சிறுகதை

பாதை காலறியும் – அ. வேல்முருகன்

தி வேல்முருகன்

பெருமழை குஐராத் முழுவதும் பொழிந்தாலும் இந்த ஐாம்நகரை மட்டும் ஒதுக்கி விடுகிறது. இரண்டு வருடமாக மழையே இல்லை. இந்த வருடமும் மே மாத வெயில் சிறிதும் கருணையில்லாமல் உதிரத்தையே வேர்வையாக உறிஞ்சுகிறது. தாகத்துக்கு வயிறு முட்ட தண்ணீர் குடித்த பின்னும் எனக்கு ஒரு டீ குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்றியது.
“சஞ்சய் ஒரு டீ கொடப்பா, பத்தரை மணியாச்சி பாரு…”

“சார், பால் திரிஞ்சு போச்சு. கொஞ்சம் இருங்க, வாங்கி வர ஆள் விட்டுருக்கேன்.
இப்ப வந்துடுவான்”

“ஏம்பா படிக்கலயா? வேற வேலை எதாவது செய்யக்கூடாதா?”

“செய்யலாம்தான் சார். வேலையும் தெரியும் ஆனா இப்படிதான் கிடக்குமுன்னு இருக்கும் பாருங்க, அதுதான்”

“என்னப்பா சொல்ற?’

“ஆமாம் சார், நான் நல்லா படிக்கணுமுன்னுதான் நினைச்சேன் ஆனால் பாருங்க எனக்கு படிக்க குடுத்து வைக்கல”

“ஏன் தம்பி எண்ணாச்சு? விருப்பம் இருந்தால் சொல்லு”

“இல்லை சார் அந்த முடிந்த கதையை பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை”

சஞ்சய் முகம் பார்த்தால் அவன் சொல்ல முடியாத சோகத்தில் தவிப்பது புரிந்தது, டீ பாய் என்றால் கொஞ்சம் திமிராகதான் இருப்பார்கள். சஞ்சய் அப்படி கிடையாது ஆள் பார்க்க களையாக, படிய வாரிய தலைமுடி, எப்போதும் சிரித்த முகம் என்று இருப்பான். வயிரே இல்லாத ஓங்கிய உருவம். டீ பாய் என்றால் நம்ப முடியாது

அப்புறம் எதிர்பாராத ஒரு நாள் அவனாகவே தன கதையைச் சொல்லத் தொடங்கி விட்டான். யாருமற்ற ஒரு மதியநேரம். பொறுமையாக அனைத்தும் கேட்டேன்.

உலகமெல்லாமிருந்து கங்கைய தரிசிக்க அலகாபாத் வராங்க. ஆனா நான் அங்கேயிருந்து ஓட வேண்டியதா போயிடுச்சு சார்.

நீங்க அன்றைக்கு என்னைக் கேட்டபிறகு பழைய விஷயங்களை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அது பாட்டுக்கு மனதில் ஓட ஆரம்பித்து விட்டது, தெய்வத்திடம் முறையிடுவது போல்.

கொஞ்சம் கேளுங்கள்.

வீட்ல அப்பா,அம்மா அண்ணன் இரண்டு தங்கச்சி ஒரு தம்பி எனக்கு, ஒரு கவலையும் இல்லை பள்ளிக்கு போறது வீட்டுக்கு வர்றது விளையாடறதுன்னு இருந்தேன்

அப்பா அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போவாங்க. அண்ணன் பெயிலா போனதால சும்மா சுத்திட்டு இருப்பான். ஒரு நாள் வேலைக்குப் போன அப்பாவுக்கு உடம்பு முடியல. அப்பா எப்பவும் பீடி குடிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமா ஆஸ்த்துமாவாகவும் டி.பியாகவும் உடம்புல வந்து முத்திப் போச்சு. எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம் காப்பாத்த முடியல .

நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 13 வயசு அம்மா ஒண்டி வேலைக்கு போயி வெறும் கோதுமை மட்டும் கூலியாக வாங்கி வரும் அது ரொம்ப குறைவாகதான் இருக்கும் அதனால மில்லுல்லெல்லாம் அறைக்க மாட்டாங்க பிறகு அத குத்தி இடிச்சு சுத்தம் பண்ணி கையால சுத்தி மாவாக்கி ரொட்டி சுடும் எல்லாரும் சாப்பிடற அளவு இருக்காது அந்த வேலையும் சரியாக கிடைக்காதபோது பட்டினிதான்.

இப்படி இருந்த ஒரு நாள் அண்ணன் பசி தாங்காம எங்கயோ பொயிட்டான். அந்த சமயம் நான் வீடுவீடா பேப்பர் போடற வேலை செய்யப் போனேன். பள்ளிக்கூடம் போகாம இது போல வேலைக்கு போவலாமான்னு நான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா முதல்ல என்ன கட்டிக்கிட்டுஅழுதுச்சு பிறகு தெரிஞ்சவங்க வீட்டிற்கு கூட்டிட்டுப் போய் பையன் வேலைக்கு போறேன்னு சொல்றான் நீங்க எதாவது செய்ய முடியுமான்னு கேட்டுச்சு

அந்த மாமா என்ன உத்துப்பார்த்தாரு. அவங்க வீட்ல அப்ப காலை நாஷ்டா செஞ்சுக்கிட்டு இருக்காங்க. செஞ்ச வாடை அடிக்குது. அவரு, “நீ ஏம்பா வேலைக்குப் போவனும், “படிக்கலாமில்லையா?” என்று கேட்டாரு

நான் சொன்னேன், “சாப்பிடனும்ல்ல மாமா,”ன்னு
என்னை அப்படியே பார்த்துட்டு அவரு அம்மாட்ட நூறு ரூபாய் கொடுத்து, “பையன நான் இட்டுப் போக மாட்டேன்,” என்று சொன்னதும் அம்மா கண்ணு கலங்குது. மாமா பார்த்துடப் போறாருன்னு அப்படியே திரும்பிப் மானத்தைக் பார்த்து முந்தானையால தொடச்சிக்குது.அவரு, ‘பீவி,”ன்னு ஒரு குரல் கொடுத்தாரு ஒரு அம்மா வந்துச்சி அவரிடம் மாமா எனக்கும் அம்மாவுக்கும் நாஷ்டா கொடுக்க சொன்னார்.

அம்மா பணத்தை அங்கேயே வைத்து விட்டு விடுவிடுன்னு என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பச்சு.

அப்ப அந்த வீட்டுக்கார அம்மா எனக்கு ரோம்ப பிடித்த பூரியும் பாஐியும் எடுத்துக்கிட்டு வந்துச்சி நான் உத்துப் பார்த்தத பார்த்த அம்மா என்னை ஒரு அடி அடிச்சுடுச்சு அங்கிருந்து கிளம்பி வீடு வந்ததும் என் கை காலையும் தலையெல்லாமும் தடவி அம்மா அழுதுச்சு.

“நீ அழுவாதம்மா, நான் பெரியவனாயி உனக்கு பணம் சம்பாதிச்சு தரேன்,”னு சொன்னேன் .

எனக்கு அப்ப அதெல்லாம் புரியல. வீட்டுல இருந்து வெளில வந்தேன். என் வயது ஒத்த பசங்க எல்லாம் விளையாடக் கூப்புடுறாங்க. எனக்கு பசியிருந்ததால வீட்டிற்கு திரும்பப் போய் தண்ணி குடிச்சதும் வெறும் வயிறு வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. அம்மா அப்படியே சோர்ந்து படுத்துக் கிடக்கு.

பசியில எனக்கு கோவம். ஏதாவது கிடைக்குமா என்று வீடு முச்சுடும் தேடினேன். நாமும் அண்ணன் போல வீட்ட விட்டு ஓடிப்போவும்னு நினைச்சேன்.

ஓடிப்போன அண்ணன அம்மா திட்டவே இல்ல எம்புள்ள எங்கேயாவது போயி பொழைச்சுகிடும், இங்க பட்டினி கிடந்து சாவறதவிட அவன் போனதே நல்லதுன்னு ஒரு நாள் சொல்லுச்சு

அப்பாவோட பொருட்கள்ல தேடும்போது ஓரு நஞ்சி போன ஐம்பது ரூபாய் நோட்டு அதோட பழைய சட்டையிலருந்து கிடைச்சுது. இனி எங்கேயாவது போயிடுவோம். காசு சம்பாரிச்சு வீட்டிற்கு வருவோம்னு மனசுலே சாமிய கும்பிட்டேன்

அம்மா எப்ப முழிச்சதுன்னு தெரியல
அமைதியா என்னப் பார்த்த அம்மா, ‘என்னடா?’ன்னு கேட்டுச்சு

நான் சொன்னேன், “வேல ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கப் போறேன் வர நேரம் ஆனா தேட வேண்டாம்”னு.

சொல்லிவிட்டு நேரா கால் போன போக்குல நடந்தேன் அப்ப ஒரு ரயிலு போறத பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கு ரயில்ல போகனுமுன்னு தோணிச்சு. நேரா ரெயில்வே ஸ்டேஷன் போனேன்.

கங்கையை தரிசிக்க உலகமெங்கும் இருந்து வரும் மக்கள் கூட்டம். விதவிதமான, அதுவரை பார்த்தேயிராதவர்கள். எனக்கு திகைப்பா இருந்துச்சு. எனக்குத் தெரியும் அம்மா இனி தேடி வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு. அவ்வளவு கூட்டம். வந்த ரயில்ல யாரும் இல்லாத பொட்டியில ஏறிட்டேன். டிக்கெட்லாம் ஒன்னும் எடுக்கல. ரயிலு எங்க போவும்னு தெரியாது. பாவு பாஐி வந்துச்சி வாங்கி சாப்பிட்டுட்டு வாஷ்பேசின்ல தண்ணி குடிச்சேன். கண்ண சுழட்டி தூக்கம். அப்படியே சீட்டுக்கு அடியில படுத்துட்டேன்

நல்ல தூக்கத்தில் பெரண்டு படுக்கும்போது சீட்ட விட்டு வெளியே வந்து கிடந்திருக்கேன். டிடிஆர் பார்த்து எழுப்புராறு என்னை. எழுந்ததும் டிக்கெட் கேட்கிறார்

நான் பயந்து கொண்டே, டிக்கெட் இல்லை, என்றேன்.

கன்னத்தில் ஒரே அறை. பொறி பறக்குது. சுருண்டு அப்படியே கீழே விழுந்துட்டேன்

என்னிடம் இருந்து சத்தம் வராதால் டிடிஆர் பயந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் அடித்து, பேட்டா பேட்டா, என்கிறார்

நான், “ஓ…” என்று வினோதமான ஒலியுடன் அழுகிறேன். எனக்கு வீட்டு ஞாபகமும் இவர் மேலும் அடிப்போரோ என்று பயமும் வந்து விட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததும், “பேட்டா நான் அடிக்க மாட்டேன். சொல்லு, நீ யாரு எப்படி இந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வந்த?” என்று கேட்டார் டிடிஆர்.

அழுதுகொண்டே, அப்பா இறந்ததிலிருந்து நடந்தது அனைத்தையும் சொன்னேன் அப்புறம், “இந்த பெட்டியில் யாரும் இல்லை, அதனால் ஏறினேன்,” என்றேன்.

‘நீ எங்க போற? இந்த ரயில் எங்க போவுதுன்னு தெரியுமா?’

“தெரியாது, வேலை தேடிப் போறேன்,” என்றேன்

“சரி, நீ என்ன ஊர் பேட்டா?’

“அலகாபாத்தில் ராம் நகர்”

“இந்த ரயில் பஞ்சாப் பாட்டியலா போவுது. நீ வா, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி உன்ன வீட்டுக்குப் போற ரயில்ல ஏற்றி விடறேன். நீ வீட்டுக்குப் போ பேட்டா,” என்றார் டிடிஆர்.

நான் மறுத்து அழுதுகொண்டு இருந்தேன்

“பேட்டா நீ அழுவாத நான் இப்ப வரேன் இங்கேயே இரு,” என்று சொல்லிவிட்டு டிக்கெட் செக் பண்ண சென்றார்.

நான் அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து கதவு அருகே நின்று ஸ்டேஷன் வந்ததும் இறங்கி, விடுவிடு என நடந்தேன்.

ஒரு பெட்டியில் மிகக் கூட்டமாக எல்லோரும் ஏறிக் கொண்டு இருந்தனர் அதில் ஏறி உள்ளே சென்று டிடிஆர் வருகிறாரா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரிடமும் பேசவில்லை. ரயில் கடைசியில் ஒரு ஸ்டேஷனில் சுத்தமாக நின்று விட்டது

நீண்ட தலைப்பாகை அணிந்தவர்கள் எல்லாம் சலோ, சலோ என்று தள்ளிக்கொண்டு இறங்கினர். நானும் இறங்கினேன். நல்ல மாலை நேரச் சூரியன் முகத்திலடிக்க, ‘பாட்டியலா’ என்ற பெயரைச் சுவற்றில் பார்த்தேன்

கூட்டத்தோடு வெளியில் வந்த நான் ஒரு தள்ளு வண்டி பின்புறம் இருந்த தகர சீட் போட்ட ஓட்டலில் தாலி சாப்பிட்டேன். ரொட்டி கேட்கக் கேட்க கொடுத்தாங்க பிறகு கொஞ்சம் சோறும் சாப்பிட்டுட்டு காசு கொடுத்து விட்டு திரும்ப ரயில் நிலையம் வந்து படுத்துக்கொண்டே பார்த்தேன். என் வயது ஒத்த பிள்ளைகள் வழியில் வருபவர்களிடம் வயிற்றைக் காட்டி கை நீட்டிக் கொண்டிருந்தனர்.

பசியில் ஒரு முறை, பிச்சை எடுக்கப் போறேன் என்று சொன்னதும் அன்று என்னைக் கடுமையாக வாயிலும் முதுகிலும் அடித்த அம்மா ஞாபகம் வந்தது. அடுத்தடுத்து வரிசையாக தம்பி தங்கை ஞாபகம் வந்து தேம்பி அழ ஆரம்பித்து பிறகு அமைதியாகி சுற்றுமுற்றும் பாரத்தேன்.

சன்னமாக வீசிக்கொண்டு இருந்த காற்று ரயில் நிலையத்தில் புகுந்து குப்பைக் கூளங்களை அள்ளி எறிந்து பிளாஷ்டிக் பாட்டில்களை உருட்டிப் போட்டது. அப்பிள்ளைகள் கையேந்துவதை விட்டு விட்டு பாட்டில்களை பொறுக்க போட்டியிட்டனர்

மழை என் கண்ணீரைப் போல் சிறாக ஆரம்பித்து ஒரே லயத்தில் பெய்து தீர்த்தது. இரவானதும் அதே கடையில் பூரி பாஐி சாப்பிட்டேன் கடையில் இருந்த அக்கா, என்ன ஊர்?. என்று விசாரித்தார்கள். பதில் சொல்லாமல் பயந்து வந்து விட்டேன்

அன்று இரவு கொசுக்கடியில் தூக்கம் வரவில்லை எழுந்து ரயில் நிலையத்தில் சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆலமரம் ஒன்று பெரும் விழுதுகள் விட்டு மண்ணில் ஊன்றி நின்று கொண்டிருந்தது. பிச்சையெடுத்த பிள்ளைகள் அம்மரத்தடியில் இருந்தனர்.

விடியற்காலை அலகாபாத் செல்லும் ரயில் புறப்படப் போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனக்கு வீடு, அம்மா, டிடிஆர் அடித்தது எல்லாம் ஞாபகம் வந்து என்ன ஆனாலும் போகக்கூடாது என்று வைராக்கியமும் வந்தது.

விடியும்வரை ரயில்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டு இருந்தேன் பசிக்க ஆரம்பித்ததும் பைப்பில் தண்ணீர் பிடிச்சு குடிச்சேன்

காசு தீர்ந்தது. அதுவரை இருந்த தைரியம் போய் பசியும் கவலையும் வந்து பயமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டு வெளியில் வந்து நான் வழக்கமா சாப்பிட்ட கடைக்கு[ப் போனேன். அங்க மழைத் தண்ணி வந்து தேங்கி நிற்க்குது. அந்த அக்காவும் சேட்டும் தண்ணிய வாளி வாளியா மொண்டு கொண்டு இருந்தாங்க.

நான் அந்த அக்காவிடம், “தீதி எனக்கு வேலை ஏதாவது கொடுங்க”ன்னு கேட்டேன்

அவங்க சேட்டைப் பார்த்தாங்க.

சேட்டு, “நீ என்ன வேலை செய்வே?”ன்னு கேட்டாரு

“நீங்க சொல்ற வேலைய செய்வேன் சேட்டு”ன்னு சொன்னேன்

அப்ப இந்த தண்ணீரைச் சுத்தமாக எடுன்னாரு

தீதிகிட்ட ஒரு பழைய பிளேட்ட கேட்டு வாங்கி ஒரு வாய்க்கால் சின்னதாக நோண்டி தண்ணீர் ஓடற மாதிரி பள்ளத்தில் விட்டேன். தேங்கி நின்னதை மட்டும் வாளியில் மொண்டேன்.

சேட் ஸ்டவ பத்த வைச்சு சாயா போட்டு ஒரு கிளாஸ் சாயாவும் தண்ணியும் கொண்டு எதிர்த்தாப்ல இருந்த மரத்தில் ஊத்திட்டு வந்தாரு

மூன்று கிளாசு சாயா ஊத்தினாரு. எனக்கும் தீதிக்கும் கொடுத்துட்டு அவரும் குடிச்சாரு

தீதி, “உனக்கு எப்படி இந்த மாதிரி தண்ணி போவ வைக்க தெரிஞ்சது?”ன்னு கேட்டுச்சு

“எங்க வீட்டுல மழைநாட்களில் தண்ணீ வீட்டு உள்ள வந்துடும் அப்ப அம்மாவும் நானும் இது மாதிரி செய்வோம்”

பிறகு என்னைப் பத்தி கேட்டதும் அதுவரை நடந்தத எல்லாம் மறைக்காமல் சொன்னேன். வேலை வேணும் என்று கேட்டவுடன் தீதி, “நீ இங்கேயே இரு”ன்னு சொல்லுச்சு

அந்தச் சின்னக்கடையை சுத்தம் பண்ண ஆரம்பித்து டேபிள் துடைத்து பாத்திரம் கழுவி சாயா போட்டு ஆலூ உறிச்சு மசலா பிசைந்து சமோசோ, ஐாங்கிரி, பூரி, சப்பாத்தி சுட்டு எம்மேலேயும் சுட்டுக்கிட்டு எல்லாம் வேலையும் கத்து இரண்டு வருசம் அங்க இருந்தேன். மாசம் 1800 ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுத்தாரு என்னை தீதியும் சேட்டும் நல்லா பார்த்துக்கிட்டாங்க.

ஆனால் எனக்குதான் புடிக்கல டீ குடிச்சுட்டு வரவங்க நூறு ரூபாய் கொடுப்பாங்க. நான் அத மாத்த ஒவ்வொரு கடையா போவனும் சில்லறை கேட்டா கெட்ட வார்த்தையில் திட்டுவாங்க சமயத்தில் அடிப்பாங்க. ஏதாவது வேற வேலை கிடைச்சா மாறனும் நிறைய சம்பாதிக்கனுமின்னு இருந்தேன்.

அப்பத்தான் பாட்டியலா அவுட்டர்ல ஒரு பிளாஸ்டிக் கம்பேனிக்கு ஆள் தேவை நாலாயிரம் ரூபாய் சம்பளம்ன்னும் கம்பேனி சாப்பிட, தங்க இடம் குடுக்குறத, சினிமாவுக்கு போன இடத்தில தெரிஞ்சுக்கிட்டேன். தீதிகிட்டயும் சேட்டுகிட்டயும் ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன்னு சொன்னேன். அவங்க ஒத்துக்கிட்டு போய் வர டிக்கெட்டுக்கு பணமும் கொடுத்தாங்க.

அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து எதிர்ப்புறம் நடந்தேன். விசாரித்து அந்த கம்பேனிக்கு போக பொழுதாயிடுச்சு. கேட் அருகே போனபோது கூர்க்கா உள்ளே என்னை விடவில்லை. அப்படியே சோர்ந்து ஓரமாக உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அந்த கூர்க்கா, “என்ன, நீ இன்னும் போவலையா?”ன்னு கேட்டாரு

“இல்லை, நான் வேலைல சேரணும் எனக்கு இங்கு யாரையும் தெரியாது நீங்க கொஞ்சம் உதவுங்க ஜி,”ன்னு கேட்டேன்.

உனக்கு என்ன வேலை தெரியும்னு கேட்டாரு எனக்கு கம்பேனி வேல எதுவும் தெரியாது ஏதாவது லேபர் வேலை கிடைச்சா செய்யலாம்னு வந்தேன், என்று சொன்னேன் அப்புறம் அவரு என்ன உள்ள இட்டுப் போயி தேஐ் பகதூர்கிங்கற நேப்பாளிட்ட விட்டாரு. அந்த நேப்பாளி இவரு தம்பிதான் இவரு பேரு ராம்பகதூர். அப்புறம் எனக்கு நல்ல தோஸ்த்தாயிட்டாரு.

நான் நினைச்ச மாதிரி வேலை இல்ல. என்னை தேஜ் பகதூர் பிளாஷ்டிக் பழசு எல்லாம் வகை பார்த்து தனித்தனியா பிரிக்கற வேலையில விட்டாரு. எனக்கு சரியாகச் செய்ய வரல. தினம் திட்டுதான். என்னடாது இப்படி வந்து மாட்டிப்புட்டமேன்னு நினைச்சப்ப தீதி ஞாபகம் வந்துடுச்சி. ஒரு மாசம் முடிஞ்சதும் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி தீதியையும் சேட்டையும் பார்க்க போனேன்.

அங்கு ஒரு கடை இருந்ததுக்கு அடையாளம் சிறிதும் இல்ல. சுத்தமாக மண் எல்லாம் நிரவி புது வேலி வச்சி ரயில்வே சிம்பல் போட்ட போர்டு இருக்கு. பக்கத்தில் இருந்த கடைகளும் இல்ல. ரோட்டுக்கு மறுபுறம் இருந்த கடைகள் அப்படியே இருந்துச்சி. நான் அந்தப் பக்கம் போயி எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் விசாரிச்சேன். யாருக்கும் சரியா தெரியல. ஒரு பான்கடைல இருந்த பெரியவர் மட்டும், இங்கே இரண்டு நாள் தங்கியிருந்து கடை வைக்கப் பார்த்தாங்க தம்பி, போலிஸ் ரெய்டு வந்து எல்லாரையும் அடிக்க ஆரம்பித்ததும் போயிட்டாங்க, என்றார்.

தீதியிடம் சொல்லாமல் போனோமே என்று மனம் வேதனைப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே சென்று முன்பு அலைந்த இடத்தில் சுற்றிப் பார்த்தேன் ரயில் பாதையை அகலப்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருந்ததால் ரயில்கள் மிக மெதுவாக வருவதும் போவதுமாக இருந்தது. எப்போதும் தோன்றும், அம்மாவைப் பார்க்க வேண்டும், என்ற எண்ணம் அதிகமாகி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்க்கலாமா என்று முடிவு செய்ய முடியாமல் மிகவும் கவலை வந்து நேராக வழக்கமாக பார்க்கும் சினிமா தியேட்டர் சென்று படம் பார்த்துவிட்டு மாலை பிளாஷ்டிக் கம்பேனி போய் விட்டேன்.

என் பையை யாரோ பிரித்து ஏதோ தேடி இருக்கிறார்கள் ஆனால் இரண்டு வருடமாக நான் வாங்கிய சம்பளம் பணம் என் கால்சட்டையிலேயே வைத்து இருப்பேன். அது பத்திரமாக இருந்தது. அம்மாவை பார்க்க வேண்டும் என்ற நினைப்பை மாற்ற முடியவில்லை. அடுத்த வாரமே ராம்பகதூர் மூலமாக அவன் தம்பியிடம் இரண்டு வாரத்தில் வந்து விடுவதாகக் கூறிவிட்டு அலகாபாத் திரும்பினேன்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீடு செல்வதற்குள் ஒரு பக்கம் ஆர்வமும் அம்மாவைச் சந்திக்க பயமாகவும் இருந்தது. தூரத்தில் இருந்தே பார்த்து வரும்போது வீடு அருகே அம்மா நின்று ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்த இரண்டு வருடத்தில் மெலிந்து இருந்தார். நான் மெதுவாகத் தயங்கிச் சென்றேன். அந்தப் பெண் என் தங்கைதான். எனக்குதான் அவளை அடையாளம் தெரியவில்லை.

அவள் என்னைப் பார்த்ததும் கண்டுபிடித்து, அம்மா சோட்டாபாய்மா, என்று கூவி.என் கையைப் பிடித்து விட்டாள். அம்மாவுக்கு என்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீர். அவரது உணர்ச்சியும் முகபாவமும் எனக்கு புரிந்து விட்டது. எங்களை தவிக்க விட்டு சென்றாயே, என்று கேட்பது போல் இருந்தது.

அம்மா என்னைப் பார்த்து, ரொட்டிக்குதானே வீட்டை விட்டு ஓடினாய்?” என்று கேட்டார்.

அது உண்மைதான். ஆனால் பசிக்கு ஓடிய எனக்கு ஓட்டலில் வேலை செய்தபோது பசியே எடுத்ததில்லை. அதனால் எனக்கு பேச ஒன்றுமில்லை. பிறகு நடந்தது எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது. சாப்பாட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் ஒரு மாதத்திற்கு வாங்கி வைத்து விட்டு அம்மா பேரில் ஒரு அக்கவுண்ட் பேங்கில் ஓப்பன் பண்ணி கையில் இருந்த பணத்தை போட்டுக் கொடுத்தேன்.

அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்த தங்கைகளை தையல் பழக சேர்த்து விட்டேன். அவர்களுக்கு அது அதிர்ச்சி. ஆனால் நன்றாக கற்றுக் கொண்டால் வீட்டிலேயே தைக்கலாம், வேலைக்குப் போக வேண்டாம், என்றதும் அவர்களுக்கு மகிழ்ச்சி வந்து விட்டது, தம்பி பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தான்

நீங்கள் நம்பமாட்டீர்கள், என் பதினாறு வயதில் நான் ஐம்பதாயிரம் சேர்த்து இருந்தேன். அம்மாவுக்கு நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சி. ஒரு போன் வாங்கிக் குடுத்து விட்டு வேலைக்கு விடைபெற்று திரும்பினேன்.

ஓட்டலுக்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்தும் அக்கம் பக்கம் நடப்பவற்றை கவனித்தும் ஒரு நாய் போல் இருந்தேன். காவலில் நன்றியோடும் அடிக்க வருபவரிடம் வாலை மடக்கி பம்மியும் தேவைப்படும்போது கோவத்தில் குறைக்கவும் பழகி இருந்தேன்.

வீட்டுக்குச் சென்று வந்த பிறகு எனக்கு வாழ்க்கை மேல் சிறிது நம்பிக்கை வந்திருந்தது.

பிளாஸ்டிக் கம்பேனிக்கு திரும்பியதும் தேஐ் பகதூர் முன்பணம் வாங்கிக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டால் தன்னிடம் வேலை பார்க்கலாம், இல்லை என்றால் வேறு சேட்டு பார்த்துக்கொள், என்றார். எனக்கு முன் பணம் வேண்டாம், மாதம் மாதம் கொடுத்தால் போதும், என்றதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

நான் உள்ளுரிலிருந்து வேலைக்கு வருபவர்களுடன் சேர்ந்து கொண்டு தினக்கூலிக்கு வேலை செய்தேன்.

தேஜ்பகதூர் என் மேல் வஞ்சம் கொண்டு பார்க்கும்போது எல்லாம் தலையில் தட்டுவதும் திட்டுவதுமாக இருந்தான். நான் அவனைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட பதுங்கி வேலை செய்தேன். ஒரு நாள் என்னை, நீ ஒரு அலி, என்று சொல்லி அவன் திட்டிப் பேசும்போது என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பார்த்து வீட்டனர். பைய்யா என்று ஆரம்பித்து, கண்ணீரோடு அவன் தினம் வம்பு செய்வதைச் சொன்னதும் அவர்கள் அவனை அடிக்கப் போய் பெரிய பிரச்சினையாகிவிட்டது.

அதற்குப் பிறகு அவன் என் பக்கம் வருவது இல்லை. பிறகுதான் அவனது உண்மை சொருபம் தெரிந்தது. முன்பணம் கொடுத்து ஆட்களை கொத்தடிமை போல் வைத்திருக்கிறான் என்றும் நேபாளி பெண்களை வேலைக்கு கொண்டு வந்து பாலியல் தொழில் செய்வதாகவும் தெரிந்து கொண்டேன்.

அவன் இருக்கும் திசைக்கே போகாமல் அந்த கம்பேனியிலேயே பிளாஷ்டிக் தரம் பிரிக்க ஆரம்பித்து மோல்டு செய்வது, பேக்கிங், பைப் பிட்டிங் செய்து பிரசர் சோதனை செய்வது என்று சிறிது சிறிதாக ஒவ்வொரு வேலையும் கற்று பிளம்பிங் பார்ட்ஸ் செய்யும் மெஷின் ஆப்பரேட்டிங் கத்துக்கொண்டேன். சரியாக ஓரு வருடத்திற்குப் பிறகு எனது பதினெட்டு வயதில் ஆப்ரேட்டர் ஆனேன். சம்பளம் இரண்டு மடங்கு ஆகியது. நாய் மாதிரி எப்போதும் வேலை செய்வதால் என்னை நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை

ஓட்டலில் வேலை செய்யும்போது காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை செய்து பழக்கம். அதனால் எநத வேலை கொடுத்தாலும் நேரம் பார்க்காமல் செய்தேன். அதற்கு மேற்கொண்டு ஒரு தொகை பணம் கிடைக்கும்.

அங்கேயே இருந்து நன்றாக சம்பாதித்து இரண்டு தங்கைகள் திருமணமும் என் திருமணமும் நடத்தினேன். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. சரியாக இரண்டு வருடம் ஆகிறது, நான் ஊருக்குச் சென்றபோது நண்பன், “என்னையும் வேலைக்குச் சேர்த்து விடு,” என்று கேட்டு வந்தான் அதில் உள்ள கஷ்டங்களைச் சொன்னேன். அவன் புரிந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து கூடவே நின்றதால் அழைத்து வந்து சேர்த்து விட்டேன்.

ஒரு வாரம் ஒழுங்காக வேலை பார்த்தான். வாரச் சம்பளம் வாங்கியவுடன் வேலைக்கு வரவில்லை. நன்றாக குடித்துவிட்டு உடம்பு வலி நாளைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு காசு கையிலிருக்கும் வரை வேலை செய்ய வில்லை. அது மட்டும் இல்லாமல் தேஜ்பகதூரின் ஆட்களோடு அவன் பழகுவதைப் பார்த்துவிட்டு கோபம் வந்து அங்கெல்லாம் போகக்கூடாது என்று கண்டித்து என் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு வேலை செய்ய ஆரம்பித்து அந்த வார சம்பளம் வாங்கியவுடன் நண்பனை கையோடு அழைத்துச் சென்று டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நீ பத்திரமாக ஊர் போய்ச் சேர், எனக்கு நிறைய கடன் இருக்கு இந்த மாதிரி குடிப்பது என்றால் ஊரிலேயே வேலை பார்த்து உன் மனம் போல் செய், என்று சொல்லி வந்து விட்டேன்.

ஆனால் அவன் போகவில்லை. இரவே திரும்ப வந்து தேஜ்பகதூரிடம் இருந்த ரூபா என்ற பெண்ணை இரவோடு இரவாக கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.அவர்கள் குழுவாகச் சேர்ந்து என்னை மிரட்டி அவனது அட்ரஸ் மற்றும் போன் நம்பரை கேட்டனர்.

நேற்றே அவனை ஊருக்கு அனுப்பிவிட்டுதான் இரவு திரும்பினேன், அவன் திரும்பிவர வாய்ப்பு இல்லை நீங்கள் சொல்வதை நம்ப முடியாது, என்று சொன்னவுடன் தேஜ்பகதூரும் அவனது ஆட்களும் என்னை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்

காலை நேரம் ஆதலால் வேலைக்கு வந்த ஆட்கள் தடுத்து விலக்கி விட்டனர். அதற்குள் என் முகமெல்லாம் குத்தும் அடியும் வாங்கியதில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. கூட்டம் கூடியதில் தேஐுக்கு வேண்டிய ஆட்களே அதிகம். எல்லோரும் கூடி தேஜூவின் பெண்ணைக் கொண்டு வந்து விட்டு நஷ்ட ஈடும் கொடுத்தால் அங்கு வேலை செய்யலாம், இல்லை என்றால் நடப்பவற்றுக்கு நாங்கள் பொருப்பில்லை, என்றனர்.

பெண் விஷயமென்பதால் யாரும் உதவ முன்வரவில்லை. தேஜ் என்னிடம் உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் வந்து விடவேண்டும் இல்லை என்றால் நான் உன்னை விடமாட்டேன், என்றான்.

அதற்குள் நிர்வாகத்துக்கு தெரிந்து வந்து விட்டார்கள். ஒரு மணி நேரத்தில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றனர். பெண்ணைக கொண்டு ஒப்புவித்தால் உனக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்கும், இல்லை என்றால் அந்தப் பணம் முழுவதும் அந்த பெண் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுவோம், என்றனர்.

தேஜ்பகதூருக்கு மேல்மட்டம் அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அவன் மூலமாக நேபாளி் குடும்பங்கள் கொத்தடிமையாக வேலை செய்து வந்ததால் என் பேச்சைக் கேட்க யாரும் இல்லை. என்னிடம் பிரியம் காட்டிய இரண்டொருவர், தாமதிக்காமல் போய்ப் பார்த்து அழைத்து வா, என்றனர்.

அதுநாள் வரை வேலையைத் தவிர வேறு எதிலும் ஈடுபடாமல் சேணம் கட்டிய குதிரை போல் இருந்த எனக்கு நண்பனின் செயல் மிக அதிர்ச்சியளித்து மனம் நம்ப மறுத்தது.

அவன் அப்படி செய்திருக்கக்கூடாது. நாம் அவனை அழைத்து வந்து நம்ப வைப்போம் என்று கிளம்பினேன். ரயிலில் வரும்போது வெகு நாட்களுக்குப் பிறகு பசி தெரிந்தது. கதவு ஓரம் நின்று வெளிப்புறம் பார்த்துக் கொண்டு வந்தேன். எதிர்காற்று முகத்தில் அடித்தபோது முகமெல்லாம் அடி வாங்கியதில் வலி தெரிந்தது. நான் யாரையும் அடித்தது இல்லை. காலமெல்லாம் அடி வாங்கவே பிறந்து இருக்கிறோமோ என்று வருத்தத்தில் அப்படியே எதிர்ப்புறம் சென்ற ரயிலில் ஒரு நொடி பாய்ந்து விடலாமா, என்று தோன்றியது.

திரும்பி உள்ளே சென்று கண்ணை மூடி அமர்ந்து விட்டேன். அந்தப் பெட்டி முழுவதும் பீகாரிகள் ஏறியிருந்தனர் எல்லோரும் கட்டிடத் தொழிலாளர்கள். குஜராத்தில் வேலை செய்வதற்கு வந்து கொண்டிருந்தனர். நீரைத் தேடும் வேர் போல அவர்கள் செல்லும் இடம் பற்றியும் வேலை பற்றியும் தெரிந்து கொண்டேன். மனம் நிலையில்லாமல் தவித்தது நண்பனைப் பார்த்தால் நன்றாக திட்டி, அடித்தாலும் ஆத்திரம் தீராத ஆவேசம் உள்ளே கனன்று கொண்டு இருந்தது.

மறுநாள் மாலை அலகாபாத் இறங்கி நேராக நண்பன் வீட்டிற்கு சென்றேன். வாசலில் அவன் அம்மா அப்பா அமர்ந்திருந்தனர் என்னை, வா பேட்டா, என்று அழைத்து அமர வைத்தனர்.

பேட்டி, பேட்டி…, என்று நண்பனின் அம்மா அழைத்ததும் உள்ளே இருந்து நல்ல மங்களகரமான முகத்துடன் வெளியில் வந்த பெண் முகம் என்னை கண்டதும் வாடி விட்டது. நான் புரிந்து கொண்டேன்

“சஞ்சய், இங்கே பாரு எவ்வளவு அழகாக இருக்கிறாள். இது போல் மருமகள் எனக்கு கிடைக்க நான் எவ்வளவு தவம் பண்ணியிருக்க வேண்டும்! எல்லா வேலையும் செய்கிறாள். என் மகன் அதிர்ஷ்டக்\காரன்,” என்றார் அம்மா.

“பேட்டி, அண்ணனிடம் ஆசி வாங்கிக் கொள்,” என்று சொன்னதும், “சதா சுகி ரோ” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

நெருப்புப் பூச்சி

பானுமதி. ந

மினுக்கட்டாம் பூச்சிகள் இப்பொழுது பறந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தெருவில் இப்படியொரு காலியிடமும், மரங்களும், கொடிகளும், முட்புதர்களும் யாரும் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால் இவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது அப்படித்தான் இருக்கிறது. மருதாணி மரமும், கொன்றையும், கொடுக்காபுளியும், போகன் வில்லா மரங்களும்  பசலைக் கொடியும், சங்குக் கொடியும் இன்னமும் புதர்களிடையே இருக்கின்றன.

இவனும், செந்திலும், தேவியும் விளையாடிய இடங்கள். அப்பொழுது சிறிதாக முள்மரங்கள் இருந்தன. இன்று  பெரிதாக நிற்பதைப் போல் தோன்றுகிறது. தான் கொடுத்த கசப்பு , தன்னைத்தானே வெறுக்கச் செய்கிறது.

மாலை மயங்கும் சமயம் வரை அவனும், தேவியும், செந்திலும் அங்கே சுற்றிச் சுற்றி விளையாடுவார்கள். வீட்டை ஏமாற்றிவிட்டு இந்தப் புதர்களில் மினுக்கும் மின்மினிகளைத் துரத்துவார்கள். முள் கிழித்தாலும் கவலையில்லை. மயக்கும் மின்மினிகள். அந்திக் கருக்கலில் அந்த வெளிச்சம், மின்னி மின்னி மறையும். அவைகள் ஒரு திசை நோக்கி பறக்கையில் என்ன ஒரு அழகு.! ஆனால் கையில் சிக்காமல் ஓடி விடும் பூச்சிகள். இப்பொழுது செந்திலும், தேவியும் எதிரே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மூவரும் கைகள் பற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்றினால், கசப்பு  உதிராதா? “காலம் கனிந்தது என்று ஆடுவோமே, கசப்பு போனதென்று ஆடுவோமே” அவனையும் அறியாமல் கண்களில் ஈரம் படர்ந்தது.

“சூடு வைக்கிறேன் பாரு,ஆம்பளைப் பிள்ளையோடு உனக்கென்னடி விளையாட்டு” என்பதையெல்லாம் அவள் கண்டு கொள்ள மாட்டாள். அடி வாங்கிக் கொண்டே ஓடி வருவாள். அம்மாவை ஏமாற்றிவிட்டு வருவது இவனுக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால் செந்தில்தான் பாவம். தம்பிகள், தங்கை அப்பா அனைவரும் கவனியாமல் வரவேண்டும். எப்பொழுதுமே லேட்டாக வருவதை இவனும், தேவியும் “செங்கோட்டை பாசஞ்செர்” என்று கிண்டல் செய்வார்கள். அவன் சிறிது ரோஷப்படுவான்.அப்புறம் விளையாட்டில் எல்லாம் மறந்து விடும்.

இத்தனைக்கும் நடுவில் தேவி இருவருக்கும் ஸ்பெஷல். அவள் என்ன நினைத்தாள் என்று இவனுக்கு இன்று வரை புதிர்தான். அவள் சமமாக நினைத்திருக்க வேண்டும். சில நாட்களில் அவள் வராவிட்டால் கூட நன்றாக இருக்கும் எனத் தோன்றியதுண்டு. இந்த விசித்திர மன நிலை இன்றும் புரியவில்லை. எதிர்பார்க்கும் நிலை,  அடைவதை விட உயர்ந்ததோ, என்னவோ? ஆனால் ஏக்கமும் தலை தூக்கும். பட்டாம்பூச்சியைப் போல், பாவாடை சுழல அவள் ஓடி வருவதைப் பார்க்கையில் இவளையா வர வேண்டாம் என நினைத்தோம் என்று குற்ற உணர்வு தோன்றும்.

அன்று நல்ல கோடை நாள். திடீரென்று மேகம் திரண்டு ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. அம்மா எண்ணை சட்டி வைத்து பஜ்ஜி போடத் தொடங்கினாள். அவள் அறியாது கை நிறைய பஜ்ஜியை அள்ளிக் கொண்டு இவன் ஓடினான்.  கையோ சுடுகிறது, அவசரத்தில் ஒரு காகிதம் கூட எடுக்கவில்லை. இருக்கட்டும், இருக்கட்டும், இன்னும் சற்று தொலைவுதானே, அவளை இன்று அசத்தவேண்டும், எப்படியும் செந்தில் தாமதமாகத்தான் வருவான்.  இந்த நினைப்பில் சென்றவனுக்கு ,அவர்கள் இருவருமாக ஆலங்கட்டி பொறுக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

“இந்தாரு, என்ன கொணந்திருக்கேன் பாரு”

தேவியை முந்திக் கொண்டு செந்தில் கூவினான் “பஜ்ஜியாடா, கொட்றா, கொட்றா”.

“அஸ்கு,புஸ்கு, இது எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்.போடா, உன் அம்மாவை சுடச் சொல்லி தின்னு”

செந்தில் அடிபட்டவன் போல் பார்த்தான்.திரும்பிப் பார்க்காது ஓடினான்.

“ச் சீ.. உன் பஜ்ஜி ஆருக்கு வேணும்? நீயே தின்னு. அவனை விரட்டிப்புட்டேல. இனி என்னோட பேசாதே, ஆமா ஆணை” சொல்லிக் கொண்டே அவள் ஓடிப்போனாள்.

இவன் விக்கித்துப் போனான். கையிலிருந்து பஜ்ஜிகள் மண்ணில் விழுந்தன.முதுகில் சொடெர் சொடெரென்று மழை அடித்தது. மின்னுக்கட்டாம் பூச்சிகள் இல்லை. தந்திக் கம்பத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினான்.

 

மஞ்சுக் குட்டி

கலைச்செல்வி

sometimes__when_i_m_alone_in_my_mind_by_narcissagrey-d736dtd

இரு பக்கமும் காதுகள் வைத்த சில்வர் அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும் அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழித்து விடும் போது பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்து விடுகிறது. தட்டில் இருந்த பிரியாணியை சதுரமாக வெட்டப்பட்ட செய்தித்தாளின் மீது வைக்கப்பட்ட சருகு இலையில் கொட்டி கவிழ்த்த போது ஜிவ்வென்று எழுந்த வாசம் நாசிகளை சுண்டி இழுத்தது. எந்த கவனமும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனாலும் பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை பருக்கையின் வடிவத்தை உள் வாங்கி கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டையும் அனிச்சையாக எடுத்து போட்டு பிரியாணி கவரை அவனிடம் நீட்ட, அவனும் நுாறு ரூபாய் தாளை நீட்டிக் கொண்டே கவரை வாங்கினான். தெருவோர கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் உடல்நிலையில் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.

”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்றுவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான்.

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.. எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டது கூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துக் கொண்டு கதறுவாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண்பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இவன் தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை..கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேயடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனை கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழி பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான ஒரு பரவச நிலையில்தான் இருந்தான் இவனும். இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள்தான். மஞ்சுளா இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருந்தாள். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். முன்னழகுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கி பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய கட்டாயம்.

மலையடிவார கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை அவனுக்கு. சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன். பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான். மலம் இறுகலாகப் போகிறது. என்பதால் காந்திமதி மதிய உணவோடு கொடுத்தனுப்பியிருந்தாள். வாழைப்பழத்தை தின்று விட்டு சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தை கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்கு களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாக படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில் அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்துக் கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக் கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும் வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால் அவனை தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும் போது அவன் கையின் சூடு தெரிந்தது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள்.

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல் கூட அவளுக்கென்றால் ஆரவாரமாகதான் வரும். மஞ்சள்காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழ தொடங்கி விட்டான். தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்க போக வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்து போட்டு விட்டான். மஞ்சுவோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கி கொண்டாள். அந்த கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனின் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான். அல்லது மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக் கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சிலசமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால் உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. காந்திமதி பார்த்தால் உயிரையே விட்டு விடுவாள் என்று அப்போதெல்லாம் தோன்றும் அவனுக்கு. காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்து விட அண்ணன் மகனுக்கு மகளை கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும் முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள் இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகதான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படிக் கொண்ட பழைய காலத்து காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதை தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடி கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால் உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்த படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகதான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்ப கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான். ஆனால் வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடி பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்ததுமே புரிந்து போனது எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறிக் கொண்டு ஓடினான் இவன். துரத்திக் கொண்டே ஓடி போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த ஒரு தருணத்தில் கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாக கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டு கதறிக் கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அதற்கு பிறகு காந்திமதியும் அவனை தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டை தொட்டிருந்தது. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யை கூட நிஜம் போலவே சொல்வாள்.

ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்பு கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விட போக கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். ஆனால் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவன் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டு தடுமாறி வீட்டுக்கு செல்லும் போது குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்துவிட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கிக் கொண்டாள். பானை மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்துக் கொண்டாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். இடது கை அவன் தோளை அணைத்துக் கொண்டது. வலது கையால் காலருக்குள் கை விட்டு கழுத்தைத் தொட்டாள்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படரவிட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..” என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறைய பேசுவாள். நீதிபோதனை வகுப்பெல்லாம் கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள். ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியை பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்டுக் கொண்டு கிடந்தபோதும் இப்படிதான் வலிய பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுக்காடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாக பார்த்து கூப்பிடும் வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோ கூட அசைத்துப் பார்த்ததில்லை. சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒருமுறை தெருவோர கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனை போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு. அன்று அவனுக்கு சோதனையான காலக்கட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது மலங்களுக்கு மத்தியில் கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல்வரை காட்டிக் கொண்டு ஒரு மாதிரியான உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை அவனுக்கு. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தை விட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதில் ஓட்டல் முதலாளி மூன்று நேர சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்து விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவள் பாயை விரித்து அவனை படுக்க வைத்துவிட்டு அவன் தலையணையிலேயே தலையை வைத்து அவனை கட்டிக் கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும் உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடி புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு.. நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

picture courtesy: Deviant Art

தாஸ்தாவெஸ்கி எதிரில் வந்தார்

எஸ். சுரேஷ்

கறிகாய் வாங்கச் சந்தைக்குப் போனபோது அங்கு தாஸ்தாவெஸ்கியை பார்ததேன். நீளமான தாடி. தூங்கி வழியும் கண்கள்.

“நேத்தி ராத்திரியும் சூதாட்டமா?'” என்று கேட்டேன்.

“அதிகம் இல்லை. கொஞ்ச நேரம்தான்”

“கைல பணம் இல்லைன்னு பலபேர் கிட்ட கடன் வாங்கியாவது விளையாடணுமா?”

“விடுங்க ஸார். இதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது”

“உங்க மனைவி பாவம் உங்களுக்காக தினமும் பிரார்த்தனை பண்றாங்க. நீங்க என்ன செஞ்சாலும் குத்தம் சொல்றதில்ல. இது போல் ஒரு மனைவி கிடைப்பது கஷ்டம். அவங்களுக்காகவாவது நீங்க திருந்தலாம். வாழ்க்கையை பற்றி எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ணக்கூடாது”

“மனித வாழ்க்கையைப் பேசத் தெரிஞ்ச அளவு என் வாழ்க்கையைப் புரிஞ்சுக்க முடியல. இதுதான் எழுத்தாளனுக்கு கடவுள் கொடுத்த சாபம். ஒண்ணும் செய்ய முடியாது”

இருவரும் மெளனமாக நடந்தோம்.

சதிக் ரீ

தி வேல்முருகன்

அந்த மிகப்பெரிய பள்ளத்தில் எச்சரிக்கையை உணர்த்தக் கட்டியிருந்த கொடி தோரணம் போல் காற்றில்  ஆடி படபடத்தது.எனக்கு சமிபத்தில் வாசித்த வடகொரியா பற்றிய செய்தியும் என் நன்பன் ரீயும் ஞாபகம் வந்தனர்.

அன்று கொரியன் ரீ முகத்தில் அன்று சிறிதும் களை இல்லை. குவைத்தின் மே மாத 50 டிகிரி வெயில் அவனது சிவந்த முகத்தை குங்குமச் சிவப்பாக்கி அதன் மேல் புழுதியைப் பூசியிருந்தது.

உலர்ந்து போயிருந்த வாயைத் திறந்து, சதிக் குவைத்தி ஆப்ரேட்டர்  எல்லோருடைய கேட் பாசையும் வாங்கிக கொண்டு, வேலையை நிறுத்திச் சென்று விட்டான், என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னை போன் செய்து  கூப்பிடுகிறார்கள், நீ கொஞ்சம் வர முடியுமா, நாம் போய்  பார்த்து விட்டு வரலாம், இன்று வேலை நடக்கவில்லை என்றால் மதியம் திட்டமிட்டபடி  காங்கீரிட் போடமுடியாது, என்று அவன் சொன்னதும் எனக்கு காச்மூச் என்று தேவையில்லாமல் கத்தும் கிளையன்ட் குவைத்தியின் ஞாபகம்தான் வந்தது

“ஏன் இப்பதானே அங்கிருந்து வந்தோம், என்ன  பிரச்சினையாம் கொஞ்சம் கேளு, நான்
மேனேஐரிடம் சொல்லிட்டு வரேன்,” என்றபோது எனக்கும் சூப்பர்வைசரிடமிருந்து போன் வந்தது.

“கொரியன்கள் இருவர் வேலை  செய்யும்போது சண்டை போட்டுக் கொண்டதால் கேட்பாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பர்மிட்டில்  கையெழுத்து போட்டிருக்கும் உங்களை உடனே வரச் சொல்றான், சீக்கிரம் வாங்க,” என்றதும் எனக்கும் கவலை வந்து விட்டது

கொரியனை ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தேன்.

காலை மணி 6:10க்கு  ஸ்டார்ட் செய்த வண்டி. சாஐியை கொண்டு வந்து யார்டில் விட்டு, வேறு வண்டியில் சென்று வேலை செய்ய பர்மிட் எடுக்க GC 10 க்குச் போக சொல்லி விட்டு நான் சென்று GC 5 க்கு வேலைக்கு பர்மிட் எடுத்து சூப்பர்வைசரிடம் கொடுத்து வேலையை சொல்லி விட்டு திரும்ப சைட்டாபிஸ் யார்டு அப்போதுதான் வந்திருந்தேன்.

திரும்ப அவ்வளவு தூரம் போக வேண்டும். என்னதான் வண்டியில் சென்றாலும் வெட்டியாக அலைவதற்கு மனம் சோர்ந்தது அதுவும் மதியம் மீட்டிங் வேறு இருக்கிறது.
கிளையண்ட் ஒரு வெறிநாய் மாதிரி. அவன் முகத்தைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாது

வகை தொகையில்லாமல் பொறியில் மாட்டியது போல் இருந்தது இந்த கம்பேனிக்கு வந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை. வெறும் வாய்ஐாலத்தை நம்பி இன்டர்வியூ சென்ற அன்று    பாவப்பட்ட உன்னி சொன்னான், “அண்ணாச்சி, என்கிட்ட எந்த டிகிரியும் டிப்ளாமாவும் இல்ல. எல்லா வேலையும் மனசு கொண்டு படிச்சதாக்கும் நீங்க ஒத்துக்கிட்டு வாங்க நான் கூட இருக்கேன். பிடிக்கலனா வேற வேல தேடலாம் தெய்வம் ஒன்னு இருக்குல்ல,” என்று.

தெய்வம் இருக்குதான் ஆனால் அது இல்லாதவர்களைத்தான் அதிகம் சோதிக்கிறது.. மேனேஐர் என்ன நினைத்து இந்த கம்பெனிக்கு வந்தாரோ, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் தந்திரமாக வேலை வாங்கி விடுவார். அவர், “ என்ன செய்யறிங்க?, சும்மா கில்லி மாதிரி இருக்கனும் அந்த வேலை என்ன ஆச்சு? நான் சொன்ன வேலைய பாத்திங்களா? இப்ப இந்த வேலையும் அதோடு சேர்ந்து முடிங்க, ம்ம்… போங்க போங்க…” என்று சொல்லிக்கொண்டே போவதைக் கேட்கும் நபர் மகுடியை பார்த்தாடும் பாம்பு போல் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் மறந்து உடன் கிளம்பி விடுவார்..

ஆனால் அவரது செயல்பாடுகள் மேலும் மேலும் அவருக்கு துன்பத்தையே அளித்தன. எங்களிடம் சொன்னது எதையும் அவரால் செய்ய  இயலவில்லை. கம்பெனிக்கு புதிய ஆட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஆகி மொத்த சிவில் கட்டுமான வேலைகளையும் வெளி கம்பெனி ஆட்களை கொண்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது

அப்படி வந்தவர்கள்தான் வடகொரியர்களும் பலுசிஸ்தான்காரர்களும். சாஐிக்கு இந்தி சரளமாக வரும். அவன் நல்ல உயரமும் கூட அதனால் அவனிடம் பலுசிஸ்தானிகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். .பிளான்ட் ஏரியாவில் கையால்தான் மண்ணை வெட்டி அள்ள வேண்டும். சவுல் கொண்டு பலுசிஸ்தானிகள் அள்ளி எரியும் வேகம் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கும். எனக்கு அரபி மற்றும் இந்தி ஒரளவு தெரியும் அதை வைத்துக் கொண்டு மேனேஜர் சொல்லும் வேலைக்கேற்ப்ப கில்லியாட்டம் ஆடிக் கொண்டிருந்தேன்..

சிந்தனை பலவிதமாக ஒடி கொண்டிருப்பதைக் கலைத்து, ரீயின் முகத்தைப் பார்த்தேன். அவரது 50 வயதுக்குரிய தோற்றம் கவலையில் பொலிவிழந்து வாடியிருந்தது. ஐந்தரை அடி உயரமும் விசாலமான  அறிவின் வெளிப்பாடான நெற்றியும் முடி அடர்ந்த புருவமும் அதன் இறக்கத்தில் நாலு கோடுகளும் மேலும் தட்டையான அந்த முகத்தில் ஒரு கோடு போட்டாற்போன்ற வாயும் அதற்க்கேற்ப மூக்கும் அமைந்து வயது தெரியா உழைப்பினால் இளமையாகத் தெரிந்தார்.

வாரத்தில் முதல் நாள் சனிக்கிழமை மாத்திரம் பளிச்சென்று வருவார்கள் பிறகு அப்படியே வேர்வையோடு குளிக்காமல்  வருவார்கள் சாஐியும் டிரைவரும் இவர்களை அருகே அமர விடமாட்டார்கள் நான் அப்படி எதுவும் செய்வது இல்லை அவர்களுக்கு என்ன
தண்ணீர் கஷ்டமோ என்று விட்டுவிடுவேன். அதுவும் ரீ அருகே அமரும்போது ஊற வைத்த ரேஷன் அரிசி வாடைதான் வரும்.  பழகிவிட்டது. வண்டி முழுவதும் அந்த ஊறல் வாடைதான்

வண்டி மெயின் ரோடிலிருந்து இறங்கி GC 5வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது
ரீயிடமிருந்து, “சதிக்”, என்று சத்தம்

“என்ன?” என்றேன்.

வலதுபுறம் ரோட்டோரம் இருந்த எண்ணெய்க் கிணற்றை நோக்கி கை காட்டினார்.

அத்திசையை நோக்கினேன் கருநீல கலரில், முழுவதும் கவராலால் மறைக்கப்பட்ட, தாடி
வைத்த உருவம். தலையில் சிவப்பு கலரில்  ஹெல்மெட் அணிந்திருந்தவர், இரண்டு கைகளையும் ஆட்டி எங்களைக் கூப்பிட்டார்.

சாலையை திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை  எண்ணெய் கிணற்றை நோக்கித் திருப்பி சற்று  பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்திவிட்டு  ஹெல்மெட்டும் கையுறையும் அணிந்து கொண்டு அவரிடம் சென்றோம்.

எங்களை நோக்கி சைகையால்  எண்ணெய் கிணற்றில் இருந்து வந்த ஆயில் லைனின் கன்ட்ரோல் வால்வு வீலைச் சுற்றி மூடச் சொன்னார். கிராஸ் மறை ஏறியிருந்ததால் அதைச் செய்வது எளிதாக இல்லை. ரீ சீராக முன்னும் பின்னுமாக ஆட்டிச் சுற்றியபோது எளிதாக வந்து விட்டது.

ரீ என்னிடம் ஆயில் கிணற்றைக் காட்டி, “அது என்ன? அந்த லைன் எங்கு செல்கிறது?” என்று கேட்டபோது நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ரீயின் அந்தச் சின்னக் கண்களைப் பார்த்ததும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ரீ, இது ஆயில் கிணறு நாம் செல்கிறோம் அல்லவா, அந்த இடம் குவைத்தின் மிகச்
செறிவான எண்ணெய் வளப்பகுதி ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இது போல் கிணறுகள் இருக்கு பாரு. நீ இப்போது திருகினாயே அது கிணற்றிலிருந்து வரும் எண்ணெய் லைன்தான்.  இது நேராக GC க்கு போகும். அங்கு குருடாயில், கேஸ் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து டேங்க் பார்ம் அனுப்பி விடுவார்கள்.. அங்கிருந்து ஏற்றுமதியாகும்”

‘ம்ம்… நிறைய பணம்,” என்றார் ரீ. பிறகு, “சதிக் நீ எப்படியாவது பேசி கேட் பாஸை வாங்கி விடு,” என்றார்.

நான் மவுனமாக தலையாட்டினேன்.

நேற்றே அந்த பவுன்டேஷன் காங்கீரிட் முடிய வேண்டியது. மொத்தம் மூன்று பவுன்டேஷன்கள் ஒன்று ஒன்றாக மாற்றிபம்ப் வழியாக காங்கீரிட் போட்டுக் கொண்டு இருந்தோம் ரீயின் ஆட்கள்தான் வேலை செய்தனர். ரீ மேற்பார்வையிட்டு வேலை சொல்லி கொண்டு இருந்தார். நான் கிளையண்டுடன் பேசிக் கொண்டு இருந்தேன்

காங்கீரிட் முடிந்து கடைசியில் இருந்த சின்ன ஐாக்கி பம்ப் பவுன்டேஷனில் காங்கீரிட் இட மேல் இருந்த யானையின் துதிக்கைப்போல் தொங்கிய பூம்பிளேசர் பைப்பை இருவர் தள்ளி கொண்டு  வந்திருக்கின்றனர். அப்படி தள்ளும்போது முட்டுச்சட்டங்களில் காங்கீரிட் தொப் தொப் என்று விழுந்ததில் சின்னதாக ஒரு அசைவு. வேறோன்றுமில்லை, காங்கீரிட் முழுவதும் போட்டுவிட்டு வைப்ரெட்டர் போட்டு தளர்த்தி காங்கீரிட்டை இருவரும் நிரவி ஒருவர் மாற்றி ஒருவராக கீழே இறங்கியதும் ஒரு பெருமூச்சு விடுவது போல் ஒரு சத்தம் அவ்வளவுதான் பனியனை மேல்  நோக்கி கழட்டுவது போல் பலகைகள் பெட்டி போல் மேலே தூக்கிக்கொண்டன.

காங்கீரிட் நாலாபுறமும் இளகி தரையில் கொட்டிய எண்ணெய் போல் ஒடுகிறது
நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோதே நடந்து விட்டது அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த கிளையன்ட் அவரது நிஐ ஒநாய் முகத்தை காட்டிச் சென்றார்.. நாங்கள் மவுனமாக ஆடுகள் போல் நின்றோம்.

இந்த பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ரீ வந்த நாள் அப்போது  ஞாபகம் வந்தது ரீதான் முதலில் பஸ்ஸிலிருந்து இறங்கினார் அவர்கள் மேனேஜர் வந்து அறிமுகப்படு்த்தும்போது, இவர்களை வைத்து எப்படி வேலை செய்யப் போகிறோம், என்று  கவலையாக இருந்தது. ஆனால் ரீ அதற்கு  வாய்ப்பே தரவில்லை. அவரது குழுவினர் அனைவருமே தேர்ந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்தால் அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் கிளையண்டிடம் அவர்களால் பிரச்சினை இருந்தது இல்லை. கொரியர்களைப் பற்றி. எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தேன்.

முதல் முறையாக பங்கம் வந்து விட்டது.  வருத்தத்தில் இருந்த என்னைத் தட்டி, என்ன,
என்று கேட்பது போல் சைகை செய்தார். ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு,
வெளியேறிய காங்கீரிட் எவ்வளவு இருக்கும் என டிராயிங் பார்த்து கால்குலேட்டரில் போட்டுக் கொண்டி.ருந்தேன். என் எதிரே வந்த ரீ உற்றுப் பார்த்துவிட்டு காற்றிலே விரலால் கம்போசர் போல் எழுதி விட்டு கையில குறிப்பது தெரிந்தது.  எனக்கு கால்கேட்டரில் விடை 3.16 என்று இருந்தது. ரீ தன் கையைக் காட்டினார் அதில் 3.16 என்று இருந்தது.

“ரீ, எப்படி எப்படி எனக்கும் சொல்லிக்கொடு”, என்றதும், ரீ அவர்கள் மொழியில் ஏதோ சொன்னார்  அவர் குழுவினர் அனைவரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது

எல்லோரும் சாப்பிடக் கலைந்தனர். பெரும்பாலும் அரிசி சாதம்தான். தண்ணீரோடு சேர்த்து தர்மோக்கூலரில் வைத்திருந்தனர். வெஞ்சனம் போல் தொட்டுக் கொள்ள அவித்த முட்டை, பச்சை வெங்காயம் மற்றும் தக்காளி அவ்வளவுதான் .எல்லோரும் ஒன்றாகதான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நான் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்த ரீ, அதிலிருந்து ஒரு முட்டையை உரித்துக் கழுவி  கொண்டு வந்து என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.  நான், “வேண்டாம் நீ அந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு அப்பத்தான் சாப்பிடுவேன்,” என்றதும் ரீ, வருத்தத்துடன் கூறினார்,

“எங்கள் மொழியில் உள்ள இந்த கணக்கு போடும் முறையைப் உன்னால் கற்றுக் கொள்ள முடியாது தயவு செய்து புரிந்து கொள். மேலும் நான் உன்னிடம் அதிகம் பேச முடியாது ஏன் என்றால் நான்  கண்காணிக்கும் இவர்கள் என்னையும் கண்காணிக்கின்றனர் .நாங்கள் ராணுவ  பயிற்சி முடித்தவர்கள். ஓரளவு எல்லா வேலையும் கற்றுள்ளோம் என்னை தயவு செய்து வேறு எதுவும் கேட்காதே.. நீ என் சதிக் என்றால் இதைச் சாப்பிடவேண்டும்,”

என்று முட்டையை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

நான் திரும்பிப் பார்த்தேன். ரீ அவர்களிடம் ஏதோ சொல்லுகிறார் அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். நான் முட்டையை அவர்கள் கண் முன்னே தின்றேன்.

வண்டி Gc 5ஐ  நெருங்கியது. ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஹெல்மெட் அணிந்து வேலையாட்களைப் பார்க்கச் சென்றோம். நல்ல கடுமையான வெயில் உக்கிரமாக அடித்துக்கொண்டு  இருந்தது ரோட்டில் கானல் தெரிந்தது காற்று சிறிதுகூட இல்லை.. அதற்குள்ளேயே வேர்வை தலையிலும் முதுகிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது  அங்கிருந்த ஸ்டோரேஐ் டேங்க் ஓரம் அருநிழலில் கால்நீட்டி அமர்ந்து ஆட்கள் ரீயைப் பார்த்ததும் எழுந்து கொண்டனர்.தப்பு பண்ணிய இருவர் மட்டும் கையைக் கொண்டு முக்கோணம் போல் கழுத்தை கட்டிக் கொண்டு நின்றனர்.

ரீ அவர்கள் மொழியில் கிட்டத்தட்ட உருமினார். அவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்தால்  என்னவிதமான தண்டனை தருகிறார் என ஊகிக்க முடியவில்லை. இருவரையும் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது

நான் அப்போது ரீயைப் பார்த்தேன். மிகுந்த வருத்தத்துடன் கோபமாக தெரிந்ததார்  இன்று இந்த வேலையை முடித்துவிட வேண்டும்  மேலும் கிளையண்ட்டுக்கு கேட்ப்பாஸ் பிரச்சினையும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவலையாக இருந்தது.

சரி நாம் சென்று ஆப்ரேட்டரிடம் விளக்கம் சொல்லி கேட் பாசை வாங்குவோம் இங்கு நின்று ஆவப்போவது ஒன்றுமில்லை என்று கன்ட்ரோல் பில்டிங் உள் நுழைந்தேன். அங்கு நின்றிருந்த எங்களது சூப்பர்வைசரை வெளியே அனுப்பி விட்டு ஆப்ரேட்டர் ரூம் உள் நுழைந்தேன்.

முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டு ஜில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது

வயதான ஆப்ரேட்டர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் சீட்டாட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு எதிரில் அரைவட்ட டேபிளில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த மானிட்டரில் கன்ட்ரோல் புரோகிராம் டிஸ்ப்ளே ஆகிக்கொண்டு இருந்தது. அவர் ஸ்பேடு ஆட்டினுக்கு ஐோடியை தேடிக்கொண்டு இருந்தார். மேலும் இரண்டு இளம் ஆப்ரெட்டரும் சற்று தள்ளியிருந்த  கம்யூட்டரில் எதிர் புறம் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய கண்ணாடி சுவரில் GC 5 மொத்தமும் தெரிந்தது.

நான் செய்த வணக்கத்திற்கு பதிலோ அல்லது நீ யார் என்றோ கூட கேட்கவில்லை.
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்து க் கொண்டு நின்றேன் நிமிடங்கள் ஒடிக்
கொண்டு இருந்தன.

“சார் அவர்கள் இது போலெல்லாம் எப்போதும்  நடந்து கொண்டதில்லை இதுதான் முதல் தடவை எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் காங்கீரிட் இடவேண்டும் இல்லை என்றால் எங்களால் கிளையன்டை சமாளிக்க  முடியாது நீங்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவ வேண்டும்,” என்றதற்கு  அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

சரி நாம் மேலும் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார், என்று நினைத்து திரும்பவும் சொல்ல தொடங்கியதும், “ஸ்டாப் இட்!”  என்று கத்தினார். அவர்  கண்கள் முழுவதும் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திருந்தது..டீ கொண்டு வந்த பங்காளதேஷி முகம் கலவரத்தைக் காட்டியது.. இளம் ஆப்ரேட்டர் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்து  தொடர்ந்தனர்.

உள்ளுணர்வு. “போய் விடு, போ” என்றது. கேட்காத நான் திரும்பவும், “சார்…” என்றேன்.

“கெட் அவுட்!”

“சார்…”

“தர முடியாது நீ போய் உன் கிளையண்ட்டை அழைத்து வா,” என்று என்னைத் தள்ளிக்கொண்டு ரூமுக்கு வெளியில் விட்டு கதவை அறைந்து சாத்தினார். படீர் சத்தத்துடன் கதவு மூடிக்கொண்டது என் முகத்தில் அடித்ததுப்போல் இருந்தது. அதிச்சியாகி இந்த சின்ன பிரச்சினையை இவ்வளவு பெரிதாக ஆக்குறானே,.
கிளையண்ட் குவைத்தி இப்போது எங்கே இருக்கிறானோ சும்மாவே அவன் வெறிநாய் இப்போது என்ன செய்வது தெரியவில்லையே, என்று திரும்பி வெளியில் வந்தேன்.

ரீயும் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.  கேட் பாஸ் கிடைக்கவில்லை என்று உதட்டைப் பிதுக்கியதும் எல்லாருடைய முகமும் வாடியது. .சாப்பாட்டு நேரம் தாண்டிக்
கொண்டிருந்தது. யாருக்கும் சாப்பிடும்  எண்ணம் இல்லாமல் என் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தனர். நான், என்ன செய்யலாம், என்று வண்டியை திறந்து மோபைலை எடுத்தேன். வரிசையாக மிஸ்டு கால்கள் கிடந்தன.

பின்னால் ஒரு வண்டி வந்த சத்தம் கேட்டது

ரீ என் முதுகில் தட்டினார்

திரும்பினேன் அப்போது நாங்கள் காலையில்  பார்த்த கன்ட்ரோலர் உள்ளே சென்று கொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது நான் யோசித்ததைப் பார்த்து ரீ என்னிடம், “நான் கேட்கிறேன் நீ என்னை அழைத்துச் செல் நீ பேச வேண்டாம் நான் பேசுகிறேன்,” என்றார்.

சரி வயதில் மூத்தவர் என்ன நடக்கிறது பார்ப்போம், என்று அழைத்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்று ஆப்ரேட்டரிடம் செல்லாமல் வலதுபுறம் இருந்த கன்ட்ரோலர் ரூம் சென்றென் வாசலில் நின்று ரீ கம்பீரமாக கமாண்டோ போல் வணக்கம் சொன்னார்
என் வணக்கம் எனக்கே கேட்கவில்லை.

திரும்பிய கன்ட்ரோலர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அழைத்தார்.

நான் நடந்தவற்றைப் பணிவாக சொன்னேன்.

கன்ட்ரோலர் ஆப்ரேட்டரின் மேல் அதிகாரி ஆதலால் அவரை வரச்சொல்லி இன்டர்காமில்
அழைத்தார்.. என்னை முறைத்துக் கொண்டே உள்நுழைந்த ஆப்ரேட்டர் காதில் அந்த வருடம் புதிதாக வந்த புளூடூத் காதில் கொம்பு முளைத்தது போல் வினோதமாக தெரிந்தது.

யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த அவர், பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு
கடுமையாக என்னை பார்த்தார். பின்னர், கன்ட்ரோலரிடம் அலட்சியமாக, “இவர்கள் இருவரும் சைட்டில் இல்லை. அங்கு நடந்தது உங்களுக்குத் தெரியாது மறுநாள் காலை போலிசோ அல்லது செக்யூரிட்டியோ வரும்படி ஆயிருக்கும்.  நல்லவேளை நான் பார்த்து தடுத்து விட்டேன்” இவர்களின் மேலதிகாரிகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். வந்தால் தரலாம், அது வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த ரீ பேச ஆரம்பித்தார்.

“சார் வணக்கம்.  என் பேர் ரீ. வட கொரியாவிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எனது ஆட்கள்தான் நான்தான் அவர்களின் லீடர். நீங்கள் சொல்வது போல் அவர்கள் சன்டை எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை..  தயவு செய்து என் கையைப் பாருங்கள் அவர்களில் வயது குறைந்த அந்தச் சின்னவன்  சட்டங்களை முதுகில் அடுக்கி கொண்டு திரும்பும்போது வயது மூத்தவன் மேல் சட்டம் தட்டியிருக்கிறது. அதனால் அந்த மூத்தவன் சின்னவனை தள்ளியிருக்கிறான். அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை நீங்கள்தான் பெரிதாக  நினைத்துக் கொண்டு விட்டீர்கள்”

“ரீ இப்படி கோமாளி போல் அவர்கள் முன்னால் செய்ததால் என் மனம் தவித்து அவமரியாதை செய்வார்களோ என்று அஞ்சியது  நல்ல வேளை, எதுவும் நடக்கவில்லை.. நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். இருவர் கண்களும் ரீ  மேல் நிலைகுத்தி இருந்தது.

ரீ தொடர்ந்தார்.

“நான் பொதுமான தன்டனையைச் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் கிளையண்ட்டை கூப்பிட்டு வரச் சொல்லியுள்ளீர்கள் அவர் வந்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். ஏன் என்றால் இந்த காங்கீரிட் நேற்றே முடிய வேண்டியது. துரதிருஷ்டவசமாக அந்த எகிப்திய காங்கீரிட் பூம் பிளேசர் ஆப்ரேட்டர் யானையின் துதிக்கை போல் தொங்கிய அந்த பைப்பை தாங்கு கட்டையில் விழும்படி காங்கீரிட்டை பிடித்து விட்டதால் கட்டைகள் நெகிழ்ந்து இடம் மாறியதால் பலகை திறந்து கொண்டு காங்கீரிட் எல்லாம் வெளியேறி விட்டது அதனால் இதோ நிற்கிறாரே இந்த லீடரும் நானும் எனது ஆட்களும் மேலும் மேலும் தண்டிக்கப்படுகிறோம்.

“நான் இன்று போல் எப்போதும் எனது ஆட்களைப் பேசியது இல்லை. அதுவும் குற்றமிழைக்காத அவர்களுக்கு ஆத்திரத்தில் தண்டனை சொல்லிவிட்ட நான் எப்படி உறங்குவேன் என்று தெரியவில்லை.”

“அப்படி என்ன தண்டனை?” என்று கேட்டார் கன்ட்ரோலர்

சிறிது செருமி ரீ தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

“சார் நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வரிசையாக ஒவ்வொருவராக காலைக் கடனை முடித்து  6 மணிக்கு பஸ் ஏறி 7 மணிக்கு வந்திறங்கி வே;லை தொடங்குகிறோம் .  தொடர்ந்து வேலைதான் 12 மணிக்குதான் சாப்பாட்டுக்கு கலைவோம் அதுவரை வெறும் தண்ணீர்தான்  பிறகு இரவு சாப்பாடு 9 மணிக்குதான் இடையில் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.. நான் இன்று இரவு அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி விட்டேன்,”  என்று அவர் சொல்லி நிறுத்தியதும் பல நாட்டினரும் வந்து சேவை செய்வதனால் சுல்தானைப்போல் வாழும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். இருவருக்கும் முகம் வாடி விட்டது என்ன சொல்வார்களோ என்று நான் அதிர்ச்சியோடு ரீயை பார்த்தேன்

ரீ தொடர்ந்து, “சார் என்னை நம்புங்கள் நாங்கள் பல ஆயிரம் மைல் தூரம் தாண்டி இங்கு வேலை செய்வது எதற்கு தெரியுமா உங்களுக்கு? எங்கள் அரசுதான் எங்களை இங்கு வேலை செய்ய அனுப்பி உள்ளது. நாங்கள்  வேலை செய்வது அரசுக்குதான் செல்லும்
மக்கள் எல்லாருக்கும் கிடைப்பதுதான் எங்களுக்கும் சிறிதும் அதிகம் கிடைக்காது”,, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

ஆப்ரேட்டரும் கன்ட்ரோலரும் எழுந்து விட்டனர்,

ரீ, “சதிக்” என்று சின்னதாகப் புன்னகைத்தார்…

சதிக் என்றால் நண்பன்….