மறுமுகம்

வைரவன் லெ ரா

வாட்சப் டிபியில் வழக்கத்திற்கு மாறான அழகில் ஜொலித்தாள். இரண்டாம் ஆண்டு முதல் நாள் வகுப்பில் நுழையும் போது, அவள் தலைமுடியை ஒதுக்கியப் படியே சில நொடிகள் பார்வையை என் பக்கமாய் குவித்ததும், கால்கள் தடுமாறி போனது, நெஞ்சு விடைத்தது இன்று நடந்தது போலவிருக்கிறது. கேப்பிடீரியாவில் வெகு நேரம் இருந்தது போல உணர்வு, வாங்கிய காபி ஆறிப் போய் இருந்தது. விரல்கள் மாறி மாறி அலைபேசியின் ஒளிப்பானை மாற்றி ஏதாவது மாறப் போகிறதா என்ன? முதுகில் யாரோ மென்மையாய் தட்ட திரும்பினேன். “ஹலோ ஒன் ஹௌரா என்ன பண்ற. ரிலீஸ் வாக் த்ரோ இருக்கு மறந்துட்டியா. ஸ்க்ரம் மாஸ்டர் நீதான் பா. வா போலாம்” கைகளை இழுத்து கூட்டிச் சென்றாள். இவளை பார்க்கும் போதெல்லாம் வாட்சப்பில் மட்டுமே பார்ப்பவள் தூரமாய் போய் விடுகிறாள்.

விரித்த தலைமுடியில் ஹேர் கண்டிஷனரின் வாசனை அவள் அழைக்காமலே பின்னால் நகர வைத்தது. சட்டென்று நின்று விட அவள் எத்தனிக்கும் போதெல்லாம், என் நடையின் வேகம் அனிச்சை செயலில் தானாகக் குறைந்தது. சுருட்டை முடி என்ன அழகு. கல்லூரிப் பேருந்தில் ஒலிக்கும் பாடலில் சில முன்னவளுக்கென இடையிடையே இணைத்திருப்பேன். பின் இருக்கையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தால், அவள் முடியை காற்றில் அலைய விட்டு உறக்கத்தில் இருப்பாள். அவளோடு இணைந்து கேட்க விருப்பப்பட்ட பாடல் என்னுள் மட்டுமே கரைந்து அமிழ்ந்து கொண்டிருக்கும். இருந்தாலும் உறங்கி விழித்தப்படி அவளுடைய நிறுத்தத்தில் இறங்கும் போது பார்வையை வீசாமல் தவறவிட்டது இல்லை, சற்றே வீங்கிய விழிகளும், சிறிதாய் விரியும் புன்னகைக்கும் என்னை காத்திருக்க விட்டதில்லை.

“என்ன மறுபடியும் பீலிங்கா, போப்பா. அவளுக்கு கல்யாணமே ஆயிடுச்சு. இன்னும் வாட்சப் டிபி பாத்துட்டு சுத்துற. லேப்டாப் எடுத்துட்டு ப்ளூ பெரிக்கு போலாம். மீட்டிங் ரூம் ஸ்செடுல் அங்கதான் பண்ணிருக்கு. இன்னும் எத்தன நாள் டிபிய வெறிச்சுட்டு இருப்ப. ஷி இஸ் நாட் யூர்ஸ்”. கூறிவிட்டு என்னையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். ஒரு சாதாரண டெவெலப்பர், பின் சீனியர் ஆகி, இப்போது டெக் லீட். நான் விரும்பிய பணியும் அல்ல, அதற்காக இதனை வெறுப்பதுமில்லை,நிகழ்ந்தது. இதுவே தொடரும் என்பதையும் அறிவேன். எதையும் முயற்சிக்காத குணம், இங்கே இருத்தத்தில் எவ்வித கேடுகளும் இல்லை. பிறகென்ன கால்கள் இங்கேயே அழுத்தமாய் பதிந்துவிட்ட உணர்வு. ஒருவித சுய ஆசுவாசம். நீடித்த வேலையின் ஆண்டிறுதிகளில் பணி ரீதியான மதிப்பீட்டு நேரங்களில் என் கேள்விகளை நான் அவிழ்த்துவிட்டதுமில்லை. உண்மையாக கல்லூரியில் கட்டிய பணத்திற்கு, அவர்கள் பெரும்தொகையை முதலீடாக எங்களின் வேலைக்கென செய்தார்கள், இப்பெரும் முதலீடு அப்பா அளித்தத்தில் நூற்றில் ஒரு சதவிகிதம் எனலாம், பணம் மாத்திரமா? எவ்வளவு நேரம் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு இயந்திரத்தைப் போல எனக்கு ஒப்பிக்கப்பட்டவை சரியான நேரத்தில் வெளிவர பணி நியமனம் கிடைத்தது. பின் புகைப்படத்துடன் நாளிதழ்களில் அரைப்பக்க விளம்பரம். நானே முதலீட்டில் ஒரு பங்குதாரராய் உணர்ந்த தருணம்.

மீட்டிங் வழக்கம் போல, இரைச்சலுடன் சுயசிந்தனையில், இயல்பாக ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பும் முகாந்திரத்துடன் நடந்தது. என் இடத்திற்கு மட்டுமே போட்டியில்லை, பதினான்கு மணி நேரம் உழைக்க யார்தான் தயார். “நெஸ்ட் வீக் ரிலீஸ், சப்போர்ட் டீம், டெஸ்டிங் டீம், ரிலீஸ் டீம் எல்லாருக்கும் மெயில் அனுப்பியாச்சு, சைன் ஆப் ரெடி. இதுவர ஸ்மூத்தா போகுது, லெட்ஸ் சீ. சோ ஹாப்பி வீக்எண்ட்” எனக்கும் சேர்த்து அவளே பேசினாள். அனைவரும் அறையை காலி செய்ததை அவள் என்னை அழைத்த தருணம் தான் உணர்ந்தேன். எழுந்து நிற்கவும் “உக்காருப்பா, என்ன அவசரம். நாளைக்கு என்ன பிளான்”. இதற்கு முன்னும் இதே கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன், பதிலை எதிர்பார்க்காமல் அவளின் திட்டங்களை கூறுவாள், கடைசிவரை என்னுடைய பதில் எனக்குள்ளே கொலை செய்யப்படும். அவள் பேசட்டும் என அமைதியாய் இருந்தேன். “சரி, நாளைக்கு ஈசிஆர் போலாமா? ஒரு லாங் டிரைவ், ஈவினிங் சின்ன பார்ட்டி. எப்படி உனக்கு ஓகே வா”, நாளை எனக்கான திட்டங்கள் வழக்கம் போல எதுவுமில்லை. வாரஇறுதியை மிச்சம் இருக்கும் வேலையிலும், மீதி நேரம் வெறுமையாய் போர்ன்னில் கழிப்பது மாத்திரமே பொழுதுபோக்கு. “ரொம்ப யோசிக்கிற, என்ன போலாமா. வேணாமா. கொஞ்சம் பிரீயா இருக்கலாம். உனக்கே தெரியும், ஒரு மாசமா ரொம்ப இறுக்கமான மனநிலைல இருந்துட்டோம். நீயும் கொஞ்சம் இலகுவா ஆக வேண்டாமா. என்ன நம்மள பத்தி டீம்ல ரொம்ப பேசுறாங்கன்னு யோசிக்கிறியா. அது இருக்கட்டும். பரவாயில்ல”. சரி என்பது போல தலையசைத்தேன். “காலைல பத்து மணிக்கு உங்க பிஜில பிக்கப் பண்ணிக்கிறேன்”. இருவருக்கும் இடையே மெல்லிய இடைவெளி இருக்கிறது. இவளை நான் அல்லவா நேர்காணல் செய்தேன், எவ்வளவு நேர்த்தியான பதில்கள், எளிதாய் எதிர்கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் தள்ள, என் டீமில் இப்படிப்பட்ட ஆள் வேண்டுமென அடம்பிடித்தேன். அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட அதிகமாகவே அவளுக்கு ஆண்டு சம்பளம் கொடுக்கப்பட்டது. அவளின் காரிலே இதோ என்னை விடுதிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆக, சுற்றி இருப்பவர்கள் வெளிப்படையாகவே குசுக்குசுக்க வாய்ப்புகள் வசதியாகவே எங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சராசரி உயரம், ஒல்லியான உடல்வாக்கு, சவரம் செய்யாத முகம் கண்ணாடியில் ஒருமுறை முடியை ஒதுக்கி என்னை அவளுடன் ஒப்பீடு செய்தேன். அப்படியொன்றும் என்னைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. கச்சிதமான உடையில், எப்போதும் மலர்ச்சியான முகத்துடனும், விரித்து விட்ட முடியுமாய் இருக்கும் இடமெல்லாம் ஒருவித சௌகர்யம் அவளால் உருவாக்கப்படும். பணி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அவளின் தலையீடு இருப்பதில்லை, என்னுடைய திட்டமிடல்களில் அபரீதமான ஈடுபாட்டை அளிப்பாள். அவளின் ஊர், பெற்றோர், சொந்தங்கள் எனப் பேச்சு சென்றாலும் குறைவான நேரத்தில் அதையும் இழுக்காமல் நிறுத்திவிடுவாள். மாறாக நானோ, பலவற்றை எதற்கெனவென்றே அறியாமலே சொல்லிவிடுவேன். அவளிடம் பேச ஏதாவது உபயோகப் படுமென்றால் அதனை மறைக்க உத்தேசிப்பதில்லை.

சரியான நேரத்தில் அவள் வர, இருவரும் கிளம்பினோம். சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனங்கள் சாலையில் அதிகமாய் தென்பட்டன. “நீ பைக் ஓட்டுனா நாமளும் போயிருக்கலாம். எனக்கும் பிடிக்கும், நீதான் ஓட்டமாட்டியே” போலியான முகப்பாவனையோடு சொன்னாள். ஏற்கனவே அதன் காரணம் அறிந்தவள், நண்பனை சாலை விபத்தில் இழந்து, இறுதிசடங்கில் அவரின் பெற்றோர் கதறியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் காரணமாய் கால்கள் பைக்கில் ஏறினாலே நடுங்கும், இதுவும் ஒருவித போபியா. பாடல்களை ஒலிக்க விட்டாள். இளையராஜாவும், ரஹ்மானும் இசைத்த பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒலித்தன. அவளும் முணுமுணுத்தாவாறே பாடினாள், குறையில்லா குரல்தான், ‘எங்க போன ராசா’ மரியான் பாடல் ஒலிக்க, “உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா” என்றேன். எனக்கு “சக்தி ஸ்ரீகோபாலன் குரல் ரொம்ப பிடிக்கும்” என்றாள். “ஏன்” என்றேன். “வழக்கமான குரல் கிடையாது. பெண் குரல்னா கொஞ்சம் கொஞ்சி, கொளஞ்சி பாடுற விதம் இல்லாம. பாட்டுக்கு பெண்ணோட குரல் இப்படி இருக்கணும்னு எதையோ மீறி வர ஒரு குரல், யோசிச்சு பாரு, ஜானகி, சுசிலா, சித்ரா குரலை எல்லாம். அதுக்குன்னு அவங்க பாட்டு பிடிக்காதுன்னு இல்ல” நிறுத்திக் கொண்டாள். பின் சிரிப்புடன் ஒரு கையால் முடியை ஒதுக்கி பார்வையை சில நொடிகள் குவித்து மீண்டும் பாட ஆரம்பித்தாள்.

இந்த சாலையிலே கடற்கரைக்கா பஞ்சம். காரை ஒரு வளைவில் திருப்பி, கடலோரம் நிறுத்தினாள். அருகிலே ஒரு மீனவ கிராமமும், கோயில் ஒன்றும் இருந்தது. இருவரும் செருப்புகளை காரிலே விட்டு, கடலை நோக்கி நடந்தோம். “எங்க அப்பா கடலுக்கு கூட்டிட்டே போக மாட்டார். அப்படியே போனாலும் ‘சடங்கு ஆனப் பிள்ளைக்கு இந்த மயிறு எதுக்கு’ன்னு சொல்லிட்டே, தம்பிய மட்டும் கூட்டிட்டு குளிக்கப் போவாரு. அம்மாவும் நானும் கரையிலே நிப்போம். இத்தனைக்கும் எங்க ஊர் கன்னியாகுமாரி” என்றாள். “எதுனாலே” என்றேன். “அது எங்க ஆச்சியோட குணம். அப்பா பாவம் தான். ஒன்னு தெரியுமா? சாயந்திரம் வீட்டு விட்டு வெளிய போனா கைல ஒரு இரும்பு ஆணி, இல்ல சாவியை கொடுப்பார். கருக்கள் நேரம் கண்டதும் அலையும் நாமதான் பாத்து போனும்னு சொல்லுவாரு” சிரித்துக்கொண்டே கால்களை நனைத்துக் கொண்டாள். முதல்முறையாக அவளின் அப்பாவை பற்றி பேசுகிறாள். காற்று வீச, ஒரு துளி நீர் அவளின் புருவத்தில் வைரம் போல மின்ன, ஒரு கையால் அதனை துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். எதையோ மறைக்க முயற்சிப்பது போல வேகமாய் “நானும் பாட்டிய ஆச்சின்னு கூப்புடுவேன். திருனவேலில அப்படிதான் கூப்புடுவோம். நீங்களாவது பரவாயில்ல. எங்க அப்பா என்னையவே இருட்டுற சமயம் வெளிய அனுப்ப மாட்டாரு. எனக்கும் பயம் தான். நா ஊர தாண்டுனதே இஞ்சினயரிங் படிக்கதான்” என்றப்படி கடலை பார்த்தேன். அவள் கரையிலே அலைவரும் தூரம் நின்றாள். அவளின் ஒட்டிய சுடிதாரின் மேடான வளைவுகளில் பார்வை சென்றது. முடியை முன்பக்கமாய் இழுத்து விட்டு இருந்தாள். முதுகின் நடுவே மெல்லிய மயிர்கோடு செல்வது என்னுள்ளே ஒரு பயம் கலந்த சுகத்தை கொடுத்தது, அவளின் காதுமடல் செவ்வொளியில் சிவந்தப்படி தெரிந்தது. அவளுக்கான இடம் மரியாதைக்குரிய வகையில் இருந்தாலும், சில சமயங்களில் அவளின் நினைவுகள் சுயமைதுனம் செய்வதில் வருவது தவிர்ப்பதுக்குரிய இடமாகவும் இல்லை. என்னை உயர்ந்தவனாய் காட்ட எத்தனிக்கும் போதெல்லாம், கண்களை கட்டுப்படுத்த, சிந்தனைகளை வேறுவழியில் திசைதிருப்ப முயற்சிக்கும் நான் பெரும்பாலும் தோற்றுவிடுகிறேன். அவள் கவனத்திருப்பாளா, கண்டிப்பாக அறியாமல் இருக்கமாட்டாள்.

“கல்யாணம் எப்போ பண்ணிக்க போற. வயசு முப்பது ஆயிடுச்சுல” குறுகுறுப்பான பார்வை வெளிப்பட கேட்டாள். எதிர்பாராமல் வார்த்தைகள் என்னைக் குலைத்தது, என்றாவது கேட்கப்படும் எனத் தெரிந்தும், விடையை நோக்கி மனதை குவிக்காமல், முடிவு செய்த விடையாக இல்லாமல், அத்தருணத்தில் வெளிவரட்டும் என்றே விட்டு விட்டிருந்தேன் . ஒரே மகன், அப்பா கடந்த ஆண்டு கொரோனாவில் தவறி விட, அம்மை மட்டுமே ஊரில் இருக்கிறாள். சுற்றிலும் உறவுகள் இருக்க பயப்பட எதுவுமில்லை. இருப்பினும் திருமணம் ஏனோ கைக்கூடவில்லை. வரன்கள் புது புது காரணங்களால் தள்ளிப் போனது. இவளின் வருகைக்கு பின் தான் நடந்தவை நல்லதற்கே என்று எண்ணினேன். பதில் இருக்கிறதா என்ன? நீதானே பதில் என்பது போல, அவளையே வெறித்து பார்த்தப்படி மௌனமாய் நின்றேன். “நீங்க எப்போ பண்ற பிளான்” பதிலுக்கு கேட்டேன். “நான் ஏன் இன்னொன்னு பண்ணனும்” என்றவள், என்னுடைய எதிர்வினைக்கு காத்திருப்பது போல, இமை மூடாது நோக்கினாள். ஏதோ புரிந்தவன் போல, சில அடிகள் அருகே சென்று கைகளை பிசைந்தப் படி “என்னங்க விளையாடுறீங்க” என்றேன். “ஏன் விளையாடணும், ஏன் பொய் சொல்லணும். ஏன் மறைக்கணும். இல்லையா” என்றவள். கடலுக்குள் கொஞ்சம் நடந்து, அலைவரவும் ஓடி என்னருகே வந்தாள். அதேவிடத்திலே நின்று கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று முறை இதையே செய்தாள். ஓடும் போது சிறுமியைப் போல பாவனை செய்கிறாளா? இல்லை அதுதான் நிஜமா?, அவள் கூறியது வாஸ்தவமாக இருந்தாள். “கல்யாணம் ஆயிடுச்சா” குரலில் வழுவில்லை. “ஆமா” என்றப்படி அருகே வந்தாள். நான் வேகமாய் காருக்கு அருகிலே சென்றேன். அம்மையிடம் இவளைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன், அம்மைக்கும் சம்மதம் தான். ‘எந்த சாதியா இருந்தா என்ன, சம்பாதிக்கா, உனக்கு பிடிச்சு இருக்கு. அப்பா இருந்தா காரியம் நடக்காது. இருக்கப்ப நீ பிடிச்ச எதையாவது பண்ண விட்டாரா! இதுல அம்மைக்க முழு சம்மதம்’ அம்மையின் வார்த்தைகள் எவ்வளவு சுகமாய் இருந்தன. ஆனால் கடைசியில் வாழ்க்கை கூட அப்பாவைப் போல பிடித்ததை பிடுங்கி கொள்கிறது.

அவள் கரையிலே நெடுநேரம் நின்றாள். நவம்பர் மாத மழை சென்னையில் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம், இன்று அதை எனக்குறியதாய் நினைத்துக் கொண்டே, காரில் ஏறி பாடல்களை மீண்டும் ஒலிக்க விட்டேன். ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா’ மனோவின் குரல் மனதை இன்னும் கனக்க வைத்தது. மழையின் வேகம் அதிகரிக்க ஓடி காருக்குள் வந்தவள், ஒலிக்கும் பாடலை கேட்டு என்னையே சில நொடிகள் பார்த்துக்கொண்டே சட்டென்று சிரித்தாள். “மழைல இந்த பாட்டு. செம பீலிங் இல்ல” என்றவள், என் அமைதியை குலைக்கும் படி “ஐ லவ் யூ” என்றப் படியே நெற்றியில் முத்தமிட்டாள். நான் தடுமாறிப் போனேன். முதல் முறை பெண்ணின் உதடுகள் அம்மையை தவிர்த்து உடலின் ஒரு பாகத்தில் பட, மொத்த உடலும் குலுங்கி அதிர்ந்து இன்னும் என்னென்ன உண்டோ? எல்லாமும் ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் ஆட்கொள்ள அவளை இழுத்து உதடுகளை கவ்வினேன். ஆரம்பித்தது நானாக இருந்தாலும், அவளின் ஆக்கிரமிப்பே அதிகம் தெரிந்தது. பிறகு இருவரும் சுயமாய் ஒருவரின் பிடியில் இருந்து வெளிவர, நான் சிரித்துக் கொண்டே “ஏன் கல்யாணம்னு பொய் சொன்னீங்க” என்றேன். “அட, அது பொய் இல்ல. அதுலாம் பழையக் கதை” என்றவள். வெளிறிய முகத்தை பார்த்து பரிதாபப்பட்டோ! என்னவோ! பேச ஆரம்பித்தாள்.

“அப்பா பழைய ஆள். ஆச்சி உடம்புக்கு முடியாம போக, அவங்க கடைசி ஆசைனு இஞ்சினயரிங் படிக்கப்பவே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவனுக்கு என்ன விட பன்னிரண்டு வயசு அதிகம். ஜெர்மனில வேலை பார்த்தான். இது போதாதா? பெருசா எதுவும் விசாரிக்கல. அப்போ நான் தேர்ட் இயர். பரீட்சை லீவ்ல டூரிஸ்ட் வீசா போட்டு கூட்டிட்டு போனான். நல்லவன் தான். பட் ராத்திரி மிருகம். செக்ஸ்வுலா ரொம்ப கொடுமைனே சொல்லலாம். நான் சின்னப் பொண்ணு. மொழி தெரியாத நாடு. அவன பகைக்கவே இல்ல. அதிகமான வலி, சிலசமயம் பிளட் வரும். யாருகிட்ட சொல்ல. இங்க வந்ததும் யாருகிட்டயும் சொல்லல. அடுத்த மாசம் நாள் தள்ளிப் போச்சு. பத்து மாசம், அவன் மேலே உள்ள வெறுப்பு. வயிறும் வீங்கி காலேஜ்ல ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் வந்தான். கூட ரெண்டு வாரம் இருந்துட்டு போய்ட்டான். குழந்தையை வளர்த்தது எல்லாமுமே அம்மா தான். இப்போவும் அம்மாவதான் தன்னோட அம்மாவ நினைச்சுட்டு இருக்கு” என்றவள் அமைதியானாள். “மழை விட்டுடுச்சு வெளிய நடக்கலாமா?”, நானும் சரியென்றேன்.

அவள் முன்னாலே நடந்தாள். ஏனோ அவளின் பாதச் சுவட்டை மண்ணிலே காணும் போது, முகம் அறியாத ஒருவனின் சுவடும் தெரிந்தது. நின்றவள் சில அடி பின்னால் வந்தாள், தயக்கமான பார்வை. விழிகளில் நீரின் திரை தெரிந்தது. அவளின் நாடியை பிடித்து, முகத்தை என் உதட்டின் அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டேன். கைகள் அதுவாய் கோர்க்கப்பட்டது. “அம்மாட்ட எல்லாத்தையும் சொன்னேன். எல்லாம் கேட்ட அம்மா, அப்பாட்ட என்ன சொல்லிச்சோ தெரியல. அப்பா ஒரு பேப்பர்ல சைன் போட சொன்னாங்க. படிச்சு பாத்தேன், அது விவாகரத்து பேப்பர்”. பெருமூச்சு விட்டவள் “அப்புறம் ஆளே வரல. நானும் படிச்சுட்டு வேலைன்னு சென்னை வந்துட்டேன். வீட்டுல கல்யாணத்துக்கு கேட்டுட்டே இருக்காங்க. வீட்டுல உன்ன பத்தி பேசலாம்ல” என்றாள். நான் தலையசைத்துக் கொண்டே அவளை அணைத்தேன். அவளின் மார்பு காம்புகள் நெஞ்சில் படவும், கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

பெற்றோர், நெருங்கியோர் இருக்க சென்னையிலே வடபழனியில் திருமணம் நடந்தது. பிறகு அருகிலே ஒரு சின்ன வரவேற்பு, சோழிங்கநல்லூரில் நல்ல அபார்ட்மெண்ட் வீடும் எடுத்தாச்சு. பிறகு முதல் இரவு எனக்கு மட்டும். பழகியவள் என்பதால் தயக்கமின்றி விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. அவளின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்தேன். முத்தங்கள் சரியாய் கொடுக்கப்பட்டது, கைகள் மெதுவாய் தழுவப்பட்டது. உணர்ச்சிகள் சிறுக சிறுக பெருக்கி இருவரும் முயங்க, நான் இயல்பை மீறி வேகம் ஆனேன். உடலில் வலு மொத்தமாய் ஏறுவது போல உணர்வு, அவளின் மொத்த சதையும் குலுங்கியது, எதிர்பார்ப்பை மீறி, வலது கையால் அவளின் புட்டத்தில் ஓங்கி அடித்தேன். அதுவே இரண்டு முறை நடக்க, அவள் கண்களை நோக்கினேன், நீர் நிரம்பி, அருவருப்போடு என்னை பார்த்தாள். என் ஆண்மை வெளியேற நான் தலை குனிந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.