சிறுகதை

பசியின் பிள்ளைகள் – அத்தியாயம் 4, 5 தமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் 4

பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு வங்கி அதிகாரியின் மகன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவளுக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டு ஒரு மிருகத்தனமான தீவிரத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் காலை, அவனை அவள் வீடு வரை உடன் நடந்துவர அனுமதித்தாள்; ஏதும் பேசாமல் வியர்வையில் நனைந்த கரத்தினால் அவள் கையைப் பற்றிக் கொண்டான். வீட்டின் முன்வாயிலில் பசி கொண்ட நாய் முனகுவது போல் முனகிக் கொண்டே அவள் கைவிரல்களில் முத்தமிட்டான். தன் நெஞ்சில் அவள் கரத்தை அழுத்தியவன், மெதுவே அவள் கையை தனது கால்சட்டை பொத்தான்களின் மேல் படும்படி கீழிறக்கினான். கைவிரல்களை இறுக்கி மூடிக்கொண்டாலும் ஜூலியா நகர்ந்து செல்லாமல் நின்றிருந்தாள்.

இப்போது நோயாளிகளின் அறையிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. எனக்குத் தெரியாது, பையன் கத்தினான். முடியாது. நீயென்ன செவிடா? எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை.

வில்லியம் சமையலறைக்குள் வந்தான். இன்றிரவு உணவுக்கு இறைச்சி இருக்குமா?

கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தைப் சுட்டிக் காட்டி ஆமென்பதுபோல் தலையசைத்தாள்.

அவன் படுக்கையறைக்குள் விரைந்து சென்று அவனது பன்றித் தோல் பையைக் கொண்டு வந்தான். பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய இறைச்சித் துண்டை எடுத்து கத்தியால் பாதியாக வெட்டித் தனியாக ஒரு தட்டில் வைத்தான். பைக்குள்ளிருந்து நூல்கண்டையெடுத்து ஒரு நீள துண்டொன்று வெட்டி அதன் ஒரு முனையை தட்டிலிருந்த இறைச்சித் துண்டைச் சுற்றிக் கட்டினான். மீத நூல் காற்றடியின் வால் போல் தொங்குமாறு கட்டியிருந்தான்.

என்ன செய்கிறாய் வில்லியம்?

ஒரு பரிசோதனை. செய்யவிட பையனை சம்மதிக்கவைக்க முடிந்தால்.

அவனை துன்புறுத்திவிடாதே.

அவன் ஜூலியாவை ஒரு குழப்பமான, சிறிதே கவலை தொனிக்கும் உணர்வுடன் உற்றுப் பார்த்தான். இல்லை அன்பே. அப்படியெதுவும் ஆகாது.

சொல்லிவிட்டு தட்டுடன் இறைச்சியை எடுத்துக் கொண்டு பையனின் அறைக்கு விரைந்தான்.

பனிப்படிகங்கள் சில்லுகளாக உறைந்த சன்னல் கண்ணாடிகளின் மேல் வீசி அறைந்தன. மீத இறைச்சித் துண்டை ஜூலியா உருளைக்கிழங்குடன் எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள். அதிலிருந்து கொழுப்பு உருகி வெண்ணிற தட்டில் பரவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும் மூடியிருந்த நோயாளிகளின் அறைக்கதவை ஒட்டி தனது நாற்காலியைப் போட்டுக்கொண்டாள்.

அமைதி; படுக்கை விரிப்புகளின் சரசரப்பு; பிறகு பையனின் கிசுகிசுத்த குரல். வேண்டாம், டாக்டர். தயவுசெய்து நிறுத்துங்கள்.

oOo

அன்றிரவு தரைப்பலகைகளின் முனகலோசை கேட்டு விழித்துக் கொண்டாள். எழுந்து அமர்ந்தாள்; மூடியிருந்த அறைக்கதவின் கீழ் கோடாகத் தெரிந்த வெளிச்சக் கீற்றைத் தவிர படுக்கையறை இருட்டாகவிருந்தது. அருகில் வில்லியமின் தலையணை தொடப்படாமல் கிடந்தது. ஒரு குளிர் நடுக்கம் ஜூலியாவின் மேல் பரவியது.  காலணிகளை அணிந்துகொண்டு கதவைத் தள்ளித் திறந்தாள்.

மெழுகுவர்த்திச்சுடரின் ஒளியில் வில்லியம் திரும்பிப் பார்த்தான். கைகளிரண்டும் மேசையின்மேல் கண்ணுக்குத் தெரியாத யாரையோ அணைத்திருப்பதுபோல் கிடந்தன. கண்கள் பாதி மூடிக்கிடக்க, மெல்லிய புன்னகையொன்று இதழோரம் நெளிய, ஏதோவோர் இன்பநினைவில் மிதப்பவன் போலிருந்தான். அவனது குறிப்பேடு மேசையின்மேல், பேனா பக்கங்களின்மேல் கிடக்க, திறந்து கிடந்தது. அவன் திரும்பிய வேகத்தில் ஜூலியா மூச்சை உள்ளிழுத்து அடக்கிக் கொண்டாள்.

இங்கென்ன செய்கிறாய்?

ஜூலியா பலவீனமாக புன்னகைத்தாள். தூங்க முடியவில்லை. ஏதோ சத்தம் கேட்டது போலிருந்தது – தரைப்  பலகைகள் என்று நினைக்கிறேன்.

படுக்கப் போ. பேனாவை எடுத்து எழுதத் துவங்கியபடி சொன்னான். நீ தூங்குவதற்கு ஏதாவது தருகிறேன்.

கதவை இன்னும் அகலமாகத் திறந்தபடி கேட்டாள். என்னவாயிற்று?

ஒன்றுமில்லை. தயவுசெய்து என்னை எழுத விடு.

அவனை  நோக்கி நகர்ந்தாள். அவன் உதடுகள் இறுகின. நான் அதைப் படிக்க வேண்டும்.

கண்களின் கீழ் கருவளையங்கள். கீழுதட்டின் அருகே மசிக்கறை; பெருங்கடலைத் தனியாக படகோட்டிக் கடந்தவன் போல் சோர்வாக ஆனால் ஒரு உற்சாகத்துடன் அவன் இருப்பது தெரிந்தது. தான் எங்காவது அவன் நோக்கில் தென்படுகிறோமா என ஜூலியா தேடினாள். இந்த ஒரு தடவை. தயவுசெய்து படிக்க விடு என்று எண்ணிக் கொண்டாள்.

சரி, நீ படிக்கலாம். ஆனால் பிறகு என்னை நிம்மதியாக எழுதவிட வேண்டும்.

ஜூலியா தலையசைத்தாள்.

அவன் குறிப்பேட்டை அவளை நோக்கித் திருப்பினான். ஓசையில்லா கனவென ஜூலியா அதை நோக்கி நகர்ந்தாள்.

அக்டோபர் 13, 1822

முன்கூறிய நான்கு பரிசோதனைகளும் ஒன்றையே புலப்படுத்துகின்றன: பசி என்கிற உணர்வை உணவு ஈஸோபாகுஸுக்குள் செல்லாமலே கட்டுப்படுத்த முடியும். நொதித்தல் இல்லாமலும்.

சத்துகள் தேவை போல் தோன்றினாலும்…

பசியின் அடிப்படைக் கோட்பாடு: பசி என்கிற உணர்வு இரைப்பை நாளங்கள் விரிவடைவதாலேயே ஏற்படுகிறது; இரைப்பை சுரப்புகள் மீண்டும் சுரந்தவுடன் பசி தீர்ந்து அல்லது இல்லாமல் போகிறது.

(ஏற்கனவே உள்ள மகெண்டியின் கோட்பாட்டை இது மறுதலிப்பதால் மேலும் பல சோதனைகள் அவசியமாகிறது).

தூங்க முடியவில்லை.

தூங்க முடியவில்லை…

மனிதன் என்பவன் யார், அவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள?

நீங்கள் அவனை தேவதைகளின்கீழ் பிறப்பித்தீர்கள்; பெருமையும் மகிமையும் கொண்டு அவன் கிரீடத்தை அலங்கரித்தீர்கள்.

oOo

குதிரைவண்டி வீதியிலிருந்து பக்கச் சாலைக்கு வளைந்து திரும்பியது. மருத்துவக் கழகத்தின் அத்தனை சன்னல்களும் ஒளி கொண்டிருந்தன. வெளியே சிந்தி கட்டிடத்தின் சுவர்களிலும் தூண்களிலும் பிரதிபலித்த ஒளியில் உள்ளே சிரிப்பொலிகளுடன் உருவங்கள் அங்குமிங்கும் நடமாடுவது தெரிந்தது. ஏற்கனவே நின்றிருந்த வண்டிகளினருகே ஜூலியாவின் குதிரைவண்டி சென்று நிற்கும்போதே உள்ளே தன் மகனின் உருவம் தென்படுகிறதா என்று அவள் தேடினாள்.

“இன்று ஓர் அற்புதமான மாலையாக இருக்கப் போகிறது.” தன் கோட்டினால் கண்ணாடியின் பனிப்படர்வை துடைத்துக்கொண்டே டாக்டர் பெயர்ஸ் கூறிக்கொண்டார். “டாக்டர் ஹேவுட்-டும் டாக்டர் போஸ்டாக்கும் வந்திருப்பார்கள். நியூ ஹாவெனில் சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருக்கும் டாக்டர் கெநாட் கூட இந்த இரவின் விருந்துக்காக பிரத்தியேகமாக வந்திருக்கிறார்.”

அந்தப் பெயர்கள் ஞாபகக் கிளர்ச்சியை ஜூலியாவிற்கு ஏற்படுத்தின. டாக்டர் ஹேவுட் தெரியும். போஸ்டாக், கெநாட்? கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ பெயர்கள், எத்தனையோ டாக்டர்கள். அவள் அவர்களைப்  பற்றி வில்லியமிடம் கேட்டுக் கொண்டதில்லை. எங்கோ ஒரு கப்பலின் மணி எதிரொலிக்கிறது; மீன் வாடை மிதக்கும் குளிர்காற்று நதியிலிருந்து அவர்களைக் கடந்து வீசிச் செல்லும் அந்தத் தருணம் அவளுக்கு பாரிஸில் இதே போன்றதொரு மாலையில், பல அடுக்குகள் தொங்கும் சரவிளக்குகளும், இளஞ்சிவப்புநிற பளிங்குக்கற்கள் பாவிய அந்த பெரிய வீட்டில் அவர்கள் கூடியிருந்ததும் நினைவில் எழுந்தது. வில்லியமின் புத்தகம் ஐரோப்பாவில் வெளியானதற்காக ஒரு விருந்து. டாக்டர் கெநாட் தன் மிக ஒல்லியான உருவம் மேசையின் சாய அவளிடம் கேட்டார் – மேடம், உங்கள் குடிலில் அந்த நாட்கள் அற்புதமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருந்ததா?

பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் முக்கியமான விஷயங்களை பேச ஆரம்பிக்குமுன், ஜூலியாவை மகிழ்ச்சிப்படுத்த கேட்கப்பட்ட கேள்வியது. ஜூலியா  மரியாதையாகப் புன்னகைத்தாள்.

நிச்சயமாக. நான் கவலைப்பட்டிருக்கிறேன் – வில்லியமின் நடவடிக்கைகள் சீரற்று இருந்தன.

பேச்சு மெதுவே தேய்ந்து நின்றது. வில்லியம் அவளை வெறித்துப் பார்ப்பதாக உணர்ந்தாள். கன்னங்கள் கிழடுதட்டி சதைகழன்ற வில்லியம். எப்போதும்போல் ஒரு வைன் கோப்பை உதட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே நிற்கும் வில்லியம். அவர்கள் நீண்ட நாட்களாகவே ஒரு சமனமான இருத்தலுக்கு பழகிவிட்டிருந்தார்கள். வில்லியம் அவ்வப்போது ஜூலியாவையும் அவளது மகனையும் வந்து பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நிழலுலக விருந்தாளிபோல். அதுவொரு விசித்திரமான ஏற்பாடு; எப்படியோ, ஒருவர் தேவையை இன்னொருவர் முழுதாக புரிந்து கொண்டது போல்தானிருந்தது என ஜூலியா எண்ணிக்கொண்டாள்.

அவள் சொன்னாள், வில்லியமிற்கு வேறெதுவும் எண்ணத்திலில்லை, அந்த ரோலுவைத் தவிர. அவர் வேறொரு மனிதனாகவே மாறிவிட்டார்.

திருவாளர் கெனாட் ஆமோதிப்பதுபோல் முணுமுணுத்துக்கொண்டார். வில்லியமின் பார்வை ஜூலியாவின் உணவுத்தட்டின் மேலும் பின் சாளரக்கதவுகளின் மேலும் விழுந்தது. அவன் தன் வைன் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்து எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினான். பளிங்குத்தரையில் அவனது ஷூவின் ஒலி நடந்து தேய்வதை ஜூலியா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மேசைக்கடியில் அவளது பாதத்தை யாரோ தட்டுவதை உணர்ந்தாள். திருவாளர் கெனாட் அவளது முகத்தையே ஒரு பொறுமையான புன்னகையோடு நோக்கிக் கொண்டிருந்தார்.

அன்றிரவு அந்த விடுதியின் இருட்டு அறையின் படுக்கையில் அவள் விழித்தவாறே கிடந்தாள். நா மதுவின் சுவையாலும் கண்கள் உறக்கமின்மையாலும் கனக்க, மூடிய சன்னல் கண்ணாடிகளின்மேல் பூச்சிகள் ரீங்காரமிட்டபடி வந்து வந்து மோதித் தெறிப்பதைப் பார்த்தபடியே கிடந்தாள். வில்லியம் புரண்டு அவள் பக்கம் திரும்பியபடி அவள் கரத்தைப் பற்றியபடி சொன்னான், நடந்த எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு ஜூலியா. எல்லாவற்றுக்காகவும்.

அவள் அரைத்தூக்கத்தில் ஏதோ முனகினாள்.

தயவுசெய்து அன்பே. அவன் அவள் மணிக்கட்டைப்பற்றி மீண்டும் உலுக்கினான். ஜூலியா?

அவன் குரலின் சலனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவள் நினைவுகூர்ந்தாள். அவன்மேல் அவளுக்கு வருத்தங்களேதும் இல்லை என அடிக்கடி தானே கூறிக்கொள்வாள். ஆனால் ஏன் அவள் தன் கண்களைத் திறக்கவில்லை? ஏன் அவன் அவளது விரல்நுனிகளில் முத்தமிட அனுமதிக்கவில்லை? ஏன் அவனது தலையை தன் மார்பில் புதைக்க விடவில்லை? அவளுக்குள்ளே எரிந்த கடும் உணர்ச்சித் தீயை அவளால் நினைவுகூர முடிந்தது . அருகே வில்லியம் மூச்சிரைப்பதையும் ஆனால் தன் சுவாசம் தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதை உணர்ந்தாள்.

“உங்களுக்கு பிரச்னையில்லையென்றால் என்னை அறிமுகப்படுத்தி வைப்பீர்கள் என்று நம்புகிறேன்”, டாக்டர் பெயர்ஸ் கோச் வண்டியின் கதவின்மேல் கைகளைவைத்தவாறே கேட்டார்.

“யாருக்கு?”

“டாக்டர் கெனாட். அவரை அறிமுகப்படுத்திக்கொண்டால் பெருமைப்படுவேன்.”

ஐயோ பாவமே என்று எண்ணிக்கொண்டாள் ஜூலியா. “அதெற்கென்ன, கட்டாயம்,” என்றபடியே மழையீரம் பாவிக் கிடந்த தரையில் கால்களை பதித்து இறங்கினாள். உயர்ந்த வளைவான வாசலுக்கு வழிவிட்டுத் திறந்த கதவுகள்; மாபெரும் ஓக் மர கடிகாரம்; அவளது மேலங்கியை பணிவாக அகற்றி வாங்கும், அலங்காரமாக உடையணிந்த கறுப்பின சேவகன். கொடுமை, என எண்ணிக்கொண்டாள் ஜூலியா, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒரு பதைபதைப்பு; வயிற்றில் அவிழ மறுக்கும் முடிச்சு.

“கழகம் இன்றிரவு அந்த நாடோடி ரோலுவை மோண்ட்ரீயலிலிருந்து இந்த விருந்தில் கலந்து கொள்ள வரவழைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? இன்னும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம். அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், தெரியும்.”

“முதலில் வரமுடியாதென்று சொன்னாராம்.” பொருமினார் டாக்டர் பெயர்ஸ்.  “கழகம் வழங்குவதாகச் சொன்ன  வருகைத்தொகையைப் போல இரண்டு மடங்கு கேட்டாராம்.”

குமிழ்போல் வெடித்த சிரிப்பு ஜூலியாவை லேசாக்கிற்று. நல்லதுதானே, என்று எண்ணிக்கொண்டாள். அவ்வளவு தூரம் அறுத்தும், உட்புறம் நோக்கியும் நடந்த சோதனைகளுக்கு உடன்பட்டதற்கு இன்னும் அதிகமாகவே கேட்டிருக்க வேண்டும். அப்போதே. அவன் எதைக்  கேட்டாலும் வில்லியம் கொடுத்திருப்பான்.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தனது முழங்கையை டாக்டர் பெயர்ஸ் பற்றிக்கொள்ளவிட்டு ஜூலியா ஒளிவெள்ளத்தில் மூழ்கிய அந்த அறைக்குள் நுழைந்தாள்.

oOo

அத்தியாயம் 5

நவம்பரில் அவர்களது குடிலை ஒரு கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. பாத்திரங்களை தடதடவென்று நகர்த்தியும் அலமாரியை அறைந்து சார்த்தியும் ஜூலியா ஏதோவொரு துணை இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கண்டாள். மதிய உணவுகளுக்குப் பிறகு கம்பிளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கல்போல் உறைந்து கிடந்த பனியில் நதிக்கரையோரம் வரை நடப்பதும், தொலைவில் கரிய உருவங்கள் படைவீட்டை நோக்கி நகர்வதை பார்ப்பதும், நகரும் உருவம் வில்லியமா, ஏதோவொரு சிப்பாயா அல்லது அந்தப் பையனா என்று கணிப்பதுமாக நாட்கள் நகர்ந்தன.

அந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று பையன் வீட்டை விட்டு காணாமல் போனான். ஜூலியாவும் வில்லியமும் ராணுவ மேஜரின் வீட்டில் இரவு விருந்து அருந்திவிட்டு திரும்பினார்கள். பையனின் அறை காலியாகக் கிடந்தது; அவனது தொப்பியைக் காணவில்லை; தரையில் ஒரு தேநீர்க் கோப்பை உடைபட்டுக் கிடந்தது. அவனது கலப்பின நண்பர்களுடன் குடிக்கப் போயிருப்பான் என்று எண்ணிக் கொண்டு ஜூலியா அவனது படுக்கை விரிப்பை சரிசெய்து விட்டு  உடைந்த கோப்பைத் துண்டுகளை பனியில் கூட்டித் தள்ளினாள்.

மறுநாள் காலை விழிக்கும் போது வில்லியம் அவனது மேசையில் கைகளை மடிமீது வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டாள். அந்தக் குடிலின் அமைதி முழுதும் அவனது திறந்து கிடந்த குறிப்பேட்டிலிருந்து எழுவது போல் தோன்றியது.

அவன் இன்னும் வரவில்லை?

வில்லியம் எதுவும் பேசாமல் உறுமினான்.

அவனது அறைக்குள் பார்த்துக் கொண்டே கேட்டாள், இந்த ஊரிலிருப்பான் என்று நினைக்கிறாயா?

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவன் சொன்னான், இருக்கலாம், இல்லை பனிப்படகு ஒன்றை பிடித்து பிக்போர்ட் போயிருக்கலாம்.

அவன் பிக்போர்டில் இருக்கிறான், ஒரு ஆசுவாசத்துடன் ஜூலியா நினைத்துக் கொண்டாள். தனது கைகளை வில்லியமின் தோள்களில் வைத்தவாறு சொன்னாள், விரைவில் வந்துவிடுவான். அல்லது, உனது சோதனைகளை நடத்தி முடிக்க வேறு வழியேதாவது உனக்கு கிடைக்கும்.

முட்டாள் மலட்டுப் பெண்ணே. வேறு வழியேதும் கிடையாது.

அவள் தனது கைகளை அவன் தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டாள்.

எப்படி என் சோதனைகளை நான் முடிப்பேன்? இன்னொரு நாடோடியை பிடித்து வயிற்றில் சுடவா?

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

இல்லை, என் மீதே சோதித்துப் பார்க்கவா?

வேண்டாம் அன்பே, என்னால்…

வில்லியம் குறிப்பேட்டை அறைந்து மூடிவிட்டு, தனது கோட்டை எடுத்துக்கொண்டு உறைபனிக்குள் வெளியேறினான்.

நாட்கள் இருளுக்குள் மூழ்கி நகர்ந்தன. கிடைக்கும் சொற்ப ஒளியும் ஜூலியாவின் காலைச் சோம்பல் கலைவதற்குள்  கடந்து போனது. துவைக்காத துணிகள்  அறையின் மூலையில் குவிந்து கிடக்க, மேப்பிள் மரத்துண்டுகள்  சடசடத்து எரிவதை வேடிக்கை பார்த்தவாறு கணப்பினருகே சுருண்டபடி நாட்கள் கடந்தன. வெப்பம் இல்லாத நெருப்பு. வில்லியமின் மைக்கூடு உறைந்திருக்கக் காண்பதோடு ஒவ்வொரு நாளும் விடிந்தது.

அந்த வெள்ளிக்கிழமை சூசனுக்கு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, குடிலின் பின்புறக்கதவு அறைந்து சார்த்தும் சத்தம் கேட்டது. அவள் கைகள் ஒரு கணம் ஸ்தம்பித்தன. அவள் எழுதினாள், அவன் திரும்ப வந்துவிட்டான்.  மெதுவே அவனது அறைக்கதவைத் திறந்து பார்த்தாள்: சுவரில் சாய்ந்தபடி பையன் தரையில் அமர்ந்திருந்தான். தலை முன்கவிழ்ந்திருக்க, அவன் கால்களுக்கிடையே கலங்கின மஞ்சள் நிறத்திரவம் கோடாக வழிந்து கிடந்தது.

தலையை உயர்த்தி அவளை பார்த்தான். சிரித்தபடி எழுந்து அவளை நோக்கி நடக்க முயற்சித்து, தடுமாறி ஒரு காலில் முழந்தாளிட்டு விழுந்தான். வலியில் முனகியபடி சட்டையை நெஞ்சும்வரைக்கும் மேலிழுத்துவிட்டுக்கொண்டு தரையில் புரண்டான்.

காயம் வாய்பிளந்து தெரிந்தது. சிவந்த அதன் ஓரங்கள் இன்னும் கூடாமல், உள்ளிருந்து அந்தத் திரவம் அவன் நெஞ்சின் மேலாக மரப்பலகை மேல் வழிந்தது. பையன் ஒரு கையை காயத்தின்மேல் வைத்து வெளிவந்த திரவம் உட்செல்ல செய்வதைப்போல அழுத்திப்பிடித்துக் கொண்டான். இன்னொரு கையால் தரையில் வழிந்துகிடந்த திரவத்தில் கிடந்த உருளைக்கிழங்கு துண்டொன்றை எடுத்து வலியில் விகாரமாக சிரித்தபடி வாய்க்குள் போட்டுக் கொண்டான். படுக்கையினருகே இருந்த மணியை எடுத்து அவளை பார்த்தபடியே அடித்தான்.

அசையாதே. தயவுசெய்து அப்படியே இரு. நான் உதவி செய்கிறேன், என்றாள்.

அவன் கஷ்டப்பட்டு தனது தோள்களை படுக்கையின்மேல் இழுத்துக் கொள்ள, அவள் அவனது கால்களை தூக்கி மேலே படுக்க வைத்தாள். தலைமுடி சேறும் சகதியுமாக, சிறு மணற்துகள்களோடு சிக்குப் பிடித்துக் கிடந்தது. மதுவும், பைப் புகையும், வாந்தியும் கலந்த நாற்றம் வீசியது.

உனக்கொரு குவளை தேநீர் கொண்டு வருகிறேன்.

வேண்டாம், இரு ஜூலியா. அவள் பெயரை மூன்று தனித்தனியான அசைகளாக உச்சரித்தான்.

நீ நகரக் கூடாது. நான் என் கணவனை வரச்சொல்கிறேன்.

அவர் என்னை கொல்லப் பார்க்கிறார்.

அவன் இதை சொல்லிவிட்டு சிரிப்பான் என்று நினைத்தாள். ஆனால், அவன் தீர்க்கமாக சொல்வது போலிருந்தது. உளறாதே, அவர் உன்னை காப்பாற்றியிருக்கிறார், என்றாள்.

அவன் சிரமப்பட்டு ஒருபுறம் ஒருக்களித்தபடி சொன்னான், இல்லை ஜூலியா அவர் என்னை மோசமாக நடத்துகிறார். பட்டினி போடுகிறார். எதையெதையோ என் வயிற்றுக்குள் திணிக்கிறார்.

அவன் கண்களின் ஓரம் சிவந்திருந்தது. அழப்போகிறான் என்று நினைத்தாள்; மறுகணம் கைகொட்டி சிரித்தான். தயவு செய் ஜூலியா. நீதான் என் தாய்.  உண்மையில் நீதான் என்னைக்  காப்பாற்றினாய்.

நீ குடித்திருக்கிறாய். அவமானம்.

சிரித்தான்.

வில்லியம் உன்னை கஷ்டப்படுத்துகிறார் என்றால் ஏன் திரும்ப வந்தாய்?

அவன் சிரிப்பு நின்றது. வெற்றுப்பார்வையுடன் அவளை வெறித்துப்பார்த்தபடி அவளது தொடையில் தனது குளிர்ந்த கையை வைத்தான்.

நான் போய் தேநீர் கொண்டு வருகிறேன்.

தயவு செய்து ஜூலியா, அவன் கிசுகிசுத்தான்.

அவள் கால்களை நகர்த்திக் கொண்டாள். குளிரூசிகள் செருகியதுபோல் தொடை கூசியது.

அவன் படுக்கையில் அப்படியே சரிந்தான். எனக்கு எதுவும் கொண்டு வராதே. நான் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன்.

அவள் தேநீர் கொண்டுவந்தபோது அவன் தூங்கிவிட்டிருந்தான். வில்லியம் மருத்துவமனையிலிருந்து பனியில் நனைந்தபடி வந்து, காலணிகளைக் கழற்றிவிட்டு கால்களை கணப்பினருகே நீட்டியபடி அமர்ந்திருக்கையில் ஜூலியா சென்று சொன்னாள், பையன் வந்துவிட்டான்.

அவளை உற்றுப் பார்த்தவன் பையனின் அறைக்கதவை பார்த்தபடி கேட்டான், இப்போது உள்ளேயா இருக்கிறான்?

தூங்குகிறான். வரும்போது குடித்திருந்தான்.

வில்லியம் கதவை மிக மெதுவாகத் திறந்து உள்ளே பார்த்துவிட்டு மீண்டும் மூடியவாறு சன்னமான குரலில் கேட்டான், என்ன சொன்னான்? எங்கிருந்தானாம்?

தெரியவில்லை. வந்தவுடன் தூங்கிவிட்டான்.

வில்லியம் அவளை நோக்கி நகர்ந்தவன், சட்டென்று ஒரு அரைவட்டமாகத் திரும்பினான். முஷ்டி இறுகியிருந்தது . கடவுளே, நன்றி. மிக்க நன்றி கடவுளே. ஜூலியாவை இறுக அணைத்தான். மோவாய், மூக்கு, கன்னங்கள் என மாறி மாறி முத்தமிட்டான். அன்பே, இறைவனுக்கு நன்றி சொல். சத்தமில்லாமல் சிரித்தான். ஆயிரம் முறை நன்றி என் தேவனுக்கு.

வில்லியமின் முழு உடலும் நடுங்கியது. ஜூலியா அவனை அணைக்கும்போது அவளையறியாமல் ஒரு விம்மல் எழுந்தது. அவளால் அவனை மகிழ்ச்சியில் நடுங்கவைக்க முடிந்ததில்லை; இறைவனுக்கு நன்றி கூற வைக்க இயன்றதில்லை; ஆனந்தத்தில் கூத்தாட செய்ய முடிந்ததில்லை. அவன் கழுத்து திடீரென்று வியர்த்திருந்தது.

அவள் மெதுவாக, அவன் என்னைத் தொட்டான், என்றாள்.

வில்லியமின் கண்கள் மூடியிருந்தன. என்ன சொல்கிறாய்? எப்போது?

இங்கே. அவள் அவனது கையைப் பற்றி அவள் தொடை மேல் வைத்தாள். அவன் இங்கே தனது கையை வைத்தான். இப்படி.

வில்லியம் கண்களைத் திறந்தான். அவன் உன் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருப்பான்.

ஜூலியா தலையை அசைத்தாள். இல்லை, நான் நகர்ந்து விட்டேன். நீ சீக்கிரம் வந்து விடுவாய் என்று சொன்னேன். அதற்கு அவள் இன்னும் பத்து நிமிடத்தில் போய்விடுவேன் என்றான். நான் அவனுக்கு தேநீர் –

இரு இரு. ஏன் அவன் போய்விடுவேன் என்று சொன்னான்?

ஜூலியா அவனை கூர்ந்து பார்த்தாள். நான் என் காலை விலக்கிக் கொண்டதும்…

வில்லியமின் முகம் சோர்ந்தது. ஒன்றும் பேசாமல் மேசையைச் சுற்றி இரண்டு முறை நடந்தான்.  தனக்குள் ஏதோ பேசிக்கொண்டான். நெருப்பின் முன் வந்து அமர்ந்து கொண்டான். மெதுவாக சிரித்துக்கொண்டான். ஜூலியா, அன்பே ஜூலியா. அந்தப் பையன் ஒரு அற்புதம். மேலே பேசமுடியாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஜூலியா அவன் அழுகிறான் என்று புரிந்துகொண்டாள். அவனை இங்கே வைத்திருக்க வேண்டும் ஜூலியா. இன்னும் ஒருசில மாதங்களாவது அவன் இங்கே இருந்தாக வேண்டும். புரிகிறதா? இருந்தே ஆக வேண்டும்.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அவன் ஒருகணம் அமைதியாக இருந்தான். பின் ஒரு குற்றப் பிரார்த்தனை போல அவள் பெயரை மெதுவாக உச்சரித்தான்.

அவளுக்குள் ஒரு குளிர் பரவியது. உதடுகளும் விரல்களும் பனிக்கட்டியில் செதுக்கியது போல் குளிர்ந்தன.  மேசைக்குமேல் சாய்ந்த தலையுடன் நின்றிருக்கும் அந்த நீலக்குருவி, அந்த மரச்செதுக்கு – அவற்றின் பெயர்கள் அவள் நினைவுக்கு வர மறுத்தன. கீழே மண்டியிட்டிருக்கும் அவள் கணவனுக்கு மேல் குனிந்து நின்றிருக்கும் அவள் உருவம் கண்ணாடியில் தெரிந்தது. வெளியே, இருளும், காற்றும் சூழ்ந்த கானகம்; கொடுங்குளிரில் நனைந்த இரவு. அவள் தனக்குள்ளே வினவிக் கொண்டாள், பறவைகள் ஏன் வலசை போகின்றன? ஏனென்றால் அவற்றுக்கு வெப்பம் வேண்டும். ஏன் மரங்கள் உயரே வளர்கின்றன? ஏனென்றால் அவை சூரியனை விரும்புகின்றன.

வில்லியம் வேண்டினான். தயவு செய்து ஜூலியா.

அவனது ஈர கேசத்தை நீவிக் கொடுத்தாள். பையனின் இருப்பு அந்த அறைக்குள்ளிருந்து ஒரு தொலைதூர நெருப்பு போல அந்தக் குடில்முழுதும் பரவுவதுபோல் இருந்தது. அவளது குளிர்ச்சிக்குள்ளும் ஒரு சுடரின் தகிப்பை ஜூலியா உணர்ந்தாள்.

இன்றிரவு அவனிடம் நான் பேசுகிறேன் என்றாள்.

oOo

கழகத்தின் கூட்ட அரங்கு அவள் உள்ளே நுழையும்போது நெரிசலாகவும் மெல்லிய பேச்சொலிகளால் நிரம்பியதாகவும் இருந்தது. டாக்டர் ஹேவூட், அவர் மனைவி, டாக்டர் செகி, டாக்டர் மோஞ்சஸ் அவள் கண்ணில் பட்டனர். பின்னர் அவள் மகன், ஜேக்கப் அவள் கண்களில் பட்டான். ஆரஞ்சு நிற தலைமுடி மழையீரத்தில் படிந்திருக்க, வயலின் வாத்தியங்களருகே நின்றிருந்தான். ஜூலியாவைப் பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகையுடன் கையைத் தூக்கி ஆட்டினான். இப்போது அவன் அந்த அறையைக் கடந்து, புன்னகை மாறாமல் அவளருகே வந்து நின்று அவள் முகத்தில் ஏதேனும் கவலை தென்படுகிறதா என்று உற்றுப் பார்ப்பான். கையிலிருக்கும் ஷாம்பெய்ன் கோப்பையை அவளிடம் நீட்டுவான். அவள் மறுக்கும்போது, ஓரிரு மிடறு குடிப்பான் – அது அருமையான சுவை என்பதைக் காட்டுவது போல, ஊக்கம் தேவைப்படும் ஒரு குழந்தைக்கு செய்து காட்டுவது போல. இந்த எண்ணமே ஜூலியாவிற்கு நிறைவைத் தந்தது.

அவள் மெதுவாக அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். இப்போது ரோலு, அந்தப் பையன் எப்படி இருப்பான் என்று அவளால் யூகிக்க முடியவில்லை.  மிகப் பலகாலங்களுக்கு அவனை வெளுத்த, சிக்கு விழுந்த தலைமுடியுடன், காய்த்துப்போன விரல்களுடன், எப்போதும் புன்னகைக்கும் ஒரு நாடோடி பையனைத்தான் மனதில் நிலைநிறுத்தி வைத்திருந்தாள். இப்போது அவன் சிறுவனல்ல; எப்படி அவள் இளம்பெண்ணல்லவோ அதுபோல். அவனைப் பார்க்கும்போது என்ன சொல்வேன், அவள் சிந்தித்தாள். அவன் இன்னும் படகோட்டும் பாடல்கள் பாடுகிறானா என்று கேட்க வேண்டும். யாரை மணந்துகொண்டான் என்று கேட்க வேண்டும். அவன் மனைவியை நேசிக்கிறானா என்று கேட்கவேண்டும்; எப்போதும் அவளை நேசித்திருக்கிறானா என்று கேட்கவேண்டும். அவன் பிள்ளைகள் அவன் வருகைக்காக அவன் வீட்டில் காத்திருக்கிறார்களா என்று கேட்கவேண்டும். அல்லது அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே அவர்களது மனம்போனபடி தத்தம் வழியைத்தேடி சென்றுவிட்டார்களா என்று கேட்கவேண்டும். அவளுக்கு நேர்ந்ததெல்லாம், அவள் வாழ்வின் கசப்புகள், இன்பங்கள், துன்பங்கள், நம்பிக்கைகள் – எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்பதை அவனிடம் சொல்ல வேண்டும். ஆனால் இதையெல்லாம் எப்படி விளக்குவாள்? அவனது காயம் ஆறிவிட்டதா என்றும் கேட்கவேண்டும்.

நன்றி சொல்ல வேண்டும், என்று இறுதியாக எண்ணினாள். அந்த குளிர்மாதங்களில் அவனது வெம்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அரங்கின் கூட்டம் விலகி வழிவிட்டது. சன்னலருகே செந்நிறமுடியுடன் குறுகிய சிறிய உருவத்துடன் அந்த மனிதனை அவள் கண்டாள். ஒரு நடுக்கம் உடலெங்கும் படர அவரை நோக்கி நகர்ந்தாள். அவள் அவரிடம் என்ன சொல்வாள் என்று நிச்சயமாக அவளுக்கு இப்போது தெரிந்திருந்தது, ஏற்கனவே பதிந்துவிட்ட நினைவைப் போல: வணக்கம் சொல்வாள், குனிந்து சுருக்கம்படர்ந்த அந்த மோவாயில் ஒரு முத்தம் பதிப்பாள். பின் அவரை ஜேக்கப்பிற்கு அறிமுகப்படுத்துவாள் , ஏதோ அவர்களிருவரும் அந்நியர்கள் என.

“திரு ரோலு அவர்களே,” அவள் சொல்வாள், “இதோ என் மகன்.”

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.

நான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ஊத்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.

ஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.

மழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.

இன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்ணு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.

இப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.
__________________________________________________________________________________________________

மேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா?

எங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.

ஆ………………………………………………………………………………………………………………………………………………….

நான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.

அப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,

“டேய் யாருடா நீ”

………………………………….

“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”

…………………………………………………………………………………………………..

கேக்கறதுக்கு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.

அவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.

என்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.

டேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.

நான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.

அப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்?

நிழல் – மு. வெங்கடேஷ் சிறுகதை

மு வெங்கடேஷ்

 

அன்று வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சூரியன் மறைந்த பின்னும் சூடு தணியாமல் இருந்தது. உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது. எத்தனை முறை குளித்தாலும் அதே நிலைதான். வெளியே புழுக்கம் அதிகமாக இருந்தது. அதைவிட வீட்டிற்குள்.

கட்டியிருந்த லுங்கியுடன் மேலே ஒரு அரைக்கை சட்டையை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினேன். வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வரைந்து வைத்த ஓவியம் போல் காட்சியளித்தன. நெற்றியில் இருந்த வியர்வைத் துளி வடிந்து வாய் அருகே வர, தட்டி விட்டேன். நடக்க நடக்கத் தொடைகள் இரண்டும் உரசி உள்ளே அணிந்திருந்த ஜட்டியும் நனைந்து ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த ஒன்பது மணி இருட்டிலும் விளக்கை ஏறிய விட்டு வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் சுத்தியலை வைத்து ஏதோ கம்பியை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அடிப்பது என் தலையில் அடிப்பது போல் இருந்தது. கால்கள் வேகம் எடுத்தன.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடிவிட்டுச் சென்ற பூங்கா தற்போதுதான் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இரண்டு விளக்குகள் மட்டும் எரியவிடப் பட்டிருந்தன. பின் வாசல் அருகே இருந்த விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அதன் கீழே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய் ஊளையிட, அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. பூங்காவின் தென்கிழக்கில் காலையிலிருந்து ஓயாது ஆடிக் கொண்டிருந்த இரண்டு ஊஞ்சல்கள் தற்போது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் அருகில் கிடந்த சிமெண்ட் இருக்கையில் போய் அமர்ந்தேன். வலதுபுற பக்கவாட்டில் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு என் உருவத்தை நிழலாகக் கீழே தரையில் காண்பித்துக் கொண்டிருந்தது. அங்கு என்னையும் என் நிழலையும் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் கடந்திருந்தும் புழுக்கம் தணியவில்லை. சட்டையின் மேல் பட்டன் இரண்டையும் கழட்டிவிட்டு, அரித்துக் கொண்டிருந்த ஜட்டியை கையை உள்ளே விட்டு சரி செய்தேன். இடது புறமாகத் தரையில் தெரிந்து கொண்டிருந்த நிழல் ஏதோ விசித்திரமாகத் தெரிய கீழே உற்றுப் பார்த்தேன். தலையில் இரண்டு கொம்புகள். அது ஒரு மிருகம் போன்று காட்சியளித்தது. கோபத்தில் மேலும் கண்களை விரித்துப் பார்க்க, தலையின் இரு புறமும் இருந்த முடி எழும்பி நின்று கொண்டிருந்தன. கைகளைக் கொண்டு தடவிப் பார்த்தேன். குளித்து எண்ணெய் தேய்க்காத முடி மொரமொரப்பாக இருந்தது. முடியைப் பல முறை சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்தேன். அருகில் தண்ணீர் குழாய் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையில் எச்சிலைத் துப்பி தலையை ஈரப்படுத்தி, முடியைப் பணிய வைக்க முயன்றேன். இரண்டு கொம்புகளும் கீழே பணிவதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்வது என்னை மேலும் மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்தது. ஒரு கட்டத்தில் மொத்த முடியையும் பிய்த்து எரிந்து விடலாம் என்று முயற்சிக்கையில் முடிகள் அனைத்தும் மேல் எழும்பி மிருகம் போய் அரக்கன் ஆனது நிழல்.

சற்று நேரம் அமைதியாக இருந்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின் சட்டைப் பையில் இருந்த சிகரட் பாக்கெட்டை எடுத்தேன். காலை வாங்கிய பாக்கெட்டில் மீதம் இருந்தது இரண்டு சிகரெட்டுகள்தான். அது என்னை மேலும் எரிச்சலடையச் செய்தது. அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தேன். “ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் உள்ளே இழுக்க, அது என் தொண்டை வழியாக வயிறு வரை உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. இரண்டு நொடி உள்ளே சுழன்ற புகை வாய் வழியாக வெளியே வர, தலையை சற்று மேலே உயர்த்தி  வானத்தை நோக்கி ஊதினேன்.

வெளியே வந்த புகை வானத்தில் பெண் ஒருத்தி உள்ளாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற சேலை போன்ற துணியை மட்டும் போர்த்திக் கொண்டு நளினமாக பாலே நடனம் ஆடுவது போன்று காட்சியளித்தது. அதைப் பார்த்த நான் பரவசம் அடைந்தேன். உடல் சிலிர்க்கத் தொடங்கியது.  அடுத்த இழுப்பிற்காக சிகரெட்டை வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்து,வயிற்றுக்குள் புகையை அனுப்பி ஒரு சுழட்டு சுழற்றி வெளியே விட்டேன். மேலும் ஒரு பெண் அதே போன்று நடனம்  ஆடத் துவங்கினாள். அது என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் சிகரட் முடியும்பொழுது ஆறு பெண்கள் நடனமாடிக் காற்றில் கரைந்திருந்தார்கள்.

யாரும் இல்லாத அந்த இருட்டில் பெண்கள் அவ்வாறு நடனமாடியது எனக்குப் பிடித்திருந்தது. அரித்துக் கொண்டிருந்த ஜட்டியைக் கையை உள்ளே விட்டு மீண்டும் சரி செய்து கொண்டேன். இரண்டாவது சிகரெட்டையும் எடுத்து பற்றவைத்து, இழுத்து, ஊதி அதே பெண்களை மீண்டும் நடனமாட விட்டு ரசித்தேன். அது என்னுள் இருந்த மது போதையை விட அதிக போதையைத்  தருவதாக உணர்ந்தேன். நாக்கை வெளியே நீட்டி உதட்டை நனைக்க, உதட்டில் படிந்திருந்த சிகரெட்டின் கசப்பு ருசித்தது.

சிகரட் முடிந்திருந்த நிலையில் சற்று நேரம் கண் அசந்திருந்தது. ஏதோ ஒரு சிந்தனை மட்டும் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை அருகில் கேட்கும் சலசலப்பு நிதானத்திற்கு இழுத்து வந்தது. சுதாரித்துக் கொண்ட நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆண், ஒரு பெண். கணவன் மனைவியாக இருக்க வேண்டும். அவள் காலில் மெட்டி இருக்கிறதா என்பதை உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவன் சாயலில் என்னைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. பெண் மாநிறம், நல்ல அழகு. அவள் தலை முடிக்குக் கீழ் அணிந்திருந்த சட்டை நனைத்திருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒருவரை ஒருவர் கடிந்து கொண்டிருந்தார்கள். ஆணின் குரலே மேலோங்கி இருந்தது. அவ்வப்போது கண்களை துடைத்தவாறே அவள் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டு கேட்பது தவறுதான், ஆனால் எனக்கு அப்போது வேறு வழி இல்லை. அமர்வதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.

இத்தன வருஷம் ஆகியும் நீங்க என்னப் புரிஞ்சிக்கலேல்ல?

என்ன புரிஞ்சிக்க?

………

அதான் நீ நடக்குற விதமே தெரியுதே.

கோவத்துல என்னனாலும் பேசாதீங்க.

அப்டி என்னத்த பேசிட்டேன்?

நா என்ன வேணும்னேவா வர மாட்டேங்குறேன்?

பெறகு?

இன்னைக்கு முடியாது.

அதான் ஏன்னு கேக்குறேன்?

ஐயோ இன்னைக்கு முடியாது…. புரிஞ்சிக்கோங்களேன்.

சாயந்திரம் கோவிலுக்கு போயிட்டு வந்த?

இப்போ மணி பத்து ஆவுது.

எனக்கு என்னைக்குத் தேவைப்படுதோ அன்னைக்குத்தான் வேணும்… உனக்கு தோண்ற நேரத்துல எல்லாம் முடியாது.

நா என்ன வேணும்னா செய்றேன்? என் வலி எனக்குத்தான தெரியும்,  என்று சொல்ல அழத் தொடங்கினாள். அவன் எதிர்த் திசையில் திரும்பி நின்று சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். அவனைப் புகை சூழ்ந்திருந்தது.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாகக் கையை உள்ளே விட்டு தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது. சுவரில் கை வைத்துத் தடவியவாறே சுட்ச்சை அழுத்தினேன். விளக்கு எரிந்தது.

தரையில் கிடந்த பாயில் காலை மடக்கி கேள்விக்குறி போன்று வளைந்து வயிற்றில் கை வைத்து மனைவி படுத்திருந்தாள். அடுக்களை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பூசை அறையில் மாலை ஏற்றப்பட்ட குத்து விளக்கு குளிர வைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.

 

கடவு பெற்றோர்- பானுமதி. ந சிறுகதை

பானுமதி. ந

லதா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லா மின்னியங்கிகளையும், தானியங்கிகளையும் நிறுத்தியாகிவிட்டது. வருணும் படுத்தாமல் சாப்பிட்டு விட்டான். டாக்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிடும். இன்னும் சமயம் இருக்கிறது. உறை மூடி ஸ்டேண்டில் வைத்துள்ள வீணையை எடுத்து ஒருமுறை வாசித்தால் என்ன? ஆம்,இது இங்கேதான் இருக்கப் போகிறது. அவளில்லாமல், மெட்டுக்களில் சுருதி குறைந்து, வாசிப்பார் இல்லாமல் முறுக்கு தளர்ந்த தந்திகளுடன் கவனிப்பாரற்று மூலையில் இருக்கப் போகிறது. வீணையைத் தடவிக்கொண்டே அவள் உட்கார்ந்திருந்தாள். அதன் நரம்புகளைச் சுண்டி அந்த நாதத்தில் கரைந்து போகப் பார்த்தாள். அது என்ன பாட்டு-‘சரச சாம தான பேத தண்ட சதுரா’ எத்தனைப் பொருத்தம் இன்றைக்கு. அவள் தண்டத்தை கையில் எடுத்துவிட்டாள். இனி பின்வாங்குவதில் பொருளில்லை.

எத்தனை கனவுகளோடு அவள் திருமணம் செய்து கொண்டாள். யு.எஸ் மாப்பிள்ளை என்று ஒரே பெருமை; அவள் தோழிகள் வெளியே சிரித்து உள்ளே வெந்த நாட்கள். ‘ராம நீ சமானமெவரு’ என்று உண்மையாகவே அவன் அவளைப் பெண் பார்க்கையில் வாசித்தது எத்தனை அபத்தம்! இரு வருடங்களுக்கு முன்னர்தானே, எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் மேல் தளத்தில் அவள், அவன், நாலரை வயது வருண் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தபோது,ஒரு சிறுமி ஓடி வந்து ‘டாடி’ என அவனைக் கட்டிக்கொண்டாளே அப்போதுதானே தெரிந்தது.’ஹேய், டியர்’ என்று ஒரு அமெரிக்கப் பெண் அவனை முத்தமிட்ட போது, ’இவள்தானா அவள்’ என அந்தப் பெண் இவளைப் பார்த்தபோது, இவள் கையை இழுத்துப் பற்றி குலுக்கியபோது இதெல்லாம் கனவு என  நினைத்தாள். தலை குப்புற கீழே, மிகக் கீழே, முடிவற்ற குழியில் அடிக்கடி விழுந்து கொண்டிருப்பதாக அவள் காணும் கனவின் பொருளிதுதானா?

’உனக்கு டீஸென்சின்னா என்னன்னே தெரியாதா?அவ உன்னோட பேசப் பேசப் பாக்கறா, பக்கியாட்டம் முழிக்கறே, அவதான் முதல்; என் கல்யாணம் தெரிஞ்சப்போ ’நா உன்னப் பிரிய மாட்டேன்.நீ உன் வொய்ஃப்வோட குடும்பம் நடத்து; ஆனா, என்ன சிங்கிள் பேரன்ட்டா மாத்தாதே, மரியாவுக்கு அப்பா வேணும்னு’ பெருந்தன்மையா சொன்னா. எத்தன நல்ல குணம், நீ மாஞ்சு போறியே’

“அப்ப, அவளோடயே இருக்கறதுதானே; என்ன எதுக்கு கல்யாணம் பண்ணின்ட’’

‘அம்மா, அப்பால்லாம் விடலியே’

சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லயே இவனுக்கு என சினந்தாள் அவள். இரு வருடங்கள் நீண்ட போராட்டம். எத்தனை குத்தல்கள், சீண்டல்கள், அவமரியாதைகள்! ஏன் சகித்துக் கொண்டாள் என்று அவளுக்கே கழிவிரக்கமாக இருக்கிறது.

சித்தன்னவாசலில் அவள் ஒரு இளவரசியைப் போல் வளர்ந்தாள்; சாமுவேல் அப்படித்தான் அவளை நினைத்திருந்தான். தாமரை சித்திரக்குளம். இலேசாக அலை அடிக்கும் குளத்தில் அவள் மொட்டுக்களும், பூக்களும் நிறைந்த இடத்தில் நின்றிருக்க, அவன் வரைந்த ஓவியங்கள். ’கால் உளயறதுரா,நீதான் தூக்கிண்டுபோகணும்’ என்று சிணுங்குவாள். ’இப்ப முடிஞ்சுடும்’என்று தன் வேலையே கண்ணாய் இருப்பான். அவள்தான் நூறுமுறை அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள், அவன் ’லதா’ எனக் கூப்பிட்டதேயில்லை. ஏன் அப்படி என்பது இன்றுவரை மர்மம்தான். எங்கிருந்தோ பச்சிலைகளும்,வேர்களும் கொண்டுவருவான். நிலக்கரியும், செங்கல்லும் இருக்கவே இருக்கிறது. வழவழக்கும் பாறைத்திப்பிகளைச் சித்திரத்தில் பதித்துவிடுவான். தாவர வேர்களை நுணுக்கி தூரிகைகள் செய்து கொள்வான். எத்தனை சித்திரங்கள் அவளை மையமாக வைத்து, அவளது எட்டாவது வயதிலிருந்து கல்யாணம் அவளுக்கு ஆகும்வரை, பாலையாக, திரிசடையாக, மணிமேகலையாக, மாதவியாக, விளக்குப் பாவையாக, பைரவியாக, மீராவாக இன்னும் எவ்வளவோ! தியான மண்டபத்தில் நடுநாயகமாக அவளைக் கையில் வீணையுடன் அமர்த்தி, அதுவும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு அவன் வரைந்த ஓவியம் இன்றும் அவர்களின் கிராமத்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

ஒருமுறை விளையாடிக்கொண்டே சாமுவை அலைக்கழித்தவள் அந்த சமணப் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டாள். அவன் குகை வாசலில் காவல் நின்றான்; தூக்கம் கலைந்து எழுந்த அவளுக்கு உள்ளே ஏதோ பொங்கியது; ’போலாமா?’ என அவன் கேட்டபோது பொங்கிய வெள்ளம் வண்ணமற்ற குமிழிகளாக வெடித்து அழிந்தது. சிறு குன்றுகளின் மீது வழிந்திறங்கும் சாய்கதிர்கள். குகை மண்டபத்தில் எரியும் கண்ணாடி விளக்கு. கரைகளுக்குள்ளேயே அலையடித்துக் கொண்டு விம்மும் குளம். ’அபீட்,அபீட்’ என்று கத்திக்கொண்டே சாட்டையை சுழற்றி வீசினாலும் பூமியில் மௌனமாக உறங்கும் பம்பரம். மலையிடுக்குகளில் உள் நுழைந்து ‘அக்கோவ்’ குருவியின் குரலோடு தனித்த கார்வையில் காற்று. தலையில் விழும் பூக்களின் மகரந்தத்தூள்கள், காலடியில் சரசரக்கும் சருகுகள். அவன் உபாசகன், அனைவருக்குமானவன், அவளுக்கு மட்டுமென அவனில்லை; யாருக்குமாக இல்லாமல் எல்லாருக்குமாக தன்னைக் கண்டு கொண்டவன். அவன் அப்படித்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். இந்தத் தெளிவிற்குப் பிறகு அவள் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள், யாராக இருந்தாலும் சரி, வீட்டில் பார்க்கும் வரனாக இருக்கட்டும் என்றாள்.

அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான மறுநாள். அதிசயமாக சாமு அவள் வீட்டிற்கு வந்தான். ’லதாங்கி’ என்று தலைப்பிட்டு அவளை மணப்பெண் கோலத்தில் வரைந்திருந்தான். மறு தினம் அவன் திருக்குற்றாலத்தின் சித்திர சபைக்குப் போய்விட்டதாக அவள் கேள்விப்பட்டாள். திருமண நாளன்று அவன் வரைந்திருந்த மாதிரியே அவள் சிங்காரித்துக் கொண்டாள். நாகஸ்வரத்தில் ‘கல்யாணி’ வாசிக்கும் போதெல்லாம் ‘லதாங்கியாக’ அது ஒலிப்பதை வலிந்து விலக்கினாள்.

‘அவன நெனச்சிண்டு எங்கிட்ட தாலி வாங்கிண்டயாக்கும்?’ என்று அவள் கணவன் சென்ற வாரம் கேட்டான்.

“ஆமாம், நீ ஏஞ்சல நெனைச்சிண்டு என்னப் ப்ராண்ட்ர மாரி”

‘ப்ராஸ் மாரி பேசற நீ’

“அது வேற இருக்காக்கும்”

‘நா எப்படி வேணாலும் இருப்பேன். நீ ஒழுங்கா இரு’

“இத்தன நா இருந்தாச்சு, இனி ஒழுங்கில்லாம இருக்கணும்னு பாக்கறேன்”

‘யூ,பிட்ச், உனக்கு கொழுப்பு அடங்கல. எந்த இளிச்சவாயன மடக்கிட்ட இப்ப; இல்ல அந்த மாகாதலன் இங்கயே வந்துட்டானா?’

“நா பிட்ச், அப்படின்னா நீ ஸ்கொண்ட்ரல். என்ன கல்யாணம் பண்ணிக்கறச்சேயே உனக்கு புள்ள பொறந்தாச்சு. அஞ்சாறு வருஷம் நாடகமாடி எப்படி மறச்சிருக்க நீ”

‘ஏஞ்சலுக்கு நீ உறைபோட காணமாட்ட., எல்லாத்லயும் அவ எனக்கு ஏத்த மாறி நடந்துப்ப; நீயும் இருக்கயே’

‘’இப்படி கம்பேர் பண்ண கூசல உனக்கு’’

‘சும்மா சொல்லு, ரதி மன்மத ஆட்டமெல்லாம் அவனோடயே முடிஞ்சுடுத்தா.’

அவள் அவனைத் தள்ளிவிட்டு திமிறினாள்; அவன் இழுத்து வைத்து அறைந்தான்.

மறு நாள் காலை உணவின்போது அவன் மீண்டும் ஆரம்பித்தான். ’இந்த மில்லட் தோசைய விட்டா வேற ஒன்னும் தெரியாதா, இல்ல அவனுக்கு இதுதான் புடிக்குமா?’

“டாடி, யார் அது?’’

‘உன்னத்தாண்டா சொல்றா அப்பா, பேசாம சாப்டு’

‘வருண், உங்க அம்மா உன்ன விட்டுட்டு வெளில போறாளா?’

“எப்பயாச்சும் போவாங்க, எனக்கு சாக்கோ நட்ஸ் ஐஸ்க்ரீம் வாங்கிண்டு வருவாங்க”

‘சீக்ரமா வருவாளா, லேட் ஆகுமாடா?’

இப்படி ஒரு வக்ர எண்ணம் எப்படி வருகிறது? ‘வருண்,உன்ன விட்டுட்டு நான் போனதெல்லாம், உன் டாடி வேலைன்னு சொல்லிண்டு போறாரே அந்த ‘ஏஞ்சல்’ ஆஃபீஸுக்குத்தான்’

“ஆமாண்டா, அங்கதான் வருவோ, அவளோட ஒரு அங்கிள் வருவான்.”

அவள் உணவு மேஜையை விட்டு எழுந்துவிட்டாள். வருண் புரியாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மட்டும் மொத்தமாக தோசைகளைத் தின்றான்.

அவன் ஏஞ்சலையும் தொட்டு அவளையும் தொடுவது சகிக்க முடியாததாக இருந்தது. உண்மை தெரிந்த இரு வருடங்களாக வீடு நரகமாகிவிட்டது. அதற்கு முன்னால், அவன் இவளுடைய நண்பனைப் பற்றி தரமற்றுப் பேசியதில்லை, கிண்டலாகப் பேசுவான், அவ்வளவுதான். இவளையும் கேலி செய்வான். ஒருக்கால் அவள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ? ஆனால்,உறவின் புழுக்கம் மூச்சுத் திணறச் செய்கிறதே!

‘உன்னால அவள விடமுடியாதுன்னா, நாம டைவர்ஸ் செஞ்சுக்கலாம்’

“அதெல்லாம் நடக்காது. எங்க அம்மா, அப்பா ஒத்துக்கமாட்டா; ஒத்துண்டாலும் இன்னொரு கல்யாணம்னு நிப்பா; அதவிட நீ அவங்கிட்ட திரும்பறதுக்கு நா விடவே மாட்டேன்.”

மனித மனம் இத்தனை வஞ்சம் கொண்டதா?என்ன எதிர்பார்க்கிறான், தாசி போல, அடிமை போல, அவனைத் தெய்வமாக கொண்டாடச் சொல்றானா?

எண்ணங்களிலிருந்து விடுபட்ட அவள் வீணையை உறையில் இட்டு மூடினாள். வருண் அவனுடைய பைகளைப் பிரித்து எல்லாவற்றையும் பரப்பியிருந்தான். ’என்னடா இது, நேரமாச்சுடா, திருப்பியும் இதெல்லாம் உள்ள அடைச்சு எவ்ளோ வேல? படுத்தறடா’

“நீ மட்டும் வீணையை எடுத்தேல்ல”

‘அது ஊருக்கு கிடையாதுடா’

“நீ என்ன சதீஷ் வீட்ல விட்டுடு. அப்பா வந்தவுடனே அவரோட நா வரேனே”

‘தாத்தாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு வரல்லயா நீ?’

‘‘அப்போ, அப்பா வரமாட்டாரா?’’

‘இந்த அப்பா புராணத்த நிறுத்து; பைக்குள்ள சாமான வை. அந்தக் கார் பெரிசுடா, அதைத் திணிக்காதே’

“எனக்கு அதுதான் வேணும்”

முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். பலவந்தமாக காரைப் பிடுங்கி எறிந்தாள். வாசலில் டாக்ஸி வந்து நின்ற ஓசை கேட்டது. அவனையும் இழுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். இந்தப் பிசாசை நம்ப முடியாது, சைல்ட் ஹெல்ப் போலீசை கூப்பிட்டுவிடும்.

உழவர் சந்தையும், எம்பயர் ஸ்டேட் பில்டிங்கும், க்ரேட் லேக்கும், ஹட்சன் நதியும், அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகின்றன.வருண் அவளுடன் இருப்பானா?

செக்கிங் முறைகள் முடித்து, அதிக பணம் கொடுத்து வருணுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து எமிரேட்ஸ் விமானத்தில் அமரும் வரை அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ’சரிதானா’ என ஒரு குரல் உள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் நடந்து கொண்டது சரியென்றால் இதுவும் சரிதான்.

அவள் படுத்திருந்த அறைக்கு அவன் வந்ததை அவள் முதலில் அறியவில்லை. ‘என்ன விட்டுடு, உன் கொஞ்சலையெல்லாம் அவகிட்ட வச்சுக்க’

“உனக்கு என்ன புடிக்கலைன்னா அவனப் போலன்னு நெனைச்சுக்கோ”

‘அவனுக்கு நீ உற போட காண மாட்ட; அசிங்கமா பேசாம போய்டு’

“அப்ப அவங்கிட்டயும் அனுபவமிருக்கு”

‘மானங்கெட்டுப் பேசாதே. எனக்கும் அவனுக்கும் அந்த மாரி எண்ணமேயில்ல’

‘உன் மாரு, தொடை, கழுத்து, முகம்னு சரமாரியா வரஞ்சிருக்கான். நீயும் மேலாட இல்லாம நின்னுருக்கே’

“பாவி, இப்படியெல்லாம் பேசாத, அப்படிக்கும் உன்ன மாரி தரங்கெட்டவனில்ல அவன். பொறந்த மேனிக்கி நின்னாக்கூட  சபலப்படமாட்டான்’’

“அப்படிச் சொல்லு பத்தினியே; அப்ப நின்னுருக்கே”

அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் பேயடி அடித்தான். வருண் இந்தக் கலவரத்தில் முழித்துக்கொண்டு அலறினான்.

பற்றத் துடித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் செல்கையில் வருணுக்கு அவள் என்னவாகத் தெரிவாள் என ஓடிய எண்ணத்தை ஓடுதளத்தை விட்டு மேலெழுந்த விமானம் சத்தமாக எதிரொலித்தது.

 

உள்புண்

கமல தேவி

பின்புறம் துணி காய வைக்கும் இடத்திலிருந்து அப்பா, “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க, வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க,”என்று தன் அடைத்த குரலில் வெட்டிவெட்டி பாடிக்கொண்டிருக்கிறார். கார்த்திகா முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்தாள்.

முற்றத்தில் பாத்திரங்கள் கழுவிய ஈரம் அவள் கால்களுக்குக் கீழே பிசுபிசுத்தது. “அம்மா… ஒழுங்கா கழுவிவிட மாட்டியா… யாராச்சும் விழப் போறாங்க பாரு,”என்று நைட்டியை தூக்கிப் பிடித்தபடி கத்தினாள்.

“படிக்கறப்பதான் ஒன்பது மணிக்கு எழுந்திருச்ச. இப்போ வேலைக்கு போயும் அதே பொழுது. நான் எந்த வேலயன்னு செய்யறது. இன்னிக்காச்சும் ஒத்தாசையா இருக்கலாம்ல,” என்னும் பொழுதே கடையிலிருந்து, “அக்கா….பொட்டுக்கடலை வேணும்,” என்ற குரல் கேட்டு அம்மா முற்றத்திலிருந்து கடையின் பின்புறம் ஏறினாள்.

“கார்த்திய பாக்க வரவங்க நல்ல பெரிய இடமாமே? இதுக்குன்னுதான் இவ்வளவு நாளாச்சுன்னு நெனச்சி பட்டுன்னு முடிங்க. இவ சித்தப்பன் மவ பிள்ள பெத்து பெரிய மனுசியாயிட்டா,” என்ற குரல் கேட்டது.

‘வீடும் கடையும் ஒரே இடத்தில வச்சுக்கிட்டு எந்நேரமும் நாயா ஓடிக்கிட்டே… எந்த வேலயும் முழுசா செய்யாம… ச்சை’என்று நினைத்தபடி முற்றத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிவிட்டு முகம்கழுவினாள். நடையின் படியில் அமர்ந்து முற்றத்து வெயிலில் கால்களை நீட்டினாள்.

முற்றத்தில் சுவரைத் தாண்டி கிளை நீட்டியிருந்த சீமைக்கொன்றையின் சிவந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது மரம் கொள்ளாமல் காட்டுத்தீ என பூத்துக் கிடக்கையில் அப்பா“சிவசிவ” என்று நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பார். அவரை அப்படிப் பார்க்க அவளுக்கு ஆசையாய் இருக்கும்.

இத்தனை வயது வரை படிப்பு, வேலை என்று வேறெதையும் பார்க்கவில்லை, பேசவில்லை, நினைக்கவில்லை. மெதுவாத்தான் இந்தக்கடல்ல குதிக்கனும். தள்ளிவிட்டுட்டு போறவங்களுக்கு என்ன? என்று இப்போது போல எப்போதும்நினைத்துக் கொள்வாள்.

எதிர்ப்புறம் மாடிப்படிகளில் இறங்கிய கதிர், “என்ன கார்த்தி… இப்படி ஒக்காந்திருக்க. வர்ற மாப்ள ஓடிப்போயிறப் போறாங்க,”என்றான்.

“ரொம்ப நல்லது.”

அம்மா, “அப்படியே கன்னத்தில ஒன்னு போட்டேனா பாரு. வயசு என்ன? கழுதைக்கு ஆகறாப்ல ஆவுது. ஒரு பயமிருக்கா. ஒன் வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேருமே பிறந்தாச்சு. போய் குளிடி,” என்றாள்.

“காப்பிம்மா. கால் ரொம்ப வலிக்குது…நேத்து அலைச்சல்,” என்றாள். இரண்டு நாட்களாக மனம் கண்டதை நினைத்துக் கொண்டிருக்கிறது. என்னத்துக்கு இந்த பீடிகை என்று அவளுக்குத் தெரியவில்லை.

அப்பா உள்ளே வந்து சமையலறை முன்னிருந்த நடையில் பாயில் அமர்ந்தார். அம்மா நான்கு இட்லி வைத்து சாம்பார் கிண்ணத்தை அருகில் வைத்தாள். கார்த்திகா காபி குடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்தவரிடம் அம்மா, “பதினோரு மணிக்கு ஒருக்கா சாப்பிடலாம். எந்திரிங்க,” என்றதும் சுள்ளென்ற முகத்துடன் எழுந்து கடைக்குள் சென்றார்.

“அங்க இங்கன்னு வீடுமுழுக்க ஒக்காந்து எந்திரிக்காம போய் குளிடி,” என்று சமையலறையிலிருந்து அம்மாவின் நாயனக்குரல் கேட்டது. அடியுமல்லாது, மெல்லியதுமல்லாது காற்றில் தட்டி நிறுத்தும் குரல். காபியின் மெல்லிய கசப்பு மட்டும் நாவிலிருந்தது. நடையிலிருந்து இறங்கி பின்பக்கம் குளியலறைக்குச் செல்லும்வரை அந்தக் கசப்பு இருந்து கொண்டேயிருந்தது.

தண்ணீரை அள்ளி வாயில் ஊற்றிக் கொப்பளித்துத் துப்பினாள். அவளுக்கு நித்யாவின் நினைவு வந்தது. அந்தக் கிறுக்கியும் இன்னைக்கு லீவுங்கறதால யாருக்கு முன்னால நிக்கப் போறாளோ? நானாவது பரவாயில்லை. அது இன்னும் செங்குத்துமரம் என்று தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றினாள்.

அவள் வயிற்றில் யாரோ ஊசியால் குத்துவது போன்ற வலி. அது நானேதானா? பனிரெண்டாம் வகுப்பில் குத்தத் தொடங்கி இன்னும் ஓயவில்லை. ஏன் படிப்பை இவ்வளவு சீரியஸா எடுத்துக் கொண்டேன். நான் மட்டுமா? இன்னும் சில கிறுக்கிகளும். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் புத்தகத்திற்குள்ளயே புதைந்தது இந்த வேலைக்கா என்று நினைக்கையில் அப்பா பாடற மாதிரி, “பித்தா…பிறைசூடான்னு போயிடுது” என்று நினைத்தபடி வெளியில் வந்தாள். கொடிக்கயிற்றை உரசிக் கொண்டிருந்த வாழைமரத்தைப் பார்த்தபடி தலை துவட்டினாள்.

கண்ணகி பெரியம்மாவின், சந்திராஅக்காவின், வாழ்க்கையை கண்டுதான் அம்மா சின்னப் பிள்ளையாயிருக்கையிலிருந்து ஆறுமாதம் முன்புவரை, “எப்படியாவது படிக்க வச்சிடறோம். வேலக்கு போயிடனும் கார்த்தி,”என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

தனியார் வேலை, டி.என்.பி.எஸ்.ஸி கிளாஸ் என்று இரண்டுமே சரிவராமல் மூன்று ஆண்டுகள். பின் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வகுப்புகள், தேர்வுகள், இடையில் ஒத்துவராத திருமணப் பேச்சுகள் என்று அவள் மனம் முழித்து பின் விழித்தது.

‘வேலைக்குச் சென்று ஒரு மாதிரி இப்பதான் இயல்பான நிலைக்கு மனதும், புத்தியும் வந்திருக்கு. அடுத்து இந்தக் கல்யாணம் முன்ன பின்ன நடந்திருமா? அதையும், வேலையையும் சமாளிக்கனும். இருபத்தஞ்சு வயசுக்கு மேல நிம்மதியில்லையோ?’ என்று கண்ட கண்ட நினைப்புகள் அவள் மனதில் பேசிக்கொண்டிருந்தன.

காற்றில் அத்தனை வாழை இலைகளும் சீப்பு மாதிரி கிழிந்திருந்தன. புடைக்கன்றின் குட்டி இலைகள் இளம்பச்சையில்சிறிய இலைகளாக நிமிர்ந்திருந்தன. அதில் ஒன்றை தொட்டுத் தடவிப் புன்னகைத்தாள்.

நடைக்குள் நுழைகையில் கதிர் அலைபேசியைக் கொண்டுவந்து கொடுத்தான். நைட்டியில் கையை துடைத்தபடி வாங்கி “யாருங்க..? ஆமா..வீ.ஏ.ஓ கார்த்திகாதான்,” என்றாள்.

“நாளைக்கு பத்து மணிக்கு மேல வாங்க பாக்கலாம்,” என்றபடி சிறு முற்றத்தைக் கடந்து மாடிப்படிகளில் ஏறினாள். படிகளின் வளைவுகளில் திரும்புகையில், படியடியில் ஸ்டார் ரூமை திறந்து கொண்டிருந்த அம்மா, “நல்லதா எடுத்துப் போடு… வீட்டுக்கு மாட்டிக்கறத போட்டுட்டு வந்து நிக்காத,” என்றாள்.

நீண்ட கோரை முடியை சீவும்போது, “ இன்னக்கி முடிக்கு ஹென்னா போடலான்னு இருந்தேன். க்ரே ஹேர் தெரியுது,” என்று அலைபேசியிலிருந்த கதிரிடம் சொல்ல அவன் நிமிர்ந்து,“அவ்வளவா தெரியல..” என்றான். க்ரே கலர் சுடிதாரை எடுத்து அவனிடம் காட்ட அவன் வேண்டாம் என்று உதட்டைப் பிதுக்கி வெளியே சென்றான்.பிங்க்கை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே வந்து சாப்பிடுகையில் அம்மா ஆறு ஆண்டுகளாகப் பாடும் அதே மந்திரத்தைப் பாடினாள். “பக்குவமா நடந்துக்க”

ஆழத்தில் அந்த அவளென்ற வெகுளி எங்கோ ஔிந்து கொண்டாள். மனுசங்களைப் பார்க்கையில் அவர்களின் பேச்சு போக்குக்கு போக இன்றைய இவளால் முடிகிறது. அந்த வெகுளி எவ்வளவோ பரவாயில்லை. இவர்களின் பேச்சு புரியாமல் நேரடியாக தன் மனதால் அடிப்பவள்.

அப்படி இருக்கக்கூடாது என்று அம்மா மெதுவாகப் புரிய வைப்பதற்குள் அவளின் நிமிர்ந்த தன்மையின் முன் தினமும் மண்டியிட்டிருக்கிறாள். “இப்படி இருக்காத கார்த்தி. மனுசங்கள புரிஞ்சிக்கடி. கெட்டவங்கன்னு சொல்லலடி அறிவு கெட்டவளே. என்னத்தப் படிச்சியோ!” என்பாள்.

அப்பாதான் எதற்கும் தணியாமல் அப்படியே இருப்பதால் அவர் பேச்சுக்கு செவிகளில்லாதவராக தனித்திருக்கிறார். அம்மா அவர்களிடம் சிக்கி தடுமாறிப் போகிறாள். கூட்டுக் குடும்பத்தில் எதையோ தொலைத்ததை உணர்ந்தப் பின்னரே அப்பா அம்மாவிடம் பணிந்திருக்கிறார். “நான் கல்யாணமாகிப் போயிட்டா இவங்களுக்கும் ஒரு வேலை முடியும்,”என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

மாடியில் அமர்ந்து வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருக்கையில் கார் சத்தம் கேட்டது. வயிற்றில் கொஞ்சமாய் ஆசிட் சுரந்து நின்றது. எந்த வடிவம் எந்த வாகனத்தில் வந்திருக்கிறதோ? கண் முன்னால் பாடப் புத்தகங்கள் இருந்த இடங்கள் ஒழிந்து கிடக்கின்றன. அவை மட்டுமே இருந்தஇடத்தில் என்னத்தை அடுக்குவது?

கீழே முற்றத்தில் குரல்கள் கேட்டன.

“எப்படி வீட்டக் கண்டுபிடிச்சீங்க?”

“அதான் சாரதாஸ் ஜவுளி மாளிகைன்னு வீட்டுசுவரை அடச்சு எழுதியிருக்கே? அததான் ஜெயா அடையாளமா சொன்னா,” என்று ஒரு ஆண் குரல் சிரித்தது.

“இங்க வந்த நேரத்துக்கு திருச்சியிலிருந்து திருவாரூர் போயிருக்கலாம். பாலகிருஷ்ணம்பட்டின்னு போர்டை பாத்து திரும்பி ஸ்டியரிங்க நாலு ஒடி ஒடிக்கறத்துக்குள்ள ஊரு கடைசிக்கு வந்தாச்சு,” என்றார்.

நடையில் சர்றென்று இரும்பு நாற்காலியை இழுக்கும் சத்தம் காதைக் குடைந்தது. இந்தக் கதிருக்கு எடுத்து போடவே தெரியாது.

“சின்ன கிராமந்தானே,” அம்மாவின் குரலில் சன்னமாக காற்றடித்தது.

நடையில் பாய் விரிக்கும் சத்தம் நீண்டு படுத்தது. ஜன்னல்வழி எட்டிப் பார்த்தாள். அப்பா முற்றத்து நிழலில் கடைக்குப் போகும் வழியில் கைகளை மடியில் வைத்து நடையைப் பார்த்துக் கொண்டிருந்தார். திருநீரு பாதி அழிந்திருந்த நெற்றி பக்கவாட்டில் தெரிந்தது. வேட்டிக்குக் கீழே கணுக்கால் முழி வீங்கியிருப்பது இங்கிருந்தே அவளுக்குத் தெரிகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு சுகரை அதன் போக்கில் விட்டு, இவர் போக்கில் நடக்கவும் போகாமல் இருந்து ஒரு கட்டத்தில் கோயிலில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் போக்கில்,

“தாயும் இலி, தந்தை இலி;

தான் தனியன்; காணேடி…”

என்று முடித்து, “அடுத்தத சொல்லுடா சிவசாமி” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரின் தோழரை அழைத்து பின் இவரே,

“தான்தனியன் ஆயிடினும்

காயில்உலகு அனைத்தும் கற்பொடிகாண்..”

என்றும்

“ஊனாய் உயிராய் உணர்வாய்…”

என்றும் அவர் சிறுவயதில் கற்ற அனைத்தையும் தினமும் கண்மூடி பாடிக் கொண்டிருந்தார். கேட்டவர்கள், “மவளுக்கு கல்யாணம் முடிக்காம… பித்து பிடிச்சுப் போச்சு,” என்றும், “அந்தப் பிள்ள திமிருக்கு இவரு இப்படி ஆயிட்டாரே,” என்றும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கடையைத் தாண்டிச் செல்பவர்களிடம், “ கடன் பாக்கி வரல, வாங்குன காசுக்கு நெல்லு வரல,” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கில் இருந்தார்.

அம்மா எடுத்த ருத்ர ரூபத்தில் அடங்கி மருத்துவரிடம் மாற்றி மாற்றி காண்பித்து கடைசியில் மூளைக்குச் செல்லும் குழாயில் அடைப்புக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச கொஞ்சமாக தன் கணக்கு வழக்கிற்கு வந்தமர்ந்து பேசாமலிருக்கிறார்.

பழைய ‘சிவனே’ என்கிற அவரின் ஓசையில்லாத இருப்பும், அவர் இயல்புக்கு வந்திருக்கிறது. என்றாலும் இடையில் வந்த பித்தன் என்ற பெயர் மாறவில்லை.

“நான் கார்த்திய கூட்டிக்கிட்டு வரேன்,”என்ற குரல் அவளைக் கலைத்தது. ஜெயாஅக்காவின் குரல். எப்போது வந்தாள்?

“சேலக்கட்டக் கூடாது? என்ன பொண்ணோ! கொஞ்சமும் பொருப்பில்லாம. சரி… சரி வா. நல்லாதான் இருக்க. ஆள் மெலிஞ்சிருக்கவும் அப்படியே இருக்க. உன் வயசில நான் ரெண்டு மடங்கு இருந்தேன்,” என்றவளுடன் நடந்தாள். கதிர் அப்பாவுக்கு மிக்ஸர் தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கார்த்திகாவை பார்த்ததும் கூடவே வந்தான்.

அத்தனை கண்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் ஒவ்வொருவராக தாவிக் கொண்டிருந்தாள். ஏழுஆட்கள். அந்த மென்பச்சை சட்டை மாப்பிள்ளை. நிழலிலேயே இருக்கும் மினுமினுப்பு தெரிந்தது. கொஞ்சம் உருளையான சிவந்தவன்.

சட்டென்று வந்த புன்னகையை மறைக்க கைகளைக் கூப்பியதும் அம்மா, “பாயில உட்காரு கார்த்தி,”என்றாள். இப்போது மட்டும் எங்கிருந்து வருமோ இந்தக் குரல். பொத்தி எடுத்து கைகளுக்குள் வைத்துக் கொள்ளும் குரல்.

“என்னம்மா படிச்சிருக்க?”

“எம்.எஸ்.ஸி”

“எங்க வேல”

“வாண்டயார் இருப்பு,/”

“ம் ….” குரலிலேயே தனக்கு வேலையெல்லாம் பெரிய விஷயமல்ல என்பதை அழகாக சொல்லத் தெரிந்திருக்கிறாள்.

“ஊரு எப்படிம்மா….” என்ற ஆண் குரல். பிள்ளையின் அப்பா.

“நல்ல மரியாதயான மனுசங்க…”

“நம்ம இப்படித்தான்னு தெரிய வச்சுட்டா எங்கயும் நல்ல மனுசங்கதான்,”இன்னொரு பெரியவர்.

“இந்த மாதிரிவீடெல்லாம் இப்ப இல்ல.”

அப்பா, “ஆமாங்க… அப்பா காலத்தில சுதந்திரம் கெடச்ச புதுசில கட்டினது,” என்றார். அனைவரும் அப்பாவை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அம்மா, “ஆமா அப்பதாங்க…” என்று முடித்தாள்.

பிள்ளையின் அப்பா, “ரெண்டு பசங்க. திருச்சியில ரெண்டு கடை இருக்கு. வெளிய தோப்பு, நிலம் உண்டு. பொண்ணு வேலக்கு போகனுன்னு இல்ல. வீட்லயே சரியாயிருக்கும். மூத்த மருமக இருக்கா. வீட்டுவேலக்கு வேற ஆள் இருக்கு,”என்றார்.

அந்த அம்மா, “இருந்தாலும் விசேசம், போக்குவரத்துன்னு வாரத்தில நாலு நாள் போக வேண்டியிருக்கும்… அதில்லாம வீட்டுக்கு வர்ற பொண்ணு மாகலட்சுமில்லீங்களா? எதுக்கு வெளிய போய்க்கிட்டு,” என்றாள்.

பெரியவர் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைத் திருப்பினார். சந்தன சட்டையில் நல்ல தொப்பையுடன் நாற்காலியில் அசௌகரியமாக அமர்ந்திருப்பது அவரின் அசைவுகளிலேயே தெரிந்தது.

ஜெயா அக்கா அம்மாவைப் பார்த்து, “பையனுக்கு நான் பொறுப்பு சித்தி. பழக்க வழக்கமெல்லாம் தெரியும்,”என்றாள். அங்கு இங்கு தாவி பின் நாட்டு நடைமுறையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கத்திலிருந்தவள், “தம்பி உங்க போட்டாவை சுயம்வர மேளாவில பாத்ததும்… இந்தப் பொண்ணை பாக்கலாமா அண்ணின்னார்,” என்று கார்த்திகாவிடம்கிசுகிசுத்தாள். அவள் என்ன முகபாவம் காண்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள்.

“வீட்லயே இருக்கனுன்னு நினைக்க வேணாம். நானிருக்கேன்,”என்றாள்.

அந்த அம்மாள், “பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்கல்லம்மா,” என்றாள்.

“சரிங்கத்த,” என்றவளின் முகம் கூம்பியது. நீண்ட மூக்கின் வைரமூக்குத்தியின் ஔியை விட இவள் மெல்லிய எண்ணெய் படர்ந்த முகத்தில் ஔி கூடியிருந்தாள். செப்பு உதடுகள் என்ற பாடல் வரிகளுக்குப் பொருத்தமானவள்.

“நீங்க எங்க படிச்சீங்க,”என்று மிக மெதுவாக அவளின் காதருகில் கார்த்திகா கேட்டாள்.

“சீதாலட்சுமி ராமசாமி. யூ.ஜி முடிக்கறப்ப இதுங்க கண்ணில பட்டுட்டேன்,” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“பின்ன என்னங்க ஜாதகம் பொருந்தவும்தான் வந்தோம். ஜாதகத்தாலதான் தம்பிக்கு இத்தன தாமதம்,” என்ற அந்த அம்மாவின் குரலால் நகர்ந்து அமர்ந்தார்கள்.

பிள்ளையின் அப்பா, “பேசிட்டு சொல்லுங்க. எப்படியும் நீங்களும் யோசிச்சிருப்பீங்க. விசாரிச்சிருப்பீங்க. பிள்ளைங்களுக்கு பிடிச்சிருந்தா எவ்வளவு சீக்கிரமா அவ்வளவு நல்லது.முப்பது வயசுக்கு மேல நிக்கிறாங்க,” என்றார்.

“நான் மூணு வருசமா கிளாஸ், எக்ஸாம்ஸ்ன்னு கஷ்டப்பட்டு இப்பதான் ஆறு மாசமாதாங்க வேலக்கு போறேன்,” என்ற கார்த்திகாவின் குரலால் அவர் முகம் மாறியது.

“அதனால என்னம்மா? பணத்துக்காகதானே. ஒரு பாதுகாப்புக்குத்தானே. அதுக்கு நம்ம வீட்ல எந்தக் குறையும் இல்ல.சிவனேன்னு இருக்கலாம். கார்ல போயிட்டு காரில வரலாம்”

“இல்ல…வேலக்கு போறது ஒண்ணும் சிரமமில்ல. மத்ததையும் மேனேஜ் பண்ணிப்பேன். இப்ப ஜூனியர் அஸிஸ்டெண்ட் எக்ஸாம் கிளியர் பண்ணி வெரிபிகேசன் முடிச்சாச்சு. வேணுண்னா ஸ்ரீரங்கம்… திருச்சி பக்கத்தில வர முடியும்,”

அவர்கள் பேசத் துவங்கினார்கள்.

அழைத்த அலைபேசியை தம்பி கொடுத்தான். எழுந்து சமையலறை வாசலில் நின்றாள்.

“சரிங்க. நாளைக்கு ஆபிசுக்கு வாங்க”

“….”

“சொன்னா சொன்னதுதாங்க. அடுத்தவங்க மனசையும் பாருங்க. உங்களமாதிரிதானே அவங்களும் அந்த நிலத்தில ஜம்பது வருஷமா விவசாயம் பண்றாங்க. சரிங்க….நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாம்,” என்றாள்.

கார்த்திகாவின் குரலால் சபை அமைதியாகி அவளைப் பார்த்தது. அவளின் மைவழிகள் விரிந்தது மட்டும் மனதில் மறுபடியும் வருகிறது. உருண்ட மிரளும் விழிகள்.

அவர்கள் கிளம்பினார்கள். அம்மா மதிய உணவுக்காக உள்ளே சென்றாள். அப்பா கடைக்கு, இவன் பைக்கை எடுக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்து அம்மாவும்,வெளியிலிருந்து ஜெயாஅக்காவும் பேசினார்கள். அவள் மறுக்கப் போவது அனைவருக்கும் புரிந்திருந்தது.

ஜெயாஅக்கா, “உன்னால மனம் கலங்கிப் போறாரு அப்பா. அப்படி என்னத் திமிர். இவ்வளவு நல்ல மனுசங்க. ஏழு தலமுறைக்கு குந்தித் திங்கலாம்,”என்றாள்.

“எவ்வளவு பிள்ளங்க படிச்சு வீட்ல இருக்காங்க.வீட்ல இருக்கற பிள்ளைகளுக்கா குறச்சல்,” என்றாள்.

“உன்னய பிடிச்சிருக்கு. இத்தன வயசுக்கு மேல இப்படி ஒரு சம்மந்தம்!”

உள்ளிருந்து அம்மா, “கார்த்தி… கிருஷ்ணாவுக்கா கிளம்பற? முன்ன பின்ன இருக்காத. சரியா வந்திருவான்.சாப்பாடு என்ன வேணும்?” என்றாள்.

வெளியே வந்து, “ஜெயா…அவங்ககிட்ட நான் பதில் சொல்றேன்,”என்றாள். அக்கா தலையாட்டியபடி திரும்பி நடந்தாள். அம்மா, “காலையில இருந்து யாரோ போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்களே,” என்றாள்.

“ம்,” என்றாள். கார்த்திகாவின் உயர்படிப்பால் உடைந்தது கூட்டுக்குடும்பம். அம்மா படிக்க வைக்க ஆசைப்பட குடும்பம் திருமணம் செய்து கடனை முடிக்க காத்திருந்தது. இத்தனை ஆட்கள் இருக்கற வீட்ல ஒரு பிள்ளை படிப்புக்கு இவ்வளவு செலவு தாங்காது என்றதும் அவரவர் வாழ்க்கை என்றானது.

கடையிலிருந்து அப்பாவின், “பித்த னென்றனை உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளீர்…” குரல் கேட்டது. இந்தப் பாட்டெல்லாம் சிலநேரம் தனக்கென்று அவளுக்குத் தோன்றியது. முற்றத்திலிருந்த கல்தொட்டி நீரை எடுத்து முகத்தைக் கழுவினாள். நேற்று பாலம் விரிசல் கண்டதை பார்க்க சென்றபோது முள்செடி அவள் முகத்தில் பட்ட கீறல் சுள்ளென்று எரிந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“கார்த்தி… கார்த்தி…”கடையிலிருந்து அப்பாவின் குரல். பேரீச்ச பழத்தை எடுத்து வைத்திருப்பார்.

“என்னப்பா..?” என்றதும் பொட்டலத்தைக் கொடுத்தார்.

சங்கர் அண்ணா, “கெளம்பணுமாடா?” என்றார். தலையாட்டினாள்.

“இங்க பாருய்யா… கையில இருப்பில்லாம எதுலயும் முழு முதலையும் போடக் கூடாது.”

சங்கர் அண்ணா, “இல்லப்பா…துணிஞ்சு வாங்கியிருந்தா இப்ப கொள்ள லாபம்,”என்றார்.

“இல்லாத லாபத்துக்கு தவிக்கற. வியாபாரத்தில இன்னும் அடி வாங்கல… அதான். மனசு அப்படித்தான் நீயா நிறுத்தாத வரைக்கும். போய்யா…எங்கயாச்சும் வெளிய போயிட்டு வா”என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

அவள் முற்றத்தில் இறங்கி மாடிப்படிகளில் ஏறினாள். மேலிருந்து எட்டிப் பார்த்தாள். சங்கர் அண்ணா சைக்கிளை எடுத்தார். அப்பா இவரிடம் மட்டும் நீண்டநேரம் பேசுவதும், அண்ணன் இவரிடம் வருவதும்புதிர்தான். சங்கர் அண்ணா முகத்திலிருந்த புன்னகை கார்த்திகாவிடமும் வந்தது. எடுத்து செல்லவேண்டிய பையில் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

அவளுக்கு மனம் லேசாகி காற்றில் எழும்பிப் பறப்பது போல இருந்தது. அவளின் உள்மனம் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டது. அதை ஏமாற்ற அவளே முயன்றும் முடியவில்லை. தொடுவதற்கு மென்மையாக, அடர் வண்ணத்தில் இருந்த கொன்றைப் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா நேரத்துக்கு வந்துவிடுவான் என்ற நினைப்பு வந்ததும் எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு, அப்பாவின் குரலை எதிர்பார்த்தபடி கீழிறங்கினாள். பசி நேரம் கடந்திருந்ததால் அவளின் வயிற்றில் குத்தலெடுக்கத்தொடங்கியிருந்தது.