சிறுகதை

கல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்

மொழியாக்கம் – ஆகி

(01)

கல்லூரி போய்விட்டதிலிருந்து ஜட்டு துயருற்றிருந்தான். தன் தாயின் கண்காணிப்பிலிருந்து அவன் நழுவிச் சென்று, சில சமயம் பழத்தைக் குறிவைத்தும் சில சமயம் பறவைகளைக் குறிவைத்தும், மரங்களை நோக்கி கல்லெறிந்துகொண்டு சுற்றித்திரிந்தான். அவன் வயதையொத்த சிறுவர்கள் தமது பெற்றோருக்கு வீட்டுவேலை செய்து வந்தனர். ஜட்டுவின் தாயார் எல்ஹா அவனை அடிக்கடித் திட்டி வேலை வாங்க முயன்றார் எனினும் ஜட்டுவைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது தந்தை இறந்துபோய்விட்டதால் அவன் கண்டிப்புடன் வளர்க்கப்படவில்லை என்றனர் கிராமத்தினர்.

அவ்வப்போது கிராமத்தின் எல்லை வரை சென்று அங்குள்ள கற்பாறைமீது ஏறிக்கொண்டான் ஜட்டு; தனது முதுகு கிராமத்தை நோக்கியிருக்க அவன் அப்பால் நோக்குவான். அவனின் முன்னால் நிலம் கீழே சரிந்து சென்றது, அதற்கு சற்று தள்ளி புதர்மண்டிய சிறிய குன்று ஒன்றிருந்தது. அதுவே ஒருவர் கிராமத்திலிருந்து போவதற்கானப் பாதையெனினும் அங்கேயொரு ஒற்றையடிப் பாதையிருக்கவில்லை. பாதை எப்படியிருக்கும்? ஒரு வழியில் மக்கள் தொடர்ந்து போக்கும் வரத்துமாக இருக்கையில் பாதைகள் உருவாகின்றன. அரிதாகவன்றி ஒருவர் அக்கிராமத்தை விட்டுச் சென்றதில்லை, நடைமுறையில் ஒருவரும் வந்ததில்லை. வருடமொருமுறை தானியத்திற்காக, பண்டமாற்று உப்பு சர்க்கரை துணி இத்யாதியை பொதியாக கழுதைகள் மீது ஏற்றி வைத்துக்கொண்டு நாடோடி வணிகரொருவர் வருகை தருவார். இரண்டொரு கிராமங்களிலிருந்து வரும் சிலரைத் தவிர்த்து அவரொருவரே வருகையாளர். சுறுங்கக் கூறின் ஜட்டு உற்றுநோக்கிய திசையென்பது கிராமத்திலிருந்து செல்லும் ஒருவருக்கான வழி. குன்றிற்கு அப்பால் வெகுதொலைவிலுள்ளது பேருலகம்: எத்தனை மைல்களுக்கப்பால் எத்தனை நாட்களின் பயணத்தின் முடிவில், அதைப்பற்றி ஜட்டு ஒன்றும் அறிந்திருக்கவில்லை.

கிராமத்திற்கு எதிர்த்திசையில் அடர்ந்த காடுகளால் சூழப்பெற்ற உயர்ந்த மலைத்தொடர் பரந்து விரிந்திருந்தது. அத்திசையில் எவரும் எக்காலத்திலும் சென்றதில்லை. அணுகவியலாத இந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் வெளியுலகால் ஆதிப் பிரதேசம்—ஆதியில் தோன்றிய நிலம்—என்றறியப் பெற்றிருந்தது.

கல்லூரி என்றாவது திரும்பி வருவானாவென்று ஜட்டு அவ்வப்போது யோசிப்பான். அவன் போவதற்கு முன் ஜட்டு எந்நேரமும் அவனருகிலேயே இருந்தவண்ணமிருப்பான். கிராமத்தில் வேறெவருமறியாத விடயங்கள் குறித்து கல்லூரி அறிந்திருந்தான். விதவிதமான காட்டுப் பறவைகளின் முட்டைகள் குறித்தும் பற்பல வேர்களின் கிழங்குகளின் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் அவன் அறிந்து வைத்திருந்தான். பேய்க்கதைகள் மற்றும் தேவதைக்கதைகளை கல்லூரி கதைக்கையில் வசப்படுத்தப் பட்டாற்போல் ஜட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.

கல்லூரி ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்றனர் மக்கள். நீங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியபின் வெளியுலகை அடைவது கடினம், சென்றடைந்து விட்டால் நீங்கள் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடு மிகவும் குறைவு. ஆனால் ஒரு நாள், ஜட்டு தண்ணீரோடை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அந்த செய்தியை அவன் கேட்டான்: கல்லூரி வந்து விட்டான். மட்பானையை பாதையின் ஓரத்தில் போட்டு விட்டு கல்லூரியின் குடிசை நோக்கி ஓடினான் ஜட்டு.

ஜட்டுவைக் கண்ணுற்ற கல்லூரி புன்னகைத்தான். அவனுக்கு ஜட்டுவென்றால் விருப்பம். கல்லூரி வழமையாகவே மெலிந்திருப்பான் எனினும் இப்போது அவன் மேலும் மெலிந்திருந்தான். வழமையை விட அவன் கருப்பாகவும் சற்று முதுமையடைந்தவனாகவும் தோற்றமளித்தான். ஆனாலும் அவனது கண்கள் பிரகாசமாகவும் அசைவுகள் வழமையான உயிர்ப்புடனுமிருந்தன. இழுக்கப்படாமலே ஓடும் வண்டிகளையும், புகையைக் கக்கிகொண்டு ஒட்டுமொத்த சங்கிலித்தொடர் வண்டிகளையும் இழுக்கவல்ல அந்த கரிய நம்புதற்கரிய வலிமையுடைய பிசாசையும் அவன் பார்த்திருக்கின்றானா என்றறியும் பொருட்டு ஜட்டு அவனை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தான். சிறிது நேரம் கழித்து கல்லூரி மனம் விட்டு பதிலளிக்கவில்லையென்பதை ஜட்டு தெரிந்துகொண்டான். தனது பயணம் குறித்து அவன் மழுப்புவதாகப் பட்டது. கல்லூரி வழமையாகவே சற்று மர்மமானவன் என்றாலும் முன்னைக்கிப்போது மேலும் மர்மமானவனாக இருந்தான்.

ஒருத்தர் பின் ஒருத்தராக கிராமத்தார் கூடி பேசுவதற்கு அமர்ந்தனர். வெளியுலகிலிருந்து சிற்சில புதுமைகளையே தன்னோடு கல்லூரி கொண்டுவந்திருப்பதை அறிந்துகொண்ட பலர் ஏமாற்றமடைந்தனர். எவ்வாறாயினும் கல்லூரி ஒரு யதார்த்தமான, விவேகமான மனிதனல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சற்றைக்கு பின் ஜட்டுவைத் தேடிக்கொண்டு அவன் வழியில் விட்டுவிட்டு வந்த தண்ணீர் பானையை சுமந்து கொண்டு எல்ஹா வந்தார். முகத்தை சுழித்தவண்ணம் ஜட்டு எழுந்தான். அவன் கிளம்பிச் செல்கையில் கல்லூரி அவனிடம் குசுகுசுத்தான்: “காலையில் திரும்ப வந்துவிடு, உன்னிடம் காண்பிக்க என்னிடம் ஒன்றுண்டு.”

அந்த இரவு ஜட்டுவிற்கு தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் கல்லூரி தனக்கு என்ன காண்பிக்கப் போகிறானென்று தொடர் சிந்தனையாயிருந்தான். அதிகாலையில் அவன் கல்லூரியின் குடிசை நோக்கி விரைந்தான்.

கல்லூரி தனது கந்தையான சாக்கை முடிச்சவிழ்த்தான்; பெட்டி போன்றதொரு பொருளை ஜட்டுவின் முன்பு அவன் நீட்டிக் கொண்டிருக்கையில் அவனது பற்கள் பளிச்சிட்டன. மிகக் கவனமாக அந்த கருப்புப் பெட்டியை ஜட்டு தனது கையிலெடுத்து கவனமாக ஆராய்ந்தான். அது சிறியதாக, ஜட்டுவின் விரல்களின் அளவிற்கு நீளமாகவும் அகலத்தில் அதற்கு பாதியளவிற்கும் தோலினால் மூடப்பெற்றதாகத் தோற்றமளித்தது. ஜட்டு அதனைத் தொட்டுணர்ந்து உண்மையில் அது தோலில்லையென்று முடிவு செய்தான். பெட்டியின் பகுதி உறையிடப் பெறாமலிருந்தது, அதை அவன் தட்டிக் கேட்கையில் உள்ளீடற்று ஒலித்தது. உலோகம்போல தோற்றமளித்தாலும் அது உண்மையில் உலோகமல்ல, இல்லையேல் ஒருவேளை அவன் அறிந்திராத உலோக வகையினதாக அது இருக்கலாமென்று ஜட்டுவிற்கு தோன்றியது. பெட்டியின் ஒரு பக்கத்திலிருந்த ஒளிபுகு கண்ணாடித் துணுக்கினை ஜட்டு தட்டிக் கேட்கையிலும் அது கண்ணாடிபோல ஒலிக்கவில்லை. அப்பெட்டி குறித்த அனைத்தும் விசித்திரமானதாகத் தோன்றியது. அந்தத் தோலும் அந்த உலோகமும் அந்தக் கண்ணாடியும் ஜட்டு இதுகாறும் கண்டிறாத வகையினதாக இருந்தது. கண்ணாடித் துணுக்கிற்குப் பின்னே என்னவோ கிறுக்கப் பெற்றிருந்தது. பெட்டியின் ஒரு பக்கத்தில் இரு குமிழ்களை ஜட்டு கண்ணுற்றான், அவை அதனைத் திறப்பதற்காகவென்று நினைத்தான். அவன் திறக்க முயன்றான் ஆனால் இயலாமல் கல்லூரியை வினவினான்.

ஜட்டுவிடமிருந்து பெட்டியை பெற்றுக்கொண்டு “இது திறக்காது” என்றான் கல்லூரி. ஒரு குமிழை அவன் திருகவும் ஜட்டுவின் கூர்மையான கண்ணானது கண்ணாடித் துணுக்கிற்கு பின்னிருந்த செங்குத்தான வெண்பட்டை இடப்புறமாக நகர்வதை அவதானித்தது. பிறகு அப்பெட்டி தனது தொண்டையை செருமுகின்றார்போலொரு சத்தமிட்டு, திடீரென்று மனிதக் குரலில் பேசியது. அக்குமிழிலிருந்து கல்லூரி கையை எடுத்த பிற்பாடும், அவ்வெண்பட்டை நகர்வதை நிறுத்திய பிற்பாடும்கூட அக்குரல் தொடர்ந்து பேசியது. ஜட்டு வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்பெட்டி வேற்றுமொழியில் பேசுவதாக ஜட்டுவிற்கு முதலில் தோன்றியது. ஆனாலும் சில கணங்களில் அவனுக்கு இரண்டொரு வார்த்தைகள் புரிந்தது, சிறிது நேரத்தில் மேலும் சில வார்த்தைகள் பிடிபடுவது அவனுக்கு தெரிந்தது. ஜட்டுவின் மொழியை அப்பெட்டி பேசியது என்றாலும் அது பழக்கப்படாத பாணியிலிருந்தது; ஜட்டு அவ்வளவாக கிரகித்துக் கொள்ளாத பல வார்த்தைகளை அது கையாண்டதாகத் தோன்றியது. தம்மால் புரிந்து கொள்ளவியலாத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பதில் இருவரும் மூழ்கிப்போயினர்.

சற்றைக்கு பின் திடீரென்று அப்பெட்டி பெண் குரலில் பேசத் துவங்கியதும் ஜட்டு மேலுமொருமுறை வியப்புற்றான். அப்பெட்டியால் எப்படி நொடிப்பொழுதில் தனது குரலை முற்றிலும் மாற்ற முடிந்ததென்று அவனுக்குப் புரியவில்லை. என்றாலும் இதொரு இனிமையான குரல்; கிராமத்துப் பெண்டிரில் அதுபோன்ற குரல் வாய்க்கப்பெற்றவர் எவருமில்லையென்று ஜட்டு எண்ணிக்கொண்டான். சிறிது நேரத்திற்கு அப்பெட்டி பெண் குரலில் பேசியது, பிறகு பாடத் துவங்கியது. ஜட்டு முன்னோக்கி சாய்ந்து உன்னிப்பாகக் கேட்டான். அப்பெட்டி பாட மட்டும் செய்யவில்லை, வாத்தியங்களையும் ஒலித்தது. பாட்டு அருமையாக கிராமத்து விழாக்களில் பாடப்படும் பாடல்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்தது. இசையும் அற்புதமாக இருந்தது: மேளத்தின் ஒலி ஜட்டுவிற்கு பிடிபட்டது எனினும் பிற வாத்தியங்கள் தெரிந்திருக்கவில்லை.

அந்த நாள் முதல் ஜட்டு தனது பெரும்பாலான நேரத்தை கல்லூரியின் குடிசையில் செலவிட்டான். பேசும் பெட்டி குறித்த செய்தி பரவியதும் கிராமத்திலுள்ள அனைவரும் கல்லூரியைக் காண வந்தனர். சில ஆண்கள் இடையறாது ஒவ்வொரு மாலையிலும் கேட்பதற்கென்று திரும்பி வந்தனர். ஜட்டுவைப் போன்றே பிறருக்கும் வார்த்தைகள் பிடிபடுவது முதலில் கடினமாகத் தோன்றியது எனினும் விரைவில் மேலுமதிகமாகப் புரியத் துவங்கியது.

அப்பெட்டிக்கு இரு வாய்கள் உள்ளதென்று ஜட்டு அறிந்துகொண்டான். கண்ணாடியின் பின்னுள்ள வெண்பட்டை இடப்புறத்தில் ஒரு புள்ளியில் இருக்கையில் அவற்றில் ஒன்று பேசியது, மற்றொன்று அப்பட்டை வலப்புறத்தில் ஒரு புள்ளியில் இருக்கையில் பேசியது. இந்நிகழ்வை சில கிராமத்தாரிடம் ஜட்டு விவாதித்தான். அவர்களின் வியாக்கியானத்திலிருந்து அப்பெட்டி தானாக பேசவில்லையென்றும் வெகு தொலைவிலிருந்து உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் மாயமான முறையில் அப்பெட்டியிலிருந்து வெளிப்படுகின்றன என்றும் ஜட்டு தெரிந்துகொண்டான். அக்குரல்கள் இரு வெவ்வேறு இடங்களிலிருந்து வருகின்றனவா அல்லது ஓரிடத்திலிருந்து வருகின்றனவா என்பதை அம்மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. இரு குரல்களும் அவர்களின் மொழியைப் பேசின எனினும் பட்டை இடப்புறத்தில் இருக்கையில் கேட்கும் பேச்சு அவர்களின் மொழியை அதிகம் ஒத்திருப்பதாக கிராமத்தார் உணர்ந்தனர். மேலும் அப்பக்கத்திலிருந்து வந்த குரல்கள் சத்தமாகவும் தெளிவாகவும் வந்தன, அதே சமயம் பட்டை வலப்புறத்தில் இருக்கையில் அவர்கள் கேட்ட குரல்கள் அடிக்கடி தெளிவற்று ஒலித்தன. ஆகையினால் அம்மனிதர்கள் இடப்புறத்திலிருந்து ஒலிக்கும் குரல்களை கேட்க விரும்பினர்.

ஒரு நாள் முதியவர் எட்டண்ணா—இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளியுலகத்தில் வாழ்ந்திருந்தவர்—கேட்பதற்காக வந்திருந்தார். அந்தக் குரல்கள் வெவ்வேறு நகரங்களிலிருந்து வருபவையென்று அவர் விளக்கமளித்தார். வலப்புறக் குரல் வருமிடம் ஹஸ்திபூர்—அது அவர்களது நாட்டின் தலைநகரென்று அவர்களுக்கு அவர் நினைவூட்டினார்—அதே சமயம் இடப்புறக் குரல் வருமிடம் ஹக்கிமாபாத், ஷூஃபரிஸ்தானின் தலைநகர். உடனடியாக யாரோ ஒருவர் சந்தேகமொன்றை வெளிப்படுத்தினார்: இடப்புறக் குரல் தெளிவாகவும் சத்தமாகவும் ஒலிக்கின்றது மேலும் இதன் மொழிகூட அவர்களுடையதை ஒத்திருக்கின்றது; எவ்வாறிது வேறொரு நாட்டின் தலைநகரிலிருந்து வரமுடியும்? அவர்களின் சொந்த நாட்டின் தலைநகரிலிருந்து வரும் குரல் தெளிவாகவும் அவர்களின் பேச்சுமொழியை ஒத்திருக்கவும் வேண்டும். எட்டண்ணா அதற்கு பதிலளித்தார்: அவர்களது கிராமம் அவர்களின் தந்தையர்நாடான கெளவுரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது; ஷூஃபரிஸ்தானின் ஆட்சிப்பகுதி அவர்களின் கிராமத்திற்கு பின்னாலுள்ள குன்றுகளுக்கு அப்பால் துவங்குகின்றது. ஷூஃபரிஸ்தான் ஒரு சிறிய நாடாகையால் அதன் தலைநகர் கெளவுரதேசத்தின் தலைநகரைக் காட்டிலும் கிராமத்திற்கு அருகிலிருந்தது. ஆதலினால்தான் ஷூஃபரிஸ்தானி பேச்சு அவர்களது பேச்சை ஒத்திருக்கின்றது மேலும் ஹக்கிமாபாதின் குரல் தெளிவாக ஒலிக்கின்றது.

இந்த விளக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு கிராமத்தார் எவருக்கும் கேள்வியறிவு இருக்கவில்லை. ஷூஃபரிஸ்தான் மற்றும் அதன் தலைநகர் பற்றி பலர் கேள்விப் பட்டிருக்கவில்லை, அது மட்டுமின்றி அவர்களின் சொந்த நாட்டின் தலைநகரையே பலர் அறிந்திருக்கவில்லை. கோம்வா என்ற இளைஞனொருவன் வினவினான்: ”வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் பேசுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அது புரிந்துகொள்ளத்தக்கது. நாம் பேசும் மொழியையே ஷூஃபரிஸ்தானும் பேசுகின்றதென்றால் ஏதற்காக நம்மிடையே இரு நாடுகள் இருக்கின்றன? நாமனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவராக இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?” எட்டண்ணா சிரித்துவிட்டு சொன்னார்: ”நீ சொல்வதென்னவோ சரிதான் என்றாலும் வெளியுலகின் விடயங்கள் அவ்வளவு எளிமையானவையல்ல. நம்மைப்போன்ற அறிவிலி மலைவாழ் மக்களால் நாகரிகமடைந்த மனங்களைப் புரிந்துகொள்ள முடியாது.” ஒரு இடை நிறுத்தத்திற்கு பிறகு அவர் தொடர்ந்தார்: ”இதைவிட திகைப்புப்பூட்டும் விடயமொன்றை நானுனக்கு சொல்கிறேன். நீயறிந்திருப்பதுபோல் கெளவுரதேசமும் ஷூஃபரிஸ்தானும் ஒரே மொழியை பேசுபவை. நமது நாட்டில் அது கெளவுரபாஷை என்றழைக்கப்படுகிறது; ஷூஃபரிஸ்தானில் என்றாலோ அதற்கு ரூஃபிடி என்று பெயர். இதை உன்னால் நம்பமுடிகிறதா?” அங்கே சுற்றி அமர்ந்திருந்த மனிதர்கள் நகைத்தனர், மேலும் அவர்கள் நாகரிகத்தின் போக்கினை நினைத்து அதிசயித்தனர்.

(02)

நாட்கள் கடந்து சென்றன மேலும் மக்கள் பேசும் பெட்டிக்கு பழக்கப்பட்டு விட்டனர். ஜட்டு அப்பெட்டியிலிருந்து எச்சமயங்களில் பாடல்கள் வருமென்பதை தெரிந்து வைத்துக்கொண்டு சரியான சமயத்தில் வந்து விடுவான். பிறரும் வெறும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதில் ஆர்வமின்றி பாடல்களுக்காகக் காத்திருந்தனர். சில சமயங்களில் முதியோர் ஒரு சிலர் மட்டும் தீவிரமும் ஆர்வமுமிக்க முகங்களுடன் அமர்ந்து பேச்சைக் கேட்டனர்.

ஒரு நாள் கல்லூரி பேசும் பெட்டியின் இரகசியமொன்றை ஜட்டுவிற்கு வெளிப்படுத்தினான். பெட்டியின் பின்புறமுள்ள சட்டகத்தின் பகுதியை அவன் அகற்றவும் இரு செந்நிற நீளுருளையான பொருட்கள் வெளியே விழுந்தன. ஜட்டு ஒன்றை எடுத்தான்; அது சிறிதாக ஆனால் கனமாக இருந்தது. பிறகு கல்லூரி நீளுருளைகள் அகற்றப்பெற்ற பெட்டியால் பேசவியலாதிருப்பதை அவனுக்கு காண்பித்தான். கண்ணாடிக்குப் பின்னிருந்த வெண்பட்டையை எவ்வளவுதான் திருகினாலும் ஒரு சத்தமும் வரவில்லை. நீளுருளைகள் திரும்ப உள்ளே வைக்கப்பட்டவுடனே பெட்டி மீண்டும் உயிர்ப்புற்றது. ஜட்டு கிளர்ச்சியுற்றான். ”பெட்டியின் மாயசக்தி இந்த நீளுருளைகளில் உள்ளது” என்றான் கல்லூரி. அவன் தனது விதைப்பைகள் நோக்கி சுட்டிக் காட்டிவிட்டு தொடர்ந்தான்: ”இவற்றில் அடங்கியுள்ளது ஒருவரின் வீரியம் போன்றது. நீளுருளைகளை அகற்றுவதென்பது பெட்டியை விதையடிப்பதற்கு நிகரானது. நாம் சிற்றாற்றங்கரையின் மேலுள்ள உருளைக்கற்களையெடுத்து சாயம் பூசி கடவுளராக்குவோம்; அதைப்போலவே யாரோவொரு மந்திரவாதி இந்நீளுருளைகளுக்கு திறனேற்றியிருக்கிறான். நமது கிராமத்தில் இப்படியொரு பேசும் பெட்டியை உருவாக்கவல்ல சக்திபெற்றிக்கும் ஒருவருமில்லை. இதனை உருவாக்கியவன் ஒரு மகாமந்திரவாதியாக இருக்கவேண்டும்.” கல்லூரி அப்பெட்டியை உற்று நோக்கினான். அவனுக்கே மந்திரம் மற்றும் மயக்கும் ஆற்றல் பற்றிய அறிவு சற்றிருந்தது, சில நோயாளிகளையும் குணப்படுத்தியிருக்கிறான். அவனை அவதானித்த ஜட்டு அம்மாயப் பெட்டியையொத்த அசாதாரண மாயசக்திகளை தான் எப்படி ஈட்டுவதென்கிற ஆழ்ந்த யோசனையில் கல்லூரி இருப்பதாக எண்ணினான்.

வெண்பட்டை இடப்பக்கம் இருக்கையில் சத்தம் சிறப்பாக இருந்தாலும் வலப்பக்கத்தைக் கேட்பதையே ஜட்டு விரும்பினான். இடப்பக்கத்தில் பேச்சு அதிகமாகவும் பாட்டு குறைவாகவுமிருக்க வலப்பக்கத்திலிருந்து பாட்டும் இசையும் அதிக ஒழுங்குடன் வந்தது. பிறகு வேறேதோவொன்றில் கல்லூரி அக்கறை கொள்வதை ஜட்டு அறிந்தான். இடப்பக்கத்தில் புரியும்படியான குரல்கள் கேட்கும் பகுதிக்கு அருகிலுள்ள புள்ளி ஒன்றிலிருந்து விசித்திர ஒலிகள் வந்தன. வழக்கத்திற்கு மாறான அவ்வொலிகள் யாரோ சீழ்க்கையடிப்பது அல்லது பொருத்தமின்றி பிதற்றுகின்றாற் போலிருந்தது. ஜட்டுவிற்கு முதலில் அவை வேடிக்கையாக இருந்தன எனினும் விரைவில் ஆர்வமிழந்துவிட்டான். மாறாய், கல்லூரியோ அவற்றால் மேன்மேலும் ஈர்க்கப்பெற்றதாகத் தோன்றியது. பாடல்களையும் பேச்சையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி அவன் தனியாக அமர்ந்து கட்டுண்டாற்போல் அப்புதிரொலிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

அவ்வொலிகளின் தோற்றுவாய் குறித்து கல்லூரி குழப்பமுற்றான். அவை மனிதக் குரல்களில்லையென்று அவன் முடிவு செய்தான். அதன்பின் மாந்திரிகன் துரக்கல் சன்னதமாடுகையில் தோற்றுவிக்கும் ஒலிகளை கல்லூரி நினைவுகூர்ந்தான். கிராமத்திற்கு பின்னால் இரு குன்றுகளுக்கு இடையிலுள்ள மயானம்—எங்கு, மந்திரச் சடங்குகள் தொடர்பாக, பெரியதும் அல்லது சிறியதுமான கற்களால் நிரப்பப்பெற்ற மண்மேடுகளின் மத்தியில் பல இருண்ட இரவுகளில் அவன் வலம் வந்துள்ளானோ—அது குறித்தும் அவன் சிந்தித்தான். நடமாடும் ஆவிகளின் விசித்திர பிதற்றலையும் சீழ்க்கையையும் கல்லூரி அங்கும் செவிமடுத்திருக்கின்றான். பேசும் பெட்டியிலிருந்து வரும் ஒலிகளை செவிமடுத்தக் கல்லூரி இவையும் அவ்விடத்திலிருந்து தோன்றுவதாக நம்பினான்: மந்திர சக்தி பெற்ற பெட்டி ஆவியுலகத்துடன் பிணைக்கப்பெற்றிருந்தது. ஒலிகளோ வேற்றுகிரகத்தின் குறிசொல்லும் செய்திகள், கல்லூரியோ பரந்து விரிந்த வெண்ணுடுக்களின் இடைவெளிகளில் எதிர்பாராத் தொடர்புகொள்ள எதிர்பார்ப்புடன் முனையும்மோர் தீர்க்கமான வானியலாளனைப் போலிருந்தான்.

நிதமும் அவ்வொலிகளைக் கேட்பதில் கல்லூரி மணித்தியாலங்கள் செலவிட்டான். அவை மனிதக் குரல்கள் வந்த ஒழுங்குமுறையில் வரவில்லையென்பதை அவன் கண்டறிந்தான். சில சமயத்தில் அவை உரத்தும் உறுதியாகவும், பிற சமயத்தில் துண்டுபட்டும் அரிதாகவே கேட்கத்தக்கதாவும் இருந்தன; அவை ஒட்டுமொத்தமாக காணாமற்போன சமயங்களுமுண்டு. கல்லூரி வியப்புறவில்லை; எப்படியிருந்தாலும் அவை தாம் விருப்பப்படுகையில் பேசும் ஆவிகளின் குரல்கள், மனிதர்களைப்போல நியமிக்கப்பெற்ற நேரங்களில் பேசவேண்டிய கடப்பாடு அவற்றுக்கில்லை. மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரு பக்கங்களிலிருந்து கேட்கும் மனிதக் குரல்கள் நின்று போவதையும் கல்லூரி அவதானித்தான், அதே சமயம் இயல்நிலை கடந்த ஒலிகள் இரவில் ஓயாமலிருந்தன மேலும் உண்மையில் அப்போது அவை இன்னும் வலுவாக இருந்தன. இரவு ஆவிகளின் சமயமாக இருக்கையில் இது இயல்பானது: மனிதர்கள் படுக்கைக்கு சென்ற பிற்பாடு பெட்டியை ஆவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அவற்றின் குரல்களைக் கேட்கையில் திரும்பத் திரும்ப கேட்கும் பல ஒலிகளை அவதானித்த கல்லூரி, தமக்கென்று அவற்றுக்கொரு மொழி உள்ளதென்று நம்பத் தலைப்பட்டான். பல்குரல்களின் நிரலொழுங்கையும் அவற்றின் கட்டமைவையும் அவன் உய்த்துணர முடிந்தால், ஆவிகளின் மொழியை அவனால் புரிந்துகொள்ள முடியுமென்று எண்ணினான். அவனுக்கு அது சாத்தியப்பட்டால் என்னதொரு அரும்பொருட் களஞ்சியம் அவனுக்குத் திறந்துவிடப்படும்! அந்த எண்ணம் அவனுக்கு சிலிர்ப்பூட்டியது. அக்குரல்களைக் கேட்பதில் அவன் இப்போது முற்றிலும் மூழ்கிப்போனான். அவை வாராது போயின் அவன் துயருற்றான்.

மாரிக்காலத்தின் துவக்கத்தில் ஆகாயத்தை முகில்கள் சூழ்ந்தன. மின்னல் பளிச்சிடுகையில் ஆவிகளின் குரல்கள் மேலும் உரத்து அதிதீவிரம் பெற்ற்ன. மேலே வாழும் மூதாதையரின் ஆவிகள் முகில்களின் மேலிறங்கி அவர்தம் உற்சாகத்தில் ஆரவாரிப்பதாக கல்லூரி கற்பனை செய்துகொண்டான். முழுக் கவனத்துடன் அவன் செவிமடுத்தான். இவ்வளவு நீண்டகாலமாக குரல்களுக்கு செவிமடுத்திருக்கும் அவன் இப்போது அம்மொழியை அறிந்துணர்தலின் நுழைவாயிலில் தானிருப்பதாக உணர்ந்தான். அதன் சுழற்சிகளுக்கு—அதன் ஏற்ற இறக்கங்களுக்கு—பழக்கப்பட்டுவிட்ட அவன் ஒரு நாள் அனைத்தும் திடீரென ஓரிடத்தில் குழுமி திரை விலகுமென்ற நம்பிக்கையில் உறுதிகொண்டு வந்தான். அவனது அறியாமையின் நிமித்தம் அவனுக்கு புரியாத ஏதோவொன்றை மூர்க்கமாக சொல்லவருகின்றாற்போல் இப்போது அந்த ஆவிகள் கார்முகில்சூழ் ஆகாயத்தில் கூச்சலிட்டன. செவிமடுக்கையில் திக்கற்றவனாக உணர்ந்தான்; அவனது கண்கள் பனித்தன. கையில் பெட்டியோடு தனது குடிசையின் வாயிலினூடாக மழை நிரம்பிய முகில்களை அவன் உற்று நோக்கினான். உரத்தவொரு இடிமுழக்கம் ஒலித்தது, முதற் மழைத்தாரைகள் பொழிந்தன. கனமழையில் குரல்களை தெளிவாகக் கேட்பது சாத்தியப்படவில்லை. குமிழைத் திருகி குரல்களை நிறுத்திய கல்லூரி, பெட்டியை அப்புறம் வைத்துவிட்டு வெளியே சென்றான். அவனது குடிசைக்கு முன்பு தனது வெறுமையான உள்ளங்கைகளை அவன் கொட்டும் மழையில் விரித்துவைத்துக்கொண்டு நின்றான்.

மாரிக்காலம் முற்றிலும் ஆவிகளின் குரல்கள் வலுவாக இருந்தன. மறுபுறத்திலோ இடதிலும் வலதிலும் மனிதக் குரல்கள் தளர்வாகக் கேட்டன. ஆவிகளின் குரல்கள் அவற்றை மேலோங்கிவிட்டதாகத் தோன்றியது. பாடல்களின் ஒலி கேட்கத்தக்கதாக இல்லாததால் ஜட்டுவிற்கு பெட்டியிலிருந்த ஆர்வம் குன்றிப்போனது. கல்லூரியோவென்றால் விசித்திர ஒலிகளைக் கேட்பதில் இப்போது மணித்தியாலங்கள் கணக்கின்றி முற்றிலும் மூழ்கிப்போனான். வேறெதைப்பற்றியும் அவன் கவலைகொள்ளாது ஒரு கனவுலகில் காணாமற் போய்விட்டாற்போல் தோன்றியது. அவன் உண்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டதால் தளர்வுற்று களைப்புற்றிருப்பதாக தோற்றமளிக்கத் துவங்கினான். ஜட்டுவையும் சேர்த்து அரிதாகவே அவன் எவரிடமும் பேசினான். அவனது குடிசைக்கு வரும் ஜட்டுவின் வருகைகள் சிறிது சிறிதாக அருகிவிட்டன.

மாரிக்காலம் முற்றுப் பெற்றதும் குளிர் தொற்றிக்கொண்டது. வருடத்தின் இப்பருவத்தின் வழமைக்கேற்ப மாலையொன்றில் தனது கழுதைகளுடன் தாடிவைத்த வயோதிப வணிகர் கிராமத்திற்கு வருகை தந்தார். உப்பு சர்க்கரை இத்யாதியோடு அவர் வழக்கமாக கிராமத்துப் பெண்டிர் பேராவல் கொள்ளும் வண்ண மணிகளும் கொண்டுவருவார். இம்முறை அவை அவரிடம் இருக்கவில்லை. அவர் சொன்னார்: “ஷூஃபரிஸ்தானிலுள்ள தசாரியாவிலிருந்து நான் அவற்றை வாங்கி வந்து கொண்டிருந்தேன். இந்த கோடைக்காலம் வரையில் நீங்கள் எல்லையை எந்த பிரச்சனையுமின்றி கடக்க முடிந்தது. மக்கள் விரும்பியபோதெல்லாம் போக்கும் வரத்துமாக இருந்தனர். ஆனால் இப்போது எல்லையெங்கும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அரிதாகவே அவர்கள் எவரையும் எல்லையைக் கடந்து ஷூஃபரிஸ்தானிற்குள் விடுகின்றனர். குன்றுகளையும் அவர்கள் கண்காணிப்பதை நான் கண்டிருக்கிறேன்.”

கல்லூரியின் பேசும் பெட்டி குறித்து கேள்விப்பட்ட வணிகர் அதைக் காண வந்தார். மாரிக்காலம் முற்றுப் பெற்றதிலிருந்து ஆவிக் குரல்கள் வலுவிழந்து போய்விட்டிருந்தன. வணிகர் உள்ளே வருகையில் கல்லூரி குமிழ்களைத் திருகி குரல்களை ஒலிக்க வைக்க முடியுமாவென்று முயன்று கொண்டிருந்தான். எனினும் அதற்கு மாற்றாக அவன் வெண்பட்டை இடப்பக்கம் இருக்கையில் வரும் குரல்களை மட்டுமே கேட்டமுடிந்தது.

பெட்டியை கணநேரம் நோக்கிவிட்டு ”இதை அவர்கள் வானொலி என்றழைப்பார்கள்” என்ற வணிகர் தொடர்ந்தார்: ”ஹக்கிமாபாதை நீ கேட்டுக்கொண்டிருப்பதாகப் படுகிறது. உனக்குத் தெரியுமா எமது நாட்டின் மக்கள் இப்போதெல்லாம் இதை கேட்பதைத் தவிர்க்கின்றனர். அரசாங்கம் இதை வெறுக்கின்றது; இதற்கொரு தடையுத்தரவும் இருக்கிறதென்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஐயத்திற்கிடமின்றி ஒதுக்குப்புறமான உங்கள் கிராமத்தில் கவலையுறத் தேவையில்லை.”

வணிகர் சென்று சில நாட்கள் கழிந்த பிறகு திரும்பி வந்த ஜட்டு, கல்லூரி கவலையுற்றிருப்பதைக் கண்ணுற்றான். குமிழ்களை எப்படித் திருகினாலும் குரல்கள் தெளிவாக வராதிருப்பதை கல்லூரி அவனிடம் காண்பித்தான். பெட்டியின் மாயசக்தி அதனை விட்டகன்று கொண்டிருப்பதாகத் தான் அஞ்சுவதாக அவன் கூறினான். பெட்டி இறந்து கொண்டிருந்தது.

நாளுக்கு நாள் பெட்டியின் வலிமை குன்றியது, குரல்கள் ஆற்றலிழந்து வந்தது. கையறுநிலையில் கல்லூரி தன் கண்முன்னே பெட்டி இறந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். தான் பயன்படுத்திய உடலை ஆன்மா விட்டகல்கின்றாற்போல் ஆவிக் குரல்கள் விரைவில் பெட்டியை விட்டகலப்போவதை அவன் தெளிவாகக் கண்ணுற்றான். ஆற்றாமை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு தன் குடிசையில் பொலிவற்று அமர்ந்தான்.

(03)

அண்மையில் கல்லூரியின் குடிசைக்கு செல்வதற்கு மாற்றாக சுற்றித்திரியத் துவங்கியிருந்தான் ஜட்டு. அவ்வப்போது கிராமத்தின் எல்லையில் இருக்கும் கற்பாறைமீது சென்றமர்ந்து கொண்டான். ஒரு நாள் தனது உயர்ந்த பரணிலிருந்து அப்பால் உற்று நோக்குகையில் சில மனிதர்கள் நெருங்குவதை ஜட்டு கண்ணுற்றான். அவன் திடுக்கிட்டான். வருகையாளர்கள் என்றால் அது வழக்கத்திற்கு மாறானதொரு நிகழ்வு. தனது கண்களை சுருக்கி, குதிரையின்மீது சவாரி செய்து அயலார் அவனை நோக்கி வருவதைக் கண்ணுற்றான். அவர்களனைவரும் காக்கி உடையணிந்திருந்தனர் மேலும் ஒவ்வொருத்தரும் தமது தோள்மீது நீண்ட பளிச்சிடும் குழல் கொண்ட ஏதோவொன்றை சுமந்திருந்தனர். அவர்கள் குன்றிலிருந்து இறங்கி சரிவின்மேல் முன்னேறி அவன் முன்னால் வருகையில், ஜட்டு கற்பாறையிலிருந்து குதித்து கிராமத்தை நோக்கி ஒடிச் சென்றான்.

தம்மிடம் வருகை தந்திருக்கும் படையினரைக் கண்டு கிராமத்தினர் வியப்புற்றனர், ஏனென்றால் இப்படி ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழ்ந்தது. படையினரின் தலைவன் ஒரு கேள்வி கேட்டான், ஆனாலது எவருக்கும் புரியவில்லையென்று தோன்றியது. படையினரில் ஒருவன் முன் வந்து அதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்டான், உடனே கிராமத்தார் பேசும் பெட்டியை வைத்திருக்கும் மனிதனை படையினர் காண முனைகின்றனரென்று அனுமானித்தனர். அவ்வருகையாளர்கள் கல்லூரியின் குடிசைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

படையினர் கீழிறங்கினர், கல்லூரி வெளியே அழைக்கப்பட்டான். சின்னப் பையனாகவும், செல்வச் செழிப்பாகவும் தோற்றமளித்த படைத்தலைவன் கல்லூரியின் பேசும் பெட்டியை பரிசோதித்தான். அவன் திரும்பி தனது கூட்டாளி ஒருவனிடம் “இது சீனத் தயாரிப்பு” என்றுவிட்டு தொடந்தான்: “நிச்சயமாக நாம் சீன வானொலிகளை இறக்குமதி செய்வதில்லை. இவன் இதை ஷூஃபரிஸ்தானில் பெற்றிருக்க வேண்டும்.” அதன் பிறகு படைத்தலைவன் கல்லூரியை கேள்வி கேட்கத் துவங்கினான்: கடந்த வருடம் அவன் எங்கே போயிருந்தான்? அங்கே அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? பெட்டியிலுள்ள ஆவிக் குரல்களைக் கேட்டு மகாமந்திர சக்திகளைப் தான் பெற்று வைத்திருப்பதாக அவர்கள் தன்னை சந்தேகிக்கின்றனரென்று அவன் நினைத்தான். தான் குரல்களுக்கு செவிமடுத்திருக்கும் உண்மையை மறைக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். அவன் ”இல்லையில்லை ஆவிக் குரல்களுக்கு நான் செவிமடுக்கவில்லை” என்றுவிட்டு தொடந்தான்: ”இதோ இங்குள்ள மனிதர்களின் குரல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.” கண்ணாடிக்குப் பின் இடதாக நின்ற வெண்பட்டையை நோக்கி சுட்டிக் காட்டினான். அந்த வானொலி நிலையத்தில் அவன் என்ன கேட்டிருக்கிறானென்று படைத்தலைவன் அவனை வினவினான். கல்லூரி ஆழ்ந்து யோசிக்கையில் படைத்தலைவன் தனது ஆட்கள் சிலரை அணுகி ”கிராமத்திலுள்ள பிறரைக் கேளுங்கள். அவர்கள் வானொலியில் என்ன கேட்டுக் கொண்டிருந்தனரென்று அறிய முயலுங்கள்” என்றான். படையினர் பரவிச் சென்று கிராமத்தாரை விசாரிக்கத் துவங்கினர். சற்றேறக்குறைய அரைமணியில் திரும்பி வந்த அவர்களில் ஒருவன் அறிக்கை கொடுத்தான்: ”அவர்கள் எந்த ஷூஃபரிஸ்தானி பிரச்சாரத்தையும் செவிமடுத்திருப்பதாகத் தோன்றவில்லை. இங்குள்ள மக்கள் முற்றிலும் அறிவிலிகள்; வானொலியில் கேட்கும் எதையும் இவர்கள் புரிந்து கொள்வார்களா என்று சந்தேகிக்கிறேன்.” படைத்தலைவன் அதற்கு “அவர்கள் அறிவிலிகளாக இருக்கலாம் ஆனாலும் நாம் தயாராக இருக்கவேண்டும். ஷூஃபரிஸ்தானி உளவாளிகள் இந்த பிராந்தியத்தில் ஊடுருவி விட்டனர்” என்றான்.

கிராமத்திலுள்ள வயதுவந்த ஆண்கள் அனைவரையும் சுற்றி வளைக்குமாறு படைத்தலைவன் தனது ஆட்களுக்கு கட்டளையிட்டான். ஒரு திறந்த வெளியில் கிராமத்தார் ஒன்றாக திரட்டப்பெற்றனர். குதிரைமீதேறிய படைத்தலைவன் தன் முன் குந்தியிருந்த கூட்டத்திடம் உரையாற்றினான்:

”உருக்கிப்பால் பள்ளத்தாக்கின் மக்களே, நீங்கள் கெளவுரதேசத்தின் குடிமக்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளுங்கள். நமது பெருமைக்குரிய நாட்டிற்கு எதிராக சொல்லப்பட்ட எதையாவது நீங்கள் இந்த வானொலியில் கேட்டிருந்தால்”—கல்லூரியின் வானொலியை அவன் தூக்கிக் காட்டினான்—”அல்லது எதிர்காலத்தில் வேறொருவர் உங்களுக்கு கொண்டுவரும் வானொலியில் நீங்கள் கேட்டால், நிச்சயமாக அவை பொய்கள் என்றறிக. தற்போது நமக்கெதிராக ஷூஃபரிஸ்தான் ஒரு கொடும் பிரச்சாரப் பரப்புரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த குன்றுகளுக்குள்”—கிராமத்தின் பின்னாலிருக்கும் குன்றுகளை நோக்கி அவன் கையசைத்தான்—”எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு இதொரு பெரும் வரம். எதிர்பாராதவிதமாக இதுவரையில் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த மாவட்டம் விரைவில் வளர்ச்சியடையப் போகிறது; நீங்கள் அனைவரும் புதிய திட்டங்களால் பயனடையப் போகிறீர்கள். கடந்த காலத்தில் ஷூஃபரிஸ்தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொந்தரவு தந்திருக்கவில்லை; எனினும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து உங்களது பூர்வகுடி நிலத்திற்கு அவர்கள் துணிந்து உரிமை கோரி வருகின்றனர். தொடர்ந்து ஒலிபரப்பு செய்து ஹக்கிமாபாத் உங்களை மூளைச்சலவை செய்ய முயல்கிறது. அபத்தமாக அவர்கள் உங்களை விடுதலை செய்யப் போகிறோம் என்கிறார்கள். அவர்கள் தம்மை சமூகவுடைமைவாதிகள் என்றும் ஏழைகளின் பாதுகாவலர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்; உண்மையில் அவர்களின் அரசு கொடும் சர்வாதிகாரமன்றி வேறன்று. இப்பள்ளத்தாக்கின் மக்களே, உங்களின் எதிர்கால நலன் கெளவுரதேசத்தில் உள்ளது. கெளவுரதேசம் நீடூடி வாழ்க!”

”கெளவுரதேசம் நீடூடி வாழ்க!” என்று படையினர் கூச்சலிட்டனர், கிராமத்தவரில் சிலரும் அதில் இணைந்து கொள்ள எத்தனித்தனர். அரிதாகவே எவரும் படைத்தலைவனின் பேச்சைப் புரிந்துகொண்டனர் எனினும் ஒருவரும் தமது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. திரட்டப்பெற்ற ஆண்களை சுற்றி பெண்டிரும் சிறுவரும் ஒரு வட்டம் அமைத்திருந்தனர்; அவர்களோடிருந்த ஜட்டு, குதிரைமீதமர்ந்து பேசிக்கொண்டிருந்த அயலானையும் அவனருகில் நின்றுகொண்டிருந்த கல்லூரியையும் மாறி மாறி மேனோக்கிக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு படையினர் செல்லத் தயாராயினர். ஒரு குதிரைமீது படையினன் ஒருவனுக்குப் பின்னால் கல்லூரி வைக்கப்பட்டான். படையினருக்குப் பின்னால் பகுதி தூரத்திற்கு சிறுவர்கள் கூச்சலிட்டவாறு சென்றனர். அவர்களில் ஜட்டுவும் இருந்தான். ஒவ்வொருத்தராக சிறுவர்கள் பின்வாங்கினர்; ஜட்டு மட்டுமே திரும்பிச் செல்லும் வருகையாளர்களை தொடர்ந்து சத்தமின்றி பின் தொடர்ந்தான். எப்பொழுதும் அவன் கல்லூரியை பார்த்துக் கொண்டிருந்தான் ஆனாலும் கல்லூரி அவனை நோக்கி ஒருமுறையேனும் திரும்பவில்லை. வெறுமையாக முன்னால் உற்று நோக்கியவண்ணம் கல்லூரி அமர்ந்திருந்தான்.

படையினர் கிராமத்தின் எல்லைக்கு வந்தனர். கல்லூரியின் வானொலியை படைத்தலைவன் தனது மேலங்கிப் பையிலிருந்து எடுத்து, தனது ஆட்கள் ஒருவனிடம் கொடுத்துவிட்டு “உன்னிடம் வைத்துக் கொள், சார்ஜெண்ட்” என்றான். வானொலியை தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்ட சார்ஜெண்ட் அதனை சோம்பேறித்தனமாக பார்வையிட்டான். குமிழொன்றைத் திருகி அவ்வானொலியை தனது காதினருகில் வைத்துக் கேட்டான். ”மின்கலன்கள் கிட்டத்தட்ட முற்றிலும் ஓடித் தீர்ந்துபோய்விட்டன” என்றான். பிறகு அவன் வானொலியை திறந்து மின்கலன்களை வெளியிலெடுத்தான்; அவற்றை சாதாரணமாக கணநேரம் நோக்கிவிட்டு அவை இரண்டையும் தூக்கியெறிந்தான். அதன்பின் வானொலியை அவன் மூடிவிட்டு அதனைத் தன் கித்தான் பையிலிட்டுக் கொண்டான்.

ஜட்டு தனது நடையை நிறுத்தி குதிரைக்காரர்கள் கடந்து செல்வதைக் கண்ணுற்றான். கற்பாறையை கடந்து சென்று சரிவின் கீழே சவாரி செய்கையில் பார்வையிலிருந்து அவர்கள் மறைந்து போயினர். சற்றைக்கு பின் சிறிதாகிப்போன அவர்களின் உருவங்கள் குன்றில் ஏறுவதைக் காண முடிந்தது. அதன் உச்சியை அடைந்து அவர்கள் மறுபக்கத்தின் மேல் இறங்கத் துவங்கினர். குன்றின் கீழே அவர்களின் தலைகள் மறைந்து போனதும் ஜட்டு விரைந்து முன்னேறினான். பிரகாசமான அவ்விரு செந்நிற மின்கலன்களை எடுத்துக் கொண்ட அவன், அவற்றை தனது கையில் பற்றிக்கொண்டு, வீட்டிற்கு ஓடிச் சென்றான்.

(00)

மொழியாக்கம்: ஆகி

விலாஸ் சாரங் கர்நாடகாவில் பிறந்து மராத்தியில் பயின்று, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று ஈராக் குவைத் மற்றும் மும்பையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். குறிப்பிடத்தக்க நவீனத்துவ எழுத்தாளர் இதழாசிரியர் மற்றும் விமரிசகராக அறியப்பெறும் இருமொழிப் புலமைபெற்ற இவரது சில நூல்களாவன: இக்கதை இடம்பெற்றுள்ள தொகுப்பான The Women in Cages, புதினமான The Dhamma Man மற்றும் கவிதைத் தொகுப்பான Another Life.

பட்டுவாடா

கலைச்செல்வி

அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும் சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.

நிற்காமல் வழிந்த நீரை துடைக்க முயலாமல் நடந்தான். கண்ணுக்கெட்டிய தொலைவில் குடிசையின் உச்சிகள் தெரியத் தொடங்கின. இது அவனுக்கு புதிய ஊர் அல்ல. அடிவாரத்திலிருந்து சிறிதளவே உயரத்திலிருந்த இந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள் அவன் வகுப்பில் படித்திருக்கிறார்கள். இப்போது .இறந்துக் கிடக்கும் அவனுடைய அம்மா இங்கு கத்தரி வற்றலும், அப்பளமும், உப்பு மாங்காயும் கொண்டு வருவாள். அதற்கீடாக பண்டமோ, பணமோ வாங்கிக் கொண்டு திரும்புவாள். சோனியாய் திரியும் நாய்கள், சாணம் மொழுகிய களங்கள்.. கால்நடைகள்… வளர்ப்புச் செடிகளை தொடர்ந்து குடிசைகள் தென்படத் தொடங்கின. தபால்களை கொடுக்கவும் சேகரிக்கவுமாக சென்ற அவனது அப்பா இப்போது இங்குதானிருக்கிறார் என்று திடீரென்று அதீதமாக நம்பத் தொடங்கினான். அந்த நம்பிக்கையின் முடிவில் ஆற்றுப்படுத்த முடியாத அழுகை வந்தது.  அவரை பார்த்து விட்டால் போதும் என்று மனதார எண்ணினான்.

கண்ணீரும்கம்பலையுமாக நின்ற அவனை பார்த்ததும் அந்த ஊர் பதறிப்  போனது. நிறுத்தவியலாத அழுகையோடு அவர்களிடம் தகவலை சொன்னான். “அடப்பாவீ.. நல்லாருந்த பொம்பளைக்கு என்னாச்சு திடுப்புன்னு..” என்று அங்கலாய்த்தது. இவன் ஒரே பிள்ளை என்று தெரிந்துக் கொண்டதில், “இந்தப் புள்ளக்கு ஒரு வழிய காட்டி வுடாம அப்படியென்ன அவசரமாம்..“ என்று பரிதவித்தது. அவனுடைய அப்பா நேற்று மதியமே கிளம்பி விட்டதாக வருத்தம் தெரிவித்தது,

”நா கௌம்பறேன்..” என்றவனை நிறுத்தி, “ஒங்கப்பா தபாலு மட்டுமா கொண்டாருவாரு.. நாட்டுல.. தேசத்தில நடக்கற நல்லதுகெட்டத அவரு வாயால கேட்டாதானே கேட்டாப்பல இருக்கும்.. மனுசன் இனிம ஒடஞ்சில்ல போயிடுவாரு..” என்று விட்டு சோற்றையள்ளி இலையில் வைத்தது. அவன் தீவிரமாக மறுத்து அழுதான்.

”தம்பி.. அவுத்தால மல கொஞ்சம் செங்கூத்தா போவும்.. பாத்துக்க.. வேணும்னா யாரவாது அனுப்பி வுடவா ஒத்தாசக்கு..” தவிப்பாய் உபசரித்தார்கள். அதையும் மறுத்து விட்டு கிளம்பினான்.

மலையேற்றம் அத்தனை புதிதில்லை என்றாலும் ஏற ஏற மலை உயர்ந்துக் கொண்டே செல்வது போலிருந்தது. அதுவும் அவர்கள் கூறியது போல செங்குத்தான பாதையாக இருந்தது. இதற்கு மேல் அவனுக்கு எல்லாமே புதிது. தன்னையும் ஒருநாள் அழைத்துச் செல்லுமாறு அம்மா, அப்பாவை கேட்டிருக்கிறாள். அதை நினைத்துக் கொண்டபோது மீண்டும் அழுதான். அப்பா பாசக்காரர்தான். ஆனால் பணியில் இடையூறுகள் வருவதை விரும்புவதில்லை. அவரை இப்போதே பார்த்து கதறி அழ வேண்டும் என்ற தோன்றியது. அந்த எண்ணமே அவனுக்கு நடப்பதற்கான தீவிரத்தை கொடுத்தது. கீழிருந்து பார்க்கும்போது இரட்டை மலைகளாக தெரிந்தவை மேலேறியதும் அடுக்குகளாய் பிரிந்துக் கிடந்தன. ஆயினும் ஆட்கள் ஆங்காங்கு நடமாடியது தெம்பளித்தது. அந்த வழியே வந்தவர்கள் அலுத்து களைத்திருந்த அவனுக்கு நீரோடையை கைக்காட்டி விட்டுச் சென்றனர். கைகளை குவித்து நீரை ஏந்தி முகத்தில் அடித்துக் கொண்டான். பிறகு அப்படியே அள்ளிப் பருகினான்.  பாதை மடிந்து திரும்பி ஊர்களை அடையாளம் காட்டியது. சிறு சமவெளிப் பரப்பு அது. அதில் குடியிருப்புகள் அடர்வாக பரவியிருந்தன

அவனுடைய அப்பாவை அங்கு எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. சேதியை கேள்விப்பட்டதும் அவர்கள், அவனுடைய அப்பாவின் மீது கரிசனம் கொண்டார்கள். அவர் மனம் தேறும் வரைக்கும் எங்கும் அலைய வேண்டாம் என்றும் தபால்களை தாங்களே வந்து வாங்கிக் கொள்வதாகவும் பரிவோடு சொன்னார்கள். மேலே முன்னேறியபோது மலையடுக்குகள் பாதை குழப்பத்தை ஏற்படுத்தின. அவர்கள் மேல் நோக்கி விரலை நீட்டியது எந்த மலையடுக்கை என்று புரியாமல் அங்கேயே நின்றபோதுதான் கால்களின் வலியை உணரத் தொடங்கினான். இத்தனை மக்கள் இங்கு வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு கால்களை தவிர வேறு பொது போக்குவரத்து ஏதுமில்லை என்பதும் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இங்கெல்லாம் அதிகபட்சம் மாலை நான்கு மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என்பார் அப்பா. அதற்குள் அவரை பிடித்து விட வேண்டுமே என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அவன் இன்று விழித்த நேரமே சரியில்லை. இல்லையெனில், இத்தனை பெரிய துரதிர்ஷ்டம் அவனுக்கு வாய்த்திருக்காது. அவனும் அப்பாவும் அம்மாவுமாக இருந்த அன்பான கூடு இன்று சிதைந்திருந்தது. அதை இந்த நொடி வரை அவனால் அப்பாவுக்கு தெரிவிக்க முடியவில்லை. ஒருவேளை அப்பா அருகில் இருந்திருந்தால் அம்மா இறந்திருக்க மாட்டாளோ..? தான் எண்ணியதை உறுதியாக நம்பினான். அம்மாவும் இதே எண்ணத்தோடுதான் இறந்திருப்பாள் என்றும் நம்பினான். ஏதோ ஒரு பாதையில் மனம் உந்தித்தள்ள நடக்கத் தொடங்கினான். நல்லவேளையாக அது சரியான பாதையாக இருந்தது. அப்பா அங்கு வரவேயில்லை என்றார்கள். பிறகு அவன் பதறிப் போனதை உணர்ந்து தபால்கள் ஏதுமில்லாத நாட்களில் அவர் ஊருக்குள் வராமல் செல்வது வாடிக்கையான ஒன்றுதான் என்றார்கள்.

அவன் அந்த பதற்றமான விஷயத்தை சொன்னதும் “எப்போது..“ என்று அதிர்ந்தார்கள். “இன்று அதிகாலை..“ என்றான். அதற்குள் அவர்களுள் ஒருவன் சரிவின் மறுப்பக்கத்திலிருக்கும் குடியிருப்புகளில் அவரின் இருப்பு தென்படுகிறதா என்று பார்த்து விட்டு வருவதாக புறப்பட்டிருந்தான். வேக வைத்த வள்ளிக்கிழங்கும், புளிப்பு ரசமும் கொடுத்தார்கள்.  அவர் நிச்சயம் இங்கிருந்து கிளம்பியிருக்கக் கூடும் என்று ஊகப்பட்டார்கள். அதையே அங்கு சென்று வந்தவனும் ஊர்ஜிதப்படுத்தினான்.

இதற்கு மேல் இங்கு நடமாடுவது அத்தனை நல்லதல்ல என்று வற்புறுத்தினார்கள். அவன் நிலைமையை சொன்னான்.

“பெரியவுங்க.. ஊர்க்காரங்கள்ளாம் இருக்காங்கள்ள.. பாத்துக்குவாங்க.. ராத்தங்கீட்டு போறதுதான் நல்லது..” என்றனர்.

அவர் தபால்களோடு எப்போது கிளம்பினார் என்று அக்கறையாக விசாரித்தனர். செவ்வாய்கிழமை காலையில் என்றான். திங்களன்று அம்மாவுக்கு துணிதுவைக்கும் சோப்புகளும், இரும்பு வாணலியும் வாங்கி வந்தார். பிறகு பொட்டுக்கடலையை மறந்து விட்டதாக அவள் நாக்கைக் கடிக்கவும், மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவன் ஓடை நீரில் விளையாடிக் களைத்து ஊற வைத்த பருப்புப் போல உப்பி.. வெளிறி.. திரும்பியிருந்தான். அவன் பொறுப்பற்று போனதற்கு அவர் செல்லம் கொடுத்து வளர்த்ததுதான் காரணம் என்று வழக்கம் போல அம்மா குற்றச்சாட்டை வீச.. அவர் “இன்னொருக்கா மந்திரிச்சு கயிறு கட்டுனா தானா சரியாப் போயிடும்..“ என்றார் சமாதானமாக. “ம்க்கும்..“ என்றாள் அம்மா அசுவாரஸ்யமாக. ”தோட்டத்தில மாங்கா செங்காயா வுளுந்துக் கெடந்துச்சு.. எடுத்தாந்து புட்டில போட்டு வச்சிருக்கேன் பாரு.. பச்சடி வச்சா நல்லாருக்கும்..” என்றார் சேறு அப்பிய கால்களை மூங்கில் காலோரம் கழுவிக் கொண்டே. அவரிருக்கும் நாட்களில் வீட்டில் சமையல் தடபுடலாகவே இருக்கும்.

செவ்வாய்க்கிழமை காலையில் கிளம்பினால் சனிக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுவார். அன்று மீதமானதுகளே அடுத்தநாளுக்கும் போதுமானதாக இருக்கும். அம்மா புதன்கிழமை இவனுக்காக கோழி வாங்கி வருவாள். அதில் காலும் தலையும் மட்டுமே அவளுக்கு. அப்பா எப்போதும் கோழி சாப்பிடுவதில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி குழம்பு தின்ற கையோடு, சந்தைக்கு தேவைப்படும் காய்களை வயலில் அறுத்து கட்டி எடுத்து வருவார்.

இரவு முழுவதும் பனி மூடிய நிலவொளியில் மலை குளிர்ந்துக் கிடந்தது. பதியாட்கள் கேப்பைக்கூழும், கீரையுமாக அவனை உண்ண வைத்தனர். பழக்கமின்மையால், ஊடுருவிய குளிருக்கு அவர்கள் அளித்த போர்வை கால்வாசிக் கூட காணவில்லை. ஆயினும், நடையலுப்பு கண்களை அசத்தியது. அவன் கண்விழித்த நேரத்தில் பளிச்சென்று பகல் புலர்ந்திருந்தது. முப்புறமும் கரும்பாறைகள் உயர்ந்து நிற்க, இயல்பாக தோன்றிய ஓடைப்பள்ளத்தில் உடலை சுத்தப்படுத்திக் கொண்டான். கேழ்வரகு ரொட்டியும் பானகமும் கொடுத்தனர். கிளம்பும்போது இலையில் கட்டிய புட்டுமாவை நீட்டினர்.

பசுமையாக படர்ந்திருந்த வனம் அமைதியாக அவனுடன் வரத் தொடங்கியது. மரங்களின் இடைவெளிக்குள் சூரியன் அவனை பாதுகாப்பாக செலுத்திக் கொண்டிருந்தது. கொடிகள் கூட அனாயசமான புஷ்டியோடு மரங்களோடு எழும்பி நின்று விழுதுகள் போல தொங்கிக் கிடந்தன. சில இடங்களி்ல் தரையே தெரியாத அளவுக்கு செத்தைகள் அடர்ந்திருந்தன. சரிவில் மரங்கள் அடர்ந்திருந்தன. பாதை செங்குத்தாக மேலேறி சென்றது. சிறு பெண்கள் குழுவொன்று பொதுபொதுப்பான ஈரமண் ஒட்டிய கிழங்குகளுடனும் கீரைக்கத்தைகளுடனும் எதிர்புற சரிவிலிருந்து மேட்டுக்கு ஏறிக் கொண்டிருந்தது. காற்று சற்றே வேகம் கூட்டி சுழன்றதில், துாரத்தில் எங்கோ மரக்கிளை முறித்து விழும் சத்தம் கேட்க, அவன் திடுக்கிட்டுப் போனான்.  “ஒங்க பின்னுக்குதான் வர்றோம்.. பயந்துக்க வேணாம்..” என்றார்கள் அந்தப் பெண்கள்.

சிறு வெட்கத்தோடு நடந்தான். நட்டு வைத்த துடைப்பங்களாக ஈச்சம் புற்கள் வழியெங்கும் பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கூட்டமாக பெண்கள் சீமாறு புல் அறுத்துக் கொண்டிருந்தனர். இடையில் ஓடையொன்று குறுக்கிட்டது. அதன் கரையெங்கும் கோரைகள் ஆளுயுரத்திற்கு முளைத்துக் கிடந்தன. தாழ்ந்து படர்ந்திருந்த மரங்களில் குரங்குகள் தாவி குதிக்க… அதன் நீண்ட வால்கள் ஓடைக்கும் மரங்களுக்குமிடையே பாலம் போல தொங்கின. குரங்குகளின் குதியாட்டத்தில் சருகு இலைகள் ஓடைக்குள் உதிர்ந்தன. குனிந்து ஓடை நீரை அள்ளியடுத்து பருகினான். நல்ல சுவையான நீர். அவனின் பிம்பம் நீரில் விழுந்திருந்தது. “அவருக்கு இவ்ளோ பெரிய பையனா..“ நேற்றிரவு அவர்கள் இவனைக்கண்டு ஆச்சர்யப்பட்டதை எண்ணிக் கொண்டான். ஈரம் செறிந்த கரையில் படர்ந்திருந்த புற்கள் அவன் காலடியில் மசிந்து, பிறகு திமிர்த்து நிமிர்ந்தன.

அடுத்தடுத்த கிராமங்கள் அருகருகே இருந்தன. அவை எல்லாவற்றிலிருந்தும் அப்பா நழுவிச் சென்றிருந்தார். இனி மேலேற வேண்டிய அவசியமில்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது.  அவர்கள் அளித்த கருப்பட்டி காபியை அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து அருந்தினான். களியும் கீரை பிரட்டலையும் இலையில் ஏந்தி வந்த பெண் அழகாக இருந்தாள்.

தொலைவிலிருந்த கிராமங்கள் அருகே வரத் தொடங்கியிருந்தன. மலைச்சரிவில் சற்றே ஏறி, அடுத்திருக்கும் தாழ்வான சமவெளி கிராமங்களை முடித்துக் கொண்டு, கீழிறங்க வேண்டியதுதான். கீழிறங்கும்போது பாதைக் குழப்பம் வராது. அதிக நேரமும் தேவைப்படாது என்றார்கள்.  அடிவாரத்திலிருந்து இரண்டு மணி நேர பேருந்து பயணத்திலிருந்தது அவனது கிராமம்.

சூரியன் மரங்களுக்கிடையே பம்மி பம்மி நகர்ந்தது. மதிய நேரத்து வெயில் என்றாலும் குளிர்ந்த உடலுக்கு இதமாகதானிருந்தது. சரிவிலிருந்த குடியிருப்பின் தலைபாகங்கள் தெரிய தொடங்கின. இன்னார் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின் அவர் கிளம்பி விட்டதாக கூறினார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அப்பாவுக்கு தகவல் எட்டியிருப்பதை ஊகிக்க முடிந்தது. அவனுக்கு தாகம் எடுத்தது.  நீர் வேண்டுமென்றான். குடுவையில் அளித்த நீரை அருந்தி விட்டு, மீதியை முகத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டான். குடுவையைப் பெற்றுக் கொண்ட பெண் அம்மாவுக்கு என்னாச்சு.. என்றாள் பரிவாக. குபீரென்று பொங்கி வந்த துக்கத்தோடு “செத்துட்டாங்க..“ என்றான் சிதறலாக. அவள் காலைக் கட்டிக் கொண்டிருந்த சிறுவன் எதற்கோ சிணுங்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ தின்பண்டத்தை அவனிடம் நீட்ட, சிறுவன் அழுகையை நிறுத்தி விட்டு அதை சாப்பிட ஆரம்பித்தான். அவனது வலதுக்கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிறு லேசாக அவிழ்ந்து தொங்கியது.

சமவெளியை நெருங்கி வர வர நடமாட்டம் அதிகமிருந்தது. ஆண்களும் பெண்களும் ஏதோ நிமித்தம் அலைந்துக் கொண்டிருந்தனர். எல்லோரையும் விட அவனுடைய அப்பா மட்டுமே கடும் சவாலான வேலை பார்ப்பதாக எண்ணிக் கொண்டான். அதோடு அப்பாவை எல்லோரும் அறிந்திருப்பது பெருமிதமாக தோன்றியது.  அதே நேரம் பழக்கப்படாத தனது கால்களே இரண்டு நாட்களுக்குள் பயணத்தை முடித்துக் கொண்டபோது அப்பாவுக்கு நான்கு நாட்கள் தேவைப்படுவது வியப்பளித்தது.

இறக்கம் சரசரத்து அவனை சமவெளியில் சேர்த்திருந்தது. அங்கும் அப்பா அறிமுகமாகிதானிருந்தார். சொல்லப்போனால் அவன் கொண்டு வந்த சேதியை அவர்களும் கேள்வியுற்றிருந்தனர். ”நாங்கதான் அவர காரு புடிச்சு அனுப்பி வச்சோம்.. நீங்க அவர தேடிக்கிட்டு வாரது தெரியாது தம்பி..” என்றார் அங்கிருந்த ஓட்டல்காரர் ஒருவர்.

”காரு புடிச்சார்ரோம் தம்பி.. செத்த ஒக்காருங்க..” உள்ளே அழைத்துச் சென்றார்.

”கொஞ்சமா சாப்டுக்கங்க.. சடங்குசாத்திரமெல்லாம் முடிஞ்சு சாப்பாட்ல கை வைக்க ரொம்ப நேரமாயிடும்..” பரோட்டாவை பிய்த்து வைத்து குருமாவை ஊற்றினார். “நல்ல மனுசன்.. ஒங்கம்மாவுக்குதான் குடுத்து வைக்கல..” என்று வருத்தப்பட்டார். அதற்குள் கார் வந்திருந்தது. அவனும் சாப்பிட்டு முடித்திருந்தான்.

”எலைய அப்டியே வச்சிட்டு கைய கழுவிக்கங்க தம்பீ.. காரு வந்துருச்சு..” டிரம்மிலிருந்த நீரை முகர்ந்து  ஊற்றினார்.

வலது கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற கயிற்றை இயல்பாக பின்னுக்கு தள்ளிக் கொண்டு கையை கழுவினான். மந்திரித்த கயிறு அது. அப்பாவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். அந்த சிறுவனின் கையிலும் இதேமாதிரியான கயிறு இருந்தது நினைவுக்கு வந்தது. தொடர்ச்சியாக, தபால் பட்டுவாடாவை அப்பா வேண்டுமென்றே நான்கு நாட்களுக்கு இழுப்பதாக தோன்றியது.

இவன் வீடு திரும்பியபோது அவனுடைய அப்பா சடலத்தின் வலப்பக்கத்தில் குனிந்தபடி அழுதுக் கொண்டிருந்தார். இவன் சடலத்தின் இடதுபுறம் சென்று நின்று கொண்டான்.

 

***

தனிமை

காலத்துகள்

‘பை நாளைக்கு சாயங்காலம் பாக்கலாம்’ எப்போது போல், வானில் தோன்றியவுடன் அவனுடன் சில வினாடிகள்பேசிய வீனஸ் உலாக் கிளம்ப, அவளுடைய மாலை வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சில நட்சத்திரங்கள் அவள் பின்னால் அதீத சிமிட்டலுடன் செல்வதைப் பார்த்தபடி இருந்த துருவன் மீண்டும் தனிமைப்பட்டான். சற்று தொலைவில் மினுங்கியபடி தோன்ற ஆரம்பித்திருந்த விண்மீன்களைஅவன் அழைக்க, அவை வெறுமனே கையசைத்து விட்டு நாலைந்து பேராகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தன. ‘நானும் வரேன்’ என்று அவன் சொல்ல, ‘ஐயோ நீ ரொம்ப பெரிய ஆளு, உன் லெவலுக்கு நாங்க வர முடியாது’ என்று விலகிச் சென்றார்கள். சேர்த்துக்கொண்டாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை, ஒருபோதும் தோற்க விடுவதில்லை, அதற்கு இப்படியே இருந்து விடலாம்.

எல்லாம் ‘அவரின்’ உபயம். தந்தைமடியில் உட்காரும் பிரச்சனையில் ஆரம்பித்து, அந்த ஆசை நிறைவேற ‘அவரை’ நோக்கி தவம் செய்து, பின் ‘அவரின்’ அருளால் விண்ணில் இந்த இடத்திற்குவந்து சேர்ந்தது’அவருக்கு’ அணுக்கமானவனாகமற்றவர் அவனை குறித்து எண்ண வைத்துள்ளது. முன்பெல்லாம் அவருக்கு பிரியமானவனாக இருப்பது பற்றி பெருமிதம் கொள்வான், அவரும் பாற்கடலிலிருந்து கிளம்பி விண்ணுலா செல்லும்போதெல்லாம்இவனருகில் வந்து சில அன்பு வார்த்தைகள் பேசி விட்டுதான் செல்வார். பின் அவரைக் காண்பது அரிதாகியது, இப்போது எந்த அவதாரத்திற்கான முஸ்தீபுக்களில் இருக்கிறாரோ. அல்லது இனி எந்த அவதாரத்தினாலும் பயனில்லை என அவருக்கு பிடித்தமான ஆழ்நித்திரையில் இருக்கலாம், சிக்கிக் கொண்டது நான்தான்.

நடந்தவையெல்லாம்இப்போது மங்கலாகத் தான் நினைவில் உள்ளது, ஆசைப்பட்டது போல் தந்தை மடியில் உட்கார்ந்தேனா, என்னை மீண்டும் பெற்றோருடன் சேர்க்காமல் ஏன் இங்கு தனியாக அமர வைத்தார். இப்படி முடிவற்ற தனிமையில் உழல்வதற்கு பூமிலேயே வாழ்ந்து முடிந்திருக்கலாம். இப்போதெல்லாம் மினுங்கக் கூட மனமிருப்பதில்லை.

oOo

துருவனுக்கு எதிரே இருந்த, சமீபத்தில்தான் கட்டி முடித்து குடும்பங்கள் குடியேற ஆரம்பித்திருந்த அபார்ட்மென்ட்டின் மூன்றாம் தளத்தில் உள்ள வீட்டின் உள்ளறைக்குள் நுழைந்த ஐந்தாறு வயதிருக்கக் கூடிய சிறுவன்,ஜன்னலையொட்டி இருந்த நாற்காலியின் மீதேறி ஜன்னல் கம்பிகளை பிடித்து வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தவன், ‘இன்னிக்கு பத்து ஸ்டார்ஸ் புதுசா இருக்குமா’ என்று,தட்டில் சாதத்துடன் ‘சாப்டுடா’ என்றபடி வந்த அம்மாவிடம் சொன்னான். ‘அதோ போல் ஸ்டார்’ என்றான் சிறுவன்.

‘அது இருக்கட்டும், சாப்புடு’.

‘அந்த ஸ்டார் மட்டும் ஏம்மா எப்பவுமே தனியா இருக்கு, அதுக்கு ப்ரண்ட்ஸ் இல்லையா’

‘சொல்றேன் ஒரு வாய் சாப்பிடு’

‘மூன் இன்னும் வரலையே, இன்னிக்கு ப்ளூ மூன்தான, ஸ்நேக்மூன கடிக்கறதால அது ப்ளூ ஆயிடுதா’

‘ஆமா சாப்பிடு’

‘பாம்பு மூன ஒரே அடியா முழுங்கிடுமா, இல்ல கடிக்க மட்டும் செய்யுமா’

‘மூன் சரியா சாப்பிடாட்டி பாம்பு முழுங்கிடும், உன்னையும்தான்’

‘பாம்போட ஸ்டமக் இருட்டா இருக்குமா’

‘நாளைக்கு கேட்டு சொல்றேன், இந்தாகடைசி வாய்’ஊட்டி விட்டு அம்மா, ‘அந்த பாம்பு கிங் கோப்ராவா, அனகோண்டாவா’ என்ற சிறுவனின் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினாள்.அவள் வேலை முடிந்தது. மீண்டும் வெளியே பார்த்தபடி’பாவம் மூன்’ என்று முணுமுணுத்தபடி இருந்தவன் பின் சித்திரக் கதையொன்றைபடிக்க ஆரம்பித்தான்.

oOo

‘என்ன அங்கேயே பாத்துட்டிருக்க’ என்ற குரல் கேட்டு துருவன் திரும்பினான். நிலா.

‘சாங்காலம் அந்த அபார்ட்மென்ட் பையன் ஒன்ன பாம்பு வெறுமனே கடிக்குமா, இல்ல முழுசாமுழுங்கிடுமான்னுகவலைப்பட்டுக்கிட்டுக்கிருந்தான் ‘ என்று துருவன் சொன்னதற்கு நிலா உரக்க சிரிக்க அந்த இடத்தில் ஒளி இன்னும் வலுவானது.

‘பாவம் தனியா இருக்கான், அபார்ட்மென்ட்ல அவன் வயசுல வேறகுழந்தைங்க இல்லல’ என்று நிலா கேட்க, ‘ஆமா, சாயந்திர நேரம் பூரா ஜன்னலேந்து வெளியே எட்டிப் பாத்துக்கிட்டுருப்பான்’

‘தனியா இருக்கறது எவ்ளோ கொடுமைனு எனக்குத் தெரியும்’ என்று நிலா சொல்ல, ‘என்ன விட நீங்க ரெண்டு பேரும் எவ்வளவோ மேல். இன்னிக்கு அந்த பையனோட அம்மா அவனுக்கு பருப்பு சாதம் தந்தாங்க, நெய்வாசனை இங்க அடிச்சுது. எங்கம்மாவும் எனக்கு அத ஊட்டி விட்டிருக்கா, இப்ப யாரு… உனக்கு மட்டும் என்ன, எல்லாரும் ஒன்னத்தான் பாக்கறாங்க, கவித எழுதறாங்க. ஒனக்கு நல்ல அதிர்ஷ்டம், நா தான்எப்பவுமே தனியா இருக்கேன், என்ன யாரும் கண்டுக்கறது இல்ல’

‘என்ன கவித எழுதி என்ன, காதல்ல ஜெயிச்சவுடனேஅம்போன்னுவிட்டுட்டு போயிடறாங்க. ஒனக்காவது நெறய நட்சத்திர சொந்தம் இருக்கு, மத்த ப்ளானட்ஸ் மாதிரி இல்லாம எர்த்க்கு நான் மட்டும்தான். ஐ ஆம் மோர் அலோன்.’

‘அப்படிலாம் சொல்லாத,…’

‘ஒங்க ரெண்டு பேருக்கும் அப்பா அம்மா இருந்தாங்க, இருக்காங்க, எனக்கு? அப்படி யாராவது இருக்காங்களா, இல்லையானே தெரியாது’

‘..’

‘அவ்ளோ ஏன் என்னோட ஒளியே எனக்கு சொந்தம் இல்ல, சூரியன் கிட்டேந்து கடன் வாங்கறேன்’

‘..’

எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருக்கும் பின்ஜாம நேரத்தில் மினுங்குவதை கிட்டத்தட்ட நிறுத்தி துருவன் மீண்டும் மிளிர ஆரம்பித்து சிறுவனின் அபார்ட்மென்ட்டைசில கணங்கள் கவனித்த பின், மேகத்தின் மீது படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலாவை ‘எழுந்திரு’ என்று தட்டினான். ‘ட்யுடி டைம் முடிஞ்சிருச்சா’என்றபடி துயில் கலைந்தநிலாவிடம் ‘அதெல்லாம் இல்ல, வா போலாம்’ என்றான் துருவன்.

‘எங்க கூப்பிடற’

‘அந்தக் குட்டிப் பையன் கனவுக்குள்ள’

oOo

உடல் நீலம் பாரித்திருந்த நிலவை பாதி விழுங்கியிருந்த, தலையில் நட்சத்திரமொன்று பூத்திருந்த கருநாகத்தின் வாலைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்தான் சிறுவன். ‘நானா அது’ என்று நிலாவும் துருவனும் ஒரே நேரத்தில் கூறியதை’கஜேந்திரா, கஜேந்திரா’ என்று கத்திக் கொண்டிருந்தான் சிறுவனின் ஒலி அமிழ்த்தியது. ‘தப்பு தப்பா கூப்படறான், காப்பாத்த ஒருத்தரும் வர மாட்டாங்க ‘ என்று நிலா சொல்ல,’சரியா கூப்பிட்டா மட்டும் என்ன ஆகப் போகுது, அவர் வந்து இவனையும் தனியா வானத்துல ஒக்கார வெச்சுடுவாரு’ என்றபடிதுருவன் சிறுவனின் அருகே சென்றான். அவர்களை நோக்கிய சிறுவன் ‘இன்னொரு மூன்’ என்று உரத்த குரலெழுப்பியபின் திரும்பிப் பார்த்து ‘எங்க பாம்பு, ப்ளூ மூன்’ என்று அரற்ற ஆரம்பிக்கவும், ‘சத்தம் போடக் கூடாது’ என்றபடி துருவன் அவனுடைய வலது கையையும்,நிலா அவனுடையை இடது கையையும்பற்றிக்கொள்ள மேலெழும்பி வான்வெளிக்கு வந்தார்கள்.

‘மூன் நீ எப்படி பாம்பு கிட்டேந்து தப்பிச்ச, கலர் திருப்பி வெள்ளையாயிட்டியே’

‘பாம்புலாம் ஒன்னும் இல்லப்பா.’

‘இல்ல, இருக்கு, அதனாலத்தான் நீ இன்னிக்கு ப்ளூ ஆயிட்ட, அந்த ராகுதான ஒன்ன கொத்த வரான் அவனுக்கு பயந்துதான் நீ அப்பப்ப காணாமப் போயிடற’

‘அவன் ஏன்பா என்னை கடிக்கணும். நான் சும்மா எர்த்க்கு பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன்’ என்று நிலா சொல்லிக்கொண்டிருக்கும்போதே’பாவம் அந்தாளே தலை வேற உடம்பு வேறையா ரொம்பா காலமா சுத்திட்டிருக்காரு’ என்ற துருவனைப் பார்த்து ‘சும்மாரு’ என்றாள்.

‘எதுக்கு நீ ஒளிஞ்சுக்கற’

‘ஒன்ன மாதிரி சின்னப் பசங்க என்ன கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கறதுக்காக தான்’

‘என்னையும் சேத்துக்க அதுல’

‘அடுத்த வாட்டி கண்டிப்பா நீயும் உண்டு’

‘என்னையும் சேத்துக்கோ’ என்ற துருவனை முறைத்தாள் நிலா.

‘போல் ஸ்டாரையும் சேத்துக்கலாம், பாவம்’

‘அவனுக்கு நெறய வயசாச்சு, ஒன்ன மாதிரி கொழந்தை இல்ல அவன்’

‘ப்ளீஸ்’ என்று சிறுவன் கெஞ்ச ‘சரி, ஒனக்காக’ என்ற நிலாவைக் கட்டிக்கொண்டவன் ‘ரொம்ப ஜில்லாப்பா இருக்கு’ என்றான். பின் துருவன் பக்கம் திரும்பி ‘நீ மட்டும் எங்கேயும் போகாம செம் ப்ளேஸ்ல இருக்கியே, ஏன்’ என்று சிறுவன் துருவனிடம்கேட்டதற்குஅவன்பதில் தேடிக்கொண்டிருக்க நிலா ‘லேட்டாயிடுச்சு வீட்டுக்கு போலாம் வா’ என்றாள்.

‘எனக்கு ஸ்கை மொத்தத்தையும் சுத்திக் காட்டுங்க, அதோட என்ட் வரைக்கும் போயிட்டு வரணும், அப்பறம் ராகுவ பாக்கணும்’

‘இன்னிக்கு வேண்டாம், நாளைக்கு நைட் ஒன்ன கூட்டிக்கிட்டு போறேன்’ என்றபடி அவனைமீண்டும் தூக்கத்தினுள் அழைத்துச் சென்று திரும்பினாள் நிலா.

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்தபடி ‘பாம்பு ஒன்ன முழுங்க ஆரம்பிச்சது மட்டும் தான் கனவா, இல்ல இப்ப நடந்ததும் கனவு தானா’ என்று துருவன் கேட்க’கனவுன்னா யாரோடது? பையனோட கனவா, அதுல நாம நுழைஞ்சோமா, இல்ல கனவு கண்டதே நானோ நீயாகவோ இருக்கலாமில்லையா. இப்ப நாம பேசறது கூட கனவில்லைன்னு சொல்ல முடியுமான்ன’ என்றாள்நிலா.

‘குழப்பாத, அப்ப எது தான் நிஜம்’

‘வாட் ஈஸ் லைப், இப் நாட் பட் அ ட்ரீம்’

oOo

அடுத்த நாள் மாலை ‘ஹாய்’ என்றபடி பிரகாசமாக வந்தாள் வீனஸ். ‘ஹாய்’ ‘என்ன ரொம்ப பரபரப்பா இருக்க’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’

‘…’

‘என்ன அந்த அபார்ட்மெண்ட்டையே பாத்துக்கிட்டிருக்க,’

‘ஒண்ணுமில்ல’

‘…’

‘இன்னிக்கு கண்டுக்கவே மாட்டேங்கற’

‘அப்டிலாம் இல்ல’

சில வினாடிகள் கழித்து ‘ஒனக்கு நெறைய எடத்துக்கு போணும்ல’ என்று துருவன் கேட்க ‘போனாப் போறதுன்னு உன்கிட்ட தினோம் ரெண்டு நிமிஷம் பேசினதுக்கு எனக்கு தேவை தான். எனக்கென்ன ஆளா இல்லை’ என்று கிளம்பிய வீனஸின் பின்னால் எப்போதும் போல் விண்மீன் குழுவொன்று தொடர்ந்து சென்றது.

‘அந்தபையன் வருவானான்னு பாத்துக்கிட்டிருக்கியா’ என்றபடி நிலா வந்தாள்

‘வருவான், ஆனா அவனுக்கு நேத்து நடந்தது ஞாபகம் இருக்குமான்னு தான் தெரியல’

‘அது யாரோட கனவுங்கறத பொறுத்துதான் இருக்கு’

‘அம்மா தாயே, நீ திருப்பி ஆரம்பிக்காத’ என்று துருவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அபார்ட்மெண்ட் ஜன்னலில் சிறுவன்.கையசைத்த அவனை நோக்கி துருவன் மினுங்க, குட்டிப் பயல் கைதட்டினான். ‘என்னத்த பாத்துடா கைதட்டற’ என்று உள்ளே வந்த அம்மா கேட்க ‘என் ப்ரண்ட்ஸ்மா’ என்றான். ஜன்னல் பக்கம் திரும்பாமல் ‘பாத்து நில்லு சேர் வழுக்கிடப் போகுது’ என்று கூறிவிட்டு அம்மா அறையை விட்டு வெளியே சென்றாள்.

கைதட்டியபடியே ‘இன்னிக்கு நைட் என்ன கூட்டிகிட்டு போணும்’ என்ற சிறுவனின் கூக்குரலைக் கேட்டு நிலா கன்னக் குழி விழ முகம் மலர, அவளுள்ளிலிருந்து முதல் முறையாக ஊற்றெடுத்த, சூரியனிடமிருந்து வருவதை விட அடர்த்தியான மஞ்சள் நிற ஒளியைக் கண்டு துருவன் சிரித்தான். அந்த மஞ்சள் சிரிப்பொலியை கேட்டு மற்ற கோள்களும், நட்சத்திரங்களும்தங்கள் இயக்கத்தை நிறுத்தி அவர்களிருவரையும்விழி இமைக்காமல் பார்த்தபடி இருந்தன. சீம்பாலின் நிறத்திற்கு மாறிய பாற்கடலின் அலைக்காற்று அங்கு துயில் கொண்டிருந்த ‘அவர்’ மீது பரவ கண் திறக்காமல் புன்னகைத்தார். பாதாள உலகில், மூன்று தலையுடைய தன் காவல் நாய்மஞ்சள் ஒலிகற்றையை சுவாசித்துமயங்கிதன் சர்ப்ப வாலை தரையில் தட்டியபடி படுத்து விட்டதை கண்ட ஹேட்ஸ், தன் சக பேரரசரான மகாபலியிடம் அந்த இனிய ஓசை குறித்து வினவ அவர் தமிழும், மலையாளமும் கலந்த மொழியில் விளக்கினார். அந்தி மாலையின் வண்ணங்களினால் நனைந்திருந்த பூலோகத்தை சிறுவனின் கைதட்டல் மென் ஊதா நிறமாக நிரப்ப மானிடர் ஒரு கணம் மயங்கி நின்றனர்.

பசியின் பிள்ளைகள்

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் 3

 

————

 

வில்லியமிடம் அப்போதே நான் சொல்லியிருந்தால்? ஜூலியா எண்ணினாள்.  அப்போதே சொல்லியிருந்தால், அவன் பையனை வெளியேற்றியிருப்பான்; பையன் வெளியேறியிருந்தால், பரிசோதனைகளைச் செய்திருக்க முடியாது; பரிசோதனைகளில் அவன் மூழ்கியிராவிட்டால், அவன் பித்துப் பிடித்தது போலாகியிருக்க மாட்டான்.

————-

வண்டியின் கூரை மீது தாளமிடும் மழைத்துளிகளை கூர்ந்தவாறு அவள் கண்களை மூடிக்கொண்டாள். வெளியே எங்கோ ஒரு தேவாலய மணி ஏழு முறை அடித்து ஓய்கிறது; வெறுமையான, காற்றில் மிதக்கும் மணிச்சத்தம். டாக்டர் பெயர்ஸ் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

நான் அந்த ஆர்வமிக்க பெண்ணாக இன்னும் இருக்கக் கூடும், அவள் எண்ணிக் கொண்டாள், கூந்தலில் கெமோமில் பூக்களும்,கழுத்தில் பூசிய பன்னீருமாக.

நான் அப்போதே அவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .

———

குளிர்காலத்தின் முதல் புயல் அக்டோபரில் வந்தது. பனி அடர்ந்த, நீரிணைக்கு அப்புறமிருந்து ஓலமிடும் காற்று  அவர்களின் குடில் கதவுகளை படபடவென்று அடித்துக் கொண்டும், கரி படர்ந்த புகைபோக்கியில் நெருப்பு பொறி பறக்க விட்டுக் கொண்டும் வந்து சேர்ந்தது. ஜூலியா குடில் மரச்சுவர்கள் பனியால் நனைந்து கிடப்பதை பார்த்தவாறு விழித்தாள்.  போர்வையின் மேல் பூத்தாற்போல் படிந்துகிடந்த பனியை சன்னல் வெளியே பரவிக்கிடந்த நீர்கோர்த்த ஒளி இன்னும் வெண்ணிறமாக காண்பித்தது. கன்னங்கள் கணப்பில் எரிய, முதுகோ குளிரில் நடுங்க அவள் அடுப்பின் மிக நெருங்கி நின்றுகொண்டாள்.

பாத்திரங்களை கழுவிவிட்டு, படுக்கையைப் புரட்டி போட்டுவிட்டு, குடிலைக் கூட்டிவிட்டு, புகைபடர்ந்த விளக்குகளை சுத்தம் செய்துவிட்டு… உடை மாற்றிக்கொண்டு, அறைக்குள்ளேயே நெஞ்சு படபடக்கும்வரை ஸ்கிப்பிங் செய்தாள். மேசைமீது தலை சாய்த்து அவளைப் பார்க்கும் அந்த பாடம் செய்த குருவியைப் பார்த்துக் கேட்டாள் – இன்று மதியம் என்ன செய்யப்போகிறோம்? மிதக்கும் வெப்பக்காற்று பலூன் ஒன்றில் லண்டன் பறந்து போவோமா? இல்லை, ஏதென்ஸ்? நீலக்குருவி பதிலொன்றும் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக ஜூலியா தான் இன்னும் கொஞ்சம் அதிகம் மதநம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கலாம் என்று விரும்பினாள். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்களாவது அவளுக்கு கிட்டியிருக்கும்.

நோயாளிகளின் அறையிலிருந்து கடமுடவென்ற சத்தம் கேட்டது. ஒரு கணம் நிதானித்த ஜூலியா விளக்கை தொடர்ந்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.

கடந்த சில வாரங்களாக அந்த அறையை அவள் தவிர்த்து வந்தாள். மணியொலிக்கும்போது, பையனின் தேநீரையோ உணவையோ அறைக்குள் சென்று மேசையின்மீது ஒரு மரியாதையான வணக்கத்துடன் வைத்துவிட்டு வந்து விடுவாள். பையனின் சட்டை தரையில் கசங்கிக் கிடைக்கும்; காலி தேநீர்க் கோப்பை படுக்கையினருகே  கவிழ்ந்திருக்கும்; ஒரு காடி வாசம் காற்றில் மிதக்கும். அவனது முன்பற்களில்லாத சிரிப்பு அறைக்குள் அவளை பின்தொடரும்படி, பையன் கட்டிலில் சரிந்து கிடப்பான்.

பத்து நிமிடங்கள் மேடம், உடை மாற்றிக்கொள்கிறேன், என்றான். கதவை சாத்திக்கொண்டு முகம் சிவக்க வெளியே வந்து நின்றிருக்கிறாள்.

பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி காமோமில் மலர்களை அள்ளியிட்டு, முகத்தை நீரின் அருகே கவிழ்த்தவாறு தலைமுடியை நீருக்குள் அமிழ்த்தினாள். நீராவி முகத்தில் முத்துக்களாக கோர்க்கும்வரை காத்திருந்துவிட்டு, ஈரமுடியை துண்டில் சுற்றிக்கொண்டு,வில்லியமின் மேசையிலிருந்து அவனது மருத்துவக் குறிப்பை எடுத்துக் கொண்டு சமையலறை மேடைக்கு வந்தாள் . ஒரு குவளை தேனீர்  ஊற்றிக் கொண்டு குறிப்பைப் புரட்டினாள்.

அக்டோபர் 17, 1822

மாலை 8 மணி – பையன் கொதிக்க வைத்த ஆட்டிறைச்சிரொட்டிஉருளைக்கிழங்கு மற்றும் காபி உண்டான்.

9 மணி 30 நிமிடங்கள் – அவன் வயிற்றில் திறந்திருக்கும் காயத்தின் வழியே கஞ்சி போன்ற திரவம் கொதிப்பதைக் காண முடிகிறது. அமில வாடைஒரு கசப்புச் சுவை. பையன் வலிக்கிறது என்று முரட்டுத்தனமாக புகார் செய்தான்ஆனால் பசியில்லை என்கிறான்.

11 மணி – அவ்வளவு செரித்த உணவும் குடலிலிருந்து சிறுகுடலுக்குள் மறைந்துவிட்டது. பையனுக்கு பசியில்லை.

செரிமானம் ஆரம்பிக்கும்போது உணவுண்ட திருப்தி ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. ஆனால்முழுமையாக உணவு செரிக்கப்படும்வரை மீண்டும் பசியென்ற உணர்வு ஏற்படுவதில்லை. 

 குடலுக்குள் உணவு இல்லாமல் இருப்பது மட்டுமே பசியெடுப்பதற்கான ஒரே காரணமாக  இருக்க முடியாது என்பதை இது குறிக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக பையனுக்கு அடிக்கடி பசி ஏற்படுகிறதுபரிசோதனையும் தடையின்றி செய்ய முடிகிறது. ஹாவல் ஒரு முறை சொன்னது போல அவன் பசியின் பிள்ளை.

“விடியும்வரை விழித்திருந்தேன். உறங்க முடியாமல்.
சினமிகுந்த அலைகள் கரையை மோதுகின்றன
தாழ்ச்சியுற்ற கப்பலோ முன்னும் பின்னும் தள்ளாடுகிறது
அனைத்தும் மேலிருந்து நோக்கப்பெறுகிறது”

கடவுளால் அல்லமனிதனால்அறிவு வளரும்விதம்

கதவு திறந்தது. கன்னங்கள் குளிரில் ஊதாநிறமாகத் தோன்ற, பனி அப்பிக்கிடந்த காலணிகளைத் தட்டி மிதித்தபடி வில்லியம் உள்ளே வந்தான். கொடுமையான குளிர்! என் முடிகூட நடுங்குகிறது என நினைக்கிறேன்.

குறிப்பேட்டை மூடிவிட்டு ஜூலியா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தலையிலிருந்த துண்டை அகற்றிக் கொண்டே கேட்டாள். தேநீர் அருந்துகிறீர்களா?

பனித்துகள்கள் தாடியில் மின்ன அவன் இன்னும் கதவருகே நின்றிருந்தான். மூடப்பட்ட குறிப்பேட்டைப் பார்த்துத் தலையசைத்து கொண்டான். அதுவொன்றும் நீ படிக்கும் மாதாந்திர பெண்கள் பத்திரிக்கை அல்ல, தெரியும்தானே?

ஜூலியா அமைதியாக இருந்தாள்.

ஈர தொப்பியையும் கோட்டையும் கழற்றிவிட்டு மேசையனருகே வந்து முதல் நாளிரவு அவன் எழுதியிருந்த குறிப்பை மீண்டும் ஒருமுறை அமைதியாகப் படித்தான் .

மன்னித்து கொள் வில்லியம், என் அன்பே, என்றாள் ஜூலியா. எனக்கொரு ஆர்வம். நான் உன்னைக் கேட்டிருக்கலாம்தான், ஆனால் அறிவிலி போல் உன் முன் தோன்ற விரும்பவில்லை. உன் ஆராய்ச்சிகளைப் பற்றி எனக்கு தெரியவேண்டும். தயவுசெய்து சொல்வாயா?

அவன் கண்கள் அந்தக் கவிதையைப் பார்ப்பதைக் கண்டாள்; நெற்றி சுருங்க கேட்டான், இதை எதற்கு நீ படிக்கிறாய்?

சொன்னேனே, ஒரு ஆர்வம். அந்தப் பையனைப் பற்றி, உன் ஆராய்ச்சிகளை பற்றி. இன்னும் உன் கவிதைகளைப்  பற்றி – நான் உன் அழகிய கவிதைகளைப் படிக்க விரும்பினேன்.

ஒரு கணம் அவன் முகபாவனை சாந்தமடைந்தது போல் தோன்றியது. குறிப்பேட்டை மூடிவிட்டு கடுப்பு தோன்ற கேட்டான் , என்ன ஆயிற்று உன் முடிக்கு?

நிறம் பூசியிருக்கிறேன், உனக்காக, என்றாள்  ஜூலியா.

நல்லது அன்பே. அவன் குரலைச் சரி செய்து கொண்டான். அது சிக்கலான விஷயம்.

சரி. கொஞ்சம் புரியும்படி சொல்ல முயற்சி செய்.

நனைந்த குழல் கற்றையொன்று அவள் தோளில் படிந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மெதுவே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். பல கோட்பாடுகள் இருக்கின்றன. வயிறு ஓர் அரவை யந்திரம் எனச் சிலரும், அது ஒரு கொதிக்கும் கலன் எனச் சிலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, அதுவொரு நொதிக்கும் பாத்திரம் போல செரிமானம் செய்கின்றது என்கின்றனர். யாருக்கும் உறுதியாகத் தெரியாது. நாய்களின் மீது சில சோதனைகள் நடந்திருக்கின்றன – ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படவில்லை.

பையன் தான் உன் பரிசோதனை.

அந்தப் பையன் ஓர் அற்புதம், வில்லியம் சொன்னான், மேசையின் மீது நன்கு குனிந்து அவளை உற்று நோக்கி, உன்னால் உணர முடிகிறதா ஜூலியா? இன்னும் ஒரு கோட்பாட்டை எழுதத் தேவையில்லாமல் அவன் வயிற்றின் உள்நிகழ்வுகளைப் பார்க்க அவன் என்னை அனுமதிக்கிறான்.

மணியொலித்தது.

இரு.

வில்லியம் பின்னால் சாய்ந்துகொண்டான். புன்னகைத்தவாறு சொன்னான். அன்பே, அவன் உடல்நலமின்றி இருக்கிறான்.

தயவுசெய்து வில்லியம். அவனொன்றும் உடல்நலமின்றி இல்லை.

மறுபடி மணியொலித்தது. பிறகு ஏதோ கோபமாக முனகுவது கேட்டது.

நீ போய்விட்டபிறகு அவன் அறைக்குள் நடக்கிறான். பகல் வேளைகளில் மணியடித்து என்னை அழைக்கிறான். சென்றால் ஒன்றும் பேசாமல் ஒரு திமிரான சிரிப்பு வேறு.

அவன் ஒரு சிறுவன் என்று  உனக்கு நினைவுபடுத்த வேண்டுமா?

அவன் சிறுவனில்லை.

வில்லியம் ஜூலியாவின் நெற்றியில் முத்தமிட்டான். குறிப்பேட்டை மேசையறைக்குள் வைத்துவிட்டு பையனின் அறைக்குள் மறைந்து போனான்.

தேநீரை எரியும் அடுப்புக்குள் வீசிக் கொட்டிவிட்டு, காலிக் கோப்பையை மேசை மீது சட்டென்று வைத்தாள். முட்டாள் பையன் – அவன் முட்டாள் சிரிப்பும் அவன் நாடோடி நாற்றமும். அவன் வலி உயிர் போவது போல் நடித்துக்  கொண்டு கட்டிலில் கிடப்பதாகவும் வில்லியம் அவன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டே அவனது குழறல் புகார்களைக் கேட்பது போலவும் கற்பனை செய்து பார்த்தாள் . எப்போது வில்லியம் அவள் பேச்சைக் கேட்டிருக்கிறான்? டெட்ராய்ட்டில், அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த சமூக மன்ற நடனத்தில் அவள் கூறிய, மருத்துவர்கள் வானின்று வீழ்ந்த தேவதைகள், என்ற அந்த வரியைக் கேட்டதற்குப் பிறகு அவள் கூற எதைக் கேட்டிருக்கிறான்?

அமுங்கிய சிரிப்பொலி அறைக்குள்ளிருந்து கேட்டது. ஜூலியா கூர்ந்து கவனித்தாள்.

என்  முதல் பருவம், நாங்கள் ஒட்டாவா ஏரியில் படகு வலித்துக்கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து கிராண்ட் போர்ட்டேஜ், பிறகு ரெய்னி ஏரி, இறுதியாக கோட்டைக்கு. இங்கெல்லாம் குளிரென்றா நினைக்கிறீர்கள்? அங்கெல்லாம் சிறுநீர் நடுக்காற்றில் உறைந்து போகுமென்றால் பாருங்கள்.

வில்லியம் சிரித்தான். அப்படியா?

மங்கேயூர் குழு போர்ட்டேஜ் போனது போதும் என்று திரும்பி விட்டார்கள். நானிருந்த ஹேவர்னன்ட் குழு, ஒரு எழுபது பேரிருப்போம்,அந்தக் கோட்டைக்குள் முழுப் பனிக்காலமும் மாட்டிக் கொண்டோம். எனக்கு அப்போது பதினாறு வயது. நான் தினமும் காலையில் உறுப்பைக் கையில் பிடித்துக் கொண்டுதான் விழிப்பேன். இரவுணவுக்கு பிறகு ஒருவர் வயலின் வாசிப்பார், யாராவது ஒரு பாத்திரத்தில் தாளம் போட, ஆட்டம்தான். சிலர் கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொள்வார்கள், அவர்கள் பெண்களை போல ஆட. ஆண்களுக்குள் தகராறாக இருக்கும் யார் அடுத்து இந்தப் பெண்ணாக நடிக்கும் ஆண்களுடன் ஆடுவது என்று.  எவ்வளவு தனிமையாக இருந்திருக்கும் என்று புரிகிறதா? ஒரு நாள் காலை படுக்கையில் அருகில் அந்த ஆணிலொருவன் படுத்துக் கிடந்ததும் நடந்தது.

மேலே சொல்.

அவ்வளவுதான். அந்த சண்டையில்தான் என் பற்கள் போனது, அவனுக்கு இன்னும் அதிகமாக.

ஒரு பெருமூச்சில் முடியும் தளர்ந்த சிரிப்பு. ஜூலியா அவளுக்கு தட்டையும் முள்கரண்டியையும் மேசை மீது எடுத்து வைத்துக் கொண்டாள். அவர்கள் பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் சேர்ந்து சிரிக்கட்டும், அவள் எண்ணிக்கொண்டாள். அந்த அறைக்குள் இரவு முழுதும் இருக்கட்டும்.

(தொடரும்)

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

 

வெண்தடம்

பானுமதி. ந

‘சங்கு முகம் ஆடி சாயாவனம் பார்த்து
முக்குளமும் ஆடி முத்தி பெற வந்தானோ!
திங்கள் முகம் காட்டி சின்ன உதட்டால் முலைப் பற்றி
பாலும் வழிந்தோட பாலகனாய் வந்தானோ!’

சரவணனும் ரமணனும் படுத்திருந்த திண்ணையில் காற்றில் மிதந்து வந்த இந்தப் பாடல் இளக்கி இளக்கி சரவணனை உள்ளே அழ வைத்தது; ரமணனுக்கோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவெண்காடு, ஸ்வேதாரண்யம் எப்படிச் சொன்னாலும் உவக்கும் பெயர். பழுப்பும் வெளுப்புமான பெரும் மணல் வெளி தேடி அவர்கள் அந்த ஊரில் காலை முதல் அலைந்து ஒரு மாதிரி கண்டு பிடித்து விட்டார்கள். ஏறக்குறைய செவ்வக வடிவிலான மைதானம்; தென் கிழக்கு மூலையில் சேவல் கொண்டைப்பூக்கள், வானின் வர்ணத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தன. சங்குக் கொடிகளும், தும்பைச் செடிகளுமாக யாரோ ஒருவர் எழுதி வைத்த ஓவியம் போல் அந்த மூலையில் மட்டும் காட்சிச் சித்திரங்கள். மீதி மைதானம் முழுதும் மணல்-அதிகம் வெண்மையும், சிறிது பழுப்பும் கலந்த மண்.

மேற்கூரையற்ற திண்ணை, சற்றே சிதிலமடைந்திருந்தாலும் படுத்துக் கொள்வதற்கு வாகாக இருந்தது. வளர் நிலவின் பதினாலாவது நாளிலேயே முழுமை காட்டும் நிலவு. பூரித்து பொங்கி வழியும் பால் நனைக்கும் நிலம். எதிரே உள்ள மைதானத்தில் பரவியிருந்த மணல் நிரை தன் மீது படரும் வெள்ளொளியில், இடையிடையே காணப்படும் சிறு கற்களின் துகள்களில் பல நிற மணிகள் பதித்த வெள்ளியாபரணமெனத் துலங்கியது.

“எதுக்குடா இந்த அலைச்சல்? என்னவேற கட்டியிழுக்கற?’’ என்ற ரமணனின் கேள்விக்கு, ’’நாளக்கி தெரிஞ்சுப்ப, காலேல எந்துருக்கணும், சங்கு முகத்த கேட்டுண்டே தூங்குடா,” என்றான் இவன்.

அவள்…பூமிஜா இந்தக் காற்றை இப்படி உணர்வாளா? விளிம்புகளற்ற வெள்ளித்தட்டு இது என ஏற்றுக்கொள்வாளா? ஏன் வர இயலாது என்று சொல்லிவிட்டாள்? இந்த எண்ணங்களை உதறுவதற்காக ’ரமணா’ என்று கூப்பிட்டான். மெலிதான குறட்டை ஒலிதான் கேட்டது.

கோயில் காவலர்தான் அவர்களுக்கு இந்தத் தங்குமிடத்தைச் சொன்னவர். ’தம்பிகளா, பொழுதேறிப் போச்சுது. சீகாழி போயி தங்கிக்கிடலாம். அலய வேணாம்னா இங்க படுங்க. பின்பக்கத்துல வாய்க்கா ஓடுது. காலப் பணியாரம், மதிய விருந்து எல்லாம் நம்ம வூட்லதான்; இல்ல, உங்களுக்கு எங்க வூட்ல சாப்ட சங்கடம்னா அய்யரு க்ளப் இருக்கு; ராவைக்கு எங்க வூட்டுக்கு கூட்டிப் போலாம்ணா பொண்ணு புள்ள பெத்து அஞ்சு மாசம்தான் ஆயிருக்கு, அதனாலத்தான் இப்ப கூப்டல. உங்க விருப்பப்படி செய்ங்க’. அவர் அழைப்பை மறுத்து ஏதோ சொல்ல வாய் திறந்த ரமணனை சரவணன் முந்திக் கொண்டான். ’இங்கயே படுத்துக்கறோம்; காலைல உங்க வீட்டு சாப்பாடுதான்,’ என்றான். ’என்னடா,நீயா இப்படிச் சொல்ற’ என்ற ரமணனுக்குத் தெரியுமாகாயங்கள் தெய்வங்களாகக் கூடுமென்று.ஈரம் வற்றிக் காய்ந்து போனதென்றாலும் தடங்கள் இல்லாமலா போய்விடுகின்றன?

‘இங்கே எல்லாமே மூன்று,’ என்றார் கோயில் அர்ச்சகர்; ‘அம்பாள், ஸ்வாமி, ஆகமம் மட்டுமில்ல, தீர்த்தம் கூட மூணுடாப்பா’. ரமணன் ஆவலோடு அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க இவன் மூன்று என்பதிலியே நின்றுவிட்டான். எந்த மூன்று? இவன், பூமிஜா, பால் கொடுத்துக்கொண்டே இறந்து போய்விட்ட அம்மா!

இப்படி திறந்த வெளியில் இதுவரை படுத்திருக்கிறோமா என சரவணன் நினைத்துப் பார்த்தான்; ரமணனால் எப்படி எல்லாவற்றையும் இயல்பாக ஏற்கமுடிகிறது? முன்னர் அவர்கள் அலுவலகத்தில் பத்து பேர்தான். எல்லோருமே ஆண்கள்; அவர்களின் முக்கிய வேலையென்பதே ‘க்ரியேடிவ்’ஆக இருப்பதுதான். அவர்கள் எந்தப் பொருளைக் கொண்டும் எதையும் வடிவமைக்கலாம்; பின்னர் அதை 3-டி ப்ரின்டரில் அச்சிட்டு நிறுவிவிடுவார்கள். கம்பெனிக்கு பல க்ளையன்ட்ஸ்.

அந்த சேவல் பண்ணைக்கு வந்த முதல் பெண் பூமிஜா; ’பெயரே வித்தியாசமாக இருக்கிறது.ஆளும் அப்படி இருந்தா நாம க்ரியேடிவ் கம்பனின்னு சொல்லிக்கலாம்’என்று மூர்த்தி சொன்னபோது சரவணனுக்கு எரிச்சலாக இருந்தது.அவன் ஊரெல்லாம் தேடிச் சேர்ந்த வேலை இது; பெண்களை வேலையிடத்தில் சந்திக்கவேண்டாம் என்பதே அவனுக்கு நிறைவாக இருந்தது.மூர்த்தி கொண்டாடுகிறான், தான் பயப்படுகிறோம், ரமணா என்ன நினைக்கிறான்? கேட்டபோது சிரித்தான்; அழுத்திக் கேட்டபோது எனக்கு ஜினோஃபோபியா இல்லை என்று சொல்லிச் சிரித்தான். ஒரு கணம் தன் அந்தரங்கத்தை அவன் பார்த்துவிட்டதாக சரவணன் அதிர்ந்தான். ரமணன் தனக்கு ‘எடிபஸ்’ என சந்தேகிக்கிறானோ என நினைத்தான், இது அதுவல்ல, வேறு.ஆனால், அதுவாக மாற வழியில்லாத வேறெதுவான ஒன்றோ?

பூமிஜா பத்து ஆண்களுடனும் இயல்பாகப் பழகினாள்.தான் தனியாக இங்கே வேலை செய்கிறோம் என்ற பதட்டம் அவளிடம் தென்படவில்லை. போலியாக நாணவுமில்லை, மேலே விழுந்து பழகவும் இல்லை. அவள் வயதைவிட மூப்பானவளாகத் தெரிந்தாள். அந்தத் தோற்றம் அவளுக்கு ஒரு ஆளுமையைத் தந்ததாக சரவணன் நினைத்தான். மூர்த்திக்குத்தான் அவளைப் பிடிக்கவில்லை, ஆனாலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவளைப் பற்றி அறிய முயன்று தோற்றுப் போனான். சரவணன் அவள் வேலைக்குச் சேர்ந்த முதல் மூன்று மாதங்கள் அவளை நேராகப் பார்க்கவில்லை, பேசவும் இல்லை. ஆனால்,இவளின் ஆளுமை ஒரு பெரும் குடையாக தன்னைக் கவிந்து கொண்டு கனிவு கொள்ளக் கூடாதா என ஏங்கினான்.

அன்று ஒரு பெரிய ஒப்பந்தம் இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. ரமணன், பூமிஜா, சரவணன் மூவரும் அந்த ப்ராடக்ட்டிற்கான விளம்பரத்தில் புதிதாக நுட்பமாக, யாருமே இதுவரை சிந்தித்திராத கோணத்தில், பார்வையாளர்களை வியக்க வைக்க வேண்டும் என்பது கம்பெனியின் உத்தரவு. காலையில் தொடங்கிய உரையாடல்கள், வரைபடங்கள், ஸ்லோகன்கள் மாலை எட்டு மணி வரை நீடித்தும் ஒன்றும் சிறப்பாக அமையவில்லை. ’சாப்டப் போலாமா?டயர்டா இருக்கு ரமணன்’ என்றாள் பூமிஜா.

“ஷ்யூர், வாடா நீயும்”

‘இல்லடா, நீங்க போய்ட்டுவாங்க’

“ரமணா, நான் மனுஷங்கள சாப்ட்ற வழக்கமில்ல, தைரியமா வரச் சொல்லுங்க”

அப்படித்தான் தொடங்கினான், அவள் பார்க்காதபோது அவள் முகத்தைப் பார்த்தான், நீண்ட விரல்களுள்ள கால்களைப் பார்த்தான், கிட்டத்தட்ட வேண்டுதல்கள் இல்லை யாசித்தல் கொண்ட பார்வைகள்; அவன் தவித்து மறுகினான். மூன்று மாதக் குழந்தைக்கு அந்த நினைவிருக்குமா.. நெஞ்சு வலியில் அம்மா வலக்கையைஊன்றிகீழே சாய்ந்து உயிர் விட்ட நிலையிலும் அவன் பற்றிக் கொண்டிருந்த அவள் மார்பு. அது பறிபோன பின் அதனை நினைத்து நினைத்து அழுதது, இரண்டு வயதாகையில் அவர்கள் வீட்டில் வேலை செய்த சிகப்பி மாரில் தொற்றிய குழந்தையுடன் உட்கார்ந்து அரிசி புடைக்கையில் தானும் அவள் மடி ஏறி மற்றொரு மாரைப் பற்றியது, அத்தை தன்னை பலவந்தமாகப் பிடித்து இழுத்தது, கண்களில் நீரும், திகைப்புமாக சிகப்பி நின்றது, மறுநாளிலிருந்து அவள் வேலைக்கு வராதது?

எப்போது தூங்கினான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. ’டேய்,சரூ, ஏந்துருடா’ ரமணன் குளித்து தயாராகி இருப்பதைப் பார்த்ததும் இவனுக்கு வெட்கமாகக்கூட இருந்தது. இரவில் வெள்ளியாபரணமெனத் தெரிந்த மைதானம் காலையில் அந்த சுவடற்று இருந்தது. ரமணன் இரண்டையும் உண்மை என்பான்; இருக்கக்கூடும்.

இட்லியும், பொங்கலும், சட்னியும், டீயும் காலை விருந்து. மரச் சட்டத்திலிருந்து தொங்கிய தூளியில் கருவறைக்குள் துயில்வதைப் போல் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சிறு சிணுங்கலாக ஆரம்பித்த குரல் ஓங்கியது. சமையல்பகுதியில் தன் அம்மாவிற்கு உதவிக் கொண்டிருந்த அவள், முன்னறைக்கு வந்து குழந்தையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டே உள்ளே விரைந்தாள்..

“என்னடா உன் ப்ளேன்? இந்த மைதானத்ல ஓடி விளயாடப் போறமா?’’

‘மணல் சிற்பம் செய்யப் போறோம்டா’

“அந்த க்ளயன்ட்டுக்காகவா? கான்செப்ட் என்ன?”

‘அவங்க பொருள்’மா தூத்’இல்லியா?’

“அதுக்கும் மணல் சிற்பத்துக்கும் என்னடா கனெக்க்ஷன்?’’

‘இருக்குடா. ஒரு அம்மா, மணல் அம்மா, தன் குழந்தய அதுவும் மணல் தான், மடி மேல போட்டுண்டு பால் குடுக்கப் போறா’

“சரி”

‘அப்போ, நிஜக் குழந்த அவ மேல தாவறது’

“இன்ட்ரஸ்டிங்க்”

‘அவ கை நீண்டு ’மாதூத்’தை நிஜக் குழந்த கிட்ட கொடுக்கறது’

“மார்வலஸ், ஐ சே; அம்மாவுக்கு மாத்து இதுதான்னு ப்ராடெக்ட் நிக்குது’’

‘இதை பூமிஜாவோட ரண்டு நா முன்னால டிஸ்கஸ் பண்ணேன். வழக்கம் போல நீ ஆஃபீஸுக்கு வல்லடா; அதுதான் அவகிட்ட பேசினேன், டெட்லைன் வேற பயமுறுத்துதே’

“டோன்ட் பி அபாலொஜிஸ்டிக். அவளும் இந்த ப்ராஜெக்ட்ல இருக்கா, மைன்ட் யு; அவ என்னடா சொன்னா, அவளும் வந்திருக்கலாமில்ல”

‘என்னயே கண் கொட்டாம பாத்தாடா, பின்ன கிட்ட வந்து முதுகுல தட்டிக் கொடுத்தா; அப்றம் நகந்து போனா;எதுத்தாப்ல நின்னுண்டு இத மணல் சிற்பமா செய்யணும். வெள்ளையும், பழுப்பும் கலந்த மண், குழந்த நிஜமா இருந்தா நல்லது, இல்லேன்னா க்ராஃபிக்ஸ் பன்ணுவோம்னா. நீங்களும் வாங்கன்னு சொன்னேன்; அப்பப்ப படம் அனுப்பு, நான் இங்க பேக்ரவுன்ட் செய்யறேன்னுட்டா’

“சரி, நாம ஆரம்பிப்போம்”

இவன் வரைகோடுகள் அமைத்து வர வர ரமணன் இன்றைய இளம் தாயை வரைந்து வந்தான்; சரிதான், மரபார்ந்த தாயின் வடிவம் இதற்கு வேண்டாம், தாய்மை தெரிந்தால் போதும். கைகளே தொட்டிலென அந்தச் சிற்பம் குழந்தையைத் தாங்கியபோது கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். நிஜக் குழந்தைக்கு என்ன செய்வது என்று நினைத்து ‘சரி, அனிமேஷனில் செய்து கொள்ளலாம்’ என்று தீர்மானிக்கையில் தன் பேத்தியை அந்தக் காவலாளி கொடுத்தார். நிலவின் வெண்தடம் இப்போது தெரிய அவன் புன்னகைத்து படங்கள் எடுத்தான்.