எழுத்து

பசி

பா சிவகுமார் 

தீநுண்மியின்
தாக்கம் அதிகரிப்பு
பொதுமுடக்கமென
அரசு அறிவிப்பு
வெறிச்சோடியிருக்கிறது
நகரம்
வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்
மக்கள்
முடங்காமல் நேரத்திற்கு
வந்து விடுகிறது பசி

பஞ்சடைத்த செவிகள்;
ஒளியிழந்த விழிகள்;
வறட்சியான வார்த்தைகளென
காய்ந்த அகவயிற்றினழகு
முகத்தில் தெரிய
பொருளீட்ட வழியின்றி
உடல்மனம் சோர்ந்து
பசி மயக்கத்தில்
சாலையோர குடிசையில்
சுருண்டுக் கிடக்கின்றனர்
அன்றாடங்காய்ச்சிகள்

வறண்டு வறட்சியாக
கிடக்கின்றன
சமையலறையும்
பலரின் வயிறுகளும்
உழைப்பு; ஊதியம்;
உணவு; பசி; வறுமையென
சில சொற்களின் நேரடிப் பொருள்
இப்பொழுது
வயிற்றிற்கும்
தெரிய வருகிறது
பசித்தீயை நீருற்றி
தற்காலிகமாக
அணைக்கின்றனர்

நிவாரணத் தொகை
விரைவில் வழங்கப்படும்
என்ற செய்தி
எங்கோ காற்றில்
மிதந்து வருகிறது
வயிற்றிற்கு உணவில்லாதபோது
செவிக்கு அங்கே ஈயப்படுகிறது

அம்…மா…. என கத்தியவாறு
ஓடி வரும் சிறுமியின் கையில்
யாரோ அளித்த
உணவுப் பொட்டலங்கள்
பசியாறுகிறது குடும்பம்
வாழ்வின் மீதான நம்பிக்கையை
யாரோ வழியெங்கும்
விதைத்துச் செல்கிறார்கள்
நாளை விடிந்துவிடும் என்ற
நம்பிக்கையில் பசியாறி
உழைக்கத் தயாராகின்றனர்
குடிசைவாழ் மக்கள்
இரண்டு வேளை
உணவென்பதே
இவர்களின்
இப்போதைய இலக்கு

புரிதல்

வளவ. துரையன்

குமாருக்கு எப்பொழுதும் மருத்துவமனையின் வாடையே பிடிக்காது. அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். காலை மணி எட்டு இருக்கும். நோயாளிகளுக்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு வருபவர்களும் வாங்கச் செல்பவர்களும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர். குமாரின் அண்ணன் கோபுவும் அதற்குத்தான் போயிருந்தார். குமார் சன்னல் வழியே பார்த்தான். உள்ளே அம்மா கட்டிலில் படுத்திருந்தார். அப்பா பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

நேற்று காலை கோபுதான் தஞ்சாவூரிலிருந்து அலைபேசியில் பேசினார். “அம்மா முதுகு ரொம்ப வலிக்குதுன்னு சொல்றா. டாக்டர்கிட்டப் போய்க் கட்டினேன். எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததில முதுகுத் தண்டுவடத்துல ஏதோ பாதிப்போம். படுத்துக்கிட்டே இருந்தா கொஞ்சநாள்ல சரியாப் போயிடுமாம், இங்கியே தஞ்சாவூர்லக் கோபால் மருத்துவமனையிலதான் சேத்து இருக்கேன்”

கேட்டவுடன் குமார் புறப்பட்டு வந்தான். கும்பகோணத்திலிருந்து வர இரண்டு மணி நேரமாகிவிட்டது. வந்ததுமே மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் அண்ணி பொரிந்து தள்ளிவிட்டாள். “இதுக்குதான் நான் இங்கக் கூப்பிட்டுக்கிட்டே வர்றதில்ல. இப்ப பாருங்க; இங்க வந்தாதான் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுது. அடுத்த வாரம் என் பொண்ணு பிரசவத்துக்கு வரா. நான் என்ன செய்யறது? சொல்லுங்க” இனி நான் இங்கே வைத்துக் கொள்ள முடியாது என்பதை மறைமுகமாகச் சொல்வது குமாருக்குப் புரிந்து விட்டது. அண்ணாவும் கேட்டுக்கொண்டு சும்மாதான் இருந்தார்.

குமாரால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. “நான்தான வச்சுக்கிட்டு இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் முக்கியமான கல்யாணம்னு குடும்பத்தோடப் பாண்டிக்குப் போறோம்னுதான் இங்கப் போன வாரம் அனுப்பி வச்சோம். முந்தா நேத்திக்குதான் வந்தோம். இப்பப் பாருங்க நேத்திக்குக் காலைலயிலதான் உமா தோட்டத்துக்குப் போகும்போது கீழே உழுந்து தசை பிசகிப் போய்க் கட்டு போட்டுக்கிட்டு இருக்கா. இன்னும் முப்பது நாளாகும் கட்டுப் பிரிக்க; எங்களயும் புரிஞ்சிக்குங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அண்ணி “அதெல்லாம் எனக்குத் தெரியாது; ஒங்க அண்ணா வெளியில போயிடுவாரு நான்தான் லோல்படணும் புரிஞ்சிக்குங்க’ இங்க இனிமே நான் வச்சுக்க முடியாது” என்று கூறினாள். “என்னை ஆரம்பகாலத்துல எப்படியெல்லாம் படுத்தி வச்சாங்க”ன்னு அவள் நினைத்தாள்

அவர்கள் மொத்தம் மூன்று பேர். பெரியவர் கோபு; அடுத்தவன் கோயம்புத்தூரில் வக்கீலாக இருக்கும் நடராஜன். கடைசியில் குமார். நடராஜன் இப்பொழுது கோவையிலிருந்து வந்துகொண்டிருந்தான். நேற்று இரவு கோபுவும் அண்ணியும் வீட்டுக்குப் போய் விட அப்பாவும் குமாரும் மட்டும் மருத்துவமனையில் இருந்தனர். காலையில் அண்ணா வந்தவர் இப்பொழுது கடைக்குப் போயிருக்கிறார்.

கோபு வரும்போதே, ”நடராஜன் வந்துட்டானா” என்று கேட்டுக்கொண்டே வந்தார். “இல்லண்ணே; பஸ் ஸ்டாண்டுல எறங்கிட்டானாம். டவுன் பஸ்ல வந்துக்கிட்டிருக்கான்” என்றான் குமார். கோபு உள்ளே சென்று சிற்றுண்டிப் பொட்டங்களைக் கொடுத்து அம்மாவையும் அப்பாவையும் சாப்பிடச் சொல்லிவிட்டு வந்தார். உட்கார்ந்தவர், “என்னா செய்யறதுன்னே புரியல. எனக்கோ வருஷக் கடைசி; லீவே தரமாட்டேன்றான். ஒனக்குப் பள்ளிக்கூடம் இல்லாதது இப்ப நல்லதாப் போச்சு” “பள்ளிக்கூடம் இல்லாட்டாலும் நாங்க யாராவது ரெண்டு பேரு மாத்தி மாத்திப் போயிட்டுதான் வரணும்ணா” என்ற குமாருக்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.

நடராஜன் வந்ததுமே ”இப்ப எப்படி இருக்கா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான். இருவரும் எழுந்து உள்ளே சென்றார்கள். அப்பாவும் அம்மாவும் இட்லிகளைத் தின்றுகொண்டிருந்தனர். ”எப்படிம்மா இருக்க?” என்று கேட்டான் நடராஜன். “வலிதாண்டா இருக்கு; ஒக்காறவே முடியல. டாக்டரு படுத்துக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டாரு” என்று சொன்னவர் குமாரைப் பார்த்து, இதோ ரெண்டு பொட்டலம் இருக்கு; நீயும் இவனும் சாப்பிடுங்க” என்றார்.

”நான் சாப்பிட்டுட்டே வந்துட்டேன்; நீ சாப்பிடுடா” என்றான் நடராஜன். குமார் பொட்டலத்தைப் பிரித்தான். “அதுக்குள்ள நான் போயி டாக்டரைப் பாத்துட்டு வரேன்” எனக் கூறி நடராஜன் கிளம்பினான். ”நானும் வரேண்டா” என்ற கோபுவைத் தடுத்து, “வேணாம்ணா; நான் வக்கீலுன்னு சொல்லிப் பாக்கறேன்” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் சென்றான்.

நடராஜன் சற்றுத்தள்ளி வெளியே வந்தவன், அலைபேசியில் மனைவி விமலாவிடம் பேசினான். அவள் தெளிவாகச் சொல்லிவிட்டாள். “நான் சொல்றதைக் கேளுங்க; நம்ம நெலமையைப் புரிஞ்சுக்குங்க; படுக்கையிலியே வச்சு இங்க என்னால செய்ய முடியாது. நான் வேற சி.ஏக்குப் படிக்கறேன். அத்தோட அவங்க ரெண்டு பேரும் புள்ளயப் படிக்கவிடாம டி.வி பாத்துக்கிட்டே இருப்பாங்க, இன்னும் இருபது நாள்ல எங்கப்பாவுக்கு அறுபதாம் கலியாணம் நடக்க இருக்கிறது தெரியும்ல, நான் அடிக்கடி அங்கப் போக வேண்டி இருக்கும்; ஒங்கத் தலையிலக் கட்டிடப்போறாங்க; எதாவது சாக்கு சொல்லிட்டு வாங்க”

”அன்னிக்கு என் கல்யாணத்துல வெள்ளி வெளக்கு ரெண்டு இன்ச் கொறைவா இருக்குன்னு என்னா ஆட்டம் ஆடினாங்க; இவங்கள வச்சு நான் செய்யணுமா?” என்று விமலா சொல்லவில்லையே தவிர மனத்துள் நினைத்துக் கொண்டாள். தலைமை மருத்துவரையே போய்ப் பார்த்தான். “படுக்கையிலியே இருக்கணும்றது இல்ல; அதெல்லாம் நடக்கலாம் சார். ஆனா அவங்க கோஆப்பரேட் செய்ய மாட்டறாங்க; இன்னும் மூணு நாள்ள அனுப்பிடுவோம்; மத்தபடி நல்லாதான் இருக்காங்க” என்றார் அவர்.

நடராஜன் அறையில் நுழையும்போது அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தியது என்னவோ போல இருந்தது. ”என்னாடா சொன்னாரு” அப்பா கேட்டார். “டாக்டரு கொஞ்சம் நடக்கலாம்னு சொன்னார்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அம்மா “எனக்குதான் நடந்தா வலிக்குதே” என்று கோபமாகச் சொன்னாள். “அப்பறம் இன்னும் மூணு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம்னு சொன்னாரு” என்றான் நடராஜன். அம்மா ”எந்த வீட்டுக்கு” என்று கேலியாகக் கேட்டாள்.

உடனேயே நடராஜன், “கோயம்புத்தூருக்குப் போக முடியாது. என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்குங்க; விமலாவுக்கே இடுப்பு வலின்னு அடிக்கடி படுத்துக்கறா. அவ சி.ஏக்குப் படிக்கறா. எனக்குக் கோர்ட்ல வேல சரியா இருக்கு” என்றான். “வேற என்னாடா செய்யலாம்” என்றார் கோபு. அதற்குள் அப்பா, “மூணு பேரும் சொல்றக் காரணங்கள் நல்லாவே புரியுது. கடைசிலவன் பொண்டாட்டிக்குக் கால்ல கட்டு. நடுலவன் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி. பெரியவன் பொண்டாட்டி நேராவே முடியாதுன்னுட்டா” என்றார்.

“நாங்க என்னா சும்மாவா சொல்றோம்; கொஞ்சம் புரிஞ்சுக்குங்கப்பா” என்றான் குமார்.சற்று நேரம் யாரும் பேசவே இல்லை. மின்விசிறி சுழலும் சத்தம் மட்டும் கேட்டது. “நீங்கதாண்ணா முடிவெடுக்கணும்” என்றான் நடராஜன். கோபு சன்னல் வழியாய் வெளியே பார்த்தான். ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து யாரையோ தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். பூனை ஒன்று வேகமாய் ஓடியது. ”அதான் எனக்கும் புரியல” என்றார் கோபு.

பட்டென்று அம்மா சொன்னார். ”எனக்கு ஒண்ணு புரியுது. அப்படிச்செய்யலாம் ஆனா கொஞ்சம் காசு செலவாகும் பரவாயில்லியா”

”காசைப்பத்தி என்னம்மா? நீ சொல்லம்மா” என்றார் கோபு. “ஆமாம்மா, பணமா முக்கியம்; எதானாலும் நீ சொல்லும்மா” என்றான் நடராஜனும். அப்பா அம்மாவைப் பார்த்தார். இருவரும் கண்களால் பேசிக்கொள்வதைப் போல இருந்தது.

அம்மா சொன்னார். “இப்ப எல்லாருக்கும் இருக்கற நெலமை எனக்கு நல்லாவே புரியுது. ஒங்களுக்கும் புரியுது. இத்தனை வருஷம் ஆகியும் நான் புரிஞ்சுக்கலன்னா நான் மனுஷியே இல்ல. அதால நான் ஒண்ணு சொல்றேன். இங்கியே ஒரு வீடு பாருங்க; நானும் அப்பாவும் இருந்திடறோம். என்னைப் பாத்துக்க நர்ஸ் மாதிரி ஒரு ஆளப் போட்டுடுங்க; பக்கத்துல இருக்கற ஓட்டல்ல இருந்து நர்ஸுக்கும் சேத்து மூணு வேளைக்கும் காப்பி சாப்பாடு எல்லாம் சொல்லிடுங்க. செலவ மூணு பேரும் பிரிச்சுக்குங்க.”

மூன்று மகன்களின் முகங்களும் இறுக்கமாக இருந்தன.”நாம சொல்ல வேண்டியத அம்மாவே புரிஞ்சுக்கட்டு சொல்லிட்டாங்களே” என்ற திருப்தியும் இருந்தது.

படகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா 

தி. இரா. மீனா 

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உலகம் ஒரு துக்கமான மூட்டத்திற்குள் தன்னைத் திரையிட்டுக் கொண்டது. அமைதியான ஆற்றில் படகு மெதுவாக ஊர்ந்தது.

படகின் புறப்பகுதிகளுக்கு எதிராகத் தண்ணீர் சிறிய அலைகளை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் எந்த உயிர்ப்பும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. உயிரற்ற உலகம் ஓசையின்றி ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. அந்த ரீங்காரம் செவிக்குப் புலப்படாதது, ஆனால் அதை உடல் உணர்ந்து எதிர்முழக்கமாக மனதிற்குள் நிரப்பியது. வாழ்க்கை முடிவடைவது போன்ற உணர்வு, எல்லா நம்பிக்கைகளும் முற்றிலும் ஒழிந்த நிலை என்று மனம் நகர்ந்து கொண்டிருந்தது. தொலைவிலுள்ள மரங்கள் தெளிவற்ற , புதிரான வடிவங்களாக படகுடன் வந்து கொண்டிருந்தன. அருகிலுள்ள மரங்கள் பின்னால் நகர்வது பிசாசுகள் பரட்டைத் தலையுடனிருப்பது போலத் தெரிந்தது. படகு அசையவில்லை. சிற்றாங்கரை பின்னால் போய்க் கொண்டிருந்தது.

இருட்டில் என் கண்கள் அமைதியான ஆற்றின் ஆழத்தை ஊடுருவிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்கள் நீர்ப்படுக்கையில் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நிதானமான அலைகளில் கனவோடு ஊஞ்சலாடிக் கொண்டு, கண்கள் அகன்று திறந்திருக்க, தூங்கிக் கொண்டிருந்தன.

காற்றில் எந்த அசைவுமில்லை. படகோட்டிகள் கயிற்றால் படகைத் தளர்த்தியும் ,இறுக்கியும் படகை இழுக்க, வழிகாட்டி கம்பின் மணிகள் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்றாற் போல ஒலித்தன. படகின் ஒரு ஓரத்திலிருந்த உலையடுப்பில் நெருப்பின் செம்மை மாறி ,மாறிக் குறைந்தும் அதிகரித்தும் கொண்டிருந்தது. படகிற்குள் சிறு சிறு ஓட்டைகளில் கசிந்த தண்ணீரை ஒரு சிறுவன் சிறிய வாளியில் எடுத்து வெளியே கொட்டிக் கொண்டிருந்தான்.நெல், வெல்லம் , புளி இன்ன பிற பொருட்கள் சாக்குகளில் கட்டப்பட்டு படகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன

படகின் மேல் பகுதியில் ,வானத்தை வெறித்தவாறு நான் டுத்திருந்தேன். படகினுள்ளே, மெல்லிய புகையிலையின் மணம் வர, சத்தமற்ற குரல்கள் எல்லாத் திசைகளிலும் பரவின. எழுத்தர் உட்கார்ந்திருந்த அறையில், ஒரு சிறிய எண்ணெய் விளக்கு இருட்டில் மின்ன, படகு நகர்ந்து கொண்டிருந்தது.

“தயவுசெய்து இந்தக் கரைக்கு படகைக் கொண்டு வாருங்கள் —இங்கு” என்று தொலைவிலிருந்து ஒரு குரல் கேட்டது. படகு அந்தக் கரையை நெருங்கியதும், இரு உருவங்கள் படகிற்குள் குதித்தன. படகு அந்தப் பக்கம் ஓரளவு சாய்ந்தது .

“தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மேல் பகுதியிலேயே உட்கார்ந்து கொள்கிறோம்,”ஒரு பெண்குரல் சொன்னது.

“ரங்கி, இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தாய்? சமீப காலத்தில் நான் உன்னைப் பார்க்கவேயில்லையே,” சுக்கானில் உட்கார்ந்திருந்தவர் கேட்டார்.

“என்னவர் பல இடங்களுக்கு என்னை அழைத்துப் போனார் — விஜயநகரம், விசாகப்பட்டினம் என்று. நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பண்ணா மலை கூட ஏறினோம்.”

“இப்போது எங்கே போகிறீர்கள்?”

“மண்டபகா. நீங்கள் நலமா அண்ணா?அதே எழுத்தர்தான் இன்னமும் இங்கு வேலை செய்கிறாரா?”

“ஆமாம்.”

ஆணுருவம் ஒரு மூட்டையில் சாய, அவனுடைய சுருட்டு வாயிலிருந்து நழுவியது. அந்தப் பெண் அதை எடுத்துத் தந்தாள்.

“ஒழுங்காக உட்கார்,” அவள் சொன்னாள்.

“வாயை மூடு, நான் குடித்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா? என்னைத் தொந்தரவு செய்தால் அடி பிய்த்து விடுவேன்.”

அவன் இங்குமங்கும் உருண்டான்.அந்தப் பெண் அவனை ஒரு துணியால் மூட ,அவன் உருளும் போது அது நழுவியது. அவள் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டாள்.தீக்குச்சியின் ஒளியில், நான் ஒரு கணம் அவள் முகத்தைப் பார்த்தேன். கருமை முகம் சிவப்பாக மின்னியது. குரலில் ஒருவித மென்மை இருந்தது. அவள் பேசும் போது, தனது ஆழ்மன அந்தரங்கங்களை நம்மை நம்பி இயல்பாக சொல்வதைப் போல உணரமுடியும். அவள் அழகி இல்லை; அவள் தலைமுடி பரட்டையாகக் கிடந்தது, என்றாலும் அவளிடம் ஒருவித கௌரவம் தெரிந்தது. அவள் அணிந்திருந்த
கறுப்புச் சோளி எதுவும் அணியாத ஒரு பாவனையைத் தந்தது. மின்னும் அவள் கண்கள் உயிர்ப்பு பொங்கிய ஒரு தன்மையை அந்த இருளிலும் வெளிப்படுத்தின. தீப்பெட்டியை பற்ற வைத்த போது, அருகில் நான் படுத்திருப்பதை அவள் கவனித்தாள்.

“யாரோ இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், ”சொல்லிவிட்டு அந்த மனிதனை எழுப்ப முயற்சித்தாள்.

“பேசாமல் படு,மீண்டும் என்னைத் தொந்தரவு செய்தால் அடித்து நொறுக்கி விடுவேன்.”

முயற்சி செய்து அவன் லேசாக அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.

“அவன் யார் ரங்கி ?” கையில் எண்ணெய் விளக்குடன் நின்ற எழுத்தர் கேட்டார்.

“அவன் என்னுடையவன், பட்டாலு… தயவுசெய்து இந்தப் பயணத்திற்காக எங்களிடம் காசு வாங்காதீர்கள் சார்.”

“அவன்தான் பட்டாலுவா ?அவனை வெளியே தள்ளு.அவன் திருடன். உனக்கு அறிவில்லையா?அவன் முட்ட முட்டக் குடித்திருக்கிறான். நீ அவனை படகில் அழைத்து வந்திருக்கிறாய்!”

“நான் குடித்தேன் என்று யார் சொன்னது?” பட்டாலு புகாராகக் கேட்டான்.

“அவனைப் படகிலிருந்து இறக்கி விடுங்கள். அவனை ஏன் ஏற அனுமதித்தீர்கள்? அவன் குடித்திருக்கிறான்,” எழுத்தர் பணியாளர்களைக் கோபித்துக் கொண்டார்.

“நான் அவ்வளவு குடிக்கவில்லை. எனது தாகத்தைப் போக்கிக் கொள்ள கொஞ்சம்தான் குடித்தேன்.” பட்டாலு எதிர்த்தான்.

“பேசாமலிருக்க மாட்டாயா?” என்று அவனைக் கடிந்து கொண்டு, “கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் சார். இரக்கம் காட்டுங்கள்.மண்டகாவில் நாங்கள் இறங்கி விடுவோம்.”அவள் கெஞ்சினாள்.

“நான் குடிக்கவில்லை சார். மண்டபகா போக அனுமதியுங்கள்.” அந்த மனிதனும் கெஞ்சலில் கலந்து கொண்டான்.

“ஏதாவது உன் கைவரிசையைக் காட்ட முயன்றால் ஆற்றில் தூக்கியெறிந்து விடுவேன், ஜாக்கிரதை.” அவர் எச்சரித்துவிட்டு தன் அறைக்குப் போனார். பட்டாலு எழுந்து உட்கார்ந்தான்.உண்மையில் அவன் குடித்திருக்கவில்லை.

“என்னை ஆற்றில் தூக்கிப் போட்டு விடுவானாம். முட்டாள்,” மெதுவான குரலில் சொன்னான்.

“பேசாமலிரு. நீ சொன்னதை அவன் கேட்டுவிட்டால் நம் கதை அவ்வளவுதான்.”

“காலையில் அவன் படகைச் சுற்றிப் பார்க்கட்டும்..காற்றில் பறந்து விடுவான்.”

“ஸ்ஸ்..இங்கே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.”

பட்டாலு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.கனமான மீசை. முகம் ஓவல் வடிவம். அவன் முதுகு வில் போல வளைந்திருந்தது. தசைகளோடு ஒல்லியாக இருந்தான்.

திரும்பவும் படகு மெதுவாகப் போனது.சாப்பிட்டு முடித்தவுடன் படகுப் பணியாளர்கள் தங்களுக்குள்ளே பேசியபடி பாத்திரங்களைக் கழுவினர்.

குளிராக இல்லாதபோதும் நான் போர்த்திக் கொண்டேன்.இருட்டில் என் உடல் வெளியே தெரிவது எனக்குச் சிறிது பயமாக இருந்தது. காற்று குத்துவது போலிருந்தது. பெண்ணின் தீண்டல் போல தண்ணீரில் படகு மென்மையாகப் போனது. இரவு மென்மையால் உறையிடப்பட்டிருந்தது…காணாத பெண்ணின் தழுவல் போல.

எனக்கு மிக அருகில் இருட்டில் இரண்டு சுருட்டுகளின் சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. வாழ்க்கை அங்கே கனமாக உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டு, தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தெரிந்தது.

“அடுத்து வரப்போகும் கிராமம் எது?”

“கல்தாரி.”

“நாம் நீண்ட தூரம் போகவேண்டும்.”

“இன்று எதுவும் செய்யாதே. நீ கவனமாக இருக்கவேண்டும். பாதுகாப்பாக இருக்கும் இன்னொரு நாளில் முயற்சி செய்வோம். நான் சொல்வதைக் கேட்பாயல்லவா?” ரங்கி கெஞ்சினாள்.

“நீ மிகவும் பயப்படுகிறாய்,” பட்டாலு சொல்லிவிட்டு அவளை லேசாகக் கிள்ளினான்.

“ஓ!” என்று சொல்லிவிட்டு அந்த உணர்வு தனக்கு எப்போதும் நிரந்தரமாக வேண்டு்மென்பது போல வானத்தைப் பார்த்தாள்.

நான் கண்ணயர்ந்தேன் .படகு மெதுவாக கீழிறங்கி நகர்ந்து அதுவும் தூங்குவது போலிருந்தது. எனக்கு அருகிலுள்ள இரண்டு உருவங்கள் ரகசியமாக தங்களுக்குள்ளே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தன. நான் தூங்கினாலும் ,என்னில் ஒரு பகுதி விழித்திருந்தது. படகு நகர , தண்ணீர் அதன் பக்கங்களைத் தொட்டுக் கொண்டிருக்க, கரையிலுள்ள மரங்கள் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகிற்குள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். ரங்கி என் பக்கத்திலிருந்து நகர்ந்து சுக்கானைச் செலுத்திக் கொண்டிருந்த மனிதனின் அருகே போனாள்.

“ எப்படியிருக்கிறீர்கள் அண்ணா?”

“ நீ எப்படியிருக்கிறாய்?” என்று அந்த மனிதர் கேட்டார்.

“ ஓ! நானும் என்னவரும் என்ன அதிசயமெல்லாம் பார்த்தோம்! நாங்கள் சினிமாவிற்குப் போனோம். ஒரு கப்பலைப் பார்த்தோம்.அது என்ன அருமையான கப்பல்! அண்ணா, அது நம் கிராமம் போல மிகப் பெரியதாக இருந்தது. அதன் சுக்கான் எங்கிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை” அவள் நூறு விஷயங்களைச் சொன்னாள். தூக்கத்தில் அவள் குரல் என்னை வருடுவதாக இருந்தது.

“பெண்ணே! எனக்குத் தூக்கம் வருகிறது,” சுக்கானிலிருந்தவர் சொன்னார்.

“நீங்கள் போய்த் தூங்குங்கள், நான் பிடித்துக் கொள்கிறேன்.” ரங்கி சொன்னாள்.

படகு அமைதியாக –- நிதானமாகப் போய்க் கொண்டிருந்தது. அமைதியைப் பாதிக்காமல் மிக மெலிதான ரங்கி பாடினாள்.

“எங்கே அவன் என் மனிதன்
தட்டில் சாப்பாடு போட்டு அவனுக்காகக் காத்திருக்கிறேன்.
ஒரு நிழல் போல இரவு ஆழமாக, கண்கள் துயிலின்றித் தவிக்கிறது
குளிர் தேளாகக் கொட்ட நரம்புகள் வலிக்கக் காத்திருக்கிறேன்.”

அவள் குரலில் இசையிருந்தது. எல்லா உயிர்களும் தங்கள் தூக்கத்தில் அந்தப் பாடலைக் கேட்டது போலிருந்தது. பழங்கதைகளில் உள்ள காதலை எதிரொலிப்பதாக சோகமாகவும், புதிரானதாகவுமிருந்தது. அது தண்ணீர் விரிப்புப் போலவும் ,உலகம் அதன் மீது ஒரு சிறிய படகாக மிதப்பது போலவுமிருந்தது. மனித வாழ்க்கை,அதன் காதலோடும், ஏக்கத்தோடும், தவிர்க்க முடியாததாகவும், வினோதமானதாகவும் தெரிந்தது.

எனக்குச் சிறிது தொலைவில் பட்டாலு தலையைத் துணியால் மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு வளைகுடா அவனை ரங்கியிடமிருந்து பிரித்தது போலிருந்தது. சிறிது நேரத்தில் பட்டாலு படகின் உள்ளே போய்விட்டான். நான் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.மீண்டும் ரங்கி “ குடிசைக்குப் பின்னாலிருக்கிற பெண்ணை ரகசியமாகப் பார்க்கப் போனாயா?” என்று பாடத் தொடங்க அதில் மயங்கித் தூங்கிவிட்டேன். ஓர் ஆணும்,பெண்ணும் ஆட என் கனவுலகம் விரிந்தது. பட்டாலுவும்,ரங்கியும் பல வடிவங்களில் ஆடினார்கள். பின் அந்தப் பாடல் என் நினைவிலிருந்து தப்பியது, மெதுவாக என் மனம் கனவுகளின் கதவைக் கூட மூடிவிட்டது.

படகில் ஏதோ சத்தம் கேட்க எழுந்து உட்கார்ந்தேன். கரையில் ஒரு மரத்தில் படகு கட்டப்பட்டிருந்தது. கையில் லாந்தர்களுடன் படகின் பணியாளர்கள் கரைக்கும், படகுக்குமாக வேகமாக நடந்து கொண்டிருந்தனர். கரையில் இரண்டு மனிதர்கள் ரங்கியின் இருபுறமும் அவள் கையைப் பிடித்தபடி நின்றிருந்தனர். அதிலொருவர் எழுத்தர். அவர் தன் கையில் மடித்த கயிற்றின் ஒரு பகுதியை வைத்திருந்தார். ரங்கியை விளாசப் போவது போல தெரிந்தது. நான் கரையில் குதித்து என்ன நடந்ததென விசாரித்தேன்.

அவர் முகம் கோபத்தால் சிவந்தது.”நம்முடைய சில பொருட்களைத் ிருடிக் கொண்டு அந்தக் கயவன் ஓடிவிட்டான்.நாம் எல்லோரும் தூங்கியபிறகு இவள் படகைக் கரைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவள்தான் சுக்கானைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.” அவர் குரலில் பதட்டம் வெளிப்பட்டது.

“எதைத் திருடியிருக்கிறார்கள்? ” கேட்டேன்.

“இரண்டு கூடை வெல்லம், மூன்று மூட்டை புளி,.அதனால்தான் நான் அவர்களை படகில் ஏற்றக் கூடாதென்று சொன்னேன். இந்த இழப்பை நான்தான் ஈடுகட்ட வேண்டும். எங்கே அந்தப் பொருட்களை இறக்கினீர்கள்?” ரங்கியிடம் கேட்டார்.

“கல்தாரியில்.”

“பொய் சொல்லாதே. நாங்கள் அனைவரும் கல்தாரியில் விழித்து கொண்டுதானி்ருந்தோம்.”

“அப்படியானால் நிதாதவோலுவாக இருக்கவேண்டும்.”

“இல்லை. அவள் நம்மிடம் சொல்ல மாட்டாள். அட்டிலியில் அவளை போலீசிடம் ஒப்படைத்து விடுவோம். எல்லோரும் படகில் ஏறுங்கள்.”

“தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் சார்.”

“படகில் ஏறு,” அவளைப் பிடித்து தள்ளினார். இரண்டுபேர் அவளை இழுத்துப் போனார்கள்.

“தூங்குமூஞ்சிகள் ! பொறுப்பற்ற முட்டாள்கள் ! உங்களுக்கு பொறுப்பில்லையா? ஏன் சுக்கானை அவள் கையில் கொடுத்தீர்கள்?” அவர் கத்திக்கொண்டே தன் அறைக்குப் போனார்.

ரங்கி தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு அருகில் ஒரு படகுத் தொழிலாளி உட்கார்ந்தார். படகு புறப்பட்டது. நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

“சார், எனக்கும் ஒன்று கொடுங்கள்,” ரகசியமாகக் கேட்டாள். நான் நெருப்புப் பெட்டியும், சிகரெட்டும் தர, அவள் பற்ற வைத்துக் கொண்டாள்.

“அண்ணா, என்னைப் போலீசில் ஒப்படைப்பதால் உங்களுக்கு என்ன ஆதாயம்?”

“எழுத்தர் உன்னை விடமாட்டார்,”படகுத் தொழிலாளி சொன்னார்.

“பட்டாலு உன் கணவனா?” நான் கேட்டேன்.

“அவன் என்னுடையவன்! ”பதிலளித்தாள்.

“இவள் சிறுமியாக இருக்கும்போதே அவன் மயக்கிவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வேறு ஒரு பெண் இருக்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் ரங்கி?” தொழிலாளி கேட்டார்.

“கொவ்வூரில். அவளுக்குச் சின்ன வயது. என்னைப் போல கஷ்டபட்டால், அவள் என்னைவிட மோசமாக இருப்பாள்.”

“பின் ஏன் நீ அவனுடன் இருக்கவேண்டும்?” கேட்டேன்.

“அவன் என்னுடையவன்,” எல்லாவற்றையும் விளக்கிவிட்டதைப் போல பதில் சொன்னாள்.

“ஆனால் அவனுக்கு இன்னொருத்தி இருக்கிறாளே.”

“நான் இல்லாமல் அவனால் என்ன செய்யமுடியும். ஒருவனுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவன் ராஜா. யாரும் அவனைப் போல இருக்க முடியாது .நான் சொல்கிறேன்.”

“சார், இவன் எப்படிப்பட்டவன் என்று உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. இவள் அவனோடு போனபோது இளமையும், துடிப்புமாக இருந்தாள். ஒரு நாளிரவு குடிசைக்குள் இவளைப் பூட்டி வைத்துவிட்டு குடிசைக்குத் தீ வைத்து விட்டான். இவள் எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்துவிட்டாள். அதிர்ஷ்டம்தான் இவளைக் காப்பாற்றியது.”

“அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமென்று நினைத்தேன். எரிந்து கொண்டிருந்த குடிசையின் உச்சியிலிருந்து ஒரு மூங்கில் கம்பு என் முதுகில் விழுந்தது,” அவள் ரவிக்கையை சிறிது உயர்த்திக் காட்டினாள், இருட்டிலும் முதுகில் ஒரு வெள்ளைத் தழும்பை என்னால் பார்க்க முடிந்தது.

“இவ்வளவு ஆனபிறகும் ஏன் அவனுடனிருக்கிறாய்? ”

“என்னால் அவனை விடமுடியாது சார். அவன் என்னுடனிருக்கும் போது அவனுடன் ஒட்டிக் கொண்டேயிருப்பேன். மிக நன்றாகப் பேசுவான், அதனால் எனக்கு அவன் மேல் இரக்கம் அதிகமுண்டு. இன்று மாலை நாங்கள் கொவ்வூரிலிருந்து கிளம்பினோம்.இந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமென்று வரும் வழியில் கெஞ்சினான். தன்னிடம் எதுவுமே இல்லையென்றான். நிடாவுடு கால்வாய் வழியாக வயல்களைக் கடந்து குறுக்கு வழியில் வந்தோம்…”

“எங்கே அந்தச் சாமான்களை அவன் இறக்கினான்? ”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“ஓ..திருடி..இவள் உண்மையைச் சொல்ல மாட்டாள்,”தொழிலாளி சிரித்தபடி சொன்னான்.

அவள் முகத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்ற ஒரு திடீர் வேகம் எனக்குள் எழுந்தது. ஆனால் அந்த இருட்டில், அவள் விவரிக்க முடியாதவளாகத் தெரிந்தாள்.

தவழ்வது போல படகு மிக மெதுவாகச் சென்றது.நடு இரவு கடந்து விட்டதால் காற்று ஊசியாய் மாறியது. மரங்களில் இலைகளின் மெல்லிய ஒசை. நான் அன்றிரவு தூங்கவில்லை. ரங்கியின் பாதுகாவலன் தனது தூக்கத்தோடு சண்டை போட்டு ,பின் பலனின்றித் தூங்கிப் போனான். ஆனால் ரங்கி சிகரெட்டைப் புகைத்தபடி தன் நிலையிலிருந்து மாறாதவளாக இருந்தாள்..

“நீ கல்யாணமே செய்து கொள்ளவில்லையா?” கேட்டேன்.

“இல்லை. பட்டாலு என்னைக் கூட்டிக் கொண்டு போனபோது நான் மிகச் சிறியவள்.”

“உன் சொந்த ஊர்?”

“இந்திரபாலம்…அப்போது அவன் குடிகாரனென்று எனக்குத் தெரியாது…இப்போது அவனிடமிருந்து கற்றுக் கொண்டு விட்டேன். ஒருவர் குடிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் சிலசமயங்களில்குடிக்கும் போது அவன் காட்டுமிராண்டி ஆகிவிடுவான்.”

“நீ அவனிடமிருந்து விலகி உன் பெற்றோரிடம் போயிருக்கலாம்.”

“அவன் காட்டுமிராண்டியாகும் போது அப்படித்தான் நினைப்பேன். ஆனால் அவனைப் போல யாருமிருக்க முடியாது.உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது. குடிக்காத போது அவன் சாதுவான ஆட்டுக்குட்டி போல இருப்பான். எத்தனை பேரிருந்தாலும் என்னிடம் தான் வருவான். நானில்லாமல் அவனால் என்ன செய்யமுடியும்?” அவளுடைய மனப்பான்மை எனக்கு விசித்திரமாகத் தெரிந்தது, எந்த புனிதம் அவர்களிருவரையும் சேர்த்து வைத்திருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ரங்கி தொடர்ந்தாள்.

“எந்த வேலையும் எங்களிருவருக்கும் ஒத்து வரவில்லை. அதனால் திருட்டைச் செய்ய வேண்டியிருந்தது.என் அம்மா உயிரோடிருந்த போது, என்னையே முட்டாளாக்கிக் கொள்ளும் நிலைக்காக என்னைத் திட்டுவாள்.ஒரு நாள் அந்தப் பெண்ணையே குடிசைக்கு அழைத்து வந்துவிட்டான்.”

“எந்தப் பெண்ணை?”

“இப்போது அவனுடனிருப்பவள். என் படுக்கையிலே அவளைப் படுக்க வைத்து ,தானும் படுத்துக் கொண்டான்.என் கண் முன்னாலேயே !இருவரும் குடித்திருந்தனர்.நான் அவள் மேல் விழுந்து பிராண்டினேன்.அவன் குறுக்கே புகுந்து என்னை அடித்துக் காயப்படுத்தினான்.நள்ளிரவில் அவளை அழைத்துக் கொண்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் வந்தான். அவனை வீட்டுக்குள் விடாமல் திட்டித் தீர்த்தேன். கதவருகே விழுந்து குழந்தையைப் போல அழுதான்.எனக்கு மனமிளகி விட்டது. அருகில் உட்கார்ந்தேன்.என்னைக் கட்டிக் கொண்டு நெக்லஸைத் தரும்படி கேட்டான்.“எதற்கென்றேன்? அவளுக்காக” என்றான். அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழமுடியாதென்றழுதான். என் கோபத்திற்கு அளவில்லாமல் போனது. அவனை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன். தட்டிப் பார்த்துவிட்டுப், போய்விட்டான்.தூங்க முடியாமல் வெகுநேரம் தவித்தேன். ஒரு வழியாக நான் தூங்கிய பிறகு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் குடிசையை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து விட்டான். கதவைத் திறக்க முயற்சித்தேன். இரவு நேரமென்பதால் என் கூச்சல் அக்கம்பக்கத்தவர்களுக்குக் கேட்கவில்லை. மயக்கமானேன். அந்த நிலையில் அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். மறுநாள் போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் இதைச் செய்திருக்க மாட்டானென்று நான் உறுதியாகச் சொன்னேன். அன்று மாலை வந்து மணிக்கணக்கில் அழுதான். சில சமயங்களில், குடித்திருக்கும்போது அப்படித்தான் அழுவான். ஆனால் குடிக்காத போது அவன் மிக வேடிக்கையானவன். நான் நெக்லஸை அவனிடம் கொடுத்து விட்டேன்.”

“நீ ஏன் இன்னமும் குற்றங்கள் செய்ய அவனுக்கு உதவி செய்கிறாய்?”

“அதில்தான் அவன் முழு வாழ்க்கையும் அடங்கியிருக்கிறதென்று என்னிடம் வந்து அழும்போது என்னால் என்ன செய்ய முடியும்?”

“உண்மையாக எல்லா இடங்களுக்கும்–விஜயநகரம்,விசாகப்பட்டினம் அழைத்துப் போயிருக்கிறானா?”

“இல்லை. படகுக்காரர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகச் சொன்னேன். இதே படகில் முன்பு இரண்டு முறை திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது.”

“போலீஸ் உன்னைக் கைது செய்தால் என்ன செய்வாய்? ”

“நான் என்ன செய்தேன்? அவர்களால் என்ன செய்ய முடியும்? என்னிடம் எந்தத் திருட்டுச் சாமான்களுமில்லை. திருட்டிற்கு யார் பொறுப்பு என்று யாருக்குத் தெரியும்? அவர்கள் என்னை அடிக்கலாம். ஆனால் கடைசியில் என்னை விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.”

“ஒருவேளை பட்டாலு சாமான்களுடன் பிடிபட்டு விட்டால்? ”

“இல்லை. இதற்குள் அவன் எல்லாவற்றையும் விற்றிருப்பான். அவன் தப்பித்துப் போய், எல்லாவற்றையும் சரிசெய்யும் வரையிலான நேரம் வரை நான் படகில் இருந்திருக்கிறேன்..” அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “இவையெல்லாம் அவளுக்குத்தான் போகும். அவள் இளமை தொலையும் வரை அவன் விடமாட்டான். அவளுக்காகத் தான் இப்படி நான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.”

அவள் குரலில் உணர்ச்சியோ, நிந்தனையின் சாயலோ இல்லை அவனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அது தியாகமோ, பக்தியோ ஏன் காதலோ கூட இல்லை. அது ஒரு பெண்ணின் மனம் — அன்பும் ,பொறாமையும் சேரக் கலந்த பெண்மனம். அவள் ,தன் மனதைக் கவர்ந்தவனுக்காக ஏங்கும் ஒரு நிலைதான் அது. அந்த மனதின் ஒவ்வொரு நரம்பும் அந்த மனிதனுக்காக ஏங்கின. ஆனால் அவளுக்கு நெறிமுறையிலோ அல்லது தார்மீகமாகவோ அவனிடம் எந்த வேண்டுகோளுமில்லை. அவளுக்கு உண்மையானவனாக அவன் இல்லாவிட்டாலும், கொடுரமானவனாக இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுடைய எண்ணக் கோளாறுகள், அற்பத்தனங்கள், காட்டுமிராண்டித்தன இயல்பு , அடங்காத மனநிலை என்று எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். அந்த வாழ்க்கையிலிருந்து அவளுக்கு என்ன கிடைத்தது? அவளுக்கான இழப்பீடு என்ன ?அந்த மாதிரியான வாழ்க்கை சுமையாகவும், துன்பமாகவும் இருக்காதா? ஆனால், பின்பு , மகிழ்ச்சி என்றாலென்ன? துன்பவுணர்வு குறைவாக இருக்கும் நிலை என்பதுதானே ? இந்தப் பார்வையில் மதிப்பிட்டு நான் மகிழ்கிறேனா ?

காற்று மெதுவாக பெரிதானது.படகு வேகமாகப் போனது.உலகம் மெதுவாக விழித்துக் கொள்வதற்கான உற்சாகமான அறிகுறிகள். விவசாயிகள் இங்குமங்குமாக வயல்களுக்குப் போய்க் கொண்டிருந்தனர். இன்னமும் விடிவெள்ளி முளைக்கவில்லை. ரங்கி தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து மறையும் இரவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவன் என்னுடையவன். எங்கு போனாலும் அவன் வர வேண்டிய இடம் என்னுடையதுதான்,” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். சுருங்கச் சொன்னால் இந்த வார்த்தைகள்தான் மாற்ற முடியாத ஒரு நம்பிக்கை, ஒரு பலம், ஒரு விசுவாசம் ஆகியவற்றைத் தந்து வாழ்க்கையோடு அவளை இணைத்திருந்தது. அவள் முழு வாழ்க்கையும் இந்த ஒரு புள்ளியைச் சுற்றித்தான். இரக்கம், பயம் எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அந்தப் பெண்ணின் மேல் மரியாதை இருந்தது. மனித மனதின் செயல்பாடுகள் எவ்வளவு குழப்பம் ,விகாரம், அச்சம்,ஏன் பித்துப் பிடித்தலைக் கூட உள்ளடக்கியது என்று வியந்தேன் ! விடியும்வரை நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.படகை விட்டு இறங்குவதற்கு முன்னால், யாரும் கவனிக்காதபடி அவள் கையில் பணத்தை வைத்தேன். அவளுடைய எதிர்வினைக்குக் காத்திருக்காமல் புறப்பட்டுவிட்டேன். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை.
————————–
நன்றி : Contemporary Indian Short Storirs Series 1 Sahitya Akademi

 

 

மறுமுகம்

வைரவன் லெ ரா

வாட்சப் டிபியில் வழக்கத்திற்கு மாறான அழகில் ஜொலித்தாள். இரண்டாம் ஆண்டு முதல் நாள் வகுப்பில் நுழையும் போது, அவள் தலைமுடியை ஒதுக்கியப் படியே சில நொடிகள் பார்வையை என் பக்கமாய் குவித்ததும், கால்கள் தடுமாறி போனது, நெஞ்சு விடைத்தது இன்று நடந்தது போலவிருக்கிறது. கேப்பிடீரியாவில் வெகு நேரம் இருந்தது போல உணர்வு, வாங்கிய காபி ஆறிப் போய் இருந்தது. விரல்கள் மாறி மாறி அலைபேசியின் ஒளிப்பானை மாற்றி ஏதாவது மாறப் போகிறதா என்ன? முதுகில் யாரோ மென்மையாய் தட்ட திரும்பினேன். “ஹலோ ஒன் ஹௌரா என்ன பண்ற. ரிலீஸ் வாக் த்ரோ இருக்கு மறந்துட்டியா. ஸ்க்ரம் மாஸ்டர் நீதான் பா. வா போலாம்” கைகளை இழுத்து கூட்டிச் சென்றாள். இவளை பார்க்கும் போதெல்லாம் வாட்சப்பில் மட்டுமே பார்ப்பவள் தூரமாய் போய் விடுகிறாள்.

விரித்த தலைமுடியில் ஹேர் கண்டிஷனரின் வாசனை அவள் அழைக்காமலே பின்னால் நகர வைத்தது. சட்டென்று நின்று விட அவள் எத்தனிக்கும் போதெல்லாம், என் நடையின் வேகம் அனிச்சை செயலில் தானாகக் குறைந்தது. சுருட்டை முடி என்ன அழகு. கல்லூரிப் பேருந்தில் ஒலிக்கும் பாடலில் சில முன்னவளுக்கென இடையிடையே இணைத்திருப்பேன். பின் இருக்கையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தால், அவள் முடியை காற்றில் அலைய விட்டு உறக்கத்தில் இருப்பாள். அவளோடு இணைந்து கேட்க விருப்பப்பட்ட பாடல் என்னுள் மட்டுமே கரைந்து அமிழ்ந்து கொண்டிருக்கும். இருந்தாலும் உறங்கி விழித்தப்படி அவளுடைய நிறுத்தத்தில் இறங்கும் போது பார்வையை வீசாமல் தவறவிட்டது இல்லை, சற்றே வீங்கிய விழிகளும், சிறிதாய் விரியும் புன்னகைக்கும் என்னை காத்திருக்க விட்டதில்லை.

“என்ன மறுபடியும் பீலிங்கா, போப்பா. அவளுக்கு கல்யாணமே ஆயிடுச்சு. இன்னும் வாட்சப் டிபி பாத்துட்டு சுத்துற. லேப்டாப் எடுத்துட்டு ப்ளூ பெரிக்கு போலாம். மீட்டிங் ரூம் ஸ்செடுல் அங்கதான் பண்ணிருக்கு. இன்னும் எத்தன நாள் டிபிய வெறிச்சுட்டு இருப்ப. ஷி இஸ் நாட் யூர்ஸ்”. கூறிவிட்டு என்னையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். ஒரு சாதாரண டெவெலப்பர், பின் சீனியர் ஆகி, இப்போது டெக் லீட். நான் விரும்பிய பணியும் அல்ல, அதற்காக இதனை வெறுப்பதுமில்லை,நிகழ்ந்தது. இதுவே தொடரும் என்பதையும் அறிவேன். எதையும் முயற்சிக்காத குணம், இங்கே இருத்தத்தில் எவ்வித கேடுகளும் இல்லை. பிறகென்ன கால்கள் இங்கேயே அழுத்தமாய் பதிந்துவிட்ட உணர்வு. ஒருவித சுய ஆசுவாசம். நீடித்த வேலையின் ஆண்டிறுதிகளில் பணி ரீதியான மதிப்பீட்டு நேரங்களில் என் கேள்விகளை நான் அவிழ்த்துவிட்டதுமில்லை. உண்மையாக கல்லூரியில் கட்டிய பணத்திற்கு, அவர்கள் பெரும்தொகையை முதலீடாக எங்களின் வேலைக்கென செய்தார்கள், இப்பெரும் முதலீடு அப்பா அளித்தத்தில் நூற்றில் ஒரு சதவிகிதம் எனலாம், பணம் மாத்திரமா? எவ்வளவு நேரம் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு இயந்திரத்தைப் போல எனக்கு ஒப்பிக்கப்பட்டவை சரியான நேரத்தில் வெளிவர பணி நியமனம் கிடைத்தது. பின் புகைப்படத்துடன் நாளிதழ்களில் அரைப்பக்க விளம்பரம். நானே முதலீட்டில் ஒரு பங்குதாரராய் உணர்ந்த தருணம்.

மீட்டிங் வழக்கம் போல, இரைச்சலுடன் சுயசிந்தனையில், இயல்பாக ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பும் முகாந்திரத்துடன் நடந்தது. என் இடத்திற்கு மட்டுமே போட்டியில்லை, பதினான்கு மணி நேரம் உழைக்க யார்தான் தயார். “நெஸ்ட் வீக் ரிலீஸ், சப்போர்ட் டீம், டெஸ்டிங் டீம், ரிலீஸ் டீம் எல்லாருக்கும் மெயில் அனுப்பியாச்சு, சைன் ஆப் ரெடி. இதுவர ஸ்மூத்தா போகுது, லெட்ஸ் சீ. சோ ஹாப்பி வீக்எண்ட்” எனக்கும் சேர்த்து அவளே பேசினாள். அனைவரும் அறையை காலி செய்ததை அவள் என்னை அழைத்த தருணம் தான் உணர்ந்தேன். எழுந்து நிற்கவும் “உக்காருப்பா, என்ன அவசரம். நாளைக்கு என்ன பிளான்”. இதற்கு முன்னும் இதே கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன், பதிலை எதிர்பார்க்காமல் அவளின் திட்டங்களை கூறுவாள், கடைசிவரை என்னுடைய பதில் எனக்குள்ளே கொலை செய்யப்படும். அவள் பேசட்டும் என அமைதியாய் இருந்தேன். “சரி, நாளைக்கு ஈசிஆர் போலாமா? ஒரு லாங் டிரைவ், ஈவினிங் சின்ன பார்ட்டி. எப்படி உனக்கு ஓகே வா”, நாளை எனக்கான திட்டங்கள் வழக்கம் போல எதுவுமில்லை. வாரஇறுதியை மிச்சம் இருக்கும் வேலையிலும், மீதி நேரம் வெறுமையாய் போர்ன்னில் கழிப்பது மாத்திரமே பொழுதுபோக்கு. “ரொம்ப யோசிக்கிற, என்ன போலாமா. வேணாமா. கொஞ்சம் பிரீயா இருக்கலாம். உனக்கே தெரியும், ஒரு மாசமா ரொம்ப இறுக்கமான மனநிலைல இருந்துட்டோம். நீயும் கொஞ்சம் இலகுவா ஆக வேண்டாமா. என்ன நம்மள பத்தி டீம்ல ரொம்ப பேசுறாங்கன்னு யோசிக்கிறியா. அது இருக்கட்டும். பரவாயில்ல”. சரி என்பது போல தலையசைத்தேன். “காலைல பத்து மணிக்கு உங்க பிஜில பிக்கப் பண்ணிக்கிறேன்”. இருவருக்கும் இடையே மெல்லிய இடைவெளி இருக்கிறது. இவளை நான் அல்லவா நேர்காணல் செய்தேன், எவ்வளவு நேர்த்தியான பதில்கள், எளிதாய் எதிர்கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் தள்ள, என் டீமில் இப்படிப்பட்ட ஆள் வேண்டுமென அடம்பிடித்தேன். அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட அதிகமாகவே அவளுக்கு ஆண்டு சம்பளம் கொடுக்கப்பட்டது. அவளின் காரிலே இதோ என்னை விடுதிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆக, சுற்றி இருப்பவர்கள் வெளிப்படையாகவே குசுக்குசுக்க வாய்ப்புகள் வசதியாகவே எங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சராசரி உயரம், ஒல்லியான உடல்வாக்கு, சவரம் செய்யாத முகம் கண்ணாடியில் ஒருமுறை முடியை ஒதுக்கி என்னை அவளுடன் ஒப்பீடு செய்தேன். அப்படியொன்றும் என்னைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. கச்சிதமான உடையில், எப்போதும் மலர்ச்சியான முகத்துடனும், விரித்து விட்ட முடியுமாய் இருக்கும் இடமெல்லாம் ஒருவித சௌகர்யம் அவளால் உருவாக்கப்படும். பணி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அவளின் தலையீடு இருப்பதில்லை, என்னுடைய திட்டமிடல்களில் அபரீதமான ஈடுபாட்டை அளிப்பாள். அவளின் ஊர், பெற்றோர், சொந்தங்கள் எனப் பேச்சு சென்றாலும் குறைவான நேரத்தில் அதையும் இழுக்காமல் நிறுத்திவிடுவாள். மாறாக நானோ, பலவற்றை எதற்கெனவென்றே அறியாமலே சொல்லிவிடுவேன். அவளிடம் பேச ஏதாவது உபயோகப் படுமென்றால் அதனை மறைக்க உத்தேசிப்பதில்லை.

சரியான நேரத்தில் அவள் வர, இருவரும் கிளம்பினோம். சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனங்கள் சாலையில் அதிகமாய் தென்பட்டன. “நீ பைக் ஓட்டுனா நாமளும் போயிருக்கலாம். எனக்கும் பிடிக்கும், நீதான் ஓட்டமாட்டியே” போலியான முகப்பாவனையோடு சொன்னாள். ஏற்கனவே அதன் காரணம் அறிந்தவள், நண்பனை சாலை விபத்தில் இழந்து, இறுதிசடங்கில் அவரின் பெற்றோர் கதறியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் காரணமாய் கால்கள் பைக்கில் ஏறினாலே நடுங்கும், இதுவும் ஒருவித போபியா. பாடல்களை ஒலிக்க விட்டாள். இளையராஜாவும், ரஹ்மானும் இசைத்த பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒலித்தன. அவளும் முணுமுணுத்தாவாறே பாடினாள், குறையில்லா குரல்தான், ‘எங்க போன ராசா’ மரியான் பாடல் ஒலிக்க, “உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா” என்றேன். எனக்கு “சக்தி ஸ்ரீகோபாலன் குரல் ரொம்ப பிடிக்கும்” என்றாள். “ஏன்” என்றேன். “வழக்கமான குரல் கிடையாது. பெண் குரல்னா கொஞ்சம் கொஞ்சி, கொளஞ்சி பாடுற விதம் இல்லாம. பாட்டுக்கு பெண்ணோட குரல் இப்படி இருக்கணும்னு எதையோ மீறி வர ஒரு குரல், யோசிச்சு பாரு, ஜானகி, சுசிலா, சித்ரா குரலை எல்லாம். அதுக்குன்னு அவங்க பாட்டு பிடிக்காதுன்னு இல்ல” நிறுத்திக் கொண்டாள். பின் சிரிப்புடன் ஒரு கையால் முடியை ஒதுக்கி பார்வையை சில நொடிகள் குவித்து மீண்டும் பாட ஆரம்பித்தாள்.

இந்த சாலையிலே கடற்கரைக்கா பஞ்சம். காரை ஒரு வளைவில் திருப்பி, கடலோரம் நிறுத்தினாள். அருகிலே ஒரு மீனவ கிராமமும், கோயில் ஒன்றும் இருந்தது. இருவரும் செருப்புகளை காரிலே விட்டு, கடலை நோக்கி நடந்தோம். “எங்க அப்பா கடலுக்கு கூட்டிட்டே போக மாட்டார். அப்படியே போனாலும் ‘சடங்கு ஆனப் பிள்ளைக்கு இந்த மயிறு எதுக்கு’ன்னு சொல்லிட்டே, தம்பிய மட்டும் கூட்டிட்டு குளிக்கப் போவாரு. அம்மாவும் நானும் கரையிலே நிப்போம். இத்தனைக்கும் எங்க ஊர் கன்னியாகுமாரி” என்றாள். “எதுனாலே” என்றேன். “அது எங்க ஆச்சியோட குணம். அப்பா பாவம் தான். ஒன்னு தெரியுமா? சாயந்திரம் வீட்டு விட்டு வெளிய போனா கைல ஒரு இரும்பு ஆணி, இல்ல சாவியை கொடுப்பார். கருக்கள் நேரம் கண்டதும் அலையும் நாமதான் பாத்து போனும்னு சொல்லுவாரு” சிரித்துக்கொண்டே கால்களை நனைத்துக் கொண்டாள். முதல்முறையாக அவளின் அப்பாவை பற்றி பேசுகிறாள். காற்று வீச, ஒரு துளி நீர் அவளின் புருவத்தில் வைரம் போல மின்ன, ஒரு கையால் அதனை துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். எதையோ மறைக்க முயற்சிப்பது போல வேகமாய் “நானும் பாட்டிய ஆச்சின்னு கூப்புடுவேன். திருனவேலில அப்படிதான் கூப்புடுவோம். நீங்களாவது பரவாயில்ல. எங்க அப்பா என்னையவே இருட்டுற சமயம் வெளிய அனுப்ப மாட்டாரு. எனக்கும் பயம் தான். நா ஊர தாண்டுனதே இஞ்சினயரிங் படிக்கதான்” என்றப்படி கடலை பார்த்தேன். அவள் கரையிலே அலைவரும் தூரம் நின்றாள். அவளின் ஒட்டிய சுடிதாரின் மேடான வளைவுகளில் பார்வை சென்றது. முடியை முன்பக்கமாய் இழுத்து விட்டு இருந்தாள். முதுகின் நடுவே மெல்லிய மயிர்கோடு செல்வது என்னுள்ளே ஒரு பயம் கலந்த சுகத்தை கொடுத்தது, அவளின் காதுமடல் செவ்வொளியில் சிவந்தப்படி தெரிந்தது. அவளுக்கான இடம் மரியாதைக்குரிய வகையில் இருந்தாலும், சில சமயங்களில் அவளின் நினைவுகள் சுயமைதுனம் செய்வதில் வருவது தவிர்ப்பதுக்குரிய இடமாகவும் இல்லை. என்னை உயர்ந்தவனாய் காட்ட எத்தனிக்கும் போதெல்லாம், கண்களை கட்டுப்படுத்த, சிந்தனைகளை வேறுவழியில் திசைதிருப்ப முயற்சிக்கும் நான் பெரும்பாலும் தோற்றுவிடுகிறேன். அவள் கவனத்திருப்பாளா, கண்டிப்பாக அறியாமல் இருக்கமாட்டாள்.

“கல்யாணம் எப்போ பண்ணிக்க போற. வயசு முப்பது ஆயிடுச்சுல” குறுகுறுப்பான பார்வை வெளிப்பட கேட்டாள். எதிர்பாராமல் வார்த்தைகள் என்னைக் குலைத்தது, என்றாவது கேட்கப்படும் எனத் தெரிந்தும், விடையை நோக்கி மனதை குவிக்காமல், முடிவு செய்த விடையாக இல்லாமல், அத்தருணத்தில் வெளிவரட்டும் என்றே விட்டு விட்டிருந்தேன் . ஒரே மகன், அப்பா கடந்த ஆண்டு கொரோனாவில் தவறி விட, அம்மை மட்டுமே ஊரில் இருக்கிறாள். சுற்றிலும் உறவுகள் இருக்க பயப்பட எதுவுமில்லை. இருப்பினும் திருமணம் ஏனோ கைக்கூடவில்லை. வரன்கள் புது புது காரணங்களால் தள்ளிப் போனது. இவளின் வருகைக்கு பின் தான் நடந்தவை நல்லதற்கே என்று எண்ணினேன். பதில் இருக்கிறதா என்ன? நீதானே பதில் என்பது போல, அவளையே வெறித்து பார்த்தப்படி மௌனமாய் நின்றேன். “நீங்க எப்போ பண்ற பிளான்” பதிலுக்கு கேட்டேன். “நான் ஏன் இன்னொன்னு பண்ணனும்” என்றவள், என்னுடைய எதிர்வினைக்கு காத்திருப்பது போல, இமை மூடாது நோக்கினாள். ஏதோ புரிந்தவன் போல, சில அடிகள் அருகே சென்று கைகளை பிசைந்தப் படி “என்னங்க விளையாடுறீங்க” என்றேன். “ஏன் விளையாடணும், ஏன் பொய் சொல்லணும். ஏன் மறைக்கணும். இல்லையா” என்றவள். கடலுக்குள் கொஞ்சம் நடந்து, அலைவரவும் ஓடி என்னருகே வந்தாள். அதேவிடத்திலே நின்று கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று முறை இதையே செய்தாள். ஓடும் போது சிறுமியைப் போல பாவனை செய்கிறாளா? இல்லை அதுதான் நிஜமா?, அவள் கூறியது வாஸ்தவமாக இருந்தாள். “கல்யாணம் ஆயிடுச்சா” குரலில் வழுவில்லை. “ஆமா” என்றப்படி அருகே வந்தாள். நான் வேகமாய் காருக்கு அருகிலே சென்றேன். அம்மையிடம் இவளைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன், அம்மைக்கும் சம்மதம் தான். ‘எந்த சாதியா இருந்தா என்ன, சம்பாதிக்கா, உனக்கு பிடிச்சு இருக்கு. அப்பா இருந்தா காரியம் நடக்காது. இருக்கப்ப நீ பிடிச்ச எதையாவது பண்ண விட்டாரா! இதுல அம்மைக்க முழு சம்மதம்’ அம்மையின் வார்த்தைகள் எவ்வளவு சுகமாய் இருந்தன. ஆனால் கடைசியில் வாழ்க்கை கூட அப்பாவைப் போல பிடித்ததை பிடுங்கி கொள்கிறது.

அவள் கரையிலே நெடுநேரம் நின்றாள். நவம்பர் மாத மழை சென்னையில் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம், இன்று அதை எனக்குறியதாய் நினைத்துக் கொண்டே, காரில் ஏறி பாடல்களை மீண்டும் ஒலிக்க விட்டேன். ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா’ மனோவின் குரல் மனதை இன்னும் கனக்க வைத்தது. மழையின் வேகம் அதிகரிக்க ஓடி காருக்குள் வந்தவள், ஒலிக்கும் பாடலை கேட்டு என்னையே சில நொடிகள் பார்த்துக்கொண்டே சட்டென்று சிரித்தாள். “மழைல இந்த பாட்டு. செம பீலிங் இல்ல” என்றவள், என் அமைதியை குலைக்கும் படி “ஐ லவ் யூ” என்றப் படியே நெற்றியில் முத்தமிட்டாள். நான் தடுமாறிப் போனேன். முதல் முறை பெண்ணின் உதடுகள் அம்மையை தவிர்த்து உடலின் ஒரு பாகத்தில் பட, மொத்த உடலும் குலுங்கி அதிர்ந்து இன்னும் என்னென்ன உண்டோ? எல்லாமும் ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் ஆட்கொள்ள அவளை இழுத்து உதடுகளை கவ்வினேன். ஆரம்பித்தது நானாக இருந்தாலும், அவளின் ஆக்கிரமிப்பே அதிகம் தெரிந்தது. பிறகு இருவரும் சுயமாய் ஒருவரின் பிடியில் இருந்து வெளிவர, நான் சிரித்துக் கொண்டே “ஏன் கல்யாணம்னு பொய் சொன்னீங்க” என்றேன். “அட, அது பொய் இல்ல. அதுலாம் பழையக் கதை” என்றவள். வெளிறிய முகத்தை பார்த்து பரிதாபப்பட்டோ! என்னவோ! பேச ஆரம்பித்தாள்.

“அப்பா பழைய ஆள். ஆச்சி உடம்புக்கு முடியாம போக, அவங்க கடைசி ஆசைனு இஞ்சினயரிங் படிக்கப்பவே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவனுக்கு என்ன விட பன்னிரண்டு வயசு அதிகம். ஜெர்மனில வேலை பார்த்தான். இது போதாதா? பெருசா எதுவும் விசாரிக்கல. அப்போ நான் தேர்ட் இயர். பரீட்சை லீவ்ல டூரிஸ்ட் வீசா போட்டு கூட்டிட்டு போனான். நல்லவன் தான். பட் ராத்திரி மிருகம். செக்ஸ்வுலா ரொம்ப கொடுமைனே சொல்லலாம். நான் சின்னப் பொண்ணு. மொழி தெரியாத நாடு. அவன பகைக்கவே இல்ல. அதிகமான வலி, சிலசமயம் பிளட் வரும். யாருகிட்ட சொல்ல. இங்க வந்ததும் யாருகிட்டயும் சொல்லல. அடுத்த மாசம் நாள் தள்ளிப் போச்சு. பத்து மாசம், அவன் மேலே உள்ள வெறுப்பு. வயிறும் வீங்கி காலேஜ்ல ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் வந்தான். கூட ரெண்டு வாரம் இருந்துட்டு போய்ட்டான். குழந்தையை வளர்த்தது எல்லாமுமே அம்மா தான். இப்போவும் அம்மாவதான் தன்னோட அம்மாவ நினைச்சுட்டு இருக்கு” என்றவள் அமைதியானாள். “மழை விட்டுடுச்சு வெளிய நடக்கலாமா?”, நானும் சரியென்றேன்.

அவள் முன்னாலே நடந்தாள். ஏனோ அவளின் பாதச் சுவட்டை மண்ணிலே காணும் போது, முகம் அறியாத ஒருவனின் சுவடும் தெரிந்தது. நின்றவள் சில அடி பின்னால் வந்தாள், தயக்கமான பார்வை. விழிகளில் நீரின் திரை தெரிந்தது. அவளின் நாடியை பிடித்து, முகத்தை என் உதட்டின் அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டேன். கைகள் அதுவாய் கோர்க்கப்பட்டது. “அம்மாட்ட எல்லாத்தையும் சொன்னேன். எல்லாம் கேட்ட அம்மா, அப்பாட்ட என்ன சொல்லிச்சோ தெரியல. அப்பா ஒரு பேப்பர்ல சைன் போட சொன்னாங்க. படிச்சு பாத்தேன், அது விவாகரத்து பேப்பர்”. பெருமூச்சு விட்டவள் “அப்புறம் ஆளே வரல. நானும் படிச்சுட்டு வேலைன்னு சென்னை வந்துட்டேன். வீட்டுல கல்யாணத்துக்கு கேட்டுட்டே இருக்காங்க. வீட்டுல உன்ன பத்தி பேசலாம்ல” என்றாள். நான் தலையசைத்துக் கொண்டே அவளை அணைத்தேன். அவளின் மார்பு காம்புகள் நெஞ்சில் படவும், கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

பெற்றோர், நெருங்கியோர் இருக்க சென்னையிலே வடபழனியில் திருமணம் நடந்தது. பிறகு அருகிலே ஒரு சின்ன வரவேற்பு, சோழிங்கநல்லூரில் நல்ல அபார்ட்மெண்ட் வீடும் எடுத்தாச்சு. பிறகு முதல் இரவு எனக்கு மட்டும். பழகியவள் என்பதால் தயக்கமின்றி விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. அவளின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்தேன். முத்தங்கள் சரியாய் கொடுக்கப்பட்டது, கைகள் மெதுவாய் தழுவப்பட்டது. உணர்ச்சிகள் சிறுக சிறுக பெருக்கி இருவரும் முயங்க, நான் இயல்பை மீறி வேகம் ஆனேன். உடலில் வலு மொத்தமாய் ஏறுவது போல உணர்வு, அவளின் மொத்த சதையும் குலுங்கியது, எதிர்பார்ப்பை மீறி, வலது கையால் அவளின் புட்டத்தில் ஓங்கி அடித்தேன். அதுவே இரண்டு முறை நடக்க, அவள் கண்களை நோக்கினேன், நீர் நிரம்பி, அருவருப்போடு என்னை பார்த்தாள். என் ஆண்மை வெளியேற நான் தலை குனிந்தேன்.

கொதிப்பு

ஐ கிருத்திகா

கொடியடுப்பில் முள்ளங்கிக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அதன் வாசம் நாசியைத் தொட்டு ராசுப்பயலை எழுப்பிவிட்டது. அவனுக்கு முள்ளங்கிக் குழம்பென்றால் பெரும்பித்து.

“எங்கம்மா முள்ளங்கிக்கொளம்பு வைக்கும் பாரு. அதுக்கு ஒரு தனி ருசிடா…” நண்பர்களிடம் கதையளப்பான்.

“நல்லா தாராளமா பருப்ப வேவுச்சி கடஞ்சி ஊத்தி இம்மாம் வெங்காயத்த வதக்கி கொளம்ப கொதிக்கவுடும். முள்ளங்கிய நெலாத்துண்டாட்டம் நறுக்கி வதக்குறப்ப ஒரு வாசமடிக்கும் பாரு. வார்த்தையால சொல்லமுடியாது.” அவன் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.

“மேல சொல்லுடா…” நண்பர்கள் தூண்டிவிடுவார்கள்.

“முள்ளங்கிக் கொளம்புன்னா மஞ்சத்தூள ரெண்டுசிட்டிக கூடுதலாத்தான் போடும் எங்கம்மா. அதனால கொளம்பு மஞ்ச, மஞ்சேர்ன்னு இருக்கும். மொதநா கொளம்பவுட மய்க்கா நா கொளம்புக்கு ருசி அதிகம்.”

” அதெப்புடிடா…?” வேண்டுமென்றே கேட்பார்கள்.

” எங்கம்மா காலம்பற எந்திரிச்சதும் மொத வேலயா மீந்த கொளம்ப கொடியடுப்புல போட்டு சுண்டவைக்கும்.அதுல ரெண்டு கைப்புடி முருங்கைக்கீரைய உருவிப் போட்டுடும். அந்த வாசம் புடிச்சா நாக்கு ஊறும். காந்த வாசனை அடிக்கிற கொளம்புல வெந்த முருங்கக்கீர வதங்கி சவுக், சவுக்குன்னு கடிபடும். அதெல்லாம் தின்னாத்தான்டா தெரியும்.”

ராசுப்பயலுக்கு பள்ளிக்கூடம் போகும் வரை சொல்வதற்கு தினமும் ஆயிரம் கதைகளிருந்தன. நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கழியில் புத்தகப்பையை மாட்டி இருவர் மாற்றி இருவராக சுமந்து செல்வார்கள். பள்ளிக்கூடம் சற்று தூரம்தான்.

ராசுப்பயலின் பேச்சு தூரத்தைக் கடக்க தினமும் தேவைப்பட்டது. சோறு, அரசமரப்பிள்ளையார், தடி வாத்தியார், இலவச டிவியில் பார்த்த சினிமா என்று ஏதோ ஒன்று ராசுப்பயலுக்கு சொல்லக் கிடைத்துவிடும். சிலசமயம் ஏற்பாடில்லாமல் கதையை ஆரம்பிப்பான். கதை அவனைத் தன்பாட்டுக்கு இழுத்து சென்றுவிடும். நண்பர்கள் உம் போட்டபடி செல்வர்.

ஐந்தாறு பேர் ஒரு குழுவாக பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் கடைத்தெருவிலிருந்தது. கடைத்தெரு முடியுமிடத்தில் இடதுபுறம் திரும்பி பத்து தப்படி நடந்தால் பள்ளிக்கூடம். அந்தத் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. அங்கு வந்ததும் பேச்சை நிறுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு கிரில் கதவின் கம்பிகளில் சிந்திக்கிடக்கும் விபூதியை பூசிக்கொள்வார்கள். ராசுப்பயல் பெரும்பட்டையாக இட்டுக்கொள்வான்.

அவனுக்குப் பள்ளிக்கூடம் செல்வதொன்றும் அவ்வளவு விருப்பமான செயலாக இருக்கவில்லை. மதியசோறும், முட்டையும் அவனை வா, வாவென்று கூப்பிட்டதில் போய்க்கொண்டிருக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்குவருபவன் புத்தகப்பையை கடாசிவிட்டுத் தெருப்புழுதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவான் .

“வெளக்கு கொளுத்தியாச்சி. இந்தப் பயல இன்னும் காணும். பொஸ்தவத்த எடுத்து ஒரு எளுத்து படிக்க மாட்டேங்கிறான். நல்லவிதமாவும் சொல்லிப் பாத்துட்டன், வெளக்கமாத்தால வெளுத்தும் பாத்துட்டன். வெளங்காத பய….அவுங்கப்பனாட்டமே ஊர் மேய கெளம்பிடுறான்.”

ஈசுவரி பக்கத்து வீட்டு முத்தரசியிடம் புலம்பித் தீர்த்தாள். நாலெழுத்து படித்து மகன் உருப்பட்டுவிட வேண்டுமென்பதுதான் அவள் நினைப்பு.

“பள்ளிடத்துல பேக்கு, டவுசர், சட்ட, பொஸ்தவம் எல்லாம் குடுத்து சோத்தையும் போட்டு படிக்க சொல்லுறாங்க. புத்தியுள்ள புள்ள அத பயன்படுத்திக்கிட்டு முன்னேறி வந்துடும். இது என்னாவுமோ, மண்ணாத்தான் போவுமோ…” தலையிலடித்துக்கொள்வாள்.

மழை வரும் போலிருந்தது. மாடக்குழியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு, வீசிய காற்றுக்கு அல்லாடியது. ஈசுவரி ஆடுகளைப் பக்கவாட்டிலிருந்த தொழுவத்தில் அடைத்து புல்கட்டை பிரித்து உதறிவிட்டாள். அன்று நல்ல வளப்பமான புற்கள் பெருத்த கட்டாக அறுத்துக் கட்ட கிடைத்திருந்தன. கைக்கு லாவகமாய் பிடித்தறுக்க பெரிது, பெரிதான புற்கள். ஈசுவரிக்கு மனசு நிறைந்துவிட்டது. மண்டைக்காத்தான் கண்டால் சவட்டிவிடுவான்.அவன் வயலை ஒருவரும் அண்டமுடியாது. மழைக்குப் பயந்து ஈசுவரி துணிந்து விட்டாள். நல்லவேளையாக அவன் தலைகாட்டவில்லை. புற்கள் வீச்சு, வீச்சாக வளர்ந்து கிடந்தன. ஒரேமூச்சாக அறுத்துப் பெருங்கட்டாக கட்டிவிட்டாள்.

கோடைவெயிலுக்கு எரிந்து கிடக்கும் புற்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்பதற்கு மாறாக பொங்கும் புதுப்புனல் போல மனம் நுரைத்துப் பொங்கிற்று. ஆடுகள் புசு,புசுவென்று மூச்சு விட்டபடியே பருபருவென்று புற்களைத் தின்றன. ராசுப்பயல் குதிரைமுகம் வரை புழுதியப்பிய கால்களோடு வந்து நின்றான். கையிலிருந்த பனையோலை காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.

“பசிக்கிது சோறு போடும்மா…”

குனிந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் நின்று குதிகால்களை எக்கிப்பார்த்து சொன்னான். ஈசுவரி பதில் சொல்லவில்லை.

“சோறாக்கலயாம்மா…?”

சுழன்று கொண்டிருந்த காற்றாடியைக் கட்டைச்சுவரில் வைத்துவிட்டு அடுப்புமேல் மூடியிருந்த குண்டானைத் திறக்கப் பாய்ந்தான். ஈசுவரி திரும்பி, ஓங்கின வேகத்துக்கு முதுகில் ஒன்று வைத்தாள்.

“வெளக்கு வச்ச நேரத்துல ரெண்டு வார்த்த படிச்சோமுன்னு இல்லாம தெருத்தெருவா சுத்திட்டு வந்து சோறு போடுன்னா, சோறு எங்கேயிருந்து வரும். ஒங்கப்பனா கையெளுத்துப் போட்டு சம்பாரிச்சி கொண்டாந்து கொட்டுறான்.”

அவளுக்கு ஆவேசமாக இருந்தது. முட்டைப் போல் வயிறு பெருத்திருந்த சமயத்தில் இன்னொருத்தியுடன் ஓடிப்போனவனைத் திட்டுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையிருக்கவில்லை. எதொன்றுக்கும் அவனை இழுத்துவைத்து வசவுகளை விட்டெறிவதற்கு அவளுக்குக் கைவரப்பெற்றிருந்தது.

ராசுப்பயல் திண்ணையில் அமர்ந்தான். முதுகு திகுதிகுவென்று எரிந்தது. வலது கையை எட்டும் மட்டும் வளைத்துப் பின்புறம் துழாவி தடவிக்கொண்டான். மழைத்தூறல்கள் போட்டது. சாய்வு, சாய்வான ஊசித்தூறல்கள். மழைக்குப் பயந்துதான் அவன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததே. இல்லாதுபோனால் இருளின் வீச்சு முழுமையடைந்திருக்கும்போது மெல்ல தலைகாட்டும் பசியை உணர்ந்து அலுப்புஞ்சலிப்புமாய் விடைபெற்றுக்கொள்வான். சோறு, சோறு என்று வயிறு குதியாட்டம் போடும். தெருவில் அநேகமாய் விளக்குகள் எரிவதில்லை. இருட்டு மசி போல் அப்பிக்கிடக்கும் தெருவில் அவன் மனதிலூரும் பயத்தை அடக்க சத்தம் போட்டுப் பாட்டு பாடியபடியே வருவான்.

கையில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும். அதை அப்படியும், இப்படியுமாக அசைத்து தன் கவனத்தை அதில் பதித்துக்கொள்வான். ஈசுவரி வெளியே எட்டிப்பார்த்தாள். பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

“எந்திரிச்சி வந்து சோத்தத் தின்னு. கரண்டு போச்சின்னா தொளாவணும்.”

அவன் அசிரத்தையாக எழுந்தான். புழுங்கலரிசிச்சோறின் மணம் மூக்குக்கு இதமானதொரு வாசத்தைப் பரப்ப, அக்கறையில்லாதவன் போல் தட்டின் முன் அமர்ந்தான். குண்டுபல்பின் மஞ்சள் ஒளியில் சோறு மினுமினுத்தது. உதிரி, உதிரியாய் கொஞ்சம் புளியம்பூ நிறத்தில் தட்டு நிறைய சோறு.

அள்ளித் திங்க வேண்டும்போல மனசு பரபரத்தது. ஈசுவரி குழம்பை சோற்றின் மேல் பரவலாக ஊற்றினாள். கத்தரிக்காய் துண்டுகள் சோற்றில் விழுந்தன.

“கால், கை களுவுற பளக்கமெல்லாம் இருந்தா நீ உருப்புட்டுடமாட்ட…”

ராசுப்பயல் எழுந்துபோய் ஒழுகிய மழையில் கால், கையை நீட்டி கழுவிவிட்டுவந்தான்.

“களுவிட்டன்.”

வேகமாய் அமர்ந்து குனிந்து சாப்பிடத் தொடங்கினான். பள்ளிக்கூடத்து மதியசோறு வயிறு நிரம்பத்தான். மற்றபடி அதொன்றும் ருசியாக இல்லை என்பான் அவன்.

“கல்யாண ஊட்டுல எல நெறச்சி சோறு போடுவாங்க. ரெண்டு வகை காயி, வடை, பாயசம்னு எக்கச்சக்க அயிட்டம் இருக்கும். அந்தமாரி சாப்பாடு சாப்புட்டு பாக்கணும்டா ” என்று நண்பர்களிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போவான்.

தெருவில் நடக்கும் விசேஷங்களுக்கு ஈசுவரி மட்டும் போவாள். வரும்போது வடையையோ, போண்டாவையோ மடியில் கட்டிக்கொண்டு வருவாள். ராசுப்பயல் தானும் வருவதாக சொன்னால் முதுகில் சாத்துவாள்.

“இருவது ரூவாய வச்சிப்புட்டு ரெண்டுபேரு வந்து தின்னுபுட்டுப் போறாங்கன்னு பின்னாடி பேசுவாளுங்க…வேணுமுன்னா நீ போ. நான் போவல” என்பாள்.

“கறியும், கூட்டும் திங்கவா போறன். நாலு சனம் வேணுமுன்னு போறன். நாளபின்னாடி என் எளவுன்னா தூக்க நாலுபேரு வரணுமில்ல.” குரல் அழுகையில் பிசிறடிக்கும். ராசுப்பயல் பேசாமல் அமர்ந்திருப்பான்.

மழை மறுநாளும் தொடர்ந்ததில் பள்ளிக்கூடம் விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளிக்குப் போகாமல், விளையாடவும் போகமுடியாமல் வீடடங்கி கிடப்பது ராசுப்பயலுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. மின்சாரம் அவிந்து போயிருந்ததில் இலவச டிவி இருண்டு கிடந்தது.

திடீர், திடீரென வீசிய காற்றுக்கு கிளேரியா மரம் அசைந்ததில் பெருத்த நீர்ச்சொட்டுகள் சொட்டித் தெறித்தன. ஆடுகள் சாரலுக்குப் பயந்து நெருக்கியடித்துத் திண்ணையில் நின்றிருந்தன. தெருவடைத்த மழை. இரண்டுநாள் மழைக்கு மண் வாந்தோடிப் போயிருந்தது. முன்பு இப்படியொரு பெரு மழையில்தான் அவன் பிறந்தான்.

“அப்பிய மாசம் பொத்துக்கிட்டு ஊத்துது. கருக்கிருட்டு புடிச்சி ஊரே இருண்டு கெடக்கு. ஒருவா கஞ்சி குடிச்சிப்புட்டு கம்முன்னு படுத்துக்கிடலாம்னு பாத்தா திடீர்ன்னு வலி பொரட்டியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. முத்தரசி கொடலையத் தூக்கி தலையில போட்டுக்கிட்டு ஓடிப்போயி ஒன் பெரியாத்தாள கூட்டியாந்தா. சிம்னி வெளக்க பொருத்தி வச்சிக்கிட்டு ஆத்தா பிரசவம் பாத்துச்சி.” ஈசுவரி சொன்ன கதையை ஜோடித்து ராசுப்பயல் தன் நண்பர்களிடம் கூறுவான்.

“கொளேர்ன்னு ஒரே இருட்டாம். அப்ப துணுக்கு சுடராட்டம் நான் பொறந்ததும் எல்லாருக்கும் கண்ணு கூசிப்போச்சாம். தவமா, தவங்கெடந்தாலும் இப்படியொரு புள்ள பொறக்காதுடின்னு ஆத்தா கண்ணு தண்ணி வுட்டுச்சாம்.”

அவன் சற்று நிறம்தான். அதனால் நண்பர்கள் அதை ஒத்துக்கொண்டு பேசாமலிருந்தனர். மழை நின்று வெயில் காட்டத் தொடங்கிவிட்டது. ஈசுவரி ஆடுகளைக் கொட்டகையில் தள்ளி கட்டிவிட்டு நூறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

பகல்பொழுதில் மேயவிட்டால் பச்சையைக் கண்டமேனிக்கு பாய்ந்துவிடும். நிலத்துக்குச் சொந்தக்காரன் பிடித்து வைத்துக்கொள்வான். போய் நின்றால் காது கூச கூச்சல்போடுவான்.

பிறகு தண்டமழுது கூட்டிவரவேண்டும். அந்தப்பாடுகளுக்கு பயந்து அவள் அவிழ்த்துவிடும் வேலை வைத்துக்கொள்வதில்லை. வேலை முடிந்து வரும்போது எங்காவது புகுந்து ஒரு கட்டுப்புல் தேற்றிவிடுவாள். விடுமுறை நாட்களில் ராசுப்பயலை நச்சரிப்பாள்.

“அவுத்துட்டுப் போயி மேச்சிட்டு வாயன்டா. சும்மாதான கெடக்குற…”
அவள் கேட்கும்போதெல்லாம் அவன் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிப்பான்.

“பரிச்ச ஆரமிக்கப்போவுது. படிக்கணுமில்ல…” என்பான்.

“பெசல் கிளாசு வச்சிருக்காங்கம்மா. பள்ளிடம் போவணும் ” என்று புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.

வடக்குத் தெருவில் தாழப் படர்ந்திருக்கும் மரத்தின் கிளையொன்றில் அவன் பை தொங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தெருவில் அவனுக்கு ஏராளமான நண்பர்களுண்டு. அவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்டையில் தெறிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவான்.

விளையாட்டு அலுக்கும் நேரங்களில் நண்பர்களுடன் கடைத் தெருவை சுற்றிவருவான். ஊரில் ஒரேயொரு கிளப் கடை இருந்தது. காலையில் போட்ட பூரி கண்ணாடிப் பெட்டிக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்தபடி சற்றுநேரம் பொழுது போகும். பறக்கும் தட்டு போன்ற பூரிகள். அதன் உப்பல் ரகசியம் இன்றுவரை அவனுக்குப் பிடிபடவேயில்லை. ஒரேயொருமுறையாவது அந்தப் பூரியைத் தின்றுபார்த்துவிட மனசு ஆவலாய் துடிக்கிறது.

ஒரு செட் பூரி முப்பது ரூபாய். விளிம்பற்ற தட்டில் வாழையிலை போட்டு இரண்டு பூரிகளோடு கிழங்கு அள்ளி வைத்துத் தருவார்கள். வெளியிலிருந்து பார்த்தாலே மேசைகள் தெரியும். பொன் நிறமாய் மினுமினுங்கும் கிழங்கு தெரியும். அவக், அவக்கென்று விழுங்கும் வாய் தெரியும். ஆர்டர் சொல்லிவிட்டு ஆவலாய் பறந்தலைகிற கண்கள் தெரியும். இன்னொரு செட் என்று சொல்கிற குரலை வைத்து முதுகுகாட்டி அமர்ந்திருக்கிற காளிமுத்து மாமாவையோ, சின்னான் பெரியப்பாவையோ இனங்கண்டுகொள்ளமுடியும் .

தினம் கடையைக் கடக்கும் தருணங்களில் காற்றில் மசாலா வாடை அடிக்கும். சால்னாவோ, கிழங்கோ வாயு ரூபத்தில் வந்து மூக்கைத் தடவும். அது ஒரு சுகந்த மணம். அதை அனுபவிப்பதற்காகவே ராசுப்பயல் நடையைத் தளர்த்துவான். ஒருமுறை ஈசுவரியிடம் நைச்சியமாக கேட்டும் பார்த்தான். முப்பது ரூபாய் என்றதும் அவள் மலைத்துவிட்டாள்.

“அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுடா” என்று அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். முப்பது ரூபாயில் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வாங்கி பத்து நாட்களை ஓட்டிவிடுவாள்.

நண்பர்களில் யாராவது பூரி சாப்பிட்டதாக சொன்னால் பசி கப்பென்று காதையடைக்கும். பூரிப்பசி. அவர்கள் தின்றதை விட அதைப்பற்றி அவர்கள் கதையளப்பதைத் தாங்கிக் கொள்வது பெருங்கடினமாக இருந்தது அவனுக்கு.

தங்களுக்கும் கதை சொல்லத் திறமை வந்துவிட்டதைப்போல அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி, இப்படியென்று அவன் பட்டாளத்திலிருந்த அத்தனை பேரும் பூரி சாப்பிட்டிருந்தார்கள். சிலர் கடன் சொல்லி சாப்பிட்டதாக சொன்னார்கள். பின்னாடியே அவர்களுடைய அப்பாக்கள் வந்து கடனடைத்து விடுவார்களாம்.

ராசுப்பயலுக்கு முதன்முறையாக அப்பா இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. அதுநாள்வரை அப்பாவைப்பற்றி அவன் யோசித்ததில்லை. தெளிவற்ற பிம்பமாக கூட அவர், அவனுடைய விழிப்படலத்தில் உறைந்திருக்கவில்லை. சிறுநெல் மணியளவு கருப்பைக்குள் ஊன்றி தரித்திருக்கையிலேயே அவர் விட்டுப் போய்விட்டார்.

அம்மாவின் ஒவ்வொரு வசவின்போதும் அவரின் இருத்தல் குறித்த ஞாபகம் வரும். அம்மாதிரியான ஒரு உறவுக்கு வீரியமிருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. இப்போது பூரியின் மீதான காதலில் அவரின் நினைவு வந்தது.

காலையில் எழும்போதே ஈசுவரி அந்த சந்தோஷ செய்தி சொன்னாள். “எலே பயலே, உன் புத்தகப்பையி மேல காசு வச்சிருக்கேன். கிளப்பு கடையில பூரி வாங்கித் தின்னு.”

ராசுப்பயலுக்கு சட்டென்று காதுகள் அடைத்துக்கொண்டதைப் போலிருந்தது. திருதிருவென்று விழித்தான்.

“முப்பது ரூவாதான….?”

ஈசுவரி தலையாட்டிக் கேட்டாள். ஆவென வாயைத் திறக்க மா…..வுக்கு காற்று மட்டும் வந்தது.

“காசு பத்திரம்…”

ஈசுவரி அடுப்புச்சாம்பல் ஒதுக்கி சாணி மெழுகினாள். மூன்று பத்து ரூபாய்த்தாள்கள் பைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராசுப்பயல் புத்தகப்பைக்குள் ரூபாயை பத்திரப்படுத்திக்கொண்டான். அவசரமாக நீரை மொண்டள்ளிக் குளித்தான். பாட்டின் வார்த்தைகள் இஷ்டத்துக்கு வந்தன. பூரிகள் பறக்கும் தட்டுகளாய் கண்ணுக்கெதிரே காற்றில் அலைந்தன. அவசரமாய் சீருடை அணிந்து மாடத்தில் கிடந்த விபூதியை நெற்றியில் அப்பிக்கொண்டு புத்தகப்பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.

மற்ற பயல்கள் கிளம்பியிருக்கவில்லை. வெயில் மஞ்சள் படலமாய் விரிந்து கிடந்த தெருவில் ராசுப்பயல் ஒரு காலை அழுத்தி, ஒரு காலை உயர்த்தி, திரும்பவும் அதேபோல் அழுத்தி, உயர்த்தி பாட்டுப் பாடியபடியே ஓடினான்.

காலை நேரமென்பதால் கடையில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. நேரமாக, ஆக மண்டத் தொடங்கிவிடும். ராசுப்பயல் தயங்கியபடியே கடைக்குள் எட்டிப் பார்த்தான். கால்கள் கூசின. கொஞ்சம் படபடப்பாயிருந்தது. தோளில் கிடந்த பையை இடது கைக்கு கொண்டுவந்து துழாவினான். பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட மனதுக்கு சற்று ஆசுவாசமாயிருந்தது.

“என்னாடா,,,,?” கல்லாவுக்கு அந்தப்புறமிருந்து முதலாளி எட்டிப்பார்த்துக் கேட்டார்.

“பூரி…..” ராசுப்பயலுக்கு குரல் எழும்பவில்லை.

“சாப்புடணுமா….?” கையை வாய்க்கருகில் கொண்டு சென்று கேட்டார். ராசு தலையாட்டினான்.

“காசு கொணாந்திருக்கியா….?” அவனுக்கு அவமானமாயிருந்தது. சட்டென உடல் கூசிப்போக கண்கள் கலங்கின. வேகமாய் தலையாட்டி பைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.

“உள்ளாற போயி ஒக்காரு…” அவர் கைக்காட்டிய இடத்தில் சென்றமர்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் புத்தகப்பையை நிறுத்தி இறுக்கிக் கொண்டான்.

‘தம்பிக்கு ஒரு செட்டு பூரி குடுப்பா…” முதலாளியே அவனுக்காக குரல் கொடுத்தார். ராசுப்பயல் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருந்தான். கைவிரல்களைக் கோர்த்து தொண்டையை நனைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சமையல்கட்டை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே, கைவைத்த அழுக்கு பனியன் அணிந்திருந்த மாஸ்டர் பூரி தேய்த்துக் கொண்டிருந்தார். பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து சிறிது கிள்ளி எடுத்து உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டினார்.

உருட்டிய மாவை அரை நொடியில் பெரிய வட்டமாய் தேய்த்தார். ராசுப்பயல் அதை அதிசயம் போல் கண்கள் விரியப் பார்த்தான். வட்டா நிறைய கொதித்துக் கிடந்த கிழங்கில் கல்பாசியின் தணியாத வாசம். சப்ளையர் பையன் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ராசுப்பயல் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொண்டான்.

“தண்ணி குடிச்சா பசியடங்கிடும் ” என்பாள் ஈசுவரி. நீரில் எண்ணெய் கசண்டடித்தது.

பக்கத்து மேசையில் ஒருவர் பூரி மேல் குருமாவைப் பரப்பி மூன்று விரல்களால் பிய்த்து, பிய்த்து தின்று கொண்டிருந்தார். ராசுப்பயலுக்கு வாய்க்குள் உப்புநீர் சுரந்தது. உதடுகள் லேசாக பிளந்து கொண்டன. கருமணிகள் அசையாது அவரையே உன்னித்தன.

“பூரி……” சப்ளையர் ணங்கென்று தட்டை வைத்தான். அவன் ராசுவைவிட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். முகம் கடுகடுத்திருந்தது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து குரல் வந்ததில் தவம் கலைந்த தினுசில் ராசுப்பயல் அதிர்ந்துபோனான்.

தட்டில் இளம்பச்சை நிற குருத்து வாழையிலையில் இரண்டு உப்பல் பூரிகள். பக்கத்தில் மஞ்ச, மஞ்சேரென்று ஆவாரம்பூ குருமா. மூன்று விரலால் பிய்க்க வேண்டும். பக்கத்துமேசை மனிதர் சொல்லித் தந்திருந்தார். பிய்த்தான். பிஞ்சு விரல்கள் எண்ணெயில் மினுமினுத்தன. குருமாவில் தோய்த்தான். விழிகளில் பறந்தலைகிற ஆவல். தலையை லேசாக உயர்த்தி கிழங்கோடு பூரியை வாயிலிட்டுக்கொண்டான். அப்போது கண்கள் தானாக மூடிக்கொண்டன. அதுவரை அனுபவித்தறியாத ருசியின் தீண்டலில் நாக்கு இளஞ்சிவப்பு மலர் போல மலர்ந்து போனது. ஒவ்வொரு வாய்க்கும் எழுந்த கிளர்ச்சி மனதை பரபரக்க செய்தது. கால்கள் பையை இறுக்கிக்கொண்டன.

மூளையின் செல்களை உணர்வூட்டி விட்டது போல அவனுக்குள் கதைகள் கிளைத்தன. இன்னொருமுறை கடைக்கு வருவது போன்ற நிகழ்வை நிகழ்த்திப் பார்த்து மனசு சந்தோஷப்பட்டது. ஒவ்வொரு வாய்க்கும் இடைவெளி விட்டு ருசிக்க, கண்கள் சுற்றியலைந்தன. உடல் முன்னும், பின்னுமாக லேசாக அசைந்தது. கடைசிவாயை வழித்து வாயிலிட்டுக்கொண்டபோது வயிறு நிறைந்து போனது.

குருமாவின் மசாலா வாசம் உள்ளங்கையில் மிதந்தது. உள்ளங்கை எண்ணெய் மினுமினுப்பில் வாழைப்பூ போல இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தது. கழுவிய கையை
சட்டையில் துடைத்துக்கொள்ள பயமாயிருந்தது. ஒருமாதிரி அடிபட்ட கை போல உடம்பில் படாதவாறு வைத்துக்கொண்டு ராசுப்பயல் பிள்ளையார் கோவிலண்டை வந்து நின்றான். தூரத்தில் சகாக்கள் வருவது தெரிந்தது.

“ஒசத்தியான மஞ்ச நெறத்துல ஆவாரம்பூவாட்டம் குருமா. …” மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான் .