விமர்சனம்

லூயி ஏட்ரிக்- எழுத்து ஒரு பித்து நிலை

அமெரிக்க பூர்வகுடி எழுத்தாளர் லூயி ஏட்ரிக் எழுதிய The Round House என்ற நாவல் குறித்து குறித்து இவ்விதழில் அஜய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரிஸ் ரிவ்யூ தளத்தில் லூயி ஏட்ரிக் அளித்த நேர்முகம் ஒன்றின் சில பகுதிகள் அதையொட்டி இங்கு மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்படுகின்றன.

மொழி குறித்து

கேள்வி-

“சிஸ்டர் கொட்சில்லா” கதையில் வருபவருக்கும் உங்கள் ஆசிரியைக்கும் ஏதாவது தொடர்புண்டா?

ஏட்ரிக்-

இல்லை, ஆனால் அப்புறம் எனக்கு பிரான்சிஸ்கன் டீச்சர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலரை தேவதைகள் என்றுதான் சொல்ல வேண்டும், வேறு சிலர் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். நான் ஆறாவது கிரேட் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர் டோமினிகா, அவர் உணவு இடைவேளையில் ஹோம் ரன்கள் அடிப்பார், எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சிஸ்டர் கொட்சில்லா என்று சொல்லக்கூடிய வகையில் அச்சு அசலாக யாரும் இருக்கவிழலி. ஆனால் மிஸ் ஸ்மித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இன்னும் நான் அவரது புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அவர் பூனைக்கண் கண்ணாடி போட்டிருந்தார், தன பொன்னிற முடியை நெடிய கூந்தலாக வைத்துக் கொண்டிருந்தார், தலையில் ஷிபான் ஸ்கார்ப் போர்த்து மோவாய் நுனியில் முடிச்சிட்டிருந்தார். மிஸ் ஸ்மித் வருவதற்கு முன்பே சில காலமான எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் சொற்களின் உள்ளே உள்ள உயிர்ப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆன்மா உண்டு என்று ஒஜிப்வேக்கள் சொவ்லதுண்டு. லுக் என்ற சொல்லில் உள்ள ஓ என்ற எழுத்துக்கு மிஸ் ஸ்மித் கண்ணிமைகள் வரைந்தார், அதன் மத்தியில் விழித்திரை வரைந்தார்- இப்போது திடீரென்று பார்த்தால், லுக் என்ற சொல் பார்த்தல் எனும் செயலாயிற்று. என் மனதில் ஆனந்தம் ஒரு மின்னலென வெட்டியது.

கேள்வி-

நீங்கள் வளரும் பருவத்தில் அவர் ஒஜிப்வேமோவின் பேசினாரா?

ஏட்ரிக்-

என் தாத்தாவின் குடும்பம் ரெட் லேக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் அப்பகுதியின் வட்டார வழக்கு பேசுவதுண்டு. ஆனால் அவர் மிக அருமையாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் செய்தார். என் அம்மா சொற்களை இங்கும் அங்கும் கற்றுக் கொண்டவர், ஆனால் ஒரு குழந்தையாய் ஒரு மொழிச்சூழலில் ஆழ்ந்திருந்தால்தான் அதை இயல்பாகவே கற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி-

அது எப்படி?

ஏட்ரிக்-

மொழி கற்பதற்கான வாய்ப்புள்ள ஒரு பருவம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, நம் மூளை அப்பருவத்தில் மொழிகளைக் கற்கத் தயாராகி இருக்கிறது. எட்டு அல்லது பத்து வயதுக்குப்பின் மொழிகளைக் கற்பது கடினமாகிறது. அதுதவிர ஒஜிப்வே கற்பதற்கு மிகக் கடினமான மொழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.. அதற்குக் காரணம் அதன் வினைச்சொற்கள் அசாதாரணமான வடிவங்கள் கொள்பனவாக இருக்கின்றன. பெயர்ச்சொற்களில் ஆண்பால் பெண்பால் வேறுபாடு கிடையாது, ஆனால் அவை உயிருள்ளவை உயிரற்றவை என்று பகுக்கப்படுகின்றன. பெயர்ச்சொல் உயிர் உண்டு என்றோ உயிரற்றது என்றோ குறிப்பதற்கு ஏற்ப வினைச்சொல்லின் வடிவம் மாறுகிறது. அதே போல் மானுட உறவுகளுக்கேற்பவும் வினைச்சொல் வடிவம் மாறுகிறது. வினைச் சொற்களுக்கு முடிவே இல்லை. பல முறை நான் ஒஜிப்வே பேச முயற்சிக்கும்போது என் மூளை ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் என் மகள் அதைப் பேசப் பழகிக் கொண்டிருக்கிறாள், இது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஆங்கிலம் மிகவும் சக்திவாய்ந்த ஒரு மொழி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது காலனியாதிக்கம் செய்தவனின் மொழி, அது எழுத்தாளனுக்கு ஒரு வரம். பிற பண்பாடுகளின் மொழிகளை ஆங்கிலம் அழித்து உட்கொண்டிருக்கிறது- அதன் குரூரமே அதன் உயிர்ப்பாக இருந்து வந்திருக்கிறது,. ஒஜிப்வே கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அதில் ஆழ்ந்து பயிலும் வகையில் வகுப்புகள் நிறைய நடக்கின்றன. ஆனால் என் தாத்தா அரசுப் பள்ளியில் தங்கியிருந்து படித்தபோது அவர் ஒஜிப்வே பேசக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கத்தோலிக் பள்ளிகளில் தங்கியிருந்து படித்தவர்களும் ஒஜிப்வே பேச அனுமதிக்கப்படவில்லை. என் அம்மா அங்கேதான் படித்தார், என் குடும்பத்தில் பலரும் கத்தோலிக்கர்களாகவே இருந்தோம்.

சமயம் பற்றி

கேள்வி-

நீங்கள் பக்தியுள்ள ஒருவராக வளர்க்கப்பட்டீர்களா?

ஏட்ரிக்-

ஒவ்வொரு கத்தோலிக்கரும் பக்தியுள்ள வகையிலும் காஸ்பல்கலை நேசிப்பவர்களாகவும்தான் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பழைய ஏற்பாடு என்னைக் கெடுத்துவிட்டது என்று சொல்ல வேண்டும். நான் வாசிக்கத் துவங்கியது என் மிக இளம் வயதில், அப்போது பழைய ஏற்பாடு என்னை உள்ளிழுத்துக் கொண்டது. சிந்தனையில் மாயங்கள் நிறைந்த வயது அது- கைததடிகள் பாம்புகளாக மாறும் என்றும் பற்றியெரியும் புதரிலிருந்து குரல் கேட்கக் கூடும் என்றும் மனிதர்களோடு தேவர்கள் பொருதினார்கள் என்றும் நம்பினேன். ஆனால் பள்ளிக்குப் போய் வேதாகமம் படிக்க ஆர்மபிதபோது சமயம் என்பதில் எல்லாமே விதிமுறைகள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். என் பக்கத்து வீட்டில் ஒரு மணமாலை செய்யப் பயன்படுத்தப்படும் இலைகள் கொண்ட செடி புதர்மண்டிக் கிடந்தது, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தது நினைவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அது பூக்கும், ஆனால் ஒரு முறைகூட பேசியதில்லை. தேவதைகள் யாரும் வரவில்லை, செந்நதி எதுவும் விலகவில்லை. அற்புதமான ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று நான் புரிந்து கொண்டதும் எல்லாம் சுரத்தின்றிப் போனது.

எனக்கு பாரம்பரிய ஒஜிப்வே சடங்குகள் இப்போது பிடித்தவையாக இருக்கின்றன, ஆனால் சமய விதிமுறைகளை வெறுக்கிறேன். அவை பெரும்பாலும் பெண்களைக் கட்டுப்படுத்தவே இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் கல்லும் மரமுமாய் கட்டப்பட்ட ஆலயங்களுக்குப் போகும்போது நான் என் பெண்களை காட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அல்லது வேலையில் போய் தொட்ட வேலையாவது செய்கிறேன். நமக்கு இருக்கும் எந்த கடவுளானாலும் அங்கே வெளியேதான் இருக்கப் போகிறார்கள். அப்படியெல்லாம் யாரும் கிடையாது என்பதை உறுதியாக உணர முடியுமென்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். கடவுள் விஷயத்தில் நான் சந்தேக மனநிலையைக் கொண்டாடுகிறேன்.

தன் எழுத்து குறித்து

கேள்வி-

லவ் மெடிசின் நாவலில் வரும் ஒரு பாத்திரம் இப்படிச் சொல்கிறது- “நீ லூலூ லமார்டைனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்- வாழ்க்கையை வாழ்பவர்கள், வாழ அஞ்சுபவர்கள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். என் அம்மா முதல் வகை”. நீங்கள் எந்த வகை?

ஏட்ரிக்-

நான் எப்போதும் முதல் வகையில் இருக்கத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் நான் கடைசி வகையைச் சேர்ந்தவள். என்னால் உயிர் வாழ முடியாத வழிகளிலெல்லாம் நான் எழுத்தின்மூலம் வாழ முடியும். இரண்டு தகப்பன்களிடம்தான் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். லூலூ எத்தனை பேரிடம் குழந்தை பெற்றுக் கொண்டாள், எட்டுத்தானே? உனக்கு நிஜமாகவே இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று சில சமயம் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று சிரிக்கிறேன். அத்தனை அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால் செத்துப் போயிருப்பேன், ஐம்பது முறை செத்துப் போயிருப்பேன். எனக்கு என் நேரடி அனுபவங்களை எழுத விருப்பம் இருக்கிறது என்று சொல்வதைவிட, அதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் நாம் நம் பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி ஒளித்து வைத்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன், எழுதும்போது அவை எழுந்து வருகின்றன. எழுத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அப்புறம்தான் வருகிறது. எனக்கு ஒரு உண்மையான குரல் கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை எழுதுவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, அந்தக் குரலையும் பாத்திரத்தையும் பின்பற்றிச் செல்லப் பிடித்திருக்கிறது. அது ஒரு பித்து நிலை போன்றது. அப்படிச் சில முறை நேர்ந்தபின், நான் என் வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டிருந்தாக வேண்டும் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த பித்து நிலைக்கு நான் ஏங்க ஆரம்பித்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானால் என் கதைக்குத் திரும்பி வர முடியும், அது என் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும், நான் எந்த முயற்சியும் செய்ய வேண்டியிருக்காது. என் கதைகளில் பல அந்த மாதிரி உருவாகிறது என்று சொல்ல மாட்டேன். பெரும்பாலான கதைகளும் விடாமுயற்சியில் உருவானவைதான். இருபது ஆண்டுகளாக சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையாக அவற்றைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் பித்து என்று வந்துவிட்டால், அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அதை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன். அது ஒரு ஆனந்தமயமான காதல் அனுபவம் போன்றது, அல்லது, “இது இவ்வளவு அருமையாக இருக்க முடியாது,” என்று உன்னை யோசிக்கச் செய்யும் மோகநிலை போன்றது. உண்மையில் அவ்வளவு அருமையாக எதுவும் இருக்கவும் முடியாது. எப்போதும் நான் திரும்பிச் சென்று அந்தக் குரலின் சில பகுதிகளைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. எனவே, எழுதி முடித்தபின் அந்தக் கட்டுப்பாடு வேலை செய்கிறது, முடிவை அடைய அது உதவுகிறது. தலைப்பு எப்போதும் இருக்கும், துவக்கம் எப்போதும் இருக்கும், சில சமயம் மத்திய பகுதிகளுகுக் காத்திருக்க வேண்டியிருக்கலாம், வேறு சமயங்களில் நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருந்துவிட்டு இரண்டு பக்கம் போல வெட்ட நேரிடலாம்.

கேள்வி-

ஏன் அப்படி ஆகிறது?

ஏட்ரிக்-

என்னால் கதையை முடிக்க முடியாதபோது. பொதுவாகவே நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருபப்துதான் வழக்கம். ஆனால் விஷயம் என்னவென்றால் திரும்பிப் போய் கதையின் கடைசி வாக்கியம் எங்கு வருகிறது என்பதைத் தீர்மானிப்பதுதான்.

கேள்வி-

உங்கள் பாத்திரங்களை குழப்பிக் கொள்ளாமலிருக்க என்ன செய்கிறீர்கள்?

ஏட்ரிக்-

முதலில் என் மனதில் அதைச் செய்து கொண்டிருந்தேன், ஆனால் உண்மையில் அவர்கள் என்ன மாதிரி குழம்பிப் போகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. பாத்திரப்படைப்பில் செய்வது குறித்து நான் அலட்டிக் கொண்டது கிடையாது. அழகியல் காரணங்களுக்காக, அல்லது ஏதோ ஒரு மரபைக் கடைபிடிக்க இப்படிச் செய்தேன் என்று என்னால் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும், ஆனால் உண்மையில் எனக்கு அந்த விஷயத்தில் எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் தேவையாக இருந்தது. ட்ரெண்ட் டஃப்பி, நியூ யார்க்கின் ஆகச் சிறந்த காப்பி எடிட்டர், அவர் மட்டும் இல்லையென்றால் நான் எழுதுவது எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக இருந்திருக்கும், நானும் இன்றுவரை அது பற்றி எதுவும் செய்திருக்க மாட்டேன். ஆனால் இப்போது முரண்பாடுகள் இருக்கின்றன, இல்லையா?

கேள்வி-

ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதைத் திருத்தி எழுதுகிறீர்களா?

ஏட்ரிக்-

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைச் செய்கிறேன். பொதுவாக தாமதமாக எழுதி அச்சுக்குப் போகும்போது சேர்க்க முடியாமல் போன அத்தியாயங்களைச சேர்க்கிறேன். அல்லது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒஜிப்வே மொழியை மேம்படுத்தப் பார்க்கிறேன். நான் கற்கக் கற்க, என் ஆசிரியர்களுடன் பேசப்பேச எனக்கு எவ்வளவு தெரியாமல் இருக்கிறது என்பது புரிகிறது. ஒஜிப்வே விஷயத்தில் நான் வாழ்நாள் தோல்வியாளர் என்று நினைக்கிறேன்- நான் டான் க்விசோட் என்றால் அதுதான் என் காற்றாலை. லவ் மெடிசின் நாவலை நிறைய மாற்றியிருக்கிறேன், ப்ளூ ஜே’ஸ் டான்ஸ் நாவலையும் திருத்தி எழுத விரும்பினேன். குறிப்பாக அதில் உள்ள சமையல் குறிப்புகளை நீக்க விரும்பினேன்- அதில் உள்ள லெமன் மெரிங் பை சமைத்துப் பார்க்க வேண்டாம், அதை வாயில் வைக்க முடியாது. எனக்கு அந்த மாதிரி கடிதங்கள் வந்திருக்கின்றன. ஃபோர் சோல்ஸ் நாவலை திருத்தி எழுதக் காத்திருக்கிறேன்- அதில் மிகப்பெரும் பிழைகள் பல இருக்கின்றன.

மாந்திரிக யதார்த்த எழுத்து

கேள்வி-

சிலர் உங்கள் எழுத்தை மாந்திரிக யாதார்த்தம் என்று வகைமைப்படுத்துகின்றனர். அது வேறொரு புறாக்கூட்டில் உங்களை அடைப்பதாக நினைக்கிறீர்களா?

ஏட்ரிக்-

என்னோடு உடன்பிறந்தவர்கள் ஆறு பேர், ஏறத்தாழ அவர்கள் அனைவரும் ஒஜிப்வே அல்லது டகோட்டா அல்லது வேறெந்த பூர்வகுடி மக்களுடனோ வேலை செய்கின்றனர். என் கடைசி தம்பி, கடைசி தங்கை, என் கணவனின் சகோதரன் என்று பலரும் இந்தியன் ஹெல்த் சர்வீஸில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்திருக்கின்றனர். என் இரண்டாம் அண்ணன் வர மின்னசோட்டாவில் வேலை செய்கிறார்- மிட்வெஸ்ட்டில் உள்ள ஒஜிப்வே தேசங்கள் அனைத்துக்கும் உரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவர் பொறுப்பு. அவர்களது அனுபவத்தைப் பார்க்கும்போது மாந்திரிக யதார்த்தம் கொட்டாவி விடவைக்கிறது. அவர்கள் அனுபவத்தை நான் என் எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்- அவர்கள் யாரென்று எல்லாருக்கும் தெரிந்து விடும். ஆனால் நம்புங்கள், என் எழுத்து சாதாரண வாழ்க்கையிலிருந்து வருவது.

கேள்வி-

ஆண்டிலோப் வைப் என்ற கதையில் ஒருவன் தன் குழந்தைக்கு பால் கொடுக்கிறான், அது?

ஏட்ரிக்-

அதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?| ஆண்கள் பால் சுரந்தது குறித்து பல ஆவணங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாய் இருக்கும் கூட்டத்தில் இந்தக் காட்சியைப் படிப்பது எனக்கு சில சமயம் சங்கடமாகி இருந்திருக்கிறது. ஆண்கள் நிலைகுலைந்துப் போகிறார்கள். ஆனால் அது நல்ல ஐடியாதான் என்று நினைக்கிறேன். உலகின் பிரச்சி\னைகளில் பாதி தீர்ந்துவிடும்.

கேள்வி-

த பிளேக் ஆப் டவ்ஸ் என்ற கதையில் யாருமற்ற ஒரு படகில் வயலின் கரைசேர்கிறதே, அது?

ஏட்ரிக்-

அதுதான் கதையே.

கேள்வி-

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு பாத்திரமோ கதைச்சூழலோ அமானுடத்தை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அதை எழுத ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதுண்டா?

ஏட்ரிக்-

நீங்கள் சொல்லும் பொருளில் நான் அமானுடத்தை உணர்வதில்லை/ எனவே, எங்கு அமானுடத்தை நோக்கி கதை செல்லத் துவங்குகிறது என்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை இது என் குசந்தைப்பருவத்திலேயே துவங்கியிருக்கலாம், பழைய ஏற்பாடு இன்னும் என் கற்பனையைக் கெடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ. ஒரு வேளை அது கத்தோலிக்க சமய தாக்கமாய் இருக்கலாம், அதிசயங்கள் நடக்கும், படகில் வயலின் வரும் என்பது போன்ற விஷயங்களில் அதனால் நம்பிக்கை வந்திருக்கலாம். எனக்கென்னவோ அதெல்லாம் சாத்தியம் என்று தோன்றுகிறது. ஒரு கதை தானாகவே தன்னை எழுதிக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நீங்கள் குறிப்பிடும் கதை அப்படிதான் வந்தது. பிளேக் ஆப் டவ்ஸ் கதையில் வரும் மனிதர்கள் சர்ரியலான ஒரு பயணம் செய்யும் இடம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் கூட மாந்திரிகத்தன்மை கிடையாது. வாப்பேட்டனில் முடிந்த ஒரு சரித்திரப் பயணத்தின் அடிப்படையில் டவுன் பீவர் எழுதப்பட்டது. அவர்கள் பசியால் ஏறத்தாழ செத்தே போனதன் நினைவாக அங்கே ஒரு கல்வெட்டுகூட இருக்கிறது. நான் இதோ இங்கே இருக்கும் மின்னியோபோலிஸ் ஆற்றங்கரைக்கு ஒரு வாரம் இல்லாவிட்டால் மறுவாரம் போகும் இடத்தில்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள் என்பது எனக்கு வசீகரமாக இருந்தது. அப்போது இந்த நகரம் இல்லைதான். எருமை பூட்டிய வண்டியில் இப்போது இண்டர்ஸ்டேட் 94 என்றிருக்கும் சாலையில் அவர்கள் பயணித்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பாதையில் சென்றார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்திருந்தது, அந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் என் விவரணைகள் அமைந்திருந்தன. பயணம் குறித்து எழுதிய டானியல் ஜான்ஸ்டன், பயணம் செய்தவர்களுக்கு மலக்குடல் பிரச்சினைகள் வந்தன என்றும் அதனால் ஒரு மருந்து சாப்பிட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது என்ன மருந்து என்று பார்ப்பது மட்டும்தான் நான் செய்த வேலை, அந்த மறுத்து லாடானம். பயணம் செய்த காலம் முழுவதும் அவர்கள் ஓபியம் சாப்பிட்ட போதையில் இருந்திருக்கிறார்கள். அதன்பின் பரசூட் ஆப் அப்லிவியன் படித்தேன், நாளெல்லாம் போதை மருந்தின் லாஹிரியில் இருந்தால் என்ன ஆகும் என்று அறிய விரும்பினேன். போனவாரம் நான் மேத்லாண்ட் படித்ததைப் பார்த்தீர்கள். எனக்கு போதை மறுத்து பித்து பிடித்திருக்கிறது என்று நினைப்பீர்களோ என்னவோ!

சிறார் எழுத்து

கேள்வி-

குழந்தைகளுக்காக எழுதுவது என்பது வளர்ந்தவர்களுக்கு எழுதுவதிலிருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?

ஏட்ரிக்-

முன்னாட்களில் நான் செய்த வேலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கான பாடபுத்தகங்கள் எழுதுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எந்த அளவு கடின வார்த்தைகளும் எளிய வார்த்தைகளும் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணித சூத்திரம் பயன்படுத்தினேன். இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யும் சவால் இது. இப்போது குழந்தைகளுக்கு எழுதும்போது விவரணைகளைக் குறைத்துக் கொள்கிறேன், செயலை மட்டும் விவரிக்கிறேன், கூடவே நகைச்சுவை, பிரச்சினைகள், வெற்றி பெறுவதை எழுதுகிறேன். சாவு இருக்க வேண்டும் என்பதும் உண்டுதான், ஆனால் நிறைய இருக்கக்கூடாது. அதில் நான் கவனம் செலுத்தியாக வேண்டும். நான் வளர்பருவத்தினரின் கோர்மாக் மக்கார்த்தி ஆகிவிடக்கூடாதில்லையா!

புத்தகக்கடை

கேள்வி-

பிறரைச் சந்திப்பதற்கான ஒரு இடமாக உங்கள் புத்தகக்கடை இருக்கிறது என்று சொன்னீர்கள். இன்னும் அந்தக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா?

ஏட்ரிக்-

பிர்ச்பார்க் புக்ஸ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது! உண்மையில், அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் தொழில் முனைப்பு கொண்டவள் அல்ல. முதலில் நான் புத்தகக்கடையை ஒரு கலைப்படைப்பாகதான் பார்த்தேன், அது தன கலைத்தன்மையால் மட்டுமே நீடிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் இது ஒரு வணிகம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன், ஆனால் அதுதவிர இன்னும் பலவுமாக இருக்கிறது. என்ன ஒரு நல்ல வர்த்தகமும் அதில் தொடர்புடைய மக்கள் சமபந்தப்பட்டது. பிர்ச்பார்க் புக்ஸில் அற்புதமானவர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அதனால்தான் அது இன்னும் உயிரோடு இருக்கிறது. மிகப்பெரிய ஒரு புத்தகக்கடைக்குள் நுழைவது என்பது என்னவோ அமேசான்.காம் தளத்தில் நுழைவது போலிருக்கிறது. ஆனால் சிறிய ஒரு புத்தகக்கடைக்குள் புகும்போது உடனே நீங்கள் அதன் அலமாரிகளில் உள்ள புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த மனதின் இருப்பை உணர்கிறீர்கள். புத்தகம் வாங்குபவரோடு அறிவுத்தளத்தில் உரையாடுகிறீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்மிருந்தால் அருமையான வாசகர் இன்னுமொருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள்- எங்கள் மேனேஜர், சூசன் வைட், நீங்கள் என்ன வாங்கலாம் என்று பரிந்துரைகள் அளிக்கத் தயாராய் இருப்பவர். மனிதர்களுக்கு புத்தகக்கடைகள் தேவை, பிற வாசகர்களும் தேவை. புத்தகங்களை நேசிக்கும் பிறரொரு நமக்கும் நெஞ்சார்ந்த உரையாடல் தேவைப்படுகிறது.. நமக்கு அது தேவை என்று நாம் நினைப்பதில்லை, காரணம், இனையம் புத்தகம் வாங்குவதைச் சுலபமாக்கியிருக்கிறது. ஆனால் நாம் நினைப்பதைவிட அதிகம் நமக்கு பருண்ம உலகம் அவசியப்படுகிறது. சிறு புத்தகக்கடைகள் சமூக சேவைகளாக இயங்குகின்றன, லாபநோக்கம் கொண்ட வணிக நிறுவனங்களாக அல்ல. இணையத்தில் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஏராளமாக கிடைக்கின்றன. எனவே பருண்ம வடிவில் உள்ள புத்தகக்கடைகள் மாறுபட்ட வேறொன்றை அளித்தாக வேண்டும். லாபநோக்கமற்ற அமைபுகளுகுரிய சலுகைகள் சிறு புத்தகக்கடைகளுக்கு கிடைக்கக்கூடும்.. ஒருநாள் அரசு அவற்றுக்கு மானியம் அளிக்கக்கூடும், அப்போது அவை லாபமின்றி வெற்றிகரமாக இயங்கக்கூடும். ஏதோவொரு புத்திசாலித்தனமான புத்தகக்கடை அதைச் செய்யலாம், நாங்கள் செய்யப்போவதில்லை, அவை பிறருக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாகவும் அமையலாம்.

கேள்வி-

உங்கள் கடையை நீங்கள் எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?

ஏட்ரிக்-

நாங்கள் எழுத்தாளர்களை ஈர்க்கிறோம், குறிப்பாக, பூர்வகுடியினரை. இலக்கிய நிகழ்வுகள் நடத்துகிறோம், இது நாங்கள் வணிக நிறுவனமல்ல, கலை அமைப்பு என்பதைத்தான் உணர்த்துகிறது. பூர்வகுடிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், அவர்கள் கூடை பின்னுபவர்கள் அல்லது நகை செய்பவர்கள், ஓவியர்கள் என்று பலதரப்பட்டவர்களாக இருக்கின்றனர். டகோட்டா குடும்பத்தினர் வளர்த்த மருந்து விற்கிறோம். என் சகோதரியும் நானும் ஒஜிப்வே மற்றும் டகோட்டா மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் லாபநோக்கமற்ற ஒரு அச்சகம் துவங்கியுள்ளோம். ஒரு சிறு புத்தகக்கடை இருந்தால் நீங்கள் உங்கள் கோட்டித்தனங்களுக்கு நிறைய இடம் கொடுக்க முடியும். இந்தப் புத்தகக்கடை ஒரு அருமையான இடம். என் பெண்களுக்கான ப்ராஜெக்ட்டாக இருக்கும், நாங்கள் இணைந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்துதான் இதைத் துவக்கினேன், அப்படிதான் நடந்திருக்கிறது. என் ஒவ்வொரு மகளும் இங்கு பணியாற்றியிருக்கிறாள்.

நம் தேசத்தில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது- புத்தக வியாபாரத்தில் மட்டுமல்ல. கட்டுப்பாடுகளற்ற முதலியம் எப்படியிருக்கும் எனபதை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் சிறியதாகவும், மனதுக்கு நெருக்கமானதாகவும் உள்ளவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம், ஏன் எல்லாமே ஒரே மாதிரி இருக்கத் துவங்கிவிட்டது என்பது பிடிபட மாட்டேனென்கிறது. பெருநகரங்களின் மையங்களில் இப்போது சுவாரசியமான இடங்கள் இருக்க ம்டுயும். ஆனால் நம் தேசத்தின் பிற இடங்களில் எல்லாமே பெரிய பெரிய நிறுவனங்களின் கிளைகளைத் துவங்கிக் கொண்டிருக்கிறோம், அவற்றுக்கு என்று ஒரு தனித்தன்மையும் கிடையாது, அங்கு பணியாற்றுபவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே கிடைக்கிறது. நாம் நம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் நம் சூழ்நிலத்தின் ஆன்மாவைக் கொன்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாம்தான் தேசங்களில் தனித்தன்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறோம். பார்கோ, மினியபொலிஸ் போன்ற நகரங்களின் ஊடே பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும், அதன் பிரதான சாலைகளில் நடந்து சென்று அதன் எல்லைகளைக் கடந்து ஏக்கர் ஏக்கராக விரிந்திருக்கும் கான்கிரீட் பெட்டிகளைத் தாண்டித் திரியும்போது அந்த சோகத்தை உணர்கிறேன். நம் தேசம் லெகோலாண்ட் போலிருக்கத் துவங்கிவிட்டது.

நன்றி – The Paris Review

ஒளிப்பட உதவி – Poetry Foundation

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி

(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)

தோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்சியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.

சிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்?/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்!”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா?”

இதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”

எதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).

உயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”

காதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.

இறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்திகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.

நோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும்? அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.

அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள்  அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக  உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று  ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

MAP

Collected and Last Poems

By Wislawa Szymborska

Translated by Clare Cavanagh and Stanislaw Baranczak

447 pp. Houghton Mifflin Harcourt. $32.

நன்றி – நியூ யார்க் டைம்ஸ்

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்

(நியூ யார்க்கர் இதழில் காரத் கிரீன்வெல் எழுதிய கட்டுரையின் தமிழாக்க வடிவம்)

தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “மகிழ்ச்சியின் புவிப்பரப்பு” என்று ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய ஐரோப்பிய யூனியனில் ரோமானியாவும் பல்கேரியாவும் புதிதாய் இணைந்திருந்தன. ஐரோப்பிய யூனியனில் மிகவும் மோசமாகப் பேசப்பட்ட பல்கேரியாவைத்தான் “உலகின் மிகவும் சோகமான இடம்” என்று எகானமிஸ்ட் கட்டுரை பிரகடனப்படுத்தியது.

அதன்பின் சரியாக ஓராண்டுக்குப்பின், பல்கேரியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜியோர்கி கொஸ்போதினோவ் “துயரத்தின் இயற்பியல்” என்ற தனது இரண்டாம் நாவலை எழுதினார் (இவ்வாண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஓப்பன் லெட்டர் புக்ஸ் பதிப்பிக்கிறது). எகானமிஸ்ட் கட்டுரைக்கும், கிழக்கு ஐரோப்பிய மனநிலை குறித்து பரவலாய் அறியப்பட்ட தேய்வழக்குகளுக்கும் ஒருவகையில் இது தன் எதிர்வினை என்று ஜியோர்கி கொஸ்போதினோவ் நேர்முக உரையாடல்களில் தனது இந்த நாவலின் இடத்தை வரையறை செய்து கொண்டார். “அடிப்படையில் என் கதையின் நாயகன் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறான். குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி கதை சொல்ல முற்படுகிறான், இது மிகவும் சோகம் நிறைந்த இடம். அவன், தன் சோகங்களை எதிர்கொள்ள முயற்சி செய்கிறான். அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொணர்ந்து விவரிக்க முயற்சி செய்கிறான்”. (more…)

நாஞ்சிலும் நானும்

 சுல்தான்

nanjil_nadan_spl_issueசுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.

அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..

இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?

அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.

அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..

நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..

”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”

””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..

நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.

ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.

எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..

ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து  பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது.  இருக்கிறது.

இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..

அவ்வளவுதாங்க மேட்டர்!!

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.