மொழியாக்கம்

இடைவெளிகளின் வெளிச்சம் – பீட்டர் பொங்கல் குறிப்பு

பீட்டர் பொங்கல்

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்ற இத்தாலிய பொதுவழக்கை மறுத்து, மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை, என்று பொருள்பட போர்ஹெஸ் கூறியது பிரசித்தம். இரண்டில் எது மேன்மையானது, எது துல்லியமானது, எது சரியானது என்ற கேள்விகள் பலவற்றை புறக்கணித்து, வாசிப்பின் பொருள் கூடுவது குறித்த வியப்புணர்வில் வந்து நிற்கிறார் போர்ஹெஸ். இந்த வியப்புணர்வு இல்லையென்றால் மொழிபெயர்ப்பதற்கான உந்துவிசை கணிசமாய் குறைந்து விடும். முதற்படைப்பு செய்வதைவிட மொழியாக்கம் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது, அதிக பிழைபட்டு பெரும்பாலும் அதிருப்தியில் முடிகிறது. மொழியாக்கத்தைத் தொடரும்போது, ஒவ்வொரு திருத்தத்துடனும் முதற்படைப்பு குறித்த  புரிதல் விரிவடைவதும் அதன் மாண்பு கூடுவதும் மொழிபெயர்ப்பாளனின் தனியனுபவங்கள், இன்னுமொன்றைப் பின்னொரு நாள் முயற்சிப்பதற்கான அந்தரங்க வசீகரங்கள். முதற்படைப்பில் வந்து விழும் சொற்கள் மொழியாக்கத்தில் பொருள் பொதிந்தவையாக, தவிர்க்க இயலாத முக்கியத்துவம் கொண்டவையாக மாறுவது அந்த ரசவாதத்தின் ஆதி மயக்கம்.

இவ்வாரம் நம்பி கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ள கவிதைகளையும்கூட இங்கு எடுத்துக் கொள்ளலாம் https://padhaakai.com/2018/02/10/3-translations/.  மூன்றும் இந்திய- ஆங்கில கவிதைகள், எழுதியவர்கள் சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா,  மற்றும் தீபங்கர் கிவானி.

இதில் சி. பி. சுரேந்திரன் கவிதை ஒப்பீட்டளவில் எளியது, ஆனால் அதன் மொழியாக்கத் தேர்வுகள் சுவாரசியமானவை. கவிதையின் தலைப்பு, “A Friend in Need”. நேரடி மொழியாக்கம் எதையும்விட  அதன் இடியமட்டிக் தன்மை கருத்தில் கொள்ளப்பட்டு, “இடுக்கண் களைவதாம் நட்பு” என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

‘He sits in a chair/ Whose fourth leg/ Is his,’ என்பது ‘நாற்காலியில் அமர்கிறான்/ அதன் நான்காம் கால்/ அவனுக்குரியது,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஒரு தேர்வு இருக்கிறது. He sits in a chair, என்பது ‘அவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்’ என்றும் தமிழாக்கப்படலாம். இந்த முதல் வரி புதிரானதுதான் என்றாலும், ‘நாற்காலியில் அமர்ந்திருக்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு செயல் நிறைவு பெற்று விடுகிறது. ஆனால், ‘நாற்காலியில் அமர்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு இடைவெளி இருக்கிறது- நான்காம் கால் யாருடையது? இதையே இந்தக் கவிதையும் பேசுகிறது.

அடுத்து, ‘… He loves/ This chair,’ என்பது, ‘… இந்த நாற்காலி/ அவனுக்கு பிரியமானது,’ என்ற மொழியாக்கத்தில் பெரிய தேர்வுகள் இல்லை. அவன் இந்த நாற்காலியை நேசிக்கிறான், காதலிக்கிறான், விரும்புகிறான் என்றெல்லாம் சொல்லலாம் என்றாலும் பிரியமானது என்பதில் உள்ள உள்ள முத்திரைத்தன்மை மற்றவற்றில் இல்லை.

‘They used/ To make love in it,’ என்பது ‘அதில்/ அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அளவு பேச்சு வழக்கு தமிழில் இல்லை, ஒரு குறையே. ஆனால் make love என்பதைவிட புணர்தல் இந்தக் கவிதையின் பொருள் சூழமைவில்கூட மேலும் அர்த்தமுள்ளது- நாற்காலியின் நான்காம் கால் அவனுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளதை இங்கு கவனிக்கலாம். அவன் நாற்காலியில் புணர்கிறான் என்பது மட்டுமல்ல, நாற்காலியும் ஆகிறான். இந்தப் பொருள் ஆங்கிலத்தில் வருவதற்கு முன்பே தமிழாக்கத்தில் வந்து விடுகிறது.

அடுத்து, ‘That was when the chair/ Had four plus two plus two,/ Eight legs,’ என்பது ‘அப்போது நாற்காலிக்கு/ நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,/ எட்டு கால்கள்,’ என்று தமிழாகிறது. ‘That was when’ என்பது ‘இன்னது நடந்த காலம்’ என்பதைச் சொல்லத் துவங்குகிறது, ஆனால் தமிழில், ‘அப்போது,’ என்று துவக்கத்திலேயே முடிந்து விடுகிறது- அப்போது நாற்காலிக்கு நான்கு கால்கள் இருந்தன, அந்த நான்கு கால்களின் மீது இரண்டு கால்கள் இருந்தன, அந்த இரண்டு கால்களின் மீது இன்னும் இரண்டு கால்கள்- ஆக மொத்தம் அந்த நாற்காலியில் எட்டு கால்கள், அவ்வளவுதான். அந்த எட்டு கால்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்ற எண்ணத்தை ஆங்கிலத்தில் ‘that was when’ என்பது ஒரு நிகழ்வாய் உணர்த்துகிறது, தமிழில் அப்படியெல்லாம் இல்லை. அதனால்தான் அடுத்து ‘Days with legs,’ என்று தொடரும்போது நம்மால் பிணைந்த கால்களுக்கு அப்பால் வேறொன்றையும் கற்பனை செய்ய முடிகிறது- தமிழில் ‘காலுள்ள நாட்கள்’, நாட்களுக்கு கால்கள் முளைத்தது போன்ற கற்பனைக்குக்கூட காரணமாகிறது. தவறில்லை, காலம் வேகமாய்ப் போனது என்று வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்திலோ, ‘Days with legs’ என்பது மூன்று வகைகளில் பொருட்படுகிறது: முன் சொன்ன வரிகளைப் பார்க்கும்போது, நாட்கள் கூடலில் பிணைந்திருக்கின்றன; கூடலில் இருந்த காரணத்தால் நாட்கள் வேகமாய்ச் சென்றன; நீண்ட நாட்கள் தொடர்ந்திருக்க வேண்டிய இந்தக் கதையில் அடுத்து கால்கள் வெளியேறுகின்றன, கால்களை இழந்த நாற்காலி முடமாகிறது- திரும்பிப் பார்க்கும்போது, காலுள்ள நாட்களில் இப்போது நகைமுரண் தொனிக்கிறது.

இதோ ஒரு சிறுகதை போல் கவிதை முடிவுக்கு வருகிறது – ‘There has been a lot of walking out/ Since then.’ அதற்கப்புறம் நிறைய வெளியேற்றங்கள். walk out என்பதற்கும் walk out on என்பதற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. walk out with என்றால் உடன் நடப்பதாக பொருள் வரும், ஆனால், walk out on with என்று சொல்ல முடியாது – walk out on என்றால் ஒருவருக்கு எதிராக, அல்லது ஒருவரை நிராகரித்து, வெளியேறுவதும் பிரிவதும் மட்டுமே. இந்தக் கவிதையில் ‘days with legs,’ என்பதைத் தொடர்ந்து, ‘There has been a lot of walking out/ Since then,’ என்று வரும்போது, நிறைய நடந்தார்கள், வீட்டில் மட்டுமல்ல, வெளியேயும் சுற்றி வந்தார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமக்கு walk out என்றால் வெளிநடப்புதான், இல்லையா? பிரிவின் சாயல் தொனிக்கிறது, எனவே, ‘நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,/ அந்த நாட்களுக்குப் பின்,’ என்ற தேர்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கும் கவிதையின் மையம் ஆங்கிலத்தை விட தமிழில் சீக்கிரமே வந்து விடுகிறது.

ஆம், ‘இப்போது நாற்காலிக்கு ஒரு கால் குறைவு,’- /Now the chair’s/ Short of a leg,’ எனவே அவன் தன் காலை அதற்கு இரவல் அளிக்கிறான்- ‘And he’s lending his’- எட்டு கால்கள் இருந்த இடத்தில் இப்போது மூன்றுதான் இருக்கின்றன என்ற குறையைப் போக்க தன் கால்களில் ஒன்றை பரிதாபகரமாக ‘இரவல்’ தருகிறான், இல்லை, முட்டுக் கொடுக்கிறான்.

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்பது சரியா, ‘மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை,’ என்பது சரியா? மொழியாக்கத்தின் விளைவுகள் விசுவாசம், துரோகம் என்று சொல்லக்கூடிய சார்பு நிலையில் ஒப்பிட்டுக் கணக்கு பார்க்கக்கூடியவை அல்ல என்று நினைக்கிறேன். எழுதி முடிக்கப்பட்ட படைப்பை யாரும் திருத்தி வாசிப்பதில்லை, அப்படியொரு முயற்சி அபத்தமான ஒன்றாய் இருக்கும்- ஆனால், மொழிபெயர்ப்பு அதற்கொரு வாய்ப்பு அளிக்கிறது. மொழியாக்கத்தின் பயன் முதல்நூல், மொழியாக்கம் என்ற இரண்டின் இடைவெளியில் உருவாகக்கூடிய பொருட்படுதல்களால்- அவை பொருத்தம் கருதி ஏற்கப்படுகின்றனவோ இல்லையோ அல்லது கடத்தப்பட்ட பொருள் போல் சொற்களின் மறைவில் ரகசியமாய் உட்போதிந்திருக்கிறதோ, எப்படியானாலும்-  நாம், மொழிபெயர்ப்பாளனும் வாசகனும், அந்த அனுபவத்தில் அடையக்கூடிய செறிவுதான். இது உரைநடையிலும் உண்டு என்றாலும் கவிதைக்கு கூடுதலாய்ப் பொருந்துகிறது, பிரிந்து ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒன்றுகூடி ஒருபொருட்படுவதால்.

நம்பி கிருஷ்ணன் தமிழாக்கங்கள்: சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா, தீபங்கர் கிவானி

 

இடுக்கண் களைவதாம் நட்பு
(ஆங்கில மூலம்: சி. பி. சுரேந்திரன்)

நாற்காலியில் அமர்கிறான்.
அதன் நான்காம் கால்
அவனுக்குரியது. இந்த நாற்காலி
அவனுக்கு பிரியமானது. அதில்
அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்.
அப்போது நாற்காலிக்கு
நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,
எட்டு கால்கள். காலுள்ள நாட்கள்.
நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,
அந்த நாட்களுக்குப் பின். இப்போது நாற்காலிக்கு
ஒரு கால் குறைவு. தன் காலை முட்டு
கொடுத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

oOo

இன்னமும் ஜனனிக்காத மகளிற்காக
(ஆங்கில மூலம் : ஏ. கே. மெஹ்ரோத்ரா)

கவிதை எழுதுவதன் மூலம் உன்னை
ஜனனிக்க முடியுமானால், இதோ
இப்போதே ஒன்று எழுதுவேன்,
ஓருடலின் தேவைக்கும் அதிக
சருமம் திசுக்கொண்டு பத்திகளையும்
பேச்சைக் கொண்டு வரிகளையும்
நிரப்புவேன். உன் அன்னையின்
ஒட்டக் கடிக்கப்பட்ட நகங்கள், இளம்பழுப்பு

கண்கள், அவற்றையும் உனக்களிப்பேன்,
அவளுக்கவை இருந்ததாக நினைவு. அவளை
ஒரு முறை மட்டுமே, ரயில் ஜன்னல் வழியே
மஞ்சள் வயலொன்றில் பார்த்தேன். வெளிறிய நிறத்தில்
உடையணிந்திருந்தாள். குளிரடித்தது.
ஏதோ சொல்ல விரும்பினாளென்று நினைக்கிறேன்.

oOo

சேகரம் செய்பவர்கள்
(ஆங்கில மூலம் : தீபங்கர் கிவானி)

இவ்வண்ணக்கற்களை புதையலெனக் காத்தோம் அப்போது,
இதோ, அந்த ஜூன் மாதத்தில் நீ கடைசியாய்க் கண்டெடுத்தது. அன்று உன் பிறந்தநாள்,
கடற்கரையில், என்னுடன் போட்டியிட்டு விரைகையில், அதன் நீலத்தைக் கண்டு குரல் கொடுத்தாய்.

இச்சிறு கூம்பின் தளம் இன்றும் அதே ஆரஞ்சு நிறம். அவ்வருடம் நம்மிருவருக்கும்
பத்து வயது; இந்தப் பெட்டியில், வெந்து நொய்ந்த அந்நாளில்,
இருபத்திரண்டுடன் இன்னுமொரு கல்லைச் சேர்த்தோம்.

பிடித்ததை சேகரித்தோம், அவையும் நிலைத்து நீடித்தன,
பால்ய காலம் கடந்த பதின்மூன்றாண்டு தொலைவில், இப்போது
இந்த இருபத்து மூன்றையும் கூட்டிப் பார்த்து உன்னைக் காண்கிறேன்

மறக்க விரும்பியதை முஷ்டியினுள் மறைத்துக் கொள்ளும்
ஆண்களாவதற்கு முன் என்னவாக இருந்தோம் என்பதற்காக:
இந்தா, கையைத் திற, நீயும் உணர முடியும்.

(These are unauthorised translations of the poems, “A Friend in Need” by C.P. Surendran, “To an Unborn Daughter” by A.K. Mehrotra, and “Collectors” by Deepankar Khiwani . The Tamil translations are intended for educational, non-commercial display at this particular webpage only).

Two Poems by Karikalan – Translated into English by Nakul Vāc

That lizard dishing out omens
in the northeast corner of Selli Amman Temple
won’t know.

That Brahmin who kindled the fire
and recited the Vedas
won’t know either.

Ditto
the friends and relatives who gathered around
to bless and wish us well.

None of them know of
our Love.

Preempting idle gossip in our town,
you left me, your lifeless body
a mere shell

whose hymen your husband must have torn
to end his wedding night
in consummate peace.

Did memories of me get washed away with soap-water?
I did wonder despairingly.

Pretty much the same turn of events
at my end as well.

Meeting unexpectedly, our lips
that once used to kiss
now introduce us to our kids as
Aunt and Uncle.

Shorn of intimacy-
my wife and your husband,
might be a bit problematic for them-
this Brother Sister relation of ours?

2

 

Self

Aroused by the caresses on ample bosoms
dark eyes bristle and drowse with pleasure
spread out on the black stone wall the body loosens
yanking its feet the statue follows.
The last ritualistic midnight tolls
awaken, tighten and petrify
in that moment when
the statuesque presence bestows on the house
an antique feel
yearning for the scent of stone
I turn into a bat and
hang upside down
from the rafters of the temple’s interior.

oOo

தமிழில் – கரிகாலன்

 

இரு மராத்திமொழி கவிதைகள் – தி. இரா. மீனா தமிழாக்கத்தில்

மராத்திமொழி கவிதைகள்
மூலம் : கிஷோர் கதம் – சௌமித்ரா
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி. இரா. மீனா

1.

வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கப் போகின்றன
நீ திரும்பிப் பார்க்கும்போது
உன்னால் ஒரு வெறுமையான வாழ்க்கையையாவது பார்க்கமுடியும்,
ஆனால் வரப்போகும் நாட்களை நினைத்துப் பார்க்கும்போது
நீ ஒரு பார்வையற்றவன் என்பதை உணர்கிறாய்.
பாதங்கள் சாலையில் தயங்கிப் போகின்றன .
எனவே சாலைகளின் திசைகள் நம்முடையவை
இப்போது உன் காலடிக்கான இடத்தை நீ பார்க்கக் கூடமுடியாது
இப்போது சுவாசிக்குமளவே காற்றை நினைக்கமுடியும்
காலையில் உன் கண்கள் திறக்குமேயானால்
நீ தூங்கினாய் என்று நினைத்துக்கொள்
நிழல் உன்மீது விழுந்தால்
கடைசியாக அந்த மரத்தைப் பார்த்துக்கொள்.
தலைக்கு மேல்பறக்கும்
பறவையிடம் திரும்பிவருவதற்கான உறுதிமொழியையை எதிர்பார்க்காதே.
இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் போது
என் கண்கள் பனிக்கின்றன.

நேற்று நடந்த அல்லது அதற்கு முன்தினம் நடந்த
அல்லது சில வருடங்களுக்கு முன் நடந்த துயரங்களுக்காக அல்ல என் கண்ணீர்
வரப்போகும் நாட்களுடன் வரவிருக்கும் துன்பங்களுக்கானவை அவை .

உண்மைதான் !
வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு
கொடுமையானவையாக இருக்க வேண்டும்….

2.

ஓ, கடவுளே !
நீ எங்கேயாவது இருக்கிறாயா?
நீ உண்மையாகவே இருக்கிறாயா?
தனிமையான தவிர்க்கமுடியாத
இந்த நீண்ட நீண்ட சாலை எனக்கு வேண்டாம்
உன் இருப்புடனும் இருப்பின்மையுடனுமான
பரபரப்பு எனக்கு வேண்டும்.

நீ விரும்பினால் வந்து விட்டுப் போகலாம்
ஆமாம்,நீ எங்கேயிருக்கிறாய்?
எனக்கு உன்மீது நம்பிக்கை வரவேண்டும்.

நீ இருக்கிறாயா அல்லது இல்லையா
என்று தெரியாமல்
நீ இருப்பதாகவே நினைத்து நான் வாழ்கிறேன்.
நமக்குள்ளே நடக்காமலே இருக்கின்ற
எல்லாமும் எனக்கு நினைவிலிருக்கிறது.

உன் இருப்பு இருப்பின்மை எனும் நாடகத்தில்
என் இருப்பு உன்னுடையதாகிறது,
ஆனால் நான் மனிதன்
என்னை அப்படியே இருக்கவிடு,
நீயும் என்முன் மனிதனாய் வா.

நான் தனியாக இருக்கிறேன்.
நீ எங்கிருந்தாலும் வா

உண்மையில் நீ எங்கேயாவது இருந்தாக வேண்டும்.
இருக்கிறாய் அல்லவா?

oOo

நன்றி : Marathi Poetry 1975—2000 Sahitya Akademi 2013