சிறுகதை

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

அக்கா வீடாகவே இருந்தும் வீட்டு முற்றத்தில் யாரும் இல்லாதது உள்ளே செல்வதற்கான ஒரு தயக்கத்தை அளித்தது. காலர் வைத்த நைட்டி அணிந்தபடி விமன்யா எதிர்பட்டாள். என் தயக்கத்தை பார்த்து சிரித்தபடியே என் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல் “ம்மா” என சத்தமாக அழைத்தாள். பள்ளிச் சீருடை தான் அவளை எடுப்பாக காட்டும் ஒரு உடை. மெலிந்து உயர்ந்த பெண்களின் முகம் எவ்வளவு திருத்தமாக இருந்தாலும் அவர்களின் அசைவுகளில் ஒரு கவர்ச்சியின்மையும் நம்பிக்கை குறைவும் வெளிப்படவே செய்கிறது. போட்டுப் பழகிய சீருடையிலேயே சற்றே மிளிர்வு தெரியும் அவளிடம்.

அக்கா கூடத்தின் இடப்புற அறையில் இருந்து மூக்கை ஊறிஞ்சியபடி வெளியே வந்தாள். கார்த்திகாவின் மீது கடுமையான துவேஷம் எழுந்தது. அவளுக்கும் என் அக்கா வயது தான் இருக்கும். விமன்யாவை விட பெரிய பெண் ஒருத்தி அவளுக்கு இருக்கிறாள். ஆனால் அவளிடம் இன்னமும் இளமை தீரவில்லை. அக்காவின் முகம் பழுத்துச் சிவந்திருந்தது. வழக்கம் போல் இடக்கையால் தலையை சொறிந்த படி “தம்பி வாடா” என்றாள். அவள் தலையில் கை படும் போது உதடு வலது ஓரத்தில் லேசாக சுளித்துக் கொள்ளும். அவ்வழகை கார்த்திகா என்றுமே தொட்டு விட முடியாது என மனம் ஆசுவாசம் கொண்டது அல்லது கொள்ள விழைந்தது.

ஜீவா வந்து மேலே ஏறிக் கொண்டான்.

“என்னா மாமா” என இழுத்தான்.

“என்னா மாப்ள” என நானும் இழுத்தேன். அவன் என் தலையில் ஏறிக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினான்.

“அபபா இல்லையாடி” என்றேன்.

“இல்ல மாமா” என்ற விமன்யாவின் விழிகளில் என்னிடம் சொல்ல ஏதோ எஞ்சி இருந்தது.

“என்னடி” என்றேன்.

“உங்க போன வேற யாரும் எடுக்க மாட்டாங்கல்ல” என்றாள். அதிர்ந்த மனதை கட்டுப்படுத்தி “ஓ நீயா அது. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்றது இந்த கொரங்குன்னு நெனச்சேன்” என ஜீவாவை கை காட்டினேன் அவள் அந்த நாசூக்கின்மையை வெறுக்க வேண்டும் என்ற உட்சபட்ச வேண்டுதலுடன். விமன்யா மேலே ஏதும் பேசவில்லை.

பசித்தது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “டின்னர் இங்க சாப்ட்றீங்களா மாமா” என்றாள். ஏற்பின் அசைவுகள் என்னுள் எழுவதற்கு நேரம் கொடுக்காமல் “கெளம்புறீங்களா” என்றாள். இவ்வளவு சிறிய பெண்ணுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு கூர்மை என எண்ணும் போதே பதினைந்து பெண்ணுக்கு சிறு வயது அல்ல என்றும் தோன்றியது. பல பெண்களிடம் ஆடுவது தான் என்றாலும் அச்சிறுமியிடம் அவ்விளையாட்டை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. அவள் எதிர்பார்க்கும் சங்கட உணர்வை முகத்தில் நிலைக்க விட்டால் என்ன என்று கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒன்று தீர்மானமாக அதை மறுத்தது. நல்லவேளையாக “தூங்குற நேரத்த நீ எப்படி கொறச்சுப்பன்னு சொன்ன மாமா” என்றபடியே அக்கா வெளிவந்த அதே அறைக்குள் இருந்து வந்தாள் விமன்யாவின் தங்கை கீர்த்தி. எதை முதன்முறையாக கேட்டாலும் ஏற்கனவே அதை என்னிடம் கேட்டது போலத்தான் சொல்வாள்.

சிலரிடம் எச்சூழலிலும் ஒளியேற்றிவிடும் ஒரு தீ இருக்கும். கீர்த்தி அத்தகையவள்.

“ரொம்ப நேரம் தூங்கணும்னு அவசியம் இல்லடா. கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால பஸ்ல போறப்ப வண்டில பின்னாடி உக்காந்து போறப்பவெல்லாம் கண்ண மூடிப்பேன்” என்றேன்.

“இப்ப நா கேட்டுட்டு தான இருக்கேன் நானும் கண்ண மூடிக்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

திடீரென நினைவெழுந்தவளாய் “மாமா அந்த கதைய கண்டினியூ பண்ணே. தலமுடியும் துளிக் குருதியும்” என்றாள்.

குருதி என்ற வார்த்தையை அவள் உச்சரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லியிருந்தது எனக்கே மறந்து விட்டது. நெருங்கி நண்பர்கள் அனைவரின் ஒரேயொரு முடியையும் ஒரு துளி ரத்தத்தையும் எடுத்து பாடம் செய்து வைப்பவனின் கதை. யார் என்னிடம் அதைச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைக் கதையாக இன்னொருவரிடம் சொல்லும் வரை உள்ளுக்குள் ஏதோ அரித்துக் கொண்டிருந்தது. இப்போது கீர்த்தியிடம் கூட இயல்பாக சொல்லக்கூடியதாகிவிட்டது அக்கதை. விமன்யாவின் கடுப்பான முகத்தைப் பார்க்க எழுந்த இச்சையை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி மாமா போவீங்க” என இடை வெட்டினாள் விமன்யா.

“கீறி என்ன தூக்கிட்டுப் போகும்” என கீர்த்தியை கை காட்டினேன்.

“நானும் தூக்குவேன் நானும் தூக்குவேன்” என ஜீவா தலையில் இருந்து முதுகுக்கு இறங்கி விட்டான். விமன்யா மேலு‌ம் எரிச்சல் அடைவது தெரிந்தது.

“நான் பிரசன்னாவ வந்து விட்டுட்டு வரச் சொல்றேன்” என்றாள். அந்நேரம் அவள் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. இவளுக்கு என்ன வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விழைகிறாள்? நான் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறாள்?

பிரசன்னா வந்தான். நெடுநெடுவென இருப்பவன். அப்படி மெலிந்து உயரமாக இருக்கும் இளைஞர்கள் தான் சாதிக்க தகுந்தவர்கள் என்ற ஒரு பொது புத்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் விமன்யா போன்ற மெலிந்த பெண்கள் அப்படி நினைக்கப்படுவதில்லை.

“வர்றண்டி கீறி வர்றங்க்கா வர்றேன் மாப்ள” என ஒவ்வொருவராக விடைபெற்ற பிறகு “இது லைஂபோட பிககனிங் ஸ்டேஜ் விமி. பிகேவ் யுவர்செல்ப் ” என விமன்யாவிடம் சொல்ல வந்ததை முழுங்கி “சி யூ விமி” என்று மட்டும் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினேன். அப்படி அவளிடம் சொல்லாதது ஒரு ஆறுதலையும் அளித்தது.

பிரசன்னாவிற்கு பின்னே வண்டியில் நான் ஏறியதும் ஒவ்வொரு தெரு விளக்காக அணைந்ததை எட்டு மணிக்கே கடைத்தெரு காலியாகக் கிடந்ததை பிரசன்னா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாததை பேருந்தில் ஏறிய பிறகே எண்ணிக் கொண்டேன். ஓட்டுநரையும் நடத்துநரையும் தவிர வேறு யாருமே இல்லாத பேருந்து மெல்லிய துணுக்குறலையும் மகிழ்ச்சியையும் அளித்தது யானையின் உட்புறம் இருப்பது போல . விளக்குகள் அணைந்திருந்ததால் அமர்ந்திருந்த நடத்துநரின் முகம் தெரியவில்லை. டிக்கெட் எடுத்து பிறகு பேருந்தின் மைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

எல்லா இருக்கையும் காலியாகக் கிடந்தும் என் இருக்கை ஓரத்தில் அவன் வந்து அமர்ந்தான். நான் ஏறிய பிறகு பேருந்து எங்குமே நிற்கவில்லை இவன் எப்படி ஏறினான் என்ற எண்ணம் எழுந்ததும் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. அந்த பயமும் பலமுறை ஏற்கனவே உணர்ந்தது போலவே இருந்தது. தமிழ்ச்செல்வி அக்காவின் வீட்டின் இருண்டு அகன்ற கூடத்தில் அவள் தனியே அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட போது எழுந்த பயம் அது. காட்சியை விட சத்தங்களே அதிக பயத்தை கொடுத்தது. அவள் குரல் அந்த குளிர்ந்த பெருங்கூடத்தின் எல்லா மூலைகளிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது நாய்கள் ஒன்றிணைந்து ஊளையிடுவது போல.

நம்பிக்கை இன்மையை மட்டுமே வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டிருந்தான். அவன் செய்யப் போகும் ஒவ்வொன்றையும் முன்னரே என்னால் கணிக்க முடியும் எனத் தோன்றியது. அப்படி நான் கணிப்பவற்றையே அவன் செய்வது அவனை மேலும் வெறுக்க வைத்தது. அசிங்கமான ஏதோவொன்று காலில் ஒட்டியிருப்பது போல நெளிந்து கொண்டே இருந்தேன். அழகானவற்றால் அப்படி ஈர்த்து அருகில் வைத்துக் கொள்ள முடியாது.அவற்றால் சலிப்பு தட்டக்கூடும். ஆனால் வெறுக்கிறவற்றை நோக்கி எழும் ஈர்ப்பை எப்போதும் போல் அப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பர்ஸை சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சில பத்து ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்த பழைய கிழிந்த பர்ஸ் அது. அதிலிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து அந்த பர்ஸின் இன்னொரு மூலையில் சொறுகினான். அதனை ஒரு சிறிய நோட்டில் குறித்துக் கொண்டான். ஒரு பழைய தோளில் மாட்டக் கூடிய பை. அவன் அதைத் திறந்த போது உளராத துணிகளில் இருந்து வரும் ஊமை வாடை அடித்தது. பை முழுக்க புத்தகங்கள் சீரில்லாமல் கிடந்தன. வாசிக்கும் பழக்கமுடைய இன்னொரு பைத்தியம் என எண்ணிக் கொண்டேன். அனுவனுவாக அவன் மீது வெறுப்பு பெருகியபடியே வந்தது. கூர்மையற்ற மங்கலான முகம். தொப்பை வெளித்தள்ளத் தொடங்கி இருக்கும் உடல். எண்ணெய் வைக்காத தலை. முகம் முழுவதும் படராமல் அங்கொன்றும் இங்கொன்றுமென தென்பட்ட தாடி. என்னைப் பார்த்து அவன் லேசாக சிரித்த போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. அந்தப் குறுகிய நேரப் பயணம் எப்போது முடியும் என்றிருந்தது.

“சார்” என நான் கேட்டதிலேயே கேவலமான குரலில் என்னை அழைத்தான்.என் வயதோ என்னை விட சற்று மூப்பாகவோ இருக்கக்கூடியவன் என்னை அப்படி அழைப்பது மேலும் வெறுப்பேற்படுத்தியது.

ஒன்றும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்க புரோகிராமரா” என்றான். எனக்கு திக்கென்றிருந்தது.

“இல்லை” என்றேன்.

“பொய் சொல்லாதீங்க பிரகாஷ்” என்றவனின் முகம் கணம் கணம் மாறுவது போல இருந்தது.

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“என்னத் தெரியலையா” என்றவனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தும் அம்முகத்தை நான் நினைவுமீட்ட விரும்பவில்லை.

மேலு‌ம் சிலர் பேருந்தில் இப்போது அமர்ந்திருந்தனர். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். என்னையறியாமலே அவன் யார் என நான் ஊகித்திருந்தேன். விசித்திரமாகத் தோன்றினாலும் ஓட்டுநர் இருக்கை காலியாக இருந்தது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பேருந்து விரைந்து கொண்டிருந்த போதே நடத்துநர் குதித்து விட்டார். அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியதால் ஏற்பட்ட குலுக்கலில் என் அருகே அமர்ந்திருந்தவன் முன் இருக்கையின் கம்பியில் இடித்துக் கொண்டான்.

“விமன்யாவ ஏன் தேவிடிச்சின்னு சொன்ன?” என்று அவன் குரலுக்கு வாய்க்கவே முடியாத கடுமையுடன் சொன்னான்.

“நான் சொல்லல” என்றேன். அவன் சிரித்தான்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கையில் விமன்யா அழுதபடி அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்னடா பண்ணனுங்கிற நீ” என்றேன் என்னுடைய வழக்கமான கடுமையுடன். பழகிய நாய் போல அவன் முகம் சுண்டியது. அது மேலும் தன்னம்பிக்கையை அளிக்கவே “அப்படி பேசினாத்தான் பதினஞ்சு வயசுலயே கண்ட நெனப்புலயும் அலையாம ஒழுங்கா படிப்பா. அதோட நான் தூக்கி வளத்த பொண்ணுடா அவ” எனச் சொல்லும் போது என் சொற்களின் நம்பிக்கை இன்மையை உணர்ந்து அவன் மீண்டும் சிரித்தான்.

“மரியாதையா இறங்கிப் போயிடு” என்றேன்.

ஒரு சிறிய ஊசியால் என் விரல் நுனியில் குத்தி ஒரு துளிக் குருதியை எடுத்தான். ஒரேயொரு முடியை மட்டும் லாவகமாக பிடுங்கினான். அச்செய்கை பால் புகட்டி விடுவது போல இருந்தது. பெருமூச்சுடன் எழுந்துகொண்டு மெலிதாக சிரித்தான்.

“இறங்கப் போறியா” என்றேன். அவ்வளவு கனிவுடன் அதை கேட்டிருக்கத் தேவையில்லை.

“ஆமா இதுக்குத்தான வந்தேன்” என்றேன்.

ஏதோ வருத்தம் நெஞ்சை அழுத்தவே “போகாதடா” என்றேன்.

படபடப்புடன் “ப்ளீஸ் டா பிரகாஷ் போகாத” என்றேன் மீண்டும்.

அவன் அமர்ந்தான்.

பிரகாஷ் மீண்டும் அந்தக் கதையை என்னிடம் சொன்னான். பலமுறை கேட்ட பலமுறை சொன்ன அதே கதை. அக்கதையை கேட்காமல் அதன் உச்சத்தில் திளைக்காமல் வதைபடாமல் அவனை என்னால் என்னிடமிருந்து பிரித்தனுப்ப முடிந்ததேயில்லை.

அந்தப் பழக்கம் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்டது. அப்பாவின் தலையில் இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள். “வெடுக்” என்ற சப்தத்துடன் அந்த முடிகள் பிடுங்கப்படுவது என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த முடி பிடுங்கப்பட்டதும் அப்பா அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரிப்பார். இவ்வளவு அழகாக என் அப்பாவால் சிரிக்க இயலுமா? உலகத்தில் எந்த மனிதராவது இவ்வளவு அழகாக சிரித்துவிட முடியுமா? அச்சிரிப்பை அம்மாவுக்காக மட்டுமே சேர்த்து வைத்திருந்தார் போல. ஒருமுறை கூட அவர் அப்படி என்னைப் பார்த்து அப்படி சிரித்ததில்லை. என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு கருணை மட்டுமே அவர் சிரிப்பில் இருக்கும். அது என்னை துன்புறுத்தும்.

அப்பா அம்மாவையோ என்னையோ அடித்ததில்லை. மிக நிதானமாகப் பேசுவார். தூய கண்ணாடியின் கூர்மை கொண்ட பேச்சு. லாவகமாக வயிற்றுக்குள் இறக்கி உள்ளுறுப்புகளை அறுத்து ரத்தம் கொப்பளிக்க வைக்கும் பேச்சு. அவரின் நிதானமான பேச்சினை அழாமல் கேட்பது அம்மாவுக்கு மற்றொரு பாடு. ஒருவேளை அழுதுவிட்டால் அவர் தன்னையே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார். அதனால் அம்மா அவரின் கண்ணாடிப் பேச்சுகளை நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும் பற்களில் தேக்கி உதட்டை கடித்தபடி கேட்டு நிற்பாள். அவள் திரும்பி நடக்கும் நேரங்களில் கண்ணீரோடு சில துளிகள் குருதியும் சிந்தும்.

நெற்றிப் பொட்டு போன்ற சத்து மாத்திரை கொடுப்பதெற்கென அரை நாள் பள்ளி வைக்கும் போது மருத்துவமனை அழைத்துச் செல்வார்கள். அரை கிலோமீட்டர் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு பின் கை கட்டியபடி வரிசையாகச் செல்வோம். சில நாட்களில் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியைப் பிடித்து ஊசியால ஒரு குத்து குத்தி ஒரு துளி ரத்தம் எடுப்பார்கள். அதனை ஒரு சிறிய செவ்வக வடிவ கண்ணாடி சில்லில் தேய்ப்பார்கள். குத்தும் போதிருந்ததை விட அந்த கண்ணாடி கையில் படும் போது உடல் கூசும்படியாக வலிக்கும். வரிசை முடியும் வரை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிச் சில்லுகளையே பார்த்து நிற்பேன். வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்களின் மீது ஒரு மோகம் உருவாகத் தொடங்கியிருந்தது அப்போது. அம்மா மௌனித்துப் போய்விடும் நாட்களில் என் உலகம் ஓடாமல் நின்று போய்விடும். அது போன்ற நாட்களில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தீப்பெட்டிகள் அப்பாவின் பிளேடு பாக்கெட்டுகள் கொட்டாங்குச்சிகள் அம்மாவின் உடைந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் அடுக்கியபடியே இருப்பேன். அது என் ரகசியப் பொழுது போக்கு. யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். அதோடு புளியங்காயை லேசாக வாயில் வைத்தால் வாய் நிறைய உமிழ்நீர் சுரந்து விடும். அதனை நூறு மிடறாக துளித்துளியாய் அருந்துவேன். இதுவும் பிறருக்குத் தெரியாது.

வரிசையாக அடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கண்ணாடிச் சில்லுகளை பார்த்த போது மற்ற அனைத்தும் அற்பமாகத் தெரிந்தது.

“இதெல்லாம் என்னக்கா பண்ணுவீங்க” என்று ஊசியால் குத்தும் பெண்ணிடம் கேட்டேன்.

என்னை குறும்புடன் கூர்ந்து நோக்கியவள் “இந்த கிளாஸ் எல்லாத்தையும் வெந்நீர்ல போட்டா ரத்தம் எல்லாம் தண்ணிக்கு போயிடும். அதோட காபி பவுடர் கலந்து குடிப்போம்” என்றாள். எனக்கு வாயில் அந்த நீரை வைத்துக் கொண்டு மிடறு மிடறாக அருந்த வேண்டும் போலிருந்தது. தியாகராஜனிடம் அதைச் சொன்ன மறுநாள் முதல் என்னிடம் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால் என்னால் தான் முடியவில்லை. நான் முதலில் எடுத்ததே அவன் விரல் குருதியைத் தான். மறுமுறை மருத்துவமனைச் சென்ற போது குருதியற்ற கண்ணாடிச் சில்லுகள் கொண்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒவ்வொரு ரூபாயாக சேர்ப்பது போல ஒவ்வொரு துளி குருதியாக எடுத்தேன். பெரும்பாலும் நண்பர்கள் தனிமையில் இருக்கும் போது தான் எடுப்பேன். ஒருவன் விரலில் எடுப்பதை மற்றவன் அறிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன். சில சமயம் எதேச்சையாக சில சமயம் மிரட்டி சில சமயம் பயமுறுத்தி என எப்படியெல்லாமோ குருதிச்சில்லுகளை சேகரித்தேன். என் காக்கி கால்சட்டையின் டிக்கெட் பாக்கெட்டில் இரண்டு சில்லுகள் எப்போதும் இருக்கும்.

யார் விரலில் என்றைக்கு எடுத்தேன் என்பதை ஒரு தனி நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த நோட்டையும் கண்ணாடிச் சில்லுகளின் பெட்டியையும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்தேன். குருதி எடுப்பதை விட முடி பிடுங்குவது எளிது. அதற்கும் தனி நோட்டு. முடிகளை முதலில் கோணி ஊசிகளில் கட்டி வைத்திருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல அந்த பழக்கம் குறைந்தது. முடிகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்து அது யாருடைய முடி என்று என்பதை குறித்து வைப்பேன். அப்படி குறித்த போது தான் கண்ணாடிச் சில்லுகளின் நினைவெழுந்தது. அதில் குறித்து வைக்கவில்லை என்றபோது திக்கென்றிருந்தது. பின்னர் ரத்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நோட்டைப் புரட்டி அடுக்கி வைத்திருந்த வரிசையையும் நோட்டில் குறித்திருந்த சீரியல் நம்பரையும் ஒப்பிட்டு நுனி விரலால் தொட்டெடுக்கக்கூடிய சிறிய காகித நறுக்கில் சீரியல் நம்பர் போட்டு ஒட்டி வைத்தேன். மிகத்தீவிரமாக ஒரு செயலில் நான் ஈடுபாடு கொண்டிருந்ததாக அது என்னை நம்ப வைத்தது. அதைத்தவிர அனைத்துமே அவசியம்றறது என எண்ணத்தலைப்பட்டேன். அம்மாவின் கடித்த உதடுகளும் அப்பாவின் கண்ணாடிப் பேச்சுகளும் எனக்கு பொருட்டல்ல என்றாயின.

கல்லூரி இறுதி ஆண்டுகளில் வீட்டிற்கு வரும் போது கண்ணாடிச் சில்லுகளின் வரிசை எண்ணைப் பார்த்து அது என்று எடுக்கப்பட்டது என்பதை நினைவு மீட்டுவதும் ஒரு இஞ்சில் இருந்து இரண்டு அடி வரை உள்ள மயிரிழைகள் யார் தலையில் இருந்து என்று எடுக்கப்பட்டன என எண்ணிக் கொள்வதும் என் தனிமையைப் போக்கும் முக்கிய பொழுது போக்குகள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சில்லுகளை கண்களை மூடியபடி வருடுவேன். முடிகளின் மென்மையை விரல்களில் உணரும் போது உடல் சிலிர்க்கும்.

அதன்பிறகு நானே அறியாமல் நான் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் நான் செத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகே என் கனவுகளில் அவனை காணத் தொடங்கினேன். என் கனவில் வருபவனை எல்லோரும் விரும்பினர். அவன் யார் என அறிவதற்காக நான் வெகு நேரம் உறங்கினேன். வெகுநாட்கள் உறங்கினேன். உறங்கி எழுந்த போது நான் முழுமையாக இறந்து விட்டிருந்தேன். கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் எங்கோ புதையத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் கடித்த உதடுகள் கண்ணில் படத் தொடங்கியது.

பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் முகத்தில் அச்சமூட்டும் வெறுப்பு படர்ந்தது.

“ஒம்மால நீ தாண்ட என்னக் கொன்ன” என விபரீதமான குரலில் கத்தினான்.

எனக்கு தொண்டை அடைத்தது. விமன்யா இளித்தபடி எழுந்து சென்றாள்.

“இல்ல எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது” என்றபோது எனக்கு அழுகை வந்துவிட்டது.

“உனக்கு ஒன்னும் தான் தெரியாதே. உங்கிட்ட எவ்வளவு சொன்னேன். என் கண்ணாடிகள உடைக்காத உடைக்காதன்னு. தேவடிப்பயலே கேட்டியாடா நீ. போட்டு ஒடச்சேல்ல. நீ ஒடச்ச பிறகும் எவ்வளவு கெஞ்சு கெஞ்சினே உன்னைய. அத அப்படியே கரச்சாவது என்ன குடிக்க வுட்றான்னு. வுட்டியாடா வுட்டியாடா என்னைய நீ” என்றபோது அவன் முகத்தில் அச்சமூட்டக்கூடிய உக்கிரம் படர்ந்தது.

நான் அவனைத் தடுத்ததாக நினைவில்லை.

“தட்டி விடலேன்னா நீ செத்துருப்படா நாயே” என்றதும் சட்டென ஒரு ஆவேசம் எழுந்தவனாய் “நா உன்னோட மீட்பன்” என்றேன்.

“தூ ஒலுக்க குடுக்கி. நான் ஏன்டா சாவுறேன். எனக்கு சாவே கிடையாது. நீ செத்துருப்படா. அன்னிக்கு நீ செத்துருப்ப” என்றான்.

கை கால்கள் எல்லாம் படபடத்து நடுங்கத் தொடங்கின. அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.

“இப்பனாச்சும் ஒத்துக்கடா. இப்பனாச்சும் ஒத்துக்கடா” எனக் கெஞ்சத் தொடங்கினான். புண்ணைக் கிண்டியது போல ஒரு வெறி ஏற்படுத்தும் நமைச்சல் உடல் முழுக்கப் பரவியது எனக்கு.

“எத ஒத்துக்கணும்” என்றேன்.

மண்டையே தெறித்து விடுவது போல “அய்யோ அய்யோ அய்யோ என்னக் கொல்லுடா. என்னால முடியாதுடா என்னால முடியலடா. நான் என்னடா பாவம் பண்ணினேன் உனக்கு. அல்லாத்தையும் உட்டுத் தொலச்சுட்டு போகத் தான்டா உன்ன கேக்கிறேன்” என தலையில் அடித்துக் கொண்டு அலறினான்.

என்னுள் மேலும் மகிழ்ச்சி பரவியது. மகிழ்ச்சியாக மட்டுமே இதனை எனக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவன் வென்று விடுவான். அவன் என்னை வென்றால் நீங்கள் என்னை மதிக்க மாட்டீர்கள்.

“நீ போகலாம்” என்றேன். பேருந்து உச்ச விரைவில் சென்று கொண்டிருந்தது. கூரையை பிய்த்துக் கொண்டு பேருந்தின் மேலேறினான். தலைகுப்புறக் குதித்தான். அவன் மண்டை சிதறுவதைக் கண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் அலைபேசியை எடுத்தேன்.

“கீரி அந்த கதைய கண்டினியூ பண்ணலாமா?” என்றேன். சொல்லச் சொல்ல எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அது கதை தான். கதை மட்டும் தான்.

அதுக்கு என்ன இப்ப? – நரோபா

நரோபா

உச்சி வெயிலிலே, மலையுச்சியிலே, தனித்த பன்றிப் பாறையின் கொம்பிலே சாய்ந்து, வானத்தை வெறித்தபடி பீடி இழுத்து கொண்டிருந்தான் பழுவேட்டையன்.

மூச்சிரைக்க நிற்காமல் ஓடிவந்தான் கிடாரம் கொண்டான்.

பழுவேட்டையன் மெல்லத் திரும்பி, துச்சப் பார்வையை வீசினான். ‘என்ன?’ என அவன் கண்கள் வினவின.

“அண்ணே… காரமடையான் தாயோளி… பச்ச புள்ளையப் போடற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி கத எழுதிப்புட்டாண்ணே”

பார்வை மீண்டும் வானத்தை வெறித்தது. நிதானமாக புகையை உமிழ்ந்தான்.

“அதுக்கு என்ன இப்ப?”

கிடாரம் வேகவேகமாக மூச்சிழுத்து விட்டான். வியர்வை கொட்டியது.

“அண்ணே… செல்லூர்க்காரன் மத்தவன் பொண்டாட்டியோட படுக்குறத நம்ம அண்ணி பேர வெச்சு கத எழுதி இருக்காண்ணே”

நெருப்பெரியும் பீடி முனையை திருப்பி கண்ணுக்கருகே வைத்து உற்று நோக்கினான் பழுவேட்டையன். “ஹ்ம்… அதுக்கு என்ன இப்ப?” என்றான் பீடியை திரும்பி வாயில் வைத்தபடி.

கிடாரம் முகம் சிவந்து பழுத்தது. பையில் வைத்திருந்த மானிடர் புட்டியை திறந்து, பிளாஸ்டிக் கோப்பையில் ஊற்றினான், அதில் தண்ணி பாக்கெட்டில் இருந்து நீர் பாய்ச்சி, ஒரு மிடறு குடித்தான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவன் குரல் தளர்ந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நா தழுதழுக்க, “அண்ணே… போவட்டும் விடு… இந்த புதுப்பட்டிகாரன் நம்ம நெடுங்குடி முத்து ஆக்கிப் போட்ட வெண்டக்கா மண்டி நல்லாயில்லன்னு ஸ்டேடஸ் போட்ருக்காண்ணே”

பழுவேட்டையன் சட்டென நிமிர்ந்தான். பாறையிலிருந்து கீழே குதித்தான். பீடியை தரையில் வீசி வெறும் காலால் தேய்த்தான். குனிந்து தேம்பிக் கொண்டிருந்த கிடாரத்தின் சொக்காயை பிடித்து தூக்கினான். “த்தா… ஏண்டா இத முதல்லேயே சொல்லல…” என விறுவிறுவென மலையிறங்கிச் சென்றான்.

காக்காக்குஞ்சு – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

ஊரில் ஆலமரத்தடி ஸ்டாப் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரிய கோவிலுக்குச் செல்வதென்றால் அந்த நிறுத்தத்தில்தான் இறங்கிச் செல்ல வேண்டும். உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல் வெளியூர்வாசிகளும் அநேகம் வந்து செல்லும் இடம். பல நேரங்களில் வருபவர்கள் மரத்தடியில் விட்டுச் சென்ற வாகனங்களில் எச்சம் போட்டிருப்பதைக் கண்டு பறவைகளைத் திட்டுவது அங்கு உள்ளவர்களை எரிச்சலடைய வைக்கும். அப்படித் திட்டிய வெளியூர்க்காரருடன் ஒருநாள் கோமதி சண்டைக்கே போய் விட்டாள், “அக்கற உள்ளவுக வண்டிய மூடி வச்சிட்டுப் போனும், இல்ல வேற எங்கயாது விட்டுப் போனும்,” என்று.

அவர்களின் பொழுதுபோக்கே அந்த மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசி விளையாடி நேரத்தைச் செலவிடுவதுதான். வீட்டில் சமைத்ததை எடுத்து வந்து வட்டமாக மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட நாட்கள் ஏராளம். அந்த மரத்திற்கு வயது சுமார் அறுபது எழுபது இருக்கும். மரத்திற்கு அருகில்தான் வசந்தியின் வீடும். அதனால் அவளின் வீட்டை அடையாளம் காண்பதில் அத்தனை சிரமங்கள் இருந்ததில்லை. கூடுதலாக இன்று பந்தலும் மைக் செட்டும்.
விடிந்தால் தை 11. வெள்ளிக்கிழமை. இருபது வருடங்களையும் அந்த அழகான இடத்தில் கழித்துவிட்டு நாளை அமையப்போகும் புது வாழ்க்கையை எண்ணி உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வசந்தி. மணி பன்னிரெண்டைக் கடந்திருந்தது. அருகில் படுத்திருந்த அம்மாவின் கையை எடுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்னடி மேல் இப்படிச் சுடுது, சுகமில்லையா?” என்ற அம்மாவிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ பேசாம படு” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள், கண்களில் வடியும் கண்ணீரை மறைப்பதற்காக.

“ஏன்டி, இப்டிலாம் பண்ணக் கூடாது. பொழுது விடிஞ்சா மாப்ள வீட்ல இருந்து பொண்ணழைக்க வந்துருவாக, வெளில தாத்தா மாமாலாம் படுத்துருக்காக. சந்தோசமா இருக்கனும். மாப்ள பாக்குறதுக்கு நல்லவராத்தான் தெரியுது. உன்ன நல்லவடியா பாத்துக்குவாரு. பேசாம மனசப் போட்டு கொழப்பிக்காம படுத்துத் தூங்கு,” என்று அம்மா சொன்ன சமாதானம் அவளின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளின் சிந்தனை எல்லாம் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையை அவள் அதற்கு முன் ஒருமுறை பார்த்திருந்தும் மனதில் பதிந்திராத முகம்தான். அம்மாவும் மாமாவும் சொன்னதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தாள்.

அம்மா அத்தனை அறிவுரைகள் சொல்லியும் அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லை. புது வாழ்க்கையை ஏற்பதற்கு ஒருவித தடுமாற்றம். எதனால் என்று சரியாகத் தெரியவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். தூக்கம் வராததால் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கையில் மரத்தடியில் தம்பி தனியாக அமர்ந்து எதையோ உற்று பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவள் நினைத்தது சரிதான். அந்த காக்கா கூட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். காக்கா சாம்பல் காக்கா, வீட்டின் மூன்றாவது பிள்ளை.

மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்ததால் எப்போதும் கீச் கீச் சத்தம்தான். தோழிகளுக்குள் பிரித்துக் கொண்டார்கள், ஆளுக்கொரு பறவையாக. “ஏய் என் கிளி வந்துட்டு”, “ஏய் இன்னைக்கு என் புறா குஞ்சு பொரிச்சிருக்கு”, “என் மைனா சாப்டுச்சு” என்று அவர்களின் பேச்சுக்களும் அந்த பறவைகளைச் சுற்றியேதான் இருந்தன. தன் குயில் வரவில்லை என்று கோமதி அழுததும், தன் கிளியைக் குறவன் பிடித்துச் சென்று விட்டான் என்று அமுதா காய்ச்சலில் படுத்த கதைகளும் உண்டு. அவ்வாறு பிரிக்கப்பட்டதில் அவளுக்கான பறவை ஒரு காகம்.

பிரிக்கப்பட்டு வந்தாலும் அந்த காகத்தின் மீது இயல்பாகவே அவளுக்கொரு ஈர்ப்பு இருந்தது. மற்ற காகங்களை ஒப்பிடுகையில் அது சற்று மாறுபட்டிருந்தது. அதன் மூக்குப் பகுதி வளைந்தும் கழுத்தில் சாம்பல் நிறக் கோடும் இருந்தது. குரலும் மாறுபட்டே ஒலித்தது. அதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

தினமும் காலை எட்டு மணிக்கு அவள் வீட்டுச் சுவரில் வந்து நின்று கொண்டு “கா கா” என்று கத்திக் கொண்டிருக்கும். அவள் அம்மா வைக்கும் இட்லியையோ சாதத்தையோ சாப்பிட்டு விட்டு நன்றி சொல்வதுபோல் “கா கா” என்று மீண்டும் ஒருமுறை கத்திவிட்டுப் பறந்து செல்லும். இதையே தினமும் வாடிக்கையாக வைத்திருந்த காகம் நாளடைவில் அவர்களின் வீட்டில் ஒருவராகவே ஒட்டிக் கொண்டது.

ஒரு நாள் வீட்டுச் சுவரில் வந்து நின்ற காகம், அவள் அம்மா வைத்த சாதத்தை எடுத்து உண்ணாமல் அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்தது. “என்னடா சாதத்த சாப்பிடாம கூட்டப் பாக்கப் போதே” என்று எண்ணி அதைப் பின் தொடர்ந்தாள். வீட்டு மாடியில் சென்று அதன் கூட்டை எட்டிப் பார்க்கையில் உள்ளே புதிதாக இரண்டு குஞ்சுகள். சாதத்தை எடுத்துச் சென்ற அந்தத் தாய் காகம் அதைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது.

அந்தக் காட்சியை அவளோடு சேர்ந்து அவள் தம்பியும் ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த இரு குஞ்சுகளையும் பார்க்கையில் பிறந்த குழந்தைகளைப் பார்ப்பது போன்ற உணர்வு. உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “எக்கா இது அம்மா காக்கா இது ரெண்டும் குஞ்சுக அப்போ அப்பா காக்கா எங்கக்கா?” என்று கேட்க, இதற்கெல்லாம் இவனுக்கு பதில் சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தவள் “நம்மளப் போல அதுகளுக்கும் அப்பா இல்லடா” என்று சொன்னாள். “ஓ அப்படியாக்கா? பாவம்” என்று சொன்னவனின் முகம் சோகமடைந்தது. பின் அவனாகவே “எவ்ளோ நாள்க்கா இந்த அம்மா காக்கா அந்த குஞ்சுகளுக்கு ஊட்டி விடும்?” என்றான்.

“அந்த குஞ்சுகளுக்கு றெக்க முளைக்கிறவர, தானா சாப்பிடத் தெரியிற வர” என்று சொன்னாள்.

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் தானா சாப்பிடும்”

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் பறந்து போயிரும்”

“அப்புறம் அம்மா காக்கா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே “பிள்ளைகளா மொட்ட மாடியில நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீக? கீழ இறங்கி வாங்க. சாமி கும்பிட நேரமாயிட்டு” என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்கவே இருவரும் கீழ் இறங்கிச் சென்றார்கள்.

சந்தோசமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தவன், “எம்மா இனி தெனமும் காலைல கொஞ்சம் நெறையா சாப்பாடு வை. நம்ம வீட்டுக்கு ரெண்டு புது விருந்தாளி வந்துருக்காங்க,” என்று சொல்ல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள், “சரிடா கண்ணு, வச்சிட்டாப் போச்சு” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனுக்கோ சந்தோசம் பொறுக்க முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை அந்தக் காக்காவும் குஞ்சுகளும்தான் அவனுக்கு நண்பர்கள். விடிந்தாலும் அடைந்தாலும் அதே பேச்சுத்தான். அந்த காக்காவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவன் கேட்கும் ஒரே கேள்வி, “பாவம்லா அந்த குஞ்சுக, அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டம்? ” என்பதாகத் தான் இருந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு, இதே தை மாதத்தில்தான் தங்களின் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அப்பா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகளை காலை பள்ளி செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு டாட்டா காண்பித்தவாறே நெஞ்சில் கை வைத்து தரையில் அமர்ந்தவர்தான், இன்று வீட்டுச் சுவரில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்த நாட்கள் அவை.

அன்று தனக்கு அத்தனை விவரம் தெரியவில்லை என்றபோதிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை நன்றாக உணர முடிந்திருந்தது அவளால். வீட்டில் கூட்டம் கூட, ஒரு பெண் தன் வாழ் நாளில் எதை அனுபவிக்கக் கூடாது என்றெண்ணி நித்தமும் வேண்டிக் கொள்வாளோ அதை அம்மா அன்று அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன் கண் முன்னே நடந்தவைகளைக் கண்ட போது அவளுக்குள் ஒரு பயம் தானாகவே தொற்றிக் கொண்டது. அம்மாவின் அழுகை சத்தத்தை அந்தப் பறவைகள்கூட பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதாக எண்ணினாள்.

ஆதரவற்று நின்று கொண்டிருந்தவர்களை அரவணைத்துக் கொண்டது தாத்தாவும் மாமாவும்தான். உள்ளூரில் யாரும் இல்லை என்ற போதிலும் தங்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணினாள். கணவனைப் பிரிந்த தன் அம்மா படும் துயரங்களை தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா இல்லாத பிள்ளைகளாகக் கூட தங்களால் இருந்து விட முடியும், ஆனால் கணவனை இழந்த பெண்ணாகத் தன் அம்மாவை அவளால் பார்க்க முடியவில்லை.

“அன்னைக்கே சொன்னேன் இந்த எடுபட்ட பயட்ட இதெல்லாம் நம்மக்கு ஒத்து வராதுன்னு, கேட்டானா?”, “சோசியக்காரன் சொன்னாம்மா இது வெளங்காதுன்னு”, “இவா பெரிய மைசூர் மஹாராணி இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நெலயா நின்னுல்லா கெட்டுனான், இன்னைக்குப் போயி சேந்துட்டானே”, “போன சென்மத்துல என்ன வரம் வாங்கீட்டு வந்துச்சோ மூதேயி, நம்ம வீட்லல்லா வந்து கெடக்கு” என்று நித்தமும் வசை. தனி ஒரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பதென்பது அத்தனை எளிதான செயல் இல்லை. அப்பா இருந்தவரை கோவில் வாசலில் பூக்கடை. தற்போது அதற்கும் வழி இல்லை. வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டும் வேலை. அதில் வரும் வருமானத்தில்தான் இருவரையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவ்வப்போது ஏற்படும் பணப் பற்றாக் குறையை தாத்தாவும், மாமாவும் சரி செய்ய, அப்பா இருந்திருந்தால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் வளர்த்தாள். தான் சம்பாதிக்கத் தொடங்கிய பின்னும் அம்மா தீப்பெட்டி ஒட்டுவதை நிறுத்தவில்லை.

தான் சம்பாதித்து அம்மாவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடிகிறதை எண்ணி அவளுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கும்தான். தம்பிக்கான படிப்பு செலவை தானே ஏற்றுக் கொண்டாள். அதற்கான அனைத்து வழிகளையும் செய்து வைத்திருந்தாள். இதை எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் சில நாட்களாக அவள் ஏதோ கவலையில் இருப்பதைப் போன்று உணர்ந்தாள். கேட்டால் “உனக்குத் தான் காலகாலத்துல ஒரு நல்லது பண்ணிப் பாக்கணும்” என்றாள் அம்மா. தம்பி படிப்பு முடியும் வரை வேண்டாமென்று சொல்லியும் அவள் கேட்பதாகத் தெரியவில்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்திருந்தார்கள். மாப்பிள்ளை சொந்தமாக கடை வைத்திருக்கிறார். அவள் மாமா வழியில் தூரத்து சொந்தம். பார்த்துவிட்டுச் சென்றவர்கள் நல்ல செய்தி சொல்ல ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது தை பதினொன்று என. தாத்தாவும் மாமாவும் முன்னின்று நடத்தினார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் திருமணம். அவள் அம்மா சொன்னது போல் சரியாக ஏழு மணிக்குப் பெண் அழைக்க வந்திருந்தார்கள். குளித்துக் கிளம்பி வெளியில் வர மணி எட்டு. காகம் கத்தும் சத்தம் கேட்க, சென்று பார்த்தாள். வீட்டுச் சுவரில் அதே காகம். தம்பியிடம் சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டு வண்டியில் ஏற, நல்ல நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என்பதால் வண்டி உடனே மாப்பிள்ளையின் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்குப் புறப்பட்டது.

வருபவர்களை வரவேற்றுக் கொண்டு மகளுக்கு உதவியாக சேலையை சரி செய்வதும், வியர்வையைத் துடைத்துவிடுவதுமாக அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் அம்மா. முகூர்த்த நேரம் வரவும், “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல இவள் மணமேடை சென்று அமர்ந்தாள். பூசைகள் பல செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர். பின்னர் சற்று நேரத்தில் “பொண்ணோட அம்மாவையும் தோப்பனாரையும் கூப்பிடுங்கோ” என்று சொல்ல சித்தியும் சித்தப்பாவும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் தன்னை அறியாமல் அவள் கண்கள் அம்மாவைத் தேடியது. கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். அருகில் தம்பி.

எண்ணங்கள் செய்கைகள் – காலத்துகள்

காலத்துகள்

‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்று பாடும் டீச்சருடன் நானும் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தேன். டீச்சர் லயத்தோடு தாளம் போட்டுக் கொண்டிருக்க, நான் தோசையை திருப்பிப் போடுவது போல் உள்ளங்கையையும் பின்னங்கையையும் மாற்றி மாற்றி தொடையில் தட்டிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேர க்ளாஸ், ஆரம்பித்து எவ்வளவு நேரமாயிற்றோ, என்னிடம் வாட்ச்சோ, அறையில் கடிகாரமோ இல்லை, பெரும் பாரத்தை சுமந்தபடி ஊர்ந்து செல்லும் கணங்கள். டீச்சர் சொல்லும்வரை ‘ஸ ரி க ம,’ தான்.

‘கொஞ்சம் வாயத் தொறந்து பாடு, அப்போதான் உச்சரிப்பு ஸ்பஷ்டமா வரும்,’ என்றார் டீச்சர். டீச்சர் குடியிருக்கும் வீட்டின் நான்கு போர்ஷன்களில், முதலாவது மு. முத்து அல்லது முசுட்டு முத்து என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் டாக்டர் முத்துகிருஷ்ணனின் ஒற்றையறை க்ளினிக். செங்கல்பட்டுக்கு குடி வந்த புதிதில் ஓரிரு முறை மு. முத்துவிடம் சென்றிருக்கிறோம். நோயாளி கிளம்பினால் போதும் என்று சலிப்பும் முகச்சுளிப்புமாக வைத்தியம் பார்ப்பார் என்றாலும் தினமும் மாலை கூட்டம் இருந்தபடிதான் இருக்கும். நான் மெல்லிய குரலில் பாட முயற்சிப்பது நோயாளிகளின் உடல் நலம் பற்றிய கவலையால் மட்டும் அல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கக்கூடும்.

டீச்சர் மிகவும் அமைதியானவர், பொறுமை மிக அதிகம், ஒரே விஷயத்தை சலிப்பில்லாமல் சொல்லித் தருவார், கற்கும் நான்தான் வெறுப்படைவேன். நோட்டை மூடிவைத்து, ‘நாளான்னிக்கு பாக்கலாம்,’ என்றவர், அவசரமாகக் கிளம்பியவனை நிறுத்தி ‘வீட்ல ப்ராக்டிஸ் பண்றியோ’ என்று கேட்டார்.

மூன்று வாரங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன், என் சங்கீத ஞானத்தில் எந்த சிறிய முன்னேற்றமும் இதுவரை இல்லை, ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதை உணர்ந்ததைப் போன்று டீச்சரின் முகபாவம்.

‘இல்ல டீச்சர், ஹோம் வர்க்லாம் இருக்கு டைம் கெடக்க மாட்டேங்குது’

‘நேரங் கெடக்கும்போது பண்ணு, சாங்காலம் முடியலனா காத்தால. அப்பத்தான் ….’ என்று கர்நாடக இசை தொடர்பான, எனக்கு புரியவே புரியாத சில பிரத்யேக வார்த்தைகளுடன் அவர் பேச ஆரம்பிக்க எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘சரி டீச்சர்’ என்றேன்.

வெளியே மு. முத்து அறைக்கு முன் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் பார்வையைத் தவிர்த்து வழக்கம் போல் விரைவாக கடந்து செல்ல முயன்ற என் முழங்கையை தொட்டு நிறுத்தினார் ஒருவர். அறிமுகமில்லாதவர்தான், நிம்மதி.

‘தம்பி நீதான் பாடிந்தியாப்பா இவ்ளோ நேரம்’ என்றார். தலையாட்டினேன்.

‘எவ்ளோ நாளா கத்துக்கற’

‘இப்போதான்’ என்று சொல்லி விட்டு அவர் வேறேதும் கேட்பதற்கு முன் வெளியேறினேன்.

மூன்று வார நாட்கள் மாலையில், சனி அன்று மட்டும் காலை என நான்கு நாட்கள் வகுப்பு. தெரிந்தவர்கள், கூடப் படிப்பவர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்று ஓட்டமும் நடையுமாக ஆறரை மணிக்கு க்ளாசுக்கு வருவேன், ஒரு மணி நேரம் கழித்து திரும்பும்போது இருட்டில் செல்வது கொஞ்சம் வசதி. ஆனாலும்கூட ஒரு நாள் எதிரே ஸ்ரீதர் வந்துவிட்டான். எவ்வளவோ ஜாக்கிரதையாக அவனைத் தாண்டிச் செல்லப் பார்த்தபோதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் என்னை கவனித்து விட்டான்.

‘என்னடா இங்க’

‘டாக்டர்ட்ட வந்தேண்டா, இப்போதான் பாத்துட்டு கெளம்பறேன்’

‘ஒடம்பு சரில்லையா, க்ளாஸ்ல நல்லாத்தான இருந்த’

‘திடீர்னுதான், சாங்காலம் வீட்டுக்கு வந்தப்பறம் ஒரு மாறி இருந்துச்சு அதான்’

‘கொரல் கட்டிருக்கான்ன, ஒரு மாதிரி இருக்கு. தொண்டவலி வந்தா அப்பறம் சளிதாண்டா’

‘ஆமாம்டா வரேன், வெளில நிக்க வேணாம்’

காலையில் குளித்து முடித்து ஸ்லோகங்களை ராகத்தோடு சொல்வதைத் தவிர என் பாட்டி பாடியதோ இசை குறித்து வேறெந்த ஆர்வமும் காட்டியதோ இல்லை. புதனன்று, சென்னை தொலைகாட்சி முதல் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர கர்நாடக இசை நிகழ்ச்சியை, ஒலியை முற்றிலும் மட்டுப்படுத்தி, பாடுபவர் வாயசைப்பதையும், முகத்தை அஷ்டகோணலாக்குவதையும், தொடையை ஆக்ரோஷமாக தட்டுவதையும், கைகளை வீசுவதையும் கொஞ்ச நேரம் பார்த்து ரசிப்பதைத் தவிர எனக்கு சுத்தமாக கர்நாடக இசையில் ஆர்வம் கிடையாது. படிப்பை தவிர வேறேதாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம். எனக்கு எண்ணற்ற திறமைகள் இருப்பதாகவும் பெரும் நம்பிக்கை.

‘இன்னும் ரெண்டு வர்ஷத்ல டென்த் போய்டுவான், அப்பறம் டைம் எங்க கெடக்க போகுது, ஏதோ இப்போதைக்கு ரெண்டு வர்ஷம் கத்துக்கட்டும்’ என்று ஆரம்பித்தார்

‘ஐயே என்னால முடியாது தாத்தி, ஆள விடு’

‘நீ இந்தி கத்துக்கலையா அது மாறி பழகிடும்’

‘நார்த்துக்குலாம் வேலைக்கு போனா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்’ என்பதற்காகவே நான் ஹிந்தி கற்றுக்கொள்ள சேர்க்கப்பட்டாலும், திரையிசை பாடல்கள் மீதுள்ள ஆர்வம்தான் ஹிந்தி கற்றுக்கொள்வதின் மீதான விருப்பாக மாறியது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. டீச்சரிடம் கற்றுக்கொள்வதைவிட, ஹிந்தி திரையிசை பாடல்கள் வழியாகவே அதிகம் கற்று எளிதில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் அனைத்து தேர்வுகளையும் பாஸ் செய்திருந்தேன். பாடல் காட்சிகளில் எந்தக் கூச்சமும் கட்டுப்பாடுமின்றி குதித்துத் திரியும் ஷம்மி கப்பூர் என் விருப்ப நாயகர்களில் ஒருவரானார். பனியில் ‘யாஹூ’ என்று கத்தும் அவரைப் போலவே நானும் ‘யாஹூ’ என்று என் வீட்டின் பின்னால் இருந்த காலி மனையில் வியர்த்து தள்ளிக்கொண்டு ஊளையிட்டேன். வீட்டிலிருந்த கேசட்களிலிருந்து ஹேமந்த் குமாரின் குரலும் ,ஆர்.டி.பர்மனின் இசையும் என்னை வசீகரித்தன. ‘ஒத்தனும் இப்போலாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க’ என்று ஆர்.டி குறித்த அப்பாவின் ஆதங்கத்தை நானும் உணர்ந்தேன். வானொலியில் வரும் ஹிந்தி திரையிசை பாடல் நிகழ்ச்சி எதையும் தவற விடுவதில்லை. ‘ஹை மேரே ஹம்சபர்’, ‘பாப்பா கெஹ்தே ஹெய்ன்’ போன்ற அப்போதைய மிகப் புகழ் பெற்ற புதிய பாடல்களை வகுப்பில் நண்பர்களுக்கு பாடிக் காட்டியதோடு மொழிபெயர்க்கவும் செய்தேன். குரல் வளம், இசையோடு ஒத்து பாடுவது போன்றவற்றை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

நிஜத்தில் இசை சம்பந்தமான குறைந்தபட்ச திறமையோ, அப்படியே இருந்திருந்தாலும் மிகவும் நெருங்கியவர்களைத் தவிர பிறர் முன் அதை வெளிப்படுத்தும் தைரியமோ இல்லாவிட்டாலும் கிடாரையோ, மவுத் ஆர்கனையோ, பியானோவையோ பலர் வியந்து ரசிக்கும்படி வாசிக்க மன உலகில் எந்த தடையும் இருந்ததில்லை. அங்குகூட கச்சேரி, ராகம், தாளத்தை எல்லாம் அனுமதிக்க என்னால் இயவில்லை. ஆண்கள் கர்நாடக சங்கீதம் பாடுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை, அதைக் கற்றுக்கொள்ள ஆர்வமில்லை, ஏன் ஒட்டுமொத்தமாக இசை, பாடல் இவற்றின் மேல் எந்த விருப்பமுமில்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்கக் பார்த்தேன்.

‘பொய்லாம் சொல்லாதே, ஹிந்தி பாட்டெல்லாம் எப்பவும் முணுமுணுக்கறல, இதுவும் பாட்டுதான், இதையும் கத்துப்பே, குரல் நல்லாத்தானே இருக்கு. பொம்மனாட்டி மட்டும்தான் பாடணும்னு யார்டா சொன்னா.’ அவர் முடிவு செய்திருந்தபடி, பெரியமணிக்காரத் தெருவிலேயே என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்த டீச்சரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளச் சேர்த்து விட்டார். டீச்சர் தொழில் முறையாக சொல்லித் தருபவர் அல்ல. அவருடைய ஒரே மகன் அந்த வருடம் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தான், கணவர் வீடு வர எட்டு மணிக்கு மேலாகி விடும். நேரத்தைக் கடத்த எனக்கு சொல்லித் தருவது என அவர் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் அவருக்கு இந்நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நான் வீட்டுக்குப் போகும்போது வாசலில் வெள்ளை அம்பாஸிடர் கார் நின்றிருந்தது. ‘உள்ளதான் போனாங்க’ என்று சந்தைச் சுட்டியபடி ராட்சஸி சொன்னார். தலையாட்டி விட்டு சந்தினுள் நுழைந்து, முன்பைப் போல் சந்தின் இருட்டை விழுந்தடித்துக் கொண்டு கடக்காமல், பயத்தை அடிக்கியபடி, சாதாரணமாக நடந்து சென்று என் போர்ஷனை அடைந்தேன்.

‘என்னைப் பார்த்ததும், ‘தோ வந்துட்டானே. வாடா நாங்க யாருன்னு தெரியுதா’ என்று கேட்டார் வீட்டுக்கு வந்திருந்தவர்களில் வயதான பெண். மூக்கில் இரு பக்கமும் மூக்குத்திகள், தடிமனான தோடுகள்.

‘எப்பவோ பாத்தது எப்படி தெரியும்மா. இவதான் வரவே மாட்டேங்கறாளே’ என்றுகூட இருந்தவர் சொல்ல, ‘என்னடி எங்கள பத்திலாம் சொல்றதில்லையா, நான் ஒங்கம்மாவோட அத்த’ என்று சொன்னார் அவர்.

அத்தையின் தோளுடன் ஒட்டி அமர்ந்து, அவர் கைகளை பற்றிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில் பூரிப்பு. காஞ்சீபுரம் சென்றிருவர் தன் நேசத்திற்குரிய அண்ணன் மகளைப் பார்க்க, மகள் மற்றும் பேத்தியோடு செங்கல்பட்டிற்கு வந்திருக்கிறார். பேத்திக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கக்கூடும். தலையாட்டி விட்டு உள்ளே சென்றேன்.

‘என்னடீது பொம்மனாட்டி கணக்கா வெக்கப்படறான்’

உள்ளறையில் அப்பா இல்லை, பாட்டி மட்டும் வார இதழொன்றில் இருந்து கோலப் புள்ளிகளை தன் கோல நோட்டில் பிரதி எடுத்துக் கொண்டிருந்தாள். ‘நீ வெளில வரல தாத்தி’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் இல்லை. என் அப்பா வழி பாட்டியைத் தவிர எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருவது அரிதினும் அரிது. அம்மா அழைக்க வெளியே வந்தேன்.

‘ஏன்டா ஒளிஞ்சிண்டு இருக்க, ஒங்க அம்மா எப்படி பேசுவா தெரியுமா’ படிப்பு சம்பந்தமான வழக்கமான கேள்விகளை எப்போதும் போல் புதியவர்களை கண்டால் உண்டாகும் அசௌகரிய உணர்வோடும் ஒட்ட வைத்துக் கொண்ட காரணமில்லாத அசட்டு புன்சிரிப்போடும் எதிர்கொண்டேன். ‘நீயும் பாட்டு கத்துகறியாமே, என் டாட்டரும் கத்துகறா’ என்றார் என் அம்மாவின் அத்தை மகள்.

‘இப்போத்தான் ரெண்டு மூணு வாரமா போறான், இவ எத்தன நாளா கத்துகறா’ என்று சொன்னார் அம்மா.

‘இவளும் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கா, என்னடி படிச்சிருக்க’ என்று கேட்க அவர் மகள் அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். சரளி வரிசை, கமகம் போன்ற கேள்விப்பட்டது போலவும் படாததும் போலவும் இருந்த வார்த்தைகள்.

‘நீ எதுவரைக்கும் வந்திருக்க, பாடிக் காட்டேன். இங்க ஒக்காரு, அவளும் சேந்து பாடட்டும்’

‘என்னடீது ஒன்னையே பாத்துண்டு நிக்கறான். ரிஷ்யசிருங்கர் மாதிரி வளத்துருக்க போ, எதுவும் பேசவே மாட்டேங்கறானே’

அம்மாவின் வற்புறுத்தல்களுக்குப் பின் சப்பளமிட்டு அமர்ந்து எனக்குத் தெரிந்ததை பாட ஆரம்பித்தேன். அத்தையின் பேத்தி எந்த ஆர்வமும் இல்லாமல் என் பாட்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.

‘நல்லாத்தான் பாடறான், இதெல்லாம் ஒனக்கு தெரியுமாடி’

‘தெரியும் பாட்டி,’ புத்தகத்தை நீட்டினாள்.

‘சரி கெளம்பறோம்டீ, அவர கேட்டதா சொல்லு’ என்று கூறிவிட்டு, ‘மாமியார் எங்க உள்ளயா,’ என்று மெல்லிய குரலில் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்து ‘வரேன் மாமி’ என்றார். ‘ஏன் கெளம்பிட்டீங்க சாப்ட்டு போலாமே’. பாட்டியின் உபசரிப்பை நாசூக்காக மறுத்து விட்டு கிளம்பினார்கள்.

‘இவ்ளோ இருட்டா இருக்கு வாடா ரிஷ்யசிருங்கா தொணைக்கு. யாராச்சும் திருட வந்தாக்கூட தெரியாது போலிருக்கே, கடசில வேற இருக்க’

‘இங்க யாரு திருடவரப் போறாங்கத்த. மத்த ரெண்டு போர்ஷன்லையும் ஆளுங்க எப்படியும் இருப்பாங்க பழகிடுச்சு.’

காரினுள் அமர்ந்தவர் நீட்டிய கைகளைப் பிடித்தபடி அம்மா. இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. ராட்சஸியின் பார்வை இங்குதான். பர்ஸிலிருந்து எடுத்ததை வாங்க மறுத்த அம்மாவின் உள்ளங்கையைப் பிரித்து திணித்தார் அத்தை.

இரவுணவின்போது அம்மா சாப்பிட்டதைவிட பேசியதுதான் அதிகம். அத்தை வீட்டில் தங்கி எஸ்.ஐ.டியில் படித்தது, கல்லூரியின் நீச்சல் குளத்தில் இருந்த க்ளோரின் சிலிண்டர்கள் வெடித்து அதை சுவாசித்தபின் தனக்கு வர ஆரம்பித்த ஆஸ்த்மா, அத்தை மற்றும் அவர் பெண்ணுடன் புராண படம் பார்க்க தாமதமாக சென்று அவசரமாக ஏதோவொரு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்ய முயலும் நாயகன் குளத்தில் விழ நாயகியின் பேச்சைக் கேட்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நீச்சலடித்தபடி பாடும் முதல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க அத்தை அப்போதே இவர்களை அழைத்துக் கொண்டு திட்டியபடியே வீட்டுக்குத் திரும்பியது என முன்பே கேட்டிருந்த நினைவுகள். இப்போது அவற்றினுள் இரு முகங்களை பொருத்திப் பார்க்க முடிந்தது. அப்பாவும் பாட்டியும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சந்துருவிடம் மறுநாள் இதை பற்றி பள்ளியில் சொன்னதற்கு ‘வெக்கமில்லாம அந்தப் பொண்ணு முன்னாடி பாடிருக்க பாரு, எப்டிடா பாடுன’ என்றான்.

‘ஏதோ ரொம்ப கெஞ்சிக் கேட்டாங்கன்னு பாடினேன்’

‘சும்மா, இம்ப்ரஸ் பண்ணப் பாத்துருப்ப. ஒனக்கு ஒரு எழவும் தெரியலங்கறது அந்தப் பொண்ணுக்கு புரிஞ்சிருக்கும்’

அடுத்த வார இறுதியில் க்ளாஸ் முடித்து கிளம்பும்போது ‘இரு இரு, ஒண்ணு சொல்லணும். நாங்க அண்ணா நகர்க்கு அடுத்த மாசம் குடி போறோம். நோக்கு அவ்ளோ தூரம் வர்து கஷ்டம் இல்லையா, நடந்து வேற வரணும், சைக்கிள் இல்லல’ என்றார் டீச்சர். என்னுள் பரவிய விடுதலை உணர்வு டீச்சருக்கும் ஏற்பட்டிருக்கும்.

‘ஆமா டீச்சர், தூரம் அதிகம். அண்ணா நகர்ல எங்க போறீங்க’

‘செவன்த் க்ராஸ். வீடு மாத்தறத பாட்டிட்ட சொல்லுன்ன’

டீச்சர் காலி செய்வதைப் பற்றி சொன்னதற்கு பாட்டி ‘அதெங்கருக்கு, போய் வரலாமில்லையோ’ என்று கேட்டார்.

‘ரொம்ப தூரம் தாத்தி, எப்படி நடந்து போறது. ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கு அண்ணா நகர், அதுவும் இது செவன்த் க்ராஸ் உள்ள போணும்’

‘சைக்கிள் வாங்கிட்டா போலாமில்லையா’

‘அப்போ போலாம்’. இப்போதைக்கு கண்டிப்பாக வாங்க முடியாது.

‘ஒன் இம்ச தாங்க முடியாமையே வீட்ட மாத்திருப்பாங்கடா’ என்பது சந்துருவின் அபிப்ராயம்.

ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடை தட்ட வேண்டியதாகிவிட்டது. வீட்டிற்கு இன்னும் அருகில், இரண்டு நிமிடங்கள்கூட ஆகாத தொலைவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாட்டி. திண்மையான கருப்பு பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி, கழுத்தில் கருப்பு மணி, ஒற்றை மூக்குத்தி, டீச்சர் வயது அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடிய பெண். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை பாடினார் என்று நான் படித்திருந்த செய்திக் கட்டுரையில் இருந்த, அந்த புகழ் பெற்ற பாடகியின் புகைப்படத்தை நினைவூட்டும் முகம். அம்மாவுடன் வேலை செய்பவர் மூலமாக இவர் குறித்து தெரிந்து கொண்டு, முதலில் சென்று பார்த்து பேசி முடித்து இப்போது என்னை சேர்க்க வந்திருக்கிறார். முதல் பார்வைக்கு கடினமானவராக தோன்றினாலும் பேச்சு மென்மையாகவே இருந்தது. நாலைந்து பூனைகள் வீட்டினுள் சுவாதீனமாக சுற்றிக்கொண்டிருந்தன. இங்கும் சனி தவிர வாரம் மூன்று நாட்கள், அதே நேரம்.

‘நாளெக்கு வந்துடு நல்ல நாள்’

‘டீச்சர்னு சொல்லாண்டாம், மாமினே கூப்டு’. என்று முதல் க்ளாஸிலேயே டீச்சர் சொல்லி விட்டார். இங்கும் நாம் மட்டும்தான் கற்றுக் கொண்டிருந்தேன். வீட்டில் மாமியும் அவர் கணவரும், கொழுத்த பூனைகளும் மட்டும்தான். நான் உள்ளே நுழையும்போது பெரும்பாலும் இரண்டு மூன்று பூனைகளை மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருப்பார் மாமி. அதன்பின் இரண்டு கிண்ணங்களில் பாலோ, தயிர் சாதமோ தந்துவிட்டு பாடத்தை ஆரம்பிப்பார்.
வீடெங்கும் எப்போதும் ஈர வாசத்தை நுகர முடியும் பல்ப் உமிழும் மங்கலான மஞ்சள் ஒளியுடன், தரையின் அரக்கு நிறமும், இரு உள் தூண்களின் அடர் பச்சை வண்ணமும், சுவர்களின் சாயம் போன க்ரீம் நிற வண்ணமும் கலைந்து சிதறி ஹாலே பல வண்ணக் கலவையாக மினுங்கிக் கொண்டிருக்கும். பார்வை அந்தப் நிறப்பிரிகை மேலும், மனம் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களுக்கான இராணுவ வீர்களின் நேயர் விருப்பத்தை எதிர்நோக்கியபடியும் இருக்க, நான் கர்நாடக இசையுடன், தோல்வியைத் தவிர வேறு எந்த முடிவும் இருக்க முடியாத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். வானொலியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் வரும் அலைவரிசையையும், நேரங்களையும் மாமி என்னிடம் சொன்னதை நான் மனதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. புதிய நோட், அதில் மாமி எழுதித் தருவது என்று மீண்டும் ஆரம்பித்தாலும் என் சங்கீத ஞானம் கொஞ்சம் கூட விருத்தியடையவில்லை. மாறாக மாமி வீட்டுப் பூனைகளுடன் நல்லுறவு ஏற்பட்டது.

சமையல் முடியாததால் பாடம் ஆரம்பிக்க தாமதமாகும் வேளைகளில் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அலமேலுவின் நினைவு வரும். என் வீட்டிற்கு தினமும் இரண்டு மூன்று முறையாவது, வெள்ளை ரோமம் மண்டிய, பருத்த உடல் கொண்ட அலமேலு வந்து செல்லும். தெருவில் அதை எப்படி அழைத்தாலும், என்னளவில் அவளை அலமேலு என்றே கூப்பிட்டு வந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் சிறு ஒலியை எழுப்பி விட்டு படுத்துக் கொள்ளும் அலமேலு, நாங்களாக கிண்ணத்தில் எதாவது வைத்தால் மட்டும் அதை சாப்பிடும். எங்கள் வீட்டில் சில காலம் வளர்த்து வந்த நாய் ‘ஐவனுடனும்’ நல்லுறவை பேணியது அலமேலு. போர்ஷன் வாசலில் இரண்டும் அருகருகில் படுத்தபடி தத்தம் உலகங்களில் ஆழ்ந்திருக்கும். விடுமுறை நாட்களின் மதிய பொழுதுகளை எலிலுமிச்சை மரத்தடியில் உட்கார்ந்தபடி கழிக்கும் எனக்கு, தூக்கத்தினூடே அரைக்கண்ணை அவ்வப்போது திறந்து பார்க்கும் அலமேலுதான் துணை. ஒருநாளேனும் அலமேலுவை இங்கு அழைத்து வர வேண்டுமென்றும் எண்ணினாலும் அதைச் செய்யவில்லை. தன் பூனைகள் சிறிது நேரம் வெளியே சென்று தெருவுக்குப் போய்விட்டு வருவதைக்கூட விரும்பாதவர் மாமி.

மாமி வீட்டுப் பூனைகள், பாடம் நடக்கும்போது வீட்டினுள் திரிந்தபடியோ அல்லது எங்கள் அருகில் படுத்துக் கொண்டோ இருக்கும். சில நேரங்களில் மெல்லிய குரலில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்போது, புன்சிரிப்புடன் தடவிக் கொடுத்தபடியே மாமி தொடர்வார். என்னைவிட அவை சங்கீதத்தை குறித்து அதிகம் அறிந்து கொண்டிருந்தால் வியப்படைந்திருக்க மாட்டேன். பாடத்தின் நடுவே மாமி சில பாடல்களை பாடுவது உண்டு, சில சமயம் முணுமுணுப்பாய், சில சமயம் சன்னமான ஆனால் தெளிவாக புரியும் வகையில். லயித்து பாடிக்கொண்டே தூணிலோ, சுவற்றிலோ சாய்ந்து விடுவார். குறிப்பாக கண்ணன் குறித்த பாடல்களை பாடும்போது அவர் முகம் மிக நெகிழ்வாக இருக்கும், பூனையை மடியில் வைத்துக் கொண்டு அதை வருடியபடி பாடிக் கொண்டிருப்பார்.

க்ளாஸ் முடிந்து வெளியே வந்ததும் பரக்க பரக்க நடக்கத் துவங்கினேன். ஐம்பதடி நடந்து திரும்பினால் என் தெரு, அதன் பின் சமாளித்து விடலாம். என் பின்புற காலி மனை வழியாக மாமி வீட்டு கொல்லையை இன்னும் விரைவாக நொடிகளில் அடைந்து விடலாம். பாட்டுக் கற்றுக் கொள்ளச் செல்வதை யாரும் பார்க்காமல் இருக்க இருட்டில் செடி புதர்களின் நடுவே சென்று சுவரேறி குதிக்கக்கூட தயாராக இருந்தேன். ஆனால் மாமி வீட்டை அடுத்திருந்த பழைய திருமண மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் பார்த்து கையசைத்து கூப்பிட்டு விட்டார். மனையில் கிரிக்கெட் விளையாடும்போது மண்டபத்தினுள் சென்று விழும் பந்தைப் பொறுக்கச் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம். மாமி வீட்டு கொல்லையில்கூட பந்து விழுந்து விடும். எந்த பயமும் இல்லாமல் எடுத்து வருவோம், பின் பக்க கதவு திறந்து பார்த்ததில்லை. பெரியவர் அருகே சென்றேன்.

‘என்னடா இங்க, கொஞ்ச நாளா இங்க பாக்கறேன் கூப்டலாம்னு பாத்தா அதுக்குள்ள குடுகுடுன்னு ஓடிட்ற’ வெள்ளை கதர் சட்டை, வேட்டிதான் எப்போதும் பெரியவர் அணிவார். மூக்குக் கண்ணாடிக்கு பின் சேதமடைந்த வலது கண்.

‘இல்ல பாட்டு கத்துக்கறேன் மாமிட்ட, இப்போ ஸ்கூல் வர்க் வேற இருக்கு போய் பண்ணனும்’

‘அதுக்கு ஏன்டா திருடன் மாறி வர போற, அப்டி என்ன அவசரம்’ என்று சொல்லியபடி அவர் கண்ணாடியை கழற்ற பார்வையை அவர் முகத்திலிருந்து விலக்கினேன். ‘பசங்க பாத்தா அசிங்கமா இருக்கும், செமத்தியா கிண்டல் பண்ணி ஓட்டுவாங்க’ தெருவில் வந்துகொண்டிருப்பவர்களை பார்த்தபடி சொன்னேன். பெரியவர் பார்ப்பது பிரச்சனை இல்லை, மாமி வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடு தள்ளிதான் கஞ்சாவின் வீடு. அவனைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நான் ஒளிந்து மறைந்து சென்று வந்துகொண்டிருந்தேன்.

‘ஏண்டா கிண்டல் பண்றாங்க, பண்ணா பண்ணிட்டு போட்டும். நானும்தான் கத்துக்க ஆசப்ட்டேன் முடில’ சொல்லிவிட்டு ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். சாதாரணமாக அமர்ந்திருப்பதால் முட்டி மேல் அவர் தாளம் போடுவதில் உள்ள லயம் எனக்கு எப்போதும் வாய்க்காது.

‘நீங்க அப்பறம் ஏன் கத்துக்கல என்னாச்சு’

‘ம், இதுவரக்கும் நீ என்ன கத்துண்ட்ருக்க. என்ன பாட்டு முழுசா தெரியும்’. பெரியவர் தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இந்த மண்டபத்தில் வசிக்கிறார். சொத்தில் பங்காக பெரியவருக்கு இதை அவர் குடும்பத்தினர் தந்து ஏமாற்றி விட்டனர் என்றும் இல்லை அவராக கேட்டு வாங்கியதுதான் என்றும் தெருவில் பேச்சு உண்டு.

‘முழு பாட்டா, இன்னும் அதே ‘ஸ நி த’தான் அதையே தாண்ட மாட்டேன்னு நெனக்கறேன். பசங்க கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க’ என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கஞ்சா வந்து விட்டான். பீடா சாப்பிட வேண்டும் என்று பல காலமாக பயலுக்கு ஆசை. இந்த கோடை விடுமுறையின்போது செட்டித் தெரு ‘சேட்’ கடையில் ஜர்தா பீடா வாங்கி குதப்பிக் கொண்டிருந்தவனை அவன் தந்தை பார்த்து விட்டு அடித்து புரட்டியபடி வீட்டிற்கு அழைத்து வந்தது முதல் ராஜாராமன் கஞ்சாவாகிவிட்டான்.

‘என்னடா நிக்கற இந்த நேரத்துல, என்ன புக்’ என அவன் கை நீட்ட ‘நாடார் கடல பாத்தேன், பேசிட்டே வந்தோம்’ என்றார் பெரியவர்.

‘ரப் நோட்டா, கடேல வாங்கினேன், அப்டியே இப்டி வந்துட்டேன், கெளம்பறேன்’

மாமா உள்ளறையில் இருந்து வெளியே வந்து, எங்கள் பக்கம் திரும்பாமல் புழக்கடைக்குச் சென்றார். ஒல்லியான தேகம், கை வைத்த பனியன், வேஷ்டி. நான் க்ளாஸ்சிறகு வருவதற்கு முன்பே அலுவகத்தில் இருந்து திரும்பி வந்து விடுபவர் எப்போதும் உள்ளறையில்தான் அமர்ந்திருப்பார். தண்ணீர் குடிக்க நான் சமையலறைக்குச் செல்லும்போதெல்லாம் விளக்கு போடப்படாத ஹாலின் வெளிச்சம் மட்டுமே ஊடுருவி இருக்கும் அறையில் ஈஸி சேரில் சுவற்றில் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருப்பதை கவனிப்பேன். வீட்டில் பேப்பர் வாங்குவது இல்லை, தொலைக்காட்சி கிடையாது. ரேடியோ எப்போதும் ஹாலில் தான் இருக்கும்.

எங்களருகில் அமர்ந்திருந்த பூனைகளில் ஒன்று சோம்பல் முறித்து எழுந்தது. ‘உள் ரூம்க்கு போது மாமி’ என்றேன் நான், ‘குருவாயூரப்பா’ என்றபடி எழ முயன்றவர், ‘கண்ணா நீ போய் கூட்டிண்டு வாடா, அவர் வந்துரப் போறார்’ என்று சொல்லி முடிக்கும்போது மாமா திரும்பிக் கொண்டிருந்தார். எழுந்து சென்றேன். அறையின் மூலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த பூனையில் அருகில் சென்று காலை ஓங்கினார் மாமா.

‘மாமி இங்கதானுருக்கு உள்ரூம்ல,’ திரும்பியவரை காலில் பூனை வந்து உரசி ஒலியெழுப்பும் வரை பார்த்தபடியே நின்றிருந்தேன். பூனையை தூக்கிக் கொண்டு நிமிரும் போதும் மாமாவின் பார்வை என்னிடமே இருந்தது.

‘உள்ள ரூம்ல லைட் போடல மாமி ‘ என்றேன் வந்தவுடன்.

‘தோ வரேன், மறந்துர்றார். குருவாயூரப்பா ‘ முனகியபடி எழுந்து ‘நாம என்ன பண்றது’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்தார். எதுவும் சொல்லாமல் பூனையை வருடியபடியிருந்தவரிடம் ‘நீங்க ஸ்டேஜ்ல பாடிருக்கீங்களா மாமி’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் எங்க கண்ணா, ஏதோ சின்ன வயஸ்ல கத்துண்டதே பெரிய விஷயம்,’ என்றவரிடம் ‘நீங்க சொல்லிக் குடுப்பீங்கன்னு இங்க யாருக்குமே தெரில. நாங்கள்லாம் ஒங்க வீட்டுப் பின்னாடிதான் கிரிக்கெட் ஆடுவோம்’ என்றேன்.

‘முன்னாடிலாம் அவர்க்கும் புடிக்கும், அதுவும் சில பாட்னா கேட்டுண்டே இருப்பார்.’ என்று சொல்லிவிட்டு மெதுவாக பாட ஆரம்பித்தார். க்ளாஸ் முடியும்வரை அவர் பாடிக்கொண்டிருக்க நான் பூனைகளைக் கொஞ்சியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கத்தைவிட பெரிய கிண்ணத்தில் பால் சாதத்தை தனியாக ஒரு பூனைக்கு வைத்து விட்டு, அதனருகே வந்த மற்ற பூனைகளை இன்னொரு வழக்கமான பாத்திரத்தில் இருந்து உண்ணச் செய்தார்.

‘என்ன மாமி அதுக்கு மட்டும் ஸ்பெஷல்’

‘உண்டாயிருக்காடா’

வயிறு சற்று பெரிதாகத்தான் தெரிந்தது. அதன் பின் அதற்கு விசேஷ கவனிப்பு, அதற்கேற்ப வயிறும் பெரிதாகிக் கொண்டிருந்தது.

‘மாமி, அந்த ரூம் பக்கமே போகுது. குட்டி போட எடம் தேடுதுன்னு நெனக்கறேன்’

‘குருவாயூரப்பா, குட்டி போட்டா மத்த பூனைங்க கிட்டலேந்து கண்கொத்தி பாம்பா காப்பத்தணும். இதுல அந்த ரூம்னா.. நீ கெளம்பு, வெள்ளிக்கெழமே பாக்கலாம். வீட்ல பிராக்டிஸ் பண்றியோ’

‘பாக்கறேன் மாமி, ஹோம் வர்க்லாம் இருக்கு. வரேன் மாமி’

கிளம்பி வெளியே வந்தால் எதிரே கஞ்சா வருகிறான்.

‘என்னடா மாமி வீட்லேந்து வர, புக்க காட்டு’ என்று பிடுங்கி பார்த்து ‘நீதானா அது எங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க மாமி பாட்டு சொல்லித் தராங்க போலன்னு. அதான் அன்னிக்கும் இங்க பேசிட்டிருந்தியா’

அடுத்த நாள் வகுப்பறையில் ‘சாஆஅ, ற்ற்றீரீஈ, காஆஆ’ ‘குடுமி வெச்சுப்பியா இல்ல இல்ல பாகவதறு ஸ்டைல்லா. டோப்பா தான் பெஸ்ட்டு’

‘எப்போ ஸ்டேஜ்ல பாடப்போற, இதுக்கெல்லாம் அரங்கேற்றம் உண்டா. நா துந்தணா ஒண்ணு இருக்குமே அத வாசிக்கறேன், இவன் பீப்பி, நீ பாடு’

‘நா பாடினாலே தாங்காது, இதுல நாம எல்லாரும் ஸ்டேஜ்ல இருந்தா இடிஞ்சே விழுந்துறும்’

வெள்ளியன்று சென்றபோது பூனை குட்டி ஈன்று விட்டிருந்தது.

‘உள்ள போய் பாரு. ரொம்ப கிட்டக்க போகாத, கடிச்சு விட்றும்’ என்ற மாமி, அறை மூலையில் இன்னும் கண் சரியாக திறக்காமல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொண்டு பால் குடிக்கப் பாயும் ஏழு குட்டிகள். ரோமமில்லாத உடல்களின் தோல் சொரசொரவென இருப்பது போல் பார்ப்பதற்கு தெரிந்தது. எங்கள் வீட்டில் உள்ள முயல்கள் போடும் குட்டிகள் முற்றிலும் ரோஸ் நிறத்தில் மிருதுவான சருமத்துடன் இருக்கும், முதற் பார்வைக்கு அணில் குட்டிகளோ அல்லது எலிகளோ என்றுதான் தோன்றும். குட்டிகளைத் தொட நெருங்கி, தாய் பூனையின் பார்வையில் இருந்த நட்பின்மையை கண்டு சற்று விலகி நின்றேன்.

‘தோல தொடலாம்னா மொறச்சு பாக்குது மாமி’ என்றேன்

‘கடசில இந்த ரூம்லதான் குட்டி போட்டுடுச்சு. ஹால்லதான் படுக்க வேண்டிருக்கு’

‘மாமா எங்கருக்கா இப்போ.’

‘சாங்காலமானா கோவிலுக்குப் போய் ஒக்கந்துக்கறார்’

மற்ற பூனைகள் உள்ளறையை நெருங்குகின்றனவா என்பதில்தான் அவருடைய கவனம் அன்று இருந்தது. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, ஹாலில் அமர்ந்தபடி இருவரும் குட்டிகளுக்கு காவலிருந்தோம். ‘துணி எடுத்துண்டு வரேன்’ என்று தூணைப் பிடித்தபடி மெதுவாக எழுந்தார். உள்ளறைக்குச் சென்று மீண்டும் குட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த மாமா பெட்டியில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு கிளம்பினார். குட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை. வெளியே மாமி அவரிடம் ஏதோ கேட்கும் ஒலி மட்டும், மாமாவிடமிருந்து பதில் வந்தாற்போல் தெரியவில்லை. உள்ளே வந்த மாமியின் கையில் மூன்று நான்கு துண்டுகளாக கிழிக்கப்பட்ட பழைய புடவை.

‘சாப்டாம அங்க போய் ஒக்காந்துக்கறார் வரத்துக்கு ஒன்போது பத்தாயிடுது. குட்டிகள தொரத்தி விடுங்கறார், எப்டி அனுப்பற்து சொல்லு’ என்றார்.

‘நா வேணா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குட்டி எடுத்தக்றேன், என் பிரெண்ட்ஸ்டயும் சொல்றேன்’

அடுத்த சில நாட்களில் நன்றாக கண் திறந்த குட்டிகள் மெல்ல நடந்து வெளியே உலவ ஆரம்பித்தன. மாமா மீண்டும் உள்ளறையின் இருளில்.இ ன்னும் சந்தேகப் பார்வை நீங்கவில்லை என்றாலும் மாமியையும் என்னையும் குட்டிகளை தூக்க தாய் பூனை அனுமதித்தது. தண்ணீர் குடிக்க வெளியே வந்தவரிடம் ‘தோ பாருங்கோ, எப்படி தவழற்து’ என்று மாமி சொன்னதை அவர் கண்டு கொள்ளவில்லை. வெள்ளி மாலை மாமியின் வீட்டினுள் நுழையும்போது உள்ளறையில் சத்தம், இருவர் குரலும் உயர்ந்திருந்தது. சில கணங்கள் தயங்கி நின்று பின் ஹாலில் குட்டிகளுடன் விளையாட ஆரம்பித்தேன். வெளியே வந்த மாமி என்னைக் கண்டதும், உள்ளே பார்வையை செலுத்தி விட்டு ‘எப்போ வந்தே’ என்றார்

‘இப்போத்தான் மாமி, சும்மா வெளயாடிட்டிருந்தேன்’

மீண்டும் உள்ளே பார்த்துக் கொண்டே ‘பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, வரேன்’ என்றார்.

‘வேணா மண்டே வரேன் மாமி’

‘வேணாம் கண்ணா தாளிச்சுட்டு மட்டும் வந்துர்றேன், நீ குட்டிகள பாத்துட்டிரு’

வந்தமர்ந்தவர் சுவற்றில் சாய்ந்து இமைகள் மூடியபடி பாட ஆரம்பித்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அருகில் சுற்றிக் கொண்டிருந்த குட்டிகளில் ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளறை பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மெலிதாக கத்த ஆரம்பித்த குட்டியொன்றை மற்றவை தொடர்ந்தன. சீரற்று வெளிவந்த அவற்றின் பலவீனமான குரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் சிதறியும், மாமியின் பாட்டோடு இணைந்து பிரிந்தன. கண்ணைத் திறந்த மாமி பாட்டுப் புத்தகத்தை குட்டிகளின் மீது வீசினார். ‘வத வதனனு பன்னி மாறி பெத்து போடறா, எழவ கொட்றதுகள்’

ஸ்ருதி பேதம்    

 பானுமதி. ந

கோடை காலம் தொடங்கப் போகிறது என்றாலும் இந்த இள மஞ்சள் மாலை வேளை சற்று குளிர்ச்சியாக இருந்தது. சந்தோஷ் தான் உடுத்தியிருந்த டி ஷர்ட்டையும், பர்முடாசையும் பார்த்துக்கொண்டான். நீலமும், வெண்மையுமான மேகங்கள் தலையில் மட்டும் செந்நிறம் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. ”என் பாட்டி இருக்கும் விண்ணகர் வரை நீங்கள் செல்வீர்கள்தானே. அவளிடம் சொல்லுங்கள்- அவள் அளித்த உடுப்பு இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது என”

அவள் தன்னை அவனாக அறிந்தது சிறு வயது முதலே. ஆனால் தெளிவில்லாமல் இருந்தது. திம்மாச்சிபுரத்தில் பாட்டியின் வீட்டில் பார்த்த அந்த ஆளுயரக் கண்ணாடி அவளை இரண்டெனக் காட்டியது. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் நிழல் கூத்து கட்டியது. தான் மறைந்து தான் தோன்றியதை பயத்துடன்தான் பார்த்தாள். இரண்டு எனக் காட்டி ஒன்றெனப் புரிந்தது அவளது பதினாங்காம் வயதில் தெளிவாயிற்று.

தன் ஏழாவது வயதில் சந்தியா அம்மா, அப்பா, அண்ணனுடன் திம்மாச்சிபுரத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்தாள். அந்த ஊருக்கு அவர்கள் சென்ற நேரம் குளிர் காலம் போய் இள வேனில் அடியெடுத்து வைத்த நேரம். இந்தப் பருவங்களின் காலடி ஓசை என்பது இயற்கை மாற்றங்களில்தான் கேட்கிறது. மெதுமெதுவாக வந்து, சிறிது சிறிதாகப் பரிணமித்து பின் முழுதாக தன் கோலம் மட்டுமே காட்டும் பருவ மாறுதல்கள். ஆனால் அவை கால அளவுகளை ஒரு சீராகத்தான் பின்பற்றுமா என்ன? குளிரிலிருந்தும், முதுவேனிலிலிருந்தும் சிறிது களவாடிக்கொள்ளும் போலும்!

அவர்கள் பம்பாயிலிருந்து சென்னை வந்து பின்னர் திருச்சி வந்து அங்கிருந்து வாடகை காரில் திம்மாச்சிபுரம் வந்தனர். அம்மாவிற்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனை இருந்தது. வழியெங்கும் சிறு சிறு குளங்கள், அதன் கரையோரங்களில் பெரும் மரங்கள். அவை நீரின் மேலே கிளைகளைத் தாழவிட்டு வரையும் நிழல் ஒவியங்கள்- நீரலையில் காற்றலை செல்ல கலைந்து கூடும் சித்திரங்கள். இன்னதென்று புரியாத சந்தோஷமும், கிலியும் சந்தியாவிற்கு ஏற்பட்டது. அம்மா அவளை அவளைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் பழிப்பு காட்டினாள். அப்பா வழக்கமான அமைதியில்.

தாத்தா  வரவேற்றதே, “என்னடி, இப்படி ‘க்ளோஸ் கட்’ பண்ணிண்டிருக்கே” என்றுதான். ”சந்தீப் தலையப் பாருங்கோ, ஹிப்பி மாரி வச்சுண்டிருக்கான்” என்றாள் அவள். “அவன் புருஷக் கொழைந்தேடி. எப்படியும் இருப்பான்.” அம்மா மேலே பேசாதே என்று ஜாடை காட்டினாள். ”கட்டித் தங்கமே. பாட்டி உனக்குத்தான் ஸப்போர்ட். நீ உன் இஷ்டப்படி இருடி கொழந்தே” அன்றுதான் இந்த விதை முளை விட்டிருக்க வேண்டும். அங்கே இருந்த முப்பது நாட்களும் அவள் சந்தீப்பின் உடைகளை வேண்டுமென்றே அணிந்து கொண்டு தாத்தாவின் வாயில் விழுந்து புறப்பட்டுக் கொண்டேயிருந்தாள். எப்படியும் அவர்கள்தான் அமெரிக்கா போகப் போகிறார்களே- அப்ப இந்தத்  தாத்தா என்ன செய்வாராம்?

இன்று முப்பதாவது வயதில் கோடை தொடங்கும் பருவத்தில் இங்கே ந்யூயார்க்கில் தனிமையில் அமர்ந்திருக்கையில் அவனுக்கு பாட்டியும், அந்த ஊரும் நினைவில் கிளர்ந்தெழுந்தன. ஒரே ஒருமுறை பார்த்த ஊர், என்றுமே நினைவில்..

அவள் அதுவரை ’இருவாக்ஷி’ என்ற பூவைப் பார்த்ததேயில்லை. ஊருக்கு வந்த மறுநாள் இளங்காலைப் பொழுதில் வந்த அந்த வாசம். அவள் அரவமே செய்யாமல் தோட்டத்திற்கு வந்தாள். செடிகளில் முளைத்த நட்சத்திரங்களென அவை மின்னின. இருளுமில்லை, ஒளியுமில்லை என இரண்டும் சந்திக்கும் மாலையை அவள் அறிவாள். ஜூஹூ பீச்சை பார்த்திருக்கும் அவர்களது பம்பாய் வீட்டில் அதை அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஆனால், இரவும், பகலும் சந்திக்கும் இந்தக் காலை-இதுதான் நான் மலரும் வேளை என வாசம் வீசும் இருவாக்ஷி. பாட்டி  வீடு இத்தனை அழகா?

அந்தக் கிராமத்தில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பெரிய வட்ட வடிவமான கிணறு. உள்ளே இறங்க படிக்கட்டுகள், தண்ணீர் இறைக்க ராட்டினம், அந்த தாம்புக் கயிறும் அதன் முடிவில் கட்டப்பட்டுள்ள தோண்டியும், பாட்டி மடிசார் கட்டிக் கொண்டு அதில் பூஜைக்கெனவும், குடிப்பதற்கெனவும் சுமக்கும் குடங்களும் அவளை வியப்பில் ஆழ்த்தின. குளிப்பதற்கென மோட்டார் கனெக்க்ஷன் வேறு இருந்தது. அவள் நீந்தத்தான் ஆசைப்பட்டாள். அந்தக் கிணற்றிலே ஐந்து நாட்களில் அவள் டைவ் அடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.

“நடராஜா, இந்தப் பொண்ணு இங்கியே இப்டி ஆம்பிளைத்தனமா இருக்கேடா. அமரிக்காவுல எப்படி ஆகப் போறதோ?” அப்பா என்றைக்கு பதில் சொல்லியிருக்கிறார் இன்று சொல்ல? தாத்தாவைப் போல் ஏன் பாட்டி அந்த வீட்டில் ஒரு முக்கிய ஆளாக இல்லை? அவள் பச்சைக்குதிரை தாண்டினாள். கபடி ஆடினாள். கிட்டிப்புள் அடிக்கக் கற்றுக் கொண்டாள். பெண்கள் விளையாட்டில் அவளுக்குப் பிடித்ததே ஏழாங்கல் மட்டும்தான்.

அவர்களின் குலதெய்வக் கோயிலில்கூட தாத்தாவிற்குத்தான் பரிவட்டம் கட்டினார்கள். அப்பாவிற்கு மாலை போட்டார்கள், சந்தீப்பிற்கு குட்டி மாலை. ’எனக்கு’ என்றாள் சந்தியா. ”நிக்கர் போட்டுண்டா நீ என் வம்சமாயிடுவியாடி?” என்றார் தாத்தா. பாட்டி அதற்குள் தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி, “நோக்கு வாடாத மாலை, சந்தியா,” என்று அவள் கழுத்தில் போட்டுவிட்டாள். அம்மாவிற்கு கண்ணைக் கண்ணை உருட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

அவள் காற்றாகச் சுற்றினாள். மிகப் பெரிய விடுதலையை உணர்ந்தாள். அன்றைய தன் நிலைக்கு இன்றைய வார்த்தைகள்! உள்ளுணர்வு அறிவிக்காமல் இருப்பதில்லை எதையும். ஆனால், அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடியுமா?

“சந்தியா, நீ கேட்டுண்ட்ருக்கியே, அந்த ரூமை இப்ப திறக்கப் போறேன்”. பாட்டி அவளை அழைத்துச் சென்ற அறை அவ்வளவு பெரியது. சுவர் முழுதும் அவள் பார்த்திருந்த ஸ்வாமி படங்களைத் தவிர பல படங்கள்; இரு வேறு உடல் பகுதிகள் இணைக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், சிறகு முளைத்த தேவதைகள், வீணை வடிவான பெண் மிக அழகாக இருந்தாள். பாட்டி சொல்லி அர்ச்சுனன் பெண்ணான கதையைக் கேட்டாள். அந்த மாறுதலை மழுப்பிய வண்ணங்களோடு வரைந்திருந்தார்கள். அன்று பாட்டி ‘ஹைமவதி’யைப் பற்றிச் சொன்னது புரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் இன்றும் கண்முன் எழுகிறது. இவை தவிர கல்யாணப் புகைப்படங்கள் இருந்தன.

“பாட்டி, உன் கல்யாண போட்டோ இருக்கா. இந்தத் தாத்தா அப்பயும் இப்படித்தான்  வெஞ்சுண்டே இருந்தாரா?” என்றாள் சந்தியா. ”போட்டோ இல்லடி. ஆனா ரெண்டு டிரெஸ் இருக்கு. அந்தப் பெட்டிக்குள்ள வச்சிருக்கேன் பாரு.”

பாட்டி காண்பித்த நீல நிற கால் சராயும், பட்டு மஞ்சள் மேல்சட்டையும் பொன்னிறப் பூ இழைகளால் சந்தியாவை அப்படிக் கவர்ந்தன. இதோ இதையும் பாரு, என்று பாட்டி காண்பித்தது அதே நீல நிறத்தில் பட்டுப் பாவாடையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டுமாக அதை விடச் சற்றுப் பெரியதாக இருந்தது. ”பாட்டி, ரெண்டுமே இவ்ளோ சின்னதா இருக்கே. ஏன் இன்னும் வச்சுண்டிருக்கே?”

“உனக்காத்தான் சந்தியா. நேக்கு கல்யாணம் ஆறச்சே உன் வயசு. அப்ப மட்டும் இல்லடி, இப்பக்கூட கல்யாணத்தை சரியா புரிஞ்சுக்க முடியல்லே. எங்களுக்கு நாலு நாள் கல்யாணம். அப்போ மூணாம் நா சாயங்காலமா ‘அம்மான் ஊர்வலம்’னு ஒன்னு நடந்தது. அன்னிக்கு ரெட்டக் குதிர சாரட்டுல, பேண்டு, நாதசுரம், வாண வேடிக்கையோட பொண்ணு, மாப்ளயை ஊர்வலமா அழைப்பா. அப்போ, பெண்ணுக்கு ஆண் டிரெஸ், ஆணுக்கு பெண் டிரெஸ். நானும், உன் தாத்தாவும் சின்னவாதானே. நேக்கு ஆண்கள் டிரெஸ் பொருத்தமா இருந்ததாம். அவரும் சில்லாட்டமா இருப்பார் அப்போ. சீதைக்கும், ராமனுக்கும் அப்படி ஒரு ஊர்கோலம் நடந்ததாம்.’

“பாட்டி, ஸ்வாரஸ்யமாயிருக்கு. அம்மாவுக்கு இதெல்லாம் தெரில்ல போலிருக்கு. அப்பாகிட்ட கதை கேட்டா காக்கா வடை திருடின கதை மட்டும்தான் சொல்றா”

“இத்தனை நாள் காப்பாத்தியாச்சு, நோக்கு இரண்டையும் தரென், இனிமே இது உனக்குத்தான்”

யாருக்கும் புரியாத அவனை, அவனுக்கே தெளிவில்லாத அவனை, பாட்டி எப்படி அறிந்தாள்? பாட்டி தந்த உடுப்புகளை உடனே தொட்டுத் தடவ அவனுக்கு ஆசை வந்தது.