விமர்சனம்

சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்

 ஜாக் ஸ்டாப் – 

வீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றிஅது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..

ஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது. (more…)

அரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா? – எம். லின்க்ஸ் க்வேலி

(The National என்ற தளத்தில், Can Arabic literature ever be fully understood in English? என்ற தலைப்பில் M Lynx Qualey எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

1987ஆம் ஆண்டுக்கு முன் நவீன அரேபிய இலக்கியம் ஆங்கில இலக்கிய உலகில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அவ்வாண்டு நாகூப் மாஃபூஸ் நோபல் பரிசு பெற்றபோது மாஃபூஸ் போலவே, ஆங்கில இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியான செய்தியாக வந்தது.

தலைசிறந்த அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் யாரும் இல்லை என்று அப்போதுதான் கெய்ரோ பிரஸ்ஸில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சொல்லியிருந்தது. அப்போது அவர்கள் குழுக்களாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர். சில சமயம் நான்கு கல்வியியலாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் தம் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பையும் சரி பார்த்துக் கொடுத்துக் கொள்வதுண்டு.

1987ஆம் ஆண்டுக்குப்பின் நவீன அரேபிய இலக்கியத்தின் இருப்பை பதிப்பகத்தினர் உணர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல அரேபிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தன. சிறுதுளிகளாய் இருந்தது செப்டம்பர் 2001க்குப்பின் நீர்த்தடம் போலாயிற்று. இப்போது அது ஒரு சிற்றோடை போன்ற நிலையைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை, ஷுப்பக் பெஸ்டிவல் கலந்துரையாடலில் நாங்கள் ஒரு குழுவினராய், “ஆங்கில மொழியில் அரேபிய இலக்கியத்தின் வளர்ச்சிஎன்ற தலைப்பில் பேசப்போகிறோம். இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து கருத்து வேற்றுமை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்இது நன்மையா தீமையா என்று. (more…)

வாழ்க்கை நம்மை என்னவெல்லாம் செய்கிறது- மிகைல் ஷிஷ்கின்

(Mikhail Shishkin, and what life does to us என்ற தலைப்பில் Cynthia Haven எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

ஏறத்தாழ எப்போதும் நான் பல்வேறு காலக்கெடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பத்திரிக்கையைச் சுருட்டி என்மேல் ஒரு போடு போட்டால்தான் என் கவனத்தை நீங்கள் கவர முடியும். எனவே, டீப் வெலம் பதிப்பித்த காலிகிராபி லெஸ்சன்தொகுக்கப்பட்ட கதைகள்என்ற மிகைல் ஷிஷ்கினின் அற்புதமான தொகுப்பைக் கொண்டு என் நண்பர் ஸ்காட் எஸ்பாஸிடோ ஒரு மாதிரியான உவமேய, சைபர்ஸ்பேஸ் வகையில் அதைச் செய்திருக்கிறார் என்று நான் நன்றி சொல்ல வேண்டும்.

த டேக்கிங் ஆப் இஸ்மய்ல்என்ற நூலுக்காக 2000ஆம் ஆண்டு புக்கர் பரிசும், “மெய்டன்ஹேர்” (ஒப்பன் லெட்டர், 2012) என்ற நூலுக்காக 2005 நேஷனல் பெஸ்ட்செல்லர் பரிசும் 2006 நேஷனல் பிக்புக்பரிசும் வென்ற ஷிஷ்கினை மேற்கத்திய உலகில் முதல்முறை படிக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது, தெரியும். அப்படி பார்த்தால், இப்போதும் எனக்கு ஷிஷ்கின் பற்றி தெரியாது, அவரது நாவல்களை நான் படித்ததில்லை. இந்தப் புதிய தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நினைவுக்குறிப்புகள், ஆய்வுகளில் சிறிதளவுதான் படிக்க முடிந்தது. இன்னும் சில காலக்கெடுக்களை நான் கடந்து செல்லும்வரை, தள்ளி வைக்கப்பட்ட என் சந்தோஷங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது
(more…)

போலிமொழியாக்கம் – பிரிஜெட் ராத்

பிரிஜெட் ராத் (Brigitte Rath)

(போலி மொழியாக்க புதினங்கள் குறித்து Brigitte Rath எழுதிய கட்டுரை, Mona Baker தளத்திலிருந்து, தமிழாக்கம்.)

1721ஆம் ஆண்டில் மான்டெஸ்க்யூ தன் “பாரசீக கடிதங்களை” அனாமதேயமாகப் பதிப்பித்தார். அதன் முன்னுரையில், இரு பாரசீகர்கள் தன்னுடன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் பாரசீகத்துக்கு எழுதிய கடிதங்களையும் அங்கிருந்து பெற்ற கடிதங்களையும் தான் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருப்பதாக்வும் கூறினார். கடிதங்களின் தேதிகள், மாதங்களுக்குரிய பாரசீகப் பெயர்கள் தாங்கியிருக்கின்றன, பாரசீக பழக்கவழக்கங்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில் சில விளக்கங்கள் அளிக்கிறார். இதற்குமுன் பாரசீக மொழியில் நம்பிக்கைக்குந்த ஒரு பிரதி இருந்ததாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது “பாரசீக கடிதங்கள்”, என்ற பிரதி. நம்மை இந்த கடிதங்களின் முதல் வாசகர்களையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறது- அவர்களுக்கு அடிக்குறிப்பில் உள்ள கூடுதல் விளக்கங்கள் தேவைப்படாது, ஏனெனில் அவர்கள் பிரெஞ்சு வாசகர்களைப் பொறுத்தவரை தங்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத ஒரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள். அன்னியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடும்போதே மான்டெஸ்க்யூவின் பிரதி அதை வாசிக்கத்தக்கதாகவும் செய்கிறது; வேற்று மொழியில் எழுதப்பட்ட, வாசிக்கப்பட முடியாத அந்தரங்கத்தன்மை கொண்ட கடிதங்களை வாசிக்கும் வாசக விருப்பத்தோடும், வாசகர்களுக்குப் பழக்கப்பட்ட உலகம் குறித்த அன்னிய பார்வையோடும் அது விளையாடிப் பார்க்கிறது. (more…)

சீர்: கவிதையும் ஓசையும் – பீட்டர் க்ளைன்

பீட்டர் க்ளைன்

(கவிதையின் ஓசை நயம் குறித்து Ploughshares என்ற தளத்தில் Peter Kline எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்).

என்னைப்போல் இன்னொரு கவிஞன் இல்லை என்று நினைக்கிறேன். புதுக்கவிதையின் காலத்தில் இலக்கணச் சுத்தமாய் கவி புனைந்து கொண்டிருக்கிறேன் (உரைநடையின் காலத்தில் கவிதை எழுதுவதில் உள்ள பொருத்தமின்மை பற்றிச் சொல்லவே வேண்டாம்). ஆனால் தற்போது முன்னிலைப்படுத்தப்படும் இலக்கண இயக்கங்கள் பெரும்பாலானவற்றுடன் எனக்கு எந்த உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. பேசுபொருள், பொதுப்பார்வை போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள ஒரு பிளவு என்னைத் தனிமைப்படுத்துகிறது. இவற்றுக்கும் பங்குண்டு என்றாலும் வடிவம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் ஒரு பேதம் இருக்கிறது. தமக்கென்று ஒரு இடம் உருவாக்கிக்கொண்ட, மரபார்ந்த இலக்கண வடிவைப் பயிலும் கவிஞர்களை இளம் எழுத்தாளர்கள், முக்கியமற்ற, இயந்திரத்தன்மை பொருந்திய செய்நேர்த்தி கொண்ட கவிதைகள் எழுதும் பிற்போக்குவாதிகள் என்பதுபோல் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட விமரிசனங்களில் நியாயமில்லை என்று நினைக்கிறேன்- நவீன இலக்கணக் கோட்பாடுகள் பலவும் சரி போலிருக்கின்றன (தொழில்நுட்பத்தையும் உன் மரபையும் கற்றுக்கொள், கவனமாக எழுது)- ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் பல உருவாக இன்னும் இவை காரணமாகவில்லை. (more…)