சு வேணுகோபால் சிறப்பிதழ்

சு. வேணுகோபாலின் தனிப்பார்வை

எஸ். சுரேஷ்

koonthappanai

என்னிடமுள்ள “கூந்தப்பனை” தொகுப்பில் சு வேணுகோபாலின் நான்கு குறுநாவல்கள் இருக்கின்றன- “கண்ணிகள்”, இதிலுள்ள முதல் குறுநாவல்.

யாருக்கும் தெரியாமல் கிராமத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று போகும் ஒருவரை நாம் கண்ணிகள் கதையின் துவக்கத்தில் காண்கிறோம்- அவரை யாரோ நன்றாக அடித்திருக்கிறார்கள், அந்த அவமானம் யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைக்கிறார். இந்த இடத்தில் துவங்கி, தோல்விகளும் கடன்களும் விழுங்கும் அவரது பின்கதையை விவரிக்கத் துவங்குகிறார் வேணுகோபால். தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் போராடும் அவர் இறுதியில், கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் சிக்கிக் கொள்கிறார். அவரது இரும்புப்பிடிகளில் இருந்து தப்பும் முயற்சியில்தான் அவர் கந்துவட்டிக்காரரால் தாக்கப்படுகிறார். இப்படி அடி வாங்கியதால் தன் கௌரவம் கெட்டுவிட்டது என்று குமுறலில் அவர் முழுமையாக நிலைகுலைந்து போகிறார். இப்போது அவரது மானத்தைக் காப்பாற்றி உதவும் கரம் ஒன்று நீள்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் அதைப் பற்றிக்கொள்கிறார் அவர். ஆனால் நெருங்கிச் செல்லும்போதுதான் அவருக்கு தான் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய விலை என்னவென்று தெரிகிறது. குறுநாவல் என்று சொல்வதைவிட இதைச் சிறுகதை என்று சொல்லலாம், ஆனால் இந்தக் கதை நம் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த நாவல் “வேதாளம் ஒளிந்திருக்கும்”. இது நுண்மைகள் நிறைந்த, எண்ணவோட்டத்தின் வழி சொல்லப்படும் கதை. இதில் பெரியவராக மதிக்கப்படும் ஒருவர், ஒன்றுக்கும் உதவாதவன் ஒருவனின் சார்பாக அவனைப் பிரிந்து தன் சகோதரன் வீட்டில் வசிக்கும் அவனது மனைவியிடம் பேச போகிறார். எந்த அளவுக்கு அந்த உதவாக்கரை பற்றி பேசுகிறதோ, அதே அளவுக்கு இந்தப் பெரியவர் குறித்து பேசுகிறது குறுநாவல். உதவாக்கரையின் மனைவியைச் சந்திக்கச் செல்லும் பஸ் பிரயாணமே நாவலின் மையமாக இருக்கிறது. சிற்றூர் பேருந்துப் பயணமும் அதனுள் நிகழும் அனுபவங்களும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. இந்தப் பயணமும் இதன் முடிவில் உதவாக்கரையின் மனைவியைச் சந்திப்பதும், பெரியவருக்குத் தன் வாழ்வைக் குறித்த புரிதலையும் அளிக்கின்றன. முடிவு மட்டும் சற்றே படிப்பினை புகட்டும் தொனியில் அமைந்திருக்கிறது.

“அபாயச் சங்கு” என்ற அடுத்த குறுநாவல், சுரேந்திரன் என்ற இளைஞனின் வாழ்வின் ஒரு பகுதியை விவரிக்கிறது. அவன் வாழ்வின் கொந்தளிப்பான கணங்களை அடுத்தடுத்து நாம் கடந்து செல்கிறோம்: நன்னம்பிக்கைக்கு இடம் அளிக்கும் அவன் வாழ்வின் நற்போதுகளும், அவனது கட்டுப்பாட்டை இழந்து வாழ்க்கை தறிகெட்டுச் செல்லும் வீழ்ச்சிகளும் அவற்றுக்குரிய உணர்வுகளோடு சித்தரிக்கப்படுகின்றன. அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவனைவிட வயது முதிர்ந்த ஒரு பெண்ணுடன் அவனுக்கு உறவு ஏற்படுகிறது. முதலில் அதை அவன் வெற்றியாகப் பார்க்கிறான், ஆனால் அந்த உறவு தன் வாழ்வைச் சிதைத்து தன்னை வீழ்த்தியிருப்பதை மெல்ல மெல்லவே உணர்கிறான். தன்னை இருண்மையில் ஆழ்த்தி தன் வாழ்வை நசிக்கும் நச்சுணர்வுகளிலிருந்து விடுபட முடியாத அவன், இறுதியில் அதிர்ச்சி முடிவெடுக்கிறான்.

தொகுப்பிலுள்ள கடைசி குறுநாவல்தான் புத்தகத்தின் பெயராகவும் அமைந்திருக்கிறது, “கூந்தப்பனை”. ஆண்மையில்லாத ஒருவன் பற்றிய சுவாரசியமான இந்தக் கதையில் அவன் தான் விரும்பிய பெண்ணை மணமுடித்த பின்னரே அவளுக்கு உடலுறவில் நிறைவு அளிக்க முடியாதவனாக தானிருப்பதையும், அது அவளுக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும் உணர்கிறான். அவளது சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன், அவளது தயக்கங்களை மீறி தன் நண்பனுக்கு அவளை ஏறத்தாழ கட்டாய திருமணம் செய்து வைக்கிறான். இது அவன் வாழ்வை மாற்றிவிடுகிறது. இப்போது அவன் தனது ஆண்மையின்மையை ஏளனம் செய்யும் சமூகத்தை எதிர்கொண்டாக வேண்டும். இறுதியில் அவன் வாழ்க்கையில், கொடுத்தல் என்பது மனிதர்களை வாழ வைத்தல் மட்டுமல்ல என்று உணர்கிறான் இதனால் அவனது உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி அவன் அமைதி காணக்கூடும்.

நீங்கள் இந்தக் கதைகளை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவதால்தான் கதைச்சுருக்கங்களை மிக எளிய வடிவில் தந்திருக்கிறேன். இந்தக் குறுநாவல்களில் சொல்லப்படும் கதை என்ன என்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவை எவ்வாறு சொல்லப்படுகின்றன என்பதும் முக்கியம். கதை என்ன என்பது அல்ல, கதை எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே அதை சு வேணுகோபால் கதையாக்குகிறது.

வேணுகோபாலை ஒரு ஸ்டைலிஸ்ட் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு சொற்தேர்வில் ஒரு அழகு தெரிகிறது. அவரது வாக்கியங்கள், கதையின் அப்போதைய உணர்வுகளை பொருத்தமான வகையில் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கதைகள் பலவற்றிலும் அவர் முடிவுக்கு அருகேதான் கதைசொல்லத் துவங்குகிறார், அதன்பின் மெல்ல மெல்ல பின்கதை விரிகிறது. இங்கு நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மர்மக் கொலை பற்றிய குற்றப்புனைவு எழுதுபவரின் உத்தி போன்றதல்ல இது. பெரும்பாலான குற்றப்புனைவுகள் துவக்கத்திலேயே உச்சகட்டத்துக்கு உரிய பரபரப்புடன் துவங்கி நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. வேணுகோபால் முடிவுக்கு அருகில் துவங்கினாலும் அதில் பரபரப்பாக எதுவும் இல்லை. என்ன நடந்தது என்று கேட்கச் செய்கிறது, அவ்வளவுதான். அதன்பின் மெல்ல மெல்ல நாயகனின் உணர்வுகளுக்குப் பரிவான வகையில் நாமும் வாசிக்கத் துவங்குகிறோம். இத்தகைய கதை சொல்லும் முறையில் வேணுகோபாலின் பலம், பலவீனம் இரண்டுமே வெளிப்படுகின்றன. முதலில் நினைத்துப் பார்ப்பதாகச் செல்லும் கதை, பின்னர் காலத்தில் முன்னும் பின்னும் பயணித்து ஏதோ ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது- இந்த முடிவு சில சமயம் திறந்த தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நிறைய உழைப்பும் கவனமும் செலவிட்டு ஒவ்வொரு கதையையும் வேணுகோபால் செய்திருக்கிறார், ஆனால் தெளிவான நடையும், வேகமான உணர்வுகளும் கதையை நகர்த்திச் செல்வதால் இதன் பின்னுள்ள சிந்தனை வெளியே தெரிவதில்லை, இயல்பாக, மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதிய உணர்வு கிடைக்கிறது. கதைகளின் கவனமான கட்டமைப்பில் அவரால் மிக இயல்பான வடிவில் கதை சொல்ல முடிகிறது. நிகழ்வுகளும் அவை குறித்து உள்நோக்கிக் குவியும் எண்ணவோட்டங்களும் கச்சிதமாய் கதைசொல்லலில் கைகூடுகின்றன- வேறொரு எழுத்தாளர், இதே நிகழ்வுகளைக் கொண்டு பரபரப்பான ஒரு கதையாகவோ, அல்லது இதே உணர்வுகளையும் அவை சார்ந்த எண்ணங்களையும் கொண்டு அலுப்பூட்டும் அளவு தொய்வுள்ள புத்திப்பூர்வ கதையோ எழுதியிருக்கக்கூடும், ஆனால் வேணுகோபால் எழுத்தில் சமநிலை குலையாத, நிகழ்வுகளும் உணர்வுகளும் ஒருங்கிணைந்த ஒரு நல்ல குறுநாவலைப் படித்த உணர்வு நமக்குக் கிடைக்கிறது..

சுரேந்திரனின் கனவு போன்ற மனநிலையை விவரிக்கையிலும் அவன் தன்னை வாதிக்கும் நினைவுகளை எதிர்கொள்கையிலும் வேணுகோபாலின் மொழி நுட்பமான வகையில் வேறொரு தொனியில் ஒலிக்கிறது. சுரேந்திரனும் ரத்னம்மாளும் கூடும்போது வேணுகோபால் அளிக்கும் கவித்துவ விவரணைகள் எனக்குச் சற்றே செயற்கையானவையாக ஒலித்தன. பொதுவாக நேரடியாகக் கதை சொல்லும் வேணுகோபால் இது போன்ற இடங்களில் சற்றே வேறுபட்ட உயர்கவித்துவ மொழிக்கு மாறுகிறார். இதை ரசிக்க முடியும் என்றாலும் பொதுவான கதைப்போக்கில் இது போன்ற இடங்கள் தனித்து தம்மை வெளிப்படுத்திக் கொள்வது, கதையின் சீர்மையைக் குலைப்பதாக நினைக்கிறேன்.

வேணுகோபாலின் இந்தக் குறுநாவல்களில் காணப்படும் பாத்திரங்கள் அனைவரும் சாதாரணமானவர்கள். ஏன், இன்னும் ஒருபடி மேலே போய், இவர்கள் எல்லாம் எந்த ஒரு தனித்திறமையும் இல்லாதவர்கள் என்று சொல்லலாம். தம் குறைபட்ட திறமைகளைக் கொண்டு காலம்தள்ளப் பார்ப்பவர்கள். இவர்கள் அனைவரும் தத்தம் சமூகப் பின்புலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்- இவர்களுக்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட தேடலோ இருத்தல் குறித்த சிக்கல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்ற பொருளில் இதைச் சொல்கிறேன். இவர்கள் தம் தனி ஆளுமையின் சுதந்திரத்தைப் பற்றிக் கொள்வதுமில்லை, அதற்குரிய இருப்பியல் சிக்கல்களை எதிர்கொள்வதுமில்லை. இவர்கள் இருக்கும் சூழலில் எதிர்ப்படும் தடைகளில் முட்டிக் கொண்டு நிற்பவர்கள். அதன் கேள்விகளும் அவற்றுக்கு விடை காண இயலாத போதாமையுமே இக்கதைகளின் முக்கிய சிக்கல்களாகின்றன.

இந்தக் குறுநாவல்களில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் சமூகச் சுமை அழுத்துகிறது, அதிலிருந்து விடுபடும் வழி தெரியாத இவர்கள் தம்மாலியன்ற சமரசம் செய்து கொள்கின்றனர். எக்காலத்துக்கும் உரிய உண்மை என்பது போன்ற தேடல்கள் எதுவும் இவர்களுக்கு இல்லை. ரத்தமும் சதையுமான இவர்களது மானுடம் உறுதியானது, உடல் மற்றும் உறவுகளையோ அவை சார்ந்த உணர்வுகளையோ கடந்து செல்ல வேண்டும் என்ற ஆன்மீகத்துக்குரிய விடுதலை ஏக்கமோ, தம்மைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றில் தம்மைக் கரைத்துக் கொள்ளும் லட்சியவாதமோ இவர்களின் தேடலை வெளிச்சமிடுவதில்லை. நம்மைப் போன்ற சாதாரணர்களான இவர்களும் கௌரவமாக வாழ விரும்புகின்றனர், தம் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். முதல் கதையில வரும் விவசாயி ரங்கராஜன் இதற்கு நல்லதொரு உதாரணம். இதிலுள்ள அனைத்து கதைகளிலும் இப்படிதான். உதவாக்கரை விஸ்வநாதனின் மனைவிக்கு அவன் குடித்துவிட்டு வந்து தன்னை அடிப்பது கௌரவக் குறைச்சலாக இருக்கிறது, அதை அவள் இழிவாகக் கருதுகிறாள். கூந்தப்பனை சதீஷ் தன் ஆண்மையின்மை குறித்த செய்தி வெளியில் பரவத் துவங்கும்போது தனக்குரிய மரியாதை குறைவதாக உணர்கிறான். சமூக வெளியில் தலை நிமிர்த்தி நடக்கவே அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் வாழ்வின் சுமை அவர்கள் தோள் விட்டு இறங்காத சிலுவையாய் அவர்களை அழுத்துகிறது.

இந்தக் குறுநாவல்களின் களம் சிறுநகரங்கள். அவற்றின் தனித்தன்மையை மிக அருமையாகக் கைப்பற்றி விவரித்திருக்கிறார் வேணுகோபால். ஒவ்வொரு விவரணையிலும் எழுத்தாளரின் வாழ்வனுபவம் புலப்படுகிறது என்பதால் இவர் விவரிக்கும் புறச்சித்திரங்கள் தம்மளவிலேயே நம்பகத்தன்மை கொண்டவையாய் இருக்கின்றன. இவை சிற்றூர்களாய் இருந்து, நகரமயமாக்கத்தின் விசை காரணமாக சிறுநகரங்களாக வளர்ந்து வருபவை. விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை, விவசாயிகளின் கடன்சுமை, வேலையின்மை, மதமாற்றம் என்று சிறுநகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இதிலுள்ள குறுநாவல்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன. இன்னும் சிற்றூர்களுக்குரிய ஒழுக்க நியாயங்களும் பழக்க வழக்கங்களும் மாறவில்லை, அவை இவர்களை இயக்கம் உந்துவிசையாய்ச் செயல்படுவதும் மாறவில்லை. தன் சகோதரனுக்கும் சகோதரிக்கும் தான் ஒரு சுமையாய் இருக்கக்கூடாது என்று விசுவநாதனின் மனைவி திரும்பவே செய்கிறாள்- அவள் எதிர்கொள்ளும் சூழலில் அவளது சமரசம் தவிர்க்கப்பட இயலாதது. உயர்கல்வி படித்த சுரேந்திரனுக்கு குமாஸ்தா வேலை கிடைக்கிறது, பின்னர் அதை இழந்து வேறு வேலையின்றி தவிக்கிறான், நகரங்கள் அளிக்கும் வாய்ப்புகள் சிறுநகரங்களில் இல்லை.- குறிப்பாக, வேணுகோபால் இக்கதையை எழுதிய காலங்களில். சிறுநகரச் சித்தரிப்பு மிகச் சிறப்பாக வெளிப்படுவது பெரியவரும் விசுவநாதனும் மேற்கொள்ளும் பஸ் பிரயாணத்தில்தான். உலர்ந்த நகைச்சுவை விரவியுள்ள இந்தப் பயணமும் பெரியவரும் விசுவநாதனும் பேசிக் கொள்வதும் ஒரு சிறுநகரின் ஆன்மாவை எவ்வளவு அழகாகவும் கச்சிதமாகவும் உணர்த்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுக்காட்டுகளாய் அமைகின்றன.

கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மை- இவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார். நான் சொல்வது மிகவும் பொதுமைப்படுத்துவதாக இருக்கலாம்- இதிலுள்ள நான்கு குறுநாவல்களில் இரண்டு துயரில் முடிகின்றன. ஆனால் இந்த நாவல்கள் முழுவதிம் வேணுகோபால் விலகிய தொனியில் விவரணைகளை அளித்தாலும்கூட, அவர் இந்தச் சாதாரணர்கள் தரப்பில் பேசுவதை உணர முடிகிறது. இவர்களுடைய போராட்டங்களை வேணுகோபால் மிக நன்றாக அறிந்திருக்கிறார், புரிந்துணர்வோடு அவற்றைப் பதிவு செய்கிறார்.

எவ்வளவு சாதாரணமானவனாக இருந்தாலும் சரி, அவன் தன் குறைகளை ஏற்றுக்கொள்வதன்வழி அவற்றைக் கடந்து, தான் வாழும் சமூகத்தில் ஒரு சிறு தாக்தையாவது ஏறபடுத்த முடியும் என்று வேணுகோபால் நம்புவதாகத் தோன்றுகிறது. இதனால்தான் கூந்தப்பனை அவ்வளவு அழகிய கதையாகிறது, வேதாளம் காத்திருக்கும் என்ற குறுநாவலின் செய்தி சற்றே துருத்திக் கொண்டு நிற்கிறது. எந்த ஒரு எழுத்தாளனும் தன் கதைகளைக் கொண்டு அவற்றைவிடப் பெரிய செய்தி ஒன்றைச் சொல்ல முயற்சி செய்வதில் இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது. வேணுகோபாலின் பாத்திரங்கள் அரசியல் சார்பற்றவர்கள், அவரது கதைகளில் அரசியல் இல்லை, ஆனால் அரசியல்படுத்த விரும்புபவர்களுக்கு முதல் கதையில் விஷயம் கிடைக்கலாம். ஆனால் வேணுகோபாலுக்கு ஓர் அரசியல் சாயம் பூச வேண்டியது அவசியம் என்று நீங்கள் நினைத்தால், முதலும் முடிவுமாய் மானுடத்தை நேசிப்பவர் அவர் என்று சொல்வதே சரியாக இருக்கும்- வேறெதையும்விட உயிர் வேட்கையே அவருக்கு முக்கியமாக இருக்கிறது, அவரது கதைகளில் அது உறவுகளின் ஊடாட்டத்தில் வெளிப்படுகிறது.

இத்தனை எழுதுவதும் அவரது நான்கே நாக்கு குறுநாவல்களை படித்துவிட்டுதான். வேறு படைப்புகளைப் படிக்கும்போது இந்த என் கருத்து மாறலாம். ஆனால் அப்போதும்கூட உறவுகளைப் பேசுவதில் அவரது லட்சியவாதமும் சமூகத்தைப் பேசுவதில் அவரது மானுட நேசமும் எப்போதும் மாறாது என்று தோன்றுகிறது. சாதாரணர்கள் தம் குறைகளால் குறைபட்டவர்களாய் நில்லாமல், அவற்றைக் கடந்து தம் சமூகத்துக்கு தம்மாலியன்ற ஒரு சிறு பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் வேணுகோபாலின் லட்சியவாதமும் மானுடநேயமும் இணைகின்றன என்று நினைக்கிறேன்.

நிறைவின்மையின் வழியே…

ஸ்ரீதர் நாராயணன்

su_venugopalan

தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை தொலைக்காட்சித் தொடராக செய்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தாகூர், சகி (H H Munroe), செக்காவ், ஓ ஹென்றி, சுந்தர ராமசாமி, முன்ஷி பிரேம்சந்த் என்று பலரின் கதைகளை நேரடியாக திரையில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. அதிலொரு கதையில் (பெயர் நினைவில்லை) ஓர் ஏழைச்சிறுவன் பிரபல எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் நிறைந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்ல உதவுவான். ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது’ என்று அந்தச் சிறுவன் கேட்க, அவர் ‘உன்னைப் போன்றவர்களைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள்’ என்பார். சிறிய தயக்கத்திற்குப் பின்னர் அவன் ‘அந்தப் புத்தகங்களினால் எங்களுக்கு என்ன பயன்’ என்றுக் கேட்பான். அப்போதுதான் அவர் தான் யாருக்காக எழுதினோமோ அவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப் பிரிந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வார். அந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் அவருடைய எழுத்திற்கான கச்சாப்பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது. எழுதுபவன், வாசகன் என்ற இரு நிலைகளைக் கடந்து, எழுத்தின் பேசுபொருளான சமூகத்திற்கான பயன் என்று ஒரு நிலை உருவாகும்போதுதான் அந்த எழுத்து உயர்நிலையை அடைகிறது. அப்படியானதொன்றுதான் சு வேணுகோபாலின் படைப்புலகம்.

சு வேணுகோபாலின் படைப்புலகம் எனக்கு அறிமுகமானது ‘களவு போகும் புரவிகள்’ சிறுகதை வழியாகத்தான். பிரபல எழுத்தாளர்கள் பலரின் ‘முக்கியமான படைப்புகள்’ பட்டியலில் தவறாமல் இடம்பெற்ற சிறுகதை அதுவென்பதால், தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் உண்டானது. கன்னட தேவாங்க சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமான சௌடம்மா கோவிலின் புரவி திருவிழாவை பின்புலமாக கொண்ட மாயயதார்த்த கதை. கச்சிதமான வடிவமைப்புடன், புதிர்த்தன்மையோடு சொல்லப்பட்ட கதை. எதிரிநாட்டு ராஜதந்திரி கணக்கில் மாயவித்தை செய்து புரவிகளை களவாடிப் போகும் தொன்ம வரலாற்றை கூத்துக்கலையாக, தற்கால திருவிழா கொண்டாட்டத்தோடு கூடிக் களிக்கிறார்கள் ஊர் மக்கள்.

கதிரைய்யனின் குதிரைகள் களவுபோனதால், ஊருணியில் குளித்துவிட்டு வந்த சௌடம்மா, காலத்திற்கும் இடுப்பிலிருக்கும் தன் உடைவாளோடு (ஜமுதாடு) அப்படியே தெய்வமாகிப் போகிறாள். பாரம்பரியம் என்றால் அப்படியேத்தான் நடக்க வேண்டும் என்று நாடகீய சடங்குகளின் ஒருபகுதியாக ‘பொட்டு கட்டி வம்சாவழி ஆள் வந்தால்தான்’ குடத்தில் குத்தியிருக்கும் ஜமுதாடு நிற்கும் என்று அணைக்கரைப்பட்டிவரை போய் ஆளைக் கூட்டி வரச்செய்கிறார்கள். காலத்திற்கும் தன் பிறப்பால் ஏற்றப்பட்ட கறையை அழிக்க முடியாத வேதனையோடு அவர் வர, ஊராரின் மனநிறைவிற்கேற்ப சாங்கியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாயயதார்த்த புனைவில் சமகால சமுதாய பிரக்ஞையை விட்டுவிடாத இடம்தான் எழுத்தாளனின் ஆன்மாவை நமக்கு புரியவைக்கிறது. பாரம்பரிய கொண்டாட்டங்களை ஆவணப்படுத்துவதாக மட்டுமல்லாமல் அதில் இருக்கும் அவலத்தை சிறு கோடிழுத்துக் காட்டுகிறார். பள்ளத்தை நோக்கிப் பாயும் நதி போல, சமூகத்தின் நிறைவின்மையை, அதன் இருள்பகுதிகளை தொட்டுக் காட்டும் எழுத்து சு வேணுகோபாலுடையது.

மூன்று நாவல்களும், நூற்றுக்கு பக்கமான சிறுகதைகளும் எழுதியிருக்கும் சு வேணுகோபாலின் படைப்பூக்கத்திற்கும் அந்த நிறைவின்மைதான் அடித்தளமாக இருக்கிறது. இன்றைய தமிழ் புனைவிலக்கிய சூழலில் அதிகம் கைக்கொள்ளப்படாத நெடுங்கதைகள் எனப்படும் குறுநாவல்களும் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பெரும்பாலான படைப்புகள் நேரடியாக தொகுப்புகளுக்கு என எழுதப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது பெருவணிக பத்திரிகை / ஊடக பாதைகளின் அரசியலிலிருந்து ஒதுங்கி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து எழுதுகிறார் எனத் தெரிகிறது. இதற்கு தோதாக தமிழினி பதிப்பகமும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

‘ஒரே அமர்வில் ஒரு நெடுங்கதையை எழுதி முடித்துவிடுவேன். ‘பால்கனிகள்’ குறுநாவல் இரண்டு இரவு ஒரு பகல் காலத்தில் எழுதப்பட்டது. மனதில் இருப்பதை எழுதி முடிக்காவிட்டால் என்னால் உறக்கம் கொள்ள முடியாது’ என்று ஹிந்து நாளிதழிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். பெரும் கதைப்பின்னலுடன், வரலாற்று பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களை விட, ஒரு முரணை முன்வைத்து நறுக்குத் தெறித்தார்ப்போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.

தோற்றுப்போன விளையாட்டு வீரனான வடிவேல், சுற்றமும் உறவினரும் வெறுத்து, சமூகத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தன்பால் ஈர்ப்புக் கொண்ட கிஷ்டன், ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் நாவிதன் பழனி, நல்லாசிரியர் விருது பெற்றாலும் தன்னுடைய கீழ்சாதி முத்திரையை தொலைக்க முடியாத பரமன் என்னும் ராமமூர்த்தி என்று அவருடைய கதை மாந்தர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிறைவின்மையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒப்பனையின்மை, பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மை, செறிவான பின்புல சம்பவங்கள், தேய்வழக்கு அல்லாத புதிய கோணங்கள், தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் என்று தனித்துவ குணங்களோடு அவை காணப்படுகின்றன.

கதைப் போக்கில் சொல்லப்படும் சம்பவங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அழுத்தம் கூடிப் போய் தொனி மாறிவிடக்கூடாது என்பதில் கட்டுக்கோப்பாக செயல்பட்டிருக்கிறார் கதையாசிரியர். அதற்காக சொல்லப்பட வேண்டியது சொல்லப்படாமலும் போய்விடக் கூடாது. கிஷ்டனின் கதை முழுவதும் திவ்யாவின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவனுடைய ஆண் சொந்தங்களான அண்ணனும், மச்சான்மார்களும் அவனிடமிருந்து விலகி நிற்பதையே முயன்று செய்கிறார்கள். ஊர்த் திருவிழாவில் தன்னை முழுவதுமாக பெண்ணென்று வெளிப்படுத்திக் கொண்டு வந்து நிற்பவனை அடித்துத் துரத்துவதில் குறியாக இருக்கும்போது அவர்களுடைய பழைய அநியாயங்களை போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறான். ‘நல்லா இருந்த காலத்தில் என்னை நாசமாக்கினவன் நீதானடா’ என்று தன் மாமாவைப் பார்த்து உக்கிரத்தோடு சொல்கிறான். இந்த ஒப்பனையற்ற நடை வழியேத்தான் சு வேணுகோபாலால் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ போன்ற புனைவுகளை எழுதிவிட இயலுகிறது.

‘என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் நாளும் சொல்லும் கதைகள் வழியேத்தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது’ என்று தன்னுடைய கிராமத்து வாழ்க்கையைப் பற்றி இந்து நாளிதழுக்கான பேட்டியில் சொல்கிறார். திசையெல்லாம் நெருஞ்சி நெடுங்கதையில் குழந்தை மேல் மாரியாத்தாள் வந்துவிட்டதால் (அம்மை போட்டிருப்பதால்) ஊர்க்காரர்கள் கருணைக் காட்டினாலும், ‘என்னதான் இருந்தாலும் அம்பட்டையன் சம்சாரிய எட்டி உதைக்கலாமா’ என்று சடைத்துக் கொண்டு போட்ட தீர்ப்பை திருப்பி எடுக்க மாட்டார்கள் என்பது பழநி வழியாக மெள்ள மெள்ள படிக்கிறவர்களுக்கு கடத்திக் கொண்டே வருகிறார். இறுதியில் தீவன படைப்பை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது பழநியைச் சுற்றி அத்தனை வாசல்களையும் அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சமூகத்தின் மேல் நமக்கும் நம்பிக்கை அற்றுப் போய்விடுகிறது. எவ்வித ரொமாண்டிசசமும் இல்லாத ஒப்பனையற்ற கதை சொல்லும் முறை.

ஆனால் பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மையை கைவிட்டுவிடுவதில்லை. ஊர் ஒதுக்கி வைக்கும் முன்னர் பழநி கைத்தோரத்துப் பையனாக ஓடிஓடி ஊராருக்கு உதவி செய்திருக்கிறான். அக்காலத்தில் ஆண்டியப்பப் பிள்ளை கிணத்துமேட்டிலிருந்து பூசணி பறித்துத் தந்திருக்கிறார். ராமுத்தேவர் சுரைக்காய் பறித்துக் கொடுத்திருக்கிறார். வீடு வீடாகப் போய் அரிசி, பருப்பு, புளி, நவதானியங்கள் வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இப்போது அம்மை போட்ட பையனுக்காக ஒரு வாழையிலையை அறுத்துக் கொண்டு போக முடியாதபடி திமிரெடுத்த அம்பட்டப்பயலாக ஆகிவிட்டோமே என்று பழநிக்கு மனது துவண்டு போகிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேருக்கும் வெட்டி வாரிப்போட்ட மயிர்குப்பை நிறைந்த அம்பட்டங்குழிப் போலத்தான் அவன் வாழ்க்கையும் ஆகிவிட்டிருந்தது.

‘நமக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இருந்தும் துரத்தி விட்டுட்டாங்கன்னு மனங்கோணாதப்பா’ என்று பழநிக்கு ஆறுதல் சொல்லும் சம்சாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் நிலையழிந்த மனிதனின் மனம்தான் கொடூரமான ஆயுதம் என்பது போல மல்லையாவின் வன்மம் பழநி திரும்பும் இடமெல்லாம் நெருஞ்சியாக நிறைந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் அந்த நெருஞ்சிக் காட்டைக் கொளுத்திவிட்டு கிளம்புகிறான் பழநி.

அதே போல ‘இழைகளின்’ பரமன் என்னும் ராமமூர்த்திக்கு, நல்லாசிரியர் விருது கிடைத்தப் பிறகும் கைகொடுத்து வாழ்த்து சொல்லாத சக ஆசிரியர்களின் ‘ஒதுக்குதல்’ நெருஞ்சியாக உறுத்துகிறது. மற்றோர் இழையில் ஜெயசுதாவிற்கு முன்னால் எடுப்பான உடை அணிந்து போக அம்மாவின் கருத்தங்கன்னியை (அம்மா வளர்த்து வரும் ஆட்டின் பெயர்) குட்டிகளோடு விற்றுப்போட்டுவிட அவரே முனைப்பாக இருந்திருக்கிறார். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு விடாமல் சுற்றி வருகிறது ஒடுக்கப்பட்டவர்களின் இழைகள்.

நிறைவின்மையால் எப்போதும் துரத்தப்பட்டும் பாத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொருவரைச் சுற்றியும் தனி உலகே இயங்கும் அளவுக்கு செறிவான வார்ப்புகளாக உருவாக்கியிருக்கிறார். கர்ப்பத்திற்கான கைமருந்து தயார் செய்யும் பழநியின் ஆத்தாவிற்கு அப்படியொரு கைராசி. பத்து ரூபாய் மருந்தில் கனகத்தின் வயிறு திறந்து இப்போது பேத்தியும் எடுத்துவிட்டாள். ஆனாலும் பழநிக்கு எதிரான ஊர்க் கட்டுப்பாட்டை மீற அவர்களுக்கு அப்படியொரு தயக்கம். மகாலிங்கத்தின் புழுவெட்டிற்கு வைத்தியம், அவர் பையன் மனோகரனுக்கு வியர்த்து ஊற்றும் நோய்க்கான சிகிச்சை, காளியப்பனின் இளம்பிள்ளை வாதம் பாதித்த பையனுக்கான சர்வாங்க சவரம் என்று அந்த ஊரைச் சுற்றிலும் பழநிக்கு அத்தனை இழைகள் படர்ந்திருக்கின்றன. வெந்த முருங்கைக்காயிலிருந்து கூழைச் சுரண்டி, கத்திரிக்காயோடு சேர்த்து கிஷ்டன் தக்காளி சட்னி, வெந்தயக் குழம்பும் ஊத்தப்பமுமாக அதகளப்படுத்துவதை விவரிக்கிறார். பள்ளி ஆசிரியர்களுக்கு டீப் போட்டு அனுப்பும் கடைக்காரர்கள் கூட அவர்களுடைய சாதியை உய்த்தறிந்து அதற்கேற்ப கிளாஸ்களையும் போணிகளையும் குறித்து வைத்து அனுப்பும் நுண்மையை சொல்கிறார்.

மற்றோர் இழையில் தீண்டத்தகாததாக ஒதுக்கிவைக்கப்படும் தன் உடல் ஒரு பெண்ணால் காமுற்று பயனடையும் போது பரமனுக்கு தன் இழிவின் மேல் மாளாத கோபம் எழுகிறது. தன்னுடைய சுயமரியாதைத் தூண்டுதலால் அவர் பேராற்றல் கொண்டு பாறையை பிளந்து வளரும் பெருமரம் போல வளர்கிறார். ஆனால், அவருக்குப் பின்னாலும் அந்தப் பாறை நிலம் அப்படியே பாறையாகவேத்தான் இருக்கிறது. அது போலவேத்தான் பழநியின் வாழ்வாசையும் அவனுடைய மானத்தை தற்காத்துக் கொள்ளுவதிலேயே பெருமளவு செலவழிகிறது. ஊராரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நிலையில், குமரனும் மல்லையாவும் குருவம்மாளைப் பற்றி தூற்றுகின்றனர். ‘நீ எதுக்கு கோவப்படுற, நான் அப்படிப்பட்டவளா’ என்று பழநியை சமாதானப்படுத்தும் குருவம்மாளை மீண்டும் மீண்டும் தொந்தரவுகள் துரத்துகின்றன. எவ்வளவு தூரம் துரத்தினாலும், அந்த ஊர் தரும் பாதுகாப்பை எப்படியும் இருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் குருவம்மாள் ஆசைப்படுகிறாள். அதுவே பழநியின் ஆசையாகவும் அவ்வப்போது அவனுடைய சிந்தனையின் ஓட்டத்தில் வந்து போகிறது. தன்னை இழிவு செய்யும் ஊர் தலைவர்களிடையே எப்பாடுபட்டாவது மன்னிப்பு வாங்கிவிட வேண்டும் என்றெண்ணுகிறாள்.

‘அவங்களுக்கும் எனக்கும் என்ன பகை? நான் வேணும்னா தனியாப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வரட்டுமா’ என்றுதான் அவள் சிந்தனை ஓடுகிறது. பழநியில்லாத வேளையில் மப்பேற்றிக்கொண்டு வீட்டிற்கு வெளியே கதவைத்தட்டிக் கொண்டு இளித்துக் கொண்டு நிற்கும் ஊர்ப்பெரியவர்களைப் பற்றி குருவம்மாளின் நினைப்பு இந்தளவில்தான் இருக்கிறது. ‘இழைகளின்’ ராமமூர்த்தி ஆசிரியருக்கும், அவருடைய தம்பியின் பையன்கள் படிப்பை தொடரமுடியாமல் போய்விடுவது பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்துவிடுகிறது அவரைத் தொடர்ந்து ஒடுக்கியே வைத்துக் கொண்டிருக்கும் சமூகம்.

நல்லாசிரியர் விருது பெறும் தருணத்தில் ராமமூர்த்தி ஆசிரியரின் நனவோடை பல இழைகளாக விரிந்து பரவுகின்றது என்றால், தண்டோராப் போட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் தருணத்ததிலிருந்து பழநியின் ஒற்றைப் பிரச்னையை முன்னும் பின்னுமாக சொல்லிச் செல்கின்றது ‘திசையெல்லாம் நெருஞ்சி’. திவ்யாவின் சிறுவயது விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவன் கிஷ்டன், திடீரென சுற்றத்தாரின் வக்கரிப்பு ஆளாகி தானொரு சராசரி ஆண் இல்லை என்று உணரும் அந்தரங்க தருணத்தை, அவளும் காண நேரிடகிறது. அந்த தவிப்பில் இருந்து அவன் வெளியேறி சமூகத்தின் தடைகளைத் தாண்டி எதிர்நீச்சல் போட்டு தன்னை ஒரு குடும்ப அமைப்பில் பிணைத்துக் கொண்டு முழுமையடையும் காலத்தில் திவ்யா மீண்டும் சந்திக்கும் தருணத்தில் முடிவடைகிறது ‘பால்கனிகள்’. முன்னது இரண்டு குறுநாவல்களிலும் தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் ‘பால்கனிகள்’ல் ஓரளவு நெகிழ்ந்து நம்பிக்கைக் கீற்று ஒளிர்கிறது.

சுவேணுகோபாலின் எழுத்திற்கான சுதந்திர வெளியை அமைத்துக் கொடுப்பதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. இலக்கிய அளவீடுகளை முறையாகக் கொண்டுள்ள வெகுசில பதிப்பகங்களில் தமிழினி முதன்மையானது.

நிறைவின்மையின் வழியே ஓடிச்செல்லும் நதியென சுவேணுகோபாலின் படைப்புகளை தொடர்ந்து இணைய உலகில் முன்னெடுத்தும் செல்லும் இந்த சிறப்பிதழ் வெற்றியடைய வாழ்த்துகள்.

இணையத்தில் சு வேணுகோபால்

– பாஸ்டன் பாலா-

சு வேணுகோபாலைக் குறித்து இணையம் என்ன சொல்கிறது? எந்தப் புத்தகங்களை விமர்சித்து இருக்கிறார்கள்? எந்தச் சிறுகதைகளை சிலாகித்துப் பேசுகிறார்கள்? ஒரு தொகுப்பு.

மேலே சுட்டி மழைக்குள் செல்வதற்கு சில முன்குறிப்புகள்:

அ) இங்கே முழுப் பதிவும் தரவில்லை. சில வரிகள் மட்டுமே மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆ) தொடர்புடைய பதிவுகளை ஒரு சேரக் கொடுத்திருக்கிறேன்; சில இடங்களில் விமர்சகரைக் கொண்டு தொகுத்திருக்கிறேன்.
இ) இது முழுமையானத் தொகுப்பு அல்ல. உங்கள் கண்ணில் பட்டதையும், விடுபட்டதையும் மறுமொழியில் சொல்லவும்.
ஈ) அச்சு ஊடகங்களில் கிடைக்கும் விஷயங்களை, புகைப்படமாகக் கொடுத்தால், தட்டச்சுவேன்.
உ) ஃபேஸ்புக் போன்ற தேட இயலா இடங்களில் கிடைக்கும் மதிப்புரைகளைக் கொடுத்தால் தன்யனாவேன்.

உரல்களில் தொலைவதற்கு முன் உரிமைதுறப்பு:

ஜெயமோகனின் நாவல்களை, முன்னுரை வாசிக்காமல் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதை ‘காடு’ முன்னுரை வாசித்தபிறகு அறிந்தே இருந்தேன். இருப்பினும் இணையத்தில், திண்ணையில் சு. வேணுகோபால் எழுதிய ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் மூலமாகவே எனக்கு இவர் அறிமுகம் ஆனார்.

சு.வேணுகோபாலின் படைப்புகள்

குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார்.

1. நுண்வெளி கிரகணங்கள் (நாவல்) – 1997
2. பூமிக்குள் ஓடுகிறது நதி (சிறுகதைகள்) – 2000
3. களவு போகும் புரவிகள் (சிறுகதைகள்) – 2001
4. கூந்தப்பனை (சிறுகதைகள்) – 2001
5. வெண்ணிலை (சிறுகதைகள்) – 2006
6. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – 2006
7. பால்கனிகள்
8. ஆட்டம்
9. நிலம் எனும் நல்லாள்

வலையில் கிடைக்கும் படைப்புகள்

i) தீராக்குறை – புதிய காற்று – பிப்ரவரி 2006
ii) உயிர்ச்சுனை – புதிய காற்று – பிப்ரவரி 2006

க. மோகனரங்கன்

வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும் குறைகளும் பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற, அடைய முயலுகிற மேன்மையைப் பற்றியதாகவே வேணுகோபாலின் அக்கறை எப்போதும் இருக்கிறது. தவிரவும், மனிதனின் அகந்தை பூரணமடையாவண்ணம் ஏதோ ஒரு விதத்தில் அவனைக் குறுகச் செய்து வேடிக்கை பார்க்கும் வாழ்வின் புதிர்த்தன்மைகள் பற்றிய ஒருவித முதிர்ந்த அணுகலும் இவரது எழுத்துக்களில் பளிச்சிடக் காண்கிறோம்.

வெண்ணிலை புத்தகம் – சிறுகதைத் தொகுப்பு: பின்னட்டை குறிப்புகளில் இருந்து

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றை பின்புலமாக கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத் தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூல விதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நி்ற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதை இயல்பாகக் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.

அர்ப்பணிப்பு

நவீன இலக்கியம் கற்பித்த எனது ஆசான்
முனைவர் டி. சாமுவேல் சுதானந்தாவிற்கு

மிருணா

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு.

கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான்.

இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதை உள்ளது. அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு…

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல்

கும்க்கி

ஒரு துளி துயரம் மற்றும் வெண்ணிலை இரண்டிலும் ஒரே கதைகள் இடம்பெற்றுள்ளன. வெண்ணிலை நவ.2006. யுனைட்டட் ரைட்டர்ஸ்.மொத்தம் 23சிறுகதைகள்.
ஒரு துளி துயரம் மே.2008. மொத்தம் 15 சிறுகதைகள். வெண்ணிலையில் இருப்பதிலிருந்து 13 சிறுகதைகளையும் மேற்கொண்டு 3 சிறுகதைகளையும் தொகுத்து தமிழினி 2008ல் வெளியிட்டுள்ளார்கள்.

கதைகள் வாசிப்பென்பது எப்போதும் உள்ளுக்குள் ஓடும் மவுன காட்சிகளாய் தத்தம் அனுபவம் சார்ந்து மனம் ஒப்பிட்டுக்கொண்டேயிருக்கும். அந்த வகையில் பாசாங்கற்ற எளிய மனிதர்களின் அத்தனை சுகதுக்கங்களும் சு.வேணுகோபாலின் எழுத்துக்களில்… துயரங்கள் நிரம்பிய வாழ்வு தரும் அயற்சி சொல்லி மாளாது போலிருக்கிறது.

ஜூலை 20, 2012

oru_Thuli_Thuyaram_Su_Venugopal

அகநாழிகை பொன். வாசுதேவன்

படைப்பு மனநிலை என்பதே சுயவதைதான். வலியிருக்கிறவர்களால் மட்டுமே ஆகச்சிறந்த படைப்புகளை வெளிக் கொணர முடிகிறது. சந்தோஷத்தை வாசிக்கிறதுக்கும் வலியைப் பற்றி வாசிப்பதுக்குமான மனநிலை வெவ்வேறானது. இதில் வாழ்வின் வலிகளைப் பற்றி வாசிப்பதும், அத்துயரத்தினுள்ளாழ்ந்து போவதுமே எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. வாழ்க்கையின் குரூரமானப் பக்கங்களை துயர மனநிலையிலான எழுத்துகள்தான் சரியான முறையில் வெளிப்படுத்துகின்றன.

துயரையும் துயர்க்காரணங்களையும் நுட்பமான முறையில் விவரிப்பவை சு.வேணுகோபாலின் படைப்புகள். நிராதரவான நிலை, கையறு தருணம் என நம் அன்றாட வாழ்வின் பல்வேறு கட்டங்களில், உறவுகளிலும், பழகும் மனிதர்களிடமும், பிரியம் கொள்கிறவர்களிடமும் காண நேர்கிற போலித்தனம், சுயநலம் போன்றவற்றை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தைச் சொல்லி நமக்குள்ளாக அதே உணர்வுகளைக் கடத்துகிறார் சு.வேணுகோபால்.

குமுதம் – ஏர் இந்தியா போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘நுண்வெளிக் கிரகணங்கள்‘ நாவலை வாசித்த அதிர்வுகள் அடங்குவதற்கு பல நாட்களாகியது. அப்பொழுதே ‘புதிய பார்வை‘ அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன். தனித்துவமான எழுத்து நடை அவருடையது. ‘கூந்தப்பனை‘ நுட்பமான பாலியல் அகச்சிக்கல்களை துலக்கும்படியான எழுத்துவகை. அவ்வகை எழுத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பு.

மே 2013

ஜெயமோகன்

திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருது இவை.

‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

பெப்ரவரி 18, 2009

சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது

இந்த வருடத்தைய பாரதிய பாஷா பரிஷத் விருது சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

December 22, 2011

ராஜகாந்தன்

தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்த அவருடைய நுண்வெளி கிரகணங்கள் நாவலை வாசித்தபோது நாவல் குறித்த மதிப்புரை அல்லது விமர்சனங்களை சிறுபத்திரிகைகளில் தேடினேன். தி.சு. நடராஜன் நிகழில் எழுதியிருந்ததைத்தவிர வேறு எதையும் குறிப்பிடும்படியாக காணமுடியவில்லை. ஒரு முக்கிய படைப்பாளி போதிய அளவிற்கு கவனப்படுத்தப்படாமல் விடப்பட்டது வருத்தம் அளித்தது.

December 8, 2009

ஜெயமோகன் திறனாய்வு

சு.வேணுகோபாலின் மண்-1

தன் நுட்பம்மிக்க வாழ்க்கைச் சித்தரிப்பு காரணமாகவே வேணுகோபால் சமகால இளம் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆகிறார்.

அவரது புனைவுலகுக்குள் நுழையும் வாசகன் அவரது அபாரமான யதார்த்த உலகின் விரிவையும் நுட்பங்களையும் கண்டு அதில் ஆழ்ந்து போவான். மனிதர்களின் உயிர்ப்போராட்டத்தின் வேகத்தையும் வலியையும் இத்தனை உக்கிரமாக நேரடியாகச் சொன்ன சமகாலத்துப் படைப்பாளி பிறிதெவரும் இல்லை என்றே சொல்லலாம். உப்பு கசியும் ஊயிர்நிலம்போன்றது அவரது புனைவுவெளி.

இக்கதைகளுக்கு முன்னுதாரணமான கதைகள் என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய கதைகள்தான். அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள் அவை.

புற உலகம் மீது இந்த அளவுக்கு அபாரமான கவனிப்புள்ள தமிழ்க்கதைசொல்லிகள் மிக அபூர்வம். தமிழில் இவ்விஷயத்தில் சு வேணுகோபாலுக்கு முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பாளி என்று அசோகமித்திரனையே குறிப்பிட முடியும்.

நீளமான கதையாகிய புத்துயிர்ப்பு ஒருவகையில் வேணுகோபாலின் கூந்தப்பனை கதைக்கு சமானமானது. உச்சகட்டத்து கவித்துவத்தாலேயே தன்னை நிகழ்த்தும் இக்கதையே வேணுகோபாலின் ஆகச்சிறந்த படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இருபது கதைகளில் ஒன்றாகவும், புதிய தலைமுறையில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த ஐந்து கதைகளில் ஒன்றாகவும் இதை நான் கூறுவேன். என்னுடைய பரிந்துரையின் பேரில் இக்கதை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி

வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல. விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். அவர் எப்போதுமே கதைக்களனை வருணிப்பதில்லை, ஒரு விவசாயி அளிக்கும் நேரடி அறிக்கையை அளிக்கிறார். அவர் அளிக்கும் தகவல்கள் எப்போதுமே விவசாயியால் கண்டடையப்படுபவை. ஒருமுறை பேருந்தில்செல்லும்போது ஒரு வரண்ட ஏரியைக் கடந்துசென்றோம். நாந் அந்த ஏரியின் வெடித்த சருமத்தை முதுமையின் சருமம் போல ஒரு மாபெரும் சிலந்தி வலைபோல எண்ணிக்கொண்டேன். அந்த வலைநடுவே ஒரு மாடுமேய்க்கும் பெண் மாட்டிக்கொண்டிருப்பவள் போல அமர்ந்திருந்தாள்.

ஆனால் என்னருகே அமர்ந்திருந்த விவசாயி தனக்குள்ளாக ‘எளவு முள்ளுமுல்லா காஞ்சு போச்சு” என்றார். அப்போதுதான் ஏரிக்கரை அருகே நின்ற கருவேலங்களும் காய்ந்திருப்பதைக் கண்டேன். நான் கண்டதைவிட பெரிய வரட்சியை அவர் கண்டிருக்கிறார் என உணர்ந்தேன். சுமார் நூறடி ஆழத்தில்கூட நீரில்லை என்பதை அந்த மரம் அவருக்குக் காட்டிவிட்டிருந்தது! இதுதான் எழுத்தாளனின் பார்வைக்கும் விவசாயியின் பார்வைக்கும் இடையே உள்ள வேறுபாடு.

ச.முத்துவேல்

மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.

அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும், மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது.

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

கூந்தப்பனை

சு.வேணுகோபால் தன் கதையில் ஆண்மை இல்லாத ஒருவனின் அவலத்தைச் சித்தரிக்கிறார். காமத்தின் இயலாமை என்ற மானுடச் சிக்கலை இத்தனை தீவிரமாக வெளிப்படுத்திய கதைகள் குறைவே.

தன்னை பயனற்றவனாக பொருளற்றவனாக உணர்கிறான்.

அப்பயணத்தில் ஒரு தனித்த மணல்தேரிமீது அவன் ஒரு கூந்தப்பனையை காண்கிறான். அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்ததாக தோன்றுகிறது. அந்த மேட்டில் ஓர் ஊற்று சுரப்பதையும் காணநேர்கிறது. கதையின் உச்சம் அது.

ஜெயமோகன்

மு.கஸ்தூரி

மாற்றுவெளி: ஜூன் 2012

சு.வேணுகோபால் மூன்று சிறுகதை தொகுப்புகளில் 58 சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான பூமிக்குள் ஓடுகிறது நதியில் 18 சிறுகதைகள் உள்ளன. களவு போகும் புரவிகள் தொகுப்பிலுள்ள 17 சிறுகதைகளில் 9 கதைகள் சிறுபத்திரிக்கைளில் வெளிவந்துள்ளன.

இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வியல், ஆண்-பெண் உறவுமுறை, குழந்தை மனங்களின் வெளி, விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

பூமிக்குள் ஓடுகிறது நதி பள்ளர், தேவர் சமூகத்தில் நிலவும் சாதியக் கலவரங்களை முன்னிறுத்தி நகர்கிறது.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.’

என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு அத்தனை வேதனை விரசம் வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது.

நவம்பர் 11, 2014

இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.

நவம்பர் 13, 2014

“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………

கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………

பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.

……………….

பூம்மிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..

“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”

:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.

“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”
நவம்பர் 14, 2014

ஒருவருக்கு உண்மையிலேயே சிறுகதை என்றால் என்ன என்ற வேட்கை ஏற்படுமேயானால் அவர் உதாரணம் ஒன்றின் மூலம் தெரிந்து கொள்வது வசதி என்று கருதினால், அவர் எங்கும் அலைய வேண்டாம். ரவீந்திரநாத தாகூர் எழுதிய ‘ஆசாபங்கம்’ படித்தால் போதும். பாரதியார் மொழிபெயர்த்து இந்தத் தலைப்புதான் கொடுத்திருக்கிறார். சாஹித்ய அகாடமி தமிழ், ரவீந்திரர் கதைத் திரட்டு இல் ’துராசை’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு வந்தி்ருக்கிறது. எவ்வளவு ஆழமும், கௌரவமும் மிக்க எழுத்து ரவீந்திரருடையது என்பது படித்தால்தான் தெரியும். இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் இவ்வண்ணம் ஆழமும், கௌரவமும் திகழச் சிறுகதைகள் யாத்திருப்பவர் சு வேணுகோபால்

மே 5, 2015

இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார்.

ஜூலை 21, 2015

Kunugumam_Su_Venugopal

ராதாகிருஷ்ணன்

இவர் கதையில் வரும் சிறுவர்சிறுமிகளின் உலகம் நம்மையும் அவர்களோடு அலையும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது. எவ்வளவு அற்புதமான குழந்தைகள், தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் ஊருக்கு வரும் தாத்தாவிற்கு உணவு கொண்டு வரும் சிறுமி, தன் தந்தை தன் ஹாஸ்டலில் காண வரும் போது அப்பாவின் கசங்கிய சட்டையினை கண்டு நான் வேலைக்கு போனதும் உனக்கு சட்டை வாங்கித்தருகிறேன் என்று சொல்வது …., இந்நூலில் வரும் சிறுவர் சிறுமியரை காணும் போது இவர்களை சுயநலம் உடையவர்களாகவும் வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றும் நம் சமூகசூழல் மீது கோபம் வருகிறது .

குதிரை மசால் தாத்தா எனும் சிறுகதை ஊர் ஊராக சென்று மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு முதியவரை பற்றி பேசும் கதை. இந்த தொகுப்பிலேயே விரிவான சித்திரங்களுடன் மிகுந்த வாஞ்சையோடு படைக்க பட்ட பாத்திரம் இதுதான்.

இன்னொரு கதை நிரூபணம்,இந்த கதை எனக்கு மிக பிடித்த கதைகளில் ஒன்று ,நடைமுறையில் கிருத்துவம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவிடம் இருந்து விலகிவிட்டதையும், ஒரு சிறுவன் இதையெல்லாம் விட்டு தன் குழந்தை மனதால் தன் செயலால் கிறிஸ்து சொல்லும் குணத்தினை தன் இயைல்பிலேயே பெற்றிருக்கிறான் என்பதையும் சொல்லும் கதை இது

29 ஆகஸ்ட், 2012

பா.சேரலாதன்

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.

ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, “மீதமிருக்கும் கோதும் காற்று” எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, “சுகிர்தா” எனும் “சுப்பம்மாள்” என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.

களவு போகும் புரவிகள்

மு. இளநங்கை

சு.வேணுகோபாலின் சிறுகதைகளின் ஊடாகப் பயணிக்கும்போது எதிர்படும் விடயங்கள் சமூகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவையாகவும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளின் பதிவுகளாகவும் அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

முனைவர்பட்ட ஆய்வாளர்

சரவணன் – சாரதி

இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது.

களவு போகும் புரவிகள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜே பி சாணக்யாவின் ஒரு கதை : ஊரில் இருக்கும் சிறிய உணவுக் கடையில் வேலை செய்வான் ஒருவன் (சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து வேலை செய்து கொண்டிருப்பான்). அந்த ஊரில் வசிக்கும் குழந்தை குட்டிகள் உள்ள ஒரு பெண்மணியோடு அவனுக்குத் தொடுப்பு ஏற்பட்டுவிடும். அவள் கணவன் அந்தப் பெண்மணியைப் போட்டு அடிப்பான். ஆனாலும் உறவு தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் அவன் நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வான். அவன் வீட்டாருக்குத் தரப் படவேண்டிய இழப்பீட்டு தொகை அது இதுவென்று கதை போகும். (கதையின் தலைப்பு ஞாபகமில்லை, தேடிப் பார்க்கணும்).

ஏன் இது என்கிறீர்களா?

போதனைக் கதைகளிலிருந்து இலக்கியத்திற்கு அல்லது சு வேணுகோபாலிலிருந்து ஜே பி சாணக்யாவுக்கு என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதலாமென கை பரபரக்கிறது.

ஏப்ரல் 26, 2014

எப்படித் தன் விந்தின்மூலம் ஒரு வாரிசை உருவாக்க முடியாதவன், இயற்கையின் வழி ஒரு சமூகத்தையே மகிழ்விக்கிறான் என்ற கதையாக இந்தப் பிரதியை நான் படித்தேன்.

போதனை இல்லை, வெற்றுப் பிரகடனங்கள் இல்லை, ஆனால் உயிர்ப்பு இருக்கிறது.

ஐ லவ் யூ வேணுகோபால்!

அபாயச் சங்கு குறுநாவலில் ஒவ்வொரு முடிச்சிலும் அவர் எழுதிய வரிகள் பிடித்திருந்தன. ஒட்டுமொத்தமாகப் பிடிக்கவில்லை. முதல் கதையில் இருந்த கிறிஸ்துவ வெறுப்பும் சங்கடமாயிருந்தது.

ஏப்ரல் 29, 2014

அண்ணாகண்ணன்

தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. 02.02.2014 அன்று முகநூலில் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் பக்கத்தில், அவர், டீக்கடை குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டியில் மூன்று நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றதாகவும் அதன் முடிவுகளையும் அறிவித்திருந்தார்.

இணையத்தில் தேடியபோது, அந்தரவெளிகள் குழுமத்தில் 18.08.2010 அன்று மின்னல் வெளியிட்டஇந்த அறிவிப்பு, தென்பட்டது:

அந்தரவெளிகள் குழுமத்தின் முதலாமாண்டு விமர்சனப் போட்டிக்கான புத்தகமாக இந்த ஆண்டு சு.வேணுகோபாலின், “ஒரு துளி துயரம்” எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில், இந்த ஒரே நூலை மட்டும் விமர்சிக்குமாறு கேட்டுள்ளார்கள். நுழைவுக் கட்டணமாக ரூ.50 பெற்றுள்ளார்கள்.

புத்தக மதிப்புரை போட்டி

பத்மஜா நாராயணன்

கதையின் நாயகன் கடைசில் தனக்குத் தானே உணர்ந்து கொள்வது போல் “ஓடுவதில் இல்லை வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பது தான் தோல்வி ” ஆம் ஆட்டம் நிற்கையில் அனைத்தும் நின்று போய் விடுகின்றன. சு. வேணுகோபாலின் பரம வாசகி நான். அவரின் ஆட்டம் படித்து முடித்த பின் கலையும் மேகங்களென இம்சிக்கும் எண்ணங்களை சிறைபிடிக்கும் முயற்சி இது.

மே 9, 2014

உஷாதீபன்

ஒழுங்காப் படிப்பியா? இல்ல ஒன் அப்பனைப் போல ரவுடியா இருக்கப் போறியா? என்று வயிற்றெரிச்சலில் பையனை அப்போதும் மொத்துகிறாள். வேதனையில் கதறுகிறாள். அன்று ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குப் போகணும் என்கிற அவசரத்தில் கிண்டி வைத்திருந்த தக்காளி சாதத்தை அவன் வாயில் தின்னு தின்னு என்று திணிக்கிறாள்.

கிளம்புகையில் உண்டியலில் போட என்று பத்து ரூபாயை அவன் சட்டைப் பையில் வைக்கிறாள். அடிகளையும், திட்டுகளையும் வாங்கியபடி எபி அம்மா பின்னால் ஓடுகிறான். செல்லும் வழியில் அவன் ஏற்கனவே படித்து, தற்போது மூடப்பட்டுள்ள பள்ளி வருகிறது.

நல்ல ஸ்கூலுதானம்மா இது. இங்க படிச்சா நா ஃபஸ்ட் ராங்க் வாங்குவேன்லம்மா…என்னைய அடிக்க மாட்டேல்லம்மா….முத்தந்தானம்மா கொடுப்பே…. –மழலையாய் கெஞ்சுகிறான் தாயிடம்.

ஆமாண்டா எஞ்செல்லம் என்று தாயும் அவனின் அழகுப் பேச்சில் கரைகிறாள்.

எதிர் சுவரில் சாக்கடை மேட்டில் ஒரு பிச்சைக்காரன். கை ஏந்தியவாறே. இடுப்பிற்குக் கீழ் ஆடையின்றி, உறுப்புக்கள் விகாரமாகத் தெரிய, அழுக்கேறி வற்றிப்போய்க் கிடக்கிறான். அவனையே குனிந்து நின்றமேனிக்கு அப்படியே பார்த்துக் கொண்யடிருக்கிறான் எபி. இந்தத் தாத்தாவுக்கு யாரேனும் உதவி செய்வார்களா? என்று அவன் மனம் எண்ணுகிறது. தூரத்திலேயே பலரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்கள்.

அந்தத் தாத்தாவப் பார்த்தா பாவமா இருக்கும்மா… என்கிறான் அம்மாவிடம்.

அட, எழவெடுத்தவனே பேசாம வா…என்கிறாள் தாய். தேவாலயத்தில் குழுப்பாடல் கேட்கிறது. உள்ளே நுழைந்து கண்மூடி மண்டியிட்டு ஜெபிப்பதில் ஈடுபடுகிறாள். எபி ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரன் இருக்குமிடத்தை அடைகிறான். நின்று வேதனையோடு பார்க்கிறான். அவன் மனதை என்னவோ செய்கிறது காணும் காட்சி. கடைக்கு ஓடி பிஸ்கட் வாங்குகிறான். திரும்பி வந்து அதை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்கிறான்.

பிச்சைக்காரன் Jesus Christ never fails to feed his followers…என்கிறான் ஆங்கிலத்தில்.. He lives with children என்று அவன் வாய் முனகுகிறது. எபிக்குப் புரியவில்லை. அம்மா ஜெபத்தை முடித்துத் தேடினால்? என்று திரும்புகையில் கோயில் உண்டியலில் காசு போட்டாயிற்று என்று சொல்லிவிடலாமா என்ற யோசனை வருகிறது எபிக்கு.

15 ஜனவரி 2012

யாழிசை லேகா

அபாய சங்கு“, தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும் வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய் தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும் பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் “பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக” என்னும் சிறுகதையை நினைவூட்டியது

பெப்ரவரி 16, 2010

மல்லிகார்ஜுனன்

உயிர்ச்சுனை: கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது

26 நவம்பர் 2012

கமலி பன்னீர்செல்வம் சுவாமிநாதன்

சதீஷ் தங்கி இருக்கும் விடுதியில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் அந்த கிழவன் கேரக்டர் செம. சந்தோசம் பற்றி அவர் கேரக்டர் வாயிலாக ஆசிரியர் சொல்லும் அத்தனையும் படு யதார்த்தம்.

“சாவு என்பது பேரமைதி” இறந்தகால இயக்கத்திற்கும் எதிர்கால இயக்கத்திற்கும் இடையில் கிடக்கும் ஓய்வே சாவு விழிக்காதிருந்தால் நினைவுகளின் சாவு, நான் இறந்தபின்னும் உலகம் இயங்குகிறது என்ற வரிகள் அழகு.

’அவரவர் நிலையில் நிற்கும்போது வாழ்க்கை வைத்திருக்கும் சிக்கல்கள் உண்மையாக இருக்கின்றன. அந்த சிக்கல்களில் பயமும் சுயகௌரவங்களும் உள்ளுக்குள் கண் விழித்திருக்கின்றன.’

26 நவம்பர் 2014

ராஜ சுந்தர ராஜன்

“ஆட்டம்” நாவலில் ஒரு அக்கா கதை வருகிறது.

கதைசொல்லலில் ஆனால் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நினைப்புகளுக்குமாக ஒரு கபடி ஆட்டம் இருக்கும்.

இடையே, ||செங்குன்றம் ஏற இந்த நதி வழி போன கண்ணகி…|| என்று தொடங்கி, ||… நெருப்புள் தீமை தங்காது. கபடம் தப்பி விடாது. உண்மையே சுடர். உண்மையே சுடரும். தெய்வத்தின் சன்னதியில் எவளும் கண்ணகிதான். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். அவ்வளவுதான். தாயிடம் பிறந்து தாயாகியவள்.|| என்று முடியும் ஒரு பத்தி உண்டு. (பக். 97)

பெப்ரவரி 20, 2014

சு. வேணுகோபால் பேச்சு

“காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.

ஜனவரி 5, 2012

பசி பற்றிய படைப்புகள்தான் நாஞ்சில் நாடனின் பெரும்பாலான படைப்புகளின் கருவாக இருக்கும். எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி இருக்கும் செறிவுதான் அவரது படைப்புகளை நகர்த்திச் செல்கின்றன. கண்ணீர்க் குரலும், வேதனைக் குரலும் நாவல்களில் மிகுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் பயணம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை நாஞ்சில் நாடனிடம் இருந்து புரிந்து கொள்ளலாம். மரபைச் சரியாகக் கைக்கொள்ளும் திறனும் அவரிடம்தான் வாய்த்திருக்கிறது என்றார் அவர்.

மார்ச் 14, 2011

கண்மணி குணசேகரன்

சு. வேணுகோபால் எழுதிய ‘நிலமெனும் நல்லாள்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். நிலத்தை, பயிர்ப் பச்சைகளை, குடும்ப உறவுகளை விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் வாழ நேரும் ஒருவனின் கதையே இந்த நாவல். அந்தக் குடும்பத்தோடு அவனால் இணைந்து வாழ முடியாத மன உளைச்சல்கள், தோல்விகள், போராட்டங்களென அவனது அவல வாழ்வைச் சொல்லும் இந்த நாவல் என்னைக் கலங்கடித்தது.

ஏப்ரல் 11, 2015

செல்வேந்திரன்

ஆட்டம்: இச்சைகளின் பெரும் கபடி: விளையாட்டிற்குத்தான் விதிகள் உண்டு. மானுட இச்சைகளுக்கு இல்லை. காலை வாறி விட கைகோர்த்து காத்திருக்கும் காமத்தின் மாய அரணைத் தாண்டி உப்புக்கோட்டைத் தொட்டுத் திரும்புவது சாமான்யம் அல்ல.

எந்த கதாபாத்திரத்தின் மீதும் கோபம் கொள்ள முடியாத கையறு நிலைதான் வாசகனுக்கு. வாழ்வின் விசித்திரங்களுக்குக் காரணமே கிடையாது. எல்லோரும் சூழலின் கைதிகளே.

நாவலெங்கும் ஒரு நாய் தன் குட்டிகளைத் தேடி காடு மேடேங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்போதுதான் ஈன்ற குட்டிகளை யாரோ ஒரு குட்டி கூட விடாமல் தூக்கிச் சென்றிருப்பர். நாவலெங்கும் கிளைபரப்பியிருக்கிற தாய்மையின் பரிதவிப்பை இந்த நாய் ஊமைவலியாக வாசகனுக்குக் கடத்துகிறது.

“அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர்; தெரியாமல் ஆடித் தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்!” எனும் வரிகளோடு அந்த அத்தியாயம் முடிகிறது.

மே 9, 2014

அரசன் சே

“திசையெல்லாம் நெருஞ்சி”. தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. கொஞ்சம் பிசகி இருந்தாலும் “இரட்சணியம்” கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.

டிசம்பர் 4, 2014

ஆட்டம்: தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும் சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது, இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

ஜூலை 2015

su_venugopal

குங்குமம்

மலையும், மலைசூழ் நிலமுமான தேனிக்கு அருகில், சில்ல மரத்துப்பட்டி என்ற பசுங்கிராமத்தில் தலையில் முண்டாசும், கைகளில் காங்கேயம் காளைகளுமாக உலவித் திரிகிறார் வேணுகோபால். பேச்சில் தேனிக்கே உரித்தான வெள்ளந்தித்தனம்.

‘‘எல்லாம் அப்பா சுருள்வேலோட சம்பாத்தியம். ராப்பகல் பார்க்காத உழைப்பால 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்தினவர். அவருக்கு இளைப்புத் தொல்லை இருந்துச்சு. ‘நல்ல சீமைச்சரக்கா வாங்கி தினமும் ரெண்டு கிளாஸ் அடிச்சின்னா சரியாயிரும்’னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்காரு. கிளாஸைத் தொட்டவரு, சாராயம் அவரைக் குடிக்கிற வரைக்கும் விடலே. இன்னைக்கு இலக்கிய சந்திப்புகள்ல தண்ணி அடிக்க நிர்ப்பந்திக்கிறவங்ககிட்ட, ‘எனக்கும் சேத்து எங்க அப்பாவே குடிச்சிட்டார்’னு சொல்லி நான் தவிர்க்கிறதுண்டு.

ரொம்ப சீக்கிரமே அப்பா எங்களை விட்டுப் போயிட்டார். அப்புறம் எல்லாம் அம்மா பொன்னுத்தாயிதான். சிறந்த நிர்வாகி. படிச்சதென்னவோ அஞ்சாவதுதான். பண்ணையில வேலை செய்யிற 50 பேரோட கணக்கு வழக்கை மனனமா போட்டுச் சொல்லும். மொத்தம் நாங்க 5 புள்ளைங்க. நான் கடைக்குட்டி.

மாடு இல்லைன்னா விவசாயம் இல்லை. விவசாயத்துக்கு உகந்தது காங்கேயம் காளைகள்தான். இப்போதானே மின்சார மோட்டார் எல்லாம். அந்தக்காலத்துல கமலையிலதான் மாடு கட்டி தண்ணி இறைக்கணும். ஒரு கொழுவுல 500 லிட்டர் தண்ணி எடுக்கலாம். அப்படி கிணத்துல இருந்து எடுக்கிறதுக்கு ஓங்குதாங்கான மாடுக வேணும். உழும்போது கலப்பைக்கு மேல ஒரு கல்லை வச்சு, அதுக்கு மேல ரெண்டு பேரை நிக்க வச்சு உழுவாங்க. ஆழ உழுதாத்தான் விளைச்சல் பிடிக்கும். அதுக்கெல்லாம் காங்கேயம் காளைதான் சரிப்பட்டு வரும். விவசாயத்துக்காக வாங்குனாலும் அப்பாவுக்கு மாடுகமேல பிள்ளைப்பாசம். வதைச்சு வேலைவாங்க மாட்டாரு. மாட்டோட மொழியும் கூட அவருக்கு அத்துப்படி.

அப்பாவைப் பாத்துத்தான் விவசாயத்து மேலயும், மாடுக மேலயும் எனக்கு ஆசை வந்துச்சு. காலையில 6 மணிக்கு எழுந்திரிச்சு, ஆடு, மாட்டை ஓட்டிக்கிட்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிருவேன். 8 மணி வரைக்கும் மேய்ச்சுட்டு வந்து பள்ளிக்கூடம் போவேன். அதுக்கு ‘பனிமேய்ச்சல்’னு பேரு. சாயந்திரம் வந்ததும் கொட்டத்துக்குத்தான் போவேன். ஆடு, மாட்டை மேய விட்டுட்டு, வரப்புல உக்காந்து படிப்பேன். முப்பதுக்கும் மேல பண்ணையாட்கள் இருந்தாலும், அவங்களோட சேந்து நானும் களை வெட்டுவேன். தண்ணி வெட்டி விடுவேன். தாட்டு சுமப்பேன். நிலக் கடலை, பருத்தி, கோவில்பட்டி சோளம், மஞ்சள்னு எக்காலமும் காடு பச்சைமேனியாக் கிடக்கும்.

பள்ளிக்காலங்கள்லயே கண்ணதாசன் பாடல்கள் மேல மோகம் வந்திருச்சு. எப்படி இந்த மனுஷனால இவ்வளவு பாடல்கள் எழுதமுடியுதுன்னு வியந்துபோவேன். பாடல்களோட பொருள் புரியத் தொடங்கினபிறகு, ரகசியமா எனக்குள்ள ஒரு ஆசை அரும்புச்சு. ‘நானும் கண்ணதாசனாகணும்’..!

கல்லூரிக்குப் போனதும் தமிழ் இலக்கியம்தான் படிப்பேன்னு அடம்புடிச்சு சேந்துட்டேன். என் தேடலுக்குத் தகுந்த களமா கல்லூரி இருந்துச்சு. ஒரு லட்சம் புத்தகங்கள் அடங்கின மிகப்பெரிய நூலகம் அமெரிக்கன் கல்லூரியில இருக்கு. கண்ணதாசன் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிச்சேன். ஒருமுறை கல்லூரி இலக்கிய விழாவுக்கு ஜெயகாந்தன் வந்தார். அவரைக் கேள்விகளால திணறடிக்கணுங்கிற ஆர்வத்துல நூலகமே கதியாக் கிடந்து படிச்சேன். நிகழ்ச்சி நாள் வந்துச்சு. கம்பீரமா, ஒரு மத யானை மாதிரி வந்து உக்காந்தார் ஜெயகாந்தன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்வி கேக்குறாங்க. எல்லா கேள்விகளையும் எதிர்கொண்டு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்றார். ‘புதுசா என்ன எழுதப்போறீங்க’ன்னு ஒரு பெண் கேள்வி கேட்டுச்சு. ‘இதுவரைக்கும் நான் எழுதுன எல்லாத்தையும் படிச்சிட்டியா..?’ன்னு எதிர்க்கேள்வி கேட்டார். அந்த மிரட்சியில, தொண்டையோட என் கேள்விகள் நின்னுபோச்சு. ஆனா அப்போ இன்னொரு ரகசிய ஆசை உருவாச்சு. ‘நாம ஜெயகாந்தனா ஆகணும்’..!

எம்.ஃபில் முடிச்சேன். என் நண்பர்கள்ல சில பேர் சினிமாவுக்குப் போனாங்க. சில பேர் கல்லூரி வேலைக்குப் போனாங்க. நான் விவசாயம் செய்யப் போயிட்டேன். என் அப்பா 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்துனார்; 45 ஏக்கரா மாத்தணும்ங்கிறது என் திட்டம். கோவணத்தைக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல இறங்கிட்டேன். காங்கேயம் காளைகளோட வாழத் தொடங்குனேன். ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டுன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடுச்சு.

வெ.நீலகண்டன்

Writer_Su_Venu_Gopal

பின் குறிப்பு

இந்தத் தேடலின் போது பல பதிவுகளை படித்து முடித்தவுடன் தோன்றியவை:

1. பலர் அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள். குறிப்பாக திண்ணை, கீற்று போன்ற இணைய சஞ்சிகைகளில் வெளியான சில – ஒரே பிரதியை மீண்டும் பிரதி எடுத்தவை. சில பத்திகள் ஜெயமோகனிடம் இருந்து, சில பத்திகள் வெட்டி ஒட்டியவை என்று முழுக்க முழுக்க சுட்டவை. இந்த மாதிரி கட்டுரைகள் எம்.ஃபில்., முனைவர் பட்டம் பெற உதவுகின்றன. எத்தனை இடங்களில் உங்கள் கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதை நிரூபிக்கவும், கனமான இதழ்களில் தங்களுடைய ஆய்வு வெளியாகி இருக்கிறது என்பதற்காகவும் இந்த இதழ்கள் பயன்படுகின்றன.

2. பல விமர்சனங்களில் கதை சுருக்கத்தைச் சொல்லி, முடிவைச் சொல்லி தங்கள் விமர்சனத்தை, புத்தக அறிமுகத்தை முன்வைத்தார்கள்.

3. கால ஓட்டத்தில் சு வேணுகோபாலின் இடம் என்ன? தமிழகத்தின் எந்த நிலப்பரப்பை, எந்த காலகட்டத்தை, எவ்விதச் சூழலை அவருடைய படைப்புகள் அடையாளம் காட்டுகின்றன? அவருடைய படைப்புகளை காலவரிசைப் படி படித்தால், நிகழும் புனைவாக்க மாற்றங்கள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகளை நான் வாசிக்கவில்லை.
பாலா
பாஸ்டன்
—-

சு.வேணுகோபால் எழுத்தின் எல்கை

ராஜ சுந்தரராஜன்

raja sundararajan

டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளரா, அல்லது தொஸ்தொயேவ்ஸ்கியா? இப்படி ஒரு கணிப்புச்சிக்கல் உலகில் உண்டு.

தொஸ்தொயேவ்ஸ்கியின் எழுத்தில் ஒரு தெருமரல் (thriller) இயல்பு உண்டு; டால்ஸ்டாயில் அப்படியல்லாத ஓர் ஒழுங்கமைதி. அதனால், டால்ஸ்டாயே சிறந்த எழுத்தாளர் என்பது ஒரு கணிப்பு.

நான் ஆனால் தொஸ்தொயேவ்ஸ்கியின் ஆள். முதன்மையாக அவருடைய குணவார்ப்புகளின் மனச்சிடுக்குகளே காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் அவருடைய சொல்முறையால் ஈர்க்கப்பட்டவன். இன்றைக்கு நாமெல்லாம் எழுதுகிறோமே, வாசிக்கிறோமே, விளைவை முன்சொல்லி வினையைப் பின்சொல்லும் – அதாவது ‘the effect first and the cause thereafter’ பாணி – அதை உலகுக்கே முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் தொஸ்தொயேவ்ஸ்கி என்பது வரலாறு. நிகழ்ச்சி வர்ணனைகள் மட்டுமல்ல, அவரது வாக்கியங்கள் ஓரொன்றுமே அப்படியானதொரு கட்டுமானத்தில் அமைந்தவை. (மொழிபெயர்ப்பில் அதை இழந்திருப்போம்). அத்தகையதோர் எழுத்துநடை காரணமாகவே, அவரது எழுத்தில் அந்த நாடகவழக்கு.

மொழிவிளையாட்டில் ஈர்ப்புள்ள நான், அப்படி, தொஸ்தொயேவ்ஸ்கியின் ரசிகனாக இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அது சு.வேணுகோபாலை வாசிக்கிற வரைக்கும்தான்.

சு.வே. ஒன்றும் எழுத்தில் சிலம்பாடுகிறவர் அல்லர். மிகச் சாதாரணமான எழுத்துநடை அவருடையது. ஆனால் அவரை வாசிக்கவாசிக்க, டால்ஸ்டாயின் சிறப்பு என்ன என்பது அதுவாகவே புலர்ந்து விடிந்தது. படித்தவற்றில் இருந்தல்லாமல் பட்டவற்றில் இருந்து எழுதுகிறாரே அதுவா என்றால், ‘ரஷ்யன் மாஸ்ட்டர்ஸ்’ எல்லாருமே அப்படித்தானே? இது வேறு விசயம்.

சு.வே.யின் எழுத்துநடை மிகச் சாதாரணமானது என்றேனா? என்றால் அது சற்று எளிமைப்படுத்தல்தான். துல்லியத்தை விவரணையில் அணுகும் ஜெயமோகனுடைய, அல்லது குட்டையைக் குழப்பி அகத்துள்ளதை புறப்பரப்பில் வாய்பிளக்க எழுப்பும் கோணங்கியினுடைய எழுத்துநடை போன்றதோ அல்ல சு.வே.யினுடையது என்றுதான் சொல்லவந்தேன்.

இந்த இடத்தில், சு.வே.யின் “சாபநினைவுகள்” கதை நினைவுக்கு வருகிறது. ”பீம்பீடகா பாறையில் உருகிவரும் நீர்முள்ளிச்சாறு பாறைக் கத்தியில் பட்டுப் பளபளக்கப் பாயும் கல்குதிரை வீரனின் பிதுங்கும் கண்களில் பீறிடும் ஒளியென தலைமுடியில் புகுந்து நரைக்கிறது…” என்றிப்படிப் புறத்துவரும் அந்தக் கதைநாயகியின் கூற்றுகள், ஒரு பகடி போன்று, யாரைச் சுட்டுகின்றன என்பதை யூகிக்க முடியும். ஆனால் அவை பகடி அல்ல; ஒரு மேதை, போதாமை மிக்க இச் சமூகச் சூழலில், எப்படி அந்நியப் பட நேர்கிறது என்பதான இதயத்தின் ரத்தக்கசிவுகள்.

அதேதான், சு.வே.யின் எழுத்துகள் எதுவுமே ஒற்றைப் பரிமாணத்திலானது இல்லை. “வட்டத்திற்குள்ளே”, அதன் நாயகி ‘வயர் கூடை’ பின்ன முடியாததைப் பற்றிய கதையன்று, அது உலக வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட ஒரு கலைஞனின் தோல்வி பற்றியது. அப்படி வாசித்தால்தான் அதில் வரும் கருக்கலைப்புகள் இரண்டும் கூடுதல் அர்த்தம் பெறும். அப்படி வாசிக்கத் தெரியாத வாசகர்களுக்கு சில கதைகள் மொட்டையாய் முடிவன போலவும் தோற்றம்தரக் கூடும்.

ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.

அப்புறம், சு.வே. வேளாண் தொழில்சார்ந்த எழுத்துகளில் வல்லவர் என்றொரு படிமம் உருவாக்கித் தரப்படுகிறது. ஒரு கோணத்தில் அது உண்மை என்றாலும், அவர் வேளாண்மைச் சூழலை எதற்கான கருப்பொருளாகப் பயன்படுத்துகிறார் என்று புரிந்துகொள்ளும் ‘ஐவேசு’ உள்ளவர்களால் மட்டுமே அதன் ஆழத்துக்குள் போக முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு தோட்டத்தில் மிளகாய்ச் செடிகள் இலைகறுத்துச் செழித்து நிற்கின்றன. ஒரு தாய் அவற்றைப் பார்க்கிறாள். தன் முலைகளைக் கட்டவிழ்த்து, நீரோடிப் பாயும் வாய்க்காலில் பால் பீய்ச்சி விடுகிறாள். அக்கணமே தோட்டத்தின் அத்தனை செடிகளும், வான்நிறைந்த தாரகைகள் என, பூத்துப் பொலிகின்றன. இது மேஜிக்கல் ரியலிசம். மார்க்குவெஸை மேற்கோள் காட்டுவதன்றி வேறொன்றும் சாதிக்க முடியாதவர்கள் வெட்கப்படத்தக்க ‘ஒரிஜினல் இந்தியன் மேஜிக்கல் ரியலிசம்’. ஆனால் சு.வே. அப்படி ஓர் இலக்கியக் கொள்கைக்காக வலிந்து இதை எழுதவில்லை என்பது விசயம் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். (1) மிளகாய்ச்செடி பூக்காமல் இலைகறுத்துச் செழித்துக்கொண்டே போனால் அதன் விளைச்சல் பற்றிய கவலை எந்த ஒரு தோட்டக்காரனையும் தொற்றிவிடும். (2) போலவே, உடல்செழித்தும் பூப்பெய்தாத பெண்கள் பற்றிய கவலையும்.

ஆக, சு.வேணுகோபாலின் அக்கறையும் பொருள்முடிபும் வேறு.

காந்தாலட்சுமி அம்மையாரின் பெண்ணியத்தை ஆதரித்துப் பேசும் “சப்பைக்கட்டு” கதை நாயகன், தன் நண்பரின் மகன் அந்த அம்மையாரின் மகளைப் பெண்பார்க்க வந்து நிற்கையில், “பொம்பள ராஜ்ஜியம் பிடிச்ச குடும்பம்டா. ஆணாதிக்கம் அது இதும்பாளுக… வேற நல்ல எடமா பார்க்கலாம்.” என்று வெட்டி விடுகிற அந்த இடத்தில் கதை முடிகிறதில்லை. ‘திடீரென நேற்றைய கனவு நினைவுக்கு வந்தது,’ என்று இன்னொரு மட்டத்துக்கு நகர்ந்து முடியும்போது, மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான் என்று நமக்குத் தோன்றிவிடும்.

ஒரு சக்கிலியக்குடி மாணவன் தன்னோடு படிக்கும் ஜெயசுதாவின் முன் நல்ல உடுப்பு உடுத்தி அசத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறான். (எவ்வளவு இயல்பான ஆசை பாருங்கள்!) ஆனால் அதற்காக தன் அம்மா ஆசையாக வளர்க்கும் ஆடு குட்டிகளை விற்கும் அளவுக்கு படிப்புக்குப் பணம் வேண்டும் என்று பொய்க்காரணம் சொல்கிறான். அந்த ஆடு, குட்டிகள் பற்றிய வர்ணனைக் காட்சிகளைப் பாருங்கள்:

||குட்டிகள் தெருவில் ஏறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கத்தின. ஓட்டமும் நடையுமாகக் குட்டிகளைப் பார்த்துக் கத்திக்கொண்டே நிறைந்த வயிற்றைத் தூக்கி நாலுகாலில் தடக்தடக்கென தாண்டித்தாண்டி ஓட்டத்தில் வந்தது தாயாடு. பனங்காய் போன்ற கனத்த மடியும் புடைத்த காம்புகளும் தொடையில் இடித்து இடித்து வேகத்தைத் தடுத்தன. ஓடிவந்த ஆடு அடித்தொண்டையிலிருந்து வந்துவிட்டேன் வந்துவிட்டேன் என்ற குரலை எழுப்பியது. தவ்வாளமிட்டுச் சென்ற குட்டிகள், நடுத்தெருவில், தாய்மடியில் முட்டி மண்டியிட்டன. கால்களை முட்டுக்கு ஏற்ற விதத்தில் அகட்டி வைத்த ஆடு, குட்டிகளின் ஆடுகின்ற வாலை முகர்ந்து நக்கியது. குட்டிகள் மண்டியிட்டு காம்புகளை உறிஞ்சின.||

||”என் படிப்பே போச்சு. ஆடு ஆடுன்னு சாவுறே. நான் நாசமாப் போறேன்,” என்று சண்டையிட்டான்.||

||750 ரூபாய்க்கு தாயோடு குட்டிகளை சேர்த்து விற்று, கயிறு மாற்றி, “நல்லா இருக்கணும்; பல்கிப் பெருகணும்!” என்று வாங்கியவருக்கு வாழ்த்துச் சொல்லித் தந்தாள். அம்மாவின் உதடுகள் கோணிக்கொண்டன. வாங்கியவன் இழுக்க இழுக்க அவன் பின்னால் செல்லாமல் அம்மாவைப் பார்த்துக் கழுத்தை இழுத்துக் கத்தியது கருங்கண்ணி. தொடைப்பக்கம் பிடிகயிற்றை போட்டு இழுத்துச் செல்ல பின்னங்கால்களைத் தேக்கிக்கொண்டே முகத்தை மட்டும் அம்மா பக்கம் திருப்பி, பா பா என்று கத்திக்கொண்டு போனது.||

||அம்மாவின் அடிவயிறு வெட்டிவெட்டித் துடித்தது. பற்களிடையே எச்சில் நூல் பிணைய மெல்ல வாய்திறந்து அழுது பரிதவித்தாள். ஒரு பைசா தொடாமல், “நைனா, பார்த்துச் செலவு பண்ணுடா! தம்பி தங்கச்சி எல்லாம் ஒன்ன நம்பி இருக்கு நைனா! நல்லாப் படிக்கணும் நைனா!” என்று தந்தாள்.||

இதை, “இழைகள்” குறுநாவலிலிருந்து, இடைப்பகுதிகளை வெட்டிவெட்டித்தான் ஒட்டியிருக்கிறேன். அப்படியும் கண்ணில் நீர்சோரத்தான் தட்டச்சி முடித்தேன்.

இதே போல “ஆட்டம்” நாவலில், ஒரே தாய்க்கு இன்னொரு தந்தையில் பிறந்தவள் என்றாலும் அக்கா என்றொரு உறவு வருகிறது. வாசிக்கையில் தவித்துப் போவோம். ஆனால், ஓர் ஆண் எழுத்தாளர்க்கு அம்மா அல்லது அக்கா பற்றி எழுதுவதும் ஒரு பெண் எழுத்தாளர்க்கு அப்பா (“பழையன கழிதலும்” நாவலின் அப்பா குணவார்ப்புக்காக சிவகாமியைப் பாராட்டுகிறேன்) அல்லது அண்ணன் பற்றி எழுதுவதும் பெரிய சாதனை ஆகாது என்றுதான் கருதுகிறேன்.

இந்த எல்லை விளிம்பில்தான் சு.வேணுகோபால் ஒரு நெடுந்தாவல் தாவுகிறார். “ஆட்டம்” நாவலில் குறவர்கூட்டம் பற்றிய வர்ணனைகள், மேலும் ஒரொரு கதைகளிலும் பெண்களின் பிரச்சனைகளுக்குள் உள்ளிறங்குவது; மாதவிடாய், பேறுகாலம், கருக்கலைப்பு, பால்கட்டிக்கொள்ளுதல் இன்ன சிக்கல்கள் மட்டுமல்ல, கத்திமேல் நடப்பது போன்ற ஆகும் ஆகாத் ‘தொடுப்பு’களுக்குள் விழுந்து நம்மை அலைக்கழிப்பதின் வழியாக இந்த சமூக அமைப்பின் சிக்கலான இருட்டு மூலைகளையும் சுட்டிக் காட்டுகிறார். “நிலம் என்னும் நல்லாள்” காட்டும் மனைவிதான் இன்றைக்கு நடைமுறை உண்மை. ஆனால் நம்மைப் பழைமைக்குள் வற்புறுத்தாமல், பழைமை தொட்டு, நிகழ்காலத்துக்குள் ஆற்றுப்படுத்துகிறார் பாருங்கள், அங்குதான் சு.வேணுகோபால் இன்றியமையாமை என்னும் நிலையை எட்டுகிறார்.

புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் கதை எழுதிய மொழி இது. தொன்றுதொட்டு வந்த தமிழ்க்குடிகளில் பிறந்து வந்தவர்கள் மட்டுமன்று, வந்தேறிய பிறகு இதனைத் தம் மொழியாக வரித்தவர்களும் எழுதிவருகிறார்கள். “நிலம் என்னும் நல்லாள்”, அப்படி, தெலுங்கர்களைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதைமாந்தர்களுடைய நிலப்பற்று, வேட்கையைப் பாருங்கள்!

சு. வேணுகோபாலின் தாய்மொழி இன்னதென்று அறியேன். ஆனால் இன்றுவரை எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் இவருக்கு இணை என்று சொல்ல எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர். கு.அழகிரிசாமி ஓரளவுக்குத் தேறுகிறார்; தி.ஜானகிராமன் தன் வேட்கைகளை எதிர்பாலில் ஏற்றியவர் அவ்வளவே.

தொஸ்தொயேவ்ஸ்கியின் குருஷெங்க்கா தேருகிறாள்; மற்றொரு பெண்ணும் என் நினைவில் இல்லை. ஆனால் டால்ஸ்டாயின் அன்னா, கிட்டி, மர்யா, நடாஷா, ஸோன்யா இப்படி…

இப்படித்தான் டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளர் என்னும் முடிவுக்கு வந்தேன்.

-oOo-

நிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து

– நரோபா

DSC_0186

சு வேணுகோபால்

“யசோதா அக்கா சூடச்சுடர் முன் மண்டியிட்டு வணங்கினாள். சேலையையும் நாடாவையும் தளர்த்தி இறக்கினாள். தொய்வில்லாமல் வயிறு புடைத்திருக்கிறது. இரு கைகளிலும் செம்மண்ணை அள்ளி ஈசான மூலை வேம்பாண்டசாமி கோயிலை நோக்கி வணங்கினாள். அந்த மண்ணைத் தன் வயிற்றில் மெல்லத் தடவ சேலையிலும் நிலத்திலும் உதிர்ந்து விழுந்தது. உதிராத மண்ணோடு சேலையை ஏற்றிக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.“
-நிலம் எனும் நல்லாள், சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாளில் வரும் இச்சித்தரிப்பு என்னுள் பல நினைவுகளை, கேள்விகளைக் கிளர்த்தியது. சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் முருகையாவை பார்ப்பேன். வழக்கமாகச் செல்லும் உறவினர் வீட்டு அடுக்குமாடி கட்டிடத்தின் வாட்ச்மேன் அவர். எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பிரியம். பதினெட்டு ஏக்கர் நஞ்சை, தென்னந்தோப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆறாயிரம் சம்பளத்திற்காக பட்டணம் வந்து வாயில் காத்துக் கொண்டிருக்கிறார். ஊர் திரும்புவதைப் பற்றியும் மீண்டும் விவசாயம் செய்வதைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். கடந்தகாலத்து நினைவுகளும் என்றேனும் ஒருநாள் ஊர் திரும்பி விவசாயம் செய்து விட முடியும் எனும் எதிர்காலத்து கனவும் நிகழ்காலத்து அவமானங்களை அசவுகரியங்களைப் பொறுத்துக்கொள்ளச் செய்கிறது.

சென்றமுறை சென்னைக்குச் சென்றபோது முருகையா அங்கில்லை. வேறு எவரோ ஒரு கிழவர் பெரிய மீசையுடன் நின்றிருந்தார். முதுகுளத்தூரோ சிங்கம்புணரியோ தெரியவில்லை. கேட்கவேண்டும். முருகையா ஒருவேளை ஊர் திரும்பியிருப்பாரோ என மகிழ்ந்து விசாரித்தேன். அந்த பில்டர் கட்டும் புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு நம்பகமான காவலாள் தேவை என அழைத்துச் சென்றதாக சொன்னார்கள். புதைகுழியென நகரம் தன்னுள் எல்லோரையும் இழுத்துக் கொள்கிறது. இந்தக் காட்சி இந்த ஒட்டுமொத்த கதையின் சாரத்தையும் தன்னுள் திரட்டி வைத்திருப்பதாகக்கூட தோன்றுகிறது.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நவீன இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளான இடப்பெயர்வை, நகரமயமாதலை பழனிகுமார் எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு விரிவாகப் பேசுகிறது. நிலம், நினைவுகள், குடும்பம், பொருளியல் தேவை என பல்வேறு விசைகளால் அவன் இழுபடுகிறான். அண்ணன் தம்பியென தேனிக்கு அருகே கிராமத்தில் விவசாயம் செய்து வாழும் பெரும் குடும்பம் அவனுடையது. படித்து கிராமத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு அலுவலக வேலைக்காக மதுரைக்கு வருகிறான். வேலைபார்க்கும் மனைவியும் குழந்தைகளும் கோவைக்கருகே வசிக்கிறார்கள். விடுமுறையில் ஊரிலிருக்கும் அம்மாவையும் தம்பி குழந்தைகளையும் காண வேண்டும் என விரும்புபவன் மனைவி பிள்ளைகளைக் காணச் செல்வதோடு துவங்குகிறது கதை.

அன்னை நினைவுகளோடும் சேர்ந்து வளர்ந்த நிலத்தோடும் இணை வைக்கப்படுகிறாள். மனைவி நிகழ் வாழ்க்கையோடும் புதிய நிலத்தோடும். கதையின் துவக்கமே நேரடியாக அதன் மைய சிடுக்குக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. இருவேறு விசைகள் வெவ்வேறு திசைகளில் அவனை இழுக்கின்றன. ஒருவகையில் அவைகளுக்கு இடையிலான சமரச புள்ளியை கண்டடைவது தான் கதை எனலாம். பழனியின் தரப்பைப் பேசத் துவங்கும் கதை அவன் மனைவி ராதாவை முதலில் இகழ்கிறது. மெல்ல ராதாவின் தரப்பை நோக்கி நகர்ந்து அதை புரிந்துகொள்ளும் முயற்சியில் பழனியின் மனம் திறந்துகொள்வதோடு கதை முடிகிறது. புதிய நிலத்தில் வேர் துளிர்க்கிறது.

பெண்ணையும் நிலத்தையும் ஒப்பும சொல்வது நம் மரபின் வழக்கம். பூதேவி எனும் அன்னையின் வடிவமாக நம் புவியை வணங்குகிறோம். எல்லா வளத்தையும் தன்னில் புதைத்துக் கொள்பவள். வேணு இந்த உருவகத்தையே நவீன கதையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். புதிய நிலத்தில் பழனி அன்னியமாகும் இடங்களை நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். பேருந்துகளில் கூட அவனுக்கு எவரும் இடமளிப்பதில்லை. பழனி தன்னை பயன்மதிப்பற்று உணர்கிறான். அவன் அங்கு எவருக்கும் தேவைப்படவில்லை. தன் பிள்ளைகள்கூட மனைவி வழி உறவையே அறிந்து வளர்கின்றன. அவனிடம்கூட ஒட்டுவதில்லை. அவர்களாவது தன்னிடம் ஒட்டவேண்டும் என ராதாவிற்கு தெரியாமல் ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறான். வேண்டியதை வாங்கித் தருகிறான். ஊரில் தன் சுற்றம் சூழ வாழ்ந்த போது தன் சொல்லிற்கு இருந்த மதிப்பை எண்ணி வருந்துகிறான். கதையின் கடைசியில் ஆட்டுக்குட்டியின் வயிற்றிலிருந்து சிதைந்த குட்டிகளை எடுத்து ஆட்டைக் காப்பாற்றுவதன் வழியாக தனக்கான பயன் மதிப்பை உணர்ந்து கொள்கிறான்.

கதைக்குள் கர்ணபரம்பரை கதையாக சொல்லப்படும் நாகலாதேவி கதை முக்கியமானது. நாகலாபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பழனியின் தாத்தாவின் தாத்தா ஆறு மைல் அப்பாலுள்ள காளனூருக்கு வந்தார்கள். ‘நாகலாபுரத்தான்’ என்றே பழனியின் தாத்தா அவருடைய கூட்டுக்காரர்களால் அழைக்கப்படுவாராம். பழனியின் அப்பா காளனூரை தன் உயிராக எண்ணுபவர். பழனியின் மகன் அவன் வளர்ந்த கொங்கு மண்ணை இயல்பாக அப்படித்தான் எண்ணுவான் அல்லவா? முன் எப்போதோ இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக (இதற்காக அவர் மீது இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டது என்றெண்ணுகிறேன்) ஆந்திரத்தில் இருந்து பெயர்ந்து தான் நாகலாபுரம் வந்தார்கள். அவர்களுடைய குலதெய்வம் நாகலாதேவி வாக்களிப்பதாக வரும் பாடலில்

‘தெற்கு நோக்கி நடங்கள்..

திருவிளக்கு நானாவேன்…

வெறியாட்டம் அடக்க..

வீரமெல்லாம் திரட்டி வருவேன்…

விட்டு வந்த மண்ணிலே..

பட்டுருள பிஞ்சுகள் வரும்.

.பட்டழிந்த காயமெல்லாம்..

செம்புழுதி மேவி ஆத்தும்…

வீரமெல்லாம் திரட்டிவர..

வேகமாக நடங்கள்.’

என்று முடியும் அப்பாடலின் இறுதியில் ‘தெற்கே வந்த நாகலாதேவி திரும்பாமலே உறங்குகின்றாள்’ என்றெழுதுகிறார் வேணு. இடப்பெயர்வு என்பது தவிர்க்கமுடியாதது என்பதை சொல்கிறது. அன்னை நிலம் பற்றிய கனவு மனிதர்களை இயக்குகிறது. ஒரு கோணத்தில் இந்த கதை நிலபிரபுத்துவத்திலிருந்து நவீன காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தலைமுறையின் அலைகழிப்பை பேசுகிறது. நவீன சமூகம் இத்தகைய பிடிப்புகளை பொருட்படுத்துவதில்லை. நிலத்தினுடனான உணர்வுரீதியான பிணைப்பை துண்டிப்பதன் வழியாகவே அது முன்னகர்கிறது.

வேணுவின் மிக முக்கியமான பலம் என்பது பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்தும் அவருடைய முறை. நுண் விவரணைகள், மானுட இயல்புகளைப் பற்றிய கூரிய அவதானிப்புகள் மிகச் சரளமாக அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றன. பழனிகுமாருக்கும் ராதாவிற்கும் இடையிலான உரையாடல்களில் வன்மம் தெறிக்கிறது. பாத்திரங்களின் அக விவரிப்புகள் மிக நுட்பமானவை. ஆட்டம் குறுநாவலில் மத்திய வயதிலும் தனது மிடுக்கை நிரூபிக்கத் துடிக்கும் வடிவேலும், நிலம் எனும் நல்லாளில் இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் ஊடாடி புதிய நிலத்தில் வேர்விட முடியாமல் தவிக்கும் பழனிகுமாரும் அத்தனை கச்சிதமாக அவர்களுடைய கீழ்மைகளுடனும் உன்னதங்களுடனும் உருவாகி இருக்கிறார்கள்.

‘அடுத்தவனோடு தொடுப்பிருந்த’ காரணத்திற்காக புருஷனால் இடது கை வெட்டப்பட்ட மீனாட்சிபுரத்துகாரி, பொலிகாளையாக மாறி பொதபொதவென ஆன முன்னாள் கபடி வீரன் (ஆட்டம் குறுநாவல்) என முதன்மை பாத்திரங்களைத் தவிர்த்து உதிரி பாத்திரங்கள் கூட சொற்ப சொற்களில் உயிர்பெறுகிறார்கள். நினைவுகளின் வழியாக துலங்கிவரும் பழனிகுமாரின் தம்பி குமரனின் பாத்திரம் முக்கியமானது. குமரன் பள்ளி படிப்பில் ஆர்வமற்றவன். அனுபவத்தின் வழியாக விவசாய நுட்பங்களில் தேர்ந்தவன். வலிப்பு நோய்க்காரன் என்பதால் ஆசைப்பட்ட பெண்ணை அடைய முடியாதவன். குமரன் நிலத்தை தொழுதவன், அதன் ரகசியங்களை அறிந்தவன். பிற விவசாயிகள் தோல்வியடைந்த காலங்களிலும் கூட விடாப்பிடியாக விவசாயத்தை கைக்கொண்டு லாபம் பார்க்கிறான். குமரன் அவன் நம்பிய நிலத்திலேயே நிராதரவாக மூச்சடங்குகிறான். ‘எவ்வளவோ முயன்றும் மண் அவனை எழவிடாமல் வீழ்த்திக்கொண்டே இருந்தது’. நிலத்தின் மீதிருந்த இறுதி பிடிமானமும் அற்றுப் போய்விடுகிறது. பழனியால் ஒருபோதும் அவன் நிலத்திற்கு திரும்ப முடியாது.

நிலம் எனும் நல்லாள் நாவலின் இறுதியில் மாதவன் பழனியின் சிக்கலை துல்லியமாக சொல்கிறான். “நீ வாழ்ந்த்த நெனச்சுகிட்டே இருக்க. வாழப்போறதப் பத்தி நெனை. நெனைக்காதது தான் புதுசா வரும். அதுதானே வாழ்க்கை. அதுல முழுசா மூழ்கத்தான் வேணும். நீ ஒதுங்கியே நிக்கிறடா. இது இன்னொரு பயணம். நீ குதிச்சுதான் ஆகணும். தெரிஞ்சுக்கோ” என்கிறான். இப்புள்ளியில் கதை நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்குமான ஊசலாட்டமாக தென்படுகிறது. வாழ்ந்த நிலமும் அன்னையும் கூட நினைவுகள் தானே. யானைக் கூட்டத்திலிருந்து விலகிய ஒற்றைக் கொம்பன் யானையை புதிய கூட்டம் ஏற்க மறுப்பதாக கனவு காண்கிறான் பழனி. பழனியால் உடலளவில் கிராமத்தை உதறிவிட முடிந்தாலும். மனதளவில் அவனால் கூட்டத்திலிருந்து தனித்து வந்துவிட முடியவில்லை. மிருகங்களால் நினைவுகளை உதறிவிட முடிகிறது மனிதர்களால் முடிவதில்லை என அங்கலாய்க்கிறான். அவை ‘நினைவுகள் குறைய குறைய தன் கடமைகள் குறைந்து நிம்மதியடைகின்றன.’ ஆனால் நாகலாதேவியை பற்றி எண்ணும் போது “உருமாறியபடியே இரு என நிர்பந்தித்தபடியே இருக்கிறது நவீனகாலம். அதனுடைய தாரக மந்திரமே அதுதானா. நினைவுகளை இழப்பது பெரும் துன்பம் தான். நவீனகாலம் மனிதர்களின் துன்பத்தைப்பற்றி நினைப்பதே இல்லை.” என்பதையும் உணர்கிறான்.

வேணுவின் மற்றொரு மிகப்பெரிய பலம் அவர் கட்டமைக்கும் புற உலகத்தில் உள்ள நம்பகத்தன்மை. அதுவே கதையில் நம்மை மனம் விலகாமல் ஒன்றச் செய்கிறது. பள்ளியளவில் சாதாரணமாக கபடியாடியிருக்கிறார் என்றறிகிறேன். கபடி களத்தை, அவர்களுடைய அசைவுகளைத் துல்லியமாக படம்பிடித்து காட்ட முடிகிறது. நிலம் எனும் நல்லாள் குறுநாவலிலும் வேளாண்மை சார்ந்த தகவல்களை செறிவுடன் அடுக்குகிறார். அது சார்ந்த நுண் தகவல்களை நுட்பங்களை விவரிக்கிறார். பல எளிய நாட்டுமருத்துவக் குறிப்புகளை அளிக்கிறார். (உண்மையில் பல வேளாண்சார் வட்டார சொற்களுக்கு குத்துமதிப்பாகத்தான் பொருள் கொண்டேன்). அன்றாட விவரணைகளில் இருந்து கவித்துவ எல்லைக்குள் அவர் தாவிச் செல்லும் இடங்கள் மன எழுச்சி அளிக்கின்றன. தன் நிலத்தில் வளரும் சூரியகாந்தி மலர்களை குமரன் காணும்போது எண்ணுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்

“சூரியன் எழும் கணத்திலிருந்து மறையும் கணம் வரை மஞ்சள் முகம் காட்டி முத்தமிடத் துரத்தியபடியே இருக்கும் பரிசுத்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள் ஒளிவீசி அழைத்தாலும் ஏறிட்டுபார்க்காத தியானம். இரவெல்லாம் கனவுகளைத் திரட்டி திரட்டி விடிந்ததும் தலைதூக்கி சூரியனில் விழிக்கும் மனதிடம். வேரில் பசியிருந்தாலும் முகத்திலே வாடாத மஞ்சள் பொலிவுடன் அண்ணாந்து பார்க்கும் காதல். வாட்டத்தில் தலைபாரம் தாங்காது கழுத்து வளைந்தாலும் முகத்தை தூக்க முடியாமல் தொக்கி ஓரக்கண்ணால் போகும் சூரியனைப் புன்னகையுடன் பார்க்கும் உயிர்கோலம். எவ்வளவு பெரிய சூரியன். எவ்வளவு சிறிய மஞ்சள் பூமுகம். நேருக்குநேர் யாரால் பகலெல்லாம் இப்படி முத்தமிட முடியும். ஒளிமழையில் நனைந்து கருவுறும், தாய்மையடையும்.”

மொழி, உரையாடல், நம்பகத்தன்மை, புற – அக சித்தரிப்பு, கூர்மையான அவதானிப்புகள் ஆகியவை சு.வேணுகோபாலின் படைப்புகளில் கச்சிதமாக கைகூடி வருகின்றன. எனினும் ஒரு குறுநாவல் அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனம் என்ன? எனும் கேள்வி முக்கியமானதே. அது புதிய திறப்பை அளிக்கிறதா அல்லது புதிய கோணங்களை முன்வைக்கிறதா? எல்லா ஆக்கங்களும் புதிய தரிசனத்தை அளித்துதான் ஆக வேண்டும் என்பதல்ல. வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது. அந்த நன்னம்பிக்கை முன்முடிவின் அளவிற்கு செல்கிறதா? நிலம் எனும் நல்லாளை எடுத்துக் கொண்டாலும் சரி ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி அவை முன்வைக்கும் இறுதி தரிசனத்தை இயல்பாக அடையவில்லையோ எனும் ஐயம் எழுகிறது.

ஆட்டம் குறுநாவலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வடிவேல் எண்ணிப் பார்க்கிறான். நெடுங்காலமாக குறுஞ்செய்திகளில் புழங்கி வரும் ஒரு செய்தி தான். அதை நாவலின் தரிசனமாக காண்பதில் தவறேதும் இல்லை தான். ஆட்டம் என்பதே இனிமை. இழப்பதற்கு ஏதுமில்லை. இலக்குகளை அடைவதைப்பற்றி கவலையின்றி ஆட வேண்டும். ஆட்டத்தை நிறுத்திவிடவும் கூடாது எனும் தரிசனத்தை வடிவேல் அடைகிறான். ஆட்டத்தில் வெல்ல வேண்டும் எனும் வெறியடங்கி ஆட்டத்தை புரிந்துகொள்ள முயல்கிறான். ‘நிலம் எனும் நல்லாளை’ பொறுத்தவரை மாதவன் என்றொரு நண்பன் எப்போதோ கூறியதை திடிரென்று கதை முடிவதற்கு கொஞ்சம் முன் எண்ணி பார்க்கிறான் பழனிகுமார். “நீ எத்தன வருசம்டா இந்த உலகத்தில இருந்திட போற. போறப்ப எத தூக்கிட்டு போகப் போற. இருக்கிற எடத்துல நல்லத மொதல்ல பாருடா. நீ வாழ்ந்த வாழ்க்கைய உன் பிள்ளைக வாழணும்னு நெனைக்கிற..அது எப்பிடிடா?” என்றும் இன்னும் பல கேள்விகளை கேட்கிறான், ஆலோசனைகளை சொல்கிறான். வேணுவின் படைப்புகளில் பிரசார தோனி எழுகிறது என விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தகைய முடிவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. மையப் பாத்திரத்தின் நகர்வு இயல்பாகவும் அழுத்தமாகவும் அந்த பார்வையை அடையவில்லை என்பதே நிலம் எனும் நல்லாள் மற்றும் ஆட்டம் ஆகிய படைப்புகளின் பலவீனம். ஒருவேளை இன்னும் விரித்து எழுதி இருந்தால் இது நிரடாமல் இருந்திருக்கும்.

வேணு ஆணாதிக்க எழுத்தாளர் என்றொரு விமர்சனமும் வைக்கபடுவதுண்டு. ஆனால் அது ஏற்புடையதல்ல. நிலப்பிரபுத்துவ மனநிலையை பிரதிநிதிப்படுத்தும் ஆண் கதையின் பிரதான பாத்திரமாகிறான். அவனுடைய தரப்புகளும் சிந்தனைகளும் எப்படி இருக்குமோ அதைத்தான் அவர் எழுதியிருக்கிறார். பிற பாத்திரங்கள் வழியாக அதைக் கேள்விகுட்படுத்தவும் செய்கிறார். பழனிக்கு எப்படி தன்னுடைய நிலத்தைப் பற்றிய கனவு இருக்கிறதோ அப்படி ராதாவிற்கு தனது நிலத்தை பற்றிய பெருமிதமும் பிடிப்பும் இருப்பது இயல்பே என்பதையும் பதிவு செய்கிறார். விவசாயம் நிலம் என கனவு கண்டுகொண்டிருக்கும் பழனியிடம் இத்தனை இருந்தும் நீ ஏன் கிராமத்தை விட்டு வெளியேறினாய்? எனும் கேள்வியை மாதவன் நேரடியாக பழனியிடம் கேட்கிறான்.

வேணுவிற்கு மனப்பிறழ்வு கொண்டவர்கள் மீது ஒருவித ஈர்ப்பிருக்கிறது. அவர்களின் களங்கமின்மை கடவுளுக்கு நிகராக எண்ணச் செய்கிறது. ஆட்டத்தில் வரும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஓட்டப்பந்தயத்தை போலவே நிலம் எனும் நல்லாளிலும் மாசாணி எனும் பதின்மூன்று வயது சிறுமி வருகிறாள். புதிய ஊரில் பழனி நெகிழும் முதல் நட்பு. அந்த மண்ணின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு பிறக்கிறது.

தொலை நிலங்களில் வாழ்பவர்கள் எப்போதும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதைப் பற்றிய கனவுகளைச் சுமந்து அலைகிறார்கள். நிலம் வெறும் இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறையின் பிரதிநிதி. நினைவுகள் பின்னிக் கிடக்கும் அடர் கானகம். அதுவும் பெரும்பான்மை வேளாண் சமூகமாக இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் நிலம் ஆன்மாவிற்கு அணுக்கமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய சமூகம் அதிவேகமாக நிறம் மாறி வருகிறது. நான் வாழும் பகுதியில் வேளாண்மையைக் கைவிட்டவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குச் செல்வதை பார்க்கிறேன். சேற்றைக் காட்டிலும் சிமிண்டு கறை படிந்த கால்களையே அதிகமும் காண முடிகிறது. ஒரு மிகப்பெரிய உளவியல் மாற்றத்தின் குறியீடாக இதைக் காண்கிறேன். இயற்கையின் தயவில் இருந்த வாழ்வாதாரத்தைக் கைவிட்டு இயற்கைக்கு எதிராக வீம்புடன் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களை நம்பத் துவங்கிவிட்டார்கள். நிலம் மனிதர்களைக் கைவிடுகிறதா? அல்லது மனிதர்கள் நிலத்தைக் கைவிடுகிறார்களா? எனும் கேள்விக்கு அத்தனை எளிதாக விடையளித்துவிட முடியாது.

இறுதியில் பழனி எந்த நிலமும் எவரையும் வஞ்சிப்பதில்லை எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் வந்தடைந்த அதே இடத்திற்க- “யாதும் ஊரே ..யாவரும் கேளீர்”