சிறுகதை

அவர்களின் பெயர்களை அவள் திரும்பப் பெறுகிறாள் – அர்சுய்லா லெ ஃக்வின்

 

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆகி

தத்தம் பெயர்களை ஒப்புக்கொண்டு எப்படி அவர்கள் இத்தனை காலம் மெத்தனமாக இருந்தார்களோ, அதே மெத்தனத்துடன் அவர்களில் பெரும்பாலானோர் பெயரற்றிருப்பதையும் ஏற்றுக்கொண்டனர். திமிங்கலங்கள், ஓங்கில்கள், கடல்நாய்கள் மற்றும் நீர்நாய்கள் அவர்களுக்கே உரிய நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் ஒப்புதலளித்து தமது தனிமத்தினுள் சறுக்கிச் செல்வதுபோல் பெயரற்ற நிலைக்குள் செல்வதை ஏற்றுக்கொண்டனர். எனினும் கவரிமாக்களின் ஒரு பிரிவினர் ஆட்சேபித்தனர். “கவரிமா” என்பது சரியான ஒலிப்புமுறை எனவும் தங்கள் இருப்பை அறிந்திருந்த எவரும் தங்களை அவ்வாறே அழைப்பதாகவும் அவர்கள் கூறினர். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வெவ்வேறு பெயர்களால் பாபேலின் காலந்தொட்டு அழைக்கப்பட்ட, நீக்கமற நிறைந்துள்ள உயிரினங்களான எலிகளையும் தெள்ளுகளையும் போலல்லாது கவரிமாக்கள் மெய்யாகவே தங்களுக்கு ஒரு பெயர் உண்டென்று கூறிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறினர். கோடை முழுவதும் இந்த விடயத்தை விவாதித்தனர். மற்றவர்களுக்கு இந்த பெயர் பயனுள்ளதாயிருக்கலாம் ஆயினும் கவரிமாக்களின் பார்வைக் கோணத்திலிருந்து காண்கையில் இது மிகவும் தேவையற்றதாகையால் இதை அவர்கள் ஒருபோதும் உச்சரித்ததேயில்லை ஆதலால் இதை கைவிட்டு விடலாமென்று மன்றத்தின் முதிய பெண்கள் இறுதியில் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் தர்க்கத்தை இந்த கோணத்திலிருந்து தங்கள் காளைகளிடம் முன்வைத்தபோது முழு கருத்தொருமைப்பாடு கடுமையாக தொடங்கிய முன்பருவ பனிப்புயல்களால் மட்டுமே காலதாமதமாயிற்று. வெதுவெதுப்பு தொடங்கியவுடன், அவர்களின் உடன்பாடு எட்டப்பட்டு “கவரிமா” என்ற பெயரிடல் பெயரளித்தவரிடம் திருப்பப் பட்டது.

குதிரைகளை அவர்களின் சொற்களஞ்சியத்திலிருந்தே டீன் ஸ்விஃப்ட் பெயரிட முயற்சித்து அதிலவர் தோல்வியுற்ற பிறகு, இவ்வீட்டு விலங்குகளில் வெகு சிலருக்கே எவர் தம்மை எங்ஙனம் அழைக்கின்றனர் என்பதைப் பற்றி அக்கறை இருந்தது. மாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் வெள்ளாடுகள், இவர்களோடிணைந்து கோழிகள், வாத்துக்கள் மற்றும் வான்கோழிகள் என எல்லோரும் தமது உரிமையாளர் என்று அவர்கள் எவரெவரை கருதினார்களோ அவர்களிடம் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் திருப்பியளிக்க உடன்பட்டனர்.

சிற்சில பிரச்சினைகள் செல்லப்பிராணிகள் விடயத்தில் தோன்றியது. எதிர்பார்த்தவண்ணம், எல்லா பூனைகளும் தமக்கு சுயமாக சூட்டப்பட்ட, உச்சரிக்கப்படாத, வருணிக்கவியலாத தனிப்பட்ட பெயர்கள் தவிர வேறெந்தப் பெயரும் இருந்ததை உறுதியுடன் மறுத்தனர். எலியட் என்ற கவி கூறியதுபோல் அவர்கள் நீண்ட நேரமெடுத்து சிந்தித்த பெயர்களிவை—ஆயினும் எந்தவொரு சிந்தனையாளரும் தாங்கள் சிந்திப்பது தமது பெயர்களைத்தான் என்று ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை, மேலும் அவர்களால் உற்று நோக்கப்பட்ட பொருள் உண்மையில் அந்த முழுநிறைவான, அல்லது பிளேட்டோனிய, சுண்டெலியாக இருக்கலாமென்று பார்வையாளர்களில் சிலர் சந்தேகித்துள்ளனர். எது எவ்வாறாயினும் அது இப்போது முக்கியத்துவமற்றது. நாய்களுடன், மேலும் சில கிளிகள், காதற்பறவைகள், அண்டங்காக்கைகள் மற்றும் மைனாக்களுடனும், சிரமம் எழுந்தது. இந்த வாய்மொழி திறன்மிக்க நபர்கள் தமது பெயர்கள் தமக்கு முக்கியமானவை என்று வலியுறுத்தினர், மேலும் அவற்றை விட்டகல முற்றிலும் மறுத்துவிட்டனர். ஆனாலும் இது உண்மையில் தனிப்பட்ட தெரிவு குறித்த பிரச்சினையே, எவரேனும் ரோவர், ஃப்ரூஃப்ரூ, காகா கிகீ அல்லது குகூஎன்றுகூட தனிப்பட்ட உணர்வினடிப்படையில் அழைக்கப்பட விரும்பினால் அவர்கள் அவ்வாறு தாராளமாக அழைக்கப்படலாம் என்று புரிந்துகொண்ட தருணத்தில், ”பூடுல்”, ”கிளி”, “நாய்”, ”பறவை” போன்ற இனம் சார்ந்த சிற்றெழுத்து (அல்லது, ஜெர்மானிய உயிரினங்கள் சம்பந்தமாக, பேரெழுத்து) பெயரிடல்களையும், இருநூறாண்டுகளாக அவர்களை வாலில் கட்டப்பட்ட தகரடப்பாக்களைப்போல் பின் தொடர்ந்த லின்னேயசின் அனைத்து அடைகளையும் விட்டகல அவர்களில் ஒருவரேனும் சிறிதும் ஆட்சேபிக்கவில்லை.

பூச்சிகள் அகன்ற மேகங்களில் நிலையற்ற அசைகளின் திரள்களில் சலசலத்தும் கொட்டியும் ரீங்கரித்தும் படபடத்தும் ஊர்ந்தும் துளையிட்டும் தங்கள் பெயர்களை விட்டகன்றனர்.

கடல் மீன்களை பொருத்தமட்டில், அவர்களின் பெயர்கள் அவர்களிடமிருந்து சமுத்திரங்களெங்கும் கணவாய் மீனின் மங்கலான கரிய மை போல அமைதியாக பரவிச் சென்று சுவடே தெரியாமல் நீரோட்டத்தில் விலகிச் சென்றன.

…………………………..

ஒருவரும் இப்போது பெயரை திரும்பப் பெறுவதற்கு மிஞ்சவில்லை, எனினும் அவர்களில் யாரேனும் நீந்துவதை, பறப்பதை, தவ்வுவதை, பாதையில் குறுக்கேயோ என் மேலேயோ தவழ்வதை, இரவில் என்னை பின்தொடர்வதை அல்லது பகலில் சற்று நேரம் என்னுடன் வருவதை நான் காண்கையில், எத்துணை நெருக்கமாக அவர்களை நான் உணர்ந்தேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் அவர்களின் பெயர்கள் ஒரு பெரிய தடைபோல் நின்ற பொழுதில் எனக்கு தோன்றியதைக் காட்டிலும், இப்போது அவர்களை பற்றிய என் அச்சமும் என்னை பற்றிய அவர்களின் அச்சமும் ஒரே அச்சமாகும் அளவுக்கு மிக மிக நெருக்கமாக, மிகவும் அருகிலிருந்தனர். மேலும் நம்மில் பலர் உணர்ந்த கவர்ச்சி, அதாவது ஒருவரை இன்னொருவர் வெதுவெதுப்பாக வைத்திருப்பதற்கான, ஒருவரின் வாசனையை இன்னொருவர் முகர்வதற்கான, ஒருவர் இன்னொருவரின் குருதியை அல்லது சதையை சுவைப்பதற்கான, ஒருவரின் செதில்களை, தோலை, இறகுகளை அல்லது மென்மயிர்களை இன்னொருவர் தொட்டுணர்வதற்கான, உரசிக்கொள்வதற்கான அல்லது வருடுவதற்கான இச்சை—அந்தக் கவர்ச்சி இப்போது அச்சத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது, வேடரை இரையிலிருந்தும் உண்ணுபவரை உணவிலிருந்தும் பிரித்தறிய இயலவில்லை.

இதுவே நான் சற்றேறக்குறைய முன்நோக்கிய விளைவு. நான் எதிர்பார்த்ததைவிட இது சற்று ஆற்றல்மிக்கதாக இருந்தது, ஆனாலும் என்னால் இப்போது என் மனசாட்சிக்கு துரோகமிழைக்காமல் எனக்காக ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. நான் தயக்கமின்றி பதட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, ஆதாமிடம் சென்று, ”நீரும் உம் தந்தையும் இதை எனக்கு இரவல் கொடுத்தீர்கள்; உண்மையில், எனக்கு அதை அளித்தீர்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் அது சரிபட்டு வருவதாகத் தெரியவில்லை. ஆனாலும், உண்மையாகவே அது பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி!” என்று கூறினேன்.

ஒரு பரிசை எரிச்சல் தொனிக்காமலோ நன்றியற்ற தன்மை வெளிப்படாமலோ திருப்பிக் கொடுப்பதென்பது கடினம், மேலும் என்னைப் பற்றி அந்த மாதிரியான ஒவ்வாதவொரு மனப்பதிவை ஏற்படுத்திவிட்டு நான் அவரை பிரிந்து செல்ல விரும்பவில்லை. நடந்ததென்னவோ, அவர் கவனமில்லாமல், “அதை அங்கே வைத்துவிடு, சரியா?” என்று மட்டும் கூறிவிட்டு, அவர் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை மீண்டும் செய்யத் தொடங்கிவிட்டார்.

நான் இந்த காரியத்தை ஏன் செயல்படுத்தினேன் என்பதற்கு உரையாடல் எங்களிடையே எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு காரணம், ஆனால் எப்படி இருந்தபோதிலும் நான் சற்று கைவிடப்பட்டதாகவே உணர்ந்தேன். எனது தீர்மானத்தை தக்க வைத்துக்கொள்ள நான் ஆயத்தமாகவே இருந்தேன். மேலும் ஒருவேளை இதை கவனித்தபின் அவர் வருத்தப்படலாம், உரையாட முன்வரலாம் என்று எண்ணியிருந்தேன். சில பொருட்களை இங்குமங்கும் நகர்த்தி வைப்பதும், எதையோ செய்வதுமாய் பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன், ஆனாலும் அவர் பிற எதையும் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை தொடர்ந்து செய்தவண்ணமிருந்தார். இறுதியாக, “நன்று, அன்பே, விடைபெறுகிறேன். தோட்டத்தின் சாவி திரும்பக் கிடைத்தாலும் கிடைக்குமென்று நம்புகிறேன்,” என்று கூறினேன்.

பாகங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் திரும்பிப் பார்க்காமல், “சரி, அன்பே, நல்லது. இரவு சாப்பாடு எப்போது?” என்றார்.

”உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை,” என்றேன் நான். ”இப்போது நான் போகிறேன். அவை…” என்று சற்று தயங்கி நின்றுவிட்டு, பின் இறுதியாக, “அவர்களுடன், தெரியுமல்லவா,” என்று கூறிவிட்டு வெளியே சென்றேன். என் தரப்பை விளக்கிச் சொல்வதென்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்திருக்குமென்பதை உண்மையில் அக்கணத்தில்தான் நான் உணர்ந்தேன். எல்லாவற்றையும் வழங்கப்பட்டதாக எடுத்துக்கொண்டு என்னால் முன்னைப்போல அரட்டையடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குளிர்பருவ பிரகாசத்தை எதிர்நோக்கி நிற்கும் கரிய கிளைகளையுடைய நிச்சலனமான நெடிய நாட்டியக்காரர்களினூடாக, வீட்டிலிருந்து வெளிச்செல்லும் பாதையில் செல்கையில் நான் எடுத்து வைத்த காலடிகள் போல என் சொற்கள் இப்போது மெதுவானதாக, புதிதானதாக, தனியானதாக, தீர்மானமற்றதாக இருந்தாக வேண்டும்.

…………………………..

(1985ல் New Yorker இதழில் முதலில் பிரசுரமான She Unnames Them குறுங்கதையின் அனுமதிபெறப்படாத, இலாப நோக்கற்ற தமிழாக்கம்.

Grandmaster of Science Fiction பட்டம் வழங்கப்பெற்றுள்ள அர்சுய்லா லெ ஃக்வின் The Dispossessed, The Word for World is Forest, The Left Hand of Darkness, The Lathe of Heaven மற்றும் பிற புனைவுகளில்—மானுடவியல், மனவியல், சமூகவியல், சூழல்வாதம், பாலிமை, சமயம் மற்றும் தாவோயிச-அரசின்மைவாதம் சார்ந்த பரிசோதனைகளினூடாக—சாகசக் கதைகளின் ஆதிக்கத்தினுள் சிக்குண்டிருந்த ஊகப்புனைவு வகைமையை கட்டவிழ்த்து வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றவர். The Birthday of the World and Other Stories மற்றும் Four Ways to Forgiveness இவருடைய சில சிறுகதை தொகுப்புகள்)

நோக்கிரி – தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

கணபதி தம்பி புரண்டு படுத்தார்.

‘கா’ என்று சத்தம். முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது அவருக்கு. வீட்டின் பின்புறம் பக்கத்து வீட்டு வேப்பமரம் தழைய இருக்கிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காகங்கள் சில. ‘கா’ ‘கா’ என வந்து விடும்.‘கா கா, கர்’ என்று கரையும் சத்தம் விட்டு விட்டு கேட்கும். எழுந்து மாரி பிஸ்கட்களை சின்ன சின்ன வில்லைகளாக்கி வீட்டின் மதில் மேல் வைப்பார்.

எதிர் வீட்டு மாமா ஓரக்கண்ணால் அவர் செயல்களையும் பார்த்துக் கொண்டு மாடுகளை அவிழ்த்துச் செல்வார். ஊரில் இரண்டு கணபதி உண்டு. இவர் இரண்டாவது கணபதி. அதனால் இவரது பெயர் கணபதி தம்பி. அதுவும் சின்னப் பிள்ளைகள் கூப்பிடும்போது இவரும் சின்னப் பிள்ளைகள் போலவே ஆகி அவர்களோடு அன்பாகப் பேசுவார்.

காக்கைகள் ஒரே சத்தம். அவைகள் மொழியில் கூவி அழைப்பதும் பிறகு தலையைச் சாய்த்து பார்ப்பதுமாக இருந்தது. அதில் ஒரு குஞ்சு தயங்கித் தயங்கி வந்தது. மற்ற காக்கைகளைக் கண்டு அதற்கு பயம். புத்திசாலி அது. டப்பேன்று கவ்விக்கொண்டு பக்கத்தில் இருக்கும் வேப்பங்கிளையில் வைத்து சிறிது சிறிதாக கொத்தித் திங்க ஆரம்பித்தது. அதன் மூக்கையொட்டிய தோல் சிவந்து இருந்தது எல்லாம் கொஞ்சம் நேரம்தான். காகம் கா கா எனப் பறந்து விட்டதும் பிறகு காட்சிகள் குளத்தில் காற்றிலாடும் அலைகள் அடங்கியது போல் அடங்கி விடும் கணபதிக்கு. மனம் பேயாட்டம் ஆட ஆரம்பிக்கும். எல்லாம் இந்த வேலை இல்லாத மூன்று மாதமாகதான்.

மனைவியும் பிள்ளைகளும் அவர் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் அவருக்கு சாதாரணமாக இருக்கத் தெரியவில்லை. எப்போதும் கோவம், ஒரு எரிச்சல். பிள்ளைகள் கோழியின் இறக்கைக்குள் பதுங்கி இருக்கும் குஞ்சுகள் போல் அவள் குரலுக்கு மட்டுமே ஓடி நடக்கின்றன. ஏக்கமாக இருக்கிறது அவருக்கு. வளர்ந்து விட்டார்கள். கணபதி தம்பி கூப்பிடுவதைச் சரியாக காதில் வாங்காமல் மெதுவாக பதில் சொல்வது, எங்காவது வேடிக்கை பார்த்துக் கொண்டு, இல்லை, ஏதாவது படிப்பது போல் பாவ்லா செய்கிறார்கள். இல்லை, அவர்கள் சாதாரணமாக இருப்பதுகூட அவருக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

சொச்ச சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்து இருக்கலாம். இனி யோசித்து ஒன்றும் ஆவப்போவதில்லை. நடுவாந்திர வயதில் வேலையைப் பற்றியே சதா சிந்தனை. அப்படச் செய்து இருக்கலாம் இப்படிச் செய்து இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது அவருக்கு. நேரம் போகாமல் ஜியோ உதவியுடன், படிப்பது, நோக்கிரியில் வேலை தேடுவது என்று இருப்பார். வேலை தேடுவது என்றால் சும்மா இல்லை. அவருக்கு நன்கு தெரிந்த அத்தனை வகையிலும் உள்நாடு வெளிநாடு என்று முயற்சித்து கொண்டு இருப்பார். ஒரே வெறுப்பு.

அன்று அப்படியே இடையில் யாஹூ நோட்டிபிகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு நேர்முக தேர்வு வந்திருந்தது அவருக்கு. ஹைதராபாத் கூப்பிட்டிருந்தனர். அவர்கள் கம்பனிக்கு புரோபைல் மேட்சாகவில்லை பிறகு எதற்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என அவருக்கு குழப்பமாக இருந்தது அதுவும் ஒரு நாள் பொழுதில் ஹைதராபாத் செல்ல வேண்டும். விருப்பமில்லை. பெருமையாக மனைவியிடம், ஒரு நேர்முக தேர்வு ஹைதராபாத்தில், என்றதுதான் தாமதம், ‘எப்போது?’ என்று கேட்டுவிட்டு, ‘உடன் கிளம்புங்கள்’, என்று சொல்லிவிட்டாள்.

இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை. பின் விளைவுகள் மோசமாக ஞாபகம் வந்தது அவருக்கு. போய்த்தான் ஆக வேண்டும். பிறகு அவள் ஏதேனும் சாதாரணமாக சொன்னாலும் புத்தி மரமேறிவிடும், குத்தி காட்டுவதாக எண்ணம் ஏற்படும். மொபைலில் ஹாட் ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப்பில் இணைத்து குரோமில் டிக்கெட் தேட ஆரம்பித்தார். ரயில் டிக்கெட் ஒன்றும் கிடைக்கவில்லை. வெயிட்டிங் லிஸ்ட் நூறைத் தாண்டி காண்பித்தது. விமானம் இருக்கா எனப் பார்த்தார். காலையில் இருந்தது, கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். ஆம்னி பஸ் இருக்கா எனப் பார்த்தார். கட்டுப்படியாகும் செலவில் இருந்தது. ஆம்னியில் கோயம்பேடுவிலிருந்து ஹைதராபாத்திற்கு இரவு 8 மணி வண்டிக்கு புக் செய்து விட்டார். .பரபர என மனம் கணக்கு போட, ஷோல்டர் பேகில் வேண்டியவைகளை எடுத்து வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது மதியம் 1 மணி.

பஸ் நிறுத்ததில் நேரம் கடந்து கொண்டு இருந்தது. சென்னை செல்லும் அரசு பேருந்து வந்ததும் நிறுத்தி பாண்டி டிக்கெட் எடுத்து கொண்டார். பஸ் காலியாகதான் இருந்தது. வழியில் எங்கும் நிற்காமல் பின் மதியம் 2.40 கடலூர் வந்திருக்கிறது, தாராளமாக போதுமான நேரம் இருக்கிறது, என்று நினைத்தார். பாண்டி வரும்போது 3.30. இந்திராகாந்தி நிறுத்தத்தில் இறங்கி வேறு பஸ் மாறலாமா என்று யோசித்தவர், இறங்கவில்லை. பாண்டி பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி வேறு பஸ் முயற்சித்தார். ஏ .சி வண்டி நிரம்பி விட்டது. அடுத்த அடுத்த வண்டிகளும் நிரம்பி நின்றன. இனி நின்றால் சரி வராது என வந்த வண்டியிலேயே ஓடி ஏறிக் கொண்டார்.

கண்டக்டரிடம், ‘சார் எத்தனை மணிக்கு கோயேம்பேடு போவும்?” எனக் கேட்டார்.

7.15 என்றதும் டிக்கெட் வாங்கி அமர்ந்தார். பத்து வருட பழைய பஸ். சீட் எல்லாம் நெட்டுக் குத்தலாக இருந்தது. கண்டக்டர் ஒவ்வொரு நிறுத்தமாக சென்னை, பெருங்களத்தூர், மருவத்தூர், திண்டிவனம் என்று இறங்கி வந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஐன்னலோர காற்று முகத்தில் படவும், அசதி, உறங்கி விட்டார். ஒரு நினைவும் இல்லை அவருக்கு. அப்புறம் கசகசப்பில் விழிப்பு வந்தபோது பஸ் திண்டிவனத்தில் நின்று கொண்டு இருந்தது. இருந்த கொஞ்சம் பேரும் இறங்கி விட்டனர். கண்டக்டர் மருவத்தூர், செங்கல்பட்டு எனக் கூப்பிட ஆரம்பித்தார்.

ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டிய வெள்ளரிப் பிஞ்சுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், வெவித்த நிலக்கடலை 10 ரூபாய், என வாங்கிக் கொள்ள சொன்னார்கள். ஐம்பதை நெருங்க இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. வயதுக்கு உரிய எல்லா வியாதியோடும் அமர்ந்திருந்த அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்டனர். இப்போது யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே, ஏழைகள் இப்படியா கஷ்டப்படணும், மழை வந்தால் வேறு வேலைக்கு போவார்கள், என்று நினைத்தார் கணபதி தம்பி. பாவம் வேர்வையில் வாடி வதங்கிப்போய் போய் ஆண்கள் தலையில் தொப்பியோடும் பெண்கள் வெறும் தலையோடும் கையில் இருப்பதை வரும் பஸ்கள் நிற்கும்போது ஓடி ஓடி வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

வெய்யில் மிகக் கடுமையாக இருந்தது. யாராவது வாங்க மாட்டாங்களா எனத் தோன்றியபோது, பஸ் வழிச் சீட்டுகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

எல்லோருக்கும் அதிக கஷ்டமில்லாமல் நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இப்படியா கஷ்டம் கொடுப்பார். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் வழியில் பார்த்து விட்டால், ஏன் வேலைக்கு போகவில்லையா, என்று கணபதி தம்பியை பார்த்து கத்தியைச் சொருகி எடுக்கிறார்கள். அவர் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார், எங்குமே வேலை இல்லை. சுதாரிப்பதற்குள் அடுத்த கேள்வி, உடம்பு சரியில்லையா, என்று. ஆத்திரம் வந்தது. ஒன்றும் நினைக்க வேண்டாம் என எதிரில் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் மணி பார்ப்பதுமாக இருந்தார். காரணம் இல்லாமல் பஸ்ஸின் வேகம் குறைவதும் பிறகு கூடிச் செல்வதுமாக இருந்தது. கூடுவாஞ்சேரி வரும்போது 6 மணி. அவ்வளவு டிராபிக் ஐாம். டிரைவரிடம் தயங்கிக் கொண்டு அவரது நிலையை, அதாவது ஹைதராபாத் வண்டி 8 மணிக்கு, என்று சொன்னார்.

“சார் முயற்சிக்கிறேன். எனக்கு 7.25 க்கு டிரிப் திரும்பவும். இங்கே பாருங்க ஒரு ஆள் போவதற்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். இவர்களால்தான் இந்த மாதிரி நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனை பஸ் விட்டு என்ன பிரயோசனம்? சார், நீங்க ஒன்னு செய்யுங்க. பதட்டப்படாம ஆம்னிகாரனுக்கு போன் போடுங்க. 10 மணி வரைக்கும் சீட் ஏத்துவானுங்க, ரோகினி தியேட்டர்ட்ட,” என்றார். டிரைவரின் நிதானம் கலந்து ஓட்டும் லாகவம் புன்னகையுடன் அந்த பண்பு அபூர்வமாக தெரிந்தது

ஆம்னி ஆபீஸ்க்கு கணபதி தம்பி போன் செய்தார். ஆம்னிகாரனின் போன் தொடர்ந்து என்கேஜூடுவாகவே இருந்தது. ஒன்றும் செய்வதற்கு இல்லை. சாலை முழுவதும் விதவிதமான கார்கள், மணல் லாரிகள், பஸ்கள் நின்று கொண்டு இருந்தன. வண்டி எடுத்து திரும்ப நிற்கும்போது எல்லாம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு கணபதி தம்பி தவிப்பதைப் பார்த்த டிரைவர் முடிந்த அளவு விரட்டியும் ஹாரன் அடித்துக் கொண்டும் ஓட்டி வந்தார். அங்கிருந்து கோயம்பேடு வருவதற்குள் 8 மணி ஆகி விட்டது. இடையில் எதிர்பார்த்த ஆம்னிகாரனின் போன் வந்தது கணபதி தம்பிக்கு. தனது நிலையைச் சொல்லி ரோகினி தியேட்டரில் இறங்கி கொண்டு டிரைவருக்கு, நன்றி, நன்றி, சார், என தன்னையறியாமல் இரண்டாவது முறையும் சொன்னார்.

ஹைதராபாத் செல்வதற்கான பிக்கப் பஸ் 9 மணிக்குதான் வந்தது. ஏறியதும் சிறிது நிம்மதி அவருக்கு அருகில் இருந்தவரிடம் சினேகமாக புன்னகைத்தார்.

நீங்க ஹைதராபாத் தான, என்று இந்தியில் கேட்டார். ஆமாம், என்றதும் “நான் முதல் முறையாக ஹைதராபாத் செல்கிறேன் எனக்கு தெலுங்கு தெரியாது ஒரு நேர்முக தேர்வு இருக்கிறது நீங்கள் கொஞ்சம் இந்த முகவரியை பாருங்கள்- பாலநகர், இன்டஸ்ரியல் எஸ்டேட், ஹைதராபாத். இந்த இடம் வந்ததும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்,” என்றார். வாங்கிப் பார்த்த அவர், நான் இதற்கு முன்பே இறங்கி விடுவேன், என்றதும், பக்கத்தில் இருந்தவர், நான் அந்த இடத்தைத் தாண்டிதான் போகிறேன். கவலைப்பட வேண்டாம், சொல்கிறேன் என்றார். கணபதி தம்பி அவருக்கும் ஒரு வணக்கம் வைத்தார் நன்றியுடன்.

ரெட்கில்ஸில் வேறு பஸ்ஸில் மாற்றி விட்டார்கள். ஏசி வால்வோ சிலிப்பர் போர்த்திக் கொள்ள பிளான்கேட் என நவீனமாக இருந்தது. ஹைதராபாத் காரருக்கு இருக்கை மிகப் பின்னால் போய் விட்டது. பஸ்ஸில் சவுண்ட் அதிகமாக படத்தைப் போட்டு விட்டனர். ஒரே தொல்லை. தெலுங்கு சினிமா. மனம் ஒன்றி பார்க்க முடியவில்லை அவருக்கு எல்லாம் அடிதடி படம் இரைச்சல் ஏசி குளிருக்கு பிளாங்கேட்டால் காதை மறைத்து போர்த்தி கொண்டார் .இந்த வேலை கிடைத்தால் அடுத்த முறை விமானத்தில்தான் செல்ல வேண்டும் கற்பனையில் ஆழ்ந்தார்
எப்போது உறங்கினார் என தெரியவில்லை

சத்தம் கேட்டு அவருக்கு விழிப்பு வந்த போது காலை 5மணி ஹைதராபாத் சிட்டி 100 கி மி என போர்டில் தெரிந்தது இன்னும் 2 மணி நேரத்தில் வந்து விடும் நல்ல தூக்கம் ஆதலால் புத்துணர்ச்சியாக நேர்முகத்தேர்வு எப்படி இருக்கும் ஒன்றும் அதற்காக தயாராகவில்லையே என்று தனது தற்போதைய ரெஸ்யுமை மனக்கண்ணில் கொண்டு வந்தார். செய்த புராஜக்ட் வேலையெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு கொண்டு வந்து வேலைகளை நினைவுபடுத்திக்கொண்டார். அவற்றில் மிகப்பெரிய வேலைகள், நடுவாந்திர வேலைகள், சிறிய வேலைகள் என வகைப்படுத்தி கொண்டு வந்து கேள்விகள் எப்படி இருக்கும் பதில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்த்தார். கடைசியாக நடந்த நேர்முகம் எல்லாம், 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உங்களுக்கு நீங்களே செய்த வேலைகளை பற்றி சொல்லுங்களேன், என்பார்கள். கணபதி தம்பிக்கு அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு பிடி கிடைக்கும். பிடித்த மாதிரி சொல்வதற்கு ஓரளவு தெரிந்தும் வைத்து இருந்தார். அதையும் தாண்டி நிராகரிக்கப்பட்டும் இருக்கிறார், தானும் நிராகரித்து இருக்கிறார். ஆனால் இப்போது எந்த வீம்பும் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நடிப்புதான், அவர்களுக்கு பிடித்த மாதிரி இன்று நடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

பஸ் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. கதிர் அறுத்த நெல் வயல்கள் கோரைப்பாயை விரித்துப் போட்டது போல் சின்ன சின்ன கட்டமாக தெரிந்தது ஹைதராபாத் இது வரை வந்தது இல்லை, ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சின்ன வயதிலேயே அவருக்கு இருந்தது. காரணம் சிகரெட் அட்டைதான். அப்போது சிகரெட் அட்டை வைத்து கோலி விளையாடுவார். அவரது அப்பா வில்ஸ் பிளைன்தான் பத்த வைப்பார். அந்த அட்டைப் பெட்டியை தந்தால் 4 சார்மினார் அட்டை தருவான் பிச்சுவா. அவன்தான் சொன்னான் அட்டையில் இருந்த படத்தைக் காட்டி,இது அல்லா கோயில்டா, ஒரு நாளைக்கு பார்க்கணும்டா, என்றது இன்னும் மனது ஓரம் அப்படியே இருக்கிறது அவருக்கு. சார்மினார் எங்கு இருக்கிறது என்பதை சின்ன வயசுலேயே தெரிந்து கொண்டார்.

பஸ் சிட்டியில் நுழைந்து ஒவ்வொருவராக இறக்கி விட ஆரம்பித்ததும் கணபதி தம்பி திடீரென்று ஞாபகம் வந்து நண்பரை பார்கிறார், அவரும பார்க்கிறார். கிட்டே நெருங்கி, எங்கு இறங்க வேண்டும், என்று கேட்டதும் அந்த இடம் தாண்டி வந்து விட்டோம். நீ முதலிலேயே கேட்காமல் இப்ப வந்து கேட்கிறாயே, என்று அவர் கேட்டதும் கணபதி தம்பிக்கு, ச்சை இப்படியா ஏமாறுவோம், பகல் கனவில் இருந்தால் இப்படிதான். நாமாகவே டிரைவரை கேட்டு இருக்கலாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை நமது முட்டாள்தனம்தான் என்று வந்த நிறுத்தத்தில் இறங்கி கொண்டார்.

நேரமோ பசியோ அவருக்குத் தெரியவில்லை, முதலில் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை தவிர. சுற்றிப் பார்த்தார் எல்லோரும் அவசரமாக வரும் பஸ்ஸில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பக்கத்தில் இருந்த கடைகளில் வியாபாரம் அதிகம், டிபன் டீ என பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர். யாரிடம் கேட்கலாம் என ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே வந்தபோது தூரத்தில் தனியாக அமர்ந்து ஷூவுக்கு பளபள என பாலிஷ் போடுபவரைப் பார்த்தார் . கை மித வேகத்தில்ஷூ வை நேர்த்தியாக பளபளப்பாக ஆக்குகிறது. எல்லா கால்களையும் பார்க்கிறார் அவர், நிமிரவே இல்லை.

கணபதி தம்பி நேராக அவரிடம் சென்று இந்தியில் முகவரியைச் சொல்லி எப்படி செல்வது என வழி கேட்டார். சிறிது நேரம் ஒன்றும் பதிலில்லை. பிறகு, சென்னையிலிருந்து வருகிறேன் எனக்கு தெலுங்கு பேச தெரியாது இந்தி பேச வரும் படிக்க வராது, என்றதும் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போ, வர வண்டிய கேளு, என்றார் பாலிஷ் போட்டுக் கொண்டே, மிக எரிச்சலாக இந்தியில்.

சிக்னல் இல்லாத ஹைவேயை தாண்டுவது கஷ்டமாக இருந்தது. அவ்வளவு வாகனங்கள் நிற்காமல் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாக சாலை தாண்டி பாலநகர், பாலநகர் என கேட்க ஆரம்பித்தார். வரும் வண்டிகள் எல்லாம் உதட்டை பிதுக்கி காண்பிக்கின்றனர். எங்க போகவேண்டும், என தெலுங்குலேயே கேட்கின்றனர். பத்து மணி. அவர் சோர்ந்து போக ஆரம்பித்து விட்டார். ஒரு வெள்ளை டாட்டா வேன் வந்தது. காலியாக இருந்ததைப் பார்த்து டிரைவரிடம், சென்னையிலிருந்து வருகிறேன், எனக்கு பாலநகர் போகவேண்டும் ஒரு இன்டர்வியூ இருக்கு, கொஞ்சம் உதவ முடியுமா, என்றார் இந்தியில்.

டிரைவர் கணபதியின் முகத்தையும் தோரணையையும் ஒரு முறை பார்த்தார். முன்னாள் வந்து உட்கார், என்று சொல்லி விட்டு டிக்கெட் ஏற்ற ஆரம்பித்து இரண்டு மூன்று பேர் ஏறியவுடன் வண்டியை எடுத்தார். முகவரியை திரும்பக் கேட்டு சரியாக அதே இடத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.

அவர் எதிரே அந்த அடுக்கு மாடி கட்டிடம் நின்றது, கம்பெனியின் பெயர் தாங்கி. செக்யூரிட்டி செக்கப் முடித்து உள்ளே விட்டனர். முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் அவர்கள் ஐம்பது பேர் ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரு அப்ளிகேஷன் பார்ம் தந்து, தகுதி, அனுபவம், சம்பளம், விபரங்களை நிரப்பி வாங்கிக் கொண்டனர். யாரை முதலில் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் எச் ஆர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் எல்லோரும். எச் ஆர் கம்பெனியை பற்றி ஒரு சின்ன அறிமுகம் என்று கையை காட்டினார். அவரது ஐூனியர் அந்த ஹாலில் இருந்த அத்தனை லைட்டையும் ஆப் பண்ணி விட்டு புரோஐக்டரை ஆன் பண்ணினார்.

ஒரு துளி வெளிச்சம் பொட்டாக திரையில். பிறகு குளோசப்பாக காட்சி திரையில் விரிந்த போது ஒரு சிறுவன் விளக்கு ஒளியில் பாடபுத்தகம் வாசிப்பது தெரிந்தது. ஒரே ஒரு மின்மினி பூச்சி அந்த விளக்கு ஒளியை நோக்கி வந்தது. சிறுவன் படிப்பை விட்டு விட்டு மின்மினி பூச்சியை பார்த்தான். அதைப் பிடிக்க துரத்தினான். அப்போது எண்ணற்ற பூச்சிகள் சேர்ந்து கொண்டன. சிறுவன் துரத்திச் செல்கிறான். பாதை முடிந்து மிகப்பெரிய பள்ளம், எதிரே. சிறுவன் தயங்கிப் பார்க்கிறான். பள்ளத்தில் எல்லாம் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம், இப்போது வீட்டில் எரியும் விளக்காக தெரிகிறது. இருட்டு முழுவதும் அகன்று வெளிச்சம் மொத்தமும் வீடாகவும், ரோடாக, பாலமாக, டேமாக, மெட்ரோவாக, இன்டஸ்ரியல் கன்ஸ்ட்ரக்ஷனாக, பவர் மற்றும் சோலார் பிளாண்டாக மாறும்போது சிறுவன் வளர்ந்து கம்பெனி லோகோ முன் நிற்கிறான், முதலாளியாக.

ஐந்து நிமிட காட்சியில் கட்டிப் போட்டு என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டனர். ஆழ்ந்த பெருமூச்சு சத்தங்கள் கேட்டது. மனம் தனக்குத் தெரிந்த ப்ளஸ் மைனஸ்களை கணக்கு போட ஆரம்பித்தது தானாகவே, கணபதி தம்பிக்கு. அருகே இருந்தவர்களும் குழப்பமாக ஆலோசிக்க ஆரம்பித்தனர். பேஞ்சூத் என்று, சத்தம் திரும்பி பார்த்தார்

இரண்டு பேர் தங்களுக்குள் இந்தியில் திட்டிக் கொண்டே, எங்கேயேயுமே வேலை இல்லை, நீ எங்கேயிருந்து வருகிறாய், என்றனர். சென்னை, என்றார் கணபதி தம்பி. பச் என்று சத்தத்தோடு சரி, மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பத்து பத்து பேராக குழுவாக அழைத்துச் சென்றனர். தனது முறைக்காகக் காத்திருந்தார்.

நேர்முகம் முடியும்போது மணி 12.30. வெளியில் வந்தால் இரும்பையே உருக்கும் வெய்யில். காற்றே இல்லை. கண்கள் சிவந்து எரிய ஆரம்பித்து விட்டன. செம்மஞ்சள் நிறத்தில் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் பெரிய கூடைகளில் அடுக்கி இருந்தனர். புள்ளியாக வைத்த தரை சக்கரம் போல் தெரிந்தது. கடும் வெய்யிலுக்காக சாலையோரம் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தனர்.

ரிட்டன் பஸ் 8 மணிக்குதான். சார்மினாரை பார்த்து விடுவோம், என காத்திருந்து பஸ் ஏறி அங்கு சென்றார். வழி யெங்கும் நவாப் காலத்து பழமையான கட்டிடங்களும் நவீன கட்டிடங்களும் மால்களும் மெட்ரோ பாலமும் வந்து கொண்டே இருந்தது. கராச்சி சுவிட் ஸ்டால்கள் இருந்தன. மக்கள் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலையைப் பார்க்க அலைந்து கொண்டு இருந்தனர்.

மறுநாள் பின்மதியம் வீடு திரும்பினார் கணபதி தம்பி. இரண்டு நாள் தொடர்ந்து பயணத்தினால் உடம்பு வேதனை. நாற்காலியில் அமர முடியவில்லை அவருக்கு. ஷோல்டர் பேக்கை வைத்துவிட்டு சட்டையோடு குப்புற படுத்தார். சின்ன மகனைக் கூப்பிட்டு மிதித்து விடச் சொன்னார், நடு முதுகிலிருந்து பிருஷ்டம் வரை. மனைவி குடிக்க தண்ணீரும் ‘ டீ” யூம் கொடுத்தார். குடித்து விட்டு குளித்து வரும் வரை முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் வீட்டினர்.

உடம்பு வலி போக்கும் சூப் ஆவி பறக்க எதிரே வைத்துவிட்டு, ஆறுவதற்கு முன் குடியுங்கள், என்றதும் மிளகின் நெடி நாசிக்கு இன்பமாக இருந்த தருணத்தில் மனைவியின் ஆர்வம் தெரிந்தது அவருக்கு.

இரண்டு பேர் இண்டர்வியு செய்தார்கள், என்று ஆரம்பித்தார்.

ம், சொல்லுங்க, என்றார் கணபதி தம்பியின் மனைவி.

அதில் ஒருவர் பெண் நடிகை சரிதா போல் இருந்தார். முதலில் உங்களை பற்றி கூறுங்கள், என்றார் அவர்.

சூப்பை ஒரு முறை உறிந்து கொண்டார். காரத்தில் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு, அடுத்து வேலையை பற்றி கேட்டார்கள், என்றார். எங்கல்லாம் வேலை பார்த்திருக்கிறீர்கள், என்றும் என்ன மாதிரி வேலை செய்திருக்கிறீர்கள் என்றும், ஆண் மட்டுமே தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார் என்று சொன்னார் கணபதி தம்பி.

இதுவரை பார்த்த வேலைகளில் அவர்கள் கம்பெனிக்கு உகந்தவைகளை விரிவாக .நம்பக் கூடிய வகையில் சொல்லிவிட்டு,எங்கு பிரச்சினைகள் வரும், அதை எப்படி சரி செய்யலாம், என கூட சொன்னேன், என்றார் கணபதி தம்பி. எல்லா மிகப் பெரிய வேலைக்கும் ஸ்பெக்க்கும் திட்டமிடலும் பாதுகாப்பு பற்றிய டாக்குமெண்ட்ஸ் பார்த்தால் செய்துவிட முடியும் என்றும் பிறகு அவர்கள் கம்பெனி செய்யாத வேலைகளை அவர் செய்ததாக சொன்னபோது, சில சமயம் சரிதா அலட்சியமாகவும் தன் அகன்ற கண்களால் வியப்பாகவும் பார்த்தார். .அதைப் பார்த்து, கணபதி தம்பி சரிதாவைப் பார்த்து ஆவலாக, நீங்க ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க, என்றார்.

அது வரை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்த சரிதா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார், என்று சொன்னார் கணபதி தம்பி.

என்ன, என்று ஆவல் தாங்காமல் கேட்டாள் கணபதி தம்பி மனைவி.

“மிஸ்டர் கணபதி, நீரு தமிளா? தெலுங்கு தெலுசா?“

அவனை அவர்கள் தனியாய் விட்டுச் சென்ற இரவு -யுவான் ரூல்ஃபோ

“நீங்கள் ஏன் இவ்வளவு நிதானமாகப் போகிறீர்கள்?” என்று பெலிசியானோ ருவலஸ் முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களைக் கேட்டான். “இப்படிப் போய்க் கொண்டிருந்தால் கடைசியில் நமக்கு தூக்கம் வந்து விடும். நீங்கள் அங்கே சீக்கிரம் போய்ச் சேர வேண்டாமா?”

“நாளைக் காலையில் பொழுது விடியும்போது நாம் அங்கே போய்ச் சேர்ந்திருப்போம்,” என்று பதில் சொன்னார்கள்.

அவன் அவர்கள் கடைசியாய்ப் பேசிக் கேட்டது அதுதான். அவர்களது கடைசி வார்த்தைகள். ஆனால் அவற்றை அப்புறம் அவன் நினைத்துப் பார்ப்பான், மறு நாள்.

இரவின் மங்கலான ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில், தரையை உற்றுப் பார்த்தபடி அவர்கள் மூன்று பேரும் அங்கே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“இருட்டாக இருப்பதுதான் நல்லது. இப்படி இருந்தால் அவர்கள் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.” இதையும் சொன்னார்கள், சிறிது நேரம் முன்னால், அல்லது அதற்கு முந்தைய நாள் இரவு. அவனுக்கு நினைவில் இல்லை. தூக்கக் கலக்கம், சரியாய் யோசிக்க முடியவில்லை.

இப்போது, மேலே ஏறிச் செல்கையில், அது மீண்டும் இறங்கி வருவது தெரிந்தது. அது அவனை நெருங்கி வருவதை அவன் உணர்ந்தான். அவன் உடலின் மிகவும் களைத்த உறுப்பைத் தேடி அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது போலிருந்தது. துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்த அவனது முதுகில், அவன் மேல் அது இறங்கும் வரை. தரை சமதளமாக இருக்கும்போது அவன் வேகமாய் நடந்தான். சரிவு ஆரம்பிக்கும்போது, அவன் நிதானித்தான்; அவனது தலை மெல்ல துவளத் துவங்கியது. அவன் நடை தயங்கத் தயங்க அவன் எடுத்து வைக்கும் அடிகள் சிறிதாகின. மற்றவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள். தூக்கத்தில் அவன் தலை துவண்டு விழுகையில், அவர்கள் வெகு தூரம் முன்னே சென்றிருந்தார்கள்..

அவன் பின்தங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் சாலை நீண்டு சென்றது, ஏறத்தாழ அவன் கண்னளவுக்கு உயர்ந்து சென்றது. அப்புறம் துப்பாக்கிகளின் சுமை. அப்புறம் அவன் மீது, அவனது முதுகு வளைந்திருக்கும் இடத்தில் ஊறிக் கொண்டிருக்கும் தூக்கம்.

காலடி ஓசைகள் அடங்குவதை அவன் கவனித்தான்; எப்போதிருந்து, யாருக்குத் தெரியும் அவன் எத்தனை இரவுகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறான் அந்த வெற்றுக் காலடிகளின் ஒலிகளை: “லா மக்தலேனாவிலிருந்து இங்கு, முதல் நாள் இரவு; பின்னர் இங்கிருந்து அங்கே, இரண்டாம் நாள்; அதன்பின் இது மூன்றாம் நாள்.” அதிக நாட்கள் ஆகாது என்று அவன் நினைத்துக் கொண்டான், பகல் பொழுதில் மட்டும் நாங்கள் தூங்கியிருந்தால். ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமில்லை: “தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்மைப் பிடித்து விடுவார்கள்,” என்று சொன்னார்கள். அப்புறம் அது மிகவும் மோசமாய்ப் போய் விடும்”

“யாருக்கு மோசமாக இருக்கும்?”

இப்போது தூக்கம் அவனைப் பேசச் செய்தது. “நான் அவர்களைக் காத்திருக்கச் சொன்னேன். இன்று நாம் ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கட்டும். நாளை நாம் ஒற்றை வரிசையில் செல்வோம், நமக்கு இன்னும் அதிக ஆர்வம் இருக்கும், அதிக பலம் இருக்கும். நாம் ஓட வேண்டியதாகக்கூட இருக்கலாம். என்ன வேண்டுமானால் நடக்கலாம்”

அவன் கண்களை மூடிக் கொண்டு நின்றான். “இது மிக அதிகம்,” என்றான். “அவசரப்பட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? ஒரு நாள். இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோம், இந்த ஒரு நாளில் என்ன ஆகப் போகிறது”. அவன் உடனே கத்தினான், “எங்கே இருக்கிறீர்கள்?”

அதன்பின் கிட்டத்தட்ட ரகசியமாய்: “அப்படியானால் போய்க் கொண்டிருங்கள். போய்க் கொண்டிருங்கள்!”

அவன் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டான். அங்கு நிலம் சில்லிட்டிருந்தது, அவனது வியர்வை குளிர்ந்த நீராய் மாறியது. அவர்கள் அவனிடம் சொல்லியிருந்த சியர்ரா இதுவாகத்தான் இருக்க வேண்டும். கீழே கொஞ்சம் வெப்பமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது இங்கே இந்தக் குளிர் உன் ஆடைகளுக்குள் புகுந்து கொள்கிறது: “என் சட்டையை உயர்த்தி தம் சில்லிட்ட விரல்களால் என் தோலைத் தடவுவது போல்”

பாசி படிந்திருந்த தரையில் அவன் சரிந்தான். இரவை அளவிடுவது போல் தன் கைகளை விரித்து, மரங்களாலான சுவற்றை எதிர்கொண்டான். டர்பண்டைன் மணம் கமழ்ந்திருக்கும் காற்றைச் சுவாசித்தான். அதன் பின் அவன் உறக்கத்தினுள் மெல்ல மெல்ல அமிழ்ந்தான், அங்கே அந்தக் கள்ளிகளுக்கிடையே, தன் உடல் கெட்டிப்பதை உணர்ந்தபடி.

அதிகாலைக் குளிர் அவனை எழுப்பியது. பனித்துளிகளின் ஈரம்.

அவன் தன் கண்களைத் திறந்தான். இருண்ட கிளைகளுக்கு மேலே, உயரத்தில், தெளிந்த வானில் கண்ணாடியென ஒளி ஊடுருவும் நட்சத்திரங்களைப் பார்த்தான்.

“இருட்டிக் கொண்டிருக்கிறது,” என்று நினைத்துக் கொண்டான். அதன்பின் அவன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

உரத்த குரல்களையும் சாலையின் உலர்ந்த மண்ணில் ஒலித்த குளம்பொலிகளையும் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். தொடுவானின் விளிம்பில் மஞ்சள் ஒளித் தீற்றல்.

சுமைதாங்கிக் கழுதைகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்தார்கள். “குட் மார்னிங்,” என்று அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை.

தான் என்ன செய்ய வேண்டும் என்பது அவன் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே பொழுதாகி விட்டது. காவல் வீரர்களைத் தவிர்க்க அவன் இரவில் சியர்ராவைக் கடந்திருக்க வேண்டும். இந்தக் கணவாய் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று. அப்படித்தான் அவர்கள் அவனிடம் சொல்லியிருந்தார்கள்.

கொத்தாய்க் கட்டப்பட்டிருந்த துப்பாக்கிகளை எடுத்து தன் தோளில் தொங்கவிட்டுக் கொண்டான். சாலையின் விளிம்பைத் தாண்டி, சூரியன் உயர்ந்து கொண்டிருந்த, சிகரத்தை நோக்கி நடந்தான். அவன் மேலேறினான், கீழிறங்கினான், மேடுகள் நிறைந்திருந்த மலைகளைக் கடந்து நடந்தான்.

“அவனை நாங்கள் அங்கே உயரத்தில் பார்த்தோம். அவன் இப்படி இப்படி இருக்கிறான், நிறைய ஆயுதங்கள் வைத்திருக்கிறான்,” என்று கழுதை மேய்ப்பவர்கள் சொல்வது அவன் காதில் ஒலிப்பது போலிருந்தது.

அவன் துப்பாக்கிகளை கீழே எறிந்தான். அதன்பின் கார்ட்ரிட்ஜ் பெல்ட்களையும் அகற்றினான். அச்சமயத்தில் அவன் எடை குறைந்தது போலுணர்ந்தான். கழுதை மேய்ப்பவர்களுக்கு முன் அடிவாரம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்பது போல் ஓடத் துவங்கினான்.

“மேலே போக வேண்டும், உயரத்தில் இருந்த சமதளப் பிரதேசத்தைச் சுற்றி வந்து கீழே இறங்கிப் போக வேண்டும்”. அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்களோ, அதைதான் அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவர்களுடன், அதே சமயத்தில் அல்ல.

அவன் பள்ளத்தாக்கில் சரிந்தோடிய பிளவின் விளிம்பை அடைந்தான். தொலைவில் பழுப்பாய் அகன்று விரிந்திருந்த சமவெளியைப் பார்க்க முடிந்தது.

“அவர்கள் அங்குதான் இருக்க வேண்டும். சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் மீது எந்த அச்சமும் கவிந்திருக்காது”, என்று நினைத்துக் கொண்டான்.

அவன் மலைச்சரிவினுள் இறங்கினான், உருண்டு புரண்டு எழுந்து ஓடி மீண்டும் உருண்டுச் சென்றான்.

“தெய்வச் சித்தம்,” என்று சொல்லிக் கொண்டான். மீண்டும் மீண்டும் உருண்டு இறங்கினான்.

இன்னமும் அவன் காதில் கழுதை மேய்ப்பவர்கள் அவனிடம் “குட் மார்னிங்!” என்று சொன்னது ஒலித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அவனது கண்கள் அவனை ஏமாற்றுவது போலிருந்தது. காவல் காத்துக் கொண்டிருப்பவர்களில் முதலில் இருப்பவனிடம் போய், “அவனை இன்ன இன்ன இடத்தில் பார்த்தோம். அவன் சீக்கிரம் இங்கு வந்து விடுவான்,” என்று அவர்கள் சொல்வார்கள்.

திடீரென்று அவன் அசையாமல் நின்றான்.

கிறித்துவே!” என்றான். “விவா கிறிஸ்டோ ரே!” என்று அலறியிருப்பான், ஆனால் தன்னை அடக்கிக் கொண்டான். உறையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து உள்ளே பதுக்கிக் கொண்டான், தன் சட்டைக்குள், அது தன் உடலுக்கு நெருக்கமாய் இருப்பதை உணர்வதற்காக. அது அவனுக்கு துணிச்சல் அளித்தது. மெல்ல அடியெடுத்து வைத்து, அவன் அக்வா ஜார்காவின் பண்ணை நிலங்களை நெருங்கினான். அங்கு பெரிதாய் கனன்று கொண்டிருந்த நெருப்புகளைச் சுற்றி குளிர் காய்ந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பரபரப்பை கவனித்தான்.

விலங்குகளைப் பூட்டி வைத்திருந்த கிடையின் வேலிகள் வரை அவன் சென்றான், அவர்களை இப்போது அவனால் இன்னும் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது. அவர்கள் முகங்களை அடையாளம் காண முடிந்தது. அது அவர்கள்தான், அவனது மாமா டானிஸ்சும் மாமா லிப்ராடோவும். ராணுவ வீரர்கள் நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில், அவர்கள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தார்கள்- கிடையின் மத்தியில் ஒரு சீமைக்கருவேலி மரத்தில் தொங்க விடப்பட்டு. கணப்புக்கு ஏற்றப்பட்ட நெருப்பிலிருந்து எழும் புகை குறித்த உணர்வை இழந்து விட்டது போலிருந்தார்கள், கண்ணாடி போல் வெறித்திருந்த அவர்கள் விழிகளில் புகை மூட்டமிட்டது, முகங்களில் சாம்பல் பூசியது.

அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. வேலியோரமாய் அவன் மெல்ல ஊர்ந்து சென்றான், ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தான். அவன் உடலின் இறுக்கத்தை மெல்லத் தளர்த்திக் கொண்டான், தன் வயிற்றில் ஒரு புழு நெளிவதை உணர்ந்தாலும்.

அவனுக்கு மேல், உயரத்தில் யாரோ பேசக் கேட்டான்:

“இவர்களைக் கீழே இறக்காமல் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இன்னொருவன் வருவதற்காகக் காத்திருக்கிறோம். மூன்று பேர் இருந்ததாகச் சொல்கிறார்கள், எனவே மூன்று பேர் இருந்தாக வேண்டும். தப்பித்தவன் ஒரு சிறுவன்தான் என்று சொல்கிறார்கள்; சிறுவனோ இல்லையோ, என் லெப்டினென்ட் பர்ராவைவும் அவரோடிருந்தவர்களையும் மறைந்திருந்து தாக்கி அழித்தவன் அவன்தான். இந்த வழியில்தான் அவன் வந்தாக வேண்டும், அவனைவிட வயதானவர்கள், அனுபவம் அதிகம் இருந்தவர்கள் மற்ற இருவரும் இந்த வழியில்தான் வந்திருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அவன் வராவிட்டால் இந்த வழியாக வரும் முதல் ஆளைக் கொன்றுவிட வேண்டியதுதான் என்று என் மேஜர் சொல்கிறார். அவரது ஆணையை அப்படி நிறைவேற்றிவிட வேண்டியதுதான்”.

“ஆனால் நாம் ஏன் அவனைத் தேடிக் கொண்டு போகக்கூடாது? அதைச் செய்தால் நம் சலிப்பாவது தீரும்”

“அதற்கெல்லாம் அவசியமில்லை. அவன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். கடோர்சில் இருக்கும் கிறிஸ்டரோக்களுடன் சேர அவர்கள் எல்லாரும் கொமாஞ்சாவில் உள்ள சியர்ராவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போகவிடுவதும் நல்லதாகத்தான் இருக்கும். அவர்களுடைய கூட்டாளிகள் லாஸ் ஆல்டோஸ் உடன் போரிடப் போகிறார்கள்”

“அதுதான் சரியாக இருக்கும். இறுதியில் நம்மையும் அந்தத் திசையில் செல்லச் சொல்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்”

பெலிசியானோ ருவலஸ் தன் வயிற்றில் புரண்டு கொண்டிருந்த கொந்தளிப்பு அடங்கச் சிறிது நேரம் காத்திருந்தான். அதன்பின் ஒரு வாய் காற்றை முழுங்கினான், தண்ணீருக்குள் ஆழச் செல்லப் போகிறவன் போல. அதன்பின், தரையோடு தரையில் ஊர்வது போன்ற அளவு பதுங்கி, கைகளால் தன் உடலை உந்தித் தள்ளி நடக்க ஆரம்பித்தான்.

ஓடைப் பள்ளத்தின் விளிம்புக்கு வந்ததும் அவன் அதனுள் இறங்கி நிமிர்ந்து நின்று ஓட ஆரம்பித்தான், அதன் புதர்களிடையே ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு. ஓடைப் பள்ளம் சமவெளியில் தன்னைக் கரைத்துக் கொள்வதை உணரும் வரை அவன் திரும்பிப் பார்க்கவில்லை, நிற்கவுமில்லை.

அதன் பின் நின்றான். அவனுக்கு மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது.

(This is an unauthorised translation of the short story, “The Night they Left him Alone”, originally written in Spanish by Juan Rolfo, and translated into English by George D. Schade. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

அரிநிழல் -காலத்துகள்

காலத்துகள்

நாடார் பத்து பைசாவிற்கு இங்க் ஊற்றிக் கொண்டிருக்க, பின்னணியில் ராதா மாணிக்கம் இயேசுவின் ஜீவித சரிதத்தை பாடிக் கொண்டிருந்தார். அடுத்து ஜாலி அப்ரஹாம் பாட ஆரம்பிப்பார். ‘ஜாலி’ என்பது பெயரின் பகுதியா அல்லது அடைமொழியா என்பது நாடாருக்கும் தெரியவில்லை. தினமும் காலையில் இரண்டு மூன்று முறையாவது நாடார் கடைக்கு வருவது வாடிக்கை, பாடல் வரிகளும், அவை ஒலிபரப்பாகும் வரிசையும் அத்துப்படி. அடுத்த வருடத்தில் இருந்து இவனும் பேனா உபயோகிக்கலாம். இன்று ஒரு தகவல் ஆரம்பித்திருக்கக்கூடும், அதன் இறுதியில் வரும் குட்டிக்கதையையேனும் கேட்டு விட வேண்டும்.

தேங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு திரும்பினான், மதியம் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிகள். இரண்டு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், சந்துருவுக்கு பிடிக்கும். நாளை சனி, பள்ளி இல்லை, இன்று மாலையே எல்லா வீட்டுப்பாடத்தையும் எழுதி முடித்து விட வேண்டும், பின் இரண்டு நாட்கள் செய்ய நிறைய உள்ளது. அடுத்த தெருவில் இருக்கும், வெளியிலிருந்து மட்டும்எ ட்டிப் பார்த்திருக்கும் ஐஸ் பேக்டரிக்குச் சென்று உள்ளே விடுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம், டப்பா ஸ்கூலும், ஸ்ரீனிவாசா தியேட்டர் மைதானமும் தவிர்த்து ஆர்ட்ஸ் காலேஜ் க்ரவுண்டிற்கு செல்லலாம், எதுவும் இல்லாவிட்டால் வீட்டின் பின்னாலேயே விளையாடலாம். எதிரே பாட்டி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் ஓடிச்சென்று ‘என்ன தாத்தி, வேறேதாவது வாங்கணுமா’ என்று கேட்டான். தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தவர், இவன் முழங்கையை பற்றிக் கொண்டு ‘தாத்தி ஒண்ணு கேட்டா உண்மையைச் சொல்லணும் என்ன. நீதானே சாவி மேகஜீன்ல வரஞ்சு வெச்சிருக்க’ என்று கேட்டார்.

‘ஹிந்து’ மற்றும் ‘எக்ஸ்பிரஸ்’ மட்டும் வீட்டில் அதிகாரபூர்வமாக வாங்குவது. பேப்பர் விநியோகிக்கும் ஸ்ரீதர் கிட்டத்தட்ட அனைத்து மாத வார- ராணி காமிக்ஸ், பூந்தளிர் போன்ற சிறார்- இதழ்களையும் போட்டுவிடுவார். ‘ஞான பூமியை’கூட வீட்டில் பார்க்க முடியும். இதற்காக தனியாக ஏதேனும் பணம் வாங்கிக் கொள்வாரா என்று தெரியவில்லை. சாவியில் ஆறேழு வாரமாக மாந்த்ரீகத் தொடர் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், அவரிடம் பயில்பவர்கள், இன்னும் சில பாத்திரங்கள். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பது பிடிபடவில்லை.

‘நா எதுவும் பண்ணலயே தாத்தி’ என்று சொன்னதற்கு, ‘ஏய்ய் பொய்ய் சொல்லக்கூடாது, வேற யார் பண்ணிருப்பா அப்ப, நீ சொல்லு’ என்றார்.

‘என்ன சொல்றேன்னே புரியல தாத்தி, அந்த புக்குக்கு என்னாச்சு’. இதையே மீண்டும் மீண்டும் பேசியபடி சந்தினுள் நுழைந்திருந்தார்கள்.

இந்த வார அத்தியாயத்தில் படுக்கையின்மீது ஒரு காலை முட்டி போட்டபடி இரவு ஆடை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி எழும் ஓவியம். ஆடையினுள் அவள் அணிந்திருக்கும் உள்ளாடையின் உருவரை தெளிவாகத் தெரிந்தது. பெண்களும் ஜட்டி அணிவார்கள் என்றும், அதை ‘பேண்டீஸ்’ என்று கூறுவார்கள் என்றும் இரண்டு வருஷம் முன்னால்தான் அறிந்து கொண்டான். முக்கோணத்தை திருப்பிப் போட்டது போன்ற பேண்டீஸின் உருவரையை அவ்வப்போது யாரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களில் அடுத்த இதழ் வந்து விடும், நேற்று இரவுதான் அந்த உருவரையின் கோடுகளின் மீது சிவப்பு நிற ஸ்கெட்ச் பென்னினால் அழுத்தி முக்கோணத்தை இன்னும் அடர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆக்கினான்.

சுந்தரி அக்கா போர்ஷனை தாண்டும்போதே வீட்டினுள் உரத்த குரலில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. உள்ளே நுழையும்போது ‘சாவியை’ கையில் வைத்துக் கொண்டு ‘அதான் சொல்றேனே, இந்த வார இஷ்யு காணலையேன்னு தேடும்போது புக்ஸ்ல எங்கேயாவது போட்டிருப்பானோன்னு பாத்தா கெடச்சுது, அட்டைல இருக்கற பொண்ணு மூஞ்சில ரெட் ஸ்கெட்ச்ல நாமம் போட்டிருக்கான், எதோ விளையாட்டா பண்ணிருக்கான்னு நெனச்சேன், அப்பறம் உள்ள பாத்தா இப்படி பண்ணிருக்கான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘ஏண்டா இப்படி பண்ணின?’

“…”

‘நீ பண்ணலனா யார் பண்ணா, நைட் பூதம் வந்து வரஞ்சுதா’

“…”

‘புஸ்தகத்துக்கு கால் மொளச்சு தானா நடந்து வந்து ஒன் புக்ஸ்ஸோட வந்து ஒக்காந்துகிச்சா’

அனைத்திற்கும் ‘எனக்கு தெரியாதுமா’, ‘நா பண்ணல’, ‘அது எப்படி என் புக்ஸ் வந்துதுன்னு தெரியாது’, ‘வந்தனிக்கே அத படிச்சு முடிச்சுட்டேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு வந்த சுந்தரி அக்காவிடமும் விஷயத்தைச் சொல்ல புத்தகத்தை புரட்டி உடனேயே திருப்பித் தந்து விட்டார்.

‘என்ன சுந்தரி சிரிக்கற’ என்று அம்மா கேட்க, ‘சின்ன பையன்தானே தெரியாம செஞ்சிருப்பான், விட்ருங்கக்கா’ என்றார். ‘அதில்ல சுந்தரி, சரி ஏதோ பண்ணிட்டான், அத ஒத்துக்கலாம்ல ஒழக்கு மாதிரி இருந்துட்டு என்ன அழுத்தம், தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என்றார். அவர் தன் போர்ஷனுக்குச் செல்லும்வரை தலை நிமிராமல் இருந்தான்.

‘தோ பார்டா அம்மா அடிக்க மாட்டேன், அப்பாவும் மாட்டா, தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கணும், அதுதான் நல்ல மனுஷத்தனம்’ என்பதை திரும்பத் திரும்ப சிற்சில மாற்றங்களுடன் சொல்லிக் கொண்டிருந்த அம்மா எட்டு மணிக்கு மேல் பள்ளிக்கு கிளம்பினார்.

இன்னும் குளிக்கக்கூட இல்லை. ‘போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா’ என்றார் பாட்டி. தட்டில் இட்லியை வைத்து விட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, ‘தாத்தி சொன்னா கேக்கணும் சரியா, தாத்திய ஒனக்கு பிடிக்கும்ல’ என்று சொல்ல தலையாட்டினான். ‘அப்போ ஏன் அப்படி பண்ணினே சொல்லு, அப்பத்தான் தாத்திய ஒனக்கு பிடிக்கும்னு நம்புவேன்’.

“—“

‘இது ஒண்ணு பெரிய தப்பில்லையே, நா ஸ்கூல்ல படிக்கும் போது எங்க மிஸ் ஸ்கர்ட்லதான் வருவா, சைக்கிள்ள அவங்க ஏறர டைம்ல நாங்க குனிஞ்சு பாப்போம்’ என்று அப்பா சொன்னதை இடைமறித்து ‘ஏண்டா கொழந்தட்ட பேசற பேச்சா இது’ என்றார் பாட்டி. ‘அதுக்கில்லமா, இது ஒரு நேச்சுரல் க்யுரியாசிடி தான்னு சொல்ல வரேன், ஆனா அத நான் பண்ணலேன்னு சாதிக்கறான் பாரு அது தான் தப்பு’.

‘ஏண்டா நாலு இட்லியோட நிறுத்திட்ட’ என்று பாட்டி சொல்லச் சொல்ல கையலம்ப வெளியே சென்றான். கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி அக்கா நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையைத் தவிர்த்து விட்டு கைகழுவிக் கொண்டு உள்ளே வந்து பள்ளி சீருடையை அணிந்தான்.

ஷூ போட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் அருகே வந்த பாட்டி ‘அப்போ நீ சொல்ல மாட்டேல்ல, பாட்டி மேல ஒனக்கு அப்போ கொஞ்சம் கூட பாசம் கெடையாது அப்படித்தானே’ என்றார். ‘என்ன பாட்டி, நான் தான் செய்யலங்கறேனே, யார் அத பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது’

‘அப்போ நான், ஒன் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்ட்ட, ஹெச்.எம்கிட்ட சொல்றேன், அவங்க கண்டுபிடிப்பாங்க’ என்று அவர் சொல்ல, ‘என்ன பாட்டி இதெல்லாம் போய் ஸ்கூலுக்கு வரேங்கற, அவங்க என்ன பண்ணுவாங்க’ என்று ஒரு காலில் மட்டும் ஷூவோடு எழுந்து நின்றபடி கத்தினான். ‘அப்ப நீ உண்மைய சொல்லு, இல்லேனா நான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவேன், எனக்கென்ன’ என்று பாட்டி மீண்டும் சொல்ல, ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என்று சொல்லியபடி மீண்டும் அமர்ந்து மற்றொரு காலிலும் ஷூவை அணிந்தான். வாசற்படியை தாண்டியபின் மீண்டும் உள்ளே வந்து ‘ஸ்கூலுக்குலாம் வராதே தாத்தி’ என்று சொல்ல, ‘நீ தான் ஒத்துக்க மாட்டேங்கறல, அப்ப நான் கண்டிப்பா வருவேன்’ என்றார்.

ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் பள்ளி என்றாலும் எட்டரை, அதிகபட்சம் எட்டே முக்கால் மணிக்கெல்லாம் மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது வழக்கம். முதல் மணி அடிக்கும்வரை விளையாட்டும், மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பின் மீண்டும் ஆட்டம். இன்று கிளம்ப ஒன்பது ஐந்தாகி விட்டது. சந்தைக் கடந்து மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.

போன வருடம் மரத்தடியில் வினோலியா மிஸ் க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிரே இருந்த ஐந்தாம் வகுப்பு பி பிரிவில் இருந்து பத்மினி மிஸ் வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பிக்க பின்னால் இரு மாணவர்கள். ஒருவனின் பெயர் விக்கி என்பதைத் தவிர அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. பத்மினி மிஸ் கையில் ஏதோ புத்தகம். இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, இரு மாணவர்களும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வினோலியா மிஸ் என்னவென்று கேட்க ‘க்ளாஸ்ல பாருங்க மிஸ், மேகஸின் படிக்கறாங்க’ என்று அந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். ‘ஆனந்த விகடன்’. இவர்களைக் கடந்து தலைமையாசிரியர் அறை நோக்கி மிஸ் செல்வதை, இருவரும் அவரின் முன்னால் சென்று மன்றாடுவதை, மிஸ் விலகி முன்னே செல்ல, பின்னால் சில அடிகள்நடந்து மீண்டும் அவர் முன்னே சென்று கெஞ்சுவதை குனிந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். வாயசைப்பில் இருந்து அவர்கள் ‘ஸாரி மிஸ், வேணாம் மிஸ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது தெரிந்து.

சாலையைக் கடப்பதற்கு பதில் பள்ளியை தாண்டிவிட்டிருந்தான். திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து நின்றான். முதல் மணி அடித்திருப்பார்கள். பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இல்லை, கடைசி நேரத்தில் வரும் ஒரு சிலர் மட்டும். இப்போது சென்றாலும், காலை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாது, வெளியில்தான் நின்றிருக்க வேண்டும். ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியை வந்து தாமதமாக வந்ததற்கு கொடுக்கும் தண்டனையை வாங்கியபின் தான் உள்ளே செல்ல முடியும். அதற்குள் பாட்டியும் பள்ளிக்கு வந்து விடலாம், இந்நேரம் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார், கிளம்பிக்கூட இருக்கலாம். மீண்டும் திரும்பி வேதாச்சல நகருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவன், புதிய பேருந்து நிலையம் வர அதனுள் நுழைந்தான்.

தாம்பரம் செல்லும், டி.சிக்ஸ்டி, அம்மா பெரும்பாலும் பள்ளிக்கு இதில்தான் செல்வார். நிறைய தனியார் பேருந்துகள். பயணிகள் அமரும் இடத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான். சிறிது நேரத்தில் நிலையம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இல்லை, எழுந்து அங்கிருப்பவர்களின் மணிக்கட்டை பார்த்தபடி நடந்தான். பத்தேகால். மீண்டும் அதே பெஞ்சிற்கு வந்தமர்ந்தான். எதிரே பூ விற்றுக் கொண்டிருந்த பெண் இவனையே கவனிக்க எழுந்து வேறு இடத்திற்கு செல்லும் போது டையை அவிழ்த்துக் கொண்டபின், சட்டையை ட்ரவுசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டுக் கொண்டான்.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது, பின் நிலையத்தினுள் சுற்றி வருவது. பேருந்து நிலைய கழிப்பறைக்குள் நுழையாமல், அதன் முன் சில கணங்கள் நின்றிருந்தான். புத்தகப்பையுடன் எப்படி உள்ளே செல்ல. சற்று தள்ளி வைத்து விட்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். மலம் கழிக்கும் அறைகள் மட்டும்தான். நுரைத்துத் தள்ளி கழிவறை துளை வரை வந்திருக்கும் மலம். சட்டையின் மேற்பகுதியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டான். வெளியே வந்து சட்டையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு நன்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டபோது, இன்னும் கடுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்யக் கூடும், அதன் பின் மீண்டும் செல்லலாம்.

கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு சென்றான், அங்கு அமர்ந்திருந்தவரின் மணிக்கட்டில் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. பொதுவாக ஒரு மணிக்கு சாப்பிடும்போதுகூட இப்படி பசித்ததில்லை. சாப்பிட ஆரம்பித்தவன் நிமிரும்போது நிலைய வளாகத்தின் மறு முனையில் கழிவறையில் இருந்து வெளியே வருபவரைப் பார்த்தான். இரண்டு இட்லிகளுடன் எழுந்தவன், மீதி இட்லிகளை அங்கு அலைந்து கொண்டிருந்த நாயின் முன் வைக்க அது உண்டு முடித்தது. டிபன் பாக்ஸ்சை கழுவியபின், நிலையத்தில் நின்றிருந்த பேருந்தொன்றில் சென்றமர்ந்தான். உள்ளே இவனும் காக்காயொன்றும்.

போன வருடம் ஸ்டவ் எரியாமல் தொல்லை கொடுக்க, காலை விடுமுறை எடுக்கச் சொன்னார்கள் வீட்டில். மறுத்து விட்டு பள்ளிக்குச் சென்றவனின் வகுப்பிற்கு, இரண்டாம் பீரியட் முடியும் தருவாயில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்ட பாட்டி, முதல் இன்டர்வெல்லின்போது அனைவரும் பார்த்தபடி இருக்க, இவனை சாப்பிடச் செய்த பின்னரே கிளம்பினார், மதிய உணவிற்கான டிபன் பாக்ஸை வைத்து விட்டு. அதன் பின் ‘பப்பா’, ‘கொயந்த’, ‘வீட்லனா ஊட்டி விட்டுருப்பாங்கல’ என்று நண்பர்களின் கேள்விகள்.

இந்நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றிருப்பார். வகுப்பில் இல்லை என்பதை அறிந்தவுடன் அம்மாவிற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியில் தொலைபேசி உண்டு, வீட்டிலோ, தெரிந்தவர்களிடமோ கிடையாது. டெலிக்ராம் ஆபிஸ் சென்றுதான் அழைக்க முடியும். அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு வரும்போது இங்குதான் இறங்க வேண்டும். பள்ளியில் இந்த விஷயம் பரவியிருக்கும், வினோலியா மிஸ்தான் இந்த வருடம் க்ளாஸ் டீச்சர், மிகவும் அன்பானவர், கோபப்பட்டு பார்த்ததில்லை.

இவனுக்கு மிகவும் பிடித்த டீச்சர். ஏதேனும் பேருந்தில் ஏறி எங்கேயாவது சென்று விடலாம், கையில் கொஞ்சம்கூட காசு இல்லை. பேருந்தினுள் பயணிகள் வந்தமர ஆரம்பிக்க இறங்கி காலியாக இருந்த இன்னொரு பேருந்தினுள் ஏறினான்.

வரலாற்றுப் புத்தகத்தை திறந்தால், இடது பக்கத்தின் எண் ஐம்பத்தி நான்கு, நான்கு ரன். புத்தகத்தை மூடித் திறந்தான், எழுவத்தி இரண்டு, ஸ்கோர் ஆறு. அடுத்தது தொண்ணூற்றி ஆறாம் பக்கம். ஸ்கோர் பண்ணிரண்டு. அடுத்து நாற்பது. முதல் விக்கெட் அவுட். பத்தாவது விக்கெட் விழும்போது ஸ்கோர் எழுவத்தி எட்டு, தொடர்ந்து மூன்று முறை பூஜ்யத்தில் முடியும் பக்க எண்கள் வந்துவிட்டன.

எழுவத்தியெட்டை இலக்காக கொண்டு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்போது ‘சீக்கரம் ஏறித் தொலை’ என்று கத்தியபடி வண்டியினுள் ஏறியவருக்குப் பின் கையில் இரு மூட்டைகளுடன் ஒரு பெண்ணும் இவனை விட ரெண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கக்கூடிய சிறுவனொருவனும் வந்தார்கள். அவனும் பையொன்றை வைத்திருந்தான். முன்னிருக்கையில் அமர்ந்தபடி ‘பால்லாம் கரெக்ட்டா உற குத்தி வெச்சியா, கெட்டுபோவப் போகுது, சாம்பார், கொழும்புன்னு எதையாவது அப்படியே வெச்சுட்டு வந்திருக்கப் போற, திங்கக்கெழம வரும்போது கப்படிக்கும், ‘அந்தப் பையை நல்லா உள்ள வை, இல்லனா கால்ல இடிக்கும்.’ என்று உரத்த குரலில் அம்மனிதர் சொல்ல ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தார் அந்தப் பெண். ‘டேய் ஜன்னல் சீட்ல ஒக்காராத இங்க வா’ என்று சிறுவனை இவனருகில் உட்காரச் செய்தார். ‘கையை ஜன்னல் கம்பி மேல வெக்காத வண்டி ஓட்டும்போது சைட்ல வேற வண்டி வந்தா அடிபடும்’ என்று அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பேருந்தை விட்டு இறங்கினான்.

சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது, கழிவறையின் அருகே செல்லும்போதே நாற்றமடித்தது. விலகிச் சென்று சுற்றிப் பார்த்தான். நிலையத்தின் ஒரு ஓரத்தில் வெளியிலேயே சுவரோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு சென்றான். அடிவயிற்றில் வலியுடன் இணைந்த கிளர்ச்சி, வலது கையை சுவற்றில் வைத்துக் கொண்டான். சிறுநீர் கழித்து முடித்த பின்பும் குறியின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி. நிலையத்தில் இருந்த கடையின் முன் டீ குடிக்கும் கூட்டம், கோகுலத்தின் இந்த இதழ் வந்து விட்டது, ஸ்ரீதர் நாளை போட்டு விடுவார், இந்த வார சாவியை பார்த்ததும் அங்கிருந்து விலகி முதலில் அமர்ந்த இடத்திற்கே வந்தான்.

‘என்ன தம்பி காத்தாலேந்து இங்கயே சுத்திட்டு இருக்க, இஸ்கூலுக்கு போலையா’ என்றார் பூக்காரம்மா. ‘இல்லையே கொஞ்ச நேரம்தான் இங்க இருந்தேன், ஒடம்பு சரில. அப்பறம் ஸ்கூல் போயிட்டேன்’.

‘இஸ்கூல்லு வுட்ற நேரமாலியே’ என்றவர், அங்கு பேருந்திற்காக நின்றிருந்தவரிடம் மணி கேட்டுவிட்டு,. ‘நாலற ஆவலியே அதுக்குள்ள வந்துட்ட’ என்று சொன்னார்.

‘கட் அடிச்சிருப்பான், இந்த வயசுலேயே’ என்றார் மணி சொன்னவர்.

‘எந்த ஊரு ஒனக்கு, வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா, இந்த நேரம்னு பாத்து எந்த போலீஸும் இல்லை’ என்று பூக்காரம்மா ஆரம்பிக்க, ‘ஐயோ இல்ல, நெஜமா எனக்கு ஒடம்பு சரியில்ல’ என்றான்.

அங்கு வந்து நின்ற பேருந்தில் மணி சொன்னவர் ஏற, ஒரு பெண் பூ வாங்க வந்தார். வீட்டிற்குச் செல்ல திரும்பினான். ஒருவேளை இவனைக் காணாமல் வீட்டினர் பயந்து போய் எதுவும் சொல்லாமல் விட்டுவிடக் கூடும். நிலையத்தின் வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தான். இன்னுமொரு பெண் பூ வாங்க வந்திருக்க பூக்காரம்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வேதாச்சல நகர் முனையில் இருந்து பார்த்தபோது பள்ளி வாசலில் எந்த அரவமும் இல்லை. டையை கட்டிக் கொண்டு, சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, சற்று தூரம் சென்று காப்பி அரைக்கும் கடைக்கு சற்று முன்பு மரத்தடியில் நின்று கொண்டான். மூன்றாம் வகுப்புக்களுக்கு நேர் எதிரேதான் கடை, பாட்டி ஒரு முறை காப்பி அரைக்க வந்ததை வகுப்பின் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறான்.

மணி அடிக்கும் சப்தம் மிக மெல்லியதாக. முதல் மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள், ஓட்டமும் நடையுமாக சென்று ரோட்டை கடப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். கூடப் படிப்பவர்கள் பார்க்கும்முன் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இவனுக்கு என்னவாயிற்று என்று சந்துரு யோசித்துக் கொண்டிருந்திருப்பான். சந்து முனையில் யாரும் நிற்கவில்லை, உள்ளே காத்துக் கொண்டிருக்கக்கூடும்.

தன் போர்ஷனின் முன் மல்லாட்டை உடைத்துக் கொண்டிருந்த சுந்தரி அக்கா அவற்றை கையில் அள்ளி நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ’ என்றார். ‘பசிக்கலக்கா’ என்று விட்டு தன் போர்ஷனுள் நுழைந்தான்.

‘டூ இன் ஒன்னில்’ அப்பா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், ‘ட்ரெஸ் மாத்திட்டு வா காபி தரேன். புள்ளாண்டான் சட்ட காத்தால இன் பண்ணினது அப்படியே இருக்கு மழதான் பெய்யப் போறது போ’ என்றார் பாட்டி. தெரியாதது போல் நடிக்கிறார். தனியாக கூப்பிட்டுக் கேட்கக் கூடும் அல்லது அம்மா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை தலைமையாசிரியை இவன் பள்ளிக்கு வராதது குறித்து அறிந்திராமல் பாட்டியுடன் பேசியிருக்கக் கூடும்.

சிறிது நேரம் கழித்து ‘என்ன ஹோம்வர்க் எழுத ஆரம்பிக்கல, ப்ரைடே சாங்காலமே முடிச்சுடுவே அப்பத்தான் ரெண்டு நாளு ஜாலியா இருக்கலாம்ப’ என்று பாட்டி கேட்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். நாளை சந்துரு வீட்டிற்குச் சென்று என்ன வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்வெட்டர் பின்னும் வேலையை பாட்டி தொடர்ந்தார். நடுவில் ஊசியில் நூலைக் கோர்க்கும்படி இவனிடம் கேட்டார். கண்டிப்பாக அம்மாவிற்குத்தான் காத்திருக்கிறார்கள்.

அம்மா வந்த பின் உடை மாற்றிக்கொள்ள உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து பாட்டியும் அங்கு போனார். இனி அவர்களுக்குள் பேசி விட்டு ஆரம்பிப்பார்கள். வெளியே வந்த பின் சிறிது நேரம் இவனுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்மா.

திங்கட்கிழமை பள்ளிக்கு வரத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.எம் கண்டிப்பானவர், காலை இறைவணக்கத்தின்போது ஸ்டேஜிற்கு வரச் செய்து எல்லோர் முன்னிலையிலும் இவன் செய்ததை சொல்லக்கூடும், அவர் கையில் சாவி, அனைவர் பார்வையும் இவன் மீது. நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்துள்ளார்களா, சந்துரு இன்று மாலை வர வாய்ப்பில்லை, நாளை காலை முதல் வேலையாக அவன் வீட்டிற்குச் சென்று அது குறித்து கேட்டு விட்டு, இன்று வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி விட வேண்டும்.

மாலையில் பாட்டி வீட்டு உரிமையாளர் மனைவியுடன் அரட்டையடிக்கக் கிளம்பினார், அப்பா உள்ளறையில் அன்றைய தினசரியை மீண்டும் புரட்டியபடி. அம்மா சமையலறையில், அங்கு சென்றான். வேக வைத்த உருளைக்கிழங்குகளை தோலுரித்து உப்பு தடவிக் கொண்டிருந்தவர் ‘எடுத்துக்கடா’ என்றார். எதுவும் சொல்லாமல் திரும்பியவன், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சென்று ‘தாத்தி ஸ்கூலுக்கு வந்து ஹெச்.எம்ம பாத்து சொல்லப் போறேன்னு சொன்னாம்மா’ என்றான். தக்காளி துண்டுகளை தள்ளி வைத்து விட்டு வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தவர் திரும்பாமல் ‘பின்ன நீ இப்படி பண்ணினா அப்படித்தான் செய்வா’ என்றார்.

‘தாத்தி ஸ்கூலுக்கு வந்தாளாமா, நா ஒண்ணும் பண்ணலமா, அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லுமா’ என்றிவன் சொல்ல கத்தியை மேடையில் வைத்து விட்டு முன்னே வந்து இவனை இழுத்து அணைத்துக் கொண்டவர், சில கணங்கள் கழித்து இவன் விலக மீண்டும் தக்காளி நறுக்க தொடங்கினார். ‘தாத்தி வரல இல்லமா’ என்று மீண்டும் கேட்டுவிட்டு வெங்காயத்தின் பச்சை வீச்சத்துடன் முன்னறைக்கு வந்தான்.

வதம் – பானுமதி. ந

 பானுமதி. ந

காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.

வழி தப்பிய தவிட்டுக் குருவி  அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான்.  அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.

இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’

தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.

வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்….  ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!

சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா?  என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’

‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’

‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’

‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’

தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க

இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…

“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”

இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”

‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’

“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”

அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’

“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.

பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?

திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”

அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.

’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’

”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.

இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?

இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.

“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”

‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’

“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”

‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’

“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”

அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.