கவிதை

நாடக நன்றி

– ஸ்ரீதர் நாராயணன் –

நீள்வரிசையில் நிரப்பி வைத்திருக்கும்
காப்பிக் கோப்பைகளிலிருந்து
ஒன்றை எடுத்து நீட்டுகிறாள்,
கருநீலச் சாயமிட்ட நகங்களுடையவள்.

சதுர சாளரத்தின் வழியே
மின்னி மறையும் முகங்களுக்கு
நன்றியுடனான சிரிப்பை
நகலெடுத்து தருகிறார்.

நகப்பூச்சுக்காரிக்குத் தெரியாது,
நாடக நன்றியில் ஒன்றை
எனக்கானது என நான்
எடுத்து வைத்துக் கொள்வது.

நிறமாற்றம்

ஜிஃப்ரி ஹாஸன்

நிறங்களை மாற்றி மாற்றி
எழுதுகிறது விதியின் பேனை
சூரியனை நீலமாக வரைந்தது
வெளிர் மஞ்சள் நிறத்தில்
கடலை வரைந்தது
ஆரஞ்சு நிறத்தில்
நட்சத்திரங்களையும்
இருண்ட கருமை நிறத்தில்
நிலவையும் வரைந்தது
கிளியை கறுப்பு நிறத்திலும்
காகத்தை பச்சை நிறத்திலும் வரைந்தது
கொக்குகளை ஊதா நிறத்திலும்
செவ்வரத்தையை
வெளிர் நீல நிறத்திலும் வரைந்தது
உண்மையின் குரல்கள் மௌனமான
கணப்பொழுதுகளில் விதியின் கைகள் திறக்கும்
சாளரங்களின் வழியே
உலகம் இப்படித்தான்
தன் முகத்தை கணத்துக்குக் கணம்
நிறம் மாற்றிக்கொள்கிறது

மீட்டெடுக்க முடியாத முகம்

– ஸ்ரீதர் நாராயணன் –

“எனக்கு உதவவும்” என்று
ஒடிசல் எழுத்துகளில்
கோணலட்டையை விலாச அட்டையாக
வைத்துக் கொண்டிருந்தான்.

குளிரும், குத்துப் பார்வைகளும்
விரவிய வெட்டவெளியில்
சகஜமான தோரணையில்
நின்றிருந்தான்.

சில சில்லறைக் காசுகளும்,
ஒரு கோப்பை காப்பியும்,
இரண்டு சிகரெட்டுகளும்,
அரைப்புட்டி சாராயமும்,
அருகில் சென்று கொடுத்திருந்தால்
இரண்டு ஜோக்குகள் கூட
சொல்லி சிரித்திருப்பான்.

எத்தனை நாட்களோ
யாசகம் கொண்டிருந்தவன்
நின்றிருந்த இடத்தில்
மடிந்திருந்த புற்களுடன்,
விலாச அட்டையையும்
நினைவில் மீட்டெடுக்க
முடியாததொரு முகத்தையும்
விட்டுவிட்டுப் போய்விட்டான்.

வெந்து தணியும் வாழ்வு

ஆ. மகராஜன்

வாழ்ந்து களிக்க வந்த
மாநகரப் பெருவெளியின்
வெப்பம் உமிழும்
பகல் பொழுது வீதிகளில்
பொருளீட்டிக் களைத்து,

கட்டிடங்களின் நெருக்த்தில்
பிதுங்கித் திணறுமோர்
முட்டுச்சந்து மேன்ஷனின்
குறுகிப் புழுங்கும் அறையொன்றுள்
ஓய்வுக்காய்ப் புகுந்து,

தூரத்துக் கிராமத்தின்
மனைவி மக்களோடு
தூக்கம் தழுவும் வரை
அலைபேசிவழி கிசுகிசுத்து,

குழந்தைகளோடு கொஞ்சலும்
இல்லாளோடு கலவியும்
கனவுக் குடித்தனத்திலேயே
நடத்தி முடித்து,

மற்றுமோர் ‘நாளை’க்காய்
உடலும் உள்ளமும் தயாராகி
எப்படியோ வாழ்ந்து கழிக்க
முடிகிறது.

 

கங்கையின் பாடல்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Songs of the Ganga,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

நான் கங்கை
மலைப்பனி
நீர்த்தேவதை

நான் சமவெளி
நான் மலையடி
என் ஓடைகளின் ஆசைகளை
கடலுக்கு கொண்டு செல்லும்
தூதுவன்

ஆணும் நான் பெண்ணும் நான்

குழந்தைகளுக்கு நான் காகிதக்கப்பல்
கடலாடிக்கு நான் ஒரு பழக்கம்
மழித்த முனிக்கு நான் ஒரு மேகம்
அசைவுகள் அனைத்தும் என் பிம்பம்

நான் ஒரு பாலம்
கோட்டையும் நான்
குறிபார்க்கும் வில்லாளியும்
மனிதனைக் கரைப்பதில் மகத்தானவள் நான்

உயிரை ஆக்குபவனும் நான்
எடுப்பவனும் நான்

**

நான் வெளியுலகுக்குள் செல்கிறேன்
நான் உலகம்
நான் தேசங்கள், நகரங்கள், மக்கள்
கோர்க்காத புத்தகத்தின் பக்கங்கள் நான்

சுற்றியிருக்கும் காற்று என் அறை
நான் நீரை உடுத்தியிருக்கிறேன்
நான் நீரைப் போல் நிர்வாணமானவள்
தெளிவு நான்

அரசு வீழ்ந்ததென
ஒரு கொடி கொடுத்தான்
நண்பனொருவன்

மழை பிடிக்கப் போவதாகச் சொல்லி
வலை விரிக்கிறேன்

நான் விஷம்

**
மலையிலிருந்து
வரையாடுகள்
இறங்குகின்றன
தனிமை கிடைக்காமல்
பாலையிலிருந்து
ஒட்டகங்கள் திரும்புகின்றன

மணலில் இருகோடுகள் வரைந்து
அவை உடைக்க முடியாத சுவர்கள் என்கிறேன்

நான்கு திசைகளை ஒன்றாக்கினேன்
நடையின் ரகசியம் அறிந்தவள் நான்

நெருப்பின் இறப்பு நான்.

**

அறிந்தேன் புகையிலிருந்து மறைதலை
கடலிலிருந்து பாரபட்சமற்ற தன்மையை

அறிந்தேன் பறவைகளிடமிருந்து
சூறாவெளியில் வீடொதுங்கும் வழியை

அறிந்தேன் சிறுத்தையிலிருந்து
புள்ளிகளால் சூரியனை மறைக்க

கோடையில் நான் செழு தர்பூசணி வளர்க்கிறேன்
வெள்ளத்தின் போது தங்குவேன்
தபால்காரனின் வீட்டருகே

நான் ஏதிலி
நான் ஒரு கோமாளி
நிழலற்றவளும் நான்.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா