நல முத்துகருப்பசாமி
எதிரில் பயணிக்கும் பயணியை
பயணிக்க விடா வண்ணம்
தக்க வைக்கிறது எதிர்காற்று .
எனையெங்கோ இடம்புரியா
இடத்தில் வேரூன்ற
அடித்துச் செல்கிறது
கூடவே பயணிக்கும் காற்று…
இதற்கும் சேர்த்தே
விடைபெற்று விட்டேன்
வாசல் தாண்டும் பொழுது…
நல முத்துகருப்பசாமி
எதிரில் பயணிக்கும் பயணியை
பயணிக்க விடா வண்ணம்
தக்க வைக்கிறது எதிர்காற்று .
எனையெங்கோ இடம்புரியா
இடத்தில் வேரூன்ற
அடித்துச் செல்கிறது
கூடவே பயணிக்கும் காற்று…
இதற்கும் சேர்த்தே
விடைபெற்று விட்டேன்
வாசல் தாண்டும் பொழுது…
ஜெயஸ்ரீ
சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள்.
தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான்.
ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… ” என்ற தொனியில் மொபைலை எடுத்தான். ஸ்வேதாவை அழைத்தான்.
“சார்.. சொல்லுங்க சார்..”
“ஸ்வேதா.. எனக்கொரு ஹெல்ப் வேணும். புதுசா நாம யூஸ் பண்ற சர்வர்ல எனக்கு ட்ரபுள் ஷூட்டிங் பண்ண தெரியல. உனக்கு ஆட்சேபனை இல்லன்னா என் வீட்டுக்கு வரமுடியுமா. ஜூம் கால் எனக்கு அவ்ளோ சரிப்பட்டு வரல.. ”
“உங்க வீட்டுக்கா சார்.. ” தயங்கினாள்.
“பயப்படாத மா.. வீட்ல வொய்ஃப் என்னோட இரண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. தைரியமா வரலாம்…”
“ஹோ.. ஒகே சார். லைவ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க நான் வரேன்.. ”
“நோ… நோ.. நைட்ல பெண்கள் தனியா வர்றது சேஃப்டி இல்ல. நான் வந்து கூப்பிட்டு போறேன்.. ”
“ஓகே சார்.. நான் ரெடியாயிடுறேன்…”
“சரிம்மா.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நேர்ல பாக்கலாம்.. ”
காரை எடுத்து புறப்பட்டான் தயாளன். இன்னிக்கு ஸ்வேதாவை எப்படியும்…. என்று நினைத்தவாறு. அவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கதவை மூடினான். எதிர்புறமாக கதவு தன்னால் திறந்து மூடியது. ஒரு அரூபம் உள்ளே வந்து அமர்ந்து கொண்டது. அவனால் அதை உணர முடிந்தது. பயந்து விட்டான்.
“யா… யாரு.. “குரல் தழுதழுத்தது. அருகிலிருந்த சாய் பாபா புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டான்.
“நான் ஒரு அதிசய அமானுஷ்யம். என் பேரு ராஜி. எதையும் மாற்றிவிடும் சக்தி எனக்கு இருக்கு. நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னிக்கு நான் உன் கூட இருப்பேன். ஸ்வேதாவிற்கு கால் பண்ணி இன்னிக்கு வரவேண்டாம் என்று சொல்லிடு… ”
“என்னது அதிசய அமானுஷ்யமா.. அப்படின்னா ஆவியா.. ” பயத்தில் வியர்த்தது அவனுக்கு.
“ஆமா.. ஒரு காம வெறியன் கிட்ட நான் ஏமாந்துட்டேன். தற்கொலை பண்ணி இப்போ ஆவியா சுத்திட்டு இருக்கேன். என்னை உன்னால பார்க்க முடியாது. ஆனா தொட்டு உணர முடியும். என்னால எதையும் மாற்ற முடியும்… ” மீண்டும் ஆணித்தரமாக சொன்னது அந்த அரூபம்.
கைகள் நடுங்கியவாறே தொட்டுப்பார்த்தான். அவளது இடையில் உள்ள வளைவு சுளிவு உணர்ந்தான். நல்ல வாளிப்பான உடல் தான். “அப்போ இன்னிக்கு ஸ்வேதா கேன்சல்.. இவள பாத்துக்கலாம்..” மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“என்னோட கார் சின்னதா இருக்கு. இதை உன்னால் ஃபார்ச்சுனர் காரா மாற்ற முடியுமா?”
“கண்ணை மூடு”
அரூபம் தன் விரல்களை சுழற்றி ஒரு தடவை சொடுக்கியது.
“கண்ணைத் திற”
அவனுடைய கார் அவன் விரும்பிய ஃபார்ச்சுனர் காராக மாறியிருந்தது. “வாவ்.. உனக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கு..” பூரித்து போனான்.
ஸ்வேதாவிற்கு கால் செய்து வேறொரு முக்கிய பணி உள்ளதால் இன்று வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.
வீட்டிற்கு சென்றதும் எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டே காரை ஓட்டிச் சென்றான்.
கார் வீட்டிற்கு சென்றது.
அவனும் அந்த அரூபமும் இறங்கினார்கள்.
மீண்டும் ஒரு முறை அவன் தொட்டுப் பார்த்தான். “எல்லாம் உள்ள போய் பாத்துக்கலாம் வா… ”
“பார்றா…பேயா இருந்தாலும் பெண் அல்லவா. அதான் வெட்கம் போல.. ”
ராஜி சிரித்தாள். மிக அழகான சிரிப்பு. குழி விழும் கன்னம். சிவந்த உதடுகள். மான் போன்ற விழிகள். கச்சிதமான உடலமைப்பு. பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகி.
நேரே சென்று ஃப்ரிட்ஜை திறந்தாள். தனக்கு ஸ்ப்ரைட்டும் அவனுக்கு ஸ்காட்ச்சும் எடுத்து வந்தாள்.
“ஹேய்.. நீ சரக்கெல்லாம் அடிப்பியா…”
“பழக்கம் இல்ல. இது உனக்கு தான்”
கோப்பையில் ஊற்றிக் கொடுத்தாள். அவன் குடித்தான். இரண்டு ரவுண்ட் முடிந்தது. அரூபத்தை ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக் கொண்டான்.
“இன்னும் டைம் இருக்கு…” அவன் கையை தள்ளிவிட்டாள் ராஜீ. மூன்றாவது ரவுண்ட் முடிந்தது.
“ஸ்வேதா எத்தனையாவது….?”
“நான் அதெல்லாம் கணக்கே வச்சிக்குறது இல்ல…. நிறைய.. நிறைய.. லிஸ்ட் பெரியது…”
நான்காவது ரவுண்ட் முடிந்தது.
“இப்படி பெண்களை ஏமாற்றி உன் மோகத்தை தீர்த்துக் கொள்வது தப்பில்லையா? உன்னை நம்பி இருக்கும் சுகந்தி இப்படி செய்தாள் ஏற்றுக்கொள்வாயா? உன் இரண்டு பெண் பிள்ளைகளை எவனாவது இப்படி செய்தால் நீ சும்மா விடுவாயா..? இந்தா குடி… ”
ஐந்தாம் ரவுண்ட் முடிந்தது.
“மென் வில் பி மென். ஒரு ஆம்பிள கூப்பிட்டா அவனா நம்பி போறது பொண்ணுங்க தப்பு. நான் யாரையும் பலவந்த படுத்தல. அவங்க விருப்பத்தோட தான் நான்ன்ன்…….. ”
போதை தலைக்கு ஏறி மயங்கி மெத்தை மீது சாய்ந்தான்.
அதுவரை பொறுமை காத்த அரூபம், தனது அதிசய சக்தியை கொண்டு அவனை பெண்ணாக மாற்றியது.
பசி அதிகம் இருந்ததால் அவன் வாங்கி வைத்திருந்த சகல சைட் டிஷ்களையும் தின்று தீர்த்தது. தாகம் தீர ஸ்ப்ரைட்டை குடித்தது.
“இன்று ஸ்வேதாவை காப்பாற்றினேன். அன்று என்னை காபாற்றிக் கொள்ள முடியவில்லை. லிஸ்ட் பெரியதா… நாளை நீ எவன் லிஸ்டில் இருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்..”
பொழுது விடிந்தது. பெரும் தலைவலியுடன் தயாளன் எழுந்தாள்.
மீசை கொட்டிக் கிடந்தது. நீளமான அழகிய தலைமுடி. கனக்கச்சிதமான எட்டு வடிவத்தில் உடலமைப்பு. அங்க அவையங்களும் அதற்கேற்றாற் போல அமைந்திருந்தது.
அதிர்ந்து ஆடிப்போனாள் தயாளன். “அய்யய்யோ என்ன இது கொடுமை.. பெண்ணாய் எப்படி இருக்கப் போகிறேன்.. என்னை நான் பாதுகாக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் போலவே.”
போகும் இடமெல்லாம் அந்த அரூபம் ஆண்களாய் வந்து அவனைச் சீண்டி பழி தீர்த்துக் கொண்டது.
அரிசங்கர்
ஆந்தை தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அலுவலகம் சுத்தமாக இருந்தது. உள்ளே ஒரே ஒரு மேஜையும் அதற்கு எதிரில் மூன்று பிளாஸ்டிக் நாற்காலியும் இருக்க, மேஜைக்கு மறுபுறம் ஒரு ரோலிங் சேர் இருக்க நேராக அதில் சென்று அமர்ந்துகொண்டார். வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவும் வந்த வெளிச்சமே போதுமானதாக இருந்ததால் அவர் பகலில் மின்விளக்கை போடுவதில்லை. குளிர் காலம் என்பதால் அவர் மின்விசிறியை போடலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தார். மின்விசிறி போட்டால் குளிர்கிறது. நிறுத்தினால் என்னவோ போல் இருக்கிறது. எதற்கு செலவு என்று போடாமலேயே இருந்தார். காலையிலேயே அவருக்கு கடுப்பாக இருந்தது. எந்த வேலையுமில்லாமல் இருந்தார். சுற்றி ஒருமுறை தன் அலுவலகத்தைப் பார்த்தார். அவருக்கு இடதுபுறம் ஒட்டப்பட்டிருந்த சி.ஐ.டி. சங்கர் என்ற திரைப்படத்தின் பெரிய போஸ்டரை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் துப்பாக்கியுடன் ஜெயசங்கர் இவரைப் பார்த்து முறைப்பதுபோலவே இருந்தது. சட்டென அவருக்கு அந்தக் குரல் கேட்டது.
“சும்மாவே இருந்தா எப்படி ஒரு டீ செல்றது…”
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார். வலதுபக்கமாக இருந்த அலமாரியில் எதையோ தேடியபடி ஒரு பெண்மணி இருந்தார். ஆந்தையைப் போலவே அவரும் ஐம்பது வயது மதிக்கத்தக்கவாறு இருந்தார்.
ஆந்தை தன் கைப்பேசியை எடுத்து டீக்கடைக்கு போன் செய்து ஒரு டீ கொண்டுவர சொன்னார். மீண்டும் சலிப்புடன் அந்தப் பெண்மணியை எரிச்சலுடன் பார்த்து பேச ஆரம்பித்தார்.
“எத்தன துப்பறியும் கதை படிச்சிருக்கேன். ஒரு ரூபாலா மாதிரியோ, வைஜெயந்தி மாதிரியோ, சுசிலா மாதிரியோ எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கிடைச்சிருக்கக் கூடாதா… எனக்குன்னு வந்து வாச்சியே கழுவாத பிரியாணி அண்டா மாதிரி…”
“சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதீங்க… நான் ஒன்னும் நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருக்கற ஆள் இல்ல… வெறும் கற்பனை தான்… அழகா வேணும்னா நீங்க தான் அப்படி கற்பனைப் பண்ணனும்… உங்க மண்டைக்குள்ள என்ன இருக்கோ அதான வரும்…”
“ஓவரா பேசாத கிளம்பு…” என்று அவர் சொன்னதும் அந்த பெண்மணி மறைந்தாள். சற்று நேரத்தில் டீ வர, அதை குடித்துவிட்டு செய்துத்தாளை எடுத்தார். முதல்பக்கம் தாண்டுவதற்குள் மீண்டும் கைப்பேசி அடித்தது. வாடகைக்காக உரிமையாளர்தான் அடிக்கிறாரோ என்று பதட்டமாக எடுத்துப்பார்த்தார். டீக்கடைக்காரர் பெயர் இருந்தது. சலிப்பாக எடுத்து “ஹலோ” என்றார்.
“சார்.. ஒரு பார்ட்டி உங்களத்தான் தேடின்னு வருது…”
“சரி சரி.. அவன் உள்ள வர வரைக்கும் அப்படியே பேசிட்டு இரு…”
“இன்னா சார்…”
“ஆள் வர சத்தம் கேக்குது… ஓகே சார்… ஓகே சார்… நோ பிராப்ளம்… எக்ஸ்ரா பேமெண்ட்லாம் வேண்டாம் சார்… நீங்க கொடுத்தே போதும் சார்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு உருவம் வந்து அவர் எதிரில் நின்றிருந்தது. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். வந்த உருவம் அலுவலகத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க அவர் போனை வைத்துவிட்டு “எஸ்…” என்றார்.
“உண்மை டிடெக்டீவ் ஏஜென்ஸி…”
“ஆமா… இதுதான் உக்காருங்க…”
வந்தவர் உட்கார்ந்தார். ஆந்தை அவரை ஆராயத் தொடங்கினார். வந்தவர் ஏதோ ஐடி கம்பெனி ஆள் போல் அவருக்கு தோன்றியது. கண்டிப்பாக ரொம்ப மொக்கயான வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பினார்.
“சொல்லுங்க சார்… நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்…”
“சார்… எனக்கு ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”
“ஓ… சொல்லுங்க யாரக் கண்டுபிடிக்கணும்… உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு… முழு விபரத்தையும் சொல்லுங்க…”
“சார் உங்க பீஸ்…”
“மொதல்ல கேஸ சொல்லுங்க சார்… பிஸ்லாம் அப்பறம் பேசிக்கலாம்…”
“அதுவந்து சார்… ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”
“அதான் சொல்லிட்டீங்களே…”
“சார்… அவன் ஒரு கொலைய நேர்ல பார்த்த முக்கியமான சாட்சி…”
கொலை என்றதுமே ஆந்தை சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். வந்தவருக்கு வேர்க்க ஆரம்பிக்க “சார்… கொஞ்சம் கோச்சிக்காம… அந்த ஃபேன் சுவிட்ச போடறீங்களா” என்று வந்தவரையே வேலை வாங்கினார். அவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று ஃபேன் ஸ்விட்சைப் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தார்.
“சொல்லுங்க சார்… என்ன கொலை… எப்ப நடந்தது… எங்க நடந்தது… எந்த ஸ்டேஷன்ல கேஸ் ஃபைல் ஆகியிருக்கு…” என்று ஆர்வத்துடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். தன் வாழ்நாளில் முதல் கொலை கேஸ் அவரிடம் வந்திருக்கிறது என்ற படப்படப்பு அவரின் உடல் மொழியில் வெளிப்படையாக தெரிந்தது.
“சார் அவன் பேரு என்னன்னு தெரியாது சார்…”
“ஓ… அவனப்பத்தி வேற என்ன தகவல்கள் இருக்கு…”
“எனக்கு சரியா தெரியல சார்…
“என்ன சார் குழப்பறீங்க… எனக்கு மொதல்ல இருந்து முழுசா எல்லாத்தையும் சொல்லுங்க சார்…”
“முழுசா சொல்ல முடியாது சார்… அது நானூறு பக்கம்… நான் சுருக்கமா சொல்றன்…”
“என்னவோ புரியற மாதிரி சொன்னா சரிதான்… சொல்லுங்க…”
“பாண்டிச்சேரில அல்லிகிணறுங்கற ஊர்ல ஒரு கொலை நடந்தது சார். செத்தவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பெரிய சண்ட… அவ கொஞ்சம் கோவக்காறி… ஆம்பளைங்க கூட சரிக்கு சமமா சண்டைக்கு போவா… அதனால அவதான் அவன கொன்னுருக்கணும்ன்னு ஊர்ல பேசிக்கிட்டாங்க… போலிஸுக்கும் அது வசதியா போச்சு… அவள புடிச்சி உள்ளப் போட்டாங்க… ஆனா அவ அந்தக் கொலைய செய்யல சார்… அந்தக் கொலைய பண்ணது வேற ஒருத்தன். அத ஒருத்தன் பாத்திருக்கான். அவனத்தான் கண்டுப்புடிக்கணும்…”
“ஓஹோ…”
“பாண்டிச்சேரில நடந்தக் கொலைக்கு நீங்க ஏன் சென்னையில இருக்கற டிடெக்டிவ் ஏஜென்ஸிக்கு வரீங்க… அங்கயே எதுவும் இல்லையா…”
“நான் இங்கதானே சார் இருக்கேன்…”
“கொலை எப்போ நடந்தது…”
“அப்படி எதுவும் சரியா சொல்ல முடியாது… சார்… எப்ப வேணும்னாலும் வெச்சிக்கலாம்…”
இப்போது ஆந்தை கொஞ்சம் கடுப்பானார். “சார்… நீங்க தகவல்களை சரியா சொன்னாத்தான் என்னால எதாவது உதவ முடியும்…”
“சார்… நீங்க கேக்கற எல்லா கேள்விக்கும் தான் நான் பதில் சொல்றனே…”
“எங்க சொல்றீங்க…”
“சரி… இப்ப ஒன்னொன்னா கேளுங்க… சரியா சொல்றன்…”
“பாண்டிச்சேரில அல்லிக்கிணறுங்கற கிராமம் எங்க இருக்கு…?”
“அப்படி ஒரு கிராமம் பாண்டிச்சேரில இல்ல சார்…”
“யோவ்… என்ன விளையாடறியா… காலங்காத்தால கடுப்பேத்திகிட்டு… எழுந்து போயா…”
“சார்… ஏன் சார் கோவப்படறீங்க… வழக்கமா நான் தான் டென்ஷன் ஆவேன்…”
ஆந்தைக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. எதிரில் இருப்பது உண்மையிலேயே மனிதன் தானா இல்லை இதுவும் தனது கற்பனையா என்று. மெல்ல எழுந்து எதிரில் இருந்தவனை நெருங்கினார். மெதுவாக அவனைத் தொட்டார். அவன் உடலை அவரால் உணர முடிந்தது.
“என்ன பண்றீங்க சார்…”
“இல்ல ஒன்னுமில்ல…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்து உட்கார்ந்தார். பிறகு மெல்ல டீ சாப்பிடறீங்களா…” என்றார். எதிரில் இருந்தவர் தலையசைக்க, தனது செல்போனை எடுத்து கடைக்காரனை அழைத்து இரண்டு டீ சொன்னார். பிறகு பெருமூச்சொன்றை விட்டுவிட்டு “சார்… என்னால முடியல… வயசாயிடுச்சி… எதுவா இருந்தாலும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… இல்லனா டீ வரும் குடிச்சிட்டு கிளம்புங்க…”
“சார்… நான் தெளிவா சொல்றன் சார்… அதுக்கு முன்னாடி… ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு தான் கொண்டுவந்திருந்த பையைப் பிரித்து அதிலிருந்து ஒரு பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து மேஜையின் மீது வைத்தார். ஆந்தை அதையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன சார் இது…”
“சார்… இதுதான் நான் புதுசா எழுதியிருக்கற நாவல்…”
ஆந்தை அதைத் தூக்க முடியாமல் தூக்கினார். பிரித்து முதல்பக்கத்தைப் பார்த்தார். அதில் முதல் வரியில் ‘ஒரேக் குத்துல பொட்டுன்னு போயிட்டான்’ என்றும் இரண்டாவது வரியில் ‘நாவல்’ என்றும் மூன்றாவது வரியில் ‘அரிசங்கர்’ என்றும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆந்தைத் தலையைத் தூக்கி எதிரில் இருந்தவரிடம் “சார்… உங்கப் பேர கேக்கவே இல்ல…”
“என் பேரு அரிசங்கர்…”
“அப்படின்னா நீங்க ஒரு எழுத்தாளர்…”
“சார்… நான் சொல்லவேயில்ல… எப்படி கண்டுபிடிச்சீங்க சார்…”
அவர் பெருமையாக மெல்ல சிரித்துக்கொண்டார்.
“சரி இப்பவாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிளீஸ்…”
“சார்… உங்க கையில இருக்கறது என்னோட புது நாவல்… இப்பத்தான் எழுதிமுடிச்சேன்… அதுல ஒரு கொலை நடந்தது… ஆனா கொலையே பண்ணாத ஒரு அப்பாவிப் பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சி… ஆனா கொலை நடந்தப்ப அதப் பாத்த ஒரு சாட்சி இருக்கற மாதிரி தான் நான் எழுதியிருக்கேன்… ஆனா அதுக்கப்பறம் அவன் எங்கப் போனான்னு எனக்கே தெரில நீங்க தான் இந்த நாவலப் படிச்சி அவனக் கண்டுபிடிக்கனும்…”
“ஓ… இது உங்க நாவல் தான… உங்க இஷ்டப்படி இருந்தாதான் என்ன… அவனக் கண்டுபிடிச்சி என்னப் பண்ணப்போறீங்க…”
“சார்… மொத்தம் ரெண்டு விஷயம் சார்… ஒன்னு ஒரு அப்பாவி பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சின்னு எனக்கே கஷ்டமா இருக்கு… ரெண்டாவது நான் இந்த நாவல் படிக்கறதுக்காக எழுத்தாளர் தென்னமரத்துகிட்டக் கொடுக்கப் போறன்… அவரு கொஞ்சம் ஸ்டிரிக்டா பாப்பாரு… லாஜிக் கேள்விலாம் கேப்பாரு… சரியா சொல்லலனா அப்பறம் காலச்சுவடுக்கு ரெகமெண்ட் பண்ணமாட்டாரு… அதனாலத்தான் எனக்கு அந்த சாட்சிய கண்டுப்பிடிச்சே ஆகணும் சார்…”
“எனக்குப் புரிது… நீங்க இதக் கொடுத்துட்டுப் போங்க… நான் படிச்சி கண்டுபிடிச்சிட்டு உங்கள கூப்பிடறன்…”
“ஓகே சார்… உங்க பீஸ்…”
“அதப் பாத்துக்கலாம்… நீங்க கிளம்புங்க…”
“சார்… டீ இன்னும் வரலயே…”
“பழைய பாக்கி நிறைய இருக்கு… டீ வராது… நீங்க கிளம்புங்க…”
அரிசங்கர் மெல்ல எழுந்து வெளியே சென்றதும் ஆந்தை அந்த பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார்.
ஒருவாரத்திற்கு பிறகு…
ஆந்தை மிக உற்சாகமாக இருந்தார். அவரது உதவியாளரிடம் தான் இந்த கேஸை முடித்துவிட்டதாக பெருமையாக சொன்னார். அவர் அரிசங்கரின் வருகைக்காகக் காத்திருந்தார். அரிசங்கர் வருவது தாமதமாக அவர் முகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே வந்தது. அவர் உற்சாகம் மெல்ல மெல்ல வடிந்துகொண்டே வர, அவரின் உதவியாளரின் அழகு குறைந்துகொண்டே வந்தது. சரியாக பதினொரு மணிக்கு அரிசங்கர் ஆந்தையின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். ஆந்தை கொஞ்சம் கோவமாக, “என்ன சார் பத்து மணிக்கு வரசொன்னா பதினொரு மணிக்கு வரீங்க.
“சாரிங்க சார்… வர வழியில ஏதோ போராட்டம்… டிராபிக் ஜாம்… அதான்…”
“சரிசரி விடுங்க… உங்க கேஸ் முடிஞ்சிது…”
அரிசங்கரின் முகம் பிரகாசமானது. “சொல்லுங்க சார்… அவன் எங்க இருக்கான் கண்டுபிடிச்சிட்டீங்களா… அந்தப் பொண்ணக் காப்பாத்திடலாமா…”
“கண்டுபிடிச்சிட்டேன்… ஆனா அந்தப் பொண்ணக் காப்பாத்த முடியுமான்னு தெரியல…”
“என்ன சார் சொல்றீங்க…”
“உங்க நாவல்ல நீங்க எழுதியிருக்கறதப் படிக்கறன் கேளுங்க…” என்று சொல்லுவிட்டு புத்தகத்தில் தான் குறித்து வைத்திருந்த ஒரு பக்கத்தை எடுத்து ஆந்தை வாசிக்க ஆரம்பித்தார்.
“அந்தத் தெருவில் எந்த விளக்கும் எரியவில்லை. சில வீடுகளிலிருந்து கொஞ்சம் வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கட்டெரும்பு மெல்ல நடந்துவந்துகொண்டிருந்தார். அப்போது மறைவிலிருந்து ஒரு உருவம் மெல்ல வெளிப்பட்டு சத்தமெழுப்பாமல் அவரைப் பின்தொடந்தது. எந்த வெளிச்சமும் இல்லாத இடத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த உருவம் மெல்ல கட்டெரும்பின் தோளைத் தொட அவர் திரும்பினார். பின்னாலிருந்த உருவத்தைப் பார்த்ததும் மெல்ல புன்னகைத்து ‘டேய் கோழி’ என்றார். அடுத்த விநாடி கட்டெரும்பின் வயிற்றில் தன் கையிலிருந்த கத்தியால் கோழி ஒரே குத்து குத்தினான். கத்தி ஆழமாக இறங்கியது. வந்த வேலை முடிந்தத் திருப்தியில் கோழி மெல்ல மூச்சுவிட தூரத்தில் யாரோ நிற்பது போல் இருந்தது.”
படிப்பதை நிறுத்திவிட்டு அரிசங்கரை நிமிர்ந்துப் பார்த்தார் ஆந்தை. அரிசங்கர் எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, “பிரச்சனையே இந்த கடைசி வரியில தான்.” என்றார்.
“என்ன பிரச்சனை சார்…” என்று தயங்கியவாறே கேட்டார் அரிசங்கர்.
“அவன் கொலை செய்யறத யாரோ பாத்துடறாங்கன்னு எழுதியிருக்கீங்க… அப்படி ஒருத்தன் பாத்தா கொலை செஞ்சவன் சும்மா இருப்பானா… சொல்லுங்க…?
அரிசங்கர் அமைதியாக இருந்தார்.
“ஆனா அந்த இருட்டுல நின்னு கொலையப் பாத்தது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்…”
“அப்படியா… யாரு சார் அது…”
ஆந்தை மீண்டும் குறித்துவைத்திருந்த வேறு ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.
“கட்டெரும்பு வழக்கமாக வேலையை விட்டு அந்தத் தெரு வழியாகத்தான் வீட்டிற்குப் போவார். அது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவருக்கு அந்தத் தெருவில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ஊடுகொள்ளுத்தி. பெரும்பாலான நேரத்தில் கட்டெரும்பு அவர் வீட்டைக் கடக்கும் போது அவர் வாசிலில் நின்றிருப்பார். நடந்துக்கொண்டே சில வார்த்தைகளை ஊடுகொளுத்தியிடம் பேசிவிட்டுச் செல்வார்.” என்று முடித்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.
அப்போது ஆந்தைக்கு செல்போன் அடிக்க எடுத்துப் பார்த்தார். தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. தயக்கத்துடன் எடுத்து ஹலோ என்றார்.
“ஆந்தையா”
“ஆமா சார்…”
“சார் இந்த மாச வாடகையும் இன்னும் வரல சார்…”
“சாரி சார்… ராங் நம்பர்…” என்று போனை அணைத்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.
அரிசங்கர் அமைதியாக இருக்க, ஆந்தைத் தொடர்ந்தார்.
“ஸோ… கேஸ் க்ளோஸ்டு…”
பெருமூச்சொன்றை விட்ட அரிசங்கர், “ரொம்ப தாங்ஸ் சார்… அந்தப் பொண்ண காப்பாத்திடலாம்னு நெனச்சேன்… ம்.. அவ தலையெழுத்து… உங்க பீஸ்…?”
“பீஸ் இருக்கட்டும் விடுங்க… இனிமே தான் முக்கியமான சில விஷயங்களை உங்க கிட்ட பேசணும்…”
“சொல்லுங்க சார்…”
“கட்டெரும்ப வேணா கோழி கொன்னுருக்கலாம்… ஆனா சாட்சி செத்ததும் அந்தப் பொண்ணு தவறுதலா கைதாகி தண்டனை அனுபவிக்கறதுக்கும் நீங்க தான் காரணம். அதாவது உங்க அலட்சியம்… கதாப்பாத்திரத்தையும் கதையையும் நீங்க சரியா நகர்த்தாததுனாலதான் இன்னிக்கு ரெண்டு அப்பாவி ஜீவன் பாதிக்கப்பட்டிருக்கு… அதானால நீங்களும் குற்றவாளிதான்…”
அரிசங்கர் ஆந்தையை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிந்தார்.
“அதனால உங்கள கைது செய்ய போலிஸ் வந்துகிட்டு இருக்காங்க… நான் காலையிலயே தகவல் சொல்லிட்டேன்… ஏன் இன்னும் வரலன்னு தெரில…
“நான் தான் சொன்னனே வர வழியில போராட்டம் நடக்குதுன்னு…”
“ஒகோ… இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் கண்டுபிடிச்சிருக்கேன்… நீங்க அந்தப் பொண்ண வர்ணிச்சிருக்கறதப் பார்த்தா உங்களுக்கு அந்தப் பொண்ணு மேல தவறான எண்ணம் இருந்திருக்கு…”
அரிசங்கர் அமைதியாக இருந்தார்.
“நீங்க அந்தப் பொண்ண லவ் பண்ணீங்களா…”
“தெரில சார்…
“சரி… போலிஸ் வரவரைக்கும் வெயிட் பண்ணுங்க… அப்பறம் இன்னொரு முக்கியமாக விஷயம்… உங்க நாவல்ல ஏகப்பட்ட எழுத்துபிழைகள் இருந்தது…”
“சரி பண்ணிடறன் சார்…”
“சரி நான் ரெண்டு டீ சொல்றன்… அதுவரைக்கும் அந்தப் பொண்ண நீங்க முதல் முதல்ல எங்கப் பாத்தீங்கன்னு சொல்லுங்க… நீங்க அந்தப் பொண்ண நிச்சயம் லவ் பண்ணியிருக்கீங்க…”
அரிசங்கர் லேசாக வெட்கப்பட்டார். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“அது ஒரு அழகான மாலைப் பொழுது சார்….”
*
ரவி ரத்தினசபாபதி
அன்று திருச்சி எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் மாயவரத்தை அடைந்துவிட்டது. பெரும்பாலும் குறைந்தது அரைமணி தாமதத்தில்தான் வரும்.
நடைமேடையில் நடக்கையில் எப்போதும்போல் கதிரின் கண்களில் ஆர்.எம்.எஸ். அலுவலகம்தான் முதலில் பட்டது. கேரள பாணியில் இருந்த இரட்டைக்கதவின் மேல்புறமாக எட்டிப் பார்த்தபோது, தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. அனேகமாக எல்லோரும் ஓய்வு பெற்றிருக்கலாம். பணியாளர்களும் மிகவும் குறைந்துவிட்டனர். ஆர்.எம்.எஸ். என்பதே ஏறத்தாழ இல்லை என்ற நிலை. இன்று மாலை ஆர்.எம்.எஸ்ஸில் ஒரு கார்டு போட்டால் சென்னைக்கு மறுநாளே அது போய்ச் சேர்ந்துவிடும். ஆனால் அந்தக் காலம் இறந்த காலம். இரவும் பகலும் இடைவிடாது செய்யப்பட்ட அந்த மக்கள் சேவை இப்போது கூரியர் கம்பெனிகள் கையில். தபால் பைகளும் சாக்கு மூட்டைகளும் தள்ளு வண்டிகளுமாக எப்போதுமே பிஸியாக இருக்கும் அலுவலகம், இன்று காலியாக இருந்தது.
தயிர், லெமன் சாதங்கள் கூவிக்கூவி விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தில் பேப்பர் தட்டில் ஆரஞ்சு நிறத்தில் கேசரி விற்பனையாகிக் கொண்டிருந்தது. கதிர் பயணித்த பெட்டியிலிருந்து இறங்கிய பரிசோதகர் வேகமாக அடுத்த பெட்டியை நோக்கிச் சென்றார். சிறு வயது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் போல் தெரிந்தது.
பத்தடி நடந்தவுடன், இறைந்து கிடக்கும் தீப்பெட்டிகளைப் போல நடைமேடையில், மரப்பெட்டிகள். பெட்டிகளின் பக்கவாட்டிலும், மேற்புறமும் பெயர்கள். ஏதோ எண்களும். டிக்கெட் பரிசோதகர்களின் பெட்டிகள். எந்த வண்டியில் ஏறுவார்கள், இறங்குவார்கள் என்பதைப் பொறுத்து பெட்டி நடைமேடைக்கு வரும், போகும்.
ரயில் நகரத் தொடங்கியது. இரண்டு பெட்டிகள் இவனைக் கடந்தன. சற்று வேகமெடுக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ ஒருவர் வேகமாக ஓடியவாறு படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தார். உள்ளே இருந்து பதட்டமான குரல்.
கதிரும் இப்படி ஓரிரு முறைகள் ஏறியிருக்கிறான். ஒருமுறை திருவாரூர் ரயில் நிலையத்தில். குழந்தைக்கு பால் வாங்க இறங்கினான். ரயில் புறப்பட்டதை கவனிக்கவில்லை. அன்று நாகூர் வண்டியை சீக்கிரமே பிரித்துவிட்டார்கள். கம்பன் சீக்கிரமே புறப்பட்டுவிட்டார். உள்ளே மனைவியும் கைக்குழந்தையும். ரயில் வேகமெடுக்க ஆரம்பித்து விட்டது. கையில் சுடச்சுட பால் தம்ளருடன் ஓடி எப்படியோ ஏறி விட்டான். சிலர் திட்டினார்கள். சிலர் உச்சுக் கொட்டினார்கள்.
பரிசோதகர்களின் ஓய்வறையிலிருந்து வந்தவர் கதிருக்குப் பரிச்சயமானவர் போல் தோன்றினார். அவரோ? இல்லை. அவரில்லை. அவர் இந்நேரம் ஓய்வுபெற்றிருப்பார். அப்பவே அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். என்ன ஓர் அற்புதமான மனிதர்! அதன் பிறகு அவரை பயணத்தில் பார்க்கவே வாய்க்கவில்லை.
அது நடந்து, என்ன ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்குமா? செந்தில் அன்று ஸ்டேஷனுக்கு வராமல் இருந்திருந்தால், அவனிடம் டிக்கெட்டை கொடுக்காமல் இருந்திருந்தால், அந்தச் சம்பவமே நடந்திருக்காது.
பிராட்கேஜ் லைன் போட ஆரம்பித்திருந்த நேரம். பாதி வேலைகள் முடிந்திருந்தன. மீட்டர் கேஜ் நடைமேடைகள் இடிக்கப்பட்டு, பெரிய வண்டிகளுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றிக் கொண்டிருந்தார்கள். மாயவரத்திலும் அப்போது வேலை நடந்து கொண்டிருந்தது.
மீட்டர்கேஜ் வண்டி என்றாலே ஓர் அழகுதான். செங்கோட்டை பாஸஞ்சர்தான் இந்தப் பக்கத்துக் கதாநாயகன். சென்னையிலிருந்து தென்காசி, செங்கோட்டை வரை செல்லும் பிரபலமான வண்டி. காந்தியடிகள் இந்த வண்டியில் பயணம் செய்திருக்கிறார் என்று சொல்வதுண்டு. இங்கே இறங்கி தில்லையாடியும் போயிருக்காராம்.
தஞ்சை, கும்பகோணம் மாயவரம் பகுதிகளிலிருந்து சென்னை செல்பவர்களுக்கு இதுதான் ’ஆகிவந்த’ வண்டி. இதற்கு அப்புறம் இரண்டு வண்டி இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இதில் பிரயாணம் செய்யத்தான் விரும்புவார்கள். கதிருக்கும் இந்த வண்டிதான் பிடிக்கும். பத்து ரூபாய் டிக்கெட்டில் மாம்பலம் போய் இறங்கியிருக்கிறான். மாயவரத்தில் ஒன்பதரை மணிக்கு ஏறிப் படுத்தால், காலை ஐந்து, ஐந்தரைக்கு மாம்பலத்தில் இறங்கிவிடலாம். சுகமான, தூக்கத்தைக் கெடுக்காத பயணம்.
கதிர் செங்கோட்டை பாஸஞ்சரில்தான் அன்று டிக்கெட் போட்டிருந்தான். தாம்பரம் வரைக்கும். அவனுடன் இரண்டு தங்கைகளின் மகள்களும். விடுமுறைக்காகச் சென்னைக்கு அழைத்துப் போய்க் கொண்டிருந்தான். வழியனுப்ப அன்றைக்குச் செந்தில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். பசங்க இருவரும் நாலடி தள்ளி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். சிறுவயது. விஷயமே இல்லாமல் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்.
அவ்வப்போது ஸ்டேஷன் வாசல் பக்கம் திரும்பி ’ஓஜோ’ வருகிறானா என்று பார்த்தான். வருவது சந்தேகமே. கடைகளுக்குச் சரக்குப் போட்டுக்கிட்டு இருப்பான். இல்லை. இப்போ சாயங்காலம். அவனுக்கு வசூல் நேரம். இரவு ஒன்பது வரை.
வெயிட்டிங் லிஸ்டில் இருந்த டிக்கெட் உறுதியாகிவிட்டது. எந்த பெட்டி என்று பார்ப்பதற்காக, இவனிடமிருந்து டிக்கெட்டை வாங்கிச் சென்றிருந்தான் செந்தில். வாசலருகில் ஒட்டியிருந்த சார்ட்டைப் பார்த்துவிட்டு கோச் நம்பரைச் சொல்லிக் கொண்டே வந்தான் அவன்.
பேச்சு, வழக்கம்போல், பொது அரசியல், யூனியன், அவனது அலுவலகப் பணி, நிரந்தரம் என்பதாகப் போய்க் கொண்டிருந்தது. கொள்முதல் நிறுவனத்தில் தற்காலிகப் பணி அவனுக்கு. இருவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகும். தூரத்தில் ஓஜோவின் தலை தெரிந்தது. நாலு முழ வேட்டியில், அரைக்கைச் சட்டையில் இருந்தான். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறவன். தன் கையை ஊன்றி கரணம் போடுகிறவன். எப்போதும் அக்கறையுடன் உடையணிய மாட்டான். இரண்டாம் நாள் போடுகிற சட்டை போலத்தான் இருக்கும். இன்றும் அப்படித்தான்.
வேலைச்சுமையை மறைக்கும் அந்த இயல்பான சிரிப்புடன் ‘என்ன கதிர் மறுபடியும் எப்போ’ என்றான் ஓஜோ.
அவன் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு செந்தில் சிரித்தான்.
’நீங்க எப்போ வந்தீங்க, செந்தில்?’
‘முக்கா மணி இருக்கும். எப்படி பிஸினெஸ் போகுது?’
‘உண்மையா சொல்லணும்னா, ரொம்ப நல்லாவே போய்ட்டிருக்கு. ரஸ்க், கோதுமை ரவை, சேமியா. இப்படியே போய்க்கிட்டு போதும்.’
தூரத்தில், வண்டியின் தலை தெரிந்தது. மேற்கு திசையிலிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு பக்கம் திரும்பி மெதுவாக நகர்ந்து வந்தது. எப்போவாவது நாம் ரசித்துப் பார்க்கும் மரவட்டை போல், கொள்ளை அழகுதான். மீட்டர் கேஜ் ரயிலும் அழகுதான். கச்சிதமான அமைப்பு. நடைமேடையில் திடீரென்று ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டது. தரையிலும், கான்க்ரீட் நாற்காலிகளிலும் அமர்ந்திருக்கும் பெட்டிகளும், பைகளும், மூட்டைகளும் அவசர அவசரமாக கைகளுக்கு மாறின. குழந்தைகளை இழுத்துப் பிடித்துக் கொண்ட கரங்கள். எப்போதும் இவன் வேடிக்கை பார்க்க விரும்பும் காட்சி.
தங்கைப் பெண்களைப் பெட்டியில் ஏற்றி, பின்னாலேயே சென்று, இரண்டாவது ’பே’யில் அவர்கள் இருவரையும் உட்கார வைத்தான். கீழே இறங்கி, வெளியில் நின்ற செந்திலுடன் ஓஜோவுடனும் சிறிது நேரம் பேசியிருப்பான்.
காவிரிப் பக்கம் இருந்த சிக்னல் ஆரஞ்சிற்கு மாறியது. கதிரும் பார்த்தான். ’என்ன இன்னைக்கு சீக்கிரம் எடுத்துட்டான்…!’
‘கதிர் ஏறிக்கோ. வண்டி கெளம்பப்போவுது.’ என்றான் ஓஜோ.
பெட்டியில் ஏறிக்கொண்டு இருவருக்கும் கையசைத்தான் கதிர். ‘பார்ப்போம்.’
தூரத்தில் விசில் சப்தம், தண்டவாளங்களில் தாளம் போட்டவாறு வண்டி நகர ஆரம்பித்தது. ஒன்றிரண்டு பேர் ஓடிவந்து பெட்டிகளில் ஏறினர். இவன் பெட்டியிலும் ஒருத்தன்.
வண்டி வேகமெடுத்தது. படிக்கட்டில் நின்று நண்பர்களைப் பார்த்துக் கையசைத்தவன் தங்கை மகள்கள் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி நகர்ந்தான்.
‘என்ன மாமா, வண்டிக்குள்ள வரமாட்டிங்களோன்னு நினைச்சோம்’ என்றாள் பெரியவள் தேவி.
சின்னவள் பாரதியும் சேர்ந்துகொண்டு ஏதோ கிண்டலடித்தாள். இவர்களிடம் மாட்டினால் தொலைந்தோம். கல்லூரி படிப்பை முடித்த பெண்கள். கதிரிடம் மதிப்பு உண்டு. ஆனால், அவ்வப்போது கதிரின் மனைவியோடு சேர்ந்து கேலி பேச ஆரம்பித்தால்… கதிருக்கு ’டெரர்’ என்று பெயர் வேறு வைத்திருந்தார்கள். எப்போதும் முகத்தை அவன் சீரியஸாக வைத்திருப்பவன் என்பதால்.
காவிரிப் பாலத்தைக் கடந்து சோழம்பேட்டைக் கேட்டையும் தாண்டிய வண்டி மேலும் வேகமெடுத்தது. அடுத்தது நீடுர், அப்புறம் ஆனந்ததாண்டவபுரம். பரிசோதகர் வந்துவிட்டால், டிக்கெட்டைக் காட்டிவிட்டு படுக்கையை இழுத்துவிட்டுப் படுத்துக் கொள்ளலாம். ஒரு நல்ல தூக்கம் வேண்டும். சித்தி வீடுகள் நண்பர்கள் என்று இரண்டு மூன்று நாட்களும் நல்ல அலைச்சல்.
இரண்டு ’பே’ தள்ளி பரிசோதகர் டிக்கெட்களைப் பரிசோதிப்பது தெரிந்தது. அவரை இதற்கு முன் பயணத்தில் பார்த்திருக்கிறான். கிட்டத்தட்ட முள்ளும் மலரும் படத்து சாமிக்கண்ணு போன்ற உடலமைப்பு. மைனஸ் அந்த அசட்டுச் சிரிப்பு. ‘ஒ’ வடிவ முகம். பேட்ஜு. திறந்த கோட். கையில் பரிட்சை அட்டையில் பயணிகளின் லிஸ்ட். கண்டிப்பான முகம்! எப்படியும் இரண்டு மூன்று பெட்டிகளாவது பார்க்க வேண்டியிருக்கும்.
ஆறு பேரில் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இன்னும் ஏறவில்லை. ஒருவேளை அடுத்துவ ரும் நிலையங்களில் ஏறலாம்.
இருக்கையில் வசதியாக அமர்ந்தவாறு பெயர்ப் பட்டியலைப் புரட்டினார். அந்த முஸ்தீபே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லியது. டிக்கெட்டை எடுக்க கதிர் சட்டைப் பைக்குள் கைவிட்டான். இல்லை, பேண்ட் பாக்கெட்டில்? இரண்டிலும் இல்லை. கதிருக்கு நெற்றி வியர்த்தது.
பரிசோதகர் இவன் பக்கம் கையை நீட்டினார்.
‘சார் ஒரு நிமிஷம்’, துணிப்பை ஸிப்பைத் திறந்து உள்ளே கைவிட்டான். அதிலும் இல்லை.
‘சார், டிக்கெட் வாங்கியிருந்தேன்…’ மென்று விழுங்கினான் கதிர்.
அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டு வந்த அந்தப் பெண்களின் முகம் மாறிவிட்டது. இவன் முகமும் பதட்டத்தில் சிறுத்தது. இம்மாதிரியான நேரங்களில் இவனுக்கு ஏற்படும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. கைகள் நடுங்கத் தொடங்கின. சட்டைக்குள் வியர்க்கத் தொடங்கியிருந்தது.
பரிசோதகர் முகத்தில் மெலிதான சிரிப்போடு குனிந்தவர், மேலும் கேள்விகள் கேட்காமல், அட்டையிலிருந்த காகிதங்களைப் புரட்டினார். என்ன செய்தோம் டிக்கெட்டை? பாக்கெட்டில்தானே இருந்தது. கீழே எங்காவது விழுந்திருக்குமோ?
இந்த பெண்கள் வேறு. தனியாக வந்திருந்தால், இறங்கியிருக்கலாம். இருவரையும் வைத்துக்கொண்டு இந்த இருட்டு நேரத்தில் என்ன செய்வது? வருவது ஆனந்ததாண்டவபுரம். அங்கே இறக்கிவிட்டு விடுவாரோ? இல்ல நாமே இறங்கிவிடலாமா?பணம் கொடுக்கலாம். இந்த பெர்த்தெல்லாம் காலியாத்தானே இருக்கும். மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடலாம். ஆனால், மனுஷனைப் பார்த்தால் கண்டிப்பான ஆள் போலத் தெரியுதே. பணம் கொடுப்பதே பிரச்சனையாகி விட்டால்?
‘சார். கன்ஃப்ர்ம்டு டிக்கெட்தான். சார்ட்ல பாத்தாலே தெரிஞ்சிருக்கும். கதிர் என் பெயர், அப்பறம் இந்த பெண்கள் பெயர் இருக்கும். பெர்த் ஏழு, எட்டு, பத்து. இந்தப் பசங்கள அழைச்சுட்டு எப்படி சார் டிக்கெட் இல்லாம வந்திருப்பேன். தாம்பரத்துக்கு மூனு பெர்த்துக்கு என்ன பணமோ பே பண்ணிடுறேன் சார்’ என்றான் கதிர்.
’சாமிக்கண்ணு’ கதிரை மேலும் கீழும் ஒருமுறைப் பார்த்தார். கண்ணாடி மூக்கில் இறங்கியிருந்தது. அப்படியே திரும்பி, தேவியையும் பாரதியையும் பார்த்தார். கண்களில் நீர் வராத குறை. முகம் சிறுத்து அமர்ந்திருந்தார்கள். அவர் வேகமாக ஏதாவது பேசினால் அழுதுவிடுவார்கள்.
‘சார். ஓபன் டிக்கெட் இருந்தா கொடுங்க. எக்ஸ்ட்ரா சார்ஜுக்கு ரசீது கொடுக்கிறேன்’ நேரடியா விஷயத்துக்கு வந்தார். அநாவசிய பேச்சே இல்லை.
ஓ… இப்போதுதான் கதிருக்கு நினைவு வந்தது. செந்திலிடமே டிக்கெட் இருக்கு. வண்டி வந்ததும் ஏறியதும் வாங்கிக் கொள்ள மறந்துவிட்டான். ’எவ்வளவு பெரிய முட்டாள் நான். அவனாவது கொடுத்திருக்கலாம். இப்ப என்ன செய்வது?’
மீண்டும் அவரிடம் கெஞ்சுவது போல் கதிர் கூறினான். ‘சார் வெயிட்டிங் லிஸ்ட் இன்னிக்குதான் கன்ஃப்ர்ம் ஆச்சு. அதப் பார்த்துட்டு வர ஃப்ரெண்டுகிட்ட டிக்கெட்டைக் கொடுத்தேன். வாங்க மறந்துட்டேன். சாரி சார்.’
’சார் இதெல்லாம் ஒரு காரணமா? டிக்கெட் இருந்தாத்தான் ட்ராவல் பண்ண முடியும். உங்களுக்குத் தெரியாதா?’
’சாரி சார். சார்ட்ல எங்க பெயர் இருக்குமே சார்’.
‘அது நீங்கதான்னு எப்படி சார் சொல்ல முடியும்? உங்க கையில டிக்கெட் இருந்தாத்தான். டிக்கெட் இல்லாம நான் ஒன்னும் பண்ண முடியாது.’ என்று சொல்லியவாறே மற்ற பயணிகளின் பக்கம் நகர்ந்தார். மனுஷன் அமைதியாக நகர்ந்தது கொஞ்சம் நம்பிக்கையைத் தந்தாலும் பயமாகவும் இருந்தது.
‘மாமா, எங்க மாமா வைச்சிங்க’ சின்னவள் கேட்டாள். பெரியவள். ‘வேண்டுமானால், சீர்காழியில் இறங்கிடலாம் மாமா’ என்றாள். இந்தப் பெண்கள் முன்னால் இப்படி அவமானப்பட வேண்டியுள்ளதே. என்ன செய்யலாம் என்று யோசித்தான் கதிர். நல்லவேளை அவர்கள் ‘என்ன இப்படி பண்ணிட்டிங்களே’ என்று பேசவில்லை. அவன் கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் வாயை மூடிக்கொண்டிருக்கலாம்.
சந்திக்கப் போகிற அவமானம்தான் அவன் கண்முன் வந்தது. இந்த பரிசோதகர் அமைதியாக இருந்தாலும்… எந்த புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? ஒரு முறை இதேபோல் அவன் பிரயாணம் செய்த வண்டியில் வந்த வயதான தம்பதியரை வயதில் மூத்தவர்கள் என்றும் பார்க்காமல் ஒரு சின்ன வயது பரிசோதகர் நடத்திய விதம் கதிரின் நினைவுக்கு வந்தது. அவர்கள் செய்ததெல்லாம், பெட்டி மாறி உட்கார்ந்ததுதான். அந்த பெர்த்துக்குரியவர்கள் இன்னும் ஏறவும் இல்லை. எழுப்பி டாய்லெட் பக்கம் போய் நிற்கச் சொல்லிவிட்டான். இந்த இடத்தில் இவர்கள் வைப்பதுதான் சட்டம். ’நமக்கும் அப்படி நிகழுமோ?’
ஆனந்ததாண்டவபுரத்தில் நிற்பதற்காக வண்டியின் வேகம் குறைந்தது. எப்படியும் இரண்டு நிமிஷம் நிற்கும். கொஞ்சம்பேர் ரெகுலரா ஏறி இறங்குவார்கள். யோசித்துக்கொண்டே இருந்த கதிருக்கு, ’ஓபன் டிக்கெட் இருந்தா கொடுங்க’ என்ற செக்கரின் குரல் காதில் ஒலித்தது. திடீரென்று இருக்கையை விட்டு எழுந்தான். படியின் பக்கம் சென்று கீழே இறங்கினான். ’மாமா, என்ன செய்யறீங்க’ என்ற குரல்கள் பின்பக்கம் கேட்டன.
அது சின்ன ஸ்டேஷன். ஒரு வீடுபோல் தான் இருக்கும். நல்லவேளை அன்றைக்கு அவன் பெட்டி டிக்கெட் கவுண்டருக்கு இருபது அடியில் நின்றிருந்தது. பச்சை சிவப்பு கொடிகளுடன் வெளிவந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம், ‘சார் ப்ளீஸ் தாம்பரத்திற்கு மூன்று டிக்கெட் கொடுங்க’ என்றான் கதிர்.
ஒருகணம் திகைத்த அவர், ’டிக்கெட்டா, தாம்பரமா’ என்றவாறு வேகமாகக் கவுண்டர் பக்கம் நகர்ந்தார். மூன்று டிக்கெட்டுகளை எடுத்து, ’பஞ்ச்’ செய்து இவனிடம் நீட்டினார். பணத்தை வாங்கிப் போட்டவர் வெளியில் வந்தபிறகுதான் திட்டினார். ’என்ன சார் நினைச்சுட்டிருக்கீங்க. டிக்கெட் வாங்காம எப்படி ஏறினீங்க. இந்த முட்டாள் தனத்தை இனிமே செய்யாதீங்க’.
டிரெயின் வேகமாக குரலெழுப்பியது.
பெட்டிகளிலிருந்து தலைகள் எட்டிப்பார்த்தன. தங்கைப் பெண்கள் இருவரும் பெட்டியின் வாசலிலேயே நின்றிருந்தனர். ‘சார் சீக்கிரம் ஏறுங்க. சிக்னல் விழப்போவுது’ என்றார் பின் தொடர்ந்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர். அவர் கைகள் பச்சைக்கொடியைப் பிரித்துக்கொண்டிருந்தன. இவனுக்காகவே அவர் வண்டியை ஒரு நிமிடம் தாமதப்படுத்தியிருக்கிறார். மற்றொரு கர்வ பங்கம்.
பெட்டியிலேறி, இருக்கையில் அமர்ந்த கதிரின் இதயம் வேகமாக அடித்தது. நன்றாக வியர்த்துவிட்டது. உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. இரண்டு பெண்களும் ’டெரர்’ மாமாவை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கதிருக்கு பாரம் இறங்கியது போலிருந்தது. ’ஓபன் டிக்கெட்’ போதுமென்று பரிசோதகர் சொன்னாரே. ஆனால், மனுஷன் டிக்கெட் தருவாரா? இறங்கச் சொல்வாரா? ஆனால், கையில் ஓப்பன் டிக்கெட் இருக்கிறதே. இந்த பெண்கள் இல்லையென்றால் ஏதாவது வாதாடிப் பார்க்கலாம்.
வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு நிமிடம் நின்ற வண்டி புறப்பட்டு விட்டது. அடுத்தது சீர்காழிதான். அங்கு ஒரு நிமிடம் அதிகம் நிற்கும். ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இறங்கி பேருந்து நிலையத்துக்குப் போய் சென்னைக்கு பஸ் பிடிக்கவேண்டியதுதான். உட்கார இடம் கிடைக்காது. காத்திருந்து ஏறவேண்டும். மனம் அமைதியிழந்து அடித்துக்கொண்டது. பரிசோதகர் வர பத்து நிமிடம் ஆனது.
’என்ன சார் என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் அமர்ந்த அவரிடம், ‘சார் ஓபன் டிக்கெட்’ என்று சொல்லி அவரிடம் மூன்று டிக்கெட்டுகளையும் நீட்டினான் கதிர்.
எதுவும் பேசாமல், ரசீது எழுத ஆரம்பித்தார். கதிருக்கு வியப்பாக இருந்தது. ஏதாவது பேசுவார். இறங்கச் சொல்லுவார். தன்னை மேலும் கெஞ்ச வைத்துப் வேடிக்கை பார்ப்பார் என்றெல்லாம் நினைத்தவன் அமைதியாகிவிட்டான். ’சரி. டிக்கெட் பணத்திற்கும் மேல் ஏதாவது கேட்பார் கொடுக்கலாம். வேறு வழி?’
ஐந்து நிமிடங்களுக்கு மேலாயிற்று, எழுதி முடியும் வரை அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், முகத்தில் ஏதோ ஒன்று, சின்ன சிரிப்போ?
‘இந்தாங்க’ டிக்கெட்டுகளையும் ரசீதையும் நீட்டியவர், டிக்கெட்டிற்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு எழுந்தார். ‘சார், மேலே ஏதாவது…’ என்று இழுத்தான் அவன்.
தலையாட்டியவாறு அடுத்த ‘பே’ பக்கம் போனவர், கதிர் பக்கம் திரும்பினார். ’சார், இது உங்கத் தன்மையான பேச்சுக்கும் இந்த பசங்களுக்காகவும்தான். பசங்கள வண்டியில விட்டுட்டு திடீர்னு இப்படி இறங்கிட்டீங்களே. வண்டி புறப்பட்டிருந்தா… ஓபன் டிக்கெட் இல்லென்னாலும் ரசீது போட்டிருப்பேன்.’
மற்றொரு அடி. வண்டி சீர்காழியையும் தாண்டியிருந்தது. இன்னும் பதட்டம் தனியாத நிலையில் பெண்கள் இருவரும் மெதுவாக உரையாடிக் கொண்டிருந்தனர். ’நல்லவேளை மாமா’ என்றாள் ஒருத்தி.
மணி பத்தேகால். அசட்டுச் சிரிப்புடன், ‘படுக்கலாமாப்பா’ என்று கேட்டவாறே இருக்கைகளைப் போட எழுந்தான் கதிர். இரண்டு பேரும் எழுந்து அவனுக்கு உதவி செய்ய வந்தனர். அவன் மறுக்கவில்லை. உடல் அயர்ந்து கிடந்தது.
தேடன்
கொள்ளைப் புறத்தே
தண்ணீர் இறைக்கக்
கிணற்றுக்குள் சென்று வந்த
வாளியில் ஒரு சிறுவன் மேலே வந்துவிட்டான்.
வாளிக்குள் குத்தவைத்தவன்
வாளியின் சலசலப்போடு
குதித்து வெளியே வந்து
அமைதியாக நிற்கிறான்;
ஞான உருவெனவே நினைவில் தட்டுகிறது.
‘யார் நீ’ என்று கேட்டாலும் பதில் இல்லை.
அதற்குள் குளிப்பதற்குக் கொள்ளைக்கு வந்த
கருச்சிதைவின் அவஸ்தையில் சோர்ந்துவிட்ட
அவளைக் கண்டு ‘அம்மா’ என்கிறான்.
அவளும் எதுவுமே சொல்லாது
அவனை ஆரத் தழுவிக் கொள்கிறாள்.