சிறுகதை

மழைமாலைப் பொழுது

மு. முத்துக்குமார்

பக்கவாட்டில், பளிச்…பளிச்… என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களைத் துளைத்து வெட்டிச்சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரச் சாலை திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளைப் போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டின அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாளாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.

பாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுது பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இரு வருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.

நெரிசல் மிகுந்த ஷிபுயாவின் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வார இறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தன.

பெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தன. நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிச்சயமாகியிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டு கொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாறே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழை மேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.

இன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச்சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டுபின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாகவமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.

விடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.

“என்ன கதிர்… வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா? “

“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்…” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்…” என்றதற்கு “கம்பாய்…” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுடன் “ஏன் தீடீர்னு?“ என்றான்.

பேச எத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும், இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாகவமாகச் கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்… வகுப்பு முடிய தாமதமாயிற்று,” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன… ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.

டகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட..தகுதியானவர்களிடமிருந்து முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேச வருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை, அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட கால அவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் போலிருந்தது.

ஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக் கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வார இறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவன்.

அவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது.

அறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக் கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்துசாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச் செய்து “ஒய்சி…” சொல்ல வைத்தான். புரியாமல் முழித்த என்னிடம், “அருமையான ருசி…” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்,” என்றேன்.

ரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றைப் பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்து கொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இரு வாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.

உணவு விடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நினைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரிய முனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே, “உண்மையாகவா?” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.

“ரொம்ப அலுப்பு தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.

“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

மென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.

டகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்திருந்தது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.

நமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.

டகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச் சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப் பெரிய வங்கிகளைப் புரட்டிப் போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக் கொண்டால் மூன்றே மாதத்தில்என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”. சுரேஷ் கண்விரித்து, “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா?” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.

புரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத் தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.

“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா?” என்றாள்.

“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன.இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்,” என்றேன்.

“இதெல்லாம் சாத்தியமா?”

“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.

டகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாகியிருந்தன. டகுச்சியே உணவுக்கான தொகையைச் செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசல் அதிகமாயிருந்தது. மழையும்கூட.

எதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தன. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்த்திசைக் காற்றின் உதவி கொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன. சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட.சடவென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.

“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”

பெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,
“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.

“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”

”ம்ம்ம்… ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டயே என்னோட கனவு திட்டமான திறந்தவெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர் வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்; முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி… என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…”

“ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.

திடீரென மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழை மேலாடையும் அங்கேயே இருந்தன.

டகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.

“என்னாச்சு கதிர்? நீ வேலை பார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்கு, நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”

“ஆமாம் என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.

மணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன.நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்ததமிழ்ச்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது.உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக்கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

திருடர்கள்

அரிசங்கர்

குணாவும் அவன் அப்பாவும் ஊத்துக்காட்டம்மன் கோவில் தெருவழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். இருவருமே ஆறடி உயரம். ஒரே நிறம், மெல்லிய கருப்பு. குணாவின் தலை மயிர் முழுக்க கருப்பாகவும், அவன் அப்பாவினுடையது முழுக்க வெளுப்பாகவும் இருந்தது. இருவரில் எவருக்குத் தெரிந்தவர் எதிரில் வந்தாலும் இவர்கள் தந்தை மகன் என்று உறுதியாகச் சொல்லிவிடும் அளவுக்கு உருவ ஒற்றுமை இருந்தது. இருவரும் மெதுவாகவே நடந்து சென்றனர். வயதில் மட்டுமே 30 வருட வித்தியாசம் இருந்தது.

எதிரில் ரவி ஐயர் டி.வி.எஸ். எக்ஸலில் வருவதை குணாதான் முதலில் பார்த்தான். அவரைப் பார்த்ததும் தலை குனிந்துகொண்டே நடக்கத் துவங்கினான். இவர்கள் அருகில் வந்த ஐயர் குணாவின் அப்பா அருகில் வண்டியை நிறுத்திப் பேச ஆரம்பித்தார். ஆனால் குணா நிற்காமல் தொடர்ந்து நடந்தபடி இருந்தான். இவன் போவதை பார்த்த அப்பா இவனைக் கூப்பிட இவன் காதில் விழாதது போல் சென்று தெருமுனையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வேளையாதலால் கடலூர் சாலையில் பேருந்துகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இவன் ஒருவாறு யூகித்தான். அவனுக்கு வேர்க்கத் துவங்கியது. தன்னுடன் நிமிர்ந்து நடந்து வந்த தன் அப்பா கொஞ்ச கொஞ்சமாக கூனிக் குறுக ஆரம்பித்தார். அவரின் பேச்சு கெஞ்சல் தொனியில் இருப்பதை தூரத்தில் இருக்கும்போதே அவன் உணர்ந்தான். ஒருபுறம் அவனுக்கு கோவமாகவும் மறுபுறம் குற்றவுணர்வாகவும் இருந்தது.

இதே போன்ற ஒரு மாலை வேளையில்தான் எட்டு ஆண்டுகளுக்கு முன் குணா அவன் அப்பாவுடன் கோவிலில் ஐயரைச் சந்தித்தான். அப்போது அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை. கோவிலில் யாரோ ஒருவருடைய உபயம். அதனால் அம்மனுக்குப் பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் திரையை மூடி அவர் எதோ செய்வார். பிறகு திரையை திறந்து தீபாரதனை காட்டுவார். ஒவ்வொரு முறை அம்மன் ஒவ்வொன்றால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும். எண்ணெய், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம் எனப் பல அபிஷேகங்கள் முடிந்து, மந்திரங்கள் ஓதி வேகமாக மணியடித்து கடைசியாக தரும் பொங்கலுக்காக மட்டுமே காத்திருந்த கூட்டத்துடன் குணாவும் அவன் அப்பாவும் நின்றிருந்தனர். குணாவின் அப்பாவைப் பார்த்ததும் சிரித்துவிட்டுக் குனிந்து குணாவை பார்த்து, “என்ன செட்டியாரே, நம்ம பையனா” என்றார், ஐயர்.

குணாவின் அப்பா சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையசைத்தார். ஐயர் குணாவிடம், “என்னடா படிக்கிற” என்றார்.

“ஏழாவது” என்றான் குணா.

“தினம் கோயிலுக்கு வாடா”

“தினமுமா பொங்கல் தருவாங்க”

“ஏன், பொங்கல்னா தான் வருவியா”

குணா அமைதியாக இருந்தான். பிறகு அவர்கள் இருவரும் எதோ பேசிக்கொண்டிருக்க குணா பொங்கல் சாப்பிடத் துவங்கினான்.

மறுவாரம் அவன் கோவில் பக்கமே போகவில்லை. அடுத்த வெள்ளியும், பொங்கலும் அவன் நினைவுக்கு வரத் திறந்து வைத்திருந்த புத்தகத்தை அப்படியே மூடி விட்டு எழுந்து கோவிலுக்கு விரைந்தான். அவன் இருந்த வன்னியப் பெருமாள் கோவில் தெருவில் இருந்து இரண்டாவது இடது திருப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெரு. தெருவின் கடைசியில் இருந்தது கோவில். ஓட்டமும் நடையுமாகச் சென்றான். கோவில் வாசலில் ஐயர் மட்டுமே இருந்தார். தன் சைக்கிளில் புறப்படத் தயாராக இருந்தார். தூரத்தில் இவனைப் பார்த்ததும் கொஞ்சம் கோவமாக இவனை அழைத்தார். குணா அருகில் சென்றதும், “எங்கடா போற”

“கோவிலுக்குத்தான் வந்த”

“கோவிலுக்கு வர நேரமாடா இது, சரி வந்து சைக்கில்ல ஏறு,” என்றார்.

குணா தயக்கத்துடன் சைக்கிளில் ஏற, அவர் வேகமாகச் சைக்கிளை உப்பளம் சாலையில் உள்ள கோவிலுக்கு ஓட்டிச் சென்றார். அதுவும் ஒரு முத்துமாரியம்மன் கோவில்தான். அங்கு இவருக்காக சில பெண்கள் காத்திருந்தனர். வேகமாக உள்ளே சென்ற அவர் திரையை மூடி தன் வேலையைத் துவங்கினார். குணாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஓடிவிடலாமா என்று யோசித்தபோது, திரையை லேசாகத் திறந்து ஐயர் இவனை அழைத்தார்,

“டேய் தம்பி, அந்த மணிய வேகமா அடிடா,” என்றார்.

கம்பியில் கட்டியிருந்த கயிரை அவிழ்த்து குணா வேகமாக மணி அடித்தான். அவன் மண அடிக்க அடிக்க கோவிலுக்கு ஒருத்தர் பின் ஒருத்தராக வந்தபடி இருந்தனர். இவர் பூஜையெல்லாம் முடித்து தீபாரதனை காட்டி வெளியே வந்து குங்குமம் கொடுக்கும்போதுதான் இவனைப் பார்த்து போதும் என்று கையசைத்தார். அதற்குள் குணா வேர்த்து நனைந்திருந்தான்.

குணாவின் வேலை ஐயருடன் இப்படியே படிப்படியாக தொடர்ந்தது. வெள்ளி என்பது வாரத்தின் அனைத்து நாட்களும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். சில நாட்களில் ஐயருக்கு வேறு வேலைகள் எதாவது இருந்தால், குணாவே நேராகக் கோவிலுக்கு சென்று பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வந்து திறந்து விளக்கு ஏத்திவிட்டு வருவான்.

ஒருநாள் ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்து அழைத்தார். இவனும் எதோ கோவில் வேலை என்று அவருடன் சென்றான். அவர் வழக்கமாகப் போகும் இரண்டு கோவிலுக்கும் போகாமல் கடலூர் சாலையில் இருந்த பச்சைவாழியம்மன் கோவிலுக்குச் சென்றார். அந்தக் கோவிலின் கதவைத் திறந்து விளக்கு ஏற்றிவிட்டு வரும்போது ஒரு சிலர் கோவிலுக்கு வந்தனர். வந்தவர்களில் ஒருவர் ஐயரைப் பார்த்து, “அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு” என்றார்.

“இப்ப தேவலாம். நடக்க கொஞ்சம் நாளாகும். சொன்னா எங்க கேக்கறார். மழையில போவாதீங்கன்னா அப்பத்தான் வெளிய போய் கால உடச்சிக்கிட்டாரு” என்றார் அலுப்பாக.

“சரி விடுங்க எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு சாமி கும்மிட்டுச் சென்றார்.

அதன்பிறகு கோவிலுக்கு யாரும் வரவில்லை. புறப்படலாம் என்று எழுந்தபோது ஐயர் குணாவை அழைத்தார்,

“டேய் தம்பி, இங்க வாடா”

குணா அவர் அருகில் சென்று அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயையே பார்த்தான்.

“குணா, எங்கப்பாதான் இந்த கோவில பாத்துக்கிறாரு. அவருக்கு உடம்பு சரியில்ல. கொஞ்ச நாள் நான் சொல்ற மாதிரி செய்,” என்றார்.

அவன் எதுவும் பேசாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு நாளையிலிருந்து தினமும் நீ இங்க வா, வந்து கதவ திறந்து விளக்கு போட்டுட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்ப கதவ சாத்திட்டு போய்டு. சாவியை ராத்திரி நான் போரப்ப வந்தி உன் வீட்டுல வாங்கிக்கற. யாருன்னா வந்தா தட்டுல கற்பூரத்த ஏத்தி மூணு சுத்து சுத்தி காமிச்சிட்டு விபூதியும், குங்குமமும். குடு. யாருன்னா ஐயர் எங்கன்னு கேட்டா இதோ வந்துடுவாருன்னு சொல்லிடு,” என்றார்.

“எவ்வளவு நேரம் இருக்கனும்”என்று கேட்டான் குணா.

“ஆறு மணிக்கு வா, ஏழரை மணிக்கு போய்டு. நான் எட்டரை மணிக்கு வந்து சாவியை வாங்கிக்கற. சாயங்காலம் ஐஞ்சு மணிக்குச் சாவியை வீட்டுல தந்திடற.” என்றார்.

குணா தயக்கத்துடன் சரி என்றான்.

“தட்டுல வர காச நீயே எடுத்துன்னு வந்திடு நான் உங்கிட்ட வாங்கிக்கிற” என்றார்.

மறுநாள் மாலை ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்தார். அவனிடன் சாவியையும், ஒரு நான்கு முழம் வேட்டியையும் தந்தார். அவனை வேட்டி கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அவன் தெரியாது என்று சொல்ல அவரே அவனுக்கு வேட்டியையும் கட்டிவிட்டார்.

குணா முதல் நாள் வேலையைச் சிறப்பாக செய்தான். சில்லறைகளையும் சாவியையும் ஐயரிடம் அன்று இரவு ஒப்படைத்தான். ஐயர் சில்லறைகளில் கொஞ்சமாக எடுத்து குணாவின் கைகளில் திணித்தார். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மொத்தமாக இரண்டு ரூபாய்க்கு மேல் அவன் செலவு செய்ததில்லை. ஐயர் சென்றபின் உள்ளே குளியலறைக்கு சென்று எவ்வளவு என்று பார்த்தான். எட்டு ரூபாய்கள் இருந்தது. முதல் நாள் இருந்த தயக்கத்தை அந்த எட்டு ரூபாய் காணாமலாக்கியது. காசை அவன் வீட்டில் தரவில்லை. மறு நாளிலிருந்து அவன் தட்டில் இருக்கும் காசை எண்ண ஆரம்பித்தான். ஒவ்வோரு நாளும் ஒரே மாதிரி தான் காசு வந்தது. சில ரூபாய்கள் கூடக் குறைய இருந்தது. அது ஐயர் கொடுப்பதிலும் எதிரொலித்தது. அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தட்டில் அதிக பணம் விழ குணாவின் மூளை வேறு மாதிரியாக யோசித்தது. அதிகமாக வந்த காசையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான். வழக்கமாகக் கொடுக்கும் காசையே ஐயரிடம் தந்தான். அதைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மாற்றத்தைக் கவனித்தான். கண்டுபிடித்து விடுவாரோ என்று பயந்தான். அவர் எதுவும் கேட்கவில்லை.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் குணா கோவிலில் இருக்கும்போது, ஒருவர் வந்து, ஐயர் எங்கே, என்று கேட்டார். வழக்கம் போல் இவன், இதோ வந்து விடுவார், என்றான். அதற்கு அவர் கோவமாக, “டேய், எத்தன நாள நீயும் இப்படியே புளுவின்னு இருப்ப” என்றார்.

இவன் கொஞ்சம் பயந்தவாறு அமைதியாக இருக்க, அவர் தொடர்ந்தார்

“நான் எதிர் ஊட்டுல தாண்டா இருக்கன். தெனிக்கும் பாத்துனு தான் இருக்கன் நீதான் வர, நீதான் போற,” என்று கத்தினார்.

அதற்குள் இரண்டு பெண்கள் வர அவர்களிடம் முறையிட்டடார். அவர்கள் இவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் சாமி கும்மிட, “எவன் எவனோ உள்ள வரான். கேட்க ஆள் இல்லாம போச்சு. நாளைக்கு காட்டற நான் யாருன்னு” என்று கத்திக்கொண்டே சென்றார்.

அனைவரும் சென்றதும் குணா கோவிலை பூட்டிக்கொண்டு, காசை எடுத்துக்கொண்டு வெளியேறினான். இரவு ஐயர் வந்தது அவரிடம் அனைத்தையும் சொன்னான். அவர் கத்தியதும் வந்துவிட்டதாகவும், காசு எதுவும் வரவில்லை எனவும் சொன்னான். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

அதன்பிறகு ஐயர் குணாவை தேடி வரவில்லை. குணா கோவிலுக்கு ஐயரைத் தேடி சென்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளவில்லை. தன்னைத் தவிர வேறு யாராவது கோவிலுக்கு போகிறார்களா என்று கோவிலுக்கு சென்று பார்த்தான். அவன் ஐயரின் அப்பா காலில் கட்டுடன் இருந்தார். இவ்வளவு கையில் காசைப் பார்த்துவிட்டு இப்போது காசில்லாமல் குணாவிற்கு கோவம் கோவமாக வந்தது. வெள்ளிக்கிழமை பூஜைக்கு சென்று ஐயர் அழைப்பார் என்று காத்திருந்தான். அவர் அழைக்கவேயில்லை. வேறு சிறுவர்கள் மணியடித்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அழுகை வருவது போல் இருந்தது. அனைவரும் போகும் வரை காத்திருந்தான். அனைவரும் சென்றதும் ஐயரே பேச ஆரம்பித்தார்,

“ஏண்டா… எங்கிட்ட எவ்வளவு காச திருடிருப்ப” என்றார்.

நேரடியாக இப்படிக் கேட்டதும் குணா பயந்துவிட்டான். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அமைதியாக இருந்தான். மீண்டும் அவர் ஆரம்பித்தார்,

“எத்தன வருஷமா கோவில பாக்கறன், என்னிக்கு என்ன கிழமை, என்ன நாளுக்கு எவ்வளவு தட்டுல விழுமென்னு எனக்குத் தெரியாதா, நீ தெனமும் உனக்குன்னு கொஞ்சம் தனியா எடுத்துக்கின்னுதான் எங்கிட்ட காச தந்திருக்கிற. சரி போனா போவுதுன்னு விட்ட,” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். அந்த நேரம் யாரோ ஐயரிடம் வந்து பேச்சு கொடுக்க அவன் வீட்டுக்கு ஓடிவந்து விட்டான். அதன் பிறகு இவன் கோவில் பக்கமே செல்லவில்லை. ஐயரை வழியில் எங்காவது பார்த்தாலும் மறைந்துகொள்வான். வளர வளரக் கொஞ்சம் தயிரியம் வந்தது. அவர் எதிரில் வந்தால் இவன் எங்கோ பார்த்த மாதிரி சென்றுவிடுவான்.

“டேய் போலாமா?” என்றார் குணாவின் அப்பா. குணா திரும்பிப் பார்த்தான். ஐயர் போய்விட்டிருந்தார். அவன் அப்பா அவனுடன் எதுவும் பேசவில்லை. இருவரும் வீட்டிற்கு வந்தனர். குணாவிடம் மெதுவாக அவன் அப்பா, “ஐயர் ரொம்ப வருத்தப்பட்டார். நீ பண்ணது தப்பு. கோவில உன்ன நம்பி விட்டா நீ இப்படியா பண்ணுவ” என்றார். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. பிறகு அவரே தொடர்ந்தார், “நீ போய் அவர்கிட்ட மன்னிப்பு கேளு. எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் எப்படி இனிமே அவர் முகத்துல முழிப்பேன்,” என்றார்.

குணா அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ஆனால் அதை மறைத்தவாறு தலையை குனிந்து கொண்டான். அப்போது மாடியில் துணி காய்ப் போட்டுவிட்டு அவன் அம்மா உள்ளே வர, அவன் அப்பா, “நாலு மணிக்குப் போ, ஐயிரு வீட்டுலதான் இருப்பாரு” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

குணா அவர் போவதைப் பார்த்தவாறு அவரிடம் சொன்னான்,

“என்னால மன்னிப்பலாம் கேக்க முடியாது.” என்று சொன்னான்.

திரும்பி அவர் முறைக்க, இவனும் பதிலுக்கு முறைத்தான். பிறகு அவர் தீர்மானமாக சொன்னார், “இதப்பார், நீ பண்ணத்த அவர் இன்னும் யாருகிட்டயும் சொல்லாம இருக்கறதே பெரிய விஷயம், ஒருவேளை இது வெளிய தெரிஞ்சி நாலு பேரு எங்கிட்ட வந்து, என்ன உன் புள்ள இப்படி பண்ணிட்டானேன்னு கேட்டா, நான் நாண்டுன்னு தான் சாகனும், ஒழுங்கா போய் மன்னிப்பு கேளு,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அவன் அம்மா நடப்பது எதுவும் தெரியாமல் முழிக்க, இங்கிருந்தால் அம்மாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவன் வேகமாக வெளியேறினான்.

மாலை நான்குமணி. குணா ஐயர் வீட்டிற்குச் சென்றபோது அவர் வாசலிலேயே நின்றிருந்தார். இவனைப் பார்த்தவுடன் மெல்லப் புன்னகைத்தார். இவன் அமைதியாக அவர் முன் நின்றான்.

“என்னடாப்பா சவுக்கியமா” என்றார் நக்கலாக.

குணா அவர் கண்களை பார்த்து “நான் திருடன்தான். எனக்குப் புரியுது. நீங்க யாரு?” என்று கேட்டுவிட்டு பொறுமையாகத் திரும்பி நடந்தான். அவர் முகம் மெல்ல மாறிக் கொண்டிருந்தது

சொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது. அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தன. கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏற முடியாமல் பேருந்தில் ஏறினார். பேருந்தில் நல்ல கூட்டம். அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தபின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலய கட்டிக்கிட்டு நிக்க முடியாது… வேணாம்,” என்ற குரல் தடுக்கையிலேயே கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமரச் சொன்னதும் அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார். இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார்.

பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான். கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறியக் கற்றிருக்கிறது. அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,” என்றாள். நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்றால் “ தனியாக காருல வரலாமில்ல,” என்று எகத்தாளம் பண்ணியிருப்பான். இத்தகைய எகத்தாளமான பதில்களை தினமும் பேருந்தில் பெண்கள்  கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இறங்கியதும் அம்மா பூ வாங்கச் சென்றார். முட்டிவலிக்காரர் அருகில் வந்து,“ரொம்ப நன்றி கண்ணு..கால்ல இன்னதுதான்னு சொல்ல முடியாத வலி,”என்றார். “அதனால என்னங்க? மருந்து தடவுறீங்களா?”என்றாள். “அதுக்குதான் வந்ததே. போயிட்டு வர்றேன் பாப்பா,” என்று ஆட்டோவில் ஏறினார். குத்திய சிறு சிலாம்பை எடுக்காமலிருப்பதைப் போல சுரபியின் மனதில் பேருந்து நிகழ்வு அருவிக் கொண்டிருந்தது.

தை குளிர் இந்தக் காலையில் மெல்லிய படலமாய் உடலைத் தொட்டு கணம் தோரும் ஊடுருவிக் கொண்டிருந்தது.பாலக்கரையில் இறங்கி அம்மாவுடன் நடக்கையில் உறவுகளும் அங்கங்கே இணைந்து கொண்டனர். தெப்பக்குளத்தை சுற்றிக் கடக்கையில் குளத்தின் உள்வெட்டுச் செதுக்குகள் தெரிந்தன. முன்னால் சென்ற ஜீன்ஸ் குழந்தை குளத்தினுள் சுற்றி வெட்டப்பட்டிருந்த கிணறுகளை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு சந்தைக் கடக்கையில் நேர்க்கோட்டில் அடுத்த தெருவில் தெரிந்த சிவனாலயத்தைப் பார்க்கையில், “இமைப்பொழுதும் என்நெஞ்சை நீங்காதான் தாள்வாழ்க” என்ற ஒலிப்பெருக்கிக் குரல் அவள் காதுகளைத் தொட்டு மனதில் படர்ந்தது.

மேளச்சத்தம் கேட்டதும் சுரபி, “தாலி கட்டியாச்சோ?”என்றாள். “இல்லை அரசக்கால் ஊன்றாங்க” என்றார் சின்ன மாமா. செம்மஞ்சளில் ஔிப்பழமாய் ஆதவன் எதிரே தென்னங்கீற்றுகளின் பின் எழுந்து கொண்டிருந்தான்.பேசிக்கொண்டும், குளிர்ந்த சந்தனத்தைத் தொட்டுக் கொண்டும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள். சுரபி தன்மனதிற்குள், “மனுசரக் கண்டதும் பொங்கக் கூடாது. தொடாம பேசனும்,” என்று நினைத்துக் கொண்டாள். அவள் ஆழத்தில் வளைந்து நெளிந்து கொண்டிருந்த ஆதங்கம் சட்டென்று  மனதின் மேற்பரப்பில் தலை நீட்டியது.யாரையும் தெரியாமக்கூட தொடக்கூடாது. கல்லூரி முடித்து வந்து கற்றுக் கொண்ட முதல் சமூகப் பாடம். தொடுகைய தவறா நினைக்கற, பார்க்கிற, பயன்படுத்தற ஊர்லதான் எங்கப் பாத்தாலும் கூட்டம் என்று நினைத்துக் கொண்டாள்.

காலை ஆறு மணியென்பதால் நெருங்கிய சொந்தங்களாக கூடியிருந்தார்கள். மெதுவாக சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. அம்மாவின் சொந்தங்கள். பள்ளி விடுமுறை நாட்களின் முகங்கள் என்பதால் கூடுதல் நெருக்கம். பால்யத்தின் வண்ணங்கள் .சிரித்துப் பேசி அமர்ந்திருந்தார்கள். சிவப்புச் சேலையில் மணப்பெண் வணங்கி அமர்ந்தாள். மீண்டும் சடங்குகள். அம்மா உறவுக்கார சித்தப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் சுரபியை அடையாளம் கண்டு புன்னகைத்தார். கூட்டம் திரளத் திரள மனம் எச்சரிக்கையானது. அதை நினைத்து மேலும் புன்னகைத்ததை நீலவண்ணச்சட்டை போட்டவர் தனக்கென நினைத்து தலையாட்டினார்.

தோளில் குழந்தையுடன் வந்த அண்ணன் அவளின் கைப்பற்றி, “எப்ப வந்த,”என்றது .தாம்பூளத் தட்டிலிருந்த மாங்கல்யத்தை வணங்கி மஞ்சலரிசி எடுக்கையில் குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.

“வாயில போடக்கூடாதுடா… மூக்கருத்துருவேன்,” என்ற சுரபியின் சைகையைப் புரிந்துகொண்டு அடிக்க வந்தான். கன்னங்களை உப்பி, உதடுகளைக் குவித்து சேட்டை காண்பித்தான். இடதுகையால் அண்ணனின் சட்டையை முதுகுப்புறத்தில் பற்றியிருந்தான். அண்ணின்  தோளில் கை வைத்து சுரபி, “சட்டை நல்லாயிருக்கு,” என்றதும் அண்ணன் மலர்ந்து ஏதோ சொல்ல வந்து மாமா அழைக்க எழுந்து சென்றது.

எழுந்து மஞ்சலரிசி தூவி மேலிருந்த அரிசியை தட்டியபடி அமர்கையில் சுற்றம் கலைந்து கொண்டிருந்தது. மண்டபத்திலுள்ள அனைவருமே அரிசியை தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ ஒரு கரம் அனைவரையும் வாழ்த்தியது போலிருந்தது. திருமகள் தீபத்தை ஏந்திய சகோதரி முன் செல்ல மணமகளின் சகோதரன் கை பற்றி மணமானவர்கள் அக்னி வலம் வந்தனர்.

இளமஞ்சள் தழல்… பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.காற்று தொட்டெழுப்பி தழலாடும் நடனம். மேலெழுந்து தாவி விரிந்து நின்று நெளிந்தது. இப்படியொரு தழலில்லா மனதுண்டா?… புறச்சூழல் சத்தங்களால் தடுத்தும் சுரபியின் ஆழ்மனம் பின்னோக்கிச் சென்றது. உணவைக் கையிலெடுக்கையிலேயே வயிற்றில் குமட்டும்போது சுரபியின் வயது ஆறு இருக்கலாம். எந்த நேரமும் கோழை நிறைந்த நாசி. துடைத்த நேரம் தவிர மற்ற நேரங்களில் மற்றவரை விலக வைத்திருக்கலாம். அவள் வயதுப் பிள்ளைகளின் வேகத்திற்கு இவள் எப்போதும் பின்தங்கியேயிருந்ததாய் சுரபிக்கு நினைவிருந்தது. இருமலை நிறுத்த இயலாமல் நிறைந்த கண்களுடன் ஊதா நிறச் சீருடை பாவாடையில் முகம் பொத்தியிருந்த வகுப்பறை நாட்களில் அவள் ஓரமாய் எங்கோ இருந்தாள்.

மருத்துவரிடம் சித்தப்பா பேசியது என்னவென்று அவளுக்கு நினைவில்லை. அவள் கண்களை மூடி எக்ஸ்ரே மேசையில் படுக்கையில் உள்ளே விரியும்  இருள் உலகம் அவளை நடுங்கச் செய்யும். அவள் உறங்கும் கட்டிலின் கீழே எப்போதும் ஒரு பெரிய வலை அல்லது தேன்கூடு இருப்பதாக உணர்ந்து கொண்டேயிருந்தாள். அதில் விழுந்துவிடுவோமோ என்ற பயத்தால் எப்போதும் கட்டில் சட்டத்தை பற்றிக் கொண்டிருக்கும் அவளின் கை. வகுப்பறைப் பாடங்கள் நிச்சயம் கனவுக் காட்சிகளே. தினமும் மாத்திரை விழுங்குகையில் கேள்வி ஒன்று சிக்கிக் கொள்ளும்.மூச்சு விடுகையில் ஏற்படும் வலியைப் போலவே பயம் எப்போதும் அவள் உடனிருந்தது. உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் அதன் கரையிலமர்ந்து வேடிக்கை பார்த்தபடியிருந்தாள்.

சுரபிக்கு குழந்தைக் கால ஏக்கங்கள் இரண்டு இருந்தன. ஒன்று வீட்டின் முன்புறம் இருந்த கிணற்று நீரைத் தொட்டு விளையாடும் சிட்டாக பிறப்பது. அடுத்தது அவள் ஐஸ்காரர் வீட்டில் பிறந்திருக்கலாம் என்பது. தொண்டையிலிருந்து அடிவரை இழுத்துப் பிடித்து இருமல் வரும் காலை வேளைகளில், “பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகுது…. சீக்கிரம் வா குளிக்க,” என்றால், “நானே குளிச்சிக்கிறேன்…” என்பாள்.

சாப்பாடு ஊட்டும்போது, “ஒவ்வொரு பருக்கையா தின்னா… இப்படிதானிருக்கும் ஒடம்பு… இந்த பிள்ளைகள பாரு…” என்றால், “நானே சாப்பிட்டுகிறேன்…,” என்பாள்.

“…..சரி வா…”

“வேணாம்…நானேதான் சாப்பிடுவேன்,”என்று தள்ளிச் சென்றுவிடுவாள்.

“இவ்வளவு புடிவாதம் பொம்பள பிள்ளக்கி ஆவாது…”என்பார் அம்மா.

ரேங்க் கார்டு கொடுக்கும் நாளன்று உடன்பிறந்தவர்கள் அப்பாவிடம் கையெழுத்து வாங்குகையில், ”எந்த கணக்கில் இந்த மார்க்கை விட்ட…. எந்த கேள்விக்கு நேரம் பத்தல…” என்று அவர்களின் விசாரணைகள் முடிந்தபின், சிவப்பு அடிக்கோடுகளிட்ட தன் அட்டையோடும், குனிந்த தலையோடும் தனியே வந்து நிற்கும் சுரபியிடம், ”நல்லா படிக்கனும்,”என்பார்.

“இனிமேல் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம். அதவிட ஊசி வேணாம், உவ்வே.. மாத்திரை வேணாம். ஆனா பொட்டுக் கடலையும் வெல்லமும் டெய்லி சாப்பிடனும்,” என்று கன்னத்தைத் தட்டி டாக்டர் சொன்னபோது ஐந்தாம் வகுப்பிலிருந்தாள்.

அம்மாவை தம்பி, தங்கை கட்டிப் பிடித்திருக்கையில் தள்ளி நிற்கும் சுரபியை அம்மா, “உன்னப் போல பிள்ள பெத்துட்டா குறச்சலில்ல… எல்லாத்துக்கும் பிடிவாதம்.. மனுசற கண்டா என்னமா இருக்குமோ…. தொட விடுதா பாரு. சனஞ் சேராதது..”என்று பேசிக்கொண்டே செல்வார்.

திருமண மேடையில் தழல் இறங்கியமைந்து கங்குகளானது. “சாப்பிட போகலயா ?”என்றபடி வந்த அண்ணன் சுரபியின் இடதுகையைப்பிடித்துக் கொண்டு நின்றிருந்தவர்களிடம் பேசத் தொடங்கியது. அண்ணனின் கரம் என்னும் சூட்சுமம் தூலமாகியது. கிணறுகள் வற்றிப் போன கடுங்கோடை விடுமுறையில் தாத்தா, “கிணதுத்துல தெக்குமூலையில் ஒருஊத்துகண்ணு திறந்திருக்கறதாலதான்…குடிக்க தண்ணீ இருக்கு,”என்று வெத்தலப்பெட்டி தாத்தாக்கிட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.வெத்தலப்பெட்டி தாத்தா, “ஒத்த ஊத்தும் அத்துப் போன கேணிய பாத்ததில்ல. எங்கியாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும். உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க,” என்றார்.

கமலையில் போய் நின்றாள் சுரபி. இரு கருங்கற்கள் கிணற்றின் உள்வரை நீண்டிருந்தன. அதில் கால் வைக்கையில் சுரபிக்கு தொடை நடுங்கியது. கவுனை தூக்கிக் கொண்டு அடுத்த அடி வைக்கையில் பெரியம்மாவின்,  “டேய் …சுரபிய பிடி,” என்ற குரல் கேட்டபோது நுனிவரை நடந்திருந்தாள். கால்களை எந்தப் பக்கம் வைத்தாலும் தடுமாறும்நேரம் அண்ணன் கை அவளை இறுகப்ப ற்றியிருந்தது.

“ஊத்து பாக்கனும்… விடு…”

“சரி பாரு….” அண்ணன் கையை விடவில்லை.

காய்ந்து பாசி கருகியிருந்த பாறையில் ஒருநேர்க்கோடாய் நீர் கசிந்தபடியிருந்தது. தேங்கியிருந்த நீரை மேலும் எட்டி நோக்கி “நீ பாக்கறியா? நான் புடிச்சுக்கறேன்,” என்று பின்னால் வந்து பிடித்துக்கொண்டாள்.

மழைக்கால விடுமுறைகளில்  இலவம் ஓட்டில் உனிப்பூ நிறைத்து வாய்க்காலில் படகு விடுகையில் சுரபியின் வலது கை, அண்ணனின் இடது கையிலிருக்கும்.

வரப்பில், வயலில், நாய் வருகையில், மழையில், தூங்குகையில், தொட்டியில் முழுகிக் குளிக்கையில், உடல்நலமில்லா நேரங்களில், கோவில் பிரகாரத்தில், தாத்தாவின் மோசமான உடல்நிலைத் தருணங்களில், அக்காவிற்கு குழந்தை பிறக்கையில், வாழ்வின் முக்கிய தீர்மானத்தை தீர்க்கமாகச் சொன்ன வேளையில் என்று அனைத்து நேரங்களிலும் அந்தக்கரமிருந்தது. பெரும்பாலும் தூலமாக சிலபோது சூட்சுமமாக.

மண்டபத்தில் கூட்டம் குறைந்திருந்தது. உணவிற்காக கை கழுவிவிட்டு வந்த சுரபி, மாமாவின் கரங்களைப் பற்றி “சாப்டீங்களா?” என்றாள்.  “இல்லம்மா… கை கழுவிட்டு வர்றேன்,” என்றவரின் கரங்களின் வயோதிக நடுக்கத்தை தன் கையில் உணர்ந்தாள்.

உணவுண்ண அமர்ந்ததும் பக்கத்திலிருந்த மோனிகா, “ சித்தி சாப்பிட கை கழுவிட்டா எதையும் தொடக்கூடாது,” என்று வாயில் கை வைத்து சிரித்தாள்.

“இல்ல…இப்ப விட்டா சான்ஸ் கிடைக்காம போயிட்டா,”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உள்ளங்கைகளை நீட்டிப் பார்த்தாள் சுரபி… பால்யத்தின் செப்பு முகங்கள், பள்ளி நாட்களின் எண்ணெய் படர்ந்து ஔிரும் முகங்கள், கல்லூரி நாட்களின் இனிய முகங்கள். எத்தனை கரங்கள்….மெல்லிய, குளிர்ந்த,வெதுவெதுப்பான , சொரசொரப்பான , வலிமையான, தொடுகையே தெரியாத கரங்கள் என எத்தனை.

கரங்களைப் பற்றுகையில் புன்னகை, விதிர்ப்பு, சுள்ளென்று வியப்பு, கனிவு ,ஆர்வம், வசதி, ஆசுவாசம், நடுக்கம், விடுவிக்கக் காத்திருக்கும் நெருடல், அடுத்த முறை பிடிக்கலாகாது என மனம் நினைக்கும் சில… எத்தனை… ஒரு வழியாக பழகிவிட்டது.

மோனி தன்னைவிட உயரமான மேசைக்காக எம்பி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடது கரத்தைப் பிடித்து அருகிலிருந்த பிடிமானத்தில் வைத்தாள். ஏதோ பூனையின் முதுகைத் தடவியது போலிருந்தது.

மண்டபத்திலிருந்து வெளியேறி தெப்பக்குளத்தைச் சுற்றி நடக்கையில் ஓடிவந்து கையைப் பிடித்து நடந்த மோனிகா, “அவன் சொல்றான்…. இங்க பத்து கேணியிருக்குன்னு… குளத்துக்குள்ள கேணியாம்….” என்று சிரித்தாள்.

இரு கேணிகள் அவன் கணக்கில் சேரவில்லை என்று நினைத்தபடி சுரபி, “கேணி இருக்கே,” என்று சொன்னாள்.

உலர்ந்து ஏடுவிரிந்த குளத்தைக் காட்டி, “ தண்ணிகூட உள்ள இருக்கும். ஊத்துப் பாத்து வெட்டியிருப்பாங்க,” என்றார் ராசு பெரியப்பா.

“சரி…மழை பெய்யும்போது தெரியுமா?”என்றாள் மோனி.

“அப்ப முழுகிடும் தெரியாது…”

“அப்ப அது பொய்…”

“இப்ப போய் பக்கத்தில நின்னு எட்டிப் பாத்தா தெரியுமே… வரியா?” என்றாள் சுரபி.

மோனி,“தண்ணியில்லாதப்ப தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, அவ்வளவு தூரம் நடக்கனுமா?” என்றாள்.

இங்கு வந்ததிலிருந்து மோனி குளத்திலிருக்கும் கேணிகளையே கேட்டுக் கொண்டிப்பதை உணர்ந்த சுரபி, “பாக்கனுன்னா போகத்தான் வேணும். பாக்கனுன்னு ஆசையா இருந்தா என் கைய பிடிச்சுக்கிட்டே நீ வந்தா பாத்துட்டு வரலாம்,” என்றாள். மோனி சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.

“இதென்ன ஒரு பைசாக்கு பொறாத வேல… பஸ்ஸ பாத்து போகாம. அதோ பஸ் வந்திடுச்சு” என்ற குரலால் தயங்கி பேருந்திற்கு விரைந்தார்கள்.

பேருந்தில் படிவரை ஆட்கள் நின்றிருந்தார்கள். “அடுத்த பஸ்ஸில போகலாம்,” என்ற சுரபியை பொருட்படுத்தாமல் அனைவரும் ஏறத் தொடங்கியிருந்தார்கள். மோனி ஒரே ஓட்டமாக சந்தில் புகுந்துவிட்டாள்.

பேருந்து நகரத் தொடங்குகையில் சுரபி இரண்டாவது படியில் நின்றிருந்தாள். “உள்ள வாம்மா… படியில நிக்காத,” என்ற நடத்துநரின் குரல் மேலும் கோபத்தைத் தூண்டியது. வழிவிடக்கூட இடமில்லை. உள்ளே நடத்துநர், “நெருங்கி நில்லுங்கம்மா படியில ஆளுக நிக்கறாங்க,”என்றார்.

“அடுத்த வண்டியில ஏற வேண்டியதுதானே,” என்ற குரல் கேட்டது.

“அவங்க ஊரு வண்டிக்கு இன்னும் ஒரு மணியாவும்,” யாரோ தெரிந்தவராக இருப்பார்.

சிவன் கோவில் முடக்கு வரப்போகிறது. சுரபிக்கு அடிவயிற்றில் கலக்கம். சரியான சாய்வான முடக்கு, முன்னால் வேகத்தடை வேறு. அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளுக்கு வியர்வையால் கை பிடிமானம்  குறைவது நன்றாகத் தெரிந்தது. உடலை முன்னால் உந்தி பின்னால் சாயாமலிருக்க முயன்று பயனில்லை. பேருந்து முடக்கில் சாய்ந்து ஊர்கையில் அவளின் கைப்பிடி தளர்ந்தது. அவ்வளவுதான் என்று நினைத்த நொடியில் முதுகில் பலமாக ஒரு கை உந்தி மேலே அவளைத் தள்ளியது.

“வழி விடுங்க,” என்ற பலமான குரல்.

அந்தக் கையின் விசையில் உள்ளே வந்துவிட்டிருந்தாள். மாய கணம். இன்னும் அவளுக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. வியர்த்து வழிந்தது. திரும்பிப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த ஒரு அக்கா, “பயந்துட்டியா?” என்று கம்பியைப் பிடித்திருந்த அவளின் கையைப் பிடித்தாள். மங்கலான கண்களைச் சிமிட்டியபடி சுரபி  தலையாட்டினாள். ஜன்னல்வழி வந்த காற்று தொட்டு கடந்து சென்றது. சுரபி முதுகில் அந்தத் தொடுகை இன்னும் எஞ்சியிருந்தது. மனம் கைகளிடம் இதற்குதான் மனிதர்களின் கரங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்பதில்லையாக்கும் என்றது.

 

 

 

எதிர்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முப்பத்தி மூன்று நீண்ட வருடங்கள்; உள்ளே புதைந்த குண்டென வெளிவர இயலாத காலங்கள்; ஆனால், இப்போது அது இரத்த ஓட்டத்தை குறுக்குகிறது. ஆம், கீறி அதை வெளியே எடுக்கும் வேளை நெருங்கி விட்டது. குண்டின் பெரும் பகுதியை சிவநேசன் எடுத்துவிட்டார்; மிகுதியை மங்களாதான் எடுக்க வேண்டும்.

.மனிதனை உயரச் சொல்லும் மலைகளும், தேர்களும், கோயில்களும், ஏன் நம் முன்னே நின்று நீ சாதாரணமானவன் என்று சொல்லாமல் சுட்டிக் காட்டுகின்றன? சாந்தவனேஸ்வரரும், சாந்த நாயகியும் ஒன்றாக அமர்ந்து வர கம்பீரமாக அசைந்தசைந்து வரும் தேரின் முன்னால் வெண்குடையின் கீழே வெள்ளைத் தாமரை வடிவ பீடத்தில் வெண் பட்டுடுத்தி கலைமகள் வருவது புதுப்பட்டியின் சிறப்பு. ஊரை சற்றே பிளந்து ஓடும் வெட்டாறு. செவிவழிச் செய்தியாக அறிந்தது கச்சபேஸ்வரர் கனவில் சிவன் தோன்றி சரஸ்வதி தேவியை     நிறுவி அவளுக்கும் தன்னைப் போல் சிறப்புகள் செய்ய ஆணையிட்டார் என்பது. சிறுவனாக அம்மாவின்  ஒரு கையை நானும், மறு கையை மங்களாவும் பற்றிக் கொண்டு, ‘ஏம்மா, சரஸ்வதியும் இந்த ஊர்வலத்ல வரா?’ என்று கேட்டதும் அம்மா சொன்ன பதிலும் கல்வெட்டு போல் பதிவாகி இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தவில்லையே என்ற வாட்டம் இப்போதும் நீடிக்கிறது. ஆனால், அது இனி இருக்காது.

அம்மா சொன்னாள், ’சுபத்ராவோட கண்ணனும் பலராமனும் இருக்ற படத்தை நம்ம கூடத்ல பாத்திருக்கல்ல; அதே மாரி சிவனுக்கு, தங்க சரஸ்வதி. ஆதி சங்கரர் சரஸ்வதி அஷ்டோத்ரத்ல ‘சிவானுஜாய’ன்னு அதாவது ‘சிவனுக்கு இளையவளே’ன்னு சொல்றார். ’பூரி ஜகன்னாத யாத்ர’ மாரி நம்ம ஊர்ல தங்கையும், அண்ணனும், மன்னியுமா நம்மளயெல்லாம் பாக்க வரா; உங்க ரண்டு பேருக்கும் தான் சொல்றேன்-உடம்பொறப்புக்காக முடிஞ்சதெல்லாம் செய்யணும்- தன் பங்க, கூடப் பொறப்புக்காக விட்டுக் கொடுக்கணும் .நீங்க சாதாரண உடம்பொறப்பில்ல; ரெட்டையா பொறந்தவா; ரொம்ப பாசமா, அனுசரிச்சுண்டு இருக்கணும்; ஆனா, எங்க நம்ம ராஜ நந்தினி மாரித்தான் இருக்கேள்.’

இன்று தெளிவாகப் புரிகிறது- அம்மா தங்கள் இயல்பை எவ்வளவு சரியாகக் கணித்திருக்கிறாள் என்று. தாத்தாவுடன் அவர்கள் பூர்வீக வீட்டில் இருந்தபோது காமாக்ஷி என்ற பசு இரு கன்றுகளை ஒரு சேர ஈன்ற நேரம் கௌசிகன் எனவும், மங்களா எனவும் நாங்கள் பிறந்தது அன்று அந்த ஊரில் மிகப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டதாம்; அம்மாவிற்கு மங்கள கௌசிகா இராகம் மிகவும் பிடிக்கும்; எங்கள் ஒற்றுமையைப் பேரிலாவது இணைத்துவிட ஆசைப்பட்டிருக்கிறாள், பாவம். அதிலும் ’ஸ்ரீ பார்க்கவி’யை அம்மா பாடக் கேட்கணும்; அதையெல்லாம் எங்கே தொலைத்தோம்? நாளை தெப்பத்தின்போது நம்ம நாகஸ்வர வித்வானை வாசிக்கச் சொல்லி கேட்கணும்; அதுகூட நான் இறுதி முறை கேட்பதாக இருக்கக்கூடும்.

இப்பொழுதே அந்த தெப்பக்குளத்தைப் பார்க்க வேண்டும்.தேரின் சந்தடியிலிருந்து விலகி அந்த நீரைக் காண வேண்டும்;வெந்தெரியும் மனதிற்கு அந்த ஈரம் ஓர் ஆறுதல்; மங்களாவை நான் சந்திக்கையில் அவள் கண்களில் பளபளக்கும் நீரை எதிர் கொள்ளும் வலிமையை பரந்து நிற்கும் குளம் எனக்குத் தரலாம். மேலும் என் பிறந்த ஊரில் நான் பார்க்கும் கடைசி தெப்பமாகத்தான் இது இருக்கும்.

‘என்ன கௌசிகா, குளத்துக்கு இப்பவே வந்துட்டே. இன்னும் நேரமிருக்கே?’ என்றான் ராமு

“எனக்குக் காத்ருக்கப் பொறுமயில்லடா”

‘என்னதுடா, உன் தோதுக்கு தொப்பம் நடக்கணுமா, திருப்பியும் கண்டத சாப்ட ஆரம்பிச்சுட்டியா? அப்படியும்தான் என்ன அடுத்த விச பாக்கலாமோன்னோ?’

‘ஏன்டா உளற, சித்த காத்தாட இருந்துட்டு, தேர் பவனி முடிஞ்சு நெலக்கு வரும், சாமியெல்லாம் குடும்பமா வரும்; அப்றம் தெப்பம். நன்னா, பாக்கலாம்ணு வந்துட்டு உங்கிட்ட மாட்டினுட்டேன். நா இங்க இருக்கறதுல உனக்கென்னடா கஷ்டம்?’

“நல்ல கூத்துடா இது, உடம்பொறந்தாள ஃபுல்லா விட்டாச்சு, குடும்பத்தோட சாமி பாக்கறாணாம், யாரப் பாக்க வந்தியோ, என்னவோ, நான் போய்ட்டு அப்றம் வரேன், குளத்ல இறங்கிடாதே”

‘போடா, போடா உன்ன எனக்கும் என்ன உனக்கும் இன்னி நேத்திக்கா தெரியும்?’

இவனிடமும் சொல்லாமல்தான் போகப்போகிறேன்.வானத்தில் கூட்டமாய் பல பறவைகள் பறக்கும், தனியாகப் பறக்கும் பறவையும் உண்டே!

தெப்பத்திற்காக குளத்தில் நீர் நிறைந்திருந்தது. மேலைச்சூரிய ஒளியில் செம்பொன் கண்ணாடித் தகடென மின்னியது.காற்று ஏற்படுத்தும் சலனத்திற்கேற்ப இயற்கையின் ஒளி நடனம். மனிதனுக்கு சபலம்தான் சலனத்தின் காரணம் போலும். பேரெழிலும், பெருமிதமுமாக நீராழி மண்டபம் நின்றிருந்தது. மாலை தெப்பம் முடிந்த பிறகு மதகைத் திறந்து விடுவார்கள்; அப்படிக் குறைந்த நீரிலும் இம்மண்டபம் பெருமிதமாகத்தான் இருக்கும். என் வீட்டை வாங்கிய சிவநேசன் அப்படித்தான் பெரிய மனிதராக நிற்கிறார்.

இந்தக் குளத்தைப் போலத்தான் காவியும், வெள்ளையும் அடித்து சின்னஞ்சிறு படிகள் அமைத்து என் வீட்டிலும் தரையில் பதிக்கப்பட்ட தெப்பக்குளம் இருந்தது. அழகான கோலங்கள் வரையப்பட்ட செந்நிற கற்கள், அதை மூடி,பால் வெண் பூச்சால் இணைக்கப்பட்டிருக்கும். நவராத்திரி சமயத்தில் சிறு உளியால் பூச்சினை அகற்றி, கற்களை எடுத்துவிட்டு நான் ஒதுங்கி விடுவேன்; எனக்கு முடியவில்லை என்பதல்ல, அவளும் செய்யட்டுமே என்ற வீம்புதான். உதட்டைப் பிதுக்கிப் பழித்தவாறே மங்களா அதில் நிரப்பப்பட்டுள்ள மணலை அள்ளுவாள். குடம் குடமாய்த் தண்ணீர் விட்டு குளத்தில் பொம்மைகள் மிதக்கும்; சுற்றிவர மின் விளக்குகளின் அலங்காரம்.

அது புதைத்து வைத்திருந்த அந்த இரகசியம் எங்கள் வீட்டை விற்கும் நேரத்தில்தான் வெளிப்பட்டது. அதை நான் மட்டுமே சுமந்தலைந்தேன் முப்பத்தி மூன்று வருடங்களாக. இரு நாட்களுக்கு முன்தான் சிவநேசனிடம் சொன்னேன். என் மனப் பாரம் குறையக் குறைய அவர் மகத்தான மனிதராக வளர்ந்துகொண்டே வந்தார். ”அழாதீங்க, கௌசி சார், இப்ப என்ன நடந்து போச்சு; சரி, உங்க வீட்ட விக்க எங்கிட்ட ஒப்பந்தம் பண்ணீங்க, நான் அட்வான்ஸ் மட்டும்தான் கொடுத்திருந்தேன் அப்ப. உங்களயே சிதிலமான வீட்ட முழுசா இடிச்சு சமப்படுத்தி தரச் சொன்னது நாந்தான். அப்படி இடிக்கையில  ஒரு வெள்ளிச் சொம்புல வெள்ளிக் காசுகள், தங்கக்காசுகள் கிடச்சிருக்கு. அதை அப்ப சொல்லல நெஜத்த மறச்சுட்டோம்னு மனசு பதறிகிட்டேயிருந்திருக்கு உங்களுக்கு. ஏதோ பெரிய குத்தம் பண்ணாப்ல வந்து எங்கிட்ட சொல்லிக் கரையறீங்க. அது உங்க சொத்து சார், என்னுதா எப்படி ஆவும்?எங்கிட்டேந்து வழிப்பறி செஞ்சீங்களா, திருடினீங்களா எந்தத் தப்பும் செய்யலியே; அந்த வீடு உங்க பரம்பர சொத்துன்னும், ஒருகாலத்ல நல்லா வாழ்ந்தவங்கன்னும் எங்க தாத்தா சொல்லியிருக்காங்க.

மனைக்கித்தானே பணம் கொடுத்தேன், மனய கரெக்டா கொடுத்திட்டீங்க, புதயலுக்கு நான் ஆசைப்படவுமில்ல, அத எதிர்பாக்கவுமில்ல. உங்க வீட்ல இருந்த கிணத்த தூத்தா கொடுத்தீங்க, இல்ல வெட்டி எடுத்துட்டுப் போய்டீங்களா? நெலத்ல வெட்டி அமைச்சது கிணறு,நெலத்தை வெட்டிப் புதச்சது பணம். ரெண்டும் வேறவேறங்க. அட, அழுவாதீங்க, உங்க பணம் உங்ககிட்ட கரெக்டாத்தான் சேந்திருக்கு; இத நீங்க புதயல் கிடைச்ச ஒன்னே சொல்லியிருந்திங்கன்னா நா அப்பவும் அது என்னுதில்லன்னுதான் சொல்லியிருப்பன். என்ன ஒன்னு, நீங்க குத்த உணர்ச்சியோட இப்படி அலைஞ்சிருக்க வேணாம். கௌசிக் சார், உண்மைல உங்களப் பாத்தா பரவசமா இருக்கு; எனக்கு இந்த விவரம் இன்னயமுட்டும் தெரியாது, நீங்க சொல்லலேன்னா யாரும் சொல்லவும் போறதில்ல ஆனா, என்ன மனுஷன்யா நீரு, உம்ம சொத்துக்கு கூனிக் குறுகிறீங்க. இனி குழம்பாதீங்க, சந்தோஷமா இருங்க, நண்பரா வந்து போய்க்கிட்டிருங்க. காசு, பண விவகாரமெல்லாம் வேணாம்’

என் சிந்தனைகளை ஆர்ப்பரித்து முழங்கிய மேளம் தடுத்தது. ஓ, தேர் நிலைக்கு வந்துவிட்டது.            நாகஸ்வரமும், மேளமும் உச்ச கட்ட பிளிறலில் ஒலித்தன. குளஓரத்து மேடையில் அம்மையும், அப்பனும் தேரிலிருந்து இறக்கப்பட்டனர். எத்தனையோ வருடங்கள் பார்த்திருந்தும் காண அலுக்காத காட்சி இது. சிவன் மட்டும் மேடையிலிருந்து சந்தனம், மஞ்சள், குங்குமம், பட்டுச் சேலை, பூப்பந்து, பழங்கள் வெண்தந்தத்தால் ஆன சிறு வீணை, சுவடிகளை எடுத்துக் கொண்டு கலைமகளின் பல்லக்கு அருகே சென்று சீர் அளித்து அழைக்க, அவள்  தன் பல்லக்கில் அவரையும் ஏற்றிக்கொண்டு மேடைக்கு வந்தாள். சாந்தநாயகி இருவரையும் எதிர்கொண்டு வரவேற்க கொம்பூதப்பட்டது. மலர் பொழிய மூவரும் கோயிலின் உள்ளே  போனார்கள். எனக்கு நீல வானில் தெரிந்த கறுமையும் விலகியது.

ஆம்,மங்களாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் மறைத்ததற்கு ஈடாக மொத்தத்தையும் அவளிடம் கொடுத்து விட வேண்டும். அவள் அப்படித்தான் என்ன செய்துவிட்டாள் ஒரேயடியாக அவளை விட்டு விலகும்படியாக.

எங்கள் வீடே அம்மாவின் சீதனம். வீட்டோடு மாப்பிள்ளையாய் இருந்த அப்பா காணாமற்போன மன அழுத்தம் தாத்தாவிற்கும்,  அம்மாவிற்கும் இருந்திருக்கலாம். ஊரைக் கூட்டி தடபுடலாக எனுக்கு பூணூல் கல்யாணம். அப்போது தாத்தா உயிருடன் இருந்தார். காலியான பெருங்காய டப்பாதான் அவர் அப்போது. ’எந்த கௌரவத்தைக் காப்பாத்த இந்த வேஷமோ? உங்க “வண்டி”எங்கெங்கே நிக்கறதுன்னு ஊருக்கே தெரியும்.’ என்று அம்மா சொன்னது ஏன் எனக்கு இன்றுவரை நினைவில் நிற்கவேண்டும்? சுயநலம் அப்படி ஒன்றும் தவறில்லை என்று எனக்கு அன்று வித்து விழுந்து விட்டது. அவளும் என்னைப் போலத்தானே ராஜ, நந்தினியின் சண்டையைப் பார்த்து வளர்ந்தாள். தன் தீவனத்தை வாயில் அதக்கிக்கொண்டு மற்றொருவரின்  பானையை கொம்பால் முட்டிக் கவிழ்க்கும் இரண்டும். இடையன் குளிக்க ஓட்டிச் செல்கையில் முரண்பட்டு ஓடும். புல்லுக்கட்டையோ, வைக்கோலையோ முதலில் ஒன்றுக்குப் போட்டுவிட்டால் பாய்ந்து சீறிக்  கவ்வும்; கட்டைத் தெறித்துக்கொண்டு பாயப் பார்க்கும். தாத்தாவும் என்னைச் செல்லம் கொண்டாடினார்; எல்லாமாக அவளுக்கு என்னைப் பிடிக்காமல் செய்திருக்கலாம். அவள் என்னை அவமானப்படுத்தியதை முப்பத்து மூன்று வருடங்களாக என்னால் மறக்க முடியவில்லை; ஆனால்,சிவநேசனைப் பார்த்த பிறகு மரத்தில் புதைந்த கோடாரி தானே வெளிப்பட்டுவிட்டது- சீழ், ரணம், வலி, சுவடு எதுவுமில்லை

ஆம், அவள் என் மேல் வழக்கு பதிவு செய்தாள், வீட்டை விற்ற தொகையில் பாதி பங்கு கேட்டு. இவளுக்கு கல்யாணம் செய்து, நகை நட்டு போட்டு, முதல் பிள்ளைப்பேறு பார்த்து எல்லாம் செய்தாகிவிட்டது; எதற்காக பாதிப்பங்கு தரவேண்டும் என வீம்பு எனக்கு இருந்தது. அம்மாவும் அவளுக்கு கால் பங்குதான் தரச் சொல்லியிருந்தாள்; இதெல்லாம் புதையல் எடுப்பதற்கு முன்னே. அவள் கேஸ் போட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது; எத்தனை சுய நலம் என்றும் தோன்றியது. கேசில் நான் ஜெயித்தபிறகு மொத்தமாக அவளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். அவளிடம் புதையலைப் பற்றி மூச்சு விடவில்லை. எதை எதிர்கொள்ளப் பயந்து அப்படி நடந்து கொண்டேன்? அவள் என்னைக் கேள்வி கேட்டிருந்தால்தான் என்ன, நம்பாமலே போயிருந்தாலும்தான் என்ன, நான் அவளிடம் மறைத்திருக்கக் கூடாது. ஆம், தெப்பம் முடிந்தவுடன் கிளம்பி அவளை அவள் வீட்டில் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டு, செக்கையும் கொடுத்துவிட்டு நிம்மதியாக, நிச்சலனமாகப் போய்விட வேண்டும் வெள்ளரியை விட்டு கொடி விலகுவதைப் போல் விலகிவிட வேண்டும். ’மானச சஞ்சரரே’ . யாரிடமும் கோபமில்லை, எந்தப் பொருளுக்கும் ஆசையில்லை, எந்தப் பற்றும் இனி தேவையுமில்லை. இந்த எண்ணத்தைத் தவிர என் மனதில் ஒன்றுமே இல்லை. மங்களாவிடம் என்ன பேசப் போகிறோம், எப்படி அவளைச் சமாதானம் செய்யப் போகிறோம் என்றுகூட மனம் நினைத்து நினைத்து ‘ரிகர்சல்’ பார்த்துக்கொண்டு இல்லை. அவள் சண்டை போடட்டும், அழட்டும், மன்னிக்கட்டும், மன்னிக்காமல் போகட்டும், செக்கை என் முகத்தில் வீசி அடிக்கட்டும் நான் அமைதியாக நடந்து கொள்வேன்- இது மட்டும் ‘ரிகர்சல்’ இல்லையா என்று ஒரு குரல் மனதினுள் கேட்டது.

சிரித்துக்கொண்டே ரயிலேறக் கிளம்பினேன்; எத்தனை புழுக்கமாக இருக்கிறது; இந்த இறுக்கம் மழை பெய்தால் போய்விடும். வழியெல்லாம் சிறு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. மின் விளக்குகளின் ஒளிச் சிதறலில் தன்னைக் காட்டி மறையும்  சிறுமழை. காற்றின் அலைகள் ஏந்தி வரும் சாரலில் அம்மா என்னைத் தடவிக் கொடுப்பதைப் போலிருந்தது. அவள் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கையில் என் இதய ஒலி காதுகளில் கேட்டது. கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்து திகைத்தேன்; இருபது வயது மங்களா? இவளுக்கு மட்டும் வயதே ஏறவில்லையா? ’யாருடி, கௌசல்யா?’ என்ற குரலுடன் வந்தவள், ”கௌசீ’ எனக் கதறி அணைத்துக் கொண்டாள்.

 

 

இரட்டை உயிரி – ராம் முரளி

ராம் முரளி

கிருஷ்ணமூர்த்தி தனது குடிசையின் வாயிலுக்கு எதிரில் மண்ணில் குந்தி அமர்ந்திருந்த கணபதியிடம் குரல் கொடுத்தபடியே, தனது இடுப்பிலிருந்து அவிழ்ந்து நழுவும் கைலியை ஒரு கையால் இறுக்கமாக பிடித்தபடி பாதையில் இறங்கி உடல் வெடவெடக்க அவசரமெடுத்து ஓடினான். அவசரத்தில் வேலிப் படலையும் அவன் சாத்தவில்லை. குடிசையையும் தாழிட்டிருக்கவில்லை.

கணபதிக்கு செய்தியொன்றும் விளங்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் நடை வேகத்தை கண்டவனுக்கு விபரீதம் எதுவோ உண்டாகியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு பின்னாலேயே நீலாவதியும், சக்கரப்பூச்சியும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மல்லாட்ட கெழவி என்று அழைக்கப்படும் சகுந்தலை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தனதுடலை நகர்த்தும் வலுவற்று தரையில் அமர்ந்து அரற்றியபடி கிடந்தாள். கணபதி ஒவ்வொருவராக தன்னை கடந்து ஓடப் பார்த்தபடி மெல்ல சலிப்பு கொண்டவனாய் அவசரமின்றி நிதானமாக எழுந்தான். அவன் பிறரைப்போல விரைந்துச் செல்லும் நிலையில்லாமல் இருந்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, சீட்டுக்கட்டு ஆட்டத்தில் உண்டான கைத் தகராறில் அவனுக்கு பலமாக அடி விழுந்துவிட்டது. சந்திரன்தான் அவனை அடித்தது. தொடையின் அடியில் சீட்டட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு மற்றவர்களின் கவனம் சிதறுகையில் அந்தச் சீட்டை, கையில் பிடித்திருக்கும் சீட்டட்டைகளின் இடையில் சொருகி, தன்னை வெற்றியாளனாக தொடர்ந்து தந்திரம் செய்து வந்தது கண்டு சந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவியெடுத்து வெளுத்துவிட்டான். தொடையில் பலமாக அடி விழுந்துவிட்டது. இயல்பாக நடக்கும் திராணியற்று ஒவ்வொரு அடியாக, கருவாட்டு ருசிக்கு மோப்பம் கொண்டலைகின்ற பூனையினைப்போல தரையில் அடிமேல் அடிவைத்து முன் நடந்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கடந்தோடும் சண்முகம்கூட அவனிடம், “ஏய்… நம்ம பூபாலன் பைய. தூக்குல தொங்கிட்டான். ஊரே கலவரம் கொண்டலையுது. நீ என்ன கண்ணி வெடிக்கு தடம் பாத்து நடக்குறாப்ல நடந்துட்டு இருக்க. வேகமாக வா நாய..” என்று உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு போனான்.

கணபதிக்கு எதுவொன்றும் விளங்கவில்லை. அவனது நினைவுகள் முன்னும் பின்னுமாக சிதறி ஓடியது. ஊர் விடலைகளின் முகங்கள் ஒன்றன் மீதொன்றாக விரைவதும் கரைவதுமாக இருந்தது. தனது சட்டையை இழுத்து முகத்தை ஒருமுறை அழுந்தத் துடைத்த நொடியில் சட்டென எதுவோ புரிபட,  வெறித்த பார்வையுடன் உணர்வுகள் வற்றி அப்படியே நிலைத்து நின்றுவிட்டான். பூபாலனின் முகமும், குரலும் அவனது நினைவில் உருத் திரண்டன. ”ஆறேழு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சிக்கிட்ட பூபாலனா,” என தன்னிச்சையாக உச்சரித்த அவனது குரலை கவனித்தவர்கள் யாருமில்லை. கணபதி தன் போக்கில் நடந்துக்கொண்டிருந்தான். அவனது மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஊர் முழுவதிலும் பரபரப்பு கூடியிருந்தது.

”அம்சமான பயலாச்சே. அவனுக்கா இந்த கெதி. மாரியாத்தா இந்த பயலுக்கு ஏன் இந்த தண்டனை. அவனொன்னும் விஷமம் புடிச்ச பையனில்லையே. தங்கமா பொண்டாட்டி, நல்ல எடத்தில டியூட்டிக்கு போனான். அவன் வூட்டுல மல்லிகைப்பூ மணம்கூட இன்னும் நின்னப்பாடில்ல. அதுக்குல்ல அவனுக்கா இந்த கெதி”

கணபதிக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு முகத்தில் கோடுகளாக வழிந்து உருண்டது. தனதெதிரில் உடம்பில் சட்டையின்றி வேகமாக வந்து கொண்டிருந்த சிலம்பரசனை அடையாளங்கண்டவனாய்,

“ஏய் செலம்பு. செய்தி கேட்டீயா.. நம்ம பூபாலப் பெய. கயித்துல தொங்கிட்டானாம். அவனுக்கென்ன அப்படியொரு கேடு”

“நானும் அங்கிருந்துதான் வாரேன். இதுப்போல ஒரு சாவு என் வாழ்க்கையில நான் கண்டதில்லை. வயித்து புள்ளத்தாச்சு தரையில் கெடந்து தவியா தவிக்கிறா. பாக்க மனசு வரல. அதான் போயி ஒரு கட்டிங் ஏத்திட்டு வரலாம்னு இருக்கேன். வரீயா…”

”சாவு சங்கதி கேட்டதுல இருந்து கையும் காலுங் ஓட மாட்டேங்குது. மனசு கெடந்து படபடன்னு அடிச்சிக்குது. என்னால எப்படி சாராயத்த குடிக்க முடியும். நீயே ஊத்திக்க. எனக்கப்புறம் அந்த பழி பாவத்த சுமக்க முடியாது”

“நான் சொல்லுறத கேளு. சாவு நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவனவன் பேயி புடிச்சி திரியுறானுவோ. பொணத்துக்கு பக்கத்துல போவக் கூட எவனுக்கும் துணிவில்ல. நைனாவும் கிருஷ்ணமூர்த்தியுந்தான் அவன அம்மணப்படுத்திக்கிட்டு இருக்காங்க”

கணபதிக்கு திடுக்கிடல் உண்டானது. ஊரில் அவன் பார்க்காத சாவு ஒன்றுமில்லை. அரளி விதை கடித்து உயிர் துறந்த செங்கனியிலிருந்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆராயி வரை அவனது நினைவில் அக்கணத்தில் வந்து போனார்கள். ராவணனின் அப்பா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. சாலை விபத்தில் நிகழ்ந்தேறிய கோர மரணமது. கணபதி அன்றைய தினத்தில் ராவணன் வீட்டை விட்டு துளியும் அகன்றிருக்கவில்லை. அவரது உடலை மருத்துவனையிலிருந்து ஆம்புலன்ஸில் தூக்கி வந்து வாசலில் நிறுத்தியபோது, வீட்டினுள் அதனை தூக்கிச் சென்ற கரங்களுள் ஒன்று கணபதியுடையது. சிறுவயது முதலே அந்தப் பகுதியில் பலபல மரணங்களுக்கு சாட்சியாளனாக அவனிருந்திருக்கிறான்.

“அதென்னப்பா அப்படியொரு சாவு. நான் பார்க்காததா? அந்த பயலோட மொகம்தான் கொஞ்சம்போல இம்சப்படுத்த செய்யுது. ரெண்டு நாளுக்கு முன்னாடிக்கூட பொட்டிக் கடையாண்ட பாத்தேனே. பயலுவோ கூட கூடி நின்னு பேசிட்டிருந்தான். என்ன பாத்து லேசாக சிரிச்சிட்டு போனான். அதுக்குள்ள என்னயா ஆச்சு என் தம்பிக்கு?”

கணபதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பூபாலனின் முகம் அவனது நினைவை விட்டு அகலாதிருந்தது. துணித் துண்டினை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டான். சிலம்பரசனுக்கும் அவனது அழுகையை எதிர்கொள்கையில் கண்ணீர் திரண்டுவிட்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல், தனதுடலோடு அவனை அணைத்துக்கொண்டு பனந்தோப்பு பகுதிக்கு இழுத்துக்கொண்டு போனான்.

பனை மரங்கள் அவ்விடத்தில் வரிசை வரிசையாக நிலத்தில் உறுதியுடன் நின்றுக் கொண்டிருந்தன. பனை மரங்களின் அடர்த்தி கருங்கோடுகளைப் போல கணபதியின் கண்களுக்கு புலனாகியது. அசைவுகளற்று நித்திய மெளனம் சாதித்துக் கொண்டிருந்த அவைகளை கண்களை உருட்டிப் பார்த்தபடியே, முன் செல்லும் சிலம்பரசனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். நிரந்தர அமைதி அவ்விடத்தில் குடிகொண்டிருந்தது. உயிரியக்கமற்ற நிசப்த வெளியினில் நின்று கொண்டிருப்பதாக கணபதிக்கு ஒருகணம் எண்ணம் தோன்றலாயிற்று. ஒவ்வொரு பனை மரத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றுவெளியில் கவிந்திருந்த வெறுமையை எதிர்கொள்ள கணபதிக்கு சற்றே கலக்கமாக இருந்தது. வெளியில் சூழ்ந்திருந்த வெறுமை மெல்ல அவனது மனத்துக்குள் சென்று ஆற்றொவொண்ணா துயரை இறக்கியபடி இருந்தது.

சிலம்பரசன் தனது கால்சட்டையில் திணித்து வைத்திருந்த சாராய பாட்டிலை வெளியில் எடுத்து தரையில் வைத்துவிட்டு, செருப்பைக் கழற்றி அதன் மேலேறி அமர்ந்து கொண்டான். கணபதிக்கு உள்ளுக்குள் நெருடலாக இருந்தது. எனினும், தன்னெதிரில் அசைவு கொண்டிருக்கும் ஒற்றை உயிரியான சிலம்பரசனின் துணை அவனை சாந்தமடையச் செய்தது. தனது துண்டை எடுத்து ஒருமுறை உதறிவிட்டு தரையில் மரமொன்றில் தோள் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

”என்னயிருந்தாலும், நான் அவன் மொகத்த ஒரு தடவ பாத்திருக்கனும் செலம்பு. மனசு கெடந்து தவிக்குது”

சிலம்பரசன் அவன் பேசுவது எதையும் கவனிக்க விருப்பமில்லாதவனாய் விறுவிறுவென முனைப்புடன் இரண்டு பிளாஸ்டிக் தம்ப்ளர்களில் சாராயத்தை ஊற்றினான். தண்ணீர் பாக்கெட்டை பற்களால் இழுத்துக் கடித்து நீரை அதன் மேல் பீய்ச்சி அடித்தான். நீரோடு கலந்து சாராயம் பொன் நிறத்தில் பிளாஸ்டிக் தம்ப்ளரில் தேங்கியிருந்தது. சிலம்பரசன் கையில் எடுத்து மடமடவென குடித்துவிட்டான். அவன் முகத்தில் சுணக்கம் உண்டானது. ருசி நாவினை எரிச்சல் படுத்தியதைப்போல சட்டென சிறிது தண்ணீரையும் குடித்துக்கொண்டான்.

“ஏய் கணபதி. நான் ஒன்னும் கல் நெஞ்சுக்காரனில்லை. ஊருல எழவு உழுந்து எல்லா பயலுகளும் பேயி புடிச்சி திரியும்போது, இங்க இப்படி ஒக்கார்ந்து சாராயம் குடிக்கிறேன்னு என்னைய ஈனப்பயனுக்கு நெனச்சிடாத”

“அதெல்லாம் நான் ஒன்னும் அப்படி நெனக்கிற ஆளில்ல”

“உனக்கு இன்னும் செய்தி சரியா தெரியல. தூக்குல தொங்குனது பூபாலனில்ல. அது வேற”

கணபதி சிலம்பரசனையே கூர்ந்து நோக்கினான். அவனது உடலில் மயிர்கள் சிலிர்த்துக்கொண்டு எழுந்தன. தலையில் இருபுறமும் சுரீரென உணர்வு உண்டானது. அந்த பனந்தோப்பினை தலையுயர்த்தி மேலே பார்த்தான். பனையோலைகள் கூராயுதத்தைப்போல விரிந்து புடைத்துக் கொண்டு நின்றிருந்தன. வானத்தில் பழுப்பு நிறமேறியிருந்தது. காக்கைகள் கிலி கொண்டலைவதைப் போல தொடர்ந்து நிறுத்தாமல் கரைந்தபடியே இருந்தது. கணபதி இன்னமும் தன் பங்கு சாராயத்தை குடித்திருக்கவில்லை.

“ஏழு மாசமிருக்குமா அவனுக்கு கல்யாணமாகி?”

பேச்சற்ற நிலையிலிருந்த கணபதி சட்டென உணர்வு கொண்டவனாய், “ஆமாப்பா. ஏழு மாசமிருக்கும். முருகன் கோயில் திருவிழா சமயத்துல கட்டுனதுன்னு நெனக்கிறேன்”

“பாவம்யா. அதுக்குள்ள ஆத்தா அவன மேல கூப்டுக்கிட்டா”

“ஏய்… தெளிவா சொல்லுயா. தூக்கில தொங்கினது அவனில்லன்னு சொன்ன..?”

”தூக்குல தொங்குனது பூபாலனோட உடம்புதான். ஆனா உயிரு அவனோடதில்ல. அந்த கோலத்த நீ பாத்திருக்கனும். எனெக்கெல்லாம் உடம்புல கரெண்ட் பாஞ்ச மாதிரி இருந்துச்சு”

கணபதிக்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. அவனாக நடந்தவைகளை சொல்லிவிட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவனைப்போல அமைதியுடன் சிலம்பரசனின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“கிரிக்கெட் விளையாடிக்கினு இருந்த பயலுவோதான்யா மொதல்ல அத பாத்திருக்கானுவோ. பந்து அவன் வூட்டுப் பக்கமா போயி விழுந்திருக்கு. அத எடுக்குறதுக்கு அந்த வூட்டுப் பக்கமா போயிருக்கானுவோ. திடீர்னு வீட்டோட ஜன்னல் சந்து வழியா எதுவோ அந்தரத்துல தொங்குற மாதிரி தெரிஞ்சிருக்கு. என்னுமோ ஏதோனுமுட்டு வீட்டு கதவ தட்டித் தட்டிப் பாத்திருக்கானுவோ. எந்த நெளிவும் சுளிவுமில்ல. ஊமையாவே கெடந்திருக்கு வூடு. திரும்பவும் ஜன்னல் சந்து வழியா பாத்தா, கால் பாதம் ரெண்டு தொங்குறது இவனுங்களுக்கு புரிஞ்சிருக்கு. உடனே லபோதிபோன்னு கத்தி கூப்பாடு போட்டுருக்கானுங்க.. முந்திரி தோப்புல தண்ணி காட்டிட்டு இருந்த என் காதுலயும் எனுமோ சத்தம்  கேட்டுது, அலறியடிச்சிக்கிட்டு போயி பாத்தா…”

உணர்ச்சி வேகத்தில் தடையற்று சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென தனது பேச்சினை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் ஒருமுறை தலையை திருப்பிப் பார்த்தான். அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை.

”அந்த பய தன்னோட பொண்டாட்டி புடவைய ஒடம்புல சுத்திக்கிட்டு அந்தரத்துல தொங்கியிருக்கான்”

அதிர்வு கொண்ட கணபதி புருவம் புடைக்க,  ”என்னது பொண்டாட்டி உடுப்பையா..? என்னய்யா அக்கிரமமா இருக்கு. நெஜமாவா சொல்ற..?”

சிலம்பரசன் அவனுக்கு பதில் கூறாதவனாய் கீழே கணபதிக்கு ஊற்றி வைத்திருந்த சாராயத்தையும் எடுத்து மொடமொடவென குடித்தான். அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. சுற்றும்முற்றும் எதையோ வெறிகொண்டு தேடுவதைப்போல முகத்தை அங்குமிங்குமென அலையவிட்டான். கணபதிக்கு அவனது செய்கைகள் எதுவும் புரியவில்லை. அரற்றல் அடங்காமல் தொடர்ந்தபடியே இருக்க, அவனது உடலில் மீது கை வைத்து, “ஏய் என்னாச்சுப்பா உனக்கு..? நீயேன் இப்படி கெடந்து உடம்ப ஆட்டுற..?” என்று உதறுலுடன் கேட்க, சிலம்பரசன் தன் மேலிருக்கும் அவனது கையை தட்டிவிட்டபடி,

”நான் மட்டுமில்ல ஊருல எல்லா பயலும் இப்படித்தான் பயங்கொண்டு திரியுறானுவ. நேத்து வரை ஊருல நல்லவிதமா சுத்திக்கிட்டு இருந்த பய, திடீர்னு ஒடம்புல பொடவைய சுத்திக்கிட்டு தொங்குனா உனக்கு எப்புடி இருக்கும். நானெல்லாம் ஆடிப் போயிட்டேன்”

“அவனுக்கென்ன பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடுச்சா..? அப்படியொன்னும் தெரியலய்யே…?! நல்லவிதமாத்தான குடும்பம் நடத்திட்டு இருந்தான்…?”

”அங்கத்தான் விஷயமிருக்கு. பூபாலன் தாயில்லாம வளர்ந்த பெய. அப்பன்தான் அவனுக்கு எல்லாமா இருந்து வளர்த்துவுட்டான். பொம்பள பாசமே கெடைக்காத பயலுக்கு, புதுப்பொண்டாட்டி உண்டானது கொள்ள சந்தோஷமாயிருக்கு. அவ முந்தானையே புடிச்சிட்டு திரிஞ்சிருக்கான். ஊருல எல்லாவனும் அத சொல்றானுவோ. அவள எங்கயும் வுடுறது கெடையாது. கடைக்கண்ணி எல்லா எடத்துக்கும் அவனே போயிட்டு வந்திருக்கான். அவள ஒரு இளவரசி கணக்கா பாத்துருக்கான்”

“அந்த கதெதான் எனக்கும் தெரியுமே. பொண்டாட்டிய எப்படி பொத்தி பொத்தி பாத்துக்கிட்டான்னு. ஒரு தடவக்கூட அவள மத்த வூர் பொம்பளங்க மாதிரி வெளியில பாத்ததில்ல. எல்லாரும் பேசிக்கிட்ட மாதிரி கல்யாணமான புதுசில அப்படித்தான் இருப்பானுங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன்”

”மயித்துல இருப்பாங்க. டேய் அவன் உன்ன மாதிரி என்ன மாதிரின்னு நெனச்சியா..? அவள ஒரு கொழந்த கணக்கா பாத்துட்டு இருந்திருக்கான். கிட்டத்தட்ட நம்ம சிவனும் பார்வதியும் மாதிரி, அவன் தன்னோட ஒடம்புலயும் உசிருலயும் அவ சரி பாதியா இருக்கான்னு நம்பிட்டு இருந்திருக்கான்”

“அதுக்கும் அவன் செத்ததுக்கும் என்ன சம்பந்தம்?”

”அவ முழுகாம ஆனதுக்கு அப்புறம், அவள இன்னும் அக்கறையோட பாத்துட்டு இருந்திருக்கான்… இரு இரு..”

சிலம்பரசன் பாட்டிலில் மிச்சமிருந்த சாராயத்தையும் தம்ப்ளரில் ஊற்றி மடமடவென குடித்தான். கணபதிக்கு அங்கிருந்து எழுந்துச் சென்றுவிட வேண்டும்போல இருந்தது. பூபாலனின் சாவு சங்கதி அவனை மேலும் அமைதியுடனிருக்க விடவில்லை. எழுந்து சென்று அவனது முகத்தையும், அவனது மனைவியையும் பார்க்க வேண்டுமென அவனுக்கு தோன்றியது. பின் திரும்பிப் பார்த்தவன், அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை என்பதுணர்ந்து எழும் துணிவில்லாமல் சிலம்பரசனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நேரம் கடந்துக்கொண்டே போனது.

நீண்ட நேரமாக தலையை கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சிலம்பரசன், திடுதிப்பென நினைவு மீண்டவனாக, “டேய் கணபதி. உனக்கென்ன மயிரா தெரியும். முன்னபின்ன பொஞ்சாதி கட்டியிருந்தா அரும தெரியும். பெருசா பேச வந்துட்ட. நீயும் உம் மூஞ்சியும். நீயெல்லாம் இருக்குற ஊருல அவனெப்படிடா உசிரோட இருப்பான். கருமாந்திரம் புடிச்சவனே எழுந்துப் போடா. செத்தவன் மூஞ்சிய ஒரு தடவயாச்சும் பாக்கனும்னு தோனுச்சா உனக்கு? கழுத மூத்திரம் குடிக்க நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துட்ட”

சிலம்பரசனின் குரலின் தொனி முற்றிலுமாக மாறியிருந்தது. சிலம்பரசனுக்கு போதை அதிகளவில் ஏறியிருந்தது. அவனால் இவனை எதிர்கொண்டு பார்க்கக்கூட முடியவில்லை. இங்குமங்குமென வசைகளை இரைத்துக் கொண்டிருந்தான். கணபதிக்கு அதற்கு மேலும் அங்கிருப்பதில் விருப்பமில்லை. எதுவானாலும் பார்த்து விடுவதென்றெண்ணி, எழுந்து செருப்பை காலில் மாட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினான். சிலம்பரசன் தன்பாட்டுக்கு கணபதியை திட்டியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

கணபதி மெல்ல அந்த பனந்தோப்பில் ஒவ்வொரு மரமாக கடந்துக் கொண்டிருந்தான். மரங்களனைத்தும் பூபாலனின் நிழலை கொண்டிருந்தன. அதனை சந்திக்க துணிவில்லாமல் முகத்தை தாழத் தொங்கப் போட்டபடி முன்னால் நடந்துக் கொண்டிருந்தான். அவனது மனதுக்குள் பெண் உறவு  குறித்தான எண்ணங்கள் எழுந்தன.

நாற்பது வயதுக்கு மேல் கடந்துவிட்ட கணபதிக்கு இன்னமும் திருமணம் நடந்தபாடில்லை. அவனது ஒற்றை உறவுக்காரரான சன்னாசி பலமுறை சொல்லிப் பார்த்தாயிற்று. கணபதிக்கு துளி விருப்பமும் உண்டானதில்லை. ஒரு பெண்ணுடலோடு பந்தமுண்டாக்கிக் கொள்ளும் நினைவே அவனது மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. தெருவில், எதிர் நடையில், கோயில் குளங்களில், கடைக்கண்ணிகளில் எங்குமவனது மனது பெண்பிள்ளைகளை கண்டு சஞ்சலமடைந்ததில்லை. பெண் என்றாலே, அவள் பிற குடும்பங்களை சார்ந்தவள், நெருங்கி தொந்தரவுக்குட்படுத்தக் கூடாத அபூர்வர்கள் கணபதிக்கு. அதென்னவோ அப்படியொரு நினைப்பவனுக்கு.

கணபதி உணர்வற்ற நிலையில் பூபாலனின் வெள்ளந்தியான சிரிப்பை அசை போட்டபடியே தலை கவிழ்ந்து நடந்து கொண்டிருந்தான். அவ்வப்போது பொட்டிக்கடை வாசலில் வெட்டியாய் பொழுதைக் கடத்தியபடி சைக்கிளில் கணபதி அமர்ந்திருக்கும் தருணங்களில், ஒரு கண் சிமிட்டலை பரிசளித்தபடி பூபாலன் அவனை கடந்துச்  சென்ற மாலைப்பொழுதுகள் பொலிவுடன் மனதில் துலங்கியது. ”இதெல்லாம் அக்கிரமம்” என்று கைகளில் காற்றில் ஏவி புலம்பிக்கொண்டு முன்சென்ற கணபதிக்கு, திடீரென பின்னாலிருந்து, “கணபதி” என்ற குரல் கிசுகிசுப்பாக கேட்க, வெடுக்கென தலையை திருப்பிப் பார்த்தவன், பின்புறம் ஒரு அசைவுமில்லாதது கண்டு மேலும் மேலும் துணுக்குற்றபடியே நடை வேகத்தை கூட்டினான். பனங்காட்டில் இப்போது சிலம்பரசனின் குரல் மட்டுமே நிரம்பியிருந்தது.

கணபதி நேராக நடந்துச் சென்று வீரன் கோவிலை அடைந்தான். பரந்த செம்மண் தடத்தில், ஒற்றை அரிவாளைக் கையிலேந்தியபடி வெறித்த பார்வையுடன் ஆங்காரத்துடன் வீற்றிருந்த உயரிய வீரன் சிலையின் எதிரில் போய் கணபதி நின்று கொண்டான். அவனது கண்களில் நீர்க்கோடுகள் உருண்டு வழிந்தபடியே இருந்தது. கணபதியின் பார்வை புகாருரைப்பதைப்போல இருந்தது. இனியொருபோதும், உயிர்பெற முடியாத  நினைவுகளின் அரூப தடத்தில் கண் சிமிட்டி விலகிக் கரையும் பூபாலன் வாழ்ந்த காலத்தை வீரன் சிலையின் முன் நின்று காற்றலையில் ஓதினான். மனதில் கொஞ்சம் நிம்மதியுண்டானது.

தொலைவில் கூடி நின்ற ஊராரை மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான் கணபதி. அதற்குள் அங்கு ஓலைப் பந்தலை நட்டுக்கொண்டிருந்தார்கள். சில பிளாஸ்டிக் இருக்கைகள் போடப்பட்டு, ஊர் பெருசுகள் வாயில் துணி வைத்து மூடியபடியே முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அமர்ந்திருந்தனர். மாலையுங்கையுமாக சிலர் வீட்டினுள் நுழைந்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி பாடை கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஒத்தாசையாக இரண்டொருவர் அவரருகில் அமர்ந்து மூங்கில் கழிகளை அரிவாளால் சீவிக் கொண்டிருந்தனர்.  ஆங்காங்கே சில பொடியன்கள் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். கணபதியின் வருகையை ஒருவரும் அவ்வீட்டில் அக்கணத்தில் பொருட்படுத்தவில்லை. தெரிந்த முகத்தை தேடி சில நிமிடங்கள் அங்குமிங்குமென அலைபாய்ந்து கொண்டிருந்தான். எவரிடம் பேசுவதென்று அவனுக்கொன்றும் புரியவில்லை. உள்ளே பெண்கள் சடலத்தைச் சுற்றியமர்ந்து தலைவிரி கோலமாக ஒப்பாரிப் பாட்டிசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமித்தெழுந்த பல குரல்களின் சப்தம் கணபதியின் குரல்வளையை நெரிப்பதைப் போலிருந்தது. அங்கிருக்கச் சகியாமல் வீட்டின் பின்புறத்திற்கு சென்றான்.

அவ்வூரிலிருக்கும் நான்கைந்து ஓட்டு வீடுகளில் பூபாலனின் வீடும் ஒன்று. அதன் சுவர்களில் பூசப்பட்டிருந்த நீல நிறத்தை விரல்களால் தேய்த்தபடியே பின்புறமாக சென்றவன் அங்கு சிலர் கூடியமர்ந்து சாராயம் அருந்திக் கொண்டிருந்ததை கண்டான். அவர்களைக் கடப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முகமும் தனக்கு மிகவும் அன்னோனியமானதுதான் என்றாலும், அவ்வீட்டில் எல்லோரும் புதியவர்களாக, தனக்கொருபோதும் அறிமுகமற்ற மனிதர்களைப்போல நடந்து கொண்டார்கள்.

கணபதி பின்புறத்தில் நின்றபடி அங்கிருந்த மைதானத்தைப் பார்த்தான். சிலம்பரசன் சொன்னது நினைவுக்கு வந்தது. பின் திரும்பி சுவரைப் பார்க்கையில், அங்கு சுவரின் மையத்தில் சிறு துளையிடப்பட்டு இரண்டு இரும்பு கம்பிகள் அதன் குறுக்காக இடப்பட்டிருந்தன. அந்த ஜன்னலின் வழியாகத்தான் பூபாலன் கயிற்றில் தொங்குவதை ஊர் பசங்கள் கண்டிருக்கிறார்கள். கணபதி மெல்ல குனிந்து அந்த ஜன்னல் சந்தினில் எட்டிப் பார்த்தான். உள்ளே குவியலாக அமர்ந்திருக்கும் பெண்களின் ஓலம் அந்த ஜன்னல் துளையின் வழியே கசிந்து கொண்டிருந்தது. கணபதிக்கு சங்கடமாக இருந்தது. சாவின் வாசனை அந்த சுற்றுப் பிரதேசத்தில் ஒன்றுகலந்து பெரும் மரணக் காடாக ஊரே உருமாறியிருந்தது.

மெல்ல எழுந்து கழி வெட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் அருகில் தரையில் அமர்ந்தான். அவனும் இவனை கவனியாதது போலவே கழியை மும்முரமாக நறுக்கிக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் பேண்ட் வாத்திய குழுவும் வந்துச் சேர்ந்திருந்தது. செம்மண் நிற தலை மயிருடன் அவர்கள் தங்களுக்குள் ஹாஸ்ய கதைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றையவர்களை போல மரணம் குறித்தான அக்கறையற்று வெகு சகஜமாக அவர்கள் அவ்விடத்திலிருந்தது கணபதிக்கு வினோதமாக இருந்தது. பின் இறப்பு வீடுதானே இவர்களுக்கு பொருளீட்டும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது, அதனால் அவர்களது சந்தோஷமொன்றும் அத்தனை குறைபாடில்லை என்று நினைத்தபடியே, தன்னருகில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தியை பார்த்தான். அவனது முகத்தில் கடுமை ஏறியிருந்தது.

“மனசு ஆறலண்ணே. இப்படி பண்ணுவான் என் தம்பி?”

கிருஷ்ணமூர்த்தி தலையுயர்த்தி கணபதியை ஒருமுறை பார்த்துவிட்டு, “யேய் உன்ன எப்ப வரச் சொன்னன். இப்போ வந்து கேக்குற? எங்க போயி ஊர் மேய்ஞ்சிட்டு வரே”

“அண்ணே நான் அப்பவே உங்க பின்னாடியே கிளம்பிட்டேன். அந்த செலம்பு பயதான் இழுத்துட்டு பனங்காட்டுக்கு இட்டுட்டு போயிட்டான். என்னென்னுமோ சொன்னாண்ணே. அதெல்லாம் நெசமா?”

“என்ன பொம்பள பொடவ கட்டிக்கிட்டு தொங்கிட்டான்னு சொன்னானா?”

“ஆமாண்ணே”

“சங்கடமான செய்திதான். இந்த வீடியோ சமாச்சாரம் எதுவும் சொன்னானா..?”

“வீடியோன்னா..?” ஒன்றும் புரியாமல் கிருஷ்ணமூர்த்தியிடம் கணபதி கேட்க,

”அடேய். இவம் பொண்டாட்டி பிரசவத்துக்காக ஆத்தா வூட்டுக்கு போயி ரெண்டு மாசமாவுது. இவன் கல்யாணம் கட்டினதில இருந்து ஒரு நாளும் அவள பிரிஞ்சி இருந்ததில்லைப் போலிருக்கு. இங்கிருந்து பல மைல் தாண்டியிருக்கிற குள்ளஞ்சாவடி வரைக்கும் தினமும் போயிட்டு போயிட்டு வந்திருக்கான். அத அந்த பொண்ணு கண்டிச்சிருக்கு. உடம்பு என்னத்துக்கு ஆகுறது. ஏன் எப்படி அலையுறீங்க. சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லி அனுப்புறேன்னு சொல்லியிருக்கு. பய ரெண்டு மூனு நாளைக்கு ஒரு தடவ அங்க போயி வந்துட்டு இருந்திருக்கான். அதுக்கப்புறம் கடைசி ஒரு மாசமா அவன் அங்க போகவே இல்லையாம். பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறதோட சரியாம். அவளுக்கும் இவனெ பாக்காம சங்கடமா இருந்திருக்கு. ஆனா அவனோட ஒடம்பு வீணாபூடுமுன்னு அவ அப்படி சொல்லியிருக்கா…”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை இமை மூடாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கணபதி.

“அந்த பயலுக்கு அப்படியென்ன பொண்டாட்டி மேல பிரியம்னு தெரியல. அப்பன் போயி சேர்ந்ததுக்கு அப்புறம் அவனுக்கிருந்த ஒரே ஒறவு இவத்தான். இந்த பயெ என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? வூட்டுல நடு சாமத்துக்கு அப்புறம், அவள போலவே பொடவ கட்டிக்கிட்டு, நகை நட்டுன்னு மாட்டிக்கிட்டு, மொகத்துல மஞ்சளயும் பூசிக்கிட்டு முழுசா அவள மாதிரியே மாறி அந்த வூட்டுக்குள்ள நடமாடிக்கிட்டு இருந்திருக்கான். அவனோட போன்ல அத பதிவும் செஞ்சி வச்சிருக்கான்”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கேட்கக் கேட்க கணபதிக்கு அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது. பூபாலன் உடனான தனது அனுபவங்களை அவன் மனதில் அசை போட்டபடியே கிருஷ்ணமூர்த்தி சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல கடைசி இருபது நாளா அப்படித்தான் இருந்திருக்கான். அவ நெனப்பு வரும்போதெல்லாம் அந்த வீடியோ போட்டு பாத்துக்குவான் போலிருக்கு. அவ தன்னோட குடும்பம் நடத்தலங்கறது அவன நிறைய தொந்தரவு பண்ணியிருக்கு. ஒரு கட்டத்துல என்ன ஆகியிருக்கும்னு தெரியல, தூக்குல தொங்கிட்டான் போலிருக்கு”

கணபதி ஒருமுறை வீட்டினுள் பார்வையை மேய விட்டான். பெருத்த பெண் கூட்டம் அவ்வறையில் நிறைந்திருந்ததால் எந்தவொரு முகத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. அவனுக்கு அழுகையும், மனவலியும் சேர்ந்து உண்டானது. சுயமாக பிரசவித்து திரண்டொழுகிய கண்ணீரை கிருஷ்ணமூர்த்தி பார்க்காதபடி மறைவாகத் துடைத்துக் கொண்டான். கல்யாணம் குறித்தான யோசனையே பெரும் பாரமாக நெஞ்சை அமிழ்த்திய நிலையிலிருந்த கணபதிக்கு ஒரு பெண்ணின் மீதான நேசத்தால் நேர்ந்திருக்கும் விசித்திரத்தை இயல்பாக உட்கிரகித்துக்கொள்ள இயலவில்லை. அப்பனும் ஆத்தாவும் போய் சேர்ந்ததும், தனக்கொரு நாதியுமில்லை, தன்னால் இனி யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்று கூறி, எந்தவொரு உறவு குறித்த யோசனைகளையும் தவிர்த்துவிட்டு, தனது உலகத்தில் தான் மட்டுமே இருந்து கொண்டிருந்த கணபதி முதல் தடவையாக தனக்கெதிரில் ஒரு பெண்ணின் இருத்தலின் மீது தீராக் காதல்கொண்டு தனது உயிரையே மாய்த்துகொண்ட பூபாலனுக்காக கண்ணீர் சாத்தினான்.

“சாவுற வயசாண்ணே இது. ஏன் இவ்ளோ லவ்ஸு அந்த பொண்ணு மேல”

“எனக்கென்னடா தெரியும். இப்படியெல்லாமா பொண்டாட்டிய விரும்புவாங்கன்னு எனக்கே விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு. இனி அந்த பொண்ணு என்ன பண்ணும்னு நெனச்சாத்தான் மனசு ஊமையாகிடுது”

கிருஷ்ணமூர்த்தி சில நொடிகள் எதுவும் செய்யாமல் அமைதியோடிருந்தார். கணபதி சுற்றி நின்றிருந்த எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அந்த இளம் வயதினனின் மரணத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. எல்லோருக்கும் ஏதேனுமொரு வகையில் பூபாலன் அறிமுகமானவன். பெருத்த அமைதி அவ்விடத்தில் நிலவியிருந்தது.

உள்ளே இருந்து சற்றே நேரத்திற்கெல்லாம் பூபாலனின் உடலை தூக்கி எடுத்து வந்து வாசலில் இருத்தினார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த உடலை பார்க்கத் துவங்கியது. கிருஷ்ணமூர்த்தியும் நைனாவுமாக சேர்ந்து அந்த உடலுக்கு புது ஆடை உடுத்தினார்கள். கழுத்து நிறைய மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. கணபதி அந்த உடலையே உற்று நோக்கினான். பூபாலனை தான் கடைசியாக சந்தித்த இரவு அவனுக்கு சட்டென நினைவுக்கு வந்தது. அன்றைய தினத்தில் அவன் புடவை கட்டியிருந்ததாக அவன் நினைத்துக் கொண்டான். மஞ்சளும், குங்குமமும் மேனியெங்கும் ஏறி மினுங்கிக் கொண்டிருந்ததாக அவனுக்கு நினைவுக்குள் வந்தது. அவனால் பூபாலனை அக்கணத்தில் ஒரு ஆணாகவே கருத முடியவில்லை. உள்ளே தரையில் கிடந்து வெறித்த பார்வையுடனிருந்த அவனது மனைவியை பார்த்தான். இரண்டொரு பெண்கள் அவளை தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தார்கள்.

கணபதி அவளை ஒன்றிரண்டு முறை பாத்திருக்கிறானேயொழிய, அப்படியொன்றும் அவளது முகம் அவனது மனதில் பதிந்திருந்ததாக படவில்லை. எவ்வளவு சாமர்த்தியமாக அவளை பாதுகாத்திருக்கின்றான். அந்த பெண்ணின் கதியை நினைத்துதான் அவனுக்கு பாவமாக இருந்தது. அவளது வயிற்றில் கருக் கொண்டிருக்கும் உயிர் எவ்வித சிரமமுமின்றி வெளியுலகம் பார்க்க வேண்டுமென அவன் தனக்குள்ளாக வேண்டிக் கொண்டான். அவள் எவ்வித அசைவுகளுமற்று பூபாலனின் சடலத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பூபாலனின் உடலை தூக்கி அமரச் செய்து தண்ணீர் கொண்டு அவனை துடைத்து சுத்தப்படுத்தினார்கள். நெருங்கிய ரத்த சொந்தம் ஒன்றிரண்டு அழுதபடியே கையில் காசும் அரிசியும் தானியங்களுன் சுமந்துக்கொண்டு அந்த உடலை சுற்றிக் கொண்டார்கள். நெல்மணிகளுக்குள் பூபாலனின் உடல் புதைந்திருந்தது. கணபதி பூபாலனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அத்தனை பிரகாசமாக ஒளி பொருந்தியதாக இதற்கு முன்பு அவன் பூபாலனை கண்டதில்லை.  பூபாலனின் மேனியெங்கும் அழகேறியிருந்தது. ஆண் என்பதன் சாயல் அழித்தெறியப்பட்டு, முழு முற்றாக ஒரு பெண்ணாக பூபாலன் பலரின் பார்வைக்கும் தெரிந்தான். அவனது உடலை அள்ளியெடுத்துச் சென்று தனது வசிப்பிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென திடீரென அவனுக்கு வினோதமான பிரேமை உண்டானது. ஒரு ஆணாக அவனைக் கருத முடியாத நிலையிலிருந்த கணபதி இப்படியும் ஒருமுறை தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்,

“ஒரு பொண்ணோட உசுரு அவ்ளோ உசந்ததா? ஏண்டா பூபாலா? நீயேன் பொண்ணா மாறுன? உனக்கென்ன அப்படியொரு எண்ணம். இப்பம் சொல்லுறன் கேளு. உன்னால் திரும்பவும் உயிரோட திரும்பி வர முடியும்னா, ஒரு பெண்ணாக மாறியிருக்குற உன்னை, நான் காலம் போற வரையிலும் பத்திரமாக பாத்துக்க தயாரா இருக்கேன்”

உலுக்கியெடுக்கத்தாற் போல அந்நினைவிலிருந்து மீண்ட கணபதி, அர்த்தநாரியாக பூபாலன் சில நாட்கள் சிவ பார்வதியாக வாழ்ந்த காரணத்தை நினைத்துப் பார்த்தான். உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது.

நிகழ்வதற்கு சாத்தியமில்லை என்றாலும், சொந்தம் எனச் சொல்லிக் கொள்ளவிருந்த ஒரே உறவினர் சன்னாசி தாத்தாவிடம் தன் மனத்தை திறந்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட வேண்டும் எனவும் அக்கணத்தில் அவன் விநோதமான முறையில் தனக்குள் அறிவித்துக்கொண்டான்.