புதிய குரல்கள்

நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்

அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.

என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?

கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.

சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.

நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.

அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.

அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.

எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.

பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.

நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்

1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

சிறுவயதிலே வாசிப்பதற்கான ஊக்கம் கொண்டிருந்தேன். சூழ்நிலையும் அமைந்தது.
அம்மா கதைகள் சொல்லித் தீரும்போது புதியவை வாசித்ததும் சொல்கிறேன், அதுவரைக்கும் காத்திரு என்பாள். அப்போது ஏன் காத்திருப்பது நாமே படித்து அம்மாவுக்கும் கதை சொல்வோம் என்று தோன்றும். அப்படி எழுத்துக்கூட்டி சிறுவர் இதழ்கள் வாசிக்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு இரண்டு அரசு நூலகங்கள் எனக்கு தங்களது புத்தகங்களால் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி உதவியிருக்கின்றன. வீட்டில் வாசிக்கிற பழக்கம் இருந்தமையால் என் வாசிப்புக்கு ஆதரவு இருந்தது.

எழுதவேண்டும் என்கிற ஆசை கழுகைப்போல பறக்க வேண்டும் ஆசைப்படக்கூடிய வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு கவிதைகளையே எழுதித் தொடங்கினேன்.

இணையம் குறிப்பாக முகநூல் எனக்கு இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அறிமுகம் செய்து கொள்வதற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கும் உதவியது. மனிதர்களின் மேன்மை கீழ்மைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் களமாக அதற்கும் மேலாக என்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொள்வதற்கு அதுவே உதவுகிறது.

அப்படியே சாத்தியப்பட்ட போது இலக்கியக் கூட்டங்களுக்கு போகத் தொடங்கினேன்.

2. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள்? அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

எனக்கு எதையேனும் ஒரு படைப்பிலிருந்து கற்றுக் கொண்டேனா என்கிற கேள்வி இதுவரை வந்ததில்லை. எனக்கு ஒவ்வொரு நூலும் ஒரு அனுபவமாகவே அமைகிறது. அதன் அனுபவத்தில் திளைத்திருக்கிறேன். அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆவேசம் வந்தது போலப் பக்கங்களைப் புரட்டி வாசித்துத் தள்ளுகிறவன் அல்ல நான். எனக்கு ஒவ்வொரு பக்கமும் அதன் வார்த்தைகளும் முக்கியம். அதற்கான நேரம் எடுத்தே நான் வாசிக்கிறேன்.

பெரும்பாலும் வாசிக்கும்போது எந்த சிந்தனையும் வருவதில்லை. தேவையானால் முடித்ததும் ஒரு பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து சிந்திப்பதும் குறிப்பு எழுதிக் கொள்வதும் உண்டு.  ஆனால், அவை பிறருக்காக எழுதப்படுவதில்லை. எனவே கூறுமுறையைப் பற்றிய கவலை வேண்டாம். ஒருங்கிணைப்புக்கான அவசியம் இல்லை.

ஒரு கட்டுரை எழுதவேண்டும் அல்லது ஒரு எழுத்தாளனாக நான் பிறரிடம் கூறுவதற்காக சிந்திக்கிறேன் எனும் கட்டம் வரும்போது இது சிக்கல். எனவே அதற்காக மீண்டும் புறவயமாக கூற்றுகளையும் சிந்தனைகளையும் தொகுக்கும் பணியைச் செய்கிறேன். அது என் இயல்புக்கு மிகப்பெரிய பளு. ஆனால் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் புனைவு எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன். என்னையறியாமல் அதில் ஒருங்கிணைவு உருவாவதும் உணர்வுகள் முயங்கி வெறொன்றாக மாறுவதும் நடக்க வேண்டும். அதற்காக நான் ஒரு கதையை எழுதும் முன்னர் தயாராகி இருக்கவேண்டும். கதை தயாராக வேண்டும். அதற்காக என்ன செய்கிறேன் என்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. அப்படியே எழுதி முடிக்கிறேனா என்பது முழுமையாக என்னிடத்தில் இல்லை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது. அது மட்டுமே என்னால் ஆகும்.

3. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதுவரை இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டதில்லை. அந்தந்த தருணங்களில் எனக்கு எதை எழுதுவதற்கான உந்துதல் பிறக்கிறதோ, அதையே எழுதினேன். அப்படியே கதைகளை முழுமையாக உருவாக்கிக் கொண்டும் எழுதியதில்லை.

ஆனால் தொகுப்புக்காக எல்லாவற்றையும் மீண்டும் படித்தபோது, கண்டு கொள்ளப்படாதவர்களை அல்லது பொதுவான மனநிலைகளிலிருந்து விலகிய குழந்தைமையையே எழுதியிருக்கிறேன் என்று புரிகிறது.

என் வாழ்கையின் அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி எழுதக்கூடாது என்கிற தெளிவு எனக்கு சில வருடங்களாகவே உண்டு. சில கதைகளில் என் போன்ற சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்காக அது என்னுடைய அனுபவம் ஆகிவிடாது.  மேலும் என் எழுத்து அவசர வாசிப்புக்கானது அல்ல.

பொருள் மயக்கம் அழகியலாக மட்டும் இல்லாது குறைபாடாக ஆகிற இடத்தில் வாசிப்பில் இடறும். அப்படி இடறாமல் வாசிக்கப் பழகினால் எல்லாமே நல்லவையே. மொழிச் சீர்மையும் கருத்துரைத்தலும் அணிகளும் மட்டுமே இலக்கியம் என்று கருதியது எப்படி மொழிக்கு தீமையாக அமைந்ததோ, அப்படியே மொழியைக் கண்டு கொள்ளாமல் இலக்கியம் படைப்பதும். அதை மனதில் வைத்துதான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

4. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் என்ன எழுதுவீர்கள்?
தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. இப்போதைக்கு புனைவு எழுத்தாளனாக என்னை மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனம் எல்லாம்.

5. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரன். என்னுடைய குறைந்த வாசிப்பில் இதில் பஷீரையும் சேர்க்க முடியும். புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை அவர் எழுதிய வகைமைகள் மட்டுமல்லாது நேரடித் தன்மையும் கூர்மையான மொழியும் அங்கதமும் எவருக்கும் ஆதர்சமாக அமையும். அசோகமித்திரன் முற்றிலும் வேறுபட்டவர். அங்கதம் அமைதியுடன் வெளிப்படும் எழுத்து அசோகமித்திரனுடையது. எத்தனை தீவிரமான விஷயத்தையும் எளிய விஷயமாக எழுதிச் சென்றுவிடுவார்.

ஏன் பஷீரைக் குறிப்பிடுகிறேன் எனில்,  இவர்கள் இருவரின் இயல்புகளும் இடத்திற்கேற்ப செயல்பட்டு எதற்கும் பொறுப்பேற்காத ஒருவரின் மனநிலையும் சேர்ந்தால் அதுவே பஷீரின் இயல்பு என்று தோன்றுகிறது. இந்த மொத்த வாழ்கையின் பொருளின்மையை இருண்மையை சொல்லிக் கொண்டே செல்வது. அதே நேரம் அவ்வப்போது ஒளி இதுதான் என்று காட்டிவிடுவது. அந்த ஒளிக்காகவே பஷீரை எனக்குப் பிடித்திருக்கிறது.

இவர்கள் என்னை அதிகமாக பாதிக்கிறார்கள்.

6. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

அவ்வப்போது பயணம் செய்கிறேன். எண்ணூறு ரூபாய் சீனக் கைபேசி ஒன்றை வைத்திருந்த காலம் முதல் இன்று வரை செல்கிற இடங்களையும் நிகழ்வுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறேன். அவற்றில் நல்ல புகைப்படங்களாக அமைந்துவிடுபவை நிறையவே உண்டு.

பெரும்பாலும் போகும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தவிர்த்து பொதுவெளியில் பகிர்வதில்லை. என்னிடம் புகைப்படங்களை அப்படியே சேமிப்பதற்கான வாய்ப்பு இல்லாதிருந்ததால் நல்ல கைபேசியில் எடுத்தாலுமே அளவில் குறைத்து மேகச் சேமிப்பக சேவைகளில் சேமித்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நிராகரித்து அழித்தவை போக ஏறக்குறைய மூவாயிரம் புகைப்படங்கள் உண்டு.

எனக்கு தற்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. புகைப்படங்களுக்கு சிரிக்கவும் வராது. அதே என் நல்ல புகைப்படங்கள் இதுவரை சிலவே என்னிடம் உள்ளது. அவைகூட தேறாது என்று புத்தகத்தின் பின்னட்டைக்காக ஜீவ கரிகாலன் சில நாட்கள் தேடியும் காத்திருந்தும் இறுதியில் புகைப்படம் இல்லாமலேயே கொண்டு வந்தார். மற்றபடி, நாற்பதோ ஐம்பதோ ஆயிரங்கள் செலவு செய்து காமிரா வாங்கி எடுத்துக் கொண்டு அலைவதல் ஆர்வமில்லை.

7. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

எழுதுவது தொடர்பான எண்ணங்கள் இல்லாமல் என்னால்  எவரை வாசிக்க முடிகிறது என்று யோசிக்கிறேன். வெகு சிலரின் சில படைப்புகளை மட்டுமே அப்படி ஒரு தடங்கலுடன், அதிலிருக்கிற தவறுகளை உணர்ந்தபடி வாசிக்கிறேன். அதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அப்போது மட்டுமே சிந்திக்கிறேன்.

அது தவிர, வாசிக்கையில் நான் ஒரு சராசரி வாசகன் மட்டுமே.

8. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

அப்படி பயணம் கோரும்படி இன்னும் எதுவும் எழுதவில்லை.

ஆனால், நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக வருடம் ஒருமுறையாவது ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஹைதராபாத்தும், இந்த முறை கொல்கத்தாவும் சென்று ஒன்றரை இரண்டு மாதம் தங்கி வேலை செய்தபடியே வார இறுதியில் சுற்றிப் பார்த்தேன். அலுவலகத்தில் அதற்கான சுதந்திரம் தருகிறார்கள். இப்போது டெல்லி போயிருக்க வேண்டியது, கொரோனா காரணமாக எல்லா முன்பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.

என் மனதை வெளியுலகம் நோக்கித் திருப்புவதும் புரிதல்களை உண்டாக்கிக் கொள்வதும் பயணம் மூலமாக மட்டுமே.

Vagabond என்கிற சொல் பயணிக்கிறவரை குறிப்பது. ஒன்றும் இல்லாமல் நீங்கள் எங்கும் பயணிக்கலாம். உண்பதும் உறங்குவதும் என உங்களின் தேவை எத்தனை சிறியது, அதை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது எங்கு போனாலும் சாத்தியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களின் கதைகள் என்னை ஏங்க வைத்திருக்கின்றன.

முழு vagabond ஆக இல்லாவிட்டாலும் நினைத்தபோது கிளம்பிப் போகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள், என்ன நம்மால் முடியாது. எனக்கு ஒரு தினம் முன்னதாகவாவது அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், அந்த நேரம் கையிருப்பில் ஏதாவது இருக்கவும் வேண்டும். எனவே தனியாகச செல்வதே எனக்கு நல்லது, முடிந்தவரை பயணிக்கிறேன்.

9. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

வெகு நாளைய கனவு. இப்போது வந்ததற்கும் நான் மட்டுமே காரணம் அல்ல.

எழுதிய வரிசையிலேயே தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். எந்த வகையில் மாற்றத்துக்கு என் எழுத்து உட்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான பதிவாகவும் அது இருக்கட்டும் என்கிற எண்ணம்.

அதன் வடிவமைப்பிலிருந்து அச்சு வரை எனக்கு நிறைவளிக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஜீவ கரிகாலன் வெளியிடிருக்கிறார்.

அடுத்து என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்காக உழன்று கொண்டிருக்கிறேன்.

10. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

அப்படி நிறைய இருக்கலாம். நினைவில் எப்போதும் வைத்திருப்பதில்லை.

வெகு சில நிகழ்வுகளை மட்டும் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

11. உங்கள் படைப்பினை நீங்கள் எப்படி உருவாக்குகின்றீர்கள், ஒரே அமர்வில் அது முடியுமா, நீங்கள் அதை எப்படியெல்லாம் செழுமையாக்குகின்றீர்கள்?

சில கதைகள் ஏதாவது நிகழ்வோ செய்தியோ என்னை பாதிப்பதால், ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. சில கதைகள் கனவில் வந்தவை. ஆனால், எழுதியது கனவில் வந்ததிலிருந்து முற்றிலும வெறொன்றாக இருப்பதும் உண்டு.

முன்னர் கையால் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் போது மேம்படுத்திக் கொண்டிருந்தேன். அதை சிறிது காலத்துக்குப் பிறகு வாசித்து, இடறலாக ஏதாவது தோன்றினால் திருத்திப் பகிர்வது. இப்போது அதே முறையில் கணினியில் நேரடியாக எழுதுகிறேன்.

ஒரே அமர்வில் இதுவரை எழுதியதில்லை. குறைந்தது மூன்று நான்கு அமர்வுகள். உட்கார்ந்தால் குறைந்தது இருபத்தைந்து நிமிடம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒலிப்பான் வைத்துக் கொள்வேன். அப்படி சில தினங்கள் தொடர்ந்து எழுதியே ஒரு கதையை முடிக்க முடியும். அப்படி நேரம் குறித்துக் கொள்ளாது அமர்ந்தால் பல காரணங்களால் பயமும் கவனச் சிதறலும் ஏற்படுகிறது.

ஒரு நாள் எழுதிவிட்டு மறுநாள் தொடரும்போது ஏற்கெனவே எழுதியவற்றை வாசித்து எழுதிய போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று யோசிப்பேன். அதன் பிறகு தொடர்ந்து சிந்தித்தபடியே நேரம் வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதி அழிப்பேன். எப்படியோ ஒரு தொடர்ச்சி உருவாகிவிடும்.

12. இலக்கியத்தின் அடிப்படையாக இருப்பது எது?

நல்ல கேள்வி. ஆனால் பதில் சொல்லும் அளவு நான் முதிரவில்லை.

13. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான் உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

எந்த முறையான விமர்சனத்தையும் ஆக்கப்பூர்வமான மனநிலையிலேயே எதிர்கொள்கிறேன்.

சிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தெரியாது என்பதையும், என் தகுதி என்ன என்பதையும் எனக்குள்ளாக வகுத்துக் கொள்வது என் வழக்கம். எனவே  எங்கும் எதற்கும் சமீப காலம் வரை சுருங்கிப் போனதில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். ஒவ்வொரு தினமும் சற்றேனும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அதற்காக திறந்த மனதுடனேயே வாழ்கிறேன்.

அதே நேரம் தூக்கிப் பிடிக்கப் படுவதாலேயே எவரையும் கிழித்துத் தொங்கவிடமுடிகிற தன்னம்பிக்கை விமர்சகர்களின் அருட்கரங்களை அஞ்சாமை பேதைமை.

15. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

என்னை. என் நிறைவை.

15. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா? அதை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

என் மூத்தவர்கள் சொன்னது – தொடக்க காலத்தில் எழுதிக் கடப்பதன் வழியே இன்னும் படைப்பூக்கம் கொள்ள முடியும் என்று. அதற்கு முயல்கிறேன். ஆனால் ஒன்று புரிகிறது, கட்டுரை எழுதுவது வேறு ஏதாவது – something to be presented – என்கிற வகையில் எழுதும் போது கொஞ்சமே எழுத முடிகிறது. இந்த பதிலை நான் தட்டச்சு செய்யும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக் கொள்கிறேன்.

எனவே எழுத்துப் பயிற்சி என்று வரும்போது எதையாவது எழுதித் தள்ளியபடி இருக்கலாம். அதை பிறர் நலன் கருதியாவது என்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது கதையாகவே கனிந்திருப்பதாக தோன்றினால், ஒருவேளை திருத்தம் செய்த பிறகு பிரசுரிக்கலாம். இப்படியே நான் உணர்கிறேன்.

இலக்கிய வாசிப்பு எழுத்து என்று இருக்கும்போது மொழியறிவுக்கு என்று நேரம் ஒதுக்குதல் சிரமம் என்றே உணர்கிறேன். எழுத்தாளனாக இருந்தாலும் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடிய வேறு ஆர்வங்களும் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் மொழியாளுமை அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மரபாக நாம் மொழியை கற்றிருக்காத போது. அதற்கான அவதானிப்புகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கிறேன்.

16. சங்க இலக்கியம் பக்தி இலக்கியத்தின் மீதான உங்கள் ஆர்வம் எவ்விதமானது? அது உங்களை படைப்புகளை பாதித்திருக்கிறதா?

இந்த மொழியின் சொத்து என்கிற வகையில் அதை தூர இருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்கிறேன். சங்க இலக்கியத்தைக் காட்டிலும் பக்தி இலக்கியத்தை இன்னும் நெருங்கிப் போகிறேன். ஆனால் அவற்றில் ஊறித் திளைப்பவனில்லை. அத்தனை புலமை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் வாசிக்கிறவன்.

கவிதைகள் எழுதிய காலத்தில் சில காதல் கவிதைகளை பக்தி இலக்கிய தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், பிறகு கீதாஞ்சலி படித்ததும் நவீன பக்திக் கவிதைகளின் வயது நூறு என்று புரிந்தது. அதன் தென்னிந்திய வேர்களை அப்போதே என்னால் உணர முடியாவிட்டாலும் பின்னர் அந்த புரிதலை வந்தடைந்தேன்.

அப்படிப் பார்த்தால், என் மனநிலைக்கே இவற்றின் தாக்கம் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கலாம்.

17. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

எழுதியவற்றை விடவும் எழுதி முழுமையடையாதவற்றிலேயே என்னைக் கவர்ந்த கருக்கள் நிறைய ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் அதனினும் சிறந்தவற்றையும் எழுத வேண்டும் என்கிற விழைவிலேயே இன்னும் எழுத முனைகிறேன்.

எழுதி வெளியானவற்றில் அட்டை, கூப்பன், சுவருக்கு அப்பால் எனக்கு மிகவும் நிறைவளித்தவை.

18. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

இதுவரை இப்படி நினைத்ததில்லை.

19.உங்கள் படைப்புலகத்தின் ஆதார மனநிலை என்ன?

ஒவ்வொன்றிலும் எனக்கு ஏதேனும் கண்டடையவோ, வேறு விளக்கம் சொல்லவோ, கேள்வியோ இருக்கிறதா?

20. உங்கள் பெரும்பாலான கதைகளில் பால்யம் மாறாத சிறுவனோ (அ) இளைஞனோ பணியிடத்திலோ, பிற இடத்திலோ சதா பயந்தலைவது போல சித்தரிக்கப்பட்டிருப்பது ஏதேச்சையானதா ?

அப்படி பயப்படாதவர்களும் என் கதைகளில் உண்டு. ஏனோ, அப்படியானவர்களை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய இயல்பு காரணமாக இருக்கலாம். அல்லது, இப்படியானவர்களை இலக்கியத்தில் நான் அதிகம் வாசித்திருக்காதது காரணமாக இருக்கலாம்.

ஒரு கதாபாத்திரத்தின் எல்லா இயல்புகளையும் இலக்கியம் ஆராயப் புகுகிறது. குறிப்பாக, தீமைகளையும் அழுக்குகளையும். அதன் மூலமே எல்லாவற்றையும் ஆராய முடிகிறது. உண்மைக்கு நெருக்கமாக அது மட்டுமே நிற்குமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.

அவன் என்ன அவ்வளவு யோக்கியனா என்று ஒருவரின் நல்லியல்பை அனுபவப்படும்போது நம் மனதின் ஏதோ ஒரு ஓரம் நினைக்கிறது, குறிப்பாக நம் ஆணவம் சீண்டப்படும்போது. உடனே சுவர் மறைவில் அவன் என்ன செய்யக்கூடும் என்று ஊகிக்கிறோம். அவன் சிந்தனை எப்படி இருக்கும் என்று அதற்கு ஒரு வக்கிரத்தை கோணலை கற்பிக்கிறோம். அதுவே இயல்பாக நம்மை உணர வைக்கிறது.

அப்படி இல்லாதவன் ஒருவன் என்றால் நாம் நம்ப மறுக்கிறோம். அவன் கோணல்கள் இல்லாதவன் இல்லை, அதை மீறி வெறொன்றே அவன் இயல்பாக வெளிப்படுகிறது. அதை என்ன என்று புரிந்து கொள்ள முயல்கிறேன். அதை குழந்தைமை என்று சுருக்கலாம். அதன் நுண்ணிய வேறுபாடுகளை என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

21. உங்களது ஒன்று மேற்பட்ட கதையில் ரயில் நிலையத்தில் கழிக்கும் இரவின் பதிவுகள் வருகின்றன. அது வீட்டு விட்டு வெளியேறி குடும்பத்தின் பொருட்டோ(என் வீடு) அல்லது வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் குடும்ப தலைவன் பொருட்டோ(பவித்ரா) இரவை கழிக்க உங்கள் கதாபாத்திரங்கள் ரயில் நிலையங்களை தேர்தெடுக்க ஏதேனும் பிரத்தியோக காரணம் உண்டா?

இந்த கேள்வியை மின்னஞ்சல் வந்ததும் படித்தபோது கயா ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன்.
சுவரோரம் திண்ணை போன்ற அமைப்பை தவிர, அது பெரிய அறை மட்டுமே. சுமார் நூறு குடும்பங்கள் சேலையோ போர்வையோ போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வசதியான குடும்பங்களும் உண்டு. ஒரு புத்த பிக்குக் குழு. அவர்களுடன் வந்த ஒருவர், சைக்கிளில் தூரம் பயணித்துப் போகிறவர் போலிருக்கிறது. கேரியரில் கட்டப்பட்ட மூட்டையுடன் சைக்கிளையும் கொண்டுவந்து ஒரு மூலையில் நிறுத்திவிட்டு அருகிலேயே கொசுவலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார்.

இவர்களை என் சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனாக காதாபாத்திரம் அமையும் போது என்னால் என்ன செய்ய முடியும்? பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? விடியும்வரை எங்காவது சென்று அமர வேண்டும். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்தவர் அங்கேயே திரும்பிப் போகிறார்.  மேலும் அவர் அதிகம் பயணிக்கிறவர்.

22. கூப்பன் சிறுகதையில் கதையில் கார்த்தியும், ரகுவும் மிக இயல்பான சிறுவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே வீட்டுக்கு சம்பாதித்து தர வேண்டிய கட்டாயமிருக்கின்றன. அது அவர்களுக்கு வேறு விதமான ஆவேசத்தையோ, திமிரையோ, சலிப்பையோ அல்லது எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையுமோ தருவதில்லையா அந்த உணர்வுகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர் எட்டாம் வகுப்போடு வேலைக்குப் போகத் தொடங்கினார். அவர் நின்றதால், அவருடைய நண்பரும் பள்ளிக்கு போக விரும்பவில்லை. அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் நின்றார்கள். வேலைக்குச் சேர்ந்தார்கள். மேலும் சிலரின் பெற்றோர் அவர்களைக் காட்டி ‘பார் எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகிறார்கள், பார்’ என்றார்கள்.  இங்கே பள்ளிக்குப் போவது இயல்பானதா இல்லை வேலைக்குப் போவதா? அந்த வட்டாரத்தில் எது இயல்போ, பெரும்பான்மையோ அதை நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அது அந்த சூழலில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது.

அப்படி இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் கார்த்தியும் ரகுவுமே முற்றிலும் எதிரெதிரானவர்கள். உதாரணமாக அப்படி ஆவேசம், திமிர், சலிப்பு சற்றேனும் அதே கதையில் வெளிப்படுகிறது. அதை விவரித்துச் சென்றுவிடுகிறேன், வளர்க்கவில்லை அவ்வளவே.

23. சுவருக்கு அப்பால் சிறுகதை நீங்கள் எழுதிய கதைகளில் மிக அடர்த்தியான கதை. இந்த கதைக்கான களம் எப்படி உருவானது. அதில் மிருதங்கம் வாசிக்கும் நுட்பங்களை பற்றிய குறிப்புகளை அனுபவித்து எழுதியிருப்பீகள் உங்கள் இசையின் மீதான ஆர்வம் சார்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.

குருகுலக் கல்வி என்ற பெயரில் எப்படி குழந்தைகள் வதைக்கப் படுகிறார்கள் என்று செய்திகளில் வாசித்ததே அக்கதைக்கான ஊக்கம். எனக்கும் அப்படியான கல்வி மேல் ஆர்வம் இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் குருவின் மாணவனாக இருந்து கற்க வேண்டும் என்பது இப்போது வரைக்கும் இருக்கும் என் கனவு. ஆனால், அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

அது தொடர்பான என் புரிதலையே அந்தக் கதையை எழுதி அடைந்தேன்.

எனக்கு மிருதங்கம் கற்றுக் கொள்ள சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இசையறிவு ஒன்றும் கிடையாது. அவ்வப்போது செவ்வியல் இசையும் பிற பொழுதெல்லாம் வேறு எந்த நல்ல இசைத் தொகுப்பையும் கேட்பேன், அவ்வளவே. இளையராஜாவை எல்லாவற்றுக்கும் மேலாக ரசிப்பவன், குறிப்பாக அவரது ஆல்பங்கள்.

24. சுவருக்கு அப்பால் சிறுகதையில் கதைசொல்லியும் மற்றொரு கதாபாத்திரம் கிருஷ்ணதாஸ் இருவருமே தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமில்லாத நபர்களுடனேயே நட்புடன் இருப்பது போல ஒரு பதிவு இருக்கிறது உதாரணத்துக்கு கிட்டத்தட்ட பதின்வயதை கடந்த கதைசொல்லிக்கும், கிருஷ்ணதாஸ், பிரபு, ஹரி இவர்களுடன் உருவாகும் உலகம் விஷயம் விசித்திரமான, இதன் பின்னால் இயங்கும் உளவியல் என்னவென்று நினைத்து நீங்கள் இப்படியொரு அமைத்தீர்கள்?

அதில் கதைசொல்லி தேடலும் கேள்விகளும் கொண்ட ஒருவன். அவனுக்கு குழந்தைகளோடு இருப்பதில் ஏதோ நிறைவு கிடைக்கிறது. வேறு எவருடனும் ஒட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணதாஸ் தானே ஒரு குழந்தை போன்றவர், சிந்திக்கும் திறனற்றவர் என்பதாக கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பவர். அவரிடம் நெருங்கிப் போவது ஒரு சிறுவனே தவிர, அவர் கிடையாது. அவரை தவிர்ப்பவர்களிலும் சிறுவர்கள் உண்டு. இதையெல்லாம் ஏன் எதற்கு என, கதைசொல்லி கவனிக்கிறான்.

இவர்களின் நட்பு, நிகழ்வுகள் மற்றும் ஏற்படும் புரிதல்களால் கதைசொல்லி என்ன கண்டடைகிறான் என்பதே கதை.

25. நோக்கு கதையில் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள். கதையின் கரு வலுவானது ஆனால் சொல்முறையை நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கலாக்கினீர்கள்? உங்களுடைய பெரும்பாலான கதையின் வாசகர் அதிகம் கவனம் செலுத்தி வாசிக்கும்படி அமைத்திருப்பது ஒரு உத்தியா?

தொடக்க காலக் கதை அது. அந்தக் கதைக்குள் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல முயன்றதால் அப்படி இருக்கலாம்.

என்னுடைய எழுத்து ஏன் அப்படி கவனமான வாசிப்பு கோருகிறது என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. பொழுது போக்காகவும் கவனக்குறைவாகவும் வாசிப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய புரிதல். வேண்டுமென்றோ மொழியைச் சிக்கலாக்கவோ, திருகவோ நான் செய்வதில்லை. அதே போல பெரிய குறைபாடுகள் என் மொழிப் பயன்பாட்டில் இல்லை என்று நம்புகிறேன், அறியாது இருப்பவற்றையும் மேம்படுத்திக் கொள்ள பார்த்தபடியே இருக்கிறேன்.

மேலும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டியவை அல்லவா?

26. அட்டை என்ற கதையின் மையம் அடையாள அட்டை ஒரு அந்தஸ்து என்பது போன்ற உளவியலா, அது மட்டுமில்லை என்ற பதிவுகளும் இருக்கின்றன. இந்த கதை சார்ந்த அதன் உள்ளடக்குகளை பேச முடியுமா?

அந்த வாழ்கையில் ஒரு தருணத்தை அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். மையப் பாத்திரத்தின் ஏங்கங்களையும் நினைவுகளையும். அது தவிர பிற வாசகனுக்கான தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கட்டும்.

27. கோதை மங்கலம் கதை சொல்லி தற்கால உடல் அடையாளம், பள்ளி பருவத்து விபரங்கள் இரண்டிலுமே கதைசொல்லி தான் மிக சாதாரணமானவன் தன்னை யாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை என்றொரு உளவியல் இயங்கிக் கொண்டிருக்க என்ன காரணம்?

அவன் அப்படியானவன் என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.

28. உங்கள் கதைகளில் கதைமாந்தர்கள் கிளைகதை சொல்பவர்களாக அமைகின்றார்கள். உதாரணத்துக்கு சகடம் கதையில் வரும் சிறுவன் தனது யோகா பயிற்சிகள் சார்ந்த விபரணைகள், எரியில் வரும் சிறுவன் வண்டி வேடிக்கையின் வரும் கடவுளர் சார்ந்த வர்ணனைகள். இவை கதைக்குள் உள்ளடுக்குகளை ஏற்படுத்த உத்தி போல நீங்கள் பயன்படுத்தியிருகின்றீர்களா?

அது கதையின் ஒரு பகுதி, தேவை என்ற புரிதலால் தனக்கான இடம் கொண்டிருக்கிறது.

29. பவித்ரா  கதையில் பெண் குழந்தைக்கு தனது தாயிடம் உண்டாகும் மனசிக்கலை பேசியிருக்கின்றீர்கள். அதை தொடராமல் அதனை உறவு சிக்கலாக மாற்றியமைத்தற்கு காரணமெதுவும் உண்டா?

அப்படியான ஒரு சம்பவம் உடனே ஆழ்மனதில் சிக்கலாக மாறாது. அது ஒரு தொடக்கம். எனவே இருவருக்கும் பொதுவான ஒரு அதிர்ச்சியாக, என்ன செய்வது என்று சிந்திக்க வைப்பதாக அது இருக்கிறது. இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலப்போக்கிலேயே அது சிக்கலான ஒன்றாக மாறும். அந்த தருணத்தையே கதை விவரிக்கிறது.

வலசையை துறந்த பறவையின் வாழ்க்கை சரித்திரம் – அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ குறித்து நரோபா

புலம்பெயர் இலக்கியத்தில் முதல் தலைமுறையினரின் எழுத்துக்கள் பலவகையிலும் முக்கியமானவை. அடையாள சிக்கலின் ஆவணங்களும் கூட. பிறந்து வளர்ந்த மண் அவர்களை வடிவமைத்திருக்கும். வாழ்வையும் வளத்தையும் கனவில் சுமந்தபடி புதியநிலத்தில் வேர்விட அத்தனை ஆண்டுகாலம் அவர்களை வடிவமைத்த வார்ப்புகளை உடைத்துக்கொண்டு புதிய வார்ப்புகளுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் புறத்தில் எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். ஆனால் அகத்தில் இவை நிகழ்வது அத்தனை எளிதல்ல. பொருந்தா காலனியின் கட்டைவிரல் வலியைப்போல், அல்லது அளவுகுறைந்த சட்டையின் பிதுக்கங்கள் போல் சில தொந்திரவுகள் வெளிப்படவே செய்யும். ஒன்றை கைவிட்டு மற்றொன்றை கைக்கொள்ளும்போது ஏற்படும் உராய்வுகள் வலுவான கதைகளை உருவாக்க உதவும். இந்த பின்புலத்தில்  எட்டு கதைகள் கொண்ட அழகுநிலாவின் சங் கன்ச்சில் ஒரு நல்ல வரவாக கருத முடியும்.

 

புலம்பெயர் எழுத்தை பற்றி பேசும்போது இயல்பாக பெண்களின் வாழ்வியல் எழுத்தும் (இது பெண்கள் எழுதுவதல்ல) சேர்த்தே வாசிக்க முடியும். இந்திய சூழலில் திருமணம் வழியாக பெண் புலம் பெயர்கிறாள். தன் அடையாளங்களை மறுவரையறை செய்துகொள்கிறாள். கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்ற ஒரு நாவலை அஞ்சலையின் புலம்பெயர்வு மற்றும் அடையாள சிக்கலாக வாசிப்பதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். ஆகவே வெளிநாட்டிற்கு வரும் பெண் குடும்பத்திலிருந்து திருமணத்தின் வழியாக புலம்பெயர்ந்து பின்னர் தேசத்தை விட்டும் புலம் பெயர்கிறாள். புலம்பெயர்வை ஆண்களை விட பெண்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடிகிறது என தோன்றுகிறது. பதின்மம், முதல்தலைமுறை புலம்பெயர்வு என இரண்டு அடுக்குகள் கொண்டதாக அழகுநிலாவின் கதைகளை வாசிக்கலாம்.

 

அழகுநிலாவின் இரண்டாம் தொகுப்பான சங் கன்ச்சில் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் அவருடைய முதல் தொகுப்பான ஆறஞ்சு வாசித்தேன். ஆறஞ்சு வாசித்து முடிக்கும்போது சங் கன்ச்சில் தொகுப்பு அவருடைய முதல் தொகுப்பிலிருந்து ஒரு பெரும் தாவல் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. சிங்கப்பூர் வாழ்வை அனைத்து தளங்களிலும், அனைத்து கோணங்களிலும் அள்ளிவிட் வேண்டும் எனும் முனைப்பு இருந்த அளவிற்கு மொழியும் சித்தரிப்பும் முதல் தொகுதியில் வசப்படவில்லை.  ‘ஒற்றைக்கண்’ ஒரு நல்ல படிமமாக நிலைபெற்று வளர சாத்தியமுள்ள கரு எனினும் மொழியின் தேய்வழக்குகள், உணர்வுகளின் தேய்வழக்குகள் கதைக்கு தடையாகி விடுகின்றன. இவற்றை மீறி முதல் தொகுப்பில் எழுத்தாளரின் ஆதார கேள்விகள் நிச்சயம் வெளிப்படும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆறஞ்சு தொகுதியில் சில நுட்பமான அவதானிப்புகளை காண முடிகிறது. உதாரணமாக ஒரு கதையில் ஊரில் வியர்வை உழைப்பின் அடையாளமாக கருதப்படும் போது சிங்கப்பூரில் அது நாகரீக குறைவாக பார்க்கப்படுவது பற்றிய ஒரு குறிப்பை எழுதி இருப்பார். தலைப்பிற்குறிய கதையான ‘ஆறஞ்சு’ அழகுநிலாவின் வலுவான கதைபுலத்தின் துவக்க புள்ளியை அடையாளம் காட்டுகிறது என சொல்லலாம். சிங்கப்பூர் கல்வி முறை அளிக்கும் அழுத்தத்தின் மீதான சன்னமான விமர்சனத்தையும் பதின்மவயதினரின் சிக்கல்களையும் பேசுகிறது. இந்த தொகுப்பில் சங் கன்ச்சில், முள்முடி, விலக்கு ஆகிய மூன்று கதைகளும் பதின்மவயதினரை சுற்றி நிகழ்கிறது. பொங்கல், வெள்ளெலிகள் கதையிலும் சிறுவர்கள் வருகிறார்கள். பதின்மத்தின் தயக்கங்கள், கொந்தளிப்புகள் வெறும் வயது சார்ந்த அக தத்தளிப்புகள் என்ற அளவில் சுருக்கிவிடாமல் அவை பண்பாட்டு தளத்தில் விரிகிறபோது பதின் பருவத்தை முதல்தலைமுறை புலம்பெயர்வுக்கு இணையாக, அதன் குறியீடாக வாசிக்க இயலும் என தோன்றுகிறது. புலம்பெயர்தலின் தத்தளிப்பை பதின்மத்தின் தத்தளிப்புடன் இணைப்பதில் அழகுநிலா வெற்றிபெறுகிறார்.

சங் கன்ச்சில், தொகுப்பின் தலைப்பிற்குறிய கதை. சிங்கப்பூரில் வளரும் பதின்ம வயதினனின் கதை. விகாசம், பொன் முகத்தில் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ ஆகிய கதைகளுடன் சேர்த்து வாசிக்க முடியும். தொழில்நுட்பம் மனிதர்களை அவர்களின் இடத்திலிருந்து வெளியேற்ற பயன்படுத்த முடியும். வாழ்வர்த்தத்தை அழிக்கவும் அவற்றை ஏவ இயலும். ஸ்ரீதர்  நாராயணனின் ஒரு கதையும் பதின்ம வயது பெண் குழந்தை பாலியல் படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்படுவதை களமாக கொண்டது. புலம்பெயர் எழுத்தாளர்களின் முக்கிய சிக்கல்களில் ஒன்றாக இது உருவாகி வருவதை காட்டுகிறது. முதலை மீது தாவி கரையை கடக்கும் கன்ச்சிலின் கதையும் பாம்பின் தலைமீது நடனமாடும் கிருஷ்ணனின் கதைக்கும் இடையே சுவாரசியமான ஒரு முரணை உருவாக்க முயன்றுள்ளார். இரண்டு பாட்டிகள், வெவ்வேறு சமூக படிநிலைகளை சார்ந்தவர்களாக வருகிறார்கள். ஆனால் அது அத்தனை துல்லியமாக உருபெறாமல் சற்றே அலைவுரும் கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ரத்னாவின் பாத்திர விவரிப்பு அனாவசிய சுமை என தோன்றியது. சிவாவின் நடத்தை இரண்டு வகையில் எனக்கு முக்கியமாக தோன்றியது. அவனுடைய தந்தை அடித்திருந்தாலும், தாய் திட்டியிருந்தாலும் மனக்காயத்தை மீறி அவர்களுடன் இயல்பாக ஒன்ற முடிகிறது. அவனுடைய நடத்தையை தொலைபேசியில் வெளியே எவருடனோ பகிர்ந்து கொண்ட, இறந்து போன பாட்டியின் இடத்தில் இருக்கும் லட்சுமியிடம் தான் அவன் கணக்கை நேர் செய்து பழி தீர்க்கிறான். ஒருவகையில் மனிதர்கள் ஆக பலவீனமான புள்ளியில் தங்கள் வெற்றிகளை நிலைநாட்டுவார்கள் என சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மூன்று தலைமுறையினரிடையே உள்ளே உறவு சிக்கல்களை பக்க சார்பற்று சித்தரிக்க முடிந்தது இக்கதையின் வெற்றி.

விலக்கு இந்த தொகுதியில் உள்ள நல்ல கதைகளில் ஒன்று.‌ சென்றாண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது சிறுகதை முகாமிற்காக வந்த கதைகளில் இக்கதையை வாசித்தது நினைவில் இருந்தது. பதின்ம வயது பெண் பூப்படைவதில் உள்ள பண்பாட்டு சிக்கலை சொல்லும் கதை. லாவண்யாவின் அம்மா தமிழ் அடையாளங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டிருப்பவள். லாவண்யா அடையாள கலப்பின் மீது ஈர்ப்புடைய பதின்ம வயது பெண். சீன இந்திய ஜோடியை காணும்போது சூசன் பூக்கள் நினைவுக்கு வருகிறது. ஒரு ஏக்கமாக வெளிப்படுகிறது. காதலிக்க சீனனை விழையும் பெண் வகுப்பில் இந்திய நட்புகளையே எதிர்பார்க்கிறாள் என்பது சுவாரசியமான முரண். பள்ளியில் தான் ஏற்கனவே வயதடைந்ததாக காட்டிக்கொள்பவள். அவளுடைய ரகசியத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லை‌. ஆனால் அம்மாவின் ஆசைகள் வேறாக உள்ளன.‌ பருப்பு சோறை நண்பர்கள் கேலி செய்ததை மனதில் கொண்டு அவளும் சுணங்கி சிக்கன் கேட்கிறாள். இந்த கதையில் முக்கியமான இடம் என்பது தமிழ் வாத்தியார் கூற்றாக வரும் ஒரு வரி- தமிழை நாம் விலக்க கூடாது‌. தமிழ் அடையாளத்தை பேண நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் அதை விட்டு விலகி வெளியேற நினைக்கும் ஒரு தலைமுறைக்கும் இடையிலான முரணை சொல்லும் கதை. முள் முடி இந்த தொகுதியின் மற்றுமொரு பதின்ம வயதினரின் கதை. தொகுப்பின் பலவீனமான கதையும் கூட‌. கதைக்குள் முரண் போதிய அளவு வலுவாக உருவாகவில்லை என தோன்றியது.

கீலா, இத்தொகுப்பின் முதல் கதை. அல்ஷிமர் நோய் வந்து கணவரை, லிக்வான்யூவை, கவனித்து வந்த மகளை என எல்லோரையும் மறக்கிறாள். ஆனால் மரண தருவாயில் ‘கீலா’ அதாவது மலாயில் பைத்தியம் என பொருள் வரும் ஒரு சொல்லை மட்டும் மகளிடம் விட்டுச்செல்கிறாள். அந்த சொல் ஒரு செய்தியாக மகளை துரத்துகிறது. அம்மாவின் வாழ்விலிருந்து அதற்கான விடையை கண்டடைகிறாள். அம்மாவின் நாட்குறிப்பில் குறிப்பிடப்படும் கடந்தகால சம்பவம் வலுவான ஒரு முடிச்சை கொண்டிருக்கிறது. யார் கீலா? என்பதே கேள்வி. கீலா என்று முத்திரையிடப்பட்டு அடைக்கப்பட்ட பெண் அல்ல தானே என அம்மா புரிந்து கொள்கிறாள்.‌ இறுதி வரி இதை மகளும் உணர்ந்து கொண்டதை குறிப்புணர்த்துகிறது. அம்மாவின் முன் கதைக்கு இருக்கும் கணம் மகளின் பகுதிக்கு இல்லை என்பதே இக்கதையின் ஒரு எல்லை என கூறலாம். ஆகவே அந்த இணைப்பு உத்தியாக மட்டும் நின்றுவிடுகிறது. அம்மாவின் கதை மகளுக்கு, அவளுடைய வாழ்க்கைக்கு என்ன அளிக்கிறது? என்ன இடையீட்டை நிகழ்த்துகிறது? அம்மாவை அறிந்துகொள்கிறாள் என்பதோடு நின்றுவிடுகிறது.

அக்ரோன், உயரம் அல்லது உச்சி என பொருள். இந்த தொகுப்பில் எனக்குபிடித்த கதைகளில் ஒன்று. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஜொலிக்கும் உயர்ந்த கோபுரத்தின் அடியில் ஓடும் கறுப்பு ரத்தம் எனும் கரு புதிதல்ல. ஆனால் சொல்லப்பட்ட முறை இதை முக்கியமாக்குகிறது. கதைகளின் இயங்கு தளம் மிக குறுகியதாக, சரியாக சொல்லவேண்டும் என்றால் வளரிளம்பருவத்து நினைவுகள் மற்றும் அக தத்தளிப்புகள் சார்ந்ததாக மட்டும் கதைப்புலம் இயங்கும்போது எழுத்துக்கள் விமர்சிக்கப்படுகின்றன. அழகுநிலா பெண் தன்னிலை கதை சொல்லலை முதல் தொகுப்பிலேயே தாண்டுகிறார். ஆண்களின் அகவுலகிற்குள்ளும் பயணித்து, புற உலகத்துடனும் உறவுகொண்டு தனது எல்லைகளை கடக்க முயல்கிறார். நண்பனை இழந்தவனின் ஒருநாளை நுணுக்கமாக சித்தரிக்கிறார். அவனுடைய வெறுமை, மிரட்சி, வாழ்க்கை சிக்கல், நண்பனின் நினைவுகள் என எல்லாமும் இயல்பாக கடத்தப்படுகிறது. போலியான கரிசனம் அல்லது உரத்து வலிந்து  மிகையாக்காமல் வாழ்க்கை பாடை சொல்ல முடிந்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் சூழலில் சிங்கப்பூர் வாழ்வு குறித்து  விமர்சன குரல்கள் எழுவது மிக முக்கியம் என எண்ணுகிறேன். வேறு யாரும் சொல்லாத, சொல்ல தயங்கும் விமர்சனங்களை எழுப்ப வேண்டியது எழுத்தாளரின் கடமை. வர்ணங்களில் ஜொலிக்கும் சிங்கப்பூரை சிங்கப்பூர் ப்ளையரில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் அவன் காலடியில் எல்லா வண்ணங்களும் கலந்து கறுப்பாக தெரிவதாக முடித்திருப்பார். ஆறஞ்சு தொகுப்பில் இல்லாத ஒரு கூறு என இப்படி வலுவான படிமத்தை கதையில் கையாளும் திறன் இக்கதைகளில் வெளிப்படுவதை கூறலாம். யோசித்துப் பார்த்தால் நாம் கதைகளை மறக்கக்கூடும் ஆனால் கதையின் ஆன்மாவை கடத்தும் ஒற்றை படிமம் கதையை நினைவில் தூக்கி நிறுத்தும். காலந்தோறும் வாசிப்பில் விரியும். அர்த்த அடர்வுகளும் கூடும். இந்த தன்மை அபாரமாக வெளிப்பட்ட கதை என வெள்ளெலிகள் கதையை சொல்லலாம். இத்தொகுதியின் சிறந்த கதை என இதையே சொல்வேன். மகனின் வளர்ப்பு பிராணி ஆசை மற்றும் சிக்கல்களை பற்றி பேசும் கதையாக தொடங்கி அதன் இறுதியில் ஒரு பெண்ணின் அளவுகடந்த ஆத்திரத்தை பறைசாற்றி முடிகிறது. பிரேமா நான்கறை கொண்ட தன் வீட்டை கணவரின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியருக்கு தற்காலிகமாக உள்வாடகைக்கு விடுகிறாள். ஊரிலிருந்து ஒவ்வொருவருடமும் மூன்றுமாதம் மனைவி மாலதியை அழைத்து பிள்ளை பேறுக்கு இருவருமாக முயற்சிகிறார்கள். பிரேமாவின் மகன் ஆகாஷ் செல்லப்பிராணியாக வெள்ளை எலிகளை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவை குட்டிகள் ஈனுகின்றன. அவற்றை விற்று, இதை தொழிலாகவே கருத தொடங்குகிறான். மாலதிக்கு வெள்ளெலிகளின் இனப்பெருக்கத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. இரவெல்லாம் முழித்துக்கொண்டு அதையே பார்க்கிறாள். மாலதி மூன்றுமாத வாசம் முடித்து ஊர் திரும்புகிறாள். ஆண் எலியை காணவில்லை என தேடுகிறார்கள். கதை இப்படி ஒரு காட்சியுடன் முடிகிறது- ‘துணிகளை தொங்கவிடும் நீண்ட கம்பியில் ஒரு வெள்ளெலி தூக்கிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.’ ஒவ்வொரு வருடமும் பிள்ளை பேறுக்காக மூன்றுமாதம் வந்து வெறுமனே செல்லும் மாலதியின் ஆற்றாமை, ஆத்திரம் என எல்லாவற்றையும் இந்த ஒரு வரி முழு தீவிரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஒரு படிமமாக துணிக்கம்பியில் தொங்கும் வெள்ளெலி ஆழ்ந்த மன தொந்தரவை அளிக்கிறது. அக்ரோன் மற்றும் வெள்ளெலிகள் என இவ்விரு கதைகளுமே உள்ளுறையும் வன்மத்தை மிகைப்படுத்தாமல் கச்சிதமாக கடத்துகிறது. சங் கன்ச்சில் கூட வன்மத்தையே உள்ளுறையாக கொண்டிருக்கிறது.

பொங்கல், சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் மீதான எள்ளல் கலந்த விமர்சனம் என இந்தக்கதையை வாசிக்க முடியும். பொங்கல் பானையில் happy deepavali என எழுதுவது, மாடு குட்டி என கன்றை சொல்வது, பொங்கல் போட்டியில் எப்போதும் வெல்லும் சீன பெண், மாட்டை பார்த்து குழந்தைகள் ஈயஈயவோ பாடுவது, விவசாயத்தை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கும் கிழவர் அருகே அமர்ந்திருக்க விவசாயி சேத்துல கால வெச்சாத்தான் நாம சோத்துல கால வைக்க முடியும் என வீர வசனம் மேடையில் பேசுவது என எல்லாமும் அபத்தமாகவும் மிகையாகவும் சித்தரிக்கப்படுகிறது. ‘பொங்கல்’ என பொருத்தமாகவே தலைப்பிட்டிருக்கிறார். உள்ளீடற்ற வெற்று உணர்ச்சி பொங்கல். பண்பாடும் கூட சந்தை பொருளாக மாற்றப்பட்டு விற்கப்படும் அபத்தத்தை இக்கதை சொல்கிறது. முதல் தொகுப்பில் இருந்த தமிழ் பெருமிதம் எல்லாம் மறைந்து மறுபக்கத்தை அணுகும் பார்வையை இக்கதைகளில் அடைந்திருக்கிறார் அழகுநிலா. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி நாவலில் அங்கதம் தெறிக்கும் மதுக்கூட உரையாடலை நாம் மறக்க முடியாது. எதன் மீது நமக்கு மெய்யான அக்கறையும், உள்ளார்ந்த மதிப்பும் உள்ளதோ இயல்பாக அதை பகடிசெய்யும், விமர்சிக்கும் உரிமையையும் நாம் அடைகிறோம். ஒன்றை இயல்பாக தயக்கமின்றி நம்மால் பகடி செய்ய முடிகிறதோ அப்போது அதை நாம் நம்முடையதாக ஏற்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

வெண்ணிற இரைச்சல் ஒரு மகாபாரத கதை. ஆறஞ்சு தொகுப்பிலும் தர்மனை மையமாக கொண்ட ஒரு கதை உண்டு.‌ ஆனால்  இக்கதை மொழிரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் மேலான ஆக்கமாக ஆகிறது. போருக்கு பின்பான பாஞ்சாலியின் கதையை சொல்கிறது. ஒரு பக்கம் உபபாண்டவர்களை இழந்த சோகமும் மறுபக்கம் போரின் அழிவுக்கு தான்தான் காரணம் எனும் குற்ற உணர்வும்  அவளை வதைக்கிறது. சமையல் பாத்திரத்தில் குருதி தெரிவது கடோத்கஜன் தெரிவது என மாயத்தன்மையும் கதைக்கு வலு சேர்க்கிறது‌‌. போரின் இரைச்சல் அவளுக்கு தாலாட்டாகிறது. தன்னிலை மறந்து உறங்குகிறாள். கிருஷ்ணனும் கிருஷ்ணையும் அழிவின் கடவுள்கள். அழிவின் கடவுளே எப்போதும் அறத்தின் கடவுளும் கூட. மகாபாரதம் போன்ற கதைகளை மறுஆக்கம் செய்யும்போது அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். புதிய கோணத்தை, புதிய திறப்பை அளிக்க முடிகிறதா? அத்திறப்பு மனித அகத்தினுடையதாக இருக்க வேண்டும். இக்கதையில் அப்படியொன்று நிகழவில்லை என்பது இதன் எல்லை.

‘மண்வாசனை தேடும் வலசை பறவை’ என அழகுநிலா அவருடைய முதல் தொகுப்பின் முன்னுரைக்கு தலைப்பிட்டிருந்தார். தானொரு வலசை பறவை எனும் தன்னுணர்வும் இங்கே தனது வசிப்பிடத்தை கண்டடைய வேண்டும் எனும் பதட்டமும் ஒருங்கே வெளிப்படும் தலைப்பு. இந்த இரண்டாம் தொகுதியில் தன்னை பொருத்திக்கொள்ள வேண்டும் எனும் பதட்டம் தணிந்து அமைதலின் நிதானம் கைகூடி வந்திருக்கிறது. சிங்கப்பூர் பற்றி அவருடைய முதல் தொகுதியில் வெளிப்பட்ட கற்பனாவாத எதிர்பார்ப்புகள், யோசனைகள் இந்த தொகுப்பில் சுத்தமாக இல்லை. சட்டென வெகுளித்தனம் மறைந்து அறிதலின் கசப்பு விமர்சனமாக வெளிப்படுவதை கண்டுகொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த இடத்தில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை நிராகரித்தும் பயணிக்கிறார். இந்த ஏற்பும் நிராகரிப்பும் முழுக்க தர்க்கப்பூர்வமான முடிவாக இருப்பதில்லை. பதின்ம வயது மகனின் முள் முடியை ஏற்கும் அன்னையால் மகளுக்கு பூப்பெய்தல் சடங்கு நடத்த வேண்டும் எனும் அவாவை கைவிட இயலவில்லை. இதை கொண்டாட்டமாக அணுகக்கூடாது என கருதி லாவண்யாவிற்கு விலக முடிந்தது போல் எளிதாக சிவாவிற்கு தான் கேட்டு வளர்ந்த கிருஷ்ணனின் கதைகளை விட்டு வரமுடியவில்லை. இந்த ஏற்பிற்கும் நிராகரிப்பிற்கும் இடையிலான ஊசலாட்டமும் திட்டமின்மையுமே அழகுநிலாவின் கதை மாந்தர்களை உண்மைக்கு நெருக்கமாக்குகிறது. சிறுகதைகளில் துல்லியம் மிக முக்கியமான அம்சம். அழகுநிலாவின் சில கதைகளில் ஒருவித அலைவு துல்லியமின்மையாக வெளிப்படுகிறது. எனினும் அதை நான் எதிர்மறையாக காணமாட்டேன். தனது தனித்த குரலை கண்டடைய முற்படும் எழுத்தாளரின் தேடல் என்றே கருதுவேன்.

வாழ்த்துக்கள்..

எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.

1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர

வாசிப்பு படிநிலை என்ன? பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது?

நான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.

பள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது

எழுதும் உந்துதல் எப்படி வந்தது? எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன?

2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

என்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பிரசுரமான முதல் எழுத்து?

வலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.

உலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?

ஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.

தமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.

‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி

2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக?!!) நிறுத்தப்பட்டது.

வலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.

மொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.

ஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.

இன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன? நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா?

மீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம்? ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.

உங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?

முடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.

‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன? ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள்? ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.

சரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?

நான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நாவல் எழுதும் யோசனை உண்டா?

நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.

உலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி? அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது?

சாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.

பயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?

எழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ? ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.

உங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி

அதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா? புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும்  எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது.  நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே? ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.

நவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா? அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா? அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.

நீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்?

காற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.

உங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..

காலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே? அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா? பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.

மர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின

தொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.

சிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு? திருத்தி எழுதும் வழக்கம் உண்டா?

சிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.

எழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென

அது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.

உலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன?

நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

நவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர்? தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.

இறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்

எழுத்து எனக்கான போதை. ஒரே போதை.

இருளில் புதையும் நிழல்கள்-  கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா

நரோபா

 

1981ஆம் ஆண்டு பிறந்த கார்த்திகைப் பாண்டியன் மதுரையில் வசித்து தற்போது கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். தற்கால உலக இலக்கியம் சார்ந்து தேர்ந்த வாசிப்புடையவர். 2015ஆம் ஆண்டு ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்த அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ பத்து கதைகளையும் லக்ஷ்மி சரவணகுமார் மற்றும் போகன் ஆகியோரின் இரு கட்டுரைகளையும் உள்ளடக்கியது. ‘வலசை’ இதழில் நேசமித்திரனோடு சேர்ந்து முக்கிய பங்காற்றியவர். எஸ்.ராவை தன் ஆதர்சமாக அறிவித்துக் கொண்டவர். தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். அண்மைய காலங்களில் அவருடைய மொழியாக்கங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ எனும் ஆர்தர் ரைம்போவின் கவிதைத் தொகுப்பை தமிழாக்கம் செய்திருக்கிறார். வெவ்வேறு மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே நூலில் அவர் எழுதியிருக்கும் ரைம்போவின் வாழ்க்கைக் குறிப்பும் முக்கியமானது. இத்தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு ஆத்மாநாம் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கதைகளை வாசித்து முடித்ததும் கார்ர்திகைப் பாண்டியனை என் அகத்திற்கு மிக நெருக்கமான படைப்பாளியாய் உணர்ந்தேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் மரணம் எனும் பிலத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுபவர்கள், அதன் இருளைக் கண்டு திகைத்து நிற்பவர்கள், புலப்படும் இருட்பிலத்தின் வாயிலின் நின்றபடி வாழ்வின் பெறுமதியை எண்ணி மருள்பவர்கள், விசையறு பந்தினைப் போல் மரணம் நம் அண்மையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, அது எந்நேரத்திலும் எவரையும் தீண்டக்கூடும் எனும் பிரக்ஞை உடையவர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் கதைசொல்லியின் நான்கு நிழல்கள் பிரிந்து வெவ்வேறு அனுபவத்தை பேசுகின்றன. முதல் நிழல் மிகத் தீவிரமாக காமமும் மரணமும் தன்னை எப்படி அலைக்கழிக்கிறது என்று சொல்கிறது- ‘ஆக என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நான்தான்’ என்று முடித்த பின் எதிரில் அமர்ந்தவன் நிமிர்ந்து அமர்ந்து ‘ப்ளைன் நானா பட்டர் நானா என்ன சாப்புடுற?’ எனக் கேட்கிறான். இங்கே உன் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் யாதொரு மதிப்பும் இல்லை எனும் உண்மை குளிர்ந்து இறுக்குவதாக இருக்கிறது. கார்த்திகைப் பாண்டியன் புதிய காலத்தின் கதைசொல்லியாக தன்னை நிறுவிக்கொள்வது இத்தகைய தருணங்களின் வழியாகத்தான். போகன் கார்த்திகைப் பாண்டியனின் உள்ளம் ஐரோப்பியனுடையது எனச் சொல்கிறார். நவீன மனிதனின் பொருட்டின்மையை அப்பட்டமாக சூடிக்கொள்கிறார்கள் கார்த்திகைப் பாண்டியனின் மனிதர்கள்.

‘நிழலாட்டம்’ கதையில் சாலையோர காட்சிக்கு சாட்சியாய் நிற்கிறது இரண்டாம் நிழல். கார்த்திகை பாண்டியனின் கதைகளில் கையறு நிலையில் அல்லது செயலின்மையில் உறைந்து அல்லது தனது உறைநிலையை விட்டு மீண்டுவர விரும்பாத வெறும் சாட்சியாக இருப்பவனின் பார்வை பல்வேறு இடங்களில் மீள மீள வருகிறது. ‘நிழலாட்டம்’ மனிதனின் முரண்பட்ட சுயங்களின் பிரதிகளாகின்றன. நிழல்கள் இருளில் தம் இருப்பை கரைத்துக்கொள்பவை. அவ்விருள் அவற்றை காக்கவும் செய்யும். கண் முன் இரயிலில் தாவும் குழந்தையைக் காண்கிறான். ரயில் நிலையத்தில் கொப்புளங்களோடு கால் சூம்பிய பிச்சைக்காரனுக்கு காசு போட எண்ணுகிறான், ஆனால் சில்லறை இல்லை. அவனுடைய இரஞ்சுதலை பொருட்படுத்தாமல் காது கேளாதவனாக கடந்து செல்கிறான் (‘மரநிறப் பட்டாம்பூச்சி’). ரயிலில் இது என்ன இடம் எனக் கேட்கும் குருட்டு பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லலாமா என்று வாய் திறந்து பின் மவுனித்துவிடுகிறான் கதைசொல்லி. எவரும் பதில் சொல்லாதபோது பிச்சைக்காரன் வசைபாடுகிறான் அப்போதும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். சு.வேணுகோபாலின் ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் பேருந்து பயணத்தின்போது எழுந்து இடம் கொடுக்க கதைசொல்லிக்கு இருக்கும் தயக்கங்களை, பின்னர் கொடுக்காததன் குற்ற உணர்வை எழுதி இருப்பார்.

கார்ர்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் சந்தர்ப்பவாதிகள். சத்தமில்லாமல் இன்னொரு வண்டியிலிருந்து வண்டி துடைக்கும் துணியை திணித்துக்கொண்டு வருகிறான் (‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’). மாலில் நின்று இப்படியான பெண்களை தன்னால் ஒருபோதும் புணர முடியாது எனும் உணர்வால் வதைக்கப்படுகிறான். ஆனால் இதே கதைசொல்லி முன்னிருக்கையில் பையை மேலே வைக்கத் தடுமாறும் பெண்ணுக்கு உதவச் செல்கிறான். அங்கே அவன் சன்னமான வாய்ப்பைக் காண்கிறான். குற்ற உணர்வையும் மீறி கீழ்மையில் உழல்கிறான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் நண்பனின் தங்கையின் பெருத்த மார்பை அவன் கண்கள் தீண்டுகின்றன. பேருந்து பயணத்தில் சிறு பெண் பிள்ளையின் மார்புகள் சிற்றலையென ஏறித்’ தாழ்வதை காண்பதினால் குற்ற உணர்வு கொள்கிற அதேசமயம் காணாமலும் இருக்க முடியவில்லை. தன் செல்போனில் முழுமையாக சார்ஜ் இல்லாதபோதும்கூட பிறர் செவி சாய்க்காத அழகிய பெண்ணின் கோரிக்கைக்கு செவி சாய்த்து கண்ணியமான கனவான் போல விட்டுக்கொடுத்தபின் தத்தளிக்கிறான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ கதையில் லிப்ட் கேட்கும் பெரியவரை வண்டியில் ஏற்றிக்கொண்டதும் கதைசொல்லி தனக்குள்ளாக சிந்திக்கிறான். “வண்டியை ஓட்டும்போதும் அவனுக்குள் அலையலையாக கேள்விகள் எழும்பிய வண்ணம் இருந்தன. நான் ஏன் இவருக்கு உதவுகிறேன், எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகையில் என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னைத் துரத்துகிறது? சரி, நான் இவருக்கு உதவுகிறேன், ஆனால் இவரைப் போலிருக்கும் அத்தனை பேருக்கும் உதவும் மனம் கொண்ட மனிதர்கள் இங்கே இருப்பார்களா?”

செயலுக்கு துணியாத அவன் உணர்வு நிலையில் பிணைந்து அவதி கொள்கிறான். ஒருவகையில் மத்திய வர்க்கத்து இருநிலையை பிரதிபலிக்கிறார், எனும் போகனின் பார்வை ஏற்புடையதாக இருக்கிறது. மனிதர்களுக்கு அனுசரணையாக இருக்க விழைவதும், சக மனிதர்களின் மீது முற்றிலும் நம்பிக்கையற்றுப் போனதும் இந்நூற்றாண்டின் மத்திய வர்க்கச் சிக்கல் மட்டுமல்ல. இவை நவீன தனிமனிதனின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று. அதுவும் வர்க்கங்களும், சாதிகளும் தெளிவாகப் புலப்படும் இந்தியா போன்ற தேசத்தில் தன் விழைவுகளை முழுவதுமாக பின்பற்றிச் செல்பவன் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறான். ஆனால், கார்த்திகைப் பாண்டியனின் கதைமாந்தர்கள் முழுக்க நவீன தனி மனிதர்களா என்றால் இல்லை. இன்னமும் ஒருகாலை மரபில் ஊன்றியவர்களாக இருக்கிறார்கள். ‘கன்னியாகுமரி’ கதையின் ராமநாதன் ஒரு உதாரணம். தயக்கத்தையும் குற்றவுணர்வையும் அவர்களால் முழுமையாக கைவிட இயலவில்லை.

பைத்தியக்காரி திரும்பத் திரும்ப துன்புறுத்தியும்கூட அவள் காலடிக்கே திரும்பத்திரும்ப வருகிறது நாய்க்குட்டி. நாய்க்குட்டியின் முடிவு பைத்தியக்காரிக்கும் பார்வையாளனுக்கும் ஒரேவித கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. நம் விருப்புக்கள் இட்டுச் செல்லும் அழிவை, முரட்டு பிரேமத்தின் பொருளின்மையை ஒரு குறியீடாக விரித்துகொள்ளத்தக்க பகுதி இது. கார்த்திகைப் பாண்டியனை அலைக்கழிக்கும் கேள்வியின் பிரதிநிதியாகவும் இதைக் கொள்ளலாம். இதெல்லாம் ஏன்? தன்னழிவை தேடி விரைவது ஏன்? இக்கேள்விகளுக்கு விடையில்லை. ஒருபோதும் அவை வசப்படப்போவதும் இல்லை. ஆனால் நம் வாழ்வைப் பற்றிய உறுதிப்பாடுகளை சற்றே அசைத்து காலுக்கு கீழே நிலம் நழுவுவதை உணர முடிகிறது. இலக்கியப் பிரதிகள் நமக்கு ஆசுவாசமளிக்கும் எந்த விடையையும் சொல்வதில்லை, அவை நெஞ்சுக் கரிப்பாக, இரவுகளில் உறங்கவிடாத நமைச்சலாக நம்மை தொந்தரவு செய்கின்றன.

‘அந்தர மீன்’ உளவியல் தளத்திலான காதல் கதை. சிறுகதையின் கனவுப் பகுதி ஃபிரான்சிஸ் கிருபாவின் கன்னியை நினைவுபடுத்தியது. எழுத்தாளர் வலுவாக வெளிப்படும் தருணங்கள் என கனவுப் பகுதிகளைச் சொல்வேன். கதையின் பேசுபொருள் வழமையானது, ஆனால் கார்த்திகைப் பாண்டியனின் மொழி மற்றும் கூறுமுறை இக்கதையை மனதிற்கு மிக நெருக்கமானதாக ஆக்குகிறது. தனக்கே தனக்கான நேசத்தைக் கண்டடைந்து அதில் திளைத்திட கனவு கண்டவள் நீரற்ற அந்தர வெளியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அனோஜன், விஷால், சுரேஷ் பிரதீப் என கார்த்திகைப் பாண்டியனின் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளில் விரவிக் கிடக்கும் ‘அன்பிற்கான ஏக்கம்’ என்பது நவீன வாழ்வின் வேகத்தின் மீதான மிரட்சியாக புத்தாயிரம் படைப்பாளிகள் பலரிடம் காணக் கிடைக்கிறது. இத்தொகுதியில் மிகுந்த பரிவுடன் எழுதப்பட்ட கதை என இதைச் சொல்வேன். கவுதம் தன்னுள் ஆழ்ந்தவனாக தன் மீது சொரியப்படும் அன்பை உணராதவனாக இருக்கிறான்.

‘மரநிறப் பட்டாம்பூச்சிகள்’ நான்கு பகுதிகள் கொண்டது. ‘எந்த முடுக்கிலும் வாழ்வின் அபத்தத்தை மனிதன் எதிர்கொள்ளக்கூடும்’ என பொருள்படும் காம்யுவின் இரு வரி ஆங்கில மேற்கோள் மட்டுமேயுள்ளது ஒரு பகுதி. அதற்கு அடுத்து வரும் மூன்று வெவ்வேறு துண்டு நிகழ்வுகளைக் கோர்த்து சிறுகதையாக்குவதும் இந்த மேற்கோளே. இரண்டாம் பகுதியில் அதுவரை நுழைந்திடாத உயர்தர மதுபான அரங்கிற்குள் நுழைபவன் தன்னை அந்நியனாக உணர்கிறான். சரியாகச் சொல்வதாக இருந்தால், வன ஓவியங்களில் இருந்து தப்பித்து இருக்கையின் நிறத்தில் தன்னைப் புதைத்து கொள்ளும் ‘மர நிறப் பட்டாம்பூச்சி’யாக தன்னை உணர்கிறான். போகன் தொகுப்பின் இறுதியில் எழுதியிருக்கும் கட்டுரையில் இந்த படிமத்தைக் கொண்டு அபத்தம் எப்படி ஒரு தரிசனமாக கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் துலங்கி வருகிறது என்று சொல்கிறார். “பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றின் வண்ணம் ஒரு விளம்பரம். ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன்மதிப்பு இங்கே என்ன? அவை வழக்கத்துக்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன. இந்தக் கதைகளில் வரும் எல்லோருக்கும் அவர்களது இருப்பு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.” கலவிக்கு முன்பாகவே சோர்ந்து விடுகிறவனை தற்பால் உறவுக்கு அழைக்கும்போது தவிர்த்து விடுகிறான். பின்னர் அவன் சிக்கி அடிபடும்போது இவனை பழிதீர்க்கும் நோக்கில் சிரிக்கிறான். மரநிறப் பட்டாம்பூச்சியாக எதை மறைக்கிறான் என்றொரு கேள்வியை எழுப்பினால் கதை வேறு சில தளங்களை திறக்கக்கூடும்.

‘கன்னியாகுமரி’ இரு வேறு காலங்களில் நான்கு வெவ்வேறு நாட்களில் நிகழ்கிறது. நரேந்திரன் தன் தேடலைக் கண்டடைகிறான். கன்னி அன்னையென எழுகிறாள். அன்பைத் தவிர அவளிடம் கேட்பதற்கு வேறொன்றுமில்லை அவனுக்கு. அதே கன்னியாகுமரியில் நிகழ்காலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்த பதின்ம வயது மகளைத் தொலைத்த தந்தை விரக்தியில் தனியாக சுற்றி அலைகிறார். அனைவரும் இணையோடு வந்திருக்க தான் மட்டும் தனியனாக வந்திருந்தது அவரை அழுத்துகிறது. ஏறத்தாழ தொலைந்த மகளுடைய வயதையொத்த அல்லது அவளினும் இளமையான தனித்த கன்னிப் பெண்ணின் துணையை நாடுகிறார். கன்னிமையை போக்கும் கலவிக்கு பின் அவளுடைய பெயரை பகவதி என்று அறிகிறார். கடலுக்குள் குதித்த நரேந்திரன் கரையை அடைகிறான். கன்னியின் சுடர் தொலைவில் தெரிய அவன் தேவியின் மார்பென இருக்கும் பாறையில் கால்பதித்து முத்தமிட்டு மடியில் அமர்ந்து தன்னையிழக்கிறான், நடுத்தர வயதில் இருக்கும் ராமனாதனுக்கோ பகவதி அன்னையாகவில்லை. கடலில் குதித்தவன் ஏறிக் கால் பதிக்க அன்னையின் மார்பும் அவனுக்கில்லை. காமத்தின் இருநிலையை கதை சொல்வதாக புரிந்துகொள்கிறேன். காமம் உன்னதமாகும்போது கன்னி அன்னையாகிறாள். காமம் அப்பட்டமாகும்போது மகளும்கூட வெறும் கன்னியென நுகரப்படுகிறாள்.

‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ அதன் கட்டற்ற கற்பனை மற்றும் ஒழுங்கின்மை காரணமாக இத்தொகுதியில் எனக்கு பிடித்த கதையாகிறது. லத்தீன் அமெரிக்க சாயல் கொண்ட ஊகப் புனைவு. உன்னதமான சிலுவையின் சொற்கள் எல்லாம் தலைகீழாக்கப்படுகின்றன. மரித்தவர்கள் எல்லாம் எவனோ ஒரு மயிருக்காக நான் எதற்கு சாக வேண்டும் எனத் திருப்பிக்கேட்டு விழுமியங்களை கவிழ்க்கிறார்கள். தேவகுமாரன் தன்னைக் காட்டிக் கொடுத்தவனை பழி தீர்க்கிறான் அல்லது அதன் மூலம் மன்னிக்கிறான். கர்ணன் போரில் அர்ஜுனனைக் கொல்கிறான், தானும் மரித்து அவன் அன்னையை வதைக்கிறான். இக்கதை மையமற்ற காட்சிக் கோவை. அதன் இருட் சித்தரிப்புகள் காரணமாக வெகுவாக அலைகழிப்பவையும்கூட. இக்கதை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் மற்றொரு கதையான ‘Viva Le Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும் இலக்கிய பஜனை மடங்களும்’ கதையில் அதன் இயக்குனர் அர்ரிபால் பற்றிய அடிக்குறிப்பு இருக்கிறது. இவர்கள் இருவரையும் இணைப்பது ‘பீதி இயக்கம்’ (Panic movement). இவ்வியக்கத்தைப் பற்றி அறிவது கார்த்திகைப் பாண்டியனின் கதைகளை மதிப்பிட மிக முக்கியமான சாதனமாகும். அதிர்ச்சியளிக்கும் பீதியை சித்தரிப்பதின் ஊடாக அமைதியை, அழகை, அடைய முனைவதை இவ்வியக்கம் லட்சியமாக கொண்டது. சர்ரியலிசத்தன்மை கொண்டது. அழகின், அமைதியின் பொது இலக்கணத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒருவிதமான அகோரித்தன்மை என்று புரிந்துகொண்டேன். கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் வரும் சித்தரிப்புகள் அவசியத்தை மீறி அதிர்ச்சியளிப்பவை என்பதை ஓர் எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கும்போது இந்த பின்புலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்தாளர் உத்தேசிப்பதே அதைத்தான். நவரசங்களில் ‘பீபத்சம்’, ‘பயம்’, ஆகியவையும் உள்ளதுதான்.

‘கலைடாஸ்கோப் மனிதர்கள்’ நொடிக்கு நொடி உருமாறும் மானுட நிலையை குறிக்கிறது, அல்லது எதன்மீதும் பெரும் பற்றற்ற ஆழமற்ற மிதவையாக மனிதன் இழுத்துச் செல்வதை உணர்த்துகிறது. ஏமாற்றப்பட்டதாக உணரும் மறுகணம் அவன் ஏமாற்றவும் செய்கிறான், ஒரு அழகிய பெண்ணைத் தொடர்கிறான், பின்னர் அப்படித் தன்னை ஈர்த்த பெண்ணின் நினைவுகளுக்குள் புதைகிறான். இயேசுவின் மீது ஈர்ப்பு என்ற காரணத்தினால் அவளை விட்டு விலகுகிறான். பசி மயக்கத்தில் இருக்கும் நபர் உதவி கேட்கும்போது முதலில் நம்ப மறுக்கிறான், பின்னர் ஏற்கிறான், அவரை வண்டியில் அழைத்துச் செல்லும்போதுகூட அவனுக்குள் எண்ணங்கள் நொடிக்குநொடி உருமாறிக்கொண்டே இருக்கின்றன. அவர் அவனை நீங்கிச் சென்றபின்னரும்கூட தனது பர்சைத் தொட்டுப் பார்க்கிறான். நவீன வாழ்வின் வழியாக மனிதன் வந்தடைந்திருக்கும் நம்பிக்கையின்மையை இக்கதை பேசுகிறது.

மனிதர்கள் சூழ ஒரு பெருநகரத்தில் இருந்தபோதும் செல்போன் அணைந்துவிட்டதும் யாருமில்லாத உணர்வை அடைவதை பேசத் துவங்குகிறது ‘தனி’. நவீன வாழ்வில் நாமுணரும் பதட்டத்தை இதுவரை நாம் ஏன் கதையாக்கவில்லை எனும் எண்ணம்தான் முதலில் தோன்றியது. ”அவனோடு வந்து கொண்டிருந்த நிழல்கள் இப்போது வெளிச்சத்தில் ஒவ்வொன்றாய் மறையத் தொடங்கியிருந்தன. இறுதி நிழலாய் அவளும் காணாமல் போனபோது பாதை முடிந்திருக்க மஞ்சள் ஒளி பொங்கிப் பிரவகித்த அத்துவான வெளியொன்றில் அவன் தனியாக நின்றிருந்தான்“ எனும் முடிவு ஏதோ ஒருவகையில் நிழலாட்டத்தின் நீட்சியாக அல்லது இதன் தொடர்ச்சி நிழலாட்டம் என்பதாக வாசிக்க இடமளிப்பதாக உள்ளது. யதார்த்த கதையாக துவங்கி மாயத்தன்மை கொண்ட முடிவை இக்கதை அடைகிறது.

‘பரமபதம்’ ஒருவகையில் பரமனின் பதம் எனும் மரணத்தை அடைவது, அல்லது வாய்ப்புக்களால் நிர்ணயிக்கப்படக்கூடிய, எப்போது வேண்டுமானாலும் எந்த உச்சியிலிருந்தும் பாதாளத்திற்கு இழுத்துவரும் ஆற்றல் மிக்க ஒரு விளையாட்டு. தற்செயல்களே தீர்ப்பெழுதுகின்றன. இத்தொகுதியில் தன்னிலையில் சொல்லப்படும் ஒரே கதை இதுதான். மரணத்தின் அணுக்கத்தை அனுபவமாக்க முயல்கிறது. இடையில் வரும் கனவுப் பகுதி ஜோம்பிக்கள் உள்ள வீடியோ கேம் போல சித்தரிக்கப்படுகிறது. மூத்த இலக்கியவாதி ஒருவர் தன் அன்னையின் மரணத்தை அண்மையில் தான் எதிர்கொண்ட விதத்தைக் கூறி காம்யுவை, மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நிராகரிக்கிறார். அப்போது கதைசொல்லி ஆவேசமாக எழுந்து “உங்களுடைய அம்மாவுக்குப் பதிலாக, ஒரு பேச்சுக்கு உங்களுடைய இரண்டு வயது பேரக்குழந்தை இறந்திருந்தாலும் நீங்கள் கொண்டாட்டமாகத்தான் இருப்பீர்களா?” எனக் கேட்கிறான். இந்தக் கேள்வியைத்தான் வெவ்வேறு வகைகளில் பல சிறுகதைகளில் கார்த்திகைப் பாண்டியனின் கதை மாந்தர்கள் எழுப்புகிறார்கள்.

‘இலக்கிய மும்மூர்த்திகள்’ கதை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் மொழியில் உள்ள தேய்வழக்கை பகடி செய்கிறது என்கிற அளவில் ஒரு சோதனை முயற்சி என்பதற்கு அப்பால் பெரிதாக ஈர்க்கவில்லை. ஏனெனில் இலக்கிய வெளிக்குள் இத்தகைய மும்மூர்த்திகள் எனும் பீடங்கள் செல்லுபடியாவதும் இல்லை, அவை மெய்யும் இல்லை. சமூக ஊடகப் பார்வை என்றே நம்புகிறேன். ஆனால் இக்கதையில் ஒருவித ‘ஆட்டோஃபிக்ஷன்’ தன்மை உள்ளது. தன்னெழுச்சியாக தோன்றும் சொற்களை பின்தொடர்ந்து செல்லும் தன்மை இக்கதைக்கொரு கவனத்தை அளிக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ரா. ஒரு மேடையுரையில் இளம் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் செய்யும் பிழைகளைப் பற்றி சொன்னார். பெரும்பாலும் அனைவரும் பரத்தையர்களைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் கதைகள் எழுதுவார்கள். அண்மைய காலங்களில் நான் வாசித்த பெரும்பாலான முதல் தொகுப்பு நூல்களில் ஒரு கதையேனும் ‘பரத்தையரை’ பாத்திரமாக கொண்டதாக இருக்கிறது. இக்கதைகளின் பொதுத்தன்மை என்பது, அவமானங்களை இறக்கி வைக்குமிடமாக பரத்தையருடனான உறவு வருகிறது. இத்தனை கதைகளுக்கு அப்பாலும் பரத்தையர் அகம் பன்முகம் கொண்டதாக, அறிய முடியா ஆழம் கொண்டதாக இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் கதைகளின் ஊடாக வரையறை செய்ய முயன்று கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தத் தொகுப்பிலும் ஒரு பரத்தையர் கதையுண்டு “பெருத்த மார்புகளுடைய ஆணின் கதை”. எறும்பு தானியத்தைச் சேமிப்பது போல் சிறுவயதிலிருந்து வரப்போகின்ற காதலிக்காக அன்பை சேமித்து வைத்திருந்தான். ஆனால் அவனுடைய பருத்த உடல் காரணமாக சேமித்து வைத்த அன்பு நஞ்சாகிறது. பெருத்த மார்புடையவனுக்கும் பால் சுரக்கும் மார்புடைய பரத்தைக்கும் மார்தான் சிக்கல். லதா ரஞ்சனி தொழிலுக்கு வருவதற்கு முன் குளிக்கும்போது மார்பில் கட்டியிருந்த பாலை வலியோடு வெளியேற்றிவிட்டு வருகிறாள். பெரும் வன்மத்தோடு அவளுடைய வருகைக்காக காத்திருக்கிறான். பிள்ளையை இழந்த அவள் அவனையே தன் குழந்தையாக கண்டுகொள்கிறாள். மார்போடு அணைத்து உயிரனைத்தையும் அளிக்கச் சித்தமாய் இருக்கிறாள். அவளுடைய பரவசம் அவனை மூர்க்கம் கொள்ளச் செய்கிறது. அவன் தன்னை மீறி தன் வெறுப்பை அவள் மீது கடத்துகிறான். தேவிபாரதியின் ‘பலி’ கதையோடு சேர்த்து வாசிக்கத்தக்கது. ஆனால் ‘பலி’ அளிக்கும் உணர்வு நிலை மற்றும் நம்பகத்தன்மை இக்கதையில் இல்லை. ‘பலி’ கதையில் சாதி அடக்குமுறையை பழிதீர்க்க முயல்கிறான். புறக்கணிப்பின் காரணமாக எழுந்த பெண்களின் மீதான வன்மத்தை பழிதீர்க்க இக்கதை நாயகன் திருக்குமரன் முயல்கிறான். ‘பலி’ கதையில் தனிப்பட்ட வஞ்சமும் தொடர்பும் ஒரு சரடை அளிக்கிறது. இக்கதையில் வாடிக்கையாளருக்கு முன் அன்னையென எழுவது போதிய வலுவுடன் உருவாகவில்லை எனும் எண்ணமே ஏற்பட்டது.

கார்த்திகைப் பாண்டியனின் மொழி வெகுவாக வசீகரிக்கிறது. சாதாரண பேசுபொருள் கொண்ட கதைகளும்கூட அதன் மொழியால் மிக நல்ல வாசிப்பின்பத்தை அளிக்கிறது. “இவர்களைக் காட்டிலும் பெரிதாய் வளர்ந்திட்ட நிழல்கள் இவர்களுக்கும் முன்பாக நடந்து போயின” (‘அந்தர மீன்’). “சீரற்ற வகையில் பொருட்களை இட்டு நிரப்பிய சாக்குப்பையினைப் போல அங்கங்கே பிதுங்கி நிற்கும் பருத்த உடல்.” (‘பெருத்த மார்பு…’) “சிதறிய பாதரசத் துளிகளென வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்களோடு தானும் இறங்கியவன்” (‘மரநிறப்..’) “சிவனின் சடையிலிருந்து சீறிப் புறப்படும் பாம்புகளென அவ்வறையின் கூரை முழுதும் வியாபித்திருந்த சாண்டிலியர் விளக்கின் விழுதுகள் இவனை மிரளச் செய்தன.” (‘மரநிறப்..’). மொழியில் சில சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. தேவதை, குட்டி தேவதை போன்ற தேய்வழக்கான பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். ஓரிடத்தில் தவளையின் உட்பாதமென பச்சை நிறத்தில் என்று எழுதும்போது நெருடலாக இருக்கிறது. கார்ட்டூன் தவளைகள் என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் அதிகமும் நிகழ்கின்றன. இதையும்கூட ‘இருளில் மறையும் நிழல்கள்’, ‘மர நிறப் பட்டாம்பூச்சி’ ஆகிய அவருடைய படிமங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளலாம். அவருடைய கதைமனிதர்கள் கும்பலுக்குள் ஒளியும் தனி மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

கார்த்திகைப் பாண்டியன் தன் கதைகளில் வலிந்து குரூரங்களை, மரணங்களை சித்தரிக்கிறாரா? பைத்தியக்காரி நாயை எத்தி விடுகிறாள், பைத்தியக்காரன் நண்பனின் தந்தையின் மீது கல்லைப் போட்டு கொல்கிறான். வாழ்வின் நிச்சயமின்மையை இவைச் சித்தரிக்கின்றன. ‘சிலுவையின் ஏழு வார்த்தைகள்’ கதையில் குழந்தை பிராயிலர் கோழியாக வெந்நீரில் கொதிக்கிறது. பெருத்த மார்புடையவனின் கதையில் தன் குழந்தை ஒரு பருந்தாக மாறுவதைக் கனவு காண்கிறாள். ”உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்து போயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.” (‘சிலுவையின்…’). ‘பரமபதம்’ கதையில் ரயிலில் அறுபட்டு இறுதி மூச்சில் இருப்பவளின் துண்டிக்கப்பட்ட கையைத் தூக்கிக்கொண்டு வருகிறது ஒரு நாய்.

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பு வாசித்தபோது ஒரு கேள்வி எழுந்தது. குழந்தைகளின் மரணத்தை மீள மீள பல்வேறு கதைகளில் அவரும் எழுதியிருந்தார். பெரும் தொந்தரவாக மனதை அலைக்கழித்தது. மனித மனத்தின் மிக பலவீனமான பகுதிகளில் ஒன்றின் மீதான தொடர் மோதல் வழியாக தன் புனைவை நிறுவிக்கொள்ளும் உத்தியோ எனும் ஐயம் ஏற்பட்டது. ஒரு மனப் பதட்டம் கலையாக முடியுமா? எதையும் தீவிரமாக, நேர்மையாக, முனைப்போடு உருவாக்கும்போது அதை கலையாக்க முடியும். ஏதோ ஒருவகையில் நவீனத்துவ படைப்புகள் மனச் சமநிலைக் குலைவின் வெளிப்பாடாகவும் இருக்கின்றன. போகன் பதட்டத்தை இழுத்து ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். கார்த்திகைப் பாண்டியன் கதைகளுக்கும் போகனின் கதைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு என்பது கார்த்திகைப் பாண்டியன் வாழ்வின் அபத்தத்தை ஆன்மீகத் தளத்திற்குள் கொணராமல், அதை அப்பட்டமாக எதிர்கொள்ள முயல்கிறார். நெஞ்சில் வேல் குத்திக் கிழித்ததன் அரற்றுதலை கேட்க முடிகிறது.

அபத்தம் ஒரு தரிசனமாக உருவானதன் பின்னணியில் இரண்டாம் உலகப் போர் உள்ளது. இத்தனை அறிவியலும், தொழில்நுட்பமும் மானுட மீட்சிக்கு என நம்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த பேரழிவு வாழ்வின் பொருள் குறித்த கற்பிதங்களை பொசுக்கியது. வாழ்வின் பொருளின்மையை இலக்கியம் போர் வழியாகவும் குழந்தைகளின் மரணங்கள் வழியாகவும் தான் மீண்டும் மீண்டும் சித்தரித்திருக்கிறது. கரம்சேவ் சகோதரர்களின் இல்யுஷா சட்டென நினைவுக்கு வருகிறான். இந்தப் பின்புலங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகளில் நிகழும் மரணங்களை,வாழ்வின் பொருளின்மையின் மீதான கேள்விகளாக காண முடியும். ‘நிழலாட்டம்’  கதையில் சொல்வது போல் ‘காமமும் மரணமும்’ தான் கதைகளின் தலையாய பேசு பொருள்கள். புனத்தில் இக்காவின் ‘கன்யா வனங்கள்’ நாவலுக்கான முன்னுரையில் ‘காமமும் காலமும்தான் மனிதர்களை அலைக்கழிக்கும் இரு பெரு விசைகள்’ என்பதாக ஒரு வரி வரும். இத்துடன் சேர்த்து ‘பீதி இயக்கம்’ மீதான அவருடைய ஆர்வம் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கம் ஆகியவற்றைச் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

நல்ல இலக்கியத்திற்கு எனது பிரத்தியேக இலக்கணம் என்பது ஏதோ ஒருவகையில் படைப்பு நிலையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே. என் வாசிப்பின் எல்லையில், அண்மைய கால எழுத்துக்களில், பாலசுப்பிரமணியம் பொன்ராஜுக்குப் பிறகு கார்த்திகைப் பாண்டியனிடம் அத்தகையத் தன்மையை கண்டுகொள்கிறேன். ‘மரநிறப் பட்டாம்பூச்சி’ வழியாக தமிழுக்கு ஒரு முக்கியமான படைப்பாளி அறிமுகம் ஆகியுள்ளார்.