எழுத்து

நூறு இந்திய டிண்டர் கதைகள்

மாயக்கூத்தன்

cny3rgyvmaaigrg

ஒரு நாள் அலுவலகத்தில் உறவுகள், குழந்தைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் சேர்ந்து வாழற மாதிரி வொண்டர்புல்லான ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை’னு சொன்னார். அவர் அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப்போறார். அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு இருபது இருபத்து ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம். மணவாழ்க்கை மட்டுமல்ல, எந்த ஒரு உறவும் ஒரு அற்புதம் மாதிரி தான்.

சின்ன வயதில், வான சாஸ்திரம் ஆச்சரியமாக இருந்தது. ராக்கெட் போவது ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட, உடன் வேலை பார்க்கும் ஒருத்தன் எப்போதும் எலான் மஸ்கினுடைய திட்டங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு சுத்தமாக அதில் விருப்பமில்லை. நான் இப்போது பார்க்கும் வேலை சிறு வயதில் எனக்கு அத்தனை ஆச்சரியங்களையும் அளித்த ஒன்று. ஐந்து வருடங்களுக்கு மேலான பணியில், ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு என்றே போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது. தீர்வு எங்காவது இருக்கும். அவ்வளவு தான். நம்மை திருப்திப்படுத்தம் ஒரு தீர்வு, அடுத்தவரை திருப்திப்படுத்தும் தீர்வு. அவ்வளவு தான் அதற்கு மேல் வேலையில் என்ன இருக்கிறது? இது மனச்சோர்வு இல்லை. தீர்வு கண்டிப்பாக இருக்கப் போகிறது என்கிற தைரியம். மிரட்சி இல்லாத நிலையில் ஒன்றும் பிரச்சனையில்லை. அன்றைய நாள் அன்றைக்குள்ளே தீர்ந்துவிடுகிறது. அஷ்டே!

ஆனால், இப்போது மனிதர்கள் மிரட்சியைத் தருகிறார்கள். போன வாரம் அப்பாவின் தோளில் கைவைத்து, ‘இன்னிக்கு என்ன விசேஷம்?’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு?’ என்றார். அவரைச் சொல்லி குத்தமில்லை. நாங்க எப்பவும் அப்படித்தான். ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும், இனி இந்தவாட்டி சண்டை போடக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம் வரும். ஆனா, அவர் வந்து பத்து நிமிஷத்துல டாம் அண்ட் ஜெர்ரி ஆரம்பிச்சுடும். அவருக்கு எனக்கும் மட்டுமில்லை, எனக்கும் பிறருக்கும் கூட, அவருக்கும் பிறருக்கும் கூட, பிறருக்கும் பிறருக்கும் கூட இது தான் நிலைமை. அப்பா சொல்வார், நாமெல்லாம் நவக்கிரக மூர்த்திகள்.

என்னுடைய பெரிய லட்சியம் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொள்ள சில உறவுகளை (ஒரு அஞ்சு பேர்?) உருவாக்கிக் கொள்வதாகத்தான் இருக்கும். அந்ததந்த நாளைப்பொறுத்து சில சமயம் ரொம்பவே சிக்கலாகவும் மறு சமயம் எளிதாகவும் தோணும்.

இந்துவின் இந்த நூறு இந்தியத் டிண்டர் கதைகள் முயற்சி வாசிப்பவர்களுக்கு நல்ல இலக்கியங்களை விடவும் பல திறப்புகளை தரக்கூடும். கதைசொல்லிகளைப் பற்றிய நம்முடைய முன் முடிவுகளை அவர்கள் மீது ஏற்றும் எண்ணத்தைத் தாண்டி இவற்றை வாசிக்கும் போது, ஒரு நல்லுறவுக்கான மனிதர்களின் தேடல் நமக்குப் புலப்படக்கூடும். வகை வகையான மனிதர்கள், இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களை ஒதுக்கும் இரண்டு மெட்ராஸ் காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் என்னால் எங்காவது பொறுத்திப் பார்க்க முடிகிறது.

இந்தக் கதைகள் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட்ட அலுவலக நண்பரிடம் சொன்னால், அவர் இவர்களை லட்சியம் இல்லாதவர்கள், கவலை அற்றவர்கள் என்று சொல்லக்கூடும். அதான் சொல்கிறேன் நம்முடைய முன் முடிவுகளை விட்டுவிட்டு வாசித்தால் மட்டுமே இந்த நூறு கதைகளையும் அதன் மனிதர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லோருக்கும் ஒரு அர்த்தமுள்ள, ஒவ்வொரு நொடியும் புதுமையாய் புத்துணர்ச்சி தரும் ஒரு உறவு வேண்டியிருக்கிறது. இவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நாம் ஏன் மிரள்கிறோம்?

ஆண்-பெண் உறவுகளை எடுத்துக் கொண்டால், நாமும் நம்முடைய சமூகமும் நம்முடைய சட்டங்களும் இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல புத்தகம் ஒருவனுக்கு எத்தனை அவசியமோ, அதைவிட நூறு மடங்கு ஒரு நல்ல உறவு அவசியம்.

இந்த நூறு கதைகளுடன் வரும் ஓவியங்களைப் பற்றி ஓவியம் பயின்றவர்கள் தான் சிறப்பாக எழுதமுடியும் என்பது என் நினைப்பு. இந்த ஓவியங்களைவிடவும் இந்தக் கதைகள் எனக்கு மனிதர்களைப் பற்றி பல்லாயிரம் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.

எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன்

குமரன் கிருஷ்ணன்

உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும்  எழுதுகிறேன்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா?  காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…

காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.

“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…

காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம்.  உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.

இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள்,  பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!

எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.

365 வது நாள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

மூடிக்கிடந்த சாளரங்களைத்
தட்டித் திறக்கிறது ஒரு புதிய கை

எனக்கு சூரியன் தேவை இல்லை
ஒரு நட்சத்திரம் போதும்
என்ற நம்பிக்கையுடன்
சாளரங்களைத் திறக்கிறேன்

முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுக்கும்
ஒரே இரவில் விடைகொடுத்து அனுப்புகிறேன்
அந்த யுகம் எனக்கு கையளித்த கனவுகளும்
என்னிடமிருந்து கையகப்படுத்திய கனவுகளும்
உருவைப் பிரியும்
நிழல் போல் என்னைக் கைவிட்டு நகர்கின்றன

மீண்டும் எனக்கு முன்னால்
முன்னூற்றி அறுபத்தைந்து நாட்கள்
முன்னூற்றி அறுபத்தைந்து நட்சத்திரங்களாக
ஒளிர்கின்றன
வாழ்வை ஒளியூட்டும் புதிய நம்பிக்கைகள்
திறந்த சாளரங்கள் வழியே
என்னை ஒளியூட்டுகின்றன
நான் இப்போது
ஒரு பெரிய நட்சத்திரமாகி
இருளின் தெருக்களில் இறங்குகிறேன்

 

மாயக் கதவுகளுக்கு முன்…

சித்ரன் ரகுநாத்

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம் எல்லோரிடமும் இரண்டு கேள்விகள் முன் நிற்கும். 1) சென்ற ஆண்டு என்ன செய்தோம் அல்லது என்ன நடந்தது? 2) புத்தாண்டில் என்ன செய்யப்போகிறோம்?

சென்ற வருடம் நிகழ்ந்த அனுபவங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், சாதனைகள், இழப்புகள், கிடைத்தது, கிடைக்காதது, நடந்தது, நடக்காதது என்று ஃப்ளாஷ்பேக்குகளில் மனது உலா வரும். அது சந்தோஷமான நிகழ்வாக இருப்பின் அதுபோல் மீண்டும் வருங்காலங்களில் தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதும், விரும்பத்தகாத சம்பவமாக இருப்பின் அது திரும்பவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்துடன் வரும் புதிய நாட்களை எதிர்கொள்வதுமாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் சில பல கலவையான எண்ண ஓட்டங்களில்தான் நாம் இருப்போம்.

நாம் எங்காவது வெளியே கிளம்பலாம் என்று நினைக்கும் போதுதான் மேகங்கள் கவிந்து  மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். இன்றைக்கு ரசம் சாதத்துடன் சமையலை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்போது விருந்தினர் வந்து நிற்பார். அவசரத் தேவைக்கு பணம் எடுக்கப் போனால் ஏ.டி.எம்மில் காசில்லை என்று வரும். ஏன் குறுக்கே போகும் ஒரு பூனைக்குட்டிகூட நமது தினத்தைத் தீர்மானிக்கக்கூடும்.

எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றிப் பெருகிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. எதையாவது புலம்பிக்கொண்டிருப்பதற்கான  சந்தர்ப்பங்களும் பெருகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வேதிப்பொருள்களின் ஆதிக்கத்தால் விஷமாகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாகுதல், உலகம் வெப்ப மயமாகுதல் தரும் நேரடி பாதிப்புகளை நாம் ருசிக்கத் துவங்கிவிட்டோம். குடிதண்ணீரை பாட்டிலில் வாங்கிக் குடிப்பதும், வியாபாரமயமாகிவிட்ட மருத்துவமனைகளில் கட்டுக்கட்டாக பணத்துடன் டிவி பார்த்தபடி வரிசையில் காத்திருப்பதும் நமக்கு பழக ஆரம்பித்துவிட்டது. குண்டு வீசப்பட்டு நாசமான கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து கேட்கும் குழந்தைகளின் அலறல்கள், அழுகைகள் செய்திகளாக நம்மைச் சிதறடிக்கின்றன.

நிமிர்ந்தால் குட்டுவதும், குனிந்தால் நெட்டுவதுமான மனிதர்களின் போக்கு. சுயநலக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அடுத்தவர் மீது யாருக்கும் அக்கறையில்லை. நம் மீது நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை. இவையெல்லாவற்றையும் தினசரி கடந்துதான் போகிறோம். இதெல்லாம் அடுத்த ஆண்டும் இப்படியேதான் தொடரப் போகின்றன. அதில் மாற்றமில்லை. யாரும் அதை மாற்றப் போவதில்லை.

ஆனால் எல்லாவற்றிக்கும் நடுவே புத்துணர்ச்சியுடன் ஒரு புதிய தினத்தை, நமக்கான ஒரு புதிய உலகைக் கண்டடையும் உத்வேகத்துடன்தான் நாம் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறோம். எதிர் மறைகளுக்கிடையேயும் நேர் மறைகளைத் தேடிக் கண்டெடுக்கிற உத்வேகம் அது.  விரும்பாத விஷயங்களின் முன் ஒரு வெண்திரையைப் போட்டு அதற்குமுன் நமக்கு வேண்டிய, நாம் காண விரும்புகிற விஷயங்களைத் திரையிட்டுப் பார்த்து மகிழ்வதற்கான முயற்சியை நாம் எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

புத்தாண்டில் என்ன செய்யப் போகிறோம்? நாம் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோம் என்கிற முனைப்பில், உறுதியில் இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில். எதிர்மறையாய் என்ன வேண்டுமானாலும் நடந்துவிட்டுப் போகட்டும், கவ்விப் பிடித்திருக்கும் எந்த இருட்டிற்கும் வில்லனாக இருக்கும் ஒரு ஒளி உண்டு. தூரத்தில் எப்போதும் தெரியும் அந்த ஒளியைப் பார்த்து ஓடலாம். நடந்ததெல்லாம் நன்மைக்கே, நடக்கப்போவதும் நன்மைக்கே என்ற நம்பிக்கை வரிகளைத் தாங்கிய கண்களுக்கு மட்டுமே அந்த ஒளி தெரியும். அது மிக உயரிய மனோபாவம் சம்பந்தப்பட்டது. எல்லா நலன்களையும், வளங்களையும், நிலைத்த சிரிப்பையும், நீடித்த ஆயுளையும் தரும் ஒளி அது.

நமக்கு எது வேண்டும் என்று நாம் தீர்மானிப்போம். நம் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் விஷயங்களை சவால்களாகப் பார்க்கும், சமாளிக்கும் திறனை, உறுதியை வளர்த்துக் கொள்வோம். இடைவிடாது கற்றுக்கொள்வோம். கற்றுக்கொடுப்போம். இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம். நம்மால் அடுத்தவர்க்கு ஏற்பட்ட காயங்களுக்கு முடிந்தால் மருந்திடுவோம். நமக்கேற்பட்ட காயங்களை மறந்திடுவோம். திறமைகளைத் திரும்பக் கொணர்வோம்.

நாம் உருவாக்கிய, நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு நம்மாலான துரும்பைக் கிள்ளிப்போடுவோம். மனோபாவமே வாழ்வில் எல்லாம் என்பதை தாரக மந்திரமாக்கிக் கொள்வோம். எதுவும் அடைய முடியா உயரமல்ல என்பதை எப்போதும் நினைவு கொள்வோம். செவ்வகக் கருவித் திரைகள் மூலம் மனிதர்களைத் தேடாமல் நேரில் சென்று கைகுலுக்க முயற்சி செய்வோம். நம் வாழ்வை எந்த விதத்திலாவது அர்த்தப்படுத்திவிட முடியாதா என்ற கேள்வியை புத்தாண்டில் புதிதாய் முன்வைப்போம். அதற்கான பதிலை மித மிஞ்சிய நம்பிக்கையுடன் கண்டறிய முயற்சி செய்வோம்.

நம்பிக்கைகளைக் கொண்டு நமக்கான உலகத்தை இந்தப் புத்தாண்டில் நிர்மாணிக்க நினைப்போம். நமது நம்பிக்கைகள் நமக்கானவை. அவை உறுதியானதாக இருக்கட்டும். இந்தப் புது வருடத்தில் திறக்கப்படாத மாயக் கதவுகளையும் அது தட்டித் திறக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

கடல்

சத்யராஜ்குமார்

img_3605

போன வருஷம் இந்நேரம் ஃப்ளோரிடாவில் இருந்தேன். கீ வெஸ்ட் என்ற இடம். இது அமெரிக்காவின் ராமேஸ்வரம். அதாவது தென் கோடி முனை. படு அழகான கடல் பிரதேசம். கேளிக்கை விடுதிகளும் உணவகங்களுமாலான நகரம். இரவு நேரம் பகல் போல உயிர் பெற்றியங்கும். அங்கே மைல் ஜீரோ என்ற இடத்திலிருந்து ஜஸ்ட் தொண்ணூறு மைல் தொலைவில் உள்ளது க்யூபா.

அந்த தீபகற்பத்தைச் சுற்றிச் சுற்றிக் கடல் நீர். எங்கே திரும்பினாலும் அலைகளும், தொடுவானமும்.

ஸ்டீம் போட் வாடகைக்குக் கிடைக்கும். சற்றே பெரிய படகுகளை ஓட்டிச் செல்ல கேப்டனோடு புக் செய்யலாம். கடலில் போட்டிங் போவதும், நடுக்கடலில் ஆழம் குறைவான பகுதிகளைக் கண்டறிந்து படகை நங்கூரமிட்டு நிறுத்தி கீழே இறங்கி நீரில் விளையாடுவதும் த்ரில்லிங் அனுபவமாயிருக்கும்.

பங்கீ ஜம்ப், ரோலர் கோஸ்டர் போல எல்லாம் சாகசம் போலத் தெரியாவிட்டாலும் எல்லா த்ரில்லிங்குமே எந்த விபரீதமும் நிகழாத வரைக்கும் மனம் குதூகலித்து மகிழும்.

நாங்கள் குழந்தைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருந்தோம். ஆகவே கேப்டனோடு ஒரு பெரிய படகை புக் செய்ய விரும்பினோம். முந்தைய இரவு சில நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட போது – மறுநாள் வானிலை சரியில்லை என்பதால் போட் வாடகைக்கு விடப் போவதில்லை என்று மறுத்து விட்டார்கள்.

மதியத்துக்கு மேல் வானிலை நன்றாக இருப்பதாகப்பட்டதால் டைரக்டரி பார்த்து ஒவ்வொரு நிறுவனமாய் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். எல்லோரும் கிளிப்பிள்ளை போல ஒருவர் சொன்னதையே மற்றவரும் சொன்னார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யனாய் கடைசியில் ஒரு நிறுவனத்தில் விசைப் படகு புக் பண்ணி விட்டோம். எல்லோரும் சொல்வது போல நாளை வானிலை கொஞ்சம் சரியில்லைதான். ஆனால் பதினோரு மணிக்கு மேல் கடலில் செல்வதாயிருந்தால் கொஞ்சம் நிலைமை சரியாயிருக்கும் என்று சொல்லி படகை புக் செய்து தந்தார்கள்.

எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே இவ்வளவு தூரம் வந்து கடலில் போட்டிங் செல்லாமல் திரும்ப வேண்டியிருக்குமோ என்ற கவலை அகன்று ஹோட்டலில் நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் உற்சாகமாய்க் கிளம்பிக் கொண்டிருக்கும்போது படகுக் கம்பெனியிலிருந்து போன் வந்தது. வானிலை சரி இல்லாததால் கேப்டன் வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாயிருந்தது. எங்கள் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டவர்களாக மேலும் சொன்னார்கள். கேப்டன்தான் வர மறுத்து விட்டார். நீங்களே போட் ஓட்டிக் கொண்டு செல்வதாக இருந்தால் படகை வாடகைக்கு விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார்கள்.

படகுச் சவாரி செய்து நடுக்கடலில் நங்கூரமிட்டு விளையாடி விட்டு வராமல் எங்களுக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது போலிருந்தது. நாங்களே படகை ஓட்டிக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டோம். எங்களில் ஒருவர் முன்னர் அந்தப் பகுதியில் வசித்தவர். வாரா வாரம் மோட்டார் படகுச் சவாரி செய்வது அவர் வழக்கம். ஆகவே அவர் இருக்க பயமேன்.

சுமார் பதினொண்ணேமுக்காலுக்கு அங்கே போய் விட்டோம். கடற்கரையை ஒட்டிய ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்தது அந்த போட் கம்பெனி. முதலில் எங்கள் எல்லாரிடமும் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அதாவது கம்பெனி சார்பாக நியமிக்கப்பட்டிருந்த அந்த அழகான பெண் சிப்பந்தி ப்ளூ பெர்ரி குரலால் படிவத்தில் எழுதியிருந்ததை விளக்கி கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.

எங்கள் சுய புத்தியின் பேரில், சொந்தப் பொறுப்பில் இந்தப் படகுச் சவாரி செய்கிறோம். இதனால் ஏற்படும் உடமை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை எதற்குமே கம்பேனி பொறுப்பேற்காது என்பதே அந்தப் படிவத்தின் சாராம்சம். குழந்தைகளுக்காக பெற்றோர் கையெழுத்திட்டோம்.

ஒரு கேளிக்கை மனநிலையில் இதெல்லாம் மனதில் ஒட்டுவதில்லை. நாங்கள் பாட்டுக்கு மென்பொருள் தரவிறக்கும் முன்பு அக்ரீ அக்ரீ என்று குத்துவோமே அப்படி கையெழுத்தைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண் ஆளுக்கொரு லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொடுத்தாள். நானும், சிலரும் நீச்சல் தெரியும் என்று அதை வாங்க மறுத்து விட்டோம். அவள் எல்லா ஜாக்கெட்டையும் ஒரு ஓரமாய்ப் போட்டு விட்டு – உங்கள் இஷ்டம், வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். அவள்தான் ஏற்கெனவே எங்களிடம் எகையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டாளே, இனி நாங்கள் எக்கேடு கெட்டாலும் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

img_1438

அந்த யமஹா விசைப் படகை கொண்டு வந்து நிறுத்திய ஆசாமி ஒரு ட்ரையல் ரன் போய் எங்களில் ஓரிருவருக்கு பயிற்சி தருவதாகச் சொன்னான். எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வது, பொருட்களை எங்கே வைப்பது. போன்ற பல அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு – “இந்த இடத்தைப் பார்த்து வெச்சுக்கங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு திருப்பிக் கொடுத்தால் போதும். இட்ஸ் ஆல் யுவர்ஸ்” என்றான்.

தண்ணீரில் குலுங்கும் போட்டில் பேலன்ஸ் பண்ணி ஏறி அமர சில பெண்களும், குழந்தைகளும் தடுமாறினார்கள்.

“வானிலை மோசம் என்றார்களே, இப்போது பரவாயில்லையா?” எனக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது.

“மழை இனி இல்லை. ஆனால் காற்று அதிகம்.” – இடது புறம் கை காண்பித்தான். “இந்தப் பக்கம் போக வேண்டாம்.”

ஃப்ளோரிடாவில் பழம் தின்று கொட்டை போட்டவரான எங்கள் ஆள் இந்தப் பக்கம் போனால்தான் தாழ்வான பகுதி வரும், அங்கே படகை நிறுத்தினால் கீழே இறங்கி விளையாட முடியும், குழந்தைகள் மனமகிழ்வார்கள் என்றார்.

சினிமா பட வில்லன்கள் போல் நடுக்கடலில் அருந்த பியர், பீட்ஸா எல்லாமும் கூட வாங்கி அடுக்கியாயிற்று.

படகு என்பது வெறும் பலகை. பலகையின் ஒரு முனையில் எஞ்சின் மாட்டியிருக்கிறது. இரண்டு பென்ச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வளவுதான். யமஹா மோட்டார் ஸ்டார்ட் ஆனது. அப்போதுதான் கவனித்தேன், நாங்கள் சிலர் லைஃப் ஜாக்கெட் வேண்டாம் என்று சொன்னதைப் பார்த்தோ என்னவோ யாருமே லைஃப் ஜாக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. குழந்தைகள் உட்பட. அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாது.

படகு கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய அலை தண்ணீரை வாரியிறைத்து படகில் நுழைந்து வழிந்து ஓடியது. பழம் தின்றவர் அப்படித்தான் இருக்கும் என்றார். ஏதோ  ரோலர் கோஸ்டர் ரைடு போல எண்ணி ஒவ்வொரு முறை அலை வந்து படகு முழுக்கத் தண்ணீரை இறைக்கும்போதும் ஓ வென கத்தி மகிழ்ந்தார்கள்.

நாங்கள் புறப்பட்ட இடம் புள்ளியாகி மறைந்து விட்டது. நாலாபுறமும் அசைந்தாடும் கன்னங்கரேல் தண்ணீர் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

போகப் போக அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் பெரிசு பெரிசாக வேக வேகமாக அலைகள் வந்து தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தன. படகின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியானது. இன்னொரு பேரலையில் சிலரின் செருப்புகள் கழண்டு  கடலோடு கலந்தன. பெட்டியில் வைத்திருந்த பீட்ஸா எல்லாம் நனைந்து நமுத்துப்போன அப்பளம் போலானது. குழந்தைகள் வீறிட்டழ ஆரம்பித்தார்கள்.

இதைத்தான் வானிலை சரியில்லை என்று சொன்னார்களா? இதனால்தான் படகுக் கம்பெனிகள் பலர் வாடகைக்கு விட மறுத்தார்களா?

எல்லோர் முகமும்  சற்றே வெளிறத் துவங்கியது. பருமனான நபர்களை இடம் மாறி அமரச் சொல்லி ஜோக் அடித்துப் பார்த்தார் ஒரு நண்பர். யாருக்கும் சிரிப்பு வரவில்லை.

அதே நேரம் அடித்த இன்னொரு மிகப் பெரிய அலை படகை ஏறக்குறைய புரட்டிப் போட்டது. ஒருபக்கமாய் சரிந்து ஆட்களை தூக்கி வீசியது. ஒருவரை ஒருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான் கவிழ்ந்தோம் என்று நினைத்தேன். சற்று நேரம் மிதக்கும் அளவுக்கு எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியாத நீச்சல் தெரியாத பலரை எப்படிக் காப்பாற்றுவது? சுறா மீன்கள் இருக்குமா? அந்த பய கணத்திலும் பல்வேறு யோசனைகள்.

ஆனால் படகை ஓட்டும் பழம் தின்று கொட்டை போட்ட நண்பர் கொஞ்சமும் கலவரம் அடையாமல் அல்லது கலவரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் லாகவமாக அந்தப் பெரிய அலையைக் கையாண்டு கவிழ இருந்த படகை நேராக்கி விட்டார்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா அலைகள் அடங்கிரும். அந்த இடம் ரொம்ப நல்லா இருக்கும்.” என்றார்.

“போதும். திரும்பிப் போயிடலாம்.” என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தனர். அலைகளின் கோரத் தாண்டவத்துடன் போராடி படகைத் திருப்புவதே பெரும்பாடாக இருந்தது. ஒரு வழியாய்த் திருப்பி திக்கு திசையை உணர்ந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்த பின்புதான் பலருக்கு உயிரே வந்தது.

ஏற்கெனவே எழுதி வாங்கிக் கொண்ட படகுக் கம்பெனி பேரழகி பேயறைந்தது போலிருந்த எங்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி – “என்ன போட்ல சீட்டெல்லாம் கழண்டிருக்கு?” என்றாள்.

இதைப் போன்ற கட்டுரைகள் எழுதுவதற்காகவாவது முட்டாள்த்தனமான முடிவுகளை சில சமயம் எடுக்க வேண்டும்.