எழுத்து

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்த்தல்

திர்கந்தரா ரெக்சா (Dirgantara Reksa)

“… இலக்கியம் மீதான நேசமில்லையேல், நீங்கள் புத்திசாலி மிருகங்கள் பலர் என்ற நிலையில்தான் இருப்பீர்கள்”
– பிரமோதய ஆனந்த தோயர், பூமி மனுஷியா

ஏப்ரல் 2014ல் இந்தோனேஷியாவின் கல்வி மற்றும் கலாசாரத்துறை துணை அமைச்சர் வியந்து நூர்யந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை பஹாசா இந்தோனேஷியா மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து அக்டோபர் 2015ல் நடைபெறவிருக்கும் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் 1100 கோடி ரூபியாக்களை இந்தோனேஷிய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று செய்தார். இது இந்தோனேஷிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நற்செய்தியாய் அமையும் சாத்தியம் கொண்டிருக்கிறது- ஏனெனில், உலக இலக்கிய சமூகத்தில் இந்தோனேஷிய இலக்கியத்துக்கு என்று ஒரு இடத்தை பெற்றுத் தரும் முன்னெடுப்பு இது, இதன் பயனாக உலக மக்களுக்கு இந்தோனேசிய இலக்கியத்தை ரசித்து வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியத்தை எளிதில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது எனினும் நீண்ட காலமாகவே அது உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பரிசீலனையையும் பெற்று வந்திருக்கிறது. உதாரணங்களைச் சுட்டுவதானால், 1979ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் வருடாந்தர தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்; 1967க்கு பின்னர் இதுவரை முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் ஐயோவாவின் சர்வதேச எழுத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்; 2011ஆம் ஆண்டு கிராணி பரோக்கா வேர்மொன்ட் ஸ்டூடியோ சென்டரின் அமர்வு எழுத்தாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தோனேஷிய எழுத்தாளரானார்; இவை தவிர, இந்தோனேஷியாவின் பிரமோதய ஆனந்த தோயர் இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமல்ல- அது சிந்தனைகளையும் பண்பாடுகளையும் வரலாற்றையும் புரிதலையும் மானுடம் அனைத்தின் மேன்மைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் செயல். ஊழல், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு முதலான்வற்றுக்காக இழிபெயர் கொண்ட தேசமாக இந்தோனேஷிய கருதப்படக்கூடாது. மாறாய், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது தன் எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் மதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உத்வேகமொன்று தற்போது தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. ஆசியன் பொருளாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- அது போட்டியோடு வாய்ப்புகளையும் கொணரவிருக்கிறது, ஒருமைப்பாட்டுடன் பரவலாக்கத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது- இந்தோனேஷிய படைப்புகளை மொழிபெயர்க்கும் முயற்சிகளுக்கு புதிய ஒரு பொருளாதார கட்டளையை இது பிறப்பிக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்கையில், இந்தோனேஷிய இலக்கியத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமை உள்ளது என்பது மட்டுமல்ல, அது மொழிபெயர்க்கப்படுவதும் அவசியமாகிறது- ஆசியன் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியம் தனக்கென்று ஒரு இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அது பிற தேசங்களின் இலக்கியங்களுக்கு இணையாகவும், ஏன், அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் உணரப்பட்டு, மானுடத்துக்கு தன் பங்களிப்பை அளிக்க இயலும்.

இன்று உலகளாவிய இலக்கியத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது அது இனியும் ஐரோப்பிய மையம் கொண்டதாகவும் மேலைப் பண்பாட்டை உயர்வென்று கருத்தும் உள்ளுணர்வால் கட்டமைக்கப்பட்டதாகவும் இல்லை என்பதை அறிகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல படைப்புகள் புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் எழுதப்படுகின்றன, ஆசியா ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலான கண்டங்களில் காலனியத்துக்கு உட்பட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த எழுத்தாளர்கள்.

இலக்கியமும் வரலாற்று அனுபவமும்

இலக்கியம் என்பது அழகியலோ குறியீட்டு மதிப்போ மட்டுமல்ல. எந்த கணத்திலும் எந்த இடத்திலும் அது கூட்டு வரலாற்றுக் கதையாடலின் பகுதியாகவே விளங்குகிறது- மானுடத்தின் பல்வேறு சமூக, அரசியல் அனுபவங்களின் சாட்சியாக இருந்து, ஒரு சின்னமாக காணப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருப்பதோடல்லாமல், எதிர்காலத்தின் பிரதிபிம்பமாக்வும் இருக்கிறது. இந்தோனேஷிய இலக்கியத்தின் தனித்தன்மை அதன் கலாசார பிரக்ஞையே என்றார் அஜிப் ரோசிடி. உண்மையில் இந்த கலாசார பிரக்ஞை என்பது அரசால் சார்பு கொண்டது; இந்தோனேசிய இலக்கியம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளும் உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.

நியோமன் குத்தரத்னா, இந்தோனேசியாவின் காலனிய அனுபவத்தைப் பதிவு செய்யும் பதின்மூன்று நாவல்களை விவாதிக்கிறார். இந்தோனேஷிய மக்கள் மீதான காலனிய தாக்கத்தை இந்த நூல்கள் விரிவாக விவரிக்கின்றன, என்பது மட்டுமல்லாமல் அக்காலத்துக்குரிய சமூக, அரசியல் கூட்டுமனத்தின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன: தம் ‘தேசிய அடையாளத்தை’ வரையறுத்து புரிந்து கொள்வதற்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிற்பாடு தேசத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாகை இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை நோக்கிய தேடல்.

இன்றைய இந்தோனேசிய இலக்கியம் தன் வரலாற்று மூதாதையர்களுக்கு இணையானதாகவே இருக்கிறது; இயற்கைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போராட்டம் மற்றும் மோதல்களின் உச்சங்களும் வீழ்ச்சிகளும், முன்னெப்போதையும் போலவே இப்போதும் மிக முக்கியமாக இருக்கின்றன. சீர்திருத்தம் நோக்கிச் செல்லும் இந்தோனேஷியாவின் சமூகச் சூழலை விளக்கும் நூல்களையும், இன்றைய இந்தோனேஷியாவின் நகர்புற வாழ்வை விவரிக்கும் நூல்களையும் காண முடிகிறது.

நடைமுறைச் சவால்கள்.

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ளது எதுவென்று நோக்கிடில், அதன் மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள்தான் என்று கூற வேண்டும். இலக்கிய படைப்பு ஒன்று அந்நிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், ஆதர்ச உலகில், அது தான் பிறந்த மண்ணில் வாசிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தோனேஷியாவில் அந்த நிலை இல்லை- இந்தோனேஷிய மக்கள் பலருக்கும் தங்கள் இலக்கியத்தின் கொடை என்னவென்ற உணர்வே இல்லை. இலக்கியம் பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று இந்தோனேஷிய சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக உள்ளதைக் காட்டிலும் வாய்மொழிச் சமூகங்களின் கூறுகள் மேலோங்கிய சமூகங்களாய் இருக்கின்றன என்பதுதான். தலைமுறைகளுக்கு இடையே பண்பாட்டு பரிமாற்றம் வாய்மொழியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தோனேஷியாவெங்கும் உள்ள பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை விற்பதோ வாங்குவதோ கடினமாக இருக்கிறது என்பது மற்றொரு சவால். இந்தோனேஷிய இலக்கிய நூல்களை அதன் வாசகர்கள் பழைய புத்தகக் கடைகளைப் புரட்டிப் போட்டு தேட வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் விற்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே இந்தோனேஷிய புத்தகக் கடைகள் தம் சந்தையில் இலக்கியப் படைப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன. நல்ல வேளையாக\, இளைய தலைமுறையினர் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்- மாற்று புத்தகக் கடைகளைத் திறக்கின்றனர், கலாசார, இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு ஏற்ற, சுமூகமானச் சூழல் கொண்ட வாசிப்பிடங்கள் அமைத்து வருகின்றனர்.

இறுதியாகச் சொன்னாலும், மிக முக்கியமான காரணமாக, இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகள் சர்வதேசச் சந்தையில் எதிர்கொள்ளும் போட்டியைச் சொல்ல வேண்டும். புதிதாய் களமிறங்கியுள்ள காரணத்தால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்களின்தம்மை நிறுவிக் கொண்ட தொன்மையான, பெரும்பதிப்பகங்களை இவை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் இந்தோனேஷியாவுக்கு சாதகமாக அதன் பறந்து விரிந்த மாபெரும் பண்பாட்டு, சமூகக் கேணி இருக்கிறது. அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்டது, அதன் களம் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் விரிவது- கலாசாரத்தையும் சமூக அமைப்பையும் தொடர்ந்து மறுபுரிதலுக்கு உட்படுத்தி வளர்ச்சி கண்ட சமூகம் இது. கல்வெட்டில் பதிக்கப்பட்ட மாற்றமுடியாத வரலாற்று விசைகளால் மட்டுமல்ல, வாயாங் முதல் தொலைகாட்சி வரையும், மாஜாபாஹித் முதல் நவீன குடியரசு வரையிலும் அரசமைப்பின் பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மக்களை வழிநடத்திய, மாறிக் கொண்டேயிருக்கும் அதிகார இயங்குவிசைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. இவையனைத்தும் சந்தேகத்துக்கிடமின்றி இலக்கியத்துக்கான உயர்ரக பேசுபொருட்கள்.

நம்பிக்கைச் சாசனம்

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பது என்பது வசதிக்கேற்ப செய்துகொள்ளக்கூடிய தேர்வல்ல, அது ஒரு தார்மீக கடமை. எத்தனை இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு இந்தப் படைப்புகள் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதனால் இந்தோனேஷிய இலக்கியமும் அதன் எழுத்தாளர்களும் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அரசாங்கம், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பதையொட்டி அமையும். எதிர்காலம் குறித்த ஒரு பொதுப் பார்வை இவர்கள் முன்னிற்க வேண்டும், அதில் இவர்கள் உறுதியாய் நிலைத்து இயங்க வேண்டும்: இவர்கள் இந்தோனேஷியாவின் இலக்கியத்தைப் பாதுகாத்து அதற்கு செறிவூட்ட வேண்டும், அப்போதுதான் அது தன்கடந்த காலத்தின் வளமையைக் கையகப்படுத்திக் கொள்ள முடியும், அப்போதுதான் அதன் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க முடியும்; எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.

நன்றி- Whiteboard Journal

அறையும் மழை

அனுகிரஹா

திரைகள் அடர்ந்த
அறையினுள்
காற்றின் ஊளையும்
புயல் சின்னமும்.
அசைவற்றிருந்த அறையில்
கடலலைகள் தள்ளாடின.
மூலையில்
நின்றபடி ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி
திகைத்து
மூச்சிரைத்தது.
திறக்கப்படாத கதவிற்கு
வெளியே

பெருமழை பெய்துகொண்டிருந்தது.

புகைப்படம்: யதிராஜன்

வண்ணக்கழுத்து 12: போர் அழைக்கிறது

மாயக்கூத்தன்

ஆகஸ்டு மாத முதல் வாரத்தில், பிள்ளைகள் பிறந்து சில நாட்களில், வண்ணக்கழுத்தும் ஹிராவும் கல்கத்தாவிலிருந்து பம்பாய் சென்றார்கள். உலகப்போரில் கலந்து கொள்ள கோண்டுடன் அங்கிருந்து, கடல்வழிப் பயணத்தைத் துவக்கினார்கள். வண்ணக்கழுத்துடன் பிரமச்சாரியான ஹிராவை அனுப்ப காரணம், இரண்டு பேருமே ராணுவத்திற்குத் தேவையாக இருந்ததுதான்..

ஃபிலாண்டர்ஸ் மற்றும் ஃபிரான்ஸின் போர்க்களங்களுக்கு பயணப்படும் முன், தன்னுடைய குஞ்சுகளை வண்ணக்கழுத்து பார்த்துவிட்டதில் எனக்குச் சந்தோஷம். என் சந்தோஷத்தின் முக்கிய காரணம், வீட்டில் தன் பெடையும் குஞ்சுகளும் காத்துக் கொண்டிருக்கும்போது, போர்க்களம் செல்லும் புறா திரும்பி வராமல் போவது அரிது. வண்ணக்கழுத்துக்கும் அவன் குடும்பத்திற்கும் இடையே இருந்த அந்த அன்புப் பிணைப்பு, தூது செல்லும் வேலையை அவன் கச்சிதமாகச் செய்வான் என்ற நம்பிக்கையை அளித்தது. எந்தவொரு துப்பாக்கி சுடும் சத்தமோ தோட்டாக்களோ, அவன் உயிரோடு இருக்கும்வரை, அவன் இறுதியில் வீடு திரும்புவதைத் தடுக்க முடியாது.

ஆனால், வீடு இங்கே கல்கத்தாவில் இருக்கிறது, போர்க்களமோ பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருக்கிறது, பிறகு எப்படி? என்றொரு கேள்வியை யாரும் கேட்கக்கூடும். அது உண்மைதான். ஆனால் அதே சமயம், பெடையும் குஞ்சுகளும் வீட்டில் இருப்பதால், அவன் கோண்ட் இருக்கும் இடத்தில் உள்ள தன்னுடைய தற்காலிக இருப்பிடத்தை அடைய, தன்னால் ஆனமட்டும் முயற்சி செய்வான் அல்லவா?

போர் முனைக்கும், கோண்டும் தலைமைத் தளபதியும் காத்துக் கொண்டிருந்த தலைமையகத்திற்கும் இடையே வண்ணக்கழுத்து பல முக்கிய தகவல்களை கொண்டு சென்றதாகச் சொன்னார்கள். முதலில் வண்ணக்கழுத்துக்கு கோண்டிடம் தான் நெருக்கமான பிணைப்பு இருந்தது. ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவனுக்கு தலைமைத் தளபதியையும் வெகுவாகப் பிடித்துவிட்டது.

எனக்கு வயது போதாது என்பதாலும் எந்த விதமான ராணுவச் சேவைக்கும் நான் தகுதியானவன் இல்லை என்பதாலும், கோண்ட்தான் இரண்டு புறாக்களையும் எடுத்துக் கொண்டு போர் முனைக்குச் சென்றார். இந்தியாவிலிருந்து மர்சேலிஸ் செல்லும் போது அந்த வயதான வேடரும் வண்ணக்கழுத்தும் ஹிராவும் அணுக்க நண்பர்களாகிவிட்டார்கள். எந்தவொரு புதிய விலங்கும் கோண்டின் நட்பை அதிக காலம் தவிர்ப்பதை இனிமேல்தான் நான் பார்க்க வேண்டும். என் புறாக்களுக்கு அவரை முன்பே தெரியும் என்பதால், அவை அவரோடு பழகுவது எளிதாக இருந்தது.

இந்திய ராணுவம், செப்டம்பர் 1914 முதல் அதைத் தொடர்ந்து வந்த இலையுதிர் காலம் வரை ஃபிலாண்டர்ஸில் நிலையிருந்தபோது, கோண்ட் தன்னுடைய கூண்டோடு தலைமையகத்திலேயே இருந்தார். வண்ணக்கழுத்தும் ஹிராவும் வெவ்வேறு படைப்பிரிவுகளால் போர் முனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவ்வப்போது ஒரு அவுன்ஸை விட குறைவான எடை கொண்ட மெல்லிய துண்டுக் காகிதத்தில் சேதிகளை எழுதி, அவனுடைய காலில் கட்டிப் பறக்கவிடுவார்கள். அங்கிருந்து வண்ணக்கழுத்து, தவறாமல் கோண்ட் இருக்கும் தலைமையகத்திற்கு பறந்து செல்வான். அங்கே அனுப்பப்பட்ட ரகசியச் சேதி, மொழிமாற்றப்பட்டு தலைமைத் தளபதியால் பதில் அளிக்கப்படும். அந்த தலைமைத் தளபதி வண்ணக்கழுத்திடம் பிரியமாக இருந்ததாகவும் அவனுடைய சேவையை உயர்வாக மதிப்பிட்டதாகவும் கூட ஒரு பேச்சு இருந்தது..

ஆனால், வண்ணக்கழுத்தின் கதையை அவன் சொல்லிக் கேட்பதே நன்றாக இருக்கும். ஒரு கனவை எப்படி கனவு கண்டவனைத் தவிர வேறொருவர் சொல்ல முடியாதோ, அதைப் போல வண்ணக்கழுத்தின் சில சாகசங்களை அவனே தான் சொல்ல வேண்டும்.

“கரிய நீர் போல் தோற்றமளித்த இந்தியப் பெருங்கடலையும் மத்தியத் தரைக் கடலையும் கடந்தபின், ஒரு அன்னியமான நாட்டின் ஊடே நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம். பிரான்ஸ் என்ற அந்த தேசத்தில், அந்த செப்டம்பர் மாதம் கூட தென்னிந்தியாவின் குளிர்காலம் போல சில்லென்று இருந்தது. இமாலயத்தை நெருங்குவதாக நான் நினைத்துக் கொண்டு, பனி மூடிய மலைகளும் ராட்சத மரங்களும் வருமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தொலை தூரம் வரை நம்முடைய உயரமான மூங்கில் மரங்களைவிட உயர்ந்த மலைகளை என்னால் காண முடியவில்லை. உயரமாக இல்லாத ஒரு நாடு ஏன் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

”கடைசியில் நாங்கள் போர் முனையை அடைந்தோம். நாங்கள் போர் முனையின் பின் பக்கத்தைத்தான் அடைந்திருந்தோம் என்பது பின்னால் தான் தெரிய வந்த்து. ஆனால், அங்கும் கூட நெருப்பு உமிழிகளின் பூம் பூம் பூம் என்ற சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஒரு சாமானிய புறாவாக நான் அனைத்து நெருப்பு உமிழிகளையும் வெறுக்கிறேன், அவை அளவும் உருவமும் எப்படி இருந்தாலும் சரி என்னால் அவற்றைச் சகித்துக் கொள்ள முடியாது. அந்த உலோக நாய்கள் குரைத்துக் கொண்டும் மரணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டிருந்ததும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அங்கே சென்று இரண்டு நாட்களுக்குப் பின் எங்களுடைய சோதனை ஓட்டம் துவங்கியது. என்னையும் ஹிராவையும் தவிர நம்முடைய நகரிலிருந்து நான்கு புறாக்கள் மட்டுமே இருந்தன. ஹிரா எதையும் யோசிக்க மாட்டான் என்பது உங்களுக்கே தெரியும். ஒரு பெரிய கிராமத்தின் வீடுகளுக்கு மேலே எழும்பிப் பறந்தவுடனே ஹிரா, பூம் பூம் என்று சத்தம் வரும் இடத்தை நோக்கிப் பறந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டாக வேண்டும் அவனுக்கு. ஒருமணிநேரத்தில் நாங்கள் அந்த இடத்தை அடைந்துவிட்டோம். ஓ! என்னவொரு சத்தம். மரங்களுக்கு கீழே ஒளித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு நாய்கள் இடியைப் போல் முழக்கமிட்டுத் துப்பிய நெருப்புப் பந்துகள் எங்களுக்குக் கீழே சீறி வெடித்தன. நான் பயந்துவிட்டேன். இன்னும் மேலே மேலே பறந்தேன். ஆனால், அந்த உயரத்திலும் அமைதியில்லை. எங்கிருந்தோ மிகப் பெரிய கழுகுகள் முழங்கிக் கொண்டே வரும் யானைகள் போல, கர்ஜித்துக் கொண்டும் உறுமிக் கொண்டும் வந்தன. அந்த பயங்கரத்தைக் கண்டவுடன், கோண்ட் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நாங்கள் பறந்தோம். ஆனால், அந்த கழுகுகளில் இரண்டு எங்களைப் பின்தொடர்ந்தது. நாங்கள் வேக வேகமாகப் பறந்தோம். நல்லவேளையாக, அவர்களால் எங்களை முந்திச் செல்ல முடியவில்லை. நாங்கள் எதிர்பார்த்த்தைப் போலவே, நாங்கள் வாழ்ந்த இடத்துக்கே அந்தக் கழுகுகள் வந்து இறங்கின. மரணம் கைக்கெட்டிய தூரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்தக் கழுகுகள், எங்களைக் கூண்டுக்குள்ளேயே எலிகளைப் போல விழுங்கப்போகின்றன. இல்லை. அவை முழக்கத்தை நிறுத்திவிட்டு சீக்கிரமே தரையில் செத்து விழுந்தன. அந்த இரண்டு பறவைகளின் வயிற்றிலிருந்தும் இரண்டு இரண்டு மனிதர்கள் குதித்து வெளியே வந்து நடந்து போனார்கள். கழுகுகள் மனிதர்களை விழுங்கியது ஆச்சரியமாக இருந்தது. மேலும் உள்ளே போனவர்கள் எப்படி உயிரோடு வந்தார்கள்?

“சீக்கிரமே அந்த மனிதர்கள் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு, மறுபடியும் கழுகுகளின் வயிற்றுக்குள் ஏறிக் கொண்டார்கள். பிறகு, கழுகுகள் ஒரு உறுமலோடும் முழக்கத்தோடும் உயிர்பெற்று மீண்டும் மேலே காற்றில் பறந்தன. இதைப் பார்த்த்தில், சந்தேகமே இல்லாமல் அவை மனிதர்களின் வாகனங்கள் என்பது என் மூளைக்கு எட்டியது. நான் ஆசுவாசமடைந்தேன்.

”முதலில் எல்லாமே விசித்திரமாக இருந்தன. ஆனால் போகப் போக எல்லாம் பழகிப் போய்விட்டன. ஆனாலும் இன்னமும், தொடர்ந்து முழங்கிக்க் கொண்டும் குரைத்துக் கொண்டுமிருந்த வெடிச் சத்தத்தில் எப்படி நிம்மதியாகத் தூங்குவது என்பது பிரச்சினையாகத்தான் இருந்தது. ராணுவத்தில் இருந்த அந்த மாதங்களில் நான் ஒரு போதும் சரியாகத் தூங்கியதே இல்லை. ஹிராவும் நானும், புதிதாகப் பிறந்த பாம்புகள் போல படபடத்துக் கொண்டு நிலையில்லாது இருந்தோம் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

”என்னுடைய முதல் சாகசம், எல்லா விதமான நாய்களும், பகலும் இரவும் குரைத்துக் கொண்டும் தீயை உமிழ்ந்து கொண்டு இருக்கும் போர் முனையில் இருந்த ரசெல்தாரிடம் இருந்து செய்தியைக் கொண்டு சென்றதுதான். ரசெல்தாரைப் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். கல்கத்தாவிலிருந்து வந்திருந்த ஏராளமான இந்திய வீர்ர்களுக்கு தலைவராக அவர் இருந்தார். முழுக்க கருப்பு கேன்வாஸ் துணியால் மூடப்பட்ட ஒரு கூண்டில் என்னை எடுத்துக் கொண்டு, தன்னுடைய பொறுப்பில் இருக்கும் நாற்பது வீரர்களோடு போர்முனை பதுங்கு குழி நோக்கிச் சென்றார்., பல மணிநேரமும் பல இரவுகளும் கடந்து சென்ற பின், என்னுடைய இருண்ட கூண்டில் அப்படிதான் தோன்றியது, நாங்கள் எங்கள் இலக்கை அடைந்தது போல இருந்தது. அங்கே கருப்பு கேன்வாஸ் அகற்றப்பட்டது. இப்போது என்னைச் சுற்றி சுவர்களைத் தவிர வேறு எதையும் காணமுடியவில்லை. இந்தியாவிலிருந்து வந்திருந்த முண்டாசு கட்டிய மனிதர்கள் பூச்சிகள் போல அங்கு ஊர்ந்து கொண்டிருந்தார்கள். தலைக்கு மேலே, இயந்திரக் கழுகுகள் பயங்கர முழக்கத்துடன் பறந்தன. இங்கே முதன் முறையாக சப்தங்களை கவனிக்கத் துவங்கினேன். ஒரே குழப்பமான பூம் பூம் பூம் என்ற சத்தத்திற்கு பதிலாக, எத்தனை விதமான சத்தங்களை காதால் தனித்தறிய முடியுமோ அத்தனை விதமான வெடிச் சத்தங்களைக் கேட்டேன். புரிந்து கொள்ளவே முடியாமல் ஒன்று இருந்தது என்றால், என்னைச் சுற்றியிருந்த அந்த மனிதர்கள் பேசியதுதான். காதைப்பிளக்கும் சப்தங்களுக்கு நடுவே இவர்களின் பேச்சுச் சத்தம், புற்களின் மேல் வீசும் மந்த மாருதம் போல குசுகுசுவென்று இருந்தது. அவ்வப்போது உலோக நாய்களின் வாயைத் திறந்துவிட்டார்கள். அவை குரைத்து, நீண்ட நேரம் நெருப்பை உமிழ்ந்தன. இவற்றுக்குப் பிறகு கழுதைப் புலியின் சிரிப்பு வந்தது. நூற்றுக்கணக்கான மனிதர்கள் அந்த சின்னக் குட்டிகளை தூண்டிவிட்டு, பக் பஃப் பக் பஃப் பக் பஃப் என்று பயங்கரமாக இருமச் செய்தார்கள். மேலே கூட்டமாகப் பறந்த கழுகுகளின் அடித் தொண்டை இரைச்சலில் இந்தச் சத்தம் அமுங்கிப்போனது. அந்தக் கழுகுகள் குரைத்தன. பைத்தியம் போலக் கிறீச்சிட்டன. சிட்டுக் குருவிகள் போல ஒன்றை ஒன்று போட்டுத் தள்ளின. என்னுடைய தலைவராக இருந்த அந்த ரசெல்தார் தன்னுடைய குட்டியை வானத்தை நோக்கி உயர்த்தி, அதை சொடுக்கி விட்டார், பக் பஃப் என்றொரு சத்தம். கொஞ்சம் நெருப்பு. ஓ! அந்த நெருப்பு அந்தக் கழுகுகளில் ஒன்றை ஒரு முயலைப் போல சுட்டு வீழ்த்தியது. இப்போது இருப்பதிலேயே ஆழமான சத்தம் கேட்டது. பூம் பஸூம் புஸ் பம்! ஒரு பெரிய உருவத்தின் உறுமல் உயர்ந்து எழுந்து அனைத்து உன்னதமான சத்தங்களுக்கும் விதானம் போல பரவியது. அதனுடைய பயங்கர சத்தத்தில் அனைத்து சில்லறைச் சத்தங்களையும் விழுங்கிவிட்டது. ஓ! அந்த துன்புறுத்தம் சத்தத்தின் மயக்கத்தை. என்னால் மறக்கவும் முடியுமோ? உறுமலுக்கு மேல் உறுமல், பயங்கர சத்தத்திற்கு மேல் சத்தம், ஒலிகளினால் ஆன பெரிய பாறைகள் நொறுங்குவது போன்றொரு இரைச்சல்.

”ஏன் மரணத்திற்கு வெகு அருகில் அழகும் இருக்கிறது? என் தலைக்கு மேல் கேட்ட இந்த விண்ணுலக இசை என் ஆன்மாவை ஈர்த்து அதிக நேரம் ஆகியிருக்காது, எங்கள் மேலே நெருப்பு புயல் மழை போலக் கொட்டியது. வெள்ளம் புகுந்த பொந்துகளில் எலிகள் வீழ்வது போல மனிதர்கள் வீழ்ந்தார்கள். சிவந்த ரத்தம் சொட்டச் சொட்ட அந்த ரசெல்தார், வேகவேகமாக ஒரு துண்டுச் சீட்டில் எதையோ எழுதி என் காலில் கட்டி என்னை விடுவித்தார். அவர் பயங்கர வேதனையில் இருக்கிறார் என்பதையும், கோண்ட் உதவியை அனுப்பிவைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதும் அவருடைய பார்வையிலேயே தெரிந்து கொண்டேன்.

“நான் மேலே பறந்தேன். ஆனால் நான் பார்த்தது என் இறக்கைகளை உறையச் செய்தது. பதுங்கு குழிகளுக்கு மேலே காற்று முழுவதும் ஒரு பறக்கும் நெருப்புக் கம்பளம் போல இருந்த்து. அதற்கு மேலே எப்படிப் போவது என்பதே என் பிரச்சனை. என் வாலை பயன்படுத்தி எல்லாத் திசைகளிலும் என் பறத்தலின் பாதையில் திரும்பினேன். ஆனால் எந்த வழியில் நான் மேலே ஏறினாலும், எனக்கு மேலே லட்சக்கணக்கான நெருப்புஊசிகள் அவை, வாழ்வெனும் தறியில் அழிவெனும் ஆடையை நெய்து கொண்டிருந்தன. ஆனால், நான் மேலே பறந்தாக வேண்டும். நான், வண்ணக்கழுத்து, என் தந்தைக்குப் பிறந்தவன். சீக்கிரமே ஒரு காற்றுச் சுழலில் மோதி, அதனால் உறிஞ்சப்பட்டு என் இறக்கைகள் முறிந்தது போலும் ஒரு இலையைப் போலும் சுழன்று மேலே இழுக்கப்பட்டேன். மேலும் மேலும் அதிக தீவிரத்தோடு தன்னை நெய்து கொள்ளும் நெருப்பாடையைத் தாண்டி மேலே ஏறும் வரை நான் மேலும் கீழும் மேலும் கீழும் புரட்டி எடுக்கப்பட்டேன். ஆனால், இப்போது எதைக் காணவும் எனக்கு நேரமில்லை. ‘கோண்டிடம் செல்லவேண்டும், கோண்டிடம் செல்லவேண்டும்’ என்று எனக்கே சொல்லிக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அப்படிச் சொல்லும் போதும், அது என் ஆன்மாவைக் குத்தியது போல் ஒரு உத்வேகம் அளித்து என்னால் முடிந்த அளவுக்கு என்னை முயற்சி எடுக்க வைத்தது. இப்போது நான் வெகு உயரம் வரை ஏறிவிட்டேன். சுற்றிலும் நோக்கிவிட்டு மேற்கு நோக்கிப் பறந்தேன். அப்போது, ஒரு குண்டு என்னுடைய வாலைத் துளைத்துஅதை உடைத்தும்விட்டது. அது என்னை பயங்கர சீற்றம் கொள்ள வைத்தது.

என்னுடைய வால், என்னுடைய கெளரவத்தின் சின்னம். அதைத் தொடுவதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்க அதைச் சுடுவதை எப்படித் தாங்கிக் கொள்வது. ஆனால், என் இருப்பிடத்தை நோக்கி பாதுகாப்பாகப் பறந்துவிட்டேன். நான் கீழே இறங்கத் தயாராகும் போது இரண்டு கழுகுகள் எனக்கு மேலே சண்டையிடத் துவங்கின. அவற்றின் முழக்கங்களை நான் கேட்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. அவை ஒன்றை ஒன்று கொன்று கொண்டிருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், அவை என் மீது தீயைப் பொழிந்தன. அவை அதிகம் சண்டையிட சண்டையிட அவற்றின் அலகிலிருந்து மேலும் தீப்பிழம்புகள் கொட்டின. என்னால் முடிந்தவரை தாழப் பறந்து, விலகிப் பறந்தேன். அங்கே மரங்கள் ஏதாவது இருந்திருந்தால் நன்றாக இருக்கும். மரங்கள் இருந்தன. ஆனால், பெரும்பாலானவை சுடப்பட்டு சிதைக்கப்பட்டு, இனிய நிழல் தரும் இலைகளும் மாபெரும் கிளைகளுமாக மறைவிடம் தருவதற்கு இல்லாது குச்சிகள் போல துருத்திக் கொண்டு நின்றன. ஆக, காட்டில் துரத்தும் யானையிடமிருந்து ஓடும் ஒரு மனிதனைப் போல, அந்த சிதைக்கப்பட்ட குச்சிகளுக்கு இடையே நான் வளைந்து நெளிந்து போக வேண்டியதாயிற்று. கடைசில் நான் வீட்டை அடைந்து, கோண்டின் மணிக்கட்டில் சென்று அமர்ந்தேன். அவர் நூலை வெட்டி, என்னையும் அந்தச் செய்தியையும் எடுத்துக் கொண்டு, தலைமைத் தளபதியிடம் போனார். அவர் பழுத்த செர்ரியைப் போல இருந்தார். அவர் மேலிருந்து ஒரு சோப்பின் சுகந்தமான வாசனை வந்தது. அனேகமாக, பெரும்பாலான வீரர்களைப் போல் அல்லாது. ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை அவர் சோப்பு போட்டு குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அந்த காகிதத்தில் ரசெல்தார் எழுதியதை வாசித்த பிறகு, என்னைத் தலையில் தட்டிக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியில் இருக்கும் காளையைப் போல உறுமினார்.

(தொடரும்…)

உலகின் மறுமுனையில் வீடு

சோழகக்கொண்டல்

எனைக் கவ்விச்சூழ்ந்திருக்கும்
காலநாகத்தின்
நடுக்கண்டத்தில் நான்

தலையையும் வாலையும்
தானேயறியாத விஷநதியின்
அகால இருளுக்குள்
என்னில் எஞ்சியது எதுவுமில்லை

படுக்கை விரிப்பில்
சிறு கலைவும் இல்லை
அடைத்த கதவுகளுக்குப்பின் உறைந்த
சாளரத்திரைகளும்
விலக்கப்படுவதேயில்லை

என்குரல் எப்படி இருக்குமென்று
யாரிடமாவது கேட்கவேண்டும்
மீண்டும் உடைத்துவிட்ட
கண்ணாடியை மீட்பதற்குள்
என் முகமும் எனக்கு
மறந்துவிடக்கூடும்

யாரோ பெண்கள் சிரிக்கிறார்கள்
எம்பிக்குதிக்கின்றன பிள்ளைகள்
மெல்லிய திரைவிலகலில்
ஒரு மௌனப்படம் மட்டுமே இவை
செவியும் சிந்தையும்
விருப்ப ஓய்வில்

உருவமோ வண்ணமோ தெளிவின்றி
எஞ்சியிருக்கும் ஊரின்
ஓவியத்திலிருந்து
ஒவ்வொரு கோடுகளாய்
நகர்ந்து வெளியேறுகின்றன

உலகின் மறுமுனையில்
இருக்கும் எனது வீடு
வெறும் சொல்லாக
தேய்ந்துவிட்டது

குடியிருப்பு முகப்பின்
அஞ்சல்பெட்டியில் நிறைந்திருக்கும்
வெற்றிடத்தின் எடையோடு
தினந்தினம் அறைதிரும்புதல்
அத்தனை எளிதல்ல

மீண்டும் மீண்டும் திறந்தாலும்
வெற்றுச் சிரிப்போடு
முகம்சுளிக்கிறது மின்னஞ்சல்

காலம் எனும் ஆலகாலம்
கழுத்துவரை ஏறிவிட்டது
இன்னும் நான் இங்கிருப்பது
என் வசத்தால் இல்லை.

ஒளிப்பட உதவி- Zlain8 1 

.

சைதன்யா (இரண்டாவது)

ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு  
கடவுள்களாக   
உமிழ்ந்தான்