எழுத்து

அவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் – ஸிந்துஜா

ஸிந்துஜா

கிளினிக்கிலிருந்து திரும்பி வரும்போதே லேட்டாகி விட்டது. மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு டாக்டர் சோமநாதன் ஹால் சோஃபாவில் அமர்ந்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவர் எழுந்து சென்று கதவைத் திறந்தார். சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த தங்கம்மா “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். அலங்கரித்து விட்ட பூஜை அறை மாதிரி பளிச்சென்று இருந்தாள்.

அவள் கண்கள் வீட்டைச் சுற்றுவதைப் பார்த்து அவர் “ரேவதி இப்பதான் சாப்பிட்டு விட்டுக் கை அலம்பப் போனாள்” என்றார். “உன்னைத்தான் நினைச்சிண்டிருந்தேன். எங்கே ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரலே?”

“அதை ஏன் கேக்கறேள்? புருஷனையும் பொண்டாட்டியையும் ஒரே இடத்திலே வேலைக்கு வச்சிண்டது தப்பாயிடுத்து. கார்த்தாலே லலிதாம்மா தெனைக்கும் வந்து வீடு பெருக்கி தொடச்சி பாத்திரம் தேய்ச்சு துணி ஒணத்தி எல்லா வேலையும் பண்ணி வச்சிட்டுப் போவா. சாயங்காலம் அவ புருஷன் மோகா வந்து சமையல் வேலை எல்லாம் பண்ணிட்டுப் போவான். மோகாவோட அக்கா பொண்ணுக்குக் கல்யாணம்னு ரெண்டும் லீவை வாங்கிண்டு கோரக்பூருக்குக் கிளம்பிப் போயுடுத்து. ரெண்டு நாளா நான்தான் வேலைக்காரி, நான்தான் சமையல்காரி. அவா வர ஒரு வாரம் ஆகும்” என்றாள் தங்கம்மா.

உள்ளேயிருந்து வந்த ரேவதி “அடக் கண்றாவியே!” என்று தங்கம்மாவின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டாள்.

“சரி, போகட்டும் போ. ஏதோ ஒரு வாரம் பத்து நாள் உனக்கும் எக்சர்சைஸ்னு ஒண்ணு இருந்தா நல்லதுதானே!” என்றார் சோமநாதன்.

தங்கம்மா அவரை நக்கலாகப் பார்த்தாள். “போன மாசம் ரெண்டு நாள் ரேவதி உடம்பு சரியில்லேன்னு படுத்துண்டப்போ நீங்க எக்சர்சைஸ் பண்ணினதைத்தான் நான் பார்த்தேனே !”

ரேவதி அவரைப் பார்த்து “இவ கிட்டே யாராவது வாயைக் கொடுப்பாளா?”என்று செல்லமாகத் தங்கம்மாவின் முதுகைத் தட்டினாள்

“எதுக்கு என்னை நினைச்சிண்டு இருந்ததா நான் நுழையறச்சே சொன்னேள்?” என்று தங்கம்மா கேட்டாள்.

“நேத்திக்கு சாயந்திரம் அபிஷேக் பச்சன் படம் போட்டான். உடனே உன் நினைப்பு வந்தது.”

“ஐயையோ , எப்போ?” என்று பதறிக் கொண்டே கேட்டாள் தங்கம்மா. “எந்த சேனல்லே?”

சோமநாதன் “ஸ்டார்லே” என்றார்.

தங்கம்மா ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டாள். பிறகு அவரைப் பார்த்து “இதானே வேண்டாங்கிறது” என்றாள்.

கணவனும் மனைவியும் அவளைப் பார்த்தார்கள்.

“நேத்திக்கிக் காலம்பற ஃபர்ஸ்ட் கிராஸ்லேந்து பத்தொம்பதாவது கிராஸ் வரைக்கும் ஹோல் ஆஃப் மல்லேஸ்வரத்துக்கே கரண்ட் இல்லாம இருந்து இன்னிக்கிக் கார்த்தாலேதான் ஆறு மணிக்கு வந்தது. அங்கிளுக்கு மட்டும் தனியா யாரோ வந்து அபிஷேக் பச்சன் படம் போட்டுக் காட்டியிருக்கா இல்லே?” என்று தங்கம்மா ரேவதியைப் பார்த்தாள்.

“உன்னைச் சீண்டாட்டா இந்த மனுஷனுக்குப் பொழுதே போகாது” என்று ரேவதி சோமநாதனைப் பார்த்துச் சிரித்தாள்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் ரேவதிக்குத் தங்கம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. சோமநாதனும் ரேவதியும் சொக்கலிங்கம் வீட்டுக் கிருகப் பிரவேசத்துக்குப் போயிருந்தார்கள். சோமநாதன் சொக்கலிங்கத்துக்குக் குடும்ப வைத்தியராகப் பத்து வருஷப் பழக்கம். அந்த விசேஷத்துக்கு வந்திருந்த தங்கம்மாவை சொக்கலிங்கத்தின் மனைவி சிவகாமி
ரேவதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தங்கம்மாவின் கணவர் தனது கம்பனியின் வக்கீல் என்றும் அவர் மும்பை போயிருப்பதால் விசேஷத்துக்கு வரவில்லை என்றும் சோமநாதனிடம் சொக்கலிங்கம் சொன்னார். விசேஷத்துக்கு மறுநாளே தங்கம்மா ரேவதியைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்.

“நாங்க மல்லேஸ்வரம் வந்து ஒரு வாரம்தான் ஆறது” என்றாள் தங்கம்மா ரேவதியிடம் அன்று.

“அதுக்கு மின்னே?”

“மதிக்கரையிலே இருந்தோம். ஏழெட்டு வருஷமா ஒரே வீட்டிலே இருந்தோம்னுதான் பேரு. மூணு பெட்ரூம். வீட்டுக்காரன் வருஷா வருஷம் வாடகையை கண்மண் தெரியாம ஏத்திடுவான். அங்கே
பக்கத்திலேயே இவர் ஆபீஸ் போட்டிருந்தாரேன்னு சகிச்சிண்டு இருந்தோம். இப்ப ஆறு மாசத்துக்கு மின்னாலே அவன் காலி பண்ணிக் கொடுங்கோன்னு நச்சரிக்க ஆரமிச்சிட்டான். நாமென்ன பந்திக்கு இல்லாத வாழக்காயா பந்தல்லே கட்டித் தொங்க விடறதுக்கு? மல்லேஸ்வரத்திலே வீடு பாக்க ஆரம்பிச்சோம். இங்கே பதினேழாவது கிராஸ்லே ரெண்டு பெட்ரூம் தான் கிடைச்சதுன்னு வாங்கிட்டார். வாசல், பெட்ரூம்ஸ், கிச்சன்னு எல்லாம் தலை குனிஞ்சு அடக்கமா இருன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி கட்டியிருக்கான். கைக்கெட்றாப்லே பரண் பண்ணி வச்சிருக்கான். மின்னே இருந்த வீட்டிலே அதெல்லாம் உசர உசரமா, நீள நீளமா இருக்கும். எந்த சாமானை எடுக்கணும்னாலும் எட்டி எட்டி எடுக்கணும். இல்லாட்டி ஏணி வேணும். இது அதுக்கு நேர் மாறா வசதியா இருக்கு. வடக்குப் பார்த்த மச்சு வீடை விட தெக்குப் பார்த்த குச்சு வீடு நல்லதுன்னு வந்துட்டோம். எங்காத்துக்காரருக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்து” என்று சிரித்தாள்.

“உனக்கு?””

“எனக்கும் அங்க இருந்ததை விட இங்க இருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் தங்கம்மா.”அங்கே நாலு வார்த்தை தாய் பாஷையிலே பேச மாட்டமா, இல்லே கேக்க மாட்டமான்னு ஆயிடுத்து. வரவா போறவா கிட்டே ஒண்ணு இங்கிலீஷு, இல்லேன்னா இந்த ஊர் பாஷைதான் பேசணும். எனக்குக் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. அன்னமிடற கையை தூஷணை பண்ணக் கூடாதும்பா. மனசிலே இருக்கறதைச் சொன்னேன். அங்கே இருந்தப்போ நம்ம பாஷையைக் கேக்கறதுக்குன்னே மல்லேஸ்வரம் மார்க்கெட்டுக்கு வருவேன். எட்டாவது கிராஸ்லே ஷாப்பிங் பண்ணுவேன்.”

“இப்ப வீடு எந்த மெயின்லே?’

“பத்தாவது மெயின்லே. மின்னாலே கிரிக்கெட் ஹவுஸ்ன்னு இருந்து அதை இடிச்சிக் கட்டிருக்கால்லியா? அதுக்கு நாலு பில்டிங் தள்ளி. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி” என்றாள் தங்கம்மா.

“ஓ, அது அடுத்த தெருதான். வீட்டு விலையிலே எல்லாம் எப்பவும் நடக்கறதுதானே ! நாம வீட்டை விக்கறச்சே நாடே நாசமாப் போயிடுத்துன்னு சொல்லி அடிமாட்டு விலைக்குக் கேப்பான். நாம வாங்கறப்போ டிமாண்டு பிச்சிண்டு மானத்துக்குப் போயிடுத்தும்பான்” என்று சிரித்தாள் ரேவதி.

இருவரும் குறுகிய காலத்தில் நெருங்கி விட்டார்கள். நீங்கள் நீயாகி விட்டது. எல்லாம் வா, போ தான். சேர்ந்து மார்க்கெட்டுக்கு, புடவைக் கடைகளுக்கு, கோயில்களுக்கு, சினிமா, டிராமாக்களுக்குப் போய் வந்தார்கள். இந்த ஆறு மாதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாத நாள்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு மாறாக ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டவில்லை.

தனக்கு அபிஷேக் பச்சனை மிகவும் பிடிக்கும் என்று ரேவதியிடம் ஒரு நாள் தங்கம்மாள் சொன்னாள். அப்போது சோமநாதனும் அவர்களுடன் இருந்தார்.

“அவன் ஒட்டடைக் குச்சின்னா?” என்றார் சோமநாதன்.

“இருந்தா என்ன? அவனை என்ன நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனா? என்ன உயரம்? வாட் எ பெர்சனாலிட்டி?” என்று சிரித்தாள் தங்கம்மா. “எப்பவும் உடம்பை ட்ரிம்மா வச்சிண்டு…. அந்த உயரத்துக்கு இன்னொரு ஹீரோவை இந்தப் பக்கம் காட்ட முடியுமா?”

“நீ என்ன சொன்னாலும் அவன் நெட்டைக் கொக்குதான்” என்றார் சோமநாதன்.

“சும்மா என்னைச் சீண்டறதுக்கு சொல்லாதீங்கோ. ஆறு அடி. ரெண்டு அங்குலம். ஒரு தொப்பை, தொந்தி கிடையாது. இங்க அஞ்சறை அடி கூட இல்லாதவன் பெரிய ஹீரோன்னு சொல்லிண்டு உட்லண்ட்ஸ் ஷூஸ் வாங்கிப் போட்டுண்டு நாலு இஞ்ச் ஜாஸ்தி உயரமா காமிக்க ட்ரை பண்றான். உண்டா இல்லியா சொல்லுங்கோ அங்கிள்?”

“அடேயப்பா! விட்டா பெரிய ரசிகை மன்றமே வச்சிடுவே போல இருக்கே?” என்றாள் ரேவதி.

“நாளைக்கி ஓட்டீட்டிலே எங்க அபிஷேக்கோட புதுப் படம் லூடோ வரப் போறது. நெட்ஃப்ளிக்ஸ்காரன் அறுபது கோடி குடுத்து வாங்கியிருக்கானாம். நம்ம ஊர் ஆக்ஷன் ஹீரோக்கெல்லாம் அதுலே எத்தனை சைபர் இருக்குன்னு கூடத் தெரியாது. ஒரே ஒரு ஆள். அறுபது கோடி.”

“இதெல்லாம் சினிமாக்காரங்க விடற ரீல் தங்கம் ! ஒரு வாரம் போனா காத்தாடறது எல்லாப் படமுமே.”

“மத்தவா படத்துக்கு அப்படி இருக்கலாம். ஆனால் எங்க அபிஷேக் படம் எப்பவுமே சூப்பர்தான். வாவ். என்ன ஒரு மெஜெஸ்டிக் பெர்சனாலிட்டி!”

“சினி பிளிட்ஸ்லே படிச்சேன் “என்றார் சோமநாதன்.

“என்னன்னு?”

“கதாநாயகியா உங்க அபிஷேக்கோட ஒருத்தி நடிக்கணும்னா எப்பவும் அவ ஹை ஹீல்ஸ்லேதான் இருக்கணுமாம்.!”

தங்கம்மா காயமுற்றவள் போல ரேவதியைப் பார்த்தாள்..

“இதெல்லாம் பத்திரிகைக்காராளே விக்கணுமேன்னு ஏதாவது கற்பனை செஞ்சு போடுவா. கிசுகிசு எழுதுவா.நான் நம்பறதில்லே ” என்று சமாதானமாகச் சொன்னாள் ரேவதி. தொடர்ந்து “நம்ம ஊர் மன்மத ராஜாகூட தன்னோட நடிக்கற ஹீரோயின்லாம் தன்னை விட உயரமா இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடுவாராமே! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கணவனிடம் சொன்னாள்.

தங்கம்மா குபுக்கென்று சிரித்தாள்.

“நம்ம ஊர்னா அவ்வளவு இளப்பமா உனக்கு? சிரிப்பைப் பாரு !” என்றாள் ரேவதியும் சிரித்தபடி.

சோமநாதன் “தங்கம்! நீயும் அஞ்சே முக்கால் இல்லே அஞ்சு பத்து இருப்பியா?” என்றார்.

இரு பெண்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

அப்போது சோமநாதனின் கைபேசி ஒலித்தது.

“…………….”

“ஆமா, டாக்டர்தான் பேசறேன்.”

“………….”

“சரி, நான் ஒரு கால்மணியிலே அங்க வரேன். அவசரம்னுதானே போன் பண்ணினேள் ? இதிலே தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?” என்று போனை வைத்தார்.

“சாரி, அர்ஜண்டா மணிப்பால்லே கூப்பிடறா?” என்று எழுந்தார்.

“நானும் வந்து நாழியாயிடுத்து. கிளம்பறேன். நாளைக்கு நீங்களும் ரேவதியும் எங்காத்துக்கு வாங்களேன். எல்லாருமே சேந்து ஜாலியா சினிமா பாக்கலாம்” என்றாள் தங்கம்மா.

“அடடா, நாளைக்கு நாங்க மைசூர் போறோமே,.என் பெரியம்மா பேத்திக்குக் கல்யாணம்னு” என்றாள் ரேவதி. “ஊருக்குப் போயிட்டு வந்தப்பறம் வரோம்.”

ஆனால் அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையில் டாக்டருக்குத் தங்கம்மாவிடமிருந்து போன் வந்தது.

“டாக்டர், நீங்க இன்னும் கிளினிக்குக்கு கிளம்பலையே? நேத்தி மத்தியானத்திலேந்து இவருக்கு ஜொரம். டோலோ கொடுத்து சரியாயிடும்னு பாத்தேன். ஜொரம் எறங்கவே இல்லை. நான் இவரை அங்க ஆத்துக்குக் கூட்டிண்டு வந்து காமிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ எதுக்கு வரே? நான் கிளினிக் போற வழிதானே ? ஒரு பத்து நிமிஷத்திலே அங்கே வரேன். வீட்டு நம்பரும் அபார்ட்மெண்ட் பேரும் மட்டும் வாட்ஸப்பில் அனுப்பிடு” என்றார்.

அவர் தங்கம்மாவின் ஃப்ளாட்டை அடைந்த போது அவள்தான் கதவைத் திறந்தாள். “படுத்துண்டுதான் இருக்கார்” என்று பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அவள் கணவர் தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டிருந்தார். சோமநாதனைப் பார்த்ததும் படுக்கை
யிலிருந்து எழுந்திருக்க முயன்றார். சோமநாதனிடம் “உங்க பேர் எனக்குத் தெரியும். நான் லட்சுமணன்” என்றார்.

சோமநாதன் “எழுந்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமணன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவர் கையைப் பிடித்து நாடி பார்த்தபடி “குளிர்றதா?” என்று கேட்டார் சோமநாதன்..

“ஆமா. இப்ப பரவாயில்லே. ராத்திரி ரொம்ப குளிரினது. அவ்வளவு டோலோ போட்டுண்டும் வேர்க்கவே இல்லே.”

சோமநாதன் அவரை நாக்கை நீட்டச் சொன்னார். கண்களைச் சோதித்தார். ஸ்டெதெஸ்கோப்பை மார்பிலும் முதுகிலும் வைத்துப் பரிசோதித்தார். கை விரல்களை அமுக்கி “வலிக்கிறதா?” என்று கேட்டார். ஆமென்று லட்சுமணன் தலையை அசைத்தார்.

“பசி?” என்று கேட்ட போது தங்கம்மா “கஞ்சியும் ஆர்லிக்ஸும்தான் கொடுத்தேன்.வாயெல்லாம் கசக்கறதுன்னார்” என்றாள்.

“வைரல் ஃபீவர்தான். கவலைப்பட ஒண்ணும் இல்லே” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டு சோமநாதன் கிளம்பினார்.

“இருங்கோ, ஒரு நிமிஷம். முதல் தடவையா ஆத்துக்கு வந்திருக்கேள். காப்பி கொண்டு வரேன்” என்று அவர் மறுப்பதைக் கேட்காமல் தங்கம்மா உள்ளே சென்றாள்.

“ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுங்கோ. ஊர் பூரா இருமலும் காச்சலும்தான். சாயந்திரம் பசியெடுக்கும். ரசஞ் சாதமா கரைச்சு எடுத்துக்கோங்கோ” என்றார் சோமநாதன் லட்சுமணனிடம்.

அப்போது அறையின் மூலையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. லட்சுமணன் எழுந்து போய் அதை எடுத்தார்.

“எதுக்கு நீங்க எழுந்து நடக்கறேள் ? ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொல்லியபடியே சோமநாதன் அவரைப் பார்த்தார். லட்சுமணன் குட்டையாகவும் சற்றுக் குண்டாகவும் இருந்தார். நின்று கொண்டு அவர் பேசியதைப் பார்த்து ஐந்தடிக்கும் கீழேதான் அவர் உயரம் இருக்கும் என்று டாக்டர் நினைத்தார்.

வாக்கரிசி – சுஷில் குமார்

                                                    சுஷில் குமார்                             

வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும் கிட்டத்தட்ட பத்து குட்டிப் பன்றிகளும் என்னை நோக்கி வந்தன. வழக்கமாக இடைவேளை மணி அடிக்கும்போது பன்றிக் குட்டிகளுக்கு இலந்த வடையும் கல்கோனா மிட்டாயும் கொடுத்து அவை அவற்றை சப்பிக் கொண்டிருக்கும்போது குட்டிப் பன்றிகளின் வாலைப் பிடித்து விளையாடுவேன். அன்றும் கூட தாத்தா கொடுத்திருந்த இரண்டு ரூபாய்க்கு கல்கோனா வாங்கி வைத்திருந்தேன். அந்தப் பன்றிக் கூட்டம் என் சன்னல் அருகே வந்ததும் ஒரு மிட்டாயை எடுத்து சன்னல் வழி நீட்டினேன். திடீரென என் தலையின் பக்கவாட்டில் ஏதோ வந்து தாக்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தேன். முகம், தலையெங்கும் சாக்பீஸ் பொடி. என் ஆங்கில ஆசிரியர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். கண்களால் அவர் சைகை செய்ய அந்தக கரும்பலகைத் துடைப்பானை எடுத்துக் கொண்டு போய் அவரருகே நின்றேன்.

“என்ன டே வாய்பொளந்தான்! தாத்தாவுக்கு போன் பண்ணட்டா? எப்பிடி?”

நான் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றேன்.

“என்ன டே? கல்லுளிமங்கன் மாதி நிக்க? எதாம் கேட்டா ஒண்ணுந் தெரியாத்த அப்பாவி மாதி மொகத்த வச்சிருவான். செரியான சிமிளனாக்கும்.” என்று சொல்லியவாறு என் வலது காதை பிடித்துத் திருகினார். நான் அப்போதும் அசையாமல் நிற்க, என் தலையில் படிந்திருந்த சாக்பீஸ் பொடியை தட்டி விட்டவர், “போ, போ. ஒன் தாத்தாக்காக வுடுகேன், என்னா? ஒழுங்கா கிளாஸ கவனிக்கணும், கேட்டியா?” என்றார்.

“செரி சார்.” என்று நான் எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். பன்றிக் குட்டிகள் என் சன்னல் சுவரருகே படுத்துக் கிடந்தன. அவை பசியாகவிருக்கும். இந்த ஆங்கிலப் பாடவேளை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? பள்ளிக் கூடத்தின் பெயர் ‘மலையாளப் பள்ளிக்கூடம்’, ஆனால் மலையாளப் பாடம் கிடையாது. பின் ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்? ஒரு பன்றிக் குட்டியாக பிறந்திருந்தால் ஆங்கிலம் என்ன, மலையாளம் என்ன, எதுவும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்திருக்கலாம், என்ன, அந்த பீக்குண்டில் கிடந்து புரள வேண்டும். அதெப்படி அதைப் போய் சாப்பிட முடியும்?

“டேய் சரவணா. எந்திரி, இங்க வா.” என்று ஆசிரியரின் குரல் என் காதுகளுக்குள் இரைச்சலாய் வந்து விழுந்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்க்க, ஆசிரியரின் அருகே என் அப்பா நின்றுகொண்டிருந்தார். பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க எழுந்து நின்று ஆசிரியரின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.

“என்ன டே, பேந்தப் பேந்த முழிக்க? பைய எடுத்துட்டு வா.” என்று சொல்லிய ஆசிரியர் அப்பாவிடம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆசிரியரின் முன் சென்று நிற்க, அவர் என் தோளில் தட்டி, “செரி அண்ணாச்சி. கூட்டிட்டுப் போங்கோ. என்னத்தச் சொல்ல? ஒங்கப்பா எனக்கு ஆசானாக்கும். என்ன செய்ய? நல்ல வயசாயாச்சுல்லா? கெடைல கெடக்காமப் போறதுக்கும் குடுத்துதான் வைக்கணும். பொறவு தகவல் சொல்லி அனுப்புங்கோ.” என்றார். ஆசிரியரின் முகம் சிறிது சோகமாகியிருந்தது.

தாத்தாவிற்கு என்ன ஆயிருக்கும்? காலையில் காசு கொடுத்து அனுப்பும் போது நன்றாக இருமிக் கொண்டிருந்தாரே! சாயங்காலம் குமரிசாலைக் குளத்திற்குச் சென்று மீன் பிடிக்கலாமென்று சொல்லியிருந்தாரே!

“எப்பா, தாத்தாக்கு என்னாச்சிப்பா?”

“தாத்தா கீழ விழுந்துட்டா மக்கா.”

“எங்கப்பா விழுந்தா? ஆஸ்பத்திரிக்கி போகலியாப்பா?”

அப்பா பதில் சொல்லாமல் என்னை பின்னால் ஏற்றிவைத்து மிதிவண்டியை வேகமாக மிதிக்க ஆரம்பித்தார். என்னையறியாமல் அழுகை வந்தது. ஆச்சியும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் காலையில் எவ்வளவு  எழுப்பியும் எழுந்திருக்கவேயில்லை. தாத்தா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு அத்தைமார், மாமாமாரெல்லாம் நின்று சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் சிலர் என்னைப் பற்றி ஏதோ சொல்லி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டனர். அம்மாவும் அக்காவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தனர்.

நான் மெதுவாக தாத்தாவின் அறைக்குச் சென்றேன். தாத்தா தன் நார்க்கட்டிலில் படுத்திருந்தார். வாய் நன்றாகத் திறந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் போலிருந்தது. மார்பிற்குக் குறுக்காக கைகளை வைத்து வீட்டு உத்திரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, “தாத்தா, தாத்தா, எந்திரி.” என்றேன்.

தாத்தா மெல்ல மூச்சு விட்டார். அவரால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

“தாத்தா, ஒடம்பு நல்ல வலிக்கோ? நா கால அமுக்கி விடட்டா? நீ என்னத்துக்குப் போயி வழுக்கி விழுந்த? ஒரு எடத்துல சும்மா இருக்க மாட்டியா?”

தாத்தாவின் விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தன. நான் அவரது கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்து விரல்களை மெல்ல நீவி விட்டேன். ஒவ்வொன்றாக சொடக்கு விட மடக்கினேன். தாத்தாவின் கைகள் சிறிது குளிர்ச்சியாக இருந்தன.

அம்மா என்னருகே வந்து நின்றாள். ஒரு சிறிய தம்ளரை நீட்டி, “மக்ளே, தாத்தாக்கு கொஞ்சம் பால் குடு.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.

“தாத்தாக்குப் பால் புடிக்காதுல்லாம்மா?” என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.

“இப்ப பால் தான் குடுக்கணும் மக்ளே. டாக்டர் சொல்லிருக்காரு.”

திறந்திருந்த தாத்தாவின் வாயில் ஒரு மடக்கு பாலை விட்டேன். அது உள்ளிறங்காமல் வாயின் பக்கவாட்டில் வடிந்தது. முறுக்கிய வெள்ளை மீசையின் ஓரத்தில் பால் கசிந்து பனித்துளி போலத் தெரிந்தது. அம்மா தன் சேலைநுனியால் அதைத் துடைத்துவிட்டு வெளியே சென்றாள். நான் தாத்தாவின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டேன். வெளியே அப்பாவும் வேறு சிலரும் பேசுவது கேட்டது.

“சே, அருமாந்த மனுசன்லா? எப்பிடி ராஜா மாதி சுத்திட்டுக் கெடந்தாரு? ஒரு சொக்கேடும் கெடயாத?”

தாத்தா ராஜா மாதிரிதான் வாழ்ந்தார். ஊரில் என்ன நல்லது கெட்டது என்றாலும் தாத்தாவிடம்தான் வந்து நிற்பார்கள். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. தாத்தா பேசும்போது என் அப்பா அசைவற்று நிற்பதைப் பார்த்து நான் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அம்மாவோ அக்காவோ தாத்தா இருக்கும்போது தலையைக் குனிந்துகொண்டுதான் போவார்கள்.

“ஆமாண்ணே, அதுதான் ஒண்ணும் புரியமாட்டுக்கு. வழுக்கி விழுந்தா, அப்பிடியே மலச்சிப் பாத்தா. தூக்கிக் கொண்டு கட்டில்ல படுக்க வச்சப் பொறவும் கண்ணு ஒரு துளி அசையல. டாக்டர் ஒண்ணும் பண்ணாண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. மூச்சு மட்டுந்தான் இருக்கு.” என்ற அப்பாவின் குரலும் தழுதழுத்தது.

“செரி, பாப்பம், கொஞ்சம் கொஞ்சமா பால் விட்டுப் பாப்பம். மனசு நெறஞ்சி போகட்டும். என்ன, பேரன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டுப் போயிருந்தா நெறவா இருந்திருக்கும். எங்க பாத்தாலும் ரெண்டுவேரும் சோடியால்லா சுத்துவா! பின்ன, ஆச்சி போன பொறவு பொடியந்தான கூடவே கெடக்கான்.”

“பய தாத்தா நெஞ்சுலயேதான கெடப்பான். அவரு கத சொல்லி தட்டிக் குடுத்தாதான் அவனுக்கு ஒறக்கம்.”

எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நான் தாத்தாவின் மார்பில் சாய்ந்து உறங்கிவிட்டேன். அம்மா வந்து எழுப்பி, “மக்ளே, வா, சாப்டு, பசிக்கும்லா.” என்றாள்.

நான் வேண்டாமென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன். அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. மெல்ல தலையைத் தூக்கி தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். வாய் அதே போல திறந்திருந்தது. கண்கள் அசையாமல் நின்றன. மூச்சு மெல்ல மெல்ல என் முகத்தின் அடியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சென்ற வாரம் வாய்க்காலில் பிடித்த அட்டையைப் போல. அதெப்படி தொட்டவுடன் சுருண்டு விடுகிறது? தாத்தாவின் மூச்சும் கூட சுருண்டு போயிருக்குமோ? மணிக்கு ஒருமுறை யாராவது வந்து தாத்தாவிற்குப் பால் விட்டுச் சென்றனர். தாத்தாவும் தொடர்ந்து வடித்துக்கொண்டிருந்தார்.

“எண்ணே, இப்ப என்ன செய்ய? சாயங்காலம் வர இழுத்துட்டுன்னா பொறவு இன்னிக்கி காரியம் பண்ண முடியாதுல்லா?” என்று யாரோ கேட்க, இன்னொருவர், “ஒம்ம வாய மூடும் ஓய். அதுக்குள்ள ஒமக்கு காரியச் சாப்பாடு கேக்காக்கும்? ஒம்ம வாய்ல மொதல்ல வாக்கரிசியப் போடணும்.” என்றார்.

சித்தப்பா அப்பாவை தனியாக அழைத்துச் சென்று ஏதோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ஒரே சலசலப்பு.

“என்னத்த யோசிச்சிட்டுக் கெடக்கியோ? சட்டுன்னு ஆக வேண்டியதப் பாருங்கோ. மத்தவன் வந்தாதான் செரி ஆகும். எமகாதம்லா, சும்மாவா பேரு வந்து, வாக்கரிசிப் பிள்ளைன்னு.” என்று இருமினார் பக்கத்து வீட்டுத் தாத்தா.

“அது செரி. ஒமக்கு வரும்போ தெரியும் பாட்டா! ஆனாலும் ஒரு அதிசயந்தான், என்ன ஓய்? மனுசன் வந்து பக்கத்துல நின்னு ரெண்டு வார்த்த சொன்னாப் போறும். அர மணிக்குள்ள சோலி முடிஞ்சிரும். நம்ம கொமரிக் கெழவி எத்தன மாசமா இழுத்துட்டுக் கெடந்தா? பின்ன, செஞ்ச பாவம் அப்பிடி. நம்மாளு வந்துதான தீந்து போச்சி. அவ மவன் துடியாத் துடிச்சான. என்னா படமுங்கியோ? பின்ன, கொஞ்ச நஞ்ச சொத்தா என்ன? அவனே எளனிய கொடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்பான்.”

“கெழவிய விடும் ஓய். அந்த வடக்குத் தெரு பிள்ள தூக்கு போட்டால்லா? எத்தன நாளா இழுத்துட்டுக் கெடந்தா? ஒரு டாக்டரும் ஒண்ணும் பண்ண முடியலல்லா? வாக்கரிசிப் பிள்ள வந்து அந்தப் பிள்ள தலைல கைய வெச்சதுதான் உண்டும், பிள்ள மொகத்துல என்ன ஒரு திருப்தி, ஆத்மா அப்பதான சாந்தி அடஞ்சி. அந்த மனுசனுக்கு ஒரு தெய்வாம்சம் உண்டும், பாத்துக்கோரும்.”

“உள்ளது, உள்ளது. ஆமா, வாக்கரிசிப் பிள்ள ஊர்ல உண்டுமா ஓய்?”

“அவரு எங்க போகப் போறாரு? மனுசன் என்னா பவுசு காட்டிட்டுத் திரிஞ்சாரு? பெரிய பண்ணையாரு மாதி. பின்ன, எல்லாம் கவர்ன்மெண்டு சோலி உள்ள வரைக்கும் தான. ரிட்டயர்டு ஆன பொறவு கொளத்தாங்கர அரச மரந்தான் கெட. ஊர்ப்பாடு பேசதுக்கும் நல்லா ஆப்பமும் ரச வடையும் முழுங்கதுக்கும் கேக்கணுமா, என்ன?”

“அதச் சொல்லும். வக்கணையான ஆளாக்கும். அடியேந்திரத்துக்கு அவரு வந்து மொத எலைல சாப்ட்டாதான் நமக்கு சாப்பாடு. பின்ன, மேல இருக்கப்பட்டவாளுக்கு அப்பதான ஒரு நெறவு கெடைக்கும்?”

வாக்கரிசிப் பிள்ளை மாமா என் அம்மாவின் பெரியப்பா மகன். பெரும்பாலும் வெள்ளை வேட்டி மட்டும்தான். மேலுடம்பும் பெரிய தொப்பையுமாக தள்ளித் தள்ளி நடந்து செல்வார். கையில் எப்போதும் ஒரு வெற்றிலைப் பெட்டி. வெற்றிலையைக் குதப்பிக் குதப்பி அவர் பேசுவது பல சமயங்களில் எனக்குப் புரிவதேயில்லை. ஆனால், அவர் இருக்கும் கூட்டத்தில் எப்போதும் கேலியும், உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரில் எல்லா பெண்களும் அவருக்கு மைனியோ கொளுந்தியோ தான். ஆண்கள் எல்லோரும் சவத்துப்பயலோ, கிறுக்குப்பயலுக்குப் பொறந்த பயலோ தான்!

எப்போது என்னைப் பார்த்தாலும் “மருமவன, எப்ப வந்து எம்பொண்ணத் தூக்கிட்டுப் போகப் போறீரு?” என்று கேட்டுச் சிரிப்பார். நான் வெட்கப்பட்டு நிற்க, “என்ன ஓய் வெக்கம் ஒமக்கு? பொண்ணு எப்ப வேண்ணா ரெடி, கேட்டீரா? மீச வரட்டும், என்னா?” என்பார். மாமா பெண் என்னை விட பத்து வயதாவது பெரியவள்.

மாமா என்னிடம் மட்டுமல்ல, ஊரில் எல்லாச் சிறுவர்களிடமும் இதேபோலத்தான் கேட்பார். தன் வேட்டி மடிப்பில் எப்போதும் வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை எங்கள் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போடுவார். அப்படியே கட்டிப்பிடித்து ஆளுக்கொரு முத்தம். நாங்கள் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்க் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போது மிக வேடிக்கையாக இருக்கும். மாமா வருவதைப் பார்த்ததும் எதிரில் வரும் தாத்தாக்களும் ஆச்சிகளும் அப்படியே திரும்பி தங்கள் வீடுகளுக்கு விறுவிறுவென்று செல்வார்கள். முதலில் இது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், ஊர்த் தலைவர் தன் கடைசிப் படுக்கையில் இருந்தபோது மாமா வந்து அவரருகே நின்று ஏதோ பேசிவிட்டுப் போனதும் தலைவர் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் எழுந்ததைப் பார்த்ததும் எங்களுக்கும் மாமாவின் மீது சிறிய பயம்தான்.

மாமா நல்ல வேலையில் இருந்தார். ஊரில் எல்லோருக்கும் உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்பார். அடுத்த ஊர்த் தலைவர் அவர்தான் என்று கூட பேச்சு அடிபட்டது. இப்போது ஓய்வு கிடைத்ததும் எங்களைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போவதுதான் மாமாவின் பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டிலும் மாமாவை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மதிய உணவு என்று எழுதப்படாத முறைமையையே உருவாக்கிவிட்டார் வாக்கரிசிப் பிள்ளை மாமா.

“எம்மா, அதெப்படிம்மா, வாக்கரிசி மாமாக்கு மட்டும் எல்லா வீட்லயும் செம சாப்பாடு போடுகா?” என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.

“அடிச்சுப் பல்ல ஒடச்சிருவேன் ராஸ்கல். பெரியாளுக்கு மரியாத குடுக்காமப் பேசுக. எங்க செல்ல அண்ணனாக்கும், பாத்துக்கோ.” என்று முறைத்தாள் அம்மா.

“சாரி, சாரி. சொல்லும்மா.”

எதையோ நினைத்து சிரித்த அம்மா, “பின்ன, ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் கொஞ்சமா? பயம், உயிரு போயிருமோன்னு பயம், பின்ன என்னத்துக்குப் பயந்து ஓடப் போறா?” என்றாள்.

“மாமா வந்து பாத்தா தாத்தா ஆச்சில்லாம் செத்துப் போயிருவாளாம்மா?”

“அப்பிடி பேசப்படாது பாத்துக்கோ. அது தெய்வ காரியமாக்கும்.”

அதில் என்ன தெய்வகாரியம் இருக்கும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்பாவும் சித்தப்பாவும் வேகவேகமாக எங்கோ சென்றனர்.

“அதாக்கும் செரி. பெரியவரு ராசிக்கு இன்னிக்கி சொர்க்கம்லா!” என்று ஒரு மாமா சொல்ல, “உள்ளதாக்கும். பின்ன, வாக்கரிசிப் பிள்ள சரக்கடிக்கப் போயிருக்கப் படாது.” என்று இன்னொரு மாமா சொன்னார்.

மாமா சாயங்காலங்களில் வேறு ஒரு மனிதராகி விடுவார். அரச மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டுச் சத்தமாகப் பாடுவார். பெரும்பாலும் மலேசியா வாசுதேவன் பாடல்கள்தான். பக்கத்தில் சென்றால் இழுத்துப் பிடித்து கட்டியணைத்து முத்தமிடுவார். குமட்டிக் கொண்டு வரும் வாடை.

அப்படியொரு சாயங்காலம் நான் அந்த வழியாக வந்தபோது மாமா தனியாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன ஓய் மருமவனே, பாத்தும் பாக்காத மாதி போறீரே ஓய்? இங்க வாரும்.” என்று சிரித்தார்.

நான் அவரது அருகே சென்று நின்றேன்.

“என்ன மருமவனே, மாமாவப் பாத்து எதுக்கு பயப்படுகீரு? நமக்குள்ள ஆயிரம் மேட்டரு உண்டும்லா, ஊருல ஒரு பய கேக்க முடியாது, என்னா? எம் பொண்ண ஒமக்குத் தான் கெட்டி வப்பேன், கேட்டீரா ஓய்? பின்ன, எவளாம் வெள்ளத்தோலுக்காரிய லவ்வு பண்ணிட்டீருன்னா செரியா வராது, பாத்துக்கோரும். மாமாக்க சத்தியமாக்கும்.”

நான் வெட்கத்தில் சிரித்து நின்றேன்.

“இங்கண வந்து இரியும் மருமவன.” என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் மெல்லச் சென்று அவரருகே உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு ஆரஞ்சு மிட்டாயை என் வாயைத் திறந்து உள்ளே போட்டவர், என்னைக் கழுத்தோடு கட்டிப்பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அந்த எச்சிலைத் துடைப்பதைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன மருமவன, எச்சியத் தொடைக்கீரு, என்னா?” என்று கேட்டவர் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. நீளமாக மூச்சிழுத்து விட்டது போலிருந்தது. என் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அப்போ ஒம்ம வயசுதான் இருக்கும் எனக்கு! எங்க அப்பாக்க மொகம் கூட இப்போ செரியா கண்ணுல வர மாட்டுக்கு. வயல் வேலக்கிப் போன மனுசன நாலு வேரு ஒரு கயித்துக் கட்டில்ல தூக்கிட்டு வந்தானுகோ. ஆளு சும்மா சொடல மாடன் கணக்கா இருப்பாரு, கேட்டீரா? ஒத்தக்கி ஒரு பய எதுத்து நிக்க முடியாது. ஊருல எல்லாச் சட்டம்பிப் பயக்களுக்கும் எங்க அப்பாவக் கண்டா பயமாக்கும். புடிச்சி செவுட்டப் பேத்து விட்டுருவாருல்லா! பின்ன, எவனாம் செய்வின வச்சிட்டானோ என்னவோ? வச்சாலும் வச்சிருப்பானுகோ. ஒரு பயலயும் நம்பதுக்கில்ல. கட்டில்ல கெடயாக் கெடந்த மனுசன் ஒரு பொட்டு அசயல்ல. பத்து நாளு. எங்கம்ம அழுது அழுது மயங்கி விழுந்துருவா. நானும் எங்க அக்காவும் என்னத்தச் செய்ய முடியும்? அந்தக் காலத்துல இப்ப மாதி இல்லல்லா? என்ன நோயி, என்ன மருந்துன்னு யாருக்குத் தெரியும்? டாக்டரப் பாக்கணும்னா சும்மா இல்ல, கேட்டீரா? என்னல்லாமோ மருந்தக் குடுத்துப் பாத்தா. அப்பா அலங்குவனா பாருன்னு நீட்டிட்டுக் கெடக்காரு. பின்ன, எத்தன நாளக்கி எல்லாரும் அழுவா? அவரு பாட்டுக்குக் கெடக்கட்டும்னு அம்மா வயலுக்கு நடவும், கள பறிக்கவும் போயிருவா. பின்ன, வயித்துக்குக் கஞ்சி வேணும்லா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

மாமா அழுகிறாரா, சலுவை வடிக்கிறாரா என்று புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஒரு நாளு அம்மயும் அக்காவும் வயலுக்குப் போய்ட்டா. நான் அப்பா பக்கத்துல இருந்து அவ்வோ வாயத் தொறந்து கொஞ்சம் கொஞ்சமா கஞ்சி ஊத்துகேன். எப்பவும் அவ்வோ நெஞ்சு அசையான்னு மட்டும் பாத்துட்டே இருப்பேன். அன்னிக்கி கொஞ்சம் தூக்கித் தூக்கிப் போட்ட மாதி இருந்து. நெஞ்ச இறுக்கித் தேச்சி விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி அவ்வோ ஒடம்பு படபடன்னு ஆடிட்டு, வெட்டு வந்த மாதி. நா ‘எப்பா, எப்பா, என்னப்பா செய்யி’ன்னு அழுகேன். வெட்டு நின்ன பாடில்ல. வீட்டுத் தாக்கோல எடுத்து அவ்வோ கைலக் குடுத்தேன். இறுக்கிப் பிடிச்சிட்டு துடிச்சிட்டே கெடந்தா. சட்டுன்னு ஒரு அசைவு இல்லாம நின்னு. நா ஒத்தக்கி ஒருத்தனா என்ன செய்வேன்? அப்பா செத்துட்டாருன்னு நெனச்சி அம்மக்கிட்ட சொல்ல ஓடுனேன்.”

நான் மெளனமாக கேட்க, மாமா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தார்.

“நா ஓடுகேன். ’மக்ளே’ன்னு ஒரு சத்தம். அப்பா கொரல்தான். எனக்கு நடுங்கிட்டு. திரும்பிப் பாக்கேன், அப்பா எந்திச்சி ஜம்முன்னு உக்காந்திருக்கா. கட்டில்ல இருந்து என்னப் பாத்து கையசச்சிக் கூப்புடுகா. என்னால நம்பவே முடில. ஓடிப் போயி அவ்வோ கையப் புடிச்சேன். அப்பா மெல்ல எந்திச்சி என்னக் கூட்டிட்டு வீடு முழுக்க ஒரு சுத்து நடந்தா. அப்பிடியே வெளக்கு முன்னால கூட்டிட்டுப் போயி நின்னா. அவ்வோ மொகத்துல அப்போ அப்பிடி ஒரு ஐசுரியம். சும்மா தகதகன்னு ஜொலிக்கா அப்பா. அப்பிடியே கண்ண மூடி நின்னா. பொறவு கைய நீட்டி தாம்பாளத்துலருந்து திருநீற எடுத்துக் கேட்டா. நா எடுத்துக் கொடுத்தேன். ஏதோ மனசுக்குள்ள சொன்னா அப்பா. என்னன்னு எனக்குப் புரியல்ல. பெரிய சாமிகொண்டாடில்லா? திருநீற எடுத்து என் நெத்தில பூசி விட்டுட்டு அவ்வோ நெத்திலயும் பூசினா. அப்பிடியே கூட்டிட்டுப் போயி கட்டில்ல இருந்தா. கொஞ்ச நேரம் எம்மூஞ்சிய பாத்துட்டே இருந்தா. சிரிச்சிட்டே மெதுவா கட்டில்ல படுத்தா. நா அப்பா கைய தடவி விட்டுட்டு இருந்தேன். அப்பா என்னயே பாத்துட்ருந்தா. என் கைய எடுத்து அவ்வோ நெஞ்சுல வச்சா. நெஞ்சு மெல்ல மெல்ல அசஞ்சிட்டு இருந்து. அப்பாக்க மூச்சுச் சத்தமும் என்னோட மூச்சுச் சத்தமும் மாறி மாறிக் கேட்டு. எல்லாம் கொஞ்ச நேரந்தான். இந்தா, இந்தக் கை வழியாத்தான் எங்கப்பா போனா பாத்துக்கோ.” என்று சொல்லி என் கையோடு சேர்த்து அவரது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினார்.

சிறிது நேரம் மாமா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“பொறவு நமக்கு இந்தப் பேரு ஒட்டிக்கிட்டு. அது சும்மால்ல, ஒரு தோணக்கமாக்கும். செல மூஞ்சியப் பாத்த ஒடனே தோணிரும், இது தேறாதுன்னு. என்னைக்கு எத்தன மணிக்குப் போகும்னு கூட தெரிஞ்சிரும். பின்ன, நானாட்டு ஒண்ணும் சொல்லதில்ல. அப்பிடி ஒண்ணு ரெண்டு எடத்துல சொல்லப் போயி சொன்ன மாதியே நடந்துட்டு. பின்ன, அதுவே பேராயிட்டு. செரி, நம்மளும் பாவம் ஒண்ணும் பண்ணலல்லா? இழுத்துட்டுக் கெடக்கது கொடூரம்லா மருமவன? போயி பக்கத்துல நின்னாப் போறும். என்ன பேசுகேன்னும் தெரியாது, அங்க என்ன நடக்கும்னும் தெரியாது. சீவம் சொகமாப் போயிரும். அதான மருமவன வேணும். என்னத்த வாழ்ந்து என்னத்துக்கு?”

*

சற்று நேரத்தில் வாக்கரிசிப் பிள்ளை மாமா வந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் பயங்கரமாகக் கோபம் வந்தது. என் தாத்தாவின் மரணத்தைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்பாவும் சித்தப்பாவும் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டு மாமாவை உள்ளே போகச் சொன்னார்கள். நான் அவருக்கு முன்னாக ஓடிச் சென்று தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். எனக்குத் தெரிந்த சாமி மந்திரங்களையெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தேன். மாமாவின் மந்திரம் இன்று பலிக்கக் கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டினேன்.

மாமா வந்து நின்று என் தலையில் கைவைத்து வருடினார். நான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து என் முன் நீட்டினார். நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

“மக்ளே, வெளிய வா கொஞ்சம்” என்று அம்மா அழைத்தாள்.

“ஒண்ணுல்ல மக்ளே. மருமவன் இங்கயே இருக்கட்டும்.” என்று பதில் சொன்னார் மாமா.

அம்மா வந்து மாமாவின் கையில் ஒரு தம்ளர் பால் கொடுத்துச் சென்றாள். ஒரு மடக்கை தன் வாயில் விட்டவர், “மக்ளே, கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா.” என்றார்.

அம்மா சீனி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். மாமா ஏதோ வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார். எனக்குள் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால், எதுவும் நடக்காததைப் போல, அல்லது வேறு யாருக்கோ நடப்பதைப் போல தாத்தா சுகமாகப் படுத்துக் கிடந்தார். அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாகியது. என்ன ஒரு கம்பீரம், அழகு! தாத்தா என்னைப் பார்த்து சிரித்ததைப் போல இருந்தது. மாமா மூன்று முறை தாத்தாவின் வாயில் பாலை விட்டார். தாத்தா நல்ல பிள்ளையாக வடிக்காமல் பாலை விழுங்கினார். மாமா சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடி நின்றார். பின், தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். வெளியே ஒரே சலசலப்பு!

நான் தாத்தாவின் அருகே உட்கார்ந்து எனது கையை அவரது கையோடு சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். எங்கள் கைகள் மேலும் கீழும் மெல்ல ஏறி இறங்கின. எனது மூச்சும் தாத்தாவின் மூச்சும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தது. வாக்கரிசி மாமா வைத்துவிட்டுப் போன ஆரஞ்சு மிட்டாய் தாத்தாவின் தலைமாட்டில் இருந்தது.

 

 

செர்பிய கவிதைகள்: டஸ்கோ ரடோவிக் (1922-1984) – எஸ். பாபு தமிழாக்கம்

எஸ். பாபு

முடிவுகளும் துவக்கங்களும்

புதன்கிழமை எங்கு முடிகிறதோ,
வியாழக்கிழமை அங்கு துவங்குகிறது.
வியாழக்கிழமையின் குழந்தைபோல
வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது.
முடிவுகள் முடிந்துவிடும்போது
துவக்கங்கள் வருகின்றன.
முடிவு முதல் துவக்கம் வரை என்பதே போக்கு.
மேலும்,
முடிவில் துவக்கம்தான் வருகிறது.

***

3X3 என்ன?

அது 7 என்று நினைத்தேன்.
அது 6 என்று சொன்னேன்.
அது 9 ஆக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன்.

***

அநீதி

எனக்குத் தெரியுமா? என்று
என்னிடம் கேட்டாள்.
எனக்குத் தெரியாது என்று
சொன்னேன்.
பதில் சரியானது தான்.
ஆனாலும் எனக்கு
கெட்ட பெயர் கிடைத்தது.

***

பன்றி

பன்றிக்குத் தெரியுமா, தானொரு பன்றி என்று?
அதற்குத் தெரியுமா, மற்ற பன்றிகளைப் போலத்தான்
அது தோற்றமளிக்கிறது என்று?
பன்றி தன்னை வேறு எதுவாகவோ
நினைத்துக் கொண்டிருக்கலாம்.

***

துளை வழியாகப் பார்த்தல்

ஒரு துளை வழியாகப் பார்ப்பது
சிறந்தது.

உங்களுக்கான துளையை உருவாக்கி
அதன் வழியே பாருங்கள்.
நீங்கள் பார்ப்பதை
வேறு யாராலும் பார்க்க முடியாது.

நீங்கள் சோர்வடையும்போது
துளையை மூடிவிடலாம்.
அல்லது
அதனை நிராகரித்து விடலாம்.

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

கவிதையோடு வாசிப்பு மனம் முழுவதுமாக ஒன்று கலந்து உறவாடி விடாமல், அதில் ஒரு சிறு இடைவெளி மிஞ்சினால் தான் அந்தக் கவிதையுடனான உறவு நிலைக்கிறது. அவ்விடைவெளியை நிரப்ப முயலும் பிரயத்தனத்தை அக்கவிதை நம் வாழ் நாள் முழுவதும் கோரியபடி இருக்கிறது. அம்மாதிரியான கவிதை வரிகள் தான் வரலாற்றில் நிற்கின்றன போலும். ‘யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம்’ என்னும் நகுலனின் வரிகள் போல. கவிஞன் நின்றுரைக்கும் தளத்திற்கு ஏற்றிவிட இல்லாமல் போகும் அந்தக் கடைசிப் படிக்கட்டு, நம் மனதை அந்தர ஏகாந்தத்தில் நிறுத்துகிறது. அப்படியான வரிகளை உலகின் பல்வேறு மொழிக் கவிதைகளிலும் காண முடிகிறது. செர்பியக் கவிதை வரிகளில் அவ்வாறு சஞ்சரித்த அனுபவத்தின் விளைவுதான்  இம்மொழிபெயர்ப்பு. யாருடைய வரிகளோ உள்ளங்கையில் வந்து விழ, தெரிந்தோருக்கெல்லாம் உடனே பகிர்ந்துவிடத் தூண்டும் அந்தக் கண நேர உ ந்துதல் போன்ற ஒரு சிறு பதற்றம் தானே தவிர, இம்மொழிபெயர்ப்புக்கு  சீரிய நோக்கம் என்று எதுவுமில்லை.

சிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை

“என்ன சௌக்யமா?” என்று கேட்டுக் கொண்டே அந்த மாமா உள்ளே நுழைந்தார்.

“அடடே! யாரு ஸாமிநாத அய்யரா? வாரும், வாரும், என்ன ஆளைப் பாக்கறதே அபூர்வமா போயிடுத்தே!எப்பிடி இருக்கேள்? ஆத்தில எல்லாரும் சௌக்யமா?உக்காருங்கோ ,உக்காருங்கோ!” தாத்தா குரலில் ஒரே உற்சாகம்.

“என்ன ஓய்! நம்ம வீ.ஓ,கர்ணம் கான்ஃப்ரன்ஸ்க்கு வராம வச்சுட்டீர்! எல்லாரும் வந்திருந்தா! உம்மை ரொம்ப விசாரிச்சா! திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், செம்மங்குடி எல்லாரும் அனேகமா வந்துட்டா, நீர்தான் இப்பிடி பண்ணிப்பிட்டீர்!”அவர் உட்காருவதற்குள் தாத்தா குற்றப் பத்திரிகை படித்தார்.

“இல்ல ! ஆத்துல ரொம்ப ஆச்சோ ,போச்சோன்னு ஆயிடுத்து, உடனே நாகப்பட்டினம் டாக்டர் கிட்ட கூட்டிண்டு போய் ஒரே அமக்களமாயிடுத்து, இல்லாட்டா அப்பிடி வராம இருப்பேனா என்ன?”

“அடடா! த்சோ!த்சோ! பாவமே!இப்ப உடம்பு தேவலாமா?தெரிஞ்சிருந்தா ஒரு நடை வந்து பாத்திருப்பேனே!”

“இல்ல! இல்ல !இப்பொ தேவலாம்!”

“இந்தா,இந்தா” தாத்தா சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்,பாட்டியைக் கூப்பிடுகிறார்.”யாரு வந்திருக்கா பாரு” இரைந்து சொன்னார்.

“தாத்தா!பாட்டி சமையல் உள்ளில் இல்ல! கொல்லையையில வண்டி ரிப்பேர் பண்ணவந்தவன்கிட்டையும்,மாட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போறதைப் பத்தி ராமசாமிகிட்டயும் பேசிண்டிருக்கா”ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த நான் ஆடுவதை நிறுத்தாமல் சொன்னேன்.

“யாரு பேத்தியா? மதுரையிலருந்தா?” நான் மாமாவைப் பார்த்து சினேகிதமாக சிரித்துவிட்டு “நமஸ்காரம் மாமா” என்றேன்.

“ஆமா! லீவுக்கு வந்திருக்கா,போய் பாட்டியை கூப்பிடும்மா”என்றார் தாத்தா

“இல்ல, பரவாயில்லை!மெதுவா வரட்டும்!இங்க என் மச்சினி ஆத்துக்கு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டு போலாம்னு”

“என்ன சமாசாரம்?”

“மச்சினி பொண்ணுக்கு வரன் பாத்துண்டு இருக்கா இல்லயா?அதான் ஒரு தெரிஞ்ச இடம் இருக்குன்னுட்டு சொல்றதுக்கு வந்தேன்”

“யாரு?”

“நம்ம மேலத்தெரு நாச்சாமி இருக்கான் இல்லியா?”

“ஆமா!”

“அவன் இரண்டாவது மச்சினியை கும்பகோணத்தில குடுத்திருக்கே”

“ஆமா!”

“அவ இளைய மாமனார் பிள்ளை மேட்டுர் கெமிகல்ஸ்ல வேலை பாக்கறனே”

“ஆமா!ஆமா!”

“அவன் பொண்டாட்டி கூட…… திருச்சி.”

“ ஆமா!திருச்சிக்காரி!”

“கரக்டா சொல்றேளே! அவ தம்பி திருச்சியில பி.எச்.ஈ.எல் ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா”

இந்த ஒவ்வொரு ஆமாவுக்கும் தாத்தாவுக்கு குரலில் சத்தமும் , உற்சாகமும் கூடிக் கொண்டே போயிற்று.

“அவனொட மச்சினன் கூட மட்ராஸ்ல பாங்க்ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா!”

“அவன் பையனுக்கு பாக்கலாம்னு!.உங்களுக்கு தெரியுமோல்லியோ”

“சரியா தெரியல யாருன்னு ! என் வைஃபை க் கேட்டா தெரியும்”

தாத்தா எப்பவும் பாட்டியை வைஃப் என்றுதான் குறிப்பிடுவார்.

இவ்வளவு நேரம் ஆமா ஆமா என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைத்துக்கொண்டேன். வந்த மாமா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

தாத்தா ஒல்லியாய் , உயரமாய் ஒரு சாயலில் லாரல், ஹார்டி இரட்டையரில் ஒல்லியாய் இருப்பவரான லாரலை நினைவு படுத்துகிறமாதிரி இருப்பார்.எப்பவும் கணுக்காலுக்கு மேலேயே இருக்கும் வேஷ்டி, முழங்கை வரை வருகிற தொள தொள சட்டை, முகத்தில் சதா சர்வதா சிரிப்பு, விடு விடு வென்ற வேக நடை. அந்த காலத்து எஸெல்சி. ஆங்கிலம் நன்றாக பேசுவார், அதைப் பற்றி பெருமையும் உண்டு.

ஒரு தடவைஅவர் மதுரைக்கு வந்த போது நான் படிக்கிற பள்ளிக்கு வந்து என்னுடைய ஏழாவது வகுப்பு டீச்சரிடம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். டீச்சரே கொஞ்சம் பயந்துகொண்டு உதறலோடு பேசினாற் போல் எங்களுக்குத்தோன்றியது.

அப்புறம் அந்த டீச்சர் என்னிடம் ”ஏண்டி! உங்க தாத்தா ரொம்ப நல்லா இங்க்லிஷ் பேசறாரே? பி.ஏ வா. எம் ஏ வா? ” என்று கேட்டார். நான் ” இல்ல டீச்சர்! எஸெஸெல்ஸி தான் “என்றேன். “அடேயப்பா! இந்த போடு போடறாரே! அந்த காலத்து எஸெஸெல்ஸி, இந்த காலத்து பி ஏ , எம் ஏக்கு சமம்டி!”

அதை தாத்தாவிடம் வந்து சொல்லி விட்டேன் . தாத்தாவுக்கு பெருமை சொல்லி மாளவில்லை.” “ஹெஹெ….. என்ன சொன்னா, பி ஏ வா, எம் ஏவான்னு கேட்டாளா? அந்த காலத்து எஸஎல்ஸி இந்த காலத்து எம் ஏ ன்னாளா” கெக்கெக்கென்று சிரித்தார்.

.அந்த டீச்சரையும் ரொம்ப பிடித்துவிட்டது “ ரொம்ப நல்லவ பாவம்!த்ஸொ! த்ஸொ! ரொம்ப நல்ல மாதிரி!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

” மாப்பிள்ளை இதை கேட்டேளா? ராதாவோட டீச்சர் என்ன சொன்னான்னு?”

“ ம்.. கேட்டேன், கேட்டேன்! சொல்லமாட்டாளா பின்ன? எனக்கே அந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது!” சொல்லிக் கொண்டே துண்டை தோளில் போட்டுக் கொண்டு குளிக்கப்போனார் அப்பா. அப்பாவின் முக பாவத்தை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை.

தாத்தா “மாப்பிள்ளை! மாப்பிள்ளை! இன்னொரு சமாசாரம் என்னன்னா “ என்று கூறிக்கொண்டே பின்னோடு போனார். அப்பா குளியலறையில் புகுந்து குளிக்க ஆரம்பித்த பிறகும் பாத்ரூம் வாசலில் இருந்துகொண்டு ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதோடு விட்டால் பரவாயில்லையே, என்னோடு தினம் பள்ளிக்கூடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம். அதை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

தாத்தாவின் அப்பா அந்த காலத்திலேயே நாகப்பட்டிணம் ஜில்லாவிலே முக்கிய புள்ளி, செஷன்ஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல். “வக்கீல்னா என்ன தேங்கா மூடி வக்கீலா என்ன அவர்? அவர் பேரைச் சொன்னா அழுத பிள்ளை வாய் மூடும், அவர் இருந்த கெத்து என்ன , கம்பீரம் என்ன , அந்தஸ்து என்ன, ஹோதா என்ன? அடேயப்பா! சொல்லி மாளாது “என்பாள் அம்மா.

ஆனால் துரதிர்ஷடவசமாக தாத்தாவுக்கு அந்த கல்யாண குணங்கள் எதுவுமே வர வில்லை என்பதுதான் பாட்டியின் குறை. தாத்தா ஒரு விதத்தில் நல்லவர்தான், ஆனால் வல்லவர் அல்ல. அவர் அப்பா வைத்து விட்டு போன சொத்துக்களை ஆளுகிற ஆளுமையோ, கட்டி காப்பாற்றுகிற சாமர்த்தியமோ,தோரணையோ அவரிடம் இல்லை. போதும் போதாதற்கு, எல்லாரிடமும், வயலில் வேலை செய்பவனிலிருந்து , அக்கம் பக்கத்தவர்,தாயாதி வரை ஏதோ சண்டை,பூசல். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுகிறாற் போல்பேசுகிற வித்தை அவருக்குத் தெரியவில்லை.

பாட்டி பாஷையில் சொல்வதானால் ‘அங்கிருக்கிற ஒவ்வொவொரு பயலும் எமகாதகன்கள்,கண்ணை முழிச்சுண்டிருக்கறச்சயே கையில இருக்கறதை பிடுங்கற அதி சாமர்த்திய சாலிகள், அதுகளுக்கு நடுப்பற இப்பிடி இரண்டுங்கெட்டானா இருந்தா பிழைக்கறது எப்பிடி?’

சமையலறையில் பாத்திரங்கள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

தாத்தா இரைந்து “இந்தா , இந்தா !” என்று கத்தினார்.

“ராதா! பாட்டி கிட்ட மாமா வந்திருக்கிறார்னு சொல்லு! காபி கொண்டு வா!”

“இல்லன்னா! அதெல்லாம் வேண்டாம் , நான் கிளம்பறேன்”

“நன்னாருக்கே! அப்பிடி எப்பிடி போக முடியும்?”

நான் சமையல் உள்ளில் நுழைந்தேன்.

பாட்டி” என்ன உங்க தாத்தா தட புடலா கத்தி ஆறது? உள்ள என்ன இருக்கு என்ன இல்லைன்னு ஒண்ணும் தெரியாது! தாட்டு பூட்டுனு அமக்களப் படுத்தியாறது!”பல்லைக்கடித்தாள்.

மடிசார் புடவை தலைப்பால் வலது தோளை லேசாக மூடிக்கொண்டு( மரியாதை நிமித்தம் !!) கூடத்துக்கு வந்து

“ வாங்கோ மாமா ! வாங்கோ! ஆத்தில எல்லாரும் சௌக்யமா? மாமியை அழைச்சுண்டு வல்லியா?” என்றாள் மென்மையான குரலில்.

“ மாமிக்கு உடம்பு முடியலையாம், அதான் வல்லை! நீ போய் காபி கொண்டு வா மாமாவுக்கு!” தாத்தா உரத்த குரலில் சொன்னார்.

யாராவது வரும்பொழுது தாத்தா பாட்டியை அதிகாரம் பண்ணுகிற தோரணையில் குரலை உயர்த்தி பேசுவார். மற்ற சந்தர்ப்பங்களில் பாட்டியின் உருட்டி விழிக்கிற முழிக்கும் , அடித் தொண்டையில் மெதுவாக உறுமுகிற மாதிரி பேசுகிற பேச்சுக்கும் எதிர் பேச்சு பேச முடியாது என்பதால் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவார்.

மாமா காபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார். தன் அதிகார பேச்சுக்கான பின் விளைவுக்கு பயந்து தாத்தாவும் அவருடனே கிளம்பி வெளியே போனார்.

சாயங்காலம் தலையாரி கோபால் “அம்மா!அய்யா இல்லிங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

“ நல்ல வேளை நானே உன்னைக் கூப்பிட்டு விடனும்னு நினைச்சேன்!! நீயே வந்துட்ட! சித்த உடையார் வீட்டு வரைக்கும் போய் போன வாரம் குடுத்த பத்து மூட்டை நெல்லுக்கு பணம் வாங்கிண்டு வா! உங்க அய்யா கிட்ட சொல்றதும் இந்த சுவத்துகிட்ட சொல்றதும் ஒண்ணுதான்! வீட்டுல ஆயிரம் செலவு இருக்கு! என்னத்தை சொல்றது போ!”

“விளக்கு வைக்கறதுக்குள்ள போறேன், இல்லாட்டா கிடைக்காது” என்று சொல்லிக் கொண்டே போனான்.

என் அண்ணாவும், தம்பியும் விளையாட போய்விட்டார்கள்,

பாட்டி எனக்கு தலை வாரி விட்டுக்கொண்டே சொன்னாள்,

“ எனக்கும் , எங்க பெரியப்பா பொண்ணு சிவகாமுவுக்கும் ஒண்ணாதான் ஜாதகத்தை எடுத்தா. உங்க தாத்தா ஜாதகம், வெங்கடேச அத்திம்பேர் ஜாதகம் இரண்டும் வந்தது.எனக்கு இவர் ஜாதகம், அக்காவுக்கு அத்திம்பேர் ஜாதகத்தையும் பாத்தா,பொருந்தலைன்னா மாத்திப் பாத்துக்கலாம்னா! என்னைப் பிடிச்ச அதிர்ஷ்டம் , பொருந்தியுடுத்து. இல்லன்னா என்னை அத்திம்பேருக்கு பாத்துருப்பா ! ஹும்! தலைஎழுத்தை யாரால மாத்த முடியும்? இப்ப பாரு , அத்திம்பேர் , சிவகாமு அக்காவை தாங்கு தாங்குன்னு தாங்கறார்!”

“சாமி விளக்கேத்தறியா” என்று பாட்டி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது,விறு விறு வென்ற உள்ளே நுழைந்த கோபால்,

“ போங்கம்மா! நம்ம ஐய்யா பண்ற வேலையை என்னன்னு சொல்றது?” என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?”

“ஏண்டா?ஒரு தடவை நெல்லை குடுத்துவிட்டு , எத்தனை தடவை பணம் வாங்குவீங்கன்னு பரியாசம் பண்றாங்கம்மா!,தலை தூக்க முடியல ,இஞ்ச வந்துதான் நிமுந்தே பாக்கறேன்! “

பாட்டி முகம் ஜிவு ஜிவென்று சிவந்தது.

“ எப்ப பணம் வாங்கினாராம்?

“இரண்டு நாள் முன்னாடி போய் வாங்கிட்டு வந்தாராம்!”

தாத்தாவை நினத்தால் கவலையாக இருந்தது.

“ வரட்டும் ப்ராம்ணன்! நான் இங்க இத்தனை சிலவு பூதம் போல நிக்கறதே , என்ன பண்றதுன்னு கையை பிசைஞ்சுண்டு நிக்கறேன்!வண்டியை ரிபேர் பண்ணனும், அடுத்த உழவுக்குள்ள மாட்டை கொஞ்சம் சரிபடுத்தி வைக்கணும், லீவுக்கு வந்த குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித்தரணும், வீட்டுல மளிகை சாமான்கள் வாங்கணும்,பழய பாக்கிகளை செட்டில் பண்ணனும். இந்த மனுஷனானா இப்பிடி பண்ணறது?இவர் கூடப் பிறந்த பொண்ணுகள் ஒண்ணொண்ணும்எப்பிடி என்னைப் பார் , உன்னைப் பார்னு ஜகஜ்ஜால கில்லடிகளா இருக்குகள்! இது ஒத்தைப் பிள்ளையா பிறந்துட்டு இப்பிடி இருக்கே ! சமத்துக்கு அப்பாவைக் கொள்ளப் படாதோ, அப்பிடியே அசட்டுக்கு அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கு! போறும் போறாத்துக்கு இந்த பொய் பித்தலாட்டம் வேற!” பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் கடைசியில் பிரச்னையின் ஆதாரத்துக்கு வந்து சேர்ந்தாள்.

தாத்தா இருட்டி வெகு நேரம் கழித்து வந்தார். பாட்டி பிலு பிலுவென்று பிடித்து கொண்டு அரை மணி நேரம் ஓயவில்லை.

தாத்தா “ஷீ இஸ் ஏ டஃபர், ஆல்வேஸ் கம்ப்ளைனிங்க்!நெவர் லிசனிங்க்!!உச் ..உச்..” என்று நடு நடுவில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த இடைவெளியில்,

“குழந்தை ரகு எஸ்ஸெல்ஸி போறானே, அதான் அவனுக்கு வாட்ச் வாங்கப் போனேன், அப்புறம்……” என்றார்.

அவ்வளவுதான் பாட்டிஒரு நொடியில் கொதிக்கும் எரிமலையிலிருந்து குளிரும் பனிமலையானாள்.

“அதை சொல்லிட்டு போலாமில்லியா? எங்க காட்டுங்கோ பாப்போம்!குழந்தை கைக்கு நன்னா இருக்கும், பரிட்சைம் போது மணி பாத்துக்கணுமே”

அவர்கள் இருவருக்கும் எங்கள் அண்ணா மீது இருந்த அன்பு, காவியங்களில் வைத்துப் போற்றப் பட வேண்டிய அன்பு .அதற்கு இணையான அன்பை என் வாழ்நாளில் இது வரை பார்த்ததில்லை ,ஆனால் அன்று அது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது என்பதுதான் உண்மை.

“அப்புறம் வாழைத் தோப்பிலே மரங்களுக்கு முட்டு கொடுக்கறதுக்கு முன் பணம் கொடுத்துட்டு வந்திருக்கேன், இந்தா பாக்கி பணம்!” கொடுத்தார்.

‘சரி! சரி! காலை ,கையை அலம்பிண்டு சாப்பிட வரட்டும்!அப்புறம் செலவழிச்சதுக்கு கணக்கு சொல்லட்டும்”

இதற்கப்புறம் அந்த கோடை விடு முறை வேறு வில்லங்கமான நிகழ்சிகள் எதுவும் இல்லாமல் முடிந்தது.

அதற்கடுத்த கோடை விடுமுறைக்கு வழக்கம் போல நாங்கள் நால்வரும் மறுபடியும் கிராமத்துக்குப்போனோம்.அந்தி மயங்குகிற சமயத்துக்கு வீட்டைச் சென்று அடைந்தோம். பாட்டி கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்துடன் தன் வழக்கமான உற்சாகம் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.

எங்களைப் பார்த்தவுடன் “வாங்கோடா குழந்தைகளா! , எப்ப கிளம்பினேள்?எப்ப சாப்பிட்டேளோ?”என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“என்ன பாட்டி?ஏன் என்னவோ போல இருக்கேள்? தாத்தா எங்க?” என்றான் தம்பி. கொஞ்சம் குரலில் தெம்பு வந்தவளாக

“உங்க தாத்தா சமாசாரம்தான் தெரிந்த விஷயமாச்சே! இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு மருந்து வாங்கிண்டு வரேன்னு திருவாலூர் கிளம்பிப் போனார், இன்னும் ஆளைக் காணலை! வியாழக் கிழமை சாப்பாட்டுக்கப்புறம் கிளம்பிப் போனார், இதோ இன்னிக்கு சனிக்கிழமை ராத்ரி ஆப்போறது இன்னும் வரலை”

“என்ன பாட்டிதிருவாரூர் இங்க இருந்து பத்து,பதினைந்து கிலொ மீட்டர் தூரத்தில இருக்கு. ஜாஸ்தி ஆனாலும், நாலு, அஞ்சு மணி நேரத்தில திரும்பலாமே! நானும் சீனுவும் வேணா போய் பாத்துட்டு வரட்டுமா?” என்றான் அண்ணா.

“ ராத்திரி இருட்டிண்டு வரது,தவிர எங்கன்னு போய்த் தேடுவ? உங்க தாத்தா திருவாரூர் தான் போனாரோ? இல்ல அங்கிருந்து வேற எங்கயாவது போனாரோ?யார் கண்டா , வரப்போ வரட்டும் போ!” எங்களைப் பார்த்த தைரியத்தில் பாட்டி பேசினாள்.

ராத்திரி சாப்பாட்டிற்கு அப்புறம் சமையலறையை சுத்தம் செய்யும் போது பாட்டி முகத்தில் திரும்பவும் பயம் வந்தாற் போல் இருந்தது.

“என்ன பாட்டி, ஏன் கவலைப் படறேள்? நீங்கதான் தாத்தா இங்க இருந்தா படுத்தறார்ங்கறேள் .இரண்டு நாள் எங்கோ போய்ட்டு வந்தா வரட்டுமே!” என்றேன்.

“அது இல்லம்மா! அசடோ,சமத்தோ, இரண்டுங்கெட்டானோ, கெட்டிக்காரனோ,என் கையில இந்த மனுஷனை நன்னா பாத்துக்கோன்னு ஒப்படைச்சுட்டு போயிருக்காளே உங்க கொள்ளுப் பாட்டி மகராஜி! நான் பாத்துக்க வேண்டாமா? அது என் கடமை இல்லியா? சாப்பிட்டாரோ, வைச்சாரோ, எங்கயாவது அடி பட்டு கிடக்காரோன்னு மனசு அடிச்சுக்கறது! ஆனா அதுக்காக நான் இனிமே சண்டை போட மாட்டேன்னு அர்த்தம் இல்ல! திரும்ப வரச்ச பிடிச்ச காட்டில கொண்டு விடத்தான் விடுவேன். வரட்டும் மனுஷன்!”

மறு நாள் காலை பதினோரு மணி வாக்கில் தாத்தா வந்து சேர்ந்தார். திருவாரூரில் யாரோ பட்டாமணியத்தையோ, கர்ணத்தையோ பார்த்தாராம், முக்கியமான விஷயமாக நாகப்பட்டணம் போக வேண்டியிருந்ததாம், இந்த மாதிரி என்னவோ கதை கதையாக சொன்னார், யாருக்குமே அதை கேட்கிற மனநிலையுமில்லை, நம்புகிற மனநிலையுமில்லை. கடைசியில் பாட்டிக்கு வாங்க வேண்டிய மருந்துகளையும் வாங்கவில்லை.

அடுத்த கோடை விடுமுறை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு பாட்டி செத்துப் போனாள். அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம்.சிதையில் எரிந்தது, எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள்பால்யமும்தான். ’ பாட்டியோடு பால்யம் போம்!’ ஆம், போயிற்று!

பாட்டியை இனி பார்க்கவே முடியாது என்கிற பயங்கரமான, மாற்றமுடியாத, வலி மிக்க உண்மையை எதிர் கொள்ளத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

அன்றைக்கு இரவு தூக்கமும் இல்லாமல், விழிப்புமில்லாமல் வெகு நேரம் தவித்து விட்டு கண் அசந்த வேளையில் தங்கை , என்னை எழுப்பி “அக்கா! அக்கா ! தாத்தாவைக் காணும், படுக்கையில இல்ல,” என்றாள்.

ஒரு நொடியில் வீடே விழித்துக் கொண்டது. வீடு முழுக்க தேடி அவர் அங்கு இல்லை என்று தீர்மானமானவுடன் ,அப்பாவும் ,ராமசாமியும் , கீழத் தெருவின் கடைசியிலிருந்த சிவன் கோவில் பக்கம் போனார்கள், சித்தப்பாவும், மாமா தாத்தாவும் , மேலத்தெரு பக்கம் தேடிக் கொண்டு போனார்கள், அண்ணாவும், தம்பி சீனுவும் ,கோபாலுவும்ஆற்றங்கரைப்பக்கம் போனார்கள்.

போய் விட்டு வந்த பிறகு அண்ணா சொன்னான்

“ பிள்ளயார் கோவில் திண்ணையில் படுத்துக் கொண்டிருதவர்களில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு ஆத்தங்கரைக்குப் போனோம்,அரச மரத்து சலசலப்பு தவிர வேற சத்தமேயில்ல, மேலே மினுங்கிக் கொண்டிருந்த நட்சத்தர வெளிச்சம் இருட்டை ஜாஸ்தியா காமிச்ச மாதிரி இருந்தது, கொஞ்சம் பயமா கூட இருந்தது. மங்கின வெள்ளையா தெரிஞ்ச ஆத்து மணல்ல தூரக்க யாரோபடுத்துண்டு இருந்தது தெரிந்தது,கோபால் சொன்னான் ,’ கிட்டப் போய் திடும்னு நின்னா அய்யா பயந்துடுவாரு, இங்கேயேயிருந்து கூப்பிட்டுகிட்டே போலாம்’

குரல் குடுத்துண்டே போனோம், தாத்தாபதில் சொல்லலை , கிட்ட போய்ப் பார்த்தால் குலுங்க குலுங்க அழுதுண்டிருந்தார். அவர் தோளைத் தொட்டதும் அழுது கொண்டே பாட்டி பாவம்! என்றார்”

தாத்தாவை எங்களோடு நாங்கள் வசித்த நகரத்துக்கு கூட்டிக் கொண்டு போனோம்.எங்களோடு நகரத்துக்கு வந்த தாத்தா கிராமத்தில் இருந்தவர் இல்லை.

தாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை

அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து நீண்டிருக்கும் பெயர் தெரியாத கொடியில் மேலும் கீழும் பூத்திருக்கும் ஊதாநிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் ஏதோ திருவிழாவுக்குக் கட்டிய சிறுவிளக்குத் தோரணமென அந்தப் பூவரிசை நீண்டிருந்தது.

புதரையொட்டி கன்னங்கரிய எருமையொன்று அப்போது வந்து நின்றது. இவ்வளவு காலையிலேயே மேய வந்துவிட்டதே என ஆச்சரியமாக இருந்தது. அது தரையில் பச்சைப்பசேலென வளர்ந்திருந்த புல்லை தேடித்தேடி மேய்ந்தது. வளைந்த கொம்பு. பெரிய கண்கள். கழுத்தில் மணி தொங்கியது. புல்லுக்காக தலையை அசைக்கும் போதெல்லாம் மணியோசை எழுந்தது. எங்கோ உரசிக்கொண்டதாலோ அல்லது ஏதோ கூர்மையான கழியோ, கிளையோ முதுகில் விழுந்து தோல் கிழிந்து கன்றியிருந்தது.

அப்போதுதான் ஒரு காக்கை பறந்துவந்து அதன் கொம்புகளுக்கிடையில் உட்கார்ந்தது. முதலில் எருமை அதைப் பொருட்படுத்தவில்லை. மெல்ல மெல்ல கொம்பிலிருந்து கழுத்தை நோக்கி நகர்ந்த காக்கை, பிறகு முதுகுத்தண்டின் மீது நடந்துசென்று முதுகிலிருந்த கையகல புண்ணுக்கு அருகில் சென்று நின்றது. ஒருகணம் எருமையின் முதுகில் குனிந்து அலகால் கொத்துவதும், மறுகணமே தலையைச் சாய்த்து நடைபாதையை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தது காக்கை. அதுவரை அமைதி காத்த எருமை, புண்ணில் காக்கையின் அலகு பட்டதும் வாலைச் சுழற்றி அது அமர்ந்திருந்த திசையில் விசிறியது. சரேலென பறந்து தப்பித்து விலகிய காக்கை காற்றிலேயே ஒரு சுற்று வட்டமடித்துவிட்டு மறுபடியும் எருமையின் முதுகில் வந்து உட்கார்ந்தது.

அக்கணத்தில் என்னைக் கடந்து சென்ற ஒரு சிறுவன், அதே காட்சியைச் சுட்டிக்காட்டி, தனக்கு அருகில் நடந்துவந்த பெரியவரிடம் “அங்க பாருங்க தாத்தா, அந்த காக்கா எருமைய வம்புக்கு இழுக்குது” என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் பக்கமாகத் திரும்பினேன்.

“அதனாலதான் வால சுத்திசுத்தி வெரட்டியடிக்குது” என்றார் தாத்தா. அதற்குள் அவரும் வேலிக்கருகில் நடைபெறும் எருமை காக்கை சீண்டலைப் பார்த்துவிட்டார்.

“என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜென்டில்மேன் தாத்தா” என்றான் சிறுவன்.

அதைக் கேட்டதும் பெஞ்சிலிருந்து எழுந்து நின்றுவிட்டேன். ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அப்படி மதிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவனுக்குள் தெய்வம்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் குரலும் சொற்களும் மண்ணுக்குரியவையே அல்ல என்று நினைத்தபடி அக்கணமே அச்சிறுவனைப் பின்தொடர்ந்தேன். அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்லும் சொற்களையெல்லாம் கேட்கவேண்டும் என்பதுபோலவும் தோன்றியது. ஏதோ நடைப்பயிற்சி செய்பவன் என்னும் தோற்றம் காட்டியபடி அவர்கள் சொற்கள் காதில் விழும் அளவுக்கு நெருக்கமாகவே நடக்கத் தொடங்கினேன்.

“இடியே இடிஞ்சி உழுந்தாலும் எருமைகிட்ட அவசரமே இருக்காது தாத்தா. ஒரு நிமிஷம் கூட நிதானத்தை கைவிடாது. அடிச்சி பிடிச்சி ஓடாது. எல்லாமே தனக்குத்தான் கெடைக்கணும்னு அலையாது. பொறுமை. எப்பவுமே பொறுமை. அதான் அதுங் குணம். அதுக்காகத்தான் அது ஜென்டில்மேன்.”

அவன் ஆர்வத்தோடு அடுக்கிக்கொண்டே சென்றான்.

”எல்லா அனிமெல்ஸ்ங்களயும் விட்டுட்டு எருமையை மட்டும் ஜெண்டில்மேன்னு ஏன் சொல்ற?” என்று தாத்தா கேட்டார்.

“எத்தன கார்ட்டூன் சேனல், போகோலாம் பாக்கறேன். எல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?” என்று வேகமாகச் சொன்னான் சிறுவன்.

“அதான், என்ன தெரியும் சொல்லு”

“சிங்கம் சண்டைபோடும். புலி சண்டை போடும். யானை சண்டை போடும். நரி, கரடி, மான் கூட சண்டை போடும். மாடுகள்ல எருது கூட சண்டைபோடும். எல்லாத்தயும் நான் பாத்திருக்கேன். ஆனா எருமை சண்டை போட்டு நான் எங்கயும் பார்த்ததே இல்ல. அதனாலதான் அது நூறு பர்செண்ட் ஜென்டில்மேன்”

“சண்ட போடாததெல்லாம் ஜென்டில்மேன் ஆயிடுமா?”

“ஆமாம். அது மட்டுமில்ல. அது ரொம்ப சாது. எப்பவும் அமைதியாவே இருக்கும். ஆர்ப்பாட்டம் பண்ணாது. யாருக்கும் கெடுதல் செய்யாது. முட்டாது. மொறைக்காது. பின்னாலயே விரட்டிகினு வராது. உண்மையான ஜென்டில்மேன்.”

பெரியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்தார். “நைஸ். நல்ல நல்ல பாய்ண்ட்லாம் சொல்றியே. விட்டா ஒரு கட்டுரையே எழுதிடுவ போலிருக்கே” என்றார்.

“நெஜமாவே ஒரு கட்டுரை ஸ்கூல்ல எழுதினேன் தாத்தா. ஒருநாள் மிஸ் உங்களுக்குப் பிடிச்ச டொமஸ்டிக் அனிமல பத்தி ஒரு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாங்க. நான் அப்பதான் எருமைய பத்தி எழுதனேன். ஆனா மிஸ் எனக்கு குட் போடவே இல்ல. எல்லாரும் ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, கன்னுக்குட்டின்னு எழுதியிருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் குட் போட்டாங்க. எனக்கு வெறும் ரைட் மார்க். அவ்ளோதான். என்னடா இப்படி எருமைய பத்தி எழுதியிருக்கியேன்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க. அப்பா கூட அன்னைக்கு நான் சொன்னத கேட்டுட்டு என்ன பாத்து ஷேம் ஷேம்னு சொன்னாரு. அப்ப நீங்க ஊருல இருந்திங்க. இங்க வரல.”

“போனா போறாங்க உடு. அவுங்களுக்கெல்லாம் எருமைய பத்தியும் ஒன்னும் தெரியல. உன்ன பத்தியும் ஒன்னும் தெரியல. உனக்குத்தான் அதனுடைய அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சிருக்குது. நீ ரொம்ப ரொம்ப வெரிகுட் பாய். நானா இருந்தா உனக்கு டபுள் குட் போட்டிருப்பேன்.”

அச்சிறுவனுக்கு அருகில் சென்று அவன் விரல்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. ஆயினும் என் குறுக்கீடு அவர்களுடைய இயல்பான எண்ண ஓட்டங்களைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சினேன். அவனைப் பார்த்தால் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடத் தோன்றியது. அவன் குரலில் இன்னும் மழலை கேட்டது.

ஒரு திருப்பத்தில் நாலைந்து மழைமரங்கள் அருகருகே நின்றிருந்தன. செக்கச்செவேலன மலர்ந்த மலர்களும் பச்சை இலைகளும் கிளைமுழுக்க அடர்ந்திருந்த கோலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவற்றின் கிளைகளில் அங்கங்கே வெண்ணிறப் பூக்கள் பூத்துத் தொங்குவதுபோல கொக்குகள் அமர்ந்திருந்தன. இன்னொரு கூட்டம் கழுத்தை முன்னோக்கி நீட்டியபடி இறக்கையை விரித்து வானத்தில் வட்டமிட்டது.

தாத்தா அவனுக்கு அந்தக் கொக்குக்கூட்டத்தைக் காட்டினார். சிறுவன் அதைப் பார்த்துவிட்டு கைதட்டிக் குதித்தான்.

“தாத்தா, ஒய்ட் அண்ட் ஒய்ட் யூனிஃபார்ம்ல ஸ்கூல் பிள்ளைங்க ஓடி விளையாடற மாதிரி இருக்குது.”

கொக்குவட்டத்தில் பதிந்த கண்களை அவனால் விலக்கவே முடியவில்லை. பரவசத்தோடு “வெள்ளைத் தாள கட்டுகட்டா கிழிச்சி விசிறினா பறந்து போவுமே, அது மாதிரி இருக்குது” என்றான். உடனே அடுத்து “பட்டம் விடற போட்டியில எல்லாப் பட்டங்களும் வெள்ளையாவே பறந்தா எப்படி இருக்கும், அப்படி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவனுக்கு அதைப்பற்றி சொல்லி மாளவில்லை. மீண்டும் “முதுவுல வெள்ளையா துணிமூட்டைய தூக்கிவச்சிகினு வெளியூருக்கு போற கூட்டம் மாதிரி இருக்குது” என்றான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டு “ஆமா ஆமா” என்று தாத்தாவும் தலையசைத்தார்.

”இவ்ளோ கொக்குங்களும் இந்த மரத்துலயே இருக்குமா தாத்தா?”

“ஆமா”

“எல்லாமே இங்க கூடு கட்டியிருக்குமா?”

“ஆமா”

“கூட்டுல முட்டை போட்டு வச்சிருக்குமா?”

“ஆமா”

“கொக்கு மீனத்தான சாப்புடும்? எல்லா கொக்குங்களுக்கும் இந்த கொளத்துல மீன் இருக்குமா?”

“மீன மட்டும்தான் சாப்புடும்னு சொல்லமுடியாது. சின்னச்சின்ன பூச்சிகளயும் புழுக்களயும் கூட புடிச்சி சாப்புடும்.”

“கொக்குகளுக்கு கால்கள் ஏன் ஸ்கேல் மாதிரி நீளமா இருக்குது?”

“அதுவா, அது கொளத்தோரமா ஏரிகரையோரமா தண்ணியில, சேத்துல எல்லாம் நடக்கணுமில்லையா, அப்ப அதனுடைய கால் குட்டையா இருந்தா மாட்டிக்கும். நீளமா இருந்தாதான் நடக்கறதுக்கும் மீனயும் பூச்சியயும் தேடி கொத்தி தின்னறதுக்கும் வசதியா இருக்கும்.”

”குட்டி கொக்கு கூட மீன கொத்தி தின்னுமா தாத்தா?”

”குட்டிகளுக்கு அம்மா கொக்கே எடுத்தும் போயி ஊட்டிவிடும்”

“குருவி மாதிரியா?”

“ஆமா”

“நீங்க குட்டி கொக்குகள பாத்திருக்கியா தாத்தா?”

“ம்.”

“எப்ப?”

“உன்ன மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல”

அவன் ஒருகணம் சந்தேகம் படிந்த பார்வையோடு அவரை நோக்கினான்.

“நீங்க அப்ப எங்க இருந்திங்க?”

“நான் எங்க கிராமத்துல மூனாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு பெரிய ஏரி உண்டு. அங்க நெறய கொக்குகள்லாம் வரும். நாங்க சின்ன பிள்ளைகள்லாம் சேர்ந்து ஏரிக்கரையிலதான் விளையாடுவம். அந்த சமயத்துல பாத்திருக்கேன்.”

“ஐ. நல்ல கதைமாதிரி இருக்குது. சொல்லுங்க தாத்தா. குட்டி கொக்குகள்லாம் அப்ப அங்க வருமா?”

கொக்குக்கூட்டத்தின் மீது பதிந்திருந்த பார்வையை விலக்கி தாத்தாவின் கையைப் பற்றி கெஞ்சினான் அவன். தாத்தா புன்னகைத்தபடி “சொல்றேன். சொல்றேன். குதிக்காம ரோட்ட பாத்து நடந்துவா” என்றார். சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

“நாங்க பத்து பன்னெண்டு பேரு ஒரே வயசுக்காரங்களா இருந்தோம். எல்லாரும் ஒரே செட். ஒன்னாதான் பள்ளிக்கூடம் போவோம். ஒன்னாதான் விளையாடுவோம். ஒன்னாதான் ஏரியில குளிப்போம். ஒருநாள் கரையோரமா நாங்க குளிச்சிட்டிருந்த நேரத்துலதான் கொக்குகள் கூட்டமா வந்தத பாத்தம். வெள்ளைவெளேர்னு ராக்கெட் மாதிரி சுத்தி சுத்தி வட்டம் போட்டுதுங்க. மொதல்ல பெரிய வட்டம். அப்பறமா சின்ன வட்டம். மறுபடியும் பெரிய வட்டம். நாங்க எல்லாருமே கரையில வந்து நின்னுகிட்டு கைய தட்டி ஓன்னு சத்தம் போட்டம்.”

“அம்பது கொக்கு இருக்குமா?”

“நூறு கூட இருக்கும். அப்படியே ஏரோப்ளேன் எறங்கறமாதிரி ஒன்னொன்னும் சைங்னு கீழ தாழ்ந்து வந்து பாறைகள் மேல வந்து ஒக்காந்துதுங்க.”

“அதுல குட்டி கொக்குங்க இருந்ததா?”

”ம். ரெண்டு குட்டி கொக்குங்க”

“அதுங்களும் பறக்கறத பாத்தீங்களா?”

“ம். பக்கத்துல போய் பாக்கலாம்னு நாங்க அதுங்கிட்ட சத்தம் போட்டுகிட்டே ஓடினோம். கொக்குகள் எங்கள பாத்துட்டு பயத்துல எழுந்து பறந்து போய்டுச்சிங்க.”

“ஐயையோ, அப்பறம்?”

“ரொம்ப தூரம்லாம் போவலை. பக்கத்துலதான் ஒரு வயல் இருந்தது. கம்பு, தினை, எள்ளுலாம் வெளஞ்ச வயல். எல்லா கொக்குகளும் அங்க போய் எறங்கிடுச்சிங்க. நாங்களும் விடாம அதும் பின்னாலயே ஓடினோம். திடீர்னு ஒரு கொக்கு கூட கண்ணுக்கு தெரியவே இல்ல. திடீர்னு எல்லாமே மறஞ்சிட்டுதுங்க. நாங்க திகைச்சிபோய் அங்கயே நின்னு திருதிருனு முழிச்சிட்டிருந்தம். திடீர்னு அம்புவிட்ட மாதிரி எல்லா கொக்குகளும் வயலுக்குள்ளேர்ந்து மேல பறந்துபோச்சிங்க. நாங்க உடனே ஓன்னு சத்தம் போட்டோம். ரெண்டு மூனு வட்டம் மேலயே அடிச்சிட்டு மறுபடியும் எல்லா கொக்குகளும் கீழ எறங்கிச்சிங்க. கீழ எறங்கனதுமே கண்ணுக்குத் தெரியாம மறஞ்சிடும். மறுபடியும் சத்தம் போட்டா படபடன்னு றெக்கைய அடிச்சிகிட்டு பறந்து போவும்.”

“ஐ, நல்லா இருக்குதே இந்த விளையாட்டு.”

“கிட்ட போய் பாக்கணும்ங்கற ஆசையில நாங்க எல்லாருமே சத்தமில்லாம அடிமேல அடிவச்சி வயலுக்குள்ள தலைய தாழ்த்திகிட்டு போனோம். ஒரு கட்டத்துல கொக்கு உக்காந்திருக்கறதுலாம் நல்லா தெரிஞ்சிது. ஒரு அம்மா கொக்குகிட்ட ரெண்டு குட்டி கொக்கு. ரெண்டும் அம்மா கொக்கு கால சுத்திசுத்தி வந்திச்சிங்க. பாக்கறதுக்கு கோழி குஞ்சுங்க சுத்தி வருமே, அந்த மாதிரிதான் இருந்திச்சி.”

“ரொம்ப பக்கத்துல போயிட்டிங்களா?”

“ரொம்ப பக்கத்துல போனா பயந்து பறந்துடுமில்லயா? அதனால் கொஞ்சம் மறைவா தள்ளி உக்காந்துகினு அதுங்களயே பாத்து ரசிச்சிகிட்டு உக்காந்துட்டம். அந்த நேரம் பாத்து எனக்குப் பின்னால நின்னுட்டிருந்த ஒரு பையன் சட்டுனு ஒரு கல்ல எடுத்து ஒரு குட்டி கொக்க குறி பாத்து அடிச்சிட்டான்.”

“ஐயையோ, அப்பறம்?”

“குட்டிக்கு தலையில சரியான அடி. அப்படியே கீழ சுருண்டு உழுந்துட்டுது. உடனே எல்லா கொக்குங்கள்ளாம் பட்டுனு எழுந்து சத்தம் போட்டுகினே பறந்துடுச்சிங்க. அம்மா கொக்கும் இன்னொரு குட்டி கொக்கும் கூட பறந்துட்டுதுங்க. கீழ உழுந்த குட்டி கொக்கு பறந்து வரும்ன்னு அதுங்க ரொம்ப நேரம் சுத்திசுத்தி வந்ததுங்க. ஆனா அது எழுந்திருக்கவே இல்ல. இனிமே வராதுன்னு தெரிஞ்சதும் அதுங்க ரொம்ப தூரம் பறந்து போய்ட்டுதுங்க. நாங்க எல்லாரும் குட்டி கொக்கு கிட்ட ஓடிபோய் தூக்கி நிக்க வச்சம். தலை வளைஞ்சி கீழ சாஞ்சிட்டுது. எனக்கு கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது. குட்டி கொக்க மடியில போட்டு தட்டி கொடுத்து பார்த்தேன். தடவி கொடுத்து பார்த்தேன். துணிய தண்ணியில நனச்சி எடுத்தாந்து மூஞ்சியில தெளிச்சிகூட பார்த்தேன். மூச்சுபேச்சு இல்லாமயே கெடந்தது அது. ஓன்னு அழுதுட்டேன் நான்.”

“செத்துட்டுதா? ஐயோ பாவம்.”

“அன்னைலேர்ந்து எந்த பறவையா இருந்தாலும் சரி, தள்ளி நின்னு பாக்கறதோடு நிறுத்திக்கணும்ன்னு முடிவு செஞ்சிட்டேன். அதனுடைய உலகத்துக்குள்ள நாம் போகக்கூடாது.”

“ஏன் அந்த ஃப்ரண்ட் கல்லால அடிச்சாரு?”

“வேணும்ன்னு அடிக்கல. ஏதோ வேகத்துல விளையாட்டா அடிச்சிட்டான்.”

சிறுவனின் கவனம் மறுபடியும் கொக்குகள் மீது பதிந்தது. அவை வட்டமிட்டு பறப்பதைப் பார்த்தபோது அவன் தன்னையறியாமலேயே கைகளை இறகுகள்போல விரித்தான்.

“நமக்கும் பறக்கத் தெரிந்தா ரொம்ப நல்லா இருக்கும், இல்ல தாத்தா?”

“மனிதர்களும் ஒரு காலத்துல பறவையா பறந்து திரிஞ்சவங்கதான். இப்ப மாறிட்டாங்க”

“உண்மையாவா? குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு எங்க மிஸ் சொன்னாங்க.”

“அதுக்கு முன்னால பறவையா இருந்து, குரங்கா மாறி, அப்பறமா மனிதனா மாறிட்டான்.”

“அது ஏன் அப்படி? பறவையா இருக்க மனிதனுக்கு புடிக்கலையா?”

“இந்த கைகள் இருக்குதே, அதுதான் மொதல்ல றெக்கயா இருந்தது. உழைச்சி வேலை செய்யணும்ங்கறதுக்காக றெக்கை கையா மாறிட்டுது. உழைப்பால அவன் பணம் சேத்தான். நிலம் வாங்கனான். ஊடு கட்டனான். வேலைக்கு போயி பெரிய ஆளாய்ட்டான். பறவைகள் அப்படி இல்லையே. அதுங்களுக்கு கொத்தி தின்ன என்ன கெடைக்குதோ, அதுவே போதும். அதனால அது இன்னும் பறந்துகிட்டே இருக்குது.”

”குட்டி கொக்குகள்லாம் பறக்கறதுக்கு எப்படி கத்துக்கும் தாத்தா?”

“அம்மா கொக்கு சொல்லிக்கொடுக்கும்.”

“அதான் எப்படி சொல்லிக்கொடுக்கும்ன்னு கேக்கறேன்.”

“றெக்க முளைக்கிற வரைக்கும் குட்டி கொக்குக்கு அம்மா கொக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துகிட்டே இருக்கும். அது வளரவளர கொஞ்சம்கொஞ்சமா றெக்க வந்துடும். பசியும் அதிகமாயிடும். அம்மா கொக்கு கொண்டுவந்து கொடுக்கிற சாப்பாடு பத்தாது. அதுவா தேடி சாப்படவேண்டிய நிலைமை உண்டாய்டும். அப்ப அம்மா கொக்கு குட்டி கொக்குக்கு முன்னால றெக்கய அடிச்சி அடிச்சி காட்டும். பறந்து வா பறந்து வான்னு சொல்லும். மொதல்ல குட்டிக்கு உடம்பு நடுங்கும். மெதுவா றெக்கய விரிச்சி அடிச்சி காத்துல எம்பிஎம்பித் தாவும். ரெண்டு மூனு தரம் உழும். எழுந்திருக்கும். அப்பறம் தேடி போனாதான் சாப்பாடுன்னு புரிஞ்சிடும். சட்டுனு ஒரு நிமிஷத்துல காத்து மேல அதுக்கு ஒரு புடிமானம் வந்துடும். வானத்துல பறக்கற ருசி எப்படிப்பட்டதுன்னு அதும் மூளையில பதிஞ்சிடும். அதுக்கப்புறம் அதனால றெக்கையை மடிக்கமுடியாது.”

தாத்தா சொல்லிமுடிக்கும் வரை அவனும் ஒரு குட்டி கொக்குபோல கைகளை இறக்கைபோல மடித்தும் விரித்தும் பறக்கும் கனவுடன் நடந்துவந்தான்.

”இந்த கொக்குகளுக்கெல்லாம் இங்க மரத்துல கூடு இருக்குமா தாத்தா?” என்று உடனே அவன் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டான்.

“நிச்சயமா இருக்கும்.”

“எங்க இருக்குது தாத்தா, ஒன்னு கூட எனக்குத் தெரியலயே.”

“இரு காட்டறேன்” என்றபடி தாத்தா நின்றுவிட்டு அண்ணாந்து மரங்களில் கிளைகிளையாகத் தேடினார். சிறுவனும் கண்போன போக்கில் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி இருந்தான்.

அதற்குள் தாத்தா ஒரு கூட்டின் இருப்பிடத்தைக் கண்டுவிட்டிருந்தார். உற்சாகத்தோடு சிறுவனுக்கு அருகில் குனிந்து விரலை நீட்டி கூட்டைக் காட்டினார். அவன் கண்கள் மலர்ந்தன. “ஒரு பேஸ்கெட் மாதிரி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவன் கன்னங்களில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் அவர்.

“அது சரி தாத்தா, அது கொக்கு கூடுதான்னு எப்படி உறுதியா சொல்லமுடியும்? காக்கா கூட மரத்துலதான கூடு கட்டுது?” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினான். அவர் அவன் கன்னத்தில் மீண்டும் தட்டிக்கொடுத்தார்.

“நீ சொன்ன இல்ல, கூடு பேஸ்கெட் மாதிரி இருக்குதுன்னு. காக்கா கூடு சின்ன பேஸ்கெட் மாதிரி இருக்கும். கொக்கு கூடு பெரிய பேஸ்கெட் மாதிரி இருக்கும். அதான் வித்தியாசம்.”

”சரி சரி” என்று தலையசைத்தான் சிறுவன். குனிந்து துள்ளலோடு நடக்கத் தொடங்கியதுமே ”இப்ப கொக்கு கூட்டுல முட்டை இருக்குமா தாத்தா?” என்று கேள்வியைத் தொடங்கினான். “தெரியலயே ராஜா” என்று தாத்தா புன்னகையோடு உதட்டைப் பிதுக்கினார்.

அதற்குள் நாங்கள் வட்டப்பாதையை முழுமை செய்திருந்தோம். மீண்டும் அந்த ஊதாப்பூக்கள் பூத்திருக்கும் வேலி. சிமென்ட் பெஞ்ச். அந்த எருமை பொறுமையாக இன்னும் மேய்ந்துகொண்டிருந்தது.

“தாத்தா, நம்ம ஜென்டில்மேன் இன்னும் அங்கயே நின்னுட்டிருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சுட்டிக் காட்டினான் சிறுவன். ”அட, ஆமாம். நின்ன எடத்துலயே நிதானமா புல் சாப்படறாரு” என்றார் தாத்தா.

“ஒரே ஒரு வித்தியாசம் தாத்தா. அப்ப அதும் முதுகு மேல காக்கா உக்காந்திட்டிருந்தது. இப்ப ஒரு கொக்கு வந்து உக்காந்திருக்குது”

இருவரும் அதை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டினார்கள்.

“நாம செல் எடுத்தாந்திருந்தா இப்ப ஒரு போட்டோ எடுத்திருக்கலாம். என் ஃப்ரண்ட்ஸ்ங்களுக்குலாம் வாட்ஸப்ல அனுப்ப வசதியா இருந்திருக்கும்.”

“அடுத்த சண்டே வரும்போது எடுத்தாரலாம். எருமையும் கொக்கும் இங்கதான இருக்கும். அப்ப எடுத்துக்கலாம்”

“தாத்தா, ஒரு விஷயம் கவனிச்சிங்களா? கொக்குகூட எருமை முதுவுல என்னமோ அலகால கொத்திகிட்டே இருக்குது. ஆனா காக்கா கொத்தன சமயத்துல மட்டும் வால சொழட்டி சொழட்டி வெரட்டியடிச்சிதே அந்த எருமை. இப்ப ஒன்னுமே செய்யாம அமைதியா இருக்குது பாருங்க.”

“ரெண்டு கொத்தலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்குது.” என்று சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் தாத்தா.

“அப்படியா? என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலயே, என்ன வித்தியாசம்?”

“காக்கா எருமையுடைய புண்ணுல குத்திக்குத்தி ரணமாக்குது. புண்ணுல தெரியற சதய கொத்தி கொத்தி அது சாப்புடுது. அந்த வேதனையில காக்கைய விரட்டுது எருமை. ஆனா கொக்கு அப்படி இல்ல, எருமை தோல்ல ஒட்டியிருக்கும் உண்ணிகளயும் பூச்சிகளயும் கொத்தி சாப்புடுது. அது எருமையுடைய வேதனைய குறைக்குது. சுத்தப்படுத்துது. அதனால அமைதியா இருக்குது.”

“ஓ, அப்ப எருமையும் ஜென்டில்மேன். கொக்கும் ஜென்டில்மேன்.”

“ஆமா” என்று தலையசைத்தார் தாத்தா. “ஆனா இது சாதாரண கொக்கு இல்ல, மாடுமேய்ச்சான் கொக்கு.”

ஒரு புதுமையான பெயரைக் கேட்டதுபோல விழிவிரிய பெரியவரைப் பார்த்தபடி நின்றுவிட்டான் சிறுவன். “ரொம்ப தூரத்துலேர்ந்து எருமை முதுகுல கொக்க பாக்கறவங்களுக்கு கொக்குதான் மாடு மேய்ச்சிட்டு போறமாதிரி இருக்கும். அதனால அந்தப் பேரு” என்றார் தாத்தா.

“ரொம்ப பொருத்தமான பேர் தாத்தா.”

“பேசிட்டே நடந்ததுல ஒரு ரவுண்ட் முடிஞ்சதே தெரியல. இப்ப என்ன, வீட்டுக்குப் போவலாமா, ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாமா?”

கொஞ்சம் கூட காத்திருக்காமல் “ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்று பதில் சொன்னான் சிறுவன். ”இன்னைக்கு நாலு, அஞ்சி ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்றபடி கையிலிருந்த விரல்களையெல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து விடுவித்தான்.

அவர்களுடைய முடிவை அறிந்து, அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ஒரே கணத்தில் என் மனம் மாறிவிட்டது. சிறுவனுடைய ஒவ்வொரு சொல்லும் எனக்குள் புகுந்து என்னென்னமோ செய்துவிட்டது. அவன் கன்னத்தைத் தொட்டு ஒருமுறை தட்டிக் கிள்ளவேண்டும் போல இருந்தது. மெதுவாக “எக்ஸ்க்யூஸ் மி” என்று அழைத்து அவர்களை நிறுத்தினேன். அந்த அழைப்பு தமக்கானதுதானா என்பதுபோல அவர்கள் இருவரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் திரும்பி என்னைப் பார்த்தார்கள்.