சிறுகதை

அசோகமித்திரனின் ‘கதர்’ – பீட்டர் பொங்கல்

அசோகமித்திரனின் ‘கதர்’ சிறுகதை – ஆங்கில மொழியாக்கத்தையொட்டிச் சில குறிப்புகள் (மொழிபெயர்ப்பாளர் சிவசக்தி சரவணன் உதவியுடன்)

அசோகமித்திரனின் ‘கதர்’ என்ற சிறுகதை ஆயிரத்துச் சொச்சம் சொற்கள்தான் வரும் என்று நினைக்கிறேன், அதை ஒரு குறுங்கதை என்றும்கூட சொல்லலாம். முதல் வாசிப்பில் அது அவ்வளவு பிரமாதமாக எழுதப்பட்ட கதையாகவும் தெரியவில்லை, கடைசி பத்தி மட்டுமே மோசமான கதையாவதில் இருந்து அதை மீட்கிறது; அப்போதும்கூட, கதையின் பிற பகுதிகளோடு இணைத்து வாசிக்கும்போது தனியாகத் தெரிவதால் அதில் ஒரு கலையின்மையும் தென்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அலட்சியமாக எழுதப்பட்ட கதை போல்தான் தெரிகிறது.

கதையின் துவக்கம் துல்லியமாகவே இருக்கிறது- ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வாங்கிய மளிகை சாமான்களின் பட்டியல், சில்லறை பாக்கி எவ்வளவு கிடைத்தது, அதைத் தூக்கிச் செல்ல கடைக்காரர் கொடுத்த துணிப்பையில் என்ன எழுதியிருந்தது என்ற விபரங்கள் போதாதென்று காய்கறிக் கடையில் புடலங்காய் வாங்கியதையும் அது அத்தனையையும் அந்தச் சிறுவன் சுமந்து வந்ததையும் எழுதுகிறார் அமி. வீட்டுக்கு வந்ததும் சிறுவன், துணிப்பையில் எழுதப்பட்ட “நஞ்சன்கூடு பல்பொடி” என்ன என்று யோசிக்கிறான், நஞ்சன்கூடு ஒரு இடமாக இருக்கலாம் என்று அட்லாஸில் தேடுகிறான் (எல்லா கண்டங்களிலும்!). அம்மா, நஞ்சன்கூடு என்பது தேன்கூடு மாதிரி ஏதாவது கூடாக இருக்கும் என்று சொன்னதும், பையனுக்கு உடனே நஞ்சன்கூடு பல்பொடியால் பல் தேய்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது- அவர்கள் வீட்டிலும் பல்பொடி வாங்குவதில்லை, நாட்டு மருந்து எதையோ இடித்துப் பொடி செய்து பயன்படுத்துகிறார்கள் (“வாய் ஒரு மணி நேரத்துக்கு ஜிவ்வென்று இருக்கும்”).

கதைக்குத் தேவையே இல்லாத விருந்தாளி ஜோசியர் ஒரு வாரம் இருந்துவிட்டுக் கிளம்பிப் போனதும்தான் அப்பாவிடம் இது பற்றி பேசும் துணிச்சலே பையனுக்கு வருகிறது (“அப்பா சுமுகமாக இருந்த முதல் சந்தர்ப்பத்தில்”). அப்பா நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துக் கொடுக்கிறார், அது மட்டுமல்ல, அந்தப் பை ஒரு கதர்ப்பை என்றும் சொல்கிறார். அதைக் கேட்டதும் பையனுக்கு நஞ்சன்கூடு என்ன, எங்கிருக்கிறது என்ற ஆர்வம் குறைந்து போய் விடுகிறது. காரணம், கதர் குறித்து அவனுக்கு இருக்கும் உயர்வு நவிற்சி உணர்வுகள் (“அவனுக்குக் கதர் தேவலோகத்து மலர் மாதிரி, கேள்விப்படலாம் பார்க்க முடியாது”- ‘more often heard than seen,’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வசதியாய் எழுதித் தந்திருக்கிறார் அமி). கதர் அத்தனை அபூர்வமானதா என்று கேட்டால், அதெல்லாம் இல்லை- “கதர் அணிந்து கொண்டால் அவன் ஊரில் உடனே ஜெயிலில் போடுவார்கள் என்று சொல்வார்கள்”. எல்லாம் பயம்தான்.

ஆனால் இந்தக் கதாநாயகன்தான் உயர்வு நவிற்சி, வேண்டாம், ரொமாண்டிக் ஆயிற்றே, கதையின் இந்தக் கட்டத்தில், அவன் தன் வீட்டிலிருந்து ரெண்டு மைல் தொலைவில் இருக்கும் முஷிராபாத் ஜெயில் பற்றி நினைத்துப் பார்க்கிறான். அங்கே, உச்சியில் கண்ணாடித் துண்டங்கள் நெருக்கமாய்ப் பதிக்கப்பட்ட உயரமான சுவர்கள் கொண்ட சிறைச்சாலைக்கு, பல முறை தனியாகப் போய் பார்த்துவிட்டுக்கூட வந்திருக்கிறான் (“அவன் அந்தச் சுவர்கள் பின்னால் இருப்பவர்களைக் கற்பனை செய்துதான் ‘பார்க்க’ முடியும்”). இங்கே அமியின் நாயகன் கவனம் சிறைக்கைதிகள் அணிந்து கொள்ளும் கட்டம் போட்ட ஆடைகளுக்குத் திரும்புகிறது. பத்திரிக்கைகளுக்கு படம் வரைபவர்கள், சினிமா நாயகர்கள் எவ்வளவு அலட்சியமாக அந்த ஆடையை ஒவ்வொருத்தர் கற்பனைக்கு ஏற்ற மாதிரி சித்தரிக்கிறார்கள் என்று செல்லமாய் கேலி செய்துவிட்டு, “ஜெயிலுக்குப் போகவாவது கதர்ச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்,” என்று கதைக்குத் திரும்புகிறார் அமி. அதற்கு வசதியாக, கதையின் இந்தக் கட்டத்தில், “அவனுக்கு ஜெயிலுக்குப் போக வேண்டுமென்று ஆசை வந்தது”, என்றும் முந்தைய வரியில் எழுதி விடுகிறார் அவர்.

சரி, கதர்ச்சட்டைக்கு எங்கே போவது என்று கேள்வி கேட்டு, அவர்களே முழு பீசாக வாங்கி ஆளுக்கு ஒரு பகுதி என்று கத்தரித்துத் தைத்துக் கொள்ளும் ராம்கோபால் மில் துணி பற்றி ஒரு ரசமான பத்தி. அதற்கும் ஜெயில் துணிக்கும் பெரிய வித்தியாசமில்லை- ஒரு முறை அவர்கள் வாங்கிய துணியில், “கருப்பு நிறத்தில் பெரிய பெரிய கட்டங்கள். போலீஸ்காரன் துரத்தாத கைதியாக அவன் பள்ளிக்கூடம் போய் வந்தான்”. இந்த இடத்தில் கதை நடக்கும் காலம், இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த காலகட்டம் என்ற தகவல் பதிவாகிறது. அதனுடன், அப்போதெல்லாம் கல்கியும் ஆனந்த விகடனும்தான் கிடைக்கும், கதர்த்துணி வேண்டுமென்றால் நூல் நூற்றுக் கொடுத்து பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும் என்ற அரிய தகவல்கள்.

இப்போது நம் நாயகன், அவன்தான் குணப்படுத்தவியலாத ரொமாண்டிக் ஆயிற்றே, “அவனுக்கு துணி கிடைக்காது போனாலும் நூல் நூற்றால் போதும் என்று தோன்றியது”. உடனே ஒயிலாக காலை மடித்துப் போட்டு இராட்டை சுற்றும் நாயகியரின் புகைப்படங்களை நினைத்துப் பார்க்கிறான். தற்போது இராட்டை இல்லா குறைக்கு, தன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, அதன் சக்கரத்தை வேகமாகச் சுற்றுகிறான்- “நூல் மலையாகக் குவிந்தது. உலகமெல்லாம் கதரால் நிறைந்து விடும். கைதிகள், காவல்காரர்கள் எல்லாரும் கதர் அணிந்துதான் ஆக வேண்டும்”. ஆனால் நிஜத்தில் கை இருப்போ ஒரு கதர்ப்பை. எனவே, எத்தனையோ அசௌகரியங்கள் இருந்தாலும் அதை பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லப் பயன்படுத்திக் கொள்கிறான் சிறுவன். அந்த சந்தோஷத்தையும் கெடுக்க வந்து சேர்கிறான் வஹாப்.

வஹாப் ஏற்கனவே ஏழாம் வகுப்பு பெயில் ஆனவன் (“தைரியமாக தூங்குவான்”), நண்பன்தான், இவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறான். ஒரு முறை வஹாபால் பதில் சொல்ல முடியாத கேள்விக்கு கொஞ்சம் திமிர் தொனிக்கும் குரலில் இவன் பதில் சொல்லி விடுகிறான் (“தான் அவ்வளவு அகம்பாவம் பிடித்தவனாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றிற்று”, என்று பிற்சேர்க்கை). அன்று பகை பாராட்டத் துவங்கும் வஹாப் இந்தச் சிறுவனுக்கு தொடர்ந்து வகுப்பில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். அந்த வகையில் ஒரு முறை இவனது பையை கீழே தள்ளி உதைத்து விடுகிறான். “அதுவும் கதர்ப்பை. மகாத்மா காந்தி நூற்ற நூலிலிருந்து செய்யப்பட்ட கதர்ப்பை” என்று கொந்தளித்து வகுப்பு முடிந்ததும் நேரம் பார்த்து வஹாபை கீழே தள்ளி விடுகிறான், இருவருக்கும் சண்டை நடக்கிறது. குஸ்தி முறை சண்டையில் வஹாபை வீழ்த்தி சண்டை இவனது வெற்றியில் முடிந்ததுஎன்று  பிடி தளர்த்தும்போது வஹாப் பலமாக தாக்குகிறான். இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அப்பா வஹாப் வீட்டுக்குப் போய் பேசுகிறார். அது போதாதென்று பள்ளிக்கும் சென்று வஹாப் மீது குற்றம் சாட்டுகிறார்

வஹாப் அன்று முழுவதும் பெஞ்ச் மேல் நிற்கிறான். திமிராக பதில் சொன்னதற்கே அத்தனை படுத்தியவன் தண்டனை வாங்கித் தந்ததற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஆனால், ஆனால் மிக ஆச்சரியமாக அதற்கு அப்புறம் அவன் விரோதம் பாராட்டுவதில்லை, சண்டையில் இவனது பங்கு என்ன என்பதையும்கூடச் சொல்வதில்லை. இதற்கு அப்புறம் கதை மறக்க முடியாத கடைசி பத்திக்கு வருகிறது. கதர்த்துணி அழுக்காகிறது, தோய்க்கத் தோய்க்க கிழிகிறது. அப்புறம் சைக்கிள் துடைக்கும் துணியாகிறது – “சைக்கிளின் அழுக்கை அந்தத் துணி மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போயிற்று”. அதைச சிறுவன் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்பது அமியின் புதிர்த்தன்மை பொருந்திய சொற்களில், “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”.

இதுவரை நாம் படித்த கதைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ், தியாகம், ஆட்சி, அதிகாரம், அதன் அவலங்கள், இறுதி மாயமழிதல் என்று எது எதற்கோ குறியீடாக இருக்குமோ இந்தக் கதர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, பல ஆண்டுகளுக்கு அப்புறம் அவனுக்கு கதர் அணிய வாய்ப்பு கிடைத்தது, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை” என்று கதை முடியும்போது இது என்ன அபத்தமான நாஸ்டால்ஜிக் நெகிழ்ச்சி, இப்படிச் சொன்னவர், அவன் ஜெயிலுக்கும் போகவில்லை என்றும் எழுதியிருக்கலாமே, கதை என்ன மோசமா போயிருக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம். இதை எதற்கு வேறு வேலை இல்லாமல் நண்பர் “மதுர மல்லி” சிவசக்தி சரவணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நம் அரைகுறை அறிவைச் சோதிக்கிறார் – என்று நான் மட்டுமல்ல, நீங்களும் குழம்பினால் தப்பில்லை.

oOo

மொழிபெயர்ப்பில் இறங்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று, மொழிபெயர்ப்பில் அறிவது போல் வேறெந்த வகையிலும் ஒரு படைப்பை அறிய முடியாது. உதிரி உதிரியாக பாகம் பிரித்து ஒன்று சேர்ப்பது போன்ற ஒரு முயற்சி அது

மொழிபெயர்ப்பைச் சரி பார்க்கும்போது, இந்தக் கதையில் நாம் தவற விட்ட விஷயம் இருக்குமோ என்ற சந்தேகம் முதலில் வந்தது, “வஹாப் மிகவும் பயந்து விட்டான். ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று  அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,” என்பதை மொழிபெயர்த்தது சரியா, என்ற இடத்தில். வஹாபை வீட்டுக்குப் போய் பார்க்கும் அப்பா அடுத்தது பள்ளிக்கும் போய் குற்றம் சொல்வதால், அடிதடிக்கு வஹாப் இவன் மீதும் பழி போடுவதால் கோபம் அடங்காமல் பள்ளிக்குச் செல்கிறார் அவர் என்று புரிந்து கொண்டேன். ஆனால் சரவணன், “அப்படி பார்க்கக் கூடாது. அடிதடிக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை அப்பாவுக்கு வஹாப் புரிய வைக்கத் தவறிவிட்டான்,” என்று அர்த்தம் செய்து கொள்ளலாம் என்றார். அந்த இடத்தில் கதைசொல்லியின் குரலில் ஒரு வருத்தம் முதன் முதலில் தென்பட்டது.

அதற்கு அடுத்த ‘திறப்பு’, “ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்ற இடத்தில் கிடைத்தது. பல வாக்கியங்களைப் பரிசீலித்ததில், “but Nanjankoodu toothpowder was not to be had”, என்பது கொஞ்சம் பொருத்தமாகத் தோன்றிற்று. ஆனால் not to be had என்று சொல்லும் அளவுக்கு பல்பொடி ஒரு பெரிய விஷயமா என்ற கேள்வியுடன், அதற்கு கதையில் என்ன வேலை, என்ற கேள்வியும் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் அது கதைக்கு முக்கியமாக இருக்கிறது. கதர் ஒரு குறியீடு என்றால் கதரால் வாக்களிக்கப்படுவது நஞ்சன்கூடு பல்பொடி- கதரும் காணாமல் போயிற்று, அதன் வாக்குறுதியும் பொய்த்தது என்று வாசிப்பது ஓரளவு திருப்தியாக இருந்தாலும் கதையின் பிற பகுதிகளோடு ஒட்டாமல் – குறிப்பாக வஹாப் சண்டை, கதையில் அதன் முக்கியத்துவம் என்ன?-, இந்த முடிவின் செயற்கைத்தன்மை கதையின் நம்பகத்தன்மையை முழுமையாய் குலைப்பதாக இருந்தது. கடைசி பத்தியை எழுதுவதற்காக் இட்டுக் கட்டிய கதை, அல்லது, கடைசி பத்தியின் மெலோடிராமாவில் முட்டி நின்ற கதை. எதுவும் திருப்தியாக இல்லை.

நஞ்சன்கூடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள அத்தனை ஆர்வமாக இருந்தவன்- அப்பா இணக்கமான மனநிலைக்கு வர ஒரு வாரம் காத்திருக்கிறான்-, அந்தப் பை கதர்ப்பை என்று தெரிந்ததும் அந்த ஊர் மீதுள்ள அக்கறை அத்தனையையும் உடனே இழக்கிறான், இவன் என்ன பையன், இவனது ‘தேடல்’ எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்ற எண்ணம் திறப்பின் இறுதி திருகல். அங்கிருந்து அவன் எத்தனை எத்தனை விஷயங்களில் ஆசைப்படுகிறான் என்று பட்டியலிட ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை- முதலில் நஞ்சன்கூடு என்ற இடத்தைக் கண்டுபிடிக்க ஆசை, அப்புறம் அது தேன்கூடு மாதிரி இருக்குமோ என்று அம்மா சொன்னதும் நஞ்சன்கூடு பல்பொடியில் பல் தேய்க்க ஆசை, அப்புறம் கதர்த்துணி என்று தெரிந்ததும் கதர் அணிந்து கொண்டு ஜெயிலுக்குப் போக ஆசை, கதர்த்துணி கிடைக்காது என்பதால் நூல் நூற்க ஆசை. இவனது பதின்ம பிராய ஆசைகள் உள்ளீடற்றவை, புற உலகில் நிகழும் பெரும் போராட்டத்தின் தீவிரத்தை உணராதவை.

கதர் அணிந்தாலே சிறைத்தண்டனை என்று அச்சப்படும் ஊரில் ஒருவர் கதர்த்துணியால் செய்யப்பட்ட பையை இலவசமாகக் கொடுக்கிறார் என்பதன் அர்த்தம் கடைசி வரை அவனுக்குத் தெரிவதில்லை. அதனால்தான் “”ஆனால் நஞ்சன்கூடு பல்பொடி கிடைக்கவில்லை,” என்று கதையை முடிக்கிறார் அமி. அது எப்படி கிடைக்கும்? கதரில் துணி செய்து அதில் தன் பெயரையும் அச்சிட்ட நிறுவனம் எத்தனை நாள் செயல்பட்டிருக்க முடியும்? கதைசொல்லியின் அறியாமை வஹாப் சம்பவத்துக்கு கதையில் உள்ள இடத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

oOo

அசோகமித்திரன் இந்தக் கதையை எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால், கதர் மீதும் காந்தி மீதும் பக்தி கொண்ட ஒருவன், அது முதிரா உணர்வாகவே இருக்கட்டுமே, கதர்த்துணி அவமானப்படுத்தப்பட்டதும் கொதிக்கிறான், சண்டை போடுகிறான். அவனது கோபத்துக்குக் காரணமானவன் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை, நாள் முழுதும் பெஞ்ச்சின் மீது ஏறி நின்று தண்டனை அனுபவிக்கிறான், அதற்குப் பின் அவனைத் துன்புறுத்துவதில்லை. கதர் கதையின் நாயகனுக்கு மிஞ்சுவதெல்லாம் “ஆனால் அவ்வளவு அடிதடி நேர்ந்ததற்கு அவன் மட்டும் காரணமல்ல என்று  அப்பாவுக்குத் தோன்றும்படி கூறியிருக்க வேண்டும்,”” என்ற வருத்தம் மட்டும்தான்.

இங்கு, அசோகமித்திரன் ஒரு காந்தியக் கதை எழுதியிருக்கிறார்.

Moral high ground என்பதற்கு தமிழில் என்ன, தெரியவில்லை. அதைக் கைப்பற்றுவது எளிது, காப்பாற்றிக் கொள்வதுதான் கடினம். சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் கணப்பொழுதில் அது சித்தியாகும். ஆனால், வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டாட அது ஒரு மேன்மையல்ல- சத்தியாகிரகத்திற்கான தகுதி ஆன்மசுத்தியால் மட்டுமே ஏற்படுவதால், காந்தியத்தில் பற்றுள்ள சாதாரணர்களுக்கு மிஞ்சுவது தம் போதாமைகள் குறித்த வருத்தங்களும் தம் சறுக்கல்கள் குறித்த துயரும்தான். எந்த லாபமும் இல்லை என்றாலும், நியாயப்படுத்தலாகவோ முன்னிருந்த சமநிலையை நிறுவுவதாகவோ அமையாது என்றாலும் தம் பிழைகளை ஏற்றுக் கொண்டு வெளிப்படையாய் வாழ்வதில்தான் காந்தியத்தின் மாரல் ஹை கிரவுண்ட் தொடப்படுகிறது..

இதுவோ புனைகதை, இங்கு அமி வஹாபை ஏன் காட்டிக் கொடுக்காதவனாகப் படைத்திருக்க வேண்டும், அவன் ஏன் நாள் முழுதும் பெஞ்சில் நிற்க வேண்டும், அவன் ஏன் தான் தண்டிக்கப்பட்டபின் எந்த தொல்லையும் செய்யாதவனாக இருக்க வேண்டும்? வஹாப் கெட்டவனாகவே இருந்தால்தான் என்ன? இத்தனைக்கும் கதர் கதையின் சிறுவன் வஹாபால் தொடர்ந்து சீண்டப்பட்டு, ஒரு உடைகணத்தில்தான் அடிக்கப் போகிறான்- அவனது காந்தியம் போலியானதாக, புரிதலற்ற சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அதை அடிக்கோடிட்டுக் காட்ட வஹாபை இவ்வளவு குற்றமற்றவனாக்க இத்தனை பிரயாசைப்பட்டாக வேண்டுமா? ஏன் இப்படிப்பட்ட ஒரு காந்தியச் சாடலைக் கதையாய் எழுதிப் பார்த்திருக்கிறார் அமி? அதில் ஒரு ஆச்சரியமுமில்லை.

வாழ்க்கையின் அழுக்கை மிகுந்த பிரியத்தோடு சுவீகரித்துக் கொண்டு உருமாறிப் போகும் கதர்த்துணி போன்றதுதான் காந்தியம். “அதை ஒரு தியாகம் என்று எண்ணிக் கொள்ள அவனுக்குத் தோன்றவில்லை. அவனுக்கு வருத்தமுண்டானாலும்கூட கதரின் சாசுவதமின்மை குறித்து அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது”- என்று சொல்லும்படியான வருத்தமும் ஏமாற்றமும்தான் காந்தியத்தின் சுத்திகரிப்பு. காந்திய Moral high ground ஆக விளங்குவது triumphalismக்கோ gloryக்கோ பிறரைக் குற்றம் சாட்டித் தப்பிக்கவோ இடம் கொடுக்கும் சிகரமல்ல, அது மேலும் மேலும் எளிமையை நோக்கி, ஏன் தன் காலத்தோடு தானும் செல்லும் தாழ்தளம்.

காந்தியும் கதரும் பிரதிநிதிப்படுத்தும் அறம், அத்தனை குற்றங்குறைகளுக்கும் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களையே பொறுப்பாக்குகிறது என்பதால் இந்தக் கதை இப்படிதான் இருக்க முடியும், அது ஒரு பெரிய ஆச்சரியமில்லை. இத்தனை யோசிக்க இடம் கொடுக்கும் கதை, இதை வெறும் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளில், கொஞ்சம்கூட சத்தம் போடாமல், வடிவ நேர்த்திக்கு முயற்சிக்காமல் அதன் அத்தனை குறைகளோடும் எழுதியிருக்கிறாரே அமி, அது ஆச்சரியம்.

ஒரு பயணமும் சில கதைகளும் – மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. மகாபலிபுரம் நுழைந்ததும் சாலையோர விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். சாலையை பார்க்கும்படியான மேஜையொன்றில் அமர்ந்துகொண்டேன். சாலைக்கு எதிரிலிருந்து ஒருவன், ஒரு பார்வையற்ற பெரியவரை கைப்பிடித்து அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டுச் சென்றான்.

பெரியவர் பார்ப்பதற்கு, நல்ல உயரமாகப் பழைய கருப்புவெள்ளை திரைப்படங்களில் வரும் கவுபாய்க்கிழவர் போலிருந்தார். தொப்பி மட்டும்தான் இல்லை. அடர் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சாலையில் சென்ற வாகனங்கள் பிரதிபலித்தன. என் தேநீரை அருந்தியபடியே அவரைக் கவனித்தேன். அவர் தனது தேநீரை ஒரு குழந்தையைப்போல ரசித்துக்குடித்துக்கொண்டிருந்தார். டீ மாஸ்டர் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“எங்க சார் மெட்ராசா போவனும்”?

அவர் குரல் வந்த திக்கில் குத்துமதிப்பாகத் திரும்பி பதிலளித்தார்.

” ஆமாப்பா. என்னைக்கொஞ்சம் பஸ்டாப்பில கொண்டுபோய் விட்ரமுடியுமா”? என்றார் தனது காலித்தம்ளரை அருகில் வைத்துவிட்டுச் சில்லறையை எடுத்தபடி.

நான் எழுந்து தேநீருக்கான காசைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். பெரியவரிடம் கேட்டேன்.

“நானும் சென்னைதான் போறேன் சார். வரீங்களா இறக்கிவிட்டிடறேன்”

இதில் சம்மதமென்பதை அவர் முகத்தின் மகிழ்ச்சியின்வழி உணர்ந்துகொண்டேன். என் முழங்கையைப் பிடித்துக்கொண்ட அவர் உள்ளங்கை உஷ்ணமாக இருந்தது. உள்ளே அமர்ந்தபின் நான் காரைக்கிளப்பியபடியே அவரிடம் கேட்டேன்.

“யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே சார். தனியா போக்குவரத்தெல்லாம் கஷ்டமில்லங்களா”

அவர் நேராக முன்புறத்துச் சாலையின் திசையில் முகத்தை வைத்தபடி மெலிதாகச் சிரித்தார்.

“சுத்தியும் மனுஷங்க இருக்கும்போது எனக்கென்ன தம்பி கவலை. உதவற மனுஷங்க இன்னும் இருக்காங்க உலகத்தில”

நான் சற்று அமைதியாக இருந்தேன். கார் சவுக்குத்தோப்புகள் அடர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தது.

“தம்பியும் சென்னைதானா”?

” ஆமா சார். அஷோக் நகர். நீங்க”?

“திருவான்மியூர் தம்பி.

“இங்க சும்மா சுத்திப்பாக்க வந்தீங்களோ”?

” இல்ல சார். ஒரு கம்பெனில ஆர் எம்மா இருக்கேன். சைட் விஸிட்டிங்காக கடலூர் போயிட்டு வந்திட்டிருக்கேன்”

“அப்ப பொறந்து வளந்ததெல்லாமே சென்னைதான்னு சொல்லுங்க”

“ஆமா சார். நீங்க”?

” இப்பத்தான் தம்பி கொஞ்சநாளா சென்னைல இருக்கேன்”

“ஓ ! அப்ப அதுக்கும் முன்ன”?

” அதெல்லாம் பெரிய கதை தம்பி. எதுக்கு உங்களை போரடிக்கனும்”

நான் சிரித்துக்கொண்டேன்.

“அப்டியெல்லாம் இல்ல சார். நீங்க வயசுல பெரியவங்க. எத்தனையோ அனுபவங்க இருக்கும். எப்டியும் முக்கால் மணிநேரம் ஆவுமே”

அவர் தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டார்.

“சரி அப்ப ஒண்ணு செய்வோம். நா உங்களுக்கு சில கதைங்களைச் சொல்லுறேன். அதுல எந்தக் கேரக்டர் நான்னு நீங்க சொல்லுங்க”

எனக்கும் பெரியவரின் இந்தப் பீடிகை பிடித்திருந்தது. நான் சம்மதம் என்றதும் அவர் துவங்கினார்.

கதைக்குள் கதை
————————
கண்விழித்தபோது அவன் உடலெங்கும் வலித்தது. குறிப்பாக இடதுகால் ஆடுதசைப்பகுதியில் அதிகம் வலித்தது. அவன் கூரையின் துளைகள் வழி சூரியவெளிச்சம் வழிந்தது. பக்கத்தில் தகர டிரம் ஒன்றின்மீது அவன் சீருடை கசங்கலாகக் கிடந்தது. அவன் சுற்றிலும் நோட்டமிட்டான். நிறைய தட்டுமுட்டுச்சாமான்களுடன் ஒரு பழைய அம்பாஸிடர் காரும் நின்றிருந்தது. கார்ஷெட்டாக இருக்கலாமென்று யூகித்தான்.

ஒரு மூலையில் மர அடுக்குகளில் விதவிதமான பறவைகள் கத்திக்கொண்டிருந்தன. இருந்தன. ஷெட்டின் தகர கேட்டின் மெலிதான கிரீச்சிடலுடன் உள்ளே நுழைந்த அந்தப்பெண் முக்காடு அணிந்திருந்தாள். தொலைவில் எங்கோ ராணுவவிமானம் பறந்த ஒலியைத்தொடர்ந்து பெரும் வெடியோசை கேட்டதில் அவன் படுத்திருந்த கட்டில் அதிர்ந்தது. அவள் நெருங்குவந்து அவன் கால் காயத்தைப் பரிசோதித்தாள். அவன் வலியில் முனகினான்.

“இது என்ன எடம் ? நா எப்டி இங்கவந்தேன்”?

அவள் பதில்கூறாமல் கட்டை அவிழ்த்துவிட்டுப் புதிதாக கட்டிட்டாள். அவனுக்குத் துளிகூட வலித்துவிடக்கூடாது என்பதுபோல் அவள் செயல்பட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் தன் குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டான்.

” கேக்கிறேனில்ல ? இது என்ன இடம்”?

“உங்க கால்ல இருந்த புல்லட்டை எடுத்தாச்சி. ஆனா காயம் ஆறக்கொஞ்சம் நாளாவும். அதுவரை நீங்க ஓய்வுலதான் இருந்தாவனும்”

அவனுக்கு அப்போதுதான் கடைசியாக நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தது. அவன் சுடப்பட்டான். எந்த திசையிலிருந்து என்று கவனிக்கக்கூட வாய்பின்றி மயங்கிவிட்டான்.

“இல்ல நா ஒடனே போயாகனும். இது என்ன இடம்னு சொல்லு. பக்கத்தில போன் எங்க கெடைக்கும்”?

அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ந்துபோய்விட்டான். ஏனெனில் அவள் கூறிய ஊரிருந்தது எதிரி தேசத்தில். அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரதேசத்தின் அருகில். யார் கண்டது. இவளே கூட அந்த தேசத்தின் பெண்ணாயிருக்கலாம். அவன் அவளிடம் என்னவோ கேட்க வாயைத்திறக்க அவள் அவசரமாக கைகளால் பொத்தினாள்.

வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது. வாயில் விரல்வைத்து அமைதியாயிருக்கும்படி சைகை செய்து விட்டு அவள் வெளியேறினாள். வெளியில் சிலவிநாடிகள் பேச்சுக்குரல்கள் கேட்டன. பறவைகள் கீச்சுக்கீச்சென கத்திக்கொண்டிருந்தன. மறுபடி அவள் உள்ளே வந்தபோது சற்று வருத்தத்துடனிருந்ததை கவனித்துக்கொண்டான்.

” இங்க பக்கத்துல போன் எதுவும் கெடையாது. உங்காளுங்க ஒண்ணுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிட்டாங்க”

“புரியல. சண்டைல யார் ஜெயிச்சது”?

” யாரும் ஜெயிக்கல. உங்காளுங்க பார்டர்லதான் கேம்ப் போட்டு தங்கிருக்காங்களாம். இங்க உள்ளவங்க திட்டம் போட்டுட்ருக்காங்க”

“நீ என்னை ஏன் கொல்லாம காப்பாத்தின”?

” நா ஒரு டாக்டர். நீ குண்டடிபட்டுக் கெடந்தப்ப அப்டியே விட்டுட்டு வரமுடில. அதான். நீ இங்க இருக்கிறதுகூட யாருக்கும் தெரியாது”

அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான். இருந்தால் அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த அவள் உடலில் சில இடங்களில் வெண்மைபுள்ளிகள் தென்பட்டன. செம்பட்டைநிறத்து அவள் கூந்தல் குட்டையாக கத்திரிக்கப்பட்டிருந்தது.

“உன் வீட்ல உள்ளவங்க ஒண்ணும் சொல்லலியா”?

அவள் வசீகரமாக புன்னகைத்துவிட்டுக் கூறினாள்.

“ யாரு இருக்காங்க கேட்க. என் வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். அவரும் உங்களை மாதிரி சிப்பாய்தான். அது இருக்கும் ரெண்டு வருஷம்”

“கொழந்தைங்க”?

அவள் மவுனமாக வெளியேறினாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தினமும் அவள் அவனுக்கு உணவு கொண்டுவருவாள். புண்ணுக்கு மருந்திடுவாள். அங்கிருக்கும் பறவைகளுக்கு தானியங்கள் தூவுவாள். . மெல்ல மெல்ல அவன் கால் குணமானது. துணிவுபெற்ற ஒருநாளில் அவன் நடக்கமுயற்சித்தான். வலியிருந்தது. ஆனாலும் நடக்கமுடிந்ததில் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவள் கேட்டாள்

“ஒரு சிப்பாயா இருக்கிறதுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கியா ? எதிர்ல நிக்கிற மனுஷங்களை கொல்றதுக்காக சங்கடப்பட்டிருக்கியா”?

” இது ரொம்ப கஷ்டமான கேள்வி. நீ ஒரு பொண்ணுங்கிறதால இப்டி யோசிக்கிறன்னு நெனைக்கிறேன்”

அவள் மவுனமாக புன்னகைத்தாள்.

“சரி நா இங்கிருக்கிறது தெரிஞ்சா உன்பக்கத்து ஆளுங்க உன்னை உயிரோட விடுவாங்களா”?

அதற்கும் அவள் பதில்கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் வந்தவள் அவசரமாக அவனைக் கிளம்பச்சொன்னாள். அவள் தேசத்து பட்டாளம் அதிகளவில் வந்துகொண்டிருப்பதாகவும், அங்கிருந்தால் அவன் பிடிபடுவான் என்றும் எச்சரித்தாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் பயணித்து ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டாள்.

” இதுக்குமேல என்னால உனக்கு உதவமுடியல மன்னிச்சிடு” என்றபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு சிறிய ட்ராவல் பேகில் உணவுப்பொருட்களும், டார்ச் லைட் மருந்து போன்ற சில பொருட்களும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் நகர்ந்தபின்புதான் சட்டென்று சொல்லிவிட்டு நினைவிற்கு வந்தவனாக, காரைப்பின் தொடர்ந்தபடியே ஓடி கத்தினான்.

“உன் பேரென்ன”?

கார் ஒரு சிறிய கிறீச்சிடலுடன் நின்றது. அவள் தலையை வெளியில் நீட்டி, தன்னுடைய வழக்கமான புன்னகையை வழியவிட்டபடி காரை வேகமெடுத்து மறைந்துபோனாள். அவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான்

“அப்புறம்”? என்றேன் நான்

” இப்போது அடுத்தகதை” என்றார் பெரியவர்

“அய்யோ அதுவே இன்னும் முடியலியே”

அவர் சிலவிநாடிகள் அமைதியாக இருந்தார். காரினுள் ஏஸியின் குளிர்கடந்தும் முன்புறத்து வெயில் உஷ்ணம் கூட்டியது.

கதைக்குள் கதை 2
——————————-
காலடியோசை கேட்டு அந்தச்சிறுவன் திடுக்கிட்டான்.

“வந்துட்டியா அக்கா”? என்றான்.. பதில் வராதுபோகவே மறுபடி சந்தேகமாக கேட்டான்

” யாரது”?

அதற்கும் பதில் வரவில்லை. அறையின் நிசப்தமும் காற்றின் ஓசையும், தொலைவில் பறவையொன்று கூவும் ஓசையும் மட்டும் கேட்டன. சிறுவன் தனது இருக்கையிலிருந்து மெல்ல சுவரைப்பிடித்தபடியே நடந்து வாசலுக்கு வந்தான். வாசற்படியருகே காலில் ஏதோ இடற, குனிந்து கைகளால் தடவிப்பார்த்தான். யாரோ ஒருவர் விழுந்துகிடப்பது தெரிந்து அதிர்ந்தான். கீழே கிடந்த உருவத்தின் முகத்தில் கைகளால் தட்டி உலுப்பினான்.

“யாரு ? யாருங்க ? என்னாச்சு

உருவம் மெல்ல அசைந்தது கைகளில் தெரிந்தது.

“தண்ணீ… தண்ணீ” என ஈனஸ்வரத்தில் முனகியது கேட்டது. சிறுவன் மறுபடி சுவரைப்பிடித்தபடியே சமையலறை சென்று, பழக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான். வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் சற்றே அஞ்சினாலும், வந்தவரின் தாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

சற்றைக்கெல்லாம் அந்த உருவம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு படுக்கையறை வரை வந்தது.

“யார் நீங்க ? சாப்பிட எதாச்சும் வேணுமா ? அங்க ஒரு பெரிய பானையிருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ரொட்டி இருக்கு. எடுத்துக்கோங்க” என்று ஒரு மூலையைக் காட்டினான். அந்தமூலைவரை சென்ற காலடியோசையில் அந்த உருவம் ரொட்டியை எடுத்திருப்பதை உணர்ந்துகொண்டான். பிறகு அவன் நாசியருகே சிகரெட்டின் நெடி படர்ந்தது.

காலருகே எதுவோ உரச, அவன் குனிந்து தடவினான். அவனது வளர்ப்புப்பூனை. மெல்ல அதைக்கைகளில் எடுத்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தபடியே கேட்டான்.

“அக்கா வெளிய போயிருக்காங்க. அவங்க இருந்தா டீயாவது வச்சித்தந்திருப்பாங்க. எனக்கு தெரியாது மன்னிச்சுக்கங்க”

இப்போது அந்த உருவம் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டது மெத்தையின் அழுந்தலில் தெரிந்தது. சிலவிநாடிகளில் சிறுவனுக்கு மருந்து நெடியடித்தது. சமயங்களில் அவன் தடுமாறி விழுந்து சிராய்த்துக்கொண்டால் அக்கா போட்டுவிடும் மருந்தின் வாசனை அது.

“உங்களுக்கு அடி பட்டிருக்கா ? மருந்து வாசனை வருதே”?

அவன் தலைமுடியை கோதிய விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

” உங்களுக்கு பேச வராதா ? எனக்கு பார்க்கமுடியாத மாதிரி “?

வாசலில் மாடுகளின் கனைப்பொலியும் கழுத்து மணியோசையும் கேட்டு சிறுவன் உற்சாகமானான்.

“அக்கா வந்துட்டியா ? ஏன்கா இவ்ளோ நேரம் ? நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க பாரு”

அறையில் தடாரென்று எதுவோ விழும் ஓசையும், அகக்அவின் முனகல் ஒலியும் கேட்டது. கட்டிலின் கிரீச்சிடலிலிருந்து பக்கத்திலிருந்த உருவம் எழுந்துகொண்டுவிட்டதென்று உணர்ந்துகொண்டான்.

“அக்கா…. அக்கா… என்னாச்சுக்கா”? என்றபடியே தரைகளில் ஒரு குழந்தைபோல தவழ்ந்துசென்றான். கைகளில் தட்டுப்பட்ட அக்காவின் கால்கள் உதறிக்கொண்டிருந்தன. அவள் முனகல் முன்னிலும் அதிகமாக வெளிவந்தது. சிறுவன் மெல்ல நகர்ந்த அவள் முகத்தைத் தடவினான். அவள் வாயோரம் ஈரமாக வழிந்துகொண்டிருந்தது.

அவன் பயத்தில் அழத்தொடங்கினான். வாசலில் மாடுகள் கத்தத்துவங்கின. மெல்லிய குளிர்காற்று அறைக்குக் நுழைந்ததைத்தொடர்ந்து மழையோசை கேட்டது.

தடார் தடாரென்று குச்சியுடையும் சப்தம் கேட்டது.

” அக்கா என்னாச்சுக்கா உனக்கு ? அக்கா என்னை பயமுறுத்தாதக்கா. ஏங்க யாரு இங்க இருக்கிறது ? அக்காவுக்கு என்னாச்சு”?

இப்போது அவன் முதுகில் ஆதரவாகத் தடவிய ஒரு கை, அவனை அங்கிருந்து நகர்த்திச்சென்று அமரவைத்தது. பின் அவன் கைகளைத் தரையில் நகர்த்தியது. ஓரிடத்தில் சிறுவனின் கைகளில் அகப்பட்ட பொருள் நீளமாக வழுவழுவென இருந்தது. அதன்பேரிலும் ஈரமாக இருந்தது.

சமையலறையில் அடுப்பு பற்றவைக்கும் ஒலியைத்தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் சப்தம் வந்தது. சற்றைக்கெல்லாம் அவன் அக்காவின் விரல்கள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அவன் முடிகளை கோதிவிட்டன. மழை வலுவாகப் பெய்யத்தொடங்கியது. யாரோ வாசற்படியிறங்கி வெளியேறும் ஓசைகேட்டது.

*

இந்த இடத்தில் பெரியவர் நிறுத்திவிட்டார். கார் வீஜிபியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நான் கேட்டேன்.

“ஆக்சுவலா அந்தப்பொண்ணுக்கு என்னாச்சு சார்”?

” இப்ப அடுத்தது” என்றார்.

“ஏன் இப்டி பாதில பாதில விடுறீங்க”?

அவர் எனக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அடுத்ததைத் தொடங்கினார்.

கதைக்குள் கதை 3
——————————
அவன் உடல் அசதியில் சோர்ந்துவிழுந்தபோது அவர்கள் நான்குபேர்களும் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள். அவனால் அவர்களை முழுமையாகப் பார்க்கக்கூட இயலாதபடி கண்கள் இருளடைந்துகிடந்தது. இடதுகாலைக் கழற்றியெறிந்துவிடவேண்டும்போல் வலித்தது. அவர்கள் விழுந்துகிடந்த இவனைப்பற்றி பரிகாசமாக பேசிச்சிரித்தனர்.

ஒருவன் அவன் தோள்பையினை ஆராய்ந்தான். ஒரு டார்ச் லைட்டும், கத்தியும் சில துணிகளும் ஒரு மருந்துப்புட்டியும் பஞ்சு உருண்டையும், மதுப்புட்டியும் கிடைத்தன.

ஒருவன் கேட்டான்,

“யார் நீ ? இந்தக்காட்டுக்குள்ள என்ன செய்யிற”?

இவன் சிலகணங்கள் தயங்கினான். கண்களை நான்குமுறை மூடிமூடித்திறந்துகொண்டான்.

” நா ஒரு பிரயாணி. இந்த மாதிரி காடுகள்ல அலைஞ்சு திரிஞ்சு ஆய்வு பண்ணிட்ருக்கேன்”

“கால்ல எப்டி அடிபட்டிருக்கு”?

” வழில ஒரு பாம்பு கடிச்சிடுச்சி”

அவன் கையிலிருந்த ரேடியோப்பெட்டி அலறியது. அதில்யாரோ கரகரப்பாக பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள் உடனே கிளம்பவேண்டுமென பேசிக்கொண்டே இவனைப்பார்த்தார்கள். பிறகு இவன் உடைகளை அகற்றி நிர்வாணமாக்கி சோதனையிட்டார்கள். இப்போது அங்கே இன்னும் சிலர் வந்தார்கள்.

இவனுக்கான சான்று அட்டைகளோ இன்னபிறவோ இல்லாததில் சந்தேகித்தார்கள். வழியில் அனைத்தும் ஒரு நதி அடித்துச்சென்றுவிட்டதாக இவன் கூறியதை அவர்கள் நம்பத்தயாரில்லை. அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் கிளைதாவிக்கொண்டிருந்த மந்திகளைப் பார்த்தபடியிருந்தான் இவன். சிகரெட் பற்றவைத்துக்கொண்ட ஒருவனிடம் கைநீட்டினான் இவன். கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாக்கெட்டை இவன் பக்கம் எறிந்தான்.

தொலைவில் எங்கோ தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்க, அவர்கள் அவசரமாக இவனது மதுப்புட்டியை பறித்துக்கொண்டு தன் வழியே சென்றார்கள். இவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான். அருகில் எங்கோ மாடுகளின் கழுத்துமணியொலி கேட்டது.

*

கார் நீலாங்கரையைக் கடந்து திருவான்மியூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

“திருவான்மியூர்ல டெர்மினஸ்கிட்ட விட்ருங்க தம்பி. அதுக்குப்புறம் நான் போயிப்பேன்”

“ஆனா நீங்க அந்தக்கதைகளை முழுசாச் சொல்லிருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன்.

“நாந்தான் எல்லாத்தையுமே சொல்லிட்டனே தம்பி” என்றார்.

அவர் கூறியதின் பொருள் எனக்குப்புரியவில்லை. டெர்மினஸில் இறங்கிக்கொண்டு எனக்குக்கையை நீட்டினார். நான் அவர் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அவர் மெல்ல அருகிலிருந்த யாரிடமோ என்னவோ கேட்டார். பின்புறத்திலிருந்து பேருந்து ஒன்று விடாமல் ஹாரனிக்க நான் காரை நகர்த்தியபடியே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். யாரோ ஒருவரின் கையைப்பிடித்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தார் பெரியவர்.

விலக்கம்

எஸ். சுரேஷ்

இன்று, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, என்னால் மறக்க முடியாத நாளாகி விட்டது. இதே போல் மறக்க முடியாத இன்னொரு நாள், டிசம்பர் எட்டு 1985. அன்றுதான் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எங்கள் ஜெயநகர் வீட்டின் மொட்டை மாடியில் என் தோழி பத்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலர் உரக்கப் பேசுவது எங்கள் காதில் விழுந்தது. அதில் ஒரு குரல் அப்பாவுடையது.

நானும் பத்மாவும் கீழே இறங்கி வந்தோம். அப்பாவிற்கும் மூன்று ஆட்களுக்கும் வாக்குவாதம் பலமாக நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. அப்பா ஏதோ உரக்க கத்திக் கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவன் சபாரி சூட்டில் இருந்தான். அவன் பதிலுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் சத்தமாகப் பேசுவதைக் கேட்டு ரோட்டில் போகிறவர்கள் எங்கள் கேட் முன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தார்கள். வந்திருந்த மூவரில் ஒருவன் கேட் பக்கம் சென்று, “ஹோகி ஹோகி’ என்று எல்லோரையும் விரட்ட ஆரம்பித்தான்.

அப்பொழுது ஒரு போலிஸ் ஜீப் கேட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே வந்தார். அங்கு நின்றிருந்தவன் அவருக்கு சல்யூட் அடித்தான். நான் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பயந்து போனேன். அந்த பயம் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். பத்மா என் தோள்களை அணைத்துக் கொண்டாள். “ஒன்றும் ஆகாது, பயப்படாதே”, என்றாள்.

உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் சபாரி ஆளைப் பார்த்தார். பிறகு அப்பாவிடம், “உங்களை கைது செய்ய வேண்டும். இதோ ஆர்டர்ஸ்” என்று ஏதோ காகிதத்தை நீட்டினார். நான் ஒன்றும் புரியாமல் அப்பாவைப் பார்த்தேன். இவ்வளவு நேரம் உரக்க பேசிக்கொண்டிருந்த அப்பா மௌனமானார். தலை குனிந்து, ‘சரி’ என்பது போல் ஆட்டினார். பிறகு என்னைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. மஞ்சுநாத் வருவான். அவன் எல்லாம் பாத்துப்பான்”, என்று சொல்லிவிட்டு, “பன்னி” என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று போலிஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

“அப்பா அப்பா. என்ன ஆச்சு? அப்பா, அப்பா…” என்று நான் அவரை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கையில் ஜீப் கிளம்பியது. “ஏனு இல்லா. நான் சீக்கிரமே வரேன்,” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஜீப் ரொம்ப தூரம் சென்று விட்டது.

அழுது கொண்டிருந்த என்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். பத்மாவைப் பார்த்து, “ஏனு ஆயித்து?” என்று கேள்வி கேட்டார்கள். எங்களுக்கு வலது புறம் வீட்டில் இருக்கும் சாவித்திரி ஆண்ட்டி ஓடி வந்தாள். “அழாதே. ஒன்னும் ஆகியிருக்காது. சீக்கிரமே அப்பா வந்துடுவார்,” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். எதிர் வீட்டில் இருக்கும் லீனா ஆண்ட்டியும் வந்து ஆறுதல் சொன்னாள்.

கால் மணி நேரம் கழித்து மஞ்சுநாத் அங்கிள் வந்தார். எல்லோரும் அவரிடம் விஷயம் என்ன என்று கேட்டார்கள். அவரோ, “ஏதோ ஆபிஸ் விஷயம். நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று எல்லோரையும் துரத்தினார். வேண்டா வெறுப்பாக எல்லோரும் வீட்டை விட்டு விலகிப் போனார்கள்.

மஞ்சுநாத் அங்கிள் என்னிடம், “வித்யா, நீ ஒன்றும் கவலைப்படாதே. இது ஆபிஸ் விஷயம். நாளைக்கு நான் போலிஸ் ஸ்டேஷன் போய் அவனை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன். நீ ஒன்றும் கவலைப்படாதே” என்றார். என்னதான் ஆயிற்று என்று நான் பல முறை கேட்டும் அவர் இதே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு பத்மாவை என்னுடன் இரவு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு மஞ்சுநாத் அங்கிள் தன் வீட்டிற்கு சென்றார். அவருக்கு அடுத்த நாள் காலை நியூஸ் பேப்பரில் அந்த செய்தி வரும் என்று தெரிந்திருக்கவில்லை.

“ஊழல் வழக்கில் நால்வர் கைது” என்று கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வந்தது. அதைப் படித்துக்கொண்டிருந்த பத்மா என்னைப் பார்த்ததும் பேப்பரை நீட்டினாள். தலைப்புச் செய்தியுடன் கூட அப்பாவின் புகைப்படமும் முதல் பக்கத்தில் இருந்தது. போலிஸ் மற்றும் அந்த சபாரி சூட் ஆள் சூழ அப்பா நடுவில் இருக்கும் புகைப்படம். நடுத்தர உயரம், தடிமனான கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி. எந்த சலனமும் இல்லாத முகம். அப்பாவைத் தவிர அப்பாவுடன் வேலை செய்யும் மூன்று பேரின் படங்கள் இருந்தன. அதில் சதானந்த் அங்கிள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இன்னொருவர் அப்பாவுடைய பாஸ்.

செய்தியைப் படித்துவிட்டு நான் அழுவேனோ என்று என் முகத்தை பத்மா உற்று நோக்கிகொண்டிருந்தாள். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. இந்த குழப்பம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாற இரண்டு மாதங்கள் வேண்டியிருந்தது.

oOo

இன்றைக்கு, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, இப்பொழுதும் எனக்கு அதே குழப்பம். பத்திரிகையில் ஜிம் பார்சன் புகைப்படம் வந்திருக்கிறது. ஆனால் இது வரும் என்று முதல் நாளே தெரியும். அன்றிரவு என்னிடம் ஜிம், தான் நாளை கைதாகலாம் என்று சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜிம் ஒரு பார்மா கம்பெனியில் வேலை செய்கிறான். அவனை ஏன் போலிஸ் கைது செய்ய வேண்டும்? ‘இன்சைடர் ட்ரேடிங்’ என்றான் ஜிம்.

தன் கம்பெனியில் நடக்கும் சில விஷயங்களை ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடும் சிலருக்கு ஜிம் சொல்லியிருக்கிறான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபமாம். ‘நான் செய்வது தவறு என்று நான் உணரவில்லை” என்று கூறி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான். இப்பொழுது பத்திரிகையில் ஜிம் பார்சனின் பெயரும் புகைப்படமும் வந்திருக்கிறது. நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி, சவரம் செய்யப்பட்ட உருண்டை முகம். இதழ்களில் புன்னகை. அவன் காலேஜில் படிக்கும்பொழுது எடுத்த படமாக இருக்கும். ‘Jim Parson involved in insider trading’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு.

oOo

நான் மஞ்சுநாத் அங்கிளுக்கு போன் செய்தேன். “பேப்பர் பாத்தேம்மா. உங்கப்பா ஒண்ணும் தப்பு செய்யல்ல. அவன் எப்போவுமே லஞ்சம் வாங்காத நேர்மையான ஆபிசர். அதுனால அவனுக்கு நிறைய எதிரிகள். அதுல எவனோதான் வேணும்னு மாட்டி விட்டிருக்கான்,” என்றார். இதைக் கேட்டு எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த நிம்மதி காலை பதினொரு மணி வரையில் தான் நீடித்தது. பதினொரு மணியளவில் நான்கு விஜிலன்ஸ் ஆட்கள் கையில் ஏதோ பேப்பருடன் வந்தார்கள். மஞ்சுநாத் அங்கிள் அப்பொழுது வீட்டில் இருந்தார். விஜிலன்ஸ் ஆட்கள் வீடு முழுவதும் தேடினார்கள். கடைசியில் என் முன் கட்டுகட்டாக நூறு ருபாய் நோட்டுக்களை அடுக்கிக் காட்டிவிட்டு என்னிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார்கள். அவர்கள் போனபிறகு மஞ்சுநாத் அங்கிளிடம் இதெல்லாம் என்ன என்று கேட்டேன். “பயப்படாதே. உன் அப்பா வந்து எல்லா விஷயமும் சொல்லுவான்” என்று சமாதானம் சொன்னார்.

அப்பா வருவதற்குள் பலர் என்னை விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள், என் உறவினர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று சகலரும் என்னை துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள். எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அப்பா எப்பொழுது வருவார், எப்பொழுது எனக்கு பதில் சொல்வார், நான் எப்பொழுது வெளியே சென்று, “என் அப்பா ஒரு தவறும் செய்யவில்லை’ என்று கூறுவேன் என்று காத்துக் கிடந்தேன்.

ஆனால் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் கழித்து அப்பா பெயில் கிடைத்து வீட்டிற்கு வந்தார். ஒன்றுமே ஆகாதது போல் நடந்து கொண்டார். நான் பல முறை அவரிடம், “என்ன நடந்தது, உண்மை என்ன?” என்று கேட்டேன். ஆனால் அவரோ “ஏனில்ல”, என்று ஒரே வார்த்தையில் என் கேள்விகளைக் கடந்து சென்றார். நான் பல முறை அவர் முன் அழுது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொன்னதில்லை.

oOo

ஜிம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தான், ஆனால் அவன் என்ன பேசுகிறான் என்று எனக்கு உரைக்கவில்லை. என் மனம் முழுதும் அந்தப் பத்திரிகையில் உள்ள ஜிம் மேல் தான் இருந்தது. “இவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றுதானே திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது இப்படிச் செய்துவிட்டு வந்து நிற்கிறானே துரோகி,” என்றது என் மனம். நான் சட்டென்று பத்திரிகையை வீசிவிட்டு பெட்ரூம் போனேன். ஜிம் என்னுடன் உள்ளே வர பார்த்தான். ‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’ என்று சொன்னவுடன் வெளியே நின்றுவிட்டான். நான் படுக்கையில் விழுந்தேன்.

oOo

ஒரு நாள் மாலை அப்பாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்தார்கள். நான் என் அறையில் இருந்தேன். அப்பா மது அருந்துவது சகஜம். அவர் நண்பர்களும் அடிக்கடி வருவார்கள். எல்லோரும் மது அருந்திவிட்டு செல்வார்கள். எல்லாமே மிதமாகதான் இருக்கும். சிரிப்பொலி இருக்குமே தவிர கூச்சல் கலாட்டா என்று பலர் நினைப்பது போல் எதுவும் இருக்காது. எல்லோரும் தெளிவாகவே இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு குரல்கள் அவ்வப்போது உயர்ந்தன. “நம்ப மாத்திரமா லஞ்சம் வாங்கினோம்? பூரா டிபார்ட்மெண்ட் வாங்குது. தேவடியா மகன் நம்பள மட்டும் என் அரெஸ்ட் பண்ணனும்?”, என்று சதானந்த் அங்கிள் புலம்பினார். “நீ ஏன்டா வீட்ல பணத்த வச்ச. இப்போ பணமும் போச்சு அவங்க கேஸ் ஸ்ட்ராங் ஆயிடிச்சி” என்று இன்னொரு குரல் கேட்டது. அவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் செல்வதற்குள் அப்பா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது.

அடுத்த நாள் காலை எனக்கு அப்பாவை பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களிடையே பேச்சு குறைய ஆரம்பித்தது. நான் அவருடன் வெளியே செல்வதைத் தவிர்த்தேன். ஆனால் அவர் செய்த செயல் என்னை சுட்டது. கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒருவன், நான் அவனுக்கு விடைத்தாள் காட்டவில்லை என்பதற்காக, “அப்பனப் போல இருக்கா. லஞ்சம் குடுத்தா தான் ஆன்சர் காமிப்பா” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். பக்கத்து வீட்டு மாமி ஒரு நாள் என்னைப் பார்த்து, “உங்க வீட்டுக்கு மாடி போர்ஷன் கட்டலாமே. உங்களுக்கு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையே,” என்றாள். எந்த நிமிடமும் காதலனாக மாறக்கூடிய நெருங்கிய சிநேகிதன் ஸ்ரீகாந்த் என்னை விட்டு மெல்ல விலகிச் சென்றான். எனக்கு அடி மேல் அடி விழுவது போல் இருந்தது.

அப்பா குடியில் மூழ்கலானார். “ஏன்டா இப்படி பண்ற. உனக்கு ஒரு பெண் இருக்கா. இன்னும் ஒரு வருஷத்துல ரிடைர் ஆகப் போற. எதுக்கு இப்படி குடிக்கற?” என்று மஞ்சுநாத் அங்கிள் எவ்வளவு சொல்லியும் அப்பா குடியை நிறுத்தவில்லை. ஒரு நாள் என் நண்பர்களுடன் நான் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இருக்கும்பொழுது அப்பா அங்கே போதையில் எங்கள் முன் மயங்கி விழுந்தார். எனக்கு அவமானம் தாளவில்லை. இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

oOo

பத்திரிகையில் செய்தி வந்த மாலை, கிரேக் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஜிம் செல்லும் சர்ச்சில் கிரேக்தான் பாதிரியார். கிரேக் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். ஜிம் மனம் திருந்திவிட்டதாகவும், தான் செய்த தவறை சொல்லி பாவ மன்னிப்பு கேட்டதாகவும், அவன் அப்ரூவராக மாறப் போவதாகவும், நான் அவனை மன்னித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அன்று இரவு ஜிம் என் கையைப் பிடித்துக்கொண்டு, நான் இனி இது போல் எதுவும் செய்ய மாட்டேன், என்று சத்தியம் செய்தான். நான் ஒன்றும் சொல்லாததால் அழ ஆரம்பித்தான். என்னால் அதை தாங்க முடியவில்லை. அவனை இறுகக் கட்டிக்கொண்டு “இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே”, என்று சமாதானப்படுத்தினேன்.

oOo

எங்கள் உறவுக்காரர்கள் வருவதை நிறுத்திவிட்டிருந்தார்கள். அப்பாவிற்கு சொந்த சகோதர சகோதரிகள் கிடையாது. எல்லோரும் தூரத்து சொந்தம்தான். அம்மா பக்கத்து உறவினர்கள் சிலர் வந்தார்கள். அப்பா இருக்கும் நிலைமையை பார்த்துவிட்டு என்னை சோகக் கண்களுடம் பார்த்தவிட்டு, “எல்லாம் விதி” என்று கூறிவிட்டு சென்றார்கள். என் பெரியம்மா தில்லியில் இருந்தார். எப்பொழுதாவது போன் செய்வார். அப்பா மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. மஞ்சுநாத் அங்கிள் மட்டும் தினமும் வந்து அப்பாவைத் திட்டிவிட்டு செல்வார்.

எனக்கு முதலில் அமெரிக்கா போகவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் அங்கு பல இந்தியர்கள் வருவார்கள். நம்மவர்கள் நம் குடும்பத்தை பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் ஐரோப்பாவில் எங்காவது செல்ல நினைத்தேன். பின்லாந்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. நான் படிக்க ஊரைவிட்டு செல்கிறேன் என்று சொன்னபொழுது அப்பா வெறும் ‘உம்’ என்றார்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்பொழுது அவர் குடிபோதையில் மயங்கிக் கிடந்தார். மஞ்சுநாத் அங்கிள்தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்தார்.

oOo

ஜிம் மாறிக்கொண்டிருந்தான். அப்ரூவராக மாறிய பிறகு சோஷல் சர்வீஸில் ஈடுபட்டான். நான் அவனை நான்கு ஆண்டுகளுக்கு முன் மணந்திருந்தேன். பின்லாந்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் வேலைக்கு சேர்ந்து, அமெரிக்கனான ஜிம்மைச் சந்தித்து, எங்களுக்குள் காதல் மலர்ந்து, அவனை திருமணம் செய்து கொண்டேன். நான் என் பழைய வாழ்க்கையை பற்றி அவனுக்கு சொல்லவில்லை. சில முறை கேட்டு பார்த்தான். ஆனால் எனக்கு அதை பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பிறகு அதை பற்றி அவனும் பேசுவதில்லை, நானும் பேசியதில்லை.

திருமணம் ஆன இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் அமெரிக்கா வந்தோம். அப்பொழுதெல்லாம் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த ஜிம் இப்பொழுது ஒரு பொறுப்புள்ள குடிமகன் போல் மாறிவிட்டான்.

oOo

நான் பின்லாந்த் வந்து சேர்ந்தவுடன் மஞ்சுநாத் அங்கிளுக்குதான் கடிதம் எழுதினேன். அப்பாவிற்கு எழுதவில்லை. மஞ்சுநாத் அங்கிள் அப்பாவைப் பற்றிதான் கவலைப்படுவதாக பதில் எழுதினார். ஒரு வருடம் கழித்து அப்பாவிற்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைத்ததை பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதினார். இனி இந்தியா பக்கமே போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

oOo

ஒரு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. அன்று நானும் ஜிம்முடன் கோர்ட்டுக்கு சென்றிருந்தேன். பலருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜிம்மின் வாக்குமூலம் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. கோர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது பலர் ஜிம்மின் கையை குலுக்கினார்கள். என்னையும் எல்லோரும் பாராட்டினார்கள். “யூ நெவெர் கேவ் அப். ஜிம்முக்கு பலமே நீ தான்” என்று புகழ்ந்தார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் எங்கள் இருவர் படமும் வந்தது. ஜிம் எப்படி ஒரு கண்ணியமான குடிமகனாக மாறி இருக்கிறான் என்பதை சிலாகித்து எழுதியிருந்தார்கள். எனக்கு அதைப் படித்தவுடன், அப்பாவை பார்க்க வேண்டும் என்று முதல்முறையாக தோன்றியது.

ஜிம்மிடம் நான் இந்தியா போக வேண்டும் என்றேன். புருவங்களை உயர்த்தி “இந்தியா?” என்றான். “எஸ்” என்றேன். “நானும் கூட வரவேண்டுமா?” என்றான். “இல்லை. நான் தனியாக செல்ல வேண்டும்” என்றேன். “நீ என்னை கைவிட மாட்டாய் அல்லவா” என்றான். “இல்லை. இது நீ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. சீக்கிரம் திரும்பிவிடுவேன்” என்று சொன்ன பிறகு தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

பெங்களூருக்கு வந்து எம்.ஜி. ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினேன். ஒரு வாரம் கழித்து ரிடர்ன் டிக்கெட். ஒவ்வொரு நாளும் கிளம்ப வேண்டும் என்று நினைக்கும்பொழுது எனக்கு தைரியம் வராது. பயம் கவ்விக் கொள்ளும். ஹோட்டலிலேயே தங்கி விடுவேன்.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. நான் மறுபடியும் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டிய நாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு கார் ஏற்பாடு செய்து ஜெயநகர் நோக்கி புறப்பட்டேன். அப்பாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே ஏர்போர்ட் செல்ல ப்ளான் செய்திருந்தேன்.

அப்பா அந்த வீட்டில்தான் இருப்பாரா? இப்பொழுது எப்படி இருக்கிறாரோ?  அப்பாவுடன் இருந்த ஒரே தொடர்பான மஞ்சுநாத் அங்கிள் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு அதை நினைக்கும்பொழுது மிகுந்த பயமாக இருந்தது. கார் மெதுவாக எங்கள் வீதிக்குள் நுழைந்தது. என் பயம் அதிகரித்தது. வேர்வையை துடைத்துக்கொண்டு வெளியே எட்டி பார்த்தேன்.

பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் காம்ப்ளெக்ஸாக மாறிவிட்டிருந்தன. எங்கள் வீடு மட்டும் அப்படியே இருந்தது. அப்படியே அல்ல. சற்று அழுது வடிந்து கொண்டிருந்தது. நான் விட்டுச் சென்ற பிறகு பெயிண்ட் அடிக்கவில்லை போலிருந்தது. சில இடங்களில் பெயிண்ட் காணாமல் போய் செங்கல் பல்லை இளித்தது. காம்பவுண்ட் அருகில் எப்பொழுதும் பூத்திருக்கும் செடிகள் இப்பொழுது இல்லை.

வீட்டைத் தாண்டி டிரைவர் காரை நிறுத்தினான். நான் மெதுவாக நடந்து கேட் அருகில் வந்தேன். நடப்பதே கடினமாக இருந்தது. அப்பா இப்பொழுது எந்த நிலையில் இருப்பாரோ?

கேட் அருகே வந்தவுடன் அவரை பார்த்தேன். இன்னும் மாலை மங்கவில்லை. அவர் எனக்கு முதுகைக் காட்டி நின்றுக்கொண்டிருந்தார். தலை மயிர் நரைத்திருந்தது, ஆனால் அவர் உடல் வாகு அப்படியே தான் இருந்தது. நான் கேட் திறக்கும் சப்தம் கேட்டு அவர் திரும்பினார். என்னை அறியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். அவர் என்னை உற்று பார்த்தார். நான் மிகவும் மாறியிருந்தேன். பாப் கட், ஜீன்ஸ் மற்றும் மேக்கப் போட்டிருந்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை அவரால் நான் திரும்பி வந்தேன் என்பதை நம்ப முடியவில்லையா?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் சட்டேன்று சிரித்தார். நான் என் இள வயதில் பார்த்த அப்பாவாக மாறினார். பழைய நினைவுகள் என்னைத் தாக்கி விழியோரம் நீர் கோர்த்துக்கொண்டது. சிரித்துக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்தார். “குருபிரசாத் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் குடுத்து அனுப்பினானா? எங்க சர்டிபிகேட் காமி” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது வீட்டுக்குளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். “இங்க இருக்கீங்களா. உள்ள வாங்க காபி தரேன்” என்றார். “ஒரு நிமிஷம் இரு. குரு பிரசாத் இவங்கள அனுபியிருக்கான். நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் இருந்தா வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் மாத்திடலாம்” என்றார். அந்தப் பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு, “இவங்கள யாரும் அனுப்பல. ஏதோ அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க” என்றாள்.

அவர் மறுபடியும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அந்த பெண்மணி பக்கம் திரும்பி, “நீ ஏன் எனக்கு இன்னும் லஞ்ச் போடல. ஒரே பசிக்கறது” என்றார். “லஞ்ச் எப்போவோ சாப்பிட்டு டிபனும் ஆச்சு. இப்போ காபி குடிக்க வாங்க” என்று கூறி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்கையில் என்னை பார்த்து, “நான் வந்து அட்ரஸ் சொல்றேன்” என்றார்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்தப் பெண்மணி அப்பாவை கையை பிடித்து உள்ளே அழைத்து போவதைப் பார்க்கிறேன். அதற்கு பிறகு பெங்களுரு விட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். டாக்ஸி ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்ததுதான் நினைவிருக்கிறது.

கண்ணாடி துடைப்பவன் – சிவேந்திரன்

சிவேந்திரன் –

சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தாலும் அனலடிக்கத் தொடங்கியிருந்தது. முகமன்கூறி வெளிவரும்போது, “ஏன் நீங்கள் இந்தக் கோடையில் வந்தீர்கள்? சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த காலம் ஒக்டோபரில் இருந்து மார்ச் வரைத்தான்”, என்றாள் ஹோட்டல் வரவேற்பறைஃபிலிப்பினோப் பெண். ஜூன் மாதம் பாலை நிலத்தில் பயணம் செய்வதற்கு உகந்ததல்ல. ஆனால் அதற்கு அடுத்துவரும் மாதங்கள் இதைவிட மோசமானவை. இந்த மாதத்தில்தான் எனக்கு விடுமுறை எடுக்கமுடியும். நான் சிரித்துக்கொண்டே, கோடைகாலத்தைத் தாங்கிவிடலாம், ஆனால் குளிர்காலத்தில் உங்கள் ஹோட்டல் கட்டணத்தைத் தாங்கமுடியாதே, என்றேன்.அவள் சிறிது தடுமாறி, குட் ஜோக், என்றாள். நான் பிரதான வாயிற்கதவை அடைய, குட் மோர்னிங்க், என்றவாறு கதவைத் திறந்துவிட்டான் ஆபிரிக்கக் காவலாளி.

வெளியில் வெய்யில் அலையலையாக படர்ந்திருந்தது. செல்லவேண்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. ஒரு இருபது நிமிட நடை. டாக்ஸிக்காக நின்று ஏறுவதற்குப் பொறுமை இல்லை. வெய்யிலை பொருட்படுத்தாமல் ஆட்கள் அங்கும் இங்குமாக விரைந்துகொண்டிருந்தார்கள். பல்வேறு நிறத்தவர்கள். அதிகம் இந்தியர்கள். இவர்கள் திமோரின் கடற்கரைகளிலுள்ள ஸ்ட்ராபெரி ஹெர்மிட் நண்டுகள்  இறந்த கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளில் வாழ்வது போன்று அந்நிய தேசங்களில் வாழ்கிறார்கள் என்று தோன்றியது.

பாரசீக வளைகுடாவில் இருந்து உள்ளோடி வந்து காயல் தளும்பிக் கொண்டிருந்தது. இந்த வெயிலில் தண்ணீரை பார்ப்பதே மனதுக்கு குளிர்மையை வரவழைத்தது. நடந்து வந்த களைப்புக்கு, கடல் நீர் ஏரியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த நிழல்குடைகளுடனான நீண்ட மர இருக்கைகள் அருமையாக இருந்தன.இக்கரைச் சிறிய துறைக்கும் அக்கரைச் சிறிய துறைக்குமாக, முனைவுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைத்தூண்களில் கூரையைக் கொண்ட படகுகள் மிதமான வேகத்தில் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தன. படகில் வெய்யில் விழும் பக்கமாக அமர்ந்திருந்தவர்கள் மட்டைகளாலோ வெறும் கைகளாலோ தலையை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். கால்கள் வைக்கும் இடம் சுற்றிவர படகின் விளிம்பில் இருந்து சிறிதே பதிந்திருந்தது. அமர்வதற்காக நடுவில் ஒரு சாண் உயரத்தில் மேடை. அமர்ந்திருந்தவர்கள் தலைகீழாகக் கவிழ்த்த ‘வீ ‘ எழுத்தாக முழங்கால்களை உச்சியாகக் கொண்டு மடித்திருந்தனர். மேடையில் நடுவில் பெட்டிவடிவமாக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் நின்றுகொண்டு படகோட்டி அதைச் செலுத்திக்கொண்டிருந்தான். மறுகரையில் சில பெரிய சரக்குக் கப்பல்கள் கரையுடன் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. சரக்குகள் ஏற்றிய கப்பல் ஒன்று காயலிலிருந்து வளைகுடாக் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் மேற்புறத்தில் சரக்குகள் பாலித்தீன் போன்ற பெரிய கூடாரத் துணியொன்றால் மூடிக் கட்டப்படிருந்தன.

நான் இருந்த மர இருக்கையில்கூட மெதுவாக சூடு ஏறுவதை உணரமுடிந்தது. அணிந்திருந்த அரைக் கை சட்டையின் முன் பொக்கட்டைத் தடவிப் பார்த்தேன். அந்த ஒரு திர்ஹாம் நாணயம் கிடந்தது. அதன் ஒரு புறத்தில் ஒன்று என்ற இலக்கம் அரபியில் பொருக்காக உயர்ந்திருந்தது. மறுபக்கம் தேநீர் கேத்தல் போன்று சற்று நீண்ட வடிவம். அலாவுதீனின் அற்புதவிளக்காக இருக்கவேண்டும். பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் அதைத் தடவி துணியைத் தாண்டி உணர்ந்து கொண்டிருந்தேன்.வெளியில் எடுத்து தன்னிச்சையாக மேலே சுண்டி மீண்டும் பிடித்துக்கொண்டேன்.

இந்தச் சூட்டிலும் இவ்விடத்துக்கு வந்ததற்குக் காரணம் இன்றும் அவன் இவ்விடத்துக்கு வருவான் என்று நம்புவதால்தான். நேற்றைய மிகுதி வேலை இருக்கக்கூடும்.அவனைச் சந்திக்காமல் சென்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளாத பதிலொன்றோ அல்லது பதிலளிக்கப்படாத கேள்வியொன்றோ மனதில் கொழுவி இழுபட்டுக்கொண்டு இருக்கக்கூடும்.

நான் சிப்பிரியானோ அல்விஸ் அமரல்.தாய்லாந்துக்கான கிழக்குத் திமோர் தூதரகத்தின் பொறுப்புநிலை அதிகாரி. அப்படியென்றால் தூதர் இல்லாதவிடத்து அவரின் கடமைகளையாற்ற வேண்டிய நிலையில் இருப்பவன். விடுமுறைக்காலத்தின் சிலநாட்களுக்கு தனிப்பட்ட சுற்றுலாவாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறேன். மீதி விடுமுறையை கிழக்கு திமோரில் சொந்த ஊரில் கழிப்பதென்று திட்டம். இந்தப் பாலைவன தேசம் தன்னை எப்படிக் கட்டியெழுப்பி இருக்கின்றது என்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. செல்வச் செழிப்பின் பிரமாண்டமான, நவீன கட்டிடக்கலையில் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கட்டிடங்களும், செயற்கையான பொழுதுபோக்கு அம்சங்களும் சமாதானத்தினதும், அரசியல் உறுதிப்பாட்டினதும் காரணமான சர்வதேச வர்த்தகத்தின் விளைவுகள். செயற்கையின் அத்தனை பிரமிப்பையும் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது இந்தக் காயல்தான். பண்டைக்காலத்தில் மீன்பிடித்தலுக்கும், முத்துக்குளித்தலுக்கும், பிற நாட்டு வர்த்தகத்துக்கும் களமமைத்த மேடை இது என்று சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு கூறுகிறது. இந்த நாட்டின் ஆத்மா என்றே கூறவேண்டும். இதன் இருகரைகளிலும் இருந்துதான் இந்த நாடு உருவாகி உட்பரம்பியது.

இங்கு வந்த நாளில் இருந்து காலைப் பொழுதில் இதன் கரைகளில் நடந்து செல்வதும், சற்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் விருப்பமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அவன் நேற்று என் கண்ணில் பட்டான். கடும் பச்சைநிற நீளக்காற்சட்டையும் அதே நிறத்திலான மேற்சட்டையும் அணிந்திருந்தான். அதன் முதுகுப்பக்கமாக டொப் கிளினிங்க் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இடுப்புப்பட்டியில் முன்னாலும் பின்னாலும் தனித்தனியாக இரு பைகள் தொங்கின. வலதுபுறத்தில் வாள் உறைபோன்ற சற்று பெரிய கூம்புவடிவிலான தொட்டி தொங்கிக்கொண்டு இருந்தது. கையில் கூடைபோன்ற, செவ்வகவடிவிலான வாயைக்கொண்ட நீலநிறத்திலான தொட்டி. அதன் அரைப் பங்குக்கு மேலாக வெண்ணிறமாக நுரைத்துக் கொண்டிருந்த திரவம் நிரம்பியிருந்தது. மறுகையில் ‘டி’ வடிவிலான  நீண்ட துடைப்பான் போன்றவொன்று.

நீலநிற பிளாஸ்டிக் தொட்டியை நிலத்தில் வைத்த பின்னர் அந்த ‘டி’ வடிவிலான கருவியை சுவரில் சாத்திவிட்டு அதன் கண்ணாடியை விரலால் தொட்டுப் பார்த்தான். கண்ணாடி தூசு படிந்து ஒளி புகவிடாத பனிக்கட்டிபோன்று தென்பட்டது. சுட்டுவிரலால் அதில் நிமிர்ந்த நிலையிலான முட்டைபோன்ற உருவைக் கீறியவன் அதன் இடது மேற்பக்கத்தில் இருந்து வலது கீழ்ப் பக்கம்வரை மூலைவிட்டம்போன்று கோடு இழுத்தான். சிறிது உற்றுப்பார்த்தவன் ‘டி’ வடிவக் கருவியை எடுத்து தொட்டியின் நுரைத்திரவத்தை நனைத்தெடுத்தான். வேகமாக மேலிருந்து கீழாக கண்ணாடியில் பூசத்தொடங்கினான். சீமெந்து விளிம்புகளில் சற்று உள் தள்ளியிருந்த செவ்வகவடிவ நீண்ட கண்ணாடிகளை  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக பூசிக்கொண்டே சென்றான். பின்னர் முதலில் பூசிய கண்ணாடிக்கே வந்து இடுப்பில் கட்டியிருந்த கூம்புக்கூட்டிலிருந்து வழிப்பானை எடுத்தான். மேற்புறத்திலிருந்து வானவில் போன்று இடமிருந்து வலமாக வழித்தெடுக்கத் தொடங்கினான். இவ்வாறே அடிக்கண்ணாடிவரை வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக என்று துரிதமாக வானவில் வழிப்பை செய்துகொண்டான். எஞ்சிய நீர் கண்ணாடியில் கீழ்விளிம்பால் வழிந்துகொண்டது. கூம்புக்கூட்டில் முதல் வழிப்பானை வைத்துவிட்டு அதில் இருந்து சிறிய வழிப்பானை எடுத்து கீழ்விளிம்பில் தேங்கிய நீரை இழுத்துப் வெளியில் விட்டான். இடுப்புப் பட்டியில் பின்னால் தொங்கும் துணியை எடுத்து கண்ணாடியைத் துடைத்த பின்னர் அதை முன்னாலுள்ள பையில் போட்டுக்கொண்டான். இதையே வரிசையாக செய்துகொண்டு நகர்ந்தான். கட்டிடத்தின் பக்கவாட்டில் அவனைப்போன்றே சீருடை அணிந்த மேலும் இருவர் கண்ணாடியைத் துடைக்கும் வேலையில் இருந்தனர்.

நான் சற்று நகர்ந்து சென்று அருகில் உள்ள மர இருக்கையில் அமர்ந்து அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வெயில் உருக்கி ஊற்றத் தொடங்கிவிட்டது. 40°C இற்கு அதிகமாக இருக்கலாம். அவர்களின் உடைகள் வியர்வையில் தோய்ந்து உடலுடன் அங்கும் இங்குமாக ஒட்டிய இடங்கள் கருநிறமாகக் காட்சியளித்தன. அந்த இளைஞன் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி உதறினான். எனது அடிவயிற்றிலிருந்து இனப்புரியாத புகை எழுந்து மூச்சைத் திணறடித்தது போன்று தடுமாறினேன். இருக்கையின் மரச்சட்டத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். அந்த மேலாடையை மடித்து பையில் வைத்தவன் உள்ளிருந்து வேகமாக டி சேர்ட் ஒன்றை அணிந்துகொண்டு நான் இருந்த இருக்கையை நோக்கி வந்தான்.

அவன் எனக்கு காற்றில் வீசப்படும் சவுக்கை நினைவூட்டினான். உடற்கட்டுமானப் பயிற்சியால் கட்டியெழுப்பப்பட்டது போன்றதாக அல்லாமல் அவனின் உடல் குறுந்தூர ஓட்டவீரனுக்குரிய ஒடுங்கி இறுகியதாக இருந்தது. அவன் வலிமையில் நிற்கும் யானையல்ல, வேகத்தினை உடலாகக் கொண்ட சிறுத்தை போன்றவன் என்று எண்ணிக்கொண்டேன். சிறு புன்னகையுடன் அவனை எதிர்கொண்டேன். கடுமையான வெய்யில், 40°C இருக்கக்கூடும் என்று அவனுக்கு ஆங்கிலம் புரியுமோ என்ற தயக்கத்துடன் கூறினேன். இல்லை;45°C இருக்கும் என்று ஆங்கிலம் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இன்றி சாதாரணமாகக் கூறினான். அருகில் அமர்ந்த அவனுடன் பேசுவதற்கு விரும்பினேன். அவனும் பேசுவதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். மெதுவாகத் தொடங்கிய உரையாடல் ஏதோ ஒரு கட்டத்தில் சுழன்று என்னைப் பற்றியதாக மெலெழுந்தது. அவன் கண்கள் விரிய ஒருவிதமான ஈர்ப்புடன் எனது கதையைக் கேட்டது என்னை உற்சாகத்துடன் மேலும் மேலும் பேசத்தூண்டியது.

தொண்ணூறொன்றாம் ஆண்டு மே மாதம் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கு திமோரின் தலைநகருக்குத் திரும்பியபோது மீண்டும் சில காலத்தின் பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவிடுவேன் என்றே நினைத்திருந்தேன். அப்பொழுது நான் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன். பதினெட்டு வயது நிரம்பி பத்தொன்பது வயதில் இருந்தேன். திலியில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே தலைமறைவு இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இயக்கம் மலைப்பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.அதற்குப் புறம்பாக மாணவர்கள், இளைஞர்களை கொண்ட நெகிழ்வான கட்டமைப்புடனான இரகசிய இயக்கம் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் குடிசார் எதிராட்டத்தை இந்தோனேசிய அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக நடத்திக்கொண்டிருந்தது.

உலகிலேயே இந்தோனேசியாவைப் போன்ற பன்மைத்துவ நாடு இல்லை. மற்றைய நாடுகள் மக்களால் மட்டுமே பன்மைத்துவமுடையவை நிலத்தால் பெருமளவுக்கு இணைக்கப்பட்டவை. இந்தோனேசியா மக்கள் தொகையால் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்காண தீவுகளாலான தேசம் என்பதால் பூகோளத்தாலும் பன்மைத்துவமுடையது. ஆனால் அதனுடன் இணையவிரும்பாத  எம் கிழக்குத் திமோர் தேசத்தை படைவலுவால் கைப்பற்றிக்கொண்டமை பன்மைத்துவம் என்பதையே கேலிக்குரியதாக்கிவிட்டது. கூட்டாட்சியின் அதிகாரத்தின் கீழல்லாமல் சுதந்திரமாகவும் சிறு தேசங்கள் இருக்கமுடியும் என்பதும் பன்மைத்துவம்தான்.

இந்தோனேசியா எமது நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆராய்ந்து அறிக்கையை கையளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஆதரவுடனான போத்துக்கேய நாட்டுப் பிரதிநிதிகளையும் ஊடகவியலாளர்களையும்கொண்ட குழுவொன்று வருகைதர இருந்தது. இது வரலாற்றில் முக்கியமான தருணம் என்பதால் எனது நாட்டில் இருந்தேயாக வேண்டும் என்று ஜகார்த்தாவில் இருந்து திலிக்குத் திரும்பினேன். மக்கள் மத்தியில் குழுவின் வருகை தொடர்பான செய்திகள் பெரும் உற்சாகக் கொந்தளிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தன. எந்தவிடத்திலும் மக்கள் சந்தித்தால் முதலில் இதைப்பற்றியே பேசிக்கொண்டார்கள். போத்துக்கல் குழுவின் வருகையின்போது கிழக்குத் திமோரின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்  நடத்தினால் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். அதனால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிட வேண்டும் என்று தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டோம். அதேவேளை கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் மாகாணம் என்றும் அதற்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை கிழக்குத் திமோரியர்களைக் கொண்டே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்து செயற்பட்டது.

அரசின் ஆர்ப்பாட்டத்துக்கான ஆட்சேர்ப்புகளில் கிழக்குத் திமோர் ஆதரவாளர்களும் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அதை அப்படியே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றிவிடுவது அவர்களின் திட்டம். அதேவேளை இராணுவமும் உளவாளிகளும் திமோர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். முன்னர் பாப்பரசர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தமையால் இந்தக் குழுவின் வருகையின் போது இடம்பெறலாம் என்று இராணுவம் சந்தேகித்தது. அவ்வாறு எதிராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.சில இடங்களில் இராணுவம் பகிரங்கமாக பாரிய புதைகுழிகளைக் கிண்டியது. அதன் செய்தி தெளிவானது.

கதையை நிறுத்தி சற்று இடைவெளிவிட்டு அமைதியாக அவனைப் பார்த்தேன். அவனின் முகத்தில் இருந்த, சிக்கித் தெரிந்த உணர்வுகளை வேறுபிரித்துக் கொள்ளமுடியவில்லை.

சற்று நேரத்தில், பிறகு?, என்றான் அவன்

தடியொன்றின் இருமுனைகளிலும் தென்னோலைகளால் மீன்களைக் கட்டித்தொங்கவிட்டு, தோளில் சுமந்து செல்லும் மீன் வியாபாரியைப் பின்தொடர்ந்து செல்லும் பூனைகளைப் போன்று இளைஞர்கள்,மாணவர்கள் பின்னால் கிழக்குத் திமோரிகளை உள்ளடக்கிய இராணுவ உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான பலரும் கைது செய்யப்பட்டனர். எனது வீட்டுக்கும் வந்து தேடிவிட்டு சென்றனர். அப்பொழுது வெளியில் சென்றிருந்தேன். தகவல் எட்டியதால் திரும்பிச் செல்லாமல் நண்பன் வீட்டில் தங்கிவிட்டேன்.

நாட்கள் நெருங்க நெருங்க தேடுதல்களும் கைதுகளும் தீவிரமடைந்தன. எதிர்ப்பை உலகறியச் செய்யவேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டே வந்தது. தேவாலயங்கள் தேடுதலுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அரிதாக இருந்ததால் மோடெயல் தேவாலயத்தில் குழுவொன்று தங்கியிருந்து பணிகளில் ஈடுபடுவது நல்லதென்று முடிவெடுத்தோம். மோடெயல் தேவாலயம் என்படும் திலியின் புனித அந்தோனியார் தேவாலயம் கடலை நோக்கியவாறு வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றிருந்தது. மறுபுறம் தொலைவில் தெரிந்த மலைகள் அந்தத் தேவாலயத்தின் வரலாற்றுக்கும்கூட சாட்சியாக அமைதியாக ஓய்ந்திருந்தன. நெடிந்து நீண்ட பிரார்த்தனை நடுக்கூடம். பிரதான வாயிலுக்கு முன்புறமாக சற்றுப்பதிந்து இறங்கிய தாழ்வாரம். அதில் தாமரை இதழின் மேற்பாதிபோன்ற, இருபுறமாக மேல்வளைந்து உச்சிகொண்ட நான்கு நுழைவாயில்கள். தேவாலயத்தின் முன் இடது மூலையில் சுவருடன் ஒட்டி, நீண்டு உயர்ந்த மணிக்கூட்டுக் கோபுரம். அதன் உச்சியிலும் முன்பக்க நுழைவாயில்கள் போன்று தாமரை இதழின் மேற்பாதிபோன்ற இடைவெளிகளால் முழுமையாக வெளித்தெரியும்படி மணி கட்டப்பட்டிருந்தது. தேவாலயத்தின் இருமருங்கிலும் முன்புறம் போலவே தாழ்வாரங்கள் சுவரின் உச்சியில் இருந்து சற்றுக் கீழே ஆரம்பித்து சரிந்து நீண்டிருந்தன. ஆனால் அவை திறந்தவாறு அமையாமல் மூன்று புறமும் சுவரெழுப்பி கதவிடப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது. நான்காம் பக்கம் சுவரற்று, நடுக்கூடத்தின் வெளியுடன் தனது வெளியை இணைத்தவாறு இருந்தது.

தேவாலயம் என்றால் அதன் கட்டிடமல்ல அதன் ஓங்கி உயர்ந்த உட்புறவெளிதான். பலமுறை சென்றிருந்தாலும் அந்த உட்புறம் பாதுகாப்புணர்வையும், பதட்டத்தையும் ஒருசேர மனதில் ஏற்படுத்துவதை தவிர்க்கவே முடிவதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்மனதில் படிந்த குகை வாழ்க்கை நினைவுகள் தூண்டுவதால் அந்தப் பாதுகாப்புணர்வு வருகின்றது என்று எண்ணிக்கொள்வதுண்டு. பதட்டத்துக்கான காரணத்தைத்தான் புரிந்துகொள்ளமுடிவதில்லை. மனிதனின் தேவைக்கு மிக அதிகமான, மேலதிக வெளி அளிக்கும் அசௌகரியமாக அது இருக்கக்கூடும்.

காலை மாலை இருநேரமும் ஆராதனைகள் நடைபெறுமாயினும் மாலையிலேயே கூட்டம் நெருக்கும். அந்தோனியாரை வேண்டிக் கொள்வதுடன் சூரியன் வீழ்ந்து மறைவதை ரசித்தபடி கடற்கரையோரமாக சிறுநடை செல்வதற்காக அதிக கூட்டம் வருகின்றது. ஆராதனை முடிந்து கூட்டம் கலைந்த பின்னர் இரவு முழுவதும் தேவாலயம் எமது கைக்குள் இருக்கும். தாழிட்டுவிட்டு உட்புறமாக தேவாலய மின் குழல் விளக்குகளை நிறுத்திவிடுவோம். நான்கைந்து பேராக குழுக்களாக வட்டவடிவில் அமர்ந்து இரவிரவாக பதாதைகள் வரைவது, படங்கள் வரைவது, கொடிகள் செய்வதென்று பணிகள் நீளும். நடுவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கும்.

போத்துக்கேய குழுவின் வருகை நாள் அண்மிக்க அண்மிக்க, நாடெங்கிலும் எதிர்பார்ப்புடனான பதட்டமும், பயமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. மக்களின் பேச்சுகள், தொடர்புகள், நடவடிக்கைகளில் எல்லாம் உளஎழுச்சியும் எச்சரிக்கை உணர்வும் நிறைந்திருந்தன. காற்றில்கூட அவை பரவித் ததும்புவதுபோன்று இருந்தது. ஒவ்வொருவரும் அதைப் பற்றிய உணர்வே இன்றி இயல்பாக இருப்பதாக இராணுவத்தினருக்கும், உளவாளிகளுக்கும் காட்டுவதற்கு முற்பட்டுத் தோற்றுக்கொண்டிருந்தனர். மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்படும், காணாமல்போகும் தகவல்களை நாளாந்தம் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம் .தம்மைமீறி எதுவும் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் வெறியுடனிருந்தார்கள்.

தேவாலயத்தில் நாங்கள் எச்சரிக்கையாகவே செயற்பட்டோம்.அப்படியிருந்தும் வெளியே சென்று திரும்பிய சிலர் இந்தோனேசிய உளவாளிகளின் கண்களில் பட்டுவிட்டார்கள்.வழிபாட்டுக்குச் செல்வதாக கூறிவிட அவர்களும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.இந்த நிகழ்வு ஆலயத்தினுள் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. உளவாளிகள் பெரிதுபடுத்தாமல் சென்றதாலும், திடீரென்று வேறு இடத்துக்கு அனைத்தையும் மாற்றுவது சாத்தியமில்லை என்பதாலும் பணிகளைத் தொடர்ந்து செய்தோம்.

பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற சில பத்திரிகையாளர்களின் வருகையை இந்தோனேசிய அரசு எதிர்த்தமையால் போத்துக்கல் குழு வருகையை நிறுத்திவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை. மெதுமெதுவாக மறைவான இடங்களுக்கு பதாகைகளையும், கொடிகளையும் கொண்டுபோய் சேர்த்த பின்னர் நாங்களும் இடம் மாறிக்கொள்ளலாம் என்று நினைத்தோம். தொண்ணூற்றொராம் ஆண்டு ஒக்டோபர் இருபத்தெட்டாம் நாளை எதை மறந்தாலும் என்னால் மறக்கமுடியாது. நள்ளிரவு தாண்டி ஒரு மணி இருக்கும்.தூரத்தில் நாய்களின் ஊளை எழுந்தது. அதைத் தொடர்ந்து நாய்களின் ஊளைகள் கிறிஸ்மஸுக்குக் கொழுத்தும் சரவெடி போன்று ஒன்றன்பின் ஒன்றாக நெருங்கி வந்தன. காற்று தேவாலய வளாகத்தை பல்வேறு அளவிலான ஊளை ஒலிகளைக் கொண்டுவந்து நிரப்பியது. என்ன நடக்கின்றது என்ற  பதட்டத்து எழுந்து நின்ற எங்களை ஒவ்வொரு பக்கமாக ஊன்றப்பட்டிருந்த மெழுகுதிரிகள் பல்வேறு திசைகளில் நிழல்களாக விழுத்தின. சில அடர்ந்தியானவை, சில மற்றைய ஒளியில் மங்கியவை. ஒன்றுடன் ஒன்று கலந்தும், பிரிந்தும்,குறுக்குவெட்டியும் அசைந்த நூற்றுக்கணக்கான நிழல்கள் நாய்களின் ஊளைச் சத்தத்துக்கு ஏற்ப நடனமிடுவது போன்றிருந்தன. வெளியில் ட்ரக் வண்டிகளின் இயந்தி ரஇழுவிசை ஓசைகள் கேட்டன. தேவாலயத்தின் உட்புறவெளி அச்சமாக மாறி அனைவர் மீதும் அழுத்தியது.

நானும் சிலரும் தேவாலயத்தின் தாழ்வாரம் மறைத்தபடி இருந்த பின்பகுதியின் பக்கவாட்டுக் கதவை திறந்து மெதுவாக வெளியில் வந்தோம். காற்று சுழன்றவாறு உள்நுழைந்து மெழுகுதிரிகளை அணைத்த வேளையில் ட்ரக் வண்டிகளின் ஓசை நின்று தடதடவென்று சப்பாத்துக்கால்கள் நிலத்தில் குதிக்கும் சப்தம் கேட்டது. கண நேர இடைவெளியில் தேவாலயக்கதவு உக்கிரத்துடன் தட்டப்படுவதும் அதைத் தொடர்ந்து கதவு உடைந்து திறபடும் சத்தமும், உள்ளிருந்தவர்களின் அபயக்குரல்களும் எழுந்தன. இந்தோனேசிய மொழியிலும், டெட்டும் மொழியிலுமான கூச்சல்களும், வாதாட்டங்களும், தள்ளுமுள்ளுகளும் கலந்து கேட்டது. அதைத் தொடர்ந்து வேட்டுச் சத்தங்களுடன், கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற அலறல் எழுந்தது. நான் பக்கவாட்டுச் சுவரில் உன்னி ஏறிக் கூரையில் குப்புறப்படுத்துக் கொண்டேன். கூரையில் படுத்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல. பக்கவாட்டில் தொலைவில் இருந்து பார்த்தால் கண்டுவிடக்கூடும். எந்த நேரமும் வெடி விழலாம் என்ற பதட்டத்தில் மூளையில் சிந்தனைகள் மங்கியோடின. இறங்கி ஓடினால் வெடி நிச்சயம். திடீரென்று கோயில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்து மக்கள் கோயிலை நோக்கி வரும் சலசலப்புகள் கேட்டன. மக்கள் தேவாலயத்தைச் சூழ குழுமத் தொடங்கிவிட்டார்கள். கொலைகாரர்கள் என்று இராணுவத்தை திட்டுவதும்,கோயில் வளாகத்துக்குள் நுழைய முனையும் வாக்குவாதங்களும் தெளிவில்லாமல் இரைச்சலாகக் காதில் விழுந்தன.

சிறிது நேரத்தில் ஆயர் பெலோவின் குரல் கேட்டது. இராணுவத்தினருடன் வாதாடும் ஒலியும் அவர்கள் ஏதோ கூறுவதுமாக தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாத ஓசைகள். மக்கள் உள்ளே கூட்டமாக வளாகத்துக்கு நெருக்குப்பட்டு வேகமாக உள்வருவது தெரிந்தது. நான் மெதுவாக இறங்கி அவர்களுடன் கலந்தேன். தேவாலய முன்றலில், மின்விளக்கின் ஒளியில் இரு உடல்கள் கிடப்பது தெரிந்தது. பிரதான வாயிலில் இருந்து துடைப்பத்தால் பூசப்பட்ட தீந்தை போன்று விழுந்து கிடக்கும் உடல்கள் வரை இரத்தம் இழுபட்டிருந்தது. மண்ணில் தோய்ந்து ஒருபுறம் சரிந்திருந்த முகம்.நண்பன் செபஸ்டியாவ் கோமஸ். ஏசுவே… கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. சற்று தலையை உதறி மற்றையதை நோக்கினேன் வாயைப் பிளந்தபடி கிடந்த அது இராணுவ உளவாளி அஃபொன்ஸோ. அவன் உடலில் செருகப்பட்டிருந்த கத்தியின்பிடி மட்டும் வெளித்தெரிந்தது. மக்கள் கூட்டத்தை தள்ளியபடி இராணுவத்தினர் ஏனைய நண்பர்களை ட்ரக் வண்டிகளை நோக்கி இழுத்துச் சென்றார்கள். கூட்டத்தின் மத்தியில் நான் தலையைக் குனிந்துகொண்டு நின்றேன். செபஸ்டியாவ்வின் உடலின் அருகில் இராணுவ சப்பாத்தினால் உருவான பள்ளத்தில் வழிந்த இரத்தம் தேங்கிநின்றது. ஆயர் பெல்லோ அதில் குனிந்து எதையோ எடுத்தார். செபஸ்டியாவ் அணிந்திருந்த சிலுவையுடனான சங்கிலி. இரத்தம் அதில் இருந்து துளித்துக் கொண்டிருந்தது.

கலைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சென்று நண்பன் ஒருவனின் வீட்டில் அடைக்கலமானேன். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தேவாலயத்தில் இருந்து சிலர் தப்பியதை அறிந்து கொண்ட இராணுவம் தேடுதலை முடுக்கிவிட்டது. இரண்டு நாட்களுக்கு அதிகம் ஒரே இடத்தில் மறைந்திருக்காமல் இடம் மாறியபடியே இருந்தேன். இராணுவத்தினர் ஒருமுறை நான் தங்கியிருந்த வீட்டையும் தேடினர். வீட்டின் பின்புறமுள்ள கால்களை மடித்தவாறு ஒருவர்  குந்தியிருக்ககூடிய கிடங்கில் நான் அப்பொழுது ஒளிந்திருந்தேன். அதன் மீது காற்று வருவதற்கான சிறு இடைவெளிவிட்டு மரப்பலகை இடப்பட்டு அதன் மேலாக மண்ணைப் பரப்பிப் பழைய பொருட்களை இட்டிருந்தனர். இராணுவத்தினர் பின்புறம் எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் வரலாம் என்று சந்தேகம் எழுந்ததால் இரவோடு இரவாக வேறு இடத்துக்கு மாறவேண்டியதாகிவிட்டது.

போத்துக்கேயக் குழுவின் வருகை நிறுத்தப்பட்டது மக்களின் உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது. மழை சற்று தூறியிருந்தாலும் நவம்பர் மாதத்தில் காற்றில் தூசுகள் அடங்கவில்லை. அந்தத் தூசுகள் போன்று விரக்தி ஒவ்வொருவர் மீதும் படிந்து கொண்டிருந்தது. செபஸ்டியாவ் கோமஸின் படுகொலை உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அதையும், எதிர்பார்ப்பு முறிந்த ஏமாற்றத்தையும் இராணுவத்தின் ஆயுதங்கள் மீதான பயம் சாம்பலாக மூடியிருந்தது. ஆயினும் நாம் மனம் தளரவில்லை. செயற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து வேலை செய்து கொண்டிருந்ததால் தேவாலயக் கைதுகளுக்குப் பிறகும் தேக்கம் ஏற்படவில்லை. இதை எப்படி சாதகமாக மாற்றுவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தோம். எமது வழக்கப்படி இறப்பின் பின்னரான பதினாலாம் நாள் நினைவு வழிபாடு மேற்கொள்ளப்படும்.

செபஸ்தியா கோமஸின் நினைவுநாள் வழிபாட்டை இந்தோனேசிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்குத் தீர்மானித்தோம் .ஃபலின்டில் விடுதலைப் போராட்டத் தலைமைக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. குடிசார் எதிராட்டத்துக்கான இரகசிய இயக்கம் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் இருந்துவேறா க,சுயாதீனமாகச் செயற்பட்டாலும் முக்கிய நடவடிக்கைகளை அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் ஈடுபடுவதில்லை. விடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பில் அவர்களின் முதன்மை இடத்தை அங்கீகரித்தவர்களாகவே இருந்தோம். எந்தவித வன்முறையிலும் ஈடுபடாது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஃபலின்டிலிடம் இருந்து பதில் வந்தது. ஆயத்தப்பணிகள் தீவிரமடைந்தன. தங்குமிடங்களும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான பிரதிநிதி திலிக்கு வந்திருந்தமையால் அவர் இருந்த இடத்துக்கும் நினைவு நிகழ்வுடன் ஊர்வலமாகச் செல்வதற்கு திட்டமிடப்பட்டு நிகழ்வு ஒரு நாள் பின்தள்ளி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாள் விடிவதற்கான பதட்டத்துடன் சரிந்து கிடந்தேன். மனதில் ஏதேதோ குழப்பங்கள். நள்ளிரவில் திடீரென்று இரகசிய செயற்பாட்டு நண்பன் ஒருவன் வந்தான். அவசரமாக ஓரிடத்துக்கு செல்லவேண்டும் வா என்று அழைத்துச் சென்றான். வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகளாலும் வளவுகளுக்குள்ளாலும் இராணுவத்தால் உடைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்றான். சுற்றிவர புதர்கள் அடர்ந்து கூரைகள் எதுவுமற்ற சுற்றுப்புறச்சுவர் மட்டும் எஞ்சி நின்றது. கதவுகள், சாளரங்களின் நிலைகள் கழற்றி எடுக்கப்பட்ட வெறும் சிமெந்துச் சுவர்கள்.உள்ளே நிலத்தில்கூட வெடிப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே புதர்கள் எழுந்திருந்தன. கூரையுள்ள வீடு மனிதனுக்குத்தானே தேவை.

உள்அறை ஒன்றுக்கு சென்ற போது அதில் சிலர் துணியொன்றை விரித்து வட்டமாக அமர்ந்திருந்தனர். அருகில் கூடை ஒன்று கவிழ்க்கப்பட்டு இருந்தது. நெருங்கிச் சென்றபோது அவர்கள் இரகசிய செயற்பாட்டு நண்பர்கள் என்பது தெரிந்தது. ஒருவரை மட்டும் அடையாளம் தெரியவில்லை. நடுத்தர வயதுடையவர்; நெற்றி கால்வாசி தலை வரை மேலேறி விட்டிருந்தது.அதைச் சமப்படுத்தும் வெறியுடன் வளர்க்கப்பட்டு பின்புறமாக வாரி இழுத்த, சிக்கெடுக்கப்படாத முடி தோள்களில் புரண்டது. அதே போன்றே ஒழுங்காக்கப்படாத மீசை. யாரது என்ற பார்வையை நண்பனில் விட்டெறிந்தேன். ‘எல் செவின், எல் செவின்’ என்று தேவாலயத்தில் ஆராதனை நடைபெறும் போது பக்கத்தில் நிற்பவரிடம் அவசரமாக எதையாவது கூற நேர்வது போன்ற ஒருவித பதட்டத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.

நான் உறக்கத்தில் கனவு காண்கிறேனா இல்லை உண்மையாகவே நாட்டுப் புறக்கதைகளின் வீரனைக் காண்கிறேனா என்று திகைப்பெழுந்தடங்கியது. எல் செவினைப் பற்றி எத்தனை கதைகள். ஒருமுறை எல் செவினை இந்தோனேசிய இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கியபோது புகையாக மாறி மெலெழுந்து சென்றதாகவும் மலையைக் கடந்து சென்று மறுபக்கம் மழையாகப் பெய்து மீண்டும் எல் செவினாக மாறியதாகவும் வியப்புடன் பேசிக்கொள்வர். காட்டில் கொடியாக மாறி மரத்தில் படர்ந்து உச்சி வரை சென்றிருந்ததாகவும் இராணுவம் அதைக் கவனிக்காமல் கடந்துவிட்டதாகவும், இன்னுமொரு முறை பச்சைப் புறாவாக மாறிப் பறந்து சென்றதாகவும் இப்படிப் பல கதைகள்.

உங்களுக்காக இன்று எத்தனையோ அபாயங்களைத் தாண்டி வந்துள்ளேன். உடனடியாக செய்து முடித்துக் கிளம்பவேண்டும் என்று மெல்லிய புன்னகையுடன் அவரின் மீசை அசைந்தது. மற்றவர்களுடன் நானும் அரைவட்டமாக அமர்ந்தோம். நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புத்துணியில் ஃபலின்டில் என்று எழுதப்பட்டிருந்தது அதன் மேற்புற விளிப்பின் மையத்தில் மரத்தாலான சிலுவை கிடையாக வைக்கப்பட்டிருந்தது.

எல் செவின் எழுந்து கூடையைத் தூக்கி கழுத்தில் பொன்னிற இறகுகளும் பழுப்பு நிறமும், சாம்பல் வெள்ளை சிறகுகளுமாக க்கெக் க்கெக் என்றுகொண்டிருந்த சேவலைப் பிடித்துக்கொண்டு வந்து அமர்ந்தார். தலையில் இருந்து மெதுவாகக் கழுத்துவரைத் தடவினார். சேவல் சிலிர்த்து அரைக் கண்ணை மூடியது. நாளை எமக்கு வெற்றியாக அமைய வேண்டும்.முன்னோர்கள் மலைகளில் இருந்து இறங்கி வந்து எமது கால்களிலும் தோள்களிலும் வலுச் சேர்க்கவேண்டும் என்று முணுமுணுத்தவாறு சடுதியாக ஒற்றைக் கையால் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். சிறகுகள் இரண்டும் படபடவென்று அடித்து இறகுகள் பறந்தன. உடல் துடித்து அமைதியானது. பின் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கியவாறு கழுத்தில் மெல்லிய கீறல். துணியில் வைக்கப்பட்ட குவளையில் இரத்தம் ஒழுகி நின்றது. வீட்டுக்கு வந்து படுத்தபோது மனத்தில் எதுவும் இருக்கவில்லை. மலை மீது ஏறி இறங்கியபின் வரும் ஆழ்ந்த உறக்கத்தில் வீழ்ந்தேன். சேவல் கூவும் சத்ததுடன் எழுந்தேன். நேற்றைய உறக்கம் வியப்பாக இருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கான நேரம் நெருங்க உடலெங்கும் பதட்டத்துடனான பரவசமொன்று உருவாகிக் கொண்டிருந்தது.

சுத்தமாகி,உடைகளை மாற்றிக்கொண்டேன்.சுருட்டப்பட்டிருந்த பழைய படுக்கை விரிப்பை விரித்து உள்ளடங்கியிருந்த பதாகையையும் கொடியையும் எடுத்தேன். மேற்சட்டையை கழற்றி உடம்பின் சுற்றிக்கொண்டு மீண்டும் அணிந்து கொண்டேன். காலைக் குளிருக்கு இதமாக இருந்தது. தேவாலய ஆராதனைக்கு சென்றால் உளவாளிகள் என்னை அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதனால் ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவில் கலந்துகொள்வதற்காக காத்திருந்தேன். ஆராதனை அதிகாலை ஆறுமணிக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. முடிவதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். பதட்டத்துடனான காத்திருப்பு.

ஆர்ப்பாட்டத்தின் குரல் அலையலையாக நெருங்கி வந்துகொண்டிருந்தது. வீவா திமோர் லெஸ்தே, வீவா ஸனானா முழக்கங்களுடன் கலந்த இரைச்சல். உடல் சிலிர்த்தது. நூற்றுக்கணக்கானோரையே எதிர்பார்த்தோம். ஆனால் நிச்சயமாக அதைத் தாண்டியிருக்கின்றது. அருமை திமோர் லெஸ்தே உன் விதி மாறுகின்றது என்று பாடினேன். ஆர்ப்பாட்டத்தின் முனை நான் இருந்த இடத்தை தாண்டியது. கடந்து சென்று கொண்டிருப்பவர்களின் முழக்கமும் வந்துகொண்டிருப்பவர்களின் முழக்கமும் இருவேறு திசைகளில் இருந்து வரத்தொடங்கின .மின்னலென வெளிவந்து கூட்டத்துடன் கலந்தேன். அதே வேகத்தில் பதாகையும், கொடியும் உடலில் இருந்து வெளியில் வந்தன.

பெருமழை பெய்து வீடுகள், வளவுகள் எங்கிலும் இருந்து நீர் வீதிக்கு ஓடிவந்து இணைவது போன்று செல்லும் வழியெங்கும் திசைகள் எங்கிலும் இருந்து இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெண்கள், பாடசாலைக்கு வந்த மாணவர்கள் இணைந்துகொண்டே இருந்தார்கள். காந்தமொன்று இரும்புத் துணிக்கைகளுக்கு இடையால் இழுக்கப்படுவதாக மக்களை ஊர்வலம் தன்னிச்சையாக ஈர்த்துக்கொண்டே சென்றது. பொலிசாரும், இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளிலும், வீதியோரங்களிலும் பெருமளவில் நின்றார்கள். அவர்கள் முகங்கள் நம்பவே முடியாத ஆச்சரியம், கோபம், வெறுப்பு என்று கலந்துகட்டிப் பிரதிபலித்துக் கொண்டன. இத்தனை மாதங்களாக எது நடைபெறக் கூடாதென்று இராப்பகலாகப் பாடுபட்டார்களோ அது அவர்களின் கண்முன்னே நடந்துகொண்டிருந்தது.

அரசியல் நாடகங்களால் ஆனது. வெறும் அரசியல் நிலைப்பாடுகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதன் அடிப்படையில் நடத்தப்படும் நாடகங்களே வரலாற்றை நகர்த்துகின்றன என்பது எம் இரகசிய அமைப்பினரின் கூட்டங்களில் அடிக்கடி கூறப்படும் வாசகமாகும். நிலைப்பாடு சரியாக இருந்தாலும் நாடகம் சரியாக அமையாவிட்டால் அந்த நிலைப்பாட்டை முன்னகர்த்த முடியாதென்பது அதன் இன்னுமொரு வடிவம். கிழக்குத் திமோர் இந்தோனேசியாவின் ஒரு அங்கம் என்பதைக் காட்டுவதற்காக ஜகார்த்தா அரசும், தனி நாடு என்பதைக் காட்டுவதற்காக நாமும் போத்துக்கேயக் குழுவின் முன் ஆர்ப்பாட்ட நாடகங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தமை வருகை நிறுத்தப்பட்டதுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் ஒத்திகையை வீணாக்காமல் விடுதலை ஆதரவாளர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதை மறுதரப்பு ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் பார்த்துக்கொண்டு நிற்கிறது.

திட்டமிட்டபடி  ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தங்கியிருந்த ஹோட்டல் அமைந்த வீதிக்கு திரும்ப முயன்றோம். ஆனால் பொலிஸாரின் கடுமையான தடுப்பைமீறிச் செல்ல முடியவில்லை .தெற்காகத் திரும்பி இடுகாட்டை நோக்கித் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம். மண் எனும் சிலுவையில், எழவே முடியாதபடி மனிதர்களை வைத்து அறையப்பட்ட, ஒன்றைப் போன்று ஒன்றல்லாத சிமெந்து ஆணிகளின் தோட்டம் ஸண்டா க்ரூஸ். புகைப்படங்கள் பதிக்கப்பட்டவை, கண்ணைப் பறிக்கும் வண்ண டைல்ஸ் பதிக்கப்பட்டவை, இயேசுவின் சிலைகளைத் தாங்கியவை, சிறுவீடுகள் போன்றவை, பரிசுத்த ஆவியான புறா இறங்கிக் கொண்டிருப்பவை என்று கூறிக்கொண்டே போகலாம் .இவற்றுடன் செபஸ்டியாவ் கோமஸினதும் இணைந்துவிட்டது. புதிய மண் குவிக்கப்பட்டு பெரிய வெள்ளை சிலுவை உயர்ந்து நின்றது. நெடுக்காக ஆர்.ஐ.பி, பிறப்பு இறப்பு திகதி விபரங்களும், குறுக்காக செபஸ்டியாவ் கோமஸ் என்ற பெயரும் கறுத்த மையால் எழுதப்பட்டிருந்தன. பெரிய மலர் வளையம் ஒன்றை சிலுவையின் கழுத்தில் இட்டார்கள் .இதுவரை இருந்த ஒட்டுமொத்த உற்சாக மனநிலை வடிந்து வெறுமை குடிகொண்டது. இன்று அவனும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணம்! அவன் இருந்தால் இது நடைபெற்றே இருக்காதே என்று மறுவிநாடி தோன்றியது.

இடுகாட்டுக்குள்ளும் வெளியிலுமாகக் கூட்டம் நெரிபட்டது. எதிர்ப்புக் முழக்கங்கள் ஓயவில்லை. நான் மீண்டும் வெளியில் வந்து, வீதியைப் பார்த்த வண்ணம் ஏற்கனவே மதிலில் நின்றிருந்தவர்களுடன் ஏறிக் கொண்டேன். வீதியெங்கும் நிறைந்து வழிந்தது. வீவா திமோர் லெஸ்தே,வீவா ஸனானா முழக்கங்கள் எழுந்தன.

இராணுவ வாகனங்கள் வந்து கூட்டத்தின் காரணமாகத் திரும்புவதும் அதில் இருந்து சீருடை முழுமையாக அணிந்தவர்களும்,மேலாடை இல்லாமல் காற்சட்டை மட்டும் அணிந்தவர்களுமாக இறங்கி எதிரில் இருந்த இராணுவத்தினரின் இடுகாட்டுக்கு வரிசைகட்டிச் செல்வதும் தெரிந்தது. சற்று நேரத்தில் அவ்விடுகாட்டின் மதிற்சுவர்களிற்கு மேலால் துப்பாக்கிகள் எம்மை நோக்கி நீண்டன. பீதியுடனான கூச்சல் எழுந்தது. கையில் இருந்த மெகாபோனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருவர் நாம் அமைதியாகவே எதிர்ப்பைக் காட்டுகின்றோம், இராணுவத்தினர் எமக்குப் பாதுகாப்பளிக்கவே வந்துள்ளனர் என்று பதட்டத்துடன் கூறியவாறு நின்றிருந்தார். இராணுவத்தினர் வரிசையாக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நின்றதையும் விசையை அழுத்தத் தயாரான அவர்களின் நிலையையும் புறக்கணித்தாலும்கூட அவர்களின் கண்களில் உறைந்து கொண்டிருந்த வேட்டையாடும் வெறி மூளையில் எச்சரித்தது. பின்புறமாகக் குதிக்கவும் துப்பாக்கிகள் வெடிகளைத் தீர்க்கவும் சரியாக இருந்தது.

எங்கும் கூக்குரல், மரண ஓலம். சில நிமிடங்கள் தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்துத் தள்ளின. நான் ஓடியும், கல்லறைகளுக்குள் பதுங்கி ஊர்ந்தும் நகர்ந்து கொண்டிருந்தேன். உண்மையில் பீதியில் கூச்சலும் வெடிச்சத்தமும் கேட்டதே தவிர சுற்றிவர என்ன நடக்கின்றது என்பதை எனது புலன்கள் அறியவில்லை. மூளை உறைந்துவிட்டது போன்ற நிலை. என்னைச் சுற்றி இருட்போர்வை போர்த்துக்கொண்டது போலவும் ஓடுவதற்கான காலடி வைக்கும் இடங்கள், பற்றுவதற்குரிய இடங்களை மட்டும் அப்போர்வை கிழிந்து கிழிந்து வெளிச்சத்தை அனுமதிப்பது போன்றும் இருந்ததாக பின்னர் நினைவுக் கூரும்போது தோன்றுகின்றது. இடுகாட்டின் பின்புறத்துக்கு வந்து மூச்சிரைக்க கல்லறையொன்றின் மறைவில் படுத்துக்கொண்டேன். சற்று தொலைவில் இன்னொரு கல்லறை மறைவிலிருந்து வெள்ளையர் ஒருவர் தனது வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தது தெரிந்து சற்று தெளிவடைந்தேன். எதிர்ப்பாட்டத்தை குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அவர்.

சட்டை முழுதும் இரத்தம் தெறித்திருந்தது. தடவிப் பார்த்தேன் . கால் கைகளில் சிராய்ப்புக் காயங்களைத் தவிர வேறில்லை. கூட்டமாக ஓடியபோது யாருடைய இரத்தமாவது பட்டிருக்க வேண்டும். முதுகில் குளிர்வது போன்று இருந்தது. கையால் தடவினேன் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தது. மனப்பதைப்புடன் இழுத்தெடுத்தேன் . இரத்தத்தால் ஊறிய தலைமயிர்கள் ஒருபுறமாகவும், பசைபோன்று வழுவழுத்த இரத்தம் சதைகளுடனான மறுபுறத்தையும் கொண்ட மண்டையோட்டின் துண்டு. கையை உதறி வீசினேன். முன்னரைப் போன்று தொடர்ச்சியாக அல்லாமல் இடைக்கிடை வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காயப்பட்டு விழுந்து கிடந்தவர்களைச் சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருந்தனர். விழுந்து துடித்து க்கொண்டிருந்த ஒருவரை சுடுவதற்கு முயல்வதும்.ரவை தீர்ந்ததால் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அவர் வயிற்றைக் கிழிப்பதும் தெரிந்தது. கழுத்தில் குளிரேறித் தலை விறைத்துக்கொண்டு வந்தது . கால்களில் வலுவைத் திரட்டி பின்மதிலால் பாய்ந்து ஓடத்தொடங்கினேன்.

மீண்டும் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்தது. ஸண்டா க்ரூஸ் மயானத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று பின்னர் தெரியவந்தது. நாளாந்தம் பயங்கரமான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. காயமடைந்தவர்கள் பலர் இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு இராணுவத்தினர் பெரிய கற்களால் மண்டைகளைப் பிளந்தும், காயங்களுக்கு குளிர்நீர் ஊற்றியும் அவர்களைப் படுகொலை செய்ததாக ஒளிந்திருந்து தப்பியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டோர் பலர் ஆற்றங்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டு வீசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. காயமடைந்தோர் நகரிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் தேடித்தேடி கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைமறைவாக எவ்வளவு காலத்துக்கு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. தேடுதல் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருந்தது. பல்கலைக்கழகக் கல்வியை இடை நிறுத்திவிட்டு வந்த சில காலத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்லமுடியாத ஒற்றையடிப் பாதை வழியாக வெகுதூரம் வந்துவிட்டேன் என்றெண்ணித் திகைத்து நின்றேன். இனித் திரும்பிப் பார்ப்பதில் பயனில்லை.

திமோரின் நீட்டுவாக்காக, முதுகெலும்பாக மலைத்தொடர் சென்றது. சமவெளிகள் தாய், தந்தை; மலைகள் பாட்டன், பாட்டி என்பது திமோரிகளின் வழக்கு.தாய், தந்தை கைவிட்டாலும் பாட்டன், பாட்டி கைவிடுவதில்லை என்ற நம்பிக்கை எம்முடன் பின்னிப் பிணைந்தது. நானும் வேறு சில செயற்பாட்டாளர்களும் ஃபலின்டில் இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமுள்ள மலையடிக் கிராமமொன்றை அடைந்தோம். கிராமத் தலைவரிலிருந்து கிராமத்தவர் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த மலைப் பிரதேசங்களில் இந்தோனேசிய இராணுவத்தினர் எளிதில் நுழைந்துவிட முடியாது இராணுவ நடவடிக்கையொன்றால் மட்டுமே வரமுடியும். அங்கிருந்து நான் ஃபலின்டிலுக்கான ஓட்டவீரனாக செயற்படத் தொடங்கினேன். அதை எஸ்டா ஃபெடா என்று கூறுவார்கள். கடிதங்கள், உணவு, இராணுவ நடமாட்டத் தகவல்களை மலைக்காடுகளிலுள்ள இயக்கத்தினருக்கு எடுத்துச் செல்லும் பணி.

விரைவில் படைப்பயிற்சி பெற்று ஃபலின்டில் முழு நேர உறுப்பினராகிவிட்டேன். ஸண்டா க்ரூஸ் படுகொலைகளுக்குப் பிறகு என்னைப் போன்று வேறுபலரும் இணைந்திருந்தார்கள். இந்தோனேசியா பெரிய நாடு. அதை நேரடியாக வெற்றிகொள்ள முடியாதென்பதை நாம் அறிந்திருந்தோம். எமக்கான சூழல் உருவாகும்வரை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே ஃபலின்டிலின் நோக்கமாக இருந்தது. எதிரி நிலத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் நிம்மதியாக உறங்கக்கூடாது. நாங்கள் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செயற்பட்டோம். சிறுசிறு தாக்குதல்கள், கிராமங்களில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பது என்று பணிகள் இடைவிடாது இருந்துகொண்டிருந்தன.

ஸண்டா க்ரூஸ் படுகொலைகளின் ஒளிப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாக கிழக்குத் திமோர் மீதான சர்வதேசப் பார்வை மாறத்தொடங்கியது. அது அதிரடியான திருப்பம். வரலாறு சடுதியாக  எமது பக்கம் திரும்பியது. வெளிநாட்டு அழுத்தங்களால் படுகொலைக்குப்பின் எட்டாண்டுகளில் இந்தோனேசியா பொதுவாக்கெடுப்பு நடத்தியதும் கிழக்குத் திமோர் தனி நாடானது நாம் எவருமே நம்பியிருக்காத வகையில் நடைபெற்று முடிந்தன.

நான் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தேன். கண்கள் ஒளியேறி மினுங்கின. எனது கைகளைப் பற்றி வாழ்த்துகள் என்றான். விடுதலையடைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், பலமுறை இவ்வாறான வாழ்த்துகளை கேட்டிருந்தாலும், அவனின் வாழ்த்து எனது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அவனின் கைகளைப் பிடித்து நன்றி, நன்றி என்று மீண்டும் மீண்டும் கூறினேன்.

விடுதலைப் போராட்ட வீரர்களில் குறைந்தபட்ச எழுத்தறிவற்றவர்களைத் தவிர ஏனையோர் கிழக்குத் திமோருக்கான இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எதிர்காலத்துக்கான உத்தரவாதம் கிடைக்கும் என்றாலும் எனது இயல்புக்கு பொருத்தமற்றதென்பதால் நான் இராணுவத்தில் இணையவில்லை .எனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்று விவசாயம் செய்வதற்குத் தீர்மானித்தேன். செல்வதற்கு முன் ஆயர் பெல்லோவை சந்திக்கச் சென்றேன். எமது புதிய நாட்டுக்குக் கற்றவர்கள் அதிகம் தேவை. நாட்டுக்கான பணி என்றும் முடிவடையக் கூடியதல்ல. பல்கலைக் கழகத்தில் ஓராண்டு கற்ற உன்னைப் போன்றவர்களை விட்டுவிடமுடியாது. நீ தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்கிறேன்; படி என்றார் அவர். முப்பது வயதாகி விட்டது இனி எப்படி என்றேன் தயங்கியபடி. உனக்கு தாய்லாந்தின் அஸம்ஷன் பல்கலைக் கழகத்தில் இடமெடுத்துத் தருகின்றேன் என்று கூறி, அதன்படி இடமெடுத்துத் தந்தார். நீ புறச்சவால்கள் பலதை வென்றவன் என்று தெரியும். தாய்லாந்து உன் அகத்துக்கான சோதனை. அதில் வென்று வந்தால் மட்டுமே நீ உண்மையான விடுதலை வீரன். இல்லாவிட்டால் வெறும் சாகச விரும்பி மட்டுமே என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார் பெல்லோ.

அங்கு பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் படித்து முடித்தேன். அங்கிருந்த கிழக்குத் திமோர் தூதரகம் என்னை உள்வாங்கிக்கொண்டது என்று கூறிவிட்டு அமைதியானேன். சற்று நேரத்தின் பின்னர் என்னைப் பற்றி இவ்வளவு கூறிவிட்டேன், உன்னைப் பற்றி அறியலாமா என்று கேட்டு அவனை ஏறிட்டேன். தனது சட்டைப் பையைத் தடவியவன் நாணயக் குற்றியொன்றை எடுத்தான். ஒரு திர்ஹாம். தலையா வாலா என்றான். குழப்பத்துடன் தலை என்றேன். மேலே சுண்ட, நாணயம் எழுந்து இறங்கி சுழன்று சரிந்தது; தலை. அவன் முகத்தில் மெல்லிய முறுவல். அப்பொழுது அவனின் நண்பன் அவனை நோக்கி வேகமாக வந்து ஏதோ கூறினான். அவன் சிரித்தபடி எனக்கான வாகனம் வந்துவிட்டது. செல்கிறேன் என்றவாறு நண்பனுடன் வேகமாக சென்று கட்டிடங்களில் மறைந்தான். எனக்கு எதுவுமே புரியவில்லை.கீழே கிடந்த நாணயத்தை எடுத்துப் கையில் வைத்து திருப்பித் திருப்பிப் பார்த்தவாறு நின்றிருந்தேன் .சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ஹொட்டேலுக்குத் திரும்பினேன்.

அவன் மேற்சட்டையை மாற்றியபோது அந்த உடலில் கண்ட தழும்புகள் மனதில் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. நிச்சயமாக அவை ஆயுதங்களால் ஏற்பட்டவை என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அவனுடன் அவ்வளவு ஈர்ப்புடன் உரையாடினேன். அவன் தனது ஊரின் பெயரை ஆங்கிலத்தில் ஒருவிதமாகவும் அவனது மொழியில் ஒருவிதமாகவும் கூறுவார்கள் என்று உச்சரித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. பட்டிக்கலோ என்பது ஒன்று. மற்றைய பெயர் எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் வரவில்லை.

அப்பாவின் சட்டை – வேல்முருகன்

வேல்முருகன். தி

“ஏன்டா பந்த ஊட்டு மேல அடிக்கீறிங்க? எழவெடுத்தவனுவளா உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையா?”

நல்ல தூக்கத்தில் வந்த கனவில் அதிர்ந்து எழுந்தான், பகல் தூக்கம் பாதியில் கலைந்ததில் கண் எரிந்து அசதி தெரிந்தது.

ஓட்டு வீட்டு சிமெண்ட் தரை சித்திரை வெயிலுக்கு இதமாக இருந்தது. திரும்ப படுத்து ஐன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான் ஒரே நீலம் சிறிது கூட மாசி இல்லை. சீராக இளந்தென்றல் வீசிக் கொண்டிருந்தது. எதிர் வேலியில் இருந்த மரமுல்லை மரத்திலிருந்து பழுத்த மஞ்சள் இலைகள் காற்றில் சுழன்று இறங்கின. எங்கிருந்தோ பறந்து வந்த கருவாட்டு வால் குருவி கிளையில் அமர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு திரும்பி இலையில் ஒட்டியிருந்த பச்சைப் புழுவை கவ்வி வாலை ஆட்டிக் கொண்டு இறக்கை மூடி மூடித் திறந்து பறந்து சென்றது.

பச்சைக்கு சொனைப்பூச்சி வந்து விட்டது. அடிமரம் முழுவதும் படைபோல் இருக்கிறது. இரவானால் விளக்கு ஒளிக்கு வீட்டிற்குள் வந்து தோதாகக் கிடைக்கும் இடங்களில் அமர்ந்திருந்து ஒத்தி வைத்து விடுகிறது வேலியை அகற்றி அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இதை வேறங்கோ பாத்திருக்கோமே  என்று நினைவு திசைமாறிவிட்டது.

சிறிது நேரத்தில் அது ஞாபகத்துக்கும் வந்து விட்டது ராம் மேஸ்திரி வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூவரசமரத்து அடியில் படைபடையாக பார்த்தது  கிரிக்கெட் விளையான்ட பந்து எடுக்க போய் கிழவரிடம் திட்டு வாங்கி வந்தோமே, ஆகா அந்த நினைப்புதான் கனவு போலிருக்கு, என்று நினைத்துக் கொண்டான்.

சொனைப்பூச்சியை அழிப்போமோ இல்லை கிரிக்கெட் விளையாட போவலாமா என்று யோசிக்க, ஆகா இன்று ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாட போகலாம் நாளை வந்து சொனைப்பூச்சியை பார்ப்போம், என்று முடிவு செய்தான்.

எழுந்து முகம் கழுவி கொடியில் முன்னால் இருந்த புதுச்சட்டையைப் பார்த்துவிட்டு, விளையாட போவும்போது வேண்டாம், என எண்ணி, பிறகு அந்தச் சட்டையே போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் வெளிர் நிறத்தில் அரைக்கை சட்டை. அப்பாவின் நிறத்துக்கு கம்பீரமாக தெரியும் இவனது புது நிறத்துக்கு சற்று கம்மிதான். பரவாயில்லை. தலையை மடித்துச் சீவி கையால் பங்க்கை கோதி கொண்டான். லுங்கிலேயே போவும், வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடலாம், கிழவன் வாயில் மாட்டக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பசங்களுடன் அன்று விளையாண்டபோது அவனுக்கு வாகாக இடது புறம் வீசி விட்டார்கள் வச்சி இழுத்ததில் பூவரச மரத்துக்கு மேல் பறந்தது தெரிந்தது கிழவருக்கு பயந்து பந்தை எடுக்க யாரும் போகவில்லை அவனைக் கைகாட்டினார்கள். பந்து எடுக்கச் சென்றவனை நாய்தான் வரவேற்றது. சத்தம் கேட்ட கிழவர் வெளியே வந்து, “மூணு கழுதை வயசு இருக்கும் போல இருக்கு உனக்கு, ஏன் வேலைக்கு போனா என்ன, பசங்க கூட சேந்து பந்து விளையாடற?.யார் ஊடு நீ? எவனா இருந்தாலும் கிடையாது கூரை வீடு, பின்னாடி ஓட்டு வீடு, ஓடேல்லாம் உடைச்சு வச்சிட்டிங்க எவன் அவுக்கறது முதலு? நிக்காத, இங்க ஏன் வாயில் வன்டை வன்டையா வருது,” என்று சத்தம் போட்டார்.

திகைத்து திரும்ப வேலியைப் பார்த்து கொண்டு வந்த போதுதான் சொனைப்பூச்சியை பூவரசமரத்து அடியில் பார்த்தான் அந்த மரம் தனியாக நன்றாக தழைத்து அடி பெருத்திருந்தது, மரம் முழுவதும் மஞ்சள் பூவும் காயும் தெரிந்தது சிறு வயதில் பூவரசு இலையில் பீப்பீ ஊதியதும் அதன் காயில் தென்னை ஈர்க்கை நடுவில் செருகி பம்பரம் விட்டதும் நினைப்பு வந்து புன்னகைத்துக் கொண்டான் வேலி முழுவதும் ஆடாதொடையும் நொச்சியும் வைத்து நெருக்கி வேலி கருவையை இடையில் ஊன்றி மூங்கில் முள்ளால் கிட்டி பிடித்து இருந்தது அந்த பூவரசமரத்து ஓரமாக கொஞ்சம் சந்து தெரிந்தது ஆனால் நுழையக்கூடிய அளவில்லை அவன் அங்கு வரவும் கிழவரும் சரியாக அங்கு வந்து விட்டார்

“என்ன நோட்டம் உடற? இதான் உனக்கு மரியாதி. இனி இந்தப் பக்கம் பார்த்தேன், நடக்கறதே வேற,” என்று மறுபடியும் கத்த ஆரம்பித்தார்.

“பாத்தியாண்ண, கிழவன் அப்படிதான். அந்தப் பந்து போச்சு. கூரை ஊட்டுவுள்ள போயிடுச்சுண்ண, வெளியில உழுந்து இருந்தா வேயோட்டி, கிடக்கும்,” என்றான் ஒருவன். பசங்க கிழவரைத் திட்ட ஆரம்பித்ததும், “பந்து வேற வாங்கிக்குங்க”, என்று காசு கொடுத்து விட்டு வந்தான்.

வெயில் தாழ ஆரம்பித்திருந்தது அங்கு போவலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே சென்றான், பசங்க கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது “வாங்கண்ண,” என்று
அவனையும் சேர்த்துக் கொண்டனர்

“அண்ணனுக்கு லெக் சைடு போடாதிங்க பழசான பின்னாடி போடுவோம், காணாடிச்சுட்டு காசு தருவாரு, புதுசு வாங்கலாம்,” என்றான் ஒருவன்

ஆச்சு டீம் பிரித்தாயிற்று.

பந்து அடிப்பது பூவரசமரத்து வீட்டிற்கு செல்லாத வகையில் அவனை ஃபீல்டிங் நிறுத்தி விட்டனர். நாலு ஓவர் முடியும் வரை பந்து அவனை ஒட்டி வரவில்லை. ஐந்தாவது ஒவரின் முதல் பந்தை அவனை நோக்கி அடிக்க அவன் முயன்றும் பிடிக்க முடியவில்லை துரத்திக் கொண்டு ஒடினான் பூவரச மரத்தை நோக்கி ஒடியது பந்து குனிந்து எடுத்தபோது பூவரச மரத்து அடியில் இருந்து புகை தெரிந்தது அருகில் இருந்த வைக்கப்போர் தீ பிடிக்க ஆரம்பித்திருந்தது.

அவன் பதறி பசங்களை நோக்கி, “எல்லாம் ஒடியாங்க ஒடியாங்க, தீ புடிச்சிடுச்சு, தீ புடிச்சிடுச்சு,” என்று கத்திக் கொண்டே முன்னே ஓடினான். படல் கேட் பூட்டி இருந்தது பசங்க அவன் பின்னே தீ தீ என்று ஓடி வந்தனர். ஆளாளுக்கு கேட்டைப் பிடித்து ஆட்டியதில் சட்டம் உடைந்து விட்டது உள் நுழைந்து பார்த்ததில் வைக்கோல் அடிப் போர் தீ பிடித்து புகைந்து எரிய ஆரம்பித்திருந்தது.

தோட்டத்தில் இருந்த தண்ணீர்க் குடங்கள், குவளைப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் எல்லாம் ஊற்றிப் பார்த்து விட்டு அணைக்க முடியாமல் தோட்டத்து கிணற்றில் இறங்கி வளர்ந்த பையன்களை எல்லாம்  அவனுக்கு மேல் நிற்கச் சொன்னான்.

தீ மேலே பரவி புகை கிணற்றுக்குள் வர ஆரம்பித்து விட்டது குடமும் குவளையும் வாளியும் வருவது எல்லாவற்றிலும் நிமிராமல் தண்ணீரை நிறைத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தான்  ஒரே சத்தம். பக்கத்து தெருவில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள், எல்லாம் வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து வைக்கப்போரையே பிரித்து உதறு உதறு என்று ஒரே கூப்பாடு வேலியைப் பிரித்து வைக்கோலை வெளியே கொண்டு போகச் சொல்லுவது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

கிணற்றில் இருந்த தண்ணீர் குறைந்து சேறும் தண்ணீருமாக வாரிக் கொடுத்து கொண்டு இருந்தான் மேலெல்லாம் சேறு, கல், மண் எல்லாம் விழுந்து எரிச்சல் ஆரம்பித்து விட்டது பயன்படுத்தாத கிணற்றில் இருந்து கிளம்பிய கும்பி வாடை நிற்க முடியவில்லை.

மேலிருந்து, “போதும் சாமிவலா மேல வாங்க”, என்ற கிழவரின் குரல் கேட்டது ஒவ்வொருவராக மேலேறிச் சென்றனர். இவன் கை நீரில் ஊறி வெளுத்திருந்தது பாசியில் கை வழுக்கி கீழே விழப்போனவன் சமாளித்துக் கொண்டு, கிணற்றுப்படியில் கால் ஊன்றி முதுகை உரசி நின்றான். மடித்துக் கட்டியிருந்த கைலி கிழிந்தது.

மேலேறிப் பார்த்தபோது சுமார் 50 பேராவது இருக்கும்- வேலியைபிரித்து வெளியே கொண்டு சென்று வைக்கலை உதறிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த கூரை வீட்டிலும் தண்ணீர் ஊற்றியிருந்தனர். வேலியெல்லாம் பிய்த்துக் எறிந்து பார்க்க போர்க்களம் போல் இருந்தது. புகை வாடை நாசியிலும் உடம்பு முழுவதும் தெரிந்தது ஒரே நேரத்தில் தலைவலி போலவும் தாகம் போலவும் இருந்தது அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது புதுக் காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தண்ணீர் குடித்தான்

கிழவர் மருமகளைத் திட்டி கொண்டு இருந்தார். “சொனைப்பூச்சிக்கு நெருப்பு வச்ச மாடு இருந்து அணைச்சிட்டுல்ல போயிருக்கனும் ஒரே நாளில் தெருவல நிக்க வுட்டுற, பார்த்தாலே எங்க அடுக்கும் தெய்வமே!” என்று திட்டிக்கொண்டே, “பிள்ளைவலோ, யாரு பெத்த புள்ளையோ, நல்லா இருப்பிங்க இருங்க வரேன்” என்று உள்ளே போய் ஒரு கொட்டுக் கூடை நிறைய பந்து கொடுத்தார். சிவப்பும், நிலமும், மஞ்சளுமாக பந்துகள். பசங்க வாங்கிக் கொள்ளத் தயங்கினர் அவன் சொன்னதும் ஆளுக்கொன்றாக எடுத்து கொண்டனர்

சூரியன் விழுந்து கொண்டிருந்தான், செவ்வானம் தெரிந்தது. மேலே ஒட்டியிருந்த சேறு காய்ந்து,  வரவர என்றிருந்தது முதுகு எரிந்தது அவனுக்கு. தன் சட்டையைக் கழற்றினான். தைக்க முடியாத மிகப் பெரிய கிழிசல் வரி வரியாக, கோடாக, பல வடிவங்களில். கிழிசலை வெறித்து பரிதாபமாகப் பார்த்தான் கிணறும் படியில் அமர்ந்திருந்த கிழவரின் மருமகள் அழுவதும் அப்பாவின் சட்டைக் கிழிசலில் ஒருசேரத் தெரிந்தது.