசடுகளை எல்லாம் கழுவிப் போக கண்ணீருக்கா பஞ்சம்.
அலையலையெனப் பெருகும் நுணுக்கம்:
எங்கள் வீட்டருகே ஒரு கார்னிவெல் ஒன்றுக்கு சென்றிருந்தேன். மரமறுக்கும் மின்சார ரம்பம் கொண்டு ஒரு கலைஞர், நின்று கொண்டிருந்த மரத்தை சிற்பமாக செதுக்கிக் கொண்டிருந்தார். கழுகு இறகுகள் சூடிக் கொண்டிருக்கும், போர்த்தழும்புகள் கொண்ட, தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும், மரபான செவ்விந்திய தலைவரின் முகம். அத்தனை பெரிய கருவியைக் கொண்டு செய்ததா என கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நுணுக்கங்களுடன் செதுக்கியிருந்தார். இயற்கையின் ஒரு பகுதியை மரபின் ஒரு பகுதியாக அவர் மாற்ற முயற்சி செய்கிறார் எனப் புரிந்தது. வண்ணதாசன் இயற்கையை வாசகனின் வாழ்க்கையின் ஒளிகொண்ட பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். குதூகலங்களும், ஏமாற்றங்களூம், கசப்புகளும், அற்புதங்களும், துயர்களும், போதனைகளும் நுணுக்கமாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த நுணுக்கங்களின் விகசிப்பைத் தாண்டி நமக்கு ஒரு முழுமையான தரிசனத்தையும் கொடுக்க வல்லது அவருடைய படைப்புலகம்.
வண்ணதாசன் ஓவியக்கலை அறிந்தவர். நெல்லையப்பர் மாகாளையையும், வாள் ஓங்கும் மதுரை வீரனையும், குழுமூர் ஓடைக்கார ஆயியையும் வரைய ஆசைப்படுகிறார். சிறுகதைகளில் அப்படியான சித்திரங்களைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்கிறார். பாக்குமரங்களும் தென்னை மரங்களும், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையும், அதன் மேல் ஒளி உமிழும் நீல ரசகுண்டு விளக்கும் என ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ நம் கண் முன்னே நிற்கிறது. பிற பாத்திரங்களான அந்த வீட்டுக்காரர், சசியின் அம்மா, கதைசொல்லியின் அம்மா, போலீஸ்காரர், ஐஸ்வண்டிக்காரரின் அப்பா எனப் பலருக்கும் பெயர்களில்லை. பெயர்களற்ற அடையாளங்கள் இன்னமும் அழுத்தமாக பதிகின்றன. நீர் முகர்ந்து எடுத்த குவளையின் வெளிப்புறத்தை துடைத்துவிட்டுக் கொடுக்கும் அம்மா. அரிவாளைக் கையில் கொடுக்கக் கூடாதென தரையில் வைத்துக் கொடுக்கும் சசி. மின்சார கம்பியை உரசியபடி சலாரென விழும் தென்னை ஓலை என ஒவ்வொரு விவரிப்பும் மெருகேற்றி வைக்கப்படுகின்றன. அவை வெற்று நுணுக்கங்களாக நின்று விடுவதில்லை. சொல்லிச் செல்லாமல் சுட்டும் கலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆதியில் எந்தப் பெயரும் இடப்படாத சிறு பூச்சியை வளையல் பூச்சி என்றோ கம்பளிப் பூச்சியென்றோ அவரவர் வசதிக்கேற்ப அழைத்தாலும், உயிர்த்தலின் நகர்தலாக அதைப் பார்க்கும் பார்வை அவருடைய படைப்புகளில் இருந்து கொண்டேயிருக்கிறது.
தூரக் காதுகள்:
பென்சில் சீவும்போது எங்கோ சரிகிற மரங்களும், அரவமற்ற இரவுப்பொழுதில் எங்கோ ஒருவர் பாடுவதும் கேட்கும் தூரக்காதுகள். தொலைபேசியில் அழைக்கும் உறவினரிடம் ‘சாரல் மழை பெய்திருக்கிறது என்கிறார். உடன் எதிர்முனையிலிருப்பவர் செடிகள் எல்லாம் உச்சிக் குளிர்ந்திருக்கும் என்கிறார். உலகின் எத்தொலைவிற்கும் அவர் காதுகள் நீண்டு, ஒரு சிறு விகசிப்பை, அற்புதத்தின் நிழலை தேடியவண்ணம் இருக்கின்றன. வண்ணத்துபூச்சியின் சிறகசைவும், எரிமலையின் உள்ளுறுமலும் கவிஞனின் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. பெரும் அருவியில் பொழியும் நீரின் அளவுப் பற்றிய பிரமிப்பை விட, அந்த அருவியின் உயரத்தைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகள் பிரமிப்பைத் தருகின்றன. இன்னும் சில ஆயிர வருடங்களில் பெரிய அருவிகளும், அவற்றைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகளும் அழிந்து போகலாம். ஆனால் மானுடத்தின் இந்த நுண்ணுணர்ச்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கவிதைப் படிமங்களாகவோ, தானியங்கி இயந்திரங்களின் சேமிப்பு பெட்டகத்திலோ.
மனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்
உன்னதம் அழைக்கும்
எங்கோ தொலைவில்.
வண்ணதாசனை சாகித்ய அகதெமி கௌரவித்திருப்பது, இலக்கியத்தில் அழகியலை கௌரவப்படுத்துவது போல. பல்வேறு மொழிகளிலும் அவருடைய படைப்புகள், இன்னமும் அதிகமாக சென்று சேர வழிவகுக்கும். இதே நேரத்தில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினரும் விருது வழங்கி விழா நடத்துவது போற்றுதற்குரியது.
வண்ணதாசனின் படைப்புலகம் வாசகனை கைநீட்டி அழைப்பதில்லை. அது இயல்பாக வந்து நம்மை சூழ்ந்து கொள்கிறது. நீரென வந்து நம்மை நிரப்பிவிட்டுச் செல்கிறது. கொள்கலனின் வடிவத்துக்கு ஏற்ப, தகவமைத்துக் கொண்டாலும், தன்னைக் காணும் உலகைத் தன்னில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது நீர்- துப்பாய்ந்த துலக்கமானதொரு வண்ண சித்திரமாக.
அமைதி
ஆங்கிலம்: லாங்கஸ்டன் ஹ்யூஸ்
தமிழில் : தி. இரா. மீனா
அவர்கள் கல்லறைகளைக் கடந்தோம்;
இறந்து கிடந்த மனிதர்கள்,
வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ,
கவலைப்படவில்லை.
இருளில்,
வென்றவர்கள் யாரென்று
பார்க்க இயலாதவர்கள் அவர்கள்.
(சுதந்திர மொழிபெயர்ப்பு)
அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்
வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.
ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.
லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம் பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா? அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?
இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.
வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.
இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.
அவர்கள் கிளம்பிப்போனதும், வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன், பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.
அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.
தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.