நூறு இந்திய டிண்டர் கதைகள்

மாயக்கூத்தன்

cny3rgyvmaaigrg

ஒரு நாள் அலுவலகத்தில் உறவுகள், குழந்தைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் சேர்ந்து வாழற மாதிரி வொண்டர்புல்லான ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை’னு சொன்னார். அவர் அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப்போறார். அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு இருபது இருபத்து ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம். மணவாழ்க்கை மட்டுமல்ல, எந்த ஒரு உறவும் ஒரு அற்புதம் மாதிரி தான்.

சின்ன வயதில், வான சாஸ்திரம் ஆச்சரியமாக இருந்தது. ராக்கெட் போவது ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட, உடன் வேலை பார்க்கும் ஒருத்தன் எப்போதும் எலான் மஸ்கினுடைய திட்டங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு சுத்தமாக அதில் விருப்பமில்லை. நான் இப்போது பார்க்கும் வேலை சிறு வயதில் எனக்கு அத்தனை ஆச்சரியங்களையும் அளித்த ஒன்று. ஐந்து வருடங்களுக்கு மேலான பணியில், ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு என்றே போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது. தீர்வு எங்காவது இருக்கும். அவ்வளவு தான். நம்மை திருப்திப்படுத்தம் ஒரு தீர்வு, அடுத்தவரை திருப்திப்படுத்தும் தீர்வு. அவ்வளவு தான் அதற்கு மேல் வேலையில் என்ன இருக்கிறது? இது மனச்சோர்வு இல்லை. தீர்வு கண்டிப்பாக இருக்கப் போகிறது என்கிற தைரியம். மிரட்சி இல்லாத நிலையில் ஒன்றும் பிரச்சனையில்லை. அன்றைய நாள் அன்றைக்குள்ளே தீர்ந்துவிடுகிறது. அஷ்டே!

ஆனால், இப்போது மனிதர்கள் மிரட்சியைத் தருகிறார்கள். போன வாரம் அப்பாவின் தோளில் கைவைத்து, ‘இன்னிக்கு என்ன விசேஷம்?’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு?’ என்றார். அவரைச் சொல்லி குத்தமில்லை. நாங்க எப்பவும் அப்படித்தான். ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும், இனி இந்தவாட்டி சண்டை போடக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம் வரும். ஆனா, அவர் வந்து பத்து நிமிஷத்துல டாம் அண்ட் ஜெர்ரி ஆரம்பிச்சுடும். அவருக்கு எனக்கும் மட்டுமில்லை, எனக்கும் பிறருக்கும் கூட, அவருக்கும் பிறருக்கும் கூட, பிறருக்கும் பிறருக்கும் கூட இது தான் நிலைமை. அப்பா சொல்வார், நாமெல்லாம் நவக்கிரக மூர்த்திகள்.

என்னுடைய பெரிய லட்சியம் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொள்ள சில உறவுகளை (ஒரு அஞ்சு பேர்?) உருவாக்கிக் கொள்வதாகத்தான் இருக்கும். அந்ததந்த நாளைப்பொறுத்து சில சமயம் ரொம்பவே சிக்கலாகவும் மறு சமயம் எளிதாகவும் தோணும்.

இந்துவின் இந்த நூறு இந்தியத் டிண்டர் கதைகள் முயற்சி வாசிப்பவர்களுக்கு நல்ல இலக்கியங்களை விடவும் பல திறப்புகளை தரக்கூடும். கதைசொல்லிகளைப் பற்றிய நம்முடைய முன் முடிவுகளை அவர்கள் மீது ஏற்றும் எண்ணத்தைத் தாண்டி இவற்றை வாசிக்கும் போது, ஒரு நல்லுறவுக்கான மனிதர்களின் தேடல் நமக்குப் புலப்படக்கூடும். வகை வகையான மனிதர்கள், இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களை ஒதுக்கும் இரண்டு மெட்ராஸ் காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் என்னால் எங்காவது பொறுத்திப் பார்க்க முடிகிறது.

இந்தக் கதைகள் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட்ட அலுவலக நண்பரிடம் சொன்னால், அவர் இவர்களை லட்சியம் இல்லாதவர்கள், கவலை அற்றவர்கள் என்று சொல்லக்கூடும். அதான் சொல்கிறேன் நம்முடைய முன் முடிவுகளை விட்டுவிட்டு வாசித்தால் மட்டுமே இந்த நூறு கதைகளையும் அதன் மனிதர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லோருக்கும் ஒரு அர்த்தமுள்ள, ஒவ்வொரு நொடியும் புதுமையாய் புத்துணர்ச்சி தரும் ஒரு உறவு வேண்டியிருக்கிறது. இவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நாம் ஏன் மிரள்கிறோம்?

ஆண்-பெண் உறவுகளை எடுத்துக் கொண்டால், நாமும் நம்முடைய சமூகமும் நம்முடைய சட்டங்களும் இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல புத்தகம் ஒருவனுக்கு எத்தனை அவசியமோ, அதைவிட நூறு மடங்கு ஒரு நல்ல உறவு அவசியம்.

இந்த நூறு கதைகளுடன் வரும் ஓவியங்களைப் பற்றி ஓவியம் பயின்றவர்கள் தான் சிறப்பாக எழுதமுடியும் என்பது என் நினைப்பு. இந்த ஓவியங்களைவிடவும் இந்தக் கதைகள் எனக்கு மனிதர்களைப் பற்றி பல்லாயிரம் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.