தொடர்கதை

குருதிச் சோறு

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பூம்.. பூம்பூம்..பூம்..பூம்பூம்.. ..உறங்கிக் கொண்டிருக்கும் வனமிருகத்தின் மூச்சொலி போல் சீரான நிதானத்துடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது உடுக்கையொலி. மெல்லிய எதிரொலியாக தூரத்து பறையோசை ஒலித்துக் கொண்டிருந்தது. மருலாளி கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போல் வேப்பமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார். நரைத்த வெள்ளி தலைமயிர், உடலுக்குள் இருக்கும் நீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுத்தாற்போல் வறண்டு மெலிந்த தேகம். அடர் கருப்பு தேகத்தில் சிறு கீறல்களாக பழுப்பு ரேகைகள் வயிற்றில் ஓடின. காவி வேட்டியும் செவ்வரளி மாலையும் அணிந்திருந்தார். காலுக்கு கீழே நான்கைந்து பிரம்மாண்டமான கரிய வெட்டருவாள்கள் கூர் மூக்குடன், அவர் கால்களைத் தீண்ட படமெடுத்து காத்திருந்தன. சிவந்த நாக்கை நீட்டி எதையோ விழுங்க காத்திருக்கும் தீ, பந்தத்தின் நுனியில் நின்றுகொண்டு காற்றில் இரையை தேடி துழாவிக் கொண்டிருந்தது. (more…)

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 2

முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1

கடல், இதமான வசந்தகாலம், ஒளியில் நனையும் தீவுகள், கிரேக்கத்தின் அலங்காரமற்ற அழியா திருமேனியின் மீது மென்மழை தெள்ளிய திரையாகப் பரவியது. ஏஜியன் கடலை மரணிப்பதற்கு முன் தன் வாழ்நாளில் கடப்பவன் உண்மையில் பாக்கியவான் என எண்ணிக்கொண்டேன்.

பெண்கள், பழங்கள், சிந்தனைகள்– ஆம் இவ்வுலகின் இன்பங்கள் கணக்கற்றவை. ஆனால் இந்த அற்புதமான வசந்த காலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு தீவின் பெயரையும் முணுமுணுத்தபடி கடலைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதில் உள்ள மகிழ்ச்சிதான் என்னளவில் மனிதனின் இதயத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த மார்க்கம். வேறெங்கும் நிகழ்காலத்திலிருந்து கனவிற்குள் இத்தனை எளிதாக, அமைதியுடன் நுழைந்துவிட இயலாது. எல்லைகோடுகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன, புராதனமான கப்பல்களின் கொடிகம்பங்களில் இருந்து கிளைகள் முளைத்து கனிகள் காய்க்கின்றன. கிரேக்கத்தில், தேவையே அற்புதங்களை உண்டாக்கும் அன்னை என்றாகிறது. (more…)

ஆறாம் கயல் – 1

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

(more…)

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் ஒன்று

(நரோபா தமிழாக்கம் செய்துகொண்டிருக்கும் Nikos Kazantzakis எழுதிய Zorba the Greek நாவலின் முதல் அத்தியாயம்)

நான் அவனை பைரியசில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். க்ரெட்டுக்கு கப்பலேறிச் செல்ல வேண்டியிருந்தது எனக்கு, துறைமுகம் வந்திருந்தேன். பொழுது விடியவிருந்தது, மழை வேறு வலுவாக பொழிந்து கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகள் மூடியிருந்த அந்த சிறிய கஃபே வரையில்கூட வலுவான சூறைக்காற்று அலைகளின் மீதிருந்து நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. நன்றாக நொதிந்த சேஜ் பானத்தின் வாசனை கஃபே முழுவதும் நிரம்பியிருந்தது. வெளிப்புறத்து குளிரால் உறைந்திருந்த கண்ணாடி சாளரங்கள் மனிதர்களின் உஷ்ணமான மூச்சுக்காற்றால் அதன் உட்புறங்களில் வியர்த்திருந்தன. இரவை அங்கேயே கழித்த ஐந்தாறு அரக்கு நிற ஆட்டுத்தோல் மேற்சட்டை அணிந்த கப்பல்காரர்கள் காபியையோ சேஜ் பானத்தையோ அருந்திக்கொண்டு தெளிவற்ற சாளரங்களின் வழியே கடலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கொந்தளிக்கும் கடல்நீரின் வலுவுக்கு அஞ்சி மீன்கள் கடலாழத்திற்குள் அடைக்கலம் புகுந்து கடல்பரப்பில் அமைதி திரும்புவதற்காக காத்திருந்தன. கஃபேயில் கூடியிருந்த மீனவர்கள் புயல் ஓய்வதற்காக காத்திருந்தனர் ஏனெனில் அதன் பின்னர்தான் தூண்டில் புழுவைத்தேடி மீன்கள் மிக நிச்சயமாக கடற்பரப்பை நோக்கி வரும். மத்திகளும், சுறாக்களும், திருக்கைகளும் தங்கள் தலைமறைவு வாழ்வை முடித்துக்கொண்டு மேலெழும். பொழுது மெல்ல புலர்ந்துக்கொண்டிருந்தது. (more…)