சிறுகதை

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் –

சோ.சுப்புராஜ்

நம்பிராஜனுக்கு சென்னையில் உள்ள CLC என்ற பிரபலமான கட்டுமான நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் சமீபத்தில் அந்தக் கம்பெனிக்கு வேலைக்கான விண்ணப்பம் எதையும் அனுப்பயிருக்கவில்லை.

நம்பிராஜன் கடந்த மூன்று வருஷங்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் தான் இருந்தான். அவனுடைய மனைவி சுமித்ரா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்ததால் அந்த வருமானத்தில் தான் அவர்களின் வீட்டில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.

இப்போது அதிலும் ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. சிக்கல் முளைத்திருக்கும் இடம் சுமித்ராவின் கர்ப்பப் பை. ஆம் அவள் அவர்களின் இரண்டாவது குழந்தையை உண்டாகி இருந்தாள். மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்த நாளில் “இந்தக் குழந்தையைக் கலைச்சுடலாம்ப்பா….” என்றாள் ரகசியக் குரலில் கண் கலங்கியபடி.

”ஏம்மா, நரேனுக்குத் தான் அஞ்சு வயசுக்கும் மேல ஆயிடுச்சுல்ல….”

”நான் கன்சீவ் ஆயிருக்குறது தெரிஞ்சா எங்க ஸ்கூலுல வர்ற ஏப்ரல் மாசத்தோட வேலையிலருந்து நின்னுக்கச் சொல்லீடுவாங்க…..”

”ஏன் அப்படி? உங்க ஸ்கூலுல வேலை பார்த்தா குழந்தை பெத்துக்கக் கூடாதா?”

”ஆமா, வருமானம் வேணுமின்னா குழந்தை பெத்துக்கத்தான் கூடாது….”சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழத்தொடங்கி விட்டாள் சுமித்ரா. கொஞ்ச நேரத்தில் சுமித்ராவே தெளிந்து சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள். ”நான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூக்குப் பாடம் நடத்துறேன். பாதி வழியில குழந்தை பெத்துக்கப் போயிட்டன்னா புள்ளைங்கள யாரு அரசாங்க பரீட்சைக்குத் தயார் படுத்துறது….?”

”நீ குழந்தை பெத்துட்டு திரும்பவும் ஸ்கூலுல போயி ஜாயின் பண்றது வரைக்கும் இன்னொரு டீச்சர் போட்டு பாடம் நடத்திக்க மாட்டாங்களா உங்க ஸ்கூலுல….”

”அப்படியெல்லாம் செய்றதுக்கு அவங்க என்ன கல்வி சேவை பண்றதுக்கா ஸ்கூல் நடத்துறாங்க? ஏப்ரலோட என்னை வெளிய அனுப்பிட்டு ஜூன் மாசம் புதுசா டீச்சர் அப்பாயிண்ட் பண்ணீடுவாங்க. அவங்களுக்கு மே மாசச் சம்பளம் மிச்சம். அப்படித்தான் யோசிப்பாங்க….!”

”பெண்களுக்கு ஒன்பது மாசங்களுக்கு சம்பளத்தோட மகப்பேறு விடுப்பு குடுக்கனுமின்னு சட்டம் இருக்கேம்மா….!”என்றான் நம்பிராஜன் அப்பாவியாய்.

”கடுப்பக் கிளப்பாதப்பா. அதெல்லாம் அரசாங்கத்துல வேலை பார்க்குறவங்களுக்கு. எங்கள மாதிரி அத்தக் கூலிகளுக்கு இல்ல….!”

சுமித்ரா சொன்னதிலிருந்து நம்பிராஜனுக்கு தெளிவாய்ப் புரிந்தது. ஒன்று மூன்று மாதங்களுக்குள் அவன் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டும். அல்லது சுமித்ராவின் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும். நினைக்கும் போதே நெஞ்சிற்குள் வேதனையாக இருந்தது.

நம்பிராஜன் படித்து முடித்ததிலிருந்தே சின்னச் சின்னக் கம்பெனிகளில் பிராஜெக்ட் அடிப்படையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பிராஜெக்ட் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அப்புறம் வேலை தேடும் படலத்தில் இறங்குவான். இரண்டு மூன்று மாதங்களில் வேலை கிடைக்கும். ஆனால் அதுவும் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குத் தான். மறுபடியும் வேலை இழப்பான்.

ஆனால் அதிகபட்சம் மூன்று நான்கு மாதங்களுக்குள் அடுத்த வேலை கிடைத்துவிடும். ரியல் எஸ்டேட் துறையின் கடுமையான வீழ்ச்சியினாலும் பொருளாதாரத்தின் கன்ணுக்குத் தெரியாத சில பாதக அம்சங்களாலும் இந்த முறைதான் மூன்று வருஷங்களைக் கடந்தும் அவனுக்குத் தோதான வேலை எதுவும் அமையவில்லை.

நம்பிராஜனுக்கு கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எழுதுகிற கிறுக்கு கொஞ்சம் இருந்தது. வேலை கிடைப்பது இழுத்துக் கொண்டே போகவும் அவன் முழுநேர எழுத்தாளனாக முடிவு செய்து தொடர்ந்து எழுதத் தொடங்கினான். பிரசுரமான கதைகளை எல்லாம் தொகுத்து மூன்று புத்தகங்களாகக் கொண்டு வந்தான்.
மிகச் சரியாக அவன் வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்கிற சூழலில் CLC கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருக்கிறது. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தனக்கு எப்படி இண்டர்வியூக்கு அழைப்பு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கேனும் நேர்முகத் தேர்வில் போய்க் கலந்து கொள்வது என்று முடிவு செய்து சென்னைக்குக் கிளம்பினான் நம்பிராஜன்.

நேர்முகத் தேர்விற்கு போய்விட்டு மதுரைக்குத் திரும்புகிற வழியில் செங்கல்பட்டில் இறங்கி கலியமூர்த்தி ஸாரைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடன் ஒருநாள் இருந்து விட்டு அடுத்தநாள் ஊருக்குப் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு தான் கிளம்பினான்.

கலியமூர்த்தி என்பவர் அவனுடைய வாசகர். அவன் இதுவரை அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. போனில் தான் பேசி இருக்கிறான். அதுவும் பெரும்பாலும் அவர்தான் தொடர்பு கொள்வார். மணிக்கணக்காக சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார். இவன் ’கிழம் அறுக்கத் தொடங்கி விட்டது….’ என்று மனதுக்குள் நினைத்தபடி எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.

சில மாதங்களுக்கு முன்பு தினப்பத்திரிக்கை ஒன்றின் ஞாயிறு இணைப்பு மலரில் நம்பிராஜனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அந்த சிறுகதையை கொஞ்சம் வித்தியாசமாக கபிலர் எழுதிய ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் என்னும் குறுந்தொகைப் பாடல் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதி இருந்தான்.

வனத்துறையில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் அவருடைய பொறுப்பில் இருக்கும் வனப்பகுதிக்கு சுள்ளி பொறுக்குவதற்காகவும் தேனெடுப்பதற்காகவும் அவ்வப்போது மூலிகைகளைப் பறிப்பதற்காகவும் வரும் மலைஜாதிப் பெண்ணொருத்தியைக் காதலித்து வனத்தின் இயற்கையான சூழலில் அவளுடன் உடலுறவும் வைத்துக் கொள்கிறார்.
தனக்கு வன அதிகாரியுடன் இருக்கும் காதல் உறவுபற்றி மலை ஜாதிப்பெண் தன்னுடைய தோழியிடம் பிரஸ்தாபிக்கிறாள். அதைக்கேட்ட தோழியோ அவளிடம் மோசம் போயிட்டியேடி. அவர் பெரிய அதிகாரியாக உயர்ந்த இடத்தில் இருப்பவர். அவர் உன்னை ஏமாற்றிப் போய்விட்டால் என்ன செய்வாய்? உன்னுடைய உறவை எதைச்சொல்லி நிரூபிப்பாய்? என்று ஆற்றாமையில் புலம்புகிறாள். ஆனால் மலைஜாதிப் பெண்ணோ அவர் என்னுடன் காதல் உறவில் இருந்ததை பார்த்த சாட்சிகள் யாருமில்லை தான். அவர் என்னை ஏமாற்றிப் போய் விட்டால் நான் ஏதும் செய்ய முடியாது தான். ஆனால் வனத்தில் இருந்த ஒவ்வொரு மரமும் பசுமையான செடிகொடிகளும் ஓடையில் சலசலத்து ஓடும் நீரும் அதனுள் துள்ளி விளையாடிய மீனும் ஓடைக்கரையில் இருந்த நாணலும் பசிய புல் தாவரங்கள் பலவும் நாங்கள் காதல் உறவில் களித்திருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன என்று பத்தாம்பசலியாகப் பதில் சொல்கிறாள். தோழியோ இப்படியா ஒருத்தி அசடா இருப்பாள் என்று வேதனைப்படுகிறாள். அவள் பயந்தபடியே சில மாதங்களுக்கு அப்புறம் வனத்துறை அலுவலருக்கு இடம் மாறுதல் உத்தரவு வருகிறது. அதைப்பற்றி மலைஜாதிப் பெண்ணிடம் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறார். மலைஜாதிப் பெண்ணோ வனத்தில் அவர்களின் உறவிற்கு சாட்சியாக நின்றிருந்த மரம் செடி கொடிகளிடமும் ஓடைத் தண்ணீரில் துள்ளி விளையாடும் மீன்களிடமும் பேசியபடி பைத்தியமாக அலைவதாய்க் கதை முடிகிறது.

எப்போதுமே சிறுகதையோ கவிதையோ பிரசுரமானால் படைப்பை விமர்சித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வரும் வாசகர் கடிதங்களை எல்லாம் ஒளிநகல் எடுத்து அனுப்பி வைப்பார்க்கள். சமீபத்தில் பிரசுரமான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதங்களில் ஒரு கடிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. செங்கல்பட்டிலிருந்து கலியமூர்த்தி என்பவர் எழுதி இருந்தார்.

நம்பிராஜன் எழுதியிருந்த சிறுகதை தன்னுடைய பால்யத்தைக் கிளறி விட்டுவிட்டதாகவும் கதை எழுதிய எழுத்தாளரை சந்தித்தே ஆக வேண்டுமென்றும் எழுதி இருந்தார். அவர் எழுதி இருந்ததை பொருட்படுத்தாத நம்பிராஜன் வழக்கம் போல் தனக்கு வந்திருக்கும் வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் போஸ்ட் கார்டில் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினான்.

கடிதம் எழுதிய மூன்றாவது நாள் கலியமூர்த்தி நம்பிராஜனை அலைபேசியில் அழைத்தார். ”நீங்கள் எழுதி இருக்கும் கதையை உங்களுக்கு யார் சொன்னது?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.

நம்பிராஜன் அது தன்னுடைய கற்பனையில் உருவான கதைதான் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் கதையை உங்களுக்கு யார் சொன்னது என்றே கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த கதை என்றும் கதையில் வரும் வனத்துறை அதிகாரி தான் தான் என்றும் சொல்லி அழுது விட்டார்.

பால்யத்தில் தான் மலைஜாதிப் பெண் ஒருத்தியிடம் அவளின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, அவளைக் காதலிப்பதாய் பாவணை பண்ணி அவளை சீரழித்துவிட்டு அதைப்பற்றி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் அங்கிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டதாகவும் இந்தக் கதையை வாசித்தபின்பு தான் எவ்வளவு பெரிய பாபத்தை செய்து விட்டோம் என்றே உறுத்தியதாகவும், அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அழுதார்.

உங்களுக்கு நீங்கள் எழுதியிருக்கும் கதையைச் சொன்னவர் யார் என்று தயவு செய்து சொல்லுங்கள் என்றார் மறுபடியும் . நம்பிராஜனும் யோசித்துப் பார்த்தான். இந்தக் கதைக்கான கரு தன்னுடைய மனதில் எப்பொழுது விழுந்தது?துல்லியமாய் ஞாபகமில்லை. காலத்தின் புகைபடிந்த சித்திரம் போல் இலேசாய்த் துலங்கியது.

அப்போது அவனுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். அவன் கதைகள் வாசிக்கத் தொடங்கி இருந்தான். ஆனால் எழுதுகிற ஆசைகூட முளைவிடவில்லை அப்போதெல்லாம். அம்மாவுடன் மலைகளிலும் காடுகளிலும் அலைந்து விளையாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு நாளில் அம்மாவின் மனதில் சந்தோஷமோ அல்லது அதீத வருத்தமோ கவிந்த ஒரு தருணத்தில் அம்மா தான் அவனுக்கு இந்தக் கதையைச் சொன்னது போல் ஞாபகம் இருந்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது அது அவ்வளவு நிச்சயமாகவும் தெரியவில்லை. அவன் எழுதியிருக்கும் கதையில் அம்மா சொன்னது எந்த அளவிற்கு பதிவாகி இருக்கிறது என்பதிலும் குழப்பமே மிஞ்சியது. பலவாறு யோசித்து நம்பிராஜனும் அந்த நேரத்தில் மனதில் தோன்றியவாறு என்னுடைய அம்மாதான் அவளின் தோழியின் வாழ்க்கையில் நடந்ததாக சொன்ன கதையைத் தான் கற்பனை கலந்து எழுதியதாகச் சொன்னான்.

“உங்களின் அம்மாவின் தோழி இப்பொழுது எங்கிருக்கிறார்கள்?” என்றார் படபடப்புடன்.

அம்மாவின் தோழி பற்றி தனக்கு தகவல் ஏதும் தெரியாது என்றும் கதையைச் சொன்ன அம்மா இப்போது உயிரோடு இல்லை என்றும் சொல்லவும் நல்ல ஆத்மாக்களை ஆண்டவன் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்கிறார்; என்னை மாதிரியான பாப ஆத்மாக்களை வாழ்ந்து துன்பப்பட வைத்து விடுகிறார் என்றார் கனிந்த குரலில்.

அதற்கப்புறம் அடிக்கடி போனில் பேசத் தொடங்கினார். இலக்கியம், தத்துவம், வரலாறு என்று கலந்து கட்டிப் பேசிக் கொண்டிருப்பார். பெரிய அறிவாளி என்பதும், நிறைய வாசிக்கிறவர் என்பதும் அவருடைய பேச்சில் வெளிப்படும். பல சமயங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பது நம்பிராஜனுக்கே புரியாமல் வெறுமனே காது கொடுத்துக் கொண்டிருப்பான்.

கலியமூர்த்தி எழுபத்தைந்து வயது கடந்த முதியவர். அவருடைய மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு தவறி விட்டார். அவர்களுக்கு ஒரே பையன். அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறான். அம்மாவின் மரணத்திற்கு அவசர அவசரமாக வந்து போனவன் அதற்கப்புறம் எட்டியும் பார்க்கவில்லை.

செங்கல்பட்டில் இருப்பது சொந்தவீடு. இவரே சமையல் செய்து கொள்கிறார். வீட்டு வேலைகளுக்கும் தேவையான சாமான்கள் வாங்கி வருவதற்கும் ஒரு வயதான பெண்ணை வேலைக்கும் வைத்திருக்கிறார்.

கலியமூர்த்தியின் குற்ற உணர்ச்சியும் தனிமையும் தான் அவரை நம்பிராஜனிடம் அதிகமாகப் பேச வைக்கிறது என்று அவன் புரிந்து கொண்டதால், அவர் பேசுவதை மனசுக்குள் எழும் எரிச்சலையும் மீறி சகித்துக் கொள்ளத் தொடங்கினான்.

அலைபேசி உரையாடல்களில் நம்பிராஜனைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் அக்கறையாக விசாரிப்பார். ஒருசமயம் அவன் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வேலைக்குப் போகாமல் முழுநேர எழுத்தாளனாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்ததும் , ”உங்களுக்கு உட்கார்ந்து அழிக்கிறதுக்கு பூர்வீக சொத்து நிறைய இருக்கோ….?” என்று சிரித்துக் கொண்டே விசாரித்தார்.

”அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸார்…,”என்று நம்பிராஜன் சொல்லவும், “முதல்ல வயித்துப் பாட்டுக்கு வழிபண்ணிக்கிட்டு ஒழிஞ்ச நேரத்துல இலக்கியம் பண்ணுங்க ஸார் போதும்….” என்றார் கோபமாய்.

“எழுத்தை நம்பி வாழ்றதுங்குறது தற்கொலைக்குச் சமமானது ஸார். பாரதியவே பட்டினி போட்டுக் கொன்ன சமூகம் நம்மளோடது ஸார்….” என்றும் அலுத்துக் கொண்டார்.

”சுஜாதா எவ்வளவு எழுதுனார். ஒரு கட்டத்துல ஒரே சமயத்துல எல்லா வார இதழ்கள்லயும் அவரோட தொடர்கதைகள் வந்துச்சு. அப்படி எழுதித் தள்ளியும் கடைசி காலத்துல அவரோட மருத்துவ செலவுகள சினிமாக்காரர்கள் தான் பார்க்க வேண்டி இருந்துச்சு. அவரோட மனைவி கூட ஒரு பேட்டியில நாங்க அவ்வளவு வசதியா வாழலைன்னு சொல்லி இருந்தாங்களே….! இத்தனைக்கும் அவர் வேலைய விடாமலே தான் எழுதிக் குவிச்சார்….”

”சமீபத்துல இறந்து போன எழுத்தாளர் பிரபஞ்சன் கூட ஒரு பேட்டியில சொல்லி இருந்தத வாசிச்சீங்களா? ’தினசரி ரெண்டுவேளை உணவுக்கு வருமானம் வந்திருந்தால் இன்னும் நெறைய நல்ல படைப்புகளத் தந்திருப்பேன்னு….’ சொல்லி நம்ம சமூகத்தோட நடுமண்டையில நச்சுன்னு போட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டார். அதனால கொஞ்சமும் தாமதிக்காமல் உடனேயே ஏதாச்சும் வேலையில போய்ச் சேருங்கஸார்….”என்று அக்கறையாகக் கடிந்து கொண்டார் கலியமூர்த்தி.

”வேலை தேடிக்கிட்டுத் தான் ஸார் இருக்கேன். ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது….”

”சிவில் இஞ்சினியரிங் படிச்சு பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு மேல அனுபவமிருக்கிற உங்களுக்கே வேலை கிடைக்கலையா? ஆச்சர்யமாத்தான் இருக்கு ஸார்…” என்றவர், “மனசைத் தளர விடாமத் தொடர்ந்து முயற்சி பண்ணுங்க ஸார்; கண்டிப்பா வேலை கிடைக்கும்….” என்று நம்பிக்கை ஊட்டினார்.

ஒருநாள் நம்பிராஜன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது கலியமூர்த்தியிடமிருந்து அழைப்பு வந்தது. நேரம் பார்த்தான். அதிகாலை மூன்று மணியாகி சில நிமிடங்களே கடந்திருந்தது. பதறிப்போய் பச்சையை அழுத்திப் பேசினான். “சொல்லுங்க ஸார்…..”

”அகால வேளையில உங்களத் தொந்தரவு பண்ணீட்டேன். மன்னிச்சுக்குங்க. மனசு ரொம்பவும் பாரமாவும் ஏதோ இனந்தெரியாத பயமாவும் இருக்கிறதாலோ என்னவோ தூக்கமே வரல. உங்ககிட்டப் பேசிக்கிட்டு இருந்தால் மனசு கொஞ்சம் லேசாகும். அதான் சட்டுன்னு யோசிக்காமக் கூப்பிட்டுட்டேன்….”

”அதெல்லாம் பரவாயில்ல ஸார். எதுவும் பிரச்னையா ஸார்….?”

”என்னோட முதுமையும் குற்ற உணர்வும் தான் பிரச்னை. இப்பல்லாம் நீரோடையையும் அதில் விளையாடும் மீன்களையும் பச்சைத் தாவரங்களையும் சாதாரணமாக் கடந்து போக முடியவில்லை என்னால். நீங்க உங்க கதையில எழுதி இருக்கிற சம்பவங்களும் நான் ஏமாற்றி ஓடிவந்த மலைஜாதிப் பொண்ணும் ஞாபகத்தில் வந்து என்னை வதைக்கின்றன.….” என்றவர் அதிகாலை நான்கு மணிவரைப் பேசிக் கொண்டிருந்தார். மேலும் கடவுள், மரணம், மானிட வாழ்வு என்று என்னன்னவோ தத்துவங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நம்பிராஜனும் அலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு புரிந்தும் புரியாமலும் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் பகலில் ”நான் கும்பகோணத்துல இருக்கிற ஒரு முதியோர் இல்லத்துல போய்ச் சேர்ந்துடலாம்னு இருக்கேன்…”என்று ஆரம்பித்தார்.

”ஏன் ஸார் திடீர்னு இந்த முடிவு…..”

”எனக்கு வீட்டுவேலைகள் செய்றதுக்கு ஒரு அம்மாவை உதவிக்கு வச்சிருந்தேன்னு சொல்லி இருந்தேன் இல்லியா, ரெண்டு நாளைக்கு முன்னால அவங்க இறந்து போயிட்டாங்க….”

”ஓ… வருத்தமாத் தான் இருக்கு. உங்க உதவிக்கு வேற யாரையாச்சும் வச்சுக்கலாமே ஸார். இல்லைன்னா உங்க பையன் தான் அமெரிக்காவுக்குக் கூப்டுறார் இல்ல. அவர்கூடப் போயி இருங்களேன்…”

”அவன் கூப்புடுறதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி. என்னை அவனோ அவனை நானோ ரெண்டு மூனு நாளைக்கு மேலகூட சகிச்சுக்க முடியாது. அப்பன் பையன்ங்குறதாலேயே ஒட்டுதல் வரனும்னு அவசியம் இல்லை ஸார். உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன்….”

”வேணுமின்னா மதுரைக்கு வந்து என்கூடக் கொஞ்சநாள் இருங்களேன் ஸார்…..”

”உங்க அழைப்புக்கு நன்றி ஸார். ஆனால் நான் யாருக்கும் பாரமா இருக்கிறத விரும்பல. அதனால முதியோர் இல்லத்துல போய் சேருறதுன்னு முடிவு பண்ணீட்டேன் ஸார். ஆனால் என்கிட்ட தமிழ், ஆங்கிலம், தெலுங்குன்னு ஐயாயிரத்துக்கும் மேல புத்தகங்கள் இருக்கு. என்னை புத்தகங்களின் காதலன்னே சொல்ல்லாம். கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்த புத்தகங்கள். எல்லாமே அரிதான பொக்கிஷங்கள்.

என்னோட தனிமைக்கும் குற்ற உணர்ச்சிகளுக்கும் புத்தகங்கள் தான் மிகப்பெரிய அவுட்லெட். ஆனால் என் பையனுக்கு புத்தக வாசணையே ஆகாது. அவன் இதையெல்லாம் பாதுகாப்பான்ங்குறதுல எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்ல. நான் செத்துப் போனதும் அவன் இதையெல்லாம் என்னோட சிதையிலேயே போட்டு விறகுச் செலவு மிச்சமின்னு எரிச்சிட்டுப் போயிடுவான்னு பயமாவும் இருக்கு. ஆனாலும் என்ன பண்றதுன்னே தெரியல..”

”ஏதாவது லைப்ரேரிக்குக் குடுத்துடுங்களேன் ஸார்…..”

”இல்லை. புத்தகங்களோட அருமை தெரிஞ்ச உங்கள மாதிரியான எழுத்தாளர்களால தான் இதையெல்லாம் காப்பாத்த முடியும். நீங்க எடுத்துக்கிறீங்களா?”

”புத்தகங்கள வீட்டுக்குள்ள அடுக்கீட்டு நாங்க வீதியில போய்த்தான் குடும்பம் நடத்தனும். நாங்க இருக்கிறது ஒண்டுக் குடித்தன வாடகை வீடு. வீடு மாத்துறப்பல்லாம் புத்தகங்கள் பெரிய சுமையா இருக்கும் ஸார்….”

”அப்ப சரி. நான் வேற ஏற்பாடு பண்ணிக்கிறேன். நான் முதியோர் இல்லத்துக்குப் போறதுக்கு முன்னால உங்கள ஒருமுறை சந்திக்க முடிஞ்சா சந்தோஷப்படுவேன். நான் வேணா மதுரைக்கு வரட்டுமா ஸார்…..?”

”வயசான காலத்துல நீங்க வந்து சிரமப்பட வேணாம் சார். நானே வர்றேன்….?

நம்பிராஜன் அவனை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்த கம்பெனிக்குப் போனபோது தான் தெரிந்தது. அவன் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தான் என்பது. அவனுக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது.

ஒரு மணி நேரத்திற்கு தேர்வெழுத வைத்துத் திருத்தி, மூன்று நபர்கள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, கடைசியாக கம்பெனி சேர்மனின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.

அவர் நம்பிராஜனின் குடும்பப் பின்னணி பற்றி சம்பிரதாயமாக ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி, ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல போய் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக்குங்க. அடுத்தவாரம் ஆபிஸ் வந்து வேலையில சேர்ந்துக்குங்க….” என்றார். நம்பிராஜனுக்கே நம்ப முடியாமல் இருந்தது.

ஆர்டரை வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்வதற்காக மறுபடியும் சேர்மனின் அறைக்குப் போனபோது “உங்களுக்கு கலியமூர்த்தி ஸாரை எப்படித் தெரியும்?”என்றார்.

“அவர் என்னோட வாசகர் ஸார்….”இவர் ஏன் கலியமூர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார் என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்த்து.

”ஓ…. நீங்கள் எழுத்தாளரா! அவர்தான் நீங்க வேலை இல்லாமக் கஷ்டப்படுறதாகவும், உங்களுக்கு ஏதாச்சும் வேலை போட்டுக் கொடுக்கும் படியும் சொன்னார். அவர் அவ்வளவு சுலபமா யாரையும் பரிந்துரைக்க மாட்டார். நீங்களும் சோடை போகலை; ரொம்ப திறமைசாலியாவே இருக்கீங்க….” என்று பாராட்டினார்.

”அவருக்கும் இந்தக் கம்பெனிக்கும் என்ன ஸார் சம்பந்தம்?” என்றான் நம்பிராஜன் தயங்கியபடி.

”ஒரு சம்பந்தமும் இல்ல; ஒரு காலத்துல எங்க தாத்தாவும் அவரோட நண்பரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்ல கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் தொடங்குனாங்க. எங்க தாத்தா கடுமையான உழைப்பாளி. ஆனால் கம்பெனியோட கணக்கு வழக்குகளோ நெளிவு சுளிவுகளோ பார்க்கத் தெரியாது. ஒரு கட்டத்துல ஆடிட்டரும் பார்ட்னரும் சேர்ந்துக்கிட்டு கம்பெனி நஷ்டத்துல இருக்குன்னு சொல்லி தாத்தாவைக் கழட்டி உட்டுட்டாங்க. அப்பத் தாத்தா பிழைக்குறதுக்கு வழி இல்லாம நடுதெருவுல நின்னுருக்கார். தாத்தாவுக்கும் சொந்த ஊர் செங்கல்பட்டு தான். அவர் திசை தெரியாமத் தடுமாறிக்கிட்டு இருந்தப்ப கலியமூர்த்தி சார்தான் அவரோட வீட்ட அடமானம் வச்சு பணம் வாங்கிக் குடுத்து இந்தக் கம்பெனியத் தொடங்க உதவினார்….”

நம்பிராஜனுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

நம்பிராஜன் நேர்முகத்தேர்வு முடிந்து கலியமூர்த்தியைத் தேடிப்போனபோது வீடு திறந்திருந்தது. அழைப்பு மணிக்கும் குரலுக்கும் யாரும் வராததால் உள்ளே போனான். வரவேற்பரையில் ஈஸிச்சேரில் சாய்ந்தபடி ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மார்பில் விரிக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்று கவிழ்ந்து கிடந்தது.

அவர் கலியமூர்த்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பிராஜனுக்குத் தோன்றியது. இலேசாய் அவருடைய கையைத் தொடவும் விழித்துக் கொண்டார். நம்பிராஜன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் மிகவும் சந்தோஷப்பட்டார். அவரின் மூலம் தான் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு நன்றி சொன்னபோது, “நான் ஒண்ணுமே பண்ணல; அவங்களோட கம்பெனிக்கு உங்களை மாதிரியான நல்ல இன்ஜினியர அடையாளம் காண்பித்துக் கொடுத்தேன் அவ்வளவு தான்…” என்றார்.

அவருடைய வீட்டின் மூன்று அறைகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்தார். சலிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

தூங்கப் போகும்போது, பேண்ட் மற்றும் சட்டைப் பைகளில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து டேபிளில் வைக்கப் போனபோது நம்பிராஜனின் பர்ஸ் தவறி கீழே விழுந்ததில் அது திறந்து கொண்டது. அதில் இருந்த போட்டோவை பார்த்ததும், கலியமூர்த்தி பர்ஸை வாங்கி, “இது யாரு ஸார்…?” என்றார்.

”எங்க அம்மா ஸார்…..” என்றான் நம்பிராஜன். போட்டோவைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கலியமூர்த்தியின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை. தூங்கப் போய் விட்டார்.

அடுத்தநாள் அதிகாலையில் நம்பிராஜன் ஊருக்குப் போவதற்கு முன்பு கலியமூர்த்தி ஸாரிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவருடைய அறைக்குப் போய் அவரை எழுப்புவதற்காக தொட்டபோது உடம்பு சில்லிட்டுக் கிடந்தது. மனசுக்குள் அலறி ஆம்புலன்ஸிற்குப் போன் பண்ணி அவர்கள் வந்து பார்த்துவிட்டு கலியமூர்த்தி இறந்து நீண்டநேரமாகி விட்டது என்றார்கள். இரவு ஏதோ மன அழுத்தத்தில் இதயவலி வந்து சர்க்கரை நோய் இருந்ததால் வலியே தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

கலியமூர்த்தியின் மகன் அப்பாவின் இறுதிச் சடங்குகள் செய்ய அமெரிக்காவிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்தான். “அப்பாவுக்குப் புத்தகங்கள்னா உயிர் ஸார். அவர் வாங்கி சேர்த்து வச்சிருக்கிற புத்தகங்களத்தான் என்ன பண்றதுன்னே தெரியல…” என்று வருத்தத்தோடு சொன்னான்.

”இதே வீட்ல கலியமூர்த்தி நினைவு நூலகம்னு தொடங்கி பொதுமக்கள் நூல்களப் படிக்க வசதி பண்ணீடுங்க. நானும் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்….” என்றான் நம்பிராஜன்.

”நல்ல யோசணை தான் ஸார். ரெண்டு நூலகர்கள வேணுமின்னாலும் வேலைக்குப் போட்டுடறேன். உங்களப் பத்தி அப்பா போன்ல சொல்லி இருக்கிறார். நீங்க பத்துப் பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை வந்து பார்த்து தேவைகள எனக்குத் தெரியப்படுத்துனா அங்கருந்தே செஞ்சு குடுத்துடுவேன். நீங்க நிச்சயமாப் பார்த்துக்குவீங்களா?”

”கலியமூர்த்தி ஸார் எனக்கும் அப்பா மாதிரித்தான். நூலகத்தைக் கண்டிப்பாகக் கவனித்துக் கொள்கிறேன் நண்பரே….” என்று உறுதி சொன்ன நம்பிராஜனின் கைகளைப் பிரியமாய்ப் பற்றிக் கொண்டான் அவன்.

 

 

கரையும் நிழல்

வைரவன் லெ ரா

‘கன்னியாரில என்ன கூட்டம், சவத்து பயக்களுக்கு பொறுமையே கிடையாது, குண்டிய ஆட்டிட்டு திரியானுவ. செத்தவனுக்கு காரியம் பண்ணவந்தா, கடைசி அவனுகளுக்கு தான் காரியம் பண்ணனும். வரிசையா நூறு இருநூறு பூசாரி சப்பணங்கால் போட்டு உக்காந்து, என்ன எழவு மந்திரத்தையோ சொல்லி.. கையிலே நாலு அரிசி. தாயோளி எண்ணித்தான் கொடுப்பான் போல, எண்ணிப்பாத்தா நாலு அரிசி. நாம உறக்க சிக்குல போய், உள்ளத செஞ்சு. சவத்துமூதி சின்ன குளிரா அடிக்கி, கடல்ல அல அன்னைக்குனு பாத்து நான்தான் ஆளுன்னு எழும்பி வரும். இதுல எங்க! அப்பன, அம்மையை நினைச்சி முங்கி எழும்ப. ஒரு கை தர்பணத்துலயும் இன்னொன்னு அவ அவன் செயினு, வெள்ளி அருணாகைருல இருக்கும். கூதிமவனுகள நினச்சா, சிரிச்சிட்டே இருக்கலாம். நமக்கு பஸ்ஸுக்கு கைல கொஞ்சம், அப்புறம் ஒரு டீ வட, நாலு செய்து பீடி அவ்வளவுதான் கணக்கு. முருகா, எட்டி பூஜை முடிஞ்சா. இவ பூஜைய முடிச்சாதான் நான் பூஜைய ஆரம்பிக்க முடியும். ஒரு குட்டிப்பையன இடுப்புல சொருவி வச்சுருக்கேன். பய குய்யா முய்யானு கத்துகான். எட்டி சீமைராணி அடுப்பங்கரைலியே கிட. என்னாச்சிட்டி, நா போகாண்டாம’.

‘அவியலு அடுப்புல கிடக்கு, ஒரு அடுப்புதானே இருக்கு, பொட்டச்சி என்ன பண்ணுவா. ஒருநாள் லேட்டாய் குடிச்சா. மண்னென்ன மணக்காதோ. கிடையும் பொடைய மூடிட்டு’.

‘இதுகாத்தாண்டி சொன்னனான் எம் பயக்க அப்பவே, நாரோயில் காரி வேண்டாம்னு. நான் கேக்கல.’

அப்பாவின், அம்மாவின் குரல் இரயிலின் சத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் அம்மைவழி, அப்பாவழி அவர்களின் அய்யா , பாட்டா என வீட்டின் மங்களா முழுக்க சுவரையொட்டி நீட்டமாக வாழையிலை போட்டு, பின் பூஜை கழியும், அம்மையின் கையில் முதலில் சாம்பிராணித்தட்டு, அடுத்து சூடத்தட்டு என வரிசையாக இலைகளின் மேலே காட்டி, கடைசியில் தண்ணீர் தெளித்துவிடுவாள். நாங்கள் விருப்பப்பட்ட ஆச்சி தாத்தா இலையில் அமர்ந்துண்போம். நாட்களை நினைத்துக்கொண்டே, மணியைப்பார்த்தேன், ஐந்தரை ஆகிவிட்டது. திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி விரைவுவண்டி சென்றுகொண்டிருக்கிறது. நாளை ஆடி அமாவாசை, இந்த வருடம் அப்பாவுக்கு முதல் வருடம். கண்டிப்பாக வரவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை, ஆனால் கிளம்பிவிட்டேன். இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

‘எட்டி லெட்சுமி, ஒ வீட்டுக்காரரு குமார் தியேட்டர் முன்னாடி கிடந்து அவயம் போடுகாரு. உம்பயல எங்க. மக்கா அப்பாவ போய் கூட்டிட்டு வா ல.’,

‘நல்ல நாளு அன்னைக்குமா நிம்மதியா திங்க முடியா, யம்மா குடிகாரனுக்கு கட்டி வச்சு வாழ்க்கைய நாசமா ஆக்கிட்டியே. நீ கட்டி வச்சுட்டு செத்துட்ட, லேய் விஷத்த குடிச்சு செத்துருவோம். நாம யாம்ல சாவணும், அவனை நடைல ஏத்த மாட்டேன் ‘.

‘மக்கா ராத்திரி நேரமாச்சு, அப்பா எங்கயாச்சும் இருக்கானு பாத்துட்டு வால, ரூவாய மட்டும் முருகன்ட்ட கொடுத்து அமிச்சிருக்காரு. மீன் குழம்பு அவருக்கு ரொம்ப பிடித்தம். இங்கன எங்கயாச்சும் குமார் தியேட்டர் கிட்டயோ, சாத்தாங்கோயில் முன்னாடியே நிப்பாரு. டிவிய அணைச்சுட்டு போய்ட்டு வா என் ராசா’.

‘தெருவுல ஆம்பள இருந்தா வெளிய வால. நெஞ்சுல கை வையுங்களா தாயோளிகளா. அம்மைக்க அண்டைல கிடங்க. கோயில் நடைல கண்ட பயக்க ஒக்காந்தா உனக்கு ஏம்ல மூலம் கடுக்கு. உங்க கோயில் நடைல ஒக்காந்தா, திண்டுல வெண்ணிய ஊத்துவீளோ, இப்போ நா இந்த நடைல ஒண்ணுக்கு அடிக்கேன், இன்னா ஓடத்தண்ணிய நடைல தெளிக்கேன். பன்னீர் அபிஷேகம். எந்த மாடன் வாரான் பாப்போம்.’.

சாராய வாசனை எங்கிருந்தாலும் சட்டென அங்கே நின்றுவிடுவது பழக்கமாகிவிட்டது. அது அப்பாவின் வாசனை. சபரிமலைக்கு மாலை அணியும் மாதம் தவிர மற்றநாள் அப்பா குடிக்காமல் இருந்ததில்லை. உண்மையிலே அப்போதெல்லாம் அப்பாவை அவ்வளவாக பிடிக்காது. நெற்றியில் திருநீர் சாத்தி, கையில் செய்யது பீடியுடன், சட்டை அணியாமல் வெள்ளியில் கோர்த்த சந்தனமாலையை அணிந்த அப்பா வேறொருவராக தெரிவார். தெருவின் முனையில் அவர் நுழையும் போதே வீட்டிற்குள் குரல் கேட்கும். சட்டையில் ரூபாயை சுருட்டி வைத்துக்கொள்வார். போதை தெளியவும், மடக்கில் ருபாய் இருக்காது. அம்மையோ பாலை உண்டு எதுவும் அறியாத பூனைபோல அங்குமிங்கும் நடப்பாள். முறைத்தபடி வெளியே சென்றுவிடுவார்.

கல்லூரி நாட்களில் அப்பாவின் சட்டைப்பாக்கெட்டில் கைவிட்டு பணம் திருடியதெல்லாம் இல்லை. மாறாக பழைய புத்தகப்பையை எதற்காகவோ தேடியதில் கையில் கிடைத்தது ஓல்ட் மங்க் கால்குப்பி. அதற்கு முன்பாகவே ரம் பழக்கப்பட்டாலும் இது அப்பாவின் குப்பி, இருந்ததையோ எடுக்க மனமில்லை. ஒரு வாரம் விட்டு வைத்தேன். வைத்தது அவருக்கு நியாபகமில்லை போலும், பின் வீணாகாமல் நானே குடிக்க வேண்டியதாயிச்சு.

ரயிலில் காற்றின் வேகம் அதிகரிக்க ஆரல்வாய்மொழி வந்ததை அறிந்துகொண்டேன். வெள்ளிக்கோடாய் வேளிமலை வரைந்து வைத்த ஓவியத்தின் சாயலில் இருந்தது. ரயிலிறங்கி வீடு செல்லும் போது வாசற்படி தெளிக்கும் பெண்கள் தெருவில் ஆங்காங்கே நின்றனர். அம்மை கதவை திறந்துபோட்டபடி அடுக்காளையில் நின்றாள். உள்ளே போனதும், வந்தது தெரிய தோளில் இருந்த பையை பட்டென வெளிக்கட்டிலில் போட்டேன். “வந்துட்டியா மக்கா. நைட் தூங்கினியா, கண்ணுலாம் கிடங்குல கிடக்கு, கண்ணம்லாம் ஒட்டி, நேரத்துக்கு திம்பியா” என்றாள் வந்தவள். “எல்லாம் நேரத்துக்கு திங்கேன், வந்ததும் ஏதாச்சும் சொல்லணும், டீய கொண்டா முத” சலிப்புடன் அமர்ந்தேன். அப்பா சிரித்தபடி புகைப்படத்தின் உள்ளிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்.

அடுத்தநாள் அதிகாலை, கன்னியாகுமரிக்கு அம்மையும் உடன்வந்தாள். நண்பனின் இருசக்கர வாகனத்தை முந்திய இரவே வாங்கிக்கொண்டேன். கோட்டார் கடைவீதியை நெருங்கவும் வண்டிகளின் எண்ணிக்கையும் கூடியது. கன்னியாகுமரியில் வண்டி நிறுத்த ஐம்பது ருபாய் கொடுத்து, சங்கிலித்துறையை நெருங்கவே இருபது நிமிடம் ஆகிவிட்டது. அவ்வளவு கூட்டம், அம்மை வழக்கம் போல கையை இழுத்து, கூட்டத்தில் நுழைந்து எனக்கேற்றார் போல ஒல்லியான பூசாரி முன் நிறுத்த, அவரும் முன்னால் உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து, “எல்லாரும் சப்பணக்கால் போட்டு உக்காருங்கோ, இன்னா பிடி, இத இதுல போடுங்கோ, யாருக்கு கொடுக்கீலோ அவாளை நினச்சுண்டு, நா சொல்ல சொல்ல போடுங்கோ” அவர் பேசிக்கொண்டே போக, எனக்கு உட்காரவே இடமில்லை, ஒருவழியாய் அமர, கையில் அவர் கொடுத்த அரிசியை எண்ணினேன். அப்பா சொன்னது போல நான்கு அரிசி. எதையெல்லாம் சொல்லி, கையில் கொடுத்து, தும்பு இலையில் போட்டு முடிக்கவும், “கடல்ல போய், திருப்பி போட்டுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ” என்றார். நானும் கடலை நெருங்க, கூட்டம் என்னை தள்ள, கடலலை காலில் பட “சவம் சின்ன குளிரா குளிருது” என்றபடி முங்கி எழுந்தேன். உடல் முழுக்க பனிக்கட்டியால் தேய்த்துவிட்டது போல குளிர, கூடவே வாடைக்காற்றும் அதன்பங்கிற்கு வீசியது. வெளியே வரவும் அம்மை “அப்பாவை நினைச்சியா மக்கா, தெய்வமா நின்னு உனக்கு எல்லாம் கொடுப்பாரு” கண்களை துடைத்தாள். நானோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தேன். “எழவு என்னா குளிரு, முத ஒரு டீய குடிப்போம்” என்று எண்ணியபடியே ஒல்லி பூசாரியை நோக்கி போனேன். அவர் கையில் நூறை கொடுக்க, அவரும் திருநீறை கையில் கொஞ்சமாய் கொடுத்தார், சரியாய் ஒரு ஆள் பூசிக்கொள்ளும் அளவுக்கு.

வீட்டை அடைந்து ஈர உள்ளாடையை மாற்றியதும் தான் நிம்மதி வந்தது. அம்மையோ வழக்கம் போல அடுக்காளைக்குள் போனாள். காலை உணவை உண்டு, வெளியே செல்லவும், அம்மை கூறினாள் “மத்தியானம் வேண்டாம் மக்கா, சாயந்தரமா போல. இன்னைக்கு அவருக்கு முத அம்மாசி. அடிச்சாலும் பிடிச்சாலும் கூட கிடந்தாரு. துணைக்கு இருந்தாரு.” என்றபடியே மறுபடியும் கண்களை துடைத்தாள். ஊருக்கு வந்தாலே மது ஒரு வழக்காமாகிவிட்டது. அதைத்தான் ஜாடையாக சொல்கிறாள் “சரி, இப்போ எதுக்கு. இருக்க வர, அந்த மனுசன ஏசிட்டு, எதுக்கு அழுக”, “அவரத்தான நான் ஏச முடியும். உன்னைய முடியுமா. ராத்திரி ஆச்சுன்னா பட்டி போல வீட்டுக்கு வந்திருவாரு” என்றபடியே அமைதியானாள். மாட்டிய புகைப்படத்தில் இருந்தபடி அப்பா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே செல்ல மனமில்லாமல் அமர்ந்தேன்.

அப்பாவை எனக்கு பிடிக்குமா? உண்மையிலே அம்மையை விட, அவரைத்தான் அதிகம் பிடிக்கும். இருக்கும் காலம் வரை, ஊரில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பேசிய ஒருவர். இன்னார் இவர் என்றெல்லாம் கணக்கில் கொள்வதில்லை, எல்லாருக்கும் ஒரே அளவு மரியாதை. ஆனால் இவரைத்தான் அதிகம் வெறுத்தேன். மதுவின் சுவை அறிந்த நாள் முதல், அவ்வாசனையை நுகரும் பொழுதெல்லாம் மனதில் தோன்றும் இது அப்பாவின் வாசனை. அவருக்கும் ஆடி அமாவாசை மீதெல்லாம் நம்பிக்கை உண்டா? அப்படியெல்லாம் தெரியாது, பின் ஏன் சென்றிருப்பார். ஒருவேளை என்னுடைய இன்றைய மனநிலையில் அவரும் இருந்திருப்பார்.

ஒருவழியாய் பூஜை முடிந்து, அம்மை கையில் இலையோடு வெளியே கா கா என கத்திக்கொண்டிருந்தாள். “இப்போ காக்காவ வந்துதான் அவர் திங்க போறாரு, வாம்மா உள்ள, பசிக்கு”, “அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க டே” திட்டியபடியே வந்தாள். அப்பாவுக்கு படைத்த இலையில் அமர்ந்து உண்டேன். பின் நேரமாய் எழுந்த காரணம் மதியம் தூங்கவேண்டியதாகிவிட்டது. மாலை எழுந்து, நண்பர்களோடு மதுவிருந்து. எல்லை இல்லாமல் போக, அப்பாவின் நினைவில் “அப்பாக்கு என்ன பிடிக்கும், ஓல்ட் மங்க். அப்பா, இன்னா வாரேன். ” தள்ளாடியபடியே நடந்தேன். கையில் ஒரு கோப்பையும், கொஞ்சம் தண்ணீருமாய் நடந்தேன். அப்பா இறந்தது ஒருவகையில் விபத்து. ரயில் பாலத்தின் தடுப்புசுவரில் முழுபோதையில் அமர்ந்திருப்பது, சிலநேரம் தூங்குவது அவரது பழக்கம். விதி, அன்றைக்கு பத்தடி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். நேரம் எல்லாம் தெரியாது. அடுத்தநாள் யாரோ பார்க்க விஷயம் தெரியும். அது வேறுகதை.

நடக்க, நடக்க பாதைகள் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. முன்னாலே ஒரு நிழல், சுற்றியும் பார்த்தேன். யாருமில்லை, “அய்யோ, அப்பா காக்கவா வந்துலா குடிக்கணும். நைட் காக்கா வருமா” என்றெல்லாம் யோசிக்க, நிழல் மட்டும் என் முன்னாலே சென்றது. “அப்பா, நீதானா அது. வாரேன், அம்மைக்கு மண்டைக்கு வழியில்லை. உமக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும். அங்கேயே வாரேன்”, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் தான். அதேவிடத்திற்கு வரவும் நிழலும் நின்றது. அவர் விழுந்ததாய் சொன்ன இடத்திலே அமர்ந்தேன், நிழலும் அருகில் வந்தது. குப்பியை திறந்து, கோப்பையில் பாதி ஊற்றி, மீதி தண்ணீரால் நிரப்பினேன். சுற்றியும் யாருமில்லை “அப்பா, செய் இல்ல இல்ல, கா கா கா கா” ஆம் கத்தினேன். எங்கிருந்தோ காகத்தின் கரையும் குரல் கேட்டது, “அப்பா, சீக்கிரம் வா. இல்ல நா குடிச்ருவேன். பாக்கியா. வாப்பா”, ‘வாப்பா, நீ என்ன சாய்ப்பால. அப்பான்னு கூப்டு’ அப்பாவின் குரல் கேட்டது. சட்டென படபடக்கும் ஓசையோடு காகம் ஒன்று முன்னால் அமர்ந்தது. நிழலை தேடினேன். எங்குமேயில்லை. “கா கா கா” என்றபடி, கோப்பையை அதன் முன்னே நகர்த்தினேன்.

காகம் எங்குமே பறக்கவில்லை, “நைட் காக்கா வருமா. அப்பா நீதானா. எப்பப்பா நீ விழுந்த, உனக்கு ஓர்மை இருக்கா. இல்ல எவனோ தள்ளிட்டானா. உனக்கு வலிச்சா. சீக்கிரம் போய்ட்டியேப்பா. அப்பா” நானா அழுவது, நானேதான். காகம் இப்போதும் அங்கேயே நின்றது. இருட்டில் அதன் கண்கள் மின்னியது, ஈரத்தோடு இருப்பது போல தெரிந்தது. என் முன்னே தலையை ஆட்டியபடி வந்தது. கரைய ஆரம்பித்தது. அப்பாவின் வாசனை வீசியது. நான் கோப்பையை இன்னும் அதன் பக்கம் நகர்த்தினேன், என்னை உற்றுநோக்கியபடியே நின்றது, சிலநிமிடம் கோப்பையை வெறித்த காகம், பறந்தபடி கால்களால் கோப்பையை தட்டியபடி அங்கிருந்து பறந்தது. என்ன நடக்கிறது என் முன்னே, பின் மீண்டும் அதே நிழல் வந்தது. அது மெதுவாக நகர்ந்தது. காகத்தை தேடினேன், தென்படவே இல்லை. நிழல் நகரும் திசையிலே சென்றேன். அது என் வீட்டிற்கு சென்றது.

கனம் கூடிய தலை, உடலெல்லாம் வலிக்க, தாகம் வேறு உயிரை எடுத்தது. எழுந்து ஒரு லோட்டா தண்ணீரை குடித்தேன். “நைட் ஆகாரம் வேண்டாமால. வெறும் வயித்துல, சரி நீ எப்போ மெட்ராஸ் போற. உனக்கு இங்க சரிப்படாது. ” அர்ச்சனை கூடிக்கொண்டே இருந்தது. நேற்று நடந்தது நினைவில் வர, இல்லை கனவாக இருக்கும். ஒருவேளை நிஜமாக இருந்தால், அம்மை கொடுத்த டீயை குடித்து வெளியே சென்றேன். அதேவிடம், இப்போதும் யாருமில்லை, கவிழ்ந்தபடி கோப்பையும், ஓல்ட் மங்க் மீதி குப்பியும் அங்கேயே கிடந்தது. அங்கும் இங்கும் பார்த்தேன், எல்லாம் கனவாய் இருக்காதா என யோசிக்க. கரைந்தபடி காகம் ஒன்று பறந்து வந்தது. நான் அமர்ந்தேன், என்னருகில் வந்தது. நேற்று வந்த அதே காகமோ, அதன் கண்களை கண்டேன், அது ஈரமாய் இருந்தது.

நாயிற்கடையேன்

விஜயகுமார்

1

இதோ இப்போது நான் ஒரு கொலை செய்தாக வேண்டும். கொலை என்றவுடன் மனிதக் கொலை என்று எண்ணிவிட வேண்டாம். இது நாய்க் கொலை. ஒரு நாயை போட்டுத்தள்ள வேண்டும்.

இந்த எண்ணம் முதலில் எழும் போது வெறும் சாத்தியமாக மட்டுமே இருந்தது. இப்போது அது உருண்டு திரண்டு ஒரு முடிவாக மாறியுள்ளது. எப்படி கொல்லலாம்? அதிக வன்முறை எனக்கு ஆகாது. அளவான வன்முறை ஆனால் காரியம் ஆகியிருக்க வேண்டும். அதனால் கல், கத்தி, கடப்பாரை லிஸ்டில் இல்லை. விஷம் வைக்கலாம் அல்லது சுருக்கு விடலாம். அந்த நாய்க்கு இருக்கும் வெறியை கணக்கில் கொண்டால் அதுவாக வந்து சுருக்கு மாட்டிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்லை. நாயை மட்டை செய்ய எவ்வளவு கேட்பார்கள்? முதலில் என்னிடம் எவ்வளவு இருக்கிறது? பேசாமல் ஒரு வளர்ந்து வரும் ரவுடியை அணுகலாமா? ஹ்ம்ம்.. எல்லை மீறி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படியே கொலை செய்துவிட்டால் என்றாலும்கூட சடலத்தை எப்படி மறைப்பது. கார்ப்பரேஷன்க்காரன் கணக்கு வைத்து இருப்பானோ? சடலத்தைப் பல துண்டுகளாக்கி திசைக்கு ஒன்றாக கொண்டு வீசி விட்டால்? அல்லது கொன்றார் பாவம் தின்றால் போச்சு என்பார்கள், நாய்க்கறி எப்படி இருக்கும்? ஒருமுறை சிறுமுகை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த மான் கறியை சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மொறு மொறுவென்று இருக்கும். ஆட்டுக்கறி அத்துப்படி. அதன் மார்க்கண்டன் சாப்பிட்டால் மார்க்கண்டேயன்.

நாய் க் கொலையை பற்றி மட்டுமே சுற்றி சுற்றி யோசித்துக்கொண்டு இருந்தால் ஏதாவது வழி பிறக்கும். இக்கொலைக்கான காரணங்களே இனி தேவையில்லை. இதைப் பற்றி சிந்திப்பதில் இவ்வளவு சக்தியை வீனடித்துள்ளேன் இனி காரணம் ஒரு கேடா?

தெளிவாய் பார்த்தால் ஒன்று புலப்படும். அதிகம் சிந்திப்பவன் செயல் புரிவதில்லை. செயல்படும்போதே சிந்திப்பவன் மட்டும்தான் செயலைக் கடக்கிறான். சும்மா சிந்திப்பவன் கற்பனையின் மூலமாகவே அந்நிகழ்வை ஆயிரம் முறை நடத்தி பார்த்திருப்பான். அந்தக் கற்பனையே அச்செயலுக்கு நிகரான அகநிறைவு தந்துவிடுகிறது.

இனி சிந்திப்பது வீன். ஆகவே அர்ஜுனா கொலை புரிவாயாக.

2

சமீபமாகத் தான் இந்த வீட்டை சம்பாதித்தேன். சொந்த வீடு. ஓன் ஹவுஸ். வாழ்வில் முதல் முறையாக எனக்கே எனக்கான இடம். எனக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. நான் ஆட்சி செய்யும் ஸ்தலம். அனைத்து பிரத்தியங்கமும் உணர்ந்த பிரத்தியட்ச உண்மை. இந்த வீட்டுக்காக காதல், உத்தியோகம் என்று பலவற்றை இழந்து உள்ளேன்; பல நாட்கள் பசியில் திரிந்துள்ளேன் என்றாலும் அதன் துயர் இப்போது இல்லை. மொத்தமும் மூன்று அறைகள் மட்டுமே உள்ள இந்த வீடு ஒண்டிக் குடித்தனம் வகைமையில் வரும். என்றாலும் எனக்கு இது மாளிகை. இது வந்த பின்பு தான் நடையில் மிடுக்கு உடலில் நிமிர்வு பேச்சில் தீர்க்கம் வந்து சேர்ந்தது. தீர்க்கம் என்றால் நான் இங்கே இருக்கிறேன் என்னை பொருட்படுத்துங்கள் என்பதுபோல. குத்துவிளக்கு வாங்கியதிலிருந்து சாமி கும்பிடுகிறேன். சாமி கும்பிடுவதால் என்னவோ வீட்டுக்கு வெளியே திருஷ்டி பொம்மை வைத்துள்ளேன். புதிதாக பல வெள்ளை நிற சட்டை வாங்கியுள்ளேன். வெள்ளை நிறத்தில் இவ்வளவு வகைகள் உள்ளது என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். என்னை அடையாளப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் வம்பாடு பட்டாவது வாங்கிவிடவெண்டும். ஒரே விலாசத்தில். இந்த விலாசத்தில். ஏனென்றால் நான் இப்போது ஒரு புள்ளி. சமூகத்தின் ஆள். இங்கே பெரும்புள்ளிகள் பல இருந்தாலும் நானும் ஒரு புள்ளி. இப்போது நான் ஏதாவது ஒரு அசோசியேஷனில் சேரலாம். சேர்ந்த இடத்தில் கருத்து தெரிவிக்கலாம். யாரிடமாவது தைரியமாக கடன் வாங்கலாம். முக்கியமாக எவ்விடத்திலும் அமர்ந்து பேசலாம். இது அனைத்தையும் நான் வீட்டோடு சேர்த்து சம்பாதித்தது. இவ்வுணர்வு எனக்கு பிடித்துள்ளது ஆகையால் இது எதையும் நான் இழந்துவிடக்கூடாது. இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் வந்ததிலிருந்து பயம் ஒட்டிக்கொண்டது. யாராவது பிடுங்கிக் கொண்டால்; ஆக்கிரமித்துக் கொண்டால்; உனது கிடையாது போடா என்று விட்டால்? விடப்போவதில்லை விடவே போவதில்லை. எனது அனைத்து சக்தியையும் திரட்டி போராடுவேன் அந்த கொடூரனை அந்த அரக்கனை எதிர்த்து போராடுவேன். இது நான் உருவாக்கியது என்னுடையது. அவனை சும்மா விட மாட்டேன். அவனை முற்றொழித்து என் வீட்டை மீட்டெடுப்பேன். கோர்ட்டுக்கு செல்வேன்; அரசியல் தலைவர்களை நாடுவேன்; ஊடகத்திற்கு செல்வேன்; வீதிக்கு வருவேன்; மக்களைத் திரட்டுவேன். அறம் உள்ளோர் அனைவரும் எனக்காக போராடுவார்கள்.

அன்று அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது தான் கவனித்தேன் அந்த நாயை முன் வாசலில் கட்டிப் போட்டு வைத்திருந்தான் அந்த முதல் வீட்டுக்காரன். அதை பார்த்த மாத்திரத்திலேயே திடுக்கிட்டு நின்றேன். எனக்கு மூச்சடைத்து. ஆங்காங்கே வெண்புள்ளிகளுடன் கன்னங்கரேல் என்ற நாய். அந்த வெண்புள்ளிகள் ஏதோ ஒரு தேமல் போல் இருந்தது. எனக்கு பயத்தால் நெஞ்சம் படபடக்க உடல் அதை ஏற்று லேசாக கிடுகிடுவென்று ஆடியது. காம்பவுண்ட் சுவரை ஒட்டியவாறு மெல்லிய நடை எடுத்து வைத்தேன். என் பயத்தை மோப்பம் பிடித்த நாய் சட்டென்று எழும்பி வல்வல் என்று ஆரவாரத்துடன் என் மேல் பாய முற்பட்டது. அதை கட்டி வைத்த சங்கிலி என்னை காப்பாற்றியது. நான் விழுந்தடித்து எகிறி என் வாசல் அருகே வந்து நின்றேன். அது என்னை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. மடமடவென்று கதவைத்திறந்து உள்ளே பாய்ந்து ஓடினேன். உள்ளே வந்து நெஞ்சு படபடப்பு நின்றபாடில்லை. வெகுநேரம் அன்று அது குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் ஒருவாராக அமுங்கிய போது என் நெஞ்சு சத்தமும் நின்றது. தைரியலட்சுமி வேண்டிக் கொண்டு கதவை ஓசையில்லாமல் திறந்து லேசாக எட்டிப் பார்த்தேன். அது முழு விறைப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றது. என் தலை தட்டுப்பட்டதும் மீண்டும் குரைக்க ஆரம்பித்தது. நான் மீண்டும் பொந்து பதுங்கினேன்.

சற்றும் எதிர்பார்க்காத எதிரி. இதற்கான உருப்படியான மறுமொழி என்று என்னிடம் ஏதுமில்லை. என் உள்ளத்தில் அனைத்து விதமான எதிரிகளுக்கும் அவர்களுக்கு உண்டான மறுமொழியையும் செயல் திட்டத்தையும் நான் ஏற்கனவே வகுத்து வைத்திருந்தேன். இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு அப்படிப்பட்டவர்களுக்கு அவ்வாறு என்று. ஆனால் இதுவோ நான் சற்றும் எதிர்பார்க்காதது. நான் வாயடைத்து மனமடைத்துப் போயிருந்தேன். உள்ளத்தில் இறுதியில் குழப்பமே மிஞ்சியது. சரி அதன் எஜமானனை கூப்பிட்டு பேசியே ஆகவேண்டும். அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அவனை முன்பின் நான் பார்த்ததே இல்லை.

நினைக்கையில் பதற்றமாகவும் மலைப்பாகவும் உள்ளது. கொஞ்சம் நெளிவு சுளிவுடன் நடந்துகொண்டால் இவையனைத்தையும் தவிர்க்கலாம். இழப்பதற்கு ஒன்றுமில்லாத போது கருத்து பேசினேன் கை ஓங்கின்னேன். இப்போது வீடு உள்ளது. பையில் கணம் உள்ளது. சூதானமாகத்தான் இருக்கவேண்டும். நான் வரித்துவைத்திருந்த எதிரி வெளுத்த உடல்க்காரன். பணம் படை அதிகாரம் உள்ளவன். அதாவது நான் எதிர்த்து புரட்சி செய்யும் லட்சிய எதிரி.

இரண்டே வீடுள்ள அந்த குறுகிய காம்பவுண்டில் இரண்டாவது வீடு என்னுடையது. முதல் வீட்டு வாசற்படியில் என்னை மறிக்கும் இந்த நாயைக் கட்டிப்பொட்டுள்ளான் உள்ளே உள்ள அந்த நாய். நான் இந்த வீட்டை வாங்கி குடி புகுந்து ஒரு மாதமாகிறது. ஆனால் இந்த ஒரு வாரமாகத்தான் இந்த பிரச்சனை. இதற்கு முன் அந்த நாய் கொல்லைப்புறமாக கட்டியிருந்தது என்பதை நான் அறிவேன். ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ள காம்பவுண்டை முழுதும் மறித்து நிற்கும். சைக்கிளை கேடயம் போல் தடுத்து உள்ளே சென்று விடுவேன் என்றாலும் பெடல் மற்றும் ஹேண்டில் பாரை மென்று சக்கை செய்துவிடும். அன்று என் நல்ல கால் சட்டையை அரை நிஜாராக்கியது. இதற்கு பயந்தே சைக்கிளை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டு அடுத்த தெருவை சுற்றி வந்து காம்பவுண்டை ஏறி குதித்து உள்ளே வரவேண்டும். சைக்கிளையும் கால் சட்டயையும் இந்த நாய்க்கு காவு கொடுக்க என்னால் முடியாது.

அடுத்து வந்த அநேக நாட்களில் அந்த நாய் முன் வாசலிலேயே நின்றது. அதனால் நான் காம்பவுண்ட் சுவரை குதிப்பது லாவக தேர்ச்சி அடைந்திருந்தேன். ஒரு அதிசய அதிகாலையில் அந்த நாய் முன் வாசலில் காணவில்லை. உடனே சென்று அந்த முதல் வீட்டின் கதவை தட்டினேன். அந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து நாயின் சத்தம் கேட்டது. யாரும் கதவை திறக்காதது மேலும் எரிச்சலூட்டியது. கதவை ஓங்கி ஓங்கி உடைப்பது போல் தட்டினேன். எங்கிருந்தோ என் எண்ணத்திரையில் எனது லட்சிய எதிரியின் உருவம் நிழலாடியது. என் நெஞ்சம் சட்டென்று துணுக்குற்ற போது அந்த கதவு மெலிதாக திறந்தது. உள்ளிருந்து ஒரு நோஞ்சான் ஆசாமி வந்து எட்டிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு வீர லட்சுமியின் அருள் இருப்பது தெரிந்தது.

அவன் தூக்கம் தடைபட்டு மயக்கத்தில் இருப்பது போல் இருந்தான். நான் எடுத்த எடுப்பிலேயே, “ஏன்பா உனக்கு அறிவு மயிரே இல்லையா?” என்றேன்.

அவன் இன்னும் குழப்பமாக வெளியே வந்து நின்று கண்களை இடுக்கிக்கொண்டு கதவின் விளிம்பை தாங்கலாக பிடித்து “யாரு” என்று கேட்டான். பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தில் மூக்கு மட்டுமே இருப்பதுபோல் இருந்தது.

“இப்படி வாசலிலேயே நாய கட்டிப் போட்டா நாங்க எல்லாம் எப்படி அத தாண்டி போறதுங்குற அறிவு இல்லையா?”

“ஓ! நீங்கதான் அந்த பக்கத்து வீட்டுக்கு வந்தவரா”

நான் மல்லுக்கு நிற்பதையே அவன் இன்னும் உள்வாங்கவில்லை, “இங்க பாருடா அடுத்த தடவ உன் நாய இங்க வெளியே பாத்தன்னா அப்புறம் நடக்குறதே வேற”

“கொஞ்சம் மரியாதையா பேசு” அவனும் தயாராகிவிட்டான்.

“முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“அடா புடான்னா, நான் நாய அவுத்து விட்டுருவேன் பாத்துக்கோ”

“அடிச்சேன்னா மீசை பிச்சிக்கிட்டு போயிடும் ஆமா” அவன் நோஞ்சான் என்பதால் நான் வீரனாய் இருந்தேன்.

“இங்க பாரு எனக்கு யாரோடும் சண்டை போடுற சக்தி இல்லை. நீ பெரிய பலசாலின்னா அதோடவே சண்டை போட்டுக்கோ.” என்றுவிட்டு என் மறுமொழியை கேட்காமலேயே உள்ளே செல்ல எத்தனித்தான்.

நான்,”உன்னையும் அதையும் கார்ப்பரேஷன்க்காரன் அள்ளிட்டு போற மாதிரி செய்யறேன்னா இல்லையான்னு பாருடா”

அவன் கதவை சாத்தியம் சாத்தாமலும் இடுப்பை பிடித்தவாறு கூன் முதுகுடன் உள்ளே சென்றான்.

நான் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியவாறு வெளியே நடையைக் கட்டினேன்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்திரிக்காரன். “சார், அவன்கிட்ட வெச்சுக்காதீங்க. அவன் மெண்டலு. நாள்பூரா வருசம்பூரா வஞ்சிக்கிட்டே கிடப்பான். நிம்மதியாவே விடமாட்டான். நாங்க யாரும் அவன்கிட்ட வச்சிக்கிறது இல்ல. நிம்மதியாவே விடமாட்டான். இவனமாரி ஆள கம்ளைண்டும் பண்ண முடியாது. எடுத்துக்க மாட்டானுங்க.” என்றான்.

“ஏன்?”

“அதான் சொன்னேனே மெண்டலு”

3
“என்ன பண்ணட்டும்ன்னு நீயே சொல்லு.” சுரேஷிடம் கேட்டேன். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறான். நானும் அவனும் சோற்றுக்கு கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே நண்பர்கள். பசியுடன் சாலையில் ஒன்றாக அலைந்திருக்கிறோம். என் பசி அறிந்தவன். எனக்கும் அவனுக்கும் பொதுவில் இருப்பது பசி ஒன்றுதான். எந்தக் கருத்தும் ஒத்துப் போகாது. என்றாலும் நண்பர்கள். சந்தித்தால் சாப்பிடுவோம். பசித்தால் சந்திப்போம். பசி பொதுக்காரணம், சாப்பாடு பொதுக்காரியம். இப்போதெல்லாம் காரணமே இல்லையென்றாலும் காரியம் நிகழ்த்த செல்வோம்.

அவன்,”இதுவரைக்கும் என்ன ஒரு நாய் தொறத்துன நியாபகமே இல்லை” என்றான்.

“அந்த நாய்க்கு அப்படி ஒரு ஆக்ரோஷம். நான் அதுகிட்ட புடிங்கிக்கவோ அது என்கிட்டே இருந்து காப்பாத்திக்கவோ அதுகிட்ட அப்படி என்ன இருக்கு.”

“பக்கத்து தெருவுல நெறய பணக்காரனுங்க நாயா வெளிக்கு கூட்டி வருவானுங்க. அதுவெல்லாம் நல்ல கொளுக்குமுள்ளுக்குன்னு அமைதியா இருக்கும்” என்றான்.
நான், “அத சும்மா விட்டு வைக்கக்கூடாது. என் சொந்த வீட்டுக்கு பயந்து பயந்து போக முடியாது. அந்த நாயா கொல்றனோ இல்லையோ அந்த வீட்டுக்காரன போட்டுத்தள்ளனும்.”

நான் சொல்வதை அவன் உள்வாங்கினானா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. அவன் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தான்.

“டேய், நான் சொல்றத கேக்குறியா இல்லையா?” என்று கேட்டேன்.

“சொல்லப்போனா ஆர்டிபிசியல் செலெக்ஷன்ல நாய் மனுசனோட சேர்ந்துதான் பரிணாமம் அடைஞ்சது. மனுஷனும் கொஞ்சம் மாறித்தான் இருக்கான்.”

“என்ன!!!, நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற”

“அது இல்லடா. நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்”

“நான், இன்னும் ஒரு வாரம் பாப்பேன். அப்புறம் சத்தமில்லாம சோலிய முடிக்கவேண்டியதுதான்.” நான் எனக்கே சொல்லி தீர்மானித்துக்கொண்டேன்.

“சினவுக் கொள் ஞமலி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

நான் “என்ன!!” என்று எரிச்சலுடன் கேட்டேன்

“அது இல்லடா, சும்மா யோசிச்சேன். சங்க இலக்கியத்துல நாய ஞமலி, ஞாளி அப்படின்னு சொல்றாங்க. பக்தி இலக்கியத்துல ஆஊன்னா ‘நான் ஒரு நாயிற்கடையன்’ அப்படின்னு சொல்லிக்கிறானுங்க. உண்மைதான் போல” என்றான்.

நான் கோபமாக எழுந்து கிளம்பினேன்.

“டேய் சாரிடா. நில்லு… நில்லுகிறேன்னுல்ல..”

“பின்ன என்னடா. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.”

“சரி அத கொல்றதுதான் ஒரே வழிய?”

“பின்ன என்ன செய்ய சொல்ற?”

நான் உணர்ச்சி வேகத்தில் கத்தும் போதெல்லாம் சுரேஷ் அமைதிக்கு செல்வான். நானும் அடங்கினேன். இருவருமே கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை.

“அதுக்கு இல்லடா.. எதையுமே முதல்ல பகையா பார்க்கக் கூடாது” என்றான்.

“அதுக்காக கடிக்க வர்ற நாய புடிசிச்சு முத்தங்கொஞ்ச முடியாது” மீண்டும் கத்தினேன்.

“சரி நாளைக்கு நான் வர்றேன். வந்து பாக்குறேன்”

“இரு, அந்த நாய்ட்ட உன்ன புடிச்சு தர்றேன். நீ அப்ப பேசு.”

அவன் சிரிக்க நானும் சிரித்தேன். என்னை ஆறுதல் படுத்த கலப்புக்கடைக்கு கூட்டி சென்றான். முதலில் ஆளுக்கு ஆறு இட்டிலி அடுக்கினோம். அப்புறம் இன்னுமொரு ஆறு. அடுத்த ஆறு அவன் தனியாக சென்றான். அவனே காசு கொடுத்தான். சந்தோசமாக இருந்தது. சந்தோஷமோ துக்கமோ சாப்பிடுவோம்.

4

அடுத்தநாள் சுரேஷை வீட்டிற்கு கூட்டிப் போனேன். தூரத்திலிருந்து பார்த்தான். அது அமைதியாக படுத்திருந்தது.

“போட்டாட்ட படுத்து கெடக்கு..”

“என்ன?”

“பசு மாதிரி படுத்து கெடக்குதுன்னு சொன்னேன்”

“பூரா.. நடிப்புடா.. எங்க பக்கத்துல போ பாப்போம்”

“டேய், நான் புஸ்தகம் படிக்கிறவன் கருத்து மட்டும்தான் சொல்வேன். நீ தான் மீதி எல்லாம் பண்ணிக்கோணும்”

நான் ஒரு சிறிய கல்லை எடுத்து அதன் மீது போட்டேன். அது அசைவேதும் இல்லாமல் இருந்தது. “உஸ்… உஸ்…” சோகையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டது. சுரேஷ் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லுவான் என்று எனக்கு தெரியும்.

அவன்,”இங்க பாரு.. யாரு கிட்டயும்னாலும் எதுனாலும் ஒரு நட்பு வேணும். அதுக்கு ரெண்டு பேர்கிட்ட இருக்க பொது விஷயத்திலிருந்து ஆரம்பிக்கணும். உன் எதிரிக்கும் உனக்கும் ஒரு பொது காரணம் பொது ஆர்வம் இருக்கும். அந்த பொது ஆர்வத்திலிருந்து ஆரம்பிக்கணும். எடுத்த எடுப்பிலேயே சண்டைக்கு நிக்கக் கூடாது.”

“உன்கிட்ட இருக்குற ஒரே ஃபிலாசபி இது தான்.”

“வேலை செய்யுதான்னு பாருடா” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். “

“சரி வா பீஃப் பிரியாணி சாப்பிடலாம். பக்கத்துல இருக்குற ரோட்டு கடை நல்லா இருக்கும்” அவனே கூட்டி சென்றான். பிளேட்டு முப்பது ரூபாய். தொன்னூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்தோம். இருவரும் சேர்ந்து எழுவது ரூபாய்க்கு போஜனம் செய்தோம். மீதமான இருவது ரூபாயை பார்சல் கட்டி வாங்கிக்கொண்டான் சுரேஷ்.

போகும் வழியில். “இந்தா இத அந்த நாய்க்கு போட்டிரு” என்றான்.

நான் முறைத்துவிட்டு சொன்னேன், “நீ எப்படி என்னை ஃபிரெண்டு புடிச்சியோ அதே மாதிரி நான் அந்த நாய ஃபிரெண்டு புடிக்கணும். அதுதான? ஏன்டா இந்த ரேஞ்சுக்கு என்ன கொண்டு வந்துட்ட.”

“சொல்றதைக் கேளு..இத நாய்க்கு போட்டிரு..”

அதை வாங்கிக்கொண்டு,”சரி இதுல கலக்குறதுக்கு விஷம்?” என்றேன்.

நான் சிரிக்க அவனும் சிரித்தான்.

“பொதுவான விசயத்துல இருந்து ஆரம்பி டா. உனக்கும் பிரியாணி புடிக்கும். எந்த நாயா இருந்தாலும் அதுக்கும் பிரியாணி புடிக்கும்.” என்றான்.

“ஃபிலாசபி ஓகே தான். ஆனா அந்த நாயோட ஓனர் கிட்ட சண்டை போட்டுட்டேன். அவன் பாத்துட்டான்னா?”

“சேம் ஃபிலாசபி தான்.”

“எது இந்த பொதுவா- ன்னு ஆரம்பிக்குமுங்களே அதுவா? நீ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் டா.. பிலாசபர் இல்ல.. ” என்றேன். இருவரும் சிரித்துக் கொண்டோம்.

அவனை விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். தயங்கித் தயங்கி காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன். வாசம் பிடித்து டக்கென்று எழுந்து நின்றது. அதன் கண்கள் எனக்கு வந்து படையல் இடு என்பது போல் அதிகாரம் இருந்தது. பொட்டலத்தை பிரித்தேன். அதனிடமிருந்து ஏதோ வினோதமான கரகரப்பான உறுமல். என்னை இறைஞ்சுகிறதா அல்லது அதட்டுகிறதா என்று தெரியவில்லை. நாய் பாஷை தெரியாது. பிரித்த பொட்டலத்தை தரையில் வைத்து தள்ளி விட்டேன். அது பாதி சிதறி நாயிடம் போய் நின்றது. நாய் உடனேயே முழுதாக ஈடுபட்டது. நாய்க்காரனது வீடு சாத்தியே தான் இருந்தது. நான் அதை தாண்டி செல்ல வேண்டும். இந்த ஒருமுறை காம்பவுண்டை சுற்றி வந்து பல்டி அடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுதான் சுங்கம் கட்டியாகிவிட்டதே. மெல்ல சுவர் ஓராமகா அடி எடுத்து வைத்தேன். நாய் லக்லக் என்று விழுங்கிக்கொண்டிருந்தது. அதன் சங்கிலி வளையத்திற்குள் சென்றபொது விழுங்குவதை நிறுத்திவிட்டு தலையை எடுக்காமலே பற்கள் அத்தனையு காண்பித்து உர்ர்ர் என்றது. நான் அசையாமல் நின்றேன். ஏதோ சுமூகம் கண்டவுடன் மீண்டும் போஜனம் செய்ய எத்தனித்தது. நான் மடக்கென்று ஒரே தாவலில் என் கதவை அடைந்தேன். உடல் முழுவதும் நீர் வழிந்திருந்தது. மூச்சு இறுகி மேலும் கீழும் நடனமாடியது. ஆனாலும் ஒரு திருப்தி. நறுவிசாக முடித்துவிட்டு பக்கத்திலிருந்த சிறிய தொட்டியில் சளக் சளக் என்று நீர் குடித்தது. பேய்ப்பசியில் இருந்திருக்கும் போல. முடித்துவிட்டு அங்குமிங்கும் பார்த்தது. திரும்பி என்னை பார்த்தது. அதன் உடல் மொழியில் ஒரு மாற்றம் இருந்தது. ஆனால் என்னவென்று புடிபடவில்லை. அதன் கண்களை சந்திக்காமல் உள்ளே சென்றேன்.

காலையில் தயிர் சாதம் சுங்கம் கட்டிவிட்டு அலுவலகம் சென்றேன். வரும்போது புரோட்டா. மெண்டல் வெளியே நின்றிருந்தான். “இது வெஜிடேரியன். இதுக்கு நான்வெஜ் நீங்கதான் போடறதா” என்றான். “நீ மொதல்ல அதுக்கு எதாச்சியும் வெய்யு. போறவன் வாறவனா வெச்சிக்கிட்டு இருப்பான். இந்த நாபீய எடுத்து வீசு. குடலைப் புரட்டுது.” என்றுவிட்டு மறுமொழிக்கு நிக்காமல் உள்ளே சென்றேன்.

நாய் பாஷை புரிய ஆரம்பித்தது. நாய் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது. பிஸ்கட், காபிபைட், வடை, பண் என்று என் சம்பளத்தில் ஒரு பங்கை கரைத்துக் கொண்டிருந்தேன். என்றாலும் சந்தோஷம்தான். தினமும் காலையில் அதுக்கு ஒரு குட் மார்னிங். நான் இரவு வரும் வரை அது காத்து நிற்கும். இத்தனை தூரம் வந்த பின்னரும் அதை தொடவோ தடவிக்கொடுக்கவோ நான் முனைந்தது இல்லை. என்ன இருந்தாலும் இது மெண்டலுடைய நாய். நான் சோறு வைப்பதால் மெண்டலும் கண்டுகொள்வதில்லை போலும். எப்போதாவது வெளியே வருவான். நான் உள்ளே சென்று விடுவேன்.

உலகத்தார் அனைவரும் நண்பர்கள் ஆகியதுபோல் இருந்தது. எல்லோரையும் புதுசாகப் பார்த்தேன். நேற்றைய என்னை நேற்றோடு விட்டுவிட்டேன். நேற்றைய யாரையும் இன்று இழுத்து வருவதில்லை. ஓரிருமுறை மெண்டலைக் கூட பார்த்து சிரித்தேன். இதெல்லாம் நாயிடம் இருந்து வந்த பழக்கம். அதற்கு பெயர் வைக்க விரும்பினேன். சுவீகாரம் செய்ய வேண்டும். என்னுடைய நாயாக்க வேண்டும். நினைத்துப் பார்த்தேன். நானும் நாயைக் கூட்டிக்கொண்டு நடை செல்வேன். சமூகத்தில் பெரிய ஆள்தான். நாய் கண்காட்சி என்று யோசித்தவுடன் சிரிப்பு வந்தது.

அன்று ஃபீப் பிரியாணி வாங்கிக்கொண்டு சுரேஷயும் அழைத்துக்கொண்டு உற்சாகமாக வந்தேன். வெறும் காம்பவுண்டு எங்களை வரவேற்றது. சங்கிலியையும் காணவில்லை. நெஞ்சு கனத்தது. உலகம் மீண்டும் தன் சுயரூபம் காண்பிக்கிறது. எனக்கு பாத்தியப்பட்டதை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. அவன் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. விடாமல் தட்டினேன். இஸ்த்திரிக்காரன் வழக்கம் போல் எட்டிப் பார்த்தான். கொஞ்ச நேரம் விட்டு “என்னடா வேணும் உனக்கு?” என்று கதவைத் திறந்தான். சொல்லின்றி நாக்கு தடுமாறியது. “நாய்…” என்று சுரேஷ் இழுத்தான். “நாயா? எந்த நாய்? அதுவா? அத அவுத்து விட்டுட்டேன். இல்ல வித்துட்டேன். இல்ல அதுவே ஓடிடுச்சு.” என்று சொல்லிவிட்டு மெண்டல் திரும்பினான். நான் “டேய்…” என்று கத்தினேன். அவன் திரும்பியவாறு முதுகை காண்பித்து அப்படியே நின்றான். எனக்கு பேச்சு தடுமாறியது. கொஞ்சம் இறைஞ்சுவது போல “உண்மைய சொல்லு… நான் அதுக்கு மட்டுமா சோறு வாங்கியாந்தேன். உனக்கும் செத்துத் தாண்டா. சத்தியம் பண்ணி சொல்லு. நான் வெச்சுட்டு போன பார்சலை நீ எடுக்கலேன்னு. அந்த நாய் எங்க?” அவன் அப்படியே நின்றான்; பிறகு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டான். நான் சுரேஷைப் பாத்தேன். எனக்கு அழுகை வந்தது. சுரேஷ் கூடவே இருந்தான்.

புது வீடு வாங்கிய சந்தோசமோ அந்தஸ்து சம்பாதித்த பெருமையோ இல்லாமல் போனது. நான் பழையபடி பதட்டமான ஜீவன் என ஆனேன். “வீட்ல வளர்ந்த நாய் ரோட்டுக்கு போச்சுன்னா பொழைக்காதுடா.” சுரேஷிடம் சொன்னேன். “ரோட்ல இருந்து வந்தவன் நான் சொல்றேன். நாய விட கேவலமான பொழப்பு பொழச்சவன்டா. நாய்க்கும் அது வேண்டாம். நான் கொஞ்சம் முந்தி இருக்கணும். அத நான் வாங்கியிருப்பேன். கைல கால்ல விழுந்தாவது வாங்கி இருப்பேன்.” புலம்பிக் கொண்டே இருந்தேன். அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்து ஊரையே அலசினேன். மீண்டும் மெண்டலிடம் கேட்க வந்தேன். எவ்வளவு தட்டியும் அவன் திறக்கவில்லை.

மனம் புதுப்புது எதிரிகளை மீண்டும் உருவாக்கியது. வேலை போய்விடுமோ? வீடு கைவிட்டு போகுமோ? மீண்டும் தெருவுக்கு வருவேனா? என்ன வந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது. மீண்டும் முடியாது. ச்சே… என்ன நினைப்பு இது. என் ராசியே இது தான். அப்படி அந்த நாயின் மீது பாசம் வைக்க இன்னும் அதன் நிபந்தனை அற்ற அன்பைக் கூட நான் அனுபவிக்கவில்லை. இல்லாத, கைவிட்டுப் போன அனைத்தும் என்னை எப்போதும் ஆட்டிப் படைக்கும். பதட்டம் என் இயல்பு. இயல்புக்கு மீண்டதால் எப்போதும் போல் முரடனாக இருந்தேன். வெள்ளை சட்டை போடுவதில்லை. சாமி அறவே கும்பிடுவதில்லை.

5

நாட்கள் செல்ல செல்ல நாய் இல்லாத வாழ்க்கையும் பழகி இருந்தது. சுரேஷ் அன்று வேறொரு சின்ன நாய் வாங்கி வந்தான். மொசு மொசுவென்று இருந்தது.

“எதுக்குடா இதெல்லாம். இதுவும் ஓடிப் போகும்”

“நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவா இதை வச்சுக்கலாம். நீ ஒரு வாரம் நான் ஒரு வாரம்”

என்னால் சிரிக்க முடியவில்லை.

சுரேஷ், “இந்த வாரம் நான் வச்சுக்கிறேன். அடுத்த வாரம் உனக்கு. சும்மா காமிக்கலாமுன்னு வந்தேன்” என்றுவிட்டு எடுத்து சென்று விட்டான்.

அந்த ஒரு வாரத்தில் இல்லாத புது நாய் என்னை பீடித்துக் கொண்டது. நானே சென்று அதை தூக்கிக் கொண்டு வந்தேன். பால் பிஸ்கட் தயிர் சாதம். நானும் அதுவே சாப்பிட்டேன். வீடு முழுதும் சென்று அலசியது. சமயல் அறையை நாசம் செய்தது. கால் கையை நக்கும் போது நான் அனுமதித்தேன். என் மூக்கை வாயை நக்க அது உரிமை எடுத்துக்கொண்டது. புது வாழ்க்கை ஆரம்பித்தேன்.மீண்டும் சமுதாயத்தில் ஒரு புள்ளி ஆனேன்.

அன்று ஞாயிற்று கிழமை. தூங்கிக்கொண்டு இருந்தேன். சுரேஷ் போனில் அழைத்தான். “எங்க இருக்க? வெளில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டியா? வெளியே வாடா”. ராக்கி கதவைப் பிராண்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தேன். சுரேஷ் ஆம்புலன்சுடன் நின்றிருந்தான். சொற்பமானவர்கள் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெண்டலின் உடலை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

இஸ்திரிக் காரன் வந்தான்.”யார் துப்புக் கொடுத்தாங்கன்னு தெரில. நீங்களா?” என்றான்.

“இல்லை. நான் இப்போதான் எந்திரிச்சேன். என்னாச்சு.”

“கேசு தாங்காதுன்னு சொல்றாங்க. மெண்டலு அடிக்கடி இப்படி ஆகும். யாரோ ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போவாங்க. என்ன ஆச்சுன்னு தெரில. இந்த ஏரியால மெண்டல் இல்லேன்னா சந்தோசப் படறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க.”

இஸ்த்திரிக்காரன் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விட்டுவிட்டு சுரேஷிடம் சென்றேன். அவன் ஆம்புலன்ஸ் எடுக்கும் அவசரத்தில். “என்ன நியூஸ்ன்னு கேட்டு சொல்றேன்” என்றுவிட்டு விறுவிறுவென்று பணியில் இறங்கினான். ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

நான் அந்த பழைய நாயை நினைத்துக் கொண்டேன். மெண்டல் மீண்டும் வருவதற்குள். அலுவலக நண்பர்கள் அனைவரையுமே அல்லது ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். தரகரையும் வரச் சொல்ல வேண்டும்.

வந்தவர்கள் அனைவருக்கும் என் ராக்கியை பிடித்து போய்விட்டது. அவர்கள் வளர்த்திருந்த வளர்த்துக் கொண்டிருக்கிற நாயைப் பற்றி சொன்னார்கள். நாய் ஆஸ்பத்திரி, விளையாட்டு ஜாமானம், கொடுக்க வேண்டியது கொடுக்கக்கூடாதது என்று பல யோசனைகள். ரோட்டில் போனால் குழந்தைகள் பயம் இல்லாமல் என்னுடன் பேசினார்கள். கல்லூரிப் பெண்கள் திரும்பிப் பார்த்தார்கள். பணக்கார புள்ளிகள் கை காண்பித்து விட்டு சென்றனர். பழைய பதட்டம் இப்போது சுத்தமாக இல்லை.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. போனும் எடுக்கவில்லை. நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அவன் கைலியுடன் வெளியே நின்றிருந்தான்.

“என்னடா போன் பண்ணா எடுக்க மாட்டியா?”

“புது போன் வாங்கணும்டா.. உள்ள வாடா.. ராக்கி எப்படி இருக்கு?”

“டேய், அத விடு. மெண்டலுக்கு என்ன ஆச்சு. அத பத்தி வாயே தொறக்க மாடீங்கற..”

என் பார்வையை தவிர்த்தான். “அத விடு டா. அது யாருக்கு தெரியும். நாம நம்மோட பொழப்ப பாக்கவே நேரம் சிக்க மாட்டேங்குது.”

என்னவோ அந்நியத்தனமாக பேசினான். நான் உணர்ந்து கொண்டேன். “என்னடா ஆள் செத்துட்டானா?”

“ஆமா..”

“அதுதான் நீ என்கிட்டே சொல்ல முடியாம இருக்கியா?”

“ஆமா…”

“எப்படி செத்தான். போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் பாத்தியா? என்ன காரணமாக்கும்?”

…….

“என்னடா… என்ன காரணம்?”

“எல்லாம் பொதுவான காரணம்தான் …” என்றுவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

6

நாங்கள் அதற்கு பிறகு ஒன்று சேர்ந்து சாப்பிடுவதே இல்லை.

அகாலத்தில் கரைந்த நிழல் – ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மாமா, இளைய சாச்சாவின் புதிய லுமாலா சைக்கிளையும், பெட்ரோல்மாக்ஸ் லைட்டையும் எடுத்துக் கொண்டு இருள் விலகியிராத அதிகாலை ஒன்றில் மாமியைக் கைவிட்டு விட்டு ஓடிப்போய் ஒரு வாரம் கழிந்து விட்டிருந்தது. மாமா ஓடிப்போன சம்பவம் வீட்டில் மாமியைத் தவிர வேறு யாரையும் பெரிதாக உலுக்கியதாகத் தெரியவில்லை. வாப்படம்மா கொஞ்சம் கடமைக்கு கவலைப்பட்டது போல் தெரிந்தது. இதுதான் நடக்கும் என்று அவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் இருந்தது. வாப்படப்பா வழக்கம் போன்று தனது சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தபடி குர்ஆன் ஓதுவதில் மூழ்கி இருந்தார்.

ஒரு வாரத்துக்குள்ளேயே மாமா ஓடிப்போன சோகம் மெல்ல மெல்ல உருமாறி சாச்சாவின் சைக்கிள் மீதும் பெட்ரோல் மாக்ஸ் மீதும் மய்யங் கொண்டது. அவர் அதையெல்லாம் எடுக்காமல் ஓடிப் போயிருந்தால் பரவாயில்லை என்பதைப் போல் வீட்டின் சூழல் வேகமாக மாறிக்கொண்டு வந்தது. மாமா யாருக்கும் தெரியாமல் ஓடிப்போன நாளிலிருந்து மாமியின் முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்ததைப் பார்த்தேன். தனக்குள்ளேயும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்கு வெளியேயும் அழுது தீர்த்தாள். வீட்டின் உள்ளேயோ அல்லது மலசலகூடத்துக்குள்ளிருந்தோ கதவைப் பூட்டிக்கொண்டு அவள் அழும் சத்தம் வீட்டின் இரைச்சலிலும் என் கூர்மையான காதுகளில் பட்டுத்தெறித்துச் செல்லும். அப்போது அழுகையும் புகை போன்றதுதான் என நினைத்துக் கொள்வேன். உள்ளே இருந்து கொண்டு எப்படி கதவைச் சாத்தினாலும் அது வெளியே கேட்டுவிடும். புகையும் அப்படித்தான். நான் மலசலகூடத்தின் உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு திருட்டுத்தனமாக பீடி அடித்த போது புகை திரள் திரளாக வெளியேறி என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. மாமிதான் எனக்கு அடி கிடைக்காமல் காப்பாற்றிவிட்டாள். வீட்டில் யாரும் அவள் அழுகையை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஓடிப்போன மாமாவை தேடிச் செல்லவும் யாரும் முனையவில்லை. ஒரு நசிபட்ட பித்தளைச் செம்பு காணாமல் போனது போல வீட்டில் மாமியைத் தவிர வேறு யாருக்கும் நோகாத இழப்பாக அது இருந்தது.

பெரியம்மா மாமியைப் பற்றி வாப்படம்மாவிடம் திட்டிக்கொண்டிருந்தாள். வாப்படம்மாவின் மூத்த மருமகள் என்பதால் பெரியம்மா எப்போதும் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடுவாள். அதிலும் மாமியை குற்றம் பிடிப்பதென்றால் அவளுக்குத் தனி விருப்பம் இருந்தது. பெரியம்மா நீண்ட காலமாகவே மாமியை உள்ளூர வெறுத்து வந்தாள். இந்த சம்பவம் மாமியைத் திட்ட அவளுக்கு வாய்ப்பாக ஆகிவிட்டது.

மாமிக்கு இப்படி நடந்தது இது மூன்றாவது முறை. இவரைக் கட்டுவதற்கு முதல் மாமி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தாள். ஆனால் அவளது முதல் திருமணத்தில் மட்டுமே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் இரண்டு வயதில் காய்ச்சல் வந்து இறந்து போனது. மாமியின் முதல் திருமணத்தின் போது நான் குழந்தையாக இருந்தேனாம். அதனால் அந்த திருமணம் என் நினைவில் இல்லை.

எனக்கு எட்டு வயதாக இருந்தபோது மாமி இரண்டாவது முறையாக அவளை விடவும் 15 வருடங்கள் மூத்த கிழத்தோற்றத்திலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அவர் நெட்டைப் பனை மரம் போல் நெடுத்த ஒல்லியான உருவம். எப்போதும் முறிந்து விழலாம் என்ற தோற்றம். நரைத்த ஐதான முடி. முகத்தில் ஆங்காங்கே தாடி மயிர்கள் மலிக்கப்படாமல் இருந்தது. அது அவர் முகத்தை மேலும் அலங்கோலப்படுத்திக் காட்டியது. அவருக்கு 50வயது என்று இளைய சாச்சா கணக்குப் பார்த்துச் சொன்னார். மாமிக்கு அப்போது 35 வயதுதான் ஆகி இருந்தது.

“மறா அவரும் வாழ்றலியா” பெரியம்மா சாச்சாவை முறைத்துக் கொண்டு, இரகசியம் சொல்வது போல் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னாள். மாமி அவரைத் திருமண நாளன்றுதான் முதன் முதலாகப் பார்த்தாள். மாமாவைக் கண்டதும் மாமியின் முகத்தில் ஓர் ஏமாற்றச் சுழிப்பு படர்ந்து மறைந்தது. மாமியின் வெண்மையான முகம் ஆழ்ந்த சோகத்தில் இருண்டு போனது. எனக்கு அவளைப் பார்க்கையில் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்தது. மாமா தன் காவிப் பற்களைக் காட்டி மாமியைப் பார்த்துச் சிரித்தார். அவர் வாய்க்குள் பற்கள் கூட முழுமையாக இல்லை என்பது தெரிந்தது. மாமி அவர் முகத்தைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா அதன் பிறகு சிரித்ததை நான் காணவில்லை. அவரிடமிருந்து சுருட்டு வாடை வந்து கொண்டிருந்தது. அந்த நெடி அவரது பிறப்பிலிருந்தே அவரிலிருந்து வந்து கொண்டிருப்பது போன்ற ஆதிப் பிணைப்போடு வரும் கனத்த வீச்சாக இருந்தது.

“புறக்கும் போதே இவரு சுருட்டோடுதான் புறந்திருப்பார்” என்று சின்னச் சாச்சா மாமாவின் காதில் விழாதளவு தொனியைத் தாழ்த்திக் கொண்டு குறும்பாகச் சொல்லிச் சிரித்தார். பெரியம்மா சாச்சாவை மீண்டும் கடுப்பாகப் பார்த்தாள். மாமி கன்னிகை இல்லைதான் இருந்தாலும் பல்லே இல்லாத கிழவனுக்கு கட்டி வைக்கப்பட வேண்டியவளில்லை என வாப்படம்மாவிடம் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். வாப்படம்மா அவளது கதையை கவனத்தில் எடுக்காமல் வேறு கதைக்கு வேகமாகத் தாவினார். அந்தப் பெண்ணும் அதைப் புரிந்துகொண்டவள் போல் தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துக் கொண்டு இருந்தாள்.

நான் மீண்டும் மாமியையும் மாமாவையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்றொரு வெறி மாமி மீதான பச்சாதாபத்தால் எனக்குள் தோன்றி மறைந்தது. அப்போது மாமி என்னை அழைத்து அவள் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விரல்களில் மருதோன்றி சிவந்து கருத்திருந்தது. தங்கக் காப்புகள் அவளது சிவந்த கைகளின் அழகை மெருகூட்டிக் குலுங்கின. வெளிநாட்டு வாசனை அவள் உடலின் முழுப்பாகத்திலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமா சேர்ட்டின் இரண்டு மேல் பொத்தான்களைத் திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு ஏங்கினார். சேர்ட் காலருக்குள் நீல நிற கைக்குட்டை ஒன்றை மடித்து வைத்திருந்தார். அவருக்கு காற்று வீசும்படி பெரியம்மா என்னிடம் விசிறி ஒன்றைத் தந்து விட்டுப் போனார். நான் சடசடவென்று வீசத் தொடங்கினேன். அந்தக் காற்று அவரிடமிருந்து வந்த சுருட்டு நெடியை வேறு திசை நோக்கி மாற்றிக் கொண்டு சென்றது. பெரியம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு கிழவனை மாமி திருமணம் முடிக்கப் போவதையிட்டு பெரியம்மாவின் முகத்தில் எந்தக் கவலையும் தெரியவில்லை. மாறாக அன்றைய நாள் மிக மகிழ்ச்சியான நாள் என்பதைப் போல அவளது முகமும் உடலும் பூரித்திருந்தன.

மாமி வெளிநாடு சென்றுதான் அவள் வாழப் போகும் அந்த வீட்டைக் கட்டினாள். அதுவும் அரையும் குறையுமாகத்தான் இருந்தது. அவள் அனுப்பிய பணம் முழுமையாக அவளது வீட்டைக் கட்ட செலவு செய்யப்படவில்லை என்ற குறை அவளிடம் இருந்தது. அவள் கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்கள் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்தாள்.  அவளது சகோதரர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கும் அவளது பணம் கரைக்கப்பட்டது. எஞ்சிய பணத்தில்தான் அரைகுறையில் அவளுக்கொரு வீடு.

இந்த இரண்டாம் கலியாணம் முடிந்த மறுநாள் மாமி எல்லாவற்றையும் வாப்படம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். வாப்படம்மா அவளை ஏசுவது போலவும், சமாதானம் செய்வது போலவும் மாறி மாறி பாவனை செய்து கொண்டிருந்தாள். மாமி கேவிக் கேவி அழுத போது அவளது வெண்மையான முகம் சிவந்து வீங்கிக் கொண்டு வந்தது. என்னையறியாமல் நானும் அழுது கொண்டு நின்றிருந்தது வாப்படம்மா என்னை அதட்டிய போது தான் எனக்குப் புரிய வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து மாமி அந்த சுருட்டுக் கிழவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்றாள்.

2

சென்ற கிழமை ஓடிச்சென்ற மாமா மூன்று மாதங்கள்தான் மாமியோடு வாழ்ந்திருப்பார். அவரது சொந்த ஊர் குருணாகலை என்று மாமி சொன்ன ஞாபகம். எங்கள் ஊரில் பக்கோடா கலிலின் மலிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைசெய்து கொண்டிருந்தார். கடைக்கார முதலாளியின் சிபாரிசின் பேரில் மாமிக்கு அவர் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். மாமி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்திருந்ததால் மாமாவைப் பற்றி பெரிதாக யாரும் விசாரிக்கவில்லை. அவர் அவரது ஊரில் திருமணம் முடித்திருந்தாரா இல்லையா விவாகரத்துப் பெற்றவரா என்றெல்லாம் விசாரித்துப் பார்க்காமலே மாமி அவரது கழுத்தில் கட்டப்பட்டாள். திருமண நாளன்றும் வாப்படப்பா வழக்கம் போன்று அவரது சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

ஓடிச் சென்ற மாமா அநேகமாக இப்போது தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம். அல்லது தலைநகரில் வழக்கம் போல் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நகரத்தின் சந்தடிமிக்க பிஸியான வர்த்தகத்தில் மூழ்கி ஒரே நாளில் மாமியை நிரந்தரமாக மறந்தும் போயிருக்கலாம். அல்லது ஊரில் அவருக்கு என்னைப் போல் பிள்ளைகள் இருக்கலாம். மீண்டும் ஒரு தந்தையாக அவர்களை அவர் சென்றடைந்திருக்கலாம்.

இனி மாமியை என்ன செய்வது என்ற தீர்மானம் எடுக்கும் கூட்டம்தான் வாப்படம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடந்து கொண்டிருந்தது. வாப்படம்மாவும் வாப்படப்பாவும் இப்போது தங்கி இருக்கும் வீடு மாமியின் தங்கையான என் சின்ன மாமியின் வீடு. அவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக இருப்பதால் அவரது வீட்டில்தான் அவர்கள் தங்கி இருப்பார்கள். அதனால் மாமியின் அரைகுறை வீட்டில் மாமியைத் தனியே வைக்க முடியாது. அதனால் மாமியைத் திரும்பவும் வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான் சரி என பெரியம்மா பிடிவாதமாக இருந்தாள். மாமி நீர்கோர்த்த கண்களோடும், அழுது புடைத்த முகத்தோடும் மௌனமாக இருந்தாள். ஆனாலும் பெரியம்மாவின் தீர்மானத்தை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவள் முகத்தில் சூசகமாகத் தெரிந்தது.

“இனி இவளுக்கு கலியாணமே தேவல்ல. புடிச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்க. திரும்பயும் போய் வரட்டும்”

குடும்பம் முழுமையாக பெரியம்மாவை ஆமோதிப்பது போல் அவளின் முரட்டுத் தனமான குரலில் திரண்டு எழுந்த பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மாமியின் விருப்பு வெறுப்புகள் கூட கவனத்திற்கொள்ளப்படாத ஓர் இறுக்கமான சூழல் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. மாமியே கூட எதுவும் பேசாமல் சிறிது நேரம் ஆழமான மெளனத்தில் உறைந்து போயிருந்தாள்.

“தனிய இருந்து என்ன செய்யப் போறாய்? வெளிநாட்டுக்குப் போனா கொஞ்சங் காசச் சம்பாதிச்சிட்டு வரலாம்.” பெரியம்மா திரும்பத் திரும்ப அதே பல்லவியையே பாடினாள்.

“இல்ல, நான் இனி வெளிநாட்டுக்குப் போமாட்டன். இவ்வளவு காலமும் நான் கஷ்டப்பட்டு அனுப்புன காசிக்கு என்ன நடந்திருக்கு. நான் இனிப் போரல்ல..”

விம்மலுடன் மாமியின் வாய் திறந்தது.

பெரியம்மா விடாமல் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தாள். மாமி என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென்று வெறிகொண்டவள் போல் கத்தினாள். பெரியம்மா சில நொடிகள் மிரண்டு எழுந்துவிட்டாள்.

பின்னர் ஒவ்வொருவராக மௌனமாகக் கலைந்தனர். வாப்படப்பா சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆனில் மூழ்கி இருந்தார். அவருக்கு சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் நிஜ உலகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர் போல் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். மாமி அவரை சில நொடிகள் வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் கலைந்துவிட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் மாமியின் காதருகே சென்று மெல்லக் கேட்டேன்

”மாமி நாம ரெண்டு பேரும் மாமாவத் தேடிப் போவமா?” அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. திடீரென்று உடைந்து அழத்தொடங்கினாள். முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டு சுவரோடு ஒட்டித் தரையில் குந்திக் கொண்டு. நான் அதனை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதால் யாரும் காணு முன்னமே அங்கிருந்து தலைதெறிக்க ஓடினேன்.

3

மாமி சில நாட்களாக யாருடனும் எதுவும் பேசாமல் மௌனமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு வரிகளைக்கூட இப்போது அவளிடமிருந்து கேட்க முடியவில்லை. எனினும் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடாமலும் வாழ்வதற்கான உத்திகளை மனதுக்குள் வரைந்துகொண்டும் முன்செல்லும் முடிவை நோக்கி அவள் சுயமாக நகர்ந்து கொண்டிருந்தாள். அந்த முடிவு ஓர் ஆத்ம விசையுடன் அவளைத் தாக்கியது. சுவரில் சாய்ந்து கொண்டு தரையில் குந்தியிருந்தவள் திடீரென்று தீர்மானத்துக்கு வந்தவள் போல் உடலை நிமிர்த்தி எழுந்தாள். பெரிய அலையொன்று முறுகித் திமிறி உயர்ந்து எழுவதைப் போல அவள் எழுந்தாள். அப்போது அவள் கண்களில் உலக மனிதர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் திரண்டிருந்ததைப் பார்த்தேன்.

யாரும் நுழைய முடியாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஒரு வெட்டவெளி இருப்பதைப் போல வாழ்வதற்கான ஒருவெளியை அவள் கண்டடைந்தாள். அந்த வெளியில் ஒரு பயணி தங்கிச் செல்வது போல் தன்னை சுதாரித்துக் கொண்டு வாழ்க்கையை வடிவமைத்தாள். மாமா அவள் மனதிலிருந்தும் தேய்ந்து அழிந்து அரூபமாகக் கரைந்து விட்டிருந்தார். இருளில் கலந்து விட்ட நிழல் போல் அவர் உருவம் அவளிடமிருந்து அடையாளம் காண முடியாத மனத் தொலைவுக்குச் சென்றுவிட்டது.

“நான் வீட்ட போகப் போறன். தனியா வாழப் போறன். இனி எனக்கு கலியாணமெல்லாம் வாணா.” அவள் வாப்படம்மாவிடம் உறுதியாகச் சொன்னாள்.

“தனியா ஒரு பொம்புள நீ எப்புடி இருப்பாய்? உண்ட வீடும் அறுக்கல்லாம அரையும் குறையுமாக் கிடக்கு” வாப்படம்மா சந்தேகமாகக் கேட்டாள்.

“ராவெய்ல காவலுக்கு இவன் வருவான் எனடா?” என என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள். என்னை முதன் முதலாக ஒரு ஆண் மகனாக அவள் ஏற்றுக் கொண்டதில் எனக்குள் பிரளயமொன்று பீறிட்டது. இனம் புரியாத ஒரு சக்தி என் உடலெங்கும் பரவியது போல் உணர்ந்தேன். ஓர் ஆணுக்கான தகுதியை நான் அடைந்துவிட்டதாக அவள் நினைத்துவிட்டாள். அநிச்சையாக என் தலை அசைந்தது.

மாமா ஓடிச் சென்ற அந்த நாளுக்குப்பின் மீண்டும் மாமி தன் அரைகுறை வீட்டுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு சென்றாள். மாமி தன் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு தன் சொந்தக் கால்களையும், கைகளையும் மட்டுமே நம்பி இறங்கினாள்.  சிறுவர்கள், பெண்களுக்கான ஆடை வியாபாரம் ஒன்றைத் தொடங்கினாள். வீடு வீடாகச் சென்று விற்பது என்றொரு புதிய வியாபார முறையாக அது இருந்தது. ஊரில் அந்த வியாபார முறையை தொடக்கி வைத்த முன்னோடிகளுள் ஒருத்தியாக அவள் இருந்தாள்.

சனியும், ஞாயிறும்தான் நான் மாமியின் வியாபார உதவியாளனாக இருந்தேன். மற்ற நாட்கள் பள்ளிக்கூடம் போய் விடுவேன். ஆனாலும் எனக்கு பள்ளிக்கூடம் போவதை விடவும் மாமியின் வியாபார உதவியாளனாக இருப்பதே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் மாமி அதை விரும்பமாட்டாள். பள்ளிக்குப் போ என்று துரத்தி விடுவாள். எனினும் அவளால் ஒருபோதுமே புரிந்துகொள்ளப்படாமல், வெற்றிகொள்ளப்படாமல் போன ஆண்களின் உலகம் அவளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது.

ஒவ்வொரு நாளும் மாமி தெருக்களில் வைத்து சீண்டப்பட்டாள். அசிங்கமான வார்த்தைகளால் ஆழமான மனக்காயங்களால் அவளது வாழ்வு புன்னாகியது. முடிந்தளவு அவள் அங்கேயே வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் எதிர்வினையாற்றிக் கொண்டே வருவாள். ஒரு முள்ளுத் துண்டைக் கவ்வுவதற்காக காத்துக்கிடக்கும் நாய்கள் போல் வெளியில் மனிதர்கள் அவளுக்காக காத்துக் கிடந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான ஒரு சாதாரண விளையாட்டுப் போல் எனக்கு அது தெரிந்தது. உண்மையில் அது பெண்ணின் மீதான இளக்காரமான பார்வையிலிருந்தும் ஆண்களின் காமத்திலிருந்தும் முளைத்த முரண்பாட்டின் விளைவாக அது இருந்தது. அவளது அன்றாட அனுபவங்கள் அழிக்க முடியாத தழும்புகளாக மனதில் பதிந்து அவளை கீறிக் கிழித்தன.

அன்று பக்கத்து ஊருக்குச் சென்று விற்பனைக்காக ஆடைகள் வாங்கி வருவதற்காக பஸ்ஹோல்ட்டில் நின்று கொண்டிருந்தோம். வேறு யாரும் இல்லை. மாமியின் கையில் அவளது வழமையான சற்று ஊதிப் பெருத்த பயணப்பை இருந்தது. அந்தப் பைக்குள் அவள் அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்தையும் அடக்கி விடுவாள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் மிதிசைக்கிளில் வந்து கொண்டிருந்தான். மாமியின் அருகே வந்ததும் மிகத் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்ட மாமிக்கு மட்டுமே கேட்கக்கூடிய அடக்கமான தொனியில்,

“யாரக் காத்துக்கிட்டு நிற்காய்..? என்னோட வாரியா..” என்றான் மிக அலட்சியமாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

மாமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகம் தணலாக சிவந்து வந்தது. செருப்பைக் கழற்றுவது போல் குனிந்து கொண்டே அவன் மீது வசவுகளை உமிழ்ந்தாள். சைக்கிளை நிறுத்தாமலே அவன் தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருந்தான். எந்தக் குற்றவுணர்ச்சியும் அவன் முகத்தில் இல்லை. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி விட்டோம் என்ற பெருமிதம்தான் அவன் முகத்தில் பொங்கியது போல் தெரிந்தது. அவன் எதுவும் நடக்காதது போல் அநாயாசமாக சைக்கிளை மிதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். யாரும் மாமியிடம் எதுவும் கேட்கவில்லை. அவனையும் யாரும் எதுவும் செய்யவுமில்லை. சுரணையற்ற மனிதர்களைப் போல் பலரும் அலட்சியமாக எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். நான் இதை எல்லாம் பார்த்து இரசிக்கும் ஒரு பருவத்திலேயே இருந்தேன்.

மாமி ஆண்களின் காமச்சேட்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு புதிய உத்திகளைக் கைக்கொள்ளத் தொடங்கினாள். அவள் தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டாள். மாமியின் உடலில் முதுமையின் சுவடுகள் எதுவும் இல்லை. ஆனாலும் முதுமையின் சாயலைத் திட்டமிட்டே தன் உடலில் படியவிட்டாள்.  அவளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத மட்கிப் பொலிவிழந்த நிறத்தில் மிகப் பழைய சேலையும் பர்தாவும் அணியத் தொடங்கினாள். ஒரே ஆடையை குறைந்தது மூன்று நாட்களுக்காவது அணிந்துகொள்வாள். கோழியின் சடையிலிருந்து வரும் ஒருவித நெடி ஆடையிலிருந்து வந்தது. முன்பு அவளிடமிருந்து வரும் வெளிநாட்டு வாசனையை முகர்வதற்காக அவள் பக்கத்தில் நான் மூக்கை கூர்மையாக்கிக் கொண்டு குந்தி இருப்பேன். அவள் முகத்திலிருந்த இலட்சணத்தை சிரமப்பட்டு மறைத்தாள். புன்னகையை இழந்தாள். மகிழ்ச்சியான மிகவும் இனிமையான நளிமனமிக்க அவளது உடல் முறுகி இறுகியது.  காற்றில் கரைந்த நிழல் போல் அவள் தன் உருவைக் கரைத்துக் கொண்டு வந்தாள்.

அவள் தன்னோடு எப்போதும் தூக்கிச் செல்லும் பையின் அளவும் மாறியது. சற்றுப் பெரிதாக ஊதிப் பெருத்தது. அவளது மட்கிப் போன ஆடைகளுக்குள்ளும், ஊதிப் பெருத்த பைக்குள்ளும் வேண்டுமென்றே அவளது அழகு அவளால் மறைக்கப்பட்டது. மேகங்கள் நிலவை மூடிக் கொண்டதைப் போல. ஆனால் அதன் உள்ளே இருக்கும் அழகை நான் அறிவேன். மேகம் விலகியதும் பூரண சந்திரன் ஜொலிப்பதைப் போல வியாபாரம் முடித்து வீடு திரும்பியதும் அவள் தன் வேஷத்தைக் கலைத்துச் சிரிப்பாள். அவள் அழகு ததும்பி வழிந்து கொண்டிருக்கும். அவளது சிவந்த உடல் அயன் பண்ணப்பட்ட ஆடை போல் நேர்த்தியாய் மிளிரும்.

அவளது உத்தி அவளுக்கு கொஞ்சம் வெற்றியளித்தது. வீதியில் அவளுக்குத் தொல்லைகள் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வந்தன. ஆனாலும் அவளது துரதிஸ்டம் மொத்தமும் ஒரு ஆணாக மாறி வீடு தேடி வரத்தொடங்கியது.

4

மெலிதாக இருள் கவியத் தொடங்கும் போதே அவர் வந்துவிடுவார். மாமி அவரை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டு கதவருகில் அசையாது நின்றிருப்பாள். ஆனால் அவர் வரும் ஒவ்வொரு முறையும் அவரது முகத்தில் பெரிய மகிழ்ச்சி வழிந்தோடிக்கொண்டிருக்கும். அந்தத் தருணம் மாமியின் முகம் அடையும் உக்கிரத்துக்கு முற்றிலும் மாற்றானது அவர் முகம். நான் முற்றத்தில் நிற்கும் ஜே மரத்தின் கீழ் பாய் போட்டு படித்துக் கொண்டிருப்பேன். நன்றாக இருள் கவிழ்ந்து புத்தகத்திலுள்ள எழுத்துகள் உருத் தெரியாமல் மறையும் வரை நான் படித்துக் கொண்டிருப்பேன்.

சில நாட்களாக அவர் தொடர்ந்து வரத் தொடங்கி இருந்தார். அவர் இருள் செறிவாகும் நேரத்தில்தான் வருவது வழக்கம். அப்போது கூட என் சிறிய மண்டைக்கு அவர் பற்றி வேறுவிதமான சித்திரம் உருவாகவில்லை. அவர் வருகையை பற்றி எனக்குள் எந்த சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. நாளடைவில் மாமி அவர் வருகையை விரும்பவில்லை என்பதை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் அப்போதுதான் சைக்கிள் செலுத்தக் கற்றுக் கொண்ட புதுப் பழக்கம். அதனால் சைக்கிள் ஓடும் ஆசை உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் வந்ததும் சிலநாட்களில் எனக்கு அவரது புதிய லுமாலா சைக்கிளை ஓட்டிப் பார்க்கத் தந்துவிடுவார். நான் ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு வரை சென்று விடுவேன். அதுவரை அவர் மாமியோடு பேசிக்கொண்டிருப்பார்.

அவர் எங்களுக்கு தூரத்து உறவினராக இருந்தார். ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். இராணுவத்தில் லான்ஸ் கோப்ரலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். தலைமுடியை ஒருபக்கமாகச் சரித்து மண்டையோடு ஒட்டி வைத்ததைப் போல் நேர்த்தியாகச் சீவி இருப்பார். அவர் தலைகூட எப்போதும் ஒரு பக்கம் கெளிந்தே இருக்கும். அவர் நடக்கும் போது தலை மேலும் முன்னோக்கி சரிந்து விழுந்து விடுபரைப் போலவே நடப்பார். அது இராணுவப் பயிற்சியிலோ அல்லது யுத்தத்திலோ அவர் உடலில் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என அப்போது எண்ணிக் கொள்வேன். ஆனால் அவரது கெளிந்த தலையும் கெளிந்த நடையும் என்னை வசீகரித்திருந்தன. கையிலோ முகத்திலோ ரோமங்கள் எதுவும் இல்லை. எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பு எப்போதும் அவர் உடலில் இருந்துகொண்டே இருக்கும். மணிக்கட்டு வரை வழுகிக் கிடக்கும் தளர்வான கோல்ட் நிற வொட்ச் ஒன்றை கட்டியிருப்பார். அதன் மீதும் ஒரு அசட்டுக் கவர்ச்சி எனக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக அதே நிறத்திலேயே அரைக் கைச் சட்டை ஒன்றை அணிந்திருப்பார். கருப்புக் கால்சட்டையைத் தவிர அவர் வேறு நிற கால்சட்டைகள் அணிந்து வந்ததைக் காணவில்லை. அவரது உடலைப் போன்றே ஒரு கண்ணும் மிகப் பளபளப்பாக இருந்தது. பிறகு நன்றாக உற்றுப் பார்த்த போதுதான் அது பொய்க்கண் எனத் தெரிய வந்தது. போர் அவரில் ஏற்படுத்திய தழும்பு அது.

அவராகவே வீட்டுக்குள் வந்து நாட்காலியில் உட்கார்ந்து கொண்டு மணித்தியாலக் கணக்கில் மாமியுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். மாமி சுவரில் சாய்ந்து தரையில் குந்திக் கொண்டு அலட்சியமாக அவரது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பாள். “ம்..ஆ..” என்பதைத் தவிர வேறு எதிர்வினைகள் அவளிடமிருந்து வருவதில்லை. அதுவும் சுரத்தையில்லாமல் ஆழத்திலிருந்து வரும் குரல்போல மங்கியே கேட்கும்.

அவள் முகத்தில் வெறுப்பும் கோபமும் படர்ந்து வரும். அவளது அழகிய சிவந்த முகத்தில் ஒரு பெரிய மருப் போல் அந்த உணர்ச்சி வெளியாகி அவள் முகம் இறுகும். கண்களின் வளைவான இடுக்குகளில் நீர் கோர்த்து மின்விளக்கொளியில் பளபளப்பது தெரியும். சற்றைக்கெல்லாம் உடைந்து விடுபவளைப் போல் தெரிந்தாலும் அந்த கொந்தளிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு “ம்ம்” என்ற ஒலியை தொடர்ந்தும் எழுப்பிக் கொண்டிருப்பாள். அவர் அதைக் கண்டு கொள்ளாமலே மாமியை எதையோ நோக்கி கதையால் அழைத்துச் செல்லும் உறுதியான தீர்மானத்தோடு இருப்பார். அப்போது அவர் தலைகுனிந்திருக்கும். கைகளை சடசடவென ஆட்டியபடி இருப்பார். அவரது ரிஸ்ட் வொட்ச் கலகலலென ஓசை எழுப்பியபடி மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். நான் மறு மூலையில் குந்தி இருந்து கொண்டு மாமியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போது மாமிக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. வீதியைச் சமாளிக்கத் தெரிந்த அவளுக்கு வீட்டைச் சமாளிப்பதும் தெரியாமலிருக்கப் போவதில்லை. கோப்ரல் தொடர்ந்தும் வரத்தொடங்கிவிட்டார். மாமிக்கு கொஞ்சமும் பிடிக்காத அருவருப்பான ஒரு மனிதனாக அவர் மாறினார்.

மாமியின் போக்கில் திடீரென்று சில மாறுதல்கள் நிகழத் தொடங்கின. திடீரென்று விசித்திரமாகப் பேசத் தொடங்கினாள். நீண்ட நேரமாகத் தொழுதாள். சில நாட்களில் நேரங்கெட்டும் தொழுதாள். நீண்ட பிரார்த்தனைகள். அது அவள் ஓதுவதைப் போலவே இல்லை. அவளது குரலிலிருந்த இனிமை மெல்ல மெல்லக் கரைந்து யாருடையதைப் போலவோ ஆனது. கரடுமுரடான ஒரு ஆணிண் குரல் போன்று அவள் சில இரவுகளில் அரற்றத் தொடங்கினாள். அவளிடமிருந்த நளினம் முழுமையாகவே இல்லாமல் போனது. சூரியன் மறைந்ததும் இருள் செறிவதைப் போல அவள் முகம் பொலிவிழந்து இருண்டது. வீதியில் பலருக்கும் அவளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அவளும் யாருடனும் பேசிக் கொள்வதையும் தவிர்த்தாள். இப்போது பெரியம்மாவால் கூட அவளை இலகுவாக அடையாளம் காண முடியாது போயிற்று. வீட்டைக்கூட்டிப் பெருக்கும் போதும் ஏதேதோ பேசினாள். முன்பென்றால் அவள் வாசல் கூட்டும் போது வீட்டு வேலைகள் செய்யும் போது யாரும் கதைத்தாலும் கதைக்க மாட்டாள். இப்போது அதன் மறுபிம்பமாகத் தெரிந்தாள்.

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது “அடிநடைக்குக் கூட்டவா, திண்ணைக்குக் கூட்டவா” என்று தும்புத் தடியை விரலிடுக்கில் வைத்து கிறுக்கிக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது கோரமான மொழியில் ஓதுகிறாள். தனியே கோரமாகச் சிரிக்கிறாள்.

நான் “மாமிக்கு என்ன?” என்றேன் தயங்கிய படி.

“எனக்கிட்ட ஜின் இருக்கு” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் கண்களில் தைரியத்தையும், முகத்தில் பெருமிதத்தையும் கண்டேன்.

“அது என்ன செய்யும்?” நான் கேட்டேன்.

“அது ஆண்களைக் கொல்லும்” அவள் சொல்லும் போது அவள் உடல் முறுகி ஏறி இறங்கியது.

“என்னையும் கொல்லுமா?” என் குரல் பயத்தில் இழுத்து இரைந்தது.

“இல்ல, அது கெட்ட ஆண்களத்தான் கொல்லும். நீ சின்னப் பையன்” என்றாள். என் முகத்தில் படர்ந்த அச்சம் அவளுக்குள் ஒரு பரவசத்தைத் தூண்டியது. என் முகத்தில் அவள் அப்போது கண்டது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஆண்களினதும் பயத்தை.

அன்று இரவும் கோப்ரல் வந்திருந்தார். நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டே இருந்தார். என்னிடம் சைக்கிளைத் தந்து வெளியே தூரத்துக்குப் போய்விட்டு வரும்படி சொன்னார். மாமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“அவன் ராவெய்ல வெளிய போமாட்டான்” என்றாள். மாமி அப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஏமாற்றம் படிந்தது. அவரது எண்ணங்களுக்கு மாமியிடம் இடம் இல்லை என்பதை புரிந்தும் புரியாதவர் போல், விட்டுக் கொடுக்க முடியாதவர் போல், அமைதியானார். இச்சையைத் தணித்துக் கொள்ளும் வேட்கையின் உந்துதலில் அவர் உடல் முறுகிக் கிறங்கியது. மாமியின் உடல் மீதான அவரது வேட்கை இரவுப் பொழுதிலும் அனல் போல் அவர் முகத்தில் தகித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு ஆற்றாமையுடன் அங்கிருந்து போனார். நான் என் அறையில் தூங்கிப் போய்விட்டேன்.

நள்ளிரவு நேரம். திடீரென்று கதவைத் தட்டும் ஒலி மாமியை எழுப்பியது. வந்திருப்பது அவர்தான். மாமி கதவைத் திறக்க மறுத்தாள். அவர் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுச் சென்றிருப்பது போல் பாவனை செய்து கொண்டு உள்ளே வந்துவிட்டார். சிம்னி விளக்கிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்த மங்கல் ஒளியிலும் மாமி பிரகாசமாகத் தெரிந்தாள். களைந்திருந்த அவள் ஆடைகள் அவள் அழகை பகிரங்கமாகக் காட்டின. கோப்ரல் அவள் அருகே ஒரு கரிய மரம் போல் நின்றிருந்தார். அவளைத் தீண்டும் வேட்கை அவரை சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்திருந்தது.

“ராவெய்க்கு மட்டும் நான் இங்க தங்கிக்கிறன்” என்று அவர் சற்று அதட்டலான தொனியில் சொல்லிக் கொண்டே முன்னோக்கி வந்தார். மங்கல் வெளிச்சத்தில் காமம் வழியும் அவர் முகம் இறுக்கமாக இருந்தது. மாமியின் கையை அவர் சட்டெனப் பற்றிக் கொண்டார். மாமி வேகமாக உதறிப் பின்னகர்ந்தாள். கோப்ரல் ஒரு கணம் தடுமாறி பின் சுதாரித்து திடமானார். மாமியை மீண்டும் இறுக்கியணைக்க அவர் கைகள் மேலுயர்ந்து நீண்டன.

மாமியின் ஜின் விசுவரூபமெடுத்தது. சாந்த சொரூபியாய் இருந்தவள் திடீரென்று உக்கிர சொரூபியாய் மாறினாள். உண்மையான ஜின்னே ஒரு பெண் வடிவில் வந்துவிட்டதைப் போல் மாமியின் உருவும், குரலும் மாறின. யாரும் அவளிடமிருந்து அதுவரை கேட்டிராத தொனியில் அரற்றினாள்.

அவள் ஒரு பெண்ணே இல்லை என்பதைப் போல் தலையை விரித்துப் போட்டபடி கையில் உலோகப் புடி போட்ட டோர்ச் லைட்டை வேகமாக அசைத்துக் கொண்டு நின்றாள். அவள் உடல் ஆடிக் கொண்டிருந்தது. கோப்ரல் திணறி மேலும் மெல்ல மெல்லப் பின்வாங்கி கதவுப் பக்கமாக ஒதுங்கினார்.

குளிரில் நடுங்கும் குரங்கு போல் என் உடல் கட்டுப்பாட்டை மீறி அதிர்வதை உணர்ந்தேன். அவளைத் தொடர்ந்தும் பார்க்க முடியாது பயத்தில் மூத்திரம் போகும் உணர்வு சில்லிட்டது. அரபு மொழியில் மாமியின் ஜின் பேசியது. அதுவரை நாங்கள் கேட்டிராத கடுமையான தொனியில் அது பேசியது. அந்தக் குரலில் இருந்த கோரமும், மாமியின் உருவில் தெரிந்த குரூரமும் கோப்ரலை பின்வாங்கச் செய்தன. கோப்ரல் கதவைத் திறந்து தானாகவே வெளியேறி ஒரு திருட்டுப் பூனை பாய்ந்து ஓடுவதைப் போல் ஓடி இருளில் மறைந்தார்.

மாமிக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. “ம்ஹ்..ம்ம்ஹ்“ என இடையிடையே முணகலும் அரபும் கலந்த ஒரு பாஷையில் அவள் இடையறாது ஓதிக் கொண்டே இருந்தாள். மாமி கதவைச் சாத்தி விட்டு திண்ணையில் தொழுகைப் பாயை விரித்தாள். அதே முணகலுடன் அவள் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. தொழுகைப் பாயில் கால் மடித்து உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னுமாக அவள் உடல் அசைந்து கொண்டிருந்தது. ஓங்காரமாக ஓதத் தொடங்கினாள். மந்திரம் போல் திரும்பத் திரும்ப ஒரே வசனங்களையே ஓதினாள். கையிலிருந்த தஸ்பீஹ் மணிக் கோர்வை விரல்களுக்குள் சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. படுக்கையை விட்டும் எழாமலே மருட்சியான கண்களால் அவளைப் பாரத்துக் கொண்டு பாயில் கிடந்தேன். மாமியின் ஜின்னுக்கு ஆண்களைப் பிடிக்காது என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் அதுக்குப் பிடிக்காதவனாக ஆகிவிட்டேனோ? என்ற அச்சம் தலைதூக்கவே மறு பக்கமாக திரும்பிப்படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் மாமி ஓங்காரமாக உடைந்து அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகை அவளது சொந்தக் குரலில் அந்த அறை எங்கும் நிறைந்து கொண்டிருந்தது.

 

பிரார்த்தனை – ஸிந்துஜா

ஸிந்துஜா

இன்னும் பனி விலகவில்லை. வைகறை இருட்டின் மீது காதல் கொண்டாற் போல சில்லென்று காற்று தவழ்ந்து வந்தது. மனிதர்களைப் படுக்கையிலிருந்து எழுப்புவதற்காகவென்று மரங்களிலிருந்து தத்தம் இனிய குரல்களுடன் பறவைகள் பறந்து சென்றன. இதெல்லாம் போதாது என்று சொல்வது போல ஒரு வீட்டு வாசல் வழியே எம்.எஸ். சுப்ரபாதம் சொல்வது கேட்டது. தில்லியில் பல நாள்கள் எட்டு மணி எட்டரை மணிக்குதான் பக்கத்து பிளாட்டிலிருந்து சுப்ரபாதம் கிளம்பி வரும்.

தெரு ஆரம்பத்தில் ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லும் ஒரு பெண்ணை சபரி பார்த்தான். கோலத்தின் நடுவில் மஞ்சள் பூசணிப் பூ பளீரென்று மின்னிற்று. கல்யாணத்துக்கு நிற்கும் பெண் போலிருக்கிறது. அந்த வீட்டில்தான் பதினைந்து வருஷம் ஹேமு இருந்தாள்.

அவன் வீட்டை நெருங்கியதும் சபரி ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். வாசல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அம்மா நிற்பதைப் பார்த்தான். பையை ஆட்டோவிலிருந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தான். அம்மாவை நெருங்கும் போது அவள் “வராதவன் வரானேன்னு ட்ரெயின்காரனும் சரியான நேரத்துக்கு வந்துட்டானா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாத ஒன்பது வருஷ தூரம் தூக்கியெறியப் பட்டது என்று சபரிக்குத் தோன்றிற்று.

“திருஷ்ணாப்பள்ளிக்கு மூணு மணிக்கே வந்தவனை அவுட்டர்லே போட்டான். அப்படியும் வண்டி தஞ்சாவூருக்கு நாலு அம்பதுக்கு டாண்ணு வந்துடுத்து” என்றான் சபரி.

“என் காலத்து இன்ஜின் டிரைவர் போல!” என்ற அம்மா “உள்ளே வா” என்று சொல்லி விட்டுத் திரும்பி உள்பக்கம் நடந்தாள்.

சபரி உள்ளே நுழைந்தான். வாசலைத் தாண்டி நடை ஆரம்பத்தில் இரு பக்கமும் நீண்ட திண்ணைகள் உட்கார்ந்திருந்தன. வலது பக்கத் திண்ணையில் முக்கால் வாசி இடத்தை மூட்டைகள் அடைத்துக் கொண்டிருந்தன. நவரைப் பட்ட நடவு தொடங்கும் சமயத்தில் வேண்டியிருக்கும் உரங்களை அடக்கிய மூட்டைகளாயிருக்கும். இடது பக்கத்துத் திண்ணை ஹோவென்று விரிந்து கிடந்தது. ஒரே சமயத்தில் நான்கு படுக்கைகளைப் போட்டுத் தூங்கலாம். அவன் இடது கையை வைத்துத் திண்ணையைத் தடவினான். வழக்கம் போலக் குளிர்ச்சியும் வழவழப்புமாக அவனைக் கூப்பிட்டது. பகலில் விளையாட்டுத் ‘திடலா’கவும் வெய்யிலோ, மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் இரவு அவனைப் போட்டுக் கொஞ்சுமிடமாகவும்தான் அது இருந்தது என்று நேசத்துடன் நினைத்தபடி உள்ளே சற்றுக் குறுகலாக ஓடிய ரேழியைக் கடந்து கூடத்தில் நுழைந்தான்.

கூடத்து ஊஞ்சல் மீது தோள்பையை வைத்தான். வலது பக்கமிருந்த அறை வாசலில் சார்த்தியிருந்த கதவுக்கு முன்னால் அம்மா நின்றாள். அந்த அறைக்குள்தான் அப்பா படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்டிலை விட்டு எழ முடியாமல் படுத்த படுக்கையாய் அங்கே வாசம் செய்கிறார் என்று அன்று அண்ணாசாமி ஊருக்குத் திரும்பிப் போகுமுன் அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான். அவன் அம்மாவை நெருங்கியதும் அவள் கதவைச் சத்தமில்லாமல் திறந்தாள். அவன் பார்வை கட்டில் மீது விழுந்தது. படுக்கையில் ஒரு ஈர்க்குச்சி படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். மை காட்! என்னமாய் உருக்குலைந்து கச்சலாகி விட்ட உடம்பு ! வயல்காடுகளில் ஆஜானுபாகுவாகத் திரிந்து ஆட்களை வேலை செய்யச் சொல்லி விரட்டியடித்த ராஜமய்யரா இப்படி பிரேதமாகப் படுத்துக் கிடக்கிறார்? ராஜமய்யரது கண்கள் மூடியிருந்தன. ஏறி இறங்கும் மார்புதான் உயிரை இழுத்துப் பிடித்திருக்கும் உடம்புக்குச் சாட்சி சொன்னது. ‘தூங்கட்டும்’ என்பது போல் சைகையில் தெரிவித்து விட்டு அம்மா கதவை மூடினாள்.

அவளுடன் சேர்ந்து சபரியும் சமையலறைக்குச் சென்றான்.

“என்னம்மா இப்பிடி ஆயிட்டார் அப்பா?” என்று அவன் தாங்க முடியாது கேட்டான்.

“சொல்றேன் அப்புறம்” என்றாள் அம்மா. அடுப்பைப் பற்ற வைத்துப் பால் குக்கரை ஏற்றினாள். அவனிடம் “பெங்களூர் ஸ்டைலா இல்லே திருவையாத்து ஸ்டைலா நீ இப்ப காப்பி குடிக்கப் போறது?” என்றாள்.

“வென் யூ ஆர் இன் ரோம் யூ மஸ்ட் பீ எ ரோமன்” என்றான் சபரி. “பல் தேச்சிட்டு வந்து காப்பி குடிக்கிறேன்.”

பிறகு “ரொம்ப இளைச்சிட்டியேம்மா” என்று அவள் கையைப் பிடித்துத் தன் கையில் வைத்துக் கொண்டான். “பாரு, எப்படி நரம்பெல்லாம் தெரியறது?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.

“ஆமா, இப்ப எனக்கு பதினஞ்சு வயசுதான் ஆறது திம்மு திம்முன்னு இருக்கறதுக்கு!” என்றாள். “நீயும் கூடத்தான் பாக்க சகிக்காம இருக்கே. ராஜா மாதிரி எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டியது..ஹூம், நாமென்ன கடவுளா நினைச்சதை நினைச்சபடி நடத்தி முடிக்க?” என்றாள் அம்மா.

அவள் பேச்சை எங்கே நகர்த்துகிறாள் என்று அவனுக்குத் தெரியும். “சரி, நான் போய்ப் பல் தேச்சிட்டு வரேன்” என்று ஊஞ்சலை நோக்கி நடந்தான். அவள் பெருமூச்சு விட்டாள். கையில் பிடிபடாமல் பறக்கப் பார்க்கும் நாகணவாய். காப்பிப் பொடியை டப்பாவிலிருந்து எடுத்து ஃபில்டரின் அடிப்பாத்திரத்திற்கு மேலே இருந்த வட்டமான சிறு சல்லடையில் போட்டு அதன் மேலே வெந்நீரை ஊற்றினாள். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் காப்பி திக்காக இருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில் இருவருக்கும் ஒரே குணம். விருப்பு வெறுப்பு எல்லாவற்றிலும் இருவருக்கும் அப்படியொரு பொருத்தம். ஒன்றைத் தவிர. சபரி ஹேமுவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சபரி தாழ்வாரம் வழியே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்தான். கண்ணை இறுக்கி மனசில் பரவசத்தை ஊட்டும் பச்சை சுற்றிலும் நிரம்பியிருந்தது. துணி துவைக்கும் கல்லில் இரண்டு தையல் சிட்டுக்கள் அவைகளும் பச்சையில் மயங்கியனவாகத் தோற்றம் தந்து உட்கார்ந்திருந்தன. அவனைப் பார்த்ததும் கொண்டையை நாலைந்து முறை ஆட்டி ‘கீ’ ‘கீ’ என்று குசலம் விசாரித்து விட்டுப் பறந்தன. ஹேமுவுக்கும் இந்தப் பச்சை மரங்கள், செடி கொடிகள் மீதும் பறவைகள் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளை நினைக்கும் போது மழைநீர் ஒற்றிய சாயங்காலத்தில் திடீரென்று சிரித்துக் கொண்டு வானில் வளைய வரும் வில், காவேரியாய்ப் புரளுகிறோம் என்ற கர்வத்தில் அலைகளுடன் பொங்கி ஓடும் கணபதி அக்கிரகார ஆறு, ஐயாறப்பர் சன்னதியில் இருட்டை அண்ட விடாது மினுங்கிக் கொண்டிருக்கும் ஆளுயர எண்ணெய் விளக்கு இவையெல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றன.அவளும் இப்போது ஓடிச் சென்ற சிட்டுக்களைப் போலத்தான் பறந்து போய்விட்டாள். சிட்டுக்களைப் போவென்று விரட்டாத மாதிரிதான் சபரி ஹேமுவிடமும் இருந்தான். ஆனால்?

பற்பசை ஈஷிக் கொண்டிருந்த பிரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து நீரை எடுத்து அங்கு கிடந்த வாளியில் ஊற்றினான். பற்களைத் தேய்த்து விட்டு வாயைக் கொப்புளித்தான். வாளியில் மிதந்து கொண்டிருந்த செம்பை நீரில் முக்கி கைகளிலும் கால்களிலும் விட்டுக் கொண்டான். இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டான். பாதி குளித்து விட்ட முயற்சியில் உடல் சூடு இழந்து மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக உணர்ந்தான்.

அவன் முகத்தைக் கையில் வைத்திருந்த டவலால் துடைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றான். அம்மா ஃபில்டரின் மேல் மூடியை வைத்து ஃபில்டரைத் தட்டி டிகாக்ஷன் இறக்கிக் கொண்டி
ருந்தாள். அவனைப் பார்த்தும் காப்பி கலந்து கொடுத்தாள்

அவன் ஒரு வாய் அருந்தி விட்டு “ஆஹா பிரமாதம்” என்றான். அம்மா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“அப்பாவுக்குக் கொண்டு போய்க் கொடுக்கட்டா?” என்று கேட்டான்.

“அப்பாவுக்கா? அவருக்குக் காப்பியை நிறுத்தி ரெண்டு மாசமாச்சு” என்றாள் அம்மா.

“ஏம்மா?”

“திடீர்ன்னு ஒரு நாள் வாண்டாம்னுட்டார். காப்பிக்குப் பதிலா ஒரு வாய் ஹார்லிக்ஸ் குடிப்பார். சாப்பாடும் இப்ப ரொம்ப கொறஞ்சு போயாச்சு. எல்லாம் கரைச்சுக் கொடுக்கறதுதான். இட்லி பண்ணினாக் கூட மிக்சிலே அரைச்சு ஜூஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திண்டு இருக்கு. சாப்பாடுன்னா மோர் சாதம்தான். அதையும் கரைச்சுதான் கொடுக் கறேன். லேசா காரம் இருந்தாக் கூட பீச்சிண்டு அடிக்கறது. டாக்டர் வந்து பாத்துட்டு காரமில்லாம கஞ்சி மாதிரி வாட்டரியா கொடுங்கோ, ஜீரண சக்தியும் குறைஞ்சாப்பிலே இருக்குன்னுட்டார்.”

“ஏன் திடீர்னு இப்படி?”

“நீ லண்டனுக்குப் போய் நாலைஞ்சு மாசம் ஆனப்போ இவர் படுக்கையிலே விழுந்தாச்சு. அன்னிலேர்ந்தே இந்தக் கஷ்டகாலம் ஆரமிச்சிடுத்தே” என்றாள் அம்மா.

சபரிக்கு அண்ணாசாமி போன் பண்ணிய அன்றைய தினம் ஞாபகத்தில் தெளிவாக இருந்தது. அப்போது அவன் படுக்கையில் இருந்தான். வெளியே லண்டன் மழை தூறிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர் நசநசப்பும் ஞாயிற்றுக் கிழமையும் அவனைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்திக் காலை எட்டு மணிக்குக் கூடப் படுக்கையிலிருந்து எழ வைக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிப் போக வேண்டும். அவனுடைய ஆறு மாத டிரெய்னிங் காலம் முடிந்து விடும்.

கைபேசி அடித்த போது எடுத்துப் பார்த்தான். தெரிந்த நம்பராக இல்லை.

“ஹலோ! சபரி ஹியர்.”

“சபரி, நான் அண்ணாசாமி பேசறேன்டா. எப்படியிருக்கே? இன்னிக்கிக் காத்தாலேதான் எங்க குலதெய்வப் பிரார்த்தனைன்னு திருஷ்ணா
பள்ளிலேந்து காரை எடுத்துண்டு வீரசிங்கம்பேட்டைக்கு வந்தேன் அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சதும் பதினோரு மணிக்கு இங்கே ஆத்துக்கு வந்தேன். சித்தப்பாவையும் சித்தியையும் கூடவே தரிசனம் பண்ணிட்டுப் போலாமேன்னு” என்ற அவனது இயல்பான குரல் அவனுக்கு முதலில் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. அண்ணா சாமி அவனுடைய பெரியப்பாவின் பையன்.

“எங்கே ஆத்திலேர்ந்தா பேசறே? வேறே என்னமோ சத்தம்லாம் கேக்கறதே?”

“இங்கே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கோம்.”

“ஏன்? யாருக்கு என்னாச்சு?” என்று அவன் பதறியபடி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

“நான் ஆத்துக்கு வந்து சித்தே நாழி ரெண்டு பேர் கிட்டேயும் பேசிண்டு இருந்தேன்.அரை மணி கூட ஆகலே. திடீர்னு சித்தப்பாக்குத் தலை கிறுகிறுத்து நடக்க முடியாம போயி எல்லாரும் தஞ்சாவூருக்கு ஓடி வந்தோம். மீனாட்சியிலேதான் அட்மிட் பண்ணியிருக்கு. பி.பி., சுகர்லாம் எகிறிக் கிடக்குங்கறா. திடீர்னு கொலஸ்ட்ரால் வேறே ரொம்ப ஜாஸ்தியா இருக்காம். அப்பப்போ பாக்காம விட்டுட்டுதுனாலே இப்ப இப்படி ஆயிடுத்துங்கறார் டாக்டர்” என்று அண்ணாசாமி சொல்லும் போது சபரிக்கு உடம்பு ஒரு தடவை நடுங்கி விட்டுப் பழைய நிலமைக்குத் திரும்பியது.

“இப்ப எப்படி இருக்கார்? நான் இன்னிக்கிக் கிளம்பி வரட்டா?”

“இரு. அம்மாகிட்டே கொடுக்கிறேன். நீ அடுத்த மாசம் திரும்புவேன்னு உங்க ஆபீஸிலே கேட்டதுக்கு சொன்னா. இன் பாக்ட் உன்னோட போன் நம்பரையே நான் உன் ஆபீஸ்லேர்ந்துதான் வாங்கினேன்.”

அம்மா அவனிடம் நேரடியாக “நன்னாயிருக்கு. நீயென்ன மாயவரத் திலேயா இல்லே கும்பகோணத்திலேயா இருக்கே பஸ் பிடிச்சு உடனே கிளம்பி வரதுக்கு? டாக்டர் வாயிலே ஐயாரப்பர் வந்து உக்காந்து உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஒரு வாரம் இங்கே அப்பா இருக்கணும். அப்பா ஆத்துக்குத் திரும்பி வரவரைக்கும் அண்ணாசாமி கூடவே இருக்கேங்கறான். நீ கிளம்பி வந்தா ஆஸ்பத்திரி வாசல்லே வேப்பமர நெழல்லே உக்காந்துண்டு போறவா வரவாளோட கவலை மூஞ்சிகளைப் பாத்துண்டு இருக்கலாம்” என்றாள். அப்பா ! என்ன ஒரு நிதானம்! ஒரு இம்மி அளவு பயம், நடுக்கம் எதுவும் தெரிவிக்காத குரல்!

அடுத்து வந்த நாள்களிலும் அவன் அவளுக்குப் போன் போட்டுப் பேசும் போதெல்லாம் அவனுக்கு எதெது எவ்வளவு தெரிய வேண்டுமோ, அவ்வளவு தெரிஞ்சால் போதும் என்பது போலப் பேசுவாள். அவள் சொல்வதை வைத்து அவன் மேற்கொண்டு எதுவும் கேட்க விடாத மாதிரி அவள் பேச்சு இருக்கும். அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது, அவர் சாப்பிடும் மாத்திரை, மருந்துகள், டாக்டர் வந்து போனது, அவரை வந்து பார்த்து விட்டுப் போன உறவு ஜனம் என்று ஏதோ நிறைய விஷயங்களை சொல்லி விட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவாள். அவர் காப்பி சாப்பிடுவதை நிறுத்தியது, நீர் ஆகாரமாய் சாப்பிடுவது, உடல் இவ்வளவு மோசமாகத் தேய்ந்து போய்விட்டது பற்றியெல்லாம் இன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். தொலைவில் தனியாக இருக்கிறவன் கவலையில் கிடந்து மன்றாடக் கூடாது என்று நினைத்திருப்பாள்.

அம்மா கையில் ஹார்லிக்ஸ் எடுத்துக் கொண்டாள். இருவரும் அப்பாவின் படுக்கைக்குச் சென்றார்கள். ராஜமய்யர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷம் தோன்றுவதை சபரி கவனித்தான். கையை மெல்ல அசைத்து அவனைத் தன் பக்கம் வரச் சொன்னார். அம்மா அவன் கையில் ஹார்லிக்ஸ் தம்ளரைத் தந்தாள். சபரி அவர் ஹார்லிக்ஸ் குடிப்பதற்கு உதவினான்.அவர் மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் ஏதோ கேட்டார். சற்றுக் குழறலாய்த் தொனித்த வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“‘நீ எப்போ வந்தே? சௌக்கியமா இருக்கியான்னு கேக்கறார்” என்றாள் அம்மா.

அவன் சற்று உரத்த குரலில் “நா நன்னாயிருக்கேம்ப்பா. உங்களுக்கு எப்படி இருக்கு? ரொம்ப மோசமாயிருக்கேளே?” என்றான்.

அம்மா சபரியிடம் “நீ குரலை ஒசத்திப் பேச வேண்டியதில்லே. உன் உதடைப் படிச்சு நீ கேக்கறதைத் தெரிஞ்சுப்பார்” என்றாள்.

அப்பா அவனுடைய வலது கையைப் பற்றித் தன் கையுடன் கோர்த்துக் கொண்டார். வாடிய பூ தன் கையை உரசுவது போல அவனுக்கு இருந்தது.

‘நீ ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே? ஒழுங்கா சாப்பிடறதுக்கு என்ன? லண்டனிலேந்து நேரே இங்கே வந்தியா? எப்போ திரும்ப ஊருக்குப் போய் வேலையிலே ஜாயின் பண்ணனும்? எனக்காக நீ இங்கே தங்க வேண்டாம். ஆனா நாலஞ்சு நாள் இருந்தேன்னா மரூருக்குப் போய் நிலத்தைப் பாத்துட்டு வா. திருநாவு கணக்கெல்லாம் சரியாய் எழுதி வச்சிருக்கானான்னு ஒரு பார்வை பாத்துட்டு வா. அவன் நல்லவன்தான். ஆனா யாரும் பாக்கலே கேக்கலேன்னா சோம்பேறியா ஆயிடுவான். எழுத வேண்டிய செலவை மறந்து போயிடுவான், அதுக்குத்தான் சொல்றேன்’ என்று அவரது கேள்விகளையும் உத்திரவுகளையும் அம்மா மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனும் அம்மாவும் அவரிடமிருந்து வெளியே வந்ததும் சபரி அம்மாவிடம் “ரொம்ப தெளிவாதானே இருக்கார்” என்றான் சற்று உற்சாகத்துடன்.

“எல்லாம் உன்னைப் பாத்த சந்தோஷம்தான்” என்றாள் அம்மா. “ஆனா இன்னிக்கே இன்னொரு சமயம் வேறே மாதிரி அவதாரத்தில் இருப்பார். உனக்கு அப்ப அவரைப் பாத்தா வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.”

சபரி அவளை உற்றுப் பார்த்தான்.

“அவர் மனசிலே என்ன ஓடறதுன்னு யாருக்கு தெரியறது? கத்துவார். கூப்பாடு போடுவார். வாயிலிருந்து அவ்வளவு நாத்தமான வார்த்தைகள் நாராசமா வரும். கட்டில்லேர்ந்து கீழே விழறதுக்கு அப்படி ஒரு ஆகாத்தியம் பண்ணுவார். அப்போல்லாம் எதுத்தாப்பிலே நிக்கறது யாருன்னு தெரியாது. என்னோட அப்பாவைக் கூட்டிண்டு வாடின்னு என்னைப் பாத்து சத்தம் போடுவார்.செத்துப் போனவாளைக் கொண்டு வர நான் என்ன கிருஷ்ண பரமாத்வாவா இல்லே என் மாமனார்தான் பரீக்ஷித்தா?”

“இப்படி தினமும் நடக்குமா?”

“ஆமா. அவரைப் பாசத்தோட பரிவோட பாக்க வராளே சொந்தக்காராளும் சினேகிதாளும், அப்ப அவாளைத் துச்சமாப் பார்த்து அவர் காரி உமிழ்றது இருக்கே அது எல்லார் மனசையும் குத்திப் பிடுங்கிடும். எப்படி இவரோட இருக்கேன்னு பயத்தோட, ஆச்சரியத்தோட மரியாதையோட கனிவோட என்னைப் பாத்துட்டுப் போவா. இவ்வளவுக்கும் அவருக்கு ஒண்ணும் கல்லு மனசு இல்லே, அவாளைக் காயப்படுத்தணும்கிற வெறி எதுவும் இல்லேன்னு அவாளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும். ஆனா ஒரு தடவை வந்தவா ரெண்டாவது தடவை வந்தான்னு இதுவரை இருக்கலே. ஒரு நா காத்தாலே லால்குடியிலேந்து ஹைமவதிப் பாட்டி வந்தா. ‘தொண்ணூறு வயசுக்கு எதுக்கு இப்பிடி நீங்க டிரெயினிலேயும் பஸ்சிலேயும் அவதிப்பட்டுண்டு வந்தேள்?’ன்னு கூட நான் கேட்டுட்டேன். “பாக்கணும் போல இருந்துதுடி. நா தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே’ன்னா. கண்ணுலே கரகரன்னு ஜலம் ஊத்தறது. கட்டிலுக்குப் பக்கத்திலே போய் கிழவி நின்னா. இவர் இமைய அசைக்காம அவளையே முறைச்சுப் பாத்துண்டு இருக்கார். அவள் பேசற எதையும் கேக்கறதுக்குத் தனக்குக் காதே இல்லாத மாதிரி ஒரு முக்கல் முனகல் இல்லாமே முறைச்சிண்டு இருக்கார். அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் ஆச்சு. அப்புறம் வேறே பக்கம் திரும்பிப் படுத்துண்டு அசையவே இல்லே.”

சபரிக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ மாந்தரீகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிப்பவர் போல ஆகி விட்டாரா? அவரது உடல்நிலமையின் சீரழிவு அவர் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயங்களில் பொதிந்தி ருக்கிறதா? என்ன மாதிரியான விஷயங்கள் அவை?

அம்மா “சரி. நீ போய்க் குளிச்சிட்டு வா. நான் தோசைக்கு அரைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. ராத்திரி பூரா முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு வந்திருப்பே” என்று சமையலறையை நோக்கிச் சென்றாள். அவன் குளித்து விட்டு சுவாமி கும்பிட பூஜை அறைக்குச் சென்றான். சுவாமி மாடத்தில் குத்து விளக்கு அரை வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந்தது. அவன் மர பீரோவுக்குப் பின்னால் இருந்த சுவிட்சை அமுக்கினான். விளக்கு எரியவில்லை. ஃபியூஸ் ஆகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டே சுவாமி கும்பிட்டான். டிபன் சாப்பிட்டு முடித்ததும் மாடியில் இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான். படுத்த உடன் தூங்கியும் விட்டான்.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டது. பிளிறலைப்
போன்று தாங்க முடியாத சப்தம். அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தூங்கி விட்டது தெரிந்தது. கீழே சென்றான். அப்பாவின் அறையிலிருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. திறந்திருந்த கதவின் வழியே அவன் உள்ளே பார்த்தான். அம்மா அப்பாவை அமுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க அவர் திமிறி அவளிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லை.

“ஏ முண்டே, ஏண்டி இங்கே வந்து என் உயிரை எடுக்கறே? என் டிரெஸ்ஸெல்லாம் அவுத்துப் போட்டு… இந்த வயசிலே உனக்கு இவ்வளவு ஆசையா? அவ்வளவு ஆசை இருந்தா யாராவது சின்னப் பயலை இழுத்துப் பிடிச்சிண்டு அலைய வேண்டியதுதானேடி? கொஞ்ச நாள் என்னைப் பாத்துக்கன்னு ஒரு கிணடனைக் கூட்டிண்டு வந்து ஆத்திலே வச்சிண்டிருந்தே. அவன் எதுக்கு ஓடிப் போயிட்டான்னு தெரியலே. என்னை இப்படி டிரெஸ் இல்லாம பாக்க உனக்கு வெக்கமா
இல்லியா? மானங் கெட்ட கழுதை. நீ இப்பிடி இருக்கறதுனாலேதான் ஒரு சொந்தம் என்னை எட்டிப் பாக்கறது இல்லே. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா? கடவுளே, என்னை சீக்கிரம் கொண்டு போயிடேண்டா. இவ பாட்டுக்கு இவ இஷ்டப்படி ஊர் மேலே திரியட்டும். அடியேய். என் மேலே கை வச்சேன்னா தெரியும். அப்பிடியே முறிச்சுப் போட்டுடுவேன். ஏய், ஏய் என்ன நான் சொல்லிண்டே இருக்கேன். நீ என் கையை அமுக்கிக் கீழே தள்ளிண்டு இருக்கே… நாயே!”

அம்மா அவர் கத்துவது எதுவும் தன் காதில் விழாதது போல அவரது இடுப்பில் கையை வைத்துத் தூக்கி வேட்டியை இடுப்போடு சுற்றிக் கட்டினாள். அவர் திமிறுவதை கொஞ்சமும் லட்சியம் செய்யாது இரு கைகள் வழியாக சட்டையைப் போட்டு விட்டாள். அவர் கால்களை அசைத்துத் திமிருக்கையில் அவை அவளது உடம்பில் உதைகளாக விழுந்தன.

சபரி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான் சத்தம் கேட்டு அம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் இறுகிற்று. கடுமையைத் தெரிவிக்கும் முகத்துடன் அவள் கண்களாலேயே அவனை வெளியே போகச் சொன்னாள். சபரி தயங்கியபடி காலைப் பின் வைத்தான். கதவை சத்தமில்லாமல் சாத்தினான். கூடத்து ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனால் சற்று முன் கண்ட காட்சியையும் கேட்ட நாராசங்களையும் நம்ப முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்னால் அவனுடன் அன்பும் பரிவும் சாந்தமும் தெளிவும் நிரம்பிய உடல் மொழிகளுடன் உரையாடியவரையா இப்போது பார்த்தோம் என்று அதிர்ந்தான்.

அவனருகில் அம்மா வந்து நின்றாள். அவள் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிந்தன. கலைந்து முன் நெற்றியில் விழுந்திருந்த தலை மயிரை ஒதுக்கிக் கொண்டே அவனருகில் அமர்ந்தாள்.

அவன் அவள் கையைப் பற்றி “என்னம்மா இப்படி ஆயிட்டார்?’ என்று கேட்டான் நடுங்கும் குரலில்.

“ரெண்டு மாசமா இப்பிடித்தான் போயிண்டிருக்கு.”

“யாராவது ஆள் போட்டு இந்த க்ளீன் பண்ணற வேலையை எல்லாம் பாத்துக்கச் சொல்லலாமே? நான் தஞ்சாவூருக்குப் போய்ப் பாத்து கூட்டிண்டு வரேன் இன்னிக்கி” என்றான் சபரி.

“அந்தக் கந்திரகோலமெல்லாம் ஆயாச்சு” என்று அம்மா பெருமூச் செறிந்தாள். “டாக்டர் சௌரிதான் கூட்டிண்டு வந்தார். வந்தவனுக்கு நாப்பது வயசு இருக்கும். ஈச்சங்குடிலே விவசாயம் பாத்துண்டு இருந்தவன். இப்பதான் மழையே அத்துப் போயி தண்ணிக்கு வெளி லேர்ந்து ஓடி வர்ற காவேரியைத்தானே நம்பிண்டு கிடக்கு ஜனங்கள். நாலு மாசம் உதவிக்கு இருக்கட்டும்னு அழச்சிண்டு வந்தார் டாக்டர். வந்தவன் பலசாலி. உங்கப்பாவைப் பட்டுப் போலத் தூக்கி இறக்கி ஏத்தி அப்பிடி சிஷுரூட்சை பண்ணினான். எண்ணி அஞ்சு நாள்தான். கொஞ்ச நாழிக்கு மின்னே கிண்டன்னும் எதனாலேயோ ஓடிட்டான்னும் கத்தி னாரே! அவனை இருக்க விடாம அடிச்சுத் துரத்தினது இவர்தான். பகல்பூரா தூங்கிண்டுதான் இருப்பார். இன்னிக்கி என்னமோ அதிசயம் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. நேத்தி ராத்திரி பூரா தூங்கவே இல்லை. தினம் ராத்திரி தூங்காம இந்த மாதிரி நாராசமா கத்திண்டிருப்பார். அதனாலே பகல்லே அவர் தூங்கிண்டு இருக்கறச்சே அவனைக் காய்கறி வாங்க, மளிகைக்குப் போகன்னு அனுப்புவேன். ரொம்ப ஒத்தாசையா இருந்தான். வந்து அஞ்சாம் நாள் என்கிட்டே வந்தான். அம்மா, இந்த அஞ்சு நாளா உங்க கிட்டே நான் வந்து சொல்லலே. நீங்க படற கஷ்டம் போறாதான்னு என் வாயைத் தச்சுப் போட்டுக்கிட்டு கிடந்தேன். ஆனா இப்ப வேறே வழியில்லே. போறதுக்கு முன்னாலே மகாலட்சுமி நீங்க உங்க கிட்டே சொல்லிடுப் போகணும்னு தோணிருச்சு. அய்யாஎன்னைப் பாத்து பேசாத பேச்செல்லாம் பேசுவாரு. சரி வலியிலே பேசறாருன்னு விட்டிருவேன். அப்புறமா என் குழந்தைகளை என் பொண்டாட்டியைன்னு எல்லோரையும் சபிப்பாரு. என்னைத் தொடாதேடா பாவின்னா நீ கேக்க மாட்டேங்கிறே, உன் குடும்பம் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு நாசமாய்ப் போகன்னு கத்துவாரு. உம்பசங்க ஒருத்தனும் உருப்படமாட்டாங்கன்னு சாபம் கொடுப்பாரு. நீயும் உன் பொண்டாட்டியும் இந்த பிராமணனை இப்படிப் போட்டு நீ கொல்லு றதுக்கு தெருவிலேதான் போய் நிக்கப்போறீங்கடான்னு என் மேலே எச்சியைத் துப்புவாரு. ரெண்டு நாளைக்கி மின்னாலே என் மூத்த மகன் வேலைக்குப் போனான். ரோடு ஓரமா நடந்து போனவனை ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அடிச்சுக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போயி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து வீட்டிலே உக்காந்திருக்கான். பத்து நாள் நகரப்பிடாதுன்னு டாக்டர் சொல்லிட் டாராம். செலவுக்கு செலவு. மனசுக்கு நிம்மதி இல்லே. பத்துப் பதினஞ்சு நாள் கூலி போயிருச்சு. அய்யா திட்டிதான் இப்பிடி ஆச்சுன்னு நான் சொல்லலே. ஆனா அந்த நினைப்பு தானா வந்து குத்திகிட்டே இருக்குன்னு சொல்லி அழுதான். நான் என்னத்தைப் பண்ணறது? அஞ்சு நாள் சம்பளத்தோடு கூட ஒரு ஐநூறு ரூபாய் வச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் இவர் வரவிட மாட்டார்னு நானே செய்ய ஆரமிச்சிட்டேன்” என்றாள் அம்மா.

சபரி “நான் இங்கே இருக்கற வரைக்கும் இதையெல்லாம் நானே செய்றேம்மா” என்றான்.

அவள் மறுத்துத் தலையை ஆட்டினாள். “உங்கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஹேமுவை நீ கல்யாணம் பண்ணிக்க விடாம தடுத்தி நிறுத்தினது தான் செஞ்ச பெரிய பாவம்னு அவருக்குள்ளே ஓடிண்டு இருக்கு. ஒரு தடவை என்கிட்டே சொல்லி அழுதுட்டார். நடக்கறது தானே நடக்கும். நீங்க நிறுத்தாட்டா வேறே யாராவது வந்து தடுத்து நிறுத்தியிருப்பா. ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்க முடியாதுன்னு தெரியாமலா சொன்னா?ன்னேன். அவருக்கு சமாதான மாகலை. அப்படீன்னா சபரிக்குன்னு பொறந்தவளை அவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னார். என்ன பதில் சொல்றது?” என்று சிரித்தாள். உயிரற்ற அந்தச் சிரிப்பை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அன்று மாலை சபரி ஐயாறப்பர் கோயிலுக்குப் போனான். சுவாமி சன்னதியில் அதிகக் கூட்டமில்லை. தரிசனத்தை முடித்து விட்டு அம்மன் சன்னதிக்குச் சென்றான். தர்ம சம்வர்த்தினி அம்மன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்றாள். அன்று அஷ்டமி என்று கூட்டம். நல்ல நாள் அல்ல என்று மக்கள் ஒதுக்கி விட்ட அஷ்டமியன்று அம்மன் திருமணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காணவே கூட்டம். எல்லா நாளும் நல்ல நாளே என்று சிரித்துக் கொண்டு நின்ற அம்மனிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒவ்வொரு தினமும் நல்லதினமாக ஆகக் கடாட்சம் புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு கடைத் தெருவுக்குப் போய்ப் பழங்கள் காய்கறிகள் வாங்கினான். வரும் வழியில் ஒரு எலெக்ட்ரிக் ஷாப்பில் பல்பு வாங்கிக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அப்பாவின் அறைக்கதவை மெல்லத் திறந்து பார்த்த போது அவர் கண்களை மூடியபடி படுத்திருந்தார். வலது கால் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. காமிரா உள்ளில் அம்மா ஏதோ சுலோகம் சொல்லும் குரல் கேட்டது. முகம் அலம்பி விட்டு தலை வாரிக் கொள்ள அங்கே வந்திருப்பாள் என்று சபரி நினைத்தான். அவன் கையி லிருந்த பைகளை சமையல் அறைக்குள் சென்று வைத்து விட்டு பூஜை அறைக்குச் சென்றான். அம்மா இன்னும் வந்து விளக்கேற்றாததால் வெளி வெளிச்சத்தையும் மீறி அறையினுள் இருட்டு குடியிருந்தது.

இருட்டில் லேசாகத் தடுமாறிக் கொண்டு போய்க் கை எட்டும் தூரத்தில் உயரே தொங்கிக் கொண்டிருந்த ஹோல்டரில் பல்பைச் சொருகினான். இரண்டு மூன்று தடவை முயற்சித்த பின் அது சரியாக உட்கார்ந்து கொண்டது. அவன் மர பீரோவை நெருங்கினான். அதன் பின்புறம் கையை நுழைத்து சுவிட்சைத் தேடினான். அப்போது அறையுள் ஸ்லோகக் குரலுடன் அம்மா நுழைந்தாள்.அவன் அவளை அந்த இருட்டில் கலவரப்படுத்த வேண்டாம் என்று பீரோவின் பின்னே நகர்ந்து நின்றான்.

அம்மா சுலோகத்தைத் தொடர்ந்து கொண்டே சுவாமி மேடையில் இருந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தாள். விளக்கேற்றினாள். பழக்கப்பட்ட இருட்டு என்று சரளமாக அவள் காரியம் செய்கிறாள் என்று சபரி நினைத்தான். அப்போது அவள் குரல் நின்று விட்டதால் சுலோகம் முடிந்து விட்டது போல என்று சபரி நினைத்தான். திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “தாயே புவனேச்வரி. இப்பிடி வாய் விட்டுக் கேக்க வச்சிட்டியேன்னு நான் அழலை. நானும் தினமும் உன்கிட்டே மன்னாடிண்டுதான் இருக்கேன். இந்த மனுஷன் படர பாடு அவராலே தாங்கிக் கொள்ளவே முடியாதபடி இருக்கே. நீதான் கருணை காட்டணும், மனசு வக்யணும். சீக்கிரம் அவரைக் கொண்டு போயிடும்மா. அதை நான் தாங்கிண்டுடுவேன். ஏன்னா எனக்கு அப்புறம் அவரைப் பாத்துக்க யாரும் வரமாட்டா. வந்தாலும் அவரைப் பாத்துக்க அவர் விடமாட்டார். அப்புறம் அவருக்கு உயிரோடேயே நரகம்தான். அதை என்னாலே நினைச்சக் கூடப் பாக்க முடியலே. சர்வேஸ்வரி நீதான் எல்லோருக்கும் நல்லது பண்ணறவ. இவரை சீக்கிரம் நாளேக்கே கூட கூட்டிண்டு போயிடு.”

அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. சற்றுக் கழித்து எழுந்து அவள் வெளியே சென்றாள் . ஆடாமல் அசையாமல் எரியும் குத்துவிளக்கின் திரியைப் பார்த்தபடி சபரி அரையிருட்டில் நின்றான்.