யாரால் உறுதியாய்க் கூறமுடியும்
யாரும் யாரைவிட்டும் போகவில்லையென
துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே
நீந்திச் செல்கின்றன காரன்னப் பறவைகள்
புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு
இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது உதயகாலம்
வல்லோனின் மோதிரத்திலிருக்கும் ரத்தினமென
ஜொலிக்கக் காத்திருக்கிறது விடிவெள்ளி
சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும் மெதுவாக
ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி
பொழுது புலர்ந்துவிட்டாலோ
ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை
வேட்டையாடுபவனைப் போல
நாம் நம்மை தேடிச் சென்றாக வேண்டும்
அருமை வாசகரே, நீங்கள் தயாரா?
கவிதை
ஒலிக் குறிப்போடு இன்னொன்றையும் தூக்கிப் பறந்த பறவை -செல்வசங்கரன் கவிதை
அதைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லையே
குட்டியூண்டு சைஸ் ரொம்பக் குட்டி
கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே க்ரில்லில் அமர்ந்தபடி
எப்பொழுதும் கண்ணாடியைக் கொத்தியபடியேயிருக்கும்
வருகின்ற நேரம்தான் வந்துவிடும் இப்பொழுது பார்த்துவிடலாம்
கொஞ்சம் பொறுங்கள் வந்துவிட்டதென நினைக்கிறேன்
ஆம் ஆம் வந்துவிட்டது பிறகு பேசலாம்
எப்பொழுதும் போல தன் குட்டி அலகை வைத்து
தட்தட்தட்தட் தட்தட்தட்தட் என கொத்த ஆரம்பித்தது
பிறகு பேசலாமென சொன்னது இதைப் பற்றிதான்
மறந்த நிலையிலாக ஒருவேளை ஏற்கனவே சொல்லியிருந்தால்
அதுவும் இதுதான்
இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பதும் கூட இதுதான்
அதோ அலகை மட்டும் தானே முன்னால் கூப்பி பறந்துகொண்டிருக்கிறது
நீங்கள் சொல்லுகிற எதுவும் அலகில் இல்லையென சொல்கிறீர்களே
அதுவுமே இது தான்
இப்பொழுது இதையுமே தூக்கிப் பறந்து கொண்டிருக்கிறது
வாருங்கள் வந்து பார்த்தால் தெரியும் அது
அழகு – வான்மதி செந்தில்வாணன் கவிதை
அன்றைய சூர்யோதயத்தில்
பின்கொசுவப் புடவையை
செக்கச்செவேலென்றிருந்த
தனது முழங்காலுக்குமேல்
தூக்கிச் செருகியபடி ஒயிலாகத்
தலையுலர்த்திக் கொண்டிருந்தாள்:
மழைக்கால மரக்கீற்று
வெளிச்சத்துளிகளை உதிர்ப்பதுபோல்
வெண்சரடுக் கூந்தலிலிருந்து ஈரம்
மணிமணியாய் உதிர்ந்து கொண்டிருந்தது.
சற்றைக்கெல்லாம்,
கிளைத்துப் படர்ந்த
நரைமயிர்களினூடே மெதுமெதுவாய்
ஊடுருவிக் கொண்டிருந்தது
சிறு வெளிச்சக் கீற்று.
ஆஹா,
சூர்யோதயத்தின் கீழ்
தென்னைகள்தான் எவ்வளவு அழகு.
இரு பாதைகள்- ராபர்ட் பிராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’, மந்திரம் தமிழாக்கம்
‘The Road not Taken’, by Robert Frost
தமிழாக்கம் : மந்திரம்
மஞ்சள் சிந்தும் காலை வனத்தில் இரண்டு பாதைகள் பிரிகின்றன,
ஒரு பயணத்தை இரண்டு பாதைகளிலும் நிகழ்த்த சாத்தியமில்லை,
காத்திருக்கும் பயணி போல் நின்று கொண்டே இருக்கிறேன்.
கிடையாய் நீளும் பாதையில், மரங்கள் கோடுகளாகும் தூரம்
முதல் வளைவு வரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பாதங்களின் சுவடுகளை எதிர்நோக்கும் இந்த புல்வெளி பாதை
இயல்பாக ஒன்றை போலவே இருக்கும் மற்றொன்றானாலும்,
என் தேர்வு சிறந்தது என உணர்கிறேன்.
ஆனால் கடந்து செல்லும் வேளையில்
சிறுதடங்கள் பதிந்துள்ள இதுவும் மற்றதை போலன்றி வேறில்லை.
பாதத் தடங்களால் கசங்கியிராத பச்சை இலைகளை
இரு பாதைகளும் அணிய வைத்திருக்கின்றன காலை மரங்கள்.
தவறவிட்ட ஒன்றை இன்னொரு நாள் துவங்கலாம்.
அடுத்து அடுத்துச் செல்லும் இப்பாதை, துவங்கிய புள்ளியை
மீண்டும் அடைவதன் சாத்தியம் நோக்கி நடக்கிறேன்.
அங்கு போவதன் சாத்தியம் சந்தேகமாய் விரிய முன்னகர்கிறேன்.
நாட்களும் நேரங்களும் கடந்து சென்று ஒரு பொழுதில்
தீர்மானமில்லாத என் தேர்வை பற்றி நான் சொல்லுவேன்,
காட்டில் பிரியும் இரு பாதைகளும் நானும் சந்தித்தோம்.
தடங்கள் அதிகம் பதியாத அந்தப் பாதையில் கால் பதித்தேன்,
இவ்வாழ்வின் மாற்றங்கள் அந்தப் புள்ளி உருவாக்கியது.
(1923ஆம் ஆண்டு வரை (அவ்வாண்டு உட்பட) அமெரிக்காவில் முதற்பதிப்பு கண்ட படைப்புகளை 1.1.2019 முதல் சட்டப்படி யாரும் என்னவும் செய்யலாம் (ஆனால் விமரிசகர்களுக்கு எப்போதும் போல் அதன் கலைத்திறன் குறித்து கேள்வி கேட்கும் உரிமை உண்டு), அப்படைப்புகளுக்கான காப்புரிமை பொதுவெளிக்கு வந்து விட்டது. இதைக் கொண்டாடவே, அமெரிக்க கவிதைகளில் மிகச் சிறந்த ஒன்றான ராபர்ட் பிராஸ்டின் இக்கவிதை தமிழுக்கு வந்திருக்கிறது).
ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள் – நினைவுகளால், பாதை, சம்பவங்களை உருவாக்குதல், கவிதை ஒரு கடலாகிறது
நினைவுகளால்
பாதை
சம்பவங்களை உருவாக்குதல்
கவிதை ஒரு கடலாகிறது
நினைவுகளால்
♪
முதலாம் நிறுத்தத்தில்
நிற்கிறேன்
நீ சொன்ன
பேருந்து வந்துவிட்டது
நான் அதில் ஏறவில்லை
சன்னலுக்கு அருகில்
இருக்கை கிடைத்திருக்கிறது
நான் அதில் உட்காரவில்லை
நகரத்தின் நிசி கடந்திருப்பேன்
வித்தியாசமாக
இரண்டு பாதைகள்
நான் எதையும் தெரிவு செய்யவில்லை
எதை தெரிவு செய்தாலும்
பேருந்தை நடத்துனன்தான் கொண்டு செல்ல போகிறான்
ஊரை விசாரித்துக் கொண்டிருக்கும்போது
பேருந்து அங்கும் இங்கும் அசையவில்லை
நான் வாசலில் விழப் பார்த்தேன்
ஒரு வாசகன் என்னைப் பிடித்துவிட்டான்
இது நகரத்தின்
கடைசி நிறுத்தமென நினைக்கிறேன்
புதிய வாசகன் ஒருவன்
வீட்டை காட்டித் தருகிறான்
பறவைகளின் ரெக்கைகளால்
அது அமைக்கப்பட்டிருக்கிறது
இந்த வீட்டுக்கு ஏன்
பேருந்தில் ஏறாமல் நினைவுகளால்
ஏறி வந்திருக்கிறேன்
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்
கவிதையை இங்கு வைத்துதான்
நான் எழுதப் போகிறேன்.
பாதை
♪
இந்தப் பாதையை நீங்கள்
கடந்து என்னிடம் வருவதெனில்
காற்றில் ஏறவேண்டும்.
காற்றில் ஏறுவதற்கு
உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உண்டு
ஒன்று ஏணி தரப்படும்
மற்றொன்று சிறகுகள் தரப்படும்.
பயணத்தைத் தொடரலாம்
வழங்கப்பட்ட நிமிடங்களுக்குள்
பாதையைக் கடக்க வேண்டும்
சரியான தெரிவு முறை அவசியம்
இல்லையெனில்
ஏணியும் சிறகுகளும் மறைந்துவிடும்.
சிறிதளவு யோசிக்க
இலவச நேரம் தரப்படுகிறது
எல்லோரும்
மிக எளிதாகவே
பாதை கடந்து வருகிறார்கள்.
எனக்கு ஒரே ஆச்சரியம்
இது எப்படி சாத்தியமாச்சி
ஒருவனை பிடித்துக் கேட்டேன்
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான்
நீங்கள் ஏறிய கற்பனையில்தான்
நாங்களும் ஏறிப்
பாதையைக் கடந்து வந்தோம்.
சம்பவங்களை உருவாக்குதல்
♪
காட்சியின் ஒருபுறத்தில்
கடலை பறவைகள்
தம் சொண்டில் அள்ளிச் செல்வதாய்
சம்பவம் தொடங்குகிறது
காட்சியின் மறுபுறத்தில்
எறும்புகள் சில
கடலை இழுத்துச் செல்வதாய்
சம்பவத்தை உருவாக்குகிறேன்
எப்படியாயினும்
சில பொழுது
நான் பறவையாகின்றேன், ஏனென்றால்,
எப்படியாயினும்
சில பொழுது
நான் எறும்பாகின்றேன், ஏனென்றால்,
… …
கடலை அள்ளிச் செல்லும்
பறவைகளுடனும் எறும்புகளுடனும்
புதிய உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது
உரையாடலின் மய்யத்தின்போது
எனது இரண்டாம் பரம்பரை
பறவைகளாய் வனத்தில் வாழக்கூடும்
உரையாடல் முடிவுறும்போது
எனது மூன்றாம் பரம்பரை
எறும்புகளாய் ஆங்காங்கே வாழக்கூடும்
காட்சி வேறு வேறு ஆயினும்
சம்பவம் உங்களைக் கடந்து செல்லும்
சிறு கணத்தில்
கடலை ஒரு கிண்ணத்தில்
நீங்கள் பருகிக் கொண்டிருக்கலாம்.
கவிதை ஒரு கடலாகிறது
கடல் குடித்த
சாம்பல் நிறப் பறவை
என்னை ஊமையாய்க் கடந்து செல்லும் சிறு கணத்தில்
அதன் சொண்டிலிருந்து
மீனொன்று என் அருகில் விழுகிறது.
பேப்பரொன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
சொற்கள் மீனைக் கவ்வி
எனது கவிதையில் அமர்த்துகின்றன.
கவிதை முழுக்க மீன் குஞ்சுகள்
கவிதை ஒரு கடலாகிறது.
மீன்கள் பசியில்
சொற்களை தின்ன
கவிதை மணலாகிவிடுகிறது
மீன்கள் வாழ்வதற்கு நீர் இல்லை
பெரும் துயர் மரண வலி
மீன்களுக்கு வாழ்வு கொடுப்பதற்காய்
எனது பேனா
மேலும் மேலும் கவிதைகளை வரைகிறது.
கவிதை பெரும் கடலாய் வளர்ந்து
நிரம்பித் ததும்புகிறது சொற்கள்.
பேனாவிடம் உள்ள கற்பனைக்கு
மீன்கள் விருப்பம் தெரிவித்தால்
இன்னுமொரு கடலை உருவாக்கவும்
தயாராக இருக்கிறது.