சிறுகதை

நசி

ஹரீஷ்

இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.

உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.

வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.

எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.

அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.

இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.

சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.

உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.

“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.

ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.

இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.

தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.

சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.

அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.

முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.

ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.

மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.

தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும்  ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.

அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.

என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.

என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.

அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.

பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.

இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.

நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.

“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.

உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.

கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.

கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.

நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.

மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.

“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.

கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.

கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.

“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.

அழைப்பு

ஹரீஷ் கண்பத்

பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.

வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின்   வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.

மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.

அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.

குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது.  வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..

இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.

செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.

மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.

சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.

“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.

சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.

“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.

குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.

பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.

வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.

வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.

அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.

சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.

வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.

தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.

“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.

என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.

இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.

வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.

 

 

பித்து

ரா. ராமசுப்பிரமணியன்

I

அவன் சொன்ன வாசகத்தில் இருந்து ” ஆரோஹணம்…. சிங்கம்…. அலங்காரம்…. திரிசூலம்…. ” என்பது தான் என் மனதில் நின்றது. இதை வைத்து தான் அந்த பிம்பத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்தேன். தூரிகையை முக்கியும் அமிழ்த்தியும் பார்த்து விட்டேன். வந்து அமரவில்லை. வீட்டு முற்றத்தில் முன்தினம் பெய்த கடும் மழை தேங்கி இருந்தது. உடன் வந்திருந்த கண்ணன் இருந்த சுதேசமித்திரனை எடுத்து திண்ணைக்கு போய்விட்டார். எதிரில் இருந்த காரை சுவரில் இருந்த பிறையின் கீழ் தான் அவன் அமர்ந்திருந்தான். கோட்டும் பஞ்சகச்சமும் உடுத்தி, ஒரு காலை குத்திட்டு, அதில் கையை ஊன்றி தலையில் முண்டாசுடன் வீர பாண்டிய மீசையும் தாடியுமாய் கண் மூடி இருந்தான். பக்கத்தில் இருந்த தாம்பாளத்தில் இருந்து அவன் தாம்பூலத்தை தரித்து இருந்ததை பார்க்கும் போது கண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்தது.

“ஆர்யா…. இவன் முன்ன மாதிரி கிடையாது. இப்போதெல்லாம் சிவமூலிகை பழக்கம் எல்லாம் ஆரம்பிச்சாசு”.

அந்த பிம்பத்தையே வரைந்து காட்டிவிடலாமா என்று கூட யோசனை வந்தது.

திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் வண்டியில் ஏறி பாண்டிச்சேரிக்கு கிளம்பினேன். அங்கு இருந்த ஆங்கிலேய ஆரக்ஷணர்கள் இருவர் எதிரில் வந்து அமர்ந்தனர். என்னையே துருவி துருவி நோட்டமிட்டனர்.

“சாமி, எங்க போறீங்க”

” நான் பாண்டிச்சேரிக்கு போறேன்”

” அங்க யார பார்க்க போறீங்க? ”

“கலவை சங்கர செட்டியாரை”

” ஓஹோ …. என்ன விஷயம் ”

” ஒரு வணிகம் சம்மந்தமா பார்க்க தான் ”

என்னையே மேலும் கீழும் நோட்டமிட்ட இன்னொருத்தன்,

” நீங்க சுதேசி இல்லையே”

” நான் சுதேசியோ விதேசியோ அல்ல. சாதாரண மனிதன். கொஞ்சம் உத்தரவு கொடுக்கரேளா ?”

“சாமி…. பத்திரம்…. அங்க தேசவிரோத கும்பல் ஒன்னு இருக்குது. சரியான கூட்டு களவாணிகள் . எல்லாரையும் கத்தியை காட்டி மெரட்டி காசு பறிக்கும் கும்பல் அது. சில துரைமார்களை எல்லாம் கொன்னுர்க்காங்க. முக்கியமா பாரதிங்க்றவன் பொல்லாதவன். எதாவது விஷயம் தெரிந்தா வரும்போது சொல்லுங்க. நல்ல சன்மானம் கிடைக்கும்”

சரியென்று தலை ஆட்டினேன் .

வீட்டுதிண்ணையில் எனக்காக காத்திருந்தவன் வண்டியை விட்டு இறங்கியவுடனேயே ட்ரங்கு பெட்டியை வாங்கிக் கொண்டு கையை பிடித்து நேராய் பூஜை பெட்டகத்தை தான் காட்டினான்.

ஒரு தத்தாத்ரேயர், சுப்ரமணியர்,துர்க்கை விக்ரகங்கள் இருந்தன .

“நான் கண்டுகொண்டு விட்டேன் ஆர்யா…. நமக்கு ஒரு புதிய தெய்வம் தேவை. அவளின் ரூபம் கூட இதோ பராசக்தியின் ரூபம் தான். அவளை பற்றி தான் இனி நான் பாடப் போகிறேன். பழம்பெரும் பாரத பூமி புத்துயிர் பெற அவளே நமக்கு தேவை. ”

சம்ப்ருதாயத்துக்கு மட்டும் ஒரு கும்பிடு போட்டேன். இப்போதெல்லாம் என்னுள் இறைமறுப்பு பொதிந்து விதைந்து விளைந்து கொண்டு இருக்கிறது. சக்தி உபாசனை செய்ய தொடங்கி விட்டதாக சொல்லி இருந்தான் . இவ்வளவு தீவிரம் என்று எதிர் பார்க்கவில்லை.

எதிரில் வந்து அமர்ந்த கண்ணன் ,

” நீங்க தான் ஆர்யாவா ?”

“ஆமாம் ”

” பாரதி உங்களையே தான் அடிக்கடி சொல்லுவான். அத்யந்த நண்பன் என்று . உங்கள் முழு பெயர் ?”

“சின்ஹகுளத்திபட்டி யதிராஜ சுரேந்தரநாத் ஆர்யா ”

” ஒ… தெலுங்காளா நீங்க….”

“ஆமாம்….. பூர்வீகம் எல்லாம் தெலுங்கு தான். ஆனால் நான் சென்னையில் தான் வளர்ந்தேன்”

“ஒ அப்படியா… அடுத்தாப்ல இருக்கற தெரு முக்குல வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. நெறைய கச்சேரி எல்லாம் ஜோரா நடக்கும். தெலுங்கு கச்சேரி கூட கேட்டிருக்கேன். அன்னமாச்சாரியார், பத்ராசல ராமதாசர் கிருதி எல்லாம் கூட தெரியும். நான் பாடி நீங்க கேட்டதிலேயே ”

“இல்லை”

“பாடவா”

“பாடுங்கோ….”

கொஞ்சம் சுருதி பிடித்தார்…..

” பிரம்மமொக்கட்டே பர பிரம்மமொக்கட்டே பர ” என்று இழுத்துப் பாடினார். சுருதி சுத்தம் இல்லை என்றாலும் தெலுங்கு சாஹித்தியம் அக்ஷர சுத்தமாக இருந்தது”

II

காலையில் இவன் கிளம்பும் பௌசிலியே தெரியும் பத்திரிகை காரியாலயத்துக்கு அவ்வளவு சீக்கிரம் போகபோவதில்லை என்று. ஈஸ்வர தர்மராஜர் தெருவில் இருந்து நேராய் வேதபுரீஸ்வரர் கோயில் வாசலுக்கு வந்து ராஜ கோபுரத்தையே மேலும் கீழும் பார்த்து விட்டு “நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய ” என்று துதி பாடி ஒரு நாழிகை கைகூப்பி கண்மூடி இருந்தான். இவனுடன் சேர்ந்தது தான் சேர்ந்தேன் . நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும் . என்னை சீண்டி பார்ப்பதில் அவனுக்கு கொள்ளை பிரியம்.

” பாரதி நாம வங்காளத்தார் ஆஷ்ராமதுக்குன்னா போறோம்ன்னு நினைச்சேன்”

” இவன் என் நண்பன் சுரேந்திரநாத் ஆர்யா தங்கி இருக்கும் வீடு ஓய். நீர் நேற்று கூட பார்த்திருப்பீரே. ”

என் பெயர் கண்ணன். குவளை கண்ணன் என்று தான் என்னை அழைப்பார்கள். இவன் எழுதிய கவிதைகளை படித்து விட்டு பாண்டிச்சேரியில் இந்தியா பத்திரிக்கையில் உபகாரம் செய்ய ஆள் வேண்டும் என்று இங்கு வந்து இப்போது இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டேன்.

இந்தியா பத்திரிக்கைக்கு மேற்காய் செல்லவேண்டும். கிழக்காய் இவன் கூட்டிக்கொண்டு போகும்போதே தெரியும். வங்கத்தில் ஒரு பிரிட்டிஷ் துரையை கொன்னுட்டு இங்கே தஞ்சம் புகுந்துருக்காருன்னு கேள்விபட்டேன் . எப்படியும் வா.வே.சு அய்யர் வந்து விடுவார். கச்சேரியும் ஆரம்பித்துவிடும் . அரவிந்தர் வேதம், வேதாந்தம், யோக சூத்திரம் என்று பேசிக்கொண்டு ஒரு ஸ்லோகத்துக்கு ஒரு மணி நேர வியாக்யானம் சொல்லுவார். நடுவில் சாக்த போதனை வேறு நடக்கும். அங்கே போகுவதற்கே எனக்கு பிடிக்காது. அவர்கள் பேசுவது புரியாது. சம்பாஷனை எல்லாம் இந்துஸ்தானத்தில் தான். எனக்கு தேவநாகிரி லிபியை மட்டும் எழுத்துக் கூட்டி அக்ஷரங்களை வாசிக்க தெரியும். நான் கண்டது எல்லாம் நாலாயிரம் தான். அய்யர் உலக இலக்கியம்ன்னு ஆங்கிலத்தில் உரையும் சொல்லுவார். எப்போதாவது கம்பராமாயணம் பற்றி பேசினால் தான் உண்டு.

III

பூஜை பெட்டகம் திறந்தே இருந்தது. ஓரமாய் இருந்த காமாக்ஷி விளக்கில் ஒரு ஜோதி தெரிந்தது. குழந்தை பறித்து தொடுத்து வைத்திருந்த பவழமல்லி மாலையை தரித்த தத்தாத்ரேயர் விக்ரஹம் பொலிந்து நின்று இருந்தார். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பேரூழியம் செய்யும் மூவர் ஓருருவம் கொண்டு திகழும் அழகிய தத்துவ பிம்பம். ஆனால் புராணம் சொல்லும் கதை மட்டும் எனக்கு உவப்பானதில்லை. அருகில் வேலேந்திய செந்திலாண்டவரும் சிறிய துர்க்கை விக்ரஹமும் ஒரு வாளும் தென்பட்டது . அந்த வாளை பார்க்கும் போதெல்லாம் அய்யர் குயில்தோப்பில் நடத்தி இருந்த களரிபயத்து பயிற்சியில் கேடயமும் வாளும் தாங்கி போர் தொழில் பழகிய எழுச்சி என்னுள் பரவும் .

முன்தினம் பெய்த அடைமழையில், கேட்ட இடி சத்தமும், தரையில் ஒளிரிய மின்னலையும், வீட்டின் கதவுகள் ஓங்கி அடிப்பதையும், வீட்டின் படியில் ஏறிய மழை நீரையும் பார்த்தபடி நான் எங்கேயோ தொலைத்த உற்சாகம் மீண்டது.

காற்றடிக்குது ….. கடலும் குமுறுது ….. தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொலைத்தடிக்குது….. நான் கண்விழித்தேன்……..

அந்த உற்சாகம் காலையில் சூர்ய வந்தனம் செய்த போது ஓங்கி பெருத்தது. ஆனால் கண்ணனின் பதறிய முகம் கண்டு மீண்டும் தொலைத்தேன்.

“பாரதி…… குழந்தைக்கு ஜுரமோ ஜுரம். நம்ம கஷாயம்லாம் ஒத்து வரலை. இங்க எதோ லோபித்தால்ன்னு சொல்றா. பிரெஞ்சு வைதியசாலையாம். இங்க்லீஷ் மருத்துவருக்கு சொல்லி இருக்கு”

நார்கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாளுக்கு நெற்றி அனலாய் தொதித்ததை என் புறங்கை விரல்கள் உணர்ந்தன.

செல்லமாள் அடுக்களைக்கு போயும் வந்த படி முந்தானையால் முகத்தை துடைத்த படி முனகிக் கொண்டு இருந்தாள். கிணத்தடியில் குளிக்க செல்லும் போது தான் என் லௌகீக கர்மா பற்றிய சிந்தனை வந்தது. குயில் தோப்பில் கூடியிருந்த சகாக்களுடன் பத்திரிக்கைக்கு வந்த ஊதிய பணத்தை மாங்காய் வாங்கி பந்தாடியது, அவள் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அரிசி பருப்புக்களை ஓர் கவித்துவ வீரியத்தில் முற்றத்தில் வீசியது , எதை பற்றியும் கவலை இல்லாமால் சித்தானந்தா கோவிலில் த்யானித்து பிரம்மத்தில் லயித்தது எல்லாம் பிழை என்று பட்டது. ஆனால் அவளுடைய குறை இது எல்லாம் கிடையாது. கனகலிங்கத்துக்கு உபவீதம் அணிவித்தது தான்.

” நமஸ்தே அஸ்து மகா மாயே ஸ்ரீபீடே ஸ்வரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ”

எப்பொழுதும் காலையில் நான் எழுதிய துதி பாடல்களோ , வேத மந்திரங்களோ, உபநிஷத்களின் சாந்தி மந்திரங்களோ என் நாவில் துலங்கும். இன்று ஏனோ இப்படியாக ஒரு ஸ்தோத்திரம். திடீர் என்று இடி சத்தம் கேட்டது. வீட்டின் கல் தளத்தில் மெல்லிய ஒரு அதிர்வு . மேலே இருந்த மண் ஓடுகள் திடீர் என்று பிரிந்து. வானத்தில் இருந்து பொன்மழை வந்து கொட்ட ஆரம்பித்தது. இப்போதைக்கு மட்டும் கலவை சங்கர செட்டியாரிடம் வாங்கிய கைமாற்று பணத்தை கொடுத்து விடலாம் என்று கொஞ்சம் எடுத்து கோட்டில் வைத்துக் கொண்டேன்.

IV

” சுப்பையா…… ஓய் …. சுப்பையா….”

கண்முடி தாம்பூலம் தரித்து தடித்திருந்த நாக்கில் அரி நெல்லியை வைத்து கடித்துக் கொண்டு வந்தான்.

நான் வரைந்த படத்தை மறுபடியும் மறுபடியும் உற்று பார்த்து என்னை ஆர தழுவினான்.

ஓரமாய் கட்டிலில் நான் விரித்து இருந்த வெள்ளை அட்டையை மீண்டும் பார்த்தேன். அவன் வீட்டிற்கு வந்திருந்த போது அதை தான் அவனிடம் காட்டினேன். அந்த படத்தில் ஒரு பெண்ணும் எண்ணற்ற குழந்தைகளும் இருந்தனர் . குழந்தைகள் எல்லாம் ஒரு வெள்ளை துண்டை இடிப்பிலும், ருத்ராக்ஷ கொட்டையை கழுத்திலும் , தலையை சவரம் செய்து கையில் ஒரு தட்டத்துடன் சோணித்து இருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் ஒரு பெண் கசங்கிய கருஞ்சேலையில், தலையில் இருந்த கிரீடம் சரிந்து காதில் லோலாக்குகளில் இருந்த கற்கள் விழுந்து கழுத்தில் உள்ள ஆரத்தில் இருந்த பதக்கமெல்லாம் போய் வெற்று கயிறுடன் இருந்தாள் . அந்த ஓவியத்துக்கு பாரத தாய் என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்போது தான் அவன் அந்த வாசகம் சொன்னான்.

” அவள் சிங்கத்தின் மேல் ஆரோஹரித்து இருப்பாள். கையில் திரிசூலம் ஏந்திருப்பாள். இப்போது அன்னியர்க்கு அடிமை பட்டிருந்ததால் கங்கையும் இமயமும் எங்கே போயிற்று…. அவளை அலங்கார பூஷிதையாக பராசக்தியாக என்முன் வரைந்து காட்டு ……” என்று எதிரில் முக்காலியில் போய் அமர்ந்தபடி பாதத்தால் தரையில் தாளம் போட்டுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தான். விடுக்கென்று சவரில் போய் சாய்ந்து கண் அசந்தான்.

மறுபடியும் மறுபடியும் என் காதில் அந்த வாசகம் பிரவாகித்தது. முண்டாசும் , கோட்டும் , பஞ்சகச்சமும் அங்கிருந்து அகன்றிருந்தது.

திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை

ஜப்பானியச் சிறுகதை

மூலம் : ஜினிசிரோ தனிஜகி

ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட்

தமிழில் : தி. இரா. மீனா  

ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 –  1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர்.

 

பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது.

நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி இருந்தோம்.

அந்த நாட்களில் மிகவும் குழப்பத்திற்கு உரியதாக இருந்த காதலைப் பற்றி நாங்கள் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது குற்றம் பற்றிய உரையாடலாக மாறி விட்டது. ஏமாற்றுதல், திருட்டு, கொலை என்று பேச்சு வேறு திசையில் திரும்பியது.

“கொலைக் குற்றத்தைத்தான் நாம் மற்ற  குற்றங்களைவிட அதிகமாகச் செய்கிறோம்,” என்று ஹிகுச்சி சொன்னான். அவன் ஒரு  பேராசிரியரின் மகன். ”நான் ஒரு காலத்திலும் திருட மாட்டேன். என்னால் அதைச் செய்ய முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் என்னால் நண்பனாகப் பழக முடியும். ஆனால் திருடன் என்பது வித்தியாசமான ஓர் இனம்,” சொல்லும்போது அவனுடைய அழகான முகத்தில் ஒருவிதக் கருமை படர்ந்தது. அவனுடைய முகத்தின் சுருக்கம் வெறுப்பைக் காட்டியது.

“இப்போதைய நாட்களில் நம் அறைகளில் திருட்டு அதிகம் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியா?” என்று ஹிராட்டா எங்களுடைய அறைக் கூட்டாளியான நகுமாராவிடம் கேட்டான்.

“ஆமாம். அதைச் செய்வது மாணவர்களில் ஒருவன்தான் என்று சொல்கிறார்கள்”

“எப்படி அவர்களுக்குத் தெரியும்?” நான் கேட்டேன்.

“உம்… அது பற்றி எனக்கு எல்லா விவரமும் தெரியாது — அடிக்கடி நடப்பதால் உள் வேலையாகத்தான் இருக்க வேண்டும்,” நகுமாரா ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினான்.

“அது மட்டுமில்லை. வடக்கு அறைப் பகுதியில் ஒரு மாணவன் தன் அறைக்குள் போனபோது உள்ளிருந்து யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்களாம். மாணவனை  அறைந்து விட்டு  கீழே ஓடி விட்டானாம். அவனை விரட்டிக்கொண்டு ஓடியபோது இருட்டில் அவன் ஓடிய இடம் தெரியவில்லையாம். அவன் தன் அறைக்குத் திரும்பியபோது அவனுடைய பெட்டி திறந்து கிடந்ததாம். புத்தக அலமாரி குலைந்து இருந்ததாம். இது திருடன் வந்து போனதைக் காட்டுகிறது,” என்று ஹிகுச்சி விளக்கினான்.

“அவன் முகத்தைப் பார்க்க முடிந்ததா?”

“இல்லை. இவை எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. ஆனால் அவன் உடை அணிந்து இருந்த விதம் நம்மில் ஒருவர் போல இருந்ததாம். அவன் ஓடியபோது கோட்டை வைத்து தலையை மறைத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் கோட்டில் விஸ்திரியா பூக்கொண்டை இருந்ததாம்.”

“விஸ்திரியா பூவின் கொண்டையா? அதை வைத்துக் கொண்டு  எதையும் உறுதியாக நிரூபிக்க  முடியாது,” ஹிராட்டா சொன்னான். அவன் ஒரு நிமிடம் என்னைச் சந்தேகத்தோடு பார்த்ததாக நினைத்தேன். அது என்னுடைய கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். என் குடும்ப உடையின் அடையாளம் விஸ்திரியா பூக்கொண்டை என்பதால் என் முகம் அந்த நேரத்தில் வறட்சியானதாக உணர்ந்தேன். ஏனோ அந்த இரவில் நான் அந்த கோட் அணிந்திருக்கவில்லை.

“அவன் நம்மில் ஒருவனாக இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. நம்மிடையே ஒரு திருடன் இருக்கிறான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” அந்த நேரத்தில் நான் பலவீனமாக உணர்ந்ததால் எனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள முயன்றேன்.

“இல்லை. அவனை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்” ஹிகுச்சி திடமாகச் சொன்னான். அவன் கண்கள் மின்னின. ”நான் சொல்வது ரகசியமாக இருக்கட்டும். டிரஸ்ஸிங் அறையில்தான் அவன் பெரும்பாலும் திருடுகிறான் என்று சோதனை செய்த காவல் குழுவினர் சொல்கின்றனர். ஒரு ஓட்டை வழியாக அவர்கள் நடப்பதை எல்லாம் கண்காணிக்கின்றனர்.”

“ஓ? யார் இதை உனக்குச் சொன்னது?” நகுமாரா கேட்டான். “குழுவில்  உள்ள ஒருவர்தான். ஆனால் யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்”

“உனக்கே இவ்வளவு தெரியும் என்றால், அந்தத் திருடனுக்கும் கண்டிப்பாக அதிகமாகவே தெரிந்திருக்கும்,” ஹிராட்டா வெறுப்பாகப் பார்த்தான்.

ஹிராட்டாவும், நானும் நல்ல உறவு நிலையில் இல்லை என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேருக்குத்தான் ஒன்றாக இருக்கிறோம். எப்போதுமே எங்களை நான் ’நாங்கள் ’  என்றுதான்  சொல்வேன். ஆனால் ஹிராட்டாவுக்கு என்னைப் பிடிக்காது. நான் எல்லோரும் நினைப்பது போல இல்லையாம். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று வெறுப்பாக என்  நண்பன் ஒருவரிடம் அவன் சொன்னானாம். ”எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் எப்போதும் எனக்கு நண்பனாக முடியாது. அவனுடன் நான் பழகுவது எல்லாம் இரக்கப்பட்டுத்தான்,” என்றும் சொன்னானாம்.

அவன் இதையெல்லாம் பேசியது என் முகத்துக்குப் பின்னால்தான். என்னிடம் எதையும் அவன் நேரடியாகச் சொல்லவில்லை. அவன் என்னை வெறுக்கிறான் என்பது மிக வெளிப்படையானது .எதற்கும் விளக்கம் கேட்பது எனக்கு பழக்கம் அல்ல. ”என்னிடம் குறை இருந்தால் அவன் அதைச் சொல்லி விட வேண்டும். என் குறை என்ன என்பதை அவன் எனக்கு சொல்லவில்லை என்பதோ அல்லது நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றோ அவன் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவனை நான் நண்பன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அவ்வளவுதான்,” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் என்னைப் பற்றிச் சொன்னது என்னைத் தனிமைப்படுத்தினாலும் அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஹிராட்டா கட்டுமஸ்தான தேகம் உடையவன். அவன் அழகை பள்ளியே பெருமையாக நினைக்கும். நான் மிக ஒல்லியானவன். அடிப்படையாகவே எங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு. நாங்கள் வெவ்வேறு உலகத்தில் இருப்பவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். தவிர ஹிராட்டா ஒரு ஜூடோ கலைஞனும்கூட. ”ஜாக்கிரதை. நொறுக்கி விடுவேன்,” என்று அவன் தசைகளே சொல்வது போல இருக்கும். அவனைப் பற்றி நான் இப்படிச் சொல்வது என் கோழைத்தனம். அவனுடைய கட்டுமஸ்தான தேகம் கண்டு எனக்கு பயம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அற்பமான பெருமையோ, போலி கௌரவமோ கிடையாது. ”என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்வரை மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவனைக் கண்டு வெறுக்கும் அவசியமும் எனக்கு இல்லை,” இந்த மாதிரியான மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ஹிராட்டாவின் கர்வத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதனால்தான், “ஹிராட்டா என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவனுடைய நல்ல கருத்துக்களை மதிக்கிறேன்,” என்று அந்தப் பையனிடம் சொல்ல முடிந்தது. நான் அதை நம்பினேன். என்னை பயந்தாங்கொள்ளியாக  நான் நினைத்தது இல்லை. ஹிராட்டாவைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் இருப்பதாக எனக்கு கர்வமும் ஏற்பட்டது.

“விஸ்திரியா கொண்டை?” என்று கேட்டுவிட்டு அன்று இரவு ஹிராட்டா என்னைப் பார்த்த பார்வை நரம்பைச் சுண்ட வைத்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா? அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா? ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன்? ”அந்தக் கொண்டை   எனக்கும் இருப்பதால்  நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்… அப்புறம்? அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்… ஐயோ! நான் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது.

இந்த விஷயத்திற்காக இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தோன்றினாலும் அந்தக் குறுகிய நேரத்தில் மனதில் இப்படித்தான்  சிந்தனைகள்  ஓடின.  ”இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அப்பாவி   மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? ”இதையடுத்து ஒரு குற்றவாளியின் கவலையையும் தனிமையையும் நான் அனுபவித்தேன். ஒரு நிமிடம் முன்னால் வரை நான் அவர்களின் நண்பர்களில் ஒருவனாகவும், பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். ஆனால்,இப்போது எனக்குள்ளேயே நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இது அபத்தமானது, ஆனாலும் அவர்களை நம்பவைக்க முடியாதது      என் இயலாமையாக இருந்தது. ஹிராட்டாவின் மனநிலை காரணமாக நான் குழம்பி இருந்தேன், அவனுக்குச்  சமமானவனாக  இருந்த போதிலும்.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன்தான்,”என்று ஹிகுச்சி பொதுவாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்து பயமுறுத்தின.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் …” திருடன் ! எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர்! என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில்   ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது  தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால்  ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன்? ஹிகுச்சி என்னைச் சந்தேகப்படவேயில்லை என்றாலும் எங்களிடம் அவன் சொன்னதற்காக காரணத்தைப் பற்றி யோசித்தேன்.

ஒழுக்கமான மனிதர்களுக்கும்கூட இந்த குற்ற எண்ணங்கள் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. ஒரு திருடன் என்ற கற்பனை எனக்கு மட்டும் வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். மற்றவர்களும் இது போல சங்கடத்தை அனுபவித்து இருக்கலாம். காவலர் ஹிகுச்சியிடம் மட்டும் ரகசியத்தைச் சொன்னதால் அவன் பெருமைக்கு உரியவனாக இருக்கலாம். எங்கள் நான்கு பேரில் அவன் அதிகமாக நம்பப்பட்டவன். ’மற்ற இனங்கள்’ வரிசையில் சேர்க்கப்படாதவன். அவன் நம்பப்படுவதற்குக் காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். புகழ் பெற்ற பேராசிரியரின் மகன். எனவே அவனைப் பார்த்து நான் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அவனுடைய சமுதாய அந்தஸ்து போலவே அவனுடைய நேர்மையான குணமும் காரணமாக இருக்கலாம். எனது பின்னணி—நான் உதவித் தொகை பெற்றுப் படிக்கும் புத்திசாலி மாணவன், ஒரு ஏழை விவசாயியின் மகன் கலப்படமானவன்.  நான் திருடனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் முன்னால் ஒரு வித பயபக்தியோடு இருந்தாக வேண்டும். நாங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவனுடைய வெளிப்படையான பேச்சு, என் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை ஆகியவை எங்களிடையே உள்ள இடைவெளியின் ஆழத்தை அதிகப்படுத்தியது. சிரிப்பது, வம்பு பேசுவது,  நகைச்சுவையாகப் பேசுவது என்று எல்லாம் இருப்பதாக நாங்கள் காட்டிக் கொண்டாலும் எங்களிடையே இடைவெளி அதிகமானது. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகு ’விஸ்திரிய” கொண்டை உடைய கோட்டை அணிவதா, வேண்டாமா என்ற குழப்பமும் கவலையும் எனக்குள் அதிகரித்தன. நான் அதை அணிந்து கொண்டால் யாரும் கவனிக்காமல் போகலாம். ஆனால் ஒரு வேளை அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, ”ஓ !அவன் அதை அணிந்து இருக்கிறான்! ” என்று சொல்லலாம். சிலர் சந்தேகப்படலாம், அல்லது என் மீது உள்ள சந்தேகத்தை மறைத்துக் கொள்ளலாம், அல்லது என்னை பார்த்து பரிதாபப்படலாம். நான் கோட்டை அணியாமல் ஒதுக்கி விட்டால் அது பெரிய தவறாகிவிடும். ஹிராட்டா மற்றும் ஹிகுச்சி மட்டும் இல்லாமல் மற்ற நண்பர்கள் மத்தியிலும் சங்கடத்திற்கு ஆளாவேன். என்னைச் சந்தேகப்படுவது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் அது துன்பத்தைத் தரும் என்பது கவலை அளித்தது. என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது இடைவெளியை அதிகப்படுத்தும். திருட்டு கூட அசிங்கமானதில்லை. ஆனால் அது ஏற்படுத்தும் சந்தேகம் அசிங்கமானது. யாரும் என்னைத் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்; அது ஊர்ஜிதம் செய்யப்படாத வரை. என்னுடன் எப்போதும் போல பழையபடி பழகி, நெருக்கமாக இருப்பார்கள். என்னை நம்பக் கட்டாயப்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் நட்புக்கு என்ன அர்த்தம்?

திருடனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பாவச் செயல்  நண்பனிடம் இருந்து திருடுவதைவிட மோசமானது; நட்பை அழிப்பது; சந்தேக விதையை விதைப்பது; இது திருடுவதைவிடக் கொடுமையானது. மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத திருடனாக நான்  இருந்திருந்தால் நட்பு மங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ரகசியமாக திருடும்போதுகூட வெட்கப்படாமல் இருந்திருப்பேன். ஒரு திருடனின் அபிப்ராயத்தில் இருந்து பார்த்தால் இதுதான் அவன் மனப்போக்கு. ”நான் திருடுவேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் நண்பர்களை மதிப்பேன் என்பதும்,” இதுதான் உண்மைத் திருடனின் மனநிலை. ’அதுதான் வேறு இனத்தவனாகக்’ காட்டுகிறது. இந்த வகையில் நான் யோசிக்கும்போது எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாவதை உணர முடிந்தது. இது எனக்குத் தெரிவதற்கு முன்னாலே நான் முழுத் திருடன் ஆகி விட்டேன்.

ஒரு நாள் என் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த கோட்டை அணிந்து கொண்டு பள்ளி மைதானத்துக்குப் போனேன். நகுமாராவைப் பார்த்தேன். பேசிக் கொண்டே நடந்தோம்.

“இன்னும் அந்தத் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்றேன்.

“ஆமாம்,” அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

“ஏன்? அவனைக் குளியல் அறையிலேயே அவர்களால் பிடிக்க முடியவில்லையா?”

“அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதில்லையாம். மற்ற இடங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஹிகுச்சியை கூப்பிட்டு காவலர் கோபித்துக் கொண்டாராம். அவர்களின் திட்டத்தை அவன் வெளிப்படுத்திவிட்டதாக திட்டினார்களாம்”

“ஹிகுச்சி?” என் முகம் வெளிறுவதை என்னால் உணர முடிந்தது.

“ஆமாம்…” அவன் வருத்தமாகச் சொன்னான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லாமல் இதுவரை மறைத்து விட்டேன். ஆனால் நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீ இதை விரும்ப மாட்டாய். காவலர் உன்னைச் சந்தேகிக்கிறார். எனக்கு அதைப் பற்றிப் பேசவே வெட்கமாக இருக்கிறது. நான் ஒரு நிமிடம்கூட உன்னை சந்தேகப்பட்டதில்லை. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னை நம்புவதால்தான்  உன்னிடம் சொல்கிறேன். நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.”

“என்னிடம் சொன்னதற்கு நன்றி. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ’கடைசியாக வந்தே விட்டது!’ நான் பயந்த மாதிரியே… இந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

“உன்னிடம் சொல்லிவிட்டபிறகு சுமை இறங்கியது போல இருக்கிறது. நாம் இதைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்தி விடலாம்,” என்னைச் சமாதானப்படுத்துவது போல நகுமாரா சொன்னான்.

“இதைப் பற்றிப் பேச நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் நம் மனதில் இருந்து இதை அழித்து விடமுடியாது. என் மீது நீ வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. இதில் நான் மட்டும் அவமானப்படவில்லை. என் சினேகிதனான உனக்கும் அவமானம். நான் சந்தேகத்திற்கு உரியவனாக இருப்பதே நட்பிற்கு அவமானம்தான். என் மதிப்பை இழந்து விட்டேன் பார். இல்லையா? நீயும் என்னை வெறுத்து விடுவாய்”.

“சத்தியமாக நான் உன்னை வெறுக்க மாட்டேன். எந்த அவமானத்தையும் நீ எனக்குத் தரவில்லை. ஹிகுச்சிக்கும்தான்… காவலர் குழுவிடம் அவன்  உனக்கு ஆதரவாகவே          பேசியதாகச் சொன்னார்கள். உன்னைச் சந்தேகிப்பதற்கு முன்னால் அவன் தன்னையே சந்தேகித்துக் கொள்வேன்  என்றும் சொன்னானாம்,” சிறிது  விழிப்பு அடைந்தவனாக  நகுமாரா பேசினான்.

“ஆனால் அவர்கள் இன்னமும் என்னை சந்தேகிக்கின்றனர். இல்லையா? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் பலனில்லை. உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை என்னிடம் சொல்.நான் அப்படியாவது தெரிந்து கொள்கிறேன்”

“காவலருக்கு எல்லாவிதமான குறிப்புகளும் தெரியும். ஹிகுச்சி அன்று இரவு எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு எந்தத் திருட்டும் குளியல் அறையில் இல்லையாம். அதனால்    அவர்கள் உன்னைச் சந்தேகப்படுகிறார்கள்.” தயக்கத்தோடு நகுமாரா விளக்கினான்.

“ஆனால் என் ஒருவனிடம் மட்டும் அவன்  அதைச் சொல்லவில்லையே!” நான் இதைச் சொல்லாவிட்டாலும் மனதில் இது உடனடியாக ஓடியது. இது என்னைத் தனிமையானவனாகவும், இழிவானவனாகவும் காட்டியது.

“ஹிகுச்சி நம்மிடம் சொன்னது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அந்த இரவில் நாம் நால்வரும்தான் இருந்தோம். வேறு யாருக்கும் தெரியாது. நீயும், ஹிகுச்சியும் என்னை நம்பினால்..”

“நீதான் இது பற்றி யோசிக்க வேண்டும். உனக்கு யாரென்று தெரியும். அவன் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை,” நகுமாரா சொல்லி விட்டு இரக்கமாகப் பார்த்தான்.

திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஹிராட்டாவின் கண்கள் என்னை ஊடுருவது போல உணர்ந்தேன்.

“நீ அவனிடம் என்னைப் பற்றிப் பேசினாயா?”

“ஆமாம்… அது சுலபமானதில்லை என்று உனக்கும் தெரியும். நான் உங்கள் இருவருக்கும் நண்பன். நானும் ஹிகுச்சியும் நேற்று இரவு அவனுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். அவன் அந்த அறையைக் காலி செய்வதாகச் சொன்னான். ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனை நான் இழக்க வேண்டியதுதான்.”

நான் நகுமாராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ”நீயும், ஹிகுச்சியும் என்னுடைய நண்பர்களாக இருப்பதில் எனக்குப் பெருமை. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. நகுமாராவும் அழுதான். வாழ்க்கையில் முதல் முறையாக நான் மனிதர்களின் பரிவு உணர்வை அனுபவித்தேன். தனிமையான நிலையில்  தவித்தபோது நான் தேடியது இதைத்தான். நான் எப்படிப்பட்ட கெட்ட திருடனாக இருந்தாலும் நகுமாராவிடம் இருந்து என்னால் எதையும் திருட முடியாது.

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் உனக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறேன். என்னால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன்    என்னை நம்பாவிட்டாலும் நான் அவனை மதிக்கிறேன். அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன். மற்றவர்களைவிட அவன் நல்ல குணங்களை நான் அறிவேன். வெளியேற வேண்டும் என்றால் ஏன் நான் போகக் கூடாது? தயவு செய்து என்னைப் போக விடுங்கள். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து இருங்கள். நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட மாட்டேன்,” என்றேன்.

“நீ போக வேண்டிய அவசியமில்லை. அவனுடைய கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போது நீதான் கஷ்டத்தில் இருப்பவன். அவன் அநியாயமாக  இருக்கும்போது அவனுடன் நான் சேர மாட்டேன். நீ போனால் நாங்களும் போய் விடுவோம். அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியும். ஒரு முறை அவன் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டான். அவன் விருப்பப்படி செய்யட்டும். அவனுக்கு புத்தி வந்து மன்னிப்புக் கேட்கும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலம் ஆகாது.”

“அவன் கண்டிப்பாக வந்து மன்னிப்புக் கேட்க மாட்டான். அவன் என்னை நிரந்தரமாக வெறுத்து விடுவான்”.

.”நான் அப்படி நினைக்கவில்லை. அவன் தன் பேச்சிலிருந்து மாற மாட்டான். அவன் பலமும்,பலவீனமும் அதுதான். தன் எண்ணம் தவறு என்று தெரிந்தால் அவன் மன்னிப்புக் கேட்டு நம்மோடு சேர்ந்து விடுவான். அது அவனிடம் எனக்குப் பிடித்த குணம்”. நான் ஹிராட்டாவிடம் கோபப்படுவதாக நினைத்து நகுமாரா சொன்னான்.

“அப்படி அவன் வந்தால் நல்லது…” நான் பதில் சொன்னேன். ”அவன் உங்களிடம் வரலாம். ஆனால் திரும்பவும் என்னுடன் நட்பு வைத்துக் கொள்வான் என்று நான் நம்பவில்லை… ஆனால் நீ சொல்வது சரி. அவன் அன்புக்கு உரியவன். அவனுக்கு என்னையும் பிடித்திருந்தால்…”

நகுமாரா என் தோள் மீது கை போட்டான். நாங்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தோம். அது மாலை நேரம். லேசாகப் பள்ளி மைதானத்தில் பனி படர்ந்திருந்த்து. முடிவில்லாத கடலால் சூழப்பட்ட தீவில் இருப்பது போல உணர்ந்தோம். இங்கும் அங்குமாகப் போய்க் கொண்டு இருந்த மாணவர்கள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தனர். அவர்களுக்கும் தெரியும். அதனால் என்னை ஒதுக்குகின்றனர் என்று நினைத்தேன். மிகத் தனியாக உணர்ந்தேன்.

அந்த இரவில் ஹிராட்டா தன் மனநிலையை மாற்றிக் கொண்டான் போலும். அறையைக்          காலி செய்யவில்லை. ஆனால் ஹிகுச்சி, நகுமாராவிடம் கூட அவன் பேசவில்லை. இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் நண்பர்களின் அன்புக்கு மதிப்பு தர வேண்டும். நான் போனால் அது என்னை இன்னும் அதிக குற்றவாளியாகக் காட்டும். இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே, திருடனைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்,” இரண்டு நண்பர்களும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு வாரம் ஆனது. திருட்டு வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. கடைசியில் நகுமாரா, ஹிகுச்சியின்  பணம், சில புத்தகங்கள் ஆகியவையும் திருடு போயின.

“ஓ.. உங்களுடையதும் திருட்டு போயிற்றா?ஆனால் இனி எதுவும் காணாமல் போகாது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹிராட்டா கேலியாகச் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.

இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் நகுமாராவும், ஹிகுச்சியும் நூலகத்திற்குப் போவார்கள். நானும் ஹிராட்டாவும் மட்டும் அறையில் இருப்போம். எனக்கு இது சங்கடமாக இருக்கும். அதனால் நான் மாலை நேரங்களில் நூலகத்திற்கோ அல்லது நடைப் பயிற்சி செய்யவோ போய் விடுவதுண்டு. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணி அளவில் நான் எங்கள் அறைக்கு வந்தேன். அதிசயமாக ஹிராட்டா அங்கு இல்லை. மற்றவர்களும் இல்லை. எங்களுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தேன். ஹிராட்டாவின் மேஜை அருகே போனேன். மேஜையைத் திறந்து தேடினேன். சில நாட்களுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்து வந்த கவரில் பத்து –யென் மணியார்டர் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து என் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேஜையை மூடினேன்.  ஹாலுக்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே போய் முற்றத்தை அடைந்தேன். வெறுமையாக இருந்த இருட்டுப் பகுதிக்குப் போனேன். நான் திருடும் பொருட்களைப் பத்திரமாகப் புதைத்து வைப்பது அங்குதான். அந்த நேரத்தில் யாரோ ’திருடன்’ என்று கத்தினார்கள். பின்னால் இருந்து பாய்ந்து என்னைக் கீழே தள்ளி தலையில் அடித்தார்கள். அது ஹிராட்டா.

“எல்லோரும் வாருங்கள் ..வாருங்கள் உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது, காட்டு!”

“சரி. சரி. நீ கூச்சல் போட வேண்டாம். நான் உன் மணியார்டரைத் திருடி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். நீ அதைக் கேட்டால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கு கூட்டிக் கொண்டு போனாலும் வருகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டோம். இல்லையா? உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” நான் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஹிராட்டா ஒரு நிமிடம் தயங்கினான். அடுத்த நிமிடம் என் முகத்தில் தொடர்ந்து          குத்தினான். ஏனோ எனக்கு வலிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.

“நீ எனக்குப் போட்ட வலையில் நான் சிக்கிக் கொண்ட பிறகு என்னை நீ அடிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீ என்னைப் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் நான் இந்த தவறைச் செய்தேன். ஏன் இவனிடம் இருந்து திருடக் கூடாது என்று நினைத்தேன். நீ என்னைக் கண்டுபிடித்து விட்டாய். அவ்வளவுதான். பின்னொரு நாள் நாம் இதைப் பற்றி நினைத்து சேர்ந்து சிரிக்கலாம்”

நான் ஹிராட்டாவின் கையை இயல்பாகக் குலுக்கினேன். ஆனால் அவன் என் சட்டைக் காலரைப் பிடித்து எங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் மட்டும்தான் அவன் என் கண்களுக்கு கீழானவனாகத் தெரிந்தான்.

“நான் திருடனைப் பிடித்துவிட்டேன். அவன் என்னைப் பிடித்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்னை நகுமாரா, ஹிகுச்சியின் முன்னால் கீழே தள்ளினான். இந்த குழப்பத்தைப் பார்த்து அங்கு உள்ள மாணவர்கள் கூடி விட்டனர்.

“ஹிராட்டா சொல்வது சரிதான்,” நான் தரையில் இருந்து எழுந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னேன். ”நான் திருடன்தான்,” எப்போதும்  பேசுவது போல பேச முயற்சி செய்தேன். ஆனால் என் முகம் வெளிறி விட்டது.

“நீங்கள் என்னை வெறுக்கலாம். அல்லது என்னைப் பார்த்து வெட்கப்படலாம்… நீங்கள் உண்மையானவர்கள். ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். நான் திரும்பத் திரும்ப உங்களிடம் உண்மையைச் சொன்னேனே? நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா? நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான்  மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால்  முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது.ம னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா? நான் உங்களை முட்டாளாக்கவில்லை. எல்லாவற்றையும் நான் உங்கள் நலத்திற்காகத்தான் செய்ய விரும்பினேன். நான் உங்களிடம் இருந்து திருடியது உண்மைதான், ஆனால் நான் உங்கள் சினேகிதன் என்பதும் உண்மைதான். எனக்கு உங்கள் நட்பு வேண்டும். திருடனுக்கும் உணர்வு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

நகுமாராவும் ஹிகுச்சியும் அமைதியாக நின்றனர். ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“என்ன தைரியம் இவனுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்னைப் புரியாது. நீங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புரியாது,” நான் என் கசப்பை அடக்கிக் கொள்ளப் பார்த்தேன். ”நான் உங்கள் சினேகிதன் என்பதால் எச்சரிக்கவும் செய்கிறேன். கடைசி முறையாக இப்படி நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இருவரும் சுலபமாக ஏமாறக்கூடிய குணத்தால் ஒரு திருடனோடு சினேகிதம் கொண்டீர்கள். படிப்பில் உங்களுக்கு அதிக மார்க்குகள்  கிடைக்கலாம். வளர்ந்து பெரியவர்களாகி வாழ்க்கைக்குள் போகும்போது உங்களுக்குப் பிரச்னைகள் வரலாம்… ஆனால் ஹிராட்டா உங்களைவிட கெட்டிக்காரன். அவனை முட்டாளாக்க முடியாது!”

நான் ஹிராட்டாவைப் புகழ்ந்தபோது அவன் முகம் இறுக்கமாக  இருந்தது. வேறு எங்கோ பார்த்தபடி இருந்தான்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்து விட்டன. நான் முழுத் திருடனாகி விட்டேன். பல தடவைகள் சிறைக்குப் போயிருக்கிறேன். இன்னமும் என்னால் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. குறிப்பாக ஹிராட்டா… ஒவ்வொரு முறை நான் திருடும்போதும் அவன் முகம் கண்ணுக்கு முன்னால் வரும். ’நான் சந்தேகப் பட்டது போல,’ என்று இகழ்ச்சியாகப் பார்த்தபடி, சொல்வது போல. அவன் மன உறுதி உடைய உண்மையான மனிதன். ஆனால் இந்த உலகம் புதிரானது. மிகவும் எளியவனான ஹிகுச்சி சிக்கலில் சுலபமாக மாட்டிக் கொள்வான் என்று நான் சொன்ன அந்த ஜோசியம் பொய்த்து விட்டது. அவன் தன் தந்தையின் செல்வாக்கால் பல நாடுகளுக்குப் பயணம் செய்தான். டாக்ட்ரேட் பட்டம் வாங்கி       விட்டான். ஹிராட்டா என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை யாராலும் கணிக்க முடியாதது என்று சொல்வது உண்மைதான்.

நான் வாசகர்களுக்கு இங்கு சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். ஒரு வார்த்தைகூட இங்கு பொய்யில்லை. நகுமாரா, ஹிகுச்சி ஆகியவர்களின் மனசாட்சி என் போன்ற திருடனின் மனதில் கண்டிப்பாக நிற்கும்.

நீங்கள் என்னை நம்பாமலும் போகலாம். நீங்கள் என் வகையைச் சேர்ந்தவராக இருந்தால்…

———————-

 

 

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா 

மாண்புடையாள்

தி. வேல்முருகன்

தீபாவளிக்கு மறுநாள் மதியம் சாப்பிட்டு வீட்டிலேருந்து வேலைக்கு போயிட்டு இருக்கேன். பெரிய மதுவு திரும்பும்போது தம்பின்னு ஒரு குரலு கேட்குது.

தம்பின்னு திரும்பவும் குரலு உடைஞ்சு அதுல ஒரு பதட்டம். நான் வண்டிய திருப்பி அந்த பெரிய மதுவு பஸ் ஸ்டாண்ட்கிட்ட வந்து நிறுத்தினேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவிதான் கூப்புடுராங்க.

“என்னம்மா? “

“இங்க வாயேன் தம்பி”

அங்கதான் சைக்கிள் கடைக்காரர் ஒக்காந்து இருந்தாரு. அப்பாக்கு தெரிஞ்சவரு. உடம்பு கொஞ்சம் பலவீனமா நடுங்குது. கையெல்லாம் சருகு போல தோல் சுருக்கம் தெரியுது.

“என்னம்மா? என்னாச்சு? “

“பஸ்சே வரல தம்பி ஒரு மணி நேரமா! கொஞ்சம் கரிக்குப்பம் வரைக்கும் போகனும், தெரிஞ்சவங்க வீட்டுக்கு. நீ கொஞ்சம் இவங்கள கொண்டு உட்டுடேன். நான் பின்னாடியே வந்துடறேன்.”

“அதுக்கென்னமா… நீங்க மெல்ல வந்து உட்காருங்கப்பா!”

அவரால நடக்க முடியல. ஒரு தள்ளாட்டம் இருந்தது. வண்டியில ஏறும்போது.

“என்னம்மா தனியா அனுப்புறிங்களே, நீங்களும் வாங்களேன்?”

“ஏய், நீயும் ஏறிக்க. இடம் இருக்கு பாரு…”

சைக்கிள் கடைக்காரர்தான் சொன்னாரு. அந்த குரலு, அந்த சத்தம், கொஞ்சம் கூட பலவீனம் இல்லாம உறுதியா தெரிஞ்சுது.

பஜாஜ் 125 விண்ட் மாடல். நல்ல நீளமான சீட்டு உள்ளது. நல்லா உட்கார்ந்து வண்டிய பிடிச்சுக்க சொல்லிவிட்டு எடுத்தேன். முதல்ல அந்த அம்மா கொஞ்சம் கூச்சமும் சங்கடமும் பட்டாங்க. பிறகு ஏறிகிட்டாங்க. கையில இருந்த கட்டப்பைய வாங்கி முன்னாடி வச்சிக்கிட்டேன். வண்டி ஓட ஆரம்பித்தது.

இவர் பேரு ராயரு சைக்கிள் கடை தான் வச்சிருந்தாரு. என்னோட புது சைக்கிள அப்பா ஒவராயிலுங்காக இவர் கிட்ட விட்டு இருந்தாங்க. அப்ப இவரு கடையில நிறைய சைக்கிள் இருக்கும் சின்ன சைக்கிள்லாம் இருக்கும். எப்பவும் கூட்டமா இருக்கும். பரங்கிப்பேட்டை ரேவுதுரைக்கு மீனு வாங்கப் போற சைக்கிள் எல்லாம் கூடையோட நிக்கும். எப்பவும் ஆளும் பேச்சும் பஞ்சர் ஒட்ட காத்தடிக்கன்னு இருக்கும்.

நான் அன்னைக்கு சைக்கிள் வாங்கப்போனேன். அப்ப ரோட்டோரம் பெரிய வேப்பமரம். நிழல்ல பூவும் பழமுமா அது ஒரு தனி வாடை. நல்லா காத்தடிச்சுகிட்டு இருந்திச்சு. ஒரு ஆயா அந்த பழத்த பொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. நான் சைக்கிள் கொடுங்கன்னு கேட்டேன்.

“ஒக்கார்றா என் கூட்டாளி. மவனே, கொஞ்சம் நேரமாவும் நீ போயி விளையாடுடா,”ன்னாரு அப்ப இத எல்லாம் பார்த்தன்.

இப்ப தெரியற இந்த சைக்கிள் கடைக்காரர் வாட்டம் சாட்டமா நல்ல நிறம் கையில பச்சை நரம்பு தெரியும். பாவம் இப்ப இப்படி தளந்து நிக்கிறாரு.

வாய்க்கால் பிரிந்ததும் ஆனைக்குட்டி மதுவு வந்தது. இருபுறமும் மாந்தோப்பு. தாழங்காடு தாண்டியதும் குட்டியாண்டவர் கோயில் சாலையில் இருபுறமும் புளியமரமும் பனைமரமும் வரிசையாக நின்றது. தைக்கால் வந்ததும் தர்க்காவின் விளக்கு கம்பத்தை பார்த்துவிட்டு நான் சைக்கிள் கடைக்காரர் மனைவியைக் கேட்டேன்.

“அம்மா, அங்க யாரு வீட்டுக்கு போறிங்க?”

“அதுவா தம்பி அங்க சொந்தக்காரங்க இருக்காங்க அங்க போறோம்”

தோப்பிருப்ப வண்டி தாண்டுச்சு. நான் ஒன்னும் பேசல.

“அம்மா கரிக்குப்பம் வந்துட்டுது”

“இன்னும் கொஞ்சம் தூரம் தான் போயேன்”

சிறிது தூரம் போனபின் ரோடு இடப்புறம் பிரியும் இடத்தில், “இங்க தான் நெறுத்து நெறுத்து” என்றார்கள்.

நான் வண்டிய மெதுவா நிறுத்தினேன்.

“மெதுவா மெதுவா,”ன்னாரு சைக்கிள் கடைக்காரர்.

மனைவி இறங்கும்போது குரல் கணீர்ன்னு இருக்கு. இறங்கியதும் பைய வாங்கி கிட்டாங்க. சைக்கிள் கடைக்காரர் இறங்கி கால் தாங்கிகிட்டே போயி ரோட்டோரம் இருந்த எல்லக்கல் மேல கைய ஊணி உக்காந்ததுட்டாரு. நான் அவர் மனைவிய கேட்டேன்.

“ஏம்மா ரொம்ப முடியல போல இருக்கே, பையன் வீட்டுக்கு போகக்கூடாதா?”

அவ்வளவுதான் அந்த அம்மா கண்ணுலேருந்து தண்ணி கொட்டுது, உதடு பச்சைப்புள்ள மாதிரி துடிக்குது.

“அழுவாதம்மா, யாரையாவது கூப்புடனுமா? என்ன கஷ்டம் சொல்லும்மா?”

முந்தானையால முகத்த தோடைச்சிக்கிட்டு, “எல்லாம் தப்பாயிடுச்சுப்பா,”ன்னு சொல்றாங்க.

“என்னம்மா சொல்றிங்க?”

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடியிருக்கர வீட்ட உட்டுடக்கூடாதுப்பா. புள்ளைவோ இருக்கு பொண்ணு இருக்குவோ ஆனால் இருக்கதான் இடமில்லே”

“ஏம்மா?”

“பெரிய பொண்ணு கல்யாணத்துக்கு வீட சொச்ச பணத்துக்காக போக்கியம் போட்டோம். அவ்வளவுதான், அத மூக்க முடியல. இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு அதையே வித்து முடிச்சோம்..

“மளிகை கடை வச்சாரு. பொட்டிக் கடை கூட வச்சு பார்த்தாச்சு, கொடுத்தத வாங்கத் தெரியாது தம்பி, திரும்ப சைக்கிள் கடைக்கே வந்தாச்சு

“பசங்க அவன் அவன் சம்பாரிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானுங்க. இந்த சரியா படிக்காத புள்ளைவோ என்ன பண்ணும்? அங்க அங்க கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கஷ்டப்படுதுவோ, நாங்க எங்க போறது?

“முதல்லாம் எல்லாம் சைக்கிள் வேலைக்கு வரும், ஒன்னும் கஷ்டம் தெரியல. இப்பல்லாம் எங்க, அதுவும் கிடையாது, ஞாயிற்றுகிழமை ஒன்னு இரண்டு வரும். இவங்களுக்கு உடம்பு தெம்பு கொறைஞ்சதும் அதுவும் போச்சு“

சைக்கிள் கடைக்காரர் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு இருந்தாரு.

“காலையில கிளம்பினோம், யார் கண்ணிலும் படாம வந்துடனுமுன்னு.

“எல்லாம் விபரமா ஒரு நாளைக்கு சொல்றன். உன்னதான் தெரியும, நல்ல புள்ள இல்ல நீ வேலைக்கு போ. நேரம் ஆவுது பாரு. இங்க பக்கத்துல தான் நான் போவனும் நீ போ“

நான் வண்டி எடுத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்து கண்ணாடி வழியாக பார்த்தேன்

சைக்கிள் கடைக்காரரை கைத்தாங்கலா முதல்ல நிக்க வச்சாங்க. அவரு கையை உதறி முன்னாடி சாயப்பார்த்தாரு.

நான் வண்டியைக் கீழப்போட்டுட பார்த்தேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவி சிரமப்பட்டு நிமித்தி பிடிக்கிறாங்க, அவரு நெஞ்சு உயரம்தான் இருக்காங்க. எனக்கு புரியுது. இப்ப அழுவுறாங்க. அவுங்க உதடு துடிக்குது. செட்டியார் குனிஞ்சு அவங்கள பார்க்குறாரு. சைக்கிள் கடைக்காரரை ஆதரவா அவரு மனைவி புடிச்சு இருக்காங்க. நான் அப்படியே திரும்பி ரோட்ட பார்த்து  இருக்கேன். ஒரு ஐம்பதடி தூரத்தில ஒரு கட்டடம்
இருந்துச்சி. நான் அந்த கட்டத்த முன்பே பார்த்து இருக்கேன். ஆனால் அதுல இருந்த போர்ட அன்னைக்குதான் பார்த்தேன். அதுல அரசினர் ஆதரவற்றோர் முதியோர் இல்லமுன்னு இருந்துச்சு.

நான் வேலைக்குப் போயிட்டேன். மனசுல அவங்க ரெண்டு பேரோட நினைப்பு மட்டும் இருந்துச்சு. எப்படி இருந்தவங்க இப்படி ஒரு சூழ்நிலை வந்து போச்சே, என்னா ஆவாங்கன்னு தெரியலையே, அவங்கள பார்க்கனும்னு நினைச்ச நான் தொடர்ந்து வேலையால மறந்துட்டேன்.

ஒரு வாரம் போயிருக்கும். மாலை வேல முடிஞ்சு திரும்பும்போது 6:30 மணி இருக்கும் வெளிச்சம் இருந்தது. செட்டியாரம்மா கரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்குறாங்க வண்டிய நிறுத்தி, “வாங்கம்மா நான் கொண்டு விடறேன்“ன்னு சொன்னேன்.

“இல்லப்பா. பையன் பார்த்தா ஏசுவான், நீ போ. நான் பஸ்ல வந்துடறேன்“

“சரிம்மா?”

வண்டி எடுக்கப்போறேன். “தம்பி, தம்பி. இருப்பா… நேரம் வேற ஆவுது. பெரிய மதுவுல உட்டுடு”

“சரிம்மா ஏறிக்குங்க. கம்பி புடிச்சுக்குங்க”

வண்டி போயிகிட்டு இருக்கு. அவங்களாவே சொல்ராங்க,

“ஒன்னும் சரியில்ல தம்பி. நான் பொறந்த ஊரு குறிஞ்சிப்பாடி. என்ன இந்த குடும்பத்துல இவருக்கு கட்டி குடுத்தாங்க. நான் வந்தப்பிறகுதான் இவரு தம்பிவோளுக்கு கல்யாணம் ஆச்சு. அப்புறம் சொத்த பிரிச்சு கொடுத்தாங்க , பங்கா ஊடும் கொஞ்சம் நிலமும் வந்துச்சி. சரியா பார்க்க தெரியல. சாமர்த்தியம் இல்ல. ஒரு சூழ்நிலையில வீட்ட போக்கியம் போடப் போவ, அத மூக்கவே முடியல என்தம்பிவோ மளிகை கடை போட்டு கொடுத்தான். அதையும் கட்டுசிட்டா இல்லாமல் கடன கொடுத்துட்டு வாங்க தெரியல. கடன் வாங்கனவன் அடிக்க வரான்பா . நாங்க வாங்கன கடத்துக்கெல்லாம் போயிடுச்சு. மீளவே முடியல. எல்லாம் போச்சு.

“கடைசியாக அவ ராஜம் ஊட்டுலதான் ஒரு வருசமா இருந்தோம். அவ ரொம்ப நாளா காலி பண்ணுங்கன்னு சொன்னா. இந்த மாசம் இந்த மாசம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டு இருந்தோம். இந்த மாசம் வர்ற முதியோர் பணம் வரல. நானும் எங்கெங்கோ ஓடிப் பார்த்தேன். பெரட்ட முடியல. தீவாளிக்கு மொத நாளு பொட்டிய தூக்கி வெளில வச்சுட்டு கதவ சாத்திட்டா. மழை புடிச்சுக்கிச்சு.

“பொழுது போனப்பிறகு பையன் வூட்டுக்கு போனேன். தீபாவளி. மவன் வூட்டுல இருந்துட்டு இங்க வந்தாச்சு. அம்மா பையன் வீட்டுல இருக்க முடியாதா? என்னோட பெரிசா கஷ்டப்படறான்பா, கிடைக்கற வேலைய செய்யறான், நாங்க ஒன்னும் செய்யல அவனுக்கு. சுனாமி வீட்டுல வாடகைக்கு இருக்காம்பா. இவரு முடியாதவர இரண்டுநாளு வச்சிக்க முடியல. தண்ணி வசதி கிடையாது. மருமக ஏதாவது சொல்றதுக்கு முன்னே நம்மளே போயிடும்முன்னு வந்துட்டேன்.”

“எங்க வந்திங்கம்மா?”

“ஆமா இனி மறைச்சிதான் என்ன ஆவப் போவுது? அதாம்பா கரிக்குப்பத்துல அனாதை இல்லம் இருக்கு இல்ல, அங்கதான் கொணாந்து தங்க வச்சேன். முதல்ல சேர்த்துக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. அப்புறம்தான் நான் படற கஷ்டத்தை பார்த்துட்டுஒத்துகிட்டாங்க.

“மவன் வீட்டுல இரண்டு நாள் தங்கியிருந்து பார்த்தேன், மருமகள் அனுசரனை இல்லை, பிறகு அங்க இங்கன்னு விசாரிச்சப்ப இங்கே வயசான காலத்துல தங்கற இடம் இருக்குன்னு தெரிஞ்சு கொண்டு வந்து சேர்ந்தேன். அவருக்கு முடியாம போனப்பிறகு கூடயேதான் இருக்கேன். பகல்ல அப்படியே யாருக்கும் தெரியாம வந்து கூடயே பொழுதுக்கும் தேவையானத செஞ்சு கொடுப்பேன். அங்க இருக்குறவங்களுக்கும் வேத்தும்மையில்லாம செய்வேன். இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. ரா ஒரு பொழுது எல்லாரும் பார்த்துக்கிறாங்க. பகல்ல நான் வந்துடப் போறேன். என்னமோ போப்பா, நான் இருக்கறவரைக்கும் யாரும் ஒரு சொல்லோ கஷ்டப்படவோ அவர உடமாட்டேன். ஆனால் அவரு கஷ்டப்படாம நல்லவிதமா போயிட்டாபோதும் அல்லும் பகலும் அதே நினைப்பு ஓடிக்கிட்டு கிடக்கு. பகீர்ன்னு ஒரு பதட்டம் எந்த செய்திய கேட்டாலும் வந்து நெஞ்சடைக்குது. இன்னும் எவ்வளவு நாளைக்கோ?”

“சரிம்மா கவலைப்பட்டு நீங்களும் உடம்பு கெடுத்துக்காதிங்க? இப்ப எங்க போறிங்க?”

“மவன் வீட்டுக்குத்தான். மருமக முழுகாம நிற மாசமா இருக்கா. கைப்புள்ளய வச்சிக்கிட்டு கஷ்டப்படறா.அப்புறம் யார் பார்ப்பா? நான் தான் பார்க்கனும்”

பெரிய மதுவு வந்து விட்டது.