எந்த இடத்தில் பிரிந்தோமோ
அந்த இடத்தில் சேர்வோம்
பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன
உங்கள் முகத்தில்
நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்
உங்கள் இதயங்களில்
ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்
நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை
நம் சேரிடங்களாக்கி
களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்
நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை
உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை
ஒரு யுகப் பின்னடைவை
இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன
துயர் படிந்த ஒரு காலமும்
அதன் குரூரக் காயங்களும்
ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே.
கவிதை
ஆற்றுகை
கூர்சுடர் கீற்றென
பல்லவி முடிந்து
கார்வையில் நிற்கும் ரீங்காரம்.
குறுகிய கட்டையின் மீதேறி
விரித்த கைகளுடன்
கால்நுனியில் ஒரு மென்நடை.
புருவமுயர்த்தி முன்னிற்பவர்
ஐயம் தீர்ந்து நம்பிக்கை கொள்ள
வசியம் தொடங்கிய சொல்லாடல்.
வண்ணத் தெறிப்புகளில்
கண்சிமிட்டி முளைத்தெழும்
புத்துருச் சித்திரிப்பு.
கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.
இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.
எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.
ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

அவன்
வண்டியோட்டிக் கொண்டிருந்தான்
கனத்த குரல்
இடையறாத
உற்சாகக் குரலோசையிடையே
பரபரவென
காற்றில் அலையும்
கரங்கள்
முழுதும் பாதியுமாய்
வெண்சுண்ணம் பூசி
உயராது நிற்கும்
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள்
காட்டி
போக்குவரத்தின் நெரிசல் கண்டு
பதறி நான் அலறும்போது
சிரித்து காரை
நெறிப்படுத்தும்
இது எங்கள் தேவாலயம்
இதுதான் நாடாளுமன்றம்
இது என் தந்தை சிக்கிக் கிடந்த
சிறைச்சாலை
இது தான் என் தாய்
நிலம்விளை பொருள் விற்கும்
வாரச்சந்தை
நானும் என் தங்கையரும்
ஆடி மகிழ்ந்த பூங்கா
பாதியில் நின்ற பள்ளி
புன்சிரிப்பு வழியும்
கனத்த குரலில்
சொல்லிச்சென்றவனின்
கரம்தொடர்ந்து
பார்வை தொடர
எதுவும் இல்லை
எங்கும்
இடையில் விழுந்த
அமைதி உணராது
கூடைச்சுமை தாங்கித்திரியும்
ஆடவர் பெண்டிர்
கூட்டம் தவிர்த்து
நிலைச்சின்னம் இருமருங்கும்
தேடி
திரும்பிப் பார்த்தேன்
அவனை
கண்ணாடியின் முன்னால்
பதிந்திருந்த
அவன் பார்வையில்
இன்றுமில்லை
நாளையுமில்லை
விழித்து எழுந்தால்
ஆடியிருந்த
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த
பள்ளி இல்லை பூங்கா இல்லை
சந்தை இல்லை வீடு இல்லை
ஆலயம் இல்லை சாலையும் இல்லை
பின்னிக் கிடந்த
எந்த
நினைவுகளும் இல்லை
திரும்பிக் கேட்டான்
கண்ணீர் வழிய
என் புன்னகை உறைய
துடைத்தெறியப்பட்டுவிட்ட
எங்கள் நினைவுச்சின்னங்கள்
சுவடின்றி மறைந்த பாலியங்கள்
புரியுமோ என்னவோ
உங்களுக்கு
புரியுமோ என்னவோ
ஒளிப்பட உதவி – Radio Tginen
பழக்கம்
தோளை தட்டி, திரும்பியதும்
விரியப் புன்னைகைத்து
நலம் விசாரித்தபடி
பேச்சைத் தொடங்கலாம்தான்.
நரைக்கு பூசும் சாயம்
பெண்ணுக்கு பிடித்த பிங்க் உடை,
வேனலுக்கான வாசஸ்தலங்கள்,
தளிர்த்திருக்கும் கறிவேப்பிலைக் கன்றுகள்,
இயந்திரத்தில் போட்டு
மாடுகளை வெட்டும்
வாட்சப்பில் வந்த அசைபடம்,
மணிகோர்த்த மயிற்கற்றைகள் ஊசலாட
அங்கங்களை அழகாக குலுக்கும்
நாரீமணியின் நடனம்,
‘அவன் கை குட்டை’
என்னும் அரசியல் விமர்சனத்தின்
இடக்கரடக்கல் பொருள்,
என தளும்பிக் கொண்டிருக்கும்
பேசுபொருட்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவசரமாக வாயோரங்களை
அரைகுறையாக துடைத்த
பேப்பர் நாப்கினை
உள்ளங்கைக்குள் வைத்து உருட்டியபடி
ஜாக்கிரதையான விறைப்புடன்
விலகிச் செல்லும் அவருக்கும்
இது போன்று பேசுவதற்கு
நிறைய இருந்திருக்கும்
என்ன செய்ய முடியும்
நான் வரும் நேரம் அறிந்து
எதிரே வருகிறார்.
தேகசக்திக்கு மீறிய வேகம்.
ஏன் இப்படி? என்றெனக்கு படபடப்பு.
கெட்ட சேதி கேட்டேன், என்கிறார்.
கெட்ட செய்திதான்.
அவருக்காக நானும்
எனக்காக அவரும்
எதையும் வெளிக்காண்பிக்காமல்,
என்ன செய்ய முடியும், என்கிறோம்.