சிறுகதை

பெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?

அந்த மரக்கூண்டை இரு கைகளாலும் பற்றியபடி என்னை தாங்கிக் கொண்டேன். உள்ளங்கையின் ஈரத்தில் மரம் வழுக்கியது. சிமிண்ட் தரை குண்டும்குழியுமாக இருந்தது. அறைக்கு வெளியேயும் உள்ளேயும் கால்கள்.. கால்கள்.. சிலவை சப்பாத்துகளும்  சிலவை செருப்பும் அணிந்திருந்தன. எல்லாமே என்னை நோக்கி நெட்டித் தள்ளியபடி.. மைக்குகளை போல.. ஆர்வம் விழுங்கியவைகளாக.

”உங்க பேரை சொல்லுங்க…” கேள்விகளால் நிறைந்த உலகம்.

கருப்பு அங்கி அவரை வழக்கறிஞர் என்று மூளையில் ஏற்றியது.

”சித்ரலேகா..”

அம்மா தலைமையாசிரியை. மாணவிகளை அழைப்பது போல என்னையும் முழு பெயரிட்டுதான் அழைப்பாள். அப்பாவுக்கு நான் எப்போதுமே பாப்பாதான். தவிர இருவருக்கும் நான் மட்டுமே பாப்பா.

”வயசு..”

இருபத்தியோரு வயதிற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தொடக்கமும் அதே வயதில்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே இரண்டு மாத காலங்களிருந்தது. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாளி்ல் நான் தினேஷ் வீட்டில் கழித்த நான்கு மணி நேரத்தை மட்டுமேயும் கணக்காக கொள்ளலாம்.

”அப்பா பெயர்..?”

அதைதான் கெடுத்திருந்தேன் என்று அம்மா தலையலடித்துக் கொண்டு கதறினாள். தினேஷை என் நண்பன் என்ற அளவில் அவளுக்கும் தெரியும். தினேஷ் அவளின் பழைய மாணவனும் கூட.

”தினேஷ் என்பவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?” வழக்கறிஞருக்கு நடுத்தர வயதிருக்கும். முகம் கடினமாக தெரிந்தது.

”கேள்வியை நிதானமாக்குங்கள்..” என்றார் நீதிபதி. பெரிய மேசைக்கு பின்புறம் அமர்ந்திருந்தார். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட தரை அவருடையது.

“லவ்வாடீ பண்றே லவ்வு..” என் விஷயத்தை அம்மா கண்டுப்பிடித்திருந்தாள்.

ஆனால் அப்போது திருமணமுமாகியிருந்தது. முன் திட்டமெல்லாம் இல்லை என்றாலும் சமீபத்தில் நடந்த இதே போன்றதொரு சம்பவம் எங்களை பயமுறுத்த, இரண்டு மாதங்களுக்கு முன் கோயிலிலும் அதை தொடர்ந்து திருமணப்பதிவும் செய்திருந்தோம்.

காதல் என்ற வார்த்தைக்கே அப்பா ஓங்கியடித்தார். அதுவும் தினேஷுடன் என்ற போது, என்னை சுவரோடு ஓடுக்கி கழுத்தைப் பிடித்து உயரத் துாக்கினார். கதவுகளையெல்லாம் அடைத்து விட்டு அம்மா ஓலமிட்டு அழுதாள். சித்தப்பா, பெரியப்பா, மாமா, பெரியப்பாவின் மகன்கள் என எல்லோருடைய ஆதரவும் அவர்களுக்கிருந்தது. தனியாளாய் நான் வாய் கிழிப்பட்டு நின்றேன்.

”இனிம அவன பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..”

இரத்தம் கறையாகப் படிந்து வாய் முழுக்க இரத்த வாடை வீசியது. நான் பெரியப்பாவின் மகனை.. அண்ணனை பார்த்து பதில் சொன்னேன். என் வயதையொத்த அவனால் என்னை புரிந்துக் கொள்ள முடியும்.

அவனை பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. எனக்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஆனால் முதன்முதலாக நான் அவனிடம் என்னை வெளிப்படுத்தியபோது ”என்னை உண்மையிலுமே விரும்புனீங்கன்னா.. எனக்காக எதும் செய்ய நினைச்சீங்கன்னா இந்த விஷயத்தை இத்தோட விட்டுருங்க..” என்றான். நான் அவனுக்காக எதுவுமே செய்ததில்லை.

”நான் அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..”

”அப்டீன்னா அவர் உங்க கணவர்.. அப்படிதானே..” என்றார் வழக்கறிஞர்.

ஆனால் வீடு அவனை ………..ப்பய என்றது. ”உள்ளத சொல்லுடீ.. என்னடீ ஆச்சு..?” அம்மாவின் பயத்திலிருந்த மற்றொரு பரிமாணத்தை அப்போது நான் உணரவில்லை.

அன்று இரவு முழுக்க எல்லோரும் பேசிக் கொண்டேயிருந்தனர்.. தினேஷின் தொடர் குறுஞ்செய்திகளைப் போல. பொதுவாக இரவு நேரத்தில் எங்களுக்குள் செய்தி பரிமாற்றம் இருக்காது. தினேஷ் ஏதோ வித்யாசமாக உணர்ந்திருக்க வேண்டும்.

”அந்த மசிறுதான் புளீக்.. புளீக்குன்னு மெசேஜ் அனுப்புது..” அப்பா கோபமாக என் அலைபேசியை எடுக்க, அதை விட கோபமாக அதை பிடுங்கி ஏதோ பதிலனுப்பினான் அண்ணன். ”ஓடுகாலீ.. பொட்டப்புள்ளய தலைல துாக்கி வச்சுட்டு ஆடுனீங்கள்ள.. இப்ப அனுவீங்க நெல்லா..”

”கொஞ்சம் பேசாம இருங்கண்ணீ.. அண்ணனே முடியாதவரு.. ரொம்ப டென்ஷன்ல வேற இருக்காரு.. எதாவது ஆயிட போவுது..”

நான் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தேன். அய்யய்யோ.. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டா.. கடவுளே.. அப்பா என்று கதறினேன்.

”சொல்லுடீ.. சொல்லுடீ.. இனிம பாக்க மாட்டேன்.. பேச மாட்டேன்னு சொல்லுடீ..” வேகமாக என்னருகே வந்தார் அப்பா. கூடவே பெரியப்பாவும். ”தம்பி பொறுமடா.. பொறும..” என்றார்.

”செரி.. பொறுமையாவே சொல்றேன். இங்காரு பாப்பா.. எல்லாத்தையும் வுட்டுட்டு மொதல்ல படி.. மத்ததெல்லாம் அப்றம் பாத்துக்குவோம்..”

எனக்கு குழப்பமாக இருந்தது. ‘அப்றம்னா.. படிச்சு முடிச்சவொடனே பெரிய அளவில ரிசப்ஷன் வைச்சு ஊரைக் கூட்டி சொல்வாங்களோ..’ கோபத்தில் பேசி விடுவதும் பிறகு அணைத்துக் கொள்வதும் அப்பாவின் குணம்.

”மயிலே மயிலேன்ல்லாம் புருசாரம் புடிக்க முடியாது.. படிப்ப நிறுத்திட்டு சூட்டோட சூடா எவனாயாது பாத்து முடிச்சிட்டாதான் தேவல.. பாவீ.. பாவீ.. ஒத்தையாச்சேன்னு உருவி உருவி வளத்ததுக்கு நல்லா துாக்கி நெஞ்சுல அடிச்சிட்டா.. இனிமகாட்டி வெளில போற வேல வச்சுக்கீட்டீன்னா வௌக்கமாறு பிஞ்சுடும்..” கோபத்தில் உடல் நடுங்க கத்தினாள் அம்மா.

விளக்குமாற்றின் வீசலில் கண்ணாடியில் வீறல் ஏற்பட்டது.

”ஆமாங்க.. தினேஷ் என்னோட கணவன்தான்..” நீதிபதியைப் பார்த்து சொன்னேன். அவரது பார்வையில் கனிவிருந்தது போல தோன்றியது.

”உங்களுக்கு திருமணம் நடந்தது எப்போது..?”

அன்றிலிருந்து சரியாக நான்கு மாதங்களாகி இருந்தது. திருமணத்தன்று எல்லோரும் எப்படி உணர்வார்களோ தெரியவில்லை.. நாங்கள் இருவருமே பயந்திருந்தோம். கோவில் வாசலில் எழும் சிறு சரசரப்புக்கு கூட நடுங்கி ஒடுங்கினோம். இத்தனைக்கும் அந்த மதிய நேரத்தில் அங்கு யாருமேயில்லை.. அர்ச்சகர் உட்பட. சாமி கூட பூட்டியக் கதவுக்குள்தான் இருந்தது. கோவில் வாசலுக்கு வந்ததும் மஞ்சள் கிழங்கு சுற்றிய தாலிக்கயிற்றைக் கழற்றி அவனிடம் கொடுத்து விட்டு, காலேஜ் டைம் முடிஞ்சிடுச்சு.. நா கௌம்பறன்..” என்றேன்.

திருமணம் பதிவாகி இருந்ததால் அதை ரத்து செய்வதற்கு முன் தினேஷ் மீது அப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

”ஏன்டா.. பன்னி மேய்க்கற பயலுக்கு மேசாதி பொண்ணு கேக்குதா.. ஒங்காளுல எவளுக்கும் எதும் இல்லேன்னு இங்க படுத்து எந்திரிக்க வந்தியாடா..”

அங்கிருந்த இரு கான்ஸ்டபிள்களும் அந்த அதிகாரிக்கு கோபம் வரும்போது துாபம் போட்டார்கள்.. ஜோக் என்பதாக கருதிக் கொண்டு எதையோ சொல்லும் போது சிரித்து வைத்தார்கள். சத்தம் போடும் போது முகத்தை அதட்டலாக்கினார்கள் இப்போது சிரிக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு.

”ஏம்மா.. ஒனக்கு இந்த கட்டாயக் கல்யாணத்தில சம்மதம் கெடயாதுதானே.. பேசி முடிச்சப் பொறவு மாத்தக்குடாது..” என்றார் என்னைப் பார்த்து.

”இல்லேன்னு சொல்லு..” அம்மா என் தொடைசதையை கொத்தாக அள்ளி திருகினாள்.

கண்ணாடியில் வீறல் அதிகமானது.

”ஏன்டா.. ஏன்டா.. ஆயிரம் வேல கெடக்கு.. அத வுட்டுட்டு ஒங்க எழவே எடுக்க சொல்றீங்க..” லத்தியால் மேசையைத் தட்டினார். ”காதல்.. கல்யாணம்னு இனிம ஒன்ன இந்த பக்கம் பாத்தேன் ஊட்டிய முறிச்சுடுவன் ஜாக்ரத..”  என்றார்.

அம்மா என்னை கைப்பிடியிலிருந்து விலக்கவேயில்லை.

பிறகுதான் அவன் என் மனைவியை மீட்டுத் தாருங்கள் என்று நீதிமன்றம் சென்றிருந்தான்.

அப்பா சிலிண்டரை திறந்து விட்டதில் வீடெங்கும் சமையல் வாயுவின் நாற்றம்.

வீறல் ஆழமாகி கண்ணாடி துண்டானது அன்றுதான்.

பெற்றோருடன் செல்லவே விருப்பம் என்றேன் நீதிபதியிடம். எனக்கு முன் நீண்ட மைக்குகளை அப்பா தடுத்துக் கொண்டே வந்தார். என் முகத்தை துப்பாட்டாவால் மூடி வைத்தாள் அம்மா. விறுவிறுவென்று நடக்க வைத்து காரில் ஏற்றினர். என்னருகில் அப்பா வியர்த்து நாறி உட்கார்ந்திருந்தார். அம்மா உட்பட யாருமே பேசிக் கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல.. அம்மா மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க ஆரம்பித்த பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்தியிருந்தாள்.

”உங்க கணவர் வீட்டுக்கு எப்போ போனீங்க..?”

அம்மாவுக்கு அன்று மெடிக்கல் போர்டிலிருந்து பதிவுத்தபால் வந்திருந்தது. நீண்ட விடுப்பு எடுத்திருந்ததால் அம்மாவின் பணியிடத்துக்கு வேறு யாரோ முயற்சி செய்வது குறித்த பிரச்சனை மும்முரமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன்.

தினேஷின் வீடு சிறிய குடிசையாக இருந்தது. எங்களைக் கண்டதும் எல்லோருமே பதறிப் போனார்கள். ஆனால் தினேஷின் வார்த்தைகளுக்கு அங்கு பூர்ண கும்ப மரியாதையிருந்தது. வயதை விட.. வருடங்களை விட அவன் நிதானமானவன். என் பெரியப்பாவின் மருமகளை போல எனக்கும் கணவன் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று தோன்றியது. பூஜையறை என்று ஏதுமில்லை. குடிசையின் கிழக்கு மூலையில் தகரப்பெட்டியை இரண்டாக திறந்து குறுக்கே சிறு கழியை நிறுத்தி, உள்ளே இரண்டொரு சாமி படங்கள் வைத்து பூஜையறையாக்கியிருந்தனர். விளக்கை தேடினேன். கூரையில் சொருகியிருந்த சிறு பித்தளை விளக்கை நீட்டினான். திரி, எண்ணெய் என்று நான் ஏதேதோ கேட்க, “வேணும்னா மெழுகுவர்த்தி வாங்கியாரவா..” என்றான்.

”ஏய்.. அதெல்லாம் வேதக்காரங்க வீட்ல தான் ஏத்துவாங்க…” என்றேன் கிசுகிசுப்பாய். அவனிடம் நெருங்கி நின்றுக் கொண்டேன். இனி ஆயுசு முழுக்க இவனுடன்தான். திருட்டுத்தனமெல்லாம் தேவையில்லை. தினேஷிடம் வந்து விட்டேன்.. இனி என்ன செய்து விட முடியும் என்ற தைரியம் வேறு.

ஆனால் “கொஞ்ச நாளைக்கு வெளியூருக்கு போயிடுங்க..” அவசரப்படுத்தினார்கள் தினேஷின் நண்பர்கள்.

”இதெல்லாம் ஒங்க வீட்டு ஆளுங்களுக்காக டெம்பரவரியா செய்ற ஏற்பாடுதான்.. திரும்பி வந்ததும் காலேஜ்ல சேந்துக்க.. நா வேணும்னா வேலக்கு போறேன்..” என்றான் தினேஷ்.

”அப்டீன்னா என் புள்ளைங்களுக்கு ஒன்ன பத்தி என்னான்னு சொல்லுட்டும்.. உங்கப்பா அரைகொறை என்ஜினியருன்னா..?”

அந்த நேரத்தில்தான் வெளியில் கட்டியிருந்த ஆடு கர்ணக்கொடுரமாக அலறியது. குடிசை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த சேலைத் தடுப்பை விலக்கியதும் என் தைரியமெல்லாம் வழிந்தோட, தினேஷின் கைகளை பிடித்துக் கொண்டேன். ஆனால் சுதாரிக்கும் முன் என்னை சேர்ந்த மனிதர்களின் ரௌத்திரத்தில் நானும் அவனும் பிரிக்கப்பட்டிருந்தோம்.

அதை தொடர்ந்த நாட்களில் கிடைத்த இடைவிடாத வசவுகளும் அடிகளும் எனக்கு உறைக்கவேயில்லை.

தினேஷுக்கு என்னாச்சு..?

”கடைசியாக தினேஷை எப்போது பார்த்தீர்கள்..?” என்றார் வழக்கறிஞர்.

சாதித் தலைவர் என்னை அசிங்கமாக திட்டியபோது அப்பாவும் கூடவேதான் இருந்தார் பிறகு அவர் அப்பாவையும் திட்டினார்.

”பொட்டப்புள்ளங்கள என்னா மயித்துக்கு படிக்க அனுப்புன..”

”அது ஒரே பொட்டைதாண்ணே அவருக்கு..” சொன்னது யார் என தெரியவில்லை.

”பொட்டப்புள்ளயெல்லாம் ஒரு புள்ளைன்னு ஒண்ணோட நிறுத்திக்கிட்டியாக்கும்.. இந்த சிறுக்கியால இன்னைக்கு சாதி மானமேல்ல எடுப்பட்டு நிக்குது.. வூட்டம்மா என்னா பண்ணுது..”

”எலிமெண்ட்ரி ஸ்கூல்ல ஹெச்செம்மா இருக்காங்க..”

“அரசாங்க பள்ளியொடமா..”

”ஆமா..”

”அப்ப பொட்டச்சீங்க வெளிய அனுப்பீட்டு நீ ஊ..   கெடந்தியா..” அசிங்கமாக சைகைக் காட்டினார். இத்தனை கூட்டம் எதற்கு..? அப்பா ஏன் இப்படி பம்முகிறார்..? பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள், மாமா எல்லோருமே கூட பவ்யமாகதான் இருந்தார்கள்.

”அவுசாரியா போய்ட்ட.. ஆனா கூட உங்கப்பன் மூஞ்சிக்காக நல்லப்பயல கைக்காட்டீ வுடுறன்.. கட்டிக்க..” என்றார் அந்த ஆள் என்னிடம்.

”சரீன்னு சொல்லு சனியனே..” அப்பா வாய்க்குள்ளேயே பேசினார்.

”அந்த மயித்துக்கிட்ட என்ன பேச்சு.. வீட்டுக்கு கூட்டீட்டு போங்க.. ஆளுங்கள அனுப்பி வக்கிறேன்.. எல்லாம் சரியாயிடும்.. ஒண்ணும் மனசில வச்சுக்க வேணாம்..”  அப்பாவிடம் சமாதானமாக பேசி எங்களை அனுப்பி வைத்தார் அந்த ஆள்.

”பெத்தவங்களை காயப்படுத்தினோம்னு உங்களுக்கு தோணவேயில்லையா..” இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல வழக்கறிஞரை பார்த்தேன்.

”இந்த கேள்வி தேவையில்லாதது. பதில் சொல்லும் அவசியமற்றது..” என்றார் நீதிபதி எனக்கு ஆதரவாக.

எதுதான் அவசியமானது..? தினேஷிற்கு உயிர் அநாவசியம் என்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட பிறகு எதுதான் அவசியம்..?

கேள்விகள் சூழ்ந்த உலகமிது..

”இதை தவறு என்று உணர்கிறீர்களா..? அல்லது சற்று நிதானித்திருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா..? இப்போது உங்கள் மனநிலை என்ன..? இந்த மனநிலையை என்னவாக உணர்கிறீர்கள்..? எனக்கு முன் நீளும் ஒலிப்பெருக்கிகள் ஆன் ரெகார்ட்.. ஆஃப் ரெகார்ட் என்று கேள்விகளை பிரித்து விட்டு, பிறகு ஆஃப் ரெகார்ட்டை ஒலிப்பரப்பியது. எங்கோ நடந்து செல்லும்போது கூட தோ.. அவதான்.. என்று விரல் சுட்டினார்கள்.  “கொஞ்சமாது கவலை இருக்கா.. என்றார்கள். யார் யாரோ ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. உங்க கிட்ட பேசுணும். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. என்றார்கள்.

அன்றைக்கு விவாதம் முடிந்த தருணத்தில் ”நீங்க எதும் சொல்ல விரும்புறீங்களா..” என்றார் நீதிபதி என்னிடம்.

குழப்பமாக தோன்றினாலும் வழக்கம்போல மௌனமாகவே நின்றிருந்தேன்.

ஆனால் மூன்று வருடங்களை கடந்த பிறகும் அதே குழப்பம் அப்படியே நீடிக்கிறது.

நீதிபதி எதிரில் இருப்பதை போல நினைத்துக் கொண்டு வாய் விட்டு சொன்னேன்..

”நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்களேன்..”

அப்போது அறுநுாற்று ஒன்றாவது தோசையை திருப்பி போட்டுக் கொண்டிருந்தேன்.

பிறகும் பிறிதொரு கேள்வியிருந்தது.

”தினேஷ் என்ன தப்பு பண்ணுனான்..?”

 

 

நாதியற்றவர்கள் – ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை

ராகேஷ் கன்னியாகுமரி

நாங்கள் பல நாட்கள் அப்பா இரவு பதினோரு மணிக்குப் பின் வந்து சேரும் நேரத்தில் வாங்கி வரும் ஆளுக்கு இரண்டு சோளா பட்டூராதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரே உணவு . அவர் அந்நேரத்திலும் ஊட்டிக்கூட விடுவார் . என் அப்பாவின் கருணை மற்றும் அன்பைத் தவிர எதுவுமே எனக்கு நினைவில் வருவதேயில்லை, எவ்வளவு யோசித்தாலும். நான் இப்போதும் நம்பத் தயாராக இல்லை, மதராசியில் ஒரு ஆள் எட்டொன்பது மணிநேரம் வேலை செய்தாலே நானூறு ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று நண்பனின் அப்பா சொன்னதை.

அவரை, போன மாதம் நண்பனை காணச் சென்றபோது, நெடுநாட்களுக்குப் பின் சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு சைதாப்பேட் என்ற ஒரு வார்த்தை கேள்விப்பட முடிந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது.  எங்கள் ஊர் பெயர்கள் எல்லாம் ஆண்கள் கோபத்துடன் அடிக்கப் பாயும் போது போடும் கூச்சலைப் போல இருக்கும். அதைக் கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு பெண்ணை ஒரு அம்மா அன்பாகவோ சற்று அதட்டியோ கூப்பிடுவதைப் போன்ற ஒரு பெயராகதான் சைதாப்பேட் என்ற வார்த்தை அவர் சொல்லும்போது தெரிந்தது. பிஜனோர் என்ற ஊரில் தாழ்ந்த சாதியில் நான் பிறந்ததாக ஆ.எம்.மிஸ்ரா என்ற ஆசிரியர் ஒன்றாவது படிக்கும்போது சொன்னது புரியவே எட்டாவது வரை படிக்க வேண்டியிருந்தது.

ஜஸ்ராம் யாதவ் என்றவரிடம் தான் அப்பா வேலை பார்த்துவந்தார்.

முகல்சராய் நிறுத்தத்திலிருந்து மதராஸ் செல்லும் விரைவு ரயில் வண்டி கான்பூர், ஜான்சி, இட்டார்சி, நாக்பூர், பல்லார்ஷ்ஷா, வாராங்கல், விஜயவாடா மார்க்கமாக போவதாகவும், இன்னும் சற்று நேரத்தில்  புறப்படும் எனவும் அம்மாவின் குரலையொத்த ஒரு பெண் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பது என் அம்மாவின் கவலை தோயிந்த முகத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது.

நானும் நண்பனின் அப்பாவும் இந்த ரயிலில் ஏறி சுமார் ஒரு மணிநேரமேனும் தாண்டி இருக்கும். அவள் புறப்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் புறப்படுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. வெயில் ஜன்னல் வழியே உள்ளே அடித்துக்கொண்டிருந்தது. நண்பனின் அப்பாவின் முழுப் பெயர் எனக்கு இப்போதும் தெரியாது. நானும் அவரை அப்பா என்று தான் அழைத்துக்கொண்டு இருக்கிறேன். ரயில் ஏற இந்தப் பெரிய கட்டிடத்தின் முன்வரும்போதே அவர் திரும்பத் திரும்ப சொன்ன ஒரே விஷயம் எக்காரணம் கொண்டும் இருக்கையில் அமர்ந்த பின்பு இடத்தை விட்டு நகரக்கூடாது. அப்படி நகர்ந்து விட்டால் நாளை மறுநாள் வரை நான் கீழேயோ அல்லது கக்கூசின் அருகிலோதான் இருக்க நேரும் என்று.

ஒரு ரயில் பெரும் சத்தத்துடன் எங்கள் ரயிலின் அருகில் வந்து நின்றது.  அதில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒருவர்தான் இருந்தார். நான் இருந்த இருக்கையில் சுமார் ஆறு பேர் இருந்தோம். ஒருவேளை அந்த ரயில் திரும்பி வருவதாக இருக்கலாம். நாங்கள் இப்போதுதானே போகப் போகிறோம்.

எனது பழைய பள்ளிக்கூட கிழிந்த பையில்தான் எனது இரண்டு கால்சட்டை மற்றும் கொஞ்சம் பழைய சட்டை மூன்றையும் அடுக்கி வைத்திருந்தேன். இருபுறமும் பை கொஞ்சம் கிழிந்திருந்தது. ஆனாலும் அது ஒரு அழகான பைதான். என் அம்மாதான் இவரிடம் என்னையும் மதராஸ் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். முதலில், சின்னப் பையனை ஏன் அங்கு வரை அனுப்ப வேண்டும், இரண்டு வருடம் யாதவ்ஜியிடமே வேலைக்குப் போகட்டும் பின்னால் வேண்டுமானால் அங்கு அழைத்துச் செல்கிறேன், என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா எந்த பதிலையும் சொல்லாமல் அழுதுக்கொண்டு மட்டுமே நின்றாள். பின் அவராகவே சரி என்னோடே வரட்டும் என்றார். என்னை நோக்கி, அடுத்த வெள்ளிக்கிழமை கிளம்பலாம் என்று சொன்னார்.

இன்று அந்த வெள்ளிக்கிழமை. அம்மா அழகான இரண்டு பெரிய ஆலூ பராட்டாவை நெடுநாள்களுக்குப்பின் மிகவும் பிடித்த புதினா சட்டினியுடன் தந்தாள். இன்னும் ஒன்று சாப்பிட ஆசை இருந்தது. ஆனால் அந்தப் பாத்திரத்தில் இருந்ததே அதிகம் போனால் நாலோ ஐந்தோ பராட்டாவுக்கான மாவுதான். வீட்டில் அம்மா, என் மூன்று தங்கைகள், மற்றும் மங்கலாக கண்தெரியும் அப்பா வழிப்பாட்டி, எல்லோர்க்கும் இவ்வளவு மாவில்தான் வயிற்றை நிரப்ப வேண்டும். எனக்குத் தெரியும், அவர்களுக்கு அம்மா இனி தரப்போகும் பராட்டாக்கள் நான் சாப்பிடுவதில் பாதி அளவுக்கூட இருப்பது கடினம். அம்மா எப்போதும் பின் கதவினை ஒட்டியே அமர்ந்திருப்பாள், நினைவுதெரிந்த நாள்முதல்.

பக்கத்து ரயில் மெதுவாக செல்லத் தொடங்கியது. ஆனால் கொஞ்ச நொடிகள் கழிந்தபோது புரிய தொடங்கியது, நான் இருந்த ரயில்தான் முன்னால் சென்றுகொண்டிருப்பது. மேலே காற்றாடி வேகமாகச் சுழலும் சத்தம் இப்போது தெளிவாக காதில் விழத் தொடங்கியது. ஆனாலும் வியர்வை நிற்கவே இல்லை. காலை நீட்டக்கூட முடியவில்லை. அதிகமான ஆட்கள் நிரம்பி இருந்தனர். வேறு ஒரு ரயில் இப்போது கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்தது. அதைப் பார்க்கும்போது ஒன்று புரிந்தது, பலர் இப்படிச் சேர்ந்து இருக்கவில்லை. தனித்தனியாகதான் ஒவ்வொரு ஆளும் இருந்தனர். ஒரு பெட்டியில் மட்டுமே எங்களைப் போல நிறைய பேர் கூடி இருந்தனர். நான் அப்பாவிடம் கேட்டேன், ஏன் அந்தப் பெட்டிகளில் கூட்டமே இல்லை? அது முன்னமே பணம் கொடுத்து தனித் தனி இருக்கை அவர்களுக்கென உடம்படி செய்யப் பட்டதென்று சொல்லி  நாங்கள் இப்போது வெளியிலிருந்து பயணச் சீட்டு வாங்கி வந்ததையும் நினைவுபடுத்தினார். அது காசு அதிகம் என்றும் சொல்லிக்கொண்டே, பக்கத்தில் இருந்த வேறு ஒரு பெரியவரின் எங்கே போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

என் பக்கத்தில் இருந்த ஒருவர் காலின் இடையிலிருந்து ஒரு பழைய பெரிய பிளாஸ்டிக் நெளிந்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை ஆடி ஆடி கஷ்டப்பட்டுக் குடித்தார். கொஞ்சம் என் தொடையிலும் தெறித்தது. அவர் பாட்டிலை மூடி மீண்டும் அதே பையில் வைத்தார்.  நான் போட்டிருந்த கால்சட்டை அப்பா சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன் வாங்கித் தந்தது. எனக்குப் பிடித்த நிறமே சிகப்புதான். அவரிடம் கெஞ்சி தான் இந்த நிறத்தை எடுக்க முடிந்தது. ஒரு வேளை அது தீபாவளியாகவோ அல்லது ஹோலியாகவோ இருக்கலாம். எனக்குச் சரியாக நியாபகம் இல்லை. அம்மாவிடம் கேட்டால் சரியாகச் சொல்வாள்.  ஆனால் இதை எடுத்துத் தந்த வருடம்தான் அவர் செத்துப்போனார்.  யாதவ்ஜியின் கக்கூஸ் தொட்டியில் ஏதோ அடைப்பு என அதிகாலையிலே அவர் வீட்டின் முன் உள்ள கட்டிடத்தில் கடை வைத்திருக்கும் ஸ்ரிவாஸ்தவா வந்து சொல்லிவிட்டு போனார். அப்பா அவசரம் அவசரமாக எழுந்து அவர் பின்னால் ஓடியதைப் பாட்டியின் அருகில் கிடந்து அரை உறக்கத்தில் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பத்து மணிக்கு பள்ளியில் போய் அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் என் நண்பனின் அப்பாவான இவர்தான் பள்ளிக்கு வந்தார். ஆசிரியரிடம் ஏதோ சொன்னவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அன்று எனக்கு அதிகமான ஜலதோஷம். மூக்கு நிற்காது வடிந்துக் கொண்டிருந்தது. அவர் என் கையை கொஞ்சம் அழுத்திதான் பிடித்திருந்தார். அந்நேரம் பார்த்து காக்கி நிக்கர் அவிழப் பார்த்தது. அதை ஒரு மாதமாகவே ஒரு முட்டுப்பின்னால் தான் கோர்த்து வைத்திருந்தேன். நான் வேறு தூக்குப் பையை வலது கையில் போட்டிருந்ததால் இடது கையால் என் நிக்கரைப் பிடிக்க கொஞ்சம் வசதி இருந்தது. அவர் நேராக யாதவ்ஜியின் வீடு இருக்கும் சாலைக்குதான் என்னை அழைத்துச் சென்றார். பல நாட்கள் அப்பாவுடன் இந்த வழியாக வந்துள்ளேன். யாதவ்ஜி இருந்தால் என்னை வீட்டின் உள்ளே செல்ல விடமாட்டார்கள். என்னை அவர்கள் பசு கட்டியிருக்கும் தொழுவத்தின் அருகிலூடே வீட்டின் பின் பக்கத்துக்கு கூட்டிச் செல்வார்கள். ஆனால் யாதவ்ஜி வீட்டில் இல்லை என்றால் வலது புறமாக இருக்கும் கதவு போட்டு மூடி வைத்திருக்கும் சிறிய வழியோடு அழைத்துச் செல்வார் அப்பா.

நான் தூரத்தில் வரும்போதே கடைசி தங்கை, நண்பனின் அம்மா கையில் இருப்பது தெரிந்தது. ஒரு பெரும் அழுகையின் சத்தம் நெருங்க நெருங்க கேட்கதொடங்கியது. சுமார் இருபது முப்பது பேர் நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்கும்போதே அது அம்மாவின் குரல் என அடையாளம் கண்டு கொண்டேன். என் அண்ணன் மற்ற இரண்டு தங்கைகளின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நின்றிருந்த கால்களின் இடைவெளி வழியே என் அப்பா கீழே மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பாவின் கண்கள் திறந்திருந்தன. அப்பாவின் உடம்பில் இருந்துதானோ என்னவோ, மல வாடை அடித்துக்கொண்டிருந்தது. அம்மா நெஞ்சில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். அப்பா வெறும் ஒரு துண்டை மட்டுமே கட்டி இருந்தார். ஒரு புறம் தொடைக்கு மேல் அது ஏறி இருந்தது.

யாதவ்ஜியை அங்கே காணவே இல்லை. என் நண்பனின் அப்பாவுடன் பார்த்துள்ள இரண்டு பேர் யாதவ்ஜியின் தம்பியுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். அவர் இவர்கள் இரண்டு பேரையும் அடிக்கப் பாய்ந்து வந்தார்.  சிலர் அவரைத் தடுத்தனர். பின்னர் அப்பாவை உடனே அங்கிருந்து தூக்கி கொண்டு போக வேண்டும், என்று கத்தினார். என் அப்பா அவசரம் அவசரமாக போட்டுக்கொண்டு ஓடிய அந்த அக்குள் கிழிந்த சட்டை அந்த வீட்டின் முன் மரத்தில் தொங்குவதை என்னால் கண்டு நிற்கவே முடியவில்லை. அப்பாவின் உடம்பை எனக்கு பார்க்கவே தைரியப்படவில்லை, சட்டையில்லாமல். நேராக ஓடிச் சென்று அதை எடுத்து வந்தேன். அதில் இருந்த ஒரு பான் பராக்கும், ஒரு கட்டு பீடியும் கீழே விழுந்தது. ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு கீழே சிதறி ஓடியது.  நான் அனைத்தையும் எடுத்து என் நிக்கரின் பாக்கெட்டில் போட்டுவிட்டு சட்டையை அப்பாவின் அருகில் இருந்த பாட்டியிடம் கொடுத்தேன். அவள் அதை வாங்கி அப்பாவின் முகத்தை மெதுவாகத் துடைத்தாள். ஒரு பைக்கை யாரோ கொண்டு வந்தனர். என் நண்பனின் அப்பா (இவர்தான்) ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். அப்பாவை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். வண்டியை எடுத்து வந்தவர் சற்று தள்ளி நின்றுகொண்டார்.

பின்னால் என் அண்ணனை ஏறச் சொன்னார்கள். அண்ணன் கண்ணீருடன் ஏறி அமர்ந்து அப்பாவை அணைத்துக்கொண்டான். வண்டியை மெதுவாக முன்னகர்த்திச் செல்லத் தொடங்கினர். சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த மாமாவின் கையில் யாதவ்ஜியின் தம்பி கொஞ்சம் காசு கொடுப்பதைக் கண்டேன். பின் அனைவரும் வண்டியின் பின்னால் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அம்மா அலறிக்கொண்டே வண்டியின் பின்னால் நடந்தாள். நான் தங்கைகளை பிடித்துக்கொண்டே வந்தேன். தலையை விரித்த நிலையில் இருந்த பாட்டி தடுமாறி கீழே விழவே மீண்டும் பேட்டா…பேட்டா…என்ற கதறலுடன் எழுந்து ஓடத் தொடங்கினாள். கொஞ்சம் தூரம் சென்றவுடன் என்னை அறியாமல் யாதவ்ஜியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அங்கு யாதவ்ஜி மேலே மொட்டை மாடியில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்ததை தூரத்திலிருந்து கண்டேன். வேறொரு ரயில் மறுபுறம் எங்கள் எதிர்த் திசை நோக்கி சத்தம் எழுப்பிக்கொண்டே மிக மிக வேகமாகச் சென்றது.

இரண்டாவது நாள் மாலை வேளை எங்கள் வண்டி வேகமாக நெல்லூர் என்ற இடத்தை அடைந்தது. மிகக் கடுமையான மழையை அன்று பார்த்தேன், பல மாதங்களுக்குப் பிறகு. நான் இருந்த ஜன்னல் ஓரத்தில் மழை நீர் உள்ளே தெறித்தது. என்னுடன் இருந்த யாரும் நீரைத் தடுக்க சொல்லவேயில்லை. நேரம் செல்லச் செல்ல ரயிலின் வேகத்துடன் மழையின் வேகம் போட்டிபோடத் தொடங்கியிருந்தது. நாங்கள் மதராஸ் வந்து சேரும் வரை மழையும் எங்களுடனே பயணித்தது.

மக்களின் திரள் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. மிகச் சரியாக சொல்வதென்றால் நாலாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுடன் அலகாபாத் கும்பமேளா சமயத்தில் கண்ட கூட்டத்தைப் போல் இருந்தது. மெதுமெதுவாக என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டே ரயில் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்தார் அப்பா. ரயில் நிலையத்தின் முன்னால் முட்டளவு நீர். அந்த இடத்தில் ரயில்  கட்டிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என நினைக்கிறேன். எங்கும் இருட்டு. இந்தக் கட்டிடத்தில் இருந்து வந்த வெளிச்சத்திலும் வாகனங்கள் அங்கும் இங்கும் மெதுவாகச் செல்லும்போது தந்த வெளிச்சத்திலும் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அப்பா அவரது நண்பருக்கோ, வேலை பார்க்கும் முதலாளிக்கோ பல முறை கைபேசியில் பேச முயன்றுக்கொண்டே இருந்தார். கோபத்தில் அவர் யார் அம்மாவையோ  வசவால் திட்டிக்கொண்டே நடந்தார். நான் எதுவும் கேட்க பயந்துக்கொண்டே பின்னால் அவருடன் இறங்கி நடக்கத்தொடங்கினேன்.

ஏதோ குகை போல ஒரு வழி கீழே இறங்கிச் செல்ல தொடங்கியது. அதில் ஒரு இரண்டு மூன்று படி இறங்கியவுடன் கீழே நின்ற காவலர் மேலே திரும்பிச் செல்ல கைகாட்டினார். நானும் அப்பாவும் கீழே எட்டிப் பார்த்தோம். ஒரு ஆள் கழுத்தளவு தண்ணீரில் நின்று அந்த காவலருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்பா சொன்னார், மழை நன்றாக தொடர்ந்து பெய்கிறதால்தான் இவ்வளவு தண்ணீர் உள்ளே வந்துள்ளது. அதனால் சுரங்கப்பாதை வழியே மறுபுறம் செல்ல முடியாது. எனக்கு ஆசையாக இருந்தது.  நான் இதுவரை மண்ணுக்குள் இறங்கி நடந்ததே இல்லை. பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த நாட்களில் பெரிய விருப்பம் இருந்தது. என் ஊரில் உள்ள ராம்நகர் கோட்டை முதல் ராம்நகரின் வேறு பகுதியில் உள்ள துர்கா மந்திர் வரை அப்படி ஒரு பாதை உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது அது மூடி வைக்கப்பட்டுள்ளதாக அம்மா சின்ன வயதில் சொல்லுவாள். நான் பல நாள் நினைத்ததுண்டு, நாங்கள் புது வீடு கட்டும்போது ஒரு கிணறு தோண்டவேண்டும் என்றும் அப்படிச் செய்யும்போது சுரங்கப்பாதை என் கிணற்றைக் கிழித்து இரண்டு பக்கமாக போகும் என்றும் அதில் இறங்கி நடந்து திரும்பி வரவேண்டும் என்றும். ஆனால் இன்று அந்த ஆசையில் பாதியை இந்த மழை இல்லாதிருந்தால் நிவர்த்தி செய்திருக்கலாம். என்னுடைய தலையில் பள்ளிக்கூடப் பையை வைத்துக்கொள்ள அப்பா சொன்னார். புது இடம் மற்றும் புது மழையினால் ஒரு வேளை காய்ச்சல் வந்தால்? நான் அவர் சொன்னது போலவே செய்தேன். மழை காரணமாக செல்போன் சமிக்ஞைக்களும் இல்லை என்றார். மிகவும் மெதுவாக ஒவ்வொரு ஆளின் பின்னாலாக நடந்து சென்னை பார்க் என்ற சிறிய ரயில் நிலையத்தை அடைந்தோம். அப்பா பயணச்சீட்டு வாங்க வரிசையில் போய் நின்று கொண்டார். நானும் அவரின் அருகில் போய் நின்றேன். மழை பேய்க்காற்றுடன் இப்போதும் அடித்துக்கொண்டுதான் இருந்தது.

மழையின் காரணமாக ரயில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்தே வரும் என்று அறிவித்தனர். அங்கும் மிக அதிக கூட்டம்.  பட்டணம் என்பதன் பொருளே எனக்கு இப்போதுதான் புரியத்தொடங்கியிருந்தது. அப்பா என்னிடம் பேசிக்கொள்ளவே இல்லை.  ரயில் மிக மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் வந்த வண்டியைப்போல மிகப்பெரிய முன்பெட்டி இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அதில் ஏறி நின்றோம். ரயில் மெதுமெதுவாக நகர்ந்தது. ரயிலில் யாருமே எதுவுமே பேசாமல் இருந்தது எனக்கு புதியதாக தெரிந்தது. இந்த மக்கள் யாரிடமும் பேசமாட்டார்கள் போல…! ரயில் ஒவ்வொரு இடமாக நின்று கொண்டே சென்றது. ஒரு இடத்தில் அதிக நேரம் நிறுத்தி இருந்தனர். பிறகு தெரிந்தது, ரயில் அதற்கு மேல் போகாது என. ஏதோ ஆற்றின் மேல் தண்டவாளத்தைத் தாண்டி தண்ணீர் செல்லத் தொடங்கியிருப்பதாக யாரோ சொல்வது கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இறங்கி நடக்கத்தொடங்கினர்.

அப்பா என்னிடம் நடந்தே போய்விடலாம், பக்கம்தான் அவர் குடியிருக்கும் வீடு என்றார். மழையில் மீண்டும் நனைந்துகொண்டே நடக்கத்தொடங்கினோம். நாம் வந்த கெட்ட நேரம் என முனகிக்கொண்டே  நடந்தார். மிகப்பெரிய மின்னல் மழையைக் கிழித்து இறங்கியது. இடி முழக்கம் என் நெஞ்சில் சிறியதொரு பயத்தை விதைத்தது. எங்கோ தனிமையில் காட்டிலோ பாலைவனத்திலோ நடந்து செல்வதாகப்பட்டது.  கை கால் கொஞ்சம் நடுங்க தொடங்கியிருந்தது. அப்பாரயில் நின்ன இடம் பேரு என்ன என்றேன். மாம்பல் என்று சொன்னார். அடுத்த நிறுத்தம்தான் சைதாபேட் என்றும் அது வரை சென்று நிறுத்தி இருந்தால் இவ்வளவு நடக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும் என்றும் சொன்னார். அதோடு ரயில் நிலையத்தின் அருகில்தான் வீடு என்றும் வீட்டில் இருந்தால் ரயில் போவதைப் பார்க்கலாமாம். அந்த இடத்தில் இருக்கும் பாலத்தின் மேலே தான் தண்ணீர் செல்வதாக சொன்னார். ஏதோ சகதி நிறைந்த ஒரு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். அது வயலுக்குள் இறங்கி நடப்பதைப் போல தோன்றியது. எங்கும் இருட்டின் அமைதி. நீர். நீர். சகதி…. எங்கள் ஊரில் ஹோலி முடிந்த அடுத்த நாள் இப்படிதான் சாலைகள் எங்கும் ஆள் நடமாட்டம் இருக்காது. ஆனால் பட்டணமான இங்கு ஒரு மழை பெய்தால் வாகனங்கள் இல்லை, மின்சாரம் இல்லை. அவ்வளவு பேர் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் எங்குதான் சென்று மறைந்தார்களோ? நாங்கள் நடந்து செல்லும் பாதையில் இரண்டு மூன்று மாடுகள் நனைந்துகொண்டே நின்றிருந்தன. கொஞ்சம் தூரமாக பத்திருபது பன்றிகளும் ஒரு ஓலைக் குடிசையின் முன்னால் ஒண்டி நின்றுக்கொண்டிருந்தன.

நாங்கள் சென்று ஒரு இடத்தில் நின்றோம். தூரத்தில் செல்போனில்  இருந்து வரும் சிறிய வெளிச்சத்தால் அடித்துப்பார்த்தார். அதுதான் அந்த ஆறு. ஆறு நிறைந்து அதன் அலை மிக மெதுவாக கரையில் இருந்த ஒரு வீட்டின் வாசலில் மோதியபடி இருந்தது. ஆற்றின் நீர் குடிசையின் அருகிலேயே வேகமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே எனக்கு உடம்பும் குளிரால் நடுக்கம் கண்டிருந்தது. அப்பா மெதுவாக அவரின் கைப்பையில் இருந்த ஒரு சாவியால் கதவைத் திறந்தார். அதுவும் சிறிய ஒரு ஓலைக் குடிசை. நாங்கள் உள்ளே சென்று பைகளை வைத்துவிட்டு மாற்றுத் துணிகளை அணிந்துவிட்டு அமர்ந்தோம். அவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த மதுக் குப்பியை திறந்து வேகமாக இரண்டு மூன்றுமிடறு வாயெடுக்காமல் குடித்தார்.

என்னா குளிர்?

ஆமா

சாப்பிட வேணாமா? நாம படுத்து தூங்குவோம். வேணுமுன்னா ஒரு வாய் இதக் குடிச்சுக்கோ. குளிர் தெரியாது. உடம்பு ரொம்ப நடுங்குது. மழை வேற நிற்காம பெய்துக்கிட்டே இருக்கு. ராத்திரி எப்படியும் நின்றிடும்.  மதராஸ்காரன் மழை பாக்கிறதே இப்படி எல்லாம்தான். நம்ம ஊர் போல கிடையாது. தண்ணீர் இங்க ஊருக்குள்ள வரும், இல்லன்னா ஏதாவது ஆபத்து அப்படின்னு தெரிஞ்சா சர்க்கார் துரிதமா உதவுவாங்க. நம்ம ஊர் கோயில்லகூட வருஷா வருஷம் மிதிபட்டு ஒரு ஆயிரம் பேர் சாவானுங்க. அங்க கடவுள் கூடகாப்பாத்த மாட்டார். ஆனா இங்க சர்க்கார் கடவுள் செய்ய வேண்டியதக்கூட செய்து தருவாங்க. ம்ம்ம்…. இப்போ கூட மழை நிற்கவேயில்லை அப்படீனா போலீஸ் வந்து சொல்லி நம்மள பத்திரமா கூட்டிகிட்டு போயிடுவாங்க. அதனால மழை நைட் நின்னாச்சுன்னா நாளைக்கு காலையில மாமூல் வாழ்க்கை தொடங்கிடும்.  இப்போ இருக்கிறத சாப்பிட்டு தூங்குவோம், என்றார்.

அப்பாவின் நம்பிக்கையும் அவரது பல வருட மதராஸ் வாழ்க்கையும் நிறைய கற்றுக் குடுத்திருக்கு இந்த ஊர் பற்றி. அரசாங்கத்தையும் மக்களையும் பற்றி. எங்கள் ஊரில் இருக்கும் அம்மாவையும், தம்பி தங்கையையும் யோசித்தேன். அழ ஆசை வந்தது. ஆனால் இவரைப் போல் இங்கே எவ்வளவு கஷ்டபட்டேனும் குடும்பத்தை காப்பாற்றுவேன். குளிர் என்னை ஆட்டிப்படைத்தது. ஒரு நம்பிக்கையில் மது குப்பியில் இருந்து இரண்டு வாய் குடித்தேன். குமட்டியது. அப்பா எதுவும் சொல்லவில்லை. நான் அப்பாவின் பையைத்  திறந்து எடுத்து வந்திருந்த நாலு சப்பாத்தியை அவருக்கும், எனக்கு மீதி இரண்டையும் எடுத்தேன். பின் அந்த பாலித்தேன் பையில் இருந்த இரண்டு வெங்காயத்தை ஆளுக்கொன்றாக வைத்துவிட்டு அதில் இருந்த மூன்று பச்சை மிளகாயில் இரண்டை அவருக்கு கொடுத்து ஒன்றை நானும் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறையத் தொடங்கியது. அவர் மீண்டும் குப்பியில் இருந்ததைக்  குடித்துவிட்டு கொஞ்சம் எனக்கும்  தந்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார். இரண்டு நாள் பயணத்தின் களைப்பு மற்றும் குளிர் காரணமாக நானும் மெதுவாக ஒரு மூலையில் படுத்துக்கொண்டேன்.

என் அப்பாவின் முகம் பல நாட்களுக்குப் பின்னர் எனக்கு மனதில் தெளியத்தொடங்கியது அவரது உடம்பின் மணம் மூக்கில் நன்றாக உணர முடிந்தது. அவரது அழகான வெற்றுடம்பில், கழட்டி வைத்திருந்த சட்டையைப் போட வேண்டும் என்று விரும்பி, அதை எடுத்துக்கொண்டு அவர் அருகில் நான் வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தேன்.

 

 

கல்பனாவின் கடிதம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்திவிட்டு மெதுவே இறங்கி வரும்போதே அவள் அதிசயித்தாள், தனக்கு யார் கடிதம் போட்டிருக்கக் கூடுமென. நேற்று பெய்த மழை வாசலில் தேங்கியிருக்கிறது. அதில் அந்தக் கடிதம் விழுந்திருக்கக் கூடாது. நல்ல வேளை, ஈரம் படவில்லை. காய்ந்த இடம் பார்த்து போட்டுவிட்டுப் போயிருப்பது யார், ஜோசஃப்போ? ஜோசஃபாக இருந்தால் மோரோ, தண்ணீரோ கேட்டுக் குடித்துவிட்டு சில கதைகள் பேசிவிட்டுத்தான் போவார். ”பாப்பா, முக்கத்து வீட்டு வேணு, அதாம்ப்பா, முல்லைக் கொடி வெளிய படந்திருக்குமில்ல, அவருதான், மொத்தம் ஆறு புக் எஸ் எஸ் எல் சி, அதாம்மா, உங்க பதினோராவது, வாங்கினாரு. அந்த எக்ஸாமினரே அவரு வீட்டிக்குப் போயி இனி எழுதாதையா, நானே உனக்கு வேல பண்ணி வைக்குறேன்னு கால்ல விழுந்துட்டாரு” என்று சிரிப்பார்.  ஆனால் ஜோசஃப்  எப்பொழுதோ ரிடயர் ஆகிவிட்டாரே. கடிதமே வராத ஒரு வீட்டிற்கு அதிசயமாக ஒன்று வந்திருக்கிறதே, அந்த ஆள் யாரெனப் பார்ப்போம் என்றுகூடத் தோணவில்லையே, இந்த தபால்காரருக்கு என எண்ணியதற்காக தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.

சிறு வயதில் ஜோசஃப் கொண்டு வரும் கோலி மிட்டாய்க்காக (கோலி மிட்டாயா, கோழி மிட்டாயா?) அவள் காத்திருப்பதுண்டு. அவரை ‘சான்டா க்ளாஸ்’ தாத்தா எனதான் நினைத்திருந்தாள் பலகாலம். அவளுடைய அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை அவர் கொடுத்தபோது இதே போல் பிரித்துக்கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்ததும் அவர் பதறியதும் நிழலாடின.

எங்கிருந்து வந்திருக்கிறது இந்தக் கடிதம்? யார் எழுதியிருப்பார்கள்? தபால் முத்திரை தெளிவாக இல்லை, அனுப்பியவரின் முகவரியும் இல்லை. தன்னுடையதைப் போல் சாய்ந்த எழுத்தில் தனக்குத் தெரிந்து எழுதுபவர் யார்?

ஒருகால் அப்பாவாக இருக்குமோ? கண்ணம்மா என்று முகவரியில் எழுதியிருந்தால் அது நிச்சயமாக அப்பா. அவள் அவசரமாக முகவரியை மீண்டும் பார்த்தாள். இல்லை, கல்பனா என்றுதான் இருந்தது. ஏன்  ஏமாற்றமும், ஆசுவாசமும் ஒருங்கே வருகிறது என அவளுக்குப் புரியவில்லை. அம்மா சிரிப்பது போல் கேட்டது, சிரிப்பைப் பழிப்பாக, பழிப்பைச் சிரிப்பாக மடைமாற்றம் செய்பவள் அம்மா. ”ஏன்டி, ஸ்வீட்டை இன்னமும் சாப்ட்ல, தயிர்ஞ்ஜாம் வேண்டாமா?”

‘கடேசில சாப்ட்றேம்மா’

“என்ன கடசியோ? டிரெஸ், பேனா  எல்லாத்தையுமே கடசி, கடசின்னுட்டு”

‘இப்போகூட இந்த லெட்டர பிரிக்கறதவிட அதக் கடேசியா செய்யத்தான் தோணுதம்மா’ அம்மா நிச்சயமாக பழித்துக் கொண்டிருப்பாள். ஆனாலும், அம்மா கடிதம் எழுத மாட்டாளா, என்ன? அவள் மீண்டும் ஒருமுறை முகவரியைப் பார்த்தாள். அம்மாவின் எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.

அவள் யதேச்சையாக கையிலிருந்த காகிதத்தில் காற்றில் படபடக்கும் அந்த நீலப் பறவைகளைப் பார்த்தாள். உயிரற்ற பறவைகள். அவை உயிரும் கொண்டு வருமோ என்னமோ?

எல் ஜி ராய் எழுதியிருப்பானோ? கல்பனாவிற்கு சிரிப்பு வந்தது. எல் ஜி ராய் எழுதியிருப்பாரோ என்று நினைக்க வேண்டுமோ? அன்றுகூட எதிர்பாராத மழை. முழுதுமாக நனைந்த அவன் சீட் முன் நின்று தன் ஆர்டரைக் காண்பித்த நேரம்- அவனுக்கு வெல்கம் சொல்வதா, மேஜையிலிருந்து கைகளை எடுக்கிறீர்களா என்று சொல்வதா,  எனத் திகைத்தாள். அவன் ‘சாரி’ என்றபின்தான் அவள் இயல்பிற்கு வந்தாள்.

“நீங்கள் ப்ரேஞ்ச் மாறி வந்திருக்கிறீர்கள். சாரி”

‘இல்லையே, விசாரித்துவிட்டுத்தானே வந்தேன்’

“சாரி, போய் போர்டைப் பாருங்கள்.”

அவன் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் குழப்பத்துடன் வந்தான்.

“சரியாகத்தானே வந்திருக்கிறேன்” என்றான் அழாத குறையாக.

‘என்ன சார், ப்ரமோஷனில் வருகிறீர்கள், நேரத்திற்கு வர வேண்டாமா? லேட்டு முத நாளே. உங்க கன்ஃபர்மேஷன் ஒரு நாள் தள்ளிப் போகும் தெரியுதா?’ என்றாள் அவள்.

அவனுக்கு உயிர் வந்தது. ”சாரி, சாரி,” என்றான்.

அவனுடன் நிறைய ப்ரேங்க்ஸ். எப்போதும் எதற்காவது அவளிடம் மாட்டிக் கொள்வான். ஸ்டாக் இன்ஸுரன்ஸ் தேதியை அவன் ஒருமுறை கவனிக்கவில்லை. அது வங்கியில் அடமானத்தில் இருந்த கேஷ் க்ரெடிட் ஸ்டாக்ஸ். சோதனையாக அந்த ஸ்டாக்ஸ் திருடும் போய்விட்டது. மதிப்பு பத்து லட்சம். என்ன செய்வான் அவன்? நெக்லிஜென்ஸ், கேர்லெஸ்னஸ், கூட்டுச் சதி- காப்பு நிச்சயம். எப்படியெல்லாம் பயமுறுத்தினாள் அவனை அவள். அக்கவுண்டைப் பார்த்து அவளே அந்த காப்பீட்டைச் செய்துவிட்டாள் என்று அறிந்ததும் அவன் விட்ட பெருமூச்சு, அவள் கைகளை விடாது பற்றிக் கொண்டே இருந்தது, ‘பிசாசு’ என்று செல்லமாகத் திட்டியது, ‘முத்துடைத்தாம நிறை தாழ்ந்த பந்தற்கீழ்’ என மனம் விம்மியதோ?  ராய் வெட்ஸ் சர்மிஷ்டா என அழைப்பிதழ் வந்தபோது  பூத்த பவளமல்லி சற்று வாடியே வாசம் வீசியது.’ராய் வெட்ஸ் சர்மிஷ்டா, கல்பனா வெட்ஸ் ஹர் ஐய்ஸ்’ என கவித்வ சோகம் கவ்வியது. பச்சை ஓடு தெறித்து விரிந்து பருத்திக்காடு கிளியைப் பார்த்துச் சிரித்தது.

அவன் எழுதியிருப்பானோ, இந்தக் கடிதத்தை?அவனுக்கு தமிழ் எழுத வராதே? வடக்கே போன பிறகு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே அவர்களுக்குள் கடிதங்கள். முதல் குழந்தை ஆண் என்று ஒரு கடிதம். அந்தப் பயலுக்கே இப்போது இருபது வயதிருக்குமில்ல? அவளை ’சேட்டர் பாக்ஸ்’ என்றே கூப்பிடுவான் ராய்.

ஒருகால் சாதனா வீட்டிலிருந்தோ? அவளுக்குத் தமிழ் தெரியும், ஆனால், பிடிவாதமாக ஆங்கிலத்தில்தானே எழுதுவாள்? அன்று அவ்வளவு கோபத்திலும் சரமாரியாக ஆங்கிலத்தில்தானே திட்டினாள். ஒருவேளை, அதற்காக மன்னிப்பு கேட்டு எழுதியிருப்பாளோ?

நசநசவென்று மழை அன்றைக்கு பெய்து கொண்டிருந்தது. அதற்கே மின்சாரம் நின்றுவிட்டது. சாதனா ஏற்றிய மெழுகுவத்தியில் தங்கள் மூவரின் உருவமும் கரும் பூதங்களெனச் சுவற்றில் அலைபாய்ந்ததை கல்பனா பார்த்துக் கொண்டேயிருந்தாள். தன் நிழலை சாதனாவின் நிழலில் சேர்த்தாள்; அவள் தலையிலடித்துக் கொண்டு சிரித்தது நிழலில் மிகக் கோரமாக இருந்தது. பின் சங்கரின் நிழலில் அழுத்தமாக இணைக்கப் பார்த்தாள். விளையாட்டாகத்தானா என்று அவளுக்கும் தோன்றாமலில்லை. மிக அடிக்குரலில் சாதனா திட்டியது வியப்பென்றால் முதலில் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு எதுவுமே பேசாமல் அங்கிருந்தும் நகராமல் இருந்தானே அந்த சங்கர், அவனுடைய நிழலிலா என் நிழலை ஒட்டப் பார்த்தேன் என்று அவளுக்கு கசந்து வந்தது. இந்த வயதில் அப்படி ஒரு கசப்பு சாத்தியமா தனக்கு? அந்தக் கசப்பில் ஓர் இனிமையை அவள் உணர்ந்த மாதிரி சங்கருக்கும் ஏதாவது தோன்றியிருக்குமோ? அவன் இருளில் ஆடும் சலனங்களை அறிந்திருப்பான் என்றால் அவளிடம் எப்போதோ பேசியிருப்பானே? சரி, பின்னர் யார்? அந்த ஹோட்டலில் சந்தித்த பேராசிரியரா?

எல்லோரும் போகிறார்களேயென்று அவளும் அன்று ஐயப்ப பூஜைக்குப் போனாள். கருப்பும், காவியுமாக சரண கோஷங்கள், பூக்கள், சந்தனம், வியர்வை என கதம்ப வாசனை. மேளமும், நாகஸ்வரமும், குழந்தைகளின் அழுகையும், சலசலவென கலவையான பேச்சுச் சத்தமும் இழுத்துப் பார்த்தாலும், வழுக்கியோடும் எண்ணங்களும், யாரை ஏமாற்ற இங்கே இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்ற சாட்டையடியும் அவளுக்கு. மெதுவே நழுவி வருகையில் பயங்கரமாகப் பசித்தது. அருகில் இருந்த அந்த உணவு விடுதியிலும் மக்கள் திரள். அதில் நீந்தி ஒரு காலியான இருக்கையை ஒருவாறு அடைந்தாள். எதிரெதிரே ஒருவர் ஒருவராக அமரும் இருக்கைகள் ஒன்றில் நடுத்தர வயதுள்ள கண்ணிய தோற்றமுடைய ஒருவர் உட்கார்ந்திருந்தார். ’யாரும் வருகிறார்களா?’ எனக் கேட்டுவிட்டு ‘இல்லை, நீங்கள் உட்காருங்கள்’ என்ற பதிலால் பாதி பசி போய்விட்டது போல் உணர்ந்தாள். இவள் விரைவாக சாப்பிட்டு முடித்தும்கூட அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ’பில் வந்தால் பரவாயில்லை’ என இவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு ‘பில்’ முதலில் வந்தது. அவர் பணத்தை அட்டைக்குள் வைத்துவிட்டு எழுந்து போனார். அதை எடுக்க வந்த பணியாளரிடம் அவள் தன் பில்லைக் கொண்டுவருமாறு சொல்கையில், ‘இப்போ எழுந்து போகிறாரே, அவர் உங்களுடன் வந்தவரில்லியா, அவர் கொடுத்துவிட்டாரே’ என்றவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பணியாளரை ஓடிப் போய் அவரை கூப்பிட்டு வரச் சொன்னாள்.

அவர் திகைத்து உடனே சமாளித்துக் கொண்டுவிட்டார், ”ஸாரி, மேம். நான் சாப்பிட்டதற்கான தொகை என்றே நினைத்தேன். அதனாலென்ன, பரவாயில்லை, நான் ‘ட்ரீட்’ கொடுத்ததாக இருக்கட்டுமே,” என்றார். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. தன் செலவு தன்னுடையது என்று பிடிவாதம் பிடித்தாள். அப்படி ஆரம்பித்த சந்திப்பு பாரதியும், ஓஷோவும், ரமணரும், அரவிந்தரும், திருமழிசை ஆழ்வாரும், ராஜா இசையமைத்த திருவாசகமுமென இரு வருடங்கள் கரை புரண்டு ஓடிற்று. காட்டாறு எங்கு தொடங்கும், எத்திசையில் பாயும், எப்போது திசை மாறும், எப்போது மறைந்து போகும், யார் சொல்லக்கூடும்? தொடர் நட்பிற்கான, தொடர் உறவிற்கான, எது தன்னிடம் இல்லை என அவள் சிந்தித்து அலுத்துவிட்டாள். அவள் முதன்முதலாகப் பரிசெனப் பெற்றது ஒரு தங்கச் சங்கிலி. அதன் கண்ணிகள் ஒவ்வொரு இடமாக விட்டு விட்டுப் போகையில் அவள் பற்ற வைத்துக் கொண்டேயிருந்தாள், பத்தர் மறுக்கும் வரை.

அதெல்லாம் இருக்கட்டும், இந்த எழுத்து அவருடையதில்லை. மருத்துவர்களைவிட கிறுக்கலான எழுத்து அவருடையது. மேலும், விலாசத்தை ‘டைப் ‘ செய்யும் வழக்கம் உள்ளவர். எழுதுவதைவிட பேசுவதிலல்லவா அவருக்கு விருப்பம் அதிகம்? அவரும் இல்லையென்றால் வேறு யார்?

எதற்கு இந்த சிந்தனை? பிரித்துப் பார்த்தால் தெரிந்து போகிறது. அவள் கூடத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு, பிரிக்கலாம் என நினைத்தாள். சுவரின் ஈரம் முதுகில் ஜில்லென்றிருந்தது. தமிழ் டீச்சர் லஷ்மிகாந்தம் நினைவிற்கு வந்தார். ‘நனை சுவர் கூரை கனைகுரல் பல்லி’ – என்ன ஒரு சொற்றொடர்! அவள்கூட நனை சுவரில் நின்று அந்தக் கடிதத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வாசலில் தேங்கியுள்ள மழை நீரில் தன் முகத்தைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.

 முப்பது பணம் – ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

கல் பதித்து சிமெண்ட் பூச்சால் இணைக்கப்பட்ட தரை அங்கங்கே வெடித்திருந்தது. அது குளக்கரை மேடை. பனியின் குளிர்ச்சி பிளவுகளின் இடையே பரந்திருந்த மண்ணிலும், பல்லிளித்த கற்களிலும் இன்னமும் இருந்தது. ஆனாலும் மேலே சூரியன் ஒளிப்பிரகாசனாய் இருந்தான். அடர்த்தியான அரச மர நிழலில் நானும் பிள்ளையாருமாக உட்கார்ந்திருந்தோம். இளம் பிள்ளையார். அனுபவங்களின் கசடுகள், கசப்புக்கள் இல்லாமல் தொந்தியின் மேலெழும் தும்பிக்கையுடன் அசையாமல் அமர்ந்திருந்தார். இலைகளின் ஊடே தண்ணீர்த் தகட்டில் நிழலாடும் ஆடியென வானம் கண்ணாமூச்சி காட்டியது. நான் கணேசனைப் பார்த்து நட்புடன் சிரித்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. சிரிப்பு… நட்பு.. இந்த உணர்வுகள் மரத்துவிட்டதென்றே நினைத்திருந்தேனே, இன்னமும் வாழும் முனைப்பு என்னிடம் இருக்கிறதோ?என் குறுஞ்சிரிப்பு இப்பொழுது முரண் நகையாகி ஏளனச் சிரிப்பாக வழிந்தது. ’என்னை ஏன் கலவரப்படுத்துகிறாய்?’ என்று அசையாப் பிள்ளையார் கேட்பது போல் தோன்றவும் வாய் விட்டுச் சிரித்தேன். என்னைப் பார்த்து எத்தனை பேர் சிரித்திருக்கிறார்கள்- இப்பொழுது என் முறை, பிள்ளையே!

அரசிலைகள் சலசலத்து நீரின் மேல் நில்லாக் கோலங்களை வரைந்தன. தெளிவில்லா உருவங்கள். பிம்பங்கள் கலைந்து கலைந்து ஒன்று மற்றொன்றாய் உருவெடுத்து அழிந்தன. சாரையும் சர்ப்பமுமாய் ஆட்டம் காட்டின. வளைந்து வழுக்கி ஓடும் அது சாரையா அல்லது காமினியா, கவிதாவா,  புவனாவா?ஆவலுடன் நீந்திச் செல்லும் அந்த சர்ப்பம் நானோ? அவை ஒரு மாலையைப் போல் ஏன் காட்சி தருகின்றன? இல்லை, மாலையில்லை ஒரு வட்டம், நீள் வட்டம், அடியும் நுனியும் காணாத வட்டம். தொடக்கப் புள்ளியையும் முடிக்கும் புள்ளியையும் விழுங்கிவிட்ட முழு வட்டம்.

வட்டம் எப்போது அரசிலை ஆனது?அல்லது அரசிலைதான் வட்டமாகக் காட்டியதா? பிள்ளையாரைக் கேட்கலாம் என்றால் அவ்வளவு பெரிய செவிகள் இருந்தும் காதுகளை அவர் மூடிக் கொண்டுவிட்டார். துண்டை உதறி என் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அவரின் பின்புறம் சென்று படுத்துக் கொண்டேன். நினைவுகளை இப்படி உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

என்னுடைய பதினாறாம் வயதிலே நாங்கள் அந்த ஊருக்கு வந்தோம். பேரையும், ஊரையும் சொல்லி நான் யாரையும் சங்கடப்படுத்தப் போவதில்லை. மொத்தமே பதினாறு வீதிகள் தான். ஒவ்வொரு வீதியிலும் இருவது, முப்பது குடும்பங்கள். இரு நாட்களில் ஊரின் முகங்கள் முழுதும் பரிச்சயமாயிற்று.

சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்தாள். ’பொன்னுத்தாயி ஊருக்குப் போயிடிச்சு. நாந்தான் வருவேன் இனி. என்னா, முழிக்கிறே? பால் சொம்பு கொண்டா’ என்றாள்.’அம்மா, பால்’ என்று குரல் கொடுத்துவிட்டு நான் வாசலில் அவள் சைக்கிளைப் பார்க்க விரைந்தேன். ரொம்பப் பழைய மாடல் ‘ஹெர்குலஸ்’. ஆண்களுக்கே உயரம் அதிகம். பால் கேனை மாட்டிவிட்டு அதில் அவள் ஏறிய லாகவம். பிரமிப்பதற்குள் விரைந்து விட்டாள்.

இலேசான மினுமினுப்போடும் உறுதியோடும் தெரிந்த அந்த கணுக்கால்களையும், ஆடுசதையினையும் நான் அடிக்கடி பார்க்க நேரிட்டது. குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டேயிருப்பாள். புல்லுக்கட்டு, புண்ணாக்கு, தவிடு என அவள் கேரியரில் ஏதாவது பயணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் அசந்தே போய்விட்டேன், நோயுற்ற  பெரிய கன்றுக்குட்டியை சைக்கிளில் கட்டி ஓட்டிப் போனாள். அசாத்யமான பெண். அவளைப் பற்றி என் மதிப்பு உயர்ந்து கொண்டே போயிற்று. என் அக்காவும் இருக்கிறாளே.. தேங்காயை உரித்துத் தந்தால் மட்டும் போதாது, உடைத்தும் தர வேண்டும். அவளிடத்தில் எனக்கு என்ன ஈர்ப்பு என்றே புரியவில்லை. அவளைப் பற்றி யாரோடாவது பேசி கிண்டலுக்குள்ளாவேன்.

தன்னை மறந்து செயலில் முனைப்போடு இருக்கும் அவளை முடிந்தபோதெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

“டேய், மோகினி உன்ன புடிச்சிருக்கு.விட்டுடு, இல்ல தவிப்ப” என்று சீனி சொன்னபொழுது ‘போடா, டேய்’ என்றுதான் சொன்னேன்.

அவள் என்னைவிட ஆறேழு வயது பெரியவள். ’இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கா அவ அத்தை வீட்ல. பாவம், அம்மா, அப்பா இல்லயாம்.  ஓடா உழச்சி மாடாத் தேயறது, என்னிக்கு விடியுமோ?’ அம்மா பேச்சுவாக்கில் சொன்ன செய்தியில் நான் அவளுக்கு காமினி எனப் பெயரிட்டேன்.’நா இருக்கேன் உனக்கு’ என மனதில் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.

கோடை விடுமுறை வந்தது. அவள் சைக்கிளில் ராஜா குளத்திற்குப் போவதைப் பார்த்தேன். கானல் அலை அடிக்கும் அக்னி நக்‌ஷத்ரம். தெருவில் ஈ காக்கை இல்லை. ஒரு மரத்தின் இலை கூட அசையவில்லை. வீடுகள் ஆழ்ந்த மதிய உறக்கத்தில் இருந்தன. பனியனுடனும், அரைக்காற்சட்டையுடனும் நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.

‘என்ன தம்பி, என்ன வேணும்?’ அவள் என்னை எப்பொழுது பார்த்தாள் எனத் தெரியவில்லை, இத்தனைக்கும் நான் மரத்தின் பின்னிருந்துதான் அவள் குளத்திலிருந்து மேடேறி கரைக்கு வருவதைப் பார்த்து க்கொண்டிருந்தேன்.தண்ணீர் குடிக்க வந்த ஆடுகள் கவனமாக அடி வைத்து இறங்கிக் கொண்டிருந்தன.

‘இந்தா, பேச்சி, பாத்து இறங்கு, சீமான பாத்து பயந்துடாதே,’ என்று குட்டியாட்டைப் பார்த்து சிரித்தாள். ஈரத்தில் உதடுகள் நனைந்து ஒளியுடன் மின்னின. நெற்றியில் படிந்த கூந்தல் இழைகள் தனி அழகைக் கொடுத்தன.தோள்பட்டை எலும்புகளும், சரிந்து இறங்கும் கழுத்தும் கொள்ளை கொண்டன. உயர்த்திய கைகள் காட்டிய மறைந்த அழகுகள் இம்சித்தன. உரமேறிய உடலும், இளமையும் என்னைப் பித்தாக்கின.

‘அம்மா சொன்னாங்க’ என்றேன்

“விருந்தாளி வந்திருக்கா? பால் கூட வோணுமா?’’

‘அதில்ல, நான் வந்து..’

‘‘நீ வந்து..? ’’

‘நாம..’

‘’நாம?’’

‘இல்ல.உனக்கு கல்யாணம் ஆவலயாமே?’

‘‘ப்பூ.. இதானா? அதைக் கேக்கவா இங்க வந்த?’’

‘அதில்ல, எனக்கு உன்ன புடிச்சிருக்கு’

‘’சரி’’

‘என்ன சரிங்கற’

‘’வேற என்ன சொல்லணும்?’’

‘நாம… நாம’

‘‘கண்ணாலம் கட்டிக்கலாம்க்றியா?’’

பொட்டில் அடித்தாற் போல் அவள் அப்படிக் கேட்பாள் என நினைக்கவில்லை. தடுமாறினேன்.

’’கண்ணாலமெல்லாம் வேணாம். எனக்கு ஒரு முத்தம் மட்டும் கொடு அது போதும்’’

அவள் விளையாடுகிறாள் என நினைத்தேன்.அவள் மூச்சுக்காற்று பட என்னை நெருங்கி அணைக்கையில் வெலவெலத்துப் போய்விட்டேன்.

‘‘ராசா, என் கண்ணில்ல, முத்தம் மட்டும்தான்யா நீ கொடுக்க முடியும், எனக்கு கிடைக்காதது அதான்யா.’’

எனக்குப் புரியாமல் ஓடி வீட்டிற்கு வந்து விட்டேன். பிச்சியைப் போல் அவள் சிரித்தது என்னை ஓயாமல் துரத்தியது. அன்று கனவில் வெள்ளை ரோஜாக்களாக வந்தன. அதன் நடுவில் அவள் கரும் முள்ளென ஓங்கி நின்றாள். செடிகளிலிருந்து பறித்துப் போட்ட பூக்கள் முட்கள் நெருட குருதி வாசம் வீசியது. தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால் தள்ளாடியது.

ஒரு சமயம் மாமா வீட்டிற்குப் போயிருக்கையில் அந்த ஊரில் ஒரு கடற்கரையை நான் பார்த்தேன். பெரிதாக எழும்பி வரும் அலை என்னை மூழ்கடிக்கப் போவதாக எண்ணி அதற்கு பாய்ச்சல் காட்ட நான் தயாராக நின்றிருந்தேன். இதோ…இதோ ஓடப் போகிறேன். அது என் காலைக் கூட நனைக்காமல் ஏமாற்றி விட்டது. ஏனென்று புரியாமல் அழுதேன்.

‘முப்பது பணம் கொடுத்து மூணு குளம் வெட்டினேன் < em>ரண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியேயில்ல’

வழிப்போக்கன் பாடிக்கொண்டு செல்வதை படுத்துக்கொண்டே கேட்டேன்.

தண்ணியில்லா குளத்துக்கு காவல்மார் மூணு பேர்
ரண்டு பேர் முடம் ஒண்ணு காலேயில்ல’

 ‘ஓய், புள்ளையாரே, ஏதோ உம்ம இடத்ல படுத்திருக்கேன்னு எதிர்ப்பாட்டெல்லாம் வேணாம். நல்லாருக்காது, சொல்லிப்புட்டேன் ஆமா’

‘‘இது நீ பாடும் பாட்டு அப்பா. சொல்லப்போனா கவிதா பாட வச்ச பாட்டு’’

ஆம், உண்மைதான். ஓரளவு படித்து, ஒரு சுமார் வேலையில் இருந்தேன். வயது இருபத்தியாறு.வேறு ஊர், வேறு மனிதர்கள். பஞ்சுப் பொதிக்குள் விழுந்த குண்டென காமினி எங்கோ வலிக்காமல் ஆழ்ந்து போனாள். கவிதா, அழகான பெயர். சுமாரான அழகு. எல்லாவற்றையும்விட ஜாதகங்கள் பொருந்தியது முக்கியமாகப் போய்விட்டது. ’ரஜ்ஜு தட்டல. அமோகமா இருப்பா’ அந்த ஜோதிடரைப் பார்த்தால் … அடித்துக் கொன்றுவிட்டால் என்ன என்று செய்ய இயலாத ஆத்திரம் இன்று வரை இருக்கிறது. கவிதாவிடம் தோற்றேன். காதல் இருந்தது அவளிடம். ஆனால் கனன்று எரியவில்லை. ஏனெனக் கேட்க முடியவில்லை, யாரிடமும் பகிரவும் முடியவில்லை; எங்கள் தனிமையில் அவள் மிரளும் கண்களும், நடுங்கும் உடலும், திரளும் கண்ணீரும்… என்னால் புரிய வைக்க முடியவில்லை.

“உனக்கெல்லாம் ஆரு வேலை கொடுத்தான்? இஷ்டமில்லேன்னா கால் கடிதாசி கொடுய்யா? கம்பெனி பொழைக்கும்.’’

முப்பத்தைந்து வயதில் நாலு பேர் கேட்க  என்னை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் சூட்டுக்கோல்கள். ஆனால், நான் தாங்கிக்கொண்டேன். அதிக சேமிப்புமில்லை, வயதான பெற்றோர்,வேறு வேலை கிடைக்கும் வாய்ப்பு என் படிப்பிற்கு கிடைப்பது கடினம்.

காலில்லா காவல் மாருக்கு மூணு பணம் மாதப் பணம்
ரண்டு பணம்செல்லாக்காசு ஒண்ணு காசே இல்ல’

கவிதா என் வறட்சியை வேறு விதத்தில் சமாளிக்கப் பார்த்தாள். நாங்கள் பொருத்தமான ஜோடி என்றே அறியப்பட்டோம். நான் நினைப்பதை அதற்கும் முன்பாகவே செய்தாள், வேலைக்கும் போய் சம்பாதித்தாள், அம்மா,அப்பாவுடன் பாசமாக இருந்தாள். ஆனால், என்னைக் கனவினிலேயே இருக்க வைத்தாள்.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு சம்பவம். இடக்கரத்தால் பிரமன் என் தலையில் எழுதிய எழுத்து .. என்ன பிள்ளையே.. நீ கேளு இல்ல கேக்காம இரு.. நா மாட்டுக்கும் சொல்லுவேன். எங்கள் அலுவலக நண்பர் புவனாவின் குழந்தைக்கு காது குத்தியற்கான பார்ட்டி அவர்கள் வீட்டில். என் மனது  தடுத்தும் நான் போனேன். ’’அவசரமா? கொஞ்சம் இரேன், பேசணும்’’ என்றாள்.

என்ன பேசப் போகிறாள்? என்ன இருக்கிறது பேசுவதற்கு?நான்அவ்வளவு பொருட்டா என்ன? எங்கள் குடும்பத்தைப் பற்றி ஊகித்துவிட்டாளோ? தாள் கைக்குட்டையில் முகத்தை ஒற்றி ஒற்றி நான் அவசரமாகக் கசக்கி குப்பைக்கூடையில் போட்ட தாள்கூட அரசிலை போலத்தான் இருந்தது.

காசில்லா காசைக்கொண்டு கடப்பொருள் வாங்கப் போனேன்
ரண்டு பொருள் ஊசிப்போச்சு ஒண்ணுபொருளேயில்ல

‘சபாஷ், உன் விதிய யாரோ முன்னமே பாடி வச்சிருக்கான் போலிருக்கு’ என்றார் பிள்ளையார்.

நான் சிரித்தேன், நெருப்புப் பொறி பரக்கச் சிரித்தேன், பின்னர் சிரிப்பாய்ச் சிரித்தேன். சுடுசொல் தொலைக்காத வேலையை அவச்சொல் போக்கிவிட்ட விந்தையை நினைத்து இன்றும் சிரிக்கிறேன்.

பொருளில்லா சாமான் கொண்டு மூவிருந்து செஞ்சு பாத்தேன்
மொத்த சட்டி காலி இந்த வயிறும் காலி’

அம்மாவின் தவிப்பு, அப்பாவின் பாராமுகம், கவிதா கொண்டு வரும் வருமானம். நாற்பது வயதிற்குள் அலுத்துவிட்டேன்.

‘நான், புள்ளையாரே, நல்லவன்யா. நீ எப்படி?’

‘‘எப்படின்னா?’’’

‘உனக்கு ஒரு கஷ்டமுமில்ல. நீ நல்லவனாத்தான் இருக்கமுடியும். அல்லல் பட்டவன்தாய்யா அனுபவசாலி.’‘

‘‘சரி’’

‘என்ன சரி?’

‘‘நீ எது சொன்னாலும் சரி’’

‘அப்படின்னா?’

‘‘உங்கிட்ட துணிவில்ல, நேர்மையுமில்ல, நம்பிக்கையுமில்ல. வெத்து அனுபவம் சொல்ற. கடமையையாவது செஞ்சியான்னா அதுவுமில்ல’’

‘என்னக் குத்தம் சொல்றதுக்கா சரி,சரின்ன புள்ளையே’

‘‘அதில்லடா, மனிதா. நடந்ததிலேயே இருக்கியே.’’

‘அடுத்தவ தேவைக்கு பசியேலில்லாம ஒப்புக் கொடுத்தேன் பாரு, அங்கதான்யா என்னையே வெறுத்தேன்.’

அகாலத்தில் குயில் ஒன்று புலனாகாத இடத்திலிருந்து கூவியது.

 

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“இலை நுனியில் விழக் காத்திருக்கும் மழையின் கடைசி துளி
குறி முனையில் தொக்கி நிற்கும் மூத்திரத்தின் கடைசி சொட்டு ”

கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்புள்ளி அவருக்கு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மேலே உள்ள வரிகளைதான் படித்துக் கொண்டிருப்பார். சிறு வயதில், நாளின் முதல் சிறுநீரின் அடர் மஞ்சள் நிறத்தை, கார நெடியை கவனித்ததுண்டு. வளர்ந்த பின்புதான் காப்பியின் எஞ்சியிருக்கும் மணமும் அதைக் குடித்த பின்னரான சிறுநீர் கழித்தலில் எழும், என்பதைக் கண்டு கொண்டேன். இன்று கழிவறையில் ப்ளஷ்ஷை அழுத்திவிட்டு, அந்த மணத்தை நுகர்ந்து கொண்டே வெளியே வரும்போதுதான் இந்த வரிகள் மனதில் தோன்றின. நாள் முழுதும் அதை விரிவாக்க முனைந்து, மிகையாக எழுந்த வரிகளை நீக்கி, மாலை ஆறரை மணி அளவில் பெரியவர் முற்றுப்புள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவருடைய சிறுகதைகளைப் படிக்க நேர்ந்து அவற்றை என் கதைகளாக இணைய இலக்கிய இதழொன்றுக்கு என் புனைப்பெயரில் அனுப்பி, அவை
பிரசுரமாகி, அதன்பின் செய்த குற்றத்திற்கு பெரியவரிடம் மன்னிப்பு கேட்டது போக, உண்மையை இணைய இதழின் எடிட்டருக்கு எழுதி அனுப்பி, அதையே அவர் ஒரு கதையாக எண்ணிப் பதிப்பித்த கூத்து நடந்த பிறகுதான் முற்றுப்புள்ளியிடம் நட்பு ஏற்பட்டது. வாழ்க்கை புனைவைவிட மிக விசித்திரமானதுதான் (இது போன்ற சொற்றொடர்களை நிஜ வாழ்வில் பொருத்துவதற்கான வாய்ப்புக்களை நான் எப்போதும் எதிர்நோக்கியே இருப்பேன், நான் மேலே சொல்லிய நிகழ்வுகளையேகூட பின்நவீனத்துவ கதையாக எண்ணிப் பார்ப்பதுண்டு என்பதை நான் வாசகர்களுக்கு சொல்லத் தேவையில்லை).

‘முற்றுப்புள்ளி’ என்ற அவருடைய புனைப்பெயர்தான் அவருடைய நூலை வாங்கச் செய்தது, இன்றுவரை அவருடைய உண்மைப் பெயர் – நிஜ, உண்மைப் பெயர் என்ற சொற்றொடருக்கான அர்த்தம், இங்கு அதை உபயோகிப்பதற்கான பொருத்தம் எல்லாம் சரியாக புரியவில்லை என்றாலும், பொது வழக்காக இருப்பதால் அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன் – என்னவென்று எனக்குத் தெரியாது, அவரும் இதுவரை என்னுடைய பெயரைக் கேட்டதில்லை, புனைப்பெயராகவே என்னை அறிகிறார். ‘இரு நிழல்களின்’ நட்பு என்று இந்த இடத்தில் குறிப்பிட்டால் கதைக்கு இலக்கிய தொனி கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும், மௌனியின் வரிகளை மாற்றி – நகல் செய்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் – யார் நிழல், யார் நிஜம் என்ற தத்துவ விசாரத்திலும் ஓரிரு பத்திகளுக்கு ஈடுபடலாம் என்று தோன்றுகிறது (நான் குறிப்பிடும் வரிகளை மௌனிதான் எழுதினார் இல்லையா, அல்லது நகுலனா? இருவருமே அப்படி எழுதி இருக்கும் சாத்தியம் உண்டு).

பார்வையை என்னை நோக்கி திருப்பியவர், ‘என்னப்பா இது அனுப்பி இருக்க’ என்றார்.

‘கவிதை சார்’

‘என்னது….’

‘அதாவது எதிர்-கவிதை சார், இதை அ-கவிதைன்னு கூட எடுத்துக்கலாம் இல்லையா’

‘எதிரு.. ஆ.. என்ன சொல்ல வர’

‘அதாவது சார், கவிதையின் அழகியல், லிமிடேஷன்ஸ், வரையறை எல்லாத்தையும்  கலைச்சுப் போட்டு..’ என்றவனை இடைமறித்து, ‘கவிதைக்கு என்ன வரையறை நீ வெச்சிருக்க மொதல்ல, இதுவரைக்கு கவிதை பத்தி, இல்ல கவிதை என்ன எழுதி இருக்க, ஏதோ கதன்னு தான எழுதிட்டிருந்த’

‘மொதல்ல நாம சந்திச்சப்போ ரெண்டு மூணு கவிதை ஒங்ககிட்ட காட்டிருக்கேனே சார்,’ என்று நான் சொல்ல, சில நொடிகளுக்குப் பின் ‘ஏதோ எழுதினத காட்டின..ம்ம், சரி இப்ப என்ன திருப்பி…’

‘நீங்க வேற நா எப்பவுமே செங்கல்பட்டு கதை மட்டுமே எழுதறேன்னு சொன்னீங்க, வேற முயற்சி செய்யலாமேன்னு’

‘நான் வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே கதை, இலக்கியம் ஆகாதுங்கற அர்த்தத்துல சொன்னேன்பா, அதுக்கு இப்படியா’

‘இது மொதல் ரெண்டு வர தான் சார், இன்னும் ஏழெட்டு வரி வரும், ரெயின் எங்க போய் சேர்றது, யூரின் எங்க போய் சேர்றது ரெண்டையும் ஜாயின் பண்ற மாதிரி.’

‘அப்போ இதை கண்டின்யு பண்ணத்தான் போறியா’

‘ஆமா ஸார், இப்போ இதை பாத்தா ஹைக்கூ மாதிரி இருக்குலியா, அதுன்னு நெனச்சுக்கப் போறாங்க’

‘ஹைக்கூவா…’

‘காபி குடிச்சுட்டு யூரின் பாஸ் பண்ணும்போது வர வாசனை, இப்படி நுணுக்கமான விஷயங்க. முன்னாடி நாம ஒரு நாள் பேசும் போது தி.ஜா ஏதோ அவர் கதைங்க பத்தின பேட்டியிலோ, நேர் உரையாடலிலோ வீட்ல கிச்சன், டிராயிங் ரூம் இருக்கற மாதிரி பாத்ரூமும் இருக்கே, அதைப் பத்தியும் எழுதணுமேன்னு சொன்னதா நீங்க கூட சொன்னீங்களே’

‘பாத்ரூம் பத்தி எழுதலாம்பா, ஆனா ப்ராடு வாஸ்த்து ஆளுகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, டிராயிங் ரூம பாத்ரூமா மாத்தறது மாதிரி ஆகக் கூடாதுல்ல’

‘இந்த மாதிரி எழுத்துக்களை பிரசுரிப்பாங்களான்னு தெரியல சார், எழுதி முடிச்சிட்டு அனுப்பறதான்னு முடிவு செய்யல, மோஸ்ட்லி அனுப்ப மாட்டேன்னு நினைக்கறேன்’

‘நல்லதுதான்’

பெரியவருடன் தொடர்பு ஏற்பட்டதும், சனி, ஞாயிறன்று அவர் வீட்டிற்குச் சென்று இலக்கிய உரையாடல்களில் ஈடுபடும் பழக்கமும் உண்டானது. அதாவது பெரியவர் என் எழுத்துக்களை கிழித்தெடுப்பார், நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தான் எழுதி, எங்கும் பிரசுரத்துக்கு அனுப்பாத அவர் கதைகளைப் படித்து (எழுபத்திரெண்டில் எழுத ஆரம்பித்த சிறுகதையின் இருபத்தி நான்காம் வரைவைக்கூட படித்திருக்கிறேன்) நாலைந்து நற்சொல் என் தரப்பாக வரும், குற்றம் செய்தவன் நான்தான் இல்லையா. மேலும் பெரியவரை ஒரு விதத்தில் என் ‘ஆல்டர் -ஈகோவாக’ பார்க்க ஆரம்பித்திருந்தேன். யுவனின் கதைகளில் வரும் இஸ்மாயில்கூட இப்படித்தான் ஈவிரக்கமில்லாமல் கதைசொல்லியின் கதைகளை கட்டுடைக்கிறார், இல்லையா, எனக்கு நிஜத்தில் நடக்கிறது அவ்வளவு தான்.

‘இலக்கிய இதழ்களே இப்படின்னா லிட்டரேச்சர் பத்திலாம் நெறைய பேருக்கு தெரியாது அவங்க கிட்டலாம் என்ன பேச, அதான் நான் எழுதறத பத்திலாம் யார்க்கிட்டயும் சொல்றது இல்ல’

‘அதான் நல்லது, கண்டிப்பா இது எழுதியே ஆகணும்னா கண்டின்யு பண்ணு பாப்போம் எங்க போய் நிக்குதுன்னு’

பெரியவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஹாலுக்கு வந்த, அவர் மனைவியைப் பார்த்து, உதடுகளை வலிந்து, எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்பை எப்போதும் போல் உதிர்த்து விட்டு, ( சிரிப்பை எல்லாம் எப்படி உதிர்க்க என்று எனக்கு தோன்றினாலும், இந்த நேரத்தில் வேறு எந்த உவமை, உருவகம் எதுவும் தோன்றவில்லை என்பதால் வேறு வழியின்றி அதையே எழுதி விடுகிறேன், கதையை திருத்தம் செய்யும்போது நல்லதாக ஏதேனும் தோன்றினால் மாற்றி எழுதக்கூடும். ஆனால் அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை, என்ன இருந்தாலும் இது எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்புதானே, அது மலர்வதைவிட உதிர்வதுதான் பொருத்தமாக இருக்கும், இல்லையா) வெளியே வந்தேன். முற்றுப்புள்ளியின் மனைவிக்கு கணவர் மீதும், அவர் எழுத்தின் மீதும் மிகப் பெரிய பற்று, என்னை தன் கணவனின் (முதல்) சீடனாக ( இறுதிச்’ சீடனும் நானாகத்தான் இருப்பேன், ஆனால் அந்தக் கட்டத்தை அவரது மனைவி இன்னும் அடையவில்லை) அவர் எண்ணுவதால் என் மீதும் கொஞ்சம் கரிசனம் உண்டு.ஆனால் நான் அவர் கணவரின் கதைகளை திருடிய கதை அவருக்குத் தெரிந்தால், என் கதை பெரியவரின் புனைப்பெயராகிவிடும் என்பதில் எனக்குச்’ சந்தேகமில்லை.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்து அறையில் விளக்கை அணைத்துவிட்டு மற்றனைவரும் (மற்றனைவரும் என்பதில் மற்ற அனைவரும் என்பதற்கில்லாத ஒரு கவிநயமிருக்கிறதில்லையா) தூங்க மடிக்கணினியை திறந்து (எதிர்)கவிதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். பத்தேமுக்காலாகி விட்டது. ஹெட்போனை அலைபேசியில் பொருத்தி, அதில் நிறுவியிருந்த ‘ஆல் இந்தியா ரேடியோவின்’ செயலியை இயக்கி ‘ஏ.ஐ.ஆர். தமிழ்’ நிலையத்தை தேர்வு செய்தேன்.(போன ஞாயிறன்று நேயர் விருப்ப நிகழ்ச்சியில் ‘ஐனாவரம் அபர்ணா நகரிலிருந்து இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்கள்’ என்று நாலைந்து பெயர்களை சொல்லி பாடலொன்றை ஒலிபரப்பினார்கள். சிறுவயதிலிருந்தே இந்த இடங்களும், அங்கிருந்து பாடல்களைக் கோரும் நேயர்களும் நிஜமானவர்கள்தானா என்ற சந்தேகம் எனக்குண்டு). யாரோ ஒருவர் கர்நாடக இசைப் பாடலொன்றைப் பாடிக் கொண்டிருந்தார் (நிலைய வித்வான்?). நான் கர்நாடக இசை கற்றுக் கொண்டதைப் பற்றி முன்பே தனிக் கதையாக எழுதிவிட்டதால், அதைப் பற்றி சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை (அந்தக் கதையில்கூட ஒரு விஷயமும் இல்லை என்பது முற்றுப்புள்ளியின் கருத்து. இந்தக் கதை பிரசுரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முந்தைய கதைக்கான லிங்க்கை இந்த இடத்தில் தருமாறு இதழின் ஆசிரியரிடம் கேட்கவேண்டும்). என்னையும், கர்நாடக இசையையும் சேர்த்துச் சொல்வது என்பது ‘ஆக்ஸ்சிமோறான்’ என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதும் என்று நினைக்கிறேன். (ஆங்கில வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிப்பதை பெரிய குற்றமாக – அவை கதையின் போக்கில் வேறு வழியின்றி உபயோகப்படுத்தப்பட்டிருந்தால் – பெரியவர் பார்ப்பதில்லை. பல பத்தாண்டுகளாக தன்னை புதுப்பித்துக் கொண்டே எழுதி வருகிறார் அவர். ஆனால் பிற மொழிச் சொற்களின் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். அவர் சொல்லித்தான் உச்சரிப்புகளுக்கான ‘ஃபோர்வோ’ இணையதளம் குறித்து தெரிய வந்தது, அதிலிருந்து தான் ‘ஆக்ஸ்சிமோறான்’ என்பதற்கான உச்சரிப்பையும் பெற்றேன். இங்கு, நாலு பேர் ஒரே சொல்லை நாலு விதமாக உச்சரிப்பது போதாதென்று ஒரே சொல் நாலு பேர் காதில் நாலு விதமாக ஒலிப்பது நுண்புல ஆய்வுக்குரியது).

பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியை பாடுபவரின் குடும்பமே கூட கேட்டுக்கொண்டிருப்பது கடினம்தான், வித்வானேகூட தூங்கி இருக்கலாம் அல்லது இருளான அறையில் காதருகில் ரேடியோவை வைத்துக் கொண்டோ அல்லது என்னைப் போல் அலைபேசியிலோ கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடலின் புரியாத வரிகளும், பாடுபவரின் குரலும், பக்க வாத்தியக் கலைஞர்களின் கருவிகளின் ஒலியும் (அவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோகூட இந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான் இல்லையா) ஒலித்துக் கொண்டிருக்க, மடிக்கணியின் திரையில் தெரிந்த என் கவிதையின் வரிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். (எழுதுபவரே அவ்வப்போது நேரடியாக வாசகரிடம் பேசுவது, எழுதிக் கொண்டிருப்பதை பற்றி பேசுவது/ ஸெல்ப் ரிப்லெக்ஸ்சிவ் பிக்ஷன் – என்றெல்லாம் இந்தக் கதையை சொல்லலாமா என்று தெரியாவிட்டாலும் எனக்கு அந்த சொற்றொடர் புரிந்த அளவில் அதை இங்கே உபயோகப்படுத்தி இருக்கிறேன் – போல் இந்தக் கதை இருந்தாலும் நெகிழ்ச்சியாக (யாரும் கேட்காத பாட்டைப் பாடும் வித்வான், யாரும் வாசிக்கப் போகாத கவிதையின் வரிகளை எழுதிக் கொண்டிருப்பவன் இருவரும் இணையும் இருளின் ஒரு கணம்) – நவீனத்துவ புனைவு போல் முடிவது – நான் குறிப்பிட்டுள்ள இரு தனியுற்ற மனங்கள் இணையும் இருளின் ஒரு கணம் வாசகருக்கு நெகிழ்ச்சியை தரும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி குறிப்பிடுகிறேன் – எனக்கேகூட வியப்பாகத்தான் இருக்கிறது. (இந்த முடிவுக்கு மட்டும் தனியாக ஒரு பின்குறிப்பு தேவைப்படுகிறது. முடிவை தலைப்போடும் இணைக்கும் என்பதால் அதை தவிர்க்க முடியாது. மனதைத் தொடும் வாக்கியங்கள் அவை. மிகத் தேர்ந்த ஸ்டைலிஸ்ட்டான வில்லியம் காஸ் என்பவர் தன் தொகுப்பொன்றின் முன்னுரையில் எழுதியது. அதன் அழகு கெடாத வகையில் அதை ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்)

oOo

முடிவின் பின்குறிப்பு (தலைப்புக்கும் ஒளிர்வூட்டுவது):

Unlike this preface, then, which pretends to the presence of your eye, these stories emerged from my blank insides to die in another darkness. I willed their existence, but I don’t know why. Except that in some dim way I wanted, myself, to have a soul, a special speech, a style. I wanted to feel responsible where I could bear to be responsible, and to make a sheet of steel from a flimsy page—something that would not soon weary itself out of shape as everything else I had known (I thought) always had,” என்று வில்லியம் காஸ் எழுதுவதை வாசிக்கும் எவருமே எழுத்தின் துயரனுபவத்துக்கு ஒரு கணமேனும் வருந்தாமல் இருக்க முடியாது. இதைத் தொடர்ந்து, “Because I wrote these stories without imagining there would be readers to sustain them, they exist now as if readerless (strange species indeed, like the flat, pigmentless fish of deep seas, or the blind, transparent shrimp of coastal caves), although a reader now and then lets light fall on them from that other, less real world of common life and pleasant ordinary things,” என்று அவரே எழுதும்போது நமக்கெல்லாம் நிழல்களின் நிழல்களின் நிழல்களாய் இருக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பிற பின்குறிப்புகள்:

பின்குறிப்பு 1:

கதையில் அடைப்புக்குறிகளுக்குள் எழுதப்பட்டுள்ளதை அடிக்குறிப்புக்களாகதான் முதலில் நான் எழுத எண்ணி இருந்தேன். நான் பெரிதும் வியக்கும் இலக்கிய ஆளுமைகள் பலர் (குறிப்பாக டேவிட் பாஸ்டர் வாலஸ்) இந்த உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்கள். எனக்கு அடிக்குறிப்புகள் நிறைந்த கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், வாசிப்பை கலைத்துப் போடும் இத்தகைய உத்திகள் மலிந்து விட்டனவோ என்ற சந்தேகம் எழ அதைக் கைவிட்டேன். மேலும் அடைப்புக்குறிகள் மீதும் எனக்கு கொஞ்சம் மோகம் உண்டு. நீண்ட வாக்கியங்கள், ‘-‘ போட்டு எழுதுவது மீதும். பின்குறிப்புக்கள் குறித்த என் அபிப்ராயத்தையும் கதை முடியும்முன் வாசகன் தெரிந்து கொண்டு விடுவான்.

பின்குறிப்பு 2:

எழுத்தாளர்களின் பெயர் உதிர்த்தல், கதையில் உள்ள இலக்கிய உத்திகள் (அவற்றை நான் புரிந்து கொண்ட அளவில்) பற்றிய விவரிப்பு எல்லாம் தேவையற்ற சுயமுன்னிருத்தலாக, ‘உயிரற்ற’ வார்த்தை ஜாலங்களாக (கதையின் உயிர் அல்லது ஆன்மா, இலக்கிய படைப்பில் கிடைக்க வேண்டிய ‘தரிசனம்’, ‘திறப்பு’, ‘ஆன்மீக சாரம்’ போன்ற கருத்தாக்கங்கள் எனக்கு சரியாக பிடிபடுவதில்லை. கருத்தாக்கம் என்ற சொல்லை நான் இங்கு உபயோகிப்பதுகூட பொருத்தமான ஒன்றா என்பதும் தெரியவில்லை. இந்தக் கதையில் எந்த ‘அறமும்’ இல்லை (நான் நினைக்கிற அறமும் நீங்கள் நினைக்கும் அறமும் ஒன்றெனில், இல்லாவிட்டால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது இல்லையா) என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்), காலாவதியாகிவிட்ட உத்திகளாக வாசகருக்கு (அதாவது இந்தக் கதை பிரசுரிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டால்) தோன்றலாம். அது நியாயமே, மேலும் கதை பொதுவெளிக்கு வந்தபின் ஆசிரியனுக்கு அதன் மேல் எந்த உரிமையும் இல்லை அல்லவா. என்னளவில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் (எழுத்தாளன் தன் எழுத்து பற்றி பேசக் கூடாது, வாசகன் அதலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறானோ அதுதான் அவனுக்கான கதை -அவரவர் கைமணல்- என்பதெல்லாம் சரிதான் என்றாலும்கூட இந்த ஒரு முறை மட்டும் தன்னிலை விளக்கமொன்று தரலாம் என்று நினைக்கிறேன்).

என்னுடைய முந்தைய இரண்டு கதைகளுக்கு இந்தக் கதையில் இணைப்பு கொடுத்திருப்பதால் இதை ‘ஹைப்பர்-டெக்ஸ்ட்’ கதையென்று சொல்ல மாட்டேன், அவற்றை மீண்டும் வாசகர்கள் முன் வைக்க கிடைத்த வாய்ப்பை உபயோகித்துக் கொண்டேன் அவ்வளவே.

இந்தக் கதையில் எனக்கு தோன்றிய (எதிர்)கவிதை வரிகள், அவை குறித்து பெரியவருடன் நான் உரையாடியது, அந்தப் பேச்சு தொடர்பான என் எண்ணங்கள் அனைத்தையும் அவை நிகழ்ந்தபடியே எந்த கூடுதலோ, குறையோ இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்த விதத்தில் இது எந்த மிகையும் இல்லாத நேரடியான யதார்த்தக் கதைதான், படிக்கும்போது வாசகனுக்கு வேறு மாதிரி தோன்றக்கூடும் அவ்வளவே (இங்கு, புனைவு வாழ்க்கையை விட விசித்திரமானது என்று மாற்றிச் சொல்லலாமா என்று தோன்றுகிறது)

பின்குறிப்பு 3:

கதை எழுதியதைப் பற்றி விளக்க ஆரம்பித்தபின், கதை குறித்த (சுய) விமரிசனத்தையும் பின்குறிப்பாக சேர்த்து விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். பிரசுரம் ஆகுமா ஆகாதா என்றே சொல்ல முடியாத கதைக்கு இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழ அந்த எண்ணத்தை விலக்கினேன். பிரசுரம் ஆகாவிட்டாலும்கூட ஒன்றும் பிரச்சனையில்லை. இதை முற்றுப்புள்ளியிடம் தந்தால் ‘ஆகச் சிறந்த’ விமரிசனத்தை அவர் தருவார். ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனம்’ என்று அதை இன்னொரு (யதார்த்த) கதையாகக்கூட எழுதி விடலாம். மற்றொரு பாத்திரத்தை சேர்த்தால் கதையை ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனக் கூட்டமாக்கி’ விடலாம்.

பின்குறிப்பு 4:

இரு சொற்றொடர்களை நடுவில் ‘அல்லது’ வைத்து இணைத்து கதையின் தலைப்பாக வருமாறு வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதாவது ‘மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்’, ‘கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள்’ போன்ற தலைப்புக்கள். ‘X அல்லது Y’ என்று வைத்துக் கொண்டால் வாசகன் இரண்டில் தனக்கேற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாணி கதைகளுக்கான இப்படி தலைப்பு வைப்பது வழக்கமாகவும் (தமிழில்) உள்ளது. ஆனால் ‘X மற்றும் ‘Y’ஆக என்ன வார்த்தைகளைப் போடுவது என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. ‘ஒரு பின் மாலை நேர இலக்கிய உரையாடல் அல்லது விழித்திருப்பவனின் இரவு நேர இலக்கிய விசாரம்’ என்று ஒரு எண்ணம். யதார்த்தக் கதை என்பதால் முதல் பகுதி பொருத்தமாக இருக்கும் (என் முந்தைய கதையொன்றின் தலைப்பைதான் இப்படி மாற்றி இருக்கிறேன்), இரண்டாவது பகுதி இலக்கியத் தன்மையுடன் கவித்துவமாக உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் இதுவும் எனக்கு முழு உவப்பாக இல்லை என்பதால் இதழ் ஆசிரியரிடமே விட்டு விடுகிறேன். பிரசுரமாகும்போது/ பிரசுரமானால் வாசகன் படிக்கும் தலைப்பு அவர் வைத்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். (கதையின் தலைப்பு மட்டுமல்ல, பாத்திரங்களுக்கான பெயரை வைப்பதிலும்கூட எனக்கு குழப்பமே ஏற்படுகிறது, எனவே ‘நான்’, ‘இவன்’ ‘அவள்’ என்றுதான் பெரும்பாலும் எழுதி வந்திருக்கிறேன். கதைக்கான கருவையும், நிகழ்வுகளையும், அவற்றை விவரிக்கும் வார்த்தைகளை, வாக்கியங்களைத் தொகுப்பதே கடினமாக இருக்கும் போது பெயர்களுக்கு நேரம் செலவிடுவது எனக்கு விரயமாகவே தோன்றுகிறது. மேலும் நாளை என்னை யாரேனும் நேர்காணல் காணும் அல்லது என் புனைவுலகை உருவாக்கும் முறை பற்றி நானே விவரிக்கும் சூழலோ உருவானால், பாத்திரங்களை ‘அவன்’, ‘நான்’ என்று அழைப்பது வாசகன் தன்னை எளிதாக, உடனடியாக அவர்களுடன் உணர்வுரீதியாக பொருத்திக் கொள்ள உதவக்கூடும், ‘அவன்’ என்பது நவீன மனிதனின் பிரதிநிதி, அவனுடைய தனிமையின் குறியீடு என்ற ரீதியில் நான் ஏதேனும் சொன்னால் அது எடுபடவும் கூடும்)

பின்குறிப்பு 5:

கதையில், நிறைய இடங்களில் ‘இல்லையா’, ‘அல்லவா’, ‘தோன்றுகிறது’ போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருகின்றன, இதை தவிர்த்து அதே அர்த்தத்தில் பிற வார்த்தைகளையும் உபயோகித்திருக்கலாம். ‘அங்கிள்’ என்று அழைக்கப்படும் வயதாகிவிட்டாலும், எழுத்துப் பயணத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் பாலகன்தான் என்பதால், காலப்போக்கில் என் எழுத்தில் முதிர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

பொதுவாக கலைச்சொற்களை அவற்றின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு பொருத்தமாக உபயோகிக்க வேண்டும் என்றுதான் முயல்கிறேன், ஆனால் என் புரிதலின் எல்லைகளை விரிவாக்குவது போராட்டமாகவே உள்ளது.

பின்குறிப்பு 6:

இதுவே கதையின் இறுதி வரைவாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘வாசகன்’ என்றே எல்லா இடத்திலும் குறிப்பிட்டிருப்பதையும் இப்போதுதான் கவனிக்கிறேன் என்பதால் இனி மாற்ற நேரமில்லை. ‘ரீடர்’ என்று ஆங்கிலத்தில் பொதுவாக உள்ள சொல்லின் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அவமதிக்கும், விலக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை எனக்கு. இருப்பினும் என்னையறியாமல் இப்படி நிகழ்ந்ததற்கு மன்னிப்பும் கோருகிறேன். (உண்மையில் எனக்கு பெண் வாசகியர் மீது ஒரு தனி பரிவுண்டு, அவர்களே என் கதையின் மீதான சிறந்த விமரிசனம் நிகழ்த்துவதாக நண்பர் ஒருவர் கூறுகிறார்).

பின்குறிப்பு 7:

இந்த வரைவை முற்றுப்புள்ளிக்கு அனுப்பப் போவதில்லை, ‘லெட் ஸ்லீபிங் டாக்ஸ் லை’ (சொற்றொடர்களை என் வாழ்க்கையில் பொருத்தும் வாய்ப்புக்களை எதிர்நோக்கி இருப்பது பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா). என் புனைப்பெயரில் அனுப்புவதற்கு பதில், முற்றுப்புள்ளி என்ற பெயரில் அனுப்பலாம். அவர் கதைகளைத் திருடி குற்றம் செய்தவன் நான்தான், ‘ஆதி குற்றம்’ (சொற்றொடர்களை பொருத்துவதற்கு இது ‘ஆகச்சிறந்த’ கதையாக உள்ளது). ஆனால் தண்டனையை நான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமா என்ன, குற்றத்தையும் தண்டனையையும் ஒற்றைப்படையாக ஏன் அணுக வேண்டும், நாம் இப்போது வாழ்வது ‘போஸ்ட்-ட்ரூத்’ உலகில். (‘போஸ்ட்-ட்ரூத்’ என்ற சொல் பெரும்பாலான கட்டுரைகளில் – அது எந்த துறையை பற்றியதாக இருந்தாலும் – இடம் பெற்று வரும் சூழலில் அவ்வார்த்தையை புனைவொன்றில், அதுவும் அதன் முடிவில் முத்தாய்ப்பாக உபயோகித்திருப்பது உற்சாகமளிக்கிறது).