சிறுகதை

செரவி

தி. வேல்முருகன்

20161227_115952

கந்தனுக்கு இப்ப இருக்கிற ஒரே பிரச்சினை 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும். சஞ்சீவிராயர் கோயில் பக்கத்தில் இருந்த ஐமாலியா மளிகையை பார்த்ததும் யோசிக்காமல் நேரே அங்கு நடந்து நிறைய பொருட்கள் வாங்குவது போல் தோரணை காட்டி சீனி, உடைச்ச உளுந்து என்று கொஞ்சம் பலசரக்கு வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

“234 ரூபாய் வருது 2000 ரூபாய் தர்ரிங்க”

“சில்லறை இல்ல”

“அரே அல்லா, யாவரமே சுத்தமா இல்ல பேங்க்ல காசு எடுத்ததும் நேரா இங்கதான் வராங்க. நீங்க எங்கயாவது பக்கத்துல மாத்த முடியுமா பாருங்க சார்”

எங்க மாத்திறது? கொஞ்சம் தள்ளி இருந்த மியான் பாய் கடைதான் தெரிந்தது கந்தனுக்கு.. அந்தக் கடைகூட கைமாறி வேற பேருல இப்ப இருக்கு. அதுக்கு எந்த பேரு மாறுனாலும் அந்த கடை பேரு ஊர்க்காரங்களுக்கு மியான் கடைதான். அதுலகூட இப்ப ஒன்னும் யாவாரம் தெரியல.

முன்பு எல்லாம் இந்த நாள்ல ரொட்டி கோழிக்கறியோடு கொக்கு, நொல்லமடையான் கறியெல்லாம் கிடைக்கும். மதிய நேரத்தில் சாப்பிட இடம் கிடைக்காது. வரிவரியா நெய் ரொட்டிய கம்பியால எடுத்து உருவி இரண்டு கையால ஒரு தட்டு உச்சில ஒரு தட்டு. பொலபொலவென உதிர்ந்து இலகுவா பல்லுக்கும் நாவுக்கும் பதமா தெரியற மாதிரி வைப்பாங்க. எங்கிருந்தொ கொக்கு நொள்ளமடையான் எல்லாம் உயிரோட பிடிச்சு சைக்கிள் ஹாண்டில் பாருல மாட்டி எடுத்து வருவாங்க. அந்த கடையில விக்க.

கொஞ்சம் தள்ளி ஆட்டா கடை. அங்கேயும் இதே மாதிரி கறி எல்லாம் கிடைக்கும் பக்கத்திலதான் ஆண்கள் மேநிலை பள்ளி. அங்கு படிச்ச ஞாபகமும் சாயந்திரம் ஆனா ஆட்டா கடை கொத்துப் பரோட்டா கொத்துற டன் டன் சத்தம் கேட்குற மாதிரியும் கொக்கு கறி தேங்காய் சால்னாவோட அது ஒரு ருசி நாக்குக்கு தெரிந்து ஞாபகம் முட்டியது கந்தனுக்கு.

எல்லாம் போச்சு இப்படி மழையே பெய்யாம போனா அவ்வளவுதான்.

கந்தனுக்கு கொக்கு நினைப்பு வந்ததும் முதல் நாள் பார்த்த பறவை பிடிப்பவனின் வெற்றுடம்பும் தளந்து சுருங்கி வரிவரியா தெரிந்த ஒட்டிய வயிரோட கையில தூக்கிக் காட்டிய காட்டுவாத்தும் சேர்ந்து ஞாபகம் வந்துடுச்சி. யாரும் வாங்குல. அந்த பெரியவர் கேட்டுட்டு இருந்தாரு. கந்தனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.

அவன் அப்பத்தான் ஒரு மீன வாங்கி வெட்டி சுத்தம் பண்ணி வெளியே வரும்போது வழியில ஒக்காந்து இருந்த ஆயா, யப்பாடி இந்த இலந்தபழம் வாங்கிக்கப்பா மணலு மாதிரி இருக்கும்பா, ன்னு கேட்டதும், எவ்வளவு ஆயா,ன்னு கந்தன் கேட்டதுக்கு, பத்து ரூபாய்ப்பா” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் தோலெல்லாம் சுருங்கிப் போன கையால நிறப்படி கூம்பாகவும் கையாலேயும் அதே அளவு அள்ளிப் போடுது. பழம் எல்லாம் பிரஷ்ஷா நத்தை நத்தையாட்டும் இருக்கு. வாணாம்முன்னு சொல்ல முடியாத வாங்கிட்டு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்ததும், நல்ல புள்ளப்பா நீ! ஏன் கிட்ட ஏது இவ்வளவு காசு, உள்ள செத்த மீன்காரிவோட்ட இருக்கும் கேளேன்?

சில்லரையா மீன் செதிலு ஒட்டியிருந்த நோட்ட வாங்கி ஆயாகிட்ட கொடுத்து, என்ன ஊரு ஆயா, என்றார் கந்தன்.

“நான் அரிகிஷ்ட்டிதாம்பா, தோட்டத்துல தரையில கொட்டி வீணாப் போவுதா, அதான் இப்படி அள்ளிக் குடுத்துட்டு அப்படியே ரயிலடி போயி ரவிக்கடையில ஒரு டீய போடச் சொல்லி குடிச்சுட்டு வூட்டுக்கு போவேன், சாப்பாடு ஒன்னும் செல்ல மாட்டேங்குது. டீ தான் புடிக்கும். ஒரு வா தொண்டையை நனைச்சா போதும் பையன் சவுதியில இருக்கான், வரவரைக்கும் உயிர வச்சுக்கனும் பாரு”

“வேற யாரும் இல்லியா ஆயா?”

“இருக்கா, மருமவ இருக்கா அத ஒன்னும் கேட்காத, நீ போ”

அப்பத்தான் திரும்பி வரும்போது அந்த பெரியவர் அந்த காட்டு வாத்த வச்சிகிட்டு மரைக்கார்கிட்ட, வாங்கிகிக்க சாமி,ன்னு கேட்டுக்கிட்டு இருந்தார்.

“செத்துப்போச்சு கனி, உயிரா இருந்தா வாங்கலாம்,” அப்படின்னு சொல்லி போயிட்டாரு மரைக்கார்.

வாங்கக்கூடிய யாரையும் காணும். பெரியவர் முகத்தைப் பார்க்க முடியல. அவரும் மட்டும் தானா, இங்க  முருகன் மெடிக்கல் கீழே பெரியாஸ்பத்திரி பக்கத்தில பழம் விக்கறவங்க, அதச் சுத்தி நடந்து போறவங்க யாராவது வாங்க மாட்டாங்களான்னு அவங்க பார்க்கிறது… ஏன் இந்த ஜமாலியா கடையில நிக்கரவங்க வாங்கரவங்க யார் முகத்திலையும் ஒரு வெறுமைதான தெரியுது.

ச்சே அந்த காட்டு வாத்த நாமாவது வாங்கி இருக்கலாம், என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.

என்னங்கனி யோசனை ரொம்ப நாழியா நிக்கராகள, அவுகளுக்கு பைசாவா குடுத்து அனுப்பு என்றார் பில் போட்டுக்கிட்டு இருந்த பாய்.

கல்லாவில் இருந்தவர், சரி நானா, என்று எண்ணிக் கொடுத்தார்.

“இனிமே 2000 ரூபாய மொதல்லிய சொல்லிடுங்க, இங்கே பாரு வாப்பா பைசாவெல்லாம் நீங்க கொண்டு போவுது”

“இல்லை பாய் இனிமேல் வரமாட்டேன்,” என்ற கந்தன் பேங்க் வாசல்ல நிறுத்தி இருந்த டூ விலர எடுத்துட்டு நேரா கீரைக்காரத்தெரு, பஸ்டாண்ட், பெரிய மதுவு வழியா வண்டிய வெரட்டி தெருவுக்கு திரும்ப இருந்தார். அப்போது, ரோட்டு முனையில் இருந்த ஆலமரத்தடியிலேருந்து, சாமியோவ், நேத்துகூட பார்த்திய செரவி, செரவி வாங்கிக்க சாமி வூட்டுல ஆச்சிக்கு புடிக்கும், என்று பெரியவரும் அவர் மனைவியும் ஒரு சேர சொன்னதும் கந்தனுக்கு மீறமுடியல. வண்டிய நிறுத்துனார். எவ்வளவு காசு என்று கேட்டு கொடுத்து விட்டு உறிக்கச் சொன்னார்.

“பெரியவர இது செரவி கிடையாது காட்டு வாத்து, ஆனா நாங்க செரவின்னுதான் சொல்லுவோம் சாமி”

“சரி சரி உறிச்சுக் கொடுங்க”

ரெக்க, காலு கழுத்த அறிஞ்சுட்டு பனியனைக் கழட்டற மாதிரி முடியோட தோல உருவிட்டு வயித்துல சின்னதா ஒரு கீறல், அப்படியே குடலு சரியிது. ஈரல கிள்ளிப்புட்டு மனைவி கையில கொடுக்குறாரு பெரியவரு. அவுங்க அதுல ஒட்டியிருந்த ஒன்னு ரெண்டு முடிய எடுத்துட்டு சவுக்கத்தால் பையில போட்டுச்சு. எல்லாம் நிமிசத்துல மூணையும் உறிச்சுட்டாங்க

ஒரே ஈரல் நிறமாகவும் ரத்த நெறமாகவும் தெரிஞ்சதும், ஆகா பிரசு, கறி நல்லா இருக்கும் என்று மகிழ்ந்து போய் வீட்டுக்கு வந்து மனைவிகிட்ட காட்டி, வள்ளி, வள்ளி என்னன்னு பாரு,ன்னு சொல்றார் கந்தன். எட்டிப் பார்த்தவள், அய்யோ இது என்ன கருமாந்திரம் ஒரே கவுளு, என்ன கொண்டு ஆவாது,ன்னு சொல்லி விட்டாள். கந்தனுக்கு குருவிய தானே புடிச்ச மாதிரி இருந்த சந்தோஷம் போன இடம் தெரியல. கறிய எடுத்து மோந்து பார்க்காரு, கவுளுதான் அடிக்குது.

“வள்ளி வள்ளி நாம வாங்கற மீன் கருவாட விடவாபெரிய கவுளு…”

“அப்ப நீ சுத்தம் பண்ணி குடு செய்யறேன், ஆனால் நான் திங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டாள் வள்ளி.

வாங்கியாந்துட்டமே என்னடா செய்யறதுன்னு சட்டைய கழட்டிட்டு துண்ட கட்டிகிட்டு இறங்கிட்டாரு கந்தன்.

நல்லா ஓடியும் நீந்தியும் மேய்ஞ்ச குருவிவோ இல்லியா கறிய பாரு எப்படி இருவி ரத்தமாட்டம் கிடக்கு பாரு, என்றார் மனைவி வள்ளிய பார்த்து

சரி சரி நாக்க ரொம்ப நீட்டாம நல்லா சின்னதா சன்னமா வெட்டிடுங்க, வேவாமா போயிட போவுது, என்று திட்ட ஆரம்பித்ததும், ஏய் உனக்கு குருவி அவளவு எலுப்பமா போச்சா, புடிக்கறத நான் பாத்துருக்கேன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்ப எனக்கு 20 வயசு இருக்கும், அப்படின்னு கந்தன் சொல்ல ஆரம்பித்ததும்-

“ஆமாம் ஆமாம் நீ ஆடுன ஆட்டத்ததான் சொன்னாங்களா?”

“இதான் ஓங்கிட்ட புடிக்காது”

“சரி சரி சொல்லு”

“ஒரு நாளு சாயந்திரம் ஒரு 3 மணி இருக்கும் ஆத்து ஓரமா தெற்கு வாய்க்கால் மேல வயலுக்கு போறேன். இப்ப அந்த இடம் வாய்க்கால் எல்லாம் இறால் குட்டவலா போயிடுச்சு. அப்ப திடீர்னு வாய்க்கால் மேல நின்ன ஒருத்தரு கைய காட்ராறு, வராத வராதன்னு. நான் பயந்து போயி என்னமோ தெரியலன்னு கமுக்கமா வாய்க்கா வரப்புல்ல உக்காந்து அவரையே பார்க்குறேன். அவரு வடக்க மானத்தை பாக்கறாரு, நானும் பார்க்கிறேன். இரண்டு கொக்கு பறந்து வரது தெரிஞ்சுது. இவர பாக்கறேன், கையில இருந்த கயிற ஒரு கையால இழுக்குறாரு. அப்ப பார்த்தா வயல்ல இருந்த ஒரு கொக்கும் நொள்ளமடையானும் ரெக்கைய தூக்கி அடிக்குது, பறக்காம.இதை மேல பறந்த இரண்டு கொக்கும் பார்த்துச்சா, அப்படியே இறக்கைய அடிக்காம காத்துல மிதந்து ஒரு வட்டம் போட்டு கால நீட்டிக்கிட்டு வந்து அந்த கீழே இருந்த கொக்கு பக்கத்தில ஒக்காந்துச்சு”

“அய்யோ அப்புறம்?”

“க்ராச்ன்னு சத்தம் கொடுத்து பறக்க நினைச்சுது பாரு, அவரு இன்னோரு கையிலிருந்த கவுற இழுத்துட்டாரு, அப்படியே இரண்டு பக்கமும் மறைச்சு வச்சிருந்த வல கொக்கு மேல உழுந்து மூடிப்போச்சு”

“அய்யோயோ “

“அப்புறம் பார்த்தா அந்த குருவி புடிக்கரவரு ஓடிப் போயி ரெண்டு கொக்கையும் பிடிச்சு அது இறக்கைய பிச்சி கட்டி போடறாரு. பாவமா இருந்துச்சு, அப்படியே பார்த்துட்டு போயிட்டேன்”

“அப்புறம் ஏன் இத வாங்கிட்டு வந்த?”

“அதெல்லாம் கேக்காத. தோ முடிஞ்சுடிச்சு. நீ ஆக்கிடு நான் குளிச்சிட்டு வந்துடறன்”

வந்ததும் வள்ளி, நீ மேசைய நாசம் பண்ணாத, என்று சொல்லி, ஒரு வாழையிலை கிள்ளிட்டு வந்து, கீழ உக்காரு, என்றாள். தரையில ஒக்காந்ததும் சாமி படையல் மாதிரி வறுத்த கறி, சோறு, ரசம், கீரை எல்லாம் வச்சி சுட்ட கருவாடு சுருட்டும் சாராயம் மட்டும் தான் இல்ல, நீங்க சாப்புடுங்கன்னுட்டு போய் விட்டாள்..

உடையாரப்பான்னு குலதெய்வத்தை நினைச்சுட்டு ஒரு கறிய எடுத்து வாயில வைக்கிறாரு கந்தன், குப்புன்னு அவரு மொகத்துல வந்து அடிக்குது ரத்த கவுளு. அப்படியே ஒரு மாதிரி ஆயிடுச்சு கைல அடிக்குதா கறில அடிக்குதான்னு அவருக்கு தெரியல. மேற்கொண்டு ஒரு வாய் சாப்பிட முடியல.

இலையில இருந்த சோத்த கீரையில பெசைஞ்சு சாப்பிட்டுட்டு, இலைய சுருட்டி நாய்கிட்ட வச்சிட்டார். வள்ளி கேட்டதுக்கு, தெகட்டுது போதும் பசங்க வந்தா திங்கட்டுமுன்னாரு. ஆனால் அவருக்கு தொண்டையில மாட்டுன முள்ளுமாரி அருவிகிட்டே இருந்துச்சு என்னடா இப்படி ஆயி போச்சேன்னு. பசங்க வந்து ஒன்னும் சொல்லாம நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க

மறுநாள், இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்புடும் என்று நினைத்த கந்தன், பெரிய மதுவு ஓரம் தனது டூ விலர நிறுத்திட்டு போன வருட மழையில் பிளவுபட்டு இன்னும் சரி செய்யாத அபட்மண்டை பார்த்துக் கொண்டு சிதறி கிடந்த கருங்கல்லில் இடித்துக் கொள்ளாமல் மெதுவாக இறங்கி திரும்புறாரு.

‘சாமி செரவி வாங்கிக்க ஆச்சிக்கு புடிக்கும்னு’ சத்தம். முகத்தை திருப்பிக்கிட்டு விருட்டுன்னு மீன் கடை உள்ள போயிட்டாரு கந்தன்.

அந்த 9 பேர்

நரோபா

காக்கி கால்சட்டையும் மூக்கு நீண்ட தோல் பூட்சும் அவனை காவலன் எனக் காட்டின. உடற்கட்டும் மயிர்வெட்டும் முறுக்கிய மீசையும் அதை உறுதியாக்கியது.  “எழுத்தாளர் பழுவேட்டையன் இருக்காரா?” பணிவாக அந்த பி ப்ளாக் இரண்டாம் மாடியில் எச் 3 குடியிருப்பின் வாசலில் நின்று கேட்டான்.

“அப்படி யாரும் இல்லியே?” என்றாள் மூச்சிரைக்க கதவை திறந்த குண்டு அம்மாள் நரைத்த கூந்தலை அள்ளி முடிந்தபடி.

கைவைத்த பனியனும் ஏற்றிக் கட்டிய லுங்கியுமாக உள்ளறையிலிருந்து வெளியே வந்து கால் மிதியில் காலை அழுத்தித் தேய்த்து கொண்டிருந்தார் அவர். முன்வழுக்கை சற்றே நீண்டு புறங்கழுத்து வரை இறங்கிக் கொண்டிருந்தது. தலையிலிருந்து உதிர்ந்த மயிர் உடலில் விழுந்த இடங்களிலெல்லாம் முளைத்திருந்தன.

காவலன் அவருக்கு வணக்கம் வைத்தான்.

‘இவுரு பேரு சுப்பிரமணியன்ல?”  என்றாள் மிரண்டு போய்.

“சுப்பிரமணியங்கல்லாம் நல்லா எழுதுவாங்களாம்.. சார் கூட காதல் சொட்டச் சொட்ட அருமையான கவிதைங்க எல்லாம் எழுதுவார்மா..” அதிர்ச்சியா ஆச்சரியமா என இனம் காணமுடியாத உணர்ச்சியில் அவளுடைய முகம் உறைந்து போயிருந்தது. நேராக அவரைப் பார்த்து பேசினான்

“சார் நா ஒங்க வாசகர் சார்” என குழைந்தான்.

அவர் முகத்தில் பென்சில் தொலைத்த சிறுவனின் பதட்டம் தென்பட்டது.

“உண்மையிலேயே சார்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன “எருமை தோல் பொதிந்த உன் இதயத்தை என் சிறுநெருஞ்சி மன்மத பானங்கள் துளைக்காதா?’ அபாரமான கவிதை வரி சார்…”

இப்போது படபடப்பு அதிகமாகி அக்குள்களில் பெருகிய வியர்வை பனியனை நனைத்தது.

“சார் நான்தான் சார் தேன் மலர்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன எல்லாத்துக்குமே “அபாரம்”னு கமென்ட் போடுவேனே..”

மூச்சு சற்றே சீரானது. பெரிய மஞ்சள் பூவை காதில் செருகிக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண் குழந்தையின் படம் ஞாபகம் வந்தது. தேன் மலரின் முகப்பு படம். இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை. திடுதிடுப்பென வாசகன் என சொல்லிக்கொண்டு ஒருவன் வந்து நிற்க முடியும் என்பதை கற்பனைகூட செய்தவரில்லை. அவரது வலைப்பூவை வாசிக்க அவரை தவிர்த்து எப்போதும் ஒன்பது பார்வையாளர்கள் மட்டுமே வருவார்கள். அந்த ஒன்பது பேருமே பின்னூட்டமும் இடுவார்கள். “அபாரம்” , “பிரமாதம்”, “நாசம்”, “உச்சம்”, “மனதைத் தைக்கிறது”, “அருமை”, “great”, “bull’s eye”, “புரட்சி வணக்கம் தோழர்”. அவர் அவர்களை அப்படித்தான் நினைவில் வைத்திருந்தார். ஒவ்வொரு பின்னூட்டமும் எத்தனை மணிக்கு வரும் என கச்சிதமாக அறிந்துமிருந்தார். 11:27 க்கு “நாசம்”, 20:47க்கு “புரட்சி வணக்கம் தோழர்”. ஒருமுறை நள்ளிரவில் வரவேண்டிய “bull’s eye” மறுநாள் மதியம் வரை வரவில்லையே என நாள் முழுவதும் குடைச்சலாக இருந்தது. யாருக்காக எழுதுகிறோம்? எழுதி என்ன பயன்? விரக்தியின் விளிம்பில் எழுதுவதை நிறுத்தி விடலாமா என ஆழ்ந்துச் சிந்தித்து கொண்டிருக்கையில் “bull’s eye” வந்து சேர்ந்ததும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பேரருளாளனின் பெருங்கருணை!

“சார் ஒரு சின்ன வாசக சந்திப்பு .. அதான் ஒங்கள கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்”, என்றான் அந்த ஆறடி உயரத்தவன்.

கால்கள் இரண்டும் தன்னிச்சையாக அதிர்ந்தன. நா வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு வார்த்தையே வரவில்லை.

“ஒரு அரமன்னேரம்தான்.. நீங்க வரத்தான் வேணும்.. உத்தரவு வந்திருக்கு”, என்று மடித்து வைக்கப்பட்ட தாளை சட்டையின் உள் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினான். வேர்வையில் ஊறி உப்பு ஏறிய தாளை வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்பதை புரிந்துகொண்டார்.

குண்டு அம்மாளின் குழப்பமான பார்வையை பொருட்படுத்தாமல் சட்டை மாட்டிக்கொண்டு வேறு மார்க்கமில்லை எனப் புறப்பட்டார்.

குடியிருப்புக்கு வெளியே சாலையின் திருப்பத்தில் அமரர் ஊர்தி போல ஒரு கருப்புநிற வேன் ஓரமாக நின்றிருந்தது. வண்டிக்கு அருகே வேட்டி கட்டிய ஒருவன் குந்தி அமர்ந்து ஒன்றுக்கு பெய்து கொண்டிருந்தான். இவர்கள் வந்ததும் அவசரமாக எழுந்தவன், வயிற்றில் நீட்டிக் கொண்டிருந்த வாக்கி டாக்கியின் ஆன்டெனாவை மறைத்துவிட்டு எழுந்தான். அவனை தினமும் தெருமுக்கில் உள்ள பேக்கரியில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அங்கு தான் சோகமே உருவாக எதையோ நினைத்தபடி டீ குடித்துக் கொண்டிருப்பான்.

“சார் வாங்க.. நா தா சார் ‘அந்திச்சூரியன்’.. ஒங்க தீவிர வாசகர் சார்.. ஓங்கட்ட இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கெடச்சுருக்கு”, என்று சிரித்து கைகுலுக்கினான்.

இதென்னடா சோதனை! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கிறாயே ஆண்டவா!

“ நான் குடிக்கும் காப்பிக்கு உன் பெயர் தானே சர்க்கரை”- எவ்ளோ ‘பிரமாதமான’ வரி சார்..”

இப்போது அவருக்கு இரண்டு குழப்பங்கள். இந்த வரியை நான்தான் எழுதினேனா? பாராட்டுக்களை வாசித்துக் கடந்துவிடலாம். நேரில் இப்படி முகத்திற்கு முன் பூரிப்புடன் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்வது? நாணச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.

வண்டியில் மூவரும் ஏறினார்கள். வண்டியின் உட்புறம் ‘அதி ரகசிய உளவுத்துறை – இந்திய அரசாங்கம்’ என சிவப்பு எழுத்துக்களில் எழுதி இருந்தது. அந்திச்சூரியன்  பணிவாக எழுந்து “மன்னிக்கணும் சார்..” என்றபடி ஒரு கருப்பு துணியை இரண்டாக மடித்து அவர் கண்ணை இறுகக் கட்டினான். தேன் மலர் அருகமர அந்திச் சூரியன் சாரதியாக வண்டி கிளம்பியது. .சற்று நேரத்துக்கெல்லாம் யார் கண்ணிலும் படாமல் இப்படியாக அண்ணா சாலை சிக்னலை கடந்து அந்தக் கருப்பு வண்டி ரகசியமாக சென்று கொண்டிருந்தது.

வண்டியில் ஏறியது முதல் எதற்காக நம்மை அழைத்துச் செல்கிறார்கள் என யோசித்து யோசித்து பார்த்தார். வரிகள் எல்லாம் கட்டிவிட்டோமே? இருந்த ஐநூறு ஆயிரத்தை கூட வங்கியில் போட்டாகி விட்டதே? வீட்டு நாய் என தெரியாமல் கல்லெறிந்ததற்காக எல்லாம் இத்தனை ரகசியமாக கூட்டிச் செல்ல மாட்டார்கள். சிறுவயதில் கைப்பழக்கத்தின் போது மாமாவிடம் மாட்டிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. இத்தனை ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை எல்லாம் ஓட்டிப் பார்த்தபோது அவர் மீது அவரே காரி உமிழ்ந்துகொள்ள வேண்டும் என தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டார். இத்தனை கீழ்மையான ஆளாக இருந்திருக்கிறோம் என எண்ணியபோது நமக்கு இங்கு என்ன நடந்தாலும் அது சரிதான் என ஒரு முடிவுக்கு வந்தார்.

 

வ்வளவு நேரம் கடந்தது என தெரியவில்லை. அவர் கண் கட்டை திறக்கையில் ஒரு பாலைவனம் போலிருந்த இடத்தின் மத்தியில் நின்றார். அவர்கள் இருவரும் ஓரிடத்தில் மணலை விலக்கினர். அங்கே ஒரு பாதாள சாக்கடை அடைப்பான் போல மூனாள்  விட்டத்தில் வட்டக் கதவு ஒன்றிருந்தது. அந்தி சூரியன் அதன் அருகே சென்று “அண்டா கா குசும்..அபு கா குசும்..திறந்துடு சீசே” என கூறியதும். அது திறந்து கொண்டது.

அந்த பாதாள வழி நல்ல வெளிச்சத்துடன் மிதமாக குளிர்ந்திருந்தது. அதன் முடிவில் ஒரு மேசையில் அதுவரை கணினியில் ஏதோ ஒன்று செய்த கொண்டிருந்த புடவை அணிந்திருந்த பெண் ஒருத்தி சட்டென எழுந்து நின்றாள். “ஆஹா ..பழுவேட்டையர்” என உலகி அழகி பட்டம் வென்றவள் போல் கன்னத்தில் கைவைத்து உற்சாகமாக கூவினாள். மாருதி வரைந்த ஓவியங்களில் இருப்பது போலெல்லாம் ஒரு பெண் உண்மையில் இருக்க முடியும் என அவர் அன்றுவரை நம்பவில்லை. ஒரு நல்ல குழாய் சொக்காய் அணிந்து வந்திருக்கலாம், பாழாய் போன இந்த சாரத்தை கட்டிக்கொண்டு வந்தோமே என வருந்தினார்.

‘சார் நா ஒங்க தீவிர ரசிகை சார்..” என்று மேசையிலிருந்த நோட்டு புத்தகத்தை எடுத்துக் காட்டினாள். அந்த 90 பக்க நோட்டு முழுவதும் பழுவேட்டையரின் கவிதைகளால் நிரம்பி இருந்தது.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என உருகினாலும், மிகுந்த பிரயாசையுடன் கண்ணீரை கட்டுப்படுத்திகொண்டார். அத்தனை நேரம் அவருக்கிருந்த அச்சம், பதட்டம், கவலை எல்லாம் தணிந்தது. இப்படியாக தனக்கொரு வாசகி இருக்கிறார் எனும் அதிர்ச்சியைக் காட்டிலும் இனி வேறு என்ன பெரிய அதிர்ச்சி இருக்க போகிறது! எதையும் தாங்கும் ஆற்றல் அவருக்கு அக்கணம் முதல் வந்துவிட்டது.

“நீங்க ‘விண்மினி’ தான?” என்றார் அவர். இருண்ட வானத்தில் ஒற்றை நட்சத்திரத்தைப் பார்க்கும் பொற்குழல் பெண்தான் விண்மினியின் முகப்புப்படம். .

“சார் எப்புடி சார்! என்றாள் விழி விரிய.

“ஒங்க கமெண்டுல எப்போதுமே ஒரு வாஞ்சை, ஒரு ஆத்மார்த்தமான உணர்ச்சி இருக்கும்” என்றார் நிதானமாக. ஆம் அந்த சிவப்பு பூ புடவைக்காரிதான் “மனதைத் தைக்கிறது” பின்னூட்டத்திற்கு உரியவள்.

“உன் கண்மணிகள் பற்றி எரியும் மின்மினிகளா? இல்லை சூப்பர்நோவா விண் மணிகளா?” இந்த வரிக்காகத்தான் சார் எம்பேரே விண்மினின்னு வெச்சேன்.” என்றாள்.

தேன் மலரும் , அந்திச்சூரியனும் அங்கேயே விடைபெற்றுக்கொள்ள, விண்மினி அவரை மற்றோர் கதவுக்கு அப்பால் அழைத்து சென்றாள். கூடுதல் துணை நிலை நுண் மதியாளர், அதி ரகசிய உளவுத்துறை, இந்திய அரசாங்கம் என பொறிக்கப்பட்டிருந்த கதவுத் துவாரத்தில் கண்ணை நெருக்கமாக காட்டியதும் கதவு திறந்து கொண்டது. உயரம் குறைந்த மேற்கூரை. ஜன்னலற்ற வெளிர் நீல அறை. விளக்கு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் அறை முழுவதும் வெளிச்சம் பரவி இருந்தது. அங்கே சாம்பல் நிற சஃபாரி அணிந்து சட்டமில்லா கண்ணாடி அணிந்த ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த  ‘அவசரம்’ என எழுதப்பட்ட ஒரு கோப்பை மூடிவைத்துவிட்டு இன்முகத்துடன் வரவேற்றார்.

“வாங்க பழுவேட்டையன்.. உக்காருங்க” என்று எதிரில் இடப்பட்டிருந்த நாற்காலியை காட்டினார். அதில் ‘திரு. பழுவேட்டையன்’ என எழுதி ஒட்டியிருந்தது. விண்மினி அறையை விட்டு விலகிச் சென்றாள். படு பாவி கொஞ்சநேரம் அவள் கூடவே இருந்து தொலைக்க கூடாதோ? அவளின் அழகிய பின்புறம் அலுங்கிக் குலுங்கி செல்வதை காண்கையில் வீட்டுக்கு சென்றதும் இதைப்பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என மனதில் உறுதி பூண்டார்.

‘சிரமத்துக்கு மன்னிக்கணும்.. பயணமெல்லாம் சொகமா இருந்துதா?. போன வாரம் திங்கக்கிழம ஒரு மழ கவிதை எழுதி இருந்தீங்களே.. ரொம்ப அருமையா இருந்துது.. குறிப்பா வரிய சட்டுன்னு நெனவுக்கு கொண்டுவர முடியல.. ஆனா மழைய கடவுளின் மூத்திரத்தோட ஒப்பிட்டு எழுதி இருந்தீங்க.. அருமையான சிந்தன.. ஒரு வாரம் கழிச்சி கூட அத நியாபகம் வெச்சுருக்கேன் பாருங்களேன்’

ஓஹோ. அப்படியென்றால். இவன்தான் அந்த காலப்புழுவாக இருக்க முடியும். எட்டாகப் பின்னிய நாகங்களின் முகப்புப் படம் மனதில் பளிச்சிட்டது. பெருமிதம் கலந்த புன்னகையை அவருக்கு பதிலாக அளித்தார். அந்த பாவனை அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் தான் மூர்க்கமான பிரியத்தைச் சொரியும் வாசக ரசிகர்களை எப்படி எதிர்கொள்வதென ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்என்பதை எண்ணி மேலும் பெருமிதம் கொண்டார். வரிகளாக இன்றிச் சிந்தனைகளாக உட்புகுந்து ஆட்கொண்ட பெருமிதம். ‘இதில் சிந்திக்க என்னவிருக்கிறது?’ என மனதின் விளிம்பில் தலை தூக்கிய கேள்வியை ‘அவரவருக்கு ஆயிரம் வழிகள்’ என பல்வேறு சால்ஜாப்புக்களை சொல்லி அழுத்தி வைக்க முனைந்தார்.

“வாங்க போலாம்” என எழுந்து அவரை அழைத்துச் சென்றார் காலப்புழு. அவர் நாற்காலிக்கு கீழே எதையோ அழுத்தியதும். ஒரு பிலம் அங்கே உருவானது. இரண்டாள் விட்டமிருக்கும். உடல் சில்லிட்டது. மங்கிய வெளிச்சத்தில் கொஞ்ச தூரம் ஊர்ந்தபிறகு. முதன்மை நுண் மதியாளர், ஐக்கிய இந்திய அரசாங்கம் என செதுக்கபட்டிருந்த அறுகோண கதவு ஒன்று தென்பட்டது. அதன் மையத்தில் தெரிந்த கண்ணில் காலப்புழு சபாரி மேற்சட்டையை தூக்கி தனது உந்தி சுழியை வைத்து அழுத்தினார். அறுகோண கதவின் ஆறு மடைகளும் உள்ளிழுத்து கொண்டன. அடுத்தொரு கதவிருந்தால் அதை எப்படி திறப்பார்களோ என அவர் எண்ணியபோது உடல் விதிர்த்தடங்கியது.

ரத்தச் சிவப்பு சுவர்கள் கொண்ட நீள் வட்ட அறை. இவரை உள்ளே சேர்த்ததும் காலப்புழு வணங்கி திரும்பி சென்றார். தனது மடிகணினியை மூடிவைத்துவிட்டு சூட்டணிந்த அந்த இளைஞர் மென்னகையுடன் வரவேற்றார்.

“மிஸ்டர். பழுவேட்டையன்.. வெல்கம்.. கிரேட் டு ஹேவ் யு ஹியர்.. உக்காருங்க’ என்று அவன் காட்டிய இடத்தில் நாற்காலி ஏதுமில்லை. ஒருகணம் எழுத்தாளனை அவமதிக்கிறானோ என ஆத்திரம் வந்தது. நான் ஒரு மகத்தான எழுத்தாளன் எனும் மிடுக்கு அவர் உடல்மொழியில் புலப்பட்டது. கூடவே என்னை நீ அவமதிப்பது சரியல்ல எனும் தொனியும். “ப்ளீஸ்.. சும்மா உக்காருங்க..” என அவன் அந்தரத்தில் அமர்ந்து காட்டினான். அவன் கால் வளைத்து அமருவது போல் குனிந்தவுடன் அங்கே ஒரு நாற்காலி தோன்றியது. அவனுக்கு கச்சிதமாக பொருந்தும் நாற்காலி. அவரும் அதே போல் கால் வளைத்து காற்றில் அமர சென்றவுடன் ஒரு நாற்காலி முளைத்தது. அவருக்கென்றே உருவாக்கப்பட்ட நாற்காலி போல். நீட்டிக் கொண்டிருக்கும் வெளிமூலம் கூட கச்சிதமாக பொருந்தி, அவருடைய ஒவ்வொரு நெளிவு சுளிவுகளுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டது. சரியாக அமர்ந்தவுடன் ஒரு இயந்திரப்பெண் குரலில் “அடையாளம் உறுதி செய்யப்பட்டது” என நாற்காலி சப்தித்தது. அந்த அறையில் குளிரடங்கி மிதமான வெப்பம் நிலவியது. அத்தனை வாசகர்களையும் ஒன்றாகச் சந்தித்திருக்கலாமே, ஏன் இப்படி ஒவ்வொரு அறையாக கூட்டிச் செல்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தார். இப்போது இவன் என்ன சொல்லப் போகிறானோ என எண்ணியபோது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க ஒரு யுனிக் ரைட்டர்..உங்க கிரேட்னஸ் ஒங்களுக்கு தெரியுமான்னு தெரில.. நீங்க தமிழோட வில்லியம் சிம்போர்கான்னு சொல்லலாம்… ஒங்ககிட்ட யாரும் சொன்னாங்களான்னு தெரில ஆனா நா சொல்றேன்.. ஏன்னா எனக்கு உலக இலக்கிய பரிச்சயம் நெறையா உண்டு.. சொற் பயன்பாடு கொடுக்கக்கூடிய எளிமைல எல்லாரும் ஏமாந்துடுவாங்க.. அதோட நுண்ணரசியல், சமூக விமர்சனம் மற்றும் ஆன்மீக தத்தளிப்பையும் ஆன்மீக சமநிலையையும்  யாரும் கவனிச்சாங்களான்னு தெரில… இப்ப உங்க காதல் கவிதைகள எடுத்திங்கன்னா.. ஒரு பக்கம் ஒரு ஆண் பெண்ணுக்கு ஏங்குவதா தோணும், மறுபக்கம் பரமாத்மாவைச் சேர துடிக்கும் ஜீவாத்மாவின் பிரிவாற்றாமைய குறியீடுகளாக, படிமங்களா சொல்லும்…. கவிதைகள்ல அபூர்வமான ஜென் தன்மையும் கலையமைதியும் ஒருவித சூஃபி மெய்ஞானமும் இருக்கு.. ஒரு கவிதல கூட இரும்பு.. கரும்பு.. அரும்புன்னு முடியுற மாறி அடுத்தடுத்த வரிகள் வரும்.. அதன் இசைத்தன்மை என்ன சொக்க வெச்சுருக்கு.. மத்தவங்கள பத்தி தெரியாது..ஆனா ஒவ்வொரு மொற கிரேட்ன்னு நான் கமண்ட் எழுதும்போதும் அத மனசாரதான் எழுதுறேன்”

அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவருக்கு பீதி அதிகமானது. முதலில் ஒரு பேரைச் சொன்னானே அதை திரும்பச் சொல்லச் சொல்லி கேட்கலாமா? கண்ணதாசன் பதிப்பகத்தில் போட்டிருந்த நூறு ஜென் கதைகள் நூலை வாசிக்க முனைந்ததும், அதில் கதையே இல்லை என இரண்டு பக்கங்களோடு நிறுத்திக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. இவனெல்லாம் வாசகனா? யார் இவனை இப்படியெல்லாம் வாசிக்கச் சொன்னார்கள்? இவர்கள் நடந்து கொள்வது ஒன்றும் சரியில்லை. எப்போது வீட்டுக்கு விடுவார்கள்? இவனோடு இந்த பயணம் முடிந்துவிட்டால் பரவாயில்லை எனச் சிந்தனைகள் தாறுமாறாக ஓடிகொண்டிருந்தன.

இத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு, நூறாண்டுகள் பேசப்படபோகும் படைப்பாளிகளுக்கு உரித்தான தோரணையில் “நன்றி திரு சீக்கிங் வேண்டரர்’ அவர்களே. இன்னமும்கூட நீங்கள் ஆழ்ந்து வாசித்தால் வேறு பல தளங்கள் வருங்காலத்தில் உங்களுக்கு பிடிகிட்டக்கூடும். நீங்கள் நிச்சயம் நல்ல வாசகராக வளர முடியும். உங்கள் வாசிப்பு சரியான திசையில்தான் செல்கிறது.” என்றார்.

“போலாமா” என அவன் எழுந்தான். தொலைந்தோம். மேற்கூரையில் ‘அதி ரகசிய உளவமைச்சகம், ஐக்கிய இந்திய அரசாங்கம் என ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மண்டையால் முட்டினான். அவன் தலைக்கு மேலே ஒராள் விட்டத்தில் ஒரு துளை விழுந்தது. “நீங்க மட்டும்தான்.. போங்க” என அவரை அதற்குள் திணித்தான். சாரம் காற்றில் ஆட எக்கி உள்ளே சென்றதும் அந்த துளை மூடிக்கொண்டது. பளீர் வெண்மை. கண் கூசும் வெண்மை. ஒன்றுமே புலப்படவில்லை. கண் கொஞ்சம் பழகியதும் சுற்றும் முற்றும் நோக்கினார். அலையலையாக விரிந்த தாமரை இதழின் மையத்தில் அவரிருந்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவருமே இல்லை. ஒருவேளை மோர்கன் ஃப்ரீமேன் வெள்ளை கோட்டு அணிந்து கொண்டு வருவாரோ என ஒரு ஐயம்கூட எழுந்தது. அசரீரி போல் ஒரு கம்பீர குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

“என்னடா மணியா, ரெண்டு மூணு நாளா ஏதோ ஆதார் கார்ட், ரேஷன் கார்டு, பேங்குல கூட்டம், பணமில்ல, காள மாடு,  சித்தி, பெரியம்மானுல்லாம்  எழுதிட்டு இருந்தீயே……. அதான் சும்மா சாரிக்கலாம்னு கூப்டேன்..”

மல்லாக்க கிடத்தி இளவட்டக் கல்லை தூக்கி வைத்தது போல் நெஞ்சிலும் வயிற்றிலும் பயங்கர கனம். புடரி வலித்து தலை சுற்றியது. மிகுந்த பிரயாசைப்பட்டு பேசினார்.

“அது ஏதோ கடுப்புல எளுதி போட்டேனுங்க” என்றார் குத்துமதிப்பாக ஏதோ ஒரு பக்கத்தை நோக்கி.

‘தெரியுது.. ரொம்ப போரடிக்குதோ? வேற ஒண்ணுமில்லையே? ஆங்..அப்புறம் நானும் உன் வாசகந்தாம்பா’

‘வேற ஒண்ணுமே இல்லிங்க்னா’ எச்சி கூட்டி விழுங்கி,  ‘தெரிஞ்சுகிட்டேங்க ..அந்த அகம் பிரம்மாஸ்மி.. சூரியன் படம் போட்டவரு நீங்கதானுங்க’

வெடி சிரிப்பு எல்லா பக்கத்திலும் இருந்து கேட்டது  “உச்சம்டா”.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நெடுநாள் உறக்கம் விட்டு எழுவது போல் அசதியாக அறையில் அமர்ந்திருந்தார். வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தார். அன்று நடந்ததை திரும்ப நினைவுகூர முற்பட்டார். விரல் விட்டு ஒவ்வொருவராக எண்ணத் துவங்கினார். அப்போதுதான் அது அவருக்கு உறைத்தது. இவர்களுக்கு மேல்  இருக்கும் அந்த மூவர் யாராக இருக்கக்கூடும் என யோசிக்கும்போதே அடி வயிற்றைக் கலக்கியது.

அவர் கழிப்பறையை விட்டு வெளியே வரும்போது குண்டு அம்மாள் நரைமுடியை அள்ளி முடிந்துகொண்டு யாரிடமோ வாயிலில் பேசி கொண்டிருந்தாள். மூக்கு நீண்ட கருப்பு பூட்ஸ் மட்டும் அவருக்கு அங்கிருந்து தெரிந்தது.

 

(சமர்ப்பணம்- இக்கதை நானறிந்த சுப்பிரமணிய எழுத்தாளர்களில் எனக்கு மிகப்பிடித்த நாஞ்சில் நாடனுக்கு).

மிட்டு மியா

காலத்துகள்

நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக இருக்கும்போது அவர்கள் வீட்டில் வளர்த்த ‘ஐவன்’ என்ற அல்சேஷனின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டதும், அந்தப் பெயரை கேட்பவர்கள் ஒரு கணம் துணுக்குறுவதும்,  எனக்கு பெருமிதத்தை அளித்தது.

பெயருக்கு  ஏற்றாற்போல்  ஆஜானுபாகுவாக,  சிங்கம் போல் பிடரியுடன் கம்பீரமாக இருந்ததாக  அம்மா குறிப்பிட்ட ஐவன் போல் இதுவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டாலும், அது என்னவோ சராசரி நாய் போல்தான் வளர்ந்தது. வீட்டிற்கு அருகில் சின்ன சலனம் இருந்தாலும்  குறைப்பது ஆரம்பத்தில் பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும் என் வீட்டிற்கு பலமுறை வருபவர்கள், அடுத்த போர்ஷனுக்கு வரும் விருந்தாளிகள் என யாரை, எத்தனை முறை பார்த்த பின்பும்  குரைத்துத் தள்ளுவது அதன் மனநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் பின்புறத்தில் இருந்த எங்கள் போர்ஷன்களுக்கு வர இருள் நிறைந்த சந்துதான் வழி. எங்களுக்கு நேர் பின்வரிசையில் சிதிலமடைந்த கல்யாண மண்டபம், யாரும் குடியிருக்காத பேய் நடமாட்ட புரளிகள் உலவும்  பங்களா பாணி வீடு, காலி மனை. எனவே இப்படி ஒரு காவல் தேவைதான் என பக்கத்து குடித்தனக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். ஐவனின் குரைப்பு குறித்து   பிரச்சனை எழவில்லை, அதுவும் இஷ்டம் போல் குரைத்துத் தீர்த்தது. அதன் சத்தம் முன்  சந்தையும் தாண்டி தெருவரை கேட்பதால், ‘அந்த கத்து கத்துனு கத்தற நாய் வீடு இருக்கற தெரு’ என்பது பெரிய மணியக்காரத் தெருவிற்கு அடையாளமாகிவிட்டது.

ஒரு நாள் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நூலகம் செல்லக் கிளம்பியவன் தூங்கிக் கொண்டிருந்த ஐவனுக்கு  மூக்கில் முத்தமிட முயன்றேன். பயமோ, தூக்கம் கலைந்த கோபமோ, உறுமியபடி என் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழ, ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனை அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காதான் முகத்தில் ரத்தம் என்று தடுத்து நிறுத்தினார். ஐவனின் நகமோ பல்லோ பட்டு கண்ணிற்கு  மிக அருகில் கன்ன எலும்பில் காயம். எதனால் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றார் டாக்டர்.

தொப்புளைச் சுற்றி  பத்து பன்னிரண்டு ஊசி போடப்படுமே என்ற பீதியில் இருந்தவனுக்கு, நாய்க்கடிக்கு புதிதாக சந்தைக்கு வந்திருந்த, ஒரு முறை மட்டுமே போட வேண்டிய முன்னூற்றி ஐம்பது ருபாய் தடுப்பூசி கொஞ்சம் நிம்மதி அளித்தாலும் வேறொரு  சந்தேகம் உண்டானது. சமீபத்தில்தான் ‘கெனி பிக்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருந்தேன்.  இரண்டொரு நாட்களில்  கன்னவெலும்பு கருநீல நிறமாகி , கொருக்குத் தட்டியிருந்தது.  இரண்டு வாரங்கள்  கழித்து அது உதிர்ந்து தோல் இயல்பான நிறத்திற்கு மாறும் வரை எங்கு சென்றாலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு.

வீட்டில் ஐவனைக் கொடுத்து விடும் முடிவுக்கு  வந்து விட்டார்கள். அது தெரியாமல் செய்து விட்டது என்று நான் சொன்னதை யாரும் கேட்பதாயில்லை, கண் தப்பித்தது என் அதிர்ஷ்டம்தான் என்றும் அடுத்த முறை அது மீண்டும் கை கொடுக்காமல் போனால் என்ன ஆகும் என்றும் கேட்டார்கள். அழைத்துச் செல்பவர் வந்த அன்று ஓலமிட்டபடி இருந்த ஐவனை அவர் இழுத்துச் செல்வதை தெருமுனை வரை அழுதபடி சென்று பார்த்தேன். அன்று ஐவன் செய்த ரகளையைப் பற்றி பெரிய மணியக்காரத் தெரு சில நாட்கள் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது.  வீட்டிற்கு வந்தால் என் அப்பாவின் கண்ணும் கலங்கி இருந்ததுதான் ஆச்சரியம். அம்மா அழுவது எனக்கு புதிதல்ல, அதற்கான சூழ்நிலை அடிக்கடி என் வீட்டில் உருவாகும். என் வயது பையன்கள் அழுதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியவர்களில் ஆண்கள்கூட அழுவார்கள் என்று அன்றுதான் தெரிந்தது.

அதன்பின் திருமணம் முடிந்து மகனும் பிறந்து பின், எந்த யோசனையோ, காரணமோ இன்றி   கிளி ஒன்றை வாங்குவது வரை  வளர்ப்பு  பிராணிகள் பற்றிய எண்ணம் தோன்றியதில்லை. என் பால்யத்தில் நடந்த, எப்போதோ மறந்திருக்க வேண்டிய மிக எளிய, ஆனால் மனதின்  ஆழத்தில் இருந்து அவ்வப்போது மேலெழுந்து வரும் நிகழ்வு ஒன்றுதான் கிளிக்கும் எனக்குமான ஒரே நேரடி சம்பந்தம்.

எங்களை ஆரியர்கள்  என்று  சொல்ல முடியாது, எங்கோ எப்போதோ என் குடும்பத்தின் குடிமரபில் எங்கும் நேர்வது போல் இயல்பான கலப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு என் மூக்கையும் ஒரு  சான்றாக  நான் முன்வைப்பதுண்டு.  தாயைப் போல் தீர்க்கமான  நாசி இல்லாமல் என் மகனும்    ‘சப்ப மூக்கு சப்பான் பொம்மையாகிப்’ போனது குறித்து இரு குடும்பத்திலும் கொஞ்சம் வருத்தம்.      லவ் பர்ட்ஸ், பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகைப் பறவைகளை விற்றுக்கொண்டிருந்தவனிடம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நான் கிளி வாங்க இவைகூட  தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும்.  இத்தனைக்கும் லவ் பர்ட்ஸ் பார்ப்பதற்கு  அத்தனை  அழகு, குரலும் இனிமை.  ஒரு கிளியின் விலைக்கு இரு லவ் பர்ட்ஸ் வேறு.

வீட்டிற்கு வந்தவுடன், கிளியை கொஞ்ச நேரம் ரசித்து விட்டு கூண்டை எங்கு மாட்டுவது, என்ன உணவு, யார் கொடுப்பது போன்ற, நான் அதுவரை யோசித்திராத நடைமுறை விஷயங்கள் குறித்து என் மனைவி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தாள். நானே உணவளிக்கும் பொறுப்பையும், கூண்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக சொன்னேன். பள்ளி முடிந்து வந்த  மகனுக்கும் கிளியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம். ‘அம்மா மூக்கு மாதிரி இருக்குலப்பா’ என்று அவன் சொல்ல என் மனைவிக்கு கோபமாக வெளிப்படும் சந்தோஷம். ‘இதுக்கு என்ன பேருப்பா’ என்று கேட்டவுடன் தான் அதை பற்றிய நினைவு வந்தது. என் பாட்டி, சிறுவயதில் தன் வீட்டில் கிளி வளர்த்தார்கள் என்றும் அதன் பெயர் ‘மிட்டு’ என்றும் சொன்னார்.

நான் குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி தன் பால்ய கால அனுபவங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறார். பத்து பன்னிரண்டு வயது வாக்கில்  அவர்  மிகப் பெரிய கதைசொல்லி என்பது புரிந்தது. ஆனால் அதற்குப் பின் இத்தனை வருடங்கள் கழித்தும், அவர் சொல்வதில் எது உண்மை, பொய் என்பது எனக்கு பிடிபடுவதே இல்லை என்பதால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்ற இடத்திலிருந்தே ஆரம்பிப்பது என் வழக்கம்.  கிளி விஷயம் எப்படியோ,  இப்போது  பெயர்தான் முக்கியம் என்பதாலும், அவர் சொன்ன பெயர் எல்லோருக்கும் பிடித்துப் போனதாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ‘மிட்டு’வை  இன்னும் வாஞ்சையாக ‘மிட்டு மியா’ என்று    அழைக்கலாம், வட மாநிலங்களில் இந்த உருது பின்னொட்டு சேர்க்கும் வழக்கம் உண்டு என்ற கூடுதல் தகவலையும் பாட்டி அளித்தார்.  வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்தவர்தான் என்றாலும் வழக்கம் போல் இது குறித்தும் சந்தேகம் எழத்தான் செய்தது.

எழுந்தவுடன் ‘குட்மார்னிங்’, படுக்கும் முன் ‘குட்நைட்’ என மிட்டுவுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட என் மகன் பெரிதாக முடியாவிட்டாலும் கூண்டைச் சுத்தப்படுத்துவதில் எனக்கு உதவினான். கூண்டின் சிறு கதவைத் திறந்து உள்ளே ‘துவரம் பருப்பு’, தண்ணீர் கிண்ணங்களை வைப்பது அவனுக்கு ஒரு சாகசம். மிட்டு உண்டு முடித்து மூக்கை கூண்டின் கம்பிகளில் தேய்க்கும்போது, ஒற்றைக் காலை மட்டும்  கொண்டு கம்பியை பற்றிக் கொண்டு நிற்கும்போது கிளர்ந்து சத்தம் போடுவான்.

அனைவருக்கும் மிட்டுவை பிடித்துப் போனாலும், அது என்னவோ விலகியே இருந்தது. முதலில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் வருத்தம் என்று நினைத்தாலும் அப்படியல்ல  என்று விரைவில்  புரிந்தது, அது உண்பதில் எல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. மிட்டுவிடம் எப்போதும் ஒரு அலட்சிய தோரணை, உள்ளே வைக்கப்படும் உணவையும் திறை  ஏற்றுக்கொள்ளும் அரசனின் பாவனையுடன்தான் உண்ணும். என் அறையின் ஜன்னலோரத்தில் பறவைகளுக்கு வைக்கப்படும் தானியங்களை உண்ண அவை வரும்போதுகூட எந்த உணர்ச்சியையும் காட்டாது. இரவு நேரத்தில்  என் மகன் தன் பாடங்களை அதற்கு படித்துக் காட்டும்போது மட்டும், கூண்டின் அருகில் வந்து  ஒரு கண்ணை மூடியபடி கவனிப்பது போல் நின்றிருக்கும்.

ஒரு மாதம் கழிந்து கிளி எப்போது பேசும் என்ற கேள்வியை மகன் எழுப்பினான். அதற்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும், மிளகாயை அதன் நாவில் தேய்த்தால் விரைவில் பேசும் என்றும், தாங்கள் வளர்த்த கிளி அவ்வாறுதான் பேசியது என்றும் என் பாட்டி கூறினார். பயல் அதைச் செய்ய வேண்டும் என்றான், அவனுக்கு பத்து வயதாக இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. யார், எப்படி  மிளகாயை  அதற்கு தருவது? பாட்டி நடுங்கும் கையுடன் அப்படியே மிளகாயை நீட்ட அன்று மிட்டு என்ன மனநிலையில் இருந்ததோ பாட்டி கொஞ்சம் அசந்திருந்தால் விரலைப் பிடுங்கி விட்டிருக்கும்.’கோணக்கேடு பிடிச்சது, வயத்தாலி  சனியன்’ என்று  திட்டித் தீர்த்த பாட்டி அரைத்து விழுதாகக் கொடுக்கலாம் என்று அடுத்த யோசனையை  சொன்னார்.  மிளகாய் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளாமல் கழிய ஆரம்பித்து இறந்து விடப்போகிறது, என்று என் மனைவி கூற அந்த யோசனையை கைவிட்டோம்.

ஆங்கிலமா, தமிழா என்று யோசித்து, பேச்சு வழக்கில் இருப்பது போல் இரண்டிலும்  கற்றுத்  தருவது, பின் மிட்டுவின் சமர்த்து என்று முடிவு செய்து, ‘குட்மார்னிங்’, ‘வணக்கம்’, ‘வெல்கம்’ என்று கலந்து கட்டிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.  நானொருவன் அங்கு கத்திக் கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் அங்கில்லாதது போலவே மிட்டு நடந்து கொண்டது.  இரவு நேரங்களில் அதற்கு தானறிந்த சில மாயாஜாலக்  கதைகளை என் மகன் சொன்னதில்  மந்திரவாதியின் உயிர் கிளியில் இருந்து குருவிக்கு குடிபெயர்ந்து, குருவி செத்தது. மிட்டு எப்போதும் போல் தலை சாய்த்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய பேச மட்டும் செய்யவில்லை.

என் பாட்டி வேறு, தங்கள் ஊரில் கிளிகள் இந்த நேரத்தில் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், ஒன்று இங்குள்ள கிளிகள் சாமர்த்தியசாலிகள் அல்ல, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள்  திறமையானவர்கள் இல்லை என்று பொருள்படுமாறு சொல்ல ஆரம்பித்தார். பாட்டியின் சொல்வன்மையை நான் நேரடியாக உணர்ந்தவன். மகனுக்கு என் திறமை மீது சந்தேகம் வந்து விடப் போகிறது என்று கிளியைப் பேச வைத்தல் பற்றி இணையத்தில் தேடி படித்து அவற்றில் சொல்லி இருந்தது போல் சில முயற்சிகள் செய்தேன்.  மகன் பேச ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்குக்கூட நான் இத்தனை சிரத்தையாக வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க்கவில்லை என்பது என் மனைவியின் அவதானிப்பு. எதுவும் பலன் அளிக்கவில்லை, மிட்டு கல்லுளிமங்கனாகத்தான் இருந்தது.

அடுத்த முயற்சியாக அறையில் யாரும் இல்லாபோது நான் அதற்கு வசைச் சொற்களையும், ஆபாச வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதை கவனித்த என் மனைவி கடுப்பாகி விட்டாள். நல்லவற்றைவிட தீயவைதான் எளிதில் பதியும் என்பதால் அப்படி செய்தேன் என்று நான் சொன்னதற்கெல்லாம் அவள் சமாதானம் ஆகவில்லை.  நான் சொல்வதை  மகனும் கேட்டு அப்படியே பேச ஆரம்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொன்னது நியாயம் என்பதால் அந்த முயற்சியை  நிறுத்தினேன்.

மிட்டு மகா கர்வியாக அல்லது படு முட்டாளாக இருக்க வேண்டும். அது அந்த வசை, ஆபாசச் சொற்களில் இருந்துகூட ஒரு வார்த்தையையும்   கற்றுக்கொள்ளவில்லை.  ஏன் மிட்டு  நல்ல, பண்புள்ள கிளியாக இருக்ககூடாதா என்று என் மனைவி சொன்னதை நான் ஏற்கவில்லை, அதற்கும் பண்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பது என் வாதம். கிளி மீதுள்ள என் ஆர்வம் குறைய ஆரம்பிக்க, அதை பராமரிக்கும் பொறுப்பு  என் மனைவியிடம் சென்றது.  மகனுக்கு நீதானே பொறுமையாக சொல்லிக் கொடுத்தாய், என்று அதையும் அவள் தலையில்  கட்டி விட்டேன்.  யாருக்கும், எதற்கும் மிட்டு மசிந்து கொடுக்கவில்லை, அதற்கு  சிறிதளவேனும் ஒட்டுதல் இருந்ததாக நாங்கள் நினைத்திருந்த மகனுக்கும்கூட. ஒவ்வொரு இரவும், விடுமுறை நாளிலும் அவன் அதன் முன்  பொறுமையாக ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை.

இந்த நேரத்தில் மிட்டுவை விடுதலை செய்து விடலாமா  என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன். மனைவியிடம் பேசிப் பார்த்தேன், முதலில் ஒப்புக்கொள்ளாதவளை, கிளிக்கு ஆயுசு குறைவு, அது இறந்தால் மகன் மிகவும் வருந்துவான், குழந்தையின் மனதை  பாதிக்கக்கூடும்,  எனவே இப்போதே அதை வெளியே விட்டு விடலாம் என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி  என் வழிக்கு வர வைத்தேன். மகனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தபோது அவனும் ஒப்புக்கொள்ளவில்லை. கிளியை கூண்டில் அடைப்பது பாவம் என்று நான் இறுதியாக  சொன்ன காரணத்தில் இருந்த அப்பட்டமான பொய்யை  அவன்  உணர்ந்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக சொல்லும் வயதில்லை அவனுக்கு. ஆனால் ‘மிட்டுக்கு  ப்ளை  பண்ண தெரியும்லபா’ என்று மட்டும் கேட்டான்.

அந்த ஞாயிறு அன்று காலையிலேயே மாடிக்குச் சென்றேன். கலங்கிய கண்களுடன் இருந்த மனைவி, வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள், மிளகாய் கொடுக்க முயன்ற சம்பவத்திற்கு பின் மிட்டு மேல் கோபமாக இருந்த பாட்டிகூட கொஞ்சம் கனிந்திருந்தார். முகத்தில் சுரத்தே இல்லையென்றாலும் மகன் மட்டும் வந்தான். இறுதி நேர ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தி கூண்டை திறந்தேன். முதலில் புரியாமல் வழக்கம் போல்  உள்ளேயே அமர்ந்திருந்த மிட்டு பின் வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்து  திரும்பிப் பார்க்காமல் பறந்தது.  அது கண்ணில் இருந்து மறைந்த பின்னும் தொடுவானத்தை பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருக்க ‘மிட்டு  வீட்டுக்கு போய் சேந்துடும்லபா’ என்று கேட்டான். எனக்கோ, ஐவன்  வீட்டை விட்டுச் சென்று  சில நாட்கள் கழித்து புதிய இடத்தில் சந்தோஷமாக இருப்பதாக கேள்விப்பட்டபோது ஏற்பட்ட அதே  ஏமாற்ற  உணர்வு.

வேரும் கனியும்

நரோபா

எலிசபெத் கில்பர்ட்டின் இந்த டெட் உரையை அண்மையில் கேட்க நேர்ந்தது. எலிசபெத் நவீன அறிவியல் யுகம் துவங்கிய இந்த ஐநூறு ஆண்டுகளிள் படைப்பூக்கத்தின் பளு தாங்கவியலாமல் மரித்துப் போன படைப்பாளிகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

கருங்கல்லை சுமந்து செல்ல முயலும் தும்பியை போல் எழுத்தாளன் எப்போதும் தன்னை மீறிய கனவுகளைச் சுமந்து சிறகடிக்கிறான். அவனைப் பறக்க செய்யும் படைப்பூக்கமே அவனை மெல்ல அழிக்கவும் செய்கிறது. ‘படைப்பூக்க தடை’ அவனை முடக்குகிறது. நாவலோ கதையோ எங்கோ முட்டிகொள்ளும்போது அவன் பதட்டம் அடைகிறான். மேலும் அவனுடைய முந்தைய படைப்புகளின் எதிர்பார்ப்புகளையும் சுமந்து செல்கிறான். இவை எல்லாம் அவனை அழுத்துகின்றன. இயலாமை வாட்டுகிறது.

எலிசபெத், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து தானடைந்த முறையை பகிர்கிறார். பண்டைய ரோமானிய, கிரேக்க வழக்கத்தில் படைப்பூக்கம் வெளியிலிருந்து வந்ததாக நிலவிய நம்பிக்கையை சுட்டி காட்டுகிறார். சாக்ரடிஸ் அதை ‘டிமான்’ என்றழைத்தார். ஒரு டிமான் தனக்குச் சிந்தனைகளை வந்து சொல்லிச் செல்கிறது என அவர் பதிவு செய்கிறார். ரோமானியர்கள் படைப்பூக்கத்தை தனித்த ஆளுமையாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள், அவர்கள் அதை ‘ஜீனியஸ்’ என்றழைத்தார்கள். படைப்பாளிக்கு துணை வரும் ஒரு விசித்திர உயிரினம். படைப்பாளி வழியாக ‘ஜீனியஸ்’ வெளிப்படுகிறது.

ஒரு படைப்பு உருவாக்கத்தில் இப்போது இருவரின் பங்களிப்பு இருக்கிறது. எலிசபெத் எழுதி கொண்டிருக்கும்போது எங்கேனும் தடை ஏற்பட்டால் கைகொள்ளும் யுத்தியை பற்றி சொல்கிறார். ‘கடவுளோ, இல்லை ஜீனியசோ, இல்லை பெயரற்ற எதுவோ, இந்த படைப்பை நாமிருவரும் சேர்ந்தே உருவாக்குகிறோம், என்னளவில் நான் சரியாகவே செய்கிறேன், நீ உன் பங்களிப்பை சரியாக ஆற்றினால் மட்டுமே அது சிறந்ததாக இருக்கும்’ என வாய் விட்டுக் கூறுவாராம். இந்த யுத்தி அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது என்கிறார்.

நவீன அறிவியலின் வளர்ச்சியை ஒட்டி நவீன இலக்கியத்தின் பரிணாமத்தையும் புரிந்து கொள்ள முடியும். நவீன இலக்கியம் படைப்பாளியின் நுண்ணகங்காரத்தை சார்ந்து இயங்குவதாக நம்பப்படுகிறது. படைப்பு எழுத்தாளன் வழியாக வெளிப்படுகிறதா? அல்லது படைப்பாளி அதை முழுவதுமாக உருவாக்குகிறானா? எனும் விவாதம் வெகுகாலமாக இங்கே நிகழ்ந்து வருகிறது. ரோலான்ட் பார்தஸ் ‘எழுத்தாளனின் மரணம்’ எனக் கூறும்போது படைப்பையும் படைப்பாளியையும் குழப்பிக்கொள்ள கூடாது என்கிறார். படைப்பின் வழியாக படைப்பாளியின் அகத்தையும், உள்நோக்கங்களையும் கண்டடைவது வியர்த்தம், அவை எவ்வழியிலும் வாசிப்புக்கு அவசியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இந்திய பின்புலத்தில் நம் மரபிலக்கியங்களை பற்றி சிந்திக்கையில் நம்மிடம் ‘ஜீனியஸ்’ போன்ற கருத்தாக்கங்கள் இல்லையென்றாலும், படைப்பு இறைவனின் ‘அருள்’ என்ற நம்பிக்கை வலுவாக இருந்திருக்கிறது. காளிதாசனைப் பற்றிய கதை ஓர் உதாரணம். அன்னை அவனுடைய நாக்கில் எழுதுகிறாள். அவன் பெரும் படைப்பாளியாக ஆகிறான். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் தானும் அப்படி ஆக நினைத்து அலைந்து திரிந்த அனுபவத்தை சொல்கிறார். ஒரு சிற்றூரின் திண்ணையில் அப்படி கனவும் காண்கிறார். வள்ளுவரின், கம்பரின் தனிப்பட்ட ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் என நமக்கேதும் பெரிதாக கிடைக்கவில்லை. படைப்புக்களை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார்கள். சங்கப் புலவர்கள் தொடங்கி தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் எழுதிய கவிராயர்கள் வரை, எழுதியவர்களின் அடையாளம் பூடகமாகவே இருக்கிறது. செயின்ட். பீட்டர் பசிலிக்காவின் ஓவியங்களை தீட்டியவர் மைக்கேல் என்ஜெலோ என நாம் அறிவோம். சித்தன்னவாசல் ஓவியங்களை தீட்டியவர் எவர் என நாம் அறிந்ததில்லை. குடுமியான் மலையின் பிரமிக்கத்தக்க தலைகோலி சிற்பத்தை வடித்த கலைஞன் எவனென்று தெரியவில்லை. காரணப் பெயர்களும், புனைப் பெயர்களும் நம் மரபிலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. வள்ளுவனோ, கம்பனோ எவனென தெரியாததால் வாசிப்பில் நமக்கு என்ன குறைந்தது என கேட்டு பார்க்கிறேன். ஒன்றுமில்லை. தமிழின் நவீன இலக்கிய அலையின் துவக்க முகங்களான பாரதியையும், புதுமைப்பித்தனையும் எண்ணிக் கொள்கிறேன். பாரதியின் கவிதைகள் அளவுக்கே அவனுடைய ‘பித்தன்’ எனும் பிம்பம் நம்மை ஆக்கிரமிக்கிறது. பஷீர் என்றவுடன் படைப்பை மீறி அவருடைய சூஃபி பிம்பமும் இனைந்து கொள்கிறது.

இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இரு வேறு விவாதங்கள் நினைவில் எழுகின்றன. ஒருமுறை ஜெயமோகனோடு திருவண்ணாமலையில் மலைவலம் வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் கேட்டேன், “ஆன்மீகவாதியும் எழுத்தாளனும் எங்கோ ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகிறார்கள். தங்களுக்குள் ஒரு நிறைவின்மையை உணர்கிறார்கள், ஆன்மீகவாதியும் படைப்பாளியும் வெவ்வேறு வழிகளில் அதை நிறைக்க முயல்கிறார்கள் என தோன்றுகிறது. ந. பிச்சமூர்த்தி அவருடைய நேர்காணலில் இவ்வாறான ஒரு நிலையை பற்றி சொல்கிறார். சொல்லற்று போகும் ஒரு நிலையே தனக்கு உகந்தது என்கிறார். சொற்களில் இருந்து சொல்லற்ற ஒரு நிலைக்கு தாவி விட வேண்டும் என அவர் நினைப்பது சாத்தியமா என தெரியவில்லை. ஆன்மீகவாதி நிறைவை நோக்கி உண்மையிலேயே செல்கிறான், எழுத்தாளன் நிறைவின்மையை மூலதனமாக்கிக் படைக்கிறான், அதைக் கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறான் என நினைக்கிறேன்“, என்றேன்.

ஜெயமோகன் சீறினார். “இது உங்களுக்குச் சொந்தமாக தோன்றியது போல் இருக்கலாம், ஆனால் இது ஒரு நவீனத்துவ சிந்தனை. இந்தச் சிந்தனையின் ஊற்று இருத்தலியலில் இருக்கிறது. இங்கே மரம் இருக்கிறது, அது பூக்கிறது, அது இத்தனை கன அடி சூனியத்தை நிறைக்கிறது என்றா சொல்வீர்கள்? படைப்பு தன்னியல்பாக நிகழ முடியும்,” என்றார்.

ஆட்டிசத்தை பின்புலமாக வைத்து நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு நாவல் பாதியில் முட்டிக்கொண்டது. பெரும் மனவாதையாக இருந்த அச்சமயத்தில் கவிஞர் ரமேஷ் சுப்பிரமணியத்தை ஒரு மாலைப் பொழுதில் பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்தேன். ரமேஷ் ஓவியரும்கூட, பவுத்தத்தில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவரிடம் எனது சிக்கலை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இரண்டு விஷயங்களை கூறினார். “எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்க முடியும். ஒன்று நன்றி அறிவித்தல், இந்த இயற்கையும் வாழ்வும் எனக்கு எத்தனையோ அனுபவங்களை அளித்திருக்கின்றன, என்னை செழுமை செய்திருக்கின்றன, அதற்கு ஓர் எளிய நன்றியாக, ஒரு நிகர் வாழ்க்கையை, ‘போலச் செய்தலை’ திரும்பி அளிக்கிறேன், இதை நம் மரபில் சமர்ப்பணம், அர்ப்பணிப்பு என கூறுவார்கள். இரண்டாவது காரணம், ‘லீலை’, வாழ்க்கையே ஒரு விளையாட்டு, அதில் நாம் படைப்பவையும் ஒரு விளையாட்டு, இந்த விளையாட்டு இல்லை என்றால் வேறொன்றை கைகொள்ளலாம், இதில் துன்புற என்ன இருக்கிறது?”

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களை சொல்லும் பகுதியில் வரும் இரண்டு துதிகள் இந்திய மனநிலையை இயக்குவதாக புரிந்து கொண்டேன்- “ யோகமும், ஞானமும், சாங்கியமும், கல்வியும் சிற்பக்கலை உட்பட அனைத்து கலைகளும், வேதங்களும், சாத்திரங்களும், விஞ்ஞானமும், என அனைத்தும் அந்த ஜனார்த்தனனிலிருந்து உதித்ததே”. மற்றொரு புகழ்பெற்ற துதி- “உடல், வாக்கு, மனம், புலன், புத்தி, இயல்பால் உந்தப்பட்டோ அல்லது சுயத்தின் பொருட்டோ நான் ஆற்றும் அனைத்தும் பிறர் பொருட்டே, அவை அனைத்தும் நாராயணனுக்கே அர்ப்பணம்”

இந்த நம்பிக்கை படைப்பை உருவாக்க, அதன் அழுத்தங்களில் இருந்து படைப்பாளி தன்னை விடுவித்துக் கொள்ள உதவும், உதவியும் இருக்கிறது. ரோமானியர்களின் ஜீனியசைப் போல, கிரேக்கர்களின் டிமானை போல, நம்மை நம்மிலிருந்து விலக்கிக்கொள்ள வந்த ஒரு மிகப் பொருத்தமான வழிமுறைதான் இது போன்ற நம்பிக்கைகள் என தோன்றுகிறது. நவீன படைப்பாளியாக அதிகம் வாசிக்கவும், எழுதவும், படைப்பாற்றலால் வதைபடாமல் இருக்கவும், அங்கீகாரத்துக்கு அப்பால் இயங்கவும், நெடுநாள் வாழவும் நாம் இதை தேர்வதில் என்ன சிக்கல்? அந்த செம்பரான் கல் உண்மையில் தும்பியின் சுமையே இல்லையே?

மீண்டும் அதே கேள்விக்கு வரலாம், படைப்பாளி படைக்கிறானா? அல்லது படைப்பு அவன் வழி நிகழ்கிறதா? இரண்டு நிலைக்கும் இடையிலான ஒரு புள்ளியில் படைப்பு நிகழ்கிறது என எனக்கு தோன்றுகிறது. படைப்பாற்றல் அவன் வழி வரும்போது, அவன் ஏற்கனவே அமைத்திருக்கும் பாதைகளில், அந்த வண்டல்களுடன் சேர்ந்தே வரும் என நம்புகிறேன்.

படைப்பாற்றலை தனக்கு வெளியிலிருந்து வருவதாக உருவகிப்பதிலும், தன்னை ஒரு கருவியாக பாவிப்பதிலும் மேற்சொன்ன வசதிகள் உண்டு. ஆனால் படைப்பாளியின் பொறுப்பு என ஒன்றிருக்கிறதே?. தன் வழியாக வரும் அனைத்தையும் அவன் தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றின் மீது சுமத்த முடியுமா? கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவின்போது எழுத்தாளர் ஹெச். எஸ். ஷிவப்ரகாஷ் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய பசவண்ணா நாடகத்திற்கு வந்த எதிர்ப்பைப் பற்றி கூறினார். மடாதிபதியின் முன் மண்டியிட வைக்க முயன்றார்கள் என்றார். அப்போது ‘எழுத்துச் சுதந்திரம்’ பற்றி எவரோ ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். தீர்க்கமாக “கட்டற்ற எழுத்துச் சுதந்திரத்தின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களின் எதிர்ப்பை நான் புரிந்து கொள்கிறேன், என் எழுத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன், எழுத்தாளன் தனது எழுத்துக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும்” என்றார்.

படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும் போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிகாட்டபட்டால் அதை படைபூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது. கட்டற்று எழுத்தாளனுள் வெளிப்படும் ஆற்றலை அவன் மட்டுறுத்தலாமா? அப்படிச் செய்தால் அது போலித்தனமாகாதா? எழுத்தாளனிடமிருந்து வெளிப்படும் அனைத்துமே உண்மையில் கட்டற்ற படைப்பாற்றலின் வெளிப்பாடா? அல்லது அவனது முன்முடிவுகளும், ஊகங்களும், கனவுகளும், கீழ்மைகளும் கலந்தவையா?

எழுத்தாளனாக ஒன்றேயோன்றைச் சுட்ட முடியும், எழுதும்போது வெளிவருபவை அவனை மீறிய ஒன்றாகவே இருக்கிறது. எழுத்தாளனின் ஆற்றல் என்பதும் அதிலிருந்தே பிறக்கிறது. மதிப்பீடுகள் மூலம் மட்டுறுத்தலை கட்டுப்படுத்த முயல்வதென்பது எழுத்தைக் கொல்வதற்கு நிகர். படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் பணிவும், படைப்பிற்கு பொறுப்பேற்கும் நிமிர்வும் கலந்திருக்கும் விசித்திர கலவையில்தான் தனக்கு உண்மையாக இருக்கும் படைப்பாளி எழுகிறான்.

செந்தோலினி

– ஆகாஷ் சிவா – 

கண்கள் தேடுவது கிடைப்பதில் எப்போதும் சிரமம் இருக்கும், ஆனால் தேடுவதை விட அதிக முக்கியத்துவமான பொருள் கிடைத்தால் அதன் மகிழ்ச்சியே தனி, ஆனால் அனைத்தும் கிடைக்காது சிலவற்றை அதித முயற்சியால் அபகரிக்கவும் வேண்டி வரலாம்.

கலைந்து கிடந்த காகிதங்களில் இருந்த கிறுக்கல்களை மீண்டும் மீண்டும் படித்தேன். எதுவும் நன்றாக இல்லை . கிறுக்கு தாடி எதாச்சும் எழுதுச்சா தெரியலயே, என மனதிற்குள் சொல்லி கொண்டேன். கருமாரி அம்மன் கோயில் விழா பற்றிய மஞ்சள் நோட்டீஸ், ஆண்மை குறைவா?? டாக்டர் சானக்கியனிடம் வாருங்கள் என்ற விளம்பரம், என இவைதான் தாடிக்கு எழுத வசதியானவை. நல்ல காகிதம் வாங்க வசதியில்லை எனவும் சொல்லலாம்.

படிக்க முடிதா, அச்சு அப்படியே பின்னால தெரியுது, இதுல காலரா பேதி வந்த கணக்கு வாத்தி மாறி கையெழுத்து வேற.

‘கத்தி சின்னத்தில் வாக்களிப்பீர்,’ என படத்தோடு இருந்த விளம்பரத்தில் பணத்தாசை பற்றி கவிதை எழுதியிருந்தது, முடிவு பெறாமல். ;அத முடிச்சிருந்தா தேவல. கத்தி படத்தில் நீல மையால் ரத்தம் சொட்டுவது போல் சித்திரம். கிறுக்கு, எழுதறத விட்டுட்டு படம் வரைஞ்சா, இப்போ நாலு நாளுல கதைக்கு எங்க போறது.

மீண்டும் வாசலிற்கு வந்து கடிதத்தை படித்தேன். காற்று பலமாக வீச கடிதத்தை கவனமாக பிடித்து கொண்டேன். மூன்றாம் மாடி என்பதால் சற்று பலமாகவே காற்று வீசும்.

“வரும் தீபாவளி சிறப்பிதழிற்கு உங்கள் கதை ஒன்றை எழுதி தரும்படியும், அதற்கு சன்மானமாக ரூபாய் 55ஐ பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பிதழ் அச்சடிக்க அவகாசம் வேண்டி கதை இம்மாத இறுதிக்குள் வந்து சேர வேண்டும்.

“இப்படிக்கு செந்தோலினி ஆசிரியர்”.

பத்திரிக்கை ஆபிஸில் குமாஸ்தா தாடிக்கு வேண்டியவர், கடிதத்தை கொடுத்து எப்படியாச்சும் கதையை தேத்துமாறு கூறிச்சென்றார்.

55 ரூபா, இந்தாளு எழுதுர கதைக்கு அது ரொம்ப அதிகம் தா, ஆனாலும் இப்ப அது கூட கிடைக்காது போல.

55 ரூபாய் கிடைத்தால் கல்லூரி கட்டணத்தை கட்டி விடுவேன். வயித்துக்கும் வாய்க்கும் ஆகும். மாடியில் இருக்கும் சிறிய குடிசைதான் என்பதால் பிரபலமான எழுத்தாளர் என நம்பி வீட்டுக்காரர் வீட்டை வாடகை இல்லாமல் விட்டு விட்டார். இவரோட நான் சேர்ந்து இருக்கரதால அந்த செலவு மிச்சம். இந்த நேரம் பார்த்து ஊர் சுத்த போய் விட்டான். வழக்கமா போவதுதான். போனா எப்ப திரும்ப வருவார் என தெரியாது, சாதாரணமாக ஒரு வாரம் ஆகும். இப்ப போய் மூன்று நாள் ஆகிவிட்டது.

ஒருவழியாக யோசித்து கதையை நாமே எழுதி கொடுத்திடலாம், தாடிதா எழுதுச்சு என பத்திரிக்கை ஆசிரியர் நம்பி விட்டால் போதும், வழக்கமாக நான்தான எடுத்துட்டு போவேன் கதைகளை, அதனால் அதிகம் சந்தேகம் வராது என்று முடிவு செய்து உள்ளே போய் அமர்ந்தேன். இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தரித்திரம் புடிச்ச மேச, தாடி எங்கருந்தோ தூக்கி வந்தது, ஒரு யோசனயும் வர மாட்டுது. வெளிய போய் எதாச்சும் கதை கிடைக்குதா பார்ப்போம் என வீதிக்கு இறங்கி வந்தேன். வீட்டுக்காரர் எதிரில் வந்தார்.

“வீரன் எங்க தம்பி பாத்து நாளாச்சு, பயணம் போயிருக்காறா” என்றார்.

வீர ராஜ விக்ரமன், தாடியோட புனைப்பெயர். கீரையக்கூட வலுவா கிள்ளத் தெரியாது பேரு மட்டும் வீரன்.

“ஆமா, அண்ணே மூணு நாளாச்சு” என்றேன்.

“அவரோட ப்ரெண்ட் ரவிதாசன் இறந்துட்டாரு, வீரன் வந்தா சொல்லிடுப்பா” என்றபடி வீட்டுக்குள் சென்று விட்டார்.

ரவிதாசனா, ஆகா கதை கிடைச்சிடுச்சு. இப்போதுதான் ரிடையர் ஆனார், வயசான கட்ட, பாக்க நிறைய பேர் வருவாங்க எதாச்சும் கதை நிச்சயம் கிடைக்கும்.

ஓட்டமும் நடையுமாக ரவிதாசன் வீட்டிற்கு சென்றேன், வீட்டில் யாருமில்லை, பக்கத்திலிருந்த வீட்டில் கதவை தட்டினேன்.

“ரவிதாசன்” என்று அவர் வீட்டை நோக்கி கை காட்டினேன்.

” எடுத்துட்டு போய்ட்டாங்கபா, இப்போதா, சூரியன் மறைய போதுல்ல” . அதுக்குள்ளயா, என்னங்கடா அவசரம் உங்களுக்கு.

“எப்போ தவறுனாறு” என்றேன்.

“நேத்து ராவுக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சுப்பா, காலம்புறதா தெரிஞ்சுது”.

“நெஞ்சு வலியோ?” என்றேன், எப்படி செத்தார் என எப்படி தெரிந்து கொள்வது.

“வலுக்கி விழுந்து அடி பட்டிருக்கும் போல, நமக்கென்ன தெரிது, வந்தவனுங்க பூரா கடங்கொடுத்தவனுங்க, பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு பணமிருக்கானு தேடிருக்கானுங்க வீட்ல, இல்லனதும் தூக்கிட்டு போய்ட்டானுங்க கொழுத்த, ஒரு தகவலும் இல்ல”.

அடடே, பிணத்தை நடுவுல போட்டுட்டு, பணத்த தேடுனாங்களா, காட்சி நல்லா இருக்கே, நேர்ல பாத்திருந்தா வளர்த்து கதை எழுதிருக்கலாம். அதிர்ச்சிகரமான முடிவு அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டே. “சரி, நா அப்போ கிளம்புறேன் ” என்றபடி திரும்பினேன்.

இருட்டத் துவங்கியிருந்தது. மெல்ல மெல்ல வெள்ளை நிறத்தில் காய்ச்சி ஊற்றிய வெள்ளிக் குழம்பாக நிலவு பிரகாசிக்க துவங்கியிருந்தது. முழுதாக சிரிப்பை, மலர்ச்சியை மட்டுமே உடைய முகம். பார்க்கப் பார்க்க வளர்ந்து கொண்டே எல்லையில்லாமல் செல்கிறது அதன் குதூகலம் நிறைந்த புன்னகை.

அதன் பின்பக்கம் எப்படியிருக்கும். துக்கத்தின் எல்லை உடைத்து பாய்ந்து வரும் துன்பக் கடல் போல் பரந்து சோர்வின் உச்சத்தில் உறைந்திருக்குமோ, இல்லை வஞ்சத்தின், அகங்காரத்தின், சிம்மசொப்பனமாக உயர்ந்து வீற்றிருக்கும் நயவஞ்ச முகமாக இருக்குமோ? எதுவானாலும் நாம் காண்பதற்கு முற்றிலும் நேரெதிரான ஒன்று முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

தாடிக்கு இப்படி எதாச்சும் மறைக்கப்பட்ட நேரெதிர் முகம் இருக்குமா. இந்த முகமே பாதிதான் வெளியில் தெரியும். நல்ல மனிதர், சாது, மனதில் உள்ள வலிமையில் கால்பங்குகூட உடலில் தேராது. பத்திரிக்கைகளுக்கு நல்ல கையெழுத்தில் கதைகளை அனுப்பவென்றே என்னை அவருடன் தங்க வைத்து கொண்டார். எனக்குத் தெரிந்தவரை சொந்தமென எதுவும் இல்லை, பணப்பற்று இல்லை, சற்றே அளவுக்கு மீறிய கிறுக்குத்தனம், அனைத்திலும் வித்தியாசமான பார்வை, பொதுவான எழுத்தாள பிம்பம்தான். மொத்தமாக சொல்வதானால் இந்த உலகத்தில் வாழ வழியில்லாமல் அலையும் உயிரி பட்டியலில் நிச்சயம் இடம் உண்டு.

தூரத்தில் யாரோ படுத்திருந்தது தெரிந்தது, நல்ல குடிகாரராக இருக்க வேண்டும், ஒய்யாரமாக படுத்து ஐம்பூதஙகளையும் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். இவரிடம் எதாச்சும் கேட்டால் கதைக் கரு கிடைக்கலாமென அவரிடம் சென்றேன்.

“யாருய்யா அது, நடுவீதில உருளுரது”.

“கொண்டு போய் உன் வீட்டுல விடுடா, அங்க உருளுர “.

வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது, போதை தலைக்கேறவில்லை, அப்புறம் ஏன் விழுந்திருக்கிறார்.

காலில் பலமான காயங்கள் இருந்தது, தரையில் தேய்த்தெடுத்தது போலிருந்தது, வீங்கி ஈ மொய்த்தபடி, அதை அவ்வப்போது விரட்டி கொண்டிருந்தார்.

“எப்படியா, அடிப்பட்டது” என்றேன்

வானத்தைப் பார்த்து, “டோய் உன்ன விட மாட்டன்டா “.

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன், மூன்று விண்மீன்கள் நானில்லை நானில்லை என தலையசைத்தன.

“யோவ் கேக்குறல சொல்லுயா”.

“யென்ன என்னடா நெனச்ச, நா யாரு தெரியுமா”.

பார்த்தாலே தெரியுது, எதாச்சும் தேரும் பார்த்தா ம்க்கும் .

“யோவ் எழுந்து வீட்டுக்காச்சும் போய் தொல “.

“வூடா, அவள போய் எவன் பாப்பான்”.

சரிதான், குடும்பஸ்தன் வீட்டுல அவன் மனைவியாவது நிம்மதியா இருக்கட்டும், என்று நினைத்தவாறே நகர்ந்தேன்.

தெருமுனையை தாண்டியபோது குடியானவன் புலம்பல் கேட்டது.

“வேணுனே இடிச்சுப் போனா விடுவனா, டோய் தாடிக்காரா”

தாடிக்காரனா, பாதி ஊரு அக்ரகாரம் தா, கிறுக்கு ஊருக்குள்ள வந்திருக்குமோ. தப்பித்து ஓடும் போது இவனைத் தெரியாமல் இடித்து தள்ளியிருப்பாரோ.

வீட்டிற்கு வந்து மேசையில் அமர்ந்து எழுதத் துவங்கினேன், புரியாத மாறி எதாச்சும் எழுதுவோம், செந்தோலினிலா யாரு படிக்குறா.

எப்போது தூங்கினேன் என தெரியவில்லை, பாயில் படுத்திருந்தேன், மேசையில் தாடி அமர்ந்திருந்தான், எழுதிக் கொண்டு, அறை எங்கும் மாமிச வீச்சம் அடித்தது, மூக்கை ஊடுருவி தொண்டையில் சிக்கியது, எழுந்து மேசையிடம் சென்றால் என்ன என தோன்றியது, நரம்புகளை அசைத்து அசைத்து உடலை லேசாக்கி எழுந்தேன், காலில் ஏதோ பிசுப்பிசுப்பாக ஒட்டியது, இருளில் எதுவும் தெரியவில்லை, காலை மடக்கி பார்த்தேன், மேசை மீதிருந்த லாண்டர் விளக்கின் ஒளி பரவிய லேசான காற்றின் குளிரில் காலின் மீது பரவியிருந்த திரவம் இறுக ஆரம்பித்திருந்தது, ஆழ்ந்த கருஞ்சிவப்பு, ரத்தம். மூச்சின் வெம்மை ஏறியது. மேசை அருகே சென்றேன், கத்தியின் முனையிலிருந்து ரத்தம் வழிந்து மேசையில் இருந்து கீழே சொட்டி கொண்டிருந்தது,

நீலப்பேனாவால் வரையப்பட்டிருந்த அந்த கத்தி, தாடி அதையே பார்த்து கொண்டிருந்தார். அதன் அருகே

” நீ துடிக்கும் கடைசி நொடிகளை காண்பேனா
என் கண்கள் உலரும் வரை சிமிட்டாமல்
ஒற்றை கையசைவில், ஒங்கிய ஒரு தள்ளலில்
தீர்ந்து விடலாம் உன் வாழ்வும் என் தாழ்வும்”

பணத்தாசை பற்றிய கவிதை, ரத்தத்தால் தேய்த்து கடைசி வரி எழுதப்பட்டிருந்தது.

லேசான நடுக்கத்தோடு எழுந்தேன், உடல் முழுதும் வியர்த்திருந்தது, லாண்டர் விளக்கின் ஒளியில் கண்கள் கூசியது, மேசையில் நான்தான் அமர்ந்திருக்கிறேன், கதையை முடித்து விட்டு அப்படியே தூங்கி விட்டிருக்கிறேன், முகம் துடைத்துக் கொண்டு பாயை விரித்து படுத்து உறங்கிவிட்டேன்.
தாடி ஆறு நாள் கழித்து வந்தார். புதிய வெள்ளைச் சட்டை, தாடியை மழித்திருந்தார், கையில் பெரிய தூணிப்பை வைத்திருந்தார்.

“என்ன தம்பி கதைய நீயே குடுத்துட்டியா, எங்க காட்டு நா பாக்குர”

“மேஜல இருக்கு, பைல என்ன”

“தூணிடா, உனக்கும் இருக்கு ஒரு சட்ட, வெள்ள போடுவல” என்றபடி உள்ளே சென்றார்.

‘சுற்றல் கணம்’ கதையின் பெயர்.

‘பெரியவரைத் தள்ளி விட்டவன் தாடியை நீவிய படி வெளியேறினான்’, கடைசி வரியைப் படித்தபின் தாடி வெளியே வந்தார் .

நான் ரத்தம் படிந்த கத்தியை பார்த்து கொண்டிருந்தேன்.

‘உன் வாழ்வும் என் தாழ்வும்’. மனதில் சொல்லிக்கொண்டேன், எழுதப்படாத வரி ஆனால் இதைவிட பொருத்தமாக யாரும் எழுதிவிட முடியாது. ரத்தம் வீச்சம் நிறைந்த என் கனவின் படைப்பு.
“நல்லா ஜரூரா இருக்குடா, நல்ல எழுதுர, நான் போய் நம்ம ரவிதாசன் வீட எட்டிப் பாத்திட்டு வந்திடுர, நல்ல மனுசன், தவறிட்டானு கேள்வி பட்ட”, படிகளில் தாடி இறங்கி சென்றார்.

வீட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தி கொண்டேன், மேசை மீது இருந்த துணிப்பையை எடுத்து கீழே வைத்தேன், நான் மட்டும் பயன்படுத்தும் வலது டிராயரை சாவியைக் கொண்டு திறந்தேன், என் சட்டைகளை எடுத்து வெளியே வைத்தேன், கருப்பு முடிக்கற்றைகளான ஒட்டு தாடியை எடுத்து வெளியே வைத்தேன், நான் கண் சிமிட்டாமல் பார்க்க பார்க்க பணக்கட்டுகள் அசையாமல் விறைந்துக் கிடந்தன. ரத்தம் உறிஞ்சிக் குடித்த செந்தோல் பணக்கட்டுகள்.